சாதியத்தை ஆதரித்தாரா காந்தி?

(2009 ம் ஆண்டு எழுதியது. காந்தியை ஒரு வரி கூடப் படிக்காமலும். அறிய முற்படாமலும் அவர் மீது மிகப் பெரிய ஒரு வெறுப்பு கட்டமைக்கப்பட்டது ஒரு மிகப் பெரிய வரலாற்று அபத்தம். அவற்றில் ஒன்றுதான் அவர் வருணாசிரமத்தை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்பது. வருணாசிரமத்தை அவர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டபோதும் கூட அதை அவர் கடைபிடித்ததில்லை. அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே அவரது

கம்யூனில் (தென் ஆப்ரிகா) மலம் அள்ளியது)
இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டாக அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.
scavenger Gandhi
சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் இருந்த ஏழை எளிய மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசு” ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை” (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,

“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்” என்பது.

இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா இக் கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.

1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.

மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).

சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண / அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் முதலானோர் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.

“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே” பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “அழுந்தியவர்கள்” (depressed) அல்ல; மாறாக “அழுத்தப்பட்டவர்கள்” (suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: காந்தி தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).

“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி நீலகண்ட சித்தாந்தியார் என்பவர் எழுதிய“தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” முதலிய வசை நூற்கள் வெளியிடப்பட்டன (1932). காந்தி தமிழகம் வந்தபோது சிதம்பரம் கோவில் ஆலயக் கதவுகளை தீட்சிதர்கள் சாத்தினர். “காந்தி திரும்பிப் போ’ எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குத்தூசி குருசாமி அவர்கள் தன் பத்திரிகையில் அவற்றை வெளியிட்டார்.

காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).

மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

காந்தி பற்றி நாம் தெரிந்து கொண்டது கையளவு, தெரியாதது உலகளவு

(கோபால கிருஷ்ண பாரதி, காந்தி, சங்கராச்சாரி: நமக்கு அளிக்கும் அதிர்ச்சிகள் எனும் தலைப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதியது)

“காந்தி  தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி காந்தியியல் ஆய்வில் ஆர்வம் உள்ள என் நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். காந்தி இப்படி தினத்திற்கும் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிப்பதற்கு காரணங்கள் உண்டு. இங்கு, குறிப்பாகத் தமிழகத்தில் காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் ஏராளமான தவறான கருத்துக்கள்தான் அவை. காந்தியின் எழுத்துக்கள் சுமார் 99 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருந்தும் அதில் சில வரிகளைக் கூடப் படிக்காமலேயே காந்தியை அவதூறு செய்பவர்கள்தான் ஏராளம்.

நண்பர் எனக்கு அனுப்பி வைத்த அந்தத் தகவல் இதுதான். டிசம்பர் 3, 1932 அன்று புனே நகர காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதம்தான் அது. காந்தியும் அப்போது சிறைப்பட்டிருந்தார். அவர் இருந்தது எரவாடா சிறையில் ரத்னகிரி சிறையில் இருந்த சத்தியாக்கிரகி ஒரு வருக்கு நேர்ந்த ஒரு பிரச்சினை குறித்து அந்தச் சிறை அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம்தான் அது.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்த அப்பா சாகேப் பட்டவர்தன் என்பவர் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியிருந்தார். இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற சிறை அதிகாரியை வற்புறுத்திக் காந்தி எழுதிய கடிதம்தான் இது..

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஏதோ ஒரு ‘மேல்’ சாதிக்காரர்.  துப்புரவுத் தொழில் செய்யும் ‘பங்கி’ சாதி அல்லாதவர் என அவரைப் பற்றி காந்தி அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். அந்தக் காலத்திலேயே எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி?

சக கைதிகளின் மலத்தை அள்ளும் துப்புரவுப் பணிதான் அது.

நமக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; நம்மில் சிலருக்கு ஆத்திரம் கூட வரலாம்.

துப்புரவாளர்கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நமக்குத் தோன்றலாம்.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப்பிரசினைகளில் நவீனமாதலையோ எந்திரமயமாதலையோ எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், “உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின்” எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்திய தலைவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் கையால் மலம் அள்ளும் கொடுமையை  ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என்பதல்ல.. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

இன்றுவரை நம்மாலும் கூட ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற அவலத்தை ஒழித்துவிட முடியவில்லையே?

இது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலையை அடையும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம், இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என யாரும் நினைத்துவிடக் கூடாது,

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, அன்னை கஸ்தூரி பா அவர்கள் காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன  வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

இங்கு இன்னொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’குமரியும் காசியும்’ எனும் நூலில் ஒன்றைச் சொல்வார். அவர் சந்தித்தவர்களுள் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை வினோபா வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவு செய்வார்.  இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலும் என அவர்கள் இதைச் செய்யவில்லை. இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

#    #    #

இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னும் இரு வியப்புக்குரிய செய்திகளை நான் அறிய நேர்ந்தது. புகழ்பெற்ற நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் கம்பெனியச் சேர்ந்த ராஜாராம் பாகதவர் அவர்களின் நந்தனார் நாடகம் ஒன்றை காந்தி தொடங்கி வைத்திருக்கிறார் என்பது ஒரு செய்தி. கோயம்புத்தூரில் 1934 பிப்ரவரி 6 அன்று அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. மாலை 9.30 மணி அளவில் அங்கு வருகை தந்து நிகழ்ழ்ச்சியையும் தொடங்கி வைத்திருக்கிறார் காந்தி. அன்றைய நாடக வசூல் ஹரிஜன சேவா நிதிக்கு வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் தலித் மக்கள் மத்தியில் சேவை செய்து வந்த சுவாமி சகஜனந்தர் அவர்கள் நிறுவிய நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டியது குறித்த செய்தி இன்னொன்று. இது 1927 செப்டம்பர் 11 அன்று நடைபெற்றது.  இந்தியச் சத்தியாக்கிரகிகளில்  ஒளிமிக்க நட்சந்திரங்களில் ஒருவர் நந்தனார் எனவும், சிதம்பரத்திற்குள் நுழைந்ததும் முதற் பணியாக நந்தனார் கோவில் வாயிலுக்கு அடிக்கல் நாட்டுவதை மிகப் பெருமையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டதோடு, “கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்படும் நந்தனார் எப்படி கடவுளை நேருக்கு நேராகக் கண்டாரோ அப்படியே நாமும் கடவுளை நேருக்கு நேராகக் காணும் ஆலயமாக இது அமையும் என நான் நம்புகிறேன். இந்த ஆலயதிற்கு வரும் ஒவ்வொருவரும் இது ஒரு விடுதலையின் ஆலயமாக அமையவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். நந்தனார் தன் உயிர்க் குருதியை அளித்து இந்த ஆலயத்தில் நுழைய முயன்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்; ஆனால் அவர் நுழைய முயன்ற ஆலயம் வெறும் கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதல்ல. அவர் நுழைய முயன்ற அந்த ஆலயத்தில் அவரது சொந்த ஆன்மாவிற்குள் விடுதலையைக் கண்டார். ஆகையால் இந்த ஆலயத்தில் வழிபடவரும் நீங்கள் உங்கள் சொந்த வாழ்வின் ஊடாகவும் உங்களின் அகத்தூய்மையைப் பேண வேண்டும். இந்த ஆலயம் என்பது அந்த அகத் தூய்மையின் வெறும் குறியீடுதான். பிராமணர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் வணங்கப்படும் சைவ, வைணவ ஆலயங்கள் பலவும் உண்மையில் கடவுள் குடியிருப்பவை அல்ல என்பதை நான் அறிவேன்” என்கிற பொருள்பட அன்று அங்கு அவர் உரையாற்றினார்.

நந்தனாரின் ஆலய நுழைவுப் போராட்டத்தை அஹிம்சை வழியிலான ஒரு சத்தியாக்கிரகப் போராட்டமாகக் கண்ட காந்தி அகத்தூய்மைதான் உண்மையான ஆலய வழிபாடு எனவும், இங்கே பார்ப்பனர்களால் கொண்டாடப்படும் சைவ, வைணவ ஆலயங்கள் பலவும் கடவுள் குடியிருப்பவை அல்ல எனவும் சொல்வதன் மூலம் அங்கே வருபவர்கள் அத்தகைய அகத் தூய்மையைப் பேணுவதும் இல்லை, அதனால் அவர்களுக்கு விடுதலையும் வாய்க்கப்பெறுவதில்லை என்பது கவனத்துக்குரியது.

இங்கொன்று ஒப்பு நோக்கற்குரியது. சேக்கிழாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியுள்ள நந்தனார் கதையில் பண்ணையடிமைகளாக உள்ள தலித்களைக் கொடுமை செய்யும் நிலப்பிரபுவான வேதியரின் பாத்திரம் கிடையாது. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரக்கதையில்தான் அப்படியான கதைச் சித்திரிப்பு முதன் முதலில் தொடங்குகிறது. மகா பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் இவ்வாறு கதை திருத்தப்பட்டதைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அவரது புகழ் பெற்ற “தெய்வத்தின் குரல்” நூலில், “நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை” என்கிற தலைப்பில் அதைக் காணலாம் (http://www.kamakoti.org/tamil/dk6-19.htm).

தவிரவும் இப்படித் திருத்தப்பட்ட கதையையே இன்று கதாகால்ட்சேபக்காரகளாலும் காந்தியவாதிகளாலும் பிரபலப்படுத்தப்படுவதாகச் சொல்லி நொந்து போகிறார் சந்திரசேகரேந்திரர்.

“உங்களில் நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத ப்ராம்மண பண்ணையாரிடம் படாத பாடு பட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது. பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தம் தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாஸனம் செய்யப்பட்டிருக்கும். நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய ஸொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது.”

என்று கூறும் சந்திரசேகரேந்திரர் இப்படியாகக் கதையைத் திருத்திய கோபாலகிருஷ்ண பாரதியாரைக் கரித்துக் கொட்டவும் தயங்கவில்லை.

“கொடுங்கோல் ப்ராம்மணர்களை ஸ்ருஷ்டி பண்ணியதும் ஒரு ப்ராம்மணர்தான்” எனவும், “பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளக ஆக்கி அவரிடம் கொடுமைப் படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே ஸீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப்” பாடிவிட்டார் எனவும் பாரதியாரைக் காய்வார்.

கோபாலகிருஷ்ண பாரதியார் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம்  தனது நந்தனார் சரித்திரத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கக் கேட்டபோது அவர் இப்படிக் கதையை மாற்றியதற்காகச் சிறப்புப் பாயிரம் தர முதலில் மறுத்தார் என்பதை முந்திய கட்டுரையில் சொல்லியிருந்தேன். சுவாமிநாத அய்யர் இதை மூடி மறைத்துப் பூசி மெழுகியிருப்பார். இலக்கணப் பிழைகள் காரணமாகவே நந்தன் சரித்திரக் கீர்த்தனைக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாயிரம் எழுத மறுத்துவிட்டதாக அவர் பொய்கூறியிருப்பார்.

ஆனால் இங்கே. சந்திரசேகரேந்திரர் உண்மையைப் பட்டென்று போட்டு உடைத்துள்ளார்.

“அந்தக் காலத்தில் மஹா வித்வான் மீனாக்ஷிஸுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வஹித்தவர். அவர் ப்ராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை என்று முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபாலக்ருஷ்ண பாரதி போனார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்யமாக ஸங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ ஸங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்த (உ.வே) ஸ்வாமிநாதையர் போன்றவர்களிடம் மனஸில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது”

என்பது சங்கராச்சாரியாரின் கூற்று. சந்திரசேகரேந்திரரின் கூற்றுகளை தெய்வ வாக்காகவே அவரைப் பின்பற்றுவோர் இன்று வணங்குகின்றனர். ஆனால் அறிஞர் கைலாசபதியும் நாமும் எந்தக் காரணத்திற்காக கோபாலகிருஷ்ண பாரதியைப் போற்றுகிறோமோ அந்தக் காரணத்திற்காகவே அவரை, ”பிராமணராக இருந்தபோதும் குறுகிய ஜாதி” நோக்கில் பார்த்தவர் எனக் கடிகிறார் சந்திரசேகரர். எளிய மக்களிடம் அநுதாபம் இருந்தாலும் அதற்காக இப்படிசெய்யக் கூடாது எனப் புலம்புகிறார். “பொயடிக் லைஸென்ஸுக்கு (கவி சுதந்திரத்துக்கு) ஏதாவது வரம்பு இருந்தால் தேவலை என்று தோன்றுகிறது…..” எனக் கவிச்சுதந்திரத்திற்கு ஒரு எல்லையுண்டு என எச்சரிக்கிறார்.

இப்படிச் சொல்லி வருகையில்தான் இறுதியாக இந்தத் திருத்தப்பட்ட. நந்தன் கதையை, ”கதாகாலட்சேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லோரும் விசேஷமாகப் பிரபல்யப்படுத்தி” விட்டார்களே எனப் புலம்புகிறார்.

“காந்திய தேசாபிமானிகளுக்கு” நந்தன் வரலாற்றில் இருந்த இந்த ஆர்வமும், அந்த ஆர்வத்தின் மீது சங்கராச்சாரிகள் கொண்ட காழ்ப்பும் நாம் இதுவரை கவனத்தில் கொள்ளாத ஒன்று.

தீண்டாமை ஒழிப்பில் காந்தியர்களின் செயல்பாட்டிற்கும் அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் செயல்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நான் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். அம்பேத்கரும் பெரியாரும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியவர்கள். அவர்களை இந்த இழிவுக்கு எதிராக எழுச்சியுறச் செய்தவர்கள். காந்தியோ யார் இந்த பாதிப்பிற்குக் காரணமானார்களோ அவர்களை நோக்கிப் பேசினார். அவர்களை இந்தக் கொடுமைக்கு எதிராக மனந் திருப்ப முயன்றார். தீண்டாதார் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக நந்தன் கதையையும் கூட இந்த நோக்கில் பயன்படுத்த காந்தியர்கள் முயற்சி செய்துள்ளதைத்தான் காந்தி நந்தன் நாடகத்தைத் தொடங்கி வைத்ததும், சகஜானந்தர் கட்டிய நந்தன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதும் காட்டுகின்றன. காந்தியின் இந்தத் தலையீடு சனாதனத்திற்கு ஆபத்து என்பதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ சங்கராச்சாரி போன்றோர் இதைத் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்பதைத்தான் இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது..

காந்தி குறித்து நாம் தெரிந்துகொண்டுள்ளது கையளவு. தெரியாதது உலகளவு.

 

 

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்..

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான NCHRO மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒய்.கே. ஷபானாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

என் பேனலின் முன் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்தவர்களில்  சென்ற வாரம் ஹைதராபாத்தில் சந்தித்த  அந்தஅழகிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப்  பற்றிக் கொண்டேன்.

ஹைதராபாத்தில் . இதே UAPA சட்டத்திற்கெதிரான அரங்கக் கூட்டம் ஒன்றிற்கு  வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவால் அல்ல. அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில் முடியும்தானே.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று ஹைதராபாத்தில் விரிவாகப் பேசமுடியவில்லையே என ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று டெல்லியில் அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார். ஆயுதங்களுடனும் ஆபாசமான முழக்கங்களுடனும் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அப்படி ஊர்வலம் போவதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவதை, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

###

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி (அப்போது).

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின. முஸ்லிம் இளைஞர்கள் பலர் சுற்றி வளைக்கப்பட்டார்கள், கைடு செய்யப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவந்தான் இம்ரான்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு (25, மே, 2007) எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வேனில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் மத்தியில் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோருக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல்.

தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுந்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானுக்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா?”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடக்கூடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நான் விரிவாக அன்று இதழ்களில் எழுதியுள்ளேன் எனது ‘நெருக்கடிநிலை உலகம்’ தொகுப்பிலும் உள்ளது. இது தொடர்பான பெரும் போராட்டங்களுக்கும் நீதிமன்றக் கண்டனங்களுக்கும் பின்தான் இன்று  அந்ததச் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அபயா கொலையில் (1992) குற்றவாளிகளைக் காப்பாற்ற பொய்யான டெஸ்ட் ரிசல்ட் எழுதியதால் சி.பி.ஐ அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர். புகழ் பெற்ற ஆருஷி வழக்கிலும்போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்தவர் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. 2009ல் அவர் தன் பிறந்த நாளை மாற்றி பொய் சர்டிஃபிக்ட் கொடுத்து ஏமாற்றிய குர்றத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட புகழுக்கும் உரியவர் அவர் ..

“லேடி போரிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உட்கார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன்.

‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’… அப்டீன்னு அந்த நர்ஸ் சொன்னாங்க”

எனக்கு வியப்பு.

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லல்லி இம்ரான்?”

“இல்லை.  கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா நீதிபதியிடம் ஒத்துக்கொண்டால் உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டுடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ் கான். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச  120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையோ அவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்.

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷபானா கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம்..  இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷபானாவின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.

இஸ்லாமியப் புனித  நூல்களை வாசிப்பது குறித்து ஒரு குறிப்பு

 

சென்ற ஏப்ரல் 22, 23 (2008) தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான” துறையின் சார்பில் “மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது” குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன். வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று – இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் அப்படி ஒன்றும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும், பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா’ குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.

எனினும் புனித நூற்கள் (Scriptures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்’ பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் (arbitrary) தன்மை  சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். “எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது” என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர், “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்’ பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.

சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது. துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான’ அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் சொல்லப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வார்த்தைகட்கு விஞ்ஞானத்திடம் சான்றிதழ் கோருவதுதான் எத்தனை முரண்?

இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்’துகள் என்றே அழைக்கப்படும். அதாவது Parables, நீதிக்கதைகள், உருவகக் கதைகள். சுவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான். என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.

இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.

இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

  1. திருக்குர்ஆன் – இறைவனால் நேரடியாக அருளப்பட்டது என்பது முஸ்லிம்களின் மிக அடிப்படையான நம்பிக்கை.
  2. `ஹதீஸ்’ மற்றும் `சீறத்’கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்’கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.
  3. `ஷரியத்’கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.

இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:

(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.

(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.

(இ) 634-644 : கலிபா உமர் – இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.

(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.

இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: சன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்’களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன.  1.அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம்  2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம் 3. ஷாஃபி (இ.820) சட்டம்  4.இப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம். எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.

இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்’திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்’தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா’ விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (முடா) அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்’ முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதூத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி’ எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்’ அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். “நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்” என்கிறார் அஸ்மா.

திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (hermeneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல.

தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.

அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி’ _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91). வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை “நாம் நிச்சயமாக விசாரிப்போம்” என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (misogyny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தந்தைமையையும் (fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன் தான் `போராடி’ உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார். மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா’. இதற்கு `அடிப்பது’ என்பது தவிர `பிரிப்பது’ என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது’ என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?

`நுஷூஸ்’ என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை’ என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்’ குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு. இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது’ என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு.

 

 

அண்ணாவின் அரசியல் 

அண்ணா பெரியாரிடமிருந்து விலகிய புள்ளி..

இறை மறுப்புக் கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தேர்தல் அரசியல் ஆகிய புள்ளிகளில்தான் அண்ணா பெரியாரிடமிருந்து விலகினார் என்று கூறுவது வழக்கம்.

உண்மைதான். ஆனால் மேலோட்டமாக இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட இயலாது.

ஒரு கால மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக அண்ணா உணர்ந்தார். இந்த மாற்றத்தை நுணுக்கமாகக் கையாண்டு பெரு வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் விளைவுகள் மக்களைப் பொருத்தவரை எப்படியாக இருந்தன என்பது வேறு விடயம். அண்ணாவைப் பொருத்த மட்டில் மிகத் துல்லியமான வெற்றியை அவரது அணுகல்முறை ஈட்டித் தந்தது.

1955 மே 22 முதல் 1969 ஜனவரி 12 வரை- அதாவது இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை அவர் “தம்பிகளுக்கு” எழுதிய 289 கடிதங்கள் அண்ணா எவ்வாறு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார் என்பதற்குச் சான்றுகளாக நம்முன் இன்று கிடக்கின்றன.

உலக அளவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில்தான் அண்ணாவின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவு, இந்தியா போன்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் முடிந்து நாடுகள் சுதந்திரம் அடைச்த சூழல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனமும் ஏகாதிபத்தியச் சார்பு அரசுகளை வீழ்த்தி சோஷலிச மாற்று ஒன்றை முயற்சிக்கத் தொடங்கிய நிலை என்பதாக உலகமே போராட்டங்கள் எல்லாம் முடிந்ததாகக் கருதிச் சற்றே இளைப்பாரத் தொடங்கிய தருணம் அது.

இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்தி அதிகாரத்தை எட்டுவதற்கு உரிய அரசியலை அண்ணா தேர்ந்தெடுத்தது இருக்கிறதே.. அற்புதம்.

அண்ணா கண்ட “எதார்த்தம்..”

1955 ல் ஒரே நேரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளை தம்பிகளுக்கு முன் juxtapose பண்ணி தம்பிகளை அசத்துவார் அண்ணா (22ம் கடிதம்). அவை:

நிகழ்வு 1: “ஆரியரை நடுத்தெருவில் போட்டு அடி அடி என்று அடித்தாலும் கேட்க நாதியில்லை” என்றொரு வாசகம் பெரியாரின் ‘விடுதலை’ இதழில் வருகிறது.

நிகழ்வு 2: தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு சுவரொட்டி வெளியிடுகிறது. சிண்டும் பூணூலும் அணிந்த ஒரு நபர் தீண்டாமையைக் கடைபிடிப்பதாக அதில் ஒரு படம். இதைக் கடுமையாகப் பார்ப்பனர்கள் எதிர்க்கின்றனர். ‘இந்து’ இதழ் கண்டிக்கிறது. தமிழக அரசு பின்வாங்குகிறது. அந்தச் சுவரொட்டி வாபஸ் பெறப்படுகிறது.

‘இன்றைய எதார்த்தம்’ என இரண்டாவது நிகழ்வை முன்வைக்கும் அண்ணா, பெரியார் இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவிலை எனச் சொல்லி, எடுத்துக் காட்டாக முதல் நிகழ்வைத் தம்பிகளுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

“ஆரியம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம் ஆரியம் ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினருடனும் இன்னும் பெருமளவுக்கு இருப்பதாலும், ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதாலும் தான்….தம்பி ! கழகம் ஆரியரை ஒழித்திடும் வேலையில் இல்லை. ஆரியத்தை ஒழித்திடும் வேலைகளில் ஈடுபடுகிறது. நாம் ஆரியத்தை அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும்” – என்பார் அண்ணா.

அதாவது பெரியார் ஆரியர்களை, அதாவது பார்ப்பனர்களை நேரடியாக எதிர்க்கிறாராம். இவர்கள் ஆரியரை எதிர்க்காமல் ஆரியத்தை எதிர்க்கின்றனராம்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழக மக்களை ஆரியர், சூத்திரர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், தேவதாசிகள் என்பதாக அடையாளம் கண்டதை அண்ணாவின் அரசியல் சற்றே ஒதுக்கி “வரம்புகளற்ற ஒரே தொகுதியாக” ‘தமிழர்’ எனும் அடையாளத்தைக் கட்டமைக்கிறது. முகத்திற்கு முகம் என்கிற அடையாளத்தைத் தாண்டிய ஒரு இணைவை (solidarity) முன்வைக்கும் நுணுக்கமான ethnic politics ஒன்றை அண்ணா முன்வைத்தார். ‘திராவிடம்’ என்பது கட்சிப் பெயரில் இருந்த போதும் தி.மு.கவின் அரசியல் என்பது “தமிழர்” என்கிற அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒருபடித்தான ஒரு கற்பனைச் சமூகத்தையே முன்வைத்தது. தனது தேர்தல் அரசியலுக்கு அதுவே உகந்தது என்பதை அண்ணா சரியாக அடையாளம் கண்டார். தம்பிகளும் அவரை அறிஞராக, பேரறிஞராக ஏற்றுப் பின் தொடர்ந்தனர்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

பெரியார் நடத்திய போராட்டங்களை அண்ணா எதிர்கொண்ட விதம் அவரை மட்டுமல்ல இன்றைய தமிழகத்தின் நிலையையும் புரிந்து கொள்ள உதவும்.

1947 சதந்திர நாளையும், 1950 குடியரசு நாளையும் பெரியார் துக்க தினங்களாக அறிவித்தார். இந்தி எதிர்ப்பிற்காகவும் வகுப்புரிமைக்காகவும் தேசியக் கொடியையும் (1955), தேசப் படத்தையும் (1960) எரித்தார். உச்சநீதிமன்றத்தை உச்சிக் குடுமி மன்றமாக அடையாளம் காட்டி (1964) தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தினார். தமிழர்களைக் கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னார் (1966)….

இந்தப் போராட்டங்கள் எதிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை என்பதை அறிவோம். இவற்றிற்கு அண்ணா காட்டிய எதிர்வினைகள் நினைவிருக்கிறதா?

பதிலாகத்தான் அண்ணா குடிமக்களுக்குரிய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றை வற்புறுத்தினார். சுதந்திரதினத்தை “இருநூற்றாண்டுப் பழி தீர்த்த நாள்” என்றார். “மகத்தான சம்பவம்” என்றார். “உலகம் முழுதும் கூர்ந்து கவனிக்கும்” ஒரு நிகழ்வை “நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ உதாசீனம் செய்வதோ கூடாது” என்றார். அண்ணாவைப் பொருத்த மட்டில் கொள்கை அல்ல பொது மனநிலையே முக்கியம். அதற்கிசைய நோகாமல் அரசியலைச் செய்வதே குறிக்கோள்.

பெரியார் மூவண்ண தேசியக் கொடியை எரித்தார். அண்ணாவோ “யூனியன் ஜாக்” பறந்த இடத்தில் “நமது கொடி” பறக்கிறது என்றார். “நமது நாட்டுத் தூதுவர்கள் உலகின் பல பாகங்களில் உலவுகின்றனர்” எனத் தம்பிகளுக்கு ச் சுட்டிக் காட்டினார்.

“நமது” நாடு, “நமது” கொடி முதலிய சொற்களைக் கவனியுங்கள். இவை எல்லாம் அண்ணா ‘திராவிடநாடு’ கோரிக்கையைக் கைவிடுமுன் சொன்னவை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியாரின் திட்டம் திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதல்ல“- அண்ணா

இது போராட்டங்களின் காலம் அல்ல. அறுவடை செய்யும் காலம் என்பதை அண்ணா தம்பிகளின் மனத்தில் ஆளப் பதித்தார்.

இந்தி எதிர்ப்பு முதலான பிரச்சினைகளில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகப் பெரியாருடன் இணைந்து செயல்படுவதாக அண்ணா அறிவித்திருந்த போதும், பெரியாரின் பொது அழைப்பையும் மீறி அண்ணா பெரியாரது கொடி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தனது 11 ம் கடிதத்தைக் கேள்வி பதில் வடிவத்தில் அமைத்த அண்ணா இது குறித்துத் தம்பிகளுக்கு எழும் அய்யங்களை தனக்கே உரித்தான தளுக்குடன் மறுத்தார். அண்ணா சொன்னது இதுதான்:

“பெரியார் நம்மை நேரடியாக அழைக்கவில்லை. அழைக்காதபோதும் நோக்கம் சரி என்பதற்காக அதில் கலந்து கொள்ள இயலாது. நாம் இப்போது ஒரு அமைப்பாகி விட்டோம். நமக்கென்று ஒரு பொதுச் செயலாளர், பொதுக்குழு.. இப்படியெல்லாம் இருக்கிறது” என்றெல்லாம் அண்ணா வித்தாரமாகச் சொல்லிக் கொண்டு வரும்போதே பூனைக்குட்டி வெளியே குதித்து விடுகிறது.

“கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ்காரர்களையும் நம் பக்கம் சேர்க்கும்படியாக இருக்க வேண்டும். கொடி கொளுத்துவது போன்ற போராட்ட முறை மூலம் காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விடும்”

ஆக போராட்டம் தேவை இல்லை என்பது மட்டுமல்ல. இந்த வடிவங்கள் அறவே கூடாது என்பதும்தான் அண்ணாவின் கருத்து.

‘வீரம்’, ‘காதல்’ என்பவற்றுக்கெல்லாம்
எல்லாச் சூழலுக்குமான பொது அளவுகோல்கள் கிடையாது; ஒரு சூழலில் வெற்றி ஈட்டித் தரும் ஒரு வீரச் செயல் இன்னொரு சூழலிலும் வெற்றி ஈட்டித் தரும் என்பதற்கு உத்தரவாதமில்லை எனச் சொல்லும் அண்ணா (கடிதம் 13),
இப்படிச் சொல்வதால் தனக்குக் கோழை பட்டம் வந்தால் பரவாயில்லை என்கிறார்.

“நான் கோழை என்றால், என்னைப்போலவே கோழைகள் நிறைந்த திராவிட சமுதாயத்திற்கு ஏற்ற திட்டத்தை அல்லவா பெரியார் வகுத்திருக்க வேண்டும்” – எனப் பெரியாரை அண்ணா மடக்கும்போது அவரது சாமர்த்தியத்தைக் கண்டு நம்மால் புன்முறுவலிக்காமல் இருக்க இயலாது.

தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையருக்கு எதிராக காங்கிரஸ்கார ர்கள் நடத்திய போராட்டம் எனச் சொல்லும் அண்ணா, இன்று அவை பொருந்தாது; “ராஜதந்திரம்” போதும் என்பார். அதாவது தேர்தல் அரசியலுக்குரிய ராஜதந்திரம்.

பார்ப்பனீயத்தின் ‘ஸ்லீப்பர் செல்’ லாக விளங்கிய ம.பொ.சியுடன் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு (பிப் 20,1956) அண்ணா இசைவார். வேறு சில இயக்கங்களும் அந்தக் கூட்டில் இருந்தன. ‘ரயில் மறியல்’ என்பது கூட்டு முடிவு என்பதால் அண்ணா அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்கு அண்ணா கொடுக்கும் அழுத்தம் இருக்கிறதே தா..ங்க முடியாது.

“அமைதி அமைதி என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம். பலாத்காரம் கூடவே கூடாது எனப் பன்னிப் பன்னிக் கூறுகிறோம்….. ரயில்களைத் தடுத்து நிறுத்துவதா என்று கேட்கிறார்கள் நம் கழகத் தோழர்கள். தம்பி! இது சர்வ கட்சிக் கூட்டணி. தி.மு.க மட்டும் நடத்துவதல்ல. எனவே பணியாற்றச் செல்லாதீர்கள் எனப் பாட்டாளிகளை வேண்டிக் கேட்டுக் கொள்வது. அன்று மட்டும் பயணப் படாதீர்கள் எனப் பொது மக்களை வேண்டிக் கொள்வதும் மட்டுந்தான் நான் கையாள வேண்டிய முறையே தவிர தண்டவாளத்தில் படுப்பதோ, சங்கிலியைப் பிடித்து இழுப்பதோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறோம்..”

தென்னாட்டு பெர்னாட்ஷா எனக் கல்கி அண்ணாவுக்குப் பட்டம் அளித்துப் பாராட்டியது நினைவிருக்கலாம். அண்ணாவின் இந்த உரை கல்கிக்கு நினைவிருந்திருந்தால் ஒரு வேளை “தமிழ்நாட்டுக் காந்தி” என்றே அவருக்குப் பட்டம் அளித்திருப்பார்.

தம்பி ! மனையில் மகிழ்ந்திரு

நாட்டுப் பிரிவினை உட்பட எல்லாக் கோரிக்கைகளையும் சட்டசபை நுழைவு மூலமே சாதித்துவிட இயலும் என்கிற எண்ணத்தைத் தம்பிகள் மத்தியில் படிப்படியாகப் பதிய வைக்கத் தனது கடிதங்களை வெற்றிகரமாகக் கையாண்டார் அண்ணா.

“நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக் கொண்டு , நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளப் பெற்று அரசியல் கழைக் கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்து காட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணிகளின் மூலம் பெற்று, ஒரு பொதுத்தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக் கொண்டு , ஒரு பதினைந்து பேர் கோட்டைக்குள் நிறைந்திடத் தக்க நிலையும் பெற்றுள்ளோம்” (கடிதம் 90)

-இது அவர் 1957 தேர்தல் சாதித்த வெற்றி பற்றிக் கூறியது.

93ம் கடிதத்தில் அவர் இதை இன்னும் வித்தாரமாக மொழிவார். அவரளவுக்கு மொழியை விரயம் செய்ய இங்கு இடமில்லை என்பதால் சற்றே சுருக்கி அவர் சொன்னதை இங்கு வைக்கிறேன்.:

“சட்டசபைக்கு வெளியே எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேலை கொடு என சோஷலிஸ்டுகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிடுக்கிறார்கள். ஊதியம் உயர்த்து என தபால் தந்தி ஊழியர்கள் போராடுகின்றனர். ஆகஸ்டுக்கு ஆகஸ்டு வர்ணாசிரமத்தையும் மற்றவற்றை யும் எதிர்த்து பெரியார் அறப்போர்களை நடத்திக் கொண்டுள்ளார். ஆனால் நம்முடைய கருணாநிதி அன்று அமைச்சர் பக்தவச்சலனாரைக் கல்லணையில் சந்தித்து நங்கவரம் பண்னைப் பிரச்சினையைத் தீர்த்தார். சத்தியவாணிமுத்து அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்தும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்தும் பிரச்சினைகளைத் தீர்க்கிறோம். இவைகள் யாவும் நமது, கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்சிகள்”

-இது அவர் ஒரு முழுப் பக்கத்தில் சொல்லியுள்ளதை அவரது வார்த்தைகளிலேயே, ஒன்றும் விடுபடாமல் சுருக்கித் தந்துள்ளது.

கூலி உயர்வு, வேலை கொடு என எதற்கும் வீதிக்குக் கூட வராதீர்கள். ஓட்டுப் போட்டு எங்களை சட்டசபைக்கு அனுப்புங்கள். வாக்குப் பெட்டி ஒன்றே போதும் வேறு எதுவும் வேண்டாம்…..

இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் திமுகவினர்.

புதிய ஜனநாயகம் பற்றி அண்னா சொன்ன விளக்கத்தை யாராவது மாஓ வைப் படித்தவர்கள் படிக்க நேர்ந்தால் அதிர்ச்சியில் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

1957ல் ஈழத் தமிழர்கள் ஏதோ ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டிக் கடிதத்தை முடிக்கும் அண்ணா, “ஆகஸ்டு இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் தம்பி” என்பார். “ஆகஸ்டு” (போராட்டம்) என்பது பெரியார் முதல் காந்தி வரை ஒரு கிளர்ச்சியின் குறியீடு. அண்ணாவைப் பொருத்த மட்டில் காந்தியின் கதை பழைய கதை. பெரியாரின் கதை காலத்திற்கு ஒவ்வாத கதை.

ஆகஸ்டுகள் இல்லாமலே வெல்வதுதான் அண்ணாவின் வெற்றிக் கதை.

சரி. போராட்டம் மற்றும் இதர பணிகள் ஏதும் இல்லையென்றால் தம்பிகள் என்னதான் செய்ய வேண்டுமாம்.

95ம் கடிதத்தில் அண்ணா சொல்வார்:

“தம்பி ! மனையில் மகிழ்ந்திரு. பெற்றோருக்குப் பெருமை தேடிடு. உற்றார் உறவினரை உவகை கொள்ளச் செய்! ஊருக்கு உழைத்தலில் இன்பம் பெறு. விழி புகுந்து உன் நெஞ்சில் உறையும் உன் இனியாளைக் கண்ணெனப் போற்றிடு ! கன்னல் மொழிக் குழந்தைகளைக் கற்றோராக்கு! தமிழ் மணம் கமழ வழிகாண்பாய், தம்பி! தமிழன் என்றோர் இனம் உண்டு ! தனியே அவர்க்கோர் குணம் உண்டு!”

தம்பிகள் பாக்கியசாலிகள். யாருக்குக் கிடைப்பர் இத்தகைய பொன்னான தலைவர்….

# # #

(முடியவில்லை. சிறிது இடைவெளி விட்டுப் பின் தொடர்கிறேன். சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன் (செப் 2017) புதுச்சேரி PILK நிறுவனத்தில் நான் “அண்ணாவின் கடிதங்கள்” எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் (க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு) ஒரு பகுதி இது . சுருக்கியும். ஆய்வுக் கட்டுரைக்குரிய நடையைச் சற்றே தளர்த்தியும் இங்கு தந்துள்ளேன். சொற்பொழிவின் ஒரு பாதியில் சொன்னவற்றின் சில துளிகள் இவை. )