இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி

மதுரை, 19 பிப்ரவரி 2014

“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் நின்றிருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நாளிதழ்களில் கண்ட நாங்கள், கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து அப் பகுதிக்குச் சென்று பலரையும் சந்தித்தோம்.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,

2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்குரைஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்,

3. அ..ராஜா, வழக்குரைஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை,

4. ஏ.முகம்மது யூசுப், வழக்குரைஞர், NCHRO, மதுரை,

5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை,

6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்குரைஞர், மதுரை,

7. ரஜினி, வழக்குரைஞர், PUHR, மதுரை,

8. பசுமலை, வழக்குரைஞர், பரமக்குடி,

9. மு.மணிகண்டன், வழக்குரைஞர், மதுரை,

இக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 18) முழுவதும் மதுரை சரவணா மருத்துவமனை, இராமநாதபுரம் பயோனீர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் (1) வழக்குரைஞர்கள் மதுரை நஜிமுதீன், அலாவுதீன், கேமரா மேன் முகம்மது அமானுல்லா என்கிற ராஜா, யூசுப், பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர் நஸ்ருதீன், ஓட்டுநர் ஷெரிஃப் என்கிற பிலால், முகம்மது அலிகான், சித்திக், வாலிநோக்கம் ரியாஸ்கான், அப்துல் சமது உள்ளிட்ட சுமார் 20 காயம்பட்டோரையும், (2) சம்பவ இடத்தில் இருந்தவர்களான பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பின் மாநிலத் தலைவர் இஸ்மாயில், மாவட்ட அளவு நிர்வாகிகளான பரக்கத்துல்லா, நவாஸ்கான் ஆகியோரையும், (3) மார்க்சிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசன், குமரய்யா கோவிலருகில் கடை வைத்துள்ள சிலரையும், (4) இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். இது தொடர்பான வழக்கைக் காரணம் காட்டி கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை எங்களிடம் பேச மறுத்தபோதிலும், கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் எங்களிடம் விரிவாகப் பேசி விளக்கங்களை அளித்தார்.

சம்பவம்

பாப்புலர் ஃப்ரன்டின் இராமநாதபுரம் மாவட்ட (வடக்கு) தலைவர் எஸ். பரக்கத்துல்லா என்பவர் பிப்ரவரி 17 அன்று நடக்கவிருந்த தங்களின் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி கோரி சென்ற ஜனவரி 17 அன்று விண்ணப்பித்துள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை முதலில் (பிப்ரவரி13) பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத் திடலில் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார். எனினும் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீண்டும் வேண்டிக் கொண்டபின் பொதுக் கூட்டத்திற்கும் சின்னக்கடை நான்குமுனை சந்திப்பு தொடங்கி ஊர்வலத்திற்கும் பிப்ரவரி 16 அன்று எழுத்து மூலம் அனுமதி அளித்துள்ளார். இராணுவத்தினர் அணிவது போன்ற சீருடை மற்றும் லத்தி முதலான ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என மேற்படி செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ளதைக் கண்ட பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் தாங்கள் அணிந்து செல்ல இருந்த சீருடையை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் காட்டி அவ்வாறு இல்லை என்பதை நிறுவி காவல்துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். தாங்கள் ஒப்புதல் அளித்ததை கண்காணிப்பாளர் மயில்வாகனனும் ஏற்றுக் கொண்டார். பான்ட் வாசிக்கக் கூடாது என்றோ, அணிவகுப்பு நடத்தக்கூடாது என்றோ அந்த ஆணையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது

சம்பவத்தன்று (பிப்ரவரி 17) மாலை மூன்று மணி வாக்கில் மதுரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் குமரைய்யா கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசல் தொடங்கி சீருடை அணிந்த 300 பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினரும், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் ஊர்வலத்திற்காகக் கூடி இருந்துள்ளனர். கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் சுமார் அறுபது போலீசாரும் நின்றுள்ளனர். முன் வரிசையில் நின்றிருந்த சீருடையினர் பான்ட் வாசிப்புடன் ஊர்வலம் தொடங்க இருந்த நேரத்தில், பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் அணிவகுப்பாகச் செல்லக் கூடாது எனவும் வெள்ளத்துரை தடுத்துள்ளார். சீருடையுடன் அணிவகுத்து நடக்க பான்ட் இசை அவசியமானது என தலைவர்கள் விளக்கிய பின்னும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின், “சரி நாங்கள் பான்ட் வாசிப்புடன் தொடங்குகிறோம். நீங்கள் எங்களைக் கைது செய்து கொள்ளலாம். நாங்கள் அமைதியாகக் கைதாகிறோம்” என தலைவர்கள் சொல்லி ஊர்வலத்தைத் தொடங்கியபோது கல்வீச்சும், கடுமையான தடியடிப் பிரயோகமும் நடந்துள்ளது.

சுமார் 22 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் காயமடைந்தனர். காயம் பட்ட மேலும் பலர் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக சொந்தப் பொறுப்பில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது கண்காணிப்பாளர் மயில்வாகனன், “ஒரு டீம் கையில் பெட்ரோல் குண்டுகளுடன் நிற்கிறது. பிரச்சினையைத் தவிர்க்க, நீங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார். “அப்படி ஆயுதங்களுடன் யாரும் இருந்தால், அவர்களைக் கைது செய்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதானே முறை?” என பாபுலர் ஃப்ரன்டின் மாநிலத் தலைவர் இஸ்மாயில் சொல்லியும் காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை. மேலும் மோதலையும் பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டி ஊர்வலம், பொதுக்கூட்டம் முதலியவற்றை பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் கைவிட்டுக் கலைந்துள்ளனர்.

இன்று பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீது, கேணிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 67, 68, 69 / 2014 ஆகிய மூன்று வழக்குகள், இ.த.ச 147, 148, 149, 186, 294 பி, 353, 332, 323, 324, 506/2, 153 ஏ, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளன.

முரண்கள்

1.கண்காணிப்பாளரும் பிற அதிகாரிகளும் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிகளில் சீருடை அணியக் கூடாது எனவும் பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் தாங்கள் தடுத்ததை ஒட்டியே பிரச்சினை தொடங்கியது எனக் கூறியுள்ளனர். வீடியோ பதிவு ஒன்றிலும் துணை கண்காணிப்பாளர் பான்ட் வாசித்துச் செல்லக் கூடாது என்று மட்டுமே கூறுவது பதிவாகியுள்ளது. எனினும் கண்காணிப்பாளர் எங்களிடம் பேசும்போது, “அதெல்லாம் பிரச்சினை இல்லை. குமரைய்யா கோவில் நிறுத்தம் அருகில் ஊர்வலம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, சின்னக்கடை நால் முனை சந்திப்பிலிருந்துதான் ஊர்வலம் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நெடுஞ்சாலையில ,குமரைய்யா கோவில் நிறுத்தத்தில் கூடி, ஊர்வலத்தைத் தொடங்க அவர்கள் பிடிவாதம் பண்ணியதே பிரச்சினைகளுக்குக் காரணம்” என்றார். பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரிடம் இது குறித்துக் கேட்டபோது, வழங்கப்பட்ட ஆணையில் அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும், வாய் மொழியாக குமரைய்யா கோவில் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்தே ஊர்வலம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது எனக் கூறினர். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய ஒரு வீடியோ பதிவில் கண்காணிப்பாளர் மயில்வாகனன், “குமரைய்யா கோவில் மற்றும் பள்ளிவாசலிலிருந்து போகலாம் என முந்தாநாள் உங்களுக்குச் சொன்னேன்” என்க் கூறுவதைக் காட்டினர்.

2. இன்னொன்றும் இங்கே கருதத் தக்கது. காவல்துறையினர் ஊர்வலம் தொடங்க அனுமதி அளித்த சின்னக்கடை நால்முனைச் சந்து என்பது முழுக்கவும் முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு பகுதி, இங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 300 மீட்டர் தொலைவுதான் இருக்கும். இதில் ஊர்வலம் நடத்துவது என்பது அபத்தம் என்பதை விளக்க வேண்டியதில்லை. தவிரவும் முஸ்லிம்கள் தமது நடவடிக்கைகளைத் தாம் வசிக்கும் பகுதிக்குள்ளையே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொது வெளிகளை அவர்களுக்கு மறுப்பதாகிறது. காவல்துறையின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.

3. பாபுலர் ஃப்ரன்ட் தலைவர்களும் காவல் அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது திடீரெனக் கல்வீச்சு தொடங்கியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த அங்குசாமி என்பவரின் கட்டிடத்தில் இருந்தும், எதிர்ப்புறம் இருந்த நெட் கேஃப் ஒன்றிலிருந்தும் விஷமிகள் சிலரே காவல்துறையினர் மீதும் கூட்டத்தினர் மீதும் கல்வீசினர் எனவும் இவர்கள் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பாபுலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். காவல் துறையினரும்கூடத் தங்கள் மீது கல் வீசித் தாக்கினர் எனவும் பாப்புலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். கல்வீசிய கட்டிடத்திலிருந்து சிவக்குமார், சரவணன் என்கிற இருவரைத் தாம் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்புவித்ததாகவும் கூறினர். அதில் ஒருவர் கையில் காவி வண்ண பட்டை கட்டியிருந்ததாகவும் கூறினர். ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது பைக்கில் வந்த ஒரு சில இந்துத்துவ சக்திகள் “பாரத் மாதா கி ஜே” என முழக்கம் எழுப்பிச் சென்றதாகவும் கூறினர். ஆனால் இவற்றை கண்காணிப்பாளர் மயில்வாகனன் முற்றிலுமாக மறுத்தார். தம்மிடம் கல் வீசியதாக பாபுலர் ஃப்ரன்டினரால் ஒப்புவிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றார். அப்படி யாரும் வெளி அமைப்பினர் கல்வீசவே இல்லை என்றார். காவல் துறையினரும்கூட ஊர்வலத்தினர் மீது கல்வீசியது பதிவாகியுள்ளது எனவும், அருகிலிருந்து பார்த்த சிலரும் அதை உறுதிப்படுத்தினர் எனவும் நாங்கள் கூறியபோது அதை விசாரிப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் ஊர்வலத்தினர் காவல்துறை மீது கல் வீசியதில் சுமார் ஏழு காவலர்கள் காயம்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். வேற்று அமைப்பினர் கல் வீசியதற்கு ஆதாரங்களைக் காட்டினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். நாங்கள் சந்தித்த முஸ்லிம்கள் அனைவரும் வேற்று அமைப்பினர் அந்தக் கட்டிடத்திலிருந்து கல்வீசினர் என்பதை வலியுறுத்தினர்.

எமது பார்வைகள்

1. வழங்கப்பட்ட ஆணையில் நால்முனைச் சந்திப்பிலிருந்தே ஊர்வலம் தொடங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாலும், குமரைய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்கலாம் என கண்காணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளது உறுதியாகிறது. அருளரசு என்கிற உளவுத்துறை எஸ்.பி ஒருவரும் கடைசி நிமிடம் வரை, “உங்களுக்குப் பிரச்சினை இல்லை, குமரய்யா கோவில் நிறுத்தம் அருகில் தலைவர்கள் சென்று ஊர்வலத்தைத் தொடங்குங்கள் யாரும் தடுக்கமாட்டார்கள்” என தொலை பேசியில் உறுதி அளித்துள்ளார். இப்படி எழுத்தில் ஒன்றாகவும், வாய்மொழியாக வேறொன்றையும் காவல்துறையினர் கூறி இரட்டை நிலை எடுத்ததே எல்லாப் பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளது. பிரச்சினைக்குப் பின் எழுத்து மூலம் சொல்லப்பட்டதை முன்னிறுத்தி, வாய் மொழியாகக் கொடுத்த அனுமதியை மறுக்கும் நிலையைக் காவல்துறை இப்போது மேற்கொள்கிறது. சம்பவத்தை ஒட்டி அதிகாரிகள் அளித்த பேட்டிகளில் ஊர்வலம் தொடங்கும் இடம் குறித்து பிரச்சினை எழுந்ததாக அவர்கள் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தவிரவும் வாய்மொழி அனுமதியை நம்பி, குமரய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்குவதாக துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஃப்லெக்ஸ் போர்டுகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் கடந்த ஒரு வாரமாக ஊரெங்கும் பிரச்சாரம் செய்யயப்பட்டுள்ளது. இந்தத் துண்டறிக்கையை வடக்கு மாவட்ட நிர்வாகி பரக்கத்துல்லா கூடுதல் கண்காணிப்பாளரிடம் நேரிலும் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் காவல்துறை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் கூட்டம் அங்கே கூடியபோதும், இங்கே அனுமதியில்லை எனத் தடுக்கவில்லை. எனினும் இப்போது அதுதான் காரணம் என்கின்றனர். கண்காணிப்பாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் இப்படி நடந்துகொள்வது வருத்ததை அளிக்கிறது.

2. பாப்புலர் ஃப்ரன்ட் அணியினர் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்துள்ளது. பலரும் தலையிலும், முகத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலையும் உள்ளி மூக்கும் உடைந்துள்ளன. குறைந்தபட்சம் மூவரின் தோள் பட்டைகள் இறங்கியுள்ளன. ஒருவருக்குக் கால் உடைந்துள்ளது. நஜிமுதீன், அலாவுதீன், யூசுப் முதலான வழக்குரைஞர்களும் ராஜா முகம்மது என்கிற கேமராமேனும் கூடத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கமிரா பிடுங்கப்பட்டு காலால் நசுக்கி அழிக்கப்பட்டுள்ளது வழக்குரைஞர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட்’ எனப் பெயர் பெற்றுள்ள கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார், எஸ்.ஐ கோட்டைசாமி, எஸ்.எஸ்.அய் ஆறுமுகத்தரசன் மற்றும் நான்கு காவலர்கள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர், இரும்புக் காப்பு பொறுத்தப்பட்ட லத்தி தவிர, இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தாக்கப்பட்டவர்கள் கூறினர். “துலுக்கப் பயல்களே” எனவும் இத்துடன் ஆபாசமான வார்த்தைகளைச் சேர்த்தும் கூவியவண்ணம் அடித்துள்ளனர். நான் வக்கீல் சார் எனக் கூறியவர்களிடம், “வக்கீல்னா பெரிய சு…..?” எனக் கூறி அடித்ததை ஒருவர் கூறிக் கண்கலங்கினார், “பிப்ரவரி 19தாண்டா உங்களுக்குக் கருப்பு தினம் (வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட நாள்). இப்ப ரண்டு நாள் முன்னாடியே மாட்டிக்கிட்டீங்கடா” எனச் சொல்லித் தான் தாக்கப்பட்டதை மற்றொருவர் கூறினார். கடுமையாகத் தாக்கப்பட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையிலிருந்து மதுரை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ள வழக்குரைஞர் நஜிமுதீன், போலீஸ் பக்ருதீன் மீது வெள்ளத்துரை பொய் வழக்குப் போட்டபோது அது குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டவர் என்பதும், அக்பர் சேட் என்பவர் வெள்ளத்துரை மீது தன்னைத் தாக்கியதாகத் தொடுத்துள்ள வழக்கை நடத்துபவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறைலிருந்து விடுதலையாகி திருமணம் செய்து அமைதியாக வாழத் தொடங்கிய போலீஸ் பக்ருதீன் மீது பொய் வழக்குப் போட்டு, அவரை இன்றைய நிலைக்குத் தள்ளியதில் வெள்ளத்துரைக்கு முக்கிய பங்குண்டு என்பது நினைவிற்குரியது.

3.”தற்போது இணக்கமான சூழ்நிலை” இல்லை என ஆணையில் குறிப்பிடும் காவல்துறையினர், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த ஒரு நிகழ்விற்கு வெறும் 60 பேர்கள் கொண்ட காவற் படையை மட்டுமே நிறுத்தியிருந்தது, அவர்களின் கவனக் குறைவைக் காட்டுகிறது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற அப்பேரணிக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்ட காவலர்களைல் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “ஒரு டீம் பெட்ரோல் குண்டுடன்” இருப்பதாகத் தமக்குத் தகவல் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட கண்காணிப்பாளர், அப்படியாயின் ஏன் அந்த ‘டீமை’க் கைது செய்து வெடிகுண்டு வழங்குச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் புரியவில்லை.

4.பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலமும் அணிவகுப்பும் தேச ஒற்றுமையை முன்வைத்தும், தங்கள் அமைப்பு தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்குப் போய் காவல்துறை ஏன் இத்தகைய கெடுபிடி காட்டியது என்பது விளங்கவில்லை.

பரிந்துரைகள்

1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.

2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.

4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.

6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்..

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் 12

[கட்சி அறிக்கைகளின் சுருக்கங்கள். முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள் என்ன சொல்கின்றன எனத் தொகுக்கப்பட்டுள்ளன. முகநூலில் வெளியிடப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்கள் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன]

1. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சிகளின் தாராளமய, கார்பொரேட் ஆதரவுக் கொள்கைகளால் சிறு தொழில், விவசாயம் முதலியன அழிந்து நாடு சீரழிந்துள்ளது. கல்வி, மருத்துவம் வணிகமயமாகி மக்களுக்கு எட்டாதவையாகி உள்ளன. ஊழல். காங்கிரஸ் அரசு தமிழகத்திற்குச் செய்த துரோகங்களைக் கண்டிக்காது துணை நின்ற தி.மு.கவும், சிறுபான்மையினரை வேட்டையாடிய பா.ஜ.கவும் ஒரு மாற்றுப்பாதை காட்ட முடியாது, இன்றைய தேவை ஒரு மாற்றுக் கட்சியின் ஆட்சியல்ல; ஒரு மாற்றுக் கொள்கை கொண்ட ஆட்சி. அந்த மாற்று இடதுசாரிகளிடமே உள்ளது.

விவசாயம் : நதி நீர் இணைப்பு; விவசாய வளர்ச்சி நடவடிக்கைகளில் அரசு முதலீடு அதிகரிப்பு; இடு பொருள் விலை குறைப்பு; அரசே நேரடி கொள்முதல்; பயிர் காப்பீட்டுத் திட்ட அமுலாக்கம்; சிறு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்; லாபமளில்லும் வகையில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்; சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை நிரைவேற்றுதல்;

தொழில் / பொருளாதாரம் : சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்குப் பாதுகாப்பு; நவதாராளவாதக் கொள்கையை முழுமையாக மறு பரிசீலனை செய்தல்; பொதுச் சொத்துக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாத்தல்;பொதுத்துறை – தனியார் துறை கூட்டுக்கு முற்றுப்புள்ளி; கார்பொரேட் கடன்களைத் திருப்பிப் பெற நடவடிக்கிகள்;

வணிகம் : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு;

அயலுறவு : ஏகாதிபத்தியங்களுக்குப் பணியாத சுதந்திரமான அயலுறவுக் கொள்கை; அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுதல்; ப்ரிக்ஸ், ஷங்காய் கார்பொரேஷன் முதலான பிராந்திய அளவு கூட்டமைப்புகளில் ஈடுபாட்டுடன் செயல்படுதல்;

ஊழல் : லோக் ஆயுதா சட்டத்தை வலிமையாக்கல்; லோக் ஆயுக்தா தமிழகத்திலும் உருவாக்கப்படும்; கருப்புப் பண மீட்பு நடவடிக்கை; தகவல் உரிமைச் சட்டத்தை நீர்க்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு;

கல்வி, மருத்துவம் : கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; ஒப்பந்தமுறை ஒழிக்கப்படும்; மொத்த வருமானத்தில் 5 சதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்குதல்; கிராமப்புற சேவைக்கு முக்கியத்துவம்; ஐந்தாண்டுகளில் கல்லாமையை ஒழித்தல்; மாணவர்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளியும் வழங்குதல்; பகுத்தறிவு, அறிவியல் கண்ணோட்டம், மதச்சார்பின்மை ஆகிய மதிப்பீடுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தும் அளவிற்கு பாடத் திட்டத்தை மாற்றி அமைத்தல்;

சமூக நீதி : தனியார் துறை மற்றும் உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் இட ஒதுக்கீடு; எல்லாப் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடுகள் வழங்கப்படும;.

சிறுபான்மையினர் : சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை முழுமையாக அமுலாக்கல்; மதம் மாறியவர்களுக்கும் ஒதுக்கீடு; மதவன்முறையை ஒடுக்குவதற்கான கடுமையான சட்டம் இயற்றல்; குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் நீண்ட நாட்களாகச் சிறையிலிருக்கும் இளைஞர்களை விடுதலை செய்தல்; குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படட தீவிரவாதக் குர்றம் சாட்டப்பட்ட எல்லோருக்கும் இழப்பீடும் அரசு வேலையுமளித்தல்; அப்பாவி இளைஞர்களைப் பொய்க் குற்றம் சாட்டிக் கைத்துசெய்த அதிகாரிகளையும், போலி என்கவுன்டரில் கொலை செய்தவர்களையும் தண்டித்தல்; UAPA சட்டம் உட்பட அனித்து கருப்புச் சட்டங்களியும் நீக்குதல்; உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அம்மொழியில் கல்வி கற்க வாய்ப்பளித்தல்; பணித் தேர்வுகளில் மத வேறுபாடில்லாமல் செய்தல்; வக்ஃப் சொத்துக்கள் மீட்பு; சிறுபான்மையோருக்கான ஆணையத்திற்கு சட்ட உறுதி (Statutory Status) அளித்தல்;

பெண்கள் : நாடாளுமன்றம்/ சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு;

நலத் திட்டங்கள் : பசுமை வீடுகட்டும் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் வீடு; கோவில் நிலத்தில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்கப்படும்; வருமானவரி கட்டுவோர் தவிர பிற முதியவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கல்; அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசியை கிலோ 2 ரூ விலையில் அளித்தல்;

ஈழம் : இலங்கை வாழ் தமிழர்களுக்கு முழு மனித, அரசியல் உரிமைகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வுரிமை மற்றும் வேலை உறுதி அளிக்கும் சட்டம் இயற்றல்;

தொழிலாளர்: தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு,

மீனவர் : மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கப்படும்;

தேர்தல் சீர்திருத்தம்: பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்;

தமிழ் / தமிழகம் : பயிற்று மொழி, வழக்காடு மொழி. வழிபாட்டு மொழி ஆக்கப்படும்:

சேது சமுத்திரத் திட்டம் : நிறைவேற்றப்பட வேண்டும்;

பிற; 1979ம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம் பெயர் தொழிலாளிகள் சட்டத்தில் திருத்தம் செய்து புலம் பெயர் ஹொழிலாளிகளைப் பாதுகாத்தல்; காஷ்மீர், மணிப்பூர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் AFPSA சட்டத்தை நீக்குதல்; காவல்துறை ஆணைய அறிக்கையை நிறைவேற்றல்; காவல்துறையை ஒரு ஒடுக்குமுறை நிறுவனம் என்கிற நிலையிலிருந்து ஒரு மக்கள் சேவை அமைப்பாக மாற்றுதல்; தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைத்தல்;

கூட்டணி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம்;

2. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசால் தொழிலாளிகள், விவசாயிகள், ஏழை எளியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத விலைவாசி ஏற்றம், ஊழல் நிறைந்த மோசமான இந்த ஆட்சியில் பெரு நிறுவனங்களே சலுகைகள் அனுபவித்துள்ளன; கனிவளங்கள் கொள்ளை போயுள்ளன. அயலுறவுக் கொள்கையில் முழுமையான அமெரிக்க ஆதரவு; வகுப்புக் கலவரம், முஸ்லிம்கள் ஈடுபடும் தீவிரவாதம் தவிர இந்துத்துவ தீவிரவாத நடவடிக்கைகளும் பெருகியுள்ளன. பழங்குடிகள் தலித்கள் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. நவீன மதச்சார்பின்மைக்குப் பொருந்தாத பிளவுவாத சக்தியாக உள்ள பா.ஜ.க பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் அரசின் கொள்கையையே கொண்டுள்ளது. எனவே காங்கிரசை நிராகரிப்பீர். பா.ஜ.கவைத் தோற்கடிப்பீர். மாற்றுக் கொள்கைகளை முன்வவைக்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பீர்.

விவசாயம் : விவசாய உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான அரசு முதலீட்டை அதிகரிப்பது; விதை, உரம், மின்சாரம், டீசல் போன்ற இடுபொருட்களுக்கான மானியங்களை வலுப்படுத்துவது. குடும்பத்தினரின் உழைப்பு உள்ளிட்ட உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மேல் வருவாய் வரும் வகையில் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது. பயிர் காப்பீட்டுத் திடம்; நீர்வளங்களைத் தனியார் மயமாக்கலைத் தடுத்தல்;

தொழில் / பொருளாதாரம் : பணக்காரர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களின் மீதான வரியை உயர்த்துவது; வரி ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது; ஆடம்பரப் பொருட்களின் மீது அதிகமான வரிகளை விதிப்பது, நிதிமூலதனம் நாட்டிற்கு உள்ளே வருவதையும், வெளியே போவதையும் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை மீண்டும் கொண்டு வருவது. கருபுப் பணத்தை வெளிக் கொணர்தல்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும் பொதுத்துறையின் பங்குகளை விற்பதையும் முற்றிலுமாக நிறுத்துவது; விரிவான மாற்றுப் பொருளாதார மற்றும் நிதி ஆதாரங்களைப் பெருக்குதல் மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் திட்டங்கள்;

வணிகம் : உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்றுப் – பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளின் நலன்களை பாதுகாப்பது; உலக வர்த்தக அமைப்பின் சார்பில் ‘பாலி’யில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் நாடாளுமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்படுதல்.

அயலுறவு : பன்முனை அதிகாரத்தை வளர்த்தெடுக்கின்ற, சுயேச்சையானதொரு அணிசேரா வெளியுறவுக் கொள்கை. பிரிக்ஸ் மற்றும் இப்ஸா அணிகளை வலுப்படுத்துவது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக இணைவது; அமெரிக்கா, நேட்டோ அகியவற்றால் திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்களையும், தலையீடுகளையும் எதிர்ப்பது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையத் தொடர்வது; அணு ஆயுதப் பரவல் தடுப்பு;

ஊழல் : ஊழல்களை குறிப்பாக மேல்மட்ட ஊழல்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளவும், ஊழலை அம்பலப்படுத்துவோரை பாதுகாக்கவும், மத்திய புலனாய்வு அமைப்புகளைச் சுதந்திரமானதாக ஆக்க நடவடிக்கைகள்;

கல்வி, மருத்துவம் : கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும்; பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அனுமதி வழங்கத் தவறும் தனியார் பள்ளிகள், மேல்தட்டு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது; ஆசிரியர்கள், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது; இலவசமாகவும் கட்டாயமாகவும் துவக்க நிலைக் கல்வியை வழங்கும் வகையில் கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் அமலாக்கப்படுவது; அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்களை முறையாக நடத்துதல்; பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்: நான்காண்டு பட்டப் படிப்பை ரத்து செய்தல்;

சமூக நீதி : தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு; உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் இட ஒதுக்கீடு; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தொகைக்கு ஈடான வகையில் சிறப்பு அம்சத் திட்டங்களுக்கான மத்திய சட்டம் இயற்றுதல்; தீண்டாமைக் குற்றங்களுக்கு உறுதியான தண்டனை வழங்குதல்;

சிறுபான்மையினர் : ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, உடனடி நடவடிக்கையாக முஸ்லிம் பிரிவினரில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் மாநில வாரியான ஒதுக்கீட்டு விவரங்களுடன், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்துக் கொள்வது. சச்சார் குழு பரிந்துரைகளை அமுல்படுத்தத் துணைத் திட்டம்; மேம்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் சிறுபான்மையோர் ஆணையத்தைச் சட்டபூர்வமாக்குவது; பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு இழைப்பீடும், பொய் வழக்குப் போட்ட அதிகாரிகளுக்குத் தண்டனையும் வழங்குதல்; மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றல்;

பெண்கள் : நாடாளுமன்றம் / சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு; வன்முறைகளை முடிவுக்குக் கொணர்தல்; திருத்தப்பட்ட வன்முறை தடுப்புச் சட்டத்தில் வர்மா ஆணையப் பரிந்துறையை உள்ளடக்குதல்;

நலத் திட்டங்கள் : வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றல்; ஐ.நா.சிறப்பு மாநாட்டின் முடிவுகளுக்கு இணங்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான மசோதா மற்றும் இதர சட்டங்கள் நிறைவேற்றுவது மற்றும் திருத்தியமைப்பது, மாற்றுத்திறன் குறித்த தேசிய கொள்கையை மறு பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்வது. முதியோர் ஓய்வூதியத்தை மாதம் ரூ 4000 க்குக் குறையாமல் உயர்த்துதல்;

ஈழம் : ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வு; மனித உரிமை மீறலுக்கான சுயேச்சையான விசாரணை;

தொழிலாளர், : மாதம் ரூ.10,000 க்கு குறையாத வகையில் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்துவது, பல்வேறு மாநிலங்களுக்கும் இடம் பெயரும் தொழிலாளிகள் குறித்த சட்டம் உட்பட அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்வது; புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு; ஒப்பந்த முறை ஒழிப்பு: ஒப்பந்தத் தொழிலாளருக்கு சம ஊதியம்;

மீனவர் : மீன்பிடி தொழிலாளர்களுக்கான சிறப்பு நல வாரியம், வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்குத் தடை; கடன் தள்ளுபடி;

தமிழ் / தமிழகம்: ————————————————————

தேர்தல் சீர்திருத்தம்: பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்; ¨ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருள் வடிவில் அரசின் நிதியுதவி; பெரு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி உதவி செய்தலைத் தடை செய்தல்;

பிற: இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்தல்; உளவுத் துறைக் கட்டமைப்பச் சீரமைத்தல்; வெளி நாட்டு இறக்குமதி இல்லாத அணு உலைகளுக்கு ஆதரவு; வட கிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழ்வோரின் பாதுகாப்பிற்காக இன வெறி எதிர்ப்புச் சட்டம் இயற்றுவது; கவுரக் கொலைகளுக்கு எதிரான கடும் சட்டம் இயற்றல்; UAPA சட்டத்தில் கொடுமையான பிரிவுகளை நீக்குதல்; AFPSA சட்டத்தை முழுமையாக நீக்கி அதனிடத்தில் மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொணர்தல்;

கூட்டணி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம்;

3. திராவிட முன்னேற்றக் கழகம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டிலும் பங்குபெற்றபோது பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றக் காரணமாக் இருந்துள்ளோம். உலக வர்த்தக ஒப்பந்தந்தத்தின் தோஹா கூட்டத்தில் இந்திய வேளாண்மையை பாதுகாத்தல், பொதுத்துறை நிறுவனங்களை ‘நவத்னா’ எனத் தரம் பிரித்துப் பாதுகாத்தல் ஆகியவை எங்கள் சாதனைகள். தமிழ் செம்மொழிப் பிரகடனம், சேது சமுத்திரத் திட்டம் முதலியவற்றையும் சாதித்தோம். “மத நல்லிணக்க வரலாறு படைப்போம்; மதச் சார்பற்ற ஆட்சி அமைப்போம்” நேமையான ஆட்சியையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் அளிக்க உறுதி கூறுகிறோம்.

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவை முன்னெடுக்கப்படும்; அரசு முதலீடு அதிகரிப்பு; இடு பொருள் விலை குறைப்பு; அரசே நேரடி கொள்முதல்; விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச அதரவு விலை; மாநில அரசுகள் இலவச மின்சாரம் வழங்க உள்ள தடைகளை நீக்குதல்; வளர்ந்த நாடுகள் WTO விதிகளை மீறித் தம் நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதைத் தடுத்து நிறுத்துதல்; இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்; விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை வழங்குதல்; விவசாயக் கடன் ரத்து, நெல், கொப்பரைத் தேங்காய், கரும்பு ஆகியவற்றிற்குக் குறந்தபட்ச ஆதரவு விலையை அவ்வப்போது உயர்த்துதல்;

தொழில் : கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாத்தல்; சிறு தொழில் முன்னுரிமைப் பட்டியல் உருவாக்குதல்; தமிழகத்திலுள்ள பொதுத் துறை நிறுவனங்களை மூடவோ தனியார் மயமோ ஆகாமல் பாதுகாத்தல்; விலைவாசிக் கட்டுப்பாடு: வறுமை ஒழிப்பு, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விதிவிலக்கு; உப்பளத் தொழிலாளர்கள் வேலைப் பாதுகாப்பு;

வணிகம் : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு;

அயலுறவு : ஏகாதிபத்தியங்களுக்குப் பணியாத சுதந்திரமான அயலுறவுக் கொள்கை; அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுதல்;

ஊழல் : ————————————————-

கல்வி, மருத்துவம் : மொத்த உள் உற்பத்தியில் 3 சதம் மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுதல்; நல் வாழ்வுக்கான ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை தேசிய அளவில் விரிவு படுத்தல்;உள் நாட்டு மருத்துவத்தில் உயர் ஆராய்ச்சி; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல், கல்விக்கான நிநிதி ஒதுக்கீட்டை மொத்த உள் உற்பத்தியில் 6 சதம் ஆக்குதல்;

சமூக நீதி : வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளித்தல்; சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு செய்தல்; மத்திய அரசுப் பணிகளில் மண்டல் பரிந்துரைகளைப் பின்னடைவுடன் நிறைவேற்றல்; எஸ்,சி / எஸ்.டி மாணவர்களுக்கு மருத்துவ. பொறியியல் படிப்புகளை முற்றிலும் இலவசமாக்கல்; அருந்ததியர் முதலான பிரிவினருக்கு தேசிய அளவில் உள் ஒதுக்கீடு அளித்தல்; அடுத்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல்; தேசிய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு;

சிறுபான்மையினர் : சச்சார் குழு பரிந்துரைப்படி சிறுபான்மையோர் நலனுக்கான சிறப்பு உட்கூறு திட்டம் உருவாக்குதல்; தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு முதலான உரிமைகளை அளித்தல்; ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை ஏற்று முஸ்லிம்களிலும் இதுபோன்ற ஒதுக்கீட்டை அளித்தல்; சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்ட ஒதுக்கீட்டிற்கான நிதியை 19 சதமாக உயர்த்துதல்; சட்ட விரோத நடவடிக்கைச் சட்டத்தில் (UAPA) 2012ம் ஆண்டு கொண்டுவந்த திருத்தங்களை நீக்குதல்; பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சியை எதிர்த்தல்;

பெண்கள் : நாடாளுமன்றம் / சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு; 10 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப் பணியாளர் வேலை;

நலத் திட்டங்கள் : மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சத இட ஒதுக்கீட்டை முறியாகக் கடை பிடித்தல்; அரவானிகளை மூன்றாம் பாலினமாக ஏற்றல்; அரவானிகளுக்குத் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைத் தேசிய அளவில் கிடைக்கச் செய்தல்; முதியோர் நலனுக்கான புதிய கொள்கை உருவாக்கல்; 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர் வேலை; மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி ரயில் பெட்டிகள்; வீடற்றோருக்குக் காப்பிடங்கள் அமைத்தல்;

ஈழம் : கச்சத்தீவை மீட்பது; இலங்கை அரசு மீது நம்பகமான மனித உரிமை விசாரணைக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அளித்தல்; ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்விற்காகத் தமிழர்கள் மத்தியில்பொது வாக்கெடுப்பு, அதுவரை 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், மீள்குடியேற்றம் ஆகியவற்றை நோக்கி செயல்படுதல்;.

தொழிலாளர்: மத்திய அரசின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்படுதல்; அமைப்பு சாராத் தொழிலாளர் பாதுகாப்புத் திட்டங்கள்; அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றல்; தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

மீனவர் : மீனவர்களைப் பழங்குடிகள் பட்டியலில் இணத்தல்; தேசிய மீனவர் நல ஆணையம் ஒன்றை உருவாக்குதல்; மீனவர்களுக்கான தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மீனவர்: மாநில அரசு: மத்திய அரசு = 1:1:1 என முன்பிருந்ததைப் போன்று சம விகிதாசாரம் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்; இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தீர்க்க இருநாட்டு அரசுகளும் மீனவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும்:: இரு நாட்டுக் கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் ஏற்படுத்தப் படுதல் வேண்டும்; கடற்கரை அருகில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது உட்பட பல மீனவர் நலத் திட்டங்களை முன்வைத்துச் செயல்படுத்தப் படும்; மீனவர்களைப் பாதுகாக்க “கடற்கரை வாழ் மக்கள் இயற்கைப் பாதுகாப்புச் சட்டம்” உருவாக்கப்படும்.

தேர்தல் சீர்திருத்தம்: ______________________________________________

தமிழ் / தமிழகம்: மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி, உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழி ஆக்கப்படும்: திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப் பட்டினத்திலும் குளச்சலிலும் துறைமுகங்கள் அமைத்தல்; மதுரவாயில் பறக்கும் சாலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்; இரண்டாவது விண்கல ஏவுதளம் மற்றும் மகேந்திரகிரியில் வான்வெளி திரவ உந்து விசைத் தொழில்நுட்பம் அமைத்தல்; பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை; ராயபுரத்தில் புதிய ரயில் முனையம்; அனைத்து மீட்டர் காஜையும் அகல ரயில் பாதை ஆக்குதல்; திருப்பெரும்புதூரில் விமானத் தொழில்நுட்பப பல்கலைக் கழகம்; கொள்ளிடம், பாம்பன் ஆகிய இடங்களில் புதிய பாலங்களை அமைத்தல்; காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை ஒரு குறிப்பீட்ட கால வரையறைக்குள் அமைத்தல்; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நிறைவேற்றல்;

சேது சமுத்திரத் திட்டம்: நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்;

பிற: வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு உரிய சட்ட உதவிகளை செய்ய தூதரகங்களில் தனிப் பிரிவை அமைத்தல்; தூக்குத் தண்டனை ஒழிப்பு; மீதேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட நடவடிக்கைகள்; பெரு நகர ரயில் திட்டங்கள்; புதுச்சேரிக்கு முழு மாநில நிலை அளித்தல்;

கூட்டணி : தி.மு.க, ம.ம.க, வி.சி.க, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்;

ஆதரவு அமைப்புகள் : திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய சமூகநீதி இயக்கம், எம்ம்.ஜி.ஆர்.கழகம், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், வல்லரசு பார்வர்டு பிளாக், தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி

4. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் புரட்சித் தலைவியின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. காங்கிரஸ் அரசு மற்றும் தி.மு.க தமிழகத்திற்குப் பல்வேறு துரோகங்களை இழைத்து வருகின்றன. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளிடாமல் இருந்தது, மாநில அதிகாரங்களைப் பறிக்கும் வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது. 2 ஜி ஊழல். மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தர மறுப்பது முதலியன சில எடுத்துக்காட்டுகள். காங்கிரஸ். தி.மு.க இவற்றின் தவறான கொள்கைகளால் இன்று விலைவாசி உயர்ந்துள்ளது. இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பது, இலங்கை அரசு தமிழர்களை அழிக்க உதவி செய்தது, தமிழகத்தை மின் பற்றாக்குறை மாநிலமாக்கியது எல்லாவற்றிற்கும் இவர்களே காரணம். தமிழகத்திற்குரிய பங்கைப் பெற மத்தியில் அ.தி.மு.க பங்கு பெறும் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். ஒரு செயல்படும் மத்திய அரசு உருவாக்கப்பட வேண்டும்,

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவை முன்னெடுக்கப்படும்; பயிர்க் கடன்களளை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை ரத்து செய்தல்; தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை தேசிய அளவில் விரிவாக்கல்;

தொழில் / பொருளாதாரம் : தற்போதுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இல்லாததால் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் கொணரல்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயப்படுதல், பங்குகளை தனியாருக்கு விற்றல் நிறுத்தப்பட நடவடிக்கை; பெட்ரோல் டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருக்க உறுதி செய்தல்; விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறல்; வெளி நாட்டு வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பது; தொழில் வளர்ச்சிக்கான தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023 ஐ தேசிய அளவில் விரிவு படுத்தல்; தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்துதல்; மத்திய அரசு, மாநிலங்களுக்கு தன் விருப்புரிமையில் அளிக்கும் மாநியத்தின் அளவைக் குறைத்து நிதிக் குழுவின் மூலம் வழங்கப்படும் மாநிய அளவை அதிகரித்தல்; அந்நிய நேரடி முதலீடு (FDI) குறுகிய காலமாக இல்லாமல் நீண்ட கால முதலீடாக இருக்க வழிவகை செய்தல்; குறு, சிறு நடுத்தரத் தொழில்களுக்கான தமிழக அரசு அளிக்கும் பாதுகாப்புகளை தேசிய அளவில் விரிவாக்கல்;

வணிகம் : தேசிய அளவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு; இறக்குமதியைக் குறைத்து எற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள்; ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க வழி செய்தல், ஊக வணிகத்தை முடிவுக்குக் கொணர்தல்;

அயலுறவு : மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொளகை; ஐ.நா.அவை பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறுதல்; எல்லைகளில் சீன, பாகிஸ்தான் இலங்கைப் படைகளின் அச்சுறுத்தல்கள் உள்ளன; இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அண்டை நாடுகளுடன் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல்;

ஊழல் : ஊழலற்ற மத்திய அரசை உருவாக்குதல்;

கல்வி, மருத்துவம் : ———————————————————————————————–

சமூக நீதி : இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நிலை நாட்டப் பாடுபடுதல்;

சிறுபான்மையினர் : மதச் சார்பின்மையை நிலை நாட்டவும் மேம்படுத்தவும் பாடுபடல்; மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு; தமிழக அரசு வழங்கும் ரூ 3 கோடி வக்ஃப் நிறுவன மானியம், ஜெருசலேம் செல்ல மானியம் முதலியன் தேசிய அளவில் விரிவுபடுத்தப்படல்;

பெண்கள் : தாலிக்குத் தங்கம் வழங்கல், மகப்பேறு உதவித் தொகை, பெண் குழந்தைகளின் பெயரில் 50,000ரூ வைப்பீடு செய்தல்; மகளிர் காவல் நிலையங்கள், பாலியல் வன்முறைக்கு எதிரான 13 அம்சத் திட்டம் முதலான தமிழக அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தேசிய அளவில் விரிவு படுத்துதல்; 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற நடவடிக்கைகள்;

நலத் திட்டங்கள் : மத்திய அரசால் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை அதிகரித்தல்; மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வயது வரம்பின்றி அளித்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சத இட ஒதுக்கீட்டை முறையாகக் கடை பிடித்தல்; வருமான வரிச் சலுகையை இரட்டிப்பாக்குதல்; மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புப் படி ரூ 1500 தமிழகத்தில் வழங்கப்படுகிறது. இதைத் தேசிய அளவில் விரிவாக்கல்: இயற்கை வளங்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்குதல்; அடுத்த ஐந்தாண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்;

ஈழம் : இனப் படுகொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கவும், தனி ஈழம் பெற தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஐ.நா.சபையை வற்புறுத்த உறுதி; கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த ஒரே வழி. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்;

தொழிலாளர்:; அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு அனைத்து மாநில்ங்களிலும் வாரியங்கள் அமைத்தல்; பாதுகாப்புத் திட்டங்கள்; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்துவது ,அதைத் தமிழக அரசு ஊழியர்களுக்கு விரிவு படுத்துதல்;

மீனவர் : மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்தல்; இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை; மீன்பிடித் துறைமுகங்கள நவீனமயமாக்கல்; ஆழ்கடல் மீன்பிடிப்பை மத்திய அரசு மானியத்துடன் ஊக்குவித்தல்; தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தை சீரமைத்தல்;

தேர்தல் சீர்திருத்தம்: ______________________________________________

தமிழ் / தமிழகம்: அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கல்; சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல்; தமிழகத்திற்கு மாதம் 65,240 கி.லி மண்ணெண்ணை வழங்க மத்திய அரசை வற்புறுத்தல், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதற்கு ஏற்ப மின் வழித் தடங்களை வலுவாக்குதல்; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்ததிற்கு DAS அனுமதி பெறல்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளல்;

சேது சமுத்திரத் திட்டம்:________________________________________

பிற: _______________________________

கூட்டணி : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை,

ஆதரவு அமைப்புகள்: புரட்சி பாரதம்,மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ் மாநில முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத்(இவ் அமைப்பு பின்னர் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது).

5. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, ஈழப் பிரச்சினை ஆகியவற்றில் தமிகத்திற்குத் இந்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. 2 ஜி, ஆதர்ஷ் முதலான பல்வேறு ஊழல்கள், தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக அரங்கில் ஒருகாலத்தில் அணிசேரா நாடுகளுக்குத் தலைமை தாங்கும் நிலையிலிருந்த நிலை மாறி இன்று அமெரிக்காவின் ஏவலரசாக மாறியுள்ளது. இநிலைக்குக் காரணமான காங்கிரஸ் கூட்டணி அரசை மாற்றி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மோடியியின் தலைமையில் உருவாக்க இக்கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்.

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவற்றை நோக்கிச் செயல்படுதல்; காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை உருவாக்குதல்; முல்லைப் பெரியாறு அணையை உடைத்துக்கட்டுவது தொடர்பாகக் கேரள அரசின் சட்டம் இயற்றும் முயற்சி வெற்றி பெற்றால் இந்தியா சிதறுறும்; அமராவதி, பாலாறு, பவானி, பெண்ணையாறு, நெய்யாறு, முதலான நதிகளில் தமிழகத்திற்கு உரிய பங்குபெறும் வகையில் இதற்குத் தடையாக அண்டை மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்தல்; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றல்; வேளாண்மைத் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உரிய திட்டங்களை நிறைவேற்றுவது; வேளாண்மைத் துறைக்குத் தனி நிதி நிலை அறிக்கை; மரபு அணு மாற்றுப் பயிர்களுக்குத் தடை; தமிழக விவசாயத்தி அழிக்கும் மீதேன் எரிவாயுத் திட்டத்தை நிறுத்துதல்; தேசியத் தண்ணீர்க் கொள்கையை உருவாக்குதல்; விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டியில் கடன்; பயிர் காப்பீடு;

தொழில் / பொருளாதாரம் : காங்கிரஸ் அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம், நிலம் கையகப் படுத்துதல் சட்டம் ஆகியவற்றை மறு பரிசீலனை செய்தல்; சிறு மற்றும் குறுந் தொழில்கள் பாதுகாப்பு; கைதறிக்கு ஒதுக்கப்பட்ட 22 ரகங்களின் ஒதுக்கீட்டை நீடித்தல்; பட்டு நெசவு தொழிலுக்கான சரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்தல்; வறுமையில் வாடுவோருக்கான பொது விநியோக முறையை வலுப்படுத்த மாநியங்களை அதிகரித்தல்; நகர்ப்புற வறுமையை நீக்க புதிய திட்டம்; கறுப்புப் பணம் மீட்பு;

வணிகம் : இணையதள வணிகத்திற்குத் தடை; சில்லறை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டிற்குத் தடை;

அயலுறவு : அமெரிக்க ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படுத்துதல்; சீனா, பாகிஸ்தான் நாடுகள் எல்லையில் ஊடுருவல் நடத்துகின்றன. இலங்கையில் சீனா வகிக்கும் செல்வாக்கு இந்தியாவுக்குச் சவால். இந்தியாவின் வல்லமையை நிலை நாட்டும் வகையில் அயலுறவுக் கொள்கையில் உறுதியான மாற்றங்கள்;

ஊழல் : _________________________________

கல்வி, மருத்துவம் : கட்டாய இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்துதல்; உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துதல்; இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பலவற்றையும் (IIS முதலியன) தமிழகத்திலும் அமைத்தல்;மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டை 6 சதமாக்குதல்; பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ‘கிளினிகல் பரிசோதனைகளை’ கண்காணித்தல்; குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தல்; அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி இருக்கைகளை உருவாக்குதல்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல்:

சமூக நீதி : இட ஒதுக்கீட்டை எல்லாத் துறைகளிலும் அமுலாக்க உள்ள நீதிமன்றத் தடைகளை உரிய சட்டங்களின் மூலம் நிக்குதல், தனியார்துறையில் இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்குப் பாடுபடல்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான சட்ட உரிமைகளைப் பாதுகாத்தல்; மண்டல் பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சத ஒதுக்கீட்டை அதிகரித்தல்; வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பழங்குடி மக்கள் இடம் பெயர்க்கப்படுதலைத் தடுத்தல்;

சிறுபான்மையினர் : சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுக்காக்கும் வகையில், எல்லா மதங்களும் சமமாக நடத்தப்படும் வகையில், திராவிட இயக்க வழிமுறைகளைத் தொடர்தல்; பொது சிவில் சட்டம் கூடாது; சச்சார் குழு பரிந்துரைகள் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடுத் திட்டங்களை முறையாக நிறைவேற்றல்; தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவருக்கு இதர தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்குதல்;

பெண்கள் : 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற நடவடிக்கைகள்; பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துதல்; பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ‘விசாகா’ நடைமுறைகளை தொழில் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த வழி வகுத்தல்; குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றல்;

நலத் திட்டங்கள் : எல்லாவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ 1500 மாத உதவித் தொகை அளித்தல்; சைகை மொழியை அங்கீகரித்தல், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு;

ஈழம் : கச்சத் தீவு மீட்பு; தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; தமிழ் ஈழம் மலரப் பொது வாக்கெடுப்பு; விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்;

தொழிலாளர்; தொழிலாளர் உடரிமைகளைப் பாதுகாகக் குரல் கொடுத்தல்; ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்தல் மற்றும் அவர்களை நிரந்தரப்படுத்துதல் ஐ.டி தொழில்துறையில் இருப்போர் நவீன கொத்தடிமைகளாக இருத்தலை எதிர்த்தல்; பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் வைப்பு நிதி வட்டியை 12 சதம் ஆக்குதல்; புதிய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்; கொத்தடிமை முறையை ஒழித்தல்; அரசு ஊழியர் வருமான வரி மொத்த வருமானத்தில் 3 சதம் எனக் குறைத்தல்; ஏழாவது ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றல்;

மீனவர் : கடலோர மேலாண்மைச் சட்டத்தை (2008) நீக்குதல்; பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தல்; கடல்சார் பழங்குடி மக்களாக அறிவித்தல்: பெண்களை மீன் தொழிலாளிகளாக அறிவித்து ஓய்வூதியம் முதலான பயன்களைப் பெற வழி வகுத்தல்; சிறிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவது

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொணர்தல்;

தமிழ் / தமிழகம்: வழக்காடு மொழியாகத் தமிழ்; எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக ஆக்குதல்; ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம், தமிழக புதிய ரயில் திட்டங்கள்; தென்னக ரயில்வே திட்டம் ஆகியவற்றை உருவாக்குதல்; அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வழி செய்தல்; தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் தூதுவர்களாகத் தமிழர்களை நியமித்தல்; அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான் அமணடல் அலுவலகத்தைச் சென்னையில் அமைத்தல்; கொடுமணல் அகழ்வாய்விடத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துப் பாதுகாத்தல்; விமான நிலையங்களை மேம்படுத்தல்;

சேது சமுத்திரத் திட்டம்: சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மீனவர் கவலை ஆகியவற்றை ஆய்வு செய்த, உரிய மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றுதல்;

பிற: தூக்குத் தண்டனை ரத்து; கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளைத் தடுப்பது; இயங்கி வரும் அணு உலைகளை மூடுவது; கேரளத்திலிருந்து கர்நாடகத்திற்கு த் தமிழகம் வழியாக எரிவாயுத் திட்டம் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்தல்;பூரண மது விலக்கு;சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை; நீதிபதிகள் தேர்வாணையம் அமைத்தல்; புதுசேரிக்குத் தனி மாநிலத் தகுதி; ‘இந்திய ஒன்றியம்’ என்கிற பெயரை ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என மாற்றுதல்;

கூட்டணி : பாரதிய ஜனதா கட்சி. தேசிய முற்போக்கு திராவிட கழகம். பாட்டாளி மக்கள் கட்சி’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,இந்திய ஜனநாயக கட்சி ;

ஆதரவு அமைப்புகள்: அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபை, தென்னாடு மக்கள் திராவிடக் கழகம், பீப்பிள் பார்ட்டி ஆப் இந்தியா (மத சார்பற்றது), மக்கள் தமிழகம், அகில இந்திய கிறிஸ்தவ கட்சி, சத்யாகிரகா இயக்கம்’, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் (வல்லரசு), மக்கள் புரட்சி பார்வர்ட் பிளாக் கட்சி, அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, அகில இந்திய கைவினையாளர்கள் முன்னேற்ற கழகம், ஆரியை வைசியர் முன்னேற்றக் கழகம் முதலியன.

 

6. இந்திய தேசிய காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சிக்கு மிகப் பெரிய பங்களிப்புகளைச் செய்துள்ளது. வளர்ச்சி என்பதை கல்வி, உணவு, வேலை, தகவல் அறிதல், நிலம் கையகப் படுத்தல்களின்போது உரிய இழப்பீடு பெறுதல் முதலான “உரிமைகளை உள்ளடக்கிய வளர்ச்சி” என்கிற நிலையை நோக்கி நகர்த்தியது காங்கிரஸ். அதிகாரத்தைப் பரவலாக்கி, மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகிற ஆளுகையை அது எதிர்நோக்குகிறது. 2004 மற்றும் 2009 தேர்தல்களில் மக்கள் எங்களுக்கு அளித்த வெற்றியின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் அடித்தள மக்களின் மேம்பாட்டை நாங்கள் சாதித்துள்ளோம். இந்தப் பத்தாண்டு காலத்தில் பா.ஜ.க ஆட்சியில் 5.9 சதமாக இருந்த வளர்ச்சி வீதத்தை 7.5 ஆக உயர்த்தினோம். வறுமை ஒழிப்பு வீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தி 213 லிருந்து 263 மி.டன் ஆக உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.36 கோடியிலிருந்து 95 கோடியாக அதிகரித்துள்ளது. பன்னாட்டு வணிகம் 132 லிருந்து 800 மி. டாலராக அதிகரித்துள்ளது. கல்விக்கு செலவிடப்படும் தொகை 7 மடங்கு அதிகரித்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், தொழில் முனைவை ஊக்கப்படுத்துதல், கார்பொரேட் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தை நிறைவேற்றினோம். மனிதர்கள் மலம் கழுவித் தூய்மை செய்யும் பணியை ஒழிக்கச் சட்டம் இயற்றினோம். புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் 15 அம்சத் திட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு இன்னொரு முறை வாய்ப்பளிப்பீர்.

விவசாயம் : பாசனம், விவசாய விளைபொருட்களைச் சேமித்துப் பாதுகாக்க நவீன வசதி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து விவசாய வளர்ச்சி மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் உலக முன்னோடியாகத் தொடர்தல்; கடந்த பத்தாண்டுகளில் நெல், கோதுமை ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரட்டிப்பாக்கியுள்ளோம்; பிற தானியங்களின் விலையை மும்மடங்காக்கியுள்ளோம். இவ்விலை அதிகரிப்பு தொடரும்; சிறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் குழுமங்களுக்கு ரூ 5 லட்சம் வரை சலுகைக் கடன்கள் அளிக்கப்படும்;

தொழில் / பொருளாதாரம் : மூன்றாண்டுகளில் 8 சதப் பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்; முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல்; உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கடி அளித்த போதிலும் பணவீக்கத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்தல்; உள்நாட்டு, வெளிநாட்டு வணிகப் போட்டிக்குரிய வகையில் திறந்த பொருளாதாரம்; உற்பத்தித் துறையில் 10 சத வளர்ச்சி; சேவைத் துறை மற்றும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் புதிய நேரடி வரி விதிப்புச் சட்டங்களை உருவாக்குதல்; அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரம்,, போக்குவரத்து மற்றும் இதர அகக் கட்டுமான வளர்ச்சிக்கு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்தல்; அகக் கட்டுமான வளர்ச்சியில் தனியார் மற்றும் பொதுத்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல்; அந்நிய முதலீடு. குறிப்பாக வேலை வாய்ப்புகள் உள்ள துறைகளில் ஊக்குவிப்பு; இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைத்தல்; கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் காத்திரமான முயற்சிகளைத் தொடர்தல்; இதற்கென ஒரு சிறப்புத் தூதுவரை நியமித்தல்; முக்கியமான அம்சங்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே மான்யம் வழங்குதலைக் கட்டுப்படுத்துதல்; 2022 க்குள் மொத்த உள் உற்பத்தியில் தொழிற்துறையின் பங்கு (manufacture) 25 சதம் ஆக்கப்படும்; வட கிழக்கு மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் தொடரும்;

வணிகம் : பன்முக வணிக அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் முதலீடுகள் பெருகுதல் உறுதி செய்யப்படும்; பொருள் மற்றும் பணித்துறை வணிகம் தற்போது 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது; 5 ஆண்டுகளில் இது இரட்டிப்பாக்கப்படும்;

அயலுறவு : ஆசிய நாடுகளுடன் அமைதியும் உறுதியும் பரஸ்பர நலனும் பயக்கும் உறவைப் பேணுதல்; ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான ஆதரவைத் திரட்டுதல்; உலக அளவிலான பயங்கரவாத்தை உறுதியுடனும் பிற நாடுகளுடன் உளவுப் பகிர்வு முதலான ஒத்துழைப்புகளுடனும் எதிர்கொள்ளல்; நமது அணிசேராப் பாரம்பரியத்தையும் சோஷலிச நாடுகளுக்கும், ஆப்ரிக்க மற்றும் பலஸ்தீனிய நாட்டுப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பதைத் தொடர்தல்; சீனாவுடன் வர்த்தக பொருளாதார உறவைப் பேணிக் கொண்டே எல்லைப் பிரச்சினை தொடர்பான அகரித்து வரும் வேறுபாடுகளைப் பேசிச் சரி செய்ய முயற்சித்தல்;, ‘சார்க்’ அமைப்பை வலுப்படுத்துதல்;

ஊழல் : எதிர்க் கட்சிகளால் நிறைவேற்றவிடாமல் தடுக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுதல்; ஊழல் ஒழிப்பு மற்றும் பொறுப்பேற்பு (accountability) தொடர்பான நிலுவையில் உள்ள ‘நீதித்துறைப் பொறுப்பேற்பு மசோதா’ உட்பட பல்வேறு மசோதாக்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்தல்;

கல்வி, மருத்துவம் : குறை வருமானம் உல்ள குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல்; உயர் கல்வி அமைப்பை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்து விடல் மூலம் நம் மாணவர்கள் சிறந்த கல்வி பெறும் வாய்ப்பை அதிகரித்தல்; எல்லோருக்கும் கல்வி (சர்வ சிக்‌ஷ அபியான்) என்பதிலிருந்து தரமான ‘ஸ்ரேஷ சிக்‌ஷ அபியானை’ நோக்கிக் கவனம் குவித்தல்; ஒவ்வொரு பிளாக்கிலும் நலிந்த பிரிவினருக்கான நவோதயா கல்வி நிறுவனம் அமைத்தல்; கல்வி உரிமை, எல்லோருக்கும் கல்வி ஆகிவற்றைச் சிரத்தையாக நடைமுறைப்படுத்துதல்; மொத்த உள் உற்பத்தியில் 3 சதம் மருத்துவத்திற்காக ஒதுக்குதல்; இலவச மருந்து உட்பட தரமான மருத்துவம் அளித்தல்;

சமூக நீதி : பட்டியல் பிரிவினருக்கான சிறப்புத் துணைத்திட்டங்கள் வகுப்பதற்கான மத்திய அரசுச் சட்டம் நிறைவேற்றல்; 2013 ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றல்; பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் பலன்களை முறையாகப் பெற்றிராத மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலை குறித்து ஆராய ஆணையம் ஒன்றை நியமித்தல்; பட்டியல் பிரிவில் உள்ள வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கு திறன் வளர்ச்சி உதவித் தொகையாக 10,000 ரூ வவுச்சர் அளித்தல்; குறந்தபட்சத் தகுதி உள்ள அனைத்துப் பட்டியல் பிரிவு மாணவர்களுக்கும் ராஜிவ் காந்தி ஆய்வு உதவித் தொகை அளித்தல்; தகுதியுடைய பட்டியல் பிரிவு மாணவர்கள் 1000 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சென்று பயில உதவித் தொகை அளிக்கப்படும்; சிறிய/நடுத்தர பட்டியல் பிரிவு தொழில் முனைவர்களிடமிருந்து பொருள்களை வாங்க மொத்தக் கொள்முதலில் 4 சதத்தை ஒதுக்குதல்;

சிறுபான்மையினர் : மதக் கலவரத் தடுப்பு மசோதாவை விரைந்து சட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளல்; சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்குதல் தொடர்பான தடைகளை நீக்கி முன்னெடுத்தல்; சச்சார் குழு பரிந்துரையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிறைவேற்றுதல்;

பெண்கள் : 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உறுதி; மகளிர் பாதுகாப்பு, சுயமரியாதை, கண்ணியம், ஆகியவற்றைப் பாதுகாப்பதை நோக்கி கவனம் குவித்தல்; சுய உததிக் குழுக்கள் மூலம் ஒரு இலட்ச ரூ குறைந்த வட்டிக் கடன் அளித்தல்; குழந்தைகள் பாதுகாப்பிற்கான சட்ட அமைவுகளை வலுவாக்குதல்; அங்கன்வாடி ஊழியர் நிலையை உயர்த்துதல்; பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதம் பெண்கள் நலத்திற்குச் செலவிடல்;

நலத் திட்டங்கள் : ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டங்களோடு, மருத்துவம், ஓய்வூதியம், வேலை உறுதி, வீடு, சமூகப் பாதுகாப்பு, தொழில் முனைவு, பணி இடங்களில் கண்ணியம் காப்பாற்றப்படுதல், ‘ஆதார்’ அடையாளம்’ ஆகியவற்றுக்கான உரிமைச் சட்டங்களும் நிறைவேற்றல். 10 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலை அளித்தல்; ஐந்தாண்டுகளுக்குள் ஒவ்வொருவருக்க்கும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குதல்; ;

ஈழம் : இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் கண்ணியமான மறுவாழ்விற்கு இந்தியா செய்து வந்த உதவிகளைத் தொடர்தல்; விடுதலைப் புலிகளுடனான இறுதி நேரப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பத்தகுந்த, குறிப்பிட்ட கால கெடுவில் செயல்படக் கூடிய விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசுக்குப் பிற நாடுகளுடன் இணைந்து அழுத்தம் அளிக்கப்படும்;

தொழிலாளர்; சர்வதேசத் தரங்களை நோக்கி நமது தொழிலாளர் நிலையை உயர்த்தும் அதே நேரத்தில், போட்டிப் பொருளாதாரத்திற்குரிய வகையில் தொழிலாளர் சட்டங்களை நெகிழ்ச்சியாக ஆக்குதல்; குறந்த பட்சக் கூலிச் சட்டம், ஓய்வூதியம், தொழிலிட பாதுகாப்பு, மருத்துவம் ஆகியவற்றை நிறைவேற்றுதல்; தொழிலாளர்களின் கூட்டு பேர வலிமையை வளர்த்தல்;

மீனவர் : ___________________________________________________

தேர்தல் சீர்திருத்தம்: திறன்மிக்க தேர்தல் சீர்திருத்தத் திருத்தங்களுக்கான சட்ட நிறைவேற்றத்திற்கான கருத்தொருமிப்பை உருவாக்குதல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: ————————————————————-

பிற: எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் 18 மாதங்களுக்குள் ‘’பிராட் பேன்ட் இணைப்பைச் சாத்தியமாக்கல், திட்டமிட்ட நகர்ப்புற விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், படைகளை நவீனப் படுத்துதல்; உறுதியான கரங்கொண்டு இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடரும்; அதற்குரிய வகையில் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்படும்; படைகள் நவீனப்படுத்தப்படுவது தொடரும்; காவல்துறை நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்கள்;

கூட்டணி : ——————————————————————–

ஆதரவு அமைப்புகள்: சமூக சமத்துவப் படை, நாடாளும் மக்கள் கட்சி,

7. பாரதீய ஜனதா கட்சி

சுதந்திரமடைந்து ஆண்டுகள் எழுபதாயினும், உலகின் பழம்பெரும் நாகரீகங்களில் ஒன்றானா இந்தியாவின் உள்ளார்ந்த வீரியம் மீட்டெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக நாடு இப்போது ஒரு பன்முக நெருக்கடியச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஏற்றத் தாழ்வுகள், சமூக மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள், பயங்கரவாதம் ஆகியவற்றின் விளைவாக இது ஒரு முடமான சமூகமாக உருப்பெற்றுள்ளதோடு நாளுக்கு நாள் நிலை மோசமாகிக் கொண்டே உள்ளது. முதுகெலும்பற்ற பலவீனமான ஐ.மு.கூ அரசு நிலைமையை மேலும் குழப்பியுள்ளது. வெளிப்படைத் தன்மை இன்மை, அதிகாரக் குவியல், ஊழல் முதலியன பெருகியுள்ளன. 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாராளமயம்’ முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. ஆறாண்டு கால தே.ஜ.கூ அரசு நாட்டை ஒரு பொருளாதார ‘சூப்பர் பவர்’ என்கிற நிலையை நோக்கி இட்டுச் சென்றது. 2004ல் ஐ.மு.கூ அரசு ஏற்பட்டது. நிலைமை சீர்கேடடையத் தொடங்கியது. இந்த நிலையிலிருந்து மீள நமக்கு உடனடித் தேவை ஒரு செயல்திறனுள்ள அரசியல் கட்சியும் தலைமையும். விவேகாநந்தர் சொன்னதுபோல “எல்லா ஆற்றலும் உன்னிடம் உள்ளது. உன்னால் முடியும். முதலில் அதை நீ நம்பு”. ஶ்ரீ மா ஒருமுறை சொன்னதுபோல மானுடத்தின் இன்றைய நலிவுகளிலிருந்து அதை மீட்டெடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு, 122 கோடி மக்களின் கனவை பா.ஜ.க நனவாக்கும். “ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்”, “சப்கா சாத், சப்கா விகாஸ்” முதலான முழக்கங்களை முன் வைக்கும் பா.ஜ.கவிற்கு ஆதரவளிப்பீர்.

விவசாயம் : தேசிய அளவில் ஒற்றை விவசாயச் சந்தையை உருவாக்கல்; அவ்வப் பகுதி மக்களின் உணவுப் பழக்கங்களுக்கு ஏற்ப விவசாய விளை பொருட்களை ஆதரித்தல்; விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்கள் என்கிற பாரம்பரியமான துறைகளை வளர்த்து நவீன சந்தையுடன் இணைத்தல்; விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பொது முதலீட்டை ஊக்குவித்தல்; 50 சத லாபம் வரும் வகையில் விவசாயத்தை ஆக்குதல்; 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள்; ‘இந்திய இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உர நிறுவனம்’ அமைத்தல்; கிராமப்புறக் கடன் வசதிகளைப் பெருக்குதல்; மரபணு மாற்ற உணவுகளைப் போதிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதி அளிக்காதிருத்தல்; சாத்தியங்களைப் பொறுத்து நதி நீர் இணைப்பு;

தொழில் / பொருளாதாரம் : கருப்புச் சந்தை, பதுக்கல் ஆகியவற்றை ஒழிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உட்படக் கடும் நடவடிக்கைள், விலைவாசியைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதி உருவாக்கல் முதலான செயல்பாடுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்; ஐ.மு.கூ ஆட்சியில் உள் உற்பத்தி 4.8 சதமாகக் குறைந்துள்ளது; வேலை வாய்ப்பு அதிகமுள்ள உற்பத்தித் துறையை வளர்த்தல், மற்றும் நீண்ட காலத் திட்டங்கள், நிதித்துறை ஒழுக்கம், வங்கிச் சீர்திருத்தம், வரி விதிப்புச் சீர்திருத்தம் ஆகியவற்றின் ஊடாக இந்நிலையை மாற்றுதல்; சுற்றுலாத் துறையை விரிவு படுத்தல்; சிவப்பு நாடா முறை போன்றவற்றை நீக்கி இந்தியாவில் தொழில் தொடங்கலை எளிதாக்குதல்; உலகத் தரமான முதலீட்டுப் பிரதேசங்களை உருவாக்குதல்; உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை; ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்தல்; கூட்டுறவுத் துறை, கைவினைத் தொழில் ஆகியவற்றை ஊக்குவித்தல்; பணித் துறையின் தரத்தையும் திறனையும் மேம்படுத்தல்;

வணிகம் : ‘மல்டி ப்ரான்ட்’ சிறு வணிகம் தவிர வேலை வாய்ப்பூள்ள பிற துறைகள் அனைத்திலும் அந்நிய நேரடி மூலதனம் ஊக்குவிக்கப்படும்; எனினும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதுகாக்ககப்படும்

அயலுறவு : அண்டை நாடுகளுடன் நட்பு. ஆனால் தேவையானால் கடும் நடவடிக்கைகளுக்குத் தயங்காமை; சார்க், ஏசியன் முதலான பிராந்திய அமைப்புகளை வலுப்படுத்துதல்; தேசிய நலன்களை முன்வைத்து பரஸ்பர நலன்களுடன் நாடுகளுக்கிடையே உறவைப் பேணுதல்;

ஊழல் : மக்கள் மத்தியில் ஊழல் பற்றிய பிரக்ஞை உருவாக்குதல்; உயர் தொழில் நுட்பங்களுடன் கூடிய e ஆளுகை; கொள்கை அடிப்படையிலான ஆளுகை: அரசு நடைமுறைகள், வரி விதிப்பு ஆகியவற்றை எளிமைப்படுத்துதல்; கருப்புப் பணம் உருவாவதற்கான வழிமுறைகளை அடைத்தல்; வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்க தனிப் படை அமைத்தல்;

கல்வி, மருத்துவம் : வறுமையிலிருந்து மேலெழுந்த நவ மத்தியதர மக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்குக் கல்விவசதிகள், உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அளித்தல்; ‘இளம் தலைவர்கள்’ மற்றும் ‘வளர்ச்சிக்கான தலைவர்கள்’ திட்டங்களை உருவாக்குதல்; பரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுக்களை ஊக்குவித்தல்; நவீன கல்வி வளர்ச்சியைச் சகல மட்டங்களிலும் சாத்தியமாக்கல். ஆசிரியப் பணி இடங்களை நிரப்புதல்; தொழில் சார் கல்வியை ஊக்குவித்தல்; திறன் வரைபடம், தேசியப் பல்திறன் திட்டம் முதலியவற்றைச் செயல்படுத்தல்; மென் திறன்கள் ஊக்குவிப்பு; மொபைல் போன்களின் உதவியோடு e மருத்துவ சேவை, பாரம்பரிய மருத்துவ முறை யோகா முதலிவற்றை ஊக்குவித்தல்; பள்ளி மருத்துவம், கிராமப்புற மருத்துவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை; உடற் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய் முதலான மருத்துவ ஆய்வுகளில் அதிக முதலீடு;

சமூக நீதி : ‘சமாஜிக் நியாய்’ மற்றும் ‘சமாஜிக் சம்ராசட்டா’ (சமூக நீதி / சமூக ஒற்றுமை) ஆகியவை கடைபிடிக்கப்படும்; பழங்குடிகள் முன்னேற்றத்திற்காக ‘வனபந்து சம்ரக்‌ஷ்ண யோஜனா’ உருவாக்கப்படும்; தீண்டமை மற்றும் மனிதர்கள் மலம் சுமந்து கழுவுதல் முதலியவற்றை ஒழித்தலில் பா,ஜ,க உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளது; நலிந்தோருக்கான நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகச் செலவிடல்; பழங்குடிகளின் பண்பாட்டைப் பாதுகாத்தல்; அவர்களின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துதல்;

சிறுபான்மையினர் : வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம்புபவர்கள் நாங்கள்; சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் சிறுபான்மையினரில் பெரும்பகுதி, குறிப்பாக முஸ்லிம்கள் ஏழ்மையில் இருப்பது வருந்தத்தக்கது; வளர்ச்சியின் பலன்கள் எல்லோருக்கும் கிடைப்பதில் உறுதியாக இருப்போம்; வேறுபாடின்றி கல்வி, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுதல் பெண் கல்விக்கு முக்கியத்துவம்; முஸ்லிம் கல்வி அமைப்புகளை நவீனப்படுத்தி வலிமைப்படுத்துதல்; குறிப்பாக தேசிய மதரசா நவீனப்படுத்துதல் திட்டத்தை தொடங்குதல்; வக்ஃப் வாரியங்களை வலிமைப்படுத்துதல்; வக்ஃப் சொத்து ஆக்ரமிப்புகளைத் தடுத்தல்; உருது மொழி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களைப் பாதுகாத்தல்; பாதுகாப்பும் அமைதியும் நிறைந்த சூழலை ஏற்படுத்துதல்;

பெண்கள் : எல்லா மட்டங்களிலும் பெண்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை; 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உறுதி; ‘பேடி பசோவ், பேடி பதாவ்’ என்கிற பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான தேசிய அளவுப் பிரச்சாரம்; சத்துணவு, பேறு கால நலம் ஆகியவற்றை முதன்மைப் படுத்திய பெண்கள் நலத்திட்டம்; வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத நிதியை முறையாகச் செலவிடல்;

நலத் திட்டங்கள் : எங்கள் அரசு ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் அரசு; 100 பின் தங்கிய மாவட்டங்களை அடையாளங் கண்டு அவற்றை பிற மாவட்டங்களின் அளவிற்கு மேம்படுத்தல்; வறுமை ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துதல்; குறைந்த விலை வீடுகட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குதல்; உணவு உரிமை என்பது வெறுமனே காகிதத்தில் இல்லாமல் அதை எதார்த்தமாக்குதல்; பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்துதல்; கிராமப்புற மற்றும் நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம்; 100 நகரங்களைத் தேர்வு செய்து நவீன தொழில்நுட்பங்கள் மிக்க நகரங்களாக வளர்த்தெடுத்தல்; துணை நகரங்களை உருவாக்குதல்; பொது இடங்களில் ‘வைஃபி’ வசதி செய்தல்; மூத்த குடிமக்களுக்கு வரி மற்றும் வட்டிச் சலுகைகளை அளித்தல்; ‘மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம்’ நிறைவேற்றல்; வரிச்சலுகை; வீட்டிலிருந்தே படிக்கும் e கல்வி வாய்ப்பு. எல்லோருக்கும் சிறப்பு அடையாள அட்டை வழங்கல்; எல்லா வீடுகளுக்கும் குடி நீர்;

ஈழம் :________________________________________

தொழிலாளர்; அமைப்பு சாராத் தொழிலாளருக்கு அடையாள அட்டைகளை வழங்கி கல்வி, மருத்துவ வசதிகளை அளித்தல்; தொழிலாளர் வங்கி அமைத்தல்; எல்லா வகைத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீடு முதலியவற்றை உருவாக்குதல், தொழிலாளர் சட்டங்களை மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைக்கும் முயற்சி தொடங்குதல்;

மீனவர் : மீன் விவசாயம் ஊக்குவிப்பு; மீனவர் நலத் திட்டங்கள்;

தேர்தல் சீர்திருத்தம்: குற்றவாளிகள் பங்கு பெறாத வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல்; நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டையும் ஒன்றாக நடத்துதல்; தேர்தல் செலவு எல்லையை மறு பரிசீலனை செய்தல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: சேது என்பது நம் கலாச்சாரப் பாரம்பரியம். தவிரவும் ஏராளமான தோரியம் அங்கிருப்பதால் அது ஒரு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் கூட. இதையெல்லாம் கணக்கில் கொண்டு இது குறித்து முடிவு செய்யப்படும்;

பிற: இளைஞர்களைச் சுய வேலை வாய்ப்பை நோக்கி ஊக்குவித்தல்; பொது ஊழியர்கள் மத்தியில் ‘கார்த்தவ்ய பாவனா’ வை உருவாக்குதல்; திறந்த, வெளிப்படையான, அதிகாரப் பரவலுடன் கூடிய ஆளுகை; நிர்வாகம், நீதித்துறை மற்றும் காவல்துறைச் சீர்திருத்தங்கள்; தேசிய நீதித் துறை ஆணையம், ‘லோக் அதாலத்’கள் ஆகியவற்றை உருவாக்குதல்; காவல்துறையை நவீனப்படுத்தி உலகத் தரத்திற்கு உயர்த்துதல்; பிராந்திய உணர்வுகளை மதித்து அதற்குரிய வகையில் மாநிலங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தல்; வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவற்றை ஒருங்கிணைத்தல்; காஷ்மீர் இந்த தேசத்தின் பிரிக்க இயலாத அங்கம்; பண்டிட்களை முழுக் கண்ணியத்துடனும் பாதுகாப்புகளுடனும் மீள் குடியேற்றுதல்; பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அகதிகள் பிரச்சினையைத் தீர்த்தல்; 370 வது பிரிவு குறித்த நிலைபாட்டை உறுதியாகக் கடைபிடித்தல். ஐ.மு.கூ அரசால் கைவிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் பொறியமைவை மறு உருவாக்கல்; மாநில அரசுகளுக்கு உள் நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான எல்லா வசதிகளையும் அளித்தல்; படைகளில் அதிகாரிகள் மட்டத்தில் பணி இடங்களை நிரப்புதல்; மாஓயிச வன்முறையை எதிர்கொள்ள தேசிய அளவில் திட்டம் உருவாக்கல்; கல்லூரிகளில் என்.சி.சி பயிற்சி; போர் நினைவுச்சின்னம் ஒன்றை அமைத்தல்; படைகளை நவீனப்படுத்துத்ல்; எல்லை நிர்வாகத்தை மேம்படுத்தல்; சட்ட விரோதமாக நுழைபவர்கள் மீது தண்டனை நடவடிக்கைகள்;

சிறப்பு அம்சங்கள்; வாஜ்பாயி அரசு அணு குண்டு வெடிப்பு சோதனை நடத்தியதனூடாக நமக்குக் கிடைத்த இராணுவ பலத்தை ஐ.மு.கூ அரசு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது; இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை நவீனப்படுத்தப்படும்; அணு உலையில் நமது உள்நாட்டு தோரியம் தொழில்நுட்பம் வளர்க்கப்படும். அரசியல் சட்ட எல்லைக்குள் நின்று அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவதற்கான எல்லா சாத்தியங்களையும் ஆராய்வோம்; முக்தி தாயினியாகவும் ஜீவன் தாயினியாகவும் உள்ள கங்கை நீரின் தூய்மை காப்பாற்றப்படுவது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்; மக்கள் பங்கேற்புடன் நதிகளைத் தூய்மை செய்யும் பணி நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும்; பசுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பாரம்பரிய வரலாற்றுத் தலங்கள் பாதுகாக்கப்படுதல்; புனிதப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் தலங்களில் வசதிகள் செய்தல்; இந்திய மொழிகள் வளர்க்கப்படும்; பொது சிவில்சட்டம் உருவாகாதவரை ஆண் -பெண் சமத்துவம் சாத்தியமில்லை என்பதால், நமது பாரம்பரியத்திற்கு உகந்த வகையிலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறும் பொ.சி.ச ஒன்றை நிறைவேற்றும் உறுதிப்பாட்டை பா.ஜ.க மீண்டும் உறுதி செய்கிறது. அமிர்தமய் பாரத்தை நோக்கி ஒவ்வொரு அடியையும் முன்னெடுப்போம்; ஏக் பாரத் ! ஸ்ரேஷ்ட பாரத் !!

கூட்டணி : பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

ஆதரவு அமைப்புகள்: பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

8. ஆம் ஆத்மி கட்சி

அறுபத்து நான்காண்டுகள் ஆயினும் சுயராஜ்யம் ஒரு கனவாகவே உள்ளது. ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களைப்பு நிறைந்த வழமையாகிவிட்டது. ஆட்சியாளர்களாலும் இடையில் நிற்கும் அதிகாரவர்க்த்தாலும் அலட்சியப் படுத்தப்படுவதாகவும் அவமானப் படுத்தப்படுவதாகவும் ஆகிவிட்டது. மக்களின் குறைகளை அறிந்து ஒலிக்க வேண்டிய அரசியல் கட்சிகளோ வெறும் ஓட்டு சேகரிக்கும் எந்திரங்களாகிவிட்டன. சுயராஜ்யம் என்பது மக்களே தம் விதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்வது; அதிகரப் பொறியமைவை மக்களே நேரடியாக இயக்குஅது, ஆட்சியாளர்களைத் தம் செயல்களுக்குப் பொறுப்புடையவர்களாக்குவது. பிரிட்டிஷ்காரர்களுக்குப் பதிலாக நம்மவர்களே இந்நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் மகாத்மா காந்தி உள்ளிட்ட நம் விடுதலைப் போர்த் தியாகிகள் தம் உயிரைத் தத்தம் செய்தார்களா? ஊழ்ல், வகுப்புவாதம், ஊழல் முதலாளியம் என்கிற முப்பெரும் ஆபத்துகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி அரசியலதிகாரத்தை சாதாரண மனிதர்களின் கையில் மீட்டுத் தருவதற்கு உறுதி பூண்கிறது. ஆம் ஆத்மி கட்சி இன்னொரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது ராம் லீலா திடலிலும். ஜந்தர் மந்தரிலும் நடந்த போராட்டங்களின் ஊடாக உதித்த கட்சி. அது சுயராஜ்யத்தை விரும்பும் கட்சி, உங்களின் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளும் வண்ணம் அதிகாரத்தை உங்களிடமே திருப்பி அளிக்க விரும்பும் கட்சி.

விவசாயம் : கிராமங்களில் வாழ்வோர் நகர்ப்புற வசதிகள் அனைத்தையும் பெறுவதை உறுதி செய்தல்; பொருளாதார நலிவின் காரணமாகக் கிராமப்புறங்களிலிருந்து புலம் பெயர்தலுக்கு எதிராக கிராமப்புறப் பாரம்பரியத் தொழில்கள் மற்றும் விவசாய வளர்ச்சியை எளிதான கடன் வசதி முதலானவற்றின் மூலம் மேம்படுத்தல்; விவசாயம் தொடர்பான சுவாமிநாதன் ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்துதல்; விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை 50 சத லாபம் கிடைக்குமாறு நிர்ணயித்தல்; மேலும் 25 பயிர்களுக்கு இவ்வாற்று குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தல்; கடன் மற்றும் காப்பீட்டு வசதிகள் மூலம் விவசாயிகளின் தற்கொலைகளை முடிவுக்குக் கொணர்தல்; கிராமப்புற மருத்துவ வசதிகளை மேம்படுத்தல்; குளிர் பதன வசதி, சேமிப்பு வசதி முதலியவற்றை மேம்படுத்தி இழப்புகளைத் தடுத்தல:;

தொழில் / பொருளாதாரம் : வெளி நாட்டில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணர்தல்; காரணமானவர்களைத் தண்டித்தல்; எளிய படிப்படியாக அதிகரிக்கும் வரி விதிப்பை கொணர்தல்; மொத்த உள் உற்பத்திக்கும் வரி விதிப்பிற்குமான வீதத்தை அதிகரித்தல்; நவீன தொழில்நுட்பம் மற்றும் e ஆளுகையின் பயன்பாட்டை அதிகரித்தல்; தொழில் நடத்துவது அரசின் தொழிலல்ல என ஆம் ஆத்மி நம்புகிறது. தொழிற்துறை வளர்வதற்கும், வேலை வாய்ப்பு பெருகுவதற்கும் தனியார் துறையின் பங்கேற்பு அவசியம்; ஊழல் அற்ற சூழல், திறன்மிக்க அகக்கட்டுமானம் முதலானவற்றை அளிப்பதன் மூலம் யோக்கியமான தொழிற்துறை வளர்வதற்கு அரசு உதவ வேண்டும்; தூய திறந்த ஆளுகை இதை உறுதி செய்யும்;

வணிகம் : ——————————————————————–

அயலுறவு : எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இம்மியும் பொறுமை காட்டாமை; இருநாட்டு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புகளின் மூலம் பயங்கரவாதிகளைப் பிடிப்பதும் பயங்கரவாத்ததைக் கட்டுப்படுத்தலும். சீனாவின் எல்லை ஊடுருவல்களை எதிர்கொள்ளத் தக்க அளவில் நம் திறனைக் கட்டமைக்கும் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார வணிகத் தொடர்புகளை மேம்படுத்தல்; அண்டை நாடுகளுடன் விரோதப் போக்குகளை க் குறைத்து உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நல்லுறவைப் பேணுதல்; அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள உறவைப் பேணும் அதே நேரத்தில் அதற்கு இணையாக ‘ப்ரிக்ஸ்’ முதலான கூட்டமைப்புகளையும் தொடர்தலின் மூலம் ஒரு பல்துருவ உலகிற்கு வழி கோளல்; ஐ.நா போன்ற உண்மையான உலகளாவிய நிறுவனங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அய்.எம்.எஃப் போன்ற நிறுவனங்களை ஜனநாயகப் படுத்தும் கோரிக்கைகளை வைத்தல்; முதல் உலக நாடுகளின் முயற்சிகளை வீழ்த்தி, வளரும் நாடுகளின் கிராமப்புற விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் உலக வர்த்தக அமைப்பில் செயல்படுதல்;

ஊழல் : பிரதமர் தொடங்கி பொதுப்பணிகளில் உள்ளவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கை வெளியிடுதல், ஊழல்புரிந்தோர் உடனடியாகப் பதவி நீக்கம், சிறைத் தண்டனை, சொத்து பற்றிமுதல் முதலியன. ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட கால கெடுவில் விசாரித்துத் தணடனை வழங்கல், ஊழலை வெளிக்கொணர்வோருக்குப் பாதுகாப்பு முதலானவற்றை உள்ளடக்கிய ‘ஜன் லோக் பால்’ சட்டம் நிறைவேற்றுவது முதல் குறிக்கோள்;

கல்வி, மருத்துவம் : பணம் செலவழிக்க இயலாதவர்கள் உட்பட அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல்; உரிய நிதி ஒதுக்கீட்டுகளின் வழியாக பொதுக்க் கல்வி முறையை வலுப்படுத்துதல்; பெண்கள், முதல் தலைமுறையினர் மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியோர் எல்லோருக்கும் சிறப்புச் சலுகைகளையும் கவனிப்புகளையும் வழங்கி அவர்களும் தரமான கல்வி பெற வாய்ப்பளித்தல்; தல அளவில் பொருத்தமான பாடத்திட்டங்களை உருவாக்குதல்; இவற்றில் கிராம சபைகளுக்குப் பங்களித்தல். ஏராளமான தொழிற் பயிற்சிப் பள்ளிகளை (ஐ.டி.ஐ) உருவாக்குதல்; பள்ளி அளவில் தொழில் பயிற்சியையும் பொதுக் கல்வியையும் இணைத்தல், உலகத் தரமான உயர் கல்வி நிறுவனங்களை (ஐ.ஐ.டி எய்ம்ஸ் போல) உருவாக்கி திறமையுடைய எல்லோருக்கும் வாய்ப்பளித்தல்; டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஜனநாயக விரோதமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள நான்காண்டு பட்டப் படிப்பை ரத்து செய்தல்; பள்ளிக் கல்வியில் விளையாட்டுகளுக்கு முக்கிய இடமளித்தல்; கல்வி உரிமைச் சட்டத்தின் வழியில், பணக்காரர், ஏழை எனும் வித்தியாசமின்றி எல்லோருக்கும் மருத்துவ நல உரிமைச் சட்டத்தையும் கொணர்தல்; பொது மற்றும் தனியார் மருத்துவ சேவைகளை அரசுக்குப் பொறுப்பாக்கல்; தனியார் துறைக்கு அரசு அளிக்கும் மாநியங்களின் பலன்கள் ஆம் ஆத்மிகளின் கையில் போய்ச் சேருவதை உறுதியாக்கல்; மாற்று மருத்துவங்களுக்கு உரிய இடமளித்தல்;

சமூக நீதி : நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடுக் கொளகையை ஆம் ஆத்மி ஏற்கிறது; அதை உறுதியாகச் செயல்படுத்த விழைகிறது; இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற பிரிவினருக்குள்ளும் பின் தங்கிய நிலையில் இருப்போருக்கு முன்னுரிமை அளித்தல்; வனிக மற்றும் தொழில் முயற்சிகளுக்கு அரசு ஆதரவு; சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான விரிவான பொதுக் கல்வி அளித்தல்; ஒப்பந்தப் பணியில் உள்ள துப்புரவுத் தொழிலாளிகளை நிரந்தரமாக்கல்; அவர்களை இன்றைய நிலையிலிருந்து மீட்க அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல்; சாக்கடைக் குழிகளில் இறங்கி வேலை செய்வோருக்கு தீயணைப்புப் படையில் உள்ளவர்களைப் போல முகமூடி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு முதலியவற்றை அளித்தல்; அறிவிக்கை நீக்கப்பட்ட சாதியாரையும் (denotified tribes) நாடோடி இனத்தவரையும் பட்டியல் சாதியினருக்கு இணையாக அறிவித்து அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்படும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பட்டியல் பிரிவினருக்கன எல்லா உரிமைகளும் இவர்களுக்கும் வழங்கப்படுதல்;

சிறுபான்மையினர் : பா.ஜ.க விற்கு எதிரான அச்சத்தில் முஸ்லிம்கள் வேறு வழியின்றி இதுவரை காங்கிரசுக்கு வாக்களித்து வந்தனர். காங்கிரஸ் அவர்களின் நலன்களைப் புறக்கணித்தது. கலவரங்கள் தொடர்தல், அப்பாவிகள் கைது செய்யப்படுதல், இட ஒதுக்கீடு என்கிற வாக்குறுதிகள், தரங் குறைந்த கல்வி நிறுவனங்கள், ஊழல்கள் நிறைந்த வக்ஃப் நிர்வாகம் என்பதாக அவர்களின் நிலை அமைந்துள்ளது. அச்சத்தில் உள்ள இச்சமூகத்திர்கு சம உரிமைகளையும் பாதுகாப்பையும் அளித்து மத வன்முறைகளுக்கு முடிவு கட்ட ஆம் ஆத்மி கட்சி உறுதி பூண்கிறது; காவல்துறை அத்துமீறல்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான பொய்வழக்குகள் போடுதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொணர்தல்; பொய்வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்தல்; தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனச் சேர்க்கைகளில் முஸ்லிம்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்; அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்; தலித்களுக்கானா இட ஒதுக்கீடு மத அடிப்படையில் இன்று உள்ளது. அது தவறு என ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது; முஸ்லிம்களில் பெரும்பாலோர் அமைப்பு சாராத் தொழிலாளிகளாக உள்ளனர்; இத்துறையில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பை அளித்தல்; வக்ஃப் நிர்வாகத்தைச் சீர் செய்து அதன் பலன்கள் முஸ்லிம்களுக்குச் சென்றடைய வைத்தல்;

பெண்கள் : 33 சத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு; பாலியல் வேற்றுமைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுக்கல்வி பரப்பல்; இதற்கு எஸ்.எம்.எஸ் தொலைக் காட்சி உள்ளிட்ட எல்லா சாதனங்களையும் பயன்படுத்தல்; கருவிலுள்ள சிசுக்களின் பாலியல் சோதனைகளுக்கு இம்மியும் இடமளிக்காமை; பெண்களுக்குப் பாதுகாப்பான நல்ல வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்; எல்லா அரசு நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் செயல் திட்டங்களை உருவாக்குதல்; பெண்களின் பாதுகாப்பிற்கான 24 மணி நேரப் பாதுகாப்புகளை உருவாக்குதல்;

நலத் திட்டங்கள் : பழங்குடிகளுக்கான வன உரிமைச் சட்டத்தைச் சிறப்புறச் செயல்படுத்துதல்; கிராம சபைகளின் மூலம் அவர்களை அதிகாரப்படுத்துதல்; கிராம சபைகளின் ஒப்புதலின்றி வன நிலங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் கையகப் படுத்தப்படுவது முடிவுக்குக் கொண்டு வரப்படுதல்; பழங்குடி மக்களின் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கான தற்போதுள்ள 3 சத இட ஒதுக்கீட்டைச் சரியாகச் செயல்படுத்துதல்; கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்புத் திட்டங்கள்; அகக்ககட்டுமானங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை இல்லாத வகையில் அமைக்கப்படுதல்; மாற்றுத் திரனாளிகளுக்கான எல்லா நிறுவனங்களிலும் அவர்கள் போதிய அளவில் இடம் பெறுமாறு செய்தல்;

ஈழம் :________________________________________

தொழிலாளர்; மருத்துவர், ஆசிரியர், ஓட்டுனர் முதலான ஆண்டு முழுவதும் தேவைப்படும் பணிகளில் ஒப்பந்தமுறையை அனுமதிக்கமாட்டோம்; அப்படி உள்ளவர்கள் நிரந்தரமாக்கப்படுவர்; ஆனால் சில காலமே தேவைப்படும் பணிகளில் ஒப்பந்த முறை தவிர்க்க இயலாது; அப்படியான ஒப்பந்தப்பணிகளில் அவர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கும் இடையிலான ஊதியம், பணி நிலைமைகள் உட்பட எல்லா வேறுபாடுகளும் ஒழிக்கப்படும்; அமைப்புசாராத் தொழிலாளிகளுக்கு கூலி, பணி நேரம் முதலானவை குறித்த நெறிமுறைகள் உருவாக்கப்படும்; இவர்கள் மீதான காவல்துறைத் தொந்தரவுகள் ஒழிக்கப்படும்; ஓய்வூதியம் முதலான குறைந்த பட்ச சமூகப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்படும்;

மீனவர் : ________________________________________________

தேர்தல் சீர்திருத்தம்: தற்போதுள்ள தேர்தல் முறையுடன் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் இணைத்தல்; போட்டியிடும் வயதை 25 லிருந்து 21 ஆகக் குறைத்தல்; 9வேட்பாளர்களை) ‘மறுக்கும் உரிமை’, (தேர்ந்தெடுக்கப்பட்டோரை) ‘திருப்பி அழைக்கும் உரிமை’ ஆகியவற்ரைக் கொணர்தல்; தேர்தல் ஆணையரை அரசு நியமிக்காமல் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியல் சட்டக் குழு நியமித்தல், தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரம்; அரசியல் கட்சிகளுக்குக் கருப்புப் பணம் செல்லுதலைக் கட்டுப்படுத்தும் பொறியமைவுகளை வலிமையாக்குதல்தரசியல் கடிகளைத் தகவல் உரிமைச் சட்டம் மற்றும் சி.ஏ.ஜி யின் தணிக்கை ஆகியவற்றுக்கு உட்படுத்தல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: ___________________________________________

பிற: ‘அஃப்சா’ சட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்கு உட்பட்டதாகவும், மனிதாய முகங் கொண்டதாகவும் மாற்றுதல்; பெண்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகள் தண்டனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளதை முடிவுக்குக் கொணர்தல்; காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது தவிர எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் பொறுமை காட்டாமை; காஷ்மீர்ப் பிரசினையில் இராணுவ நடவடிக்கைகளைக் குறுகிய காலத் திட்டமாகவும், அதிகாரப் பரவல் என்கிற வகையில் காஷ்மீருக்கு அதிகாரங்களை அளித்து அந்த அடிப்படையில் அமைதிக்கு வழி வகுத்தலை நீண்டகாலத் திட்டமாகவும் கொள்ளல்; மாஓயிஸ்ட் பிரச்சினையைப் பொருத்தமட்டில் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துதல் ஒரு பக்கமாகவும், பேச்சு வார்த்தைகள், வளர்ச்சி நடவடிக்கைகள் என்பன இன்னொரு பக்கமாகவும் அமைதல்;

முப்படைகளையும் ஒருங்கிணைத்து வளர்த்தல்; பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் எடுப்பதில் இராணுவ அதிகாரிகளுக்கு உரிய பங்களித்தல்; ஆயுத பேரங்களை வெளிப்படையாக ஆக்குதல்; ஆயுதங்களின் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்;

கால்நடைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில் ‘இந்திய கால்நடை நல வாரியம்’; அதிகாரப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்; விளையாட்டில் ஊழல்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் இடமில்லாமல் செய்தல்; 2011க்குப் பின் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் யாவும் புதிய ‘நிலம் கையகப்படுத்தப்படும் சட்ட’த்தின் கீழ் கொண்டு வரப்படும்; இச்சட்டத்தில் ‘பொதுப் பயன்பாட்டிற்காக” எனும் சொல் இறுக்கமாக வரையறுக்கப்படும்; கிராம சபைகளின் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்தல் இயலாது;

சிறப்பு அம்சங்கள்; ஊழலுக்குக் காரணமான சிக்கலான அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்தி அதிகாரங்களைக் கிராம சபைகள் மற்றும் மொகல்லா சபைகளுக்குக் கொண்டு செல்லும் ‘சுயராஜ்யச் சட்டத்தை’ நிறைவேற்றல்; தம் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களைச் சுதந்திரமாக நிறைவேற்ற ஏதுவாக சுதந்திரமாகச் செலவிடக் கூடிய நிதியை ஒவ்வொரு கிராம/ மொகல்லா சபைகளுக்கும் அளித்தல்; அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசுப் பணிகளுக்கான நிதி வினியோகத்தை மொகல்லா அவைகள் அனுமதித்தால் மட்டுமே அளித்தல்; பிறப்பு, இறப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை அவ்வவ் கிராம அவைகளே அளித்தல்; மதுபானக் கடைகளை திறக்கிற அல்லது மூடுகிற அதிகாரத்தை கிராம அவைகளுக்கு அளித்தல்; இந்த முடிவெடுக்கும்போது குறைந்த பட்சம் 50 சதப் பெண் உறுப்பினர்கள் அந்த அவையில் இருத்தல் அவசியம்; உள்ளூர்ப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்களைக் கண்காணிக்கும் உரிமைகள் கிராம சபைகளுக்கு உண்டு; உதவித் தொகைகள் முதலான அரசுத் திட்டங்களின் பயனாளிகளைத் தேர்வு செய்யும் உரிமையும் கிராம சபைகளுக்கே உண்டு; இத்தகைய முடிவுகளை கிராம சபைகள் எடுக்கும்போது ஒவ்வொரு விளிம்பு நிலைப் பிரிவினரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கு பெறுதலைக் கட்டாயமாக்குதல்; சில குறிப்பிட்ட துறைகளில் சட்டங்களை இயற்றும் போது கிராம அவைகளின் ஒப்புதல்களைக் காலப்போக்கில் கட்டாயமாக்குதல்;

சிறிய வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்க்கும் வகையில் ‘கிராம நியாயாலயங்களை’ உருவாக்குதல்; நீதிபதிகள் நியமனத்திற்கான ஆணையம் மற்றும் நீதித்துறைக்கான ஜன் லோக் பால் முதலியன உருவாக்கல்; எல்லா மட்டங்களிலும் விரைவு நீதிமன்றங்கள்; ஐந்தாண்டுகளில் நீதி மன்றங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கல்;

காவல்துறை சீர்திருத்தங்களை அமுலாக்கல்; காவல் நிலையங்களை கிராம அவைகளுக்குப் பொறுப்பாக்கல்; சட்ட ஒழுங்குப் பராமரிப்பையும், புலன் விசாரணையையும் தனித்தனித் துறைகளாக்குதல்; போலீஸ் காவல் என்பதை ஒழித்து, நீதித்துறைக் காவலை மட்டுமே அனுமதித்தல்; காவல்துறை நடவடிக்கைகளை வெளிப்படையாக்கும் முகமாக காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்தல்; காவலர்களின் வேலை நேரத்தை 8 மணியாகக் குறைத்து அவர்களின் நலன்களை மேம்படுத்தல்; வி,ஐ.பி பாதுகாப்பிற்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதைக் குறைத்தல்;

கூட்டணி :

ஆதரவு அமைப்புகள்:

9. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போராட்டக் களமாக மாறியுள்ளது. மதச்சார்பர்ற சக்திகள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து கிடக்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதும் சமூக நீதியைப் பாதுகாத்து விரிவுபடுத்துவதும் நம் கடமை ஆகிறது இக்கடமையை உணர்ந்து 9.வி,சி,க, தி.மு,க தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இணைந்து இத் தேர்தலைச் சந்திக்கிறது. மதச் சார்பின்மையைப் பாதுகாப்பது சமூக நீதிக் கருத்தோடு பிணைந்துள்ளது. மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினால் மதச்சார்பின்மையை மட்டுமின்றி சமூக நீதியையும் சவக்குழிக்கு அனுப்பி விடுவார்கள். 1999 தேர்தலில் வாஜ்பாயி தலைமையில் போட்டியிட்ட பா.ஜ.க, சில இந்துத்துவக் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதாக அறிவித்தது. 2002 மத வன்முறையை ஊக்கப்படுத்தியவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோடியை முன்நிறுத்தி இன்றைய தேர்தலைப் பா.ஜ.க சந்திப்பதற்குப் பின்னணியாக வன்முறை அமைப்பு எனப் பலமுறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது. இவ்வாறு இந்தத் தேர்தல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வகுப்புவாதத்திற்கும் சனநாயகத்திற்குமான போட்டியாக அமைந்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார் ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் அரசியல் பயணத்தைத் தொடரும் வி.சி.க கொள்கை வழி நின்று இத் தேர்தலை எதிர்கொள்கிறது. மதச்சார்பின்மை, சமூகநீதி, தமிழர் நலன்கள் ஆகியவற்றை முன்நிறுத்தி வி.சி.க இத்தேர்தலைச் சந்திக்கிறது.

விவசாயம் : விவசாயத் துறைக்குப் புத்துயிர் அளித்தல்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகச் சாகுபடி நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்துதல்; உலகமயம் மற்றும் தனியார் மயம் ஆகியவற்றின் விளைவாக மண்ணும் . சுற்றுச் சூழலும் பாழ்படுவதற்கு எதிர்ப்பாக பிற முற்போக்கு சக்திகளுடன் இணைந்து போராடுதல்; பாரம்பரிய விதை வகைகளையும் கால்நடைகளையும் காப்பாற்றுதல்;

தொழில் / பொருளாதாரம் : வல்லரசுச் சார்புள்ள பொருளாதாரக் கொள்கையைக் கைவிட்டு தற்சார்புள்ள பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றல்;

வணிகம் : ———————————————————————————-

அயலுறவு : அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுதல்; அமெரிக்க ஆதரவு நிலையைக் கைவிட்டு தன்னாளுமையுள்ள அயலுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்

ஊழல் : ________________________________________________________

கல்வி, மருத்துவம் : கல்வி தொடர்பான பல்வேறு குழுக்களின் பரிந்துறைகளையும் கவனத்தில் கொண்டு இன்றைய காலத்திற்குகந்த வகையில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளல்; கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொணர்தல்; கல்விக்கென அந்தந்த மாநிலங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் வரியை அந்தந்த மாநிலங்களிலேயே செலவிடல்; தேசிய அளவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அமைத்து அதை பொதுத்துறை காப்பீட்டு நிருவனங்கள் மூலம் செயல்படுத்துதல்; அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்தல்;

சமூக நீதி : தலித் மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றல்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளித்தல்; மாநிலங்கள் அவையிலும், சட்ட மேலவைகளிலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு கோரல்; நீதித் துறையில் இட ஒதுக்கீடு, மதம்மாறிய தலித்களுக்கும் இட ஒதுக்கீடு அளைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கோரல், தலித் கிறிஸ்தவர்களைப் பட்டியல் பிரிவில் இணைத்தல்; ஒப்பந்தப்பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கல்; இழி தொழில்களை முற்றாக ஒழிப்பது, சாதிப்பெயர்கள் மற்றும் அடையாளங்களைத் தரிப்பது ஆகியவற்றைத் தடை செய்ய வற்புறுத்துவது; அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பொதுச் சொத்தில் பங்கு; பட்டியல் ஆதியினருக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ரும் அமைப்புகள் வங்கிகளை நம்பியிராமல் சுய நிதி அதிகாரம் உடையவையாக மாற்றப்படுதல்; அடிப்படை வசதிகளற்ற தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக ரூ 2 லட்சம் பெறுமானமுள்ள அடிப்படை வசதிகள் உள்ள பாதுகாப்பான வீடுகளைக் கட்டித் தருதல்; வீடற்றவர்கள் இல்லை என்கிற நிலையை உருவாக்குதல்; விவசாயக் கூலிகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பட்டியல் பிரிவினர் பயன்பெறும் வகையில் புதிய நிலப்பகிர்வுச் சட்டம் கொணர்ர்தல்; தரிசு மற்றும் உபரி நிலங்களை கூலிகளாக உள்ள பட்டியல் பிரிவினர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்குத் தலா 5 ஏக்கர் எனப் பிரித்தளித்தல்; பஞ்சமி நிலத்தை மீட்பது; ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர் அனைவருக்கும் தொழிற் கல்வியை இலவசமாக்கல்; தனியார் கல்லூரியில் பயில்வோருக்கு வட்டியில்லாக் கடன் அளித்தல்; மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தலித்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளைக் களைதல்; பழங்குடியினர் சாதிச்சான்றுகள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்குதல்; மலைவாழ் பழங்குடியினர் தம் வாழிடங்களிலிருந்து அகற்றப்படுதலை எதிர்த்தல்;

சிறுபான்மையினர் : இராமர் கோவில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை பா.ஜ.க கையில் எடுத்துள்ள நிலையில் சிறுபான்மையோரின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தல். இராணுவம், துணை இராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றில் சிறுபான்மையினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் இடம் பெறுவதற்குப் பாடுபடல்; கல்வித் திட்டங்களில் சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு மற்ரும் சிறப்புக்கூறுத் திட்டங்கள் மூலம் அவர்களின் கல்வி நிலையை, குறிப்பாகப் பெண்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல்; வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்குச் சட்ட வடிவம் கொடுத்தல்;

பெண்கள் : கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலும் 50 சத ஒதுக்கீடு அளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களிடமே கிராமப்புற பொருளாதார மேலாண்மையைக் கையாளும் உரிமையை அளித்தல்; கருவிலுள்ள சிசுக்களுக்குப் பாலியல் பரிசோதனை செய்வதைக் கடும் தண்டனைக்குரியதாக்குதல்; வாடகைத் தாய்மார் முறையைத் தடை செய்தல்; குழந்தைத் திருமண முறையை ஒழிக்கும் வகையில் கடும் சட்டத் திருத்தம் கொணர்தல்; கோவில்களில் அனைத்துச் சாதியினரும் மட்டுமல்ல பெண்களும் அர்ச்சகராவதற்குரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல்;

நலத் திட்டங்கள் : உயர் கல்வி பயில இயலாத இளைஞர்களுகுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்; தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை ஒரு நபருக்கு ஆண்டுக்கு 150 நாள் என உயர்த்துதல்; அரவானியருக்குத் தமிழகத்தில் கிடைக்கும் உரிமைகள் பிற மாநிலங்களிலும் கிடைக்க வழி செய்தல்;

ஈழம் : கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்பது; ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்குத் தமிழ் ஈழமே தீர்வு; புலம் பெயர்ந்ட தமிழர்கள் அகதிகள் முகாம்களில் வாடுகின்றனர். திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற அகதிகளுக்கன ஐ.நா உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டும்;.

தொழிலாளர்; ______________________________________

மீனவர் :சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரச்சினையை சர்வ தேச நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று உரிய இழப்பீடுகளைப் பெற்றுத் தருதல்;;

தேர்தல் சீர்திருத்தம் : _____________________________________________

தமிழ் / தமிழகம்: மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் 356 ம் பிரிவு நீக்கம்; வெளியுறவு, பாதுகாப்பு முதலான துறைகளைத் தவிர பிற அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே வழங்கல்; நிதி ஒதுக்கீடுகளில் மாநில உரிமைகளைப் பாதுகாத்தல்; தமிழகம் இழந்த பகுதிகளை மீட்கும் வகையில் மாநில எல்லைகளை மறுவரையறை செய்தல்; அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குரிய நதிநீர் உரிமைகளைப் பெறுதல்; இராணுவங்களில் தேசிய இன அடிப்படையில் தமிழகத்திற்குரிய அளவில் பங்களித்தல்; அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குதல்; உயர்நீதிமன்ற வழக்காடு மொழிகளாகவும் ஆக்குதல்; இந்திய அரசு மற்றும் தனியார்துறை வேலைகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துதல்; வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களின் நலம் பேணுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனியே அமைச்சகம் உருவாக்கப்படுதல்;

சேது சமுத்திரத் திட்டம்: மத வெறிக் காரணங்களை முன்னிட்டு இத் திட்ட நிறைவேற்றம் தடுக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது; சுற்றுச் சூழலுக்குத் தீங்கு நேரா வண்ணம் இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றப் பாடுபடல்;

பிற: ________________________________________________________

சிறப்பு அம்சங்கள்; ______________________________________________

கூட்டணி : தி.மு.க. ம.ம.க. புதிய தமிழகம்,

ஆதரவு அமைப்புகள்:

10. பாட்டாளி மக்கள் கட்சி

2014 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது; அ.தி.மு.க, தி.மு.க அல்லாத மாற்று அணி வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; பா.ம.க அங்கம் வகிக்கும் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் திரு.நரேந்திரமோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்; இதன் மூலம் இந்திய மக்களும் தமிழ்நாட்டு மக்களும் மிக் சிறந்த நலன்களும் அடைவார்கள். எல்லோரும் எல்லா அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டு வளமாக வாழும் நிலை ஏற்படும் என பா.ம.க நம்புகிறது. பா.ம. கவையும் கூட்டணிக் கட்சிகளையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு தமிழக மக்களை பா.ம.க கேட்டுக் கொள்கிறது.

விவசாயம் : இந்திய ஆறுகள் தேசியமயமாக்கப் படுதலை வற்புறுத்தல்;விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் நேரடி ஊதியம் வழங்கல், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த ‘உழவர் வருவாய்க் குழு’ ஒன்றை அமைத்தல்; 50 சத லாபம் கிடைக்குமாறு விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்தல்; வேளாண்மை சார்ந்தோருக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீடு வழங்கள்; முதலான கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்; மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி மறுத்தல்; மரபணுப் பயிர் விளைப்புச் சோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய வலியுறுத்தல்; மரபணு மாற்றம் இல்லாத பயிர்களுக்கு முத்திரை இடும் முறையைக் கொணர்தல்; நிலம், நீர், காற்று, மாசுபடாமல் காப்பாற்றப்படுவதற்கேற்ற வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலை உருவாக்குதல்;

தொழில் / பொருளாதாரம் : சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக எண்ண்னிக்கையில் உருவாக்கப்படுதல்; அரசும் தொழில்துறையும் ஒன்றிணைந்து வேலைவாய்ப்புகளை அத்ஹிகரிக்கும் வகையில் தொழிற் திட்டங்களை உருவாக்குதல்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் கூடாது; நலிவடந்த பொதுத்டுறை நிறுவனங்களைச் சீரமைத்தல்; இந்தியத் தொழில் துறையின் போட்டித் திறனை உயர்த்துதல்;

வணிகம் : சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்;

அயலுறவு : ——————————————————————————-

ஊழல் : ஓட்டு விற்பனை என்பது அரசியலை பிடித்த புற்று நோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் ‘அனைத்து ஊழல்களின் தாய்’ என்ற அழைக்கப்படுகிறது. கருப்புப் பணத்தையும், பெரும் ஊழல்களையும், இயற்கை வளக் கொள்ளையையும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதை அகற்ற பாடுபடுவோம்;

கல்வி, மருத்துவம் : பள்ளிக் கல்வியை முழுக்க முழுக்க அரசுத் துறையினதாக ஆக்குதல்; தமிழகத்தில் சமச்சீர் கல்வி எனப்படும் பொதுப்பள்ளி முறையை முழுவீச்சில், முழு அளவில் செயல்படுத்தப்பட பா.ம.க. பாடுபடும்: பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்; ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்; மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வுகள் நடத்த முயற்சிக்கப்பட்டால், அதனை பா.ம.க. எதிர்க்கும். எந்த ஒரு வடிவத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்; அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்; மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்; உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம். மொத்த தேசிய உற்பத்தியில் 3 முதல் 5 சதம் வரை நல்வாழ்வுக்காகச் செலவிடல்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல்; தொற்றாத நோய்கள் தடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்;

சமூக நீதி : தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு; சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இடஒதுக்கீடு விகிதாசாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கருத்தை பா.ம.க. அடியோடு எதிர்க்கும்; அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்;கல்வி, வேலை, தொழில் தொடங்க உதவி, அரசின் ஒப்பந்தங்களில் பங்கு உள்ளிட்ட அனைத்திலும் ஒவ்வொரு சாதியினருக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும்;பின்தங்கியவர்களில் முன்னேறியவர்கள் என்ற கருத்தை நீக்க வேண்டும்; சாதி மேம்பாட்டுக் குறியீடு எனும் அளவீட்டு முறையை ஏற்படுத்துதல்; IIT, AIMS போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான தடைகளை நீக்குதல்; பட்டியல் பிரிவினருக்கான சிறப்புக் கூறுத் திட்டம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்தல்;

சிறுபான்மையினர் : இந்தியாவின் பன்முகத் தனமையைப் பாதுகாத்தல்; மதம், இனம்,மொழி என எந்த அடிப்படையிலும் யாரும் பாதிக்கப்படாதிருத்தலை உறுதி செய்தல்; பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வ ழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பது பா.ம.க.வின் நிலைப்பாடாகும். ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்; மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்;

பெண்கள் : பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடியோடு ஒழித்து அவர்களின் பாததுகாப்பை உறுதி செய்தல்; பள்ளி கல்லூரி எல்லும் மாணவியர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாத்தல்;

நலத் திட்டங்கள் : வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்: தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும். மகளிருக்கு 20 விழுக்காடும், மூத்தக் குடிமக்களுக்கு 25 விழுக்காடும் கூடுதல் வருமானவரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்; தனி நபர்களின் சேமிப்பு மீது ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும்; ஆயுள் காப்பீடு சேவை வரி ரத்து செய்யப்படும்; மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நாட்களை அதிகரித்தல்; ஐ.நா மாற்றுத் திறனாளிகளுகான உடன்படிக்கை விதிகள் இந்தியாவில் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடல்; கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாக்கப்பட்ட குடி நீர், திறந்த வெளிக் கழிப்பிடங்களை நீக்குதல் முதலியன;

ஈழம் : இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்; இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்குழு இந்தியாவில் செயல்பட அனுமதி அளித்தல்; விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; கச்சத்தீவை மீட்க வ்

தொழிலாளர்; திறமை மிக்க தொழிலாளிகளை உருவாக்கும் வகையில் பயிற்சித் திட்டங்களை உருவாகுதல்; அமைப்பு சாராத் தொழிலாளரின் ஊதியஹத்தை அதிகமாக்குதல், கடன்வசதி அளித்தல், சிறு, குறு தொழில்கள் தொடங்குதலை எளிதாக்குதல் முதலியன; தொழிலாளர் நலன் பெறும் வகையில் அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் சீரமைத்தல்; ஓய்வூதிய நலன்கள் முதலியவற்றை உள்ளடக்குதல்; தமிழர்கள் அதிக அளவில் பணியாறும் வெளி நாட்டுத் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகளை நியமித்தல்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்;

மீனவர் : ————————————————————————————

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு ஆதரவு; வெளிநாட்டில் வேலை செய்வோர் தூதரகங்களில் வாக்களிக்க வசதி செய்தல்: வாக்குகள் விற்கப்படுதலை முடிவுக்குக் கொணர்தல்;

தமிழ் / தமிழகம்: உயர் நீதி மன்றம் மற்றும் போட்டித் தேர்வுகளில் தமிழ்; இந்திய அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்; விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும்: அதேபோல ‘கெயில் இந்தியா’ திட்டத்தை ரத்து செய்தல்; அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்; தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்; கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் உருவாக்கப்படும் தனியார் அனல் மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த பாடுபடல்; தற்போது தமிழகத்தில் நிலுவையிலுல்ள தொடர் வண்டித் திட்டங்கள அனைத்தையும் நிறைவேற்றுதல்; மின் திட்டங்களை விரைந்து முடித்தல்; மத்திய அரசு தமிழக அரசுடன் சுமுகமான உஅவைப் பேண வேண்டும்; அண்டை மாநிலங்கள் வழியாக வரும் நதி நீர் உரிமைகளைப் பாதுகாத்தல்; காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக நியமிக்க வற்புறுத்தல்; புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி அளித்தல்;

சேது சமுத்திரத் திட்டம்: ——————————————————————-

சிறப்பு அம்சங்கள்; வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் நிரபராதிகள் அதிகம் பாதிக்கப்படுவதால் அதில் திருத்தம் கொண்டு வருவோம்; தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் முதலிய தடுப்புக் காவல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தலை அடியோடு ஒழிக்கப் பாடுபடுவோம்.குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்; புதிய மாற்றங்களுக்கு ஏற்பப் புதிய அரசியல் சட்டம் உருவாக்குதல்; சிறிய மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு ஆதரவு;;

பிற: அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்; மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்கமாட்டோம்;

சுதந்திரமான நீதிபதிகள் தேர்வாணையத்தை உருவாக்குதல்; புதிய மாற்றங்களுக்கு ஏற்பப் புதிய அரசியல் சட்டம் உருவாக்குதல்;

கூட்டணி : பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

ஆதரவு அமைப்புகள்: பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

11. சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா

இந்தியா தன்னை வடிவமைத்த தலைவர்களின் கனவான ஜனநாயகம் மற்றும் சோஷலிசப் பாதையிலிருந்து விலகி மக்கள் விரோத தாராளமயக் கொள்கையில் சரணடைந்துள்ளது. இது கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வு, வறுமை பட்டினி ஆகியவற்றிற்குக் காரணமாகியுள்ளது. அயலுறவுக் கொள்கையில் இந்தியா இப்போது அமெரிக்கா மற்றும் சியோனிச பயங்கரவாத நாடாகிய இஸ்ரேல் ஆகியவற்றின் பக்கம் சாய்ந்துள்ளது. ஊழல் உச்சம் முதல் அடிமட்டம் வரை வேர்விட்டுள்ளது. வளர்ந்து வரும் பாசிச பயங்கரவாதமும் போலி என்கவுன்டர் கொலைகளும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பல துறைகளில் சிறுபான்மையினர் தலித்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் தலித்களும் பழங்குடி மக்களும் புறக்கணிக்கப்படுதல் தொடர்கிறது. இந்தப் பின்னணியில் 2009ல் உருவான எஸ்டிபிஐ கட்சி மக்களை பசியிலிருந்தும் பாசிச மற்றும் அரச பயங்கரவாதம் குறித்த பயத்திலிருந்தும் விடுதலை செய்து சிறுபான்மையினர், தலித் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களை ஆற்றல் படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கவும், தேர்தல் முறையை மாற்றவும், சமூகத்தை ஜனநாயகப்படுத்தி உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ள எஸ்டிபிஐ கட்சியை ஆதரிப்பீர்.

விவசாயம் : விவசாய மானியங்கள் மற்றும் வட்டியில்லாக் கடன்களைத் தொடர்தல்; விளைபொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்; இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை; விவசாயத்திற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை; நில உச்சவரம்பு மற்றும் குத்தகை நிலங்கள் தொடர்பான நிர்வாகச் சீர்திருத்தங்கள்;

தொழில் / பொருளாதாரம் : பெரு நிறுவனம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்பது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முடிவுக்குக் கொண்டு வருவது; உள் கட்டமைப்பு வளர்ச்சிகளில் தனியார் துறையின் பங்கைக் குறைத்தல்; அரசு நிலங்களைக் கையகப்படுத்துவதில் வரையறை; இரு தரப்பிலும் சம்மதமில்லாமல் மக்களை அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்குத் தடை; வட்டியில்லாத, சுற்றுச்சூழல் கெடாத புதிய பொருளாதாரத்தை உருவாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துதலில் தலைகீழ் மாற்றங்கள்: சிறு மற்றும் பாரம்பரியக் கைவினைத் தொழில்களுக்குப் பாதுகாப்பு; சிறு மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் மாற்று மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை;

வணிகம் : பதுக்கலைத் தடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்தல்; அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயம் ஒழுங்கு படுத்தப்படல்; எண்ணை நிறுவனங்களுகு வழங்கப்பட்டுள்ள பெட்ரோலியம் பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமையைத் திரும்பப் பெற்று அரசே விலை நிர்ணயம் செய்தல்;

அயலுறவு : அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்குப் புத்துயிர்ப்பு; அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தல்; தேசிய விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு; இந்தியாவை நிலைகுலைய வைக்கும் சக்திகளை விரட்டும் வகையில் அயலுறவுக் கொள்கையை வகுப்பது;

ஊழல் : கடும் சட்டங்களின் மூலம் ஊழ்ல்களை ஒழித்தல். தேசிய அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும் லோக்பால் கொணர்தல்; பெருநிறுவனங்கள் அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் ஊழல்களையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வருதல்;

கல்வி, மருத்துவம் : அரசு கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தல்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தல்; அரசுப் பள்ளிகளின் தரம் காக்கும் நோக்கில் அவற்றின் மீது சமூகக் கண்காணிப்பிற்கு வழி வகுத்தல்; 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதிப் படுத்துதல்; பாடத் திட்டங்களை வகுப்புவாத மயப் படுத்தலிலிருந்து விடுவித்தல்; ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக அனைத்துக் கிராமங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தல்; தனியார் மருத்துவ மனைகளின் சுரண்டலைக் கட்டுப்படுத்தல்; அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வின் மீது கட்டுப்பாடு; அனைவருக்கும் கழிப்பறை வசதி;

சமூக நீதி : தனியார் துறையில் பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்; இராணுவம், உளவுத்துறை, காவல்துறை, நீதித்துறை உட்பட அனைத்திலும் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு மக்கள்தொகை வீதப்படி இட ஒதுக்கீடு அளித்தல்; இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களை நீதிமன்றத் தலையீட்டிலிருந்து பாதுகாத்தல்; கிரீமி லேயர் முறையை நீக்குதல்; அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் சமவாய்ப்பு ஆணையத்தை உருவாக்குதல்; பஞ்சமி நில மீட்பு;

சிறுபான்மையினர் : மதக் கலவரத் தடுப்பு மசோதாவை இன்னும் சிறப்பான முறையில் பலனளிக்கும் வகையில் திருத்திச் சட்டமாக்குதல்; உருது மொழிப் பள்ளிகளை ஊக்குவித்தல்; காவல்துறையில் சிறுபான்மைச் சமூகத்தினரின் பங்களிப்பை உறுதி செய்தல்; பட்டியல் பிரிவினருக்கான சிறப்பு நியமன முறையை எல்லாச் சமூகப் பிரிவினருக்கும் விரிவாக்கல்; சிறுபான்மைச் சமூகங்களுக்கு 15 சதம், அதில் 10 சதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரை மற்றும் பிற்பட்டோருக்கான 27 சத ஒதுக்கீட்டில் 8.4 சத ஒதுக்கீட்டை அளிக்கும் மிஸ்ரா ஆணைய அறிக்கை ஆகியவற்றை நிறைவேற்றல்; மதம் மாறிய பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் குடியரசுத் தலைவரின் ஆணையில் திருத்தம் கொணர்தல்; அரசு ஆதரவுடன் இயங்கும் தனியார் நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்; சச்சார் மற்றும் மிஸ்ரா குழு அறிக்கைகளை நடைமுறைப்படுத்தல்; பல்துறை மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக தொகுதிகளைத் தேர்வு செய்தல்; ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்பது மற்றும் எதிர்கால ஆக்ரமிப்புகளைத் தடுப்பது; ஹஜ் சேவையில் தனியார் பங்களிப்பைக் குறைத்து, அரசு பங்களிப்பில் குறைந்த செலவில் அதிகம் பேர் பயன் பெற வாய்ப்பளிப்பது; இதுபோன்ற சேவையைப் பிற சிறுபான்மை மதத்தினருக்கும் அளிப்பது; உருது மற்றும் இதர சிறுபான்மையினர் மொழியை ஊக்குவித்தல்; அலிகர் போல இதர சிறுபான்மையோர் கல்வி நிலையங்களுக்கும் சிறுபான்மை நிலை வழங்குதல்;

பெண்கள் : நாடாளுமன்றம்/ சட்டமன்றம் ஆகியவற்றில் பட்டியல் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனப் பெண்களுக்குப் பயன்படும் வகையில் ஒதுக்கீடு; பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல் செய்தல்; ஜே.எஸ் வர்மா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றல்; பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவித்தலும் அதிகரித்தலும்; குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்;

நலத் திட்டங்கள் : புதிய தேசியத் தண்ணீர்க் கொள்கையை உருவாக்குதல்; வறுமைக்கோட்டிற்குப் புதிய வரையறை செய்து அதனடிப்படையில் பொது விநியோக முறையைச் சிறப்புடன் நிறைவேற்றல்; நகர்ப்புறச் சேரி மக்களுக்குக் காலியாகக் கிடக்கும் உபரி நிலங்களைப் பிரித்தளித்தல்; மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு விடுதியுடன் கூடிய கல்வி நிறுவனங்களை அமைத்தல்;

ஈழம் : ஈழப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் பொது வாக்கெடுப்பு மற்றும் இனப் படுகொலை தொடர்பான பன்னாட்டு விசாரணை; கச்சத்தீவை மீட்பது;

தொழிலாளர்: ______________________________________________

மீனவர் : இலங்கை இராணுவத் தாக்குதலுக்கு முடிவு கட்டுதல்; பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குதல்;

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துதல்; வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வசதிகள் செய்தல்;

தமிழ் / தமிழகம் : உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கல்; மணற் கொள்ளையைத் தடுக்கக் கடும் சட்டம் இயற்றல்; தாமிரபரணி நதியைப் பாதுகாத்தல்; வட சென்னையை மேம்படுத்தல் மற்றும் அங்கு மூன்றாம் முனையம் அமைத்தல்; தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றல்; காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு முதலான நதி நீர்ப்பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடுதல்; தமிழகத்தைப் பாதிக்கும் அணு உலைத் திட்டங்கள், கெயில் குழாய்ப் பதிப்பு, காவிரி டெல்டாப் பகுதிகளில் மீதேன் வாயு எடுத்தல் முதலான திட்டங்களை எதிர்த்தல்;

சேது சமுத்திரத் திட்டம் : __________________________________________

பிற: அணு மின் திட்டங்களுக்குப் பதிலாக மாற்று மின் திட்டம்; சிறு மாநிலங்களுக்கு ஆதரவு; மாநில மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை உருவாக்குதல்; மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி கூட்டாட்சியை வலிமைப்படுத்தும் வகையில் மத்திய மாநில உறவுகளை ஆராய்தல்; வழக்குகளை விரைவாக முடித்தல்; இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறல்; பூரண மது ஒழிப்பு; 10 ஆண்டுகள் சிறை முடித்த அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்தல்; UAPA மற்றும் AFPSA சட்டங்களைத் திரும்பப் பெறுதல்; தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுதலை ஒழித்தல்;

சிறப்பு அம்சங்கள் : தமிழக அரசின் கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை நீக்குதல்; தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள 3.5 சத இட ஒதுக்கீட்டை 7 சதமாக்குதல்; உளவு நிறுவனங்களில் சகல பிரிவினருக்கும் வாய்ப்பளித்தல். உளவுப் பிரிவினரின் மதச்சார்புப் போக்கையும் ஆளும் கட்சியின் விருப்புக்குத் தகுந்தபடி ஆடும் தன்மையையும் மாற்றி அமைத்தல்; 1992க்குப் பின் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தல்; தீவிரவாதக் குர்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுவோருக்கு இழைப்பீடு மற்றும் அரசு வேலைகள் அளித்தல்; பொய் வழக்குகளுக்குக் காரணமான அதிகாரிகளின் வேலை பறிப்பு, காவல் நிலையச் சித்திரவதைகள் மற்றும் மரணங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள்; போலி என்கவுண்டர்களைச் செய்தவர்கள் வேலை பறிக்கப்படுதலும் சிறப்புக் காவல் குழுக்களைக் கலைத்தலும்; தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கக் குறிப்பிட்ட கால கெடுவுடன் கூடிய விரைவு நீதிமன்றங்களை அமைத்தல்; வழிபாட்டுத் தலங்களைப் பொருத்தமட்டில் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த நிலையைத் தொடர்தல்; வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளில் இந்தியத் தூதரகங்கள் விரைந்து செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளல்; வெளி நாட்டில் பணி புரிந்து திரும்புகிறவர்களுக்குச் சுய வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குதல்;

கூட்டணி :___________________________________________________

12. மனிதநேய மக்கள் கட்சி

(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பான ம.ம.க இம்முறை தி.மு.க கூட்டணியில் மயிலாடுதுறைத் தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் தாங்கள் வென்றால் என்னென்ன செய்வார்கள் என்கிற அடிப்படையில் அமைந்துள்ள இத் தேர்தல் அறிக்கையின் சுருக்கம் வருமாறு)

சிறப்பு அம்சங்கள் : 2009ல் தொடங்கப்பட்ட ம.ம.க சாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுக்காகவும் செயல்படும் கட்சி. தமிழகம் மற்றும் தமிழர் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் இக்கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற வைத்தீர்களானால் அவர் அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தொகுதியிலேயே தங்கிச் செயல்படுவார். நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக அதற்கே செலவிடப்படும்.

திருத்தலங்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான கோரிக்கைகள்: தரங்கம்பாடியை இப்பகுதி வழிபாட்டுத் தலங்களுடன் இணைக்கும் வகையில் இரயில் பாதை அமைத்தல்; திருப்பதி, பெங்களூர் செல்லும் தூரத்தைக் குறைக்கும் வகையில் கும்பகோணம் விருதாசலம் ரயில்பாதை அமைத்தல்; தஞ்சாவூர் – கும்பகோணம் –விக்ரவாண்டி சாலையை நால் வழிச்சாலையாக உயர்த்துதல்; கொள்ளிடம் உபரி நீர் மற்றும் இப்பகுதி மழை நீர் வீணாக வங்கக் கடலில் கலக்காமல் ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டுதல்; புதிய கீழணைப்பாலம் கட்டுதல்;

இப்பகுதியில் உள்ள நவக்கிரகக் கோவில்களுக்கு வரும் புனிதப் பயணிகளுக்கு உரிய வசதிகளைச் செய்தல்; இப்பகுதியில் உள்ள கோவில் தலங்கள் மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை உலகத்தரமானதாக உயர்த்துதல்;

கும்பகோணம் மகாமக விழாவைத் தேசியத் திருவிழாவாக அறிவித்தல்; மகாமகத்திற்கு வரும் புனிதப்பயணிகள் தங்க குறைந்த செல்வில் வசதிகள் செய்தல்;

மருத்துவம்: மயிலாடுதுறை மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல் மற்றும் இதர ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலியவற்றை நவீன வசதியுடயவை ஆக்குதல்; ஜிப்மர் போன்ற மத்திய அரசு மருத்துவ மனை ஒன்றை மயிலாடுதுறையில் ஏற்படுத்துதல்;

தொழில்: பட்டு நெசவுக்கு மத்திய அரசின் முழு வரிவிலக்கு பெறுதல்; நலிவுற்ற விவசாயிகளுக்கான மத்திய அரசுத் திட்டத்தைக் கூட்டுறவுத் துறைக்கு மட்டுமின்றிப் பிற துறைகளுக்கும் விரிவு படுத்துதல்; ஜவுளிப் பூங்கா ஒன்றை இப்பகுதியில் அமைத்தல்; நவீன அரிசி ஆலைகள் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பைப் பெருக்குதல். இப்பகுதி மாணவ மாணவிகள் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் அளவிற்கு இலவசப் பயிற்சிகளை அளித்தல்; பித்தளைக் குத்து விளக்கு தயாரிப்பு, பிரம்புப் பொருட்கள் உற்பத்தி போன்ற இப்பகுதிச் சிறு தொழில்களை ஊக்குவித்தல்;

விவசாயம் : இப்பகுதியில் மீதேன் எரிவாயு எடுத்தலுக்கு எதிர்ப்பு; கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட மூன்று மாதத்திற்குள்மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்கும் இரு விலைகளையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுத்தல்; விவசாய விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்தல்; ஒருங்கிணைந்த டெல்டா பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்படும் வகையில் தொழிற்சாலைகளை அமைத்தல்; இப்பகுதியில் நிலங்களில் உப்புத் தன்மை அடைவதாலும், இப் பகுதியில் 9 அனல் மின் நிலையங்கள் வருவதாலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல்;

மீனவர்: மீனவர்களைப் பழங்குடியினர் என அறிவித்தல்; தனி அமைச்சகம், தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்குதல்; சீர்காழி பழையாறில் மீன் பதனக் கூடம் அமைத்தல்; இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாட்டுக் கடற்கரைகளிலும் சிக்கல் தீர்க்கும் நடுவம் அமைத்தல்; மீனவர் தேசிய சேமிப்புத் திட்டத்தைப் பழைய நிலைக்கு மாற்றுதல்; கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாழ்படுவதைத் தடுத்தல்; பூம்புகார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றல்;

சமூக நீதி: அனைத்திந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு; 27 சத இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத ஒதுக்கீட்டைப் பின்னடைவுப்படி நிறப்புதல்; பட்டியல் பிரிவினர் மருத்துவ, பொறியியல் படிப்புகளைத் தடையின்றித் தொடரும் வகையில் அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுதல்; தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகளைத் தரமாகக் கட்டிக் கொடுத்தல்; தற்போது இதற்கென அரசு வழங்கும் நிதியை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்துதல்;

சிறுபான்மையினர்: ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி சிறுபான்மையினருக்கான தனி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல்; மிஸ்ரா ஆணையப் பரிந்துரைப்படி கிறிஸ்தவ தலித்களுக்கான சலுகைகளைத் தொடர்தல்;

கூட்டணி : பார்க்க: தி.மு.க

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் ஓர் அலசல்

[தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கென 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் அலசி எழுதப்பட்ட அறிக்கை. இதன் முதற் பகுதியில் முக்கிய பிரச்சினைகள் மீது தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது குறித்த அட்டவணை முன்வைக்கப்படுகிறது. இரண்டாம் பகுதி. அறிக்கைகள் குறித்த ஒப்பீட்டு ஆய்வு]

அ. 2014 நாடாளுமன்றத் தேர்தல் : குறிப்பான சில பிரச்சினைகளில் கட்சி அறிக்கைகள் சொல்வதென்ன?

(சி.பி.ஐ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; சி.பி.எம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்; ம.தி.மு.க: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்; தி.மு.க: திராவிட முன்னேற்றக் கழகம்; அ.இ.அ.தி.மு.க: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்; இ.தே.கா: இந்திய தேசிய காங்கிரஸ்; பா.ஜ.க: பாரதிய ஜனதா கட்சி; வி.சி.க: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி; பா.ம.க: பாட்டாளி மக்கள் கட்சி; ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சி; எஸ்.டி.பி.ஐ: சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இன்டியா)

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை : சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஆம் ஆத்மி, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ,

பெண்கள் 33 சத இட ஒதுக்கீடு: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி, வி.சி.க, எஸ்.டி.பி.ஐ (பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இனப் பெண்கள் பயனடையும் வகையில் ஒதுக்கீடு),

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றல்: சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க,

ஈழம் பொது வாக்கெடுப்பு/பன்னாட்டு விசாரணை : தி.மு.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ,

தனி ஈழம்தான் தீர்வு: ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வு/சுயேச்சையான விசாரணை: சி.பி.எம், இ.தே.கா,

கச்சத் தீவு மீட்பு : தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி.பி.ஐ

ஈழப் பிரச்சினையில் மவுனம் : பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தனியார் துறையில் இட ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க,

உள் ஒதுக்கீடு வழங்கல்: சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா (ஆராய ஆணையங்கள் அமைத்தல்),

தலித் கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க (கிறிஸ்தவர்களுக்கு),

ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரை நிறைவேற்றம் : சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

பொது சிவில் சட்டம் நிறைவேற்றல் : பா.ஜ.க,

பொது சிவில் சட்டம் தேவையில்லை : ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க,

அண்டை நாடுகளுடன் அமைதி / பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம்: சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

அண்டை நாடுகளிடம் நம் வலிமையை நிலைநிறுத்தல்: அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

அணு கொள்கை மவுனம் : சி.பி.ஐ, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க,

அணு வல்லமையை அதிகரித்தல்: பா.ஜ.க,

வெளிநாட்டு இறக்குமதி இல்லாத அணு உலை ஆதரவு : சி.பி.எம்; பா.ஜ.க;

அணு உலைகளை மூடல் : ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

தனியார் துறை ஊக்குவிப்பு /அந்நிய முதலீடு : இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

தமிழ் மொழி ஆட்சி மற்றும் உயர்நீதி மன்ற மொழி : சி.பி.ஐ, தி.மு.க. அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய் (உயர் நீதிமன்ற மொழி),

மீனவர் பிரச்சினையில் மவுனம் : ஆம் ஆத்மி, பா.ம.க, இ.தே.கா,

ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு: சி.பி.ஐ, சி.பி.எம், ஆம் ஆத்மி,

இலக்குகளுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி : இ.தே.கா,

வெளிநாட்டு மூலதனம் மற்றும் பெரு முதலாளியம் சாராத பொருளாதார வளர்ச்சி : சி.பி.ஐ, சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு : சி.பி.எம்,

புதிய ஓய்வூதியத் திட்ட நிறைவேற்றம்: ம.தி.மு.க,

மதவாத எதிர்ப்புக்கு அழுத்தம்: சி.பி.அய், சி.பி.எம், வி.சி.க, எஸ்.டி,பி,அய்,

மதவாத எதிர்ப்பிற்கு அதிக முக்கியத்துவமின்மை: ம.தி.மு.க, பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க,

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

தமிழகம் சார்ந்த குறிப்பான திட்டங்களின்மை : சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

விவசாய விளை பொருட்களுக்கு 50 சத லாபத்துடன் விலை நிர்ணயம்: சி.பி.எம், பா.ஜ.க, ஆம் ஆத்மி, பா.ம.க,

விவசாய விளை பொருட்களுக்கு விலை அதிகரிப்பு : இ.தே.கா, தி.மு.க, எஸ்.டி,பி,அய் (குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்),

விவசாயம் அரசே நேரடி கொள்முதல்: சி.பி.ஐ, தி.மு.க,

நதி நீர் இணைப்பு : சி.பி.ஐ, தி.மு.க, அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க (சாத்தியமான இடங்களில்),

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு : தி.மு.க, பா.ம.க,

லோக் ஆயுக்தா /லோக் பால் / ஊழல் ஒழிப்புச் சட்டம் : சி.பி.ஐ, இ.தே.கா, ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

கருப்புப்பண மீட்பு : சி.பி.அய், சி.பி.எம், அ..இ.அ.தி.மு.க, இ.தே.கா, பா.ஜ.க, ஆம் ஆத்மி,

ஏழாவது ஊதியக் குழு நிறைவேற்றம் : அ..இ.அ.தி.மு.க, ம.தி.மு.க,

மரண தண்டனை ரத்து : தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.எம்,

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்தல் : எஸ்.டி.பி.ஐ,

பூரண மது விலக்கு: ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி,பி,அய்,

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றல்/வலிமைப்படுத்தல் : சி.பி.எம், இ.தே.கா,

வன்கொடுமைச் சட்டத்தை நீர்க்கச் செய்தல்: பா.ம.க,

புதுச்சேரியைத் தனி மாநிலமாக்கல் : ம.தி.மு.க, தி.மு.க, பா,ம.க,

சிறுபான்மையினர் மீது பொய்வழக்குகளுக்கு இழப்பீடு/ அதிகாரிகளுக்கு தண்டனை : சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி,பி,அய்,

மதக்கலவர தடுப்பு மசோதா நிறைவேற்றம்: சி.பி.ஐ, சி.பி.எம், இ.தே.கா, வி.சி.க,

புலம் பெயர் மக்கள் பாதுகாப்பிற்காக இனவெறி எதிர்ப்புச் சட்டம்: சி.பி.எம், எஸ்.டி,பி,அய்,

கறுப்புச் சட்டங்கள் மறு பரிசீலனை : ஆம் ஆத்மி (AFPSA வில் மாற்றங்கள்), தி.மு.க (UAPA வில் 2012 ல் கொண்டு வந்த மாற்றங்களை நீக்குதல்; பா.ம.க (அனைத்துத் தடுப்புக் காவல் சட்டங்களையும் எதிர்த்தல்); சி.பி.எம் (UAPA வில் உள்ள சில கொடூரமான பிரிவுகளை நீக்குதல், மற்றும் AFPSA சட்டம் முழுமையாக நீக்கம்), எஸ்.டி,பி,அய் (AFPSA, UAPA முழுமையாக நீக்கம்), சி.பி.ஐ (UAPA சட்டம் உட்பட அனைத்துச் சட்டங்களும் நீக்கம்),

மாநிலப் பட்டியலில் கல்வி: வி.சி.க, தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க,

குறிப்பு 1: தேர்தல் அறிக்கைகளில் கண்டபடி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு அம்சத்தில் ஒரு கட்சியின் கொள்கை எதுவாக இருந்தபோதும் 2014 தேர்தல் அறிக்கையில் அந்த அம்சம் இல்லாவிய்ட்டல் அது இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை.

குறிப்பு 2: தமிழகத்தில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மட்டும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. தே.தி.மு.க, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியன தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

ஆ. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் : ஓர் ஒப்பீட்டு அலசல்

2014 நாடாளுமன்றத் தேர்தல் : கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒரு அலசல்

தேர்தல் அறிக்கையை வெளியிடுகிற கட்சிகள் எல்லாம் அந்த அறிக்கைகளுக்கு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கின்றன, எந்த அளவிற்கு இவற்றை நிறைவேற்ற சித்தம் கொண்டுள்ளன என்கிற நியாயமான கேள்விகள் மற்றும் ஐயங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கட்சிகளின் நோக்கங்கள், குறிக்கோள்கள் என்கிற அளவிற்கு இவற்றை மதிக்க வேண்டாம் என்ற போதிலும் கட்சிகளின் விருப்பங்கள் (intensions) என்கிற அளவிலேனும் இவற்றுக்குரிய இடத்தை நாம் அளிக்க வேண்டும் அந்த வகையில் கட்சிகளின் அணுகல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், கூட்டணி அரசியல் போன்றவற்றிற்காகக் கட்சிகள் என்னென்ன அம்சங்களில் சமரசமாகிறார்கள் என்பதற்கும், எந்த அளவிற்கு இவர்கள் ஆளுகை குறித்து சீரியசாக இருக்கிறார்கள், எந்த அளவிற்கு வெறும் உணர்ச்சி அரசியலையே இறுதிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தேர்தல் அறிக்கைகள் நமக்கு முக்கிய தடயங்களாக அமைகின்றன.

அந்த வகையில் இங்கே தமிழகத்தில் போட்டியிடுகிற பதினோரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மூன்று நிலைகளில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1) இந்த அறிக்கைகள் விவசாயம், தொழில், மருத்துவம், கல்வி, அயல் உறவு, ஈழப்பிரச்சினை முதலான முக்கிய பிரச்சினைகளில் முதன்மையாக என்ன கருத்துக்களை முன்வைக்கின்றன என்பதும், இவை தவிர அவை சிறப்பாக வேறெதையெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பதையும் முதலில் தொகுத்துள்ளோம். 2) என்ன மாதிரியான பிரச்சினைகளை முன்வைத்து கட்சிகள் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன என்கிற அடிப்படையில் முக்கிய சில பிரச்சினைகளில் கட்சிகளின் நிலைபாட்டை ஒரு அட்டவணை ஆக்கியுள்ளோம். 3) மூன்றாவதாக இந்த இரண்டின் தொடர்ச்சியாக கட்சிகளின் சில கவனிக்க வேண்டிய போக்குகளை இந்தக் கட்டுரையின் மூலம் தொகுத்துள்ளோம்.

ஒன்றை மனதில் கொள்வது அவசியம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு திட்டம் (programme) உண்டு. இந்தத் திட்டத்திற்கும், தேர்தல் அறிக்கைக்கும் என்ன வேறுபாடு?

கட்சித் திட்டம் என்பது அக்கட்சியின் அடிப்படை நோக்கங்களையும், இறுதிக் குறிக்கோளையும் வரையறுப்பது. தேர்தல் அறிக்கை என்பது இந்த அடிப்படைத் திட்டத்திற்கு முரணாகாமல் அடுத்த ஐந்தாண்டுகளில் தாங்கள் என்னென்னவற்றை சாத்தியமாக்கவோ அல்லது சாத்தியமாவதற்காகப் போராடப் போவதாகவோ வாக்குறுதி அளித்து, அந்த அடிப்படையில் வாக்காளர்களைத் தமக்கு வாக்களிக்குமாறு வேண்டுவது. இந்த வகையில் தேர்தல் அறிக்கைகள் என்பன திட்டங்களைக் காட்டிலும் தூலத் (concrete) தன்மை உடையனவாக இருக்க வேண்டும். தேவையற்ற வாயளப்புகளைக் (rhetoric) குறைத்து குறிப்பாகவும் தூலமாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் தாம் செய்யப்போகிறவற்றைக் குறிப்பாகச் சொல்பவை நல்ல அறிக்கைகளாக அமையும். நமது நாட்டு அரசியல், குறிப்பாகத் தமிழக அரசியல் வாயளப்புகளுக்குப் பெயர் போனது. இந்த அறிக்கைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

பெரும்பாலான அறிக்கைகளில் வாயளப்புகள் அதிகமாகவும், தூலமான திட்டங்கள் குறைவாகவும் உள்ளன. சில நேரங்களில் கட்சிகள் எந்தப் பிரச்சினையை மையமாக எடுத்துக் கொண்டுள்ளனவோ அந்த அம்சத்தில் தூலமாகவும் பிறவற்றில் சிரத்தை இல்லாமல், எதையேனும் சொல்ல வேண்டும் என்கிற அளவிலும் இருப்பதை வாசிப்போர் புரிந்துகொள்ள இயலும். தவிரவும் சில கட்சிகள் தாங்கள் ஏதோ முற்போக்காகவும், இங்கு மேலெழும் அனைத்துக் கோரிக்கைகளுடனும் தாங்கள் உடன்படுவதாகவும் காட்டிக் கொள்வதற்காக எந்தக் குறிப்பான திட்டமும் தூலமான நடைமுறையும் இல்லாமல் அந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுகிற இயக்கங்களைக் காட்டிலும் தீவிரமான முழக்கங்களை அறிக்கையில் வைப்பதையும் காண முடிகிறது.

கூடுமானவரை கட்சிகளின் இந்த வாயளப்புகளிலிருந்து தூலமான திட்டங்களைப் பொறுக்கி எடுத்து இந்தத் தொகுப்புகள் மூன்றும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்சிகளின் அடிப்படைத் திட்டங்கள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையாக்க இயலாது என்பதைச் சொன்னோம். இந்த ஆய்வுகளும் கட்சிகளின் இந்த அடிப்படைத் திட்டங்களுக்குள் செல்லாமல் இந்த அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. சென்ற தேர்தல்களில் என்னென்ன வாக்குறுதிகள் வைக்கப்பட்டன, அவற்றிலிருந்து இந்த அறிக்கை எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளது அல்லது பழைய அறிக்கைகளையே மேலோட்டமாகச் சில மாற்றங்களைச் செய்து தயாரிக்கப்பட்டுள்ளனவா என்கிற கேள்வி மிக முக்கியமானதாயினும் இந்த ஆய்வுகளில் அதை எங்களால் செய்ய இயலவில்லை.

இனி ஒரு அகன்ற பார்வையில் இந்த அறிக்கைகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக எங்களுக்குப் படுபவை:

1. மாநிலக் கட்சிகளுக்கும் இந்திய அளவிலான கட்சிகளுக்கும் வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ளன; தி.மு.க. அ.தி.முக. ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க ஆகிய மாநிலக் கட்சிகள், அமையப்போகும் மத்திய அரசின் ஊடாக தமிழகத்தில் நிறைவேற்றப்படக்கூடிய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் இ.தே.கா, பா.ஜ.க, இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி முதலான இந்திய அளவுக் கட்சிகள் தமிழக அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து எதையும் பேசுவதில்லை. வறுமை ஒழிப்பு அல்லது உணவுப் பாதுகாப்புச் சட்டம் முதலியவற்றை நாங்கள் சொல்வதன் மூலம் எல்லா மாநில மக்களின் நலனையும் பேசிவிடுகிறோமே, பிறகு தனியாக மாநிலங்கள் பற்றிப் பேச வேண்டுமா என இந்திய அளவுக் கட்சிகள் கேட்பதில் பொருளில்லை. விண்கல ஏவுதளம், தமிழகத்தில் புதிய துறைமுகங்கள், வெளிநாடுகளுக்கு அதிகம் சென்று பணி செய்யக்கூடிய நிலை உள்ளபோது அங்குள்ள தூதரகங்களில் தமிழர்கள் நியமிக்கப்படுதல், மின்சாரம் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளதால் மின்திட்டங்களை உருவாக்குதல், வெளி மாநிலங்களிலிருந்து இங்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான் வழி முறைகளை மேம்படுத்தல், விவசாய நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருப்பதால் அதற்குரிய திட்டங்களை மொழிதல், காவிரி நதி நீர் ஆணையம் முதலியன உருவாக்கப் பெறுதலில் ஏற்படும் தாமதங்கள் முதலிய பிரச்சினைகள் மாநில அளவில் முக்கியமானவை. இவற்றை முன் குறிப்பிட்ட மாநில அளவுக் கட்சிகள்தான் கவனம் கொடுத்துப் பேசியுள்ளன.

இந்தியா ஒரு “தேச அரசு’ (Nation State) அல்ல, மாறாக இது ஒரு ‘மாநிலங்களின் அரசு’ (State Nation) எனக் கூறுவது உண்டு. முற்றிலும் வேறுபட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏந்தியுள்ள எண்ணற்ற பல மாநிலங்கள், மொழிகள் உள்ள இந்தத் துணைக்கண்டத்தில் மாநில அளவிலான வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேச இயலாதபோதும் முக்கியமான மாநிலத்தேவை குறித்தும் (எ.கா ; தமிழகத்தில் பாசன நீர் மற்றும் மின் தேவைப் பிரச்சினைகள்), மேலெழுந்துள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் தூலமாக அகில இந்தியக் கட்சிகள் பேச வேண்டும். அப்படி இல்லாதிருப்பது பெருங் குறை.

இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட இந்திய அளவுக் கட்சிகள் மாநில அளவுத் திட்டங்கள், நதி நீர்ப் பிரச்சினைகள் ஆகியவற்றில் காட்டும் மௌனத்திற்கான காரணங்களில் ஒன்று அவற்றிற்கு சில முக்கிய மாநில அளவிலான பிரச்சினைகளில் கட்சிக்குள் பொதுக் கருத்து இல்லாதது. காவிரி அல்லது முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாநில அளவில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இந்நிலை தொடர்வது அகில இந்தியக் கட்சிகள் மாநில மக்களிடமிருந்து அந்நியப்படவே வழிவகுக்கும். இது தொலை நோக்கில் நல்லதல்ல.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து மேலோட்டமாக பாஜ.க சில கருத்துக்களைக் கூறியுள்ளது. பிற மாநிலங்கள் குறித்து இத்தகைய அக்கறையை அது வெளிப்படுத்தாமல் இவ்விரு பகுதிகளை மட்டும் அது பேசுவது, இங்கு நடைபெறும் போராட்டங்கள், தங்களுக்கு அங்கு பிடிப்பில்லாமல் இருப்பது ஆகிய அடிப்படைகளிலிருந்தே எழுந்துள்ளது.

மாநில அளவு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மட்டுமின்றி மாநில அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மீதேன் வாயு எடுக்கும் திட்டம் முதலியவை குறித்தும் மாநில அளவுக் கட்சிகளே வாய் திறந்துள்ளன. காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகள் மத்தியில் செல்வாக்குடன் உள்ள இடதுசாரிக் கட்சிகள் தம் அறிக்கையில் மீதேன் திட்டம் குறித்துக் கருத்துரைக்காதது குறிப்பிடத் தக்கது. கிழக்குக் கடற்கரையோரம் குறிப்பாக நாகைப் பகுதியில் ஏராளமான தனியார் அனல் மின் திட்டங்கள் வருவதை பா.ம.க மட்டுமே கண்டித்துள்ளது. சென்ற ஆண்டுகளில் இங்கு நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய போராட்டம் கூடங்குளம். அணு உலைகளை மூடுவது குறித்து பா.ம.க, ம.தி.மு.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே பேசியுள்ளன. கூடங்குளம் போராட்டத் தலைவர்கள் மூவரை இந்தத் தேர்தலில் தன் வேட்பாளர்களாகக் களம் இறக்கியுள்ள அகில இந்தியக் கட்சியான ஆம் ஆத்மி இது குறித்துக் காட்டும் மௌனம் குறிப்பிடத் தக்கது.

2. மாநிலக் கட்சிகள் மாநில அளவிலான பிரச்சினைகளைப் பேசுவது வரவேற்கத்தக்கதுதான் எனினும் ம.தி.மு.க போன்ற கட்சிகள், தமிழக மக்களின் பிரதான பிரச்சினைகள் இவை மட்டுமே எனக் கருதத்தக்க அளவிற்கு இவற்றை முன்நிலைப்படுத்துவதோடு அண்டை மாநிலங்களுடனான முரண்பாடே பிரதானமானது என்கிற அளவிற்குக் கொண்டு செல்கின்றன. அ.தி.மு.கவைப் பொருத்த மாட்டில் மத்திய காங்கிரஸ் அரசின் மீது அனைத்துக் குற்றங்களையும் சுமத்துவதற்கு மாநிலப் பிரச்சினைகளை அது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. ஒருவேளை அ.தி.மு.கவுடன் ஒத்துச் செல்லும் ஒரு மத்திய அரசு உருவானால் அது இதையெல்லாம் பேசுமா என்கிற அய்யம் நமக்கு ஏற்படுகிறது.

மாநிலக் கட்சிகளின் இன்னொரு சிக்கல்அவை இந்திய அளவிலான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமை. மாநில அளவில் அதிகாரப் பரவல் முறையாக நிறைவேற்றப்படாத, அதிக அளவில் அதிகாரங்கள் மைய அரசில் குவிந்து கிடக்கக் கூடியஒரு நாட்டில் அயலுறவு, பொருளாதாரம், அந்நிய முதலீடு, ஆளுகைச் சீர்திருத்தங்கள், வகுப்புவாதம். உள் நாட்டுப் போராட்டங்கள், வறுமை ஒழிப்பு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய சட்டங்கள் இயற்றல் முதலானவை மிக முக்கியமாக உள்ளன. மக்களின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் இவை குறித்து மிகவும் மேலோட்டமான பார்வைகளையே மாநிலக் கட்சிகள் முன்வைக்கின்றன. ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காகச் சொல்வதாகவும் சிலவற்றில் கருத்தே இல்லாதவையாகவும் இருப்பது வருந்தத்தக்கது. எடுத்துக்காட்டாகப் பா.ம.க அயலுறவு குறித்து எந்தக் கருத்தையும் கூறவில்லை. அ.தி.மு.கவைப் பொருத்தமட்டில்மிக முக்கியமான இரு அடிப்படைத் துறைகளான கல்வி மற்றும் மருத்துவம் குறித்து ஏதும் குறிப்பாகச் சொல்லவில்லை. பல அம்சங்களில் அ.தி.மு.க அறிக்கை ஜெயா ஆட்சியில் மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களை மத்திய அளவிலும் நிறைவேற்றில் போதுமானது என்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மேற்குறிப்பிட்ட இந்திய அளவிலான பிரச்சினைகளில் அகில இந்தியக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை விரிவாக முன்வைக்கின்றன. அந்நிய முதலீடு, பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ், பா,ஜ,க, முதலியான வரவேற்கின்றன, ஆம் ஆத்மியைப் பொருத்தமட்டில் ஊழலற்ற முதலாளியம் தனியார்துறை முதலியவற்றை வரவேற்கிறது. இடதுசாரிக் கட்சிகள் ஒரு மாற்றுப் பொருளாதார, தொழிற் கொள்கையை முன்வைக்கின்றன. ஆளுகை, நிதி ஒழுங்கு, மாநில உரிமைகள், இயற்ற வேண்டிய புதிய சட்டங்கள் ஆகியவை குறித்து ஒரு சுருக்கமான மாற்றுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கிறது. அதேபோல விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் எனத் தனித்தனியாக அவர்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வாக அது கருதுவதையும் முன்வைக்கிறது.

காங்கிரஸைப் பொருத்தவரை தனது “உரிமை அடிப்படையிலான வளர்ச்சி” என்கிற அணுகல்முறையை ஏற்கனவே அது நிறைவேற்றியுள்ள துறைகளைத் தவிர பிற முக்கிய துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்துப் பேசுகிறது. சமூக நீதி, கல்வி, மருத்துவம் ஆகியன குறித்தும் தூலமான திட்டங்களை வைக்கிறது. எனினும் அதனுடைய பல ஊழல்களுக்கும் காரணமான தாராளமயமாக்கலையும், “தனியார் பொதுத்துறை ஒத்துழைப்பு” போன்ற எல்லாவற்றிலும் தனியார்களைப் புகுத்துவதையும் எந்த விமர்சனமும் இன்றி இந்த அறிக்கையிலும் தொடர்கிறது.

பா,ஜ.கவும் இதையெல்லாம் பேசியபோதிலும் அதுவும் பெருந்தொழில் வளர்ச்சி, அந்நிய மூலதனம் ஆகியவற்றில் காங்கிரசிடமிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. தவிரவும் அதனிடம் துலமான திட்டங்களைக் காட்டிலும், “ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்”, “சமாஜிக் நியாய்” மற்றும் “சமாஜிக் சம்ராசட்டா”, திறன் வரைபடம் உருவாக்குதல் என்பதுபோன்ற வாயளப்புகள் அதிகமாக உள்ளன. வரிச் சீர்திருத்தம், தொழில் தொடங்கலில் உள்ள சிவப்பு நாடா முறையை ஒழித்தல் ஆகியவற்றை அது முதன்மைப்படுத்துகிறது. திட்டப்பெயர்களிலும் முழக்கங்களிலும் அதிக அளவில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுகிறது.

பா.ஜகவிடம் காணக்கூடிய இன்னொரு அம்சம் அது தன்னை மிக நவீனமான தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தத் துடிப்பதாகவும், அதே நேரத்தில் பாரம்பரியத்தை இம்மியும் விட்டுக்கொடுக்காததாகவும் காட்டிக் கொள்வது. “செல் போன்களின் உதவியோடு e மருத்துவ சேவை, பாரம்பரிய மருத்துவ முறை யோகா முதலிவற்றை ஊக்குவித்தல்” என்பது போன்ற வாசகங்களை அறிக்கை முழுவதும் ஆங்காங்கு காணலாம்.

3. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுக்குமான ஒரு மாற்றாக இன்று உருப்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்த மட்டில் ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலை கிராம அளவிற்குக் கொண்டு வருதல் முதலியன அதன் பிரதான அணுகல் முறைகளாக உள்ளன. அந்த வகையில் அதிகாரங்களைக் கீழிறக்குவது தொடர்பான அவர்களின் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக உள்ளன. “சுயராஜ்யச் சட்டம்” ஒன்றை இயற்றி எல்லாவிதமான பிறப்பு, இறப்பு சாதிச் சான்றுகள் முதலியவற்றை வழங்கும் அதிகாரத்தை மட்டுமின்றி கிராம அளவில் செயல்படும் பள்ளி, மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது முதல் கிராம வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் ஒப்பந்தக் காரர்களுக்கு நிதி அளிப்பதற்கான ஒப்புதலை அளிக்கும் அதிகாரம் வரை கிராம சபைகளுக்கு அளிப்பதை அது தனது அடிப்படை அணுகல் முறையாக முன்வைக்கிறது. தல அளவில் பாடத்திட்டம் உருவாக்கும் அதிகாரம் கூட அதற்கு இருக்குமாம். பல முக்கிய துறைகளில் சட்டம் இயற்றுவதற்குக் கூட கிராம சபைகளின் ஒப்புதல் தேவை என்கிற நிலை போகப் போக உருவாக்கப்படுமாம். காவல் நிலையங்களில் காமரா பொருத்தி நடவடிக்கைகளைக் கண்காணித்தல், போலீஸ் காவல் என்பதையே நீக்கிவிட்டு நீதிமன்றக் காவலை மட்டுமே அனுமதிப்பது என்கிற காவல்துறை சீர்திருத்தங்கள் இதுவரை எந்தக் கட்சியும் முன்வைக்காத திட்டங்கள். போலீஸ் காவல் என்பதை 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் என்கிற அளவிற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அரசுகள் கொண்டு சென்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி அதிரடியாக போலீஸ் காவலே தேவையில்லை எனக் கூறுகிறது.

எனினும் இங்கொன்றைக் கவலையுடன் கருத வேண்டி உள்ளது நமது அரசியல் நிர்ணய அவையில் பஞ்சாயத்து ராஜ் முறையைச் சட்டமாக்க காந்தியவாதிகள் முயன்றபோது அதற்கு டாக்டர் அம்பேத்கர் ஒப்புதல் அளிக்க வில்லை. இறுதியில் அது அடிப்படை உரிமையாக இல்லாமல் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாக மட்டும் வைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் மூலமாக கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதை அம்பேத்கர் அவ்வளவு பிடிவாதமாக எதிர்த்ததற்குக் காரணம் நமது கிராமங்கள் சாதி ஆதிக்க அலகுகளாக இருப்பதுதான், இன்று வரை அந்நிலையில் மாற்றமில்லை, கிராமங்களுக்கு இப்படி அதிகாரங்களை வழங்குவதென்பது அங்குள்ள ஆதிக்க சக்திகளின் கைகளிடம் அதிகாரம் குவிவதற்கே வழிவகுக்கும். இது அப்பகுதிகளில் உள்ள தலித்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் யார் சிறுபான்மையராக உள்ளனரோ அவர்களுக்கு எதிராக முடியும். இதற்கொரு காப்பாக கிராம சபைகளில் முடிவுகள் எடுக்கும்போது ஒவ்வொரு பிரிவினரிலும் 50 சதக் ‘கோரம்’ இருக்க வேண்டும் என்கிறது ஆம் ஆத்மி அறிக்கை. இது ஒரு முழுமையான பாதுகாப்பாக அமையாது. இப்படியான ‘கோரம்’ குறித்த கணக்குக் காட்டுவது ஆதிக்க சாதியினருக்குக் கடினமான விஷயமல்ல. தலித் பிரிவினருக்கென ஒடுக்கப்பட்ட கிராமங்களில் தேர்தலை நடத்தவிடாமல் பார்ப்பதிலும், நடந்தாலும் அதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொள்வதிலும் வல்லவர்கள் நம் கிராமத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆம் ஆத்மி இத்தகைய சுயராஜ்யச் சட்டம் தவிர பிற அம்சங்களில் அதிக சிரத்தை காட்டவில்லை. அயலுறவு என்றால் “அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடரும் அதே நேரத்தில் சிறிய நாடுகளின் கூட்டமைப்புகளிலும் இந்தியா செயல்படும்” இந்திய சீன உறவு என்றால் “எல்லைப் பிரச்சினையில் கறாராக நடந்து கொள்ளும் அதே நேரத்தில் அதனுடன் வணிக உறவைத் தொடர்தல்” என்பதுபோல ஒருவகை வாயளப்புகளாகவே அறிக்கை முடிந்து விடுகிறது.

கைகளால் மலம் நீக்கித் தூய்மை செய்யும் தொழிலை (manual scavenging) ஒழிப்பதை கட்சிகள் பலவும் தங்கள் வாகுறுதிகளில் ஒன்றாக்கியுள்ளன. ஆம் ஆத்மியோ தீயணைப்புப் படையினருக்கு உள்ளதுபோன்ற பாதுகாப்புக் கவசங்கள், முகமூடி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும் என்கிறது.

4. எஸ்.டி.பி.அய் ஒரு அகில இந்தியக் கட்சி. குறிப்பாக கேரளம், கர்நாடகம் முதலான அண்டை மாநிலங்களில் ஓரளவு ஆதரவு உள்ள கட்சி. அது தன் அறிக்கையில் தமிழகப் பிரச்சினைகளைத் தீவிரமாகப் பேசியுள்ள ம.தி.முக முதலான கட்சிகளின் அளவுக்குத் தீவிரமாகத் தமிழகப் பிரச்சினைகளைப் பேசியுள்ளது. ஒரு இந்திய அளவிலான கட்சி இப்படி மாநிலப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அப்படியான அக்கறை பிற மாநிலப் பிரச்சினைகளில் இல்லாதது நமக்கு வியப்பளிக்கிறது. அப்படியானால் இது தமிழகத்திற்கெனத் தனியே உருவாக்கப்பட்ட அறிக்கை என்பதுபோல் ஆகிறது. காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் கோரிக்கை சரியானது என்றால் இக்கட்சியின் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலக் குழுக்களின் கருத்தும் அதுதானா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி இல்லாதபோது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட அறிக்கைகளை வைப்பது என்பது அரசியல் அறமல்ல. ஒரு இந்திய அளவிலான கட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் இப்படி மாநிலத்திற்கொரு தேர்தல் அறிக்கையை வைக்க இயலாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட அதன் ஆங்கில அறிக்கையில் இல்லாத சில அம்சங்களை, குறிப்பாகத் தமிழகம் சார்ந்த சில திட்டங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. இது மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவா இல்லை அகில இந்திய ஒப்புதலுடன் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.

5. பாக், சீனா முதலான அண்டை நாடுகளுடனான உறவைப் பொருத்தமட்டில் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியம் அளித்து போரைத் தவிர்த்தலே இரு நாட்டு மக்களுக்கும் நல்லது என்பதே இடதுசாரிகள், காங்கிரஸ், தி.மு.க முதலான கட்சிகளின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இன்றைய அறிக்கைகளிலும் அதுவே தொடர்கிறது. இதற்கு மாற்றாக அண்டை நாடுகளிடம், குறிப்பாக பாக் மற்றும் சீனாவுடன் கறாராக நடந்து கொள்வது, பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் நம் இராணுவ வல்லமையைப் பெருக்கி அதன் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பன பா.ஜ.கவின் அணுகல் முறையாக இருந்து வந்துள்ளது. இந்த அறிக்கைகளிலும் சி.பி.ஐ, சி.பி.எம், தி.மு.க, இ.தே.கா, வி.சி.க முதலான கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, ஆம் ஆத்மி, ஆகிய கட்சிகள் பேச்சு வார்த்தைகளைக் காட்டிலும் இராணுவ வல்லமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. பா.ஜ.கவுடன் நெருக்கமாகும் புள்ளிகளை இவ்வாறு அ.தி.முக, ம.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

6. தமிழக அரசியலில் கடந்த ஆண்டுகளில் மேலுக்கு வந்த பிரச்சினைகளில் ஈழம் முக்கியமானது. இரண்டு கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் இது குறித்துத் தம் கருத்தைத் தெரிவித்துள்ளன. ஈழப் பிரச்சினையில் மௌனம் காக்கும் கட்சிகள் பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும் மட்டுமே. ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, பன்னாட்டு விசாரணை ஆகியவற்றை தி.மு.க, ம.தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்ப்பகுதிகளுக்கு அதிகாரப் பரவல், சுயேச்சையான மனித உரிமை மீறல் விசாரணை ஆகியவற்றை காங்கிரசும் சி.பி.எம்மும் முன்வைக்கின்றன. ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இணையாகப் பங்கேற்ற சி.பி.அய் கட்சி ‘ஈழம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” முழு மனித, அரசியல் உரிமைகளை அவர்களின் கருத்தறிந்து வழங்குதல் என்பதாகத் தன் அணுகல் முறையை வைக்கிறது. இந்தக் ‘கருத்தறிந்து’ என்கிற சொல்லும் கூட அதன் ஆங்கில வடிவத்தில் இல்லை.

கச்சத் தீவை மீட்பது எனபதை ஐந்து மாநிலக்கட்சிகள் மட்டுமே முன்வைக்கின்றன இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க ஆகிய இந்திய அளவிலான கட்சிகள் தம் அறிக்கைகளில் கச்சத் தீவு குறித்து ஒன்றும் பேசவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சி.பி.ஐ, தி.மு.க, வி.சி.க ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளன. ஆம் ஆத்மி வழக்கம்போல இதிலும் மௌனம்தான். ம.தி.மு.க மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதாகக் கூறி நழுவுகிறது. பா.ஜ.க பாதுகாப்பு, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இது குறித்து முடிவெடுக்குமாம். காங்கிரஸ், அ.தி.மு.க, எஸ்.டி பி.அய் ஆகியனவும் சேது சமுத்திரம் குறித்து ஒன்றும் பேசவில்லை.

7. பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது என்கிற இந்துத்துவக் கொள்கையை பா.ஜ.க தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க இரண்டும் அது தேவையில்லை எனக் கூறுகின்றன. தி.மு.க எப்போதும்போல இதை எதிர்த்துள்ளது.

8. சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டில் சச்சார் குழு அறிக்கையைக் காட்டிலும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமே இட ஒதுக்கீடு முதலான திட்டங்களை மிகத் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையை பா.ஜ.க தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சி.பி.அய், சி.பி.எம், தி.மு.க, வி.சி.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகின்றன. சிறுபான்மையினர் மீது போடப்படும் பொய் வழக்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், பொய்வழக்கு போட்ட அதிகாரிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை சி.பி.அய், சி.பி.எம், ஆம் ஆத்மி, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் மட்டுமே வலியுறுத்துகின்றன. மதக் கலவரத் தடுப்பு மசோதாவை நிறைவேற்றுதல் என்கிற இன்னொரு முக்கியமான சிறுபான்மையினரின் கோரிக்கைக்கு சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ், வி.சி..க, எஸ்.டி.பி.அய் இவை மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன.

9. தலித்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது, திருத்தங்கள் மேற்கொண்டு வலிமையாக்குவது ஆகியவற்றை சி.பி.எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கருப்புச் சட்டங்களை மறு பரிசீலனை செய்வது என்பதையும் ஆம் ஆத்மி (AFPSA), தி.மு.க (UAPA), பா.ம.க (அனைத்து தடுப்புக் காவல் சட்டங்கள்), சி.பி.எம் (UAPA) எஸ்.டி.பி.அய், சி.பி.அய் ஆகியவை முன்வைத்துள்ளன.

10. பூரண மதுவிலக்கை ம.தி.மு.க, பா.ம.க, எஸ்.டி.பி.அய் ஆகிய கட்சிகள் முன்வைத்துள்ளன.

11. பா.ஜ.க தன் இந்துத்துவக் கொள்கைகளான அணு வல்லமையைப் பெருக்குவது, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது. கங்கை நீரைத் தூய்மை செய்வது, பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவது பசுப் பாதுகாப்பு, காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது ஆகியவற்றை தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

12. பா.ம.க அதன் சிறப்புக் கோரிக்கைகளான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்க்கச் செய்வது, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது, காதலித்துப் பின் ஏமாற்றப்படாமல் பெண்களைப் பாதுகாப்பது முதலியவற்றை வெளிப்படையாகத் தன் அறிக்கையில் முன்வைத்துள்ளது. சிறிய மாநிலங்கள் அமைப்பதை ஆதரித்தல் என்பதும் அதன் திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்து வன்னியர்கள் அதிகமாக உள்ள வட தமிழகத்தைத் தனி மாநிலமாக மாற்றுவது என்கிற அதன் நீண்ட காலக் கோரிக்கையை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கோரிக்கை பா.ஜ.கவின் சிறிய அளவிலான மாநிலங்கள் என்கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போவது குறிப்பிடத் தக்கது. குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையும் கூட ஜெயா ஆட்சியில் ஜெ.குரு போன்ற தம் கட்சியினர் பெரிய அளவில் இச் சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை மனதிற் கொண்டு இருக்கலாம்.

13. வி.சி.க, பா.ம.க முதலான அடித்தள மக்களின் கட்சிகள் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசுகின்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தி.முகபோன்ற திராவிட மரபில் வந்தக் கட்சிகளும் இட ஒதுக்கீடு குறித்துத் தூலமாகப் பலவற்றைச் சொல்கின்றன. பழங்குடி மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பா.ஜ.க விரிவாகப் பேசுகிறது. அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஏற்பதாக ஆம் ஆத்மியும் கூறுகிறது.

14. முஸ்லிம்களை முக்கிய ஆதரவு சக்தியாகக் கொண்டு இன்று உருவாகியுள்ள எஸ்.டி.பி.அய் கட்சி இந்திய அளவில் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை மிகத் துல்லியமாகத் தொகுத்துள்ளதோடு, அதற்கான மாற்றுத் திட்டங்களையும் தூலமாக முன்வைக்கிறது, ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றம், மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றுதல், பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, அரசு வேலை முதலியன, பொய் வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்குத் தண்டனை, இந்திய அளவில் வழிபாட்டுத் தலங்களின் நிலை 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த நிலையில் தொடர்வது, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, உருது மொழி வளர்ச்சி என அனைத்து அம்சங்களையும் எஸ்.டி.பி.அய் தொகுத்துள்ளது,

15. கட்சிகளுக்கிடையே சில முக்கிய அம்சங்களில் கருத்தொருமிப்பு உள்ளது. சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், மலம் சுமந்து அகற்றும் பணியை ஒழித்தல் முதலியன இவற்றில் சில. இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டகட்சி அறிக்கைகளில் பெண்கள் ஒதுக்கீடு குறித்து எதுவும் பேசாதது பா.ம.க அறிக்கை மட்டுமே. வடக்கே சமாஜ்வாதி கட்சி முதலியன இதிலும் சாதி வாரி ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை எழுப்பி இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. இந்ந்நிலையில் தேர்தல் அறிக்கைகள் மூலமாக இப்போது உருவாகியுள்ள கருத்தொருமிப்பைப் பயன்படுத்தி 16வது நாடாளுமன்றம் பெண்களுக்கான் ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், Manual Scavenging ஐ ஒழிப்பது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டுமென்பதிலும் காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க. அ,தி.மு.க தவிர பிற கட்சிகள் மத்தியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு உள்ளது. இது குறித்து தேசிய அளவில் விவாதம் ஒன்றை உருவாக்கி அனைத்துக் கட்சிகளுக்கும் பெற்ற வாக்கு வீதங்களுக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் பெற வழி செய்ய வேண்டும்;

மதவேறுபாடில்லாமல் இடஒதுக்கீடு, குறிப்பாக தலித் கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிற தலித்களுக்கு வழங்குவதைப்போல ஒதுக்கீடு வழங்குவது என்பதிலும் இடதுசாரிக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் மற்றும் தலித் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. பா.ஜ.க ஒன்றே இதனைக் கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒன்று. ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் இதை அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது. 16வது நாடாளுமன்றம் இதை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதைப் பார்ப்போம். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதையும் இடதுசாரிக் கட்சிகள், அடித்தள சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தி.மு.க முதலியன வலியுறுத்துகின்றன. கார்பொரேட் மற்றும் தனியார் மயமாக்கலை ஆதரிக்கும் கட்சிகள் இது குறித்துப் பேசவில்லை. சி.பி.எம் கூட தனியார் துறை இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை உள்ளடக்கவில்லை.

விவசாய விளைபொருட்களுக்கு குடும்ப உழைப்பையும் ஒரு முதலீடாகச் சேர்த்துக் கணக்கிட்டு 50 சத லாபம் வருமாறு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது என்பதிலும் பெரும்பாலான கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு உள்ளது. 16 வது நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டிய ஒரு உடனடியான முக்கிய சட்ட நடவடிக்கை இது.

ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு, ஒப்பந்த முறையை ஒழிப்பது உட்பட உரிய சட்டப் பாதுகாப்புகளை உருவாக்குவது, ஓய்வூதியத் திட்டம் முதலியன குறித்தும் முக்கிய கட்சிகள் பலவும் பேசியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி ஆண்டு முழுவதும் வேலை தர இயலாத துறைகளில் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளிகள் முறையை அனுமதிக்கலாம் என்கிறது. மீனவர்கள் நலன் குறித்து ஆம் ஆத்மி தவிர பிற கட்சிகள் தூலமான பரிந்துரைகள் சிலவற்றை முன் வைக்கின்றன.

ஊழல் ஒழிப்பு குறித்து திராவிடக் கட்சிகள், வி.சி.க தவிர பிற அனைத்தும் தூலமான சில சட்ட உருவாக்கங்களை முன்வைத்துள்ளன. 16ம் நாடாளுமன்றத்தின் முன்னுள்ள முக்கிய பணிகளில் ஒன்று இது, கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு முதலிய திட்டங்களும் பெரும்பாலான கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. தொழில், பொருளாதாரம் தொடர்பான திட்டங்கள் கட்சிகளின் கொள்கைகளுக்குத் தக வேறுபடுகின்றன. இது குறித்துப் பொதுக் கருத்து உருவாக வாய்ப்பில்லை. எனினும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்தொற்றுமை உள்ளது.

உள்நாட்டுப் போராட்டங்கள், குறிப்பாக மாஓயிஸ்ட்களையும், வடகிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலப் போராட்டங்கங்களையும் ஒடுக்குவது குறித்து எல்லாக் கட்சிகளும் பேசியபோதும், இந்த விடயத்தில் மத்திய மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என்றெல்லாம் கூறியபோதும் ‘சல்வாஜூடும்’ போன்ற சட்டவிரோதப் படைகளை அரசாங்கமே செயல்படுத்துவதை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை போராடும் .இந்த மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் கருப்புச் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என சி.பி.எம், ஆம் ஆத்மி, தி.மு.க ஆகிய கட்சிகள் மட்டுமே கூறியுள்ளன.

மத அடிப்படையில் திட்டங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியை பா.ஜ.க மட்டுமே செய்துள்ளது.

பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பிழைக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்தம் குறித்து சி.பி.அய், சி.பி.எம் கட்சிகள் மட்டுமே பேசுகின்றன.

ஜனநாயகம் என்பது விரும்பிய கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியைத் தேர்வு செய்வதோடு முடிந்து விடுவது அல்ல. ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராகத் திரும்பும்போது அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதும், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதும் சேர்த்துத்தான் ஜனநாயகம், அதற்கான உரிமைகளையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால் மக்கள் அதற்குத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் வழிமாறும்போதும் வாக்குறுதிகளைத் தவறும்போதும் அதைத் தட்டிக் கேட்கும், தேவையானால் வீதியில் இறங்கிப் போராடும் தகுதியுடையவர்களாக இருப்போம்.