கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்

கார்ல் மார்க்ஸ் -12 , மக்கள் களம், மே, 2018                                

இன்று (மே 5, 2018) கார்ல் மார்க்சின் 200 ஆவது பிறந்த நாளில் முன்னாள் மேற்கு ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் உள்ள கார்ல் மார்க்சின் இல்லத்தை நோக்கி பெருந்திரளாகப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர் என்றும், ஆனால் சுமார் நாற்பதாண்டுகாலம் ‘கம்யூனிஸ்ட்’ ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெர்மனியில் இறுக்கமான மௌனம் தொடர்கிறது எனவும் இன்றைய ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது.m2

1994ல் நான் ஜெர்மனி சென்றபோது ட்ரையர் நகரில் உள்ள மார்க்சின் வீட்டிற்குப் போனது நினைவுக்கு வருகிறது. தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள அந்த நகரத்திற்கு ரைன் நதி ஓரமாகச் சென்ற அந்த நீண்ட பயணம் மறக்க முடியாதது. இன்றைய கம்யூனிஸ்ட் கட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த இல்லம் எங்கிருக்கிறது என ஊருக்குள் பலரிடம் விசாரித்தும் யாராலும் சரியாகப் பதிலளிக்க இயலவில்லை. ஒரு வயதான மூதாட்டி சற்று நேரம் நின்று நெற்றியில் விரலைத் தட்டி யோசித்துவிட்டு, “இங்கே எங்கேயோ அப்படி இரு வீட்டைப் பார்த்துள்ளேன்” – எனச் சொல்லி அகன்றார். எப்படியோ அந்த வீட்டைக் கண்டு பிடித்து அங்கு சென்ற போது அங்கு எங்களைத் தவிர யாருமில்லை.

இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் ழீன் க்ளாட் ஜுங்கர், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆன்ட்ரி நேல்ஸ் உட்பட ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலரும் இன்று அங்கு சீன அரசால் அன்புடன் அளிக்கப்பட்ட 5.5 மீ உயரமுள்ள கார்ல் மார்க்சின் சிலையடியில் நின்று உரையாற்றிக் கொண்டுள்ளனர். வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவரான ஆங்கெலா மெர்கல் உட்பட சீன அரசு உவந்தளித்த இந்தச் சிலையை வரவேற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

ட்ரையர் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி மேயர் லெய்ப் ட்ரையர், “முப்பதாண்டுகளுக்கு முன் இது சாத்தியமே இல்லை…. எனினும் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசிற்கும் சோஷலிசத்திற்குமான இடைவெளி அதிகமாக உள்ள சூழலில் மார்க்சுடன் உரையாட இது சரியான  தருணம்” எனக் கூறியுள்ளார்.

இன்று மிக அதிகமாக விற்பனையாகும் நூற்களில் ஒன்று மார்க்சின் டாஸ் கேபிடல் என ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது. மார்ஸ் குறித்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என மார்க்சின் கருத்துக்கள் கொண்டாடப் படுகின்றன.  சென்ற ஞாயிறன்று வலதுசாரி பூர்ஷ்வா இதழான Frankfurter Allgemeine Zeitung முதற் பக்கத்தில்  மார்க்ஸின் படத்தோடு அவரது முக்கிய மேற்கோள்களையும் வெளியிட்டு இருந்தது. Süddeutsche Zeitung எனும் இதழின் முன்னாள் ஆசிரியரும் மார்க்சின் தத்துவப் பார்வை குறித்த ஒரு சமீபத்திய நூலை எழுதியவருமான தாமஸ் ஸ்டெய்ன்ஃபீல்ட், “2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின் மார்க்சிய அணுகல்முறைக்கு மிகப்  பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார அமைப்பு பிரச்சினை இல்லாமல் செயல்படும் போது மட்டுமே நம்முடைய பொருளாதார நிபுணர்களால் அதை விளக்க முடிகிறது. ஆனால் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை” என்கிறார். அதோடு, “எல்லாவற்றையும் மதப் பின்புலத்திலும் புனித ஒழுங்குகளின் (divine order) அடிப்படையிலும் விளங்கிக் கொள்வதற்கு இது மத்திய காலம் (middle age) அல்ல. முதலாளித்துவ உறவுகள் மத்தியிலேயே நாம் இன்று வாழ்கிறோம். முதலாளிய இயக்கம் பற்றிய அறிவின் ஊடாகவே நாம் இன்று நம்மை விளங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் மார்க்சை நோக்கித் திரும்புவது இன்று தவிர்க்க இயலாததது” – எனவும் அவர் கூறுவது கவனத்துக்குரியது.

இடதுசாரிக் கட்சிகளில் ஒன்றான ‘டை லின்க்’ கட்சியைச் சேர்ந்த டயட்டர் கோவாலிக் சொல்லுகையில், “மார்க்ஸை வாசிப்பதைப் பொருத்தமட்டில் மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியைக் காட்டிலும் முற்போக்காக உள்ளது” என்கிறார்.

மேற்கு ஜெர்மனி இது வரையிலும் முதலாளியப் பொருளாதாரம் மற்றும் முதலாளிய ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திய ஆட்சிகளின் கீழ் இருந்தது. கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் வீழ்ச்சி வரை சோவியத் பாணி “சோஷலிச ஆட்சி”யின் கீழ் இருந்தது. மேற்கு ஜெர்மனி மார்க்சைக் கற்றுக் கொள்ள தயாராக இருப்பதையும், கிழக்கு ஜெர்மனி அதற்குத் தயாராக இல்லாத நிலையையும் நாம் இந்தப் பின்னணியில் கவனம் கொள்ள வேண்டும்.

m 1இது கிழக்கு ஜெர்மனிக்கு மட்டும் பொருந்துவதல்ல. உல்கெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட சோஷலிசக் கட்டுமானங்களின் கீழ் வாழ நேர்ந்த மக்கள் எல்லோரது நிலையும் இன்று இதுதான். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆளுகைகளை மறு பரிசீலனை செய்யத் தயாராக இல்லை. இது எப்படி நேர்ந்தது?

சோஷலிசமாக ரஷ்ய – சீன பாணிகளில் கட்டமைக்கப்பட்ட அரசியலும் பொருளாதாரமும் மார்க்சின் ஆழமான தத்துவப் பார்வைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுத்தப்பட்டவை அல்ல. மார்க்சின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட பல மார்க்சிய விரோதப் போக்குகள்தான் இன்று மார்க்ஸ் மீதும், மார்க்சீயத் தத்துவத்தின் மீதுமான வெறுப்பாக மக்கள் மத்தியில் வேர் கொண்டுள்ளது..  பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் எனும் ஒரு அபத்தப் பெயரின் கீழ் அவை முற்றிலும் ஜனநாயகமற்ற ஆட்சிகளாக (totalitarian regimes) ஆயின. ஸ்டாலின் அல்லது போல்பாட் போன்ற ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. ப்ளெகானோவ், லெனின், மாஓ… யாரும் மார்க்ஸை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் மார்க்சின் பெயராலும், மார்க்சீயத்தின் பெயராலுமே எல்லாவற்றையும், எல்லாத் தவறுகளையும் செய்தார்கள்.

தீவிர மார்க்சியராகத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் பலரும் மார்க்சின் பிரதிகளை நேருக்கு நேர் வாசித்துப் புரிந்துகொள்ளும் திராணி அற்றவர்களாகவே இருந்தனர், இருக்கின்றனர். அதற்குக் காரணங்கள் இர்ண்டு, மார்க்ஸ் காலத்திய அரசியல் மற்றும் தத்துவ விவாதங்கள் குறித்த வாசிப்பவர்களின் புரிதலின்மை என்பது ஒன்று. ‘பதினெட்டாவது புருமேர்’ என்பதை ஒரு மன்னரின் பெயராகப் புரிந்து கொண்டு எழுதியவர்கள் இங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மற்றது கார்ல் மார்க்சை எளிமையான சில வாய்ப்பாடுகளை நமக்குச் சொன்னவராகப் புரிந்து கொண்டு அவரது சிந்தனைகளை விதிகளாகச் சுருக்கிப் பட்டியலிட்டுப் புரிந்து கொண்டது. நமது எல்லா தினசரிப் பிரச்சினைகளுக்கும் மார்க்ஸ் விடை சொல்வார் என நம்பியது. இல்லாவிட்டால் இயங்கியல் முறையில் மீன் பிடிப்பது பற்றியெல்லாம் மாஓவின் பெயரால் இங்கு சொல்லாடல்கள் உருப்பெற்றிருக்க முடியுமா?

மார்க்சின் எந்த ஒரு எழுத்தையும் நம்மால் ஏன் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலவில்லை? ஏன் அவரது எழுத்துக்கள் மிகவும் சிக்கலாகத் தோன்றுகின்றன? தன்னிடம் எல்லாக் கேள்விகளுக்கும் எளிய விடைகள் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்ததுதான் அவை சிக்கலாக வெளீப்பட்டதன் அடிப்படை. பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

மனிதர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் என்பதை அவர் உணர்ந்திருந்ததன் விளைவே தொழிலாளிவர்க்கம் அதன் பிரச்சினைகளை அதுவே தீர்த்துக் கொள்ளத் தகுதியானது என அவர் சொன்னதன் பின்னணி.

“நான் மார்க்சிஸ்ட் அல்ல” என மார்க்ஸ் ஒருமுறை சொன்னதாகச் சொல்வார்கள். மார்க்சிஸ்ட் என்கிற சொல்லின் ஊடாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள மொத்தத்துவக் கருத்தியலைக் கண்டு அவர் கொண்ட அச்சமே இந்தக் கூற்றின் அடிப்படை. அவர் ஒரு தத்துவ ஞானி. அப்படிச் சொல்வது அவரை மக்களிடமிருந்தோ அல்லது. அரசியலிலிருந்தோ பிரித்து நிறுத்துவது அல்ல. அவர் மற்ற தத்துவ ஞானிகளிடமிருந்து வேறுபட்டவர் என்பது யாருக்கும் தெரியும். ஆனால் அடிப்படையில் ஒரு philosopher  என்பதை நாம் மனதிற் கொண்டே அவரை நாம் அணுக வேண்டும். அவரது ஆக எளிய அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் கூட நாம் ஒரு தத்துவ ஆசிரியன் எழுதிய அரசியற் கையேடு என்கிற அடிப்படையிலேயே அணுக வேண்டும்.

0f21fe8e-3faf-11e8-b6d9-57447a4b43e5-1280x720-161305ஒரு கட்சியின் அறிக்கை என்பது நிகழ் காலத்தைச் சுட்டிக் காட்டி, அதைக் கடந்து எதிர்காலத்தை முன் ஊகித்துச் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு மார்க்சும் எங்கல்சும் எழுதிய இந்த அறிக்கைதான். மார்க்ஸ் காலத்தில் (1840 கள்) முதலாளியம் அப்போதுதான் உருப்பெற்று, நிலை கொள்ள எத்தனித்து, அம்முயற்சியில் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போதே அது எதிர்காலத்தில் எத்தகைய நிலையை எடுக்கும், எப்படியெல்லாம் வேர்பரப்பும் என்பதை விரிவாகவும் சரியாகவும் சுட்டிக்காட்டியது மார்க்ஸ் – எங்கல்சின் அந்த அறிக்கை. இன்று அது உலகமயமாகியிருக்கிறது, நிதிமூலதன மயமாகியுள்ளது. அது தொடாத இடமில்லை; கால் பாவாத பகுதியில்லை.

“nestle everywhere, settle everywhere, establish connexions everywhere” என அறிக்கை சொன்னதை 1970 களில் மார்க்சியர்களிலேயே சிலர் எதிர்த்தனர். மூன்றாம் உலக நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்? ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்கிற முதலாளிய நகர் மையங்களைத் (metropolis) தாண்டி இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்டனர். ஆனால் 1991 க்குப் பின் அது சாத்தியமாகியுள்ளதற்கு நாம் இன்று சாட்சிகளாக நிற்கிறோம்.

“உலகச் சந்தையின் மீதான சுரண்டல் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஒரு உலகளாவிய தன்மையை அளிக்கும்” (“exploitation of the world-market” would give “a cosmopolitan character to production and consumption in every country”).  என்று அறிக்கை சொன்னதை இடதுசாரிகளே ஐயத்துடன் நோக்கிய காலம் ஒன்றும் இருந்ததுதானே. ஒவ்வொரு நாட்டிலும் இன்று எல்லா உற்பத்தியும் நடக்கிறது; நுகர்வும் நடக்கிறது. ஆனால் அவை உண்மையில் அந்தந்த நாட்டு உற்பத்திகளா? எனினும் உற்பத்தி ஒரு உலகளாவிய நிலையை எடுத்ததாகத் தோற்றம் கொள்ளவில்லையா? இன்று சுமார் 20 இலட்சம் இந்திய / சீனத் தொழிலாளிகள் உலக உழைப்புச் சந்தையில் மிதந்து கொண்டிருக்க வில்லையா? மூலதனம் உலகமயமாவதற்கிருந்த ஒரே தடையான சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்க்கப்பட்டு இன்று உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா? தகர்க்கப் படாமலேயே இன்று சீனம் உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா?

அறிக்கை எழுதப்பட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ வாழ்வின் அடிநாதமான வழமைகளைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க முகமையாக இருந்தது நீராவி எந்திரங்கள்தான். தொழில் முதலாளிகள், பெரு வணிகர்கள் என்கிற புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுக்களின் இருப்பையும் ஆதிக்கத்தையும் தகர்த்தெறிந்து சமூக ஆதிக்கத்தையும் தம் வயமாக்கிக் கொண்டன. இன்று செயற்கை நுண்ணறிவும் தானியங்கிகளும் (artificial intelligence and automation) அத்தகைய அச்சத்திற்குரிய முகமைகளாக ஆகவில்லையா? “எல்லா நிரந்தரமான, உறைந்த உறவுகளையும் துடைத்தெறிந்து தொடர்ந்து உற்பத்திசக்திகள் புரட்சிகரமயமாகும்” என அறிக்கை சொன்னதை நாம் இன்று கண்முன் காணவில்லையா?  – “உற்பத்தி தொடர்ந்து புரட்சிகரமாகும்; எல்லாச் சமூக எதார்த்தங்களும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும்; தொடர்ந்த உறுதியின்மை, குழப்பங்கள் என்பனதான் இனி எதிர்காலமாக அமையும்” என அறிக்கை அன்று சொன்னதைத்தானே – “constant revolutionising of production, uninterrupted disturbance of all social conditions, everlasting uncertainty and agitation”-  இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

மார்க்ஸ் இவ்ற்றை எல்லாம் நல்ல ‘சகுனங்களாகவே’ கண்டார். இவை மிகப் பெரிய அதிருப்தியை உருவாக்கும்; அது இந்த அமைப்பைக் கவிழ்க்கும் என்றார். “கண்முன் உறுதியாக இருந்தவை எல்லாம் உருகிக் காற்றில் கரையும். புனிதமாகத் தோற்றம் காட்டியவை எல்லாம் அசிங்கமானவைகளாகத் தோற்றம் கலையும்” என்கிறது அறிக்கை. “மிகவும் மோசமான ஏழ்மை என்கிற நிலையிலிருந்து ஒப்பீட்டளவிலான ஏழ்மை என்கிற நிலைக்கு முன்னேறியுள்ளோமே” என அவர்கள் சமாளித்த போதிலும், தாங்கமுடியாத அசமத்துவம், கொடூரமான பேராசை, பருவநிலை மாற்றம். வங்கி மூலதனங்களும் பெரும் பண முதலைகளும் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வசப்படுத்திக் கேலிக்கூறாக ஆக்கியுள்ளமை ஆகியவைதானே இன்று எதார்த்தமாக உள்ளன?

அறிக்கையைத் தெளிவாக வாசித்திருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் வியப்பளிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் எதிர்பார்த்தவைதான். “ஒட்டு மொத்தமான சமூகமும் எதிர் எதிரான இரு முகாம்களாகப் பிரிந்து ஒன்றை ஒன்று நேரடியாக எதிர்கொண்டு நிற்கும்” என்பதும் அறிக்கை நமக்குச் சொன்னதுதானே. உற்பத்தி என்பது மேலும் மேலும் எந்திரமயமாகிறது. சமகால நாகரீகத்தை இயக்கும் விசையாக மேலும் மேலும் லாபம் எனும் கார்பொரேட் வெறி பூதாகரமாக உருப்பெறுகிறது. சமூகம் நேர் எதிர் எதிரான சக்திகளாகப் பிளவுண்டு நிற்கிறது. இடையில் சிக்கிய மத்தியதர வர்க்கத்திற்கு அழிவே விதியாகப் போகிறது.
(தொடரும் – அடுத்த இதழில் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்)