பார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்

வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு

அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன். நெதுசு அவர்கள் மாநிலக் கல்லூரியில் படிக்கிறார். புகழ் பெற்ற விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.
அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பின் (1968 -70) நானும் எனது பட்டமேற்படிப்பை மாநிலக் கல்லூரியில்தான் படித்தேன். அப்போது எனக்கு உதவித் தொகை எல்லாம் இல்லாததால் நான் வெளியில் மேன்ஷன்களில் தங்கித்தான் படித்தேன். எனினும் விக்டோரியா ஹாஸ்டலில் எனது நண்பர்கள் இருந்தனர். குறிப்பாக அறந்தாங்கி பெரியசாமி, திட்டை பிச்சையன் முதலானோர். (இருவரும் இப்போது இல்லை). அடிக்கடி அந்த விடுதிக்குச் செல்வது உண்டு. அபோதெல்லாம் அது பெரும்பாலும் அடித்தளச் சமூக மாணவர்கள் தங்கிப் படிக்கும்விடுதி. இப்போதும் அப்படித்தான்.
ஆனால் சுந்தரவடிவேலு அங்கிருந்தபோது நிலைமை அப்படியில்லை. இரண்டு மெஸ்கள் அங்கு இயங்கியிருக்கின்றன. சைவம் ஒன்று. அசைவம் ஒன்று. சைவ மெஸ் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பன மாணவர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஒன்று. பார்ப்பனர் அல்லாதார் அமர்ந்து சாப்பிட ஒன்று. பார்ப்பன மாணவர்கள் பார்ப்பனரல்லாதாருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதில்லை.
ஏதோ வ.வே.சு அய்யர் அவர்களின் சேரன்மாதேவி குருகுலம் பற்றி மட்டும் பேசுகிறோமே. அதே காலத்தில் தலைநகர் சென்னையிலும், Princes of Presidency எனச் சொல்லத்தக்க ஒரு ‘எலைட்’ (அப்போது) கல்லூரியில், (வெள்ளை) அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு கல்லூரியிலும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது.
இதைப் பலரும் யோசிப்பதில்லை. நான் உட்பட.
இந்தக் காலகட்டத்தில் விக்டோரியா மாணவர் விடுதி சைவப் பகுதி மாணவர்களுக்கு சுந்தரவடிவேலுதான் தலைவர். சுயமரியாதைப் பின்னணி உள்ளவராக இருந்தபோதிலும் அவரும் இதை எதிர்த்தெல்லாம் போராடவில்லை. போராடும் சூழல் இல்லை. அப்போது சில பார்ப்பன மாணவர்கள் அவரை ஒரு மனுவுடன் அணுகுகின்றனர். அந்த மனுவில் இப்படி பார்ப்பன மாணவர்களும் பார்ப்பனரல்லாத மாணவர்களும் தனித்தனியே அமர்ந்து உண்ணும் வழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கையொப்பமிட்டிருந்தனர். உண்மையில் நெதுசு அதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பக்கலிலிருந்து இப்படி ஒரு initiative தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டு மட்டுமல்ல; சைவப் பகுதி மாணவர் தலைவன் என்கிற வகையில் தான்தான் இதற்குக் காரணம் என விடுதி நிர்வாகம் தன் மீது நடவடிக்கை எடுத்து விடுமோ என்கிற அச்சந்தான் பிரதான காரணம்.
“எல்லோரும் கையெழுத்து இட்டுள்ளார்களா?” எனத் தயக்கத்துடன் கேட்கிறார் நெதுசு.
“இல்லை எட்டு (பார்ப்பன) மாணவர்கள் மட்டும் கையொப்பமிட மறுத்து விட்டார்கள். அவர்கள் மற்றவர்களோடு உட்கார்ந்து சாப்பிடமாட்டார்களாம்” என்று பதில் வருகிறது.
அப்போது விக்டோரியா விடுதியில் இருந்த பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை 88 என்கிறார் நெதுசு. மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அவர் சொல்லவில்லை. எனவே பார்ப்பனர்களின் வீதத்தை கணக்கிட முடியவில்லை. எப்படியும் 88 என்பது மிக அதிக எண்ணிக்கைதான். இட ஒதுக்கீடு எல்லாம் இப்போது அளவிற்குச் செயற்படாத காலம். அப்போது அவர்கள்தானே படித்தார்கள்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படிச் சிலர் சமபந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் பிரச்சினைக்கும் பார்ப்பன மாணவர்களே தீர்வும் சொல்கின்றனர். அந்தத் தீர்வும் வ.வே.சு அய்யர் முந்திய பத்தாண்டுகளுக்கு முன்பு வைத்த வந்த தீர்வுதான்.
“எல்லோருடனும் உட்கார்ந்து உண்ண மறுக்கும் அந்த எட்டு பார்ப்பன மாணவர்களை மட்டும் அங்குள்ள சிறிய மெஸ்ஸில் உட்கார்ந்து சாப்பிடச் சொல்லலாம். மற்ற 80 பார்ப்பன மாணவர்களும் மற்றவர்களும் ஒன்றாக ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்”
என்பதுதான் அவர்கள் வைத்த தீர்வு.
வேறு வழியில்லை. தயக்கத்துடனும் அச்சத்துடனும் மாணவர் தலைவர் என்கிற முறையில் அவர்களை அழைத்துக் கொண்டு விடுதிக் காப்பாளர் (warden) பேரா. பிரங்கோ வைச் சந்திக்கின்றார் சுந்தரவடிவேலு.
அவர் கடுமையாகப் பேசி அந்தக் கோரிக்கையை மறுத்துவிடுகிறார். பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதோரும் தனித்தனியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மாணவர்களின் சம பந்திக் கோரிக்கை முறியடிக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, இதைத் தொடங்கி வைத்தது பார்ப்பன மானவர்களேயானாலும் சுந்தரவடிவேலு அச்சப்பட்டது போல பேரா.பிரங்கோ அவர்தான் இதற்குக் காரணம் என முடிவு கட்டுகிறார். சுந்தரவடிவேலு மிகவும் பயந்து போய விடுகிறார். ‘செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா?” என்று வேதனைப் படுகிறார். ஊருக்குச் சென்று பெற்றோரின் சம்மதத்தோடு அசைவ விடுதிக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார். அதனூடாக சைவ மாணவ விடுதித் தலைமையைத் துறந்து தனக்கும் சமபந்தி உணவுப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிறுவ முயல்கிறார். சுத்த சைவ தொண்டை மண்டல வேளாளரான அவருக்கு அசைவ உணவு விடுதியில் தொழிலாளிகளின் ஒத்துழைப்புடன் தனிக்கரண்டி, பாத்திரங்களில் அசைவம் அல்லாத உணவு வழங்கப்படுகிறது.
இப்படிப் போகிறது வரலாறு.
_________________________________________________
குறிப்புகள்
1. இப்படியான ஒரு சம பந்தி உணவுக் கோரிக்கை பார்ப்பனரல்லாத மாணவர்களிடமிருந்து அல்லாது பார்ப்பன மாணவர்களிடமிருந்து எழுந்தது ஒரு முக்கியமான அம்சம். இது ஆய்வு செய்யப்படல் வேண்டும். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையை ஏதோ தமிழ்நாட்டில் இருந்த ஒரு தீவில் நடந்த போராட்டம் என்பதைப்போல மட்டும் பார்க்காமல் அந்தக் காலகட்டத்தில் தமிழக மாணவர் விடுதிகளில், அரசு விடுதிகள் உட்பட என்ன நிலை இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் சாவர்கரின் வழியிலிருந்து விலகி காந்தியின் வழியைத் தேர்வு செய்தவரும், தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சன முன்னோடியும், திருக்குரான் தமிழ் மொழியாக்கம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டும் என எழுதியவருமான வ,வே.சு அய்யரின் பங்கு வரலாற்றுப் பின்னணியில் வைத்து மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
2.சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் 1924-25 காலகட்டத்தில் தந்தை பெரியார், வரதராஜுலு நாயுடு போன்றோரால் நடத்தப்பதால் ஏற்பட்ட விழிப்புணர்வு இதற்கும் பின்னணியாக இருந்துள்ள நிலை ஒரு பக்கம் என்றால் இத்தனைக்குப் பின்னும் அரசு விடுதிகளிலும் கூட இந்நிலைமை தொடர்ந்துள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
3. இந்தக் காலகட்டத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. 1927ல் தமிழ்நாடு சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி இதைக் கண்டித்தார். அவர் பள்ளிகளுக்குப் போகும்போதெல்லாம் இது குறித்து விசாரித்தார். மன்னார்குடி நேஷனல் பள்ளியில் அவர் இது பற்றி நிர்வாகத்தை விசாரித்தது குறித்து நான் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலில் குறிப்பிட்டுள்ளேன். இந்தக் காலகட்டங்களில் காந்தி அடிகள் தமிழகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆலயக் கதவுகள் சாத்தப்பட்டன. இது குறித்துக் கண்டித்து அக்காலகட்ட சுய மரியாதை இயக்க ஏடுகளில் குத்தூசி குருசாமி விரிவாக எழுதியுள்ளார். காந்தியின் மீது தமிழ்ச் சனாதனிகளுக்கு இருந்த கோபம் அவர் தீண்டாமைக்குக் காரணமான பிரிவினரையே அதற்கு எதிராகக் களத்தில் இறக்கியதுதான். மதுரை வைத்தியநாத அய்யர், திருப்பூர் சிவசாமி அய்யர் முதலானோர் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்

நெ.து. சுந்தரவடிவேலு நினைவிருக்கிறதா? கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தவர்.. பெரியார் தொண்டர். மாணவப் பருவம் முதல் மறையும் வரை சுயமரியாதைக்காரர். வட தமிழக தொண்டை மண்டல வேளாள வகுப்பினர். இறுக்கமான சாதீயச் சமூகப் பின்னணி இருந்தும் பிடிவாதமாகக் கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். குத்தூசி குருசாமி அவர்களின் கொழுந்தியாள், அதாவது மனைவி குஞ்சிதம் அம்மையார் அவர்களின் சகோதரி காந்தம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர்.

அவரது “தன் வரலாறு” நூல் கண்ணில் பட்டது. (‘நினைவு அலைகள்’, வானதி பதிப்பகம், பக்.890, 1983).

நூல் முழுக்க இழையோடும் ஒரு செயற்கைத் தன்மை நூலுடன் ஒன்ற விடாமல் தடுத்த போதிலும் நிகழ்ச்சிகள் மிக்க சென்ற நூற்றாண்டின் மத்தியக் காலத் தமிழக அரசியல் சமூகப் பின்னணி குறித்து ஏதேனும் புதிய தெளிவுகள் கிடைக்குமா என்பதற்காகப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

சென்ற நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் என்பது எவ்வாறு ஒரு பார்ப்பனரல்லாத மேற்சாதியினரது இயக்கமாகவே இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. பார்ப்பன எதிர்ப்பு என்பது ஒரு பக்கம் தீவிரமாக இருந்த போதிலும் சாதி ஒழிப்பு என்கிற கருத்தை இயக்கத்திற்குள் கொண்டு செல்வதற்கு பெரியார் போன்றோர் எத்தனை சிரமப் பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இயக்க மாநாடுகளின்போது சுந்தரவடிவேலு (நெதுசு) ஒரு படித்த முதலியார் பையன் என அறிந்து அவரை மாப்பிள்ளையாக வளைத்துப் போட அவரது சாதிக்காரர்கள் அலைகின்றனர்.

இயக்க அடிப்படையில் நடந்த முதல் சுயமரியாதைக் கலப்புத் திருமணம் என்பது குருசாமிக்கும் குஞ்சிதத்துக்கும் நடந்த திருமணம்தான். குருசாமியும் பார்ப்பனரல்லாத உயர் வகுப்பினர்தான். குஞ்சிதம், காந்தம் ஆகியோரின் தந்தை திருவாரூர் சுப்பிரமணியம் அவர்கள் இசை வேளாளர் வகுப்பினர். பிடில் வித்வான். சுயமரியாதைக்காரர். மகள்களை நல்ல முறையில் உயர்கல்வி பயிற்றுவித்தவர்.
இயக்க நடவடிக்கைகள் ஊடாக குருசாமிக்கும் நெதுசு வுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அக்காள் கணவரின் நண்பர் நெதுசு கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றில் நாட்டமுடைய கொள்கைவாதி என்பதை அறிந்த காந்தம் தன் தோழி ஒருவர் வழியாகத் தன் மனத்தை நெதுசுவுக்கு ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்துகிறார். பல்கலைக் கழக வளாகத்தில் இருவரும் சந்திக்கின்றனர். தான் அவரிடம் நெருங்காமலேயே எல்லாவற்றையும் பேசி ஒப்புதல் அளித்து வந்ததை இரு முறை குறிப்பிட்டுச் சொல்கிறார் நெதுசு.

பிறகு நெதுசு அவர்கள் குருசாமிக்குத் தெரிவிக்க, குருசாமி பெண் வீட்டாருடன் பேசி அவர்களின் ஒப்புதல் பெறுகிறார். அதில் பிரச்சினையில்லை. எனினும் தந்தை பெரியார்தான் இறுதி ஒப்புதல் தர வேண்டும்.

இதுதான் இங்கு முக்கியமான விடயம். இதை உங்களுடன் பகிர்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். பெரியார் எப்படிஉண்மையிலேயே அந்த இயக்கத்தின் தந்தையாக விளங்கினார் என்பதும், அத்தனை பொறுப்புடனும், வீண் வரட்டுக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டும், எல்லோரையும் அனுசரித்தும், எல்லோருடைய சம்மதத்துடனும் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் பொறுப்புடனும் செயல்பட்டார் என்பதும்தான் இதில் மிகவும் நுணுக்கமான அழகிய அம்சம். சுந்தரவடிவேலுவின் உப்புச் சப்பற்ற உரைநடையைப் பொறுத்துக்கொண்டு வாசிப்பது மட்டுமே சவால்.
பெரியார் சென்னைக்கு வரும்போது பேசிக் கொள்ளலாம் என்கிறார். அவ்வாறே அடுத்த சில வாரங்களில் வருகிறார். அவரது நிகழ்ச்சி நிரலில் இந்தத் திருமணப் பேச்சு ஒரு முக்கியமான அம்சம்.

ஆனால் அன்று நாள் முழுதும் பேச வாய்ப்பில்லை.மாலை அவர் புறப்பட வேண்டும் நெதுசுவை அழைத்து, “தம்பி ! தனியாகப் பேசவேண்டுமென்று இவ்வளவு தொலைவு வரவழைத்தேன். என்னமோ, தாட்சணியம் வந்தவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்புவதிலேயே பொழுது போய்விட்டது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையென்றால் என்னோடு அதே ரயிலில் அரக்கோணம் வரை வரலாமா? நான் தனியாகத்தான் திரும்புகிறேன். வண்டியில் பேசி முடிவு செய்யலாமா?” எனப் பெரியார் கேட்கிறார்.

இரயிலில் வழக்கம்போல மூன்றாம் வகுப்பில் பெரியாரும் நெதுசுவும்.
பேச்சைத் தொடங்குகிறார் பெரியார்.

“எஸ்.ஜி (குருசாமி) எழுதியிருந்தார். படித்ததும் மெத்த மகிழ்ச்சி. உங்ளைப் பற்றி காந்தம்மா வீட்டில் எல்லோருக்கும் நல்ல மதிப்பு”

எனப் பெண் வீட்டார் சம்மதததைச் சொல்லி பெண் வீட்டர் சார்பில் பேச்சை ஆரம்பிக்கிறார் பெரியார். முதலில் அவர் கேட்கும் கேள்வி நெதுசுவின் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என்பதுதான். சுயமரியாதை முறையில் பார்ப்பனர் இல்லாமல் நடத்தும் அந்தக் கலப்புத் திருமணத்தை இரு தரப்புப் பேற்றோர்களின் சம்மதத்துடனும் மட்டுமல்ல, இப்படியான திருமணம் எல்லோரும் அறியும்படியாகவும் நடக்க வேண்டும் என்பது பெரியாரின் முக்கிய கரிசனமாக இருப்பது உரையாடலில் விளங்குகிறது.

இசையமாட்டார்கள் என்றால் அப்புறம் எப்படி? சுற்றத்தார்களாவது வருவார்களா? ஏன் இசையமாட்டார்கள்? வேறு யாராவது பெண் பார்த்து வைத்திருக்கிறார்களா? எனக் கேள்விகளை அடுக்கி மணமகன் வீட்டு மனநிலையைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறார் பெரியார்.

அவர்கள் சம்மதம் சாத்தியமே இல்லை என நெதுசு விளக்கிய பின்னும் கூட, “நான் எவர் வழியாகவாகிலும் அவருக்குத் தூது அனுப்பிப் பார்க்கட்டுமா? பெற்றோர் இசைவு பெற்று கலப்புத் திருமணம் செய்து கொண்டால் மேலும் சிறப்பாக இருக்குமே” என்கிறார்.

அதற்கும் நெதுசு ஒப்பவில்லை. அடுத்து திருமணத்தை எப்படிச் செய்வது?. திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது பெரியார் விருப்பம். நிறையப் படித்த ஒரு முதலியார் பையன், ஒரு இசைவேளாளப் பெண்ணை புரோகிதம் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் அந்தக் காலத்தில், ஆம் 1940 ல், செய்வதென்றால் சும்மாவா? சிறப்பாகச் செய்தால்தானே கொள்கை பரவும்.
ஆனால் “காதும் காதும் வைத்தாற்போல” ஒரு பதிவுத் திருமணமாக அதிகம் பிரச்சினை இல்லாமல் முடிக்க வேண்டும் என்கிறார் நெதுசு. பெரியார் விடவில்லை,
“அக்காவின் (குஞ்சிதத்தின்) திருமணத்திற்குச் செலவு செய்ததுபோல தங்கையின் திருமணத்திற்கும் குறைந்தது ஈராயிரம் ரூபாய்களாவது நானே செலவு செய்து திருமணத்தைச் சிறப்பாகச் செய்து வைக்கிறேன். அதற்கு ஒப்புக் கொள்ளலாம் அல்லவா?” எனக் கேட்கிறார். அந்தக் காலத்தில் இரண்டாயிரம் செலவு செய்யும் திருமணம் என்றால் பெரிய நிகழ்ச்சிதான்.

11 ஆண்டுகளுக்கு முன் நடந்த குஞ்சிதத்தின் திருமணம் இயக்கத்தின் சார்பாக நடத்தி வைக்கப்பட்ட முதல் சுயமரியாதைக் கலப்புத் திருமணம். அதற்குப் பின் எத்தனையோ திருமணங்கள் அப்படி நடந்துவிட்டன. முதலியார் வகுப்பிலேயே 12 பேர் அப்படித் திருமணம் செய்துள்ளனர் என்றெல்லாம் சொல்லி, இந்தத் திருமணம் அப்படிக் காதும் காதும் வைத்தாற்போல நடத்தப்பட்டால் ஒன்றும் பாதிப்பில்லை என்கிற பொருளில் பேசி பெரியாரின் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் மாப்பிள்ளை.

சரி எத்தனை பேருக்கு அழைப்புக் கொடுக்கலாம் என ஒரு குடும்பத் தலைவனின் கரிசனத்தோடு ஒரு திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க முனைகிறார் பெரியார். ஆனால் மாப்பிள்ளையோ அழைப்பிதழும் வேண்டாம் ஒரு ஐந்தாறு நண்பர்களுக்கு நேரில் முதல்நாள் சொன்னால் போதும் என்கிறார். முன் கூட்டித் தெரிவித்தால் உறவினர்கள் பிரச்சினை செய்வர் என்கிற அச்சம் ஒரு புறம். பெற்றோர் வருந்துவார்களே , அவர்கள் மனம் குளிர ஒரு மகன் என்கிற முறையில் இதுவரை தான் எதுவும் செய்யவில்லையே என்கிற கவலை இன்னொருபுறம்.

பெரியார் புரிந்து கொள்கிறார். “சங்கடந்தான். பெற்றோரிடம் பாசம் மிகுந்திருக்கும்போது இது தவிர்க்க முடியாத பெரிய சங்கடந்தான்” எனச் சொல்லி விட்டு அவர் கேட்ட அடுத்த கேள்வியும் அதற்கு அவரே அளித்த விளக்கமும் என்னை ஒரு கணம் திகைக்கவும் என் கண்களில் நீரை வரவழைக்கவும் காரணமாகிவிட்டன.
“சரி, உங்கள் விருப்பப்படியே அழைப்புக்கூட இல்லாமல், பதிவுத் திருமணமாகவே ஏற்பாடு செய்து விடுவோம். ஒரு சிறிய யோசனை. தாலி மட்டும் கட்ட ஒப்புக் கொள்ளூங்கள்….”

இதென்ன, தாலி என்பது ஒரு அடிமைச் சின்னம் எனத் தத்துவம் பேசிய பெரியார் தாலி கட்டித் திருமணம் செய்ய ஒரு சுயமரியாதை மிக்க இளைஞனிடம் கெஞ்சுகிறார். அந்த இளைஞர் பெரியாரிடமே பெரியாரியம் பேசுகிறார்.

“அந்த அடிமை அடையாளம் எதுக்குங்க? அய்யா வழியை முழுமையாகப் பின்பற்ற நினைப்பவனுக்கு வேறு பக்கம் கைகாட்டுகிறீர்களே..” என மடக்குகிறார்.

“அந்தச் சமுதாயம் பெரிதும் ஏமாற்றப்பட்ட சமுதாயம். தாலி கட்டும் அளவு இசைந்தால் சிறிது நிறைவு இருக்கும்” – பெரியார் பணிந்து விளக்குகிறார்.

ஆம். அது இசை வேளாளச் சமூகம். பொட்டுக் கட்டும் சமூகம். தாலி மறுக்கப்பட்ட சமூகம். இங்கே நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றம் தாலியை அணிவிப்பதுதான்.
“குருசாமி திருமணத்தில் நான் சொன்னேனென்று குஞ்சிதத்துக்குத் தாலி கட்டினார். இரண்டொரு ஆண்டுக்குப் பிறகு குருசாமி கருத்துப்படி குஞ்சிதம் குருசாமி அதைக் கழற்றி வைத்துவிடவில்லையா? அதைப் போல காந்தமும் செய்துவிடலாம். திருமணத்தின்போது தாலி கட்ட இசையுங்கள்” – இறைஞ்சுகிறார் பெரியார்.

இந்த உரையாடல் நெதுசு தன் நினைவிலிருந்து எழுதியது. சில வார்த்தைகள் மறந்திருக்கலாம் அல்லது மாறியிருக்கலாம். ஆனாலும் இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடவும் இயலாது.

முந்தைய உரையாடல் வரிகளைக் கவனியுங்கள். “திருமணத்தில் நான் சொன்னேனென்று குஞ்சிதத்துக்கு தாலி கட்டினார். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் குருசாமி கருத்துப்படி குஞ்சிதம் குருசாமி அதைக் கழற்றி வைத்துவிடவில்லயா…” திருமணத்திற்கு முன் ‘குஞ்சிதம்’ எனக் குறிப்பிடும் பெரியார் திருமணத்திற்குப் பின் ‘குஞ்சிதம் குருசாமி’ எனச் சொன்னதாக நெதுசு சொல்கிறார்.
பெரியார் அப்படிச் சொல்லியும் இருக்கலாம். கணவர் பெயர் அற்றவர்கள் அவர்கள். பெற்ற குழந்தைகளுக்கும் தாய்ப் பெயர்தான் தலைப்புப் பெயர். புட்டலக்‌ஷ்மி நாகரத்தினம்மாள் என்பது போல. இங்கே பெயருக்குப் பின்னே கணவர் பெயர் கூடாது எனச் சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என நினைத்தாரோ பெரியார்?

நெதுசு வுக்குத் திரும்புவோம். அவர் பிடிவாதமாகப் பெரியாரின் வேண்டுகோளை மறுத்துவிடுகிறார். தனித் திருமணச் சட்டத்தின்படி திருமணம் நடந்தால் போதும். பெரியார் அதை நடத்தி வைக்க வேண்டும் என்பவைதான் நெதுசுவின் வேண்டுகோள்கள்.

பெரியார் அத்தோடு முடிக்கவில்லை. அந்தக் கடைசிக் கேள்வியையும் கேட்கிறார். இப்போது அவர் பெண்ணுக்கு மட்டுமல்ல மாப்பிள்ளைக்கும் தந்தை நிலையிலிருந்து திருமணத்தை நடத்தி வைப்பவர் அல்லவா?

சட்டப்படி பதிவுத் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னதாக அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிவிட்டு, தான் இன்னின்ன நாட்களில் சென்னைக்கு வருவேன் என குறிப்பு நோட்டைப் பார்த்துச் சொல்லி அவற்றில் ஒரு நாளைப் பதிவுக்குத் தேர்வு செய்யுமாறு சொன்ன பின்.

“கடைசியாக ஒன்று. பெண்ணுக்கு என்ன நகை போடலாம் என எண்ணுகிறீர்கள்?” என்கிறார் பெரியார்.

நியாயந்தானே. ஒரு பொறுப்புள்ள தந்தை கேட்கக் கூடிய கேள்விதானே. ஆனால் அந்த இளைஞனோ கொள்கை வாதி. பெரியார் என்பதைக்கூடப் பார்க்காமல் சற்றேஏ சீறுகிறான்.

“அய்யா, நான் என்னைக் கொடுப்பது போதாதா? எந்தவிதச் சிறிய நகையும் போட ஒப்பமாட்டேன். பெண் வீட்டாரிடமிருந்தும் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. புதுவேட்டி, புதுச் சேலை எதுவும் தேவையில்லை”

பெரியார் பொறுத்தருளினார் என எழுதுகிறார் நெதுசு.

“சரி. உங்கள் விருப்பம்,பெண் வீட்டாரோடு கலந்து கொண்டு, நான் குறிப்பிட்ட நாட்கள் ஒன்றில் திருமணத்தைப் பதிவிட ஏற்பாடு செய்து விடுங்கள். அதற்கு உரிய முன்னறிவிப்பை பதிவாளருக்குக் கொடுத்துவிடுங்கள்” எனப் பெரியார் முடிக்கவும் ரயில் அரக்கோணத்தை அடையவும் சரியாக இருந்ததாம்.

“தோழர்க:ள் நெ.து.சுந்தரவடிவேல் M.A., L.T அவர்களுக்கும் டி.எஸ்.காந்தம் B.Sc (Hons), M.Sc அவர்களுக்கும்” 15.10.1940 அன்று நடந்த பதிவுத் திருமணம் பற்றிய செய்தியும் 27.10. 1940 அன்று “நீதிக்கட்சித் தலைவர் தமிழ்நாட்டுப் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் தலைமையில் நடந்த பாராட்டுக் கூட்டம்” பற்றிய செய்தியும் படத்துடன் 30.10.1940 ‘குடி அரசு’ இதழில் வெளிவந்தன.

பாராட்டுக் கூட்டம் நடத்துவது என்பதில் மட்டும் பெரியார் உறுதியாக இருந்துள்ளார். ஏனெனில் அது ஒரு இயக்க நடவடிக்கையும் அல்லவா. அவர் இவர்களுக்கு மட்டுமா தந்தை? தமிழர்கள் எல்லோரின் தந்தையும் அல்லவா? இந்தச் சுயமரியாதைத் திருமணம் விளம்பரமாக வேண்டிய ஒன்றல்லவா.