அப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்

பாப்பாநாட்டில் ’சர்ச்’ கிடையாது. பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டுக்குத்தான் போக வேண்டும். அப்பா சர்ச்சுக்குப் போவது கிடையாது, அம்மா போவதைத் தடுப்பதும் கிடையாது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சபுரம்தான் அம்மாவின் ஊர். அம்மா வீட்டில் நான் பிறந்தபோது (1949) மன்னார்குடி பங்கு கோவிலுக்கு என்னைப் பெயர் சூட்டத் தூக்கிச் சென்றுள்ளனர். திரு முழுக்கு அளிக்கும் நேரத்தில் மார்க்ஸ் எனும் பெயரை அப்பா சொல்ல அந்தப் பங்குசாமியார் (பெயர் தெரியவில்லை) அந்தப் பெயரை எல்லாம் சூட்ட முடியாது எனச் சொல்லி விட்டார். அப்படியானால் நான் இவனை எந்த மத அடையாளமும் இல்லாமலேயே வளர்த்துவிட்டுப் போகிறேன் எனஅப்பா என்னைத் தூக்கி வந்துள்ளார்.

என் அம்மா வழி தாத்தா குடும்பம் ரொம்பவும் பக்தி நிறைந்தது. ஊர்க்காரர்கள் போய்ப் பேசி பிறகு ஏதோ சமாதனம் ஆகி இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

#######

மார்க்ஸ் எனப் பெயர் வைப்பதில் சிக்கல் எழுந்தது நான் விவரம் அறியாதபோது நடந்தது. விவரம் அறிந்தபின்னும் இப்படி ஒரு நிகழ்ச்சி. சுமாரான மதிப்பெண்களுடன் 11ம் வகுப்பு (அன்றைய SSLC) பாஸ் பண்ணி இருந்தேன் (1963). பி.யூ.சி இல் சேர மூன்று கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். முதலில் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது.

கல்வித்துறையில் அனுமதிபெற்று குறை வயதில் (under age) தேர்வு எழுதியவன் நான். வகுப்பிலேயே நான்தான் சின்னப் பையனாக இருப்பேன். ஜோசப் கல்லூரி முதல்வர் ஒரு பாதிரியார். புன்னகைத்தவாறே என் சான்றிதழ்களைப் புரட்டியவர் திடீரெனக் கடு கடு ஆனார். “நீ ரோமன் கத்தோலிக்கன்தானே?” எனச் சீறினார். ஆம் என்று தலை அசைத்தேன். “இது என்ன பெயர்? மார்க்ஸ்,லெனின் என்றெல்லாம் எந்தச் சாமியார் உனக்குப் பெயர் வைத்தார்?” என்றெல்லாம் கடு கடு தொடர்ந்தது. அப்பா எரிச்சலானார். அவருக்கு ஒன்றும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ப்பதில் பெரிய ஆர்வமில்லை. அம்மாவின் பிடிவாதத்தில்தான் வந்திருந்தார்.

நான் இடம் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து போனேன். என் கண்கள் கெஞ்சின. அப்பா அமைதியாக நின்றிருந்தார். “போ, ரெக்டாரைப் பார்த்து அனுமதிக் கடிதம் வாங்கி வா. அப்புறம் பணம் கட்டலாம்,”

ரெக்டார் அலுவலகத்திற்குப் போனோம். மாலை 4 மணிக்குத்தான் பார்க்கலாம் என்றார்கள். அப்பா என்கையைப் பற்றிக் கொண்டார். “போகலாம் வா” என்றார். நான் தயங்கினேன்.”அட வாடா” என்று இழுத்துச் சென்றார்.

வீட்டிற்குவந்தால் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது. இன்றுநினைத்தாலும் இனிக்கும் ஒரு நான்காண்டு கால கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்த்தது.

இதுநடந்து அரை நூற்றாண்டு ஆகி விட்டது. இப்போதெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை. 1970 களில் உருவான கிறிஸ்தவ விடுதலை இறையியல் அவர்களில் பெரிய மாற்றங்களை இன்று ஏற்படுத்தியுள்ளதும் அதற்கொரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

##########

அப்பாவைச் சந்திக்கப் பலரும் வருவார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள், அவர்களில் பலர் மலேசியாவில் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்தவர்கள்; ஓரிருவர் அப்பாவைப் போலவே நாடு கடத்தப்பட்டவர்கள். இன்னும்சிலர் உள்ளூர் கம்யூனிஸ்டுகள். அப்புறம் நிறைய திராவிட இயக்கத்தவரும் அப்பாவுக்கு நண்பர்கள்.

வீட்டில் பெரிதாக சாமி படங்கள் , ஜெபம் சொல்லுதல் எல்லாம் கிடையாது. அம்மா கிறிஸ்துமஸ் முதலான தினங்களில் ஒரத்தநாடு சர்ச்சுக்குப் போவாங்க. அருகில் உள்ள வீரக் குறிச்சி அந்தோனியார் கோவிலுக்கும் அவ்வப்போது போய் வருவதுண்டு. நானும் தம்பி தங்கைகளும் கிறிஸ்துமஸ் போன்றநாட்களில் அம்மாவுடன் போய் வருவோம்.

பாப்பாநாடு எங்களின் பூர்வீகக் கிராமம் கிடையாது. அங்கு கிறிஸ்தவக் குடும்பங்களும் அதிகமில்லை.எனது பழக்கங்கள் யாவும் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களுடன்தான். கடவுள் பக்தி எனக்கு இருந்ததில்லை. கடவுள் வெறுப்பும் இருந்தது கிடையாது. கடவுள் இருந்தா நல்லது; இல்லாவிட்டால் அதைவிட நல்லது என்கிற ரீதியில் வளர்ந்தேன்.

#############

அப்பா மலேசியாவிலிருந்து தப்பி வந்தபின் அவரை நாடு கடத்தியதாக அன்றைய மலேசிய பிரிட்டிஷ் அரசு அறிவித்ததை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்பா இங்கு வந்தபின்தான் திருமணமாகி நான் பிறந்தது.

அப்பா வந்த சில மாதங்களுக்குப் பின் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்த சுப்பையாவை நாடு கடத்தினார்கள். அந்தக் கதையை நான் ஒரு மலேசிய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். இரண்டு தலைமுறைகளுக்கு முன் திண்டுக்கல் மணப்பாரைப் பகுதியிலிருந்து கூலியாய்ச் சென்ற தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சுப்பையா. அவர் தம்பி முத்துச்சாமி. சின்ன வயதில் தாயை இழந்தவர்கள். அவர்களின் அப்பா பழனியாண்டி நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்போது மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த அப்பாவின் வளர்ப்புப் பிள்ளைகள் ஆயினர். பிள்ளைகள் எனச் சொல்கிறேனே ஒழிய அப்பவுக்கும் சுப்பையா அண்ணனுக்கும் வயது வித்தியாசம் ஒரு பத்துஅல்லது பன்னிரண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.

சுப்பையா நாடு கடத்தப்பட்டு வந்த சிறிது காலத்தில் முத்துச்சாமியும் இங்கு வந்துவிட்டார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது. அப்பாவே பெரும் வறுமையில் இருந்தபோதும் அவர்களையும் தன் குடும்பத்தோடு வைத்துக் கொண்டார்.

சுப்பையா அண்ணனுக்குத் திருமணம் செய்ய முயற்சித்தார் அப்பா. யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.எனக்கு அக்கா முறையுள்ள ஒருவர். பெயர் மேரி அந்தோணியம்மாள். யாரும் இல்லாதவர். ஒருஉறவினர் வீட்டுக்கு வந்திருந்தார், அப்பா சுப்பையாவை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தி, “பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். அவர் சம்மதித்தவுடன் உள்ளூர் தி.மு.கதலைவர் துரைஅரசன் என்பவர் தலைமையில் அவர்களுக்குக் குத்தகைக்காடு எனும் கிராமத்தில்திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம். சுப்பைய்யாவை அண்ணன் என்றும் மேரியை அக்கா என்றும் அழைப்பேன். பின்னாளில் பள்ளிக்கூடம் சென்றபின் இந்த உறவு முறையைச் சுட்டிக்காட்டிக் கூடப் படிக்கும் பசங்கள் சிரிப்பார்கள்.

முத்தண்ணனுக்கு அவ்வளவு எளிதாகத் திருமணம் செய்துவிட இயலவில்லை. உறவுப் பெண் ஒருவர். பெயர் வியாகூல மேரி. ஏழைக் குடும்பம். எனினும் சாதி தெரியாத பையனுக்குப் பெண் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. பல நாள் பேச்சு வார்த்தைகள் நடந்தன. முத்துச்சாமி பஞ்சாயத்து போர்டு கிளார்க். தபால் துறையில் ஈ.டி ஊழியர் வேறு. எல்லாவற்றையும் யோசித்து இறுதியில் பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றித் திருமணம்செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை அப்பா ஏற்றுக் கொண்டார்.

லாரன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முத்தண்ணனுக்கு சர்ச்சில் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அப்போது ஒரத்தநாடு பங்குத் தந்தையாக இருந்தவர் தான் ஃபாதர் சில்வேயிரா. கருணை கசியும் கண்கள், புன்னகை தவழும் முகம், மிக எளிமையான தோற்றம், தலையில் ஒரு சட்டித் தொப்பி ஆகியவற்றுடன் இன்னும் என் நினைவில் நிற்கிறார். நீண்ட வெள்ளை அங்கி தரிக்காமல் அவரை நான் பார்த்ததாக நினைவில்லை.

முத்துச்சாமி பற்றி அவர் விசாரித்தபொழுது அவருக்கு ஒரு அண்ணன் இருப்பது, அவருக்கு ஒரு கிறிஸ்தவப்பெண்ணை அப்பா திருமணம் செய்து வைத்திருப்பது எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

#########

ஒருநாள் ஃபாதர் சில்வேயிரா என் வீட்டிற்கு வந்தார். அப்பா அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தார். அம்மாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவர் முன் முழந்தாள் இட்டுச் சிலுவை வாங்கிக்கொண்டார். என்னை அழைத்த பாதிரியார் முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார், பின் மெதுவாகத்தான் வந்த நோக்கத்தை அவிழ்க்கத் தொடங்கினார்.

இப்படிஒரு கிறிஸ்தவப் பெண்ணை ஒரு இந்துப் பையனுக்குத் திருணம் செய்வித்து அவள் மீது கிறிஸ்துவின்மீது நம்பிக்கையற்ற ஒரு வாழ்க்கையைச் சுமத்தி இருப்பது நியாயமில்லை என்றார்.

“ஃபாதர், உங்களுக்குத் தெரியும். நானே சர்ச்சுக்கெல்லாம் போகாதவன். இந்த நம்பிக்கை எல்லாம் எனக்கே கிடையாது” – என அப்பா தொடங்கியவுடன்,

“எனக்கு அதெல்லாம் தெரியும். உங்கள் நம்பிக்கையைப் பற்றி நான் பேச வரவில்லை. நம்பிக்கை உள்ளஒரு பெண்ணை, அவளுக்கு யாருமில்லை என்பதற்காக இப்படிச் செய்திருப்பதைத்தான் கேட்க வந்தேன்.”

“அவர்களுடைய நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இப்ப என்ன செய்வது? அவங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. அடுத்த குழந்தையும் பிறக்கப் போகுது. என்ன செய்ய முடியும்?”

“அதை நான் பாத்துக்கறேன். அவங்க ரண்டு பேர்கிட்டையும் நான் பேசுறேன். உங்க முன்னாடியே கேட்கிறேன்.அவங்க சம்மதிச்சா அவங்களுக்கு ஞானஸ்நானம் பண்னி மறுபடியும் சர்ச்சில் திருமணம் செஞ்சு வைக்கிறேன்” என்றார் ஃபாதர்.

எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டு உள்ளே சோடா சுற்றிக் கொண்டிருந்த அண்ணனை அப்பா அழைத்தார். தம்பி முத்துச்சாமி, லாரன்ஸ் முத்துச்சாமி ஆகி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தில் ஓர் அங்கமாகி உறவு முறைகளைப்பேணி வருவதைக் கவனித்து வந்த அண்ணன் சுப்பையா அருட் தந்தை சில்வேயிராவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மலேசியக் காடொன்றில் ஒரு சீனப் பெண் போராளியுடன் மறைந்திருந்தபோது பிரிட்டிஷ் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பிடிபட்டவர் அண்ணன் சுப்பையா. அந்தப் பெண் துப்பாக்கிக் குண்டடி பட்டுவீழ்ந்தவுடன், “இந்தோ தொங்சி (இந்தியத் தோழனே), நீ ஓடிப்போ. பிழைத்துக் கொள். ஓடும்போது உன் துப்பாக்கியை சேற்றில் புதைத்துவிட்டு ஓட மறவாதே…” என அவள் சொல்லியதையும், அன்ணன் திரும்பித் திரும்பிச் சொல்வார். ஓடிப் பிடிபட்டதையும், பல மாதச் சித்திரவதைகளுக்குப் பின், பிடிபட்ட தருணத்தில் கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதால் உயிர்ப் பிச்சை அளிக்கப்பட்டுத் தான் நாடுகடத்தப்பட்டதையும் அண்ணன் நிலவொளியில் மணல் மேட்டில் அமர்ந்து சொன்னதைப் பலமுறை கேட்டவன் நான்.

அதைத் திருப்பித் திருப்பிக் கேட்க எனக்கும் அலுக்காது. சொல்ல அவருக்கும் அலுக்காது.

பகுத்தறிவுச் சிந்தனைகள், மார்க்சீய நூல்கள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடுகளை ஏற்படுத்தியவர் அண்ணன் சுப்பையாதான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை உரத்த குரலில் பாடுவார். 12 கிமீ சைக்கிள் மிதித்து இரவு இரண்டாம் ஆட்டம் ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு என்னை அவர் அழைத்துச் சென்றதும் திரும்பி வரும் வழி எல்லாம் “மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதித்திடல் நம் கடமை…”, “கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல..” என உரத்த குரலில் அவர் பாடி வந்ததும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. வீரக்குறிச்சிக்கும் கரம்பயத்திற்கும் இடையில் ஒரு சிறு காட்டாற்றுப் பாலம் இருக்கும். அதன் மீது அந்த நள்ளிரவில் அண்ணன் அனாயசமாகப் பாடிச் செல்ல, நான் சைக்கிள் கேரியரில்அண்ணனின் இடுப்பைப் பற்றிக் கொண்டு இதோ போய்க் கொண்டிருக்கிறேன்…..

##############

அண்ணனுக்கு அன்று மேல் எழுந்து கொண்டிருந்த தி.மு.க வையும் அண்ணா வையும் சுத்தமாகப் பிடிக்காது. எனக்கும் அவர் மூலமாக அந்த வெறுப்பு தொற்றிக் கொண்டது.

“இந்தத்திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி….

கடவுள்இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு….”

என்றெல்லாம் உரக்கப் பாடும் அண்ணன் சுப்பையா அன்று அந்த முடிவு எடுத்ததை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.

############

ஒரத்தநாடு மாதா கோவிலில் எட்டுமாத கர்ப்பிணியான மேரி அந்தோணியம்மாளுக்கும், வின்சென்டாகப் பெயர் மாற்றித் திரு முழுக்கு அளிக்கப்பட்ட அண்ணன் சுப்பையாவுக்கும் மீண்டும் ஒருமுறை திருமணம்செய்வித்தார் ஃபாதர் சில்வேயிரா. ஸ்டெல்லா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் திருமுழுக்குஅளிக்கப்பட்ட அவர்களின் முதல் மகள் என் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவும் எனது தங்கைகளும் நானும் அருகில் நின்றிருந்தோம். வேறு யாருக்கும் அழைப்பில்லை.

“இறைவனால் இணைக்கப் பட்டவர்களை மனிதர்கள் பிரிக்காதிருப்பார்களாக..” என்று கூறி அருட் தந்தை சில்வேயிரா மணமக்கள் மீது புனித நீரைத் தெளித்தபோது தான் பிரியமுடன் நேசித்த தன் வளர்ப்பு மகனுக்கு ஆசி கூற அப்பா அங்கில்லை.

அஸ்ஸாம் கலவரமும் வங்கதேச முஸ்லிம்களும் 

[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி]

அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 500 கிராமங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் மக்கள் வரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 273 முகாம்களில் இவர்கள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும்கூட இல்லை என்பதோடு பெரிய அளவில் இங்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி செய்திகள் குவிகின்றன. இத்தகைய முகாம்களின் நிலை எப்படி இருக்கும் என இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியடில்லை.

கொல்லப்பட்டவர்களிலும் அகதிகளாக்கப்பட்டவர்களிலும் சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பிறர் போடோ பழங்குடியினர். போடோ பழங்குடி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் அருகருகே வாழ்ந்து வந்த போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலையில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளஞர்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாகச் சென்ற ஜூலை 19 அன்று ‘போடோ விடுதலைப் புலிகள்’ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 20 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில்தான் மேற்குறிப்பிட்ட அவலங்கள் அரங்கேறின. இந்த நாட்களில் அஸ்ஸாம் தலைநகரான குவாகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த சுமார் 32 வேக ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, குவாகாட்டி ரயில் நிலையத்தில் பல்லாயிரம்பேர் 72 மணி நேரம் போதிய உணவு, தண்ணீரின்றித் தவித்திருந்தனர். விமானச் சேவைகள் பயணத் தொகையை இரட்டிப்பாக்கின. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் ஓடி வந்து பார்த்துவிட்டு இது ஒரு தேசீய அவமானம் என்றார். இப்படியான ஒரு கலவரத்திற்கு எல்லாவிதமான சாத்தியங்கள் உள்ளன என அறிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆறு நாட்கள்வரை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவுமில்லை.

இன அடிப்படையில் கலவரங்கள் உருவாவதும் மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆக்கப்பட்டும் துன்புறுவதும் அஸ்ஸாமுக்குப் புதிதல்ல. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இது நடைபெற்று வருகிறது. வெளியார் ஊடுருவல் மற்றும் குடியுரிமை வழங்குதல் தொடர்பாக 1970 மற்றும் 80களில் அங்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றதை அறிவோம். 1983 இல் நடைபெற்ற நெல்லிப் படுகொலையில் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். இன்றுவரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தி யாரும் தண்டிக்கப்படவுமில்லை. வெளி நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குடியுரிமை குறித்த 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் உடன்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பும் 1993-94ம் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தம் வீடுவாசல்களை இழந்து ஓடவேண்டியதாயிற்று. எனினும் இதுவரை நடந்த இந்தக் கலவரங்கள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியினர் உள்ளிட்ட அஸ்ஸாமியர்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்குமான மோதல்கள் என்பதில்லை. 1996-98 இல் சந்தாலிகள், ஓரான் மற்றும் முண்டா முதலான பழங்குடியினர் இலக்காக்கித் தாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அஸ்ஸாமின் பூர்வகுடியினரும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நில உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுமான போடோக்கள் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் தொடங்கினர். 1993ல் போராட்டத்தை முன்னெடுத்திருந்த ‘அனைத்து போடோ மாணவர் இயக்கத்திற்கும்’ (ABSU) அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓரளவு சுயாட்சித் தன்மையுடைய ‘போடோ சுயாட்சிக் கவுன்சில்’ (BAC) உருவாக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடையாத ஏராளமான போடோ இளைஞர்கள் தலைமறைவாயினர். முழு மாநில அந்தஸ்து கோரி தீவிரமான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ‘போடோ நாட்டிற்கான தேசிய ஜனநாயக முன்னணி’ (NDFB) மற்றும் ‘போடோ விடுதலைப் புலிகள்’ (BLT) எனும் அமைப்புகள் கடும் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசும் தன் தரப்பில் இன்னும் கொடும் வன்முறைகளுடன் இதை எதிர்கொண்டது.

2003ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக போடோ விடுதலைப் புலிகள் தம் பெயரை ‘போடோ மக்கள் முன்னணி’ (BPF) என மாற்றிக் கொண்டு, புதிய ஒப்பந்ததின்படி உருவாக்கப்பட்ட ’போடோ பிரதேச கவுன்சிலில்’ (BTC) பங்கேற்றது. அதன் தலைவர் ஹகராமா மொகிலாரி கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் ஆனார். எனினும் அனைத்து போடோ மாணவர் இயக்கமும் போடோ தேசிய ஜனநாயக முன்னணியும் முழு மாநில அந்தஸ்து என்கிற கோரிக்கையைத் தொடர்ந்தன. 2003 ஒப்பந்தத்தில் போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கறாராக வற்புறுத்தப்படாததன் விளைவாக போடோ விடுதலைப் புலிகள் மற்றும் போடோ தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் திரிவது என்பது போடோலான்டில் அன்றாட நிகழ்வுகளாகியது.

தற்போதைய கலவரத்தில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியினர் வழக்கமாகப் பயன்படுத்துகிற எந்திரத் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் முஸ்லிம்களைக் கொல்வதற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என உளவுத்துறை கூறுகிறது. ஹகராமா மொகிலாரியும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

மொகிலாரியின் தலைமையில் உள்ள போடோ பிரதேச கவுன்சில் ஊழலுக்கும் திறமையின்மைக்கும் பெயர்பெற்ற ஒன்றாகிவிட்டது. தாருண் கோகோய் தலைமையிலான அஸ்ஸாம் மாநிலக் காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. இன்னொருபக்கம் சட்ட ஒழுங்கு அதிகாரம் அதாவது போலீஸ் அதிகாரம் இல்லாத போடோ பிரதேச நிர்வாகத்தால் தமக்கு எந்தப் பயனுமில்லை என்கிற கருத்து போடோக்களிடம் உள்ளது. போடோ மாவட்டக் கவுன்சிலுக்குள் பழங்குடியினரல்லாத அந்நியர்கள் யாரும் 2003க்குப்பின் நிலம் வாங்கக்கூடாது. அதாவது முஸ்லிம்கள், அஸ்ஸாமுக்குள் பழங்குடியினராக வரையறுக்கப்படாத சந்தாலிகள் ஆகியோர் இங்கு புதிதாக நிலம் வாங்கக்கூடாது. ஆனால் முன்னதாக இப்பிரதேசத்தில் அவர்கள் பெற்றிருந்த நில உரிமை செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவையும் போடோக்கள் ஏற்பதில்லை. அவர்களின் கருத்துப்படி ஏற்கனவே அவர்களின் நிலங்களெல்லாம் பறிபோய்விட்டதால் பழைய நில உரிமைகளை ஏற்க முடியாது.

இங்கொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஸ்ஸாம் பழங்குடியினரிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் போடோக்கள்தான் எனினும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே. போடோ பிரதேச மாவட்டத்திற்குள்ளும் கூட இன்று அவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. சுயாட்சி உரிமை பெற்றுள்ள இந்த மாவட்டக் கவுன்சிலில் மூன்றில் இரு பங்கினர் போடோ அல்லாதவர்கள். இவர்கள் எல்லோரும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களும் அல்லர். சந்தாலி, முண்டா, ஓரான் போன்ற இதர பழங்குடியினர், ராஜ்பங்சிகள், நேபாளிகள், மார்வாரிகள், முஸ்லிம்கள் எனப் பலரும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இவர்கள் ‘போடோ அல்லாதவர் சுரக்‌ஷா சமிதி’ (NBSS) என்றொரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு தமது பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையாகத் தாமிருந்தும் அதிகாரத்தில் தமக்கிடமில்லை என்பது இவர்களின் பெரும் குறை. பட்டியல் சாதியில் இடம் மறுக்கப்பட்டுள்ள கோச் ராஜ்பங்க்சிகள் தாம் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியை உருவாக்கி அதற்குக் ‘காம்டாபூர்’ எனப் பெயரிட்டு சுயாட்சி வழங்கக் கோருகின்றனர்.

வழக்கம்போல பிரச்சினை மிகவும் சிக்கலானது. இந்துத்துவவாதிகள் இதை ‘இந்து’ போடோக்களுக்கும் “அந்நிய’ முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரமாகக் கட்டமைக்க முயல்கின்றனர். எண்பதுகளுக்குப் பின் உலகெங்கிலும் உருவாகியுள்ள இந்த அடையாள அரசியலை (identity assertion) இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சொல்வதுபோல போடோக்கள் எல்லோரும் இந்துக்களல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள கிறிஸ்தவம் போடோக்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வேர்பிடித்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் எல்லோரும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுள்ளும் கோரியா, டேசி எனப் பல பிரிவுகள் உண்டு. எல்லோரும் அந்நியர்களுமல்ல. எல்லோரும் தற்போது ஊடுருவி வந்தவர்களுமல்ல. வங்க தேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அஸ்ஸாம் மாவட்டங்களில் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளைக் காட்டிலும் மக்கள்தொகையின் அளவு மற்றும் பண்பு மாற்றம் (demographic change) சற்றுக் கூடுதல்தான் என்றபோதிலும் இந்தக் கூடுதல் “சற்று”தான் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் தொகைக் கணக்கீடுகளிலிருந்து இந்தப் பத்தாண்டு சனத்தொகை மாற்றம் (decadal population increase) கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆண்டு        இந்தியா        அஸ்ஸாம்         துப்ரி             தேமாஜி            கர்பி ஆங்லாங்

 

 

1971-91           54.51               54.26                     46.65             107.50                      74.72

 

1991-01           21.54                18.92                     22.97             19.45                        22.72

 

2001-11           17.64                 16.93                    24.40              20.30                        18.69

 

துப்ரி, தேமாஜி, கர்பி ஆம்லாங் என்கிற எல்லையோர மாவட்டங்களில் ஒவ்வொரு பத்தாண்டு சனத்தொகை மாற்றமும் இதர இந்திய மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் மேற்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்படுகிறது. 1971;91 ஆண்டுக் கணக்கு இருபதாண்டுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ளவும். 1981 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வேறுபாடு தொடக்கத்தில் சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும் போகப் போக இது பெரிதும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்துத்துவ சக்திகள் சொல்வதுபோல இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலைச் சாகுபடிக்காக வங்க தேசத்திலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் ஆசைகாட்டியும், கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இலங்கை மற்றும் மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளிகள் கொண்டு செல்லப்பட்டதுடன் இதை ஒப்பிடலாம். இது தவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து ‘செட்டில்’ ஆகியுள்ளனர். புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா சொல்வதுபோல போடோக்கள் எதையும் சற்று ‘மெதுவாக’ச் (லேஹி…..லேஹி) செய்பவர்கள். கடும் உழைப்பாளிகளான வங்கதேச முஸ்லிம்கள் எதிலும் வேகம் காட்டுபவர்கள். நிலப் பஞ்சம் மிகுந்த வங்கப் பகுதியிலிருந்து இவர்கள் வளமிக்க பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கின் ஆற்றங்கரையோரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறி விவசாயம் செய்து நிலங்களை உரிமையாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தவை.

போடோக்களின் பழங்குடி மனப்பாங்கில் நிலத்தைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கு இடமிருக்கவில்லை. பாசன விவசாயத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. சமூக உடைமை, இடம் பெயர் விவசாயம் என்பதாக இருந்த அவர்கள் நில உரிமையை இழந்த வரலாறு இதுதான். ஆற்றங்கரையோரம் குடியேறி இடம்பிடித்த முஸ்லிம்கள் காலப்போக்கில் சற்று உள்ளேயும் இடம்பெயர்ந்தனர். தேர்தல் அரசியல் உருப்பெற்றபோது குறிப்பிட்ட அளவு அரசியலதிகாரம் பெறவும் தொடங்கினர்.

இதெல்லாம் ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீபகாலத்தில் நடைபெற்ற பெரிய அளவு புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதும் ஏற்பட்டதுதான். மேற்கண்ட அட்டவணையில் 1971-91 காலகட்டத்தில் ஏற்பட்ட சற்றுக் கூடுதலான அதிகரிப்பு இந்தப் பின்னணியில் உருவானதே. இந்த அதிகரிப்பெல்லாம் கூட வெறும் வங்கதேச முஸ்லிம்களால் மட்டுமே ஏற்பட்டது என்பது தவறு. தேமாஜி மற்றும் கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 1.84 மற்றும் 2.22 சதங்கள் மட்டுமே. இன்று கலவரம் நடந்துள்ள கோஹ்ராஜ்பூரில்தான் கடந்த பத்தாண்டில் அஸ்ஸாமிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள்தொகை அதிகரிப்பு (5.19சதம்) நடந்துள்ளது.

அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடல் அவிழ்த்து விடப்பட்டபின் இந்திய அரசு எல்லையோர ஊடுருவலைப் பெரிய அளவில் தடுத்துள்ளது. 4000கி.மீ நீளமுள்ள எல்லையில் 80சதம் இரட்டை முள்வேலியாலும் , தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் மின் விளக்குகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லை ஓரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருளை ஊடுருவக்கூடிய தொலைநோக்கிகளைக் கொண்டு இரவு பகலாக ஊடுருவல் கண்காணிக்கப்படுகிறது. வங்கதேசத் தூதரக அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவிய 600 வங்கதேச முஸ்லிம்கள் இன்று இந்தியச் சிறைகளில் அடைபட்டுள்ளனர். தவிரவும் அமார்த்யா சென் உருவாக்கிய ‘பிரடிசி ட்ரஸ்டின்’ முன்னாள் இயக்குனர் ஏ.ஜே.பிலிப் கூறியுள்ளதுபோல அஸ்ஸாமின் இப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் சமூக வளர்ச்சிப் புள்ளிகள் இன்று ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து இங்கே இப்போது புலம்பெயர்வதற்கான தேவையுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க அஸ்ஸாம் பற்றி எரிந்து கொன்டிருந்தபோதே அத்வானி, அருண்ஜேட்லி, நரேந்திரமோடி போன்றோர் பிரச்சினையை அந்நிய ஊடுருவலாகத் திசை திருப்பியதிலும், முஸ்லிம் வெறுப்பைப் பரப்பியதிலும், மோடி ஒருபடி மேலே போய் “இந்த ஊடுருவல் தேசப் பாதுகாப்பிற்கே ஆபத்து” என்பதாக முழங்கியதிலும் வழக்கம்போல எள்ளளவும் நியாயமில்லை. 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி (1). 1966க்கு முன் வந்தவர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை உண்டு. (2). 1966லிருந்து மார்ச் 24, 1971 வரை இடம்பெயர்ந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அடுத்த பத்தாண்டுகளில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். (3). 1971 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கு வந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி பெரிய அளவில் 1971க்குப் பின் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் நிகழவில்லை என்பதால் தற்போது கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டுமுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அனைவருமே சட்டபூர்வமான குடிமக்கள்தான். இதில் கொடுமை என்னவெனில் இன்று அகதிகளாகியுள்ள முஸ்லிம்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அத்தோடு அவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.

பிரச்சினை வழக்கம்போலச் சிக்கலானது. பூர்வகுடிகளான போடோக்கள், வங்கத்திலிருந்து தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம்கள் இருசாரருமே இன்று சமூகத்தின் ஆக அடிநிலையில் இருப்பவர்கள். இந்த முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்த வேர்களை இழந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. அவர்களை அந்நியர்கள் எனச் சொல்லி வெளியேற்றுவது அடிப்படை மனித நியாயங்களுக்குப் புறம்பான ஒன்று. போடோக்கள் முஸ்லிம்கள் இருசாரரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருப்பது பத்திரிக்கைப் பேட்டிகளைப் படிக்கும்போது விளங்குகிறது. பொருளாதார ரீதியாக அப்பகுதி மேம்படுத்தப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது முதலான நடவடிக்கைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சத்திலிருந்து விடுவிப்பதன் மூலமாகவுமே அங்கே அமைதி ஏற்படுத்தப்படவேண்டும். இன, மத வெறுப்புகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாட்டெல்லைகள் என்பன மிகச் சமீபமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால் மனித உறவு காலங்காலமானது. இன்னுங் காலங்காலமாய்த் தொடரக்கூடியது.

Top of Form

 

ஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்

(2012ல் இரு வாரங்கள் தினந்தோறும் ஜூ.வி வாசகர்களுக்கென தொலைபேசியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதற்கென பதிவு செய்யபட்ட உரைகள்)

1. நகைச்சுவை

மனித வாழ்க்கையில நகைச்சுவைக்கு ஒரு பங்கு உண்டு. நமது இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படம், ஊடகங்கள் எல்லாவற்றிலும் நகைச்சுவைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ‘நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிட்டால் நான் எப்போதோ செத்துப் போயிருப்பேன்னு காந்தி சொல்லியிருக்கார். நகைச்சுவை என்பது வெறுமனே சிரிச்சுட்டுப் போகிற விஷயம் மட்டும் இல்லை, அதன்மூலம் சிந்திக்கவும் வைக்க முடியும், அரசியலை நுணுக்கமா விமர்சனம் செய்ய முடியும். முல்லா, தெனாலிராமன் போன்றோர் இப்படிச் சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்தோர்.

ஹிட்லருடைய கடுமையான பாசிச ஆட்சியில் நகைச்சுவை மூலம் கேலி செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மரண தண்டனை கூட வழங்கப்பட்டது. அப்படியும் இரகசியமாக பல நகைச்சுவைகள் புழங்கி வந்தன. அதில் ஒன்று:

ஹிட்லர் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரண்டு நாள் முன்னதாகவே அந்த ஆஸ்பத்திரியில் ஏகப்பட்ட டென்ஷன்; கெடுபிடிகள். அங்கிருந்த 300 பைத்தியங்களையும் வரிசையாக நிற்க வைத்து, சீருடை கொடுத்து ஹிட்லர் வந்தவுடன் ஃபாசிஸ்டுகளின் வழக்கப்படி கையை நீட்டி சல்யூட் செய்யக் கடும் பயிற்சி கொடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்ட்தில் ஹிட்லர் வந்தார். பைத்தியங்கள் சீருடையுடன் வரிசையாக நின்றிருந்தார்கள். “சல்யூட்” என்று சத்தம் வந்தவுடன் எல்லாப் பைத்தியங்களும் கையை நீட்டி சல்யூட் செய்தார்கள். இறுகிய முகத்துடன் ஹிட்லர் எல்லோரையும் பார்வையிட்டு வந்தார். அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ஒருவர் மட்டும் சல்யூட் பண்ணாமல் நின்றிருந்தார். அவர் அருகே நின்ற ஹிட்லர்’ “ஏன் நீ சல்யூட் பண்ணவில்லை?” எனக் கடுமையாகக் கேட்டார்.

நடுங்கிப்போன அவர் மெல்லிய குரலில் பதில் சொன்னார்: “ மேய்ன் ஃப்யூஹ்ரர், நான் பைத்தியமில்லை. நர்ஸ்…”

சமகால அரசியல் நகைச்சுவை ஒன்றைச் சொல்லட்டுமா? அமெரிக்கர்கள் வணிக இலாபத்திற்காகக் காசு கொடுத்து எதையும் வாங்கி விடுவார்கள் என்பதைக் கேலி செய்யும் நகைச்சுவை இது:

போப் ஆண்டவர் ஒரு நாள் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார், அருகே தோட்டக்காரர் புற்களை வெட்டி அழகு செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு அமெரிக்கன் நீண்ட கோட், உயரத் தொப்பி சக்தம் வந்து போப் ஆண்டவர் முன் பணிவாக வணக்கம் சொல்லி ஏதோ கிசு கிசுத்தான். போப் ஆண்டவர் கடுப்பாகி, “நோ, நோ” அதெல்லாம் முடியாது” என்றார். உடனே அந்த அமெரிக்கன் இன்னும் பணிவாக, “5 மில்லியன் டாலர்..” என்றான். “சாரி..அதெல்லாம் முடியாது” என இன்னும் கடுமையாகச் சொன்னார் போப். “ பத்து மில்லியன் டாலர் …” என இழுத்தான் அமெரிக்கன். “முடியாது..முடியாது” என இன்னும் கோபமாகச் சொன்னார் போப் ஆண்டவர். “ சரி ஃபாதர் 10 பில்லியன் டாலர்” என்று அழுத்தமாகச் சொல்லி போப் ஆண்டவரின் முகத்தைப் பார்த்தான் அமெரிக்கன். போப் ஆண்டவர் கடுங்கோபமாகி “ நோ, நோ கெட் அவுட்..” என்று கத்தியவுடன் அந்த அமெரிக்க்ன் ஓடிப்போனன்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் போப் அருகில் சென்று, “சாமி, நீங்க இப்பிடிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லியே, அந்த அமெரிக்கன் அப்படி என்ன சொன்னான்?” போப் ஆண்டவர் கோபம் தணியாமல் சொன்னார்: “ ஒண்ணுமில்ல, நாம ‘சர்ச்’ல ஜெபம் சொல்லி முடிச்சவுடன் ‘ஆமென்’னு சொல்றோம் இல்லியா, அதுக்குப் பதில் ‘கொகோ கோலா’ன்னு சொல்லணுமாம்..”

2. காந்தியை மறு வாசிப்பு செய்தல்

சமீபத்தில் என்னிடம் பலரும் கேட்கிற கேள்விகளில் ஒன்று என்ன சார் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார்னு பேசிட்டுருந்த நீங்க திடீர்னு காந்தி பற்றி பேச ஆரம்பிச்சுட்டிங்களே என்பது. காந்தி பற்றிப் பேசுவது என்பது மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை விட்டுவிடுவது என்பதல்ல. அதேபோல காந்தி பற்றி பேசுவதென்பது காந்தீயம்தான் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லம் ஒரே தீர்வென்று சொல்வதும் அல்ல. தலித்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி என்கிற கோரிக்கையை அவர் முறியடித்தது உட்பட அவரது எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஏற்பதும் அல்ல. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் காந்தி, ஏசு, புத்தர், நபிகள், பெரியார், மார்க்ஸ் இன்னும் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து நாம் வெகு தொலைவு வந்துவிட்டோம். இன்றைய பன்முகச் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் யாரொருவருடைய சிந்தனை மட்டுமே போதாது. இன்றைய சூழல்களுக்கான வழிகாட்டல்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அத்தகைய முயற்சியில் இவர்களது அனுபவங்கள் நமக்குத் துணை செய்யக்கூடும், அவ்வளவுதான்.

காந்தியை நான் எந்தக் காலத்திலுமே அவதூறு செய்தது கிடையாது. அவரது அணுகல் முறை குறித்து நான் சற்று ஆழமாகப் படிக்க நேர்ந்தது பாபர் மசூதி இடிப்பிற்குப் பிந்திய காலகட்டத்தில்தான். இந்தியா என்பது பல இன, மொழி, மதம், சாதிகளைப் பின்பற்றுகிறவர்கள் வாழ்கிற ஒரு நாடு. எல்லோரும் அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற அதே நேரத்தில் மற்றவர்களுக்குரிய நம்பிக்கைகளை அங்கீகரித்து வாழ வேண்டும். அந்த வகையில்தான் மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தைக் காந்தி முன்மொழிந்தார். அதற்காகவே அவர் தன் உயிரைப் பலிகொடுக்கவும் நேரிட்டது.

பலரும் காந்தியை இந்து மதவாதி, வருணாசிரமத்தை ஏற்றவர் எனச் சொல்வார்கள். காந்தி, தான் ஒரு இந்து எனச் சொல்லிக் கொண்டவர். சாகும்போதுகூட ‘ஹே ராம்’ எனச் சொல்லி மாண்டவர். ஆனால் அவர் எந்நாளுமே இந்து மதம் ஒன்றே சிறந்த மதம் என்றோ, இந்த நாடு இந்து மதத்திற்கு மட்டுமே உரியது என்றோ சொன்னதில்லை. இந்த தேசத்தை அவர் மொழி, மதம், இனம் என்கிற ஏதோ ஒரு பெரும்பான்மையின் அடிப்படையில் வரையறுக்காமல், பல்வேறு சிறுபான்மையினரின் தொகுதியாக வரையறுத்தார். அந்த வகையில் அவர் உலக அளவில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது தேசியம் territorial nationalism. .அது புவி இயலை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாட்டு எல்லைக்குள் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்நாட்டுக்குரியவர்கள் என்றார்.

அவர் இந்து மதவாதியாக இருந்திருந்தால் ஏன் இந்து ராஷ்டிரத்தை முன்மொழிந்தவர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்? அவர் வருணாசிரமத்தை முன்மொழிந்தவர் என்றால், ஏன் மடாதிபதிகள் ‘ஆரிய தர்மம்’ என்றொரு பத்திரிக்கை நடத்தி அதில் “கலி யுகத்தில் வருண சம்ஹாரம், அதாவது வருணாசிரமத்தை ஒழிக்க வந்தவர் காந்தி” என்று பிரச்சாரம் செய்தார்கள்?

அவரது தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளைக் கேலி செய்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. தீண்டாமைக்கு உட்பட்டவர்களை ஒருங்கு திரட்டிப் போராடவைப்பது என்பது ஒரு வழிமுறை. தீண்டாமைக்குக் காரணமானவர்களையே அதற்கு எதிராகப் பேச வைப்பது என்பது இன்னொரு முயற்சி. காந்தி இரண்டாவது வழி முறையைத் தெர்வு செய்தார். இருசாரரும் ஒரே காரணத்திற்காக இரு வேறு மக்கள் தொகுதிகளை நோக்கிப் பேசினார்கள். எனவே இருவர் மொழியும் ஒரே மாதிரியாக இருக்கும் என நாம் எதிர் பார்க்க இயலாது.

காந்தியை வெறுப்பதற்கோ, இல்லை கணக்கிலெடுப்பதற்கோ முன் அவரைப் படிப்போம். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் 99 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன, உலகப் பெரும் அறிஞர்கள் பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளனர், சுமார் 1000 வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவருக்கு உண்டு.

3. சமூக வலைத் தளங்கள்

நானெல்லாம் கல்லூரியில் படிக்கும்போது செய்தி ஊடகம்னா, அது அச்சு ஊடகந்தான். அப்புறம் தொலைக்காட்சி சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இப்போது ஒன்று அல்லது இரண்டு செய்தித் தொலைகாட்சிகளை நடத்துகின்றன. உடனுக்குடன் போட்டி போட்டுக் கொண்டு செய்திகள் ஊரெங்கும் பரவி விடுகின்றன. காட்சி ஊடகங்கள் இப்படி உடனுக்குடன் செய்திகளைச் சொல்லி விடுவதால், அடுத்த நாள் காலை வரும் நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை மட்டும் சொல்லாமல் அது தொடர்பான வேறு முக்கிய தகவல்களையும் சேகரித்துத் தர வேண்டியவையாக மாறியுள்ளன. ஊடகங்களுக்குள் உள்ள போட்டியால் செய்திகள் குறித்து விவாதங்கள் நடத்துதல், அது தொடர்பான வல்லுனர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை எல்லாம் கேட்டு முன்வைத்தல் என்பதெல்லாம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. செய்திப் பத்திரிக்கைகள் வண்ணப் படங்களோடு நம்ப இயலாத அளவிற்குக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை எல்லாம் இன்று செய்திப் பரவலில் வரவேற்கத் தக்க ஒரு சனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இன்னொரு புதிய மாற்றம் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைத் தளங்கள். இது செய்திப் பரவலில் ஏற்பட்டுள்ள இன்னொரு பெரிய புரட்சி. பழைய ஊடகங்களில், அதாவது அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்தணிக்கை சாத்தியம். இவற்றை உரிமையாகக் கொண்டுள்ள பெரு முதலாளிகளின் அரசின் கருத்துக்களுடன் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. எனவே அரசுக்கும் கார்பொரேட் நலன்களுக்கும் உவப்பாக இல்லாத செய்திகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் புதிய ஊடகங்களும்கூட பெரும் பன்னாட்டுக் கார்பொரேட்களின் கையில்தான் உள்ளன என்ற போதிலும், இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் தன்மை முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்து விடுகிறது. எனவே இதில் பங்கு பெறுபவர்கள் மிகவும் சுதந்திரமாகத் தம் கருத்துக்களை எந்தத் தடையும் இன்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, அது அடுத்த கணமே உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்குக் காணக் கிடைக்கிறது. எழுதுபவர்கள் உடனடி எதிர்வினையையும் பெறமுடிகிறது.

மிகவும் பொறுப்புடனும், அரசியல் கூர்மையுடனும் பயன்படுத்தினால் வலிமை வாய்ந்த சர்வாதிகாரிகளையே இந்த ஊடகங்களின் துணையோடு வீழ்த்திவிட முடியும் என்பதற்கு சமீபத்திய அரபுலகப் புரட்சிகள் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. துனீசியாவிலும் எகிப்திலும் இருபது முப்பதாண்டுகாலம் கொடுங்கோல்ஆட்சி நடத்திய சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டு சனநாயகம் தழைத்ததில் முக நூலுக்கு ஒரு முக்கிய பங்குண்டு..

தமிழிலும் கூட கூடங்குளம், முல்லைப் பெரியாறு முதலான பிரச்சினைகளில் முகநூல் கருத்துப் பிரச்சாரத்திற்குப் பெரிய அளவில் படன்பட்டுள்ளது. குறிப்பாகக் கூடங்குளம் பிரச்சினையில் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் அணு உலைக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்திருந்த சூழலில் இடிந்தகரை மீனவ மக்களின் போராட்டத்தை வெளி உலகிற்குக் கொன்டு வருவதில் முகநூல் முக்கிய பங்காற்றியது.

எனினும் முன்தணிக்கை இல்லாத சூழலில் எழுதுபவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகிறது. குறிப்பாக அவதூறுகள் பேசுவது, வெட்டி அரட்டை அடிப்பது, மாறுபட்ட கருத்துக்களை எதிர்கொள்ள இயலாதபோது எந்த ஆதாரமும் இன்றி பொய்க் குற்றச் சாட்டுகளை முன்வைப்பது என்பதெல்லாம் தமிழ்ச் சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களாயின் பாலியல் ரீதியாகச் சீண்டுவது, அவதூறு செய்வது என்பதும் இங்கு அதிகம். பாடகி சின்மயி விவகாரத்தில் இது கூர்மையாக வெளிப்பட்டது. பொறுப்பற்ற முறையில் கருத்துச் சொல்வதற்குச் சின்மயி ஒரு எடுத்துக்காட்டு என்றால், அதை ஒட்டி அவதூறு செய்து துன்புறுத்தியதற்கு அவரை எதிர்த்தவர்கள் உதாரணமானார்கள்.

பொறுப்புடனும் அற உணர்வுடன் கூடிய சுய தணிக்கையுடனும் செயல்பட்டால் இந்தச் சமூக வலைத் தளங்கள் எதிர்காலத்தில் சமூகமாற்றத்தில் முக்கிய பங்காற்ற வாய்ப்புண்டு.

4. ஈழ அகதி முகாம்கள்

தமிழகத்தில் உள்ள நம் எல்லோருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு உணர்வு பூர்வமான அக்கறை உள்ளது. கண்முன் நடந்த மனித உரிமை மீறல்களையும், போர்க் கொடுமைகளையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்கிற ஏக்கமும் இருக்கிறது. போர்ச் சூழலில் வாழ இயலாத நம் ஈழத் தமிழர்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாகத் திரிகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் சுமார் ஒரு லட்சம் அகதிகள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 68,500 பேர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 111 அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். 26 மாவட்டங்களில் இந்த அகதி முகாம்கள் பரவிக் கிடக்கின்றன.

உங்கள் ஊருக்கு அருகிலும் கூட எங்காவது ஈழ அகதி முகாம் இருக்கும். எப்போதாவது அதற்குள் போய் பார்த்திருக்கிறீர்களா? ஒருமுறை போய்ப் பாருங்கள். எவ்வளவு மோசமான நிலையில் , வாழத் தகுதியற்ற சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியும். 1983 யூலை கலவரம் தொடங்கி ஈழத் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து கொண்டே இந்தார்கள். .

வருகிறவர்களுக்கு முகாம்கள் அமைத்து 10க்குப் 10 என்கிற அளவில் இடம் ஒதுக்கிக் கொடுத்தது தமிழக அரசு. கூரைக்குத் தார்ப்பாய் அட்டை, அல்லது டின் ஷீட்டும், மிகச் சில இடங்களில் ஓடுகளும் தரப்பட்டன. இதச் சிறிய வீட்டில் ஒரு குடும்பம் வசிக்க முடியாது என்பதால் அவர்களாகவே சார்ப்பு இழுத்துக் கொஞ்சம் பெரிதாக்கி வாழ்கிறார்கள். சுனாமி, புயல் மழையால் பாதிக்கப்படும்போது மறுபடி இந்தப் பத்துக்குப் பத்து அளவில்தான் தகரக் கூறைகள் தருகிறார்கள். இழுத்துக் கட்டிய இடங்கள் கூரையின்றிக் காட்சி அளிக்கின்றன. வெயில் காலங்களில் தகரக் கூரைக்குள் உட்கார இயலாது. மழைகாலத்தில் சேரும் சகதியும் முகாம்களுக்குள் நடமாட இயலாது. கழிப்பிடம், போதிய குடி நீர். இடுகாடு முதலான வசதிகளும் படு மோசம்.

இன்னொரு பக்கம் இன்னும் ஈழ அகதிகள் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகின்றனர். ‘கியூ’ பிரிவு போலீசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இம்முகாம்களில் வசிப்போர் மாலை 6 மணிக்குள் முக்காம்களுக்குத் திரும்ப வேண்டும். வெளியூர் முகாம்களில் உள்ள உறவினர்களைப் பார்க்கப் போக வேண்டுமானால் அனுமதி பெற்றுப் போய், குறித்த நாளில் திரும்ப வேண்டும். அருகிலுள்ள ஊர்களுக்கு யாரேனும் அரசியல் தலைவர்கள் வந்தால் அன்று பூராவும் முகாம்களை விட்டு யாரும் வெளியேறக்கூடாது.

இவர்களுக்குக் குறைந்த பட்ச மாதாந்திர உதவித் தொகை, மாநிய விலையில் அரிசி சர்க்கரை முதலியன கொடுக்கப்பட்டபோதும் நமது நாட்டுச் சட்டத்தின்படி இவர்கள் “சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவர்களாகவே” (Illegal Immigrants) கருதப் படுகிறார்கள். சர்வதேச அளவில் அகதிகளிக்கு அளிக்கப்படும் உரிமைகள் இவர்களுக்குக் கிடையாது. ஏனெனில் ஐ. நா அவையின் 1951ம் ஆண்டு அகதிகள் குறித்த உடன்பாடு, 1987ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. அதனால்தான் இந்திய அரசு ஒரு இலட்சம் ஈழ அகதிகளை ராஜீவ் கொலையை ஒட்டி வெளியேற்றியபோது ஐ.நா. அகதிகள் ஆணையத்தால் அதைத் தட்டிக் கேட்க இயலவில்லை.

இந்தியாவுக்கு தேசிய அளவிலான ஒரு அகதிகள் கொள்கையும் கிடையாது, அதனால்தான் திபேத்திய அகதிகள் ஒரு விதமாகவும், ஈழ அகதிகள் மோசமாகவும் நடத்தப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்ற ஈழ அகதிகளில் பெரும்பாலோருக்கு அந்தந்த நாடுகளில் இன்று குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களான அவர்களுக்கு இந்திய அரசு மட்டுந்தான், அவர்கள் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் குடியுரிமை வழங்க மறுக்கிறது.

அதனால்தான் முகாம்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஆள்கடத்துபவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்துஉயிரைப் பணையம் வைத்து மீன்பிடிக் கப்பல்களில் ஆஸ்திரேலியா போக முயற்சித்து மாட்டிக் கொள்கிறார்கள். ஈழ மக்கள் பிரச்ச்சினையில் அக்கறை உள்ள நாம் ஈழ அகதிகள் முகாம்களின் நிலை சீர்திருத்தப் படுவது, முக்காம்களில் உள்ளவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட வேண்டுவது ஆகியவற்றிற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. மனித உரிமை மீறல்கள்

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரையில் நம்முடைய நாட்டு அரசியல் சட்டம் ஓரளவு வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. 1948ம் ஆண்டு உலகளாவியமனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பின்பு இயற்றப்பட்டதும், அம்பேத்கர் போன்றோர் அதை எழுதுமிடத்தில் இருந்ததும் இதற்குக் காரணங்களாக அமைகின்றன. ஆனால் நிறைவேற்றுச் சட்டங்களாக உள்ள இந்தியக் குற்றவியல் சட்டம், இந்திய போலீஸ் சட்டம் முதலியன காலனிய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை. நமது அரசியல் சட்டத்தின் தொனிக்குத் தக்கவாறு அவை இன்றுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. தவிரவும் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் முதலான கருப்புச் சட்டங்களை இயற்றிக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அரசுகள் கேலிக் கூத்தாக்குகின்றன..

நமது மனித உரிமை ஆணையங்களுக்கு வருகிற புகார்களில் 80 சதத்திற்கும் மேற்பட்டவை காவல் துறை அத்து மீறல்கள் பற்றியவைதான். கூட்டங்கூடுவது, அமைப்பாவது, தமது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது, அரசு நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பதெல்லாம் நமது சட்டபூர்வமான உரிமைகள் என்றபோதிலும், பல நேரங்களில் இந்தக் காரணங்களுக்காகவே மக்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள். சென்றமாதத்தில் கூட வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தினரும், கூடங்குளத்திற்கு உண்மை அறியச் சென்ற ஒரு குழுவினரும் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் இப்படிஆயிரக்கணக்கானோர் அரசியல் காரணங்களுக்காகத் தினந்தோறும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா உடன்பாடு முதலிய பல சர்வதேச மனித உரிமை உடன்பாடுகளில் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்ல. அதேபோல உலகத்தில் 130 நாடுகளுக்கும் மேலாக மரண தண்டனைஅயை ரத்து செய்துள்ள போதிலும் இந்திய அரசு இன்னும் அதைக் கைவிடவில்லை.

காவல்நிலையச் சித்திரவதைகள், சிறைச்சாலை அத்துமீறல்கள், கைது செய்து கொண்டுபோய் சுட்டுத்தள்ளி என்கவுண்டரில் கொன்றதாகப் பொய் சொல்லுதல் என்பதெல்லாம் இந்தியாவில் மட்டுமே உண்டு. 50 என்கவுன்டர் செய்தவன், 100 என்கவுன்டர் செய்தவன் என்றெல்லாம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகளின் ஆல்பம் ஒன்றை அவுட்லுக் இதழ் ஒருமுறை வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களில் பலர் இன்று காசு வாங்கிக் கொண்டு என்கவுண்டர் பண்ணியதற்காகவும்ம், போலி என்கவுண்டர்களுக்காகவும் சிறையில் உள்ளனர், ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா என்கிற இரு ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். என்கவுன்டர் கொலைகளுக்குப் பெயர்பெற்ற இன்னொரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.

அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய மீறல்கள் தவிர சாதி, மதம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இதனால் தலித்கள், சிறுபான்மையோர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அப்புறம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்களை வெளிக் கொணரும் பணி பெரிய அளவில் பாராட்டுக்குரியதாக அமைவதில்லை. சமூக விரோதிகளுக்காகவும், தீவீரவாதிகளுக்காகவும் வக்காலத்து வாங்குகிறோம் என்கிற அவப்பெயரையும் சில நேரங்களில் சுமக்க வேண்டி வரும். அரசு, காவல்துறை, அதிகார வர்க்கம், சமூக ஆதிக்க சக்திகள் ஆகியோரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் பணி என்பது மட்டுமல்ல, அதிகம் உழைப்பையும், அலைச்சலையும், செலவையும் கோரும் பணி இது. எங்களைப் போன்றோர் வெளி நிதி உதவிகளைச் சார்ந்திராமல் சொந்தச் செலவிலேயே இதைச் செய்கிறோம். சந்தேகத்திற்கிடமில்லாத உண்மைகளையே மக்கள் முன் வைக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகத்தான் போகிறோம் என்றாலும் அதற்காக எந்த உண்மையையும் மிகைப்படுத்துவதோ குறைத்துச் சொல்வதோ கிடையாது. ஒரு மனித உரிமைப் பணியாளரின் ஒரே சொத்து அவர் சம்பாதிக்கும் credibility,நம்பிக்கைத் தன்மைதான். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்கள் பணி அமைகிறது.

6. இராமர் சேது பாலம்

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தின் முன் தமிழக அரசு சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமில்லை எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது. இது நாள் வரையிலான தமிழக அரசின் அணுகல்முறைக்கு இது நேர் எதிரானது, இதை எதிர்க் கட்சிகள் எதிர்த்துள்ளன.

‘ஆடம் பாலம்’ என இதுநாள்வரை சொல்லிவந்த ஜெயலலிதா, இந்த அறிக்கையில் அதை ‘இராமர் சேது’ பாலம் எனச் சொல்லியிருப்பதைக் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா இராமர் சேதுவை ஒரு தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பிரதமரைச் சந்த்தித்துக் கோரிக்கை வைத்ததும் நினைவுக்கு வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் பரமசிவ ஐயர். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் சித்தப்பா இவர். மிகவும் ஆசாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்த பரமசிவர் வால்மீகி இராமயணத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். அவரது சகோதரர் நீதிபதி சர். சதாசிவ ஐயர் வால்மீகி இராமயணத்தைப் பாராயணம் செய்தவர்.

வால்மீகி இராமயணத்தின் பால காண்டமும் சுந்தர காண்டமும் காவியத் தன்மையில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதும் பரமசிவர், அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள் அக்கால வரலாற்றைச் சொல்பவை என்கிறார்.

1934ம் ஆண்டு இலங்கை சென்று வந்த இரவீந்திரநாத் தாகூர் சென்னையில் பேசும்போது, சீதையை இராவணன் ஏன்கிற இராட்சசன் கடத்திவந்து சிறை வைத்தது உங்கள் ஊரில்தான் எனத் தான் இலங்கையில் பேசியதாகக் குறிப்பிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பராம்சிவர். இதேபோல இராஜாஜியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசியதைக் கண்டு மனம் நொந்து போன பரமசிவர், இது போன்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை முன்வைப்பது சமகால அரசியல் பகைகளை உருவாக்கும் எனக் கருதி அடுத்த ஐந்தாண்டுகள், தன் வேலையை விட்டுவிட்டு வால்மீகி இராமயண ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.

சிவசமுத்திர நீர்மின் திட்டத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க பரமசிவருக்கு ஆங்கிலேய அரசு அன்று வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடம் ‘coloured mile to inch topograph’ பெரிதும் உதவியது. வால்மீகி குறிப்பிடும் தமஸா, கோமதி, சயந்திகா, ஸ்றின்ங்கவேரபுரம் முதலிய பகுதிகள் இன்றும் கங்கையின் வடகரைப் பகுதியில் டோன்ஸ், கும்தி, சாய், சிங்ரார் என்ற பெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். வாவ்மீகியில் காணப்படும் அத்தனை ஊர்களையும் இலங்கை உட்பட அவர் அடையாளம் காண்கிறார். சித்ரகூடமலை, அத்ரியின் ஆசிரமம், விராடன் புதையுண்ட குழி, தாண்டவ வனம் எல்லாவற்றையும் தற்போது அவை எங்குள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறார். இன்றும் மத்திய மாகாணங்களில் ‘இராவண வம்சிகள்’ என அழைக்க்கப்படும் கோண்டுப் பழங்குடியினர்தான் இராட்சதர்கள் எனவும் முண்டா மொழி பேசும் கோர்க்கர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பதையும் நிறுவுகிறார்.

ஆறுகளுக்க்கு இடைப்பட்ட மணற் திட்டுகளை ‘லங்கா’ என அழைக்கும் மரபைச் சுட்டிக்காட்டும் பரமசிவர் இராவணன் சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் கடத்திச் சென்றான் எனவும், அனுமன் நீந்திச் சென்றான் எனவும், இராமன் பாலம் அமைத்துப் படைகளுடன் கடந்தான் எனவும் வால்மீகி சொல்வதைச் சுட்டிகாட்டுவார், திரிகூடம் என்பது இந்திரான மலை, அதைச் சுற்றி ஓடும் கிரண் நதி பனகர், சிங்கள் தீபம் மற்றும் மசோலி சாலையில் ஒரு ஏரியைப்போலத் தோற்றமளிக்கும். அதுதான் லங்கா என அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார். வால்மீகியின் லங்காவை இன்றைய சிங்களத் தீவுடன் ஒப்பிடும் வழமை பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே வந்தது என்பதைச் சுட்டிகாட்டும் பரமசிவர் இராமன் எந்நாளும் விந்தியமலையக் கடந்ததில்லை என்கிறார். பண்டைய வரலாற்றைத் திரித்து இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்துவது குறித்த அறிஞர் பரமசிவரின் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தபோது என் கண்களில் நீர் கசிந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

7. கூடங்குளப் போராட்டம்

கூடங்குளத்தில் தொடர்ந்து 144 தடை உத்தரவு விதித்திருப்பது, பெரிய அளவில் போலீசைக் குவித்து வீடுகளைச் சூறையாடியது, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது ஆகியவை குறித்து நீதி விசாரணை வேண்டும் எனவும், போலீஸ் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் எனவும் நான் தொடுத்திருந்த வழக்கை இரண்டு நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

அரசு கொள்கைகள் பற்றிய பொது விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பண்பு எனக் கூறியுள்ள நீதிமன்றம், அதற்காக மக்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ளது. கூடங்குளம் மக்கள் போராட்டம் அந்த வகையில் கண்டிக்கத் தக்கது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் போராட்டம் கடந்த ஓராண்டுக்கும் மேலமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வாருகிறது. இதுவரை நான்கு முறை நாங்கள் அங்கு சென்று வந்துள்ளோம். தங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசும் வல்லுனர்களும் தங்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும், அது வரை உலையை இயக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நீதிமன்றம் சொல்லியுள்ளதைப் போல மக்கள் பங்கேற்கிற பொது விவாதம் ஒன்றை அரசு நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அரசு நியமித்த வல்லுனர் குழுக்களில் பொதுவானவர்கள் யாரும் இல்லை. அரசு கொள்கைகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தனர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட அவசரமாக வந்து அவசர “ஆய்வொன்றைச்” செய்து. கவனமாக மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, கூடங்குளம் பாதுகாப்பானது என அறிக்கை அளித்துச் சென்றார்.

சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான அறிக்கை, உலைப் பாதுகாப்பு அறிக்கை, உலை அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை முதலியவை இது நாள் வரை மக்களின் கண்களுக்குக் காட்டப்படவில்லை. போராட்டக் குழுவினர் தொகுத்து முன்வைத்த கேள்விகளில் பலவற்றிற்கும் இன்று வரை பதிலில்லை. போராட்டக் குழுவினர் அமைத்த வல்லுனர்குழு பல அச்சம் விளைவிக்கும் ஆபத்துச் சாத்தியங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கும் பதிலில்லை.

பேரிடர் ஆபத்துக் காலத்திய பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை. அரசு அதையும் கண்டு கொள்ளவில்லை. அடுத்தடுத்துக் கூடங்குளத்தில் கட்டப்படுவதாக உள்ள உலைகளுக்கு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்ததில் கண்டுள்ளபடி விபத்து இழப்பீட்டுப் பொறுப்பை ரசிய அரசு ஏற்றுக் கொள்ளுமா இல்லையா, பழைய ஒப்பந்தத்தில் இதற்கு இடமுண்டா என்பாது குறித்துப் பிரதமருக்கே பதில் தெரியவில்லை.

இந்நிலையில் மக்கள் அச்சம் கொள்வதையும், போராடுவதையும் எப்படித் தவறெனச் சொல்ல இயலும்? ஜனநாயகத்தில் இரகசியங்களுக்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை முக்கியம். ஆனால் பாதுகாப்பு எனக் காரணக்காட்டி அணு ஆற்றல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் அரசு மக்களிடமிருந்து மறைத்தே வைத்தூள்ளது. அரசியல் சட்ட அவை விவாதத்தின்போது அணு ஆற்றல் தொடர்பான சட்டத்தில் இத்தனை இரகசியம் ஏன்? அமைதி வழியில் பயன்படுத்துவது எனச் சொல்கிறீர்கள் அப்படியானால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அளவிற்கு இங்கே வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன் என ஒரு உறுப்பினர் திரும்பத் திரும்பக் கேட்டபோது எரிச்சலுற்ற நேரு, “அணு விஷயத்தில் போர்க்காலப் பயன்பாட்டையும் அமைதிக்கான பயன்பாட்டையும் எப்படி வித்தியாசப் படுத்த இயலும்?” என் கேட்டதை நாம் மறந்துவிட இயலாது. ஆமாம் போர்க்காலம், அமைதிக் காலம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இல்லை அணு ஆற்றல் விஷயத்தில் இரகசியங்கள் எப்போதுமே ஊழலுக்கு வித்திடும். மிகவும் ஆபத்தான தொழில்நுட்பமான அணு உலை விஷயத்தில் நேரும் ஊழல்கள் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

1980 களில் பொது நலவழக்குகள் என்பன நமது நீதிமன்றங்களால் ஊக்குவிக்கப்பட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு, வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுதல் முதலான நடவடிக்கைகளில் பல பொதுநல வழக்குகளில் மக்களுக்குச் சாதகமான பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று..

8. எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு

எழுத்தாளர் அமிதவ் கோஷின் கட்டுரை ஒன்றை இன்று முகநூலில் படித்தேன். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் அமிதவ் கோஷ். . ஆக்ஸ்ஃபோர்டில் பி.எச்டி முடித்துவிட்டு, டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவரை எழுத்துத் துறைக்கு ஈர்த்துள்ளது.

அது 1984ம் ஆண்டு அக்டோபர் இறுதி, நவம்பர் தொடக்கம். பிரதமர் இந்திரா அவரது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொன்றவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் புகுந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து அவர்கள் இந்திரா காந்தியைக் கொன்றனர். கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் மீது மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன். டெல்லியில் மட்டும் 2500 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பிற வட மாநில நகரங்களிலும் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் திட்டமிட்டு இதை நடத்தி முடித்தனர். எனினும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இந்தக் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருந்த அமிதவ் கோஷ் தனக்கு நேர்ந்த மூன்று அநுபவங்களைச் சொல்கிறார். ஒன்றில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சில் இருந்த ஒரு சீக்கியரை, தாக்க வந்தவர்களிடமிருந்து பயணிகள் மறைத்துக் காப்பாற்றுகின்றனர். மற்றது ஒரு இந்துக் குடும்பம் ஆபத்து என்று தெரிந்தும் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு முதிய சீக்கியத் தம்பதியரைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றிய சம்பவம். மூன்றாவதில் கலவரக்காரர்களுக்கு எதிராக முழக்கமிட்டுச் சென்ற அமைதி ஊர்வலத்தில் அவரும் பங்கேற்ற அனுபவம். கலவரக் கும்பல் அவர்களைக் கடும் ஆயுதங்களுடன் கொல்ல வருகிறது. ஊர்வலத்திலிருந்த பெண்கள் ஆண்களைச் சுற்றி வளையமிட்டு நின்றதைக் கண்ட வன்முறையாளர்கள் தயங்கிப் பின் வாங்குகின்றனர்.

18 ஆண்டுகளுக்குப் பின் இதை நினைவுகூறும் அமிதவ் கோஷ்,. ஒரு எழுத்தாளனின் பணி என்ன? எழுதுவதா, இல்லை ஊர்வலத்தில் பங்கு பெறுவதா? அதாவது சமூக அரசியல் செயல்பாடுகளில் பங்கு பெறுவதா? என்கிற கேள்வியை எழுப்பிகிறார். பெரும்பாலானவர்களின் பதில் எழுத்து என்கிற வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்துவது மட்டுந்தான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு செயலற்றுப் போகும்போதும், அதுவே உரிமைகளைப் பறிக்கும்போதும் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க இயலும் என்று கேட்கிறார் அமிதவ்.

பங்குபெறும்போது நமது அனுபவம் விரிவடைகிறது. இது போன்ற பேரழிவுக் கலவரங்கள் வெறும் வன்முறையால் மட்டும் நிரம்பி இருக்கவில்லை. மானுட நேயமும் இன, மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய மனித நேயமும் இந்த வன்முறைகளுக்கிடையே ஊடாடி நிற்கின்றன. இந்தக் கலவரங்களளை எழுதுவது என்பது எத்தனை பேர் செத்தார்கள், எப்படியெல்லாம் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது என விவரிப்பது மட்டுமல்ல. அதை ஒரு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியே இன்னும் சிறப்பாகச் செய்துவிட முடியும். எழுத்தாளனின் பணி வேறு. இந்த வன்முறையை மட்டுமல்ல, இது போன்ற வன்முறகளின் அர்த்தத்தை, எல்லவற்றினூடாகவும் விகசிக்கும் மாநுடத்தை அது வெளிக் கொணர வேண்டும்.

அத்தகைய அழகியல் ஒன்று இன்று உருப்பெற்றுள்ளதா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருவகையான aesthetics of indifference, சமூகப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிய அழகியல், அல்லது ஒரு வகையான வரட்டுக் கோட்பாட்டுடன் சமூகப் பிரச்சினைகளை அணுகி ஆரசியல் கறார்த்தன்மையை நிலை நாட்டுதல் என்பதுதான் இன்றைய பெரும்பான்மைப் போக்காக இருக்கிறது. இது அத்தனை உவப்பளிக்கக் கூடிய ஒன்றல்ல.

9. அர்விந்த் கெஜ்ரிவால்

கடந்த இரண்டாண்டு காலமாக இந்திய அரசியலை அன்னா ஹஸாரேயும் அர்விந்த் கெஜ்ரிவாலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் சகல அதிகாரங்களும் பொருந்திய ஜன்லோக்பால் அமைக்க வேண்டும் எனத் தொடங்கி இப்போது அரசியல் கட்சி என்கிற அளவிற்கு அதிலரொரு பிரிவு வளர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட நமது முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே இவர்களின் போராட்ட முறையை எதிர்க்கின்றன. பாராளுமன்ற அரசியல் இலக்கணத்திற்கு இத்தகைய நடைமுறை ஒத்துவராது என அறிவுரை பகர்கின்றன.

அன்னா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் முன்நிறுத்துவது “ஊழலை ஒழிப்பது” என்கிற ஒற்றை நிகழ்ச்சி நிரலைத்தான். அதற்கு இந்திய மத்தியதர வர்க்கத்திடம் அமோக ஆதரவு உள்ளது. இந்தக் கோரிக்கைக்கும் கெஜ்ரிவால் போன்றோரின் செயல்பாடுகளுக்கும் இத்தனை பெரிய ஆதரவு உருவானதற்குக் காரணம் என்ன? நமது பாராளுமன்ற அரசியல் கட்சிகள் இந்த அம்சத்தில் தோற்றுப்போனது ஒரு முக்கிய காரணம். எல்லா அரசியல் கட்சிகளும் ஊழலில் சிக்கியுள்ளன. எனவே இவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்பதில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. பாராளுமன்றத்திற்குள் தீவிரமாக எதிர்த்து நிற்கும் இவர்கள் வெளியே கைகோர்த்துத் திரிகிறார்கள். எல்லோருமே தங்கள் வாரிசுகளை அரசியலில் மேலே கொண்டு வருவது என்பதைத் திட்டமிட்டுச் செய்து கொண்டுள்ளனர். ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியின் வாரிசு அரசியலையும், வாரிசுகளின் ஊழலையும் பேசுவதில்லை. சமீபத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வட்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டு ஓராண்டுக்கு முன்னரே தங்களுக்குத் தெரியும் எனவும், இருந்தாலும் தங்கள் கட்சி அதை மேலுக்குக் கொண்டு வரவேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாகவும் பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியுள்ளதைப் பார்த்திருப்பீர்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் கைவிடுகிற இது போன்ற பிரச்சினைகளை சிறிய அமைப்புகள் எடுத்து ஒரு ஆர்பாட்டமோ, உண்ணவிரதமோ நடத்தினால்ஆது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவதுமில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் நமது பாராளுமன்ற விவாதங்கள், வழக்கமான போராட்ட முறைகள்ஆகியவற்றில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டனர். அன்னா மற்றும் கெஜ்ரிவாலுக்கு உருவாகியுள்ள அமோக ஆதரவு இதைத்தான் காட்டுகிறது.

கெஜ்ரிவால், அன்னா ஆகியோரிடம் உள்ள பிரச்சினை அவர்கள் ஊழல் எதிர்ப்போடு நிறுத்திக் கொள்வது என்பதுதான். ஊழல் ஒரு பிரச்சினைதான். ஆனால் ஊழல் மட்டுமே பிரச்சினை அல்ல. இன்றைய மெகா ஊழல்களெல்லாம் இந்தியச் சந்தை உலக கார்பொரேட்களுக்குத் திறந்துவிடப்பட்ட பின்பு உருவானவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இத்தகைய பெரும் கார்பொரேட்களின் நிதி உதவியுடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள்தான் கெஜ்ரிவால் போன்றோர். இன்றைய ஊழல், விலைவாசி ஏற்றம் ஆகியவற்றுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் விமர்சிப்பதில்லை.

அதேபோல இங்குள்ள தீண்டாமைக் கொடுமை, மதவாதம், தலித் மர்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள், காவல்துறை அத்துமீறல்கள் இவை குறித்தும் இவர்கள் பேசுவதில்லை. வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் மக்கள் வெளியேற்றப்படுதல், குடிசை மக்கள் ஊரை விட்டு விரட்டப்படுதல், நாளுக்கு நாள் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுதல், விவசாயிகள் தற்கொலை முதலியன குறித்தும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் இவர்களுக்கான ஆதரவு மத்திய தர வர்க்கத்தோடு நின்றுபோய் விடுகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசுவோருக்கு கெஜ்ரிவால் அரசியலை ஏற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது.

10. நபிகள் நாயகம்

அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை எதிர்த்து உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதை நாம் அறிவோம். இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பெரிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு திரைப்படத்திற்கு எதிராக இத்தனை எதிர்ப்பு தேவைதானா எனத் தோன்றலாம். ஆனால் மேலை நாடுகளின் வரலாற்றில் தொடர்ந்து இஸ்லாம் மதமும், அவர்கள் இறுதி இறைத்தூதராக ஏற்றுக்கொண்டுள்ள நபிகள் நாயகமும் இழிவு செய்யப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போதுதான் இன்று முஸ்லிம்கள் இவ்வாறு கொதித்தெழுந்ததைப் புரிந்து கொள்ள இயலும்..

மகாகவி தாந்தேயிலிருந்து வரலாற்றாசிரியர் எட்வர்ட் கிப்பன் வரை நபிகளை இழித்துரைத்துள்ளனர். உருவ வணக்கத்தை முஸ்லிம்கள் ஏற்பதில்லை என்றபோதிலும் வேண்டுமென்றே நபிகளைக் கேலிச் சித்திரம் வரைவது என்றெல்லாம் அவ்வப்போது அவர்களின் ஆத்திரத்தைத் தூண்டி வருகின்றனர், கிறிஸ்து தோன்றி ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான இஸ்லாம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி கிறிஸ்தவ விரிவாக்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. இன்றளவும் அதை ஒரு வெல்ல இயலாத மதமாகவே மேலை நாகரிகம் கருதுகிறது. அதன் விளைவுதான் அவ்வப்போது இப்படி அதைச் சீண்டிப் பார்ப்பது.

தவிரவும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா தனது ஆதரவு நாடுகளின் துணையோடு ஆப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின்மீது பொய்யான காரணங்களைச் சொல்லி மேற்கொண்ட படைஎடுப்புகளும், ஏற்படுத்திய அரசியல் குழப்பங்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் தீராத வருத்தத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணீயில்தான் இன்று நபிகள் நாயகத்தை இழிவு செய்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படதிற்கான எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பாகவும் வெளிப்பட்டதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியச் சூழலிலும் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கட்டவிழ்க்கப்பட்டபோது இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் புரிந்து கொள்ளும் நோக்கில் நான் ஒரு நூலை எழுதினேன். ஒவ்வொரு மதத்திலும் இறைவன் என்கிற கருத்திற்கு அப்பால் மத முன்னோடிகள் புனிதர்களாகவும் பெரு மதிப்பிற்குரியவர்களாகவும் சில மதங்களில் இறைவனுக்குச் சமமாக வணக்கத்திற்கு உரியவர்களாகவும் கருதப்படுகின்றனர். இறைத்தூதர், இறைமகன், அவதாராம், தீர்த்தங்கரர், போதிசத்துவர் என்றெல்லாம் அந்தந்த மதங்களில் இவர்கள் போற்றப்படுகின்றனர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இறுதி இறைத்தூதராக அவர் கருதப்பட்டபோதும் ஒரு சாதாரண மனிதராக, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாகரிக வளர்ச்சியின்றி ஒரு இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுலகில் ஒரு எழுச்சியை உருவாக்கி அம்மக்களுக்கான ஒரு பேரரசை உருவக்கியவர் அவர்,

அவரது நாற்பதாவது வயது தொடங்கி அவருக்கு இறை வாக்குகள் அருளப்பெற்றன எனவும் அவற்றைச் செயல்படுத்தியதன் வழியாகவே அவர் இதைச் சாதித்தார் எனவும் ஏற்றுக் கொள்வது முஸ்லிம்களின் ஒரு முக்கியமான இறை நம்பிக்கை. இறை வாக்குகள் அருளப் பெற்றது என்பது தவிர வேறு எந்த அற்புதங்களையும் அவர் செய்து காட்டி மக்களை ஈர்த்ததாக அவரது வரலாற்றில் இல்லை. மாறாக ஒரு புரட்சிகரப் போராளியாக, பல்வேறு எதிர்ப்புகளையும், புலப்பெயர்வையும், ஏன் சமயங்களில் தோல்வியையும் கூடச் சந்தித்தவராகவே நாம் அவரைக் காண்கிறோம். ஆவரது திறமை, சாதுரியம், அற நெறிசார்ந்த அணுகல் முறை, போர்த் திறமை ஆகியவற்றினூடாக இறுதி வெற்றியை ஈட்டித் தந்து, எந்த அற்புதங்களுமின்றி மிகச் சாதாராண மனிதரகவே அவர் மரித்துப் போனார்.

இறை மறுப்பாளரான பேரியார் ஈ.வெ.ரா அவர்களையும், மதங்களை ஏற்காத இடதுசாரிகளையும் நபிகளின் வரலாறு ஈர்த்ததற்கான காரணம் அவர் உருவாக்கிய சமூகம் சாதி, இன வேறுபாடுகளற்ற ஒரு சமநிலைச் சமூகமாக இருந்ததுதான். அதனால்தான் இன்றளவும் இந்தியாவில் தோன்றிய மதங்களாயினும், வெளியிலிருந்து வந்த மதங்களாயினும் ஒப்பீட்டளவில் சாதி வேறுபாடுகளைக் கடந்த மதமாக அது உள்ளது.

11.சமண பவுத்த மதங்கள்

மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தேன். தமிழின் இரட்டைக் கப்பியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். மாதவி, கண்ணகி, மணிமேகலை எனப் பல பாத்திரங்கள் இர்ண்டிலுமே உலவுவர். ஒருவகையில் சிலப்பதிகாராத்திற்குப் பிந்திய கதையைச் சொல்வதாகவும் மணிமேகலையைப் பார்க்கலாம். கோவலன் கொலையுண்டு, கண்ணகி பத்தினித் தெய்வமாகியதற்குப் பிந்திய என்கிற அடிப்படையில் மட்டுமல்ல காப்பியம் விவரிக்கும் நிலப்பரப்பு (landscape), காப்பியத்தின் வாசகப் பரப்பு எல்லாமே மாறுகிறது. அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுகிறது. புகார், மதுரை வஞ்சி என்கிற நகரக் காட்சிகள் மாறி காப்பியப் பரப்பில் திடீரென காஞ்சி தோன்றுகிறது. கடலை ஒட்டிய வணிகப் பட்டினமான புகார், அதனுடைய செழிப்பு, கோலாகலங்கள் என்பதற்கப்பாலான மிகப்பெரிய தத்துவ விசாரங்கள் நடக்கும் பூமி, intellectual centre ஒன்றும் அத்தகைய விவாதங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாசகத் தளம் ஒன்று உருவாகியுள்ளதையும் நாம் காண்கிறோம்

இரண்டும் சமண, பவுத்த அவைதீக மரபில் தோன்றியவை. கிட்டத்தட்ட தமிழ்க் காப்பியங்கள் எனச் சொல்லப்படும் அத்தனையுமே இம்மரபில் வந்தவைதான். இவ்ற்றில் பவுத்தக் காப்பியங்கள் பலவும் அழிந்து பட்டதுதான் மிகப் பெரிய இழப்பு. இந்த அவைதீக மரபின்றி தமிழில்லை எனச் சொல்லும் அளவிற்கு தமிழ் சமண பவுத்த மரபுகளுடன் இரண்டறக் கலந்துள்ளது.. தமிழுக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் ‘பிராமி’ எழுத்து வடிவத்தைக் கொடை அளித்தது சமணம் அல்லவா? பிராமி என்பவள் ஆதிநாதரின் இரு புதல்வியரில் ஒருத்தி. மற்றவள் ‘எண்களின்’ நாயகி. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றாரல்லவா சமண மரபில் வந்த திருவள்ளுவர்.

அகம், புறம், திணக் கோட்பாடு என்பன தமிழ் மரபுக்கே உரித்தான ஒரு சிறப்புக் கூறு. காப்பிய மரபின் ஊடாக இந்தத் தமிழ் மரபின் தொடர்ச்சி அறுபட்டு, வடமொழியின் அலங்கார சாத்திர மரபின் தாக்கம் இங்கு ஏற்படுகிறது என்பார்கள். ஆனால் பவுலா ரிச்மான், பார்த்தசாரதி, ஆன்னி மோனியஸ் ஆகிய நவீன ஆய்வாளர்கள் உண்மையில் இவ்விரு காப்பியங்களும் எப்படி அகம், புறம் எனும் திணை மரபின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன் என்பதை நிறுவுகின்றனர், சிலம்பில் எவ்வாறு ஊடல் அல்லது காதற் துரோகக் காட்சிகள் மருதத் திணைப் பின்புலத்திலும், பரத்தையர் பிரிவு என்பது முல்லைத் திணைப் பின்புலத்திலும், இப்படி ஒவ்வொரு கதை நிகழ்வும் அதற்குரிய திணைப் பின்னணியுடன் எவ்வாறு இளங்கோ அடிகளால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து வாசிப்போர் உணர முடியும்.

சமண, பவுத்த மரபுகள் அற வாழ்வை வற்புறுத்துபவை. பக்தி மரபு என்பதில் அறத்தை காட்டிலும் பக்தியே முதன்மையான வாழ்வு நெறியாக அமையும். சமண பவுத்தக் காப்பியங்கள் தமது காப்பிய இலக்கணத்தை மீறாமல் இந்த அற வாழ்வை வலியுறுத்தும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

சிலம்பில் ஒரு காட்சி, சிலம்பை விற்றுப் புது வாழ்வு தொடங்கும் நோக்குடன் கண்ணகியும் கோவலனும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். புகாருக்கருகிலுள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் புனிதக் குளங்களில் நீராடிச் சென்றால் முற்பிறவிச் சாபம் நீங்கும் என்று கண்ணகிக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. “பீடன்று”, அதாவது எமக்கு அது வழக்கமல்ல எனக் கண்ணகி மறுத்துத் தன் பயணத்தைத் தொடர்வாள். “தீர்த்த மூடம், தெய்வமூடம்” என இத்தகைய செயல்களை சமணம் மறுக்கும்.

தண்டியலங்காரத்தில் வட மரபு தழுவி எண்வகைச் சுவைகள் குறிப்பிடப்படும். ஆனால் வீர சோழியம் என்னும் பவுத்த நூல் ‘சாந்தம்” (அமைதி) என்னும் ஒன்பதாவது சுவையைக் கூடுதலாக இணைக்கும். தமிழ்த் தொல்காப்பிய மரபுடன் பவுத்த மரபு இணைந்து உருவாகியதுதான் பவுத்த இலக்கண நூலான வீரசோழியம். பவுத்த அறத்துடன் கூடிய ஒரு புதிய இலக்கணவியல் பார்வைக்குக் கட்டியங்கூறுகிறது வீர சோழியம்.

12. பெரியார் ஈ.வெ.ரா

தமிழகம் கண்ட ஒரு மாபெரும் சிந்தனையாளர் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள். நீண்ட காலம் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக இருந்த அவர், தனித்துவம் உடைய ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார், அதிகம் படித்திராத அவர் பல்வேறு பிரச்சினைகளிலும் உதிர்த்துள்ள சிந்தனைகள், இத்தகைய துறைகளில் மெத்தப் படித்த வல்லுனர்களின் சிந்தனைகட்கு ஈடானவை, சில நேரங்களில் அவற்றையும் விஞ்சியவை.

பெரியார் என்றவுடன் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை அகியவற்றைப் பற்றிப் பேசியவர், போராடியவர் என்று மட்டுந்தான் யாருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் பெரியார், “நான் நாத்திகனல்ல,” “ஆத்திகம் சரியா நாத்திகம் சர்ரியா என்பது ஒரு பயனற்ற பிரச்சினை” என்றெல்லாம்பெரியார் சொல்லியுள்ளார் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படிச் சொன்னதன் பொருள் அவர் கடவுளை ஏற்றுக் கொண்டவர் என்பதல்ல. “நான் கடவுள் இல்லை என்பவனும் அல்ல, இருக்கிறவன் என்று சொல்பவனும் அல்ல” என்கிறார் அடுத்த வரியிலேயே. “புராண வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர் நாத்திகன் என்று குறிப்பிடுகின்றனர்” என்று அதற்கு விளக்கமளிப்பார்.

ஆக, பெரியாரைப் பொருத்த மட்டில் கடவுளை மறுத்தது என்பது உண்மையிலேயே கடவுளை ஆதாரமாக்கி முன்வைக்கப்படுகிற நமது வேத, புராண, இதிகாசக் கருத்துக்களைளை மறுத்ததே. அப்படியென்ன இவற்றின்மீது ஆவருக்கு வெறுப்பு? மனிதர்களை நான்கு வருணங்களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் பிரித்து ஒதுக்கி வைத்தற்காகத்தான்.

ஆமாம், அடிப்படையில் அவர் ஒரு சாதி ஒழிப்புப் போராளி. நீ கீழ்சாதி, தீண்டத்தகாதவன் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத்தான் அவர் சுயமரியாதை இல்லாமை என்கிறார். மனிதர்கள் சுய மரியாதை பெறுவதற்கு எதிராக இருப்பதனாலேயே அவர் வேத புராணங்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்தார்.

கடவுள் நம்பிக்கையை மட்டுமல்லஒரு வகையில் கண்மூடித்தனமான எல்லா நம்பிக்கைகளையுமே அவர் எதிர்த்தார். முக்கியமாக தேசபக்தி, மொழிப்பற்று, மதப்பற்று இம் மூன்றும் மனிதர் சுயமரியாதை பெறுவதற்குத் தடையாக உள்ளன என அவர் கருதினார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது எப்படிச் சரியாகும் என நமக்குத் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கும். தேசம், மொழி, மதம் ஆகியவற்றின் பெயரால் தீண்டாமை, சாதி ஆதிக்கம் ஆகியவற்றை நியாயப்படுத்திவிடும் போக்கைக் கூர்ந்து கவனிப்போர் விளங்கிக் கொள்ள இயலும். முதலில் நாட்டு விடுதலை, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் இந்த சாதிப் பிரச்சினையை எல்லாம் என இதற்காகப் போராடுபவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்வதை நாம் பார்த்துள்ளோம்.

இதற்காக அவர் மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்கள் ஒடுக்கப்படுகிறபோது பெரியார் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. மிகப் பெரிய இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் பவுத்தம், இஸ்லாம் போன்ற மதங்களின் ஆதரவாளராகவும் அவர் இருந்ததை நாம் அறிவோம்.

ஆனால் தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் அவர் பேசினாரே என ஒருவருக்குத் தோன்றலாம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் இந்திராவை நோக்கிச் சொன்னார்: “இந்த நாட்டில் பிராமண சூத்திர வேறுபாடு இல்லை, சாதி இல்லை. எல்லோரும் சமம் எனச் சட்டம் போடுங்கள் பிரிவினை கோரும் என் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.

பெரியாரின் பெண் விடுதலை தொடர்பான கருத்துக்கள், தேசம், மொழி, இன்னும் பல நம்பிக்கைகள் எல்லாவற்றையும் வெறும் கற்பிதங்கள்தான் என அவர் சொன்னதெல்லாம் மிக மிக நவீனமான சிந்தனைகளுடன் ஒப்பிடத் தக்கவை.

பெரியாரைப் படிப்போம். பின்பற்றுவோம்.

13. சாதி அமைப்புகளும் காதல் திருமணங்களும்

இன்றைய நாளிதழ்களில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய சாதிக கலவரம் பற்றிய செய்தி வந்துள்ளது. உண்மையில் இதைச் சாதிக் கலவரம் எனச் சொல்லக் கூடாது. அங்கே இரண்டு சாதிகள் சமமாக மோதிக் கொள்ளவில்லை. மூன்று கிராமங்களிலுள்ள சுமார் 268 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் எரிக்கப்பட்டு சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன. தலித்கள் மீதான தாக்குதல் என்றே இதைச் சொல்ல வேண்டும்.

தலித் மக்கள் மீது இப்படியான கொடுந்தாக்குதல் நடத்தப் படுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவம் என்ன? இளவரசன் என்கிற தலித் பையனும், திவ்யா என்கிற ஒரு மேல் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெண்ணின் சாதியினர் அவர்களைப் பிரிக்க முயன்று தோற்றுள்ளனர். தன் மகள் இப்படி ஒரு தாழ்ந்த சாதிப் பையனத் திருமணம் செய்து கொண்டதை அவமானமாகக் கருதிய பெண்ணின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். உடனே வெடித்தது வன்முறை.

இந்த வன்முறை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினைகளில் காதல் ஜோடிகள் பிரிக்கப்பட்டுக் கவுரவக் கொலைகள் நிகழ்வது, அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பதெல்லாம் தமிழகத்தில் இப்போது அதிகமாகியுள்ளன. சில நேரங்களில் அவை இப்படியான வன்முறைகளில் முடிந்து விடுகின்றன.

ஏன் இப்படி நிகழ்கின்றன?

ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போதல், இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் மற்றும் வேலை செய்வதும் அதிகமாகி இருப்பது, செல்போன் மூலம் என்னேரமும் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருப்பது முதலியன காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.

ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிக பட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தனது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பது மட்டுமே இக்கட்சிகளின் ஒரே வேலை ஆகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை. இத்தனை வெறுப்புகளுக்கும் அப்பால் தாங்கள் பொதுவானவர்கள்தான் எனக் காட்டிக்கொள்ள இவர்கள் தமிழ்த் தேசியத்தைப் படு தீவிரமாகப் பேசுவார்கள். சாதி வன்முறையில் இவர்கள் தம் வேடத்தைக் கலைக்கும்போது அதைக் கண்டிக்காமல் பிற தமிழ்ட்த் தேசியர்கல் பம்முவார்கள்.

தன் சாதி ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன.

தமிழகத்திலுள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சமீப காலத்தில் காதல் திருமணங்களை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதும் அதிகமாகியுள்ளது. இன்று தருமபுரியில் வன்முறையை மேற்கொண்ட சாதியினர் இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமி அன்று கூட்டிய மாநாட்டில் அச் சாதி அமைப்பின் தலைவர் இப்படி காதல் திருமணத்திற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத் தக்கது

காதல் திருமணங்களுக்கு எதிரான இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்பட வேண்டும். தலித்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தெவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப் படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும்.

14. சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு இபோதைக்கு நிறைவேற்றப் படக் கூடிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலமே இது சாத்தியம் என்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவையாகிறது. எனவே அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு இருந்தால்தான் இது சாத்தியம்.

ஆனால் அரசியல் கட்சிகளிடையே இதை நிறைவேற்றுவது என்பதைக் காட்டிலும் தவிர்ப்பது என்பதில்தான் ஒற்றுமை உள்ளது. ஏன்? நிறைவேற்றினால் 181 தொகுதிகளைப் பெண்களுக்காக ஒதுக்க நேரிடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 181 ஆண்களின் வாய்ப்புகள் பறிபோகும். தவிரவும் இரண்டு தேர்தல்களுக்கு ஒரு முறை தொகுதிச் சுழற்சி rotation செய்யவேண்டும் என்பதால் யாரும் இரு தடவைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் நிற்க இயலாது. எனவே தம் தொகுதியைப் பாராட்டிச் சீராட்டித் தக்க வைக்க முனைவோருக்கு இது ஒரு பிரச்சினை ஆகிவிடும். அதனால்தான் 16 ஆண்டுகளாக இச் சட்ட முன் வரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை நேரடியாகச் சொல்லாமல் வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கின்றனர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்தம் 33+22=55 சத இடங்கள் சுழற்சி செய்யப்பட வேண்டும். இங்கெல்லாம் செல்வாக்குள்ள ஆண்கள் தங்கள் மனைவி அல்லது மகளை நிறுத்தி இந்த இட ஒதுக்கீட்டையே அர்த்தமற்றதாக்கி விடுவார்கள் என்பது ஒரு வாதம். இப்படிப் பதிலியாக யாரும் உறவினர்களை நிறுத்தக்கூடாது என்றால் அது சட்டப்படி செல்லாது. ஏனெனில் அது அவர்களது உரிமையைப் பறிப்பதாகிவிடும்.

பெண்களுக்கு ஒதுக்கீடு அளித்தால் நகர்ப்புற உயர்ர்சாதிப் பெண்கள்தான் வெற்றி பெறுவார்கள். எனவே சாதி, மத வாரி ஒதுக்கீடு பெண்களுக்க்கு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வற்புரறுத்துவதும் அதச் சிலர் மறுப்பதும் இம் மசோதா முடக்கி வைககப்பட்டுள்ளதன் இன்னொரு காரணமாகிறது. ஆண்களுக்கு இப்படி ஒதுக்கீடு இல்லாதபோது பெண்களுக்கு மட்டும் எப்படிச் செய்ய முடியும் என்பது இதற்கெதிராகக் கிளப்பப்படும் சட்டப் பிரச்சினை.

ஸ்வீடன், ஜெர்மனி, நேபாளம், நெதர்லான்ட், ஃபின்லான்ட் போன்ற நாடுகளில் இருப்பதுபோல ஒவ்வொரு கட்சியும் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களில் 33 சதம் பெண்களாக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்தால் எப்படி? நமது கட்சிகள் இதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்காதா என்ன? வெற்றிபெற வாய்ப்பே இல்லாத தொகுதிகளாகப் பார்த்துப் பெண்களை நிறுத்துவார்கள். எடுத்துக்காட்டாக சமாஜ்வாதி கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்திக் கணக்குக் காட்டினல் அது எத்தன அபத்தமாக இருக்கும்?

இன்னொரு வழி இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பிர்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படி 530 பாராளுமன்ரத் தொகுதிகளை 750 ஆக்க வேண்டும். 6000 சட்டமன்றத் தொகுதிகளை 9000 ஆக்க வேண்டும். இப்படி அதுகரித்து அவற்றைப் பெண்களுக்கு வழங்கலாம். அல்லது 33 சதத் தொகுதிகளை இரட்டை வாக்காளர் தொகுதிகளாக ஆக்கலாம். மனம் இருந்தால் வழியுண்டு.

பெண்களுக்கு இவ்வாறு ஒதுக்கீடு அளிப்பது என்பது ஏதோ அவர்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. அது அவர்களின் உரிமை. எனவே விவாதங்களுக்கு இடமேயின்றி பெண்களுக்கு உடனடியாக இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் கீழ்மட்டங்களில் 33 சதமும், தேசியச் சட்ட மன்றத்தில் 20 சதமும் செனட்டில் 18 சதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்கிற செய்தி யாருக்குத் தெரியும்?

15. ஒபாமா வெற்றி

சற்று முன், “ஒபாமா வெற்றி பற்றி என்ன நினைகிறீர்கள்? இந்தியாவுக்கு அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?” என்று என்னிடம் ஒரு வார இதழிலிருந்து கேட்டார்கள். ஒபாமாவாக இருந்தாலும் மிட் ரோம்னியாக இருந்தாலும் இந்திய அமெரிக்க உறவுகளில் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடாது என்று சொன்னேன்.

சென்ற முறை ஒபாமா வென்றபோது உண்மையிலேயே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட புஷ்சின் எட்டாண்டு கால ஆட்சி ஒபாமாவின் கைக்கு வந்தது என்பது மட்டுமல்ல, குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சிக்கு ஆட்சி மாறியது என்பது மட்டுமல்ல அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம் வேர்களை உடைய ஒரு கருப்பரின் கைக்கு முதன்முதலாக அதிகாராம் பெயர்ந்தது என்கிற வகையில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. எதிர்பார்ப்புகளும் இருந்தன.

ஆனால் புஷ்சின் அமெரிக்காவுடன் இழைந்து கொண்டிருந்த மன்மோகன்சிங் அரசைப் பொருத்த மட்டில் ஒரு தயக்கம் இருந்தது. காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் ‘தலையிடாக் கொள்கை’ மாறுமோ, அமெரிக்காவுடன் செய்து கொண்டிருந்த அணு ஒப்பந்தம் கைவிடப்படுமோ என்றெல்லாம் இந்திய அரசுக்குக் கவலைகள் இருந்தன. இந்திய அரசுக்குத்தான், மக்களுக்கல்ல. மக்களுக்கு இதைப்பற்றி என்ன கவலை?

ஆனால் ஒபாமா ஆட்சி இந்த இரு அம்சங்களில் மட்டுமல்ல இந்தியாவைப் பொருத்தமட்டில் எல்லா அம்சங்களிலுமே புஷ் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ரோம்னியும் சரி, ஒபாமாவும் சரி இந்தியக் கொள்கை குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. ஏனெனில் குடீயரசுக் கட்சியாயினும், ஜனநாயகக் கட்சி ஆயினும் இந்தியக் கொள்கையில் பெரிய மாற்றமில்லை. வளர்ந்து வரும் ஒரு சந்தை, சீனாவுக்கு அருகிலுள்ள போர் நிலை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு என்கிற வகையில் இரண்டுமே இந்தியாவைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதையே விரும்புகின்றன.

மற்றபடி இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் தொழில் நுட்பர்களுக்கு விசா கெடுபிடிகள் மற்றும் விசா கட்டணத்தைக் குறைத்தல், அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து ‘மெடிகல் டூரிசம்’ அனுபவிக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு விதிகளைத் தளர்த்துதல், இந்தியர்களின் வேலை வாய்ப்பை பாதிக்காத வண்ணம் அமெரிக்கா இங்கு ‘அவுட் சோர்சிங்’ செய்வதைக் குறைக்காதிருத்தல் முதலானவற்றில் ஒபாமாவின் அணுகல்முறை எதிர்மறையாகவே தொடர்கிறது.

ஈராக்குடனான நமது உறவுகளையும், எண்ணைத் தேவையைப் பெரிய அளவில் நாம் அங்கிருந்து பூர்த்தி செய்து கொள்வதையும் கட்டுப்படுத்துவதிலும் நமது இன்சூரன்ஸ் செக்டாரைத் திறந்து விடுவதிலும் அமெரிக்க கெடுபிடிகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். வர்த்தகப் பெருக்கம், இராணுவக் கூட்டு, இராணுவ தளவாட விற்பனை இதெல்லாமும் அதிகரிக்கும். ஒபாமாவின் வெற்றியை இந்திய முதலாளிகள் வரவேற்றுள்ளனர். எதிர்பார்த்ததுதான். மக்களைப் பொருத்த மட்டில் வரவேற்க ஏதுமில்லை.

உலக வரலாற்றில் மிக அதிகமான செலவில் நடந்த தேர்தல் இது. இரு வேட்பாளர்களும் சேர்ந்து 40 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளனர். இதில் ஒபாமாவின் செலவு அதிகம், 2008 தேர்தலிலும் ஒபாமாவின் செலவுதான் அதிகம். ஏழை ஒபாமாவுக்கு ஏது இத்தனை பணம்? கார்பொரேட்கள் அள்ளிக் கொடுப்பதுதான். எந்த நம்பிக்கையில் கொடுக்கிறார்கள் தம் நலன் காப்பாற்றப்படும் என்றுதானே?

சென்ற முறை அவர் வாக்களித்தவாறு குவான்டனமோ பே மற்றும் அபுகாரிப் சித்திரவதை கூடங்களை ஒழித்துக் கட்டுவதையோ, முஸ்லிம் நாடுகளின் மீதான கெடுபிடிகளைக் குறைப்பதையோ அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லையே? ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவது, ஆளில்லாத விமானங்கள் மூலமாகப் பாகிஸ்தான் எல்லையைத் தாக்குவதை நிறுத்துவது எதையும் செய்ய முடியவில்லையே?