சுந்தரம் டாக்டர்…

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்.”லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல போட்டு.. மாட்டைத் தூக்கி ஆட்ல போட்டு..”என்பதெல்லாம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் சில சொலவடைகள்.

ஆம்பலாப்பட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட தினங்களில் சைக்கிளில் பாப்பாநாடு வருவார். வேட்டி, மேலே புஷ் கோட் மாதிரி ஒரு சட்டை போட்டிருப்பார். பழைய தமிழ் சினிமாப் படங்களில் டாக்டர்கள் சிவப்பாக ஒரு தோல் பை வைத்திருப்பார்களே அதே போல ஒரு பை சைக்கிளில் தொங்கும். அந்தப் பையில் ஒரு சிரிஞ்ச், சில ஊசிகள், கொஞ்சம் பென்சிலின் ஊசி மருந்து, பென்டிட் சல்ஃபா மாத்திரைகள்,சில காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு மருந்துகள், இன்னும் அவருக்குத் தெரியும்,அந்தப் பகுதியில் என்னென்ன மருந்துகள் அதிகம் தேவைப்படும் என. அவற்றில் கொஞ்சம் இருக்கும். அப்போது எங்கள் ஊரில் ஃபா ர்மசி கிடையாது. முக்கிய மருந்துகள் வாங்க வேண்டுமானால் பட்டுக்கோட்டை அல்லது ஒரத்தநாடு போக வேண்டும்.

பாப்பாநாடு வந்தால்ஒரு இரண்டு அல்லது மூன்று இடங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இருப்பார். அதில் எங்கள் சோடா கம்பெனியும் ஒன்று. என் அப்பா மலேசியாவில் இயக்கத்தில் இருந்த போது கூலியாக வேலைக்கு வந்தவர் சுந்தரம். பக்கத்து ஊர்க்காரர் என்கிற வகையில் நெருக்கமான பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வயது குறைவு. அப்பா நாடு கடத்தப்பட்டு இங்கு தப்பித்தோடிவந்த பின், சுந்தரம் சுபாஷ் சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் சேர்ந்து, அவர்களின் போர்முயற்சி தோற்ற பின் இந்தியாவிற்கு ஓடி வந்தார். ஏதோ ஒரு சிறிய தொகை அந்த வகையில் ஐ.என்.ஏ பென்ஷனாக அவருக்கு வந்து கொண்டிருந்தது.

சுந்தரம் அண்ணன் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர், மருத்துவம், கூடை முடைதல் முதலியன அவர்களின் தொழில். குறவர்சமூகத்தை அரசு குற்றப் பரம்பரையாக வரையறுத்திருந்தது. இன்று அந்தச் சட்டம் ஒழிக்கப்பட்டாலும்அரசு அவர்களைக் குற்றப் பரம்பரையினராகத்தான் இன்றும் நடத்துகிறது. அது வேறு கதை.

ஆம்பலாப்பட்டுஒரு கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமம். அதில் ஒரு மூலையில் இவர்களின் குடும்பம். ஆம்பலாப்பட்டு ஒரு கம்யூனிஸ்ட்கிராமமும் கூட. இப்போது சி.பி.ஐ கட்சியின் விவசாயிகள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளடாக்டர் துரைமாணிக்கம் அந்த ஊர்க்காரர்தான். ஒரு இறுக்கமான சாதி ஆதிக்கமுள்ள அந்த ஊரில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் ஓரளவு சாதி ஒதுக்கல்களிருந்து தப்பித்து வாழ்ந்தார் என்றால், அதன் அடிப்படை அவர் கையில் இருந்த இந்த தொழிற் திறமைதான். எந்த மருத்துவ வசதியும் இல்லாத அந்தக் கிராமத்தில் கூப்பிட்ட நேரத்திற்கு வந்து உயிரைக்காப்பாற்றிச் செல்பவர் என்பதால்.

அந்த வயதிலேயே நான் கவனித்துள்ளேன். “சுந்தரம் இன்னைக்கி வருவானா” என என்னிடம் கேட்பவர்கள் (அப்பாவிடம்அப்படிக் கேட்கமாட்டார்கள்), அவர் வந்தவுடன், “தம்பி, ரெண்டு நாளா காச்சலுப்பா, எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது…… ” என்பார்கள். தமிழில் ‘தம்பி’ என்பதுஆதிக்க சாதியினர், கீழ் சாதியினரை விளிக்கும் ஒரு சொல்லுங் கூட என்பது எனக்கு அப்போதே அரைகுறையாகப் புரிந்தது. சிரித்துக் கொண்டே ஏகக் கிண்டலுடன் சுந்தரம் அண்ணன் வைத்தியத்தைத் தொடங்குவார். அம்மா ஒரு அகன்ற பாத்திரத்தில்கொதிக்கக் கொதிக்க சுடு நீரும், ஒரு தம்ளரில் தேநீரும் கொண்டு வந்து வைப்பார். ஊசி ஒன்றை எடுத்து சிரிஞ்சில் செருகி, கொதிக்கும் நீரை உறிஞ்சிக் கழுவியவாறே பேசிக் கொண்டிருப்பார்.

ஊசி, மருந்து ஆகியவற்றுடன்சுந்தரம் அண்ணனுக்கு அளிக்கப்படும் ஃபீஸ் இரண்டு ரூபாய்கள். பல நேரங்களில் அதையும் கொடுக்காமல் கடன் சொல்லிச் செல்வார்கள். கடும் நோய், சாதாரண சிகிச்சை போதாது என்றால் அதை விளக்கமாகச் சொல்லி தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திருக்கு அனுப்புவார். சில நேரங்களில் அவரே அழைத்துச் செல்வதும் உண்டு.

####

ஒருமுறை இருமிக்கொண்டே ஒருவர் வந்தார். நான் அந்தப் பக்கம் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன். “தம்பி மாக்ஸ்” என விளித்தார். ஓடி வந்தேன். “கணக்கு நோட்டில எழுதாத ஒரு நல்ல வெள்ள பேப்பர் ஒண்ணு கிழிச்சிட்டு வா” என்றார்.

அவ்வாறே செய்து விட்டு அருகில் நின்றேன். அந்தப் பேப்பரில்அவரை உமிழச் செய்து அதை மடித்து ஒதுக்குப் புறமாக கூறையில் செருகி விட்டு, “யாரும்இதைத் தொடாதீங்க” என்று சொல்லிக் கிளம்பினார். ஆவல் மேலிட நான் எதுக்குண்ணேன் என்றேன். “தம்பி இது முத்திய காச நோய்க் கேசு. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்தபேப்பரை விரிச்சு வெளிச்சத்துல பார்த்தா காச நோய்க் கிருமி இருந்தா இந்தக் காகிதத்தில ஓட்டை விழுந்திருக்கும்.”

சுந்தரம் அண்ணனின் “தவறான” வைத்தியத்தால் யாரும் செத்துப் போனதாக அங்கு வரலாறே இல்லை.

#############

அம்மாவுக்குக்கையில் ஒரு கட்டி. வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகையாய் வந்தது.”சுந்தரம் இன்னைக்கி வர்ற நாள். வரலேன்னா பட்டுக்கோட்டைக்குப் போகலாம்” எனஅப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

சுந்தரம் அண்ணன் சரியாகப் 11 மணிக்கு வந்தார். அப்பா எல்லாவற்றையும் சொன்னார். சுந்தரம் அண்ணன் அம்மாவைக் கூப்பிட்டுப் பார்க்கக் கூட இல்லை.. “தம்பி மார்க்ஸ்” என்றார். “போயி பனாமா பிளேடு ஒண்ணு வாங்கிட்டு வா” என்றார்.

அப்போது ‘பனாமா’.’பாரத்’ என இரண்டு பிளேடுகள் மட்டும் உண்டு.பனாமா கொஞ்சம் நல்ல பிளேடு பத்து பைசா விலை. பாரத் ஆறு பைசா. ஓடி வாங்கி வந்தேன்.

அம்மாவைக் கூப்பிட்டுபெஞ்சில் உட்காரச் சொன்னார். “அந்தப் பக்கம் திரும்பிக்கிங்க அக்கா” என்றார். “மார்க்ஸ் நீ அந்தப் பக்கம் ஓடு” என விரட்டினார்.

நான் பயந்து கொண்டேஓடி, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா ரொம்பவும் பயந்திருந்தார். பிளேடை எடுத்து, கொதிக்கும் சுடு நீரில் ஒரு முறை தோய்த்துவிட்டு கட்டி மீது வைத்து அழுத்தி இரக்கமில்லாமல் அவர் கீறிப் பிதுக்கியபோது அம்மா வாய்விட்டுக் கத்தினார். நானும்தான். அப்பாவின் சலவை செய்த வேட்டியிலிருந்துஒரு துண்டை நறுக்கி ஒரு பச்சிலைச் சாற்றில் அதைத் தோய்த்துக் காயத்தின் மீது வைத்துஇறுகக் கட்டினார். ஏதோ ஒரு ஆன்டி பயாடிக் ஊசியைப் போட்டு, ‘பெய்ன் கில்லர்’ மாத்திரைகள் இரண்டையும் கொடுத்துவிட்டுஅவர் அகன்ற காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.

இரண்டு நாட்களுக்குப்பின் அவர் வந்து கட்டைப் பிரித்தபோது அம்மாவின் காயம் பெரிதும் ஆறி இருந்தது. மரபு வழி நாட்டு வைத்தியத்துடன் தற்போதைய சில அல்லோபதி மருந்து வகைகளையும் இணைத்து ஒரு வகையான holistic /  integrated மருத்துவமுறையை அவர் தன் அனுபவ அடிப்படையில் உருவாக்கி இருந்தார்.

#######

தம்பையா நாயுடு மாயூரத்திற்கு அருகில் உள்ள செம்பனார் கோவிலைச் சேர்ந்தவர். மலேசியாவில் அப்பாவின் தொழிற்சங்க அலுவலகத்தில் சமையற்காரராக இருந்தவர். அவரும் இரண்டொரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து இரண்டொரு நாட்கள் தங்கிச் செல்வார். அவருக்குக் கடும் மூல வியாதி. குறவர் சமூகத்தினர் முல பவுத்திர சிகிச்சையில் தேர்ந்தவர்கள். சுந்தரம் அண்ணனும்தான். ஆசன வாய் சார்ந்த வைத்தியத்தை அக்காலத்தில் “கீழ்” சாதியினருக்கு ஒதுக்கி இருந்திருப்பார்கள் போலும்.

அப்பா கடிதம் எழுதி இங்கே அவரை வரச் சொன்னார். இம்முறை அவரோடு அத்தையையும் அழைத்து வந்திருந்தார்.

சுந்தரம் அண்ணன் வந்தவுடன் சிகிச்சை ஆரம்பமாகியது. அப்பா சலவை செய்த பழைய எட்டு முழ வேட்டி ஒன்றை எடுத்துத் தந்தார். அம்மா கொதிக்கக் கொதிக்கச் சுடு நீர் கொண்டு வந்தார்.

சுந்தரம் அண்ணனும் அப்பாவும் இரண்டு ஒதியம் பெஞ்சுகளையும் ஒரு மூலையில் கொண்டு போய்ப் போட்டார்கள். சாக்குப்படுதாவை எடுத்து மறைவு கட்டினார்கள். தம்பையா மாமாவை அழைத்துக் கொண்டு மறைவிற்குள்சென்றார் சுந்தரம் அண்ணன். சற்று நேரம் கழித்து நான் மெதுவாகச் சென்று படுதாவை விலக்கிப்பார்த்தேன். தம்பையா மாமா ஆடைகளின்றிக் குப்புறப் படுத்திருந்தார். “ஏய், தம்பி,மாக்ஸ், ஓடு, ஓடு.. இங்கெல்லாம் வரக் கூடாது” என விரட்டினார் அண்ணன்.

கச்சிதமாக ஆபரேஷன்முடிந்தது. அடுத்த சில நாட்களில் தம்பையா மாமாவும் அத்தையும் ஊருக்குத் திரும்பினர்.

#######

சுமார் 18 ஆண்டுகள் இருக்கலாம். தமிழக அரசு பெரிய அளவில் ‘போலி டாக்டர்கள்’ மீது நடவடிக்கை எடுத்தது. தினசரி நாளிதழ்களைத் திறந்தால் அந்த ஊரில் போலி டாக்டர் கைது. இந்த ஊரில் இருவர் கைது எனச் செய்திகள் வரும். பட்டதாரி மருத்துவர்கள் அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவு இது. பட்டமில்லா இந்த கிராமத்து வைத்தியர்கள் தலைமறைவாயினர்.

போலி டாக்டர்கள்கைது என்பதைப் பார்க்கும் போதெல்லாம் என்க்கு சுந்தரம் அண்ணன் ஞாபகம்தான் வரும்.மனம்நொந்து போவேன். ‘போலி’ டாக்டர்கள் ஏன் உருவா கின்றனர்? போதிய அளவில் அரசு மருத்துவ மனைகளும், மக்கல் தொகை வீதத்திற்கு ஏற்ப மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத ஒரு நாட்டில்  ‘போலி’ டாக்டர்களும் இல்லாது போனால் கிராமப் புற மக்களின் கதி என்ன? என்பதை விளக்கி நான் எழுதிய கட்டுரை தினமணி நாளிதழில் முழுமையாகப் பிரசுரமானது. தலைமறைவாய்த் திரிந்த இந்தப் பட்டதாரி மருத்துவர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவர்கள் நீதி மன்றத்தை அணுகினர். அவர்கள் ஆதாரமாய்க் காட்டியஆவணங்களில் என் கட்டுரையும் ஒன்று.

பின் அவர்கள் நாமக்கல்லில் ஒரு மாநாடு கூட்டியபோது நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். ‘போலி’ டாக்டர்கள் மீது எனக்கு உண்டான பரிவின் பின்னணியில் சுந்தரம் அண்ணனின் நினைவுகள் இருந்தன.

##############

பாப்பாநாட்டுக்கும்எனக்கும் எல்லாத் தொடர்பும் அறுந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லறைத் திருநாளன்று சென்று அப்பா, அம்மா கல்லறைகளுக்கு மாலை போட்டு வருவது வழக்கம். இப்போதுஅதுவும் நின்று விட்டது. கடைசி முறை சென்ற போது சின்னக் குமுளை கலியமூர்த்தியை விசாரித்தேன்.”சுந்தரமா, அவர் இப்ப பாப்பாநாட்டுக்கே வந்துட்டாரே. முன்ன மாதிரி வைத்தியமெல்லாம்செய்றதில்ல. வயசாயிட்டு” என்றார். இப்போது அங்கே ஒரு ஆரம்ப சுகாதார மருத்துவ மனை, இரண்டு மூன்று பட்டதாரி டாக்டர்கள், சில பார்மசிகள் எல்லாம் உள்ளன.

அவர் வீட்டை விசாரித்துச் சென்றபோது, கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்துவிட்டு, “யாரு, தம்பி மாக்சா?”எனக் கேட்டுக் கைகளைப் பற்றிக் கொண்டார். கண்கள் நீரைச் சொறிந்தன.

என் கண்களுந்தான்.

இணைப்பு:

சொல்ல மறந்து போனேன், சுந்தரம் டாக்டரின் மூத்த அண்ணன் டாக்டர் தியாகராஜன். சின்ன வயதிலேயே ஊரை விட்டு ஓடிச்சென்றவர். விழுப்புரத்தில் பாரம்பரிய மருத்துவம் செய்து பின் காந்தி சிலைக்கருகில் “ஆரோக்கிய மெடிகல் ஹால்” என ஒரு மருத்துவமனையையே நிறுவினார். அவரது மருத்துவ மனையில்இரண்டு பட்டதாரி மருத்துவர்கள் வேலை செய்தனர்.

1960 களில் அவர்விழுப்புரம் முனிசிபல் சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தந்தை பெரியார், நடிகர்திலகம் சிவாஜி, புதுச்சேரி சுப்பையா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். வாசவி ஓட்டலுக்குஎதிர்ப்புறச் சாலையில் இருந்தது அவர் வீடு.

விழுப்புரத்தைக்கடக்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு அது சாத்தியமாய் இருந்தது.

அசலூர்க்கார ஒரு குறவர் சமூக மனிதர் விழுப்புரம் போன்ற ஒரு ஊரில் முனிசிபல் சேர்மனாவது இன்று சாத்தியமா?

(இந்த நினைவஞ்சலி டாக்டர் தியாகராஜன் அவர்களின் இளம்வயதில் மறைந்துபோன புதல்வியும் என் பால்ய சினேகிதியுமான மல்லிகாவின் நினைவுகளுக்குச் சமர்ப்பணம்.)

இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?

(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது)

ஒரு போர் தேவை என்கிற குரல்தான் இப்போது உரத்து ஒலிக்கிறது. அப்படியான ஒரு கருத்தை உருவாக்குவதற்குத்தான் நமது ஊடகங்களும் துணை நிற்கின்றன. தொலைக்காட்சி விவாதகங்களிலும் இத்தகைய குரல்களுக்குத்தான் அதிக இடம் அளிக்கப்படுகின்றன. இது தேர்தல் நேரம் வேறு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் சீனாவையும் உடனடி எதிரிகளாகக் கட்டமைப்பது என்பது அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. அதிலும் முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் ஒரு யுத்தத்தை நடத்திப் பணிய வைப்பதென்பது அதன் உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்கு உகந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆளும் கட்சியான காங்கிரசைப் பொருத்தமட்டில், அதற்கு ஊழல், பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்தச் சூழ்நிலையில், இத்தகைய போர் வெறிப் பேச்சுக்கள் அதற்கும்  கூட இவற்றிலிருந்து கவனத்தைத் திருப்ப உதவியாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துள்ளார். எங்களின் பொறுமையைத் தவறாக எடை போட்டுவிடாதீர்கள் எனக் கூவியுள்ளவர், எல்லையோர அத்துமீறல்களுக்கு உடனடியாக எதிர்வினைகள் புரிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய இராணுவத் தளபதி விக்ரம் சிங், பிரதமரைச் சந்தித்து எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் நடக்க உள்ள ஐ.நா பொது அவைக் கூட்டத்தின்போது மன்மோகனும் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப் பேச உள்ள ‘சம்மிட்’ நடைபெறுமா என்பது இப்போது கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 6 அன்று  இந்திய வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதற்குப் பின் இந்த எல்லையோர மோதல்களில் பாகிஸ்தான் வீரர்கள், ஒரு கேப்டன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஒட்டி நேற்று பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து, அதன் அயலுறவுச் செயலர் இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளார். பாக் தேசிய அசெம்பிளியில் கண்டனத் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. எனினும் ஆக்கபூர்வமான முறையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்பதும் தீர்மானத்தில் ஓரங்கமாக உள்ளது.

மன்மோகன் அரசின் நிலைபாடு என்பதுங்கூட பாக் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பதாகவே இதுவரை இருந்தபோதிலும் இன்றுள்ள அரசியல் சூழலில் இதை அவர்கள் வெளிப்படையாகப் பேச இயலாதுள்ளது. இந்திய வீரர்கள் ஐவர் எல்லையில் கொல்லப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, “பாக் ‘இராணுவ உடையில்’ வந்த சுமார் 20 பேர்கள் சுட்டதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள்” என்று அறிவித்தது பா.ஜ.கவினால் மட்டுமின்றி இந்திய ஊடகங்கள் பலவற்றாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாக்கிக் கொன்றவர்கள் பாக் இராணுவ வீரர்கள்தான் என அடுத்த நாள் அழுத்தம் திருத்தமாக அவர் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதாயிற்று.

உண்மையில் அவர் முதலில் வெளியிட்ட அறிக்கைதான் எதார்த்தமானது மட்டுமல்ல, ராஜதந்திர ரீதியில் சரியானதுங்கூட. பாக் அரசியலைப் புரிந்தவர்களுக்குத் தெரியும், பாக் இராணுவம், இந்திய இராணுவத்தைப் போல அமைச்சரவைக்கு  முழுமையாகக் கட்டுப்பட்ட ஒன்று அல்ல. இந்தத் தாக்குதல் பாக் இராணுவ வீரர்களாலேயே நடத்தப்பட்டிருந்தாலுங் கூட அது நவாஸ் ஷெரீஃப் அரசின் ஒப்புதலுடன் நடந்ததாகக் கொள்ள இயலாது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிற செய்தி எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் பாக் இராணுவத்திற்கு அந்த எண்ணம் கிடையாது. எனவே ஷெரீஃபின்  திட்டத்தை முறியடிக்க இராணுவம் தன்னிச்சையாகச் செய்திருக்கலாம் என்கிற வாய்ப்பும் உண்டு. பாக் அரசியலில் இதெல்லாம் சகஜம். ஆனால் பாக் இராணுவமே கூட இன்று இந்தியாவுடன் ஒரு தீவிரமான போரை விரும்புகிறதா என உறுதியாகச் சொல்லிவிட இயலாது. ஏனெனில் பாக் மண்ணை வேராகக் கொண்டு உருவாகியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, பாக்கின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குமே பெரிய சவாலாக உள்ளது. பழங்குடிப் பகுதியில் ‘டெஹ்ரீக்-ஏ-தாலிபான் –ஏ- பாகிஸ்தான்’ அமைப்புடன்  பாக் நடத்தும் போரில் அது மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக் இராணுவத்திற்கு தோல்விதான்.

பாக் இராணுவத்திற்குள்ளேயே தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உள்ளது. தீவிர இயக்கங்களின் நோக்கங்களின் மீது ஒரு பகுதியினருக்கு மரியாதையும் உள்ளது. எனவே இராணுவத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இராணுவத்தின் அப்பகுதியினரின் சாகசங்களில் ஒன்றாகவும் இது நடந்திருக்கலாம், அல்லது பாக் இராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் தீவிரவாதிகளும் இதைச் செய்திருக்கலாம்.

இத்தனை சாத்தியக் கூறுகளும் உள்ள நிலையில் அந்தோணியின் தொடக்க அறிவிப்பு எத்தனை எதார்த்தமான ஒன்று என்பதை யாரும் புரிந்து கொள்ள இயலும். நவாஸ் ஷெரீஃப் அரசின் முழுமையான ஒப்புதலுடன் பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வது உட்பட பாக் அரசுடன்  நேரடி மோதல் என்கிற ஒரு அணுகல் முறையை மேற்கொள்வது ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய சாத்தியம் இல்லை என்பதுதான் பாக் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ள  எல்லோருடைய கருத்தும். ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது வெளியானவுடன் ஷெரீஃப் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்த செய்தி பத்திரிக்கைகளை வந்தது.  பிரதமரான பிறகு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் அவர் விடுத்த செய்தியிலுங் கூட இந்தப் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவிற்கான பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.

இந்தியாவுடன் ஷெரீஃப் முயற்சிக்கும் சுமுகமான உறவை முறிக்கும் நோக்குடன்தான்  பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்றால், இதை ஒட்டி நாம் பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வது என முடிவெடுப்பது பாக் இராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பதிலாக எல்லை ஓரத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் அதே நேரத்தில் பாக் அரசுடன் பேச்சு வார்த்தையைத் தொடர்வதுமே பாக் இராணுவத்தின் நோக்கத்தை முறியடித்து அதைத் தனிமைப் படுத்த உதவும். இந்தியாவுடன் சுமுக உறவைப் பேண வேண்டும் என எண்ணுகிறவர்களே பாகிஸ்தானில் அதிகம் உள்ளனர் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாக் இராணுவத்தின் ஒரு பிரிவு தன்னிச்சையாகவோ, இல்லை பாக் இராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகளோ இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தாலும் கூட உடனடி மோதல் என்பது நிச்சயம் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்காது. எல்லையில் நடைபெறும் போர் தீவிரவாதிகள் எளிதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கே உதவும்.

தவிரவும், இராணுவ ரீதியில் எல்லா அம்சங்களிலும் நாம் பாக்கை விட வலிமையாக உள்ளோம் என்கிற நிலை பாக் அணு குண்டு வெடித்த அன்றோடு முடிவுற்று விட்டது. இன்று இரண்டுமே அணு வல்லமை உள்ள நாடுகள். 2001- 02 காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை ஒட்டி ‘ஆப்ரேஷன் பராக்கிரம்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியபோது இந்தியத் தரப்பில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறையவும் இல்லை. கிஷ்ட்வார் (2001), ரகுநாத் ஆலயம் (2002), நந்திமார்க் (2003) முதலான தாக்குதல்களை எல்லாம் நாம் முறியடித்துவிட இயலவில்லை. வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையை ஒட்டி 2003க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்புதான் எல்லையில் இவ்வாறு அவ்வப்போது தாக்குதலில் இரு தரப்பிலும் வீரர்கள் கொல்லப்படுவது குறைந்தது.

2000த்தில் இது போன்ற எல்லையோரத் தாக்குதல்களில் இந்தியத் தரப்பில் 114 வீரர்களும் 36 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். 2001ல் இது 37 வீரர்கள் 17 சிவிலியன்களாக இருந்தது. 2002ல் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் 81, சிவிலியன்கள் 74. 2003ல் இது 29 வீரர்கள் 38 சிவிலியன்கள். போர் நிறுத்தத்திகுப் பின் இந்த எண்ணிக்கை சுழியாகியது.

எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகள் ஏற்படாதவரை இதுபோன்று எல்லையில் படைகள் ஒன்றையொன்று சுட்டுக் கொள்வது என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். உண்மையில் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை” ஒடுக்குவதற்காக எல்லை ஓரங்களில் சுடுவது என்பதை இந்தியாவே தொடங்கியது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது,

இன்று பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனப் படு தீவிரமாகப் பா.ஜ.க பேசி வந்தபோதும் அது ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் ஓரளவு பொறுப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். 2001 பாராளுமன்றத் தாக்குதலை ஒட்டி பாக் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிற கருத்துக்களை முறியடிக்கத் தான் எத்தகைய முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டி இருந்தது என்பது குறித்து அன்றைய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேபோல இந்திய பாக் உறவில் வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையும், அதன் விளைவான போர்நிறுத்தமும் இந்திய பாக் உறவில் ஒரு மைல் கல் எனலாம்.

சென்ற ஆகஸ்ட் 4 அன்று பாக் உடனான பேசுவார்த்தையை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத் துறை சார்ந்த சுமார் நாற்பது உயரதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்குப் பின் ஒருவேளை பா.ஜ.க தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால் அதில் தமக்கு ஒரு பதவி என்பதைக் காட்டிலும் வேறு எந்த நல்ல நோக்கத்தையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.

அதே நேரத்தில் ஆகஸ்ட் 12 அன்று “அமைதிக்கான இந்திய பாகிஸ்தான் படைவீரர்களின் முன்முயற்சி” (Indo Pak Soldiers Peace Initiative) என்கிற அமைப்பின் இந்தியக் கிளை வெளியிட்ட அறிக்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்த இவர்கள், மோதல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, பேச்சுவார்த்தைகள் ஒன்றே இன்றைய தேவை எனக் குரல் எழுப்பினர். “இரு நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகாரம் பெறுவதற்கும், வளம் பெறுவதற்கும் அமைதி ஒன்றே வழி” என அந்த அறிக்கையில் முன்னாள் படை வீரர்கள் முழங்கினர்,

மக்கள் நலனை  முன்நிறுத்துபவர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பதும், சொந்த மற்றும் அரசியல் நலன் சார்ந்து பேசுவோர் பேச்சு வார்த்தைகள் கூடது எனச் சொல்வதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு 

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System  and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி,  பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam’ என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர்.  உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும்  சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு  ‘Devadasis – Wives of God’ என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.

தேவதாசிமுறை ஒழிப்பு, அதில் முதுலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் பங்கு, சத்தியமூர்த்தியின் சட்டமன்றப் பேச்சுக்கள் ஆகியவை குறித்துத் தமிழில் அதிகம் எழுதியுள்ளவர்களில் நானும் ஒருவன்.தே 2

தேவதாசி முறை குறித்து நாம் சிலவற்றை நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம்:

1.பரத்தமை, பொதுமகளிர், வரைவின் மகளிர், பிற்காலத்திய தேவதாசியர் ஆகியோருக்கிடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் முக்கியம். சோழர் காலத்தில் கோவில்கள் என்கிற நிறுவனம் அரசதிகாரத்தின் பிரிக்க இயலாத ஓரங்கமாக மாறியபோது தேவதாசிமுறை கோவில் நிர்வாகத்தின் பகுதியாக நிறுவனமயப்படுத்தபட்டது. தளிச்சேரிப் பெண்டுகள் முதலான பெயர்களில் தேவதாசியர் அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கென நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஓலை அனுப்பிக் கட்டாயமாக 400  பெண்களைக் கொணர்ந்து அவர்களைத் தேவதாசியராக்கிய வரலாற்றை நாம் அறிவோம்.

2.இவர்கள் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தபோதும் பின்னாளில் இவர்களே ஒரு சாதியாயினர். தமிழகச் சாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லாச் சாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. ‘சின்னமேளம்’, ‘பெரியமேளம்’ முதலான பிரிவுகளும் உருவாயின. முதலியார், பிள்ளை முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னாளில் இவர்கள் அனைவரும் நவீன அரசுப் பதிவுகளில் இசை வேளாளராகக் குறிக்கப்பட்டனர்.

3.மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர். காலங்காலமாக இவற்றைக் கையளித்துக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குண்டு. தஞ்சை நால்வர், பாலசரஸ்வதி தேவி, வீணை தனம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி எ னப் பலரையும் சொல்லலாம்.

4.பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நமது சமூகத்தில், கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் தேவரடியார்களே இருந்தனர். அச்சுக் கோர்ப்பு முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சீகன்பால்கு அக்காலக் கல்வி முறையின் பாடத்திட்டங்கள் குறித்துச் சேகரித்துள்ள தகவல்கள் இதற்குச் சான்று (சீகன்பால்கு குறித்த எனது நூலில் இதைக்  காணலாம்). முத்துப்பழனி, புட்டலக்‌ஷ்மி நாகரத்தினம்மாள் முதலியோர் சில எடுத்துக்காட்டுகள்.

5.இத்தனைக்கும் மத்தியில் தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை மிக அவலமான ஒன்று.

கட்டாயமாகப் பொட்டுக்கட்டப்பட்டு கோவில் சேவகத்திற்கு விடப்படும் இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டது. குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டால் என்ன வந்துவிடப் போகிறது என இதை ஒதுக்க இயலாது. ஏனெனில் இது அவர்களின் சுதந்திரமான தேர்வு அல்ல. கட்டயமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. இவர்கள் கோவிற் பூசகர்கள், நிர்வாகிகள், ஊர்ப் பெரியமனிதர்கள் ஆகியோரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டதோடன்றி, இவர்களின் முதுமைக் காலம் ம்கவும் அவலத்துக்குரிய ஒன்றாக அமைந்தது.

காலங்காலமாக இப்படிப் பாலியல் சுரண்டல்களுக்க்கு ஆட்பட்டு வந்த இச் சமூகம் சென்ற நூற்றாண்டில் இப் பொட்டுக்கட்டும் அவலத்திலிருந்து விடுபட்ட வரலாற்றையும், அதில் முத்துலட்சுமி, ராமாமிர்தம் ஆகியோரின் பங்கையும், திராவிட இயக்கம் இதில் முன் நின்றதையும், சத்தியமூர்த்தி முதலானோர் இந்தியப் பாரம்பரியம் என்கிற வகையில் தெவதாசி முறையை ஆதரித்துப் பேசிய வரலாற்றையும், காக்க முயன்று தோற்ற கதையையும் நாம் அறிவோம். என் கட்டுரைகள் பலவற்றில் இதை விரிவாகப் பேசியுள்ளேன்.  ஆங்கிலத்தில் ஆனந்தி முதலானோர் இதை விரிவாக எழுதியுள்ளனர். திராவிட இயக்கம் தவிர காந்தியடிகளும் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சுற்றுப்பயணம் ஒன்றில் அவர் அத்தனை கூட்டங்களிலும் தேவதாசிமுறை ஒழிப்பை ஆதரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது (பார்க்க: எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூல்).

இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் இசையும், தேவதாசியரால் காபாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (‘சதிர்’) இங்கே ‘கர்நாடக சங்கீதமாகவும்’, ‘பரத நாட்டியமாகவும்’ உருமாற்றப்பட்டது. இதில் பார்ப்பனர்களின் கைவரிசையை விளக்க வேண்டியதில்லை. பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.

எனவே இந்தக் கலையின் தமிழ் வேர்களையும், இதக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்தபோதிலும் அதை நாம் வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

அதே நேரத்தில் தேவதாசிமுறையை உன்னதப்படுத்தி, அதை ஒழித்துக் கட்டிய திராவிட இயக்கத்தின் பங்கைக் கொச்சைப்படுத்திப் பேசும் யாரையும் நாம் கண்டிக்கத் தவறவும் கூடாது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நாட்டியத் துறையில் நடைபெற்ற சொர்ணமாலாவின் கருத்துக்களை நேரில் சென்று கவனித்து மறுத்துரைத்த ஒவியா முதலானோரின் பங்கு பாராட்டுக்குரியது.

தே 3அதே நேரத்தில் இதற்கான கல்வித் துறையில் ‘Devadasi system and Bharathanatiyam’ ,  ‘Evolution of Bharathanatiyam’, ‘Devadasis – Wives of God’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளே நடத்தக் கூடாது எனக் கூற இயலுமா? தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதால் அது குறித்து ஆய்வுகளே கூடாது எனச் சொல்ல இயலுமா? ‘தமிழகத்தில் தேவரடியார் மரபு’ என்கிற நூலை முனைவர் நர்மதா எழுதியுள்ளார். அது அவரது முனைவர் பட்ட ஆய்வு. அந்நூல் குறித்த விமர்சனத்தை நான் ‘தீராநதி’ யில் எழுதியுள்ளேன். இன்றைய ‘பரத நாட்டியத்தில்’ தேவரடியார் மரபு குறித்த அடுத்த நூற் தயாரிப்பில் அவர் இப்போது உள்ளார். டி.எம்.சுந்தரம் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். லக்‌ஷ்மி விஸ்வநாதன் Women of Pride: The Devadasi Heritage என்றொரு நூலை எழுதியுள்ளார். இன்னும் பல ஆய்வுகள் இருக்கக் கூடும். சத்யஜித்ரே, பாலசரஸ்வதி குறித்து  ஒரு அற்புதமான ஆவணப் படம் (‘பாலா’) எடுத்தார்.

இது குறித்து நான் ஓவியா அவர்களிடம் பேசியபோது அவர் இரு நியாயங்களை முன்வைத்தார். 1.இப்படியான ஒரு தலைப்புக்குள் ஒளிந்து கொண்டு தேவதாசி முறையை நியாயப்படுத்திவிடக் கூடாது. 2.ஒரு தனியார் அரங்கில் இப்படிப் பேசினால் கூட அதை அனுமதிக்கலாம். ஒரு கல்வி நிலையத்தில் இப்படிப் பேசுவதை எப்படி அனுமதிப்பது.

உண்மைதான். எனினும் கல்வி நிறுவனங்களில் கல்விச் சுதந்திரம் (academic freedom)  என்பது முக்கியம். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், ஆய்வில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டி ஊகித்து அந்த அடிப்படையில் எதிர்ப்புக் காட்ட இயலாது. எழுதப்பட்ட ஒரு பாடத்தில் உள்ள தவறுகளை நாம் சுட்டிக் காட்ட இயலும். ஆனால் எழுதப்பட இருக்கும் ஒரு ஆய்வில் ஆலது பேசப்பட உள்ள ஒரு உரையில் நீ தவறாகத்தான் பேசுவாய் என்கிற முன் அனுமானத்தில் நாம் அதில் தலையிடுவது கல்விச் சுதந்திரத்தில் தலையிடுவதாகவே அமையும். அப்படி எழுதப்படும், பேசப்படும் பட்சத்தில் அத்ற்கான எதிர்வினைகளை ஆற்ற நமக்கு இப்போது எத்தனையோ வழிமுறைகள் உண்டு.

இறுதியாக ஒன்றைச் சொல்லி ஆக வேண்டியுள்ளது. இன்று தேவதாசி முறையைச் சொர்ணமாலா போன்ற பார்ப்பனர் மட்டும் போற்றவில்லை. மணியரசனின் ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகளும் போற்றிப் புகழ்கின்றன. அவர்கள் ராஜராஜ சோழன் போன்றோரை தமிழ் வீரத் திரு உருக்களாகப் பார்க்கின்றனர். பெருமிதத்திற்குரிய சோழர் காலத்தை கம்யூனிஸ்டுகள் நில உடைமை என்றும், பெரியாரியர்கள் பார்ப்பனீயம் என்றும் இதுகாறும் கீழ்மைப்படுத்தி விட்டனரே என வெளிப்படையாக ஓலமிடுகின்றனர். ராஜராஜன் பட்டமேறிய ஆயிரமாண்டு நாளை கருணாநிதி பெரு விமரிசையாகக் கொண்டாடியபோது தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ஆனால் சமீபத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் ஆயிரமாவது குடமுழுக்கை கருணாநிதி அரசு கொண்டாடியபோது, ‘தமிழர் கண்னோட்டம்’ இதழ் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் ராஜராஜ சோழன் அறிமுகப்படுத்திய தேவரடியார் முறை பெருமைக்குரிய ஒன்று எனவும், அது பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனவும் பொருள்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை?

இந்திய அரசின் சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒரு குறிப்பு

 

இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! .நா அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச் சட்ட ஏற்பு அளிக்க வேண்டும் !!

கொடூரமான வலியை மனித உடல்கள் மீது காயங்கள் அல்லது நிரந்தர ஊனங்கள் ஏற்படாமலோ அல்லது அத்தகைய நிலைகளுக்குக் காரணமாகுமாறோ ஏற்படுத்துவதைச் சித்திரவதை என்கிறோம். பல நேரங்களில் இது உடல் ரீதியான வன்முறையாக அமையாமலோ இல்லை உடல் ரீதியான வன்முறையுடன் கூடியோ மனம் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளாகவும் நிகழும். அரசு, குழுக்கள், சில நேரங்களில் தனி நபர்கள் ஆகியோரால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் மீது தம் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு அவர்களின் உடல்களே இவ்வாறு ஒரு கருவியாகவும் களமாகவும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன.

குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரும் இத்தகு கொடுமைகட்குக் காரணமானாலும் கூட அரசும் அரசு நிறுவனங்களான காவல்துறை, உளவுத் துறை முதலானவையுமே இதில் முன் நிற்கின்றன. தண்டித்தல், பழிவாங்கல், அரசியல் காரணங்கள், அச்சுறுத்தல், புலன் விசாரணை, வற்புறுத்தல், மூன்றாம் நபர் ஒருவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் ஆகியன சித்திரவதைகளின் காரணங்களாக அமைகின்றன. சில நேரங்களில் சிலரது குரூர மகிழ்ச்சிக்காகவும் (sadistic pleasure) சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகெங்கிலும், வரலாறு முழுமையும் சித்திரவதைகள் என்பன அரசுகளின் பிரிக்க இயலாத ஓரங்கமாக அமைந்தபோதும் இவ்வாறு கொடுஞ் சித்திரவதைகள், அதனூடான காவல் நிலைய மரணங்கள் ஆகியவற்றில் இந்திய அரசு முன் நிற்கிறது. 1993 – 2009 காலகட்டத்தில் மாத்திரம் 2,318 காவல் நிலையச் சாவுகளும், 716 போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இது ஆணையத்தின் முன் வந்துள்ள புகார்களின் அடிப்பட்டியிலான தரவு. காவல் நிலையச் சாவுகளில் 90 சதம் “தற்கொலைகள்” என்பதாக அறிவிக்கப்படுவதையும், பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டு மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கபடுவதையும் கணக்கில் கொண்டால், ஆணையம் அறிவித்துள்ள புள்ளி விவரங்களைக்  காட்டிலும்  எத்தனை ஆயிரம் மடங்கு காவல் நிலையச் சாவுகளும் போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என்பதை ஒருவர் ஊகிக்க முடியும். தவிரவும் ஆணையம் தந்துள்ள தரவு சித்திரவதைகளின் மூலமாக ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே. இப்படி மரணங்கள் ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் பல இலட்சம் மடங்கு அதிகம். நான்கு நாட்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நீதியரசர் ஹேமந்த் குமார் நாள்தோறும் 3 முதல் 4 காவல் நிலையச் சாவுகள் நடப்பதாகவும், இதில் வருந்தத்தக்க நிலை என்னவெனில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இது குறித்துப் புகாரளிக்க அஞ்சுவதுதான் என்றும் கூறியுள்ளார், காவல்துறையினர் காலனிய கால மனநிலையுடனேயே செயல்படுவதாகவும், தாங்கள் மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மக்களின் எஜமானர்கள் என்கிற உணர்வுடனேயே செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாகத் தினந்தோறும் நடக்கிற இக்காவல் நிலையச் சித்திரவதைகள், உள்நாட்டுப் பிரச்சினைகள், ஏதிர்ப்புகள் நடைபெறுமிடங்களில் பல மடங்கு அதிகமாக நடை பெறுகின்றன. புலனாய்வு முறைகளில் அநுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் விசாரணை செய்யப்படுபவர்களிடமிருந்து விரும்பிய உண்மைகளை வரவழைக்கும் வழிமுறைகளில் ஒன்றாகவும் நமது புனாய்வு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகச் சித்திரவதைகள் உள்ளன என்கிற வருந்தத்தக்க உண்மையை நாம் மனங்கொள்ள வேண்டும்

சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற,, குரூரமான, கண்ணியக் குறைவான நடைமுறைகள் மற்றும் தண்டனை வடிவங்களுக்கு எதிரான ..நா உடன்பாடு” {UN Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (UNCAT)} 1984ம் ஆண்டு இயற்றப்பட்டது. எனினும்  பதிமூன்றாண்டுகளுக்குப் பின்பே (1997ல்) ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா இதில் கையெழுத்திட்டது.

எனினும் இன்றுவரை இந்திய அரசு இதற்குச் சட்ட ஒப்பேற்பு (ratification) வழங்கவில்லை. அதன் முதற்படியாகிய உள்நாட்டுச் சட்டத்தையும் (enabling legislation) இயற்றவில்லை. ஆனால் 153 நாடுகள் இதற்கு ஒப்பேற்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நாடுகளில் சித்திரவதைக்க்குள்ளானவர்கள், ஆதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுக்கலாம். இழப்பீடு பெறலாம்.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களின் விளைவாகச் சென்ற 2008ல் இவ்வாறு ஒப்பேற்பு அளிப்பதற்கு முதற்படியாக சித்திரவதைத் தடுப்புச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்குவ்து என முடிவு செய்யப்ப்பட்டு அது 2010ல் முன்வைக்கப்பட்டது.

இந்தியத் தண்டனை சட்டத்தின் 333ம் பிரிவு “கொடுங் காயம்” (grevious injury) ஏற்பட்டுத்துவதைக் குற்றமாக்குகிறது. இது சித்திரவதை வழக்குகளுக்கும் பொருந்தும் என்ற போதிலும், இது குறிப்பிட்ட வடிவிலான உடற் காயங்களை ஏற்படுத்தும் சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும். பொதுவான சித்திரவதை முறைகள் இதன் கீழ் வரா. தவிரவும் சித்திரவதைக்குக் காரணமானவர் அரசுப் பணியாளரா இல்லையா என்பதும் இச் சட்டப் பிரிவில் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

எனினும் ஐ.நா உடன்பாடு இதைத் தெளிவாக வரையறுக்கிறது. “அரசு ஊழியர்கள் (public servants) அல்லது அவர்களால் பணியமர்த்தப்படுவோர், (சித்திரவதைக்குள்ளாக்கப் படும்) ஒரு நபர் அல்லது ஒரு மூன்றாவது நபரை, ஏதேனும் ஒரு தகவலைப் பெறுவதற்காகவோ இல்லை ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காகவோ, இல்லை தண்டிக்கும் நோக்கத்துடனோ உள மற்றும் உடல் ரீதியான கடும் வலியை ஏற்படுத்தும் செயல்களைச்” சித்திரவதை என ஐ.நா உடன்பாடு வரையறுக்கிறது. சித்திரவதைக்குள்ளாக்கப்படும் நபர்கள் ஏதேனும் குற்றம் இழைத்தவராகச் சந்தேகிக்கப்படுவோர், (சாதி,மதம், இனம் என ஏதோ ஒரு வகையில்) வேறுபடுத்தப்படுவோர்) என்கிறவாறும் ஐ.நா உடன்பாட்டில் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

ஆனால் இந்திய அரசு முன் வைத்த சித்திரவதைகள் தடுப்புச் சட்ட வரைவோ இந்த அடிப்படை அம்சங்கள் பலவற்றை நீர்க்கச் செய்து இச்சட்டத்தின் நோக்கத்தையே கேலிக் கூத்தாக்கியது. இச்சட்ட வரைவின் 3ம் பிரிவு, சித்திரவதை என்பதை உள்நோக்கத்துடன் “கொடும் உடல் காயம்”, அல்லது, “உயிராபத்து மற்றும் உடல் உறுப்பு, உடல் நலத்திற்கு ஆபத்து” விளவிக்கும் செயல் என வரையறுக்கிறது. இதன் மூலம் உள ரீதியான சித்திரவதைகள், கடும் அச்சுறுத்தல்கள், உறக்கமில்லாமல் துன்புற்றுத்துவது, உடற்காயமின்றி லாடம் கட்டி அடித்து உள் காயங்களை ஏற்படுத்துவது, பாலியல் சீண்டல்கள், மிளகாய்ப்பொடி முதலானவற்றை உடலின் மென்மையான பாகங்களில் தேய்ப்பது, பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது முதலான இந்தியக் காவல்துறையினருக்கு மிகவும் பிடித்தமான சித்திரவதைகள் பலவும் “சித்திரவதை” என்கிற வரையறைக்குள் வராமல் போகிற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “உடல் நலத்திற்கு ஆபத்து விளைவித்தல்” என்கிற வாசகம் கூடப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது எனச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “ஆபத்து” என்பது பெரிய அளவிலான நிரந்தர ஊனத்தைக் குறிக்கும் வாய்ப்புடையதாகிவிடுகிறது. சித்திரவதை என்பதில் வலி, துயரம், அவமானம், அச்சம் முதலியனவே முதன்மைப்படுத்தப் படுதல் வேண்டும்.

சட்ட வரைவின் 4ம் பிரிவு, சித்திரவதை என்பது “ஏதேனும் ஒரு குற்றத்தை நிறுவுவதற்கான வாக்குமூலம் ஒன்றைப் பெறும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதோடு கூடுதலாக ஏதேனும் ஒரு வகையில் (சாதி, மதம், இனம் போன்று) அவர் வேறுபடுத்தப்பட்டவராகவும் இருக்க வேண்டும்” என்கிறது. எனவே ஒரு விசாரணை அதிகாரி பணம் பறிப்பதற்காகவோ இல்லை பழி வாங்குவதற்காகவோ இல்லை அச்சுறுத்துவதற்காகவோ, இல்லை பாலியல் சகாயங்களைப்  பெறுவதற்காகவோ சித்திரவதை செய்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. ஏதேனும் குற்ற வாக்குமூலங்களைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும். தவிரவும் ஐ.நா பிரகடன வாசகங்களில் உள்ளது போல சாதி மத இன வேறுபாடுகளின் அடிப்படையில் சித்திரவதை மேற்கொள்ளக்கூடாது என்பதுதான்  சரியாக இருக்குமே ஒழிய சித்திரவதைக்கான நிரூபணங்களில் ஒன்றாகச் சாதி மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

இந்தியச் சட்ட வரைவின் 5ம் பிரிவு, சித்திரவதைக்கான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் செய்யப்பட்டால்தான் நீதி மன்றங்கள் அவற்றை விசாரிக்க வேண்டும் என்கிறது. சித்திரவதைக்குள்ளாகிறவர்களில் கிட்டத்தட்ட 80 சதத்திர்கும் மேற்பட்டோர் ஏழை எளியோர்: ஒடுக்கப்பட்டவர்கள். இந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் மீண்டு, ஆதரவு தேடி, வழக்குக்குத் தேவையான பணம் சேர்த்து, அச்சம் நீங்கி நீதிமன்றத்தை அணுக ஆறு மாதங்களுக்கு மேலான காலமும் ஆகலாம். அவர்களுக்கெல்லாம் நீதி மறுக்கப்பட இந்தியச் சட்ட வரைவு துணை புரிகிறது.

இந்தியச் சட்ட வரைவின் 6ம் பிரிவு இன்னும் கொடூரமானது. அரசின் முன் அனுமதியின்றி சித்திரவதை புரிந்த அதிகாரிகளை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாதாம்.

ஆக இந்தியச் சட்ட வரைவை ‘சித்திரவதைக்கு எதிரான சட்டம்” என்பதைக் காட்டிலும் “சித்திரவதைகளுக்கான பாதுகாப்புச் சட்டம்” அல்லது, “சித்திரவதைகளுக்கான தண்டனை விலக்குச் சட்டம்” என்பதே பொருத்தமாக இருக்கும்.

கடும் எதிர்ப்புகள் வந்ததை ஒட்டி அரசு இச் சட்ட வரைவை மாநிலங்கள் அவைக்குக் கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க என வேறுபாடுகள் ஏதும் இல்லை. இடதுசாரிக் கட்சிகளும் இவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் தங்களை அரசின் ஓரங்கமாகத் தானே கருதிக் கொள்கின்றனர்.

சித்திரவதைகளால் பெரிதும் பாதிக்கப்படுவோர் தலித்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக அடி நிலையில் இருப்போர், இவர்கள் சார்ந்த பெண்கள் ஆகியோரே. இவர்களுக்காக நிற்போரே இப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

முதற்கட்டமாக மேலே குறிப்பிட்ட ஓட்டைகள் இல்லாத வலிமையான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை இந்திய அரசு இயற்ற வேண்டும்.. அதனடிப்படையில் ஐ.நா உடன்பாட்டிற்கு சட்ட ஒப்பேற்பு அளிக்க வேண்டும்.

சித்திரவதை செய்வது, போலி மோதல்களைச் செய்து கொன்று குவிப்பது, காவல் நிலையக் கொலைகள், காவல் நிலையப் பாலியல் வன்முறைகள் அகியவற்றில் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. இது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் நம்மிடம் உண்டு. இவற்றைத் தொகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். உண்மைகளைக் கண்டுபிடிக்க சித்திரவதை தவிர்க்க இயலாத ஒரு கருவி என்கிற பொதுப் புத்தியில் பதிந்துள்ள கருத்தை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். புலனாய்வு அறிவியல், தடைய அறிவியல் என்பன பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் அடிப்படை மனித நாகரீகத்திற்குப் பொருத்தமற்ற இந்தக் கொடிய  சித்திரவதைகளுக்கு எந்த நியாயமும் கிடையாது என்பதை நாம் மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.

நீதிமன்றங்கள் இவ்வாறான சித்திரவதைகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெறும்போது அவற்றைத் தன்னிச்சையாகக் கவனத்தில் எடுத்து (suo moto) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அ.மார்க்ஸ்                                                             கோ.சுகுமாரன்

சென்னை, ஜூன் 29,2013