என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? – என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம் என்ன சொல்லுகிறது?

//தற்காப்புக்காக – தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக்கிறது. //

இதில் இரு அம்சங்கள் கவனிக்கத் தக்கன.

1) தற்காப்புக்காகக் கொலையும் செய்யலாம். இது காவல் துறையினருக்கு மட்டுமல்ல சாதாரணக் குடிமக்களுக்கும் பொருந்தும். ஆனால் அது கொலக் குற்றமாகவே பதிவு செய்யப்பட்டு, தான் தற்காப்புக்காகத்தான் கொல்ல நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே அவர் வழக்கிலிருந்து விடுபட இயலும். இந்த நடைமுறை காவல்துறையினர் செய்கிற என்கவுன்டர்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2) கைது செய்யச் செல்லும் இடத்தில் வரமறுப்பவர்களைக் கொலை செய்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டம் ஒரு நிபந்தனை விதிக்கிறது. கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருந்தால் மட்டுமே அவரைக் கொல்லும் எல்லைக்குச் செல்லலாம். வங்கிக் கொள்ளை என்பது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமல்ல. பொம்மைத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பதே இக் கும்பலின் வழக்கம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ள செய்தி இன்றைய (22, பிப்ரவரி) இந்து நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கும் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐவரையும் கொல்வது என்கிற அளவிற்குச் செல்லாமல் கால நீடிப்புச் செய்து அவர்களைக் கைது செய்வதற்கே காவல்துறை முயன்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்து நாளிதழ் செய்தியில் இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கொள்ளையச் செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நேற்றே காவல் துறையினர் இந்து நாளிதழிடம் கூற முடிந்துள்ளது. இது எப்படி? ஏற்கனவே மகாராஷ்டிர மானிலத்தில் இதெ வடிவிலான வங்கிக் கொள்ளைகளை பீகாரைச் சேர்ந்த கும்பல் செய்துள்ளது. அங்கு பிடிபட்ட சுபோத் கந்த் சிங் என்கிற பீகாரி இளஞன் பல தகவல்களைக் கூறியுள்ளான். சென்னையில் கொள்ளையிடும் திட்டமும் அவர்களிடம் இருந்துள்ளது. நமது காவல்துறை இவ்வளவு எளிதாக இந்தக் கொள்ளையில் துப்புத் துலக்க முடிந்ததற்கு இந்தத் தகவல்களே உதவியுள்ளன. இந்த ஐவரையும் உயிருடன் பிடித்திருந்தால் மேலும் பல உண்மைகளை அறிந்திருக்கக் கூடும். இந்தக் கொலைகள் மூலம் அந்த வாய்ப்பும் இன்று இழக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக என்கவுன்டர் கொலைகளில் செய்யப்படுவது யாதெனில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீதே காவல் துறையினரைக் கொல்ல வந்ததாக வழக்கொன்றைப் பதிவு செய்வார்கள். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்துபோனார் எனச் சொல்லி வழக்கை முடிப்பார்கள். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

மனித உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக சென்ற 2007 ஆகஸ்ட் 8 அன்று தமிழக அரசு என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக ஒரு நெறிமுறையை வழங்கியது. அதன்படி என்கவுன்டர் செய்த அதிகாரிகளுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுக்கக் கூடாது. இதற்கெனப் பதவி உயர்வு கொடுக்கக் கூடாது. ஆனாலும் தொடர்ந்தும்கூட அப்படிப் பரிசுகள் கொடுக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது.