சுந்தரராமசாமியின் கடிதங்கள்

இந்தப் புத்தகச்சந்தையின் போது (2011) நான் கலந்து கொண்ட இரு நூல் வெளியீட்டு விழாக்களில் ஒன்று, “அன்புள்ளஅய்யனார், சுந்தரராமசாமியின் 200 கடிதங்கள்” உள்ளிட்ட மீனாள் பதிப்பக நூல்களுக்கானது. யாரிடம் பணியாற்றினாலும் நட்பாக இருந்தாலும் அவரிடம் நூறு சதம் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பவர், பழகுபவர் அய்யனார் என்கிற பவுத்த அய்யனார். மேலூர் கிராமம்ஒன்றில் பிறந்து, அதிகம் படித்திராத, ஆனால் இலக்கிய ஆர்வமுள்ள ஒரு நபராகச் சுந்தரராமசாமியைக் கண்டடைந்த ஒரு கிராமத்து இளைஞனை இந்த நட்பு ஒரு நல்ல வாசகனாக, பொறுப்புள்ள குடும்பத்தவனாக,ஒரு எழுத்தாளனாக அவர் உருவாக்கிய வரலாற்றைச் சொல்கின்றன இந்த 200 கடிதங்களும் (மொத்த பக்கங்கள் 272).

சுந்தர ராமசாமியுடன்எனக்குத் தனிப்பட்ட ரீதியில் அதிக நெருக்கம் இல்லாதபோதும், இப்படிப் பலரை ஊக்குவித்து உருவாக்கியவர் என்பதைக் அறிந்துள்ளேன். ஒரு நண்பராய், தத்துவ ஆசானாய், வழிகாட்டியாய் சு.ரா பலருக்கும் அமைந்துள்ளார். அவர்களுள் அய்யனார் ஒருவர். சு.ரா வின் அத்தனை கடிதங்களிலும்இது வெளிப்படுகிறது. படிக்க வேண்டிய புத்தகங்கள், கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடங்கி அன்றாடம் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகள், சொந்த வாழ்வு குறித்த ஆலோசனைகள் எனஒரு தந்தையின் கரிசனத்தோடு அமைகின்றன இக்கடிதங்கள்.

எல்லாவற்றைக் காட்டிலும், எந்த ஒரு உறவும் இல்லாமல், ஒரு வாசகனாக மட்டுமே வந்த அய்யனாரை ஒரு எழுத்தாளனாகஉருவாக்கியதுதான் இக்கடிதங்களின் ஆகப் பெரும் சாதனை. எழுத வேண்டுமெனில் ஒருவன் புத்திசாலியாக, அசாதாரண கடும் உழைப்பாளியாக, உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர்க்குக் கிடைத்த அனுபவங்களை உண்மையாக, ஆம் இது முக்கியம், உண்மையாக உணர்ந்து, நேர்மையாகப் பதிவு செய்வதுதான் முக்கியம். எவ்வளவு சாதாரணமானவராக இருந்தபோதிலும் அவரிடம் சொல்வதற்கும், மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கும் செய்திகள் உண்டு என்கிற தன்னம்பிக்கையை சுந்தரராமசாமியின் இந்தக் கடிதங்கள் ஊட்டுகின்றன.

அய்யனார் ராமசாமியைத் தந்தைக்கும் மேலாகக் கருதியதற்கும், கருதுவதற்கும் எல்லா நியாயங்களும் உண்டு. தனது திருமணத்தின்போது கூட அவர்தான் தாலி எடுத்துத் தர வேண்டும் என்கிறார் அய்யனார். அய்யனாருக்கு ராமசாமி ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறார்; எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போ என்கிறார்.

திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு கடிதத்திலும் அய்யனாரின் மனைவி முத்துப் பிள்ளையின் நலத்தையும், குழந்தைப் பேறுக்குப்பின் மகன் ஆனந்த புத்தனின் நலத்தையும் அவர் விசாரிக்காமல் விடுவதில்லை. தனது குடும்பத்தில்அந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், தான் மிகவும் நேசித்த காலச்சுவடு இதழ்ப் பணி எம்மட்டில்இருக்கிறது என்பதையும் சு.ரா சொல்லத் தயங்குவதில்லை. சில்க் ஸ்மிதா வறுமையில் மரணமடைந்ததுகுறித்த தனது வருத்தம், உலகிலேயே ஆகச் சிறந்த உணவு தோசைதான் என்கிற அரிய கண்டுபிடிப்பு ஆகியவற்றையும் ராமசாமி அய்யனாரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவருக்குள் ஒளிந்திருந்த வேறு சில மனிதாயப் பரிமாணங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

தமிழில் கடிதங்கள் தொகுப்பாக வந்துள்ளது குறைவு. புதுமைப்பித்தன், வண்ணதாசன், கி.ரா, டேனியல், முதலானோரின் கடித வரிசையில் கடைசியாகச் சேர்ந்துள்ளது இத் தொகுப்பு. இலக்கியத்தரம், இதழியம் குறித்தெல்லாம் கறாரான பார்வை உடைய சு.ரா, ஒருவரின் கடிதங்கள் நூலாகத் தொகுக்கப்படுவதற்கான இலக்கணத்தையும்இக் கடிதங்களில் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

“கடிதங்களைஅச்சேற்றுவது பற்றிப் பொதுத் தீர்மானம் என்று வைத்துக் கொள்ள முடியாது. கடிதங்களின்உள்ளடக்கம் முக்கியம். காலத்திற்கும் படைப்பாளிக்குமான இடைவெளியும் முக்கியம். புதுமைப்பித்தன்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அவர் உயிரோடு இருந்த காலத்தில் வெளிவந்திருந்தால் மிகவும்அசட்டுத்தனமாக இருந்திருக்கும். கம்பன் சடையப்ப வள்ளலுக்கு ஒரு கூரான எழுத்தாணி வேண்டும்என்று ஒரு விருத்தம் எழுதியிருந்து அது இன்று கிடைத்தால் அதை நீங்கள் அச்சேற்றி வரலாற்றில்இடம் பெறலாம்.” (பக். 164)

அழகான வரையறைதான். இந்த வரையறை இந்தத் தொகுப்பிற்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்கிற கேள்வி ஒருவருக்கு எழுவது தவிர்க்க இயலாது. எனினும் புதிதாக எழுத வருபவர்களுக்கு சு.ரா கொடுக்கும் பல’டிப்ஸ்’ மிகவும் பயன்படும் என அய்யனார் உறுதியாக நம்புகிறார். அதில் ஓரளவு உண்மையுண்டு.

ஆனால் இந்த அடிப்படியில்பார்க்கும்போது சுந்தர ராமசாமி உயிருடன் இருந்து இந்தத் தொகுப்பை ‘எடிட்’ பண்ண நேர்ந்திருந்தால் இதில் பல கடிதங்களை அவர் நீக்கியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கடிதங்களில் சமகால அரசியல் குறித்து அதிகமில்லை. காங்கிரஸ் ஜெயலலிதா கூட்டிற்கு எதிராக மூப்பனார் கலைஞர் தேர்தல் கூட்டு உருவாவது பற்றி ஒரு கடிதத்தில் மகிழ்ச்சி, 1997 தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் குறித்த ஒரு வருத்தம், காமராசர் சிலை திறப்பு தொடர்பாக நாகர்கோவிலில் நடந்த கலவரம் பற்றிய ஒரு பதிவு ஆகியவற்றை மட்டுமே நாம் இந்த வகையில் காண முடிகிறது.

இக்கடிதங்கள் அனைத்தும் ஜூன் 1986 – செப் 2005 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இதே காலகட்டத்தில் நடைபெற்ற சோவியத் வீழ்ச்சி, இந்துத்துவ எழுச்சி, செப் 11, 2011க்குப் பின் உலகம் ‘மாறியது’ குறித்தெல்லாம் சு.ரா கவலைப்படவில்லையா, இல்லை அய்யனாருடன் பகிர்ந்து கொள்ளத் தக்கனவாக அவர் இவற்றையெல்லாம் கருதவில்லையா தெரியவில்லை.

அய்யனாரைத் தயார்செய்ததில் சு.ராவுக்கு ஒரு நோக்கும் போக்கும் இருந்ததும் கடிதங்களில் வெளிப்படுகிறது.’யாத்ரா’, ‘கொல்லிப்பாவை’, ‘இனி’, ‘இன்று’ .. இப்படியான ஒரு சிற்றிதழ்ப் பட்டியல்தான்அவருக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. அதே காலத்தில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’,”நிகழ்’, ‘மீட்சி’, ‘மார்க்சியம் இன்று’, ‘இலக்கிய வெளிவட்டம்’ முதலானவை கவனமாகத் தவிற்கப் படுகின்றன.

நகுலன், கந்தசாமி, ஞானக்கூத்தன், அ.மார்க்ஸ் ஆகியோர் குறித்த ஒரு ‘அலர்ஜி’ ராமசாமிக்கு இருந்துவந்தது யாவரும் அறிந்ததே, அது இக்கடிதங்களிலும் உறுதிப்படுகிறது. தான் ஏதோ எல்லோராலும் கடிந்து ஒதுக்கப்படுவதாக ஒரு சுய பச்சாதாப உணர்ச்சியும் சு.ராவிடம் வெளிப்படுகிறது. இது ஏனென்று தெரியவில்லை.வாழ்ந்த காலத்தில் அவருக்கு சாகித்ய அகாதமியும் ஞானபீடமும் கிடைக்காமற் போயிருக்கலாம். ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்த கவுரவம் எழுத்துலகில் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. வலிமையான ஒரு இதழும், வெளியீட்டு நிறுவனமும், அவற்றைத் தன்னை விமர்சிப்பவர்களுக்குஎதிராகப் பயன்படுத்தும் சாதுரியமும் அவரிடம் இருந்தது. எனினும் ஏன் இந்தச் சுய இரக்கம் ?

கறாரான இலக்கியப்பார்வையுடையவர் என்கிற சு.ரா பற்றிய பிம்பத்திலும் சில நேரங்களில் சிதைவு ஏற்படுவதற்கும் இக்கடிதங்கள் சாட்சி பகர்கின்றன. அய்யனாரின் மதிப்பிற்குரிய இன்னொரு ஆசான் தமிழின் முக்கிய கவிஞர்களில்ஒருவரான கவிஞர் அபிபுல்லா என்கிற ‘அபி’. அவரும் ஒரு அழகியல் உபாசகர். ல.ச.ராவை வியப்பவர். சுராவுக்கும் அபிக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்க அய்யனார் ரொம்பவும் சிரமப்படுகிறார். அபியின் கவிதைகள் குறித்து ராமசாமியை எழுத வைத்துவிட வேண்டுமென்று அய்யனார் ரொம்பவும் மெனக்கெடுகிறார். அபியின் கட்டுரைகளைத் தன் இதழில் பயன்படுத்திக் கொள்ள விழைந்தபோதும் அவரது கவிதைகள் பற்றிக் கருத்துரைப்பதை ராமசாமி தவிர்க்கிறார். அபியின் கவிதைகளோடு தன்னால் “ஒட்டமுடியவில்லை” என்கிறார் (பக். 231).

ஆனால் அதே நேரத்தில்காலச்சுவடு வட்டத்திற்கு நெருக்கமாக இருந்த சல்மாவின் கவிதைகள், “மிக நன்றாக இருக்கின்றன.அவருக்கென்று தனித்துவமான குரல் இருக்கிறது” என ஆரவாரிக்கிறார் சு.ரா. சல்மாவைத் தவிர வேறு யாரும் இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்றெனக்குத் தோன்றவில்லை.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அய்யனார் பணியாற்றியபோது அவருக்குப் போதிய ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதை சு.ரா ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிக்கிறார் (பக்.173). அதை விட்டுவிலகும்போது போதிய பணப் பயன் கிடைத்ததா என அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால் அந்த அக்கறை தனது சொந்த நிறுவனத்தில் அய்யனார் பணியாற்றிய காலத்தில் ராமசாமியிடம் வெளிப்படவில்லை. தான், “காயடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டேன்” என தான் காலச்சுவடிலிருந்து வெளியேற நேர்ந்தது குறித்து அய்யனார் இந்நூல் வெளியீட்டின்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  அது குறித்து ராமசாமி கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாதது அவர் ஒரு வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல, முதலாளியும்கூட என்பதையே காட்டுகிறது.

காலச்சுவடு பொறுப்பிலிருந்து ராமசாமி பெயரளவு வெளியேறியபோதும் மிக்க கரிசனத்தோடு அதன் பணிகளை வீட்டுக்குள்ளேயே எட்டநின்று கவனித்து வந்துள்ளதும் கடிதங்களில் வெளிப்படுகின்றது. எனினும் அதன் செயற்பாடுகள் குறித்து எந்த விமர்சனமும்அவருக்கு இல்லை. முழு திருப்தியுடன் இருந்தார் என்றே இந்தக் கடிதங்களின் வாயிலாக உணர்கிறோம்.

மனுஷ்யபுத்திரன், லல்லி, அய்யனார் மற்றுமுள்ள அன்றைய அவரது இலக்கியச் சுற்றம் ஆகியவற்றின் நட்பையும், அன்பையும், சந்திப்புகளையும் சு.ரா ரொம்பவும் ரசித்து மகிழ்ந்துள்ளதற்கும் இக்கடிதங்கள்சாட்சியம் பகிர்கின்றன.

அய்யனாருக்கு ராமசாமிஅளித்த அறிவுரைகளில் ஒன்று. “முதல் தரமானவற்றை மட்டுமே படி. இரண்டாம் தரமானவற்ரைப்
படிக்காதே” என்பது. இத்தகைய தர அளவுகோல்கள் குறித்த சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். பிறிதோரிடத்தில் அய்யனாரின் எழுத்து ஒன்றை “கணையாழித்தனமானது”, அதாவது இரண்டாம்தரமானது என்கிறார். (முதல்தரமானது அவர் பத்திரிகை). அப்படியாயின் ஒரு வாசகன் அதை படிக்க வேண்டியதில்லைஎன்றாகிறது. அப்படியாயின் இத்தகைய எழுத்துக்களின் கதி? சரி. இது ஒரு பிரச்சினை இல்லை.தன் வளர்ப்பு ஆகச் சிறந்ததை அறிந்து வளர வேண்டும் என்கிற ஒரு தந்தையின் விருப்பாக இதைஎடுத்துக் கொள்வோம். அப்படி எடுத்துக் கொள்வதற்கான ஒரு உறவு அவர்களுக்கிடையே உள்ளதைநாம் உணர முடிகிறது.

நூல் முழுவதும்மனிதர்களின் மீது ஒரு அவநம்பைக்கையை ராமசாமி வெளிப்படுத்திக் கொண்டே போவது வியப்பாகஇருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு இது எப்படிச் சாத்தியம்?

மொத்தத்தில் சுந்தரராமசாமியைப் புரிந்துகொள்ள இது இன்னொரு ஆவணம்.