தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத் கோரி’ என அவற்றைச் சொல்வார்கள். சையத் கோரி சற்றுத் தொலைவில் தெரியும். இஸ்லாமியக் கட்டிடக் கலை வடிவில் அது காட்சியளிக்கும்.

எழுத்தாளர் டேனியல் அவர்களின் கல்லறைக்குச் செல்லும்போதெல்லாம் இவற்றை நோட்டம் விட்டுச் செல்வதுண்டு. அருகில் நெருங்கிப் பார்த்ததில்லை.

ராஜா கோரி என்பது மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதி என்றும் சையத் கோரி என்பது துக்கோஜி, இரண்டாம் ஈகோஜி, சுஜான்பாய், பிரதாப சிம்மன் ஆகியோரின் காலத்தில் கோட்டைத் தளபதியாகவும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (1735 – 38) king maker ஆகவும் இருந்த ஒரு முஸ்லிம் ‘கில்லேதாரரின்’ கல்லறை என்றும் விசாரித்தபோது தெரிய வந்தது.

மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி எனப்படும் முதலாம் ஈகோஜியால் (1674 – 86) தொடங்கி வைக்கப்பட்டது தஞ்சை மராட்டிய அரச வம்சாவளி (1674 – 1855). முதலாம் சரபோஜி மன்னனின் (1711 – 27) மரணத்திற்குப் பின் அவனது மகன் காட்டுராஜா உடனடியாக ஆட்சி பீடத்தில் அமர முடியவில்லை. சரபோஜியின் அதிகாரபூர்வமான மனைவியருக்கு அவன் பிறந்திராததே காரணம்.. சரபோஜியின் சகோதரன் துக்கோஜி (1728 -36) அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டான். அதன்பின் அவனது மகன் இரண்டாம் ஈகோஜி ஓராண்டு காலம் ஆண்டான். அவனது அகால மரணத்திற்குப் பின் அவனது மனைவி சுஜான்பாயியிடம் அதிகாரம் சென்றது.

ஆனால் விரைவில் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் சரபோஜியின் மகன் காட்டுராஜா, இரண்டாம் சாகுஜி, என்கிற பெயரில் ஆட்சிகட்டிலில் அமர்ந்ததில் (1938) சய்யிதின் பங்கு முக்கியமாக இருந்தது. சுஜான்பாயியைப் பிடித்துச் சிறையிலிட்டான் சய்யித்.

தஞ்சை அரசின் அதிகாரத்திற்குட்பட்ட காரைக்காலை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அளிக்குமாறு சாகுஜியை வற்புறுத்தி வந்தான் ஃப்ரெஞ்சுக்காரர்களுடன் நெருக்கமாக இருந்த சந்தா சாகிப். முதலில் ஒப்புக் கொண்டபோதும் இறுதியில் சாகுஜி மசியவில்லை. படை எடுத்து வந்த சந்தா சாகிப் சாகுஜி முறையாகப் பிறந்த மகனில்லை எனக் காரணம் சொல்லி அவனை அரச பதவியிலிருந்து வெளியேற்றினான் (1739).

காலியான அரச பதவியில் துக்கோஜியின் மகன் பிரதாப சிம்மன் (1739 – 63) அமர்ந்து கொண்டான். பிரதாபன் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த காரியங்களில் ஒன்று சய்யிதைக் கொன்றது. தன் மகளைச் சந்தா சாகிபின் மகனுக்குக் கட்டி வைத்துத் தஞ்சை ஆட்சியைக் கவரச் சதி செய்ததாக சய்யித் குற்றம் சாட்டப் பட்டான். சய்யிதின் தம்பி காசிம் இதில் அரசனுக்கு உடந்தையாக இருந்தான்.

இதுதான் சய்யிதின் கதை.

உலகிலேயே பெரியது எனச் சொல்லப்படும் கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோவிலின் தென் மேற்கு மூலையில் அமைதுள்ளது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் வம்சாவளியைச் சொல்லும் இம் மராட்டிய மொழிக் கல்வெட்டுடன் காலின் மெக்கன்சி தொகுத்துள்ளவற்றிலுள்ள இது தொடர்பான சுவடிகளையும் ஒப்பிட்டு மெக்கன்சி சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, 1987, பதிப்பாசிரியர் கே.எம்.வேங்கடராமையா). தரமான ஆய்வுப் பதிப்பு.

இந்த நுலை நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தபோது மெக்கன்சி சுவடியில் (எண் 318, எம் 79) சய்யித் பற்றி இருந்த குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அதில் சில வரிகள் மட்டும் (பக்.100):

“…..இதுவுமல்லாமல் இவன் (சய்யிது/ சையிந்து) அகிறுத்தியம் பண்ணிக் கொண்டு வந்த தென்ன வென்றால் யெகோஜி ராஜா தஞ்சாவூர் றாட்சியத்துக்கு முதல் அதிபதியான பிற்பாடு இதுக்கு முன்னே பண்ணியிருக்கிற தற்ம்மமும் தஞ்சாவூர் றாட்சியத்திலே வெகு தேவாலையங்கள் காவேரி தீரத்தில் வெகு பிறாமணாள் வாசமா யிருக்கிறார்களென்று அக்கிறாரம் கட்டிவிக்கிறது, தேவாலையும் கட்டிவிக்கிறது, பிறாமணாளுக்கு சறுவமானியங் கொடுக்கிறது, யெக்கியம் (யக்ஞம்/வேள்வி) பண்ணிவிக்கிறது, அன்னசத்திரம் போடுவிக்கிறது, இந்த விதமாய் அனேக தற்ம்மங்கள் யெகோஜி மகராஜா நாள் முதல் பரம்பரையாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். அப்பால் பிரதாப சிம்ம ராஜா பட்டத்துக்கு வந்த நாள் முதல் விசேஷ தற்மம் பண்ணிக்கொண்டு வந்தார். இந்த தற்மத்துக்கெல்லாம் சய்யிது விரோதம் பண்ணி வந்தான்.”

ஆக, பார்ப்பனர்களுக்கு செய்யப்பட்ட சிறப்புச் சலுகைகளை ஏதோ ஒரு வகையில் சய்யிது எதிர்த்து வந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இது பிடிக்காமலிருந்திருப்பதும் தெரிகிறது. இப்படிச் சொல்வதன் பொருள் சய்யிதை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்த வீரனாகவும் தியாகியாகவும் தூக்கிப் பிடிப்பதல்ல. முழு விவரங்களும் நமக்குத் தெரியவில்லை. அன்றைய குழப்பமான சூழலில், தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளத் தன்னளவில் எல்லா வகைகளிலும் சய்யிதுவும் முயற்சித்திருப்பான் என்பதில் அய்யமில்லை.

வம்சாவளியைச் சொல்லும் இச்சுவடி தொடர்ந்து சய்யிது மீது வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு எத்தகைய கோணத்திலிருந்து வைக்கப்படுகிறது என்பதுதான் ஒரு கணம் நம்மை இந்தியத் துணைக் கண்ட அரச நீதியைப் பற்றிச் சிந்திக்க வைகிறது.

“இதுவுமல்லாமல் தான் துலுக்க சாதியாக யிருந்தும் கற்ணாட்டச் சாதி (கர்நாடக சாதி) தேவடியாள் கோவில் தேவடியாளைக் கெடுத்துப் போட்டான். அதிலே ஒருத்தி மொஹனா என்கிற தாசியைக் கெடுத்துப் போட்டு அவளைத் தன்னுடைய வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டான். இப்படிக்கொத்த துஷ்கிருத்தியமும் கிறுத்திறமும் மஹாறாஜாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் தாம் நூதினமாய் ராச்சியத்துக்கு வந்திருக்கிறோம் என்று அந்த சயிந்துக்கு தெண்டினை (தண்டனை) பண்ணாமல் சிறிது நாள் வரைக்கும் அவனுடைய அதிகாரமும் நடப்பித்தார்…..”

இப்பைச் செல்கிறது வம்சாவளி வரலாறு. அடுத்த சில வரிகளில் சய்யிது கொல்லப்படும் நிகழ்வு விரிவாக விளக்கப்படுகிறது.

மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும், அவர்களது விருப்பத்தை மீறி உறவு கொண்டாலோ, கடத்திச் சென்றாலோ அது குற்றம் என்பதில் யாருக்கும் கருத்து மறுபாடு இருக்க இயலாது. ஆனால் இங்கே சய்யிது மீது சாத்தப்படும் குற்றச்சாட்டு அத்தகைய உயரிய நோக்கிலிருந்து எழவில்லை.

பாலியல் தொழில் செய்வோர், கோவில்களுக்குப் பொட்டுக் கட்டிக் கொண்ட தேவதாசியர் முதலானோர் அதிகாரத்தில் உள்ளோரால் எந்த அளவிற்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர், பாலியல் உறவில் அவர்களது சுய விருப்பம் மற்றும் தேர்வுகளுக்கு எவ்வாறு இடமில்லாமல் இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காடுகள் உண்டு,. மூன்றாம் குலொத்துங்க சோழனது ஆட்சிக்காலத்திய திருக்காளத்தி (காளஹஸ்தி} கோவில் கல்வெட்டொன்றில் காணப்படும் செய்தி ஒன்று குறித்து நான் ஆதாரங்களுடன் என் கட்டுரைகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளேன். கோவிலுக்கென்று கொண்டுவரப்பட்டுப் பொட்டுக்கட்டப்பட்ட தெவதாசியரை குலோத்துங்க மன்னன் கட்டாயமாகத் தன் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று விடுகிறான். மக்கள் இதை அறிந்து எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவாக வேறு வழியின்றி மன்னன் அவர்களைக் கோவிலுக்குத் திருப்பி அனுப்பிய செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுதான் அது.

தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கொடுமைகள் எந்த அளவிற்கு இருந்தன என்பதற்கு தஞ்சை மோடி ஆவணங்கள் சாட்சி பகர்கின்றன. மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்படுள்ள மோடி ஆவணங்களில் ஓரிரு மூட்டைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டு, அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆவணத் தொகுதிகள் மூன்றைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தொகுப்பாசிரியர் பா.சுப்பிரமணியன்).. இந்த மூன்று தொகுதிகளிலேயே ஏராளமான பாலியல் வன்முறைகளும் பெற்றோர்களிடமிருந்தும், கணவன்மார்களிடமிருந்தும் பெண்கள் கடத்திச் செல்லப்படுகிற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அப்படியான சில சம்பவங்களைப் பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் தொகுத்து:ள்ளார் (’உங்கள் நூலகம்’, அக்டோபர் 2012).

மன்னர்களின் அதிகாரபூர்வமான மனைவியர் (ராணிகள்) தவிர ‘அபிமான மனைவியர்’, ‘விரும்பிக் கொண்ட மனைவியர்’, ‘சேர்த்துக் கொண்ட மனைவியர்’ என்கிற பெயர்களில் பலர் இருந்ததை வம்சாவளி வரலாறுகள் பதிவு செய்துள்ளன. இவர்கள் தவிரவும் பல காமக் கிழத்தியர்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கென தனி மாளிகைகள் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அரசாங்க நிதியிலிருந்து அவர்களுக்கு ‘சம்பளம்’ வழங்கப்பட்டது. அவர்களுக்குச் சமையல் செய்ய ஆட்களும், சமைக்கத் தனி விடுதிகளும் இருந்தன.

பெரிய அறிவுஜீவியும், நூல் சேகரிப்பாளனுமாகிய இரண்டாம் சரபோஜி மன்னனின் (1798 – 1832) இத்தகைய காமக் கிழத்தியர் திருவையாற்றில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள ‘கல்யாண மஹாலில்’ தங்க வைக்கப்பட்டனர். இரண்டாம் சிவாஜியின் (1832 – 55) 48 காமக் கிழத்தியர் தஞ்சை கீழ வீதியில் உள்ள மங்கள விலாசத்தில் இருந்தனர்ஈந்த மாளிகைகள் இரண்டும் இன்னும் திருவையாற்றிலும் தஞ்சையிலும் உள்ளன. இவர்களோடு இவகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அங்கு வசிப்பர். சிவாஜி இறந்தபோது 10 பெண் குழந்தைகளும், 15 ஆண் குழந்தைகளும் மங்களவாசத்தில் இருந்தனர். இறந்தபோது அவனுக்கு 303 ‘வைப்பாட்டிகள்’ இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் போர்பஸ் அரசுக்குக் கடிதம் எழுதினார் (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1987, பக்.7).

இவர்கள் ‘சத்மம்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் தாசிகளா? என்கிற கேள்வியை வெள்ளை நிர்வாகம் எழுப்பியபோது, அரண்மனை சிரேஸ்தார் வெங்கடராவ் அன்றைய வெள்ளை அதிகாரிக்கு (ரெசிடென்ட்) அளித்த பதிலில்,

“தாசிகளும் தோழிகளும் அநேக புருஷர்களுடன் சகவாசஞ் செய்வார்கள். அவர்களுக்கு மானமோ வெட்கமோ கிடையாது. விபச்சாரம் அவர்களுடைய தொழில். மங்கள விலாசப் பெண்கள் அப்படி அல்ல. மானத்துடன் ஒரே புருஷனிடத்தில் இருந்து வருபவர்கள். அந்தப் புருஷனுக்குப் பின்னர் பிழைத்திருக்கும் வரையில் வெளியே போகாமல், புருஷன் இறந்துபோன பின்பு ஸ்திரி புழங்க வேண்டிய முறைப்படி இருப்பார்கள்”

ஆனாலும் உண்மை நிலை அப்படி இல்லை என்பதை மோடி ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. இப்படி நூற்றுக் கணக்கான மனைவியரைப் பாலியல் ரீதியாக இந்தச் சோம்பேரி மன்னர்கள் எப்படிச் சமாளித்திருக்க முடியும்? இப்படி அடைப்பட்டுக் கிடந்த பெண்கள் தவிர்க்க இயலாமல் பிற ஆடவருடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், அது தொடர்பாக அரண்மனை அதிகாரிகளுக்கு புகார்க் கடிதங்கள் எழுதப்பட்டதையும் (அவற்றில் சில மொட்டைக் கடிதங்கள்) மோடி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. ரெங்கசாமினாயகர் என்பவர் 16.08.1876 அன்று எழுதிய புகார்க் கடிதத்தில்,

““தஞ்சாவூர் சிவாஜி மகாராஜன் வைப்பாட்டி என்கிற மங்கள விலாசத்தில் ஒருவளாகிய கோவிந்தாபாயி, லெட்சுமி அம்மாள் இவர்கள் இரண்டு பேரும் திருவையார் சகஜிநாயகர் அக்கிரகாரத்திலுள்ள அய்யங்கார் பிள்ளை, திருவேங்கடத்தையங்காரை இடைவிடாமல் வைத்துக் கொண்டு ரொம்பவும் கெட்ட செய்கைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு அனேக பெட்டிஷன்கள் எழுதியும் தாங்கள் கவனிக்கவில்லை. இப்பொழுது தாங்கள் தயவு செய்து விசாரிக்கும்படியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.”

எனக் கூறப்பட்டிருந்தது (மோடி ஆவணம் தொகுதி 2; 149 – 153).போகட்டும். இது நமக்குப் பிரச்சினை இல்லை. அந்தப் பெண்களை நாம் குற்றம் சொல்ல இயலாது.

நம்முடைய கவலை என்னவெனில் இப்படி அரசர்களாலும் அரண்மணை அதிகாரிகளாலும் கொண்டு செல்லப்பட்ட பெண்கள் பலர் குடும்பங்களிலிருந்தும், ஆதரவில்லாமலிருந்தும் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள்தான். தேவதாசியரைப் பொருத்த மட்டில் கேட்க வேண்டியதில்லை. மோடி ஆவணங்களிலிருந்து சிவசுப்பிரமணியம் சுட்டும் இரு நிகழ்வுகள்:

புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலம்பாயி எனும் பெண், தன் 9 வயது மகளை விசாலாட்சி எனும் தாசியிடம் மூன்றரை ரூபாய்க்கு அடமானம் வைத்துச் செல்கிறாள் (1842). திரும்பி வந்து பணத்தைத் தந்து மகளைக் கேட்டபோது, அரண்மனையிலிருந்து வந்தவர்கள் கட்டாயமாக அவளைக் கொண்டு சென்றுவிட்டனர் எனப் பதில் வருகிறது. தன் மகளை மீட்டுத் தரச் சொல்லி ஆங்கில ரெசிடென்டுக்கு எழுதிய கடிதம் ஒரு ஆவணமாகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (2:153 – 154).

அக்கச்சிப்பட்டி எனும் ஊரிலிருந்து பிழைக்க வந்த சிதம்பரம் பிள்ளையுடன் வந்த பெண்களை அரண்மனையார் கட்டாயமாகப் பிடித்துச் செல்கின்றனர். விடச் சொல்லிக் கேட்டபோது அவர் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார். அப் பெண்களை விலைக்கு விற்றதாக அவர் எழுதிக் கொடுக்க வேண்டியதாகிறது. ஆங்கில ரெசிடென்டிடம் புகார் அளித்தாலோ அவனும் விரட்டி அடிக்கிறான். கவர்னருக்குப் புகார் அளிக்கலாமென்றாலோ உள்ளூர் தபாலாபீசில் புகாரைப் பெற மறுக்கின்றனர் (2: 157- 159).

மாமனார் வீட்டில் விட்டுச் சென்ற தன் பால்ய மனைவி மீனாட்சி, பருவமெய்தியிருப்பாள் என அழைத்துச்செல்ல ஆவலோடு வந்த இளங் கணவன், அவள் இப்போது ஆனந்தவல்லி என்கிற பெயருடன் அரண்மனையில் வாழ்வதாக அறிந்து கவர்னர் துரைக்கு அளித்த புகார் இன்னொரு ஆவணம் (2: 160 -162).

அரண்மனை அதிகாரத்திற்கு எதிராகப் புகார் அளிக்கும் நடுவர்களாக ஆங்கில நிர்வாகத்தை மக்கள் கருத வேண்டிய நிலை இருந்தது என்பதும், பெரும்பாலும் ஆங்கில நிர்வாகம் அதிகாரத்திற்கே துணை போயுள்ளதையும் நாம் விளங்கிக் கொள்கிறோம். எனினும் பல நேரங்களில் நேர்மையுள்ளம் படைத்த ஆங்கில அதிகாரிகளும் இருந்துள்ளனர் என்பதற்கு அரண்மனைப் பார்ப்பன அதிகாரக் கும்பலால் உடன்கட்டை என்கிற பெயரில் தீக்கிரையாக்க முயற்சிக்காட்ட கிளாவரிந்த பாயைக் காப்பாற்றிய ஆங்கில ரெசிடென்ட் லிட்டில்டன் ஒரு சாட்சி (மாதவையாவின் ‘கிளாரிந்தா).

இப்படியான பின்னணியில்தான் “கோவில் தேவடியாளான” மொஹனா என்கிற பெண்ணை கோட்டைத் தளபதி சய்யிது கட்டாயமாக உறவு பூண்டு வீட்டுக்கும் கொண்டு சென்றதை மட்டும் பெருந் துஷ்கிருத்தியமென வரையறுக்கிறது போன்சே வம்ச வரலாறு. கட்டாயமாகத் தேவதாசி ஒருவரைக் கொண்டு சென்றதல்ல இங்கு குற்றம். ‘துலுக்க சாதியைச்” சேர்ந்த ஒருவன், “கற்ணாட்டச் சாதியச் சேர்ந்த ஒருத்தியைக் கொண்டு சென்றதால்தான் அது குற்றம். அவன் கோட்டைக் கில்லேதாரராக இருந்தாலும் துலுக்க சாதியைச் சேர்ந்தவன்: அவள் ‘கோவிற் தேவடியாளாக” (மன்னிக்கவும் இச் சொல்லைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு) இருந்தபோதும் கற்ணாட்டச் சாதியைச் சேர்ந்தவள்.

பிரச்சினை அறம் சார்ந்தது அல்ல: அது சாதி சார்ந்தது: மத அடிப்படையிலானது.

இதுதான் இன்று இந்துத்துவ சக்திகள் இன்று உன்னத அரச மாதிரியாக முன்வைக்கும் சிவாஜி மன்னர்கள் மற்றும் பேஷ்வா ஆட்சிகளின் அரச நீதி.

ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வார் இருவரும் சொந்த மகளையும் அவளது காதலனையும் கொன்று குற்றத்தை மறைத்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அளவில் ஊடகங்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்டு வந்தது.

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பனும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காகவும் இந்த டாக்டர் தம்பதியருக்கு சென்ற வாரம் காசியாபாத் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது..

2008 மே 16 அன்று இருவரையும் கொன்ற டாக்டர் தம்பதியர் ஹேம்ராஜே தம் மகளைக் கொன்றதாக ஐயத்தை உருவாக்கினர். எனினும் அடுத்த நாள் பூட்டப்பட்டிருந்த மாடியில் ஹேம்ராஜின் அழுகிய பிணம் கண்டெடுக்கப்பட்டபோது அதை டாக்டர் தம்பதியரால் மட்டுமல்ல யாராலும் விளக்க இயலவில்லை. ராஜெஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். எனினும் இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்பதற்காக இவழக்கைத் தொடராமல் முடித்துக் கொள்வதாக. இவ் வழக்கைப் புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுத் சென்ற டிசம்பர் 29, 2010ல் அறிவித்தது.

இவ்வாறு வழக்கு முடிக்கபடுவதை ஏற்றுக் கொல்ளாத உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மறு விசாரணைக்கு ஆட்படுத்தியது. இன்று டாக்டர் தம்பதியர் தண்டிக்கப்பட்டதில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது என்பதை யாரும் ஏற்க இயலாது என்கிற வகையில் உச்ச நீதிமன்றம் பாராட்டுக்குரியதாகிறது.. .

எனினும் இதை வரவேற்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. இராகவன் போன்றோர் கவனப்படுத்தும் (The Hindu, Nov 29, 2013) இத் தீர்ப்பின் அடிப்படை மனித உரிமை நோக்கிலிருந்து பார்ப்போருக்குக் கவலை அளிக்கிறது. 2002 குஜராத் படுகொலைகளின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரி உட்பட 68 பேர் கோடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேந்திர மோடி மற்றும் 58 பேர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என நற்சான்றிதழ் வழங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை ஏற்றவர் இந்த இராகவன் என்பது குறிப்பிடத் தக்கது.

குற்றத்தை நிறுவத்தக்க “முடிவான சான்றுகள்” (conclusive evidences) இல்லாதபோதும், “நியாயமான அய்யங்களுக்கு அப்பால்” (beyond reasonable doubt) குற்றம் உறுதியாக நிறுவப்படாத போதும் கூட, வெறும் “சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களின்” (circumstantial evidences) அடிப்படையிலேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்படாலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இத்தீர்ப்பை இம் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலும் குற்றவியல் நீதிமுறை கீழ்க்கண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அவை:

குற்றம் அய்யத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படும்வரை குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியாகவே கருதப்படுவார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்கு மவுனமாக இருக்க உரிமை உண்டு.
குற்றத்தை நிரூபிக்கும் கடமை குற்றத்தைச் சுமத்துகிற கவல்துறையுடையதே தவிர அது நீதிமன்றத்துடையது அல்ல; அதேபோல குற்றத்தைத் தான் செய்யவில்லை என நிறுவும் பொறுப்பும் குற்றம் சுமத்தபட்டவருக்குக் கிடையாது: அய்யத்திற்கிடமின்றி அதை நிறுவுவது காவல்துறையின் பொறுப்பு.

இதில் இரண்டாவது அம்சத்தைக் கொஞ்சம் விளக்க வேண்டும். “தன்னைத்தானே குற்றவாளியாக்கிக் கொள்ளும் நிலைக்கு எதிரான காப்புறுதி” (guaranteed protection against self incrimination) என இது அழைக்கப்படுகிறது. தன்னை நோக்கி விசாரணையின்போது வைக்கப்படும் கேள்வி ஒன்றிற்குத் தான் அளிக்கும் பதில் தன்னைக் குற்றச் செயலுடன் தொடர்புபடுத்தும் என ஒருவர் கருதினால் அவர் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க நமது அரசியல் சட்டமும் {A 20 (3)}, குற்ற நடைமுறைச் சட்டமும் {Cr PC 161 (2)}. இடமளிக்கின்றன.

ஆனால், தேங்கிக் இடக்கும் ஏராளமான கிரிமினல் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடாமல் அவர்கள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகப்படுத்துவது என்கிற பெயர்களில் மேற்கண்ட மூன்று அடிப்படை நீதி வழங்கும் நெறிமுறைகளையும் ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

குற்ற நீதி வழங்குமுறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கென இந்திய அரசால் அமைக்கப்பட்ட ‘மாலிமத் குழு’ மற்றும் ‘மாதவ மேனன்’ குழு முதலியன இதை நோக்கிப் பரிந்துரைகளை அளித்துள்ளன. இன்றைய நீதிவழங்கு முறை “நீதி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளது” எனக் குற்றம் சாட்டும் மாலிமத் குழு அதற்கு மாற்றாகச் சொல்லும் வழிமுறை மிக ஆபத்தாக உள்ளது.

இன்றைய நீதிமுறையில் நீதிபதி என்பவர் ஒரு நடுநிலையாளர் (umpire). இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டதா என நிறுத்து முடிவெடுக்க வேண்டியது அவர் பொறுப்பு. இந்நிலையை ஒழித்து, நீதிபதி ஒரு நடு நிலையாளராக மட்டும் அமையாமல், அவரே குற்றத்தை நிறுவும் பாத்திரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இவ் அறிக்கை. அதாவது நீதிமன்றம் என்பது, “விசாரணையின் ஊடாக நீதிவழங்கும் அமைப்பு” என்கிற நிலையிலிருந்து விலகி, “குற்றத்தை நிறுவி தண்டனை வழங்கும் அமைப்பாக” (inquisitorial system) மாற வேண்டுமாம்.

அதாவது முடிவான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்தைக் காவல்துறை முழுமையாக நிறுவாதபோதும், வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நீதிபதி குற்றத்தை உறுதி செய்து தண்டனையை வழங்கலாம். ஏதூனும் ஒரு கேள்விக்குக் குற்றம் சுமத்தபட்டவர் பதிலளிக்க மறுத்தால் அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் கொண்டு தண்டனை வழங்கலாம்.

அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டாத யார் மீதும் கடுங் குற்றங்களைச் சுமத்திப் போதிய ஆதாரங்களின்றி அவர்களைப் பழிவாங்கவும், சிறையிலடைக்கவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் அடித்தள மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் முதலானோருக்காகப் போராடுகிற இயக்கத்தவர், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் டாக்டர் பினாயக் சென் போன்றோர் எந்தக் குற்றமும் செய்யாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்படுவதற்கும் கடும் தண்டனைக்குள்ளாவதற்கும் இது வழி வகுக்கும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியன தலைதூக்கியுள்ள ஒரு காலகட்டத்தில், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பியபோதும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நீதி வழங்கு நெறியை ஏற்க இயலாது என்கிற சொல்லாடல்கள் இன்று மிதக்கவிடப்படுகின்றன. மாறாக, “ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டபோதும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது” என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. தேசப் பாதுகாப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகரித்தல் என்கிற பெயர்களில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைக் குடிமக்களுக்கு மறுத்துவிட இயலாது. இப்படியான சந்தர்ப்பங்களில் தேசப்பாதுகாப்பு முதலியவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடையில் மிகவும் நுணுக்கமான ஒரு சமச் சீர்மையைக் (balance) கையாள்வது நீதிமன்றத்தின் பொறுப்பாகிறது. எக்காரணம் கொண்டும் அரசு, காவல்துறை மற்றும் இதர நிறுவனங்கள் மக்களுக்கும், அடிப்படை நெறிமுறைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய தன்மையைப் (accountability) பலி கொடுத்துவிட இயலாது.

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பை “கவுரவக் கொலைகளுக்கு” எதிரான தீர்ப்பு என்றும் சிலர் கொண்டாடுவதையும் ஏற்க இயலாது. கவுரவக் கொலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இடுப்பதற்கு உரிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது என்பதும் அடிப்படை நீதி வழங்கு நெறிகளை அப்படியே தூக்கிக் கடாசி எறிவதும் ஒன்றல்ல. அதேபோல டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மட்டும் சிறுவனாக இருந்ததால் அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது அது குறைந்த தண்டனை என எழுந்த கண்டனங்களும் இத்தகையதே. சாதிப் பெருமையைக் காரணம் காட்டிக் காதலர்கள் கொலை செய்யப்படுவதும், அதே போலப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் கவுரவக் கொலை, அல்லது பாலியல் வன்முறை, தேசப் பாதுகாப்பு என எதன் பெயராலும் அடிப்படை நீதி வழங்கு நெறிமுறைகளை மீறுவது அரசு மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும். அரசியல் சட்ட ஆளுகையில் எந்நாளும் இவற்றுக்கு இடமில்லை.

“சந்தேகத்தின் பலன்களை” மட்டுமின்றி “சந்தர்ப்ப சூழல்களின் பலன்களையும் கூட ”குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு“ மட்டுமின்றி, “குற்றம் நிறுவப்பட்டவர்களுக்கும்” கூட வழங்க வேண்டும் என்பதே நீதி வழங்கு நெறிமுறையின் அடிப்படை. இந்த வகையிலேயே சட்ட நூல்களில் வரையறுக்கப்பட்டு இருக்காவிட்டாலும் கூட, நீதி வழங்கு நெறியினூடாகவே, “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படவேண்டும்” என்பது போன்ற எழுதப்படாத சட்டங்கள் (judicially evolved principles) உருவாகியுள்ளன. நாளை ஆருஷி வழக்குத் தீர்ப்பும் கூட இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையாக மாறினால், அது உறுதியாக அது ஒரு ஜனநாயக ஆளுகையின் அடையாளமாக இருக்காது.

தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப் போராடியபோது அவருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என வெள்ளையர்கள் அறிவித்திருப்பார்கள். ஊமைத்துரை அடைக்கலம் தேடி சிவகங்கைக்கு வருவார். அப்போது சிவகங்கையை மருது சகோதரர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். சின்ன மருது ஊமைத் துரையை மறைந்திருக்கச் சொல்லிவிட்டு அண்ணனிடம் வந்து அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பார். தற்போதுள்ள சூழலில் ஆங்கிலேயரைப் பகைத்துக் கொண்டு வாழ இயலாது என்று மறுப்பார் பெரிய மருது.

அப்போது அருகிலுள்ள அறையிலிருந்து ஊமைத்துரை உள்ளே வருவார். என்ன காரியம் செய்துவிட்டாய் எனப் பெரியவர் தம்பியைக் கண்டித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வரும் ஆங்கிலத் தளபதி ஊமைத் துரையின் மடியைப் பிடித்துக் கைது செய்ய முயல்வான். அப்போது பெரிய மருது, “என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் அடைக்கலம் வந்த ஒருவரை என் கண்முன்னே கைது செய்வாய்?” எனச் சீறி அவனை வெளியே அனுப்புவார். அவனும் இதன் விளைவுகளை நீ அனுபவிப்பாய் என எச்சரித்து அகல்வான். பின்னர் வெள்ளையரின் படை இதைச் சாக்காகக் கொண்டு சிவகங்கை மீது படை எடுத்து மருது சகோதரர்களை அழிப்பதாகக் கதை செல்லும்.

முன்னதாக ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலப் படைகளால் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம்தான் இந்த மருது சகோதரர்களும் ராணி வேலுநாச்சியாரும் அடைக்கலம் கோரிச் சென்றனர், ஹைதரும் அவரது மகன் திப்புவும் தங்கள் திண்டுக்கல் கோட்டையில் இவர்களுக்கு ஏழாண்டுகாலம் அடைக்கலமளித்துக் காத்ததோடு, இறுதியில் அவர்கள் மீண்டும் இழந்த ஆட்சியைப் பிடிக்க படைகளும் பொருளும் உதவினர் என்பது வரலாறு.

இப்படி உயிரைக் கொடுத்தேனும் அடைக்கலம் வந்தோரைக் காப்பது என்றொரு மரபு நமக்குண்டு. புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் வந்த ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டி, அதை வேட்டையாட வந்த பருந்துக்கு புறாவின் எடைக்குச் சமமான சதையைத் தன் தொடையிலிருந்து வெட்டித் தருவான். இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படியான மரபு நமக்கு உண்டெனினும் இன்றும் நமது நாடு அகதிகளுக்கு உரிய பாதுகாப்புகளும் உரிமைகளும் அளிப்பது தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாட்டிலும் (UN Convention on the Status of the Refugees), 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தத்திலும் (optional protocol) கையொப்பமிடவில்லை. ஆனாலும் சுதந்திரத்திற்குப் பிந்திய பிரிவினைக் கலவரம் தொடங்கி இன்றுவரை சுமார் இரண்டரை கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாக ஒரு கணக்கு உள்ளது. 53,000 சக்மாக்கள் உட்பட 150,000 பர்மியர்கள், 90,000 திபெத்தியர்கள், 70,500 ஈழத் தமிழர்கள், 19,000 ஆஃப்கானியர்கள் என இப்போது 4,50,000 ஏதிலியர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் ரோகினியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களில் இருந்து, ஆஃப்கன் மற்றும் பாக்கிலிருந்து வந்துள்ள சீக்கியர்கள், இந்துக்கள் எனப் பல மதத்தினரும், இனத்தினரும் உள்ளனர். இதில் பலர் இனி சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

அப்படி இருந்தும் இந்திய அரசு இது தொடர்பான ஐ.நா ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ, தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் கொள்கையை உருவாக்கவோ தயாராக இல்லை. பின் எந்த அடிப்படையில் ஏதிலியர் இந்திய அரசுகளால் கையாளப்படுகின்றனர்? அவ்வப்போதைக்குத் தற்காலிகமாக உருவாக்கப்படுகிற அணுகல்முறைகளே (ad hocism) கடைபிடிக்கப்படுகின்றன. இதன்விளைவாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான வகையில் வெவ்வேறு நாட்டு அகதிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுல்ளது.

எடுத்துக்காட்டாக, திபெத்திய அகதிகளுக்கு இமாசலப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் கூடத் தரப்பட்டுள்ளன. பிள்ளைகள் படிக்கத் தனிப் பள்ளிக்கூடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 113 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு (designated refugee camps) வரும் ஏதிலியர் அங்கு பிரித்தனுப்பப் படுகின்றனர். பூடான் மற்றும் நேபாளத்திலிருந்து வந்துள்ளோர் இரு நாட்டு நட்புறவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றனர். சிலருக்கு வேலை அனுமதியும் கூட (work permit) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பர்மா, ஆஃப்கன் முதலான பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் நிலை படு மோசம்.

இந்தியாவுக்குள் பெரிய அளவில் ஒரு நாட்டிலிருந்து அகதிகள் வந்து குவியும்போது அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்படுகின்றனர். தென் ஆசிய நாடுகள் அல்லது அவ்வளவு சுமுகமான உறவுகளில்லாத பிற நாடுகளிலிருந்து வருவோர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், ஆய்வுகளுக்குப் பின் ‘அடைக்கலம் தேடுவோர்’ (asylum seekers) என்பதாக ஏற்கப்படுகின்றனர். அவர்களுக்கு விரிவான ‘அகதிகள் நிலை’ (refugee status) அளிக்கப்படுவதில்லை. பிற நாடுகளிலிருந்து வரும் சிலர் ஐ.நா அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கு அதன் விதிகளுக்குட்பட்டுத் தங்களுக்குத் தனிநபர் அடிப்படையில் அகதி நிலை அளிக்குமாறு விண்ணப்பிக்கின்றனர். இந்த அலுவலகம் டெல்லியில் மட்டும் உள்ளது. மற்றபடி தமிழகத்திலும் அது சிறிய அளவில் உதவிகள் அளிக்கின்றது.

ஆக இந்தியாவில் உள்ள ஏதிலியரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (அ) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் (எ.கா: ஈழ மற்றும் திபெத் அகதிகள்). (ஆ) ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படாத உரிமையுடன் முழு அகதி நிலை வழங்கப்பட்டோர் (பர்மிய மற்றும் ஆஃப்கன் அகதிகள்) (இ) இந்திய அரசாலோ, ஐ.நா ஆணையத்தாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள் (மிசோராமில் வாழும் பர்மிய சின் அகதிகள்).

இந்திய அரசுக்கு அகதிகளுக்கான ஏதாவது ஒரு கொள்கை உள்ளது என்றால் அது திபெத்திய அகதிகள் குறித்து நேரு அப்போது சொன்னதுதான். இந்தியா தன் நாட்டுக்கு வரும் அகதிகளைப் பொருத்தமட்டில் மூன்று அடிப்படைக் காரணிகளின் அடிப்படையில் நடத்தப்படுவர் என்றார். அவை:

எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டுடன் உள்ள நட்புறவு.,
தேச மற்றும் எல்லைப் பாதுகாப்பு..
அகதிகளின் மீதான அனுதாபம்.
ஆக, இருநாட்டு அரசியலே இங்கு முதன்மை ஆகிறது. பன்னாட்டு ஒப்பந்தங்கள், அவற்றுக்கான கடப்பாடுகள் இங்கு ஒரு பொருட்டல்ல. இதன் விளைவுதான் மேற்குறிப்பிட்ட அகதிகளுக்கான அணுகல்முறைகளில் உள்ள சீரற்ற தன்மைகள்.

இந்தியா அகதிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிடாதபோதும் எல்லா நாடுகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட, “வரும் அகதிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமை” என்கிற Non-refoulement கொள்கையைப் புறக்கணிக்க இயலாது. தவிரவும் இந்திய அரசு 1966ம் ஆண்டின் ஐ.நா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டையும், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா அவையின் குழந்தைகள் உரிமைக்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளது இவை அகதிகளின் உரிமைகளையும் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. அதோடு குடிமக்களுக்கிடையே சமத்துவம், அவர்களின் வாழ்வுரிமை. மத உரிமை ஆகியவற்றை ஏற்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 21, 25 ஆகிய பிரிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இங்கு வரும் அகதிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளிலேயே நமது நீதிமன்றங்கள் பன்னாட்டு உடன்பாடுகளில் உள்ள உரிமைகள், அந்த உடன்பாடுகளில் இந்தியா கையொப்பமிடாதபோதும், இங்கு வாழும் அகதிகளுக்கும் உண்டு என்கிற நெறிமுறையை (judicially evolved principle) உருவாக்கியுள்ளன. சக்மா அகதிகள் வழக்கில் (National Human Rights Commission v State of Arunachal Pradesh, AIR 1996 SC 1234). உச்ச நீதிமன்றம் மேற்குறித்த அரசியல் சட்ட உரிமைகள் இங்கு வாழநேர்ந்த அகதிகளுக்கும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அதேபோல இந்திய அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பர்மிய அகதிகளை வெளியேற்ற முயற்சித்தபோது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் (Malvika Karlekar v Union of India-Criminal Writ Petition No 243 of 1988), அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதை நிறுத்துமாறு ஆணையிட்டது.

இந்தியா இவ்வாறு அகதிகளுக்கான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காவிட்டாலும் பொதுவில் ‘அகதிகளைத் திருப்பி அனுப்பாமை’ முதலான நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகக் கூறுவது வழக்கம். ஆது ஓரளவு உன்மைதான் எனினும் பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காததன் விளைவாக மேற்குறித்தவாறு அகதிகளைக் கையாளுவதில் சீரற்ற தன்மை இருப்பது முதலிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிரவும் அரசியல் காரணங்களை முன்னிட்டு அகதிகளைத் திருப்பி அனுப்பாமை என்கிற கொளகையையும் கூட இந்திய அரசு விட்டு விடக்கூடியதுதான் என்பதற்கு ராஜீவ் கொலையை ஒட்டிப் பெரிய அளவில் ஈழஅகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு.

இப்படியான நிலையை இந்தியா எடுப்பதற்கு அடிப்படையாக இருப்பது இன்று அகதிகளைக் கையாள்வதற்கு அது பயன்படுத்தக் கூடிய 1939ம் ஆண்டு வெளிநாட்டார் பதிவுச் சட்டம், 1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் மற்றும் இங்குள்ள பல கடவுச் சீட்டுச் சட்டங்கள் முதலியவைதான். இச்சட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டார் சட்டம் அகதிகளுக்கானதல்ல. இச்சட்டம் (அ) தங்களது நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வரும் அகதிகளையும், (ஆ) இங்குள்ள வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புகள் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் வருகிற புலம் பெயர்ந்தவர்களையும் (legal and illegal migrants) (இ) உரிய பயண ஆவணங்களுடன் இங்கு வருபவர்களையும் வேறுபடுத்தி அணுகுவதில்லை. இந்தச் சட்டமும், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1971ல் வெளியிடப்பட்ட ஆணையும், 2004ல் வாஜ்பாயி அரசாங்கத்தால் இச்சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அபரிமிதமான அதிகாரங்களை இந்திய அரசுக்கு அளிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத யாரையும் கைது செய்யவும், தடுத்து நிறுத்தவும், சிறையிலடைக்கவும், தேவையானால் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டமும் வெளிநாட்டாருக்கு எதிரான அரசின் அதிகாரங்களை வலுவாக்குகிறது.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளுக்கென செங்கல்பட்டு, பூந்தமல்லி முதலான இடங்களில் ‘சிறப்பு அகதிகள் முகாம்கள்’ எனப்படும் நிழற் சிறைகளையும் (shadow prisons) செயல்படுத்துகின்றன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தாங்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருவது அறிந்த ஒன்று.

தங்கள் நாட்டில் வாழவே இயலாது துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதையும் அங்கு கண்ணியமாக அவர்கள் நடத்தப்படுவதையும் ஒரு உரிமையாக ஏற்கும் கடப்பாடு, பன்னாட்டுச் சட்டங்களில் கையெழுத்திடாதபோதும் இந்தியாவிற்கு உண்டு என்பதைச் சற்று முன் பார்த்தோம். அப்படி வருகிறவர்களிடம் உரிய பயண ஆவணங்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அப்படி இல்லை என்பதற்காக வெளிநாட்டார் சட்டம் அல்லது உகாண்டா நாட்டினருக்கான 1972ம் ஆண்டு ஆணை முதலியவற்றின் அடிப்படையில் அவர்களைத் திருப்பி அனுப்புவது அல்லது சிறையிடுவாது எப்படிச் சரியாகும்?

ஐ.நா உடன்பாடு மற்றும் விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிடாததற்கு இந்தியா மூன்று காரணங்களைச் சொல்கிறது. அவை:

1. 1951ம் ஆண்டு உடன்பாடு ஐரோப்பிய நலன்களை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. பனிப்போர் காலத்திய பின்னணியில் உருவாக்கப்பட்டது அது.

2. தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியன தலைதூக்கியுள்ள சூழலில் இவ்வாறு அகதிகளை எளிதாக அனுமதித்துவிட இயலாது.

3. அகதிகளுக்கு இத்தனை உரிமைகளைக் கொடுத்தால் அருகிலுள்ள நாடுகளிலிருந்தூ ஏராளமானோர் இங்கு வரக்கூடும்.

இதில் சில உண்மைகள் இருந்தபோதிலும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்தியா ஐ.நா உடன்பாடுகளில் கையெழுத்திடாமலும், அகதிகளுக்கான பொதுச் அட்டம் ஒன்றை உருவாக்காமலும் உள்ளதை ஏற்க இயலாது. இந்திய அரசியல் சட்டத்தின் 51(c) பிரிவின்படி இந்தியா பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க வேண்டிய கடப்பாடுடையதாக உள்ளது. தவிரவும் தென் ஆசியாவில் ஒரு முக்கியமான வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிற, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகத் துடிக்கிற, பன்னாட்டு அரசியலில் முக்கிய பங்காற்ற விழைகிற ஒரு நாடு இத்தகைய அடிப்படைப் பன்னாட்டுக் கடப்பாடுகளை மறுப்பதை எப்படி ஏற்க இயலும்? பனிப்போர்க் காலத்திய உடன்பாடு என்றால் இன்று பனிப்போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் அதன் பொருளென்ன? தேவையான திருத்தங்களுடன் புதிய உடன்பாடுகளை உருவாக்க இயலாதா? 1951ம் ஆண்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அரசு இன்னும் அந்த அடிப்படை உடன்பாட்டிலேயே கையொப்பமிடாதிருப்பது பெருங் கேலிக் கூத்து.

அகதிகள் என வருகிற யாரும் அப்படியே உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பரிசீலனைகள், விசாரணைகளுக்குப் பின்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தவிரவும் ‘சார்க்’ நாடுகளின் 2004ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒபந்தம் ‘பயங்கரவாதிகள் என சந்தேகப்படக் கூடியவர்களுக்கு அகதிகள் நிலை அளிக்கக் கூடாது எனக் கூறுகிறது. அதை விதியை இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானால் இன்னும் விளக்கமாக பாதுகாப்பு அடிப்படையில் இன்னும் இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை இணைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் அண்டை நாட்டார் இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கே வரக்கூடும் என்கிற அச்சமும் ஏற்புடையதல்ல. பா.ஜ.க வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் விளைபொருளாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கதேச முஸ்லிம்கள் இவ்வாறு அதிக அளவில் ஊடுருவி விட்டனர் என்று பிரச்சாரம் செய்வது அவர்களின் வழமையான அரசியல்களில் ஒன்று. இன்று வங்கதேச எல்லையில் இரட்டை முள்வேலிகள் இடப்பட்டும் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டும் தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டும் அத்தகைய நுழைவு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. பிற இத்தகைய பகுதிகளிலும் இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய அரசு அகதிகள் தொடர்பான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்க இயலாது எனச் சொல்வதற்கான காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. தென் ஆசிய நாடுகளில் சீனாவும், ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே 1951ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

2004ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபது பி.என். பகவதி அவர்கள் இந்தப் பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென அகதிகள் நிலைக்கான ஒரு மாதிரி சட்ட வடிவை உருவாக்கினார். பின் 2006ல் அந்த அடிப்படையில் அகதிகள் நிலைக்கான ஒரு சட்ட வரைவையும் இந்திய அரசு உருவாக்கியது. எனினும் இன்றுவரை அதைப் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவில்லை. அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் இந்தச் சட்ட வரைவை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார். வேறு பலரும் இவ்வரைவு குறித்துக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வரைவைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தித் தேவையான திருத்தங்களுடன் சட்டமாக்க வேண்டும். பிற நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறுபவர்கள் உரிய விசாரணைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவது, அவர்கள் எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படாமல் கண்ணியமான வாழ்வொன்றை அமைத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது என்கிற வகையில் இச் சட்டம் அமைய வேண்டும்..

இப்படிப் புலம் பெயர நேர்ந்தவர்களுக்கு உரிய முறையான, முறைசாராத மற்றும் தொழிற் கல்விகளை அளிப்பது, அவர்களது (உடல்) நலத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வேலை வாய்ப்புக்களுக்கு வழி செய்வது, அவர்கள் அவர்களது சொந்தப் பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் ஆகியவற்றைத் தொடர்வதற்கு வாய்ப்பளிப்பது, கொடும் பாதிப்பிற்குரிய வகையில் உளவியல் ரீதியில் தாக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உரிய வகையில் ஆதுகாப்பு அளிப்பது என்கிற வகையில் அது அமைய வேண்டும். அவர்களுக்கும் பிற குடிமக்களைப் போலவே இந்த நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவது, எங்கு வேண்டுமானாலும் நிரந்தரத் தங்குமிடத்தை அமைத்துக் கொள்வது, பிற குடிமக்களைப் போலவே எந்தத் தொழிலையும் செய்வது, தம் நலனுக்கான அமைப்புக்களை உருவாக்குவது, பத்திரிகைகள் உள்ளிட்ட கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலான உரிமைகள் வழங்கபட வேண்டும்.

1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் முதலியன இதற்குரிய முறையில் திருத்தப்பட வவேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் நிழற் சிறைகளை அமைக்கும் விதிமுறைகளை நீக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாக நான் பலமுறை தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அறிக்கைகள் இணையத் தளங்களில் உள்ளன. சமீபகாலமாக எல்லா முகாம்களிலும் மேலெழுந்துள்ள ஒரு பிரச்சினை இளைஞர்கள் இந்தியாவிலிருந்து பிற மேலை நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இருப்பதுதான். ஈழ அகதி முகாம்களில் இருப்போர் நிறையப் பணம் கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து இதற்கான முகமைகளின் மூலம் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதும் அம்முயற்சியில் பலர் உயிரிழப்பதும், கைதாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே ஈழ அகதிகள் வாழ்ந்து கொண்டுள்ளனர். சொந்த மண்ணின் வாசத்தை நுகராத ஒரு தலைமுறை இந்த மண்ணில் பிறந்து வளர்ந்துள்ளது. குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளும், அகதிகளுக்குரிய சட்டப் பாதுக்காப்புகளுமின்றி ஆனாலும் ‘அகதி’ப் பட்டத்தைச் சுமந்து கொண்டு எந்நாளும் ‘அந்நியராக’ வாழ்வதை இவர்கள் வெறுக்கின்றனர். இதே நேரத்திலும், ஏன் அதற்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தவர்களுக்கெல்லாம் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளபோது தொப்பூள் கொடி உறவு குறித்து முழங்கும் அரசியல்வாதிகள் மலிந்த நமது நாட்டில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்காதிருப்பது வருந்தத் தக்கது.

எனவே உருவாகும் சட்டத்தில் இபடி நீண்ட ஆண்டுகளாக இங்கே அகதிகளாக வாழ்வோருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வழிமுறைகளையும் உள்ளடக்க வேண்டும்.

1951ம் ஆண்டு அகதிகள் உடன்பாட்டில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கும், உரிய வகையில் தேசிய அளவிலான ஏதிலியர் கொள்கை ஒன்றையும் சட்டமொன்றையும் உருவாக்குவதற்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இங்கு வாழும் ஏதிலியர்களுக்கும் நம் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்கி இம்மக்கள் நம்மவர்களுடன், காந்தியடிகள் சொன்னதுபோல, “பாலில் சக்கரை கலப்பதுபோல” இரண்டறக் கலப்பதற்கு ஏதிலியர் பிரச்சினையில் அக்கறையுள்ளோர் உதவ வேண்டும். காந்தியடிகளின் இந்த உதாரணம் கூட இங்கு முழுமையாகப் பொருந்தாது. பாலில் சர்க்கரை போலத் தம் அடையாளங்களை ஏதிலியர் இழக்க வேண்டியதில்லை. தத்தம் அடையாளங்களுடன் அவர்கள் நம்மவர்களாக ஆகவேண்டும்.

கலைத்துறைப் பாடங்களின் எதிர்காலம்

மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்த கட்டுரை ஒன்றை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன்.. மறுமலர்ச்சி கால ஃப்ரெஞ்சு இலக்கியம், தத்துவம் முதலான கலைத் துறைகளில் மிகத் தரமான கல்விக்குப் புகழ் பெற்றுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் இத்துறைகளில் மொத்தத்தில் 45 சதப் பேராசிரியர்கள் இன்றுள்ளனர்… ஆனால் அப்பாடங்களில் பயிலும் மாணவர்களோ வெறும் 15 சதந்தான்.

மாணவர்கள் மத்தியில் ரொம்பவும் வரவேற்கப்படும் முதல் ஐந்து துறைகளில் ஒன்று கூட கலைத் துறைப் பாடமில்லை. மிக அதிகமாக விரும்பப்படும் பாடம் கம்ப்யூடர் சயின்ஸ். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் இதுதான் நிலை. பென்சில்வேனியாவில் உள்ள எடின்பரோ பல்கலைக் கழகம், போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்பதற்காக ஜெர்மன் மொழி, தத்துவம் மற்றும் உலக மொழிகளும் பண்பாடுகளும் முதலான துறைகளில் பட்ட வகுப்புகளை மூடுவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. போமோனா கல்லூரியில் சென்ற ஆண்டு பட்டம் பெற்ற 1500 மாணவர்களில் ஆங்கில இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்திருந்தவர்கள் வெறும் 15 பேர்கள்தான்.

ப்ரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் முதலான பல்கலைக் கழகங்கள், கலைத்துறைப் பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காகப் பள்ளி மாணவர்களுக்குக் கோடைகாலப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

மாணவர்களையோ, பெற்றோர்களையோ குறை சொல்லிப் பயனில்லை. கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், மேலாண்மை முதலான துறைகளில் பட்டங்கள் இருந்தால்தான் வேலை வாய்ப்பு என்கிற கருத்து இன்று வலுவாக உள்ளது. இயற்பியல், வேதியல், உயிரியல் முதலான அடிப்படை அறிவியல்களிலும் (basic sciences) கூட இன்று நாட்டமில்லை. எலக்ட்ரானிக்ஸ், உயிர் வேதியல் முதலான பிரயோக அறிவியல்களுக்குத்தான் (applied sciences) இன்று மவுசு.

இந்தியச் சூழலில் 1980களில் உயர் கல்வி பெரிய அளவில் வணிகமயப் படுத்தப்படுவது தொடங்கியது. அப்போது தமிழகத்திலிருந்த அரசு கலைக் கல்லூரிகள் எழுபதுக்குள் இருக்கும். அதே அளவு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இருந்தன. இங்கெல்லாம் அடிப்படை அறிவியல்கள் மற்றும் வரலாறு, ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், பொருளாதாரம், தத்துவம் வணிகவியல் முதலான பாடங்களில் பட்ட, பட்ட மேற்படிப்புகள் இருந்தன.

இன்று அரசு, மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் நானூறுக்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் கலைத் துறைப் பாடங்கள் கிடையாது. பலவற்றில் அடிப்படை அறிவியலுங் கூடக் கிடையாது. பிரயோக அறிவியல்களே உண்டு.

எண்பதுகளின் பிற்பகுதியில் அரசு கல்லூரிகளிலும் கலைத்துறைப் பாடங்களை மூடுவது என்கிற நிலையை தமிழக அரசு எடுத்தது. பொன்னையன் கல்வி அமைச்சர். ஆசிரியர் சங்கத்தின் ஊடாக இம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினோம். 1987ல் மாநிலக் கல்லூரியில் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு கருத்தரங்கை நடத்தியது நினைவுக்கு வருகிறது.

கலை இலக்கியக் கல்வி சமூகத்திற்குத் தேவை இல்லை என்கிற நிலை உள்ளபோது ஏன் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்பதுதான் அரசும் கல்வி நிறுவனங்களும் கேட்கிற கேள்வி.

கலை இலக்கியத் துறைப் பாடங்களை வற்புறுத்துவோர் இதற்கு இரண்டு விதமான பதில்களை முன்வைக்கின்றன.ர். உலக மயச் சூழலில் பிற நாட்டு மொழி, பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ளும் அவசியம் முன்பை விட அதிகமாகியுள்ளது என்பது ஒன்று. இஸ்லாமியத் தீவிரவாதம் எனச் சொல்லாடி ஈராக் மீது அமெரிக்கா படை எடுக்கு முன் இஸ்லாம் மதத்தைப் புரிந்து கொள்வதற்காக அத்துறைப் பேராசிரியர் பெர்னார்ட் லூயிசை டிக் செனி சந்தித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.

மற்றது, கலை இலக்கியங்கள்தான் மனிதனிடம் மனிதாயப் பண்புகளை உயிர்க்கும் வல்லமை வாய்ந்தவை. கல்வியின் பணி சிறப்புப் பயிற்சியாளர்களை உருவாக்குவது அல்ல. முழுமையான மனிதனை உருவாக்குவது. தத்துவம் என்பது எல்லா அறிவியல்களுக்கும் தாய். எனவே இவற்றைப் புறக்கணித்துவிட இயலாது என்பது.

இது பின் நவீன யுகம். இதில் முழுமையான மனிதன் என்பதெல்லாம் ‘அஜென்டா’வில் இல்லை. இன்று இந்த வாதம் எடுபடவில்லை. சோவியத் ரஷ்யாவில் சுமார் இருபதாண்டு காலம் கல்வித் துறைக்குப் பொறுபேற்றிருந்த லூனாசார்ஸ்கி, “அதீத சிறப்புப் பயிற்சிகள் மனிதரை முடமாக்கும் (overspecialisation cripples a man)” என்று கண்டித்ததெல்லாம் அந்தக் காலம். புதிய கல்விக் கொள்கைகளை அம்பானியும் பிர்லாவும் இயற்றும் காலம் இது. இன்றைய உலகின் தேவை ‘ரோபோ’க்களைப் போல இயங்கும் சிறப்புப் பணியாளர்கள்தான்.

எனினும் மனிதர்கள் எல்லோரையும் ரோபோக்களாகப் பார்க்கும் கார்பொரேட் மனநிலையை எதிர்ப்பவர்கள் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்தவே செய்கின்றனர்,

கலை இலக்கியத் துறைப் பயிற்சி என்பது மனித நாகரீகங்களின் பிரிக்க இயலாத அம்சமாக இருந்து வந்துள்ளது. பல்கலைக் கழகங்கள் இப்பயிற்சியையும் இத் துறைகளில் அறிவுருவாக்கத்தையும் ஜனநாயகப் படுத்தின. கலை இலக்கிய ஆய்வுகளும் ரசனைகளும் சமூகத்தின் மேல்தட்டினரின் தனிச் சொத்தாக இருந்த நிலை போய் அடித்தள மக்களும் அவற்றை உரிமை கொள்ளக் கூடிய நிலை பல்கலக் கழகங்களினூடாகத்தான் வந்தது. இன்றுங்கூட நம் இலக்கிய மேட்டிமைச் சக்திகள் பல்கலைக்கழக இலக்கிய ஆசிரியர்கள் மீது காழ்ப்பைக் கொட்டுவதை நாம் கவனிக்க இயலும்.

சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பில் ‘மைனர்’ என்று ஒரு பாடமிருந்தது. அறிவியலை முக்கிய பாடமாக எடுக்கிறவர்கள் ஏதேனும் ஒரு கலைப் பாடத்தைக் கட்டாய மைனர் பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். அந்த நிலை மீண்டும் வந்தால் நல்லது. பட்டப் படிப்பில் பார்ட் ஒன், பார்ட் டூ ஆகியவற்றில் உள்ள மொழிப் பாடங்களில் மீண்டும் இலக்கியங்களின் பங்கு அதிகமாக்கப்பட வேண்டும்.

எனினும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கலை இலக்கியப் பயிற்சியுடைய எல்லோரும் எல்லா அம்சங்களிலும் மனித நேயமுடையவர்களாக இருப்பார்கள் என்பதல்ல.. தனது பணியாளர்களைக் கொடுமையாகச் சுரண்டும் பல முதலாளிகள், பண்ணையார்கள், ஏன் பாசிஸ்டுகளும் கூட இலக்கிய ஆர்வலர்களாக இருந்துள்ளனர். மிகப் பெரிய அறிவுக் கருவூலம் ஒன்றை உருவாக்கியிருந்த தஞ்சை சரபோஜி மன்னருக்கு 18 மனைவியர், 98 ஆசை நாயகிகள் இருந்தனர் என்று சொல்வார்கள்.

கலை, இலக்கியத்துறைப் பாடங்களின் முக்கியத்துவம் என்பது, அவற்றின் மூலமாகத்தான் இன்னும் திறமையான நிர்வாகிகள் நமக்குக் கிடைப்பார்கள் என்பதல்ல. மாறாக வாழ்வை இன்னும் அதிகமாக நேசிக்கவும் பொறுத்துக்கொள்ளவும் அது நமக்கு உதவும். கலைத் துறைப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு கட்டுரையின் கீழ் ஒருவர் இப்படிப் பின்னூட்டம் இட்டிருந்தார். “நான் ஸ்டான்ஃபோர்டில் தத்துவம் பயின்றேன். .டெம்னீஷியா நோயில் என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக இறந்தபோது அவளுக்குத் துணையாய் இருக்கவும், அதன் பின் அவள் பிரிவை நான் தாங்கிக் கொள்ளவும் அன்று படித்த கலைத்துறைப் பாடங்கள்தான் கைகொடுத்தன,”

ஆடம் கோப்னிக் என்கிற பேராசிரியர் கூறுவது போல, “மனிதாயநிலைக் கல்வித்துறைகள் (Humanities) ஏன் நமக்கு அவசியம் என்பதற்கான காரணம் நாம் மனிதர்களக இருக்கிறோம் என்பதுதான்.”

சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைகட்கே இவர்களும் முக்கியத்துவம் கொடுத்து இயங்கினாலும், தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உண்டு என்பதை ஏற்று சாதிப் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, கூடங்குளப் போராட்ட ஆதரவு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏதோ இதையும் செய்தோம் என்றில்லாமல் உண்மையான அக்கறையுடன் இவற்றையும் முன்னெடுப்பர்.

பல்லாயிரம் ஊதியம் பெறும் கார்பொரேட் ஊழியர்கள் குறித்தும் கார்பொரேட் பணிக் கலாச்சாரம் குறித்தும் சில கருத்துக்களைச் சில நாட்கள்முன் இப்பக்கத்தில் நான் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பார்த்திருக்கலாம். முதலாளியத்தின் அனைத்து ஊழல்களுக்கும் வாரிசாக உள்ள இன்றைய கார்பொரேட்களிடம் கை பொத்தி, மெய்யடக்கிச் சேவகம் புரியும் இவர்கள் என்னாளும் தம் நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், மூன்றாம் உலக மக்களின்மீது இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றி ஆகியன குறித்து ஒரு கேள்வியையும் கூட எழுப்பத் தயாராக இல்லாதவர்கள். எழுப்பினால் அடுத்த கணம் என்ன நடக்கும் என உணர்ந்த இவர்கள் தம் மனிதாபிமானத்தைக் காட்ட ‘நல்ல காரியங்களுக்கு’ நன்கொடை அளிப்பார்கள் நன்கொடை அளிப்பார்கள். சமூக நலப் பணி செய்வார்கள், உள்ளூர் அரசுடன் பெரிய அளவில் முரண்படாத வகையில் போராட்டங்களும் நடத்துவார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தம் நிறுவனத்தில் நடக்கும் அநீதிகள் குறித்துக் குரல் எழுப்ப மாட்டார்கள். ஒரு சங்கம் அமைக்க முயற்சிக்க மாட்டார்கள். கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அந்த வகையில் அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் அவற்றின் எத்தனையோ குறைகளுக்கும் அப்பால், ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதையும், தம் துறை சார்ந்த அரசு கொள்கைகளை விமர்சிக்கத் தயங்காததையும், சக ஊழியர்களுக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்பதையும், பல நேரங்களில் வெற்றி ஈட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சேவ் தமிழ் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அவர்களிடமும் இந்தக் குறைபாடுகள் உள்ளபோதும், இவற்றையெல்லாம் தாண்டி, உண்மையான சமூக அக்கறையும், ஏதாவது சமூகத்திற்குச் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பும் உள்ளவர்கள். பணியிடத்திலும் அநீதிகளை எதிர்க்கிற, தொழிற் சங்கம் அமைத்துப் போராடுகிற வாய்ப்பும் இவர்களுக்கு இருந்திருக்குக்குமேயானால் இவர்களின் பார்வையும் பணிகளும் இன்னும் கூர்மையடையுமே, ஒரு அறம் சார்ந்த அரசியல் விகசிப்பு ஏற்படுமே என நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்றைய கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

சரி, அது இருக்கட்டும். இன்று காலை இவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தோழி என்னுடன் தொடர்பு கொண்டு உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள தோழர் தியாகு அவர்கள் குறித்து உரிய ஊடகக் கவனம் இல்லாத நிலை குறித்துப் பேசினார். பேச்சு சமீபத்தில் இவர்களின் ‘சேவ் தமிழ் இயக்கம்’ முன்நின்று நடத்திய ‘பன்னாட்டு மாணவர் மாநாடு’ பற்றித் திரும்பியது. இலங்கையில் நடைபெற உள்ள ‘காமன்வெல்த்’ மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் “பன்னாட்டு” மாநாட்டில் முக்கியக் கதா நாயகனாக நிறுத்தபட்ட நபர் வை.கோ. அவரை மாநாட்டிற்கு அழைக்கப்போன நாளிலிருந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் முகநூல் பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குஜராத் 2002க்குப் பின்னும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் இந்த வைகோ. ‘திராவிட’ என்கிற சொல்லைத் தன் கட்சிப் பெயரில் சுமந்திருந்தாலும் எந்நாளும் இந்துத்துவ விசுவாசத்தைக் கைவிடாதவர். ‘சேவ் தமிழ் இயக்கம்’ சென்ற மாதம் நடத்திய அந்த ஈழ ஆதரவு மாநாட்டிலும்கூட வைகோ, “மதவாதம் குறித்த பிரசினைகளை எல்லாம் கூட இன்று சற்று மறப்போம். ஈழப் பிரச்சினையை முன்னெடுப்போம்” என்கிற பொருள்படப் பேசியுள்ளார்.

இன்று என்னுடன் தொடர்பு கொண்ட தோழியிடம் நான் இதுபற்றிச் சொன்னபோது, “அப்படியெல்லாம் அவர் அங்கே பேசினார்னு யாரும் சொல்லலியே” என்றார். மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பார் போலும். அதோடு தமது மாநாட்டில் முக்கிய பேச்சாளர் இவ்வாறு கூற நேந்தது குறித்த விவாதம் அவர்களுக்குள் நடைபெறவில்லை போலும். விவாதிக்கிற அளவுக்கு இதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

இறுதியில் அந்தத் தோழி, மோடியின் நண்பரும், இன்று இந்துத்துவ சக்திகளுடன் தேர்தல் கூட்டணியை வெட்கமின்றி அறிவித்துள்ளவருமான வைகோவைத் தங்கள் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைத்தது குறித்து இப்படிச் சொன்னார் : “இல்லை, நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர் என்கிற ஒரே அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே வைகோவை அழைத்தோம்”.

நான் என்ன சொல்வது? சரிதான். இங்குள்ள மக்களின் பிரசினைகள் ஒரு பொருட்டில்லை என்றால் அவர்களின் அளவுகோல் சரிதான். ஆனால் ஈழப் பிரச்சினையில் வைகோ அளவிற்குக் கடந்த காலத்தில் தீவிர ஆதரவு காட்டிய, இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பன்னாட்டு மாநொடொன்றில் பங்குபெற்று தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசிய பா.ம.க தலைவர்களுக்கு ஏன் வைகோவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அம் மாநாட்டில் அளிக்கப் படவில்லை?

நம்மைப் பொருத்த மட்டில் பா.ம.கவை அழைக்காததின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே தர்க்கம் ஏன் வைகோவுக்குப் பொருந்தவில்லை? பா.ம.கவை அழைக்கக் கூடாது, ஆனால் வைகோவை அழைக்கலாமா?

இங்கே மத அடிப்படையிலான ஃபாசிசம் உங்களுக்குப் பிரச்சினை இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு அளவில் இந்துத்துவக் கருத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளனவா? அதை உசுப்பி விடுவதுதான் இந்துத்துவ சக்திகளின் பணியாக உள்ளதா?

சரி, இப்படி ஈழப் பிரச்சினையே அடிப்படை அளவுகோல் என்பவர்கள் சாதி பிரச்சினைகளிலாவது முழு நியாயத்துடன் நடந்து கொள்வார்களா?

‘சேவ் தமிழ் இயக்கம்’ தற்போது ‘தமிழ்நாடு மக்கள் கட்சி’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக அறிகிறோம். நல்லதுதான் அமைப்புகள் பிளவுபட்டுக் கொண்டே போகிற நிலையில் இவ்வாறான இணைவுகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. இதுவரை அகில இந்திய மற்றும் பொதுவுடைமை அடையாளங்களின் கீழ் இயங்கிய ஒரு மா.லெ பிரிவு இப்போது இப்படியாக தம்மைத் தமிழ் அடையாளத்திற்குள் சுருக்கிக் கொண்டு தமிழ் நாடு மக்கள் கட்சி என்பதாக இயங்குகிறது.

சமீபத்தில் அவ்வமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள தோழர் தங்கத் தமிழ் வேலன் ஆசிரியர் வேலைகளுக்கான ‘டெட்’ தேர்வில் தமிழக அரசு இட ஒதுக்கீடு கடைபிடிக்காமை குறித்து ஒரு பிரச்சார இயக்கம் நடத்துவது குறித்து எங்களுடன் பேசினார். தங்கத் தமிழ் வேலன் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர். இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.

லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நான், பேரா. ப.சிவகுமார், பேரா. மு.திருமாவளவன் ஆகியோர் முன்நின்று இது குறித்து ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளித்தோம். ப்ரெஸ் மீட் ஒன்றும் நடத்தினோம். ஓரளவு இப் பிரச்சினையைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து அடுத்த ‘டெட்’ தேர்வும் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் டெட் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றை நடத்துவோம் என நாங்கள் சொன்னதைத் தங்கத் தமிழ் வேலனும் ஏற்றுக் கொண்டார். நாளும் குறிக்கப்பட்டது.

எங்கள் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு சென்ற மாதம் இந்தப் போராட்ட நாளில் எல்லோரும் காத்திருந்தோம். முதல் நாள் இரவு 11 மணிக்கு பேரா.மு.திருமாவளவனிடமிருந்து எனக்கொரு தகவல் வந்தது. அவரும் அக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றில் உள்ளார். ‘டெட்’ போராட்டம் காரணம் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் அவர் சொன்ன செய்தி.

தினம் என்னுடன் பேசி வந்த தமிழ் வேலன், அதற்குப் பின் இன்று வரை தொடர்பிலில்லை.

டெட் தேர்வில் இட ஒதுக்கீட்டிற்கான இப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான ஒரே காரணம், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு அவர்களிடம் முன்னுரிமை இல்லை என்பதுதான்.

பின் வேறெதற்கு முன்னுரிமை?

வைகோவைக் கதாநாயகனாக்கி ஈழ ஆதரவு மாநாடு நடத்துவதற்குத்தான். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டு முழக்கங்களுக்கிடையில் கரைந்து போனது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கியுள்ளதுபோல இங்கும் ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை.