“இந்தியச் சாதி அமைப்பு சூப்பர்….”

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வலாற்றறிஞர் ரொமிலா தப்பார் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல.

சென்றமுறை பி.ஆர். குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர் மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப் பட்டது. ICSSR அமைப்பின் தலைவராக பி.எல் சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதீய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHR ல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி.

சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு – ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:

“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”

இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு?

வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:

“அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென”

(சரி. யாராவது ஒருத்தர் பா.ம.க நிறுவனருக்கு இந்தத் தகவலைச் சொல்லுங்கப்பா, இந்த அற்புதமான கருத்தைச் சொன்னதற்காக எல்லப்பிரகத சுதெர்ஷன் ராவைப் பாராட்டி அறிக்கை விடச் சொல்லுங்க.)

முரளி மனோகர் ஜோஷியின் இன்னொரு சூப்பர் நியமனம்
“You are appointed…….”

இப்ப சொல்லப் போறது இன்னும் சூப்பரான தகவல்.

சென்ற ஆட்சியில் ஜோஷி NCERT அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி. ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி. சுதர்சன். ஆர்.எஸ்.எஸ் .பிரச்சாரக்’ ஆக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.
அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்:

புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)

(பார்க்க: அ.மார்க்ஸ், ‘ஆட்சியில் இந்துத்துவம்’, பக்.48)

“சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” : சொல்கிறது பா.ஜ.க அரசு

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க வினரும், அக்கட்சியை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்சும் முந்தைய (1998 – 2004) அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் உறுதியாகத் தங்களின் இந்துத்துவச் செயல் திட்டத்தைக் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். காஷ்மீருக்கான (ஏட்டில் மட்டுமே உள்ள) சிறப்புரிமைகளை நீக்குவது, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறுபான்மை நிலைக்கு முடிவு கட்டுவது முதலான அம்சங்களில் முதலில் நூல் விட்டுப் பார்த்தார்கள்.

அப்புறம் இந்தி மொழியை நடைமுறை ஆட்சி மொழியாக்குகிற வேலையைக் தொடங்கிப் பார்த்தார்கள். வழக்கத்துக்கு மாறாக நரேந்திர மோடி தன் பதவி ஏற்பு உறுதிமொழியை இந்தியில் ஒலித்தார். வெளி நாட்டுப் பிரமுகர்களுடன் இந்தியில் பேசுவது என்கிற நிலை எடுத்தார். பூடான் நாடாளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றினார். அதிகாரிகள் கோப்புக் குறிப்புகளை இந்தியில் எழுத அறிவுறுத்தப்பட்டது; அதிகமாக இந்தியைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்குப் பரிசளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டது.

அடுத்து கல்வித் துறையில் அவர்கள் கவனம் குவிப்பார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். கல்வித் துறை, குறிப்பாக வரலாறு மற்றும் சமூக அறிவியல் சார்ந்த நிறுவனங்களை இந்துத்துவ மயமாக்குவது என்பது அவர்களின் பிரதான செயல்பாடுகளில் ஒன்று. வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் மத்தியில் வரலாறு குறித்தத் தவறான புரிதல்களை உருவாக்குவது அவர்களுக்கு அவசியமானது.

சென்ற முறை நாடாள வாய்ப்புக் கிடைத்தபோது அவர்கள் இந்ததுறையில் செய்த சில மாற்றங்களை நினைவுகூர்வோம்.

முதலில் கல்வி சார்ந்த உயராய்வு நிறுவனங்களில் பணியாற்றிய தகுதி மிக்க அறிஞர்களை நீக்கி அந்த இடங்களை தகுதியற்ற இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பினர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு (ICHR)) பி.ஆர். குரோவர், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு (ICSSR) பி.எல். சோந்தி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கு (NCERT) ஜே.எஸ்.ராஜ்புட் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப் பட்டனர். வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றிய 18 தகுதிமிக்க அறிஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவை நாடெங்கிலும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்குள்ளாகியது.

இவர்களின் முக்கிய தகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதே. எடுத்துக்காட்டாக சோந்தி பாரதீய ஜனசங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். குரோவர் தன் துறையில் எந்தச் சாதனைகளையும் செய்யாதவர். எந்த ஆதாரங்களும் இன்றி பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் எனவும், 1992ல் மசூதி (தானாக) இடிந்து விழுந்தது எனவும் எழுதியவர்.

NCERT அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் அமர்த்தப்பட்ட கே.ஜி.ரஸ்தோகி என்பவரின் நியமனம் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. ஆர்.எஸ்,எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட அவரது சுய சரிதை 1998ல் வெளிவந்தது.. முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ் ‘பிரச்சாரக்’ ஆக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார். அதில் ஒரு சம்பவம்:

புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி. இனி அவரது சொற்களில்:

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)

#############
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆண்டுதோறும் குரு தட்சணை செலுத்தும் விசுவாசிகளில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி (வாஜ்பேயி அமைச்சரவையின் கல்வி அமைச்சர்) பதவி ஏற்ற கையோடு மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் வழிகாட்டி உரை நிகழ்த்த அழைக்கப்பட்டவர் சிட்லாங்கியா என்ற ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய ஒரு தொழிலதிபர். அவ் அமைப்பின் கல்விக் குழுவான வித்யா பாரதி என்கிற அமைப்பில் வாசித்து ஒப்புதல் பெற்ற ஒரு இந்துத்துவக் கல்வித் திட்டத்தை அவர் வாசிக்க முனைந்தபோது தேசிய ஜனநாயக்க் கூட்டணியச் சாராத கல்வி அமைச்சர்கள் வெளி நடப்புச் செய்தனர். அந்த உரையை ரத்து செய்வது தவிர ஜோஷிக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று.

பல்கலைக் கழகங்களில் ஜோதிடம், வேதக் கல்வி, மதிப்பீட்டுக்கல்வி என்கிற பெயரில் மதவாதம் ஆகியவற்றைப் பாடங்களாக்கவும், பட்ட வகுப்புகளாகவும் ஆக்குகிற பணியை ஜோஷி தொடங்கிய போது மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன.

#########

திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளும், எழுதியவர்களின் தகுதிக் குறைவால் ஏற்பட்ட பிழைகளும் மலிந்த வரலாற்றுப் பாட நூல்களை NCERT நிறுவனம் மூலம் வெளியிட்ட போது நாடெங்கிலும் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. அந்தத் திரிபுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திப் பல மொழிகளிலும் நூல்கள் எழுதப்பட்டன. தமிழிலும் அப்படி ஒரு நூல் எழுதப்பட்டதோடு (‘பாட நூல்களில் பாசிசம்’) முன்னாள் துணை வேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், பேரா.ஜவாஹிருல்லாஹ், NCERT அமைப்பின் முன்னாள் தலைவர் அர்ஜுன் தேவ் ஆகியோர் பங்குபெற்ற மாநாடொன்றும் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த வரலாற்றுத் திரிபுகளுக்கும் கல்வித்துறையை இந்துத்துவமயமாக்கும் முயற்சிக்கும் எதிராக சென்னையில் ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதில் நான், முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், டாக்டர் சிவகுமார், திருமாவளவன், எம்.எஃப்.கான் முதலான பேராசிரியர்கள் தவிர சி.பி.அய், சி.பி.எம், காங்கிரஸ் முதலான கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றது குறிப்பிடத் தக்கது.

சென்னை மட்டுமின்றி மதுரை, குற்றாலம், திண்டுக்கல், வாணியம்பாடி முதலான இடங்களிலும் ஆசிரியர்கள் மத்தியில் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிராகக் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவற்றில் முன்னாள் துணைவேந்தர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.

###############

இதே நேரத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் சில ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சிந்து வெளி நாகரிகத்தை வேத நாகரிகமாகக் காட்டும் முயற்சியை மேற்கொண்டனர். மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த நாடோடி ஆரியர்களையும், அவர்கள் தம்மோடு கொணர்ந்த பூர்வ சமஸ்கிருத மொழி, குதிரை, சக்கர வாகனம் ஆகியவற்றை இவற்றோடு எள்ளளவும் தொடர்பற்ற சிந்து வெளியுடன் இணைக்க வேண்டிய தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்தது. இந்த நாட்டை ‘ஆரியவர்த்தம்’ எனவும், சமஸ்கிருதத்தை ‘மொழிகளின் தாய்’, ‘தேவ பாஷா’ என்றெல்லாமும் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அவர்களுக்கு இவை எதுவும் இந்த மண்ணுக்கு உரியவை அல்ல, மத்திய ஆசியாவிலிருந்து வந்தவை என்பது இன்றளவும் எரிச்சலூட்டும் உண்மைகள். தவிரவும் அவர்களால் ‘மிலேச்சர்’களாக அடையாளம் காணப்பட்ட உள் நாட்டு நாகரிகம் ஒன்று ஆரிய வருகைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே சிந்து வெளியில் ஓங்கியிருந்தது என்கிற வரலாறும் அவர்களைப் பொருத்த மட்டில் தொண்டையில் சிக்கிய ஒரு முள்.
3000 ஆண்டுகளுக்கு முன் நாடோடிகளாக வந்து கங்கைச் சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகளுடன் கலந்து இந்த மண்ணுக்கு உரியவர்களாகவே மாறிப்போன ஆரிய வம்சாவளியினரை மிலேச்சர்களாகவோ, அந்நியர்களாகவோ காணும் அரசியலோ பண்பாடோ நமக்குக் கிடையாது. ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்றவர்களை அந்நியர்களாகக் காட்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு ஆரியமும் பூர்வ சமஸ்கிருதமும் வெளி நாட்டுச் சரக்குகள் என்கிற உண்மைகள் தொண்டையில் சிக்கிய முள்தானே.

எனவே அவர்கள் சிந்துவெளி நாகரிகம் அழிந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் கங்கைச் சமவெளியில் உருவான வேதங்களும், குடியமர்ந்த ஆரியர்களும், ‘மொழிகளின் தாய்’ ‘தேவ பாஷா’ என்றெல்லாம் கொண்டாடப்படும் சமஸ்கிருதமும், ஆரியர்கள் கொண்டு வந்த குதிரைகளும், சக்கர வாகனங்களும் சிந்து வெளியிலேயே இருந்ததாக “நிறுவ” வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

அதை எப்படிச் செய்வது? இதுகாறும் அஸ்கோ பர்போலா போன்ற இத்துறை வல்லுனர்களாலும் கூட வாசிக்க இயலாத சிந்துவெளி முத்திரைகளை தாம் வாசித்துவிட்டதாகவும், அவற்றில் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லிவிடலாம். இந்த ‘ஐடியாவை’ உடனடியாகச் செயல்படுத்தினர் அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு என்.ஆர்.ஐ இந்திய ‘ஃப்ராடுகள்’. கடல் கடந்த இந்துத்துவர்களான இவர்களை நான் எத்தர்கள் எனச் சொல்வது கோபத்தால் அல்ல. இவர்கள் செய்தது ஃப்ராட் என்பதை மிஷேல் விட்ஸெல், ஸ்டீவ் ஃபெர்மர் என்கிற இத்துறை வல்லுனர்கள் விரிவான ஆய்வொன்றின் மூலம் நிறுவினர் (பார்க்க: அ.மார்க்ஸ், ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு மற்றும் http://www.safarmer.com/fsw2.pdf).
இது நிற்க. இந்துத்துவவாதிகளும் களத்தில் இறங்கினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சர் சி.பி இராமசாமி அய்யர் நிறுவனம் இந்தப் “புதிய கண்டுபிடிப்புகளை” விளக்கி வரலாற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றைத் தம் அலுவலகத்தில் நடத்தினர். இதைக் கேள்விப்பட்ட எங்கள் குழு இவற்றை அமபலப்படுத்தி இரவோடு இரவாக ஒரு நான்கு பக்க அறிக்கை தயார் செய்து அடுத்த நாள் காலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு முன் சாலையில் நின்று பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களிடம் விநியோகித்தது. அமைதியாக விநியோகித்துக் கொண்டிருந்த கருப்புப் பிரதி நீலகண்டன், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் செயல்படும் தோழர் நட்ராஜ் ஆகியோரை அந் நிறுவனத்தினர் உள்ளே இழுத்து, ஒரு அறியில் பூட்டி வைத்துப் போலீசில் ஒப்படைத்தனர். செய்தி அறிந்து நான், பேரா.எம்.எஃப்.கான், ‘தீக்கதிர்’ நாளிதழ் உதவி ஆசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் ஆகியோர் தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று ஒரு நாள் முழுக்க வாதாடி அவர்களை வழக்கில்லாமல் வெளியே கொணர்ந்தோம்.

இந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வது இந்தத் தருணத்தில் அவசியம் என்பதால் இவற்றைச் சொல்ல வேண்டி நேர்கிறது.

########

இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது. சென்ற வாரத்தில் இரு நிகழ்வுகள்.

1.இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் இப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ராணி, எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் என்பவரை நியமித்துள்ளார். தகுதியற்ற நபர் என வலாற்றறிஞர் ரொமிலா தப்பார் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.

சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு – ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார். இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாக வரலாற்றில் செயல்பட்டு வந்துள்ளது எனவும் இது குறித்து எந்தத் தரப்பினரிடமிருந்தும் எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லை எனவும் அக் கட்டுரையில் அவர் கூறுகிறார். வரலாற்றறிஞர் டி.என்.ஜா இதுபற்றி அடித்துள்ள ‘கமென்ட்’: “அவருக்குத் தெரியாது போல. .அந்த ‘சிஸ்டம்’ இப்பொழுது இருந்தால் மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென.”

2. சி.பி.எஸ்.சி அமைப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் எனத் தனது 15,000 பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதற்குச் சொல்லப்பட்டுள்ள காரணங்களில் ஒன்று “சமஸ்கிருதம் மொழிகளின் தாய்” என்பது. இன்னொரு காரணம் அதுதான் இந்திய வரலாற்றுடன் பிணைந்துள்ள மொழியாம்.

இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்தே கிளைத்தன எனவும், அது தேவ பாஷை எனவும் மற்றவை நீச பாஷை எனவும் இங்கு பார்ப்பனர்கள் சொல்லி வந்ததற்கு ஆப்பு வைத்தது சென்ற நூற்றாண்டுகளில் முன்வைக்கப்பட இரு மொழி இயற் கண்டுபிடிப்புகள், சர் வில்லியம் ஜோன்ஸ், ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், பிஷப் கால்டுவெல் ஆகியோரின் மொழி இயல் ஆய்வுகள்தான் அவை. பூர்வ சமஸ்கிருதத்தின் தோற்றத்தை இந்திய மண்ணைக் காட்டிலும் இந்தியாவுக்கு வெளியில்தான் காண வெண்டுமென நிறுவினார் ஜோன்ஸ் (1786). ஐரோப்பிய மொழிகளான கோதிக், செல்டிக், இதாலி, பிரெஞ்சு முதலான மொழிகளுடனேயே அதைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். பூர்வ சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் மொழிகளில் எல்லோரும் அறிந்த முக்கிய மொழிகள் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை. சமஸ்கிருதம், இந்தி, பாலி, பிராகிருதம் முதலான மொழிகள் “இந்தோ ஆரிய” மொழிக் குடும்பத்தச் சார்ந்தவை, அவற்றிற்கும் இந்தியாவில் நிலவும் இன்னொரு மொழிக் குடும்பமான திராவிட மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஆரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலான மொழிகளுக்கிடையேயான ஒப்புமையை முதன் முதலில் ஆய்வுரையாகத் தந்தவர் சென்னைக் கோட்டையில் பணியாற்றிய ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் எனும் ஆங்கில அதிகாரி (1816). பின் அதை ராபெர்ட் கால்டுவெல் விரிவாக்கினார் (1856).

இவை இன்று மொழியியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகள். உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. ஆக சமஸ்கிருதம் எந்த வகையிலும் “மொழிகளின் தாய்”, அல்லது குறைந்தபட்சம் “இதிய மொழிகளின் தாய்” என அழைக்கப்படுவதற்குத் தகுதி உடையதல்ல. அவ்வாறு சொல்வது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, தமிழ் போன்ற தனித்துவமும், நீண்ட வரலாறும், ஏராளமான இலக்கியச் செல்வங்களும் உள்ள மொழிகளை இழிவு செய்வதும் கூட

ஆனால் பா.ஜ.க அரசு இதைத் தவறுதலாகச் செய்துவிடவில்லை. திட்டமிட்டுத்தான் செய்கின்றனர். சென்ற ஆட்சியிலும் 1999-2000 ஆண்டு சமஸ்கிருத ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம் சமஸ்கிருத வாரமாக அனுசரிக்கப்பட்டது. 2001ம் ஆண்டில் மாபெரும் சமஸ்கிருத மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வாஜ்பேயி, ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுக்களில் சமஸ்கிருதம் தொடர்பான அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. சுருக்கம் கருதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இந்துத்துவமும் சமஸ்கிருதமும் பிரிக்க இயலாத ஒன்று, இந்துத்துவத்தை நிலைநாட்ட சமஸ்கிருத மேன்மையை நிறுவவேண்டும் என்பதே அப் பேச்சுக்களின் சாரம்.

வழக்கிழந்த சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்ப்பித்து “அன்றாட பேச்சு மொழி” யாக ஆக்க இயலாவிட்டாலும் மக்கள் மனத்தில் “மொழிகளின் தாய்” ஆக நிறுவி விவது அவர்களின் பெரு விறுப்பு. 2004ல் ஆட்சி மாறியதன் விளைவாக அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை.

இன்று அவர்கள் ஆவேசமாகக் களமிரங்கியுள்ளனர்.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான்

இரண்டு நாட்கள் முன்னர் ஒரு மதியப் பொழுதை நண்பர் கவிஞர் பழமலையோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குடந்தையில் எனக்குச் சில அருமையான இலக்கிய நண்பர்கள். என் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில் அவர்களின் ஊர் அம்மாசத்திரம் பட்டுப் புடவைகளுக்குப் பெயர்போன திருபுவனம், சோழர் காலக் கற்றளிகளில் ஒன்றால் பெயர் பெற்ற ஊர் அங்கிருந்து ஒரு கி.மீ. காவிரிக் கரையோர ஊர்கள்.

நண்பர்கள் கார்ல் மாக்ஸ், அம்மா சத்திரம் சரவணன், இளங்கோவன், சேதுராமன், ரவி,,,, மறைந்த இனிய நண்பர் கனகசபை… கவிஞர் தேவ ரசிகன், கலை விமர்சகர் தேனுகா ஆகியோரின் வீடும் அருகில்தான்.

சிற்றிதழ்கள், நவீன இலக்கிய வடிவங்கள், நாவல்கள், கதைகள் படிப்பது, விமர்சிப்பது.. கவிஞர்கள், எழுத்தாளர்களைக் கொண்டாடுவது என ஒரு அற்புதமான கும்பல். யூமா வாசுகி, விக்ரமாதித்தன், ஃப்ரான்சிஸ் கிருபா முதலானோரின் இடைத் தங்கல்களில் அம்மாசத்திரம் முக்கியமான ஒரு சந்தி. சரவணனின் திருமணம் ஒரு இலக்கியத் திருவிழாவாகவே நடந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் அன்று வெளியிடப்பட்டது. அவ்வப்போது இலக்கிய விழாக்களும் எடுப்பார்கள். கடைசியாக நடந்த நிகழ்ச்சி கவிஞர் தேவதேவனுக்கு ஒரு விமர்சன விழா… எனினும் இது போன்ற இலக்கியக் கும்பல்கள் அவ்வப்போது கலைவதும் கூடுவதும் சகஜம்தானே,. குடும்பம், சம்பாத்தியம், பொருள் வயிற் பிரிவு…. இவை வாழ்வில் தவிர்க்க இயலாதவைதானே…

பொதியவெற்பன் ஊரை விட்டுப் போய்விட்டார். என் எழுத்துக்களின் முதல் விமர்சகராகவும் உயிர்த் துணையாகவும் இருந்த முத்து உலகை விட்டே போய்விட்டார். கல்லூரி ஆசிரிய நண்பர்களோடு இப்போது தொடர்பே இல்லை. குடந்தையில் இருக்கும் நாட்களில் வீடு, கணினி, புத்தகங்கள்,.. இவை தவிர எனக்கு இப்போது நண்பர்கள் என்றால் அம்மாசத்திரம் இலக்கிய வட்டம்தான். அவர்கள் உல்லாசமாகக் கூடும் நாட்களில் தவறாமல் என்னை அழைப்பார்கள். பெரும்பாலும் நான் சென்னையில் அல்லது வேறெங்காவது இருப்பேன். தீபாவளி, பொங்கலில் குடந்தையில் இருக்கும் வாய்ப்பு அதிகம். அந்த நாட்களில் எங்களின் சந்திப்பு கோலாகலமாக இருக்கும்.

இந்த ஆண்டு சுதந்திர நாளில் கார்ல் மாக்ஸ் சவூதியிலிருந்து விடுப்பில் வந்திருந்தார். அன்று காலையில் அழைப்பு வந்தது. காவிரிக்கரையில் தென்னந்தோப்பு ஒன்றில் அந்த மதிய நேரச் சந்திப்பு வழக்கம்போல இலக்கிய விவாதங்களோடு உற்சாகமாகக் கழிந்தது. எங்கள் விவாதம் எங்கெங்கோ சுற்றி பழமலையிடம் வந்து நின்றது. பழமலையோடு என் அனுபவங்களை அவர்கள் மிகவும் ரசித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் சுகுமாரன் பழமலை சற்றே உடல் நலமின்றி இருப்பது குறித்துச் சொன்னதை நினைவு கூர்ந்தேன். அப்போது முடிவானதுதான் அடுத்த நாள் விழுப்புரம் சென்று பழமலையைச் சந்திப்பது என கிட்டத் தட்ட நான்கு வருடங்களாவது இருக்கும் நான் அவரைச் சந்தித்து.

#######################

அப்போது வாரா வாரம் நான் அவரைச் சந்திப்பேன். அது எண்பதுகளின் பிற்பகுதி. நான் ஒரு தண்டனை இட மாற்றத்தில் குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்குச் சில ஆண்டுகள் முன்பாகவே பழமலை எனக்குப் ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின்’ ஊடாக அறிமுகம் ஆகி இருந்தார். பு.ப.இ என்பது அன்றைய மக்கள் யுத்தக் குழுவின் (இன்றைய மாஓயிஸ்ட் கட்சி) பண்பாட்டு அமைப்பு. All India League for Revolutionary Culture (AILRC) என்கிற அனைத்திந்திய அமைப்பின் ஓர் அங்கம். நக்சல்பாரி இயக்கம் கடுமையான அடக்குமுறையை எதிர் கொண்டிருந்த காலம் அது.

சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி, இல்லை விலக்கப்பட்டு நான் இருந்த நாட்களில் என்னுடன் அரசு கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் மறைந்த தோழர் கோ.கேசவன், கல்யாணி (இன்றைய பிரபா கல்விமணி), கோச்சடை மூவரும் தஞ்சை வந்து சந்தித்தனர். முன்னதாகக் கேசவனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரோடு நெருக்கமாக இருந்தவன் நான். அப்புறம் என்ன, அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினேன். நாங்கள் நால்வரும் கட்சி, பு.ப.இ இரண்டிலும் இருந்து செயல் பட்டோம். விழுப்புரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பழமலை, அப்போதுதான் சட்டப் படிப்பை முடித்து விட்டு சிண்டிகேட் வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்த ரவிக்குமார் முதலானோர் பண்பாட்டு இயக்கத்தில் இருந்தனர். நான் அவர்களோடு தொடர்பு கொண்ட பின் நடந்த முதல் கூட்டம் விழுப்புரத்தில் ஒரு வீட்டு மாடியில்தான் நடந்தது.

அப்போதுதான் நான் முதன் முதலில் பழமலையைச் சந்தித்தது.

##########################

பு.ப.இ தொடங்குவதற்கு முன்னதாகவே பேரா. கல்யாணி, பழமலை, சூரி (திருக்குறள் முனுசாமி அவர்களின் மகன்), பாலு, விழி.பா இதயவேந்தன், ரவி கார்த்திகேயன் முதலானோர் இணைந்து விழுப்புரத்தை மையமாகக் கொண்டு ‘நெம்புகோல்’ என்றொரு இயக்கமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டத்தில் உள்ள சௌந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்த கல்யாணி அப்போது இந்த ஊருக்குப் பேராசிரியராக வேலைக்கு வந்து அப்படியே இந்தப் பகுதியோடும் இவர்களோடும் ஒன்றிக்கலந்தவர் .

பழமலை அவர்களில் மூத்தவர். பாலு, ரவி கார்த்திகேயன், இதயவேந்தன் எல்லோரும் அவரின் மாணவர்கள். பழமலை அவர்களோடு பாடுவார். அவர்களுக்குப் பாட்டெழுதித் தருவார். உள்ளூர்க்,காரர், பேராசிரியர், அவ்வூரின் ஆதிக்க சாதி ஒன்றைச் சேர்ந்தவர், எல்லோராலும் மதிக்கப்படுபவர் என்றெல்லாம் இருந்தும், ஊருக்குப் புதிய கல்யாணி, தனது இளம் மாணவர்கள், தலித் தோழர்கள் எல்லோரோடும் சேர்ந்து கையில் பறை ஏந்தித் தெரு முனைகளில் பாடித் திரிந்தவர் பழமலை.

குறுந்தாடி, எப்போதும் சிரிப்பு மாறாத முகம், நகைச் சுவை, அவைக் கூச்சமில்லாத ‘பச்சை’ நகைச்சுவைகள்…. பழமலை எனக்கு நெருக்கமானார். பல அம்சங்களில் அவரின் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் அவரைச் சந்தித்த முதல் கூட்டத்திலேயே அவர் ஒரு கலக்குக் கலக்கினார். Revolutionary Cultural Movement என்பதற்கு இணையாக “புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம்” என்கிற தலைப்பில் அறிக்கை தயாரித்து வந்திருந்தார் கேசவன். எல்லோரும் அறிகையில் சில அம்சங்கள் மீது விவாதம் செய்து கொண்டிருந்தனர். பழமலை ஒது புதுப் பிரச்சினையைக் கிளப்பினார். “அதென்ன புரட்சிகரப் பண்பாடு? அங்கே இந்தக் ‘கர’த்துக்கு என்ன வேலை? புரட்சிப் பண்பாடு என்று சொன்னால் போதாதா? புரட்சி ‘கரம்’ தேவைதானா?” பழமலையின் இந்தக் கேள்வி அங்கே பலருக்கும் பிடிக்கவில்லை. விவாதத்தைத் திசை திருப்புகிறார் என்று வேறு எரிச்சல். ‘புரட்சிகரம்’ என்று சொல்வதுதான் வழக்கம்,அது என்ன மொட்டையாகப் ‘புரட்சிப் பண்பாடு’ என்றெல்லாம்தான் எல்லோருக்கும் தோன்றியதே ஒழிய யாராலும் புரட்சிக்கும் பண்பாட்டுக்கும் இடையில் அந்தக் ‘கரம்’ ஏனென்பதை விளக்க இயலவில்லை. இறுதியில் பழமலைதான் வெற்றி பெற்றார். கரத்தை ஒடித்து விட்டு வெறும் ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’ எனப் பெயர் சூட்டினோம்.

###################

பு.ப.இ யின் ஊடாக மட்டுமில்லாமல் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் ஊடாகவும் எனக்கும் அவருக்குமான நட்பு இறுகியது. அப்போது நான் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர். சிவக்குமார் தலைவர். கேசவன், திருமாவளவன், கோச்சடை, கல்யாணி எல்லாம் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்தனர். இது போதாதா நம் சி.பி.அய், சிபிஎம் தோழர்களுக்கு. அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை நக்சலைட்டுகள் கைப்பற்றி விட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். எங்களை ஓரம் கட்ட அவர்கள் சாதீய, பிற்போக்கு சக்திகளுடனும் அவர்கள் இணைந்து கூட்டணி அமைத்தனர்.

அப்போது ஆசிரியர் கழகத்தின் சார்பாக ஒரு கலைக் குழு உருவாக்கலாம் என முடிவு செய்தோம். சங்கத்தின் காலாண்டிதழையும், இந்தக் கலைக்குழுவையும் தலைமைக் கழகத்தின் சார்பாக வழி நடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இதழாசிரியர் கவிஞர் மீரா. கலைக்குழு அமைப்பாளர் பழமலை. ஒரு முறை விழுப்புரத்தில் கலைகுழுப் பயிற்சி அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். பயிற்சி தொடங்கும்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி அங்கு வந்தார். அப்போது அவர் எங்களோடு கல்லூரி ஆசிரியர். விழுப்புரம் அரசு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியர். சங்க நடவடிக்கைகளில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. என்ன திடீரென இவர் என யோசித்தேன்.

‘நீங்கள் எல்லோரும் நக்சலைட்கள். இந்தப் பண்பாட்டு அமைப்பு அந்த அரசியலை கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் விதைக்கச் செய்யும் முயற்சி என அவர் குற்றம் சாட்டினார். நீண்ட நேரம் விவாதம் நடந்தது. கல்யாணி பொன்முடிக்கு நெருக்கமானவர். பொன்முடியால் பெரிதும் மதிக்கப்படுபவர். அவர் பொன்முடியைச் சமாதானப் படுத்தினார். பின் பொன்முடியும் எங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பாடி விட்டுப் போனார். அவர் அவ்வளவு சிறப்பாகப் பாடுவார் என அன்றுதான் எனக்குத் தெரியும். நாங்கள் பொறுப்பில் இருந்தவரை பழமலையின் தலைமையில் அந்தக் கலைக் குழுவும் இயங்கியது. அடுத்து பொறுப்பேற்றவர்கள் அதை ஊற்றி மூடினர்.

####################

இந்த நேரத்தில் தான் எனக்கு அந்தத் தண்டனை இடமாற்றம் வந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மதியமே கல்லூரியிலிருந்து புறப்பட்டு விடுவேன். குடியாத்தத்திலிருந்து வேலூர் வருவேன். அப்போது அங்கிருந்து நேரடியாக குடந்தைக்கு அதிகப் பேருந்துகள் இல்லை. இருந்தாலும் கூட விழுப்புரம் பஸ்சிலேயே ஏறுவேன். விழுப்புரத்தில் அப்போது புதிய பேருந்து நிலையம் கிடையாது. இப்போதுள்ள பழைய பஸ்ஸ்டாண்ட் மட்டும்தான். அருகில் சில அடி தூரத்தில் கன்னியாகுளத் தெருவில்தான் பழமலையின் வாடகை வீடு.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, சில நாட்கள் அவர் வீட்டிலேயே சாப்பிட்டும் விட்டும் புறப்படுவேன்.

அப்போதுதான் அவர் ஒருமுறை ஒரு அழகான நோட்டுப் புத்தகம் ஒன்றில் நிறுத்தி அழகாக எழுதி வைத்திருந்த ‘சனங்களின் கதை’ கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அப்போதெல்லாம் வெளியீட்டு வாய்ப்புகள் குறைவு. வெளியீட்டு வாய்ப்பு இல்லாமல் அவர் அதை வெளியிடாமல் வைத்திருந்தாரா இல்லை அவருக்கே அதை வெளியிடக் கூடிய ஒன்று எனக் கருத்தில்லையா – எதன் காரணமாக அது வெளியிடப்படாமல் நீண்ட நாட்களாக கையெழுத்து வடிவிலேயே கிடந்தது என இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

அது வெளி வந்து மிகப் பெரிய அளவில் அடித்தள மக்களால் பாராட்டப்பட்டபோது கூட சுந்தர ராமசாமி போன்றவர்கள அதைக் கவிதையாக அங்கீகரிக்கவில்லை. ஒரு முறை கல்யாணி வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். இரண்டு நாட்கள் சவுந்தரபாண்டிய புரத்திலேயே தங்கி இருந்தோம். ஒரு நாள் அப்படியே நாகர்கோவில் வந்தபோது எல்லோரும் சுந்தரராமசாமி வீட்டிற்குச் சென்றிருந்தோம். அதச் சந்திப்பு குறித்துத் தனியே எழுத வேண்டும். அந்தக் குழுவில் பழமலை, நான், பழனிச்சாமி, ரவிகுமார் இன்னும் சிலர் இருந்தோம். பேச்சு வாக்கில் பழமலை நேரடியாகவே கேட்டுவிட்டார். “என்னுடைய கவிதைகளைப் படிச்சீங்களா? உங்க கருத்து என்ன? ஒண்ணும் சொல்லலியே?” சுந்தரராமசாமி சொன்னார்: “படிச்சேன், படிச்சேன்… அது… நீங்க செய்திகளை அப்படியே கவிதைன்னு சொல்றீங்க. ஆனா அது கவிதையா இல்லை”

திரும்பி வரும்போது நிலவிய இறுக்கமான மௌனத்தைப் பழனிச்சாமி கலைத்தார். “என்ன பழமலை, சுந்தர ராமசாமி உங்களை ‘நியூஸ் பொயட்’ ன்னு சொல்லிட்டாரே…”. அதற்குப் பழமலை சொன்ன பதில் பிரசித்தமானது. அது இங்கு தேவை இல்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் இலக்கியத்தின் வடிவம், அழகு, உள்ளடக்கத்துடன் அது பொருந்தும் தன்மை ஆகியவை பற்றி ஆழமாகப் பேசக் கூடிய அன்றைய முக்கிய இலக்கிய விமர்சகரான சுந்தர ராமசாமியாலேயே அதைக் கவிதையாக ஏற்க இயலாத காலம் அது என்பதுதான். எனக்கும் அப்போது கையெழுத்துப் பிரதியாக இருந்த அது முதல் வாசிப்பில் கவிதைகளாய்ப் படவில்லை. ஆனால் அவை ஏதோ ஒரு வகையில் முக்கியமானவை என்று மட்டும் புரிந்தது.

##################

அந்தக் காலகட்டம் பற்றிச் சொல்லியாக வேண்டும். சோவியத் யூனியன் ஆட்டம் கண்டு கொண்டிருந்த காலம். அம்பேத்கர் நூற்றாண்டுக்கு முன்னும் பின்னுமாக இங்கு ஒரு தலித் எழுச்சி உருக்கொண்டிடிருந்த காலம். இந்திய அளவில் அடித்தள மக்கள் ஆய்வுகள் (Subaltern Studies) கவனம் பெற்றிருந்த காலம்.

நாங்கள் எல்லாம் அவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தோம். குடந்தையில் இரண்டு நாட்கள் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ கருத்தரங்கம் நடத்தினோம். ‘தலித் அரசியல்’ நூல் வெளியிட்டோம். தலித்தியம், பெண்ணியம், அடித்தள மக்கள் வரலாறு, இதுகாறும் அதிகாரத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் இடமும், குரலும் மறுக்கப்பட்டவர்களுக்கான இடம் என்பது குறித்த கேள்வி தமிழகமெங்கும் ஒலித்த காலம். ‘நிறப்பிரிகை’ இந்த எழுச்சியைப் பிரதிநிதித்துவப் படுத்திய வகையில்தான் அது முக்கியம் பெற்றது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஒரு நீங்கா இடம் அதற்கு உரித்தானது இப்படித்தான்.

நான் அடுத்த வாரம், அதற்கு அடுத்த வாரம் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பழமலையிடம் கேட்டு அந்தக் கையெழுத்துப் பிரதியை எடுத்துத் தரச் சொல்லி வாசித்தேன். ஒரு நாள் பழமலை அவருக்கே உரித்தான வடிவில் இப்படிக் கேட்டார் : “என்ன இபிடி திருப்பித் திருப்பிப் படிக்கிறீங்க. உங்களுக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சா?” “இல்ல. இதை நாங்க வெளியிடலாமான்னு பார்க்கிறேன்…”

###############################

அப்போது தலித் இலக்கியம் உள்ளிட்ட அடித்தளப் பிரதிகள் வெளியீடு காண்பது அரிது. டானியல் உயிருடன் இருந்தவரை சொந்தக் காசில்தான் தன் நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் இறந்த பின் விட்டுச் சென்றிருந்த ‘கானல்’ நாவலை அடுத்த பல ஆண்டுகள் வரை என்னால் வெளியிட இயலவில்லை. இந்தச் சூழலில்தான் ஒருமுறை வேல்சாமியும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது இப்படியான நூல்களை வெளியிட ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன என யோசித்தோம். வேல்சாமி தன் சொந்த முயற்சியில் ப்த்தாயிரம் ரூபாய் வரை திரட்டித் தந்தார். அப்போது அது ஒரு நல்ல தொகை. இரண்டு அல்லது மூன்று நூல்கள் கூட அதைக் கொண்டு வெளியிட்டு விடலாம். சிலிக்குயில் பதிப்பகம் நடத்திக் கொண்டிருந்த தோழர் பொதியவெற்பனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அவற்றை வெளியிடலாம் எனவும் முடிவு செய்தோம்.ஒரு ஏழெட்டு நூல்கள் அப்படி வெளி வந்தன. அவற்றில் ஒன்றாகப் பழமலையின் ‘சனங்களின் கதை’ வெளி வந்து சில மாதங்கள் வரை நாங்கள் செய்தது புத்திசாலித் தனமான காரியமா என எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் சில மாதங்களுக்குப் பின் ஒரு மிகப் பெரிய வரவேற்பு, நாங்களும் ஏன் பழமலையும் கூட எதிர்பாராத ஒரு வரவேற்பு அதற்குக் கிட்டியது. ஊரெங்கும் அதே பேச்சுத்தான். ஏகப்பட்ட இளைஞர்கள் பழமலை பாணிக் கவிதைகளை இயற்றத் தொடங்கினர். நம்மிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது, அதை நம்மாலும் சொல்ல இயலும். அதைக் கேட்பதற்கும் மக்கள் இருக்கின்றனர் என்கிற தன்னம்பிக்கையை ஆயிரம் ஆயிரம் அடித்தள இளைஞர்கள் மத்தியில் ‘சனங்களின் கதை’ உருவாக்கியது எனில் அது மிகை இல்லை. அப்படி ஆனதற்கு அன்று இங்கு உருவாகியிருந்த தலித் மற்றும் அடித்தள மக்களின் எழுச்சி பின்னணியாக இருந்தது. அதில் அப்போது வன்னியர்கள் உள்ளிட்ட அடித்தள மக்களின் உரிமைகளை முன்னிறுத்திய பா.ம.கவிற்கும் ஒரு பங்குண்டு,

#################

நாங்கள் அப்போது அடித்தள மக்களின் அரசியலை மட்டும் பேசவில்லை. பிரதிகளில் வெளிப்படும் அதிகாரத்தின் குரல்கள், தந்தை வழிச் சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கட்டுடைத்தல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். பெண்ணியம் குறித்து நாங்கள் எழுப்பிய விவாதங்கள் தமிழகத்தை உலுக்கின என நான் இன்று சொன்னால் அது மிகைக் கூற்று என அன்றைய காலச் சூழலை ஆய்வு செய்கிற யாரும் அவ்வளவு எளிதாக நிராகரித்துவிட இயலாது.

அப்படித்தான் பழமலையின் சனங்களின் கதையை வெளியிட ஆர்வம் காட்டின நானே அதில் வெளிப்படும் விவசாயச் சமூக உளவியல் குறித்தும் எழுதினேன். அது பொதியவெற்பனின் ‘பறை’ சிறப்பிதழில் வெளி வந்தது. விவசாய உளவியலில் பிரிக்க இயலாது கிடக்கும் தந்தை வழிச் சமூக ஆணாதிக்கக் குரல், சாதீய மனோபாவம் ஆகியவற்றைச் சனங்களின் கதை எவ்வாறு சுமந்து நிற்கிறது எனச் சொல்லிய எனது அந்தக் கட்டுரையும் பெரிய அளவில் கவனம் பெற்றது.

####################

ஒன்றைச் சொல்ல வேண்டும். பழமலையும் நானும் எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களோ அந்த அளவிற்கு எங்களிடையேயான கருத்து முரண்களும் இடைவெளிகளும் அதிகம். அவரால் நாங்கள் பேசிய பின் நவீனத்துவம், கட்டுடைப்பு ஆகியவற்றை எந்நாளும் செரித்துக் கொள்ள இயலவில்லை, அவரிடம் குடி கொண்டுள்ள விவசாயச் சமூக உளவியல் பா.ம.கவின் இன்றைய சாதி ஆதிக்க அரசியலைக் கூட ஏற்கும்; ஆனால் இந்தக் கட்டுடைப்பு வேலைகளை அதனால் ஏற்கவே இயலாது.

அது நேற்றைய விவாதத்திலும் வெளிப்பட்டது. அது ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பு. என்னுடன் வந்த மூவரும் இப்படியான ஒரு நெருக்கமான சந்திப்பில் முதல் முறையாக இப்போதுதான் அவரோடு கருத்துக் கலக்கிறார்கள். எங்களின் சுமார் மூன்று மணி நேர உரையாடலில்,அந்த உணர்ச்சிகரமான சந்திப்பிற்கும், நகைச்சுவை வெடிகளுக்கும் அப்பால் அவரது போஸ்ட்மாடர்னிச எதிர்ப்பு கடைசிவரை இழையோடியது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ‘போஸ்ட்மார்டனிசம் என அவர் நினைத்துக் கொண்டிருப்பதன் மீதான எதிர்ப்பு’ இழையோடியது. நானோ இல்லை கார்ல் மாக்சோ அப்படி ஒன்றும் போஸ்ட் மார்டனிசத்தைக் ‘கொள்கை’யாக அறிவித்தவர்கள் இல்லை. பழமலையும் அப்படி ஒன்றும் போஸ்ட்மாடர்னிசத்தை ஆழக் கற்றவருமில்லை. இருந்தாலும் விவசாயச் சமூக உளவியலை அடித்தளமாகக் கொண்டு அதற்கு ஒவ்வாத மதிப்பீடுகள் அனைத்தையும் போஸ்ட் மார்டனிசச் சீரழிவுகளாக அவர் கிண்டலடித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டுமே இருந்தார்.

நிறப்பிரிகையுடன் தொடர்பில் இருந்த இளம் எழுத்தாள நண்பர் உ.சே. துளசியை இன்று பலரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அந்தக் கால கட்டதில் இதை எல்லாம் பேசப் புகுந்த ஒரு அற்புதமான இளைஞர். அவரது தற்கொலைக்கு அவரது இளம் வயதுத் திருமணம் உட்படப் பல காரணங்கள் இருந்தன. எங்களை மிகவும் பாதித்த ஒரு மரணம் அது. பழமலை ஏதோ ஒரு இதழில் துளசியின் மரணத்திற்கு அப்போது பேசப்பட்டுக் கொண்டிருந்த பின் நவீனத்துவம், அதைப் பேசிய நிறப்பிரிகை, முக்கியமாக நான்தான் காரணம் என எழுதினார்.

நொந்து போனேன் நான்.

தற்கொலைகளைக் கொண்டாடி நான் எங்கும் எழுதியதில்லை. ஆனால் பழமலையைப் பொருத்தமட்டில் போஸ்ட்மார்டனிச ஆதர்சங்கள் எல்லோரும் ஓரினப் புணர்ச்சியாளர்கள், தற்கொலையாளிகள், திருட்டு முதலான எல்லாக் குற்றங்களையும் நியாயப் படுத்துபவர்கள், மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று சிறை ஏகியவர்கள்…நேற்று நான் அப்படி அவர் எழுதியதை நினைவுபடுத்திய போதும் அவர் மறுக்கவில்லை. அவர் நிலைபாட்டில் மாற்றமில்லை. “ ஆமா. நீங்கதானே காரணம். நீங்கதானே அதை ஆதரிச்சு எழுதுனீங்க. அதைக் கொண்டாடினீங்க…..” என்றார்.

###########################

பா.மக வின் தோற்ற கால அரசியலில் காணப்பட்ட முற்போக்குக் கூறுகளை ஆதரித்த நாங்கள், அக்கட்சி பாதை விலகியபோது அந்த நிலைபாட்டிலிருந்து விலகினோம். அதை நிராகரித்தோம். ஆனால் பழமலை பா.ம.க உடன் கூடவே சென்றார். செல்கிறார். செல்வார்.

#####################

எனினும் அவரது இந்த சாதி ஆதரவு நிலைபாடும், அவரது வாசிப்பில் ஏற்பட்ட தேக்கத்தின் விளைவான அவரது இலக்கிய / அரசியல் வெளிப்பாடுகளும் அவரிடமிருந்து பலரையும் அந்நியப்படுத்தின.

இரண்டாண்டுகளுக்கு முன் பழங்குடி இருளர் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து விழுப்புரத்தில் நடந்த ஒரு ஆர்பாட்டத்திற்கு கல்யாணியின் அழைப்பின் பேரில் நானும் சென்றிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின் அங்கு ரவி கார்த்திகேயனைப் பார்த்தேன். ரவி பழமலையின் மாணவர்; நெம்புகோல் அமைப்பில் பழமலையுடன் செயல்பட்டவர். விழுப்புரத்துக்காரர். ஆனால் அப்பகுதியின் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவரல்ல. தி.மு.க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த பொன்முடியின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர். அப்போதெல்லாம் அவரை அவ்வளவு எளிதாகப் பார்க்க இயலாது. தி.மு.க ஆட்சி வீழ்ந்ததன் விளைவாக இப்போது அவர் சற்று ஓய்வாக உள்ளார்.

“என்ன ரவி, எப்டி இருக்கீங்க?” என்றெல்லாம் விசாரித்த கையோடு, “பழமலை எப்டி இருக்கார்?” என்றேன். “அதை ஏன் சார் கேக்குறீங்க. அவர் ரொம்பவும் சாதி அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டார்….”

ரவி கார்த்திகேயன் சமீபமாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். பழமலை ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கி எல்லோரையும் அழைத்துள்ளர். ரவியும் போயிருக்கிறார். கூட்டத்தைத் தொடங்கிய பழமலை, “ நம்ம ஆளுங்கதான் இங்கே வந்திருக்கீங்க. அப்படித்தான் அது இருக்க முடியும், பாருங்க ஒண்ணு, ரண்டு, மூணு …. ஒரு ஆறு பேர்தான் வேற ஆளுங்க இங்கே வந்திருக்காங்க’’ எனப் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது ரவி எழுந்திருந்து, “சார், நீங்க இலக்கிய அமைப்பு தொடங்குறீங்களா, இல்லை சாதி அமைப்பு கட்றீங்களா?” எனக் கேட்டுள்ளார். அதற்குப் பழமலை. “யாரது, ராவி கார்த்திகேயனா? உன்ன நான் கவனிக்கல. நீயும் வந்திருக்கியா? சரி அப்ப நீங்க மொத்தம் ஏழு பேரு” எனப் பேச்சைத் தொடங்கியுள்ளார். ரவி மனம் நொந்து போய் வெளி நடப்புச் செய்துள்ளார்.

நேற்று நான் நகைச்சுவையாக இதை பழமலைக்கு நினைவுபடுத்தியபோது. “ஓ ரவி அப்டிச் சொன்னானா? ஆமா சொன்னேன்; ம்ம்ம்ம்… ” என அதை அங்கீகரித்தார் பழமலை.

########################

பழமலைக்கு இப்போது வயது 70. மிகவும் உடல் தளர்ந்துள்ளார். இலக்கிய உலகுடன் அவர் தொடர்பற்றுப் போயிருப்பதும் சம கால மாற்றங்கள், அசைவியக்கங்கள் ஆகியவற்றிலிருந்து ரொம்பவும் தொலைவில் இருப்பதும் அவரது ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்டது.. புதிய படைப்புகள், இன்றைய விவாதங்கள், புதிதாய் உருவாகியுள்ள எலக்ட்ரானிக் ஊடகங்கள் குறித்து அவருடைய அறிதலும் புரிதலும் சுழி. அவர் கணினியையும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

அவரது விவசாய உளவியலுக்கு ஒவ்வாத இன்னொருவர் சாரு நிவேதிதா. அவர் குறித்தும் நேற்று அடிக்கடிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பழமலையைப் பொருத்த மட்டில் சாருவின் கடைசி நாவல் ஃபேன்சி பனியன்கள் தான். அந்த அளவோடு சாரு பற்றிய அவர் வாசிப்பு முடிந்திருந்த்து.

############################

என்னைப் பொருத்தமட்டில் பழமலையின் ஒரே படைப்பு சனங்களின் கதை மட்டுந்தான். அதற்குப் பின் அவரது நான்கைந்து நூல்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றை அவர் எழுதியிருக்க வேண்டியதில்லை. அவரது ஒரே நூல் சனங்களின் கதை மட்டுமே. அந்த ஒன்று போதும் அவரை நாமும் நினைவில் ஏந்துவதற்கு.

######################

விழுப்புரத்திலிருந்து திரும்பிவரும்போது நண்பர்கள் பழமலையின் சனங்களின் கதையிலிருந்து பல காட்சிகளை அவரது வார்த்தைகளிலேயே சொல்லிக் காட்டியபோது, அவரது சனங்களின் கதையை அப்படியே ஒப்பித்த போது நான் வியந்து போனேன்.

வன்னியர் உலகின் கடை மடைப் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்களிடம் பழமலை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்லார், அதில் எத்தனை நியாயங்கள் உள்ளன என்பதை நேற்று நான் இன்னொரு முறை உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது. பழமலை ஒரு சகாப்தத்தின் வெளிப்பாடு. இதுவரை குரலற்றுக் கிடந்தவர்களிடம், “உங்களுக்கும் எழுத உண்டு; சொல்ல உண்டு” எனச் சொன்னவர் அவர். அந்த வகையில் அடித்தள மக்களின் நியாயங்களைப் பேசும் நம் எல்லோரது நன்றிக்கும் உரியவர்.

புறப்படும்போது அவரிடம் கேட்டேன். இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கீங்க? ராமசாமிப் படையாட்சியின் வரலாற்றை எழுதத் தகவல்கள் சேகரித்துக் கொண்டுள்ளாராம். “யாரும் கண்டுக்காத இந்த (வன்னியர்) சமுதாயத்தைப் பத்தி அவங்க உரிமைகளைப் பத்தி முதல்ல பேசுனவர் அவரு. இன்னைக்கு இந்தச் சமூகத்துக்கு அவர் யாரு, எங்க பிறந்தவரு, என்ன செஞ்சாருன்னு ஒண்ணும் தெரியாது. அவரோட வாழ்க்கையை எழுதணும்.”

உண்மைதான். தலித்களுக்கு அடுத்தபடியாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த அந்த மக்களின் நியாயங்களையும் அரசியலையும் முதன் முதலில் பேசியவர் அவர். இன்றைய பா.ம.க அரசியலைப்போல தலித்களை எதிரியாக வைத்து ஒரு சாதி வெறி அரசியலைச் செய்தவரும் அல்லர் அவர். அதனால்தானோ என்னவோ மருத்துவர் ராமதாசும் அவரது மகனும் படையாட்சியாரின் பெயரை உச்சரிப்பதே இல்லை.

###################

பழமலையின் இந்த ‘அடித்தள அரசியலின்’ இன்னொரு பக்கம் இடை நிலைச் சாதியின் உறுதிப்பாடாக இருக்கிறதே, அது இந்த ஆகக் கீழானவர்களின் மீதான வன்முறையாக விடிகிறதே…’ என்கிற கேள்வி நியாயமானதே. ஆம். அந்த இன்னொரு பக்கம் மோசமானதுதான். ஆனால் இதுவும் ஒரு பக்கம்தானே. வரலாற்றின் ஒரு பக்கந்தானே.

கடந்து வந்த பாதை

(‘கலகம்’ இதழுக்காக குரு மகிழ்கோ செய்த நேர்காணல்)

கலகம்: தமிழகத்தில் மிக முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்களில் நிங்களும் ஒருவர் கடந்து வந்த பாதை குறித்து கலகம் வாசகர்களுக்காக ?

மனித உரிமைச் செயல்பாடுகள் என்பன என் நடவடிக்கைகளில் ஒரு பகுதி மட்டும்தான். எழுதுவதுதான் என் பிரதானப் பணி. பத்திரிக்கைகளில் எழுதுகிறேன். இலங்கையில் இரு பத்திரிக்கைகளில் என் பத்திகள் வெளி வருகின்றன. மார்க்சீயம், பின் நவீனத்துவம், தேசியம், இந்துத்துவம்,தலித்தியம் பெரியாரியம், காந்தியம், இலக்கிய விமர்னம் சார்ந்து சுமார் 60 குறுநூற்களும், சிறு வெளியீடுகளும் வந்துள்ளன. சமீபத்தில் அதிகம் இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுதுவதோடு சரி. நூலாகத் தொகுத்து வெளியிடுவதில் ஆர்வம் குன்றியுள்ளது. பெரிய நூல் வெளியீட்டாளர்கள் என் நூற்களைத் தொகுப்புகளாக வெளியிட ஆர்வம் தெரிவித்தும் பல காரணங்களால் மனம் வரவில்லை. இன்று தமிழகத்தில் முக்கியமான நடுத்தர மற்றும் சிறு வெளியீட்டாளர்கள் பலரும் என் நூற்களை வெளியிட்டே தமிழ் வெளியீட்டுலகில் அறிமுகமானவர்கள். விடியல் பதிப்பகம் உட்பட. எனினும் பல்வேறு கசப்பான அனுபவங்களின் விளைவாக இபோது நூல் வெளியீட்டிலேயே பெரிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.. பத்திரிக்கைகளில் எழுதுவது, முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிட்டு அடுத்த்அ கணமே எதிர்வினைகளை எதிர்கொள்வது என்கிற அளவில் என் ஆர்வம் சுருங்கி விட்டது. பேசாமல் என் நூற்கள் எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு பெரிய நிறுவனத்திடம் தந்துவிடலாமா என்று கூட சில நேரங்களில் யோசிக்கிறேன்.

மனித உரிமைச் செயல்பாடுகள் பற்றிக் கேட்டீர்கள்.. மனித உரிமைப் பணிகள் என்பன எப்போதும் ஒரு ‘பாபுலரான’ செயல்பாடு அல்ல. நிறையப் பேர் இதில் ஆர்வமாக முன்கை எடுக்க வரமாட்டார்கள். காவல்துறை, அரசியல்வாதிகள், ஆதிக்க சாதியினர், தனியார் நிர்வாகங்கள், மதவாத அமைப்புகள் எனப் பல மனித உரிமைகளை மீறும் சக்திகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய பணி இது. இன்னொரு பக்கம் இது கொஞ்சம் செலவைக் கோரும் பணியும் கூட. ஒரு உண்மை அறியும் குழுவை ‘ஆர்கனைஸ்’ செய்து ஒரு ஊருக்குச் சென்று, தங்கி, ஆய்வு செய்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்துவது என்பது நிறையச் செலவை ஏற்படுத்துவது. நாங்கள் வெளியிலிருந்து எந்த நிதி உதவியையும் பெறுவதில்லை. நாங்களே பகிர்ந்துகொள்வது, நண்பர்களிடமிருந்து உதவி பெறுவது என்கிற வகையில்தான் செயல்படுகிறோம். வாய்ப்பிருக்கும்போது நண்பர்கள் வீடுகளில் தங்கி, சாப்பிட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் சில அமைப்புகள் நடத்தும் உண்மை அறியும் குழுக்களில் பங்கு பெறுவது உண்டு.. அப்போது அவர்கள் செலவு செய்வார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகத்தான் போகிறோம்; அவர்களுக்குச் சார்பாக இருக்கக்கூடிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்கிறோம். ஆனால் எக்காலத்திலும் நாங்கள் யார் சார்பாகவும் உண்மைகளை கூட்டியோ குறைத்தோ சொல்வதில்லை. நூறு சதம் உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களையே சொல்கிறோம். இரண்டு நாள் ஆய்வில் சில நேரங்களில் முழு உண்மைகளையும் எங்களால் கண்டுபிடித்து விட இயலாது. அப்படியான நேரங்களில் சந்தேகத்திற்குரிய அமசங்களில் இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனாச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக நிறையச் சொல்லலாம். சமீபத்தில் இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினர் அனுமதி பெற்று நடத்திய ஒரு ஊர்வலத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல் துறையினர் கடுமையாக ஒரு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மிகவும் அநீதியானது என்பது ஒரு பக்கம். இது குறித்து போலீஸ் எப்படி இரட்டை நாக்குடன் செயல்பட்டது என்பதை விரிவாகப் பதிவு செய்தோம். அதே நேரத்தில் ஒரு குறிப்பீட்ட கட்டிடத்திலிருந்து கலவரத்தைத் தூண்டும் சதி நோக்குடன் ஊர்வலத்தின் மீதும் போலீசின் மீதும் கற்கள் எறியப்பட்டன என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கூறினர். போலீஸ் அதை மறுத்தது. எங்களால் எது உண்மை என உறுதி செய்ய இயலவில்லை. முஸ்லிம்கள் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மிகவும் ஆபத்தான கவலைக்குரிய ஒன்று. இக்குற்றச்சாட்டு உண்மையா என சீரியசாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதோடு நாங்கள் நிறுத்திக் கொண்டோம்.

இன்னொரு முறை விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இறையூரில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கிறிதவ தலித்களுக்கும் இடையில் பிரச்சினை. வன்னியர்கள் கடைபிடித்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தலித்கள் போராடியபோது வன்னியர்கள் தலித் மக்களின் வீடுகளைத் தாக்கிச் சூறையாடினர். தாக்குதல் நடந்தபோதெல்லாம் வராத போலீஸ் எல்லாம் முடிந்தபின் வந்தனர். எஸ்.பி. அமல்ராஜ் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில் இரண்டு அப்பாவி வன்னியர்கள் செத்துப் போனார்கள்.. எங்கள் அறிக்கையில் வன்னியர்களின் சாதிக் கொடுமை, அன்று நடந்த சூறையாடல், பாதிரிமார்கள் சாதிக் கொடுமைக்குத் துணைபோதல் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டு, அமல்ராஜின் துப்பாக்கிச் சூட்டையும் கண்டித்திருந்தோம். கொல்லபட்ட இருவருக்கும் உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும் வற்புறுத்தி இருந்தோம்.. பிரஸ் மீட்டில் ஒரு தொண்டு நிறுவனத்தினர் உள்ளே நுழைந்து துபாக்கிச் சூட்டை நாங்கள் கண்டித்ததை எதிர்த்துக் கலாட்டா செய்தார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்றி விட்டு கூட்டத்தை நடத்தினோம்.

இதுபோன்ற விடயங்களில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உள்ள உண்மைகளே அவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் போதுமானது. உண்மைகள் நமக்குச் சாதகமாக உள்ளன. தேவையற்ற பொய்கள் நமது பக்க நியாயங்களைப் பலவீனப்படுத்தத்தான் உதவும்.. இப்போது உருவாகியுள்ள் ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னாலிசம். காட்சி ஊடகப் போட்டிகள், முக நூல் ஆக்டிவிசம் முதலியன பலவகைகளில் அநீதிகளை வெளிக்கொணர்வதில் பெரிய பங்காற்றுகின்றன.. எனினும் சில நேரம் இவர்கள் காட்டும் அதீத உற்சாகம், பாதிக்கப்பட்டவர்களுடன் தாங்கள் நிற்பதாகக் காட்டிக் கொள்வதில் வெளிப்படுத்தும் அரை வேக்காட்டு அவசரத்தனம் முதலியன bad journalism என்கிற அளவிற்குப் போய்விடுகின்றன. தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலையா, கொலையா என்கிற பிரச்சினையில் அதைக் “கொலைதான்” என “நிரூபிக்க” சில ஜர்னலிஸ்டுகள் உண்மைகளை மறைத்தும், திரித்தும், மிகைப்படுத்தியும் செய்த அட்டகாசங்கள் இதற்கொரு எடுத்துக்காட்டு. அது தற்கொலை என்றாலுங்கூட அதற்கு ஆதிக்க சாதியினரின் சாதி ஒதுக்க அரசியலே காரணம் எனக் கொண்டு போயிருந்தால் இப்போதை விட அதிக விளைவுகளை உருவாக்கியிருக்கலாம்..போலீஸ்காரர்கள் சொல்வதெல்லாமே பொய் என நாம் கருத வேண்டியதில்லை. சமீபத்தில் காரைக்கால் பாலியல் வன்முறைப் பிரச்சினையில் வெளிபடுத்தப்பட்ட bad journalism ஒன்றை இங்கே நான் விளக்கமாகச் சொல்ல விரும்ப்வில்லை. அது அந்த இளம் பத்திரிகையாளரைப் பாதிக்கும் என்பதால்.

நாங்கள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுபவர்கள். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை உண்மை அறியும் குழுக்கள் பெறுவது அவசியம்.

கலகம்: நிறப்பிரிகை காலம் கொண்டாடப்பட்டக் காலம் என்று தோழர் தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி) அவர்களின் பேச்சில் பலமுறை கேட்டதுண்டு அந்த காலம் பற்றி சொல்லுங்கள் ?

நீங்கள் அடுத்த தலைமுறையினர் என்பது உங்கள் கேள்வியிலிருந்தே தெரிகிறது. நிறப்பிரிகைக் காலம் என்பது சோவியத்தின் சிதைவு, அம்பேத்கர் நூற்றாண்டு, ஈழப் போராட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை ஒட்டிய காலம். இதுகாறுமான பல நம்பிக்கைகள் சிதைந்திருந்தன. பேரரசியலைத் தாண்டி நுண் அரசியல், அடையாள அரசியல், தலித்தியம் முதலியன மேலெழுந்த காலம் அது. மிக விரிவான விவாதங்கள், புதிய கோட்பாட்டு அறிமுகங்கள் என்பனவற்றிற்கு இடமிருந்த காலம் அது. கூட்டு விவாதம் என ஒரு பகுதி நிறப்பிரிகையில் உண்டு. மாற்றுக் கருத்துடையவர்களும் சந்தித்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரையாடுவோம். .உடன்பட்ட கருத்துக்களையும், இன்னும் விவாதிக்க வேண்டியவற்றையும் தொகுத்து வெளியிடுவோம். தேதி, நாள் குறிப்பிட்டுப் பல இயக்கத்தவர்களும் கூடிப் பேசுவோம். சிறு பத்திரிகைகளும், சிறு இயக்கங்களும் இணைந்து புலம் பெயர்ந்த தமிழர் மாநாடொன்றையும் அன்று நடத்த முடிந்தது. இன்று அதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. எபோதும் முதல் தலைமுறையினரின் அறிவுச் சேகரத்தில் நின்றுகொண்டு அடுத்த தலைமுறையினர் அவற்றை ஒட்டியும், வெட்டியும்,மறுத்தும், விலகியும் முன்னேற வேண்டும். இங்கு அது நிகழாமல் போவிட்டது, இன்று எந்த விவாதத்திற்கும் சாத்தியமில்லை; மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஈழப் போராட்டத்தின் முதற்கட்டத்தில் தேசியப் பிரச்சினை குறித்தும் ஈழப் பிரச்சினை குறித்தும் எத்தனை ஆழமான விவாதங்கள் நடந்தன.. எவ்வளவு நூற்கள் வந்தன.. இன்று விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி குறித்து காத்திரமான ஆய்வு ஏதாவது உண்டா.? மாறியுள்ள உலகில் இந்தப் பிரச்சினைகளை எப்படி மேலே கொண்டு செல்வது என ஏதாவது ஆய்வுண்டா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், திரும்பி வருவார் என்பன போன்ற அபத்தக் கருத்துக்களுக்கு மறு பேச்சுண்டா? ஒன்றைச் சொல்ல வேண்டும். நிறப்பிரிகை என்பது அன்றைய ஆசிரியர் குழுவிலிருந்தவர்களின் சாதனை மட்டுமல்ல. அது அந்தக் காலத்தின் சாதனை. அதில் பலரும் பங்கு பெற்றனர்.

கலகம்: தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதி மோதல் நடக்கிறது இது புரட்சிகர இயக்கங்களின் தோல்வி என்று எடுத்துக்கொள்ளலாமா ?

ஏன் அந்தப் பழியைப் புரட்சிகர இயக்கங்களின் மீது மட்டும் போடுகிறீர்கள். இங்கே இடதுசாரி இயக்கங்கள் இருக்கின்றன; உங்களைப் போன்ற தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள், தலித் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் எல்லாந்தான் இங்கிருந்தன, இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்பில்லையா? இப்போதெல்லாம் சாதி மோதல், தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கெல்லாம் திராவிட இயக்கம்தான் காரணம் எனக் கேட்பதுதானே ஃபேஷன். ஏதோ மகாராஷ்ட்ரா, உ.பி இங்கெல்லாம் சாதி மோதல்களே இல்லை என்பது போல. நல்லவேளை நீங்கள் அப்படிக் கேட்டுக் கடுப்பேத்தவில்லை. நன்றி.

கலகம்: இந்திய துனை கண்டத்தில் தேசிய விடுதலை போராட்டங்களின் இன்றைய நிலை ?

தேசிய விடுதலை இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திற்குள் பல தேசிய இனங்கள் இருந்தபோதும் அவை ஒருபடித்தானதாக, ஒரே புவியியல் எல்லைக்குள் செறிந்திருக்கவில்லை. அஸ்ஸாமுக்குள் போடோக்கள், போடோக்களுக்குள் ஆங்காங்கு முஸ்லிம்கள், ஆந்திராவுக்குள் தெலங்கானக்காரர்கள், மணிப்பூரிகளுக்கும் அகண்ட நாகா கோரிக்கைக்கும் உள்ள முரண்கள் இப்படி. இந்த முரண்களின் ஊடாக இந்திய அரசு தனது ஒடுக்குமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தி வருகிறது. காங்கிரசுக்கும் பா.ஜகவிற்கும் இதில் வேறுபாடு இல்லை. சர்வதேச உடன்பாடும் ஒத்துழைப்பும் இந்த ஒடுக்குமுறைக்கு உண்டு. மணிப்பூரிலும், அஸ்ஸாமிலும் இத்தகைய உள்முரண்பாடுகளின் ஊடாகத்தான் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்போது தேசிய இன முழக்கங்களைக் காட்டிலும் பிராந்திய, தனி மாநில, சாதி ரீதியான கோரிக்கைகள் மேலுக்கு வருகின்றன. மாயாவதி உ.பியை நாலு துண்டுகளாக்க வேண்டும் என்கிறாரே.

கலகம்: தேச விடுதலை முன்வைக்கும் தமிழ் தேசிய இயக்கங்கள் நிலை குறித்து உங்கள் கருத்து ?

எல்லாத் தமிழ் தேசிய இயக்கங்களையும் ஒரே மாதிரி மதிப்பிடமுடியாது. தமிழ்த் தேச விடுதலை என்பதற்கு அப்பால் பிற அம்சங்களில் மகா பிற்போக்குத்தனமான பாசிசக் கொள்கை உடையனவாகத்தான் பெரும்பாலான இயக்கங்கள் உள்ளன. ஒரு நூற்றாண்டுகால முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் பின் நோக்கி உருட்டக் கூடியவையாக அவை உள்ளன. வைகோ எல்லாக் கட்டங்களிலும் மோடி மற்றும் பா.ஜ.க மற்றும் அவர்கள் இயற்றிய பொடா சட்டம் முதலியவற்றின் ஆதரவாளராகவே உள்ளார். அவரைப்போன்ற ஒரு பச்சை ஏமாற்றுவாதியை யாரும் பார்க்க இயலாது. நெடுமாறன் ஒருபக்கம் ஈழ ஆதரவு என்கிற பெயரில் இந்துத்துவவாதிகளையும், நடராசன் போன்ற சாதி வெறி சக்திகளையும் மேடையேற்றி மகிழ்கிறார். மணியரசன் கொஞ்சமும் வெட்கமில்லாமல் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்கிறார். ராஜராஜனின் பார்ப்பன ஆதரவையும் , அவன் உருவாக்கிய தேவதாசி முறையையும் பொற்கால அடையாளங்கள் என்க்கிறார். பெரியாரை இவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டுகின்றனர். பார்ப்பன சேவகத்தை இவர்கள் வெட்கமற்றுச் செய்கின்றனர். ஈழத்திலிருந்து வேளாங்கன்னி கோவிலுக்கு வந்த தமிழர்களையும், பிழைக்கவந்து தமிழ் முதலாளிகளால் சுரண்டப்படுகிற வட மாநிலத் தொழிலாளிகளையும் இவர்கள் எதிரிகளாகக் கட்டமைக்கின்றனர். அவர்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர், சிவசேனாவை ரோல்மாடல் எனச் சொல்லி அரசியல் பண்ணுகிறது சீமானின் இயக்கம். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு எனச் சொல்லி சாதி முறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர் குணா வழிக் கூட்டத்தினர். தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான இடைவெளி மயிரிழைதான் என்பார்கள்.. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் இந்த இயக்கனகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

கலகம்: ஏழு தமிழர் விடுதலை பற்றி ?

இதிலென்ன பிரச்சினை.மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆயுள் தண்டனை என்பது ஏழாண்டு காலம் எனக் குறைக்கப்பட வேண்டிய ஒன்று. நீதிமன்றம் இப்போது இதற்குச் சாதகமாக உள்ளது. ஜெயலலிதா இதை அரசியலாக்காமல் முரைப்படி காயை நகர்த்தியிருக்கலாம். எதிர் வழக்காடுவதன் மூலம் காங்கிரஸ் தன்னை மேலும் தோலுரித்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றை நாம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகச் சிறைகளில் இப்படி நீண்ட காலமாக அடைபட்டிருப்பவர்கள் இந்த ஏழு தமிழர்கள் மட்டுமல்ல. இன்னும் பல தமிழர்களும் உள்ளனர். 1500 கைதிகளைக் கருணாநிதி விடுதலை செய்தபோது முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. சொன்ன காரணம், அவர்கள் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அது மத்திய அரசுச் சட்டம் என்பது.. இன்று அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட்டது. அதை ந்நாம் மனப்பூர்வமாக வரவேற்கும் அதேநேரத்தில் இந்தப் பலன்கள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூற வேண்டும்.

கலகம்: மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய இயக்கங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறதாக நீங்கள் கருதுவதாக அறிய முடிகிறது. எப்படி ?

சார்பாக என்றில்லை. இதை ஈழப்பிரச்சினையுடன் தொடர்புடைய ஒன்றாகத்தான் அவர்கள் முன்வைத்தனர். இதை அவர்கள் அரசியல்தான் பண்னினார்களே ஒழிய மரணதண்டனை என்பது அற அடிப்படையிலேயே ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் முன்வைக்கவில்லை. அதனால்தான் அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டபோதெல்லாம் இங்கு பெரிய எதிர்வினைகள் இல்லை.. “ தண்டனையை யார் நிறைவேற்றினாலும் அதை எதிர்க்க வேண்டும்: யாருக்கு நிறைவேற்றப்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டும்”. இதை. அவர்கள் ஏற்பார்களா?

கலகம்: இந்த காலகட்டத்தில் பெண்களின் அரசியல் பார்வை அல்லது பங்கு குறித்து ?

இந்தக் காலத்தில் மட்டுமென்ன எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அரசியலில் முக்கிய பங்கிருக்க வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சாதனை புரியக்கூடிய நிலையில் உள்ளனர். பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு வேறெப்போதையும் விட அதிகமாகியுள்ளது. எனினும் இவை போதாது. தமிழகத்தில் பெண்கள் இயக்கம் ஏதும் வலுவாக இல்லை. இல்லை என்றே சொல்லலாம். அதேபோல நிறப்பிரிகை காலத்தில் நடந்ததுபோல பெரிய அளவில் பெண்ணிய விவாதங்களும் இப்போது நடப்பதில்லை.

கலகம்: ஈழத் தமிழர் இனப்படுகொலை பிற நாடுகள் அங்கம் வகித்ததின் நோக்கம் என்ன ?

செப்டம்பர் 11க்குப் பிறகு உலகம் மாறிவிட்டது என புஷ் சொன்னது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு உண்மை இருந்தது. “பயங்கரவாதம்” என ஏதும் வ்ரையறுக்கப்பட்டால், பின் அதை ஒடுக்குவதில் ஒரு ஒப்புதல் உலக அளவில் ஏற்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடினாலும் அதற்குப்பின்தான் 40க்கும் மேற்பட்ட நாடுகள் அதைத் தடை செய்தன. கடைசி நேரத்தில் புலிகளை ஒழிக்க இந்தியா மட்டுமா முன்நின்றது / அமெரிக்காவும் பிரிட்டனும் கூடத்தான் முன்நின்றன. அவ்வளவு ஏன், இத்தனைக்குப் பின்னும் இன்று ராஜபக்‌ஷேவின் படைகளுக்கு இந்திய அரசு மட்டுமா பயிற்சி அளிக்கிரது. இன்றும் அமெரிக்கப் படைகளுந்தான் பயிற்சி அளிக்கின்றன..

கலகம்: தமிழகத்தில் எழுகின்ற எல்லா அரசியல் போராட்டங்களும் விரைவில் தேங்கி போகிறதே என்ன கரணம் ?

போராட்டங்களுக்கெதிரான ஒருவகை மத்திய வர்க்க மனப்பாங்கு இன்று அதிகமாகியுள்ளது. உலக மயம், அதனூடாக உருவாகியுள்ள புதிய பண்பாடுகள் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையில் முன்னேறுதல், பணம் சம்பாதித்தல், சமூகப் பிரசினைகளில் அக்கறையின்மை என்பன இன்றைய வாழ்முறைகளாகிவிட்டன. இன்றைய கல்விமுறை, செமஸ்டர் தேர்வு முறைகள், காம்பஸ் இன்டெர்வியூ,, ஓவர் ஸ்பெஷலிசேஷன் முதலியன இளைஞர் மத்தியில் சமூகப் பொறுப்புகளையும் அக்கறைகளையும் குறைக்கின்றன. ஈழப்பிரச்சினைகளை முன் வைத்து எழும் போராட்டங்களும் ஆண்டுக்காண்டு வலுவிழக்கின்றன. இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுடன் இணைக்காமல் வெறும் ஈழப் பிரச்சினையை மட்டும் வைத்தே இங்கொரு வலுவான எழுச்சியை தொடந்து இங்கு ஏற்படுத்திவிட இயலாது.

கலகம்: இன்றைக்கு நம் முன் இருக்கும் சவால் என்ன ?

உலக அளவிலும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை நாம் முழுமையாக உள் வாங்கவேண்டும்.கடந்த முப்பதாண்டு கால உலக வரலாற்றை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்படியான முயற்சி இங்கு நடக்கவில்லை. இது புதிய உலகம்; இந்தப் புதிய உலகை எவ்வாறு எதிர்கொள்வது?. நம்மீது சுமையாய் அழுத்திக்கொண்டிருக்கும் மரபுவழிப்பட்ட சிந்தனை முறைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் எப்படி விடுதலை பெறுவது?.இதுதான் நமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவால்.