“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

தமிழ்த் தேசியத்தின் இன்றைய வெளிப்பாடு

[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது.]

Siva Kumar ஐயா, தமிழ், தமிழ் தேசியம், 100 ஆண்டுகளாக வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் சமீபஆண்டுகளில் தான் இவ்வெறுப்பு அரசியல் துளிர்விடுகிறது, அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?

Marx Anthonisamy 1. ஒரு நூற்றாண்டாக வேரோடியுள்ள தமிழ்த் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உடையது இது. வட மொழி ஆதிக்கம், பார்ப்பன மயமாக்கல் ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தது அது. அது கூறிய வடவர் ஆதிக்கம் என்பது இன வெறுப்பின் அடிப்படையிலானதல்ல. மாறாக வட நாட்டு பண முதலைகள் மற்றும் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தது அது. அது என்னாளும் வடநாட்டிலிருந்து இங்கு வந்து எளிய தொழில்களைச் செய்து பிழைப்பு நடத்திவந்த தொழிலாளிகளையோ இல்லை 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து தம் மூதாதையர் மண்ணில் வேரிழந்த மக்களையோ எதிரியாகக் கட்டமைத்ததில்லை. அது என்றைக்கும் இங்குள்ள அருந்ததிய மக்களை, அவர்கள் தெலுங்கு பேசுகின்றனர் என்பதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கலாகாது எனச் சொன்னதில்லை. பெரியாரை தமிழின விரோதி எனச் சொல்லத் துணிந்ததில்லை. இன வெறுப்பு அரசியலைச் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தில் கொண்டதில்லை. மதிப்பிற்குரிய பெருஞ்சித்திரனார் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (பார்க்க: நான் எழுதிய ‘பெரியாரைத் துணைக் கொண்டவர்’ எனும் கட்டுரை).

2. தமிழ்த் தேசியத்தில் இரு போக்குகள் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த இரண்டாவது போக்கை உருவாக்கி முன்னெடுத்ததில் ம.பொ.சி, பெங்களூரு குணா போன்றோருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பைத் தணித்தனர். மாறாக தமிழகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களை எதிரியாக்கினர். இவர்களுக்கு இன்றளவும் பார்ப்பன ஆதரவு உண்டு, எல்லா மட்டங்களிலும் உண்டு. ஆனாலும் இவர்களுங்கூட எந்நாளும் பாசிச அரசியல் யுத்திகளைக் கையில் எடுத்ததில்லை.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பாக 1940 – 80 காலகட்டம் உலகெங்கிலும் பாசிசம் பின்னடைந்த காலம். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் பாசிசம் புத்துயிர்ப்புக் கொண்ட சூழலில் தற்போது உருவாகியுள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் (இதனைத் தமிழ்த் தேசியத்தின் மூன்றாவது கட்டம் எனலாம்), உலகளாவிய இந்தப் பாசிசச் சூழலின் ‘மாடலி’ல் இங்கு இன்று தம்மைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் நேரடியாக சிவசேனா முதலான பாசிச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மார்க்சீய வெறுப்பு மட்டுமல்ல அது முன்னெடுத்த வரலாற்று ஆய்வுகளில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்கின்றனர். சிவசேனா கட்சிக்கும் மோடிக்கும் பிராச்சாரத்திற்கு அம்மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

பெருஞ்சித்திரனார் அவர்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் மோடியை ஆதரிப்பார் எனக் கற்பனை கூடச் செய்ய இயலாது. ராஜராஜ சோழன் போன்றோரின் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ப் பொற்காலம் என நாக்கூசாமல் இன்று இவர்கள் சொல்வது போல அவர் சொல்லியிருக்க மாட்டார். பார்ப்பனமயமாக்கல் மட்டுமல்ல சமஸ்கிருத மயமாக்கலிலும் பிற்காலச் சோழ மன்னர்களுக்கு முக்கிய பங்குண்டு. கட்டாயமாகப் பெண்கள் கொண்டுவரப்பட்டு இங்கே கோவில்களில் தேவரடியார்கள் ஆக்கப்பட்டதை எல்லாம் தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனச் சொல்கிற அளவிற்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்கிறதே, தஞ்சைப் பிருகதீஸ்வரப் பெருவுடையார் கோவிலின் ‘கும்பாபிஷேக’ ஆயிரமாண்டுக் கொண்டாட்டத்திற்குச் சிறப்பு மலர் வெளியிடுகிறதே இந்தக் கொடுமைகளை எல்லாம் பெருஞ்சித்திரனார் போன்றோர் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு என்றெல்லாம் தமிழின் பெயரால் சாதிகளை அங்கீகரிக்கும் இழி நிலைக்கும் சென்றிருக்க மாட்டார்கள். தோழர் தமிழரசன் போன்றோரையும் நாம் இவ்வரிசையில்தான் வைத்துக் காண இயலும்.

ஒருவேளை இன்று ம.பொ.சி இருந்திருந்தால் அதைச் செய்திருக்கக்கூடும். சங்கராச்சாரிகளைப் போற்றத் தயங்காதவர் அவர். இந்து மாநாடொன்றில் கலந்து கொண்டு தமிழ் அடையாளத்தைக் காட்டிலும் இந்து அடையாளம் இன்னும் விசாலமானது எனப் பேசியவர் அவர். பெங்களூரு குணாவும் அதைச் செய்திருக்கக் கூடும். தமிழர்களின் காணியாட்சி என சோழர் கால நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைக் கொண்டாடியவர்களில் ஒருவர் அவர். மராட்டியராம் அம்பேத்கரை இங்குள்ள தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுகின்றனரே என நொந்தவர் அவர். அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றவர் அவர்.

குறைந்த ஊதியத்தில் உழைத்துப் பிழைக்க வந்து, எந்த விதப் பணியிடப் பாதுகாப்பும் இல்லாமல் இங்குள்ள ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் இந்தப் பிழைக்க வந்த அப்பாவிகளை அடித்துத் துரத்த வேண்டும் எனச் சொல்கிற பாசிச அரசியலுக்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்வதை நீங்கள் இந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ்த் தேசியத்தை ஒற்றைப் போக்குடையதாகக் கருத வேண்டியதில்லை.அதில் பலபோக்குகள் உண்டு. சாதி, இந்துத்துவம், சமஸ்கிருத மயம் ஆகியவற்றை எதிர்த்த போக்கை முன்னெடுத்துத் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் ஒரு பக்கம். இவற்றை முன்னிலையாக்காமல் இந்துத்துவத்துடன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சமரசம் கொண்டு தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இன்னொரு போக்கினர். இந்த இரண்டாவது போக்கினரும் கூட இங்கு செழித்திருந்த உள்ளடக்கும் பண்பாடு (inclusive political culture), உலகளாவிய பாசிச எதிர்ப்பு ஆகிய பின்னணியில் தங்கள் செயல்பாடுகளில் சிவசேனாவையும் இந்துத்துவ அமைப்புகளையும், மோடி போன்றோரையும் வெளிப்படையாக ஆதரிக்க இயலாது இருந்தமைக்கு அன்றைய இந்தப் புறச் சூழல்களே காரணமாயிருந்தன. இன்று காலம் மாறியுள்ளது. இந்த மாறியுள்ள சூழலைத்தான் “மோடி அலை வீசுகிறது” என்கிறார்கள். இந்த அலை வீச்சில் இவர்களின் சுய உருவம் வெளுத்து அம்பலமாகிறது.

என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? – என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம் என்ன சொல்லுகிறது?

//தற்காப்புக்காக – தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக்கிறது. //

இதில் இரு அம்சங்கள் கவனிக்கத் தக்கன.

1) தற்காப்புக்காகக் கொலையும் செய்யலாம். இது காவல் துறையினருக்கு மட்டுமல்ல சாதாரணக் குடிமக்களுக்கும் பொருந்தும். ஆனால் அது கொலக் குற்றமாகவே பதிவு செய்யப்பட்டு, தான் தற்காப்புக்காகத்தான் கொல்ல நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே அவர் வழக்கிலிருந்து விடுபட இயலும். இந்த நடைமுறை காவல்துறையினர் செய்கிற என்கவுன்டர்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2) கைது செய்யச் செல்லும் இடத்தில் வரமறுப்பவர்களைக் கொலை செய்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டம் ஒரு நிபந்தனை விதிக்கிறது. கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருந்தால் மட்டுமே அவரைக் கொல்லும் எல்லைக்குச் செல்லலாம். வங்கிக் கொள்ளை என்பது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமல்ல. பொம்மைத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பதே இக் கும்பலின் வழக்கம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ள செய்தி இன்றைய (22, பிப்ரவரி) இந்து நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கும் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐவரையும் கொல்வது என்கிற அளவிற்குச் செல்லாமல் கால நீடிப்புச் செய்து அவர்களைக் கைது செய்வதற்கே காவல்துறை முயன்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்து நாளிதழ் செய்தியில் இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கொள்ளையச் செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நேற்றே காவல் துறையினர் இந்து நாளிதழிடம் கூற முடிந்துள்ளது. இது எப்படி? ஏற்கனவே மகாராஷ்டிர மானிலத்தில் இதெ வடிவிலான வங்கிக் கொள்ளைகளை பீகாரைச் சேர்ந்த கும்பல் செய்துள்ளது. அங்கு பிடிபட்ட சுபோத் கந்த் சிங் என்கிற பீகாரி இளஞன் பல தகவல்களைக் கூறியுள்ளான். சென்னையில் கொள்ளையிடும் திட்டமும் அவர்களிடம் இருந்துள்ளது. நமது காவல்துறை இவ்வளவு எளிதாக இந்தக் கொள்ளையில் துப்புத் துலக்க முடிந்ததற்கு இந்தத் தகவல்களே உதவியுள்ளன. இந்த ஐவரையும் உயிருடன் பிடித்திருந்தால் மேலும் பல உண்மைகளை அறிந்திருக்கக் கூடும். இந்தக் கொலைகள் மூலம் அந்த வாய்ப்பும் இன்று இழக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக என்கவுன்டர் கொலைகளில் செய்யப்படுவது யாதெனில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீதே காவல் துறையினரைக் கொல்ல வந்ததாக வழக்கொன்றைப் பதிவு செய்வார்கள். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்துபோனார் எனச் சொல்லி வழக்கை முடிப்பார்கள். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

மனித உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக சென்ற 2007 ஆகஸ்ட் 8 அன்று தமிழக அரசு என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக ஒரு நெறிமுறையை வழங்கியது. அதன்படி என்கவுன்டர் செய்த அதிகாரிகளுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுக்கக் கூடாது. இதற்கெனப் பதவி உயர்வு கொடுக்கக் கூடாது. ஆனாலும் தொடர்ந்தும்கூட அப்படிப் பரிசுகள் கொடுக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது.

கடந்து வந்த பாதை

(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்)

கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர் கடந்து வந்த பாதை குறித்து கலகம் வாசகர்களுக்காக ?

மனித உரிமைச் செயல்பாடுகள் என்பன என் நடவடிக்கைகளில் ஒரு பகுதி மட்டும்தான். எழுதுவதுதான் என் பிரதானப் பணி. பத்திரிக்கைகளில் எழுதுகிறேன். இலங்கையில் இரு பத்திரிக்கைகளில் என் பத்திகள் வெளி வருகின்றன. மார்க்சீயம், பின் நவீனத்துவம், தேசியம், இந்துத்துவம்,தலித்தியம் பெரியாரியம், காந்தியம், இலக்கிய விமர்னம் சார்ந்து சுமார் 60 குறுநூற்களும், சிறு வெளியீடுகளும் வந்துள்ளன. சமீபத்தில் அதிகம் இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுதுவதோடு சரி. நூலாகத் தொகுத்து வெளியிடுவதில் ஆர்வம் குன்றியுள்ளது. பெரிய நூல் வெளியீட்டாளர்கள் என் நூற்களைத் தொகுப்புகளாக வெளியிட ஆர்வம் தெரிவித்தும் பல காரணங்களால் மனம் வரவில்லை. இன்று தமிழகத்தில் முக்கியமான நடுத்தர மற்றும் சிறு வெளியீட்டாளர்கள் பலரும் என் நூற்களை வெளியிட்டே தமிழ் வெளியீட்டுலகில் அறிமுகமானவர்கள். விடியல் பதிப்பகம் உட்பட. எனினும் பல்வேறு கசப்பான அனுபவங்களின் விளைவாக இபோது நூல் வெளியீட்டிலேயே பெரிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. பத்திரிக்கைகளில் எழுதுவது, முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிட்டு அடுத்த்அ கணமே எதிர்வினைகளை எதிர்கொள்வது என்கிற அளவில் என் ஆர்வம் சுருங்கி விட்டது. பேசாமல் என் நூற்கள் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு பெரிய நிறுவனத்திடம் தந்துவிடலாமா என்று கூட சில நேரங்களில் யோசிக்கிறேன்.

மனித உரிமைச் செயல்பாடுகள் பற்றிக் கேட்டீர்கள்.. மனித உரிமைப் பணிகள் என்பன எப்போதும் ஒரு ‘பாபுலரான’ செயல்பாடு அல்ல. நிறையப் பேர் இதில் ஆர்வமாக முன்கை எடுக்க வரமாட்டார்கள். காவல்துறை, அரசியல்வாதிகள், ஆதிக்க சாதியினர், தனியார் நிர்வாகங்கள், மதவாத அமைப்புகள் எனப் பல மனித உரிமைகளை மீறும் சக்திகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய பணி இது. இன்னொரு பக்கம் இது கொஞ்சம் செலவைக் கோரும் பணியும் கூட. ஒரு உண்மை அறியும் குழுவை ‘ஆர்கனைஸ்’ செய்து ஒரு ஊருக்குச் சென்று, தங்கி, ஆய்வு செய்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்துவது என்பது நிறையச் செலவை ஏற்படுத்துவது. நாங்கள் வெளியிலிருந்து எந்த நிதி உதவியையும் பெறுவதில்லை. நாங்களே பகிர்ந்துகொள்வது, நண்பர்களிடமிருந்து உதவி பெறுவது என்கிற வகையில்தான் செயல்படுகிறோம். வாய்ப்பிருக்கும்போது நண்பர்கள் வீடுகளில் தங்கி, சாப்பிட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் சில அமைப்புகள் நடத்தும் உண்மை அறியும் குழுக்களில் பங்கு பெறுவது உண்டு.. அப்போது அவர்கள் செலவு செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகத்தான் போகிறோம்; அவர்களுக்குச் சார்பாக இருக்கக்கூடிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்கிறோம். ஆனால் எக்காலத்திலும் நாங்கள் யார் சார்பாகவும் உண்மைகளை கூட்டியோ குறைத்தோ சொல்வதில்லை. நூறு சதம் உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களையே சொல்கிறோம். இரண்டு நாள் ஆய்வில் சில நேரங்களில் முழு உண்மைகளையும் எங்களால் கண்டுபிடித்து விட இயலாது. அப்படியான நேரங்களில் சந்தேகத்திற்குரிய அமசங்களில் இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனாச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக நிறையச் சொல்லலாம். சமீபத்தில் இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினர் அனுமதி பெற்று நடத்திய ஒரு ஊர்வலத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல் துறையினர் கடுமையாக ஒரு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மிகவும் அநீதியானது என்பது ஒரு பக்கம். இது குறித்து போலீஸ் எப்படி இரட்டை நாக்குடன் செயல்பட்டது என்பதை விரிவாகப் பதிவு செய்தோம். அதே நேரத்தில் ஒரு குறிப்பீட்ட கட்டிடத்திலிருந்து கலவரத்தைத் தூண்டும் சதி நோக்குடன் ஊர்வலத்தின் மீதும் போலீசின் மீதும் கற்கள் எறியப்பட்டன என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கூறினர். போலீஸ் அதை மறுத்தது. எங்களால் எது உண்மை என உறுதி செய்ய இயலவில்லை. முஸ்லிம்கள் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மிகவும் ஆபத்தான கவலைக்குரிய ஒன்று. இக்குற்றச்சாட்டு உண்மையா என சீரியசாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டோம்.

இன்னொரு முறை விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இறையூரில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கிறிதவ தலித்களுக்கும் இடையில் பிரச்சினை. வன்னியர்கள் கடைபிடித்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தலித்கள் போராடியபோது வன்னியர்கள் தலித் மக்களின் வீடுகளைத் தாக்கிச் சூறையாடினர். தாக்குதல் நடந்தபோதெல்லாம் வராத போலீஸ் எல்லாம் முடிந்தபின் வந்தனர். எஸ்.பி. அமல்ராஜ் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில் இரண்டு அப்பாவி வன்னியர்கள் செத்துப் போனார்கள்.. எங்கள் அறிக்கையில் வன்னியர்களின் சாதிக் கொடுமை, அன்று நடந்த சூறையாடல், பாதிரிமார்கள் சாதிக் கொடுமைக்குத் துணைபோதல் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டு, அமல்ராஜின் துப்பாக்கிச் சூட்டையும் கண்டித்திருந்தோம். கொல்லபட்ட இருவருக்கும் உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும் வற்புறுத்தி இருந்தோம்.. பிரஸ் மீட்டில் ஒரு தொண்டு நிறுவனத்தினர் உள்ளே நுழைந்து துபாக்கிச் சூட்டை நாங்கள் கண்டித்ததை எதிர்த்துக் கலாட்டா செய்தார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்றி விட்டு கூட்டத்தை நடத்தினோம்.

இதுபோன்ற விடயங்களில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உள்ள உண்மைகளே அவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போதுமானது. உண்மைகள் நமக்குச் சாதகமாக உள்ளன. தேவையற்ற பொய்கள் நமது பக்க நியாயங்களைப் பலவீனப்படுத்தத்தான் உதவும்.. இப்போது உருவாகியுள்ள் ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னாலிசம். காட்சி ஊடகப் போட்டிகள், முக நூல் ஆக்டிவிசம் முதலியன பலவகைகளில் அநீதிகளை வெளிக்கொணர்வதில் பெரிய பங்காற்றுகின்றன.. எனினும் சில நேரம் இவர்கள் காட்டும் அதீத உற்சாகம், பாதிக்கப்பட்டவர்களுடன் தாங்கள் நிற்பதாகக் காட்டிக் கொள்வதில் வெளிப்படுத்தும் அரை வேக்காட்டு அவசரத்தனம் முதலியன bad journalism என்கிற அளவிற்குப் போய்விடுகின்றன. தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலையா, கொலையா என்கிற பிரச்சினையில் அதைக் “கொலைதான்” என “நிரூபிக்க” சில ஜர்னலிஸ்டுகள் உண்மைகளை மறைத்தும், திரித்தும், மிகைப்படுத்தியும் செய்த அட்டகாசங்கள் இதற்கொரு எடுத்துக்காட்டு. அது தற்கொலை என்றாலுங்கூட அதற்கு ஆதிக்க சாதியினரின் சாதி ஒதுக்க அரசியலே காரணம் எனக் கொண்டு போயிருந்தால் இப்போதை விட அதிக விளைவுகளை உருவாக்கியிருக்கலாம்..போலீஸ்காரர்கள் சொல்வதெல்லாமே பொய் என நாம் கருத வேண்டியதில்லை. சமீபத்தில் காரைக்கால் பாலியல் வன்முறைப் பிரச்சினையில் வெளிபடுத்தப்பட்ட bad journalism ஒன்றை இங்கே நான் விளக்கமாகச் சொல்ல விரும்ப்வில்லை. அது அந்த இளம் பத்திரிகையாளரைப் பாதிக்கும் என்பதால்.

நாங்கள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுபவர்கள். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை உண்மை அறியும் குழுக்கள் பெறுவது அவசியம்.

கலகம்: நிறப்பிரிகை காலம் கொண்டாடப்பட்டக் காலம் என்று தோழர் தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி) அவர்களின் பேச்சில் பலமுறை கேட்டதுண்டு அந்த காலம் பற்றி சொல்லுங்கள் ?

நீங்கள் அடுத்த தலைமுறையினர் என்பது உங்கள் கேள்வியிலிருந்தே தெரிகிறது. நிறப்பிரிகைக் காலம் என்பது சோவியத்தின் சிதைவு, அம்பேத்கர் நூற்றாண்டு, ஈழப் போராட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை ஒட்டிய காலம். இதுகாறுமான பல நம்பிக்கைகள் சிதைந்திருந்தன. பேரரசியலைத் தாண்டி நுண் அரசியல், அடையாள அரசியல், தலித்தியம் முதலியன மேலெழுந்த காலம் அது. மிக விரிவான விவாதங்கள், புதிய கோட்பாட்டு அறிமுகங்கள் என்பனவற்றிற்கு இடமிருந்த காலம் அது. கூட்டு விவாதம் என ஒரு பகுதி நிறப்பிரிகையில் உண்டு. மாற்றுக் கருத்துடையவர்களும் சந்தித்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரையாடுவோம். .உடன்பட்ட கருத்துக்களையும், இன்னும் விவாதிக்க வேண்டியவற்றையும் தொகுத்து வெளியிடுவோம். தேதி, நாள் குறிப்பிட்டுப் பல இயக்கத்தவர்களும் கூடிப் பேசுவோம். சிறு பத்திரிகைகளும், சிறு இயக்கங்களும் இணைந்து புலம் பெயர்ந்த தமிழர் மாநாடொன்றையும் அன்று நடத்த முடிந்தது. இன்று அதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. எபோதும் முதல் தலைமுறையினரின் அறிவுச் சேகரத்தில் நின்றுகொண்டு அடுத்த தலைமுறையினர் அவற்றை ஒட்டியும், வெட்டியும்,மறுத்தும், விலகியும் முன்னேற வேண்டும். இங்கு அது நிகழாமல் போவிட்டது, இன்று எந்த விவாதத்திற்கும் சாத்தியமில்லை; மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஈழப் போராட்டத்தின் முதற்கட்டத்தில் தேசியப் பிரச்சினை குறித்தும் ஈழப் பிரச்சினை குறித்தும் எத்தனை ஆழமான விவாதங்கள் நடந்தன.. எவ்வளவு நூற்கள் வந்தன.. இன்று விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி குறித்து காத்திரமான ஆய்வு ஏதாவது உண்டா.? மாறியுள்ள உலகில் இந்தப் பிரச்சினைகளை எப்படி மேலே கொண்டு செல்வது என ஏதாவது ஆய்வுண்டா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், திரும்பி வருவார் என்பன போன்ற அபத்தக் கருத்துக்களுக்கு மறு பேச்சுண்டா? ஒன்றைச் சொல்ல வேண்டும். நிறப்பிரிகை என்பது அன்றைய ஆசிரியர் குழுவிலிருந்தவர்களின் சாதனை மட்டுமல்ல. அது அந்தக் காலத்தின் சாதனை. அதில் பலரும் பங்கு பெற்றனர்.

கலகம்: தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதி மோதல் நடக்கிறது இது புரட்சிகர இயக்கங்களின் தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா ?

ஏன் அந்தப் பழியைப் புரட்சிகர இயக்கங்களின் மீது மட்டும் போடுகிறீர்கள். இங்கே இடதுசாரி இயக்கங்கள் இருக்கின்றன; உங்களைப் போன்ற தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள், தலித் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் எல்லாந்தான் இங்கிருந்தன, இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்பில்லையா? இப்போதெல்லாம் சாதி மோதல், தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கெல்லாம் திராவிட இயக்கம்தான் காரணம் எனக் கேட்பதுதானே ஃபேஷன். ஏதோ மகாராஷ்ட்ரா, உ.பி இங்கெல்லாம் சாதி மோதல்களே இல்லை என்பது போல. நல்லவேளை நீங்கள் அப்படிக் கேட்டுக் கடுப்பேத்தவில்லை. நன்றி.

கலகம்: இந்திய துனை கண்டத்தில் தேசிய விடுதலை போராட்டங்களின் இன்றைய நிலை ?

தேசிய விடுதலை இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திற்குள் பல தேசிய இனங்கள் இருந்தபோதும் அவை ஒருபடித்தானதாக, ஒரே புவியியல் எல்லைக்குள் செறிந்திருக்கவில்லை. அஸ்ஸாமுக்குள் போடோக்கள், போடோக்களுக்குள் ஆங்காங்கு முஸ்லிம்கள், ஆந்திராவுக்குள் தெலங்கானக்காரர்கள், மணிப்பூரிகளுக்கும் அகண்ட நாகா கோரிக்கைக்கும் உள்ள முரண்கள் இப்படி. இந்த முரண்களின் ஊடாக இந்திய அரசு தனது ஒடுக்குமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தி வருகிறது. காங்கிரசுக்கும் பா.ஜகவிற்கும் இதில் வேறுபாடு இல்லை. சர்வதேச உடன்பாடும் ஒத்துழைப்பும் இந்த ஒடுக்குமுறைக்கு உண்டு. மணிப்பூரிலும், அஸ்ஸாமிலும் இத்தகைய உள்முரண்பாடுகளின் ஊடாகத்தான் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்போது தேசிய இன முழக்கங்களைக் காட்டிலும் பிராந்திய, தனி மாநில, சாதி ரீதியான கோரிக்கைகள் மேலுக்கு வருகின்றன. மாயாவதி உ.பியை நாலு துண்டுகளாக்க வேண்டும் என்கிறாரே.

கலகம்: தேச விடுதலை முன்வைக்கும் தமிழ் தேசிய இயக்கங்கள் நிலை குறித்து உங்கள் கருத்து ?

எல்லாத் தமிழ் தேசிய இயக்கங்களையும் ஒரே மாதிரி மதிப்பிடமுடியாது. தமிழ்த் தேச விடுதலை என்பதற்கு அப்பால் பிற அம்சங்களில் மகா பிற்போக்குத்தனமான பாசிசக் கொள்கை உடையனவாகத்தான் பெரும்பாலான இயக்கங்கள் உள்ளன. ஒரு நூற்றாண்டுகால முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் பின் நோக்கி உருட்டக் கூடியவையாக அவை உள்ளன. வைகோ எல்லாக் கட்டங்களிலும் மோடி மற்றும் பா.ஜ.க மற்றும் அவர்கள் இயற்றிய பொடா சட்டம் முதலியவற்றின் ஆதரவாளராகவே உள்ளார். அவரைப்போன்ற ஒரு பச்சை ஏமாற்றுவாதியை யாரும் பார்க்க இயலாது. நெடுமாறன் ஒருபக்கம் ஈழ ஆதரவு என்கிற பெயரில் இந்துத்துவவாதிகளையும், நடராசன் போன்ற சாதி வெறி சக்திகளையும் மேடையேற்றி மகிழ்கிறார். மணியரசன் கொஞ்சமும் வெட்கமில்லாமல் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்கிறார். ராஜராஜனின் பார்ப்பன ஆதரவையும் , அவன் உருவாக்கிய தேவதாசி முறையையும் பொற்கால அடையாளங்கள் என்க்கிறார். பெரியாரை இவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டுகின்றனர். பார்ப்பன சேவகத்தை இவர்கள் வெட்கமற்றுச் செய்கின்றனர். ஈழத்திலிருந்து வேளாங்கன்னி கோவிலுக்கு வந்த தமிழர்களையும், பிழைக்கவந்து தமிழ் முதலாளிகளால் சுரண்டப்படுகிற வட மாநிலத் தொழிலாளிகளையும் இவர்கள் எதிரிகளாகக் கட்டமைக்கின்றனர். அவர்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர், சிவசேனாவை ரோல்மாடல் எனச் சொல்லி அரசியல் பண்ணுகிறது சீமானின் இயக்கம். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு எனச் சொல்லி சாதி முறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர் குணா வழிக் கூட்டத்தினர். தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான இடைவெளி மயிரிழைதான் என்பார்கள்.. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் இந்த இயக்கனகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

கலகம்: ஏழு தமிழர் விடுதலை பற்றி ?

இதிலென்ன பிரச்சினை.மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆயுள் தண்டனை என்பது ஏழாண்டு காலம் எனக் குறைக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்றம் இப்போது இதற்குச் சாதகமாக உள்ளது. ஜெயலலிதா இதை அரசியலாக்காமல் முரைப்படி காயை நகர்த்தியிருக்கலாம். எதிர் வழக்காடுவதன் மூலம் காங்கிரஸ் தன்னை மேலும் தோலுரித்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகச் சிறைகளில் இப்படி நீண்ட காலமாக அடைபட்டிருப்பவர்கள் இந்த ஏழு தமிழர்கள் மட்டுமல்ல. இன்னும் பல தமிழர்களும் உள்ளனர். 1500 கைதிகளைக் கருணாநிதி விடுதலை செய்தபோது முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. சொன்ன காரணம், அவர்கள் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அது மத்திய அரசுச் சட்டம் என்பது.. இன்று அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட்டது. அதை ந்நாம் மனப்பூர்வமாக வரவேற்கும் அதேநேரத்தில் இந்தப் பலன்கள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூற வேண்டும்.

கலகம்: மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறதாக நீங்கள் கருதுவதாக அறிய முடிகிறது. எப்படி ?

சார்பாக என்றில்லை. இதை ஈழப்பிரச்சினையுடன் தொடர்புடைய ஒன்றாகத்தான் அவர்கள் முன்வைத்தனர். இதை அவர்கள் அரசியல்தான் பண்னினார்களே ஒழிய மரணதண்டனை என்பது அற அடிப்படையிலேயே ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் முன்வைக்கவில்லை. அதனால்தான் அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோதெல்லாம் இங்கு பெரிய எதிர்வினைகள் இல்லை.. “ தண்டனையை யார் நிறைவேற்றினாலும் அதை எதிர்க்க வேண்டும்: யாருக்கு நிறைவேற்றப்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டும்”. இதை. அவர்கள் ஏற்பார்களா?

கலகம்: இந்த காலகட்டத்தில் பெண்களின் அரசியல் பார்வை அல்லது பங்கு குறித்து ?

இந்தக் காலத்தில் மட்டுமென்ன எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அரசியலில் முக்கிய பங்கிருக்க வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சாதனை புரியக்கூடிய நிலையில் உள்ளனர். பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு வேறெப்போதையும் விட அதிகமாகியுள்ளது. எனினும் இவை போதாது. தமிழகத்தில் பெண்கள் இயக்கம் ஏதும் வலுவாக இல்லை. இல்லை என்றே சொல்லலாம். அதேபோல நிறப்பிரிகை காலத்தில் நடந்ததுபோல பெரிய அளவில் பெண்ணிய விவாதங்களும் இப்போது நடப்பதில்லை.

கலகம்: ஈழத் தமிழர் இனப்படுகொலை பிற நாடுகள் அங்கம் வகித்ததின் நோக்கம் என்ன ?

செப்டம்பர் 11க்குப் பிறகு உலகம் மாறிவிட்டது என புஷ் சொன்னது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு உண்மை இருந்தது. “பயங்கரவாதம்” என ஏதும் வ்ரையறுக்கப்பட்டால், பின் அதை ஒடுக்குவதில் ஒரு ஒப்புதல் உலக அளவில் ஏற்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடினாலும் அதற்குப்பின்தான் 40க்கும் மேற்பட்ட நாடுகள் அதைத் தடை செய்தன. கடைசி நேரத்தில் புலிகளை ஒழிக்க இந்தியா மட்டுமா முன்நின்றது / அமெரிக்காவும் பிரிட்டனும் கூடத்தான் முன்நின்றன. அவ்வளவு ஏன், இத்தனைக்குப் பின்னும் இன்று ராஜபக்‌ஷேவின் படைகளுக்கு இந்திய அரசு மட்டுமா பயிற்சி அளிக்கிரது. இன்றும் அமெரிக்கப் படைகளுந்தான் பயிற்சி அளிக்கின்றன..

கலகம்: தமிழகத்தில் எழுகின்ற எல்லா அரசியல் போராட்டங்களும் விரைவில் தேங்கி போகிறதே என்ன கரணம் ?

போராட்டங்களுக்கெதிரான ஒருவகை மத்திய வர்க்க மனப்பாங்கு இன்று அதிகமாகியுள்ளது. உலக மயம், அதனூடாக உருவாகியுள்ள புதிய பண்பாடுகள் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் முன்னேறுதல், பணம் சம்பாதித்தல், சமூகப் பிரசினைகளில் அக்கறையின்மை என்பன இன்றைய வாழ்முறைகளாகிவிட்டன. இன்றைய கல்விமுறை, செமஸ்டர் தேர்வு முறைகள், காம்பஸ் இன்டெர்வியூ,, ஓவர் ஸ்பெஷலிசேஷன் முதலியன இளைஞர் மத்தியில் சமூகப் பொறுப்புகளையும் அக்கறைகளையும் குறைக்கின்றன. ஈழப்பிரச்சினைகளை முன் வைத்து எழும் போராட்டங்களும் ஆண்டுக்காண்டு வலுவிழக்கின்றன. இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுடன் இணைக்காமல் வெறும் ஈழப் பிரச்சினையை மட்டும் வைத்தே இங்கொரு வலுவான எழுச்சியை தொடந்து இங்கு ஏற்படுத்திவிட இயலாது.

கலகம்: இன்றைக்கு நம் முன் இருக்கும் சவால் என்ன ?

உலக அளவிலும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை நாம் முழுமையாக உள் வாங்கவேண்டும்.கடந்த முப்பதாண்டு கால உலக வரலாற்றை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்படியான முயற்சி இங்கு நடக்கவில்லை. இது புதிய உலகம்; இந்தப் புதிய உலகை எவ்வாறு எதிர்கொள்வது?. நம்மீது சுமையாய் அழுத்திக்கொண்டிருக்கும் மரபுவழிப்பட்ட சிந்தனை முறைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் எப்படி விடுதலை பெறுவது?.இதுதான் நமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால்.

இந்துத்துவமும் தமிழ்நாடும்

இதழொன்று என்னிடம் கேட்ட கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றத் தொட்டங்கியுள்ளது என்பது உண்மையா? அதற்கான காரணங்களாக நீங்கள் கருதுவது என்ன?

இதற்கு நான் சொன்ன பதில் :

ஒருகாலத்தில் “இது பெரியார் பிறந்த மண், இங்கே இந்துத்துவம் காலூன்ற முடியாது” என முழங்குவது வழக்கம்; இன்று அது பொய்யாகி விட்டது; திராவிடக் கட்சிகளே ஒன்று மாற்றி ஒன்று பா..ஜ.க வுடன் கூட்டு சேர்கின்றன. பா.ஜ.கவும் இந்துத்துவ சக்திகளும் இன்று இங்கு ஓரளவு குறிப்பிடத்தக்க சக்திகளாக உருப்பெற்று வருவதை யாரும் மறுக்க இயலாது. அதற்கான காரணங்களாக நான் கருதுபவை:

1. திராவிடக் கட்சிகள் நீர்த்துப்போனமை (bankruptcy); பார்ப்பனீயம் எனப் பெரியார் சொன்னபோது அவர் பார்ப்பனர்களின் சமூக/ அரசியல் மேலாண்மையை (social and political hegemony) மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதன் சடங்கு மேலாண்மையையும் (ritual hegemony), அதற்குக் காரணமான இந்துத்துவத்தையும் அவர் எதிர்த்தார். பெரியாருக்குப் பிந்திய திராவிடக் கட்சிகள் popular politics ஐக் கையில் எடுத்தபோது “பார்ப்பனீயம்தான் எங்கள் எதிரி, பார்ப்பனர்கள் அல்ல” எனவும், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனவும் பேசத் தொடங்கியபோது கொள்கையளவில் அவை நீர்த்துப்போவது தொடங்கியது; கருத்தியல் ரீதியாக திராவிடத்தில் அப்படி ஒன்றும் பற்றில்லாத எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்தபோது பார்ப்பன / இந்துத்துவ எதிர்ப்பு என்பது முற்றிலும் இல்லாமற் போனது; ஜெயா கட்சியைக் கைப்பற்றியபோது அவரே ஒரு பார்ப்பனராக இருந்தது மட்டுமல்ல. “நான் பாப்பாத்தி என்பதில் பெருமைப் படுகிறேன்” எனச் சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர். சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பன இந்துத்துவக் கருத்தியலாளர்களை தன் அரசியல் ஆலோசகராகக் காட்டிக் கொள்வதில் அவர் வெட்கப்பட்டதும் இல்லை. வை.கோவைப் பொருத்தமட்டில் அவர் எந்நாளும் பார்ப்பன எதிர்ப்பு / சாதி எதிர்ப்பு என்கிற திராவிட அரசியல் கூறுகளை முன் வைத்ததே இல்லை. 2002 Gujarat Pogrom க்குப் பின்னும் இம்மியும் வெட்கப்படாமல் நரேந்திரமோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் அவர்.

2. மாநிலக் கட்சிகள் எப்போதும் தேசிய / உலக அரசியல்களில் கருத்துச் செலுத்துவதில்லை; தேர்தல் அறிக்கைகளில் கூட அவை foreign policy பற்றியெல்லாம் அதிகம் பேசுவதில்லை. அந்த அரசியல்களில் இவை எப்போதும் சமரசமாகத் தயாராகவே உள்ளன; தவிரவும் இன்றைய FPTP தேர்தல் முறையில் எவ்வளவு வலிமையான கட்சியானாலும் கூட்டணி தேவைப்படுகிறது. அந்த வகையில் திராவிடக் கட்சிகள் எதிர் எதிரான இரண்டு கட்சிகளானபோது ஒன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இன்னொன்று பா.ஜ.க வுடன் கைகோர்க்கத் தயங்குவதில்லை.

3. ஈழ ஆதரவு என்கிற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் வெளிப்படையாக பா.ஜ.கவை மேடை ஏற்றின. தமது மேடைகளைத் தவிர, ஏறிப் பேச இடம் இல்லாதிருந்தவர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர்கள் நெடுமாறன் முதலிய தமிழ்த் தேசியர்கள்.. தமிழ்த் தேசியம் என்றைக்கும் சாதி / இந்துத்துவ எதிர்ப்பு பேசியது கிடையாது. அவர்களைப் பொருத்தமட்டில் எல்லாம் “தமிழ்ச் சாதிகள்” தான்; இந்து மதம் தமிழர் மதம்; சமண பவுத்த மதங்களே வடவர் மதம்; கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அந்நிய மதங்கள். தமிழ்த் தேசியத்தின் முன்னோடி ம.பொ.சி தான் இந்து எனச் சொல்வதில் பெருமை கொள்வதாக அறிவித்தவர். தமிழன் என்பதைக் காட்டிலும் இந்து என்பது இன்னும் பெரிய அடையாளம் என்றவர். சுருங்கச் சொன்னால் 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் இங்கு இந்துத்துவ / பாசிச / ஏகாதிபத்திய எதிர்ப்புகளை நீர்த்துப்போக வைத்ததே உண்மை.

4. இந்துத்துவ எதிர்ப்பை நீர்த்துப்போக வைத்ததில் தமிழகத்தில் வளர்ந்த தலித்தியம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தலித் அறிவுஜீவிகளாக அறியப்பட்டோர் திராவிடக் கட்சிகளே தலித்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் சாதி ஆதிக்கத்திற்கும் காரணம் என்கிற நிலையை எடுத்தனர். தனிப்பட்ட நலன்களுக்காக சில தலித் அறிவுஜீவிகள் பார்ப்பன நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டனர். இன்று மோ டி குரூசின் நாவலை வெளியிடமுடியாது என அறிவித்த நவாயனா பதிப்பகம் வி..சி.கவின் ரவிக்குமார் மற்றும் ஆனந்த் என்கிற திராவிட எதிர்ப்பு பேசும் பார்ப்பனர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்திய அளவில் பெரியார் எதிர்ப்பைக் கொண்டு சென்றதில் ஆனந்தின் பங்கு முக்கியமானது. “சிறியவன் ஆனந்த்” என்கிற பெயரில் தமிழிலும் ஆனந்த் என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் இந்த ஆனந்த் எழுதிய கட்டுரைகள் பெரியாரையும் திராவிடக் கட்சிகளையும் கொச்சைப்படுத்தின. “பெரியார் என்றால் தமிழ் நாட்டில் யாருக்கும் தெரியாது. அது ஒரு ‘பெரிய ஆறு’ (Big River) என்றுதான் நினைத்துக் கொண்டுள்ளனர்’ என outlook ல் எழுதியவர் ஆனந்த். காலச்சுவடு எனும் பார்ப்பன இதழில் ஆசிரியர் குழுவில் இருந்த ரவிக்குமார் அதில் பெரியார் ஒரு பெண்பித்தராக அலைந்தவர் என்கிற ரீதியில் எழுதினார். தமிழக தலித் அறிவுஜீவிகள் + பார்ப்பன நிறுவனங்கள் மத்தியில் உருவான இந்தக் கூட்டணி தீராவிட எதிர்ப்பு பேசியதே தவிர, திராவிடத்தை நீக்கிய அந்த இடத்தில் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை வைத்ததில்லை. அந்தக் காலியிடத்தை இந்துத்துவ சக்திகள் ஆக்ரமிப்பதைப் பற்றிக் கவலை கொண்டதுமில்லை.

4. இங்கே திராவிட இயக்கத்தின் வீச்சால் இந்துத்துவ சக்திகள் ரொம்பவும் அடக்கி வாசிந்துக் கொண்டிருந்த போதிலும் மிக ஆழமாகவும் அமைதியாகவும் தொடர்ந்து அவர்கள் இம் மண்ணில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காந்தி கொலையால் கிடைத்த கெட்ட பெயர்,, அதை ஒட்டிய தடை, பின் நெருக்கடி நிலை, அதை ஒட்டிய தடை ஆகியவற்றின் பின்னணியில் அமுக்கமாக வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் மீனாட்சிபுர மதமாற்றத்தை ஒட்டி வெளியே வந்தனர். அத்வானியை எல்லாம் இங்கு அழைத்து வந்து தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். இந்து முன்னணி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது, வெறுப்புப் பேச்சுக்கள் கலவரங்கள் முதலியன ஆங்காங்கு நிகழ்த்தப்பட்டன. கோவை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கன்னியாகுமரி மாவட்டம் முதலான முஸ்லிம் / கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் உருவாக்கிய polarisation இன்று அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

5. சாதிக் கட்சிகள் எதுவும் பெரிய அளவில் மத எதிர்ப்பு கொண்டவையாக இருப்பதில்லை.. இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட. எனவே சாதிக் கட்சிகள் எளிதாக இந்துத்துவத்துடன் ஐக்கியமாகின்றன. வருண வரிசையில், தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இங்கே ஷத்திரிய வருணம் கிடையாது. எல்லா இடைநிலைச்சாதிகளும் தம்மை ஷத்திரியர் என உரிமை கோருவதும் இன்று பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ம.க வின் வன்னியர் சாதி அமைப்பின் அடையாளம் அக்கினிச் சட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இன்றைய சமூகம் சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாக உள்ளது. சற்றைக்குப் பிந்திய வரலாறைக்கூட அறியாதவர்களாக இன்றைய இளைஞர்களும், சற்றைக்குப் பிந்திய வரலாறையும் மறந்தவர்களாக மற்றவர்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில் பங்கு பெறும் புதிய வாக்காளர்கள் 18 கோடி பேர். பா.ஜ.க மற்றும் மோடியின் பழைய வரலாறுகளை அறியாத / மறந்த மக்களின் மத்தியில் இந்துத்துவம் தன்னைப் பதித்துக் கொள்வது எளிதாகி விடுகிறது.