நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

அ.மார்க்ஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது. எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் தொழிற்சங்கத்தினர் எனப் பலரும் பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பாரதீய ஜனதா கட்சிக்கும் அதற்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் எனப் பொதுமக்களை நோக்கி வேண்டும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது…

தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதும், அவ்வாறு வாக்களிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும் ஒரு அடிப்படை உரிமை. இன்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அவ்வாறு மக்களின் ஆதரவை நாடிப் போய்க் கொண்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான், “யாருக்கு ஓட்டளிப்பது என்கிற உங்களின் தேர்வு உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் நாங்கள் பரிந்துரைக்கவும் இல்லை. அதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மட்டும் நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம்”. – என இன்று பல்வேறு சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலியோர் இந்தியாவெங்கும் களம் இறங்கியுள்ளனர்.

இதற்குமுன் வேறெப்போதும் இப்படியான நிலை ஏற்பட்டதில்லை. இன்று ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது?

நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த முறை அவர்களைத் தோற்கடித்துவிட ஜனநாயகத்தில் வாய்ப்புள்ளது.. ஆனால் நாம் தேர்ந்தெடுப்பவர்கள் இனி தேர்தல் நடத்துவதையே சாத்தியமில்லாமல் செய்யக் கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது?

அப்படியான ஒரு சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இன்று கூட (ஏப்ரல் 06, 2019) சென்னையில் கல்வியாளர்கள், அறிவியல் அமைப்பினர் முதலானோர் ஒன்று கூடி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் “யாரைத்  தேர்ந்தெடுக்கக் கூடாது என” – என விளக்கினார்கள். வரும் ஏப்ரல் 11 அன்று அப்பட்ரியான ஒரு பிரகடனத்தைச் சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள் முன்வைக்கின்றனர்.

இப்போது தேர்தல் தேதிகள் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு மாதம் முன்பு கூட மக்கள் மத்தியில் ஒரு ஐயமும் அச்சமும் இருந்தது. புல்வாமா தாக்குதலைக் காரணமாகச் சொல்லி தேர்தலை ரத்து செய்துவிடுவார்களோ என்கிற ஐயம் இந்தியா முழுமையிலும் ஒரு பேச்சுப் பொருளாக இருந்ததை அறிவோம்.

அப்படி மக்கள் ஐயம் கொள்ளும் அளவிற்கு ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கும் எந்தக் கட்சிக்கும் இல்லாத சில “பெருமைகள்” பா.ஜ.கவுக்கு உண்டு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.முக என எந்தக் கட்சியானாலும் அவை சுயேச்சையாக இயங்குபவை. ஆனால் பா.ஜ.க அப்படியல்ல. அதைப் பின்னிருந்து ஆட்டி வைக்கும் சக்தியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இருப்பதையும், அதுவே பிரதமர் உட்பட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் யார் எனத் தீர்மானிப்பது,ம் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்தான். ஆர்.எஸ்.எஸைப் பொருத்த மட்டில் அதைத் தோற்றுவித்த தலைவர்கள், அது தோன்றிய நாளிலிருந்தே பின்னாளில் பெரும் இகழுக்கு ஆளாகி ஒழித்துக் கட்டப்பட்ட பாசிச சக்திகளுடன் மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்ததைய நாம் அறிவோம். மாரியோ காசெல்லி முதலான ஆய்வாளர்கள் இதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சட்டத்தை இவர்கள் ஏற்பதில்லை என்பதையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம நமது அரசியல் சட்டத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளிப்படையாக முயற்சிப்பதையும் நாம் அறிவோம். மோடியின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எவ்வாறு நீதிமன்றம், திட்ட ஆணையம், சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி முதலான அரசியல் சட்ட  அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அமைக்கப்பட்ட நிறுவனங்கள் (statutory bodies) எல்லாம் இவர்களால் சீரழிக்கப்பட்டன என்பதை ‘மக்கள் களம்’ இதழில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.

இன்று இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வரையில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளி வரவில்லை. பிற கட்சிகள் அனைத்தும் தத்தம் அறிக்கைகளைத் தந்துவிட்டன. சென்ற நாடாளுமன்ற்த் தேர்தலிலும், தேர்தல் தொடங்குவதற்கு முதல்நாள்தான் தேர்தல் அறிக்கையை அவர்கள் அளித்தார்கள். அதனாலேயே இப்போது தேர்தல் ஆணையம் குறைந்த பட்சம் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டுநாள் முன்னதாகவாவது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

l_440199_043358_updates

பா.ஜ.க அரசு இப்படியான சட்டபூர்வமான நிறுவனங்களை மட்டும் அல்லாமல் கல்வித்துறையில் பெரிய அளவில் தலையிட்டுள்ளதோடு பட்டியல் இனத்தவரும் இதர அடித்தள மக்களும் மேற்கல்வி படிப்பதற்குப் பல்வேறுவகைகளில் இப்போது தடையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அவர்கள் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ, சில நல்ல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பட்டியல் இனத்தவர் மீதான வன்முறைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பா.ஜ.க ஆட்சியில் நீக்கப்பட்ட 200 புள்ளி ரோஸ்டர் முறையை மீண்டும் கொண்டுவருவதாகவும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்வது குறித்த அர்சியல் சட்டத் திருத்தம் செய்வதாகவும், ‘பஞ்சமி’ மற்றும் ‘மகர்’ நிலங்களை ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றி பட்டியல் சாதியினருக்குத் திருப்பி அளிப்பதாகவும், பாடத் திட்டத்தில் பட்டியல் இன மக்களின் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடங்களைச் சேர்ப்பது எனவும், 6 முதல் 12ம் வகுப்பு வரை தரமான ஆங்கிலம் பயிலக் கூடிய நிலையைப் பட்டியல் இன மாணவர்களுக்கு உருவாக்குவதாகவும், பழங்குடி மக்களின் வன உரிமைகளை நிலைநாட்டப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும், பட்டியல் இன மகக்ளுக்கான போபால் பிரகனத்தில் முன்மொழியப்பட்ட உறுதியாக்க நடவடிக்கைகள் (affirmative action) மற்றும் ஒவ்வொரு அலுவகத்திலும் பன்மைத்துவக் குறியீடு வெளியிடுதல் முதலானவற்றைச் செயல்படுத்துவது  குறித்தும் காங்கிரஸ் அறிக்கை பேசியுள்ளது.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இதை எல்லாம் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ கொள்கை அளவிலேனும் இப்போது அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை பா.ஜ.க எவ்வளவு எரிச்சலுடனும், ஆத்திரத்துடனும் எதிர்கொள்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். “இந்தத் தேர்தல் அறிக்கையை நக்சலைட்கள், ஜிகாதிகள் (அதாவது முஸ்லிம் பயங்கரவாதிகள்) ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் தயாரித்துள்ளது” என அருண் ஜேட்லியும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் இன்று மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்து எதிர்கொண்டு உள்ளதை நாம் பார்க்கிறோம்..

ஆர்.எஸ்.எஸ் 1925 ம் ஆண்டு நாக்பூரில் தொடங்கப்பட்டது. சரியாக நூறாண்டில், அதாவது  2025 ம் ஆண்டில் இங்கே இந்துத்துவ அரசை அமைப்பது என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இது இரகசியமல்ல. வெளிப்படையாக அவர்கள் பேசி வருவதுதான். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் நடக்க உள்ளது. அதில் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க உள்ளனர் என்கிற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி தலித் மற்றும் பழங்குடியினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அவர்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள  நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதாக மாற்றி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவது, அவர்களின் நோக்கங்களில் ஒன்று. அடுத்த கட்டமாக நமது அமைப்பின் இன்னொரு முக்கிய அடையாளமாகிய மதச்சார்பின்மை என்பதை ஒழித்துக் கட்டுவது என்கிற நோக்கில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்கிற அச்சமும் ஜனநாயக உணர்வுடையோர் மத்தியில் உள்ளது. இவை வெளிப்படையாகப் பேசப்பட்டபோதும் இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த மறுப்பும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் உ.பியைச் சேர்ந்த ஒரு சங்கப் பரிவாரத் தலைவர் 2019 தேர்தல்தான் இந்தியாவில் நடக்கும் கடைசி நாடாளுமன்றத் தேர்தல் என வெளிப்படையாகப் பேசியதையும் கூட அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.

இந்த அடிப்படையில்தான் இன்று ஆங்காங்கு ஜனநாயக உணர்வுடையோர், அறிஞர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் எனப் பல தரப்பினரும் “நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்போம்” எனும் முழக்கத்தோடு மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஆம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் சங்கப் பரிவாரங்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் நாம் யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்கிற கேள்வியை இப்போது முன்வைக்க வேண்டியதாக உள்ளது.

பா.ஜ.க.வின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள்

[தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை]

பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின் கார்பொரேட்களும் ஊடகங்களும் இருந்தன என்பது ஊரறிந்த உண்மை. நேரடியான நிதி உதவிகள் தவிர அவையே களத்தில் இறங்கிக் கட்சிகளிடம் பேரம் பேசிக் கூட்டணி அமைத்தது, மாநில மொழிப் பத்திரிகைகளை விலைக்கு வாங்கியதுவரை அவை செய்யாதது ஏதுமில்லை. பா.ஜ.கவின் தேர்தல் செலவு மொத்தம் 5000 கோடி என்கின்றனர். மோடி தலைமையில் பா.ஜ.கதான் வெல்லப்போகிறது, அதைத் தவிர வேறு தேர்வே மக்களுக்கு இல்லை என ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் வந்து தட்டி எழுப்பி ஊடகங்கள் நிமிடந்தோறும் காதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளாதார வீழ்ச்சி தொடங்கி தாணே புயல்வரை காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படி எல்லாம் நடந்தது உண்மைதான் என்றாலும் பா.ஜ.கவின் வெற்றிக்கு இவை மட்டுமே காரணம் என எதிர்க் கட்சிகள் நம்பினால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

முதலில் எதிர்க்கட்சிகள் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மிகவும் ஆர்வமாக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். 66.4 சத வாக்குப் பதிவு வரலாறு காணாதது. பா.ஜ.க என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி , பார்ப்பன, சத்திரிய மேட்டுக்குடி மக்களே அதன் பின்புலம் என்பன போன்ற விமர்சனங்களுக்கும் இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் அவர்கள் இன்று வேர் பாய்ச்சி விட்டனர். இமாசலப் பிரதேசம் முதல் கர்நாடகம் வரை அவர்களின் அலை வீசியுள்ளது. மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவலை மூடி மறைக்காமல் அதையே முன்னிறுத்தி இந்த வெற்றியை அவர்கள் ஈட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோரை இணைத்து பகுஜன் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்த கான்ஷிராமுடைய அணுகல்முறை இன்று தகர்க்கப்பட்டு விட்டது. இதைத் தலை கீழாக மாற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யை மாயாவதியின் பார்ப்பனர் + சத்திரியர் + பிற்படுத்தப்பட்டோர் + பட்டியல் சாதியினர் என்கிற “வெற்றிக் கூட்டணியை” இன்று உண்மையிலேயே காரிய சாத்தியமாக்கியவர்களாக பா.ஜ.கவினரே உள்ளனர். ஆக புவியியல் ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி பரந்துபட்ட ஒரு கட்சியாக அது விசாலித்து நிற்கும் உண்மையை நாம் முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

இந்த வெற்றிக்குப் பின்னணியாக யார் இருந்துள்ளனர்? 1. முதலில் வாக்களித்த மக்கள். 55 கோடி வாக்காளர்களில் சுமார் 10 கோடிப் பேர் புதியவர்கள். உலகமயம், திறந்த பொருளாதாரம், கார்பொரேட் கலாச்சாரம் ஆகியன வேர்விட்ட பின் பிறந்த குழந்தைகள். வாக்காளர்களின் இன்னொரு பெருந் தொகுதி வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம். இவர்களுக்கு வளர்ச்சி, வளர்ச்சியின் பலன்கள் ஆகிய ஒன்று மட்டுமே இலக்கு. வரலாறு, இலக்கியம், சமூகவியல் என்பதெல்லாம் இன்று கல்வி நிலையங்களிலும் கூடப் புறக்கணிக்கக் கூடிய பாடங்கள் ஆகிவிட்டன. சமத்துவம், ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகிய அரசியல் அறங்களின் இடத்தில் இன்று ‘வல்லவன் வெல்வான்” என்கிற கார்பொரேட் அறம் கொடி கட்டிப் பறக்கிறது இந்தக் கார்பொரேட் அறத்தையே வாழ்க்கை அறமாக உள்வாங்கியுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்

இவர்களிடம் போய், “குஜராத்தில் 2002ல் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 2 லட்சம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாயினர். இதற்கெல்லாம் காரணம்…” எனத் தொடங்கினீர்களானால், “அட, இந்தக் கதையெல்லாம் யாருக்கு சார் வேணும். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது…” என்று பதிலளிப்பார்கள்.

மதிப்பீடுகள் இன்று பெரிய அளவில் மாறிவிட்டன. முந்தைய தலைமுறையினரின் அரசியல் மொழி இன்றைய தலைமுறையினரிடம் எடுபடவில்லை. பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மார்க்சீயம், சாதி ஒழிப்பு முதலிய அரசியல் மதிப்பீடுகளினிடத்தில் இப்போது மதம் சார்ந்த அறங்கள், நம்பிக்கைகள், சுய முன்னேற்றத்தை நோக்கிய விழைவு முதலியன இடம்பிடித்துக் கொண்டுள்ளன. இதை நாம் முதலில் மனங்கொள்வோம்.

இவர்களுக்கு அதிக அளவில் ஊழலற்ற, சாதித்துக் காட்டுகிற ஆட்சி வேண்டும், செயல்படும் அரசு எந்திரம் வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதியமில்லாத அளவிற்கு இந்நாடு அண்டை நாடுகள் மத்தியில் தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும். “போலீஸ் ஸ்டேஷகளில் உங்களுக்கெல்லாம் என்னுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனை மரியாதை இருந்தது, மீண்டும் லாலு ஆட்சியை நிறுவுங்கள்” என லாலு பிரசாத் யாதவ் முழங்கிய முழக்கத்தை பீஹாரிகள் நிராகரித்து விட்டனர். அவரது மனைவி, மகள் இருவருமே படு தோல்வி அடைந்துள்ளனர். குடும்பப் பெருமை வாரிசு அரசியல், ஊழல் பின்புலம் இவற்றின் மூலம் இனி மோடி, பா.ஜ.க வகை அரசியல்வாதிகளை எதிர் கொள்ள இயலாது.

திரிபுராவில் தம் பிடியைத் தக்கவைத்துக் கொண்ட மார்க்சிஸ்டுகளால் மே.வங்கத்தைத் தக்க வைக்க இயலவில்லை. அவர்களது முப்பதாண்டு கால ஆட்சி அங்குள்ள 25 சத முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற இயலவில்லை என்பதை அந்தக் “குள்ள நீதிபதி” (சச்சார்) அம்பலப் படுத்தினார். அரசாங்கத்தைக் காட்டிலும் அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஆட்சி செலுத்தி வந்த நிலையை இன்றைய தலைமுறை ஏற்கவில்லை. மக்களையும் விடக் கட்சியே சரியானது, உயர்ந்தது என்கிற அவர்களின் நூறாண்டு வரலாற்றுச் சுமையை உதறாதவரை அவர்களுக்கு விடிவில்லை.

2. பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாதகமாக்கிய இரண்டாவது தரப்பு அவர்களுக்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். மாறியுள்ள இந்த உலகச் சூழலையும் கருத்தியல் நிலையையும் அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுடன் நீதி மன்றத்தால் ஒப்பிடப்பட்ட மோடியையே அவர்கள் சர்வ வல்லமையாளனாக முன்னிறுத்தி வெற்றியையும் ஈட்டினர். தொடர்ச்சியாகவும் இறுக்கமாகவும் அமைதியாகவும் அவர்களின் பணி இந்தியத் தீபகற்பம் முழுவதும் மட்டுமல்ல அந்தமான் தீவுகள் வரைக்கும் பரவி இருந்தது. கடல் கடந்த நாடுகளிலும் அவர்கள் அமைப்புகளை உருவாக்கிப் பல்வேறு மட்டங்களிலும் செயல்பட்டனர். கல்விப் பணி தொடங்கி வெடி குண்டுத் தொழிற்சாலைகளை ஆங்காங்கு அமைப்ப்து வரைக்கும் அவர்கள் தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்பட்டனர். இராணுவம் தொடங்கி சகல துறைகளிலும் அவர்கள் ஊடுருவினர். பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோரை சிறுபான்மை மக்களிடமிருந்து பிரித்து எதிர் எதிராக நிறுத்துவதை இலக்காக்கிச் செயல்பட்டனர். இவற்றை எதிர்கொள்வதை முன்னுரிமையாக்கிச்ச் செயல்பட மதச் சார்பர்ற கட்சிகள் எதுவும் தயாராக இல்லை. மாறாக அவர்களைக் கண்டு அஞ்சவே செய்தனர்.

3. பா.ஜ.க வெற்றியின் பின்னணியாக இருந்த மூன்றாவது தரப்பினர் கார்பொரேட்கள். எப்படி மோடி என்கிற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியரை முன்னிறுத்தினாலும் பா.ஜ.க தம் நலனை விட்டுக் கொடுக்காது என உயர் சாதியினர் முழுமையாக அதற்குப் பின் நின்றனரோ, அதேபோல மன்மோகன் சிங் சோனியா ஆட்சியைக் காட்டிலும் மோடி பா.ஜ.க ஆட்சி இன்னும் வலுவாகத் தாராள மயக் கொள்கையை நிறைவேற்றும் என கார்பொரேட்கள் உறுதியாக நம்பினர். எச்ச சொச்சமாகவேனும் நேரு காலத்திய சோசலிசத் தொங்கல்கள் ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரசால் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற அம்சங்களிலும், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், விவசாய நிலங்களை அபகரித்தல் முதலான அம்சங்களிலும் உறுதியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனக் கருதினர்.

ஜனநாயக சக்திகளைக் காட்டிலும் கார்பொரேட்கள் வலதுசாரி பாசிச சக்திகளிடமே நெருக்கமாக இருப்பர். சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்திய செவ்வியல் பாசிசத்தின் போது ஹிட்லர் மற்றும் முசோலினியின் கட்சிகளும் பெரு முதலாளிகளும் ஒன்றாக இருந்தனர். இந்தியாவில் பெரு முதலாளிகள் இது நாள் வரை காங்கிரசுடன்தான் இருந்தனர். இன்று கார்பொரேட்களும் இந்துத்துவ சக்திகளும் இணைந்துல்ளனர். ஆக பாசிசம் இன்று முழுமை அடைந்துள்ளது.

இந்த எதார்த்தங்களைக் கணக்கில் எடுக்காதவரை பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிக்க இயலாது.

இன்றும் கூட 31 சத வாக்குகளைத்தான் பா.ஜ.க பெற முடிந்துள்ளது. நமது தேர்தல்முறை அவர்களுக்கு இந்த அமோக வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது. 15 சதச் சிறுபான்மையினர் அவர்களிடமிருந்து முற்றாக விலகி நிற்பது மட்டுமின்றி இந்த வெற்றியைக் கண்டு சற்றே பதற்றத்திலும் உள்ளனர். பா.ஜ.கவினருக்கு வாக்களித்தவர்கள் எல்லோருமே இந்துத்துவவாதிகள் அல்ல என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

குஜராத் 2002 ஐ அவர்கள் திருப்பிச் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் எந்தப் புதிய சக்திகள் இன்று ஆதரித்து நிற்கின்றனரோ அவர்களே வளர்ச்சி எனும் நோக்கத்திற்கு இது பொருத்தமில்லாதது என அவர்களிடமிருந்து விலக நேர்வர். மாறாக இந்துத்துவ சக்திகள் தொலை நோக்குடன் செயல்பட்டு இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறை, இராணுவம், அரசு எந்திரம் ஆகியவற்றைக் காவி மயமாக்குவதை நுணுக்கமாகவும் வேகமாகவும் செய்வர். இவர்களை ஆதரிக்கும் புதிய சக்திகள் இவற்றைக் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்டு மதச் சார்பற்ற சக்திகள் அடுத்து வரும் நாட்களில் செயல்படவேண்டும் இந்த நாட்டின் முதன்மை எதிரி மதவாத சக்திகள்தான் எனப் புரிந்து கொண்டு மதச் சார்பர்ற சக்திகள் ஓரணியில் திரள்வதும், மதச்சார்பு நடவடிக்கைகளையும் ஊடுருவல்களையும் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதும் இன்றைய உடனடித் தேவை. இன்னொரு பக்கம் பழைய மொழி, பழைய அணுகல் முறை, பழைய வடிவம் ஆகியவற்றையும் இவர்கள் உதறத் தயாராக வேண்டும்.

இல்லையேல் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல அவர்களுக்கும் எதிர்காலமில்லை.

இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?

பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்கள் என்கிற எல்லையையும் தாண்டி அஸ்ஸாம் முதலான வட கிழக்கு மாநிலத்திலும் முதன் முதலில் வலுவாகக் கால் பதித்துள்ளனர். இமாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகம் வரையிலும் பரவலாகப் பா.ஜ.கவின் வெற்றி அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி சகல தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் ஆகியோரைக் குறி வைத்து அவர்கள் இம்முறை வேலை செய்தனர். மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்கிற அடையாளத்தை அழுத்தம் கொடுத்து முன்னிறுத்தினர். அவரும் தான் பிற்படுத்தப்பட்டவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்வதால் முற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகள் தமக்கு வராமற் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கும் இல்லை, அவருடைய கட்சிக்கும் இல்லை. ஏனெனில் தங்களின் கட்சி அது எனவும் தங்களின் நலனை அது விட்டுக்கொடுக்காது எனவும் உறுதியான நம்பிக்கை இங்குள்ள உயர் சாதியினருக்கு பா.ஜ.க மீது எப்போதும் உண்டு.

ஆக புவியியல் அடிப்படையிலும் சாதி, மொழி, இன அடிப்படையிலும் பரவலான ஆதரவுடன் பா.ஜ.கவின் வெற்றி இன்று அமைந்துள்ளது.

காங்கிரஸ் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் படு தோல்வி அடைந்துள்ளன. தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் அவர்களின் இருப்பே இல்லாமற் போய்விட்டது. கங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளும் அடித்த புயலில் அடையாளம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த நாடாளுமன்றத்தில் ஒரே ஒருஉறுப்பினர்தான். அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை அது ஏற்கனவே இழந்தாயிற்று, வாக்கு எந்திரத்தில் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை (நோடா) என்கிற பொத்தானை எழுத்தியவர்களின் எண்னிக்கையைக் காட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தன் அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை இழக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே அவர்களால் பெற முடிந்துள்ளது. மே.வங்கத்தில் அவர்களுக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான், பா.ஜ.கவிற்கும் இரண்டு உறுப்பினர்கள்தான். முக்கிய மூன்று மாநிலக் கட்சிகள் அதிக வெற்றிகளைக் குவித்துள்ளன. அ.தி.மு.க, திருனாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முதலியன இதில் அடக்கம். ஆந்திரம் உடைந்து உருவான இரு மாநிலங்களிலும் கூட மாநிலக் கட்சிகளே முதன்மை பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயரும்; டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பர் என ஆருடம் சொல்லியவர்களும் ஏமார்ந்து போயுள்ளனர். இதில் மிகவும் ஏமார்ந்து போனவர் ஜெயலலிதாதான். வரலாறு காணாத வெற்றியை அவர் குவித்துள்ள போதும் அந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. டெல்லியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு, 40 சீட்களுடன் தான் பிரதமர் ஆவது என்கிற கனவை அவர் வெளிப்படையாக முன்வைத்து வந்தவர்தான். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் “பாரதப் பிரதமர்” என்றே அவரது கட்சிக்காரர்கள அவரை விளம்பரப் படுத்தினர். அவர் அதைக் கண்டித்ததில்லை. இன்று அந்தக் கனவு பொய்த்துப் போய்விட்ட ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிகிறது.

ஆனாலும் வாக்கு வீதத்தைப் பொறுத்த மட்டில் பா.ஜ.க காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து (31 + 19.3) மொத்தம் 50 சத வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஒரு நாலு சதம் எனக் கொண்டால் மீதம் 46 சத வாக்குகளை மாநிலக் கட்சிகள்தான் பெற்றுள்ளன, ஆனால் இந்தியத் தேர்தல் முறையில் (First Past the Post System) வாக்கு வீதமும் வெற்றி வீதமும் ஒன்றாக இருப்பதில்லை. 3.3 சத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க 37 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அதே அளவு வாக்கு வீதம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது வெறும் 9 உறுப்பினர்கள்தான். 31 சத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 278 இடங்களையும் 19.3 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றிருப்பதும் கூட இந்தத் தேர்தல் முறையின் அபத்தந்தான். அதனால்தான் தேர்தல் சீர்திருத்தத்தை வேண்டுவோர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையைத் முன்வைக்கின்றனர்.

பா.ஜ.கவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இருந்தது ஊரறிந்த இரகசியம். ஒரு கணிப்பின் படி மோடியை முன்நிறுத்தி பா.ஜ.க இம்முறை செய்த செலவு 500 கோடி ரூபாய். ஒபாமா சென்ற தேர்தலில் செலவிட்ட மொத்த தொகையே 600 கோடிதான்.

ஆனாலும் இப்படித்தான் பா.ஜ.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நான் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பித்தான் பா.ஜ.கவையும் மோடியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் மீது கடுமையான ஒரு வெறுப்பை ஊடகங்கள் வெற்றிகரமாகக் கட்டமைத்திருந்தன. ஊழல், செயலின்மை, உறுதியற்ற தன்மை, பொருளாதாரச் சரிவு எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் ஆட்சியே காரணம் என மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சில முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதெல்லாம் மக்களின் கவனத்தில் ஏறவில்லை.

காங்கிரசை வெறுக்க உண்மையில் வேறு பல நியாயமான அடிப்படைகள் இருந்தன. அயலுறவில் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவை மேற்கொண்டது, பொருளாதாரத்தைத் திறந்து விட்டது…இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் இதற்காக வெறுக்கப்படவோ தோற்கடிக்கப்படவோ இல்லை. இந்த அம்சங்களில் காங்கிரசை விடத் தீவிரமான அணுகல்முறைகளை உடைய பா.ஜ.கவைத்தான் இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் மக்கள் உற்சாகமாகப் பங்கு பெற்றனர், 63.8 சத வாக்குப் பதிவு என்பது வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வாக்களித்த 550 மில்லியன் பேர்களில் 100 மில்லியன் பேர் புதிய தலைமுறையினர். உலகமயச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். “வளர்ச்சி” என்கிற முழக்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகக் கொண்டாடினர். அவர்களுக்குப் பாசிசம் அல்லது கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. குஜராத் 2002 என்பதெல்லாம், அதில் மோடியின் பங்கு என்பதெல்லாம் அவர்களது கவனத்தில் படியாத ஒன்று.

அப்புறம் உலக மயச் சூழலில் ஊதிப் பெருத்துள்ள மத்திய தர வர்க்கம். இதனுடைய ஆதரவும் பா.ஜ.க அரசியலுக்குத்தான், இந்து நாளிதழின் வித்யா சுப்பிரமணியம் இந்தி பேசும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பலரையும் சந்தித்து அவர்களின் மனநிலையை எழுதியிருந்தார், வித்யா சந்தித்தவர்களில் ஒருவர் ராம் அஷ்ரேய். மோடியை அவர் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.

“எல்லையில் நமது படை வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தக்க வலிமையான பிரதமர் நமக்கு வேண்டும்…”

அவர் எதைச் சொல்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எல்லையில் பாக் மற்றும் சீன இராணுவங்களின் அத்துமீறல்கள் குறித்த பிரச்சினையைச் சொல்கிறார்.

இந்தப் பிரச்சினைகளை நான் அதே காலகட்டத்தில் மிக விரிவாக ஆராய்ந்து இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினையில் பொறுமையாகவும், அயலுறவு நெறிமுறைகளின்படியும், அற அடிப்படையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களின் நோக்கிலும் மிகச் சரியாக நடந்து கொண்டது காங்கிரஸ் அரசு. குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனியின் பண்பான அணுகல்முறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் அது நமது பலவீனத்தின் அடையாளம்; இந்திய அரசு “உறுதியான” ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் அன்றைய நிலைபாடு. அந்த நிலைப்பாடும் மத்திய தர வர்க்கத்தின் மனநிலையும் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது.

ஆக உறுதியான, வளர்ச்சியை முன்நிறுத்தக்கூடிய ஒரு அரசை பா.ஜ.கவும் மோடியும் சாதிப்பர் என்கிற நம்பிக்கையோடு மக்கள் விருப்பபூர்வமாக இந்தத் தேர்வைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. தேர்தலில் மக்களின் உற்சாகமான பங்கேற்பும் இதை உறுதி செய்கிறது.

இந்தத் தேர்வைச் செய்த எல்லோரும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலையோ, திட்டங்களையோ, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்படும் இந்த அம்சங்களையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தொடக்கத்தில் ஒரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் போலப் பேசிய மோடியும், பா.ஜ.கவும் போகப் போக வெளிப்படையான இந்துத்துவ அரசியலைப் பேசினர். ராமனின் பெயரால் சூளுறைத்தனர்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பொறுத்த மட்டில், இந்துத்துவக் கருத்துக்களுக்காக மோடியை ஆதரிக்காதவர்களும் கூட, அவரது பிந்தைய தீவிரமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்காகக் கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் உள்ளதுதான் பிரச்சினை.

மோடியையும் காங்கிரசையும் இன்று ஆதரித்து வாக்களித்துள்ளவர்கள் 30 சதம்பேர். ஆதரவு சக்திகளையும் சேர்த்துக் கொண்டால் 40 சதம் பேர். ஆனால் இதே அளவும் இதை விட அதிகமாகவும் மோடியையும் பாஜக அரசியலையும் ஏற்காதவர்களும் உளர். குறிப்பாக 180 மில்லியன் முஸ்லிம்களில் 99 சதம் பேர் மோடியை எக்காரணம் கொண்டும் ஏற்காதவர்கள். இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். இவர்கள் மனத்தில் இன்றொரு அச்சமும் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதே உண்மை. இத்தகைய அச்சம் ஒரு ஜனநாயக ஆளுகைக்குப் பொருந்தாத ஒன்று.

இதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பா.ஜ.கவை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது குறித்துக் கவலைப் படுவதாக இல்லை. இப்போதே அவர்கள் தங்களின் ‘அஜெண்டா”வை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

இறுதியாகத் தமிழகச் சூழல் குறித்து ஒரு சொல்.மோடி அலை வீசாத இரு மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மற்றது கேரளம். இங்கே அந்தக் கூட்டணியின் சார்பாக வென்றவர்கள் இருவரும் மோடி அலை இல்லவிட்டாலும் இங்கு வெல்லக் கூடியவர்களே. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியில் பிளவு பட்ட ஒரு மாநிலம், இங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவினர். தற்போது வெற்றி பெர்ற பா.ஜ.க வேட்பாளர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றவர். தருமபுரியில் வென்ற அன்புமணியைப் பொருத்த மட்டில் அப்பட்டமான சாதி அரசியலின் வெற்றி அது.

மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும் என்றெல்லாம வாக்களித்த வைகோ இன்று படு தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் 12ல் தம் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினை குறித்து வாய்திறக்காதவை இரண்டே இரண்டு கட்சிகள்தான். அவை பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும். ஈழப் பிரச்சினைக்காகத்தான் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தேன் எனச் சொல்லிய வைகோவிற்கு இது கடை வரையில் தரும சங்கடந்தான். ஆம் ஆத்மி கட்சி இங்கு படு தோல்வி அடந்துள்ளது. இந்திய அளவிலும் அது 4 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

ஈழப் போராட்டத்தை முழுமையாகத் தொடக்கம் முதல் ஆதரித்து வந்த நெடுமாறன் அவர்கள் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக்கும் பா.ஜ,கவிற்கும் அணுகல் முறைகளில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.

இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலும் இந்தியா காக்கும் மௌனமும்

இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் ஏற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில் 193 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ குறி தவறி நடந்த தாக்குதல்கள்அல்ல. இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே சொல்லிச் செய்கின்றனர். “காஸாவைக்கற்கால நிலைமைக்குக் கொண்டு செல்வோம்” “அனைத்து சக்தியையும் திடிரட்டி அழிப்போம்”என்றெல்லாம் சூளுரைக்கின்றனர்.

மூன்று இஸ்ரேலியஇளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என்று பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ள போதும்இஸ்ரேல் அவர்கள்தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது.றது.ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள்தொடர்கின்றன.

பலஸ்தீனியர்களின்ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான்கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன்வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனதுஇரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் போர்நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒருகாரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்தப் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.தமக்குள் எதிர்எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில்ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ளஇயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.

மூன்று இஸ்ரேலியஇளைஞர்கள் கொல்லப்பட்டததற்கு “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச்சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும்பேசியதில்லை.

பலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.

இன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை”வகித்துக் கொலைக்குத் துணை போகிறது.

குடிமக்களாகியநாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.

குறிப்பு 1 : இந்துத்துவ அமைப்புகள் யூத ஆதரவு மேற்கொள்வதுஎன்பதையும், யூத அமைப்புகளுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தொடர்புகளைப் பேணுவது என்பதையும் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன. ஜனதா ஆட்சியின் போது அதில் ஓர் அங்கமாக இருந்தபாரதிய ஜனசங் தலைவர்களை இஸ்ரேலின் முன்னாள் தளபதி ஒற்றைக் கண் மேஷே தயான் இரகசியமாகவந்து சந்தித்துச் சென்ற கதை ஒன்றுண்டு.

2. சென்ற பா.ஜ.க தலைமையிலான ஆட்சியின்போது பொகாரனில் அணு குண்டுசோதனை நடத்திய கையோடு அன்றைய துணைப் பிரதமர் அத்வானி, இனி அயலுறவில் அறத்திற்கு இடமில்லை,”எதார்த்த அரசியலுக்கே (Real Politic) இனி இடமுண்டு” என்றது நினைவுக்குரியது.

3. பலஸ்தீனியத் தலைவர் யாசிர் அராபத் இறந்தபோது வரலாறு காணாத அளவில் உலகத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். போகாத ஒரு முக்கிய தலைவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்.

“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் உறுதியாகத் தங்களின் இந்துத்துவச் செயல் திட்டத்தைக் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். காஷ்மீருக்கான (ஏட்டில் மட்டுமே உள்ள) சிறப்புரிமைகளை நீக்குவது, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மை நிலைக்கு முடிவு கட்டுவது முதலான அம்சங்களில் முதலில் நூல் விட்டுப் பார்த்தார்கள்.

அப்புறம் இந்தி மொழியை நடைமுறை ஆட்சி மொழியாக்குகிற வேலையைக் தொடங்கிப் பார்த்தார்கள். வழக்கத்துக்கு மாறாக நரேந்திர மோடி தன் பதவி ஏற்பு உறுதிமொழியை இந்தியில் ஒலித்தார். வெளி நாட்டுப் பிரமுகர்களுடன் இந்தியில் பேசுவது என்கிற நிலை எடுத்தார். பூடான் நாடாளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றினார். அதிகாரிகள் கோப்புக் குறிப்புகளை இந்தியில் எழுத அறிவுறுத்தப்பட்டது; அதிகமாக இந்தியைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்குப் பரிசளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டது.

அடுத்து கல்வித் துறையில் அவர்கள் கவனம் குவிப்பார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். கல்வித் துறை, குறிப்பாக வரலாறு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த நிறுவனங்களை இந்துத்துவ மயமாக்குவது என்பது அவர்களின் பிரதான செயல்பாடுகளில் ஒன்று. வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் மத்தியில் வரலாறு குறித்தத் தவறான புரிதல்களை உருவாக்குவது அவர்களுக்கு அவசியமானது.

சென்ற முறை நாடாள வாய்ப்புக் கிடைத்தபோது அவர்கள் இந்ததுறையில் செய்த சில மாற்றங்களை நினைவுகூர்வோம்.

முதலில் கல்வி சார்ந்த உயராய்வு நிறுவனங்களில் பணியாற்றிய தகுதி மிக்க அறிஞர்களை நீக்கி அந்த இடங்களை தகுதியற்ற இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பினர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு (ICHR)) பி.ஆர். குரோவர், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு (ICSSR) பி.எல். சோந்தி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கு (NCERT) ஜே.எஸ்.ராஜ்புட் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப் பட்டனர். வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றிய 18 தகுதிமிக்க அறிஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவை நாடெங்கிலும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்குள்ளாகியது.

இவர்களின் முக்கிய தகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதே. எடுத்துக்காட்டாக சோந்தி பாரதீய ஜனசங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். குரோவர் தன் துறையில் எந்தச் சாதனைகளையும் செய்யாதவர். எந்த ஆதாரங்களும் இன்றி பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் எனவும், 1992ல் மசூதி (தானாக) இடிந்து விழுந்தது எனவும் எழுதியவர்.

NCERT அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் அமர்த்தப்பட்ட கே.ஜி.ரஸ்தோகி என்பவரின் நியமனம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட அவரது சுய சரிதை 1998ல் வெளிவந்தது.. முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ் ‘பிரச்சாரக்’ ஆக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார். அதில் ஒரு சம்பவம்:

புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி. இனி அவரது சொற்களில்:

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)

#############
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆண்டுதோறும் குரு தட்சணை செலுத்தும் விசுவாசிகளில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி (வாஜ்பேயி அமைச்சரவையின் கல்வி அமைச்சர்) பதவி ஏற்ற கையோடு மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் வழிகாட்டி உரை நிகழ்த்த அழைக்கப்பட்டவர் சிட்லாங்கியா என்ற ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய ஒரு தொழிலதிபர். அவ் அமைப்பின் கல்விக் குழுவான வித்யா பாரதி என்கிற அமைப்பில் வாசித்து ஒப்புதல் பெற்ற ஒரு இந்துத்துவக் கல்வித் திட்டத்தை அவர் வாசிக்க முனைந்தபோது தேசிய ஜனநாயக்க் கூட்டணியச் சாராத கல்வி அமைச்சர்கள் வெளி நடப்புச் செய்தனர். அந்த உரையை ரத்து செய்வது தவிர ஜோஷிக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று.

பல்கலைக் கழகங்களில் ஜோதிடம், வேதக் கல்வி, மதிப்பீட்டுக்கல்வி என்கிற பெயரில் மதவாதம் ஆகியவற்றைப் பாடங்களாக்கவும், பட்ட வகுப்புகளாகவும் ஆக்குகிற பணியை ஜோஷி தொடங்கிய போது மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன.

#########

திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளும், எழுதியவர்களின் தகுதிக் குறைவால் ஏற்பட்ட பிழைகளும் மலிந்த வரலாற்றுப் பாட நூல்களை NCERT நிறுவனம் மூலம் வெளியிட்ட போது நாடெங்கிலும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. அந்தத் திரிபுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திப் பல மொழிகளிலும் நூல்கள் எழுதப்பட்டன. தமிழிலும் அப்படி ஒரு நூல் எழுதப்பட்டதோடு (‘பாட நூல்களில் பாசிசம்’) முன்னாள் துணை வேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், பேரா.ஜவாஹிருல்லாஹ், NCERT அமைப்பின் முன்னாள் தலைவர் அர்ஜுன் தேவ் ஆகியோர் பங்குபெற்ற மாநாடொன்றும் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த வரலாற்றுத் திரிபுகளுக்கும் கல்வித்துறையை இந்துத்துவமயமாக்கும் முயற்சிக்கும் எதிராக சென்னையில் ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதில் நான், முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், டாக்டர் சிவகுமார், திருமாவளவன், எம்.எஃப்.கான் முதலான பேராசிரியர்கள் தவிர சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ் முதலான கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றது குறிப்பிடத் தக்கது.

சென்னை மட்டுமின்றி மதுரை, குற்றாலம், திண்டுக்கல், வாணியம்பாடி முதலான இடங்களிலும் ஆசிரியர்கள் மத்தியில் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிராகக் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவற்றில் முன்னாள் துணைவேந்தர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.

###############

இதே நேரத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் சில ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாகக் காட்டும் முயற்சியை மேற்கொண்டனர். மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த நாடோடி ஆரியர்களையும், அவர்கள் தம்மோடு கொணர்ந்த பூர்வ சமஸ்கிருத மொழி, குதிரை, சக்கர வாகனம் ஆகியவற்றை இவற்றோடு எள்ளளவும் தொடர்பற்ற சிந்து வெளியுடன் இணைக்க வேண்டிய தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்தது. இந்த நாட்டை ‘ஆரியவர்த்தம்’ எனவும், சமஸ்கிருதத்தை ‘மொழிகளின் தாய்’, ‘தேவ பாஷா’ என்றெல்லாமும் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அவர்களுக்கு இவை எதுவும் இந்த மண்ணுக்கு உரியவை அல்ல, மத்திய ஆசியாவிலிருந்து வந்தவை என்பது இன்றளவும் எரிச்சலூட்டும் உண்மைகள். தவிரவும் அவர்களால் ‘மிலேச்சர்’களாக அடையாளம் காணப்பட்ட உள் நாட்டு நாகரிகம் ஒன்று ஆரிய வருகைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே சிந்து வெளியில் ஓங்கியிருந்தது என்கிற வரலாறும் அவர்களைப் பொருத்த மட்டில் தொண்டையில் சிக்கிய ஒரு முள்.
3000 ஆண்டுகளுக்கு முன் நாடோடிகளாக வந்து கங்கைச் சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகளுடன் கலந்து இந்த மண்ணுக்கு உரியவர்களாகவே மாறிப்போன ஆரிய வம்சாவளியினரை மிலேச்சர்களாகவோ, அந்நியர்களாகவோ காணும் அரசியலோ பண்பாடோ நமக்குக் கிடையாது. ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்றவர்களை அந்நியர்களாகக் காட்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு ஆரியமும் பூர்வ சமஸ்கிருதமும் வெளி நாட்டுச் சரக்குகள் என்கிற உண்மைகள் தொண்டையில் சிக்கிய முள்தானே.

எனவே அவர்கள் சிந்துவெளி நாகரிகம் அழிந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் கங்கைச் சமவெளியில் உருவான வேதங்களும், குடியமர்ந்த ஆரியர்களும், ‘மொழிகளின் தாய்’ ‘தேவ பாஷா’ என்றெல்லாம் கொண்டாடப்படும் சமஸ்கிருதமும், ஆரியர்கள் கொண்டு வந்த குதிரைகளும், சக்கர வாகனங்களும் சிந்து வெளியிலேயே இருந்ததாக “நிறுவ” வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

அதை எப்படிச் செய்வது? இதுகாறும் அஸ்கோ பர்போலா போன்ற இத்துறை வல்லுனர்களாலும் கூட வாசிக்க இயலாத சிந்துவெளி முத்திரைகளை தாம் வாசித்துவிட்டதாகவும், அவற்றில் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லிவிடலாம். இந்த ‘ஐடியாவை’ உடனடியாகச் செயல்படுத்தினர் அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு என்.ஆர்.ஐ இந்திய ‘ஃப்ராடுகள்’. கடல் கடந்த இந்துத்துவர்களான இவர்களை நான் எத்தர்கள் எனச் சொல்வது கோபத்தால் அல்ல. இவர்கள் செய்தது ஃப்ராட் என்பதை மிஷேல் விட்ஸெல், ஸ்டீவ் ஃபெர்மர் என்கிற இத்துறை வல்லுனர்கள் விரிவான ஆய்வொன்றின் மூலம் நிறுவினர் (பார்க்க: அ.மார்க்ஸ், ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு மற்றும் http://www.safarmer.com/fsw2.pdf).
இது நிற்க. இந்துத்துவவாதிகளும் களத்தில் இறங்கினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சர் சி.பி இராமசாமி அய்யர் நிறுவனம் இந்தப் “புதிய கண்டுபிடிப்புகளை” விளக்கி வரலாற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றைத் தம் அலுவலகத்தில் நடத்தினர். இதைக் கேள்விப்பட்ட எங்கள் குழு இவற்றை அமபலப்படுத்தி இரவோடு இரவாக ஒரு நான்கு பக்க அறிக்கை தயார் செய்து அடுத்த நாள் காலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு முன் சாலையில் நின்று பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களிடம் விநியோகித்தது. அமைதியாக விநியோகித்துக் கொண்டிருந்த கருப்புப் பிரதி நீலகண்டன், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் செயல்படும் தோழர் நட்ராஜ் ஆகியோரை அந் நிறுவனத்தினர் உள்ளே இழுத்து, ஒரு அறியில் பூட்டி வைத்துப் போலீசில் ஒப்படைத்தனர். செய்தி அறிந்து நான், பேரா.எம்.எஃப்.கான், ‘தீக்கதிர்’ நாளிதழ் உதவி ஆசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோர் தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று ஒரு நாள் முழுக்க வாதாடி அவர்களை வழக்கில்லாமல் வெளியே கொணர்ந்தோம்.

இந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வது இந்தத் தருணத்தில் அவசியம் என்பதால் இவற்றைச் சொல்ல வேண்டி நேர்கிறது.

########

இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. சென்ற வாரத்தில் இரு நிகழ்வுகள்.

1.இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் இப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ராணி, எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் என்பவரை நியமித்துள்ளார். தகுதியற்ற நபர் என வலாற்றறிஞர் ரொமிலா தப்பார் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.

சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு – ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார். இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாக வரலாற்றில் செயல்பட்டு வந்துள்ளது எனவும் இது குறித்து எந்தத் தரப்பினரிடமிருந்தும் எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லை எனவும் அக் கட்டுரையில் அவர் கூறுகிறார். வரலாற்றறிஞர் டி.என்.ஜா இதுபற்றி அடித்துள்ள ‘கமென்ட்’: “அவருக்குத் தெரியாது போல. .அந்த ‘சிஸ்டம்’ இப்பொழுது இருந்தால் மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென.”

2. சி.பி.எஸ்.சி அமைப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் எனத் தனது 15,000 பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதற்குச் சொல்லப்பட்டுள்ள காரணங்களில் ஒன்று “சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” என்பது. இன்னொரு காரணம் அதுதான் இந்திய வரலாற்றுடன் பிணைந்துள்ள மொழியாம்.

இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்தே கிளைத்தன எனவும், அது தேவ பாஷை எனவும் மற்றவை நீச பாஷை எனவும் இங்கு பார்ப்பனர்கள் சொல்லி வந்ததற்கு ஆப்பு வைத்தது சென்ற நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட இரு மொழி இயற் கண்டுபிடிப்புகள், சர் வில்லியம் ஜோன்ஸ், ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், பிஷப் கால்டுவெல் ஆகியோரின் மொழி இயல் ஆய்வுகள்தான் அவை. பூர்வ சமஸ்கிருதத்தின் தோற்றத்தை இந்திய மண்ணைக் காட்டிலும் இந்தியாவுக்கு வெளியில்தான் காண வெண்டுமென நிறுவினார் ஜோன்ஸ் (1786). ஐரோப்பிய மொழிகளான கோதிக், செல்டிக், இதாலி, பிரெஞ்சு முதலான மொழிகளுடனேயே அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். பூர்வ சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் மொழிகளில் எல்லோரும் அறிந்த முக்கிய மொழிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை. சமஸ்கிருதம், இந்தி, பாலி, பிராகிருதம் முதலான மொழிகள் “இந்தோ ஆரிய” மொழிக் குடும்பத்தச் சார்ந்தவை, அவற்றிற்கும் இந்தியாவில் நிலவும் இன்னொரு மொழிக் குடும்பமான திராவிட மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஆரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலான மொழிகளுக்கிடையேயான ஒப்புமையை முதன் முதலில் ஆய்வுரையாகத் தந்தவர் சென்னைக் கோட்டையில் பணியாற்றிய ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் எனும் ஆங்கில அதிகாரி (1816). பின் அதை ராபெர்ட் கால்டுவெல் விரிவாக்கினார் (1856).

இவை இன்று மொழியியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகள். உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. ஆக சமஸ்கிருதம் எந்த வகையிலும் “மொழிகளின் தாய்”, அல்லது குறைந்தபட்சம் “இதிய மொழிகளின் தாய்” என அழைக்கப்படுவதற்குத் தகுதி உடையதல்ல. அவ்வாறு சொல்வது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, தமிழ் போன்ற தனித்துவமும், நீண்ட வரலாறும், ஏராளமான இலக்கியச் செல்வங்களும் உள்ள மொழிகளை இழிவு செய்வதும் கூட

ஆனால் பா.ஜ.க அரசு இதைத் தவறுதலாகச் செய்துவிடவில்லை. திட்டமிட்டுத்தான் செய்கின்றனர். சென்ற ஆட்சியிலும் 1999-2000 ஆண்டு சமஸ்கிருத ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம் சமஸ்கிருத வாரமாக அனுசரிக்கப்பட்டது. 2001ம் ஆண்டில் மாபெரும் சமஸ்கிருத மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வாஜ்பேயி, ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுக்களில் சமஸ்கிருதம் தொடர்பான அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. சுருக்கம் கருதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இந்துத்துவமும் சமஸ்கிருதமும் பிரிக்க இயலாத ஒன்று, இந்துத்துவத்தை நிலைநாட்ட சமஸ்கிருத மேன்மையை நிறுவவேண்டும் என்பதே அப் பேச்சுக்களின் சாரம்.

வழக்கிழந்த சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்ப்பித்து “அன்றாட பேச்சு மொழி” யாக ஆக்க இயலாவிட்டாலும் மக்கள் மனத்தில் “மொழிகளின் தாய்” ஆக நிறுவி விவது அவர்களின் பெரு விறுப்பு. 2004ல் ஆட்சி மாறியதன் விளைவாக அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை.

இன்று அவர்கள் ஆவேசமாகக் களமிரங்கியுள்ளனர்.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.