இஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்

(அடையாளம் பதிப்பகத்தின் நாதன் லீன் எழுதிய ‘இஸ்லாமிய வெறுப்புத் தொழில்’ நூலுக்கு எழுதிய முன்னுரை, , ஜனவரி 21, 2018)

அமெரிக்காவில் செழித்து வளரும் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் முன்னணியில் உள்ள மிக முக்கியமான நபர்களில் ஒருவர் ராபர்ட் ஸ்பென்சர். இந்த வேலையில் அவர் படு ‘பிசி’. ‘Truth About Muhammed’ என்பதைப் போல நபிகளையும், இஸ்லாமையும் பற்றிய அவதூறுகள் நிரம்பிய நூற்களை எழுதுதல், “அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்குவதை நிறுத்து’ (Stop Islamisation of America) முதலான இயக்கங்களை மிதக்க விடுதல், இஸ்லாமிய வெறுப்பு ‘ப்ளாக்’ ஒன்றில் வெறுப்பைக் கொட்டி எழுதித் தள்ளுதல், பல்கலைக் கழகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இப்படியான கருத்துக்களை முன்வைத்தல், ஏராளமான வெறுப்புப் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்குதல் என ஓய்வறியாமல் இயங்குபவர்.

2010 அக்டோபரில் The Tennessian எனும் புலனாய்வு இதழ் மேற்கொண்ட ஆய்வொன்று இவர் பற்றி, “இஸ்லாம் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் ஊட்டிக் காசு சம்பாதிக்கும் பலரில் ஒருவர்” எனக் குறிப்பிட்டது. அமெரிக்க வரி வசூல் துறையின் (Internal Revenue Service) ஆவணங்களை 2008 முதல் அந்த இதழ் ஆய்வு செய்து ஓரு குறிப்பிட்ட ஆண்டில் இப்படியான வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் டேவிட் ஹாரோவிட்ஸ்சின் Freedom Centre எனும் அமைப்பிலிருந்து ஸ்பென்சர் பெற்ற ஊதியம் 132,537 டாலர் என்பதையும், இவரது நிகழ்ச்சிகளின் வழியாக டேவிட் ஹாரோவிட்சுக்கு அந்த ஆண்டில் கிடைத்த வருமானம் 400,000 டாலர் என்பதையும் வெளிக்கொணர்ந்தது. டேவிட் ஹாரோவிட்ஸ் அமெரிக்காவின் இன்னொரு பெரிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முதலாளி. இங்கே குறிப்பிட்டுள்ளது ஒரு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் ஸ்பென்சரும் அந்த நிறுவனமும் சம்பாதித்த தொகை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் எப்படியானவை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

ஸ்பென்சர் குறித்து நான் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தபோது அவரது அட்டகாசமான உரை ஒன்றின் Live வீடியோ பதிவு கிடைத்தது. மேலே சொன்ன டேவிட் ஹாரோவிட்சின் Freedom Center சார்பில் 2017 நவம்பர் 16-19 தேதிகளில், Florida Palm Beach ல் உள்ள Breakers Hotel ல் நடந்த நிகழ்ச்சி அது.
“எல்லோருக்கும் நன்றி” – என உரையைத் தொடங்கும் ஸ்பென்சர் தனது சமீபத்திய “அனுபவம்” என்று ஒரு “கதை”யைச் சொல்கிறார்: “சில நாள் முன்னர் நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். கூட்ட நெருக்கடியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்திருந்த ஒரு சிறுவன்  மேனேஜர் அறையில் நின்றிருந்தான். மேனேஜர் அவனை விசாரித்துக் கொண்டிருந்தார்.
“உன் பெயர் என்ன?”.

“முஹம்மது”

“ம்.. உன் அம்மாவைக் காணோமா?”

“ஆமாம்”

“உன் அம்மா பாக்குறதுக்கு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா?”

“இல்லை எனக்கு அதைப் பற்றி ஒரு கருத்தும் கிடையாது (No, I don’t have any idea)”

இந்த இடத்தில் ஒரு புன்னகையோடு ஸ்பென்சர் சொல்லுகிறார்: “இதுதான் Clash of Civilization”.
கொல்லென்று அரங்கில் ஒரே சிரிப்பு. அவ்வளவுதான். ஸ்பென்சர் தன் பேச்சைத் தொடர்கிறார்.
Clash of civilization என்பது சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் சாமுவேல் ஹட்டிங்டன் எழுதிய நூலின் தலைப்பு. பனிப்போர்க் காலம் முடிந்துவிட்டது. “இனி உலக அளவில் முரண்பாடுகள் மோதல்கள் எல்லாம் ‘முதலாளித்துவம் X கம்யூனிசம்’ என்பது போன்ற பழைய வடிவங்களில் நடக்கப் போவது இல்லை. இனி மோதல் என்பது நாகரீகங்களுக்கு இடையேதான்” – என்பதுதான் அந்த நூல் சொல்லும் சேதி. ஒரு பேரரசாக (Empire) தனக்குக் கீழ் உள்ள நாடுகளைத் தன் அதிகாரத்தின் கீழ் தொடர வைப்பதற்கு இப்போது முதலாளியக் கருத்தியலாளர்கள் கண்டுபிடித்ததுதான் இந்த “நாகரிகங்களின் மோதல்”. பச்சையாகச் சொல்வதானால் இனி நமக்கு எதிரி இஸ்லாம்தான். இஸ்லாமிய பயங்கரவாதம்தான் என்கிறது அந்நூல்.

இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய வெறுப்புத் தொழில் (Islmophobia Industry). மேலே உள்ள ஸ்பென்சரின் பேச்சைக் கூர்மையாகக் கவனியுங்கள். “முகம்மது” என்கிற பெயரின் ஊடாக அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம் என பார்வையாளர்கள் முன் அடையாளம் காட்டப்படுகிறான். நமது பண்பாட்டில் அம்மாவைப் பற்றிச் சொல்லச் சொன்னால நமது குழந்தைகள் அம்மா அப்படி இருப்பார்கள், இப்படி உடுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் சொல்லும். அதற்குத் தன் அம்மாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கும். “நமது பண்பாட்டில்” மட்டுமல்ல எந்தப் பண்பாட்டிலும் குழந்தைகள் அப்படிச் சொல்லும். ஆனால் ஒரு முஸ்லிம் குழந்தையால் அப்படிச் சொல்ல முடியாது என்கிறார் ஸ்பென்சர். ஒரு முஸ்லிம் குழந்தை அத்தகைய பண்புடன் உருவானதோ, வளர்க்கப்பட்டதோ அல்ல என்றெல்லாம் இந்தக் கதை மூலம் அவர் சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் குழந்தையால் என்ன அடையாளத்தைத்தான் சொல்லிவிட முடியும்? கருப்பு ஹிஜாப் அணிந்திருப்பாள் என்பதைத் தவிர என்றும் கேட்பவர்கள் பொருள் கொள்ள முடியும்.

i5இன்னொன்றையும் கவனியுங்கள். இது தாயைப் பிரிந்து வந்த “ஒரு” முஸ்லிம் குழந்தையின் கதை மட்டுமல்ல. எல்லா முஸ்லிம்களுமே அப்படித்தாரன். பெற்ற தாய் குறித்துக்கூட “எந்தக் கருத்தும்” இல்லாதவர்கள் அவர்கள் என்பதும் அதில் உட்பொதிந்து உள்ளது..
கதையின் முடிவில் “முஸ்லிம்கள் வேறு, நாம் வேறு”,. இருவரும் எந்தப் புள்ளியிலும் சந்திக்கவே இயலாத இரு வேறுபட்ட பண்பாட்டுக்குரியவர்கள். இந்த இரு துருவங்களுக்கும் இடையில் உரையாடல் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் பார்வையாளர்கள் மனத்தில் பதிக்கப்படுகிறது. ஒரு கேலியில் தொடங்கி வெறுப்பில் முடிகிறது ஸ்பென்சர் அவிழ்க்கும் கதை.

இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படும் விதங்களில் மேலே சொன்னது ஒரு வகை. முஸ்லிம்களைக் “கேலி” “கிண்டல்” (derison) செய்வது என்கிற வகையில் இதை அடக்கலாம். முஸ்லிம்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கேலிக்குரியதாகுவதன் ஊடாக அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட பண்புடையவர்களாய்ச் சித்திரிக்கும் போக்கு இது. அவர்கள் மீது வெறுப்பை (hatred) விதைப்பது, அவர்கள் பற்றி அச்சத்தை (fear) ஊட்டுவது என்பன இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின் இதர இரண்டு வடிவங்கள்.

இது டேவிட் ஹாரோவிட்ஸ் போன்றோருக்குப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழிலாகவும் உள்ளதைப் பார்த்தோம். ஜூன் 2016ல் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகமும் ‘அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான கழகமும்’ (Council on American-Islamic Relations -CAIR) இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டன. “2008 – 2013 காலகட்டத்தில் மட்டும் இப்படியான பல்வேறு அமைப்புகள் இந்தத் தொழிலில் செய்த முதலீடு 200 மில்லியன் டாலர். இது தன்னளவில் முழுமையான ஒரு தொழிலாக உள்ளது. கோடிக் கணக்கான டாலர் லாபத்தை இப்படி அவர்கள் ஈட்டுகின்றனர். தம்மை இஸ்லாமியர் மற்றும் இஸ்லாம் தொடர்பான பிரச்சினைகளில் பெரிய அறிஞர்கள் போல அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அப்படி அல்ல என்பதுதான் உண்மை. இப்படியான 74 அமைப்புகளை நாங்கள் எங்கள் ஆய்வில் அடையாளம் கண்டோம்” – என்கிறது அந்த அறிக்கை.

2.

‘அஸ்லான் மீடியா’ எனும் ஊடக நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக உள்ள நதன் லீன் 2012 ல் எழுதிய இந்நூல் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுப் பெரிய அளவில் வரவேற்பிற்குள்ளான ஒன்று. இந்நூலின் செம்மைப் படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பிலிருந்து (2017) இது மொழியாக்கப்பட்டுள்ளது. இஸ்லாம், மேற்கு நாடுகள், இரண்டுக்குமான உறவு ஆகியன குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவர் நதன் லீன். Understanding Islam and the West எனும் அவரது இன்னொரு நூல் விரைவில் வெளிவர உள்ளது. இந்நூலில் அவர் இப்போது அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு எப்படி மிகப் பெரிய தொழிலாகவும் ஆபத்தாகவும் வளர்ந்துள்ளது என்பதை விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூலின் தொடக்கத்தில் முஸ்லிம் என்பதற்காகவே ஒரு டாக்சி ஓட்டுநர் முன்பின் தெரியாத ஒரு நபரால் எந்தக் காரணமும் இன்றிக் கத்தியால் குத்தப்படும் ஒரு சம்பவம் உள்ளது. வாசிக்கும் யாரும் இதை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. இப்படியுமா நடக்கும் என்றுதான் யோசிக்கத் தோன்றும். ஆனால் அப்படித்தான் நடக்கிறது. “இஸ்லாமிய ஆபத்து” குறித்து ஊட்டப்படும் அச்சமும் வெறுப்பும்தான் இத்தகைய சம்பவங்களின் பின்னணியாக அமைகின்றன.

முன்னதாக Know Nothing, இப்போது Tea Party, American Protective Organisation முதலான அமைப்புகள், ட்ரம்ப், ந்யூட் கிங்ரிச், புஷ் போன்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் இந்த வெறுப்பு ஒவ்வொரு நிமிடமும் பொது வெளியில் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

“முஸ்லிம் பயங்கரவாதம்” என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்படையில் ஆபத்தானது, எல்லா முஸ்லிம்களுமே பயங்கரவாதத்தை மனதளவில் ஏந்தி இருப்பவர்கள்தான், திருக்குர் ஆன் என்பது வன்முறையை ஒரு வழிமுறையாகப் பரிந்துரைக்கும் நூல், நபிகள் நாயகம் பயங்கரவாதத்தின் முன்னோடி என்கிற கருத்தாக்கங்கள் பல மட்டங்களில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க இராணுவப் பயிற்சியகங்களில் (US Military Academy), “மிதவாத இஸ்லாம் (Moderate Islam) என எதுவும் இல்லை” என மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் படுகின்றது. “அல்குவேடா ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அதை மறந்து விடுங்கள். இப்போது நாம் இஸ்லாமிய நம்பிக்கையின் மீதே (Islamic Faith itself) கவனம் செலுத்த வேண்டும்” என அவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது.

எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடத்திலும் கூட இந்தப் போக்கை அடையாளம் காண முடியும். கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் ஒரு புகழ்பெற்ற நாத்திகப் பிரசாரகர். “புதிய நாத்திகர்கள்” என அழைக்கப்படுவோரில் ஒருவர். இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் உலகெங்கும் நிறுத்தப்படுவது குறித்து அவர், “அந்தப் படையினர் வீசும் க்ளஸ்டர் குண்டுகளிலிருந்து தெறிக்கும் எஃகுச் சில்லுகள் அவர்களின் (அதாவது முஸ்லிம்களின்) உடல்களை மட்டுமல்ல அவர்களின் இதயங்களில் சுமந்துள்ளார்களே அந்தக் குர் ஆனையும் துளைத்துச் செல்லட்டும்” எனப் புளகித்துச் சொல்வதை அவருடைய God is not Great எனும் நூலில் காணலாம். இப்படியான முற்போக்குகள் தம் இன வெறுப்பை வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள். சொல்லப்போனால் வெறுப்புத் தொழிலில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூடக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் இனவாதம், மதவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றைக் கண்டிப்பது என்கிற சாக்கில் முஸ்லிம்கள் மீதுத் தம் பங்கு இன வெறுப்பைச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது கொட்டுவார்கள்.

A protester holds a sign which reads " Islamophobia is not freedom" outside the French Embassy in London on August 25, 2016 during a "Wear what you want beach party" to demonstrate against the ban on Burkinis on French beaches and to show solidarity with Muslim women. French Interior Minister Bernard Cazeneuve warned Wednesday against stigmatising Muslims, as a furore over the banning of burkinis grew with the emergence of pictures showing police surrounding a veiled woman on a beach.  Dozens of French towns and villages, mostly on the Cote d'Azur, have banned beachwear that "conspicuously" shows a person's religion -- a measure aimed at the full-body Islamic swimsuit but which has also been used against women wearing long clothes and a headscarf. / AFP PHOTO / JUSTIN TALLIS
A protester holds a sign which reads ” Islamophobia is not freedom” outside the French Embassy in London on August 25, 2016 during a “Wear what you want beach party” to demonstrate against the ban on Burkinis on French beaches and to show solidarity with Muslim women.
French Interior Minister Bernard Cazeneuve warned Wednesday against stigmatising Muslims, as a furore over the banning of burkinis grew with the emergence of pictures showing police surrounding a veiled woman on a beach. Dozens of French towns and villages, mostly on the Cote d’Azur, have banned beachwear that “conspicuously” shows a person’s religion — a measure aimed at the full-body Islamic swimsuit but which has also been used against women wearing long clothes and a headscarf. / AFP PHOTO / JUSTIN TALLIS

நாங்கள் X அவர்கள் என்கிற எதிர்வு இன்று மிக நுணுக்கமாக எல்லா மட்டங்களிலும் முன்வைக்கப்படுகிறது. ‘நாங்கள்’ என்பது அமெரிக்கர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், மேற்கத்தியப் பண்பாட்டை ஏற்போர். ‘அவர்கள்’ என்பது இன்றைய நிலையில் முஸ்லிம்களையே குறிக்கிறது. “வஞ்சக ஜிஹாத்” (stealthy jihad), “ஊர்ந்துவரும் ஷரியா” (creeping sharia) என்பன போன்ற வெறுப்புச் சுமையுடன் கூடிய சொற் பாவனைகளை முஸ்லிம்கள் குறித்த அவர்களின் எழுத்துக்களில் நிறையக் காண முடியும்.

 

‘முஸ்லிம்கள்’, ‘இஸ்லாம்’ என்பவற்றின் ஊடாக அவர்கள் இந்தப் பரந்துபட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணற்ற பண்பாட்டு வேறுபாடுகள், மொழிகள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் வாழும் முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான, ஆபத்தான அச்சுப் பதிவுகளாகக் (stereotype) கற்பிக்கின்றனர்.

தீவுக்கூட்டமாக உள்ள தென்கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக் கண்டம், உயர் நிலப் பகுதியான ஆப்கானிஸ்தான், யூரேசிய ஸ்தெப்பிகள், டைக்ரிஸ் மற்றும் யூப்ரேட்ஸ் நீரிடைப் பகுதிகள், பாலைவன அரேபியத் தீபகற்பம், துருக்கி, கிழக்கு ஐரோப்பாவின் அல்பேனியா, போஸ்னியா, மத்திய ஆசிய டர்கிக் நாடுகள் எனப் பல்வேறு தட்ப வெப்பப் பகுதிகள், பண்பாடுகளின் ஊடாகப் பரவியுள்ள உலகு தழுவிய ஒரு மதத்தைப் பின்பற்றும் பல்லின மக்களை ‘முஸ்லிம்’ என ஒரே அச்சுப்பதிவாகக் குவித்து நோக்க இப்படியான வெறுப்புப் பார்வை ஒன்றால் மட்டுமே இயலும். இதன் மூலம் ஏதேனும் ஒரு பண்பாட்டுக்குரிய வழமையை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பண்பாகவே அடையாளப்படுத்த முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொன்னால் எளிதில் விளங்கும். “இருக்கும்’’ எனும் தமிழ்ச் சொல்லை “இரிக்கும்” என ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பாவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தால் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களையே அந்தச் சொல்லிக் கொண்டு கிண்டல் செய்வதைத் தமிழில் ஒரு முஸ்லிம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார் பிர்தௌஸ் ராஜகுமாரன் எழுதியுள்ள ‘ரணங்கள்’ எனும் நாவலில் தான் பள்ளி மாணவனாக இருந்தபோது பிற மாணவர்கள் அப்படி அழைத்துக் கேலி செய்தது தன்னை எந்த அளவு பாதித்தது என்பதைச் சொல்லுவார்.  முஸ்லிம்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதாக சில நகைச்சுவைகளும் இங்கு உண்டு. “பாலிருக்கும் பழமிருக்கும்” என்கிற திரைப் பாடலை ஒரு முஸ்லிம் பாடினால் அது எப்படி இருக்கும் எனக் கேட்டு, விடையாக “பாலிரிக்கிம், பழமிரிக்கிம்’ எனப் பாடுவார்கள் என நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்கள் கேலி செய்வது நினைவுக்கு வருகிறது. இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படி இஸ்லாமை ஒற்றை அடையாளமாக்கி ‘இஸ்லாமிய மூர்க்கம்’ (Islamic Rage) என்றெல்லாம் சித்திரிப்பது கேட்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டி வெறுப்பை உருவாக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பேருந்தில் பக்கத்தில் வந்து உட்காரும் எந்த ஒரு முஸ்லிமையும் ஒரு பயங்கரவாதியாகக் கருதித் துணுக்குறச் செய்யும் உத்தி இது.

இப்படியான வெறுப்பூட்டல்கள் அவர்களுக்கு வேறு பல அரசியல் பயன்களையும் ஈட்டித் தருகிறது.. மேலாதிக்க நோக்குடன் ஆஃப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின் மீது அவர்கள் மேற்கொண்ட படைஎடுப்புகள், ஈரான் முதலான நாடுகளின் மீது அவர்கள் விதித்த தடைகள், எல்லை மீறி அவர்கள் புகுந்து மேற்கொள்ளும் “துல்லியத் தாக்குதல்கள்” (surgical strikes) ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் இப்படி நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இப்படியான நடவடிக்கைகளால் அவர்கள் உலகளவில் சம்பாதிக்கும் கெட்ட பெயர்களையும் முஸ்லிம்கள் பற்றிப் பரப்பப்படும் இத்தகைய வெறுப்புக் கருத்துக்களால் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய போர்கள் வேறு வகைகளிலும் அவர்களுக்குப் பயனீட்டித் தருகின்றன. லாபம் ஈட்டும் போர் தொடர்பான தொழில்கள் (war industry) செழிக்கவும், நிதிநிலை அறிக்கைகளில் இராணுவத்துறைக்கு பிற நலத்துறைகளைக் காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊழலுக்கு வழி வகுக்கவும் பயன்படுகின்றன. ‘தேசபக்திச் சட்டம்’ (Patriotic Act) போன்ற உள்நாட்டு அடக்குமுறைச் சட்டங்களை இயற்றவும், மக்களின் சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், பேச்சுரிமையைக் குறைக்கவும், கல்வி நிலையங்களில் தலையிட்டு கல்விச் சுதந்திரத்தை (academic freedom) அழிக்கவும், எல்லாவிதமான மாற்றுக் கருத்துக்களையும் ஒடுக்கவும் முஸ்லிம் வெறுப்பு இவர்களுக்குப் பயன்படுகிறது. இப்படி ஒரு வெறுப்பு மொழியினூடாக பொதுச் சிந்தனை, பேச்சு, பார்வை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது அரசியல், அடக்கு முறை, பொருளீட்டல் என்கிற பொருளாயதப் பலன்களைக் குவிப்பதாகவும் ஆகிறது.

இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டு, இப்படியான அடக்குமுறைச் சட்டங்கள் அவர்களுக்கு முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தச் சமுதாயத்தையும் மிரட்டி வைக்கவும் அவர்களுக்குப் பயன்படுகிறது.

இன்னொரு பக்கம் தங்களின் ஒரு சார்புக் கொள்கைகளுக்கு மக்களிடம் ஆதரவு தேடுவது என்பதற்கு அப்பால் மக்களின் பார்வைகளையே திருத்தித் தங்களுக்கு இயைபாக்கவும் வெறுப்புத் தொழில் அவர்களுக்குப் பயன்படுகிறது.

3.

அமெரிக்க வரலாற்றைப் பார்த்தீர்களானால் இப்படிப் பிற சமூகங்களின் மீது வெறுப்பைக் கக்குவது அவர்களுக்குப் புதிதல்ல என்பது விளங்கும். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய அமெரிக்கா என்பது வெகு சமீபத்தில் ஐரோப்பிக் குடியேற்றங்களால் உருவாகிய நாடு. நீண்ட வரலாற்றுப் பின்னணியற்ற அந்நாட்டில் சுதந்திரம் அடைந்த காலந் தொட்டே (1776) பிற நாடுகள், பிற மக்கள், பிற மதங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் மீது அதற்கு ஒரு ஐயமும் அச்சமும் இருந்து வருகிறது. தொடர்ந்து அது வெளியுலகில் மட்டுமின்று தன் நாட்டுக்குள்ளேயும் ஒரு ஆபத்தான எதிரியைத் தேடிக் கொண்டே இருந்தது எனலாம். அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளார்ந்து இருந்த இந்த உளவியல் சிக்கல் அவர்களின் அரசியலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பது குறித்த வரலாற்றறிஞர் ரிச்சர்ட் ஹாஃப்ஸ்டாடர் எழுதியுள்ள   The Paranoid Style in American Politics எனும் கட்டுரை முக்கியமான ஒன்று.

1790 களில் அமெரிக்கர்களின் இந்த அச்சமும் வெறுப்பும் அறிவொளிக்கால இல்லுமினாட்டிகளுக்கு எதிராக இருந்தது. பவேரியன் இல்லுமினாட்டி என்பது மூடநம்பிக்கைகள், பொதுவாழ்வில் மதத்தின் தலையீடு முதலானவற்றை எதிர்த்து 1770 களில் உருவான ஒரு இரகசிய அமைப்பு. அது குறித்த அச்சமும் வெறுப்பும் அப்போது மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் மத்தியில் வெளிப்பட்டன. 1850 களில் இல்லுமினாட்டிகள் குறித்த அச்சம் விலகி, பதிலாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இப்போது அமெரிக்கர்களின் வெறுப்புக்கு இலக்காயினர். கத்தோலிக்கர்களின் புலப்பெயர்வு குறித்து மிகப் பெரிய அச்சம் அபோது பரப்பப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கர்களின் வெறுப்புக்கும் அச்சத்திற்கும் அப்போது உலகெங்கிலும் வளர்ந்து வந்த கம்யூனிசம் காரணமாகியது.

1940 களில் விஸ்கான்சின் செனட்டராக இருந்த ஜோசப் மெக் கார்த்தியின் காலத்தில் கம்யூனிஸ்டுகள் என்கிற ஐயத்திற்கு உள்ளான அனைவரும் பெரிய அளவில் துன்புறுத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்து, அவதூறு செய்து, தண்டனைக்கும் உள்ளாக்கப்படும் அவலத்தைக் குறிக்க ‘மெரக்கார்த்தியிசம்” (McCarthyism) என்றொரு சொல்லே உருவானது. Americans Battling Communism, (ABC) என்றொரு அமைப்பும் அப்போது கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்பட்டது.

21ம் நூற்றாண்டு விடிந்தபோது அமெரிக்கர்களின் வெறுப்பு அரசியலுக்கு முஸ்லிம்கள்  இலக்காக்கப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம். முஸ்லிம்கள் மீது 1970கள் தொடங்கியே வெறுப்பு பரப்பப்ப்பட்டு வந்த போதும் அது சீறி வெளிப்படும் புள்ளியாக 9/11 அமைந்தது. அதை ஒட்டி அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் கக்கிய விஷச் சொற்கள் வெளிப்படையாக வெறுப்பைக் கக்கின.

“அந்தத் தேவடியா மகன்களை (bastards) துரத்திப் பிடிப்போம்”

“ஆப்கானிஸ்தானில் உள்ள தாயோழிகளை (mother fuckers) குண்டு வீசி அழிப்போம்’

“ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசி அதைக் கற்காலத்துக்கு அனுப்புவோம்”

i3என்றெல்லாம் ஒரு மிக முன்னேறிய நாட்டின் தலைவர் சொற்களை உதிர்த்ததை உலகம் வேடிக்கை பார்த்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கர்களின் மொழி நன்மை X தீமை (Good x Evil) என்கிற வடிவில் கட்டமைத்த இருமை எதிர்வுகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:

நாம்   X  அவர்கள்

நாகரிகம் X   காட்டுமிராண்டித்தனம்

ஜனநாயகம் X  பயங்கரவாதம்

சட்டம் ஒழுங்கு X சட்டவிரோதம்

நீதி  X  அநீதி

கோழை  X  வீரம்

சகிப்புத்தன்மை  X  சகிப்பின்மை

இடப்புறம் உள்ள அனைத்தும் மேற்குலகையும், (West), வலப்புறம் உள்ளவை முஸ்லிம்களையும் இஸ்லாமையும் (Islam) குறிப்பன. இந்த இரண்டு எதிர்வுகளும் ஒன்றை ஒன்று சந்திக்க இயலாதவை, முற்றிலும் வேறுபட்டவை, சாராம்சமான பண்புகளைக் கொண்டவை என்பது இதன் உட்கிடக்கை. Evil என்கிற கிறிஸ்தவக் கருத்தாக்கம் இங்கே முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. ”மீட்பரின்” (Messiah) வருகைக்குத் தயார் செய்ய இங்குள்ள யூதரல்லாதவர்கள் அனைவரையும் வெளியேற்றித் தூய்மைப் படுத்த வேண்டும் என்பது சியோனிச மதவாதம் முன்வைக்கும் ஒரு கருத்தாக்கம். அதை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றுவதுதான் மேற்குலகின் மீட்சிக்கு (redemption) அவசிய நிபந்தனை என்கிற வடிவில் இந்த இஸ்லாம் குறித்த அச்சம் மதச் சிந்தனைகளின் ஊடாகவும் புனிதப்படுத்தப் பட்டது.

மொத்தத்தில் முஸ்லிம் = பயங்கரவாதி ; இஸ்லாம் = பயங்கரவாதம் என்கிற சமன்பாடு மேற்குலகம் முழுவதும் உறுதியாகப் படிந்தது.

தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே, “முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவது தடுக்கப்பட வேண்டும்” எனப் பேசியதையும், அவர் அதிகாரத்திற்கு வந்த கையோடு ஏழு முஸ்லிம் நாடுகள் மீது அத்தகைய தடை விதிக்கப்பட்டதையும் அறிவோம்.

இப்படியான அமெரிக்க மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது?

கோட்பாட்டாளரும் தத்துவச் சிந்தனையாளருமான ஸ்லாவோஜ் சிசெக் 1975 ல் வெளிவந்த ஸ்பீல்பெர்கின் புகழ் பெற்ற Jaws எனும் திரைப்படம் குறித்து வைத்த விமர்சனத்தை இதற்குப் பொருத்திப் பார்க்கலாம். பீட்டர் பெஞ்ச்லியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. ‘அமிட்டி’ தீவில் கடற்கரைக்கு வரும் மக்களைத் தாக்கிக் கொன்று சாப்பிடும் ஒரு சுறா மீன் பற்றிய கதை அது. ஆனால் சிஸெக் அது சுறா மீன் பற்றிய படம் அல்ல என்றார். சுறாமீன் அதில் ஒரு குறியீடுதான். உண்மையில் அது ‘பாசிசம்’ குறித்த ஒரு கதையாடல் என்பது அவர் முன்வைக்கும் கருத்து.

ஒவ்வொறு கோடையிலும் எண்ணற்ற ‘டூரிஸ்டுகள்’ அமிட்டி தீவில் வந்து குவிகின்றனர். அந்த வருகை அங்கு வாழும் மக்களுக்குப் பல்வேறு விதமான அச்சங்களையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. டூரிஸ்டுகளின் இந்தப் படைஎடுப்பு பெரிய அளவில் அத் தீவைக் குப்பையாக்குகிறது, பொது ஒழுங்கு குலைகிறது, குற்றச் செயல்பாடுகளுக்கு வழி வகுக்கிறது. மொத்தத்தில் அவர்களின் பாரம்பரியத் தீவு வாழ்க்கை சிதைகிறது. இந்த அச்சங்கள் அச் சமூகத்தில் கூட்டு மனத்தில் ஒரு அழுத்தத்திற்குக் காரணமாகிறது. இங்கே அந்தச் சுறாமீன் என்பது இத்தகைய பல்வேறு அச்சங்களையும் உள்ளடக்கும் ஒரு குடையாக அவர்கள் முன் அமைகிறது என்கிறார் சிஸெக்.

சரி மொத்தப் பிரச்சினைகளுக்கான அச்சங்களையும் இப்படி ஒரு புள்ளியில் குவிப்பதால் அவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைக்கிறது? இந்த ஒரு பூதத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அந்தச் சமூகம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிற பொய்யான ஆறுதல்தான் அது.

ஹிட்லரின் ஜெர்மனியில் அன்று அந்தச் சமூகம் சந்தித்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் யூதர்கள் இலக்காக்கப்பட்டது அப்படித்தான். யூதர்கள்தான் அவர்களின் ஆட்கொல்லிச் சுறா. 9/11 க்குப் பிந்திய மேற்குலகிற்கு முஸ்லிம்கள்தான் அந்தச் சுறாமீன். அவர்களை ஒழித்தால், வெளியேற்றினால் தங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இன்று உள்ளனர்.

அவர்கள் வெளிப்படுத்தும் வெறுப்பு உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால் இதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வரத் தடைவிதித்ததற்கு ட்ரம்ப் என்ன காரணம் சொன்னார்? 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத்தான் சுட்டிக் காட்டினார். ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதலை நடத்தியவர்களில் யாரும் இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. அது மட்டுமல்ல1975 முதல் 2015 வரையிலான இந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஏழு நாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரும் ஒரு அமெரிக்கரையும் கொன்றதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் அமெரிக்க உளவியல் அந்த நாடுகளின் மக்களை வெளியேற்றினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நம்புகிறது. அமிட்டி தீவு மக்கள் அந்தச் சுறாவைக் கொன்றுவிட்டால் அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் ஒழிந்துவிடும் என நம்பியதைப் போல.

இப்படி ஏதோ ஒன்றைத் தங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கற்பித்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தாங்கள் எவ்வாறு காரணமாக உள்ளோம் என்பதை அவர்கள் எளிதாக மறந்து விடவும் முடிகிறது.

4       

அமெரிக்க மண்ணில் 1970 தொடங்கியே முஸ்லிம் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான அச்சுப் பதிவாகவும், பயங்கரவாதிகளாகவும், பயங்கரவாதத்துக்குத் துணை போகிறவர்களாகவும் சித்திரிக்கும் நிலை ஏற்பட்டது. 9/11 ஐ ஒட்டி இது ஒரு மிகப் பெரிய பரிணாம மாற்றத்தை எட்டிய வரலாற்றைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டுள்ளோம்.

இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?

  1. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கு அதிகரித்தன. முன் குறிப்பிட்ட CLAIR அமைப்பைச் சேர்ந்த வில்ஃப்ரெடோ அம்ர் ரூயிஸ், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்துடன் தாங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது (ஜூன் 2016), “ஃப்ளோரிடா மாநிலத்தில் மட்டும் சென்ற ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 500 மடங்கு அதிகரித்துள்ள” என்றார். இவற்றில் முஸ்லிம்கள் மீதான நேரடியான தாக்குதல்கள் தவிர மசூதிகள், முஸ்லிம் சந்திப்பு மையங்கள் ஆகியவை தாக்கப்படுதல், முஸ்லிம் அமைப்புகளுக்கு வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் விடுத்தல் ஆகியவையும் அடங்கும். அமெரிக்காவில் வாழும் பல்வேறு இனங்கள் மத்தியிலும் ஆய்வு மேற்கொண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை முஸ்லிம்கள்தான் அதிக இனவெறுப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது. 18 சத முஸ்லிம்கள் தாங்கள் எப்போதும் (regularly) இன வெறுப்புக்கு ஆளாவதாகவும், 26 சதம் பேர் அவ்வப்போது இன வெறுப்பை அனுபவிப்பதாகவும், 16 சதம் பேர் எப்போதாவது இப்படியான அனுபவங்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். Institute for Social Policy and Understanding (ISPU) எனும் அமைப்பின் இயக்குநர் மெய்ரா நகாஸ், “ஒவ்வொறு ஐந்து அமெரிக்க முஸ்லிம்களிலும் ஒருவர் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்புச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு கருத்துக் கணிப்பில் அறிய வந்துள்ளது” எனக் கூறியதை அல் ஜசீரா தளத்தில் (2016 ஜூன் 24) காணலாம்.
  2. கடந்த பத்தாண்டுகளில் இந்த முஸ்லிம் வெறுப்பு இன்னொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. முஸ்லிம் தொழுகைத் தலங்கள் (mosques) மற்றும் சமுதாய மையங்கள் (community centers) கட்டுவதற்கு எதிர்ப்புகள் மிகுகின்றன. இதன் அடுத்த கட்டமாக இப்போது, “முஸ்லிம்கள் தங்களின் ஷரியா சட்டத்தை அமெரிக்காவில் திணிக்கப் பார்க்கிறார்கள்” என்கிற கருத்து மிகப் பெரிய அளவில் பரப்பப் படுகிறது. கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஷரியாவுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. 2013 தொடங்கி முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களின் எண்ணிக்கை மட்டும் 81. பெரும்பாலும் இவற்றை முன்மொழிந்தது குடியரசுக் கட்சிதான்.

குடியரசுக் கட்சி செனட்டர் ஆலன் ஹேய்ஸ் பேசும்போது, “எங்களின் மதம், அரசியல், அமைதியான வாழ்க்கை எல்லாமே ஷரியா மற்றும் இஸ்லாமின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எனது நாட்டின் மீதும் மதத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் இந்தப் படை எடுப்பிலிருந்து (invasion) என் சந்ததியைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்வது தேசத் துரோகம் (sedition). எங்கள் அரசையும் தேசத்தையும் (country) அவர்கள்: கவிழ்க்க (overthrow) முனைகிறார்கள்” என்று கூறியதை நீங்கள் இணையத் தளங்களில் காணலாம் (அல்ஜஸீரா, ஜூன் 24, 29016). இந்த வெறுப்புரையில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக் கவனியுங்கள். இப்படி ஏராளமாகச் சொல்ல முடியும். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

அமெரிக்கர்களை நாம் பண்பாட்டிலும் அறிவிலும் முன்னேறியவர்கள் என நினைப்பது எத்தனை அபத்தம். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் ஒரு சதம்தான். ஐரோப்பாவில் அவர்கள் 6 சதம். இந்த ஒரு சதம் மக்கள் அமெரிக்காவின் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்துவிடப் போகிறார்கள் என ஒரு அரசியல்வாதி பேசுகிறார். அதை ஏற்றுக் கொள்வதற்கும் அங்கு ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது.

அமெரிக்காவில் அமெரிக்கச் சட்டம்தான் இறுதியானது. இந்நிலையில் ஷரியா சட்டம் அமெரிக்கச் சட்டத்தை அழித்துவிடும் என்பதன் பொருளென்ன? இப்படியான ஒரு சூழல் இருப்பதாகச் சொல்லி இதற்கெதிராகச் சட்ட வரைவுகள் மொழியப்படுவதும் முஸ்லிம்கள் ஷரியாவைக் கைவிடவேண்டும் என முழக்கங்கள் உருவாவதும் எத்தனை அபத்தம். அமெரிக்காவில் Federal Arbitratin Act (1925) ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன்படி அமெரிக்கச் சட்டங்களின்படிச் செயல்படும் நீதிமன்றங்களுக்கு வெளியே “மத்தியஸ்த” முறையில் (arbitration) இரு தரப்பினர் தமக்குள்ளான விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால் இருதரப்பும் அதை ஏற்றுக் கொண்டால்தான் அது சாத்தியம். ஏதேனும் ஒரு தரப்பு அதை ஏற்றுக் கொள்ளாதபோது அமெரிக்கச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில்தான் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

i2ஷரியா குறித்து அது கையை வெட்டுவது, பொது வெளியில் தலையைக் கொய்வது என்பது போன்ற சொல்லாடல்களை முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவதும் அபத்தம். ஷரியா என்பது தண்டனைச் சட்டமல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள் ஷரியாவைக் கடை பிடிக்கிறார்கள் எனில் அது இங்கு குற்றச் செயல்களை விசாரித்துத் தண்டனை வழங்குவது என்கிற வடிவில் அல்ல. ஷரியா என்பது அடிப்படையில் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கான ஒரு வழிகாட்டி.. அது முற்றிலும் தனிநபர் சார்ந்த (personal), இறைவனுக்கும் அவனை விசுவசித்து வணங்குபவருக்குமான தனிப்பட்ட உறவு சார்ந்த ஒன்று. ஐந்து வேளை தொழுவது, ரமலான் நோன்பிருப்பது முதலான மதக் கடமைகளைச் சொல்வது அது. அமெரிக்காவிலோ இந்தியாவிலோ வாழ்கிற எந்த முஸ்லிமும் தங்களின் ஷரியா சட்டம் அமெரிக்க அல்லது இந்தியச் சட்டங்களை எல்லா அம்சங்களிலும் மீறிச் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிமை நோக்கி நீ ஷரியாவைக் கைவிட வேண்டும் எனச் சொல்வது நீ முஸ்லிம் மதத்தையே கைவிடு எனச் சொல்வதுதான்.

முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி எல்லா மதங்களிலுமே இப்படியான மத வழிகாட்டல்கள் உண்டு. கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்குக் Canon Law, யூதர்களுக்கு Halakhah என்பனவெல்லாம் ஷரியாவுக்கு இணையாக அம்மதங்களில் வழங்கப்படும் சட்டங்கள்தான். “(மதத்தைக் கடைபிடிப்போர் நடக்க வேண்டிய பாதை” என்பதாகவே இவை பொருள் கொள்ளப்படுகின்றன.

2012ல் மன்ஹாட்டன், டென்னெஸ்சி, விஸ்கான்சின், கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ் முதலான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிரான தீவிர இயக்கங்கள் எழும்பின. பள்ளிவாயில்களை “பேய்வீடு” என்னும் பொருள்பட Monster Mosques என இவர்கள் முன்வைத்தனர். மன்ஹாட்டனில் ‘பார்க் 51 இஸ்லாமிய மையம்’ ஒன்றை முஸ்லிம்கள் அமைக்கத் தொடங்கியபோது அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் உருவாயின. வலதுசாரி இயக்கங்களான “டீ பார்டி” மற்றும் Grand Old Party (GOP) என அழைக்கப்படும் குடியரசுக்கட்சி ஆகியவை வெளிப்படையாக இம்முயற்சியை எதிர்த்துக் களம் இறங்கின. கட்டுவதற்கு முன்னதாகவே “Not Welcome” “, “No More Mosques in America” முதலான முழக்கங்களை அந்தப் பகுதிகளில் எழுதுவது, வளர்ப்பு நாய்களுடன் வந்து மசூதிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவது எனப் பல வடிவங்களில் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. வாகனங்களை நிறுத்த இடஞ்சலாக இருக்கின்றன என்பனபோன்ற (parking issues) அற்பப் பிரச்சினைகள் எல்லாம் ஊதிப் பெருக்கப் பட்டன. இதை ஒட்டி இந்த மாதிரியான இடங்களில்தான் இத்தகைய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என மாநில அரசுகள் அவசர ஆணைகளை (Zoning Ordinances) இட்டன.

பார்க் 51 க்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற இஸ்லாமிய வெறுப்பாளி பமீலா கெல்லர் முக்கியமானவர். American Freedom Defense Initiative ,  Stop Islamization of America முதலான இஸ்லாமிய வெறுப்பு அமைப்புகளின் ஊடாகவும் அவரது PamelaGeller.com தளத்தின் ஊடாகவும் அவர் வெளிப்படுத்தும் மிக வன்முறையான வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நீங்கள் இணையத்தில் ஏராளமாகக் காண முடியும். இவரது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் Islamofacism முதலான கருத்தாக்கங்களும் சொல்லாட்சிகளும் பெரிய அளவில் இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முனைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பார்க் 51 இஸ்லாமிய மையம் கட்டும் முயற்சிக்கான எதிர்ப்பில், “the ground zero mega-mosque,”  “monster mosque,” முதலான சொல்லாட்சிகளை உருவாக்கியும் “stab in the eye of America.” முதலான முழக்கங்களை முன்வைத்தும் வெறியூட்டியவர் இவர். ‘லவ் ஜிகாத்’ என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்தாக்கங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டு அவை முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு பயன்படுத்தப் படுவதையும், அதை ஊடகங்கள் முதல் நீதிமன்றங்கள் வரை ஏற்றுக் கொண்டுள்ளதையும் நாம் இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியான விஷம் தோய்ந்த சொல்லாட்சிகளின் உருவாக்கம் எப்படி அப்பாவி மக்களைப் பாதிக்கிறது என்பதற்கு இன்று கேரளப் பெண் ஹாதியாவின் வாழ்க்கை ஒரு சான்று.

2011 ஆகஸ்டில் நார்வே நாட்டில் நடந்துகொண்டிருந்த இளைஞர் பயிற்சி முகாம் ஒன்றில் புகுந்து 77 பேர்களைச் சுட்டுக் கொன்று 200 பேர்களைக் காயமாக்கிய ஆந்த்ரே ப்ரெய்விக் தன் 1500 பக்க அறிக்கையில் பமீலா கெல்லரின் இணையத் தளத்தைக் குறிப்பிட்டுத் தான் அதனால்தான் எழுச்சி பெற்றதாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ப்ரெய்விக்கின் இந்தப் பயங்கரவாத நடவடிக்கையைக் கெல்லர் வெளிப்படையாகப் பாராட்டினாள். “நார்வேயை எதிர்காலத்தில் முஸ்லிம்களால் நிரப்ப இருந்த கட்சியின் வருங்காலத் தலைவர்களைத்தான் ப்ரெய்விக் சுட்டுத் தள்ளியுள்ளான்” எனச் சொன்ன கெல்லர், “(கொல்லப்பட்டவர்களின்) அந்த மூஞ்சிகளைப் பாருங்கள். தூய நார்வேஜிய முகங்கள் அல்ல அவை. மத்திய கிழக்குச் சாயல் கலந்த மூஞ்சிகள் அவை” என அப்பட்டமாக அந்தப் பயங்கரவாதத்தை கெல்லர் ஆதரித்து எழுதியதையும் நீங்கள் காணலாம்.

ஆக மத்திய கிழக்கு, அதாவது முஸ்லிம் சாயல் உள்ள யாரையும் சுட்டுத் தள்ளலாம்.

5.

இப்படியாக இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மிகத் தீவிரமாக மேலை நாடுகளில் நடந்துகொண்டுள்ளது. இங்கிருந்து சென்று வாழ்கிற இந்திய உயர்சாதியினர் அவற்றால் ஊக்கம் பெறுகின்றனர். அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றனர்.

இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் ரிச்சர்ட் டாவ்கின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் போன்ற நவ நாத்திகர்கள், பமீலா கெல்லர் போன்ற பெண்கள், ஃபரீட் ஸகாரியா போன்ற முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் உண்டு. மதங்களை விமர்சிப்பது பெண்ணியச் சிந்தனைகளை ஆதரிப்பது முதலான வடிவங்களில் தம்மை மிகவும் முற்போக்காகக் காட்டிக் கொண்டு இப்படி இஸ்லாமிய வெறுப்பை முன்வைப்பவர்கள் இந்த முஸ்லிம் வெறுப்புத் தொழிலில் மிக எளிதாக முன்னுக்கு வருவதையும் நீங்கள் காணலாம். தாங்கள் அப்படி ஒன்றும் முஸ்லிம்களை ஒதுக்குகிறவர்கள் அல்ல, எங்கள் நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களுக்கும் இடமுண்டு எனக் காட்டுவதற்குத் தொழில்முறை முஸ்லிம் வெறுப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வதை உலகெங்கிலும் காண முடியும். இவர்களும் அந்த மேடைகளில் ஏறி நின்று வழக்கத்துக்கு அதிகமாகவே முஸ்லிம் வெறுப்பைக் கூவுவர். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது, பெண்ணுரிமைகளைப் பேசுவது என்கிற போர்வையில் அவர்கள் அந்த மேடைகளில் நின்று கொண்டு வெறுப்புத் தொழிலுக்கு வலு சேர்ப்பர். இந்தியா, அமெரிக்கா முதலான நாடுகளில் ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள நிலையில் இப்படியானவர்களை ஊடகங்களும் பெரிய அளவில் கண்டு கொள்ளும். இஸ்லாமிய வெறுபின் ஊடாகக் கிடைக்கும் பொருட் பலன்கள் தவிர இப்படி எத்தனையோ பலன்கள் அவர்களுக்கு உண்டு.

முஸ்லிம்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ, முஸ்லிம் மதம் குறைகளற்றது என்றோ இதன் பொருளல்ல. இன்று முஸ்லிம்களை இலக்காக்கி உலகளவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புக்குத் தீனி போடுவதாக அந்த விமர்சனங்கள் அமைந்து விடக்கூடாது என்பதுதான். ஆனால் இப்படியானவர்களின் செயல்கள் அப்படித்தான் ஆகிவிடுகின்றன. இதை அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதல்ல. அறிந்தே செய்கிறார்கள். பலன் கருதிச் செய்கிறார்கள்.

இப்படியான ஒரு இக்கட்டான நேரத்திலும் சூழலிலும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் 2012ல் வெளிவந்தபோது எழுதப்பட்ட விமர்சனங்கள் அத்தனையிலும் “சரியான தருணத்தில்” வந்துள்ள நூல் என்கிற வாசகத்தைக் காண இயலும். தமிழிலும் அது மிகச் சரியான தருணத்தில் வெளிவருகிறது.

இஸ்லாமிய வெறுப்பு குறித்து இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான நூல்கள், கட்டுரைகள் ஆய்வுகள் ஆகியனவும் வந்துள்ளன. Charis Allen, Islamophobea (2010); Deepak Kumar, Islamophobea and Politics of Empire (2012); Arun Kundnani, End of Tolerance: Racism in 21st Century (2007); Bikhu Parekh, A New Politics of Identity (2008); George Morgan & Scot Poynting, Global Islamophobea- Muslim and the Moral Panic in the World (2012); Stephen Sheehi, Islamophobea, The Ideological Campaign Against Muslims (2011) முதலியன சில முக்கியமான நூல்கள். இத்தனை நூல்கள் வந்துள்ளன என்பதே இது இன்றைய உலகில் எத்தனை முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதற்குச் சான்று..

இஸ்லாமிய வெறுப்பு என்பது எப்படி இன்று ஒரு தொழிலாகவே உருப்பெற்றுள்ளது என்பதற்கு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்ட நூல் இது. எப்படி வரலாற்றில் நாஜிகளின் கீழ் யூதர்கள் பட்ட கொடுமைகளையே மூலதனமாக்கி இன்றைய யூதர்களும் இஸ்ரேலும் தங்களின் எல்லா அநீதிகளையும் நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நூல் ஒன்று (Halocaust Industry) 2010 ல் வெளிவந்தது. இதை எழுதிய Norman Finkelstein ஒரு யூதர். பேராசிரியர், செயல்பாட்டாளர். வார்ஸா நாஜி வதை முகாமில் அவரும் அவரது பெற்றோர்களும் துன்பங்களை அனுபவித்தவர்கள். இருந்த போதிலும் கண்முன் இன்று இஸ்ரேலும் யூதர்களும் அவர்களின் துயரங்களையே விற்பனைப் பண்டமாக்கி லாபகரமான தொழிலை நடத்துகின்றனர், பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கின்றனர் என்பதைக் காணப் பொறாமல் அதைத் தோலுரித்து எழுதிய நூல்தான் அது. அதையே ஒரு முன்னோடியாகக் கொண்டு நதன் லீன் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த நூல் அமெரிக்கப் பின்னணியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க இன்றைய நமது அனுபவங்களுக்கு மிகவும் நெருக்கமான நூல். இதில் நடமாடும் அத்தனை பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நீங்கள் சற்று யோசித்துப் பார்த்தால் இங்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் அடையாளம் காண முடியும்.

சரியான தருணத்தில் சிறப்பாக இந்நூலைக் கொணரும் ‘அடையாளம்’ பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *