பவள விழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமான்

சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் அன்றைய இளைஞர்களைத் தன் மொழியால் வளைத்துப் போட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். அவருடைய கவிதைகள், வார இதழ்களில் அவர் எழுதிய உரைக் காவியங்கள் ஆகியவற்றை காத்திருந்து வாங்கி வாசித்த இளைஞர் பட்டாளம் தமிழகத்தில் உண்டு. நமக்குத் தெரிந்த செய்தியானாலும் தெரியாத செய்தியானாலும் ஒன்றை இத்தனை அழகாகச் சொல்ல இயலுமா, இப்படியும் அதைச் சொல்ல முடியுமா என வியக்க வைத்தவர் அவர்.

பொதுத் தளத்தில் இயங்கும் பல சிறுபான்மையர் தமது மத அடையாளங்களைக் காட்டிக் கொள்வதில் தயக்கம் கொள்வதுண்டு. புனை பெயர்கள், உடை, தோற்றம், மொழி முதலானவற்றின் ஊடாகத் தம் அடையாளங்களை மறைத்துக் கொள்ளும் நிலை உண்டு. கவிஞர்கள் அபி, மு. மேத்தா முதலானோர் முஸ்லிம்கள் என்பதை நான் வெகு தாமதமாகவே அறிந்தேன். ஆனால் கவிக்கோ அவர்கள் பெயரிலாகட்டும், தோற்றத்திலாகட்டும் பேச்சிலாகட்டும் அவர், தான் ஒரு முஸ்லிம் என்பதை மறைத்ததில்லை. தனது எழுத்துக்களில் எந்நாளும் மதச் சார்பின்மையை வற்புறுத்தத் தயங்காத அவர் இன்று பெரும் இக்கட்டிற்கு உள்ளாகி இருக்கும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து விலகியதில்லை. “பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” என வெளிப்படையாக ஒரு வெறுப்புக் குரல் இன்று உரத்து முழங்கப்படும் சூழலில் அப்துல் ரகுமான் அவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் முஸ்லிம் அமைப்புகள் தற்காப்பு நோக்கில் அணி திரள நேரும்போதெல்லாம் அவர்களோடு நிற்பது குறிப்பிடத்தக்கது.

1960களின் பிற்பகுதி தொடங்கி 1970 கள் .என்பன உலக வரலாற்றிலும், இந்தியத் துணைகண்ட வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் ஒரு முக்கியமான காலகட்டம். உலக அளவில் மாற்றங்கள் வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்ற ஒரு காலகட்டம்.. உலகை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற இந்த ஆவேசம் இலக்கிய உலகில் வானம்பாடிக் கவினர்கள் மூலம் வெளிப்பட்டது. ஏற்கனவே 1960களில் இங்கே தமிழ்க் கவிஞர்கள் கவிதை மீது குந்தி இருந்த இலக்கணச் சுமையைத் தூக்கி எறிந்து புதுக் கவிதைகளை உருவாக்கி இருந்தனர். ஆனால் மணிக்கொடிப் பாரம்பரியத்தில் வந்த அவர்கள் மக்கள் பிரச்சினைகளை, அன்றாட அரசியலைத் தொடுவதே கொடும் பாவம் என்கிற அளவிற்கு முழுக்க முழுக்க இவற்றிலிருந்து ஒதுங்கினர்.

இந்தப் பின்னணியில் தான் அந்த 1960 களின் பிற்பகுதியில் உருவான அரசியல் பிரக்ஞை இலக்கிய உலகில் வானம்பாடி இயக்கமாக உருப் பெற்றது. ஆனால் அவர்கள் சற்றே திகட்டும்அளவிற்குக் கவிதைகளை அரசியல் முழக்கங்களால் நிரப்பி வெகு விரைவில் அந்நியப்பட்டனர். மீண்டும் கவிதையை முழக்கங்களிலிருந்து விடுவித்து உருவானதுதான் படிமக் கவிதை இயக்கம். வானம்பாடி யுகத்தில் உருவாகி, விரைவில் அதிலிருந்து விடுபட்டு படிமக் கவிதை யுகத்தில் அதன் உச்சத்தைத் தொட்டவர்களில் ஒருவர்தான் கவிக்கோ.

கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு என்ன? எளிமையாகச் சொல்வதானால் உரைநடை என்பது ஏதொன்றையும் அப்படியே சொல்வது. கவிதை என்பது ஒன்றை அப்படியே சொல்லாமல் வேறு மாதிரிச் சொல்வது. “தீ சுடும்” என்றால் அது உரைநடை; “தீ இனிது” எனப் பாரதி சொல்லும்போது அது கவிதை. அப்படிச் சொல்லும்போது நாம் அந்தப் பொருளிலிருந்து விலகி நின்று அதைக் கவனிக்கிறோம். அருகாமை அளிக்கும் ‘பரிச்சய உணர்வு’ நம்மில் அழிகிறது. ஒரு defamiliarisation அங்கு நடக்கிறது. புத்துப் புது அர்த்தங்கள், புதுப்புது சிந்தனைகள் நம்மில் முளைக்கின்றன. கவிக்கோ அவர்களின் ஒரு படிமக் கவிதை:

முதுமை
நிமிஷக் கரையான் / அரித்த ஏடு
இறந்த காலத்தையே பாடும் / கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின் / குப்பைக் கூடை
வியாதிகளின் / மேய்ச்சல் நிலம்
காலத்தின் குறும்பால் / கார்டூன் ஆகிவிட்ட / வர்ண ஓவியம்

ஆனால் இந்தப் படிம அலங்காரம் விரைவில் கவிதையின் மீதான இன்னொரு சுமை ஆனது. அளவுக்கதிகமான நகைகளையும் பகட்டான உடைகளையும் அணிந்த உருவம் போல அது அலுப்பூட்டியது. இன்று தமிழ்க் கவிதை இந்தப் படிம அலங்காரங்களை ஒதுக்கி விட்டு எளிமைக் கோலம் தரித்து நடைபயில்கிறது. கவிக்கோ படிம அலங்காரங்கள் இல்லாமல் எழுதிய கவிதைகள் அவரது படிமக் கவிதைகளைக் காட்டிலும் மனதைத் தொடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்று:

கருப்பைக்குள்ளே
மரணக் குகைக்குள்ளே
கர்ப்பக் கிரகங்களின் ஊடே
சாகாத கேள்விகளின் வழியாக
ஆதிக்கும் முன்னே
அந்தத்திற்கும் அப்பால்
எங்கும் என்னுள்
பின் தொடந்து வந்தது
வேட்டை வெறியோடு
ஆதி இருள்

கவிக்கோவின் ஒரு கவிதையை சொல்லி முடிக்கலாம்.. ஏசுவின் மலைப் பிரசங்கத்தின் பல பகுதிகள்ஒரு அற்புதமான கவிதையாக மிளிர்கின்றன.. கீழே உள்ள இந்த அற்புதமான கவிதை வரிகளுக்குச் சொந்தமானவர் சூசையப்பரின் மகன் ஏசு கிறிஸ்துதான்.

“வானத்துப் பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை
காட்டுமலர்ச் செடிகளைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
ஆனால் சாலமோன் தனது மேன்மையான நாட்களில் கூட
அவற்றைப்போல அணிந்ததில்லை”

மகாகவி பாரதி விவிலியத்தைப் படித்தாரோ இல்லையோ கிட்டத் தட்ட அதே கருத்தை, “இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?” எனப் பாடியுள்ளதை அறிவோம்.

கவிக்கோ மேற்சொன்ன அந்த விவிலியக் கவிதையை இப்படி உருமாற்றுகிறார்:

“ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்
ஒரு பறவையின் வேர்வையை மற்ற பறவைகள் குடிப்பதில்லை
காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
ஒரு புஷ்பத்தின் உடையை மற்றொரு புஷ்பம் பறிக்கிறதில்லை
மனுஷ் குமாரனே சகலமும் பிடுங்கப்பட்டுப் போனானே
இம்முறை சிலுவையில் அறையப்படுவதற்கு
அல்ல அறைவதற்கு வந்திருக்கின்றேன்”

ஆன்டவனிடம் பாரத்தை இறக்கிவிட்டுச் சும்மா இருங்கள் என்கிறார் ஏசு. அன்பு செய்யுங்கள் அது போறும். வேறு எந்தக் கடமையும் வேண்டாம் என்கிறார் பாரதி. ஆனால் கவிக்கோ அவர்களோ மண்ணில் தென்படும் இந்த அவலங்களைக் கண்டு சும்மா இருக்க இயலாது. இறைமகனோ இறைத்தூதரோ அவருடைய பணி சிலுவையில் அறையப்பட்டு மடிவதல்ல. அநீதிகளை அழித்தொழிக்கக் களம் இறங்குவோம் என்கிறார்.

இந்த மனநிலை எப்படி உருவாகிறது? ஏசு, புத்தர், நபிகள் எல்லோரும் அநீதிகளுக்கு எதிரானவர்களாகத்தான் இருந்தனர். ஆனால் நபிகள் ஒருவரே அந்த அநீதிகளுக்கு எதிராகக் களம் இறங்கியவர். வாளெடுத்தவர். போராடியவர். ஏசு எந்த மக்களுக்காகப் போராடினாரோ அந்த மக்களின் கண் முன்னே சிலுவையில் தொங்கினார். ‘என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டீரே’ எனப் புலம்பியவாறு அவர் உயிர் பிரிந்தது. புத்தரின் கண் முன் அவர் பிறந்த சாக்கிய இனக்குழு அழிக்கப்பட்டது. நபிகள் அப்படி வாளாவிருக்கவில்லை. இக உலகில் அறம் சார்ந்து வாழ்ந்துப் பர உலகில் பலன் காண்பீர் என்று மட்டும் அவர் சொல்லவில்லை. இக உலகிலேயே நீதியும் சமத்துவமும் உள்ள ஒரு உலகை அமைக்கும் பணியும் மனிதர்க்கு உண்டு என்றார். கவிக்கோஇதை எதிரொலிக்கிறார்..

இறுதியாக ஒன்று. இன்று எழுத்தாளர்கள் கொல்லப்படுவதையும் கருத்துரிமை மறுக்கப்படுவதையும் எதிர்த்து விருதுபெற்ற எழுத்தாளர்கள் அறுபதுக்கும் மேல் தம் விருதுகளைத் துறந்து புரட்சி மேற்கொண்டுள்ளனர். தமிழகத்திலிருந்துதான் யாரும் இல்லை. இந்நிலையில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் தனது சாகித்ய அகாதமி பரிசைத் துறந்தார் எனில் அதுவே அவர் மேற்சொன்ன. அவரின் கவிதைக்கு உண்மையாக உள்ளார் என்பதன் பொருளாக அமையும்.

கலை விமர்சகர் தேனுகா – சில நினைவுகள்

(சென்ற அக் 24 அன்று கலை விமர்சகர் எனத் தடம் பதித்த நண்பர் தேனுகா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளைக் குடந்தை நண்பர்கள் நினைவு கூர்ந்தனர். நிகழ்வில் நான் பேசியது.)
நண்பர் தேனுகா குறித்து இங்கு எல்லோரும் அவர் எவ்வாறு இங்குள்ள கோவில்கள், சிற்பங்கள் இவை குறித்தெல்லாம் ஆழமான அறிதலைக் கொண்டிருந்தார், எப்படி அவைகளையெல்லாம் நேசித்தார், சிற்பம், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளை ரசிப்பதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் ஒரு வாழ்நாளை அர்ப்பணித்தார் என்பதை எல்லாம் விரிவாகச் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து ஓராயிரம் ஆண்டுகளாக சிற்பக் கலை வளர்த்து வரும் சுவாமிமலையில் வளர்ந்த நண்பர் தேனுகாவை ‘முதன் முதலில் தமிழில் உருவான நுண் கலை விமர்சகன்’ என தஞ்சைப் பிரகாஷும், தேனுகாவின் “டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை’ எனும் முதல் கட்டுரையைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட இதே தொனியில் க.நா.சுவும் ஏற்கனவே பாராட்டியுள்ளனர். கும்பகோணத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் பலரும் இதே போல அவரைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.
நுண்கலை தொடர்பான பல முக்கிய விருதுகளும் அவருக்கும் அவரது நூல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
எல்லாச் சிறப்புகளுக்கும் தகுதியானவர் தேனுகா என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
ஆனால் தேனுகாவின் பெருமைகள் அவர் நமது பாரம்பரிய நுண்கலைகளைப் போற்றியவர் என்பதோடு முடிந்துவிடுவதில்லை. மிகவும் சமகாலத்தவராகவும் அவர் விளங்கினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சோழர்காலச் சிற்பங்களைப் பாராட்டியதோடும், அவற்றின் நுண்மைகளை விளக்கியதோடும் அவர் நின்றுவிடவில்லை. வித்யா சங்கர் ஸ்தபதி போன்று நம்மோடு வாழ்ந்து வரும் இன்றைய சிற்பிகள், இன்றைய ஓவியர்கள் ஆகியவர்கள் குறித்தும் அவர் வியந்தார் அவர்களின் சிற்ப, ஓவிய மொழிகளை விளக்க முயன்றார்.
அத்தோடும் அவர் நிற்கவில்லை. மேற்குலகில் மிக நவீனமாகவும், பின் நவீனமாகவும் தோற்றமெடுத்த ஓவியக் கோட்பாடுகள், புதிய இசங்கள், வான்கோ போன்ற ஓவியர்கள், காம்யூ போன்ற எழுத்தாளர்கள் எல்லோரையும் வியந்தார் அறிமுகம் செய்தார்.
இவற்றினூடாக தேனுகாவின் முக்கிய பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் வெறும் பழமையோடு ஓய்ந்துவிடவில்லை. அவை இன்றும் தொடர்கின்றன. எப்படித் தமிழ் மொழியின் தொடர்ச்சி பேணப்படுகிறதோ அவ்வாறே தமிழ்க் கலைகளிலும் தொடர்ச்சி பேணப்படுகிறது. அவை அழிந்துவிடவில்லை என்பதன் மீது அவர் நம் கவனத்தை ஈர்த்தார்.
2. கலைகளை, குறிப்பாக நுண்கலைகளை பழமைX புதுமை; மேற்குX கிழக்கு என்றெல்லாம் பெரிதாக வேறுபடுத்திப் பார்க்கத் தேவை இல்லை. அவற்றுக்கிடையே ஒரு தொடர்ச்சி (continuity) இருக்கிறது; தொடர்ச்சி மட்டுமல்ல ஒரு ஒத்திசைவும் (harmony) உள்ளது என்பதையும் அவர் தொட்டுக்காட்டினார். கலைகளுக்கிடையேயேயான இந்தத் தொடர்ச்சி மற்றும் ஒத்திசைவு என்பதற்கு அழுத்தம் கொடுத்தது அவரது இன்னொரு முக்கிய பங்களிப்பு.
3.கலைகளின் தொடர்ச்சி என்பதன் பொருளென்ன? காலங் காலமாக இருந்து வருகிற, அல்லது, ஒரு புவிப்பகுதியின் மரபுவழிப்பட்ட இலக்கண விதிகளை அப்படியே பின்பற்றி அவற்றிற்கு உண்மையாக இருப்பதா? இசையின் லயம், தாளம், அல்லது சிற்பக் கலையின் ஆகம இலக்கணங்கள் ஆகியவை மீறவே இயலாதவையா? அப்படி இல்லை என்கிற உண்மையையையும் தேனுகா தன் எழுத்துக்களின் ஊடாக நிறுவுகிறார்.
இவற்றை  எல்லாம் அவர் தன் முனைப்போடு இப்படியெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அதன் வழி நின்று முன் வைக்கவில்லை. தன்னியல்பாக அவரது எழுத்துக்களின் ஊடாக இவை வெளிப்படுகின்றன. வித்யாசங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழியைப் பற்றி எழுத வரும்போதாகட்டும் ராஜரத்தினம் பிள்ளையின் ‘தர்பாரி’ல் இன்னொரு இராகக் கலப்பு ஏற்படுவது குறித்தாகட்டும் தேனுகா இந்த இலக்கண மீறல்களைச் சுட்டிக் காட்டுவதோடு அவைதான் அவர்களின் சிறப்புகள் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
அவரது முதல் கட்டுரையான டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை என்பதும் கூட இந்தப் பிரச்சினையை விவாதிப்பதுதான். எப்படி இயற்கையில் சில உயிர்வகைகள் அழிந்து போகின்றன, அத்தகைய உயிர்வகைகள் எப்படி இருந்தன எனப் பிந்திய தலைமுறைகளுக்குக் காட்டுவதற்கு அவற்றின் இறுதி உயிர் வடிவங்களைப் பதப் படுத்தி வைப்பவர்கள்தான் டாக்ஸிடெர்மிஸ்டுகள். தமிழ்க் கவிதை முதலான இலக்கிய வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பதைப்பவர்களைத்தான் தேனுகா இப்படிக் கூறுகிறார்.
கலை இலக்கியங்களின் வளர்ச்சி என்பன இலக்கணங்களை மீறுவதுதானே. இல்லாவிட்டால் தமிழில் இத்தனை இலக்கணங்கள் ஏன்? தொல்காப்பியம் ஒன்று போதாதா? பின் ஏன் நன்னூல், அணி இலக்கனங்கள், வீர சோழியம், பாட்டியல் நூல்கள் எல்லாம்?
#######
தேனுகா அதிகம் கலை இலக்கியங்களுக்கு அப்பால் எழுதியதில்லை. அப்படி எழுதிய சிலவற்றுள் காந்தி பற்றிய நான்கு கட்டுரைகள் இங்கு சொல்லப்பட வேண்டியவை. அரசியல் குறித்தெல்லாம் அதிகம் பேசாதவராயினும் காந்தியின் இன்றைய தேவையை அவர் உணர்கிறார்.
காந்தியை அவர் புரிந்துகொள்வது மற்றும் அறிமுகப்படுத்துவதுமான அவர் பாணி மிகவும் தனித்துவமானது. காந்தியின் வாழ்வு குறித்து கிட்டதட்ட ஆயிரம் நூல்கள் உள்ளன என்பர், அவர் உயிருடன் இருந்த காலத்திலிருந்தே, ஏன் தென் ஆப்ரிகாவில் இருந்த காலத்திலிருந்தே அவருக்கு வாழ்க்கை வராலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
காந்தியைப் பற்றி எழுத முனையும் யாரும் இந்த நூல்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவது சிரமம். ரோமன் ரோலந்த் முதல் லூயி ஃபிஷர் தொடங்கி எத்தனை பேர்கள் அவரது வரலாற்றை எழுதியுள்ளனர். ஐன்ஸ்டினில் இருந்து பியர்ல் எஸ் பக் வரை எவ்வளவோ பேர் அவரைக் கொண்டாடியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதிப்புகள் ஏதும் என்றி முற்றிலும் சுயமாக, ‘ஒரிஜினலாக’ அமைகிறது தேனுகாவின் கட்டுரை. காந்தி குறித்து ஆகா ஓகோ என்றெல்லாம் அவர் ஏதும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்விலிருந்து ஒரு நான்கைந்து சம்பவங்களைத் தேர்வு செய்து நம் முன் வைப்பதோடு தேனுகாவின் பணி முடிந்துவிடுகிறது. அதன் ஊடாக காந்தி குறித்த ஒரு அழகான தோர்றம் வாசிப்பவருக்கு உருவாகிவிடுகிறது.
தேர்வு செய்த சில காட்சிகளைப் பார்ப்போம். முதலில் சத்திய சோதனையில் காந்தி தன் மூத்தோர்கள் பற்றிச் சொல்வது. காந்தியின் தாத்தா உக்கம்சந்த் போர்பந்தர் சமஸ்தானத்திலிருந்து நாடுகடத்தப்படுகிறார். பின் அவர் மீதான அந்தத் தடை நீக்கப்படுகிறது. அதற்காக அவர் முறையாக நன்றி ஏதும் தெரிவிக்கவில்லை. இடது கையால் வணக்கம் வைக்கிறார். கேட்டதற்கு என் வலது கை ஏற்கனவே போர்பந்தருக்கு அர்ப்பணமாகிவிட்டது என்கிறார். தாய் புத்லிபாயோ ஒரு இறுக்கமான மரபு வழிப்பட்ட இந்துப் பெண். அனைத்து இந்து நம்பிக்கைகளையும் முறையாகப் பின்பற்றுபவர். அப்பா கரம்சந்த் அனைத்து மத நம்பிக்கைகளை உடையவர்களுடனும் சமமாகப் பழகுபவர். அவர்களை மதிப்பவர். அவர்களது கருத்துகளைப் பொறுமையோடு கேட்டு உவப்பவர்.
இரண்டாவது காட்சி காந்தி தென் ஆப்ரிக்கவிலிருந்து வந்த தொடக்கத்தில் (1916) நடந்தது. காசியில் ஒரு இந்துக்கல்லூரியை அன்னிபெசன்ட் தொடங்குகிறார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பலரும் அழைக்கப்படுகின்றனர். சமஸ்தான மகாராஜா ஒருவர் தலைமை தாங்குகிறார். காந்தி குஜராத்திகளில் குறிப்பாக அவரது கத்தியவார் பகுதி மக்களின் மரபுடையில் அங்கு தோன்றுகிறார். தலையில் டர்பன் சகிதம் காந்தியின் படம் ஒன்று நினைவில் உள்ளதுதானே. தான் ஆங்கிலத்தில் பேச நேர்வதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு இந்திய மக்களின் அன்றைய பரிதாபத்திற்குரிய நிலையை விரிவாகச் சொல்கிறார் காந்தி. இது குறித்து நாம் பிரக்ஞையற்று இருப்பது, மன்னர்களும் பெருந்தனக்காரர்களும் கவலையற்று அந்நிய ஆட்சியை அண்டிப் பிழைப்பது முதலானவற்றைச் சாடுகிறார். தலைமை ஏற்ற மகாராஜா எழுந்து போய்விடுகிறார். அன்னிபெசன்ட் காந்தியின் பேச்சை நிறுத்தச் சொல்கிறார். பாதுகாப்புக் கருதி பிரிட்டிஷ் போலீஸ் அன்றிரவு அவரை காசியில் தங்க வேண்டாம் எனச் சொல்கிறது,.
பிடிவாதக்காரரான காந்தி அன்று இரவு அங்கு தங்கிச் செல்கிறார்.
மூன்றாவது காட்சி; காந்தியின் தலைமையிலான அஹிம்சைப் போராட்டங்களில் சௌரிசவ்ரா உட்பட சில இடங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன. வழக்கு விசாரணையின்போது இந்த வன்முறைகளுக்குக் காந்தி பொறுப்பல்ல என பிராசிகியூஷன் தரப்பு வழக்குரைஞரே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் காந்தி தான் அஹிம்சையில் உறுதியாக நம்பிக்கை உள்ளவன் ஆனபோதிலும் தனது போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக ஏற்றுக் கொள்கிறார். நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டுகள் தண்டனை வழங்குகிறது.
நான்காவது காட்சி: சுதந்திரம் அளிப்பது உறுதியாகிவிட்டது. தேதியையும் மவுன்ட்பேட்டனே நிச்சயிக்கிறார். அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள்தான் பின்னாளில் பா.ஜ.கவை உருவாக்கிய தலைவர்கள் எல்லாம் இருக்கின்றனர். மவுன்ட்பேடன் ஒருமுறை காந்தியிடம் எகதாளமாகக் கூறுகிறார் :”உங்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியே இப்போது என் கைகளில்..” . நறுக்குத் தெறித்தாற்போலப் பேசுவதில் வல்ல காந்தி, “அதனாலென்ன, இந்திய மக்கள் என் பக்கம் அல்லவா இருக்கின்றனர்” என்கிறார்
காந்தியின் இறப்பின்போது பியர்ல் எஸ் பக் முதலானவர்கள் உரைத்த சில கருத்துக்களோடு தேனுகாவின் கட்டுரை முடிகிறது.
############
தேனுகா அவரது கடைசி ஆண்டுகளில் என்னிடம் சற்று நெருக்கமாக இருந்தார். நான் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் குடந்தையில் இருப்பேன். என் வீடும் அவர் வீடும் மயிலாடுதுறைச் சாலையில்தான் என்கிற வகையில் மாதத்திற்கு ஒரு முறையேனும் அவரைச் சாலையில் சந்திப்பதுண்டு, என் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அகல்வோம். கடைசியாக ஒரு முறை வீட்டுக்கு வந்து அவரது பெருந் தொகுப்பாக வந்திருந்த நூலைத் தந்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றார்.
அடுத்த முறை நான் வந்தபோது அவசரமாக ஏதோ வேலையாகச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் வந்த அவர் என்னை நிறுத்தியபோது, “அவசரமாகச் செல்கிறேன். போய் போன் செய்கிறேன்..:” எனச் சொல்லி அகன்றேன். ஆனால் மறந்து போனேன். அடுத்த சில வாரங்களில் நான் சென்னையில் இருந்தபோது அம்மாசத்திரம் இளங்கோவன் அந்தத் துயரச் செய்தியைக் கூறியபோது அன்று அவர் அழைத்த கணம் நான் நிற்காமல் அகன்ற நினைவு மேலெழுந்து கண்களை மறைத்தன.
என்ன செய்வது சில நேரங்களில் அப்படித்தான் ஆறாத வடுக்கள் அமைந்து விடுகின்றன.
(மேற்கோள்கள் அனைத்தும் நினைவிலிருந்து கூறியவை)

கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை: ஓரியூரில் ஒரு தலித் பலி

இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்த மதமானாலும் சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பித்ததில்லை. எதிர்த்து நின்ற பவுத்தம் இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது. இறையியல் அடிப்படையில் சாதி, தீண்டாமை முதலான பிரிவினைகளை ஏற்காத கிறிஸ்தவ மதம் இந்தியாவைப் பொருத்தமட்டுல் இந்த அம்சத்தில் முழுமையாக இந்து மதத்தைப் போலவே செயல்படுகிறது. இதில் ஓரளவு விதிவிலக்கு என்றால் அது இஸ்லாம்தான்.

வரலாறு முழுவதும் இந்தியக் கிறிஸ்தவத்தில் தீண்டாமை இருந்து வந்துள்ளதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் உள்ள சம்பா கோவில்’ எனப்படும் செய்ன்ட் பால்ஸ் ஆலயத்தில் பூசையின்போது தலித் மக்கள் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்துள்ளனர். காரைக்காலிலிருந்து மாற்றலாகி வந்த ஒரு வெள்ளைப் பாதிரியார் இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடியுள்ளார். அக்டோபர் 16, 1745 அன்று தலித் மக்கள் அங்கிருந்த தலைமைக் குருவைச் சந்தித்து முறையிட்டபின் தலித் மக்களை ஒதுக்கிய குறுக்குச் சுவர் இடிக்கப்பட்ட சம்பவத்தை அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் பார்க்கிறோம். ஆதிக்க சாதியினர் சும்மா இருக்கவில்லை. அந்தக் காரைக்கால் சாமியாரிடம் வம்பு செய்துள்ளனர். தாங்கள் இனி பூசைக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் மீண்டும் தலித்கள் தனியே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் சாமியார் பிரச்சினையை ஆளுநர் டூப்ளேயிடம் கொண்டு செல்ல அவர் இப்படி ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் கூடி நின்று எதிர்த்தால் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஓரளவு ஜனநாயகம் கடை பிடிக்கப்படும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் அளவிற்கு நிலைமை மோசமில்லையாயினும் அங்கும் தீண்டாமைப் பிரச்சினைகள் உண்டு. புகழ் பெற்ற தமிழறிஞர் ஜி.யு. போப் தஞ்சையில் பாதிரியாராகப் பணியாற்றியபோது (1851 -58) தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கிறிஸ்தவர்கள் ஆயினர். தங்களைக் ‘காராள மரபினர்’ என அழைத்துக் கொண்ட வெள்ளாளக் கிறிஸ்தவர்களுக்கு ஜி.யு.போப் அவர்கள் இரு தரப்பையும் சமமாக நடத்துவது பிடிக்கவில்லை. ஆதிக்க சாதியினருக்குத் தலைமை தாங்கியவர் “எல்லாம் ஏசுவே, எனக்கு எல்லாம் ஏசுவே..” முதலான இனிய கிறிஸ்தவப் பாடல்களை இசையோடு அமைத்துத்தந்த வேதநாயக சாத்திரியார்தான். இரு தரப்புக்கும் திருவையாறு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. போப்புக்கு எதிராக வேதநாயகர் “போப் அய்யர் உபத்திரா உபத்திரவம்” என்றொரு நூலே எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு தாங்காத போப் அவர்கள் இரவோடு இரவாக தன் குடும்பத்தோடு வண்டி ஒன்றில் ஊரை விட்டு அகன்றார். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வல்லம் வரை அவரது வண்டியின் பின்னே சென்றார்களாம். இறுதிக் காலத்தில் அவர் நீலகிரியில் வாழ்ந்து மறைந்தார்.

இது போன்ற எத்தனையோ நிலழ்ச்சிகள் வரலாற்றில் உண்டு. இந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழியக் குறைந்த பாடில்லை. சுமார் நான்காண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் இறையூரில் இப்படி ஒரு பிரச்சினை. தங்கள் தெருவுக்கும் திருவிழாவின்போது மாதா ஊர்வலம் வர வேண்டும் என தலித் கிறிஸ்தவர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த ஆண்டில் தலித் மக்களின் வீடுகளை வன்னிய கிறிஸ்தவர்கள் தாக்கி உடைத்தார்கள். போலீஸ் துப்பாகிச் சூட்டில் இரண்டு வன்னியக் கிறிஸ்தவர்கள் இறந்தார்கள். நாங்கள் குழு அமைத்து உண்மை அறியச் சென்ற அன்று இறந்த வன்னியர் வீட்டுக் குடும்பங்களைச் சந்தித்துத் துக்கம் விசாரிக்க சுமார் 10 பாதிரிமார்கள் புதுச்சேரியிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் இறந்து போன வன்னியர் வீடுகளுக்கு மட்டும் சென்றனர். வீடுகள் அழிக்கப்பட்டிருந்த தலித் கிறிஸ்தவர்களை அவர்கள் ஒப்புக்காகக் கூடச் சந்திக்காதைக் கவனித்தோம். அன்றைய நாளிதழில் இந்து முன்னணித் தலைவர் அர்ஜுன் சம்பத், “தீண்டாமைக் கொடுமை ஒழிய கிறிஸ்தவ தலித்களே இந்து மத்திற்கு வாருங்கள்” எனப் பேசி இருந்தது வெளி வந்திருந்தது (இது எப்டி இருக்கு!). நாங்கள் அந்தப் பாதிரியார்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள் முழுக்க முழுக்க சாதி உணர்வுடன் கோபமாகப் பதிலளித்தனர். அர்ஜுன் சம்பத்தின் அறிக்கையைக் காட்டி, “ஃபாதர், உங்கள் மதம் அழிந்து விடும் போல இருக்கிறதே கவலை இல்லையா?” எனக் கேட்டபோது அவர்களில் ஒருவர் சொன்னார்: “அது அழிந்தால் அழிஞ்சிட்டுப் போகுது…”. ஆம் அவர்களுக்கு மதமோ இறை நம்பிக்கையோ பெரிதல்ல. சாதிதான் முக்கியம்.

இந்திய தலித் கிறிஸ்தவர்கள் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இந்து தலித்களுக்கு உள்ள அத்தனை தீண்டாமைகளையும் அவர்கள் அனுபவித்தாக வேண்டும். அதே நேரத்தில் இந்து தலித்களுக்கு உள்ள பட்டியல் சாதி உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. திருச்சபைக்கோ இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. இரட்டைக் கோவில்கள், இரட்டைக் கல்லறைகள் என தலித்கள் இழிவு செய்யப்படுவதை அது எந்நாளும் கண்டுகொண்டதில்லை.

தீண்டாமையின் உறைவிடமாகச் சிவகங்கை மறை மாவட்டம்:

சென்ற மாதம் கிறிஸ்தவத்தின் இந்தச் சாதிக் கொடுமை சிவகங்கை மறைமாவட்டத்தில் ஒரு தலித் உயிரைப் பலிவாங்கிய கதையை இப்போது பார்ப்போம். இராமநாதபுரம் மாவட்டத்துலுள்ள ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் வணங்கப்படும் அருளானந்தர் திருத்தலம் உள்ளது. கத்தோலிக்க மதத்தால் புனிதராக ஏற்கப்பட்ட அருளானந்தர் (St.John de Brito 1647- 1693) அவரது மதமாற்றப் பணிக்காக மறவர் நாட்டு மன்னன் கிழவன் சேதுபதியால் வெட்டிக் கொல்லப்பட்ட இடம் இது. போர்த்துகீசியரான இவர் பிரேசில் நாட்டு ஆளுநரின் மகன். இளவரசுப் பதவியைத் துறந்து இங்கு வந்து தியாகியான புனிதர் இவர். வேளாங்கன்னி, பூண்டி முதலான கத்தோலிக்கத் தலங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை வந்து போகும் ஆலயங்களில் ஒன்று இது. தான் இரத்தம் சிந்திய இந்த ஓரியூரில் இந்தியக் கிறிஸ்தவத்துடன் இரண்டறக் கலந்து போன சாதீயமும் தீண்டாமையும் தலித் கிறிஸ்தவர்களை ஆண்டாண்டு காலமும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும் எனப் புனிதர் டி பிரிட்டோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஓரியூர் பங்கைச் சேர்ந்த 11 கிராமங்களிலும் தலித் கிறிஸ்தவர்களே நிறைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருத்தலம் அமைந்துள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள சுமார் 180 குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்கள் தலித் கிறிஸ்தவர்கள். எனினும் ஓரியூரை ஓரங்கமாகக் கொண்ட சிவகங்கை மறைமாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமானோர் உடையார் கிறிஸ்தவர்கள். அடுத்த நிலையில் இருப்போர் தலித் கிறிஸ்தவர்களில் ஒருவரான தேவேந்திர குல வேளாளப் பிரிவினர். பிற தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்தால் ஆக மொத்தத்தில் அதிகமாக உள்ளவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்தான். பிற நாடார், வெள்ளாளர். கோனார் முதலான அனைத்துசாதிகளைச் சேர்ந்தோர்களும் அங்கிருந்தபோதும் அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.

ஒன்றாக இருந்த மதுரை மறைமாவட்டத்திலவெள்ளாளக் கிறிஸ்தவர்களின் சாதி ஆதிக்கம் இருந்தது என எழுந்த எதிர்ப்பின் விளைவாகப் புதிதாக உருவாக்கப்பட்ட சிவகங்கை மறைமாவட்டம் உடையார் கிறிஸ்தவர்களின் ஆதிக்க பூமியாகியது. திருச்சபையிலும் அவர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. வெளிப்படையாகத் தீண்டாமையும் பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டது. இங்குள்ள சுமார் 125 மறை மாவட்டப் பள்ளிகளில் சுமார் 960 பேர்கள் பணி செய்கின்றனர். இதில் 80 சதம் பேர் உடையார் கிறிஸ்தவர்கள். கிட்டத்தட்ட சம அளவில் உள்ள தலித் கிறிஸ்தவர்களின் பங்கு வெறும் 10 முதல் 15 சதம் கூட இல்லை.
ஆர்.எஸ்.மங்கலம் எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம், முதலான ஊர்களில் உயர்சாதியினருக்கும் தலித்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. உயர் சாதியினர் வசிக்கும் பகுதிகளில்தான் மறைமாவட்டப் பள்ளிகள், அழகான விசாலமான ஆலயம், மருத்துவ மனை, கன்னியர் மடம் முதலிய வசதிகள் செய்யப்படுவதும் (எ.கா சவேரியார் பட்டினம்), தலித் பகுதிகளில் இந்த வசதிகள் எதுவும் இல்லாததோடு ஆலயமும் கூட சிறுத்துக் குறுகலாக இருப்பதும் கண்கூடு. காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சூசையப்பர் பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சமுதாயக் கூடத்திற்கு சாதிப் பெயர் இடப்பட்டுள்ளது.
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள மொத்த குருக்களின் எண்ணிக்கை 157. இதில் 89 பேர் உடையார்கள், 32 வெள்ளாளர்கள், 12 நாடார்கள், 4 கள்ளர், 9 பறையர், 2 கடையர். இதில் இப்பகுதியில்இரண்டாவது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் ஒருவர் கூட இல்லை.

இப்படி நிறையச் சொல்லலாம். இப்பகுதியில் உள்ள தலித் மாணவர்கள் குருத்துவக் கல்லூரிகளில் சென்று படிக்கும்போது, அவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி குரு பட்டம் மறுக்கப்படுகிற குற்றச்சாட்டுகளும் இங்குண்டு. மைக்கேல்ராஜ் என்பவர் முறையாகப் படிப்பை முடித்த பின்னும் கூட மற்றொருவர் செய்த ஒரு குற்றத்தை இவர் மீது சுமத்தி, இவருக்கு இன்று வரை குருபட்டம் அளிக்கவில்லை. இத்தனைக்கும் ரெக்ஸ்டன் என்பவர் தானே அதைச் செய்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் இது நடந்துள்ளது. 18 தலித்களுக்கு இவ்வாறு குரு பட்டம் மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிரது.
இதுதவிர இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் புகார் அளிப்பது,, மறைமாவட்டக் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை உயர் சாதியினருக்கே கொடுப்பது, ஆலயத் திருவிழாக்களில் கொடி சுமந்து செல்வது போன்ற மரியாதைக்குரிய பணிகளை அடித்தளப் பிரிவினருக்கு அளிப்பதில் பிரச்சினை செய்வது, அடித்தள மக்கள் வசிக்கும் ஓரியூர் போன்ற திருத்தலங்களின் முக்கிய மத நிகழ்வுகளான மறை மாவட்ட திருயாத்திரை முதலானவற்றை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றுவது முதலான பல வடிவங்களில் இந்தத் தீண்டாமைகளை திருச்சபையும் அதில் தலைமை ஏற்றுள்ள உயர்சாதிப் பாதிரிமார்களும் செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டில் அப்படித்தான் தியாகி இம்மானுவல் பேரவைத் தலைவர் சந்திரபோஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை என்னைச் சந்திக்க அனுப்பியிருந்தார். இப்படியான கொடுமைகளை எதிர்த்துப் சிவகங்கை மறை மாவட்டம் மேல அரும்பூர் கிராமத்தலைவர் பெர்னர் தூஸ்பால் என்பவர் பங்கு சாமியார் அருட் பணி. ஆரோக்கியசாமியிடம் முறையிடச் சென்றபோது ஒரு வாக்குவாதம் நடந்துள்ளது. பாதிரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தூஸ்பாலைக் கைது செய்ததோடு அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தது (ஆணை எண் 7 / குண்டர் / 2104). இந்தக் கொடுமைகளை விளக்கி நான் அவ்ர்களுக்காக ஒரு மனு தயாரித்துக் கொடுத்தேன். குண்டர் சட்ட மேல் முறையீட்டு ஆயம் பின்னர் அவரை விடுதலை செய்தது.

ஓரியூர் சார்லஸ் மரணம்:

தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த ஓரியூர் தலித் கிறிஸ்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2012 ஜூலையில் சிவகங்கை மறைமாவட்ட வெள்ளி விழாவின்போது முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர், விழாநிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் உட்பட 7 ஆயர்களும் இதைக் கண்டுகொள்ளாமல் திருப்பலி நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் முழக்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தலித் கிறிஸ்தவரான ஓரியூர் திட்டையைச் சேர்ந்த அருள்வேதமாணிக்கம் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் சூசைமாணிக்கம் உட்பட ஆறு பேர்கள் மீது வேதமாணிக்கம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை.

பின்னர் பங்குப் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் ஒப்புதலுடனேயே ஆலயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனினும் வழக்கமாமக்டோபர் மாதத்தில் ஓரியூரில் தொடங்கும் மறை மாவட்ட திருயாத்திரை 2013ம் ஆண்டு காரை ரஸ்தாவிலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பங்குப் பேரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆயர் சூசைமணிக்கம் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவைப் பங்குப் பேரவை எதிர்த்தது. இப்படிப் பிரச்சினைகள் தொடர்ந்தன. 2014 ஆகஸ்ட் 27 அன்று தொண்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில் பங்குப் பேரவை உறுப்பினர்களும் ஓரியூர் ஏசுசபை நிர்வாகமும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினர். ஓரியூர் திருத்தல நடவடிக்கைகள், திருவிழாக்கள் முதலியவற்றை இனி பங்குப் பேரவையுடன் ஆலய நிர்வாகம் கலந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஓரியூர் திருவிழா நடத்துவது பர்றி ஜூன் 14 ஆகஸ்ட் 9 தேதிகளில் பங்குத் தந்தையும் பேரவை உறுப்பினர்களும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி ஆலயத் திருவிழாக் கொடியேற்ற நிகழ்வின் போது பங்குப் பேரவைச் செயலாளர் ஆரோக்கிய சாமியும், மூத்த தலைவர் சோழகன்பேட்டை அருளானந்தமும் கொடியைத் தூக்கி வநது அளிப்பது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. .
எனினும் இவ்வாறு பேரவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முறியடிப்பதென மத நிர்வாகம் முடிவெடுத்துச் தலித் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைச் சிதைக்க முனைந்தது.. செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக கொடியேற்றத்திற்கு முந்திய நாளன்று ஒரு அறிவிப்பை ஆலய நிர்வாகம் வெளியிட்டது.ஆரோக்கியசாமி மற்றும் அருளானந்தம் இருவர் தவிர மூன்றாவதாக ஓரியூர் கிராமத் தலைவர் அருள்பத்திநாதன் என்பவரும் கொடியைச் சுமந்து வருவார் என்று அதில் சொல்லப்படிருந்தது. அருள்பத்திநாதனும் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றபோதிலும் அவர் பங்குப் பேரவையுடன் இணைந்து செயல்பட்டவர் இல்லை. மாறாக அவர் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கமானவர். அவரை இப்படி பங்குப் பேரவைக்கு எதிராக நிறுத்தித் தலித் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்பட்டது.. கொடியேற்றத்தில் அருள்பத்திநாதன் கொடி தூக்கி வந்தால் நாங்கள் கொடி தூக்க மாட்டோம் என சார்லஸ் தலைமையில் இருந்த பங்குப் பேரவை மறுத்தது. ஆக 29, கொடி ஏற்றும் நாளன்று கொடி ஏற்றும் நேரத்திலும் சார்லஸ் தலைமையில் பங்குப் பேரவையினர் ஒப்பந்தப்படிச் செயல்படுமாறு வற்புறுத்தினர். பாதிரிமார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இடையில் காவல்துறை தலையிட்டு யாரும் கொடிதூக்கி வரவேண்டாம் பாதிரிமார்களே கொடியேற்றட்டும் என அறிவுறுத்த அவ்வாறே நடைபெற்றது.

ஒப்பந்தம் மீறப்பட்டது கண்டு மனம் வெதும்பிய சார்லசும் பங்குப் பேரவையினரும் தாங்கள் திருப்பலியில் கலந்து கொள்ளாமல், ஜெப வழிபாடு செய்து தொடர்ந்து மண்டகப்படிகளையும் சப்பர ஊர்வலத்தையும் நடத்துவதாகக் கூறியபோது ஆலய நிர்வாகம் அவ்வாறு செய்தால் சாமித் திரு உரு மற்றும் சப்பரங்களைத் தர இயலாது என அறிவித்தது. காவல்துறையும் ஆலய நிர்வாகத்திற்கு முழு ஆதரவளித்தது. சார்லசும் பங்குப் பேரவையினரும் திகைத்து நின்றனர். அப்படியெல்லாம் திருவிழாவை நடத்தத் தாங்கள் அனுமதிக்க முடியாது என சார்லஸ் கூறியபோது போலீசை வைத்து நடத்திக் கொள்வோம் என ஓரியூர் ஆலய சுப்பீரியர் யாகு கூறியுள்ளார்.

அவ்வாறே ஆக 30 அன்று மண்டலக்கோட்டை முதல் மண்டகப் படியை காவல்துறை உதவியுடன் ஆலய நிர்வாகம் டிராக்டர் ஒன்றில் சப்பரத்தை ஏற்றி மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாமலே நடத்தி முடித்தது.
ஆக 31 அன்று சார்லசின் சொந்த ஊரான புல்லூர் மண்டகப்படியையும். ஆலய நிர்வாகம் புல்லூர் மக்களின் ஒத்துழிப்பின்றி காவல்துறைத் துணையுடன் “வெற்றிகரமாக” தம் டிராக்டர் சப்பர ஊர்வலத்துடன் நிகழ்த்த இருந்த தருணத்தில்தான் இரவு எட்டுமணிவாக்கில் ஆலயத்தின் பின்புறம் சுமார் 100 மீ தொலைவில் முட்புதர்களுக்கு மத்தியில் சார்லஸ் தீயில் எரிந்து மரணமடைந்தார்’

சந்தேகத்திற்குரிய சார்லசின் மரணம்:
ஒரு உண்மை அறியும் குழு அஇத்துச் சென்ற மாதத்தில் நாங்கள் இது குறித்து ஆய்வு செய்தோம். சார்லசின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் பேசியபோது சார்லஸ் செய்து கொண்டது தற்கொலைதான் எனவும் இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மறைமாவட்ட நிர்வாகமோ பாதிரியார்கள் யாருமோ காரணமில்லை எனவும் கூறினர். தற்கொலைக்குத் தூண்டுதல் எனவும் யாரையும் குற்றம் சொல்ல இயலாது என்றனர்.

ஆனால் சார்லசின் குடும்பத்தாரும், பேரவை உறுப்பினர்களும், பிற இயக்கத்தவர்களும், நண்பர்களும் இதை மறுக்கின்றனர். சார்லஸ் தற்கொலை மனநிலையுடன் இருக்கவில்லை, அன்று முழுவதும் மிகவும் இயல்பாக நடந்து கொண்டிருந்தார் எனக் கூறுகின்றனர்.. அன்று மாலை அவரைச் சந்தித்த பிற அவரது நண்பர்களும் அவர் வழக்கம்போல உற்சாகமாக இருந்ததாகவே கூறினர். இயல்பாகப் பேசிச் சென்ற சற்று நேரத்தில் சார்லஸ் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் ஓடி வந்தது புதரில் வீழ்ந்ததாகவும் காவல்துறையினர் ஓடி வந்து அந்த இடத்தில் யாரையும் அனுமதிக்காமல் விரட்டியதாகவும் அனைவரும் கூறினர்.
அடுத்த நாள் சாலை மறியல் நடந்துள்ளது. வயதான பாதிரியார் காப்ரியல் தாமஸ் அவர்களின் தலையில் காயமும் பட்டுள்ளது. பின் ஆக 7 அன்றுதான் சார்லசின் உடலைப் பெற்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவர் இறுதி வரை உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்த சார்லஸ் இப்படித் திடீரென தற்கொலை முடிவுக்கு வந்ததும் எந்தக் குறிப்பும் எழுதி வைக்காமல் இறந்ததும் இது தற்கொலைதானா என்கிற நியாயமான அய்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எதிர்ப்பாகத் தீக்குளிக்க ஒருவர் முடிவு செய்தால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புறமாக வந்து எந்தத் தற்கொலைக் குறிப்பும் எழுதி வைக்காமல் இப்படிச் செய்து கொள்வாரா என்கிற கேள்வியும் எழுகிறது.

முடிவாக…

சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களே அதிகம் இருந்த போதும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் சாதி உணர்வுடன் செயல்பட்டவருமான பணி.சூசைமாணிக்கம் போன்றோரை ஆயர்களாக நியமித்து வந்த திருச்சபை கண்டனத்துக்குரியது.

சென்ற ஆண்டில் ஓரியூருக்கு அருகில் உள்ள எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு முஸ்லிம் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஒரு முஸ்லிம் காவலர்கள் கூடப் பணியமர்த்தப்படாததோடு, முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவான ஒருவர் உதவி ஆய்வாளரும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது நடந்தது. இது சுட்டிக்காட்டப்பட்ட பின் அவசர அவசரமாக அங்கு ஒரு முஸ்லிம் அதிகாரியை காவல்துறை நியமித்தது. அதேபோலத்தான் இன்று சிவகங்கை மறைமாவட்டமும் செயல்பட்டுள்ளது. எல்லாம் முடிந்த பின் இன்று மறைமாவட்டம் ஓரியூர் பங்குத் தந்தையாக அங்குள்ள பெரும்பான்மை தலித் சமூகத்தைச் சேர்ந்த அருட் திரு எஸ். மரியநாதன் அவர்களை நியமித்துள்ளது. இது ஒரு வகையான damage control முயற்சியாக இருந்தபோதும் தந்தை மரியநாதன் அவர்கள் மிகவும் பொறுப்பானவர். தன்னால் இயன்றவரை நாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைக் களைய முயல்வதாக அவர் கூறினார். மறைமாவட்டம் தலித் கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்திருந்தால் அது மிகவும் தவறு எனவும் தான் அவற்றைச் சரிசெய்ய முயல்வதாகவும் கூறினார்.

இன்றைய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் கிறிஸ்தவத்தில் ஊறிப்போன சாதிமுறையும் தீண்டாமைக் கொடுமையுந்தான். இது வேறோடு களையப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, உடனடியாக மறைமாவட்டத்தில் உள்ள குறைபாடுகளை அறிய திருச்சபையினர் அருட் திரு எக்ஸ்.டி.செல்வராசு போன்ற ஒரு மூத்த நடுநிலையாளர் ஒருவரை நியமித்து இந்தக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். சாதி உணர்வுடன் செயல்பட்ட பாதிரிமார்கள் தண்டிக்கப்பட வேண்டும். முறையாக எல்லாத் திருத்தலங்களிலும் பங்குப் பேரவைகளை உருவாக்கி ஆலய நிர்வாகமும் பங்குப் பேரவையும் இணைந்தே ஜனநாயக முறையில் முடிவு செய்து செயல்பட வேண்டும், காவல்துறையினர் மறைமாவட்ட அதிகாரத்திற்கு ஆதரவாகவே எப்போடும் செயல்படுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறை தலையிட நேர்ந்தால் அதை அவர்களே முடிவு செய்யாமல் ஒரு விரிந்த சமாதானக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின்படி செயல்பட வேண்டும். சார்லசின் மரணத்தைப் பொறுத்தமட்டில் அதை ஒரு தற்கொலை என்கிற கோணத்தில் மட்டுமே அணுகாமல் குடும்பத்தார் முன் வைக்கும் நியாயமான சந்தேகங்களைக் கண்க்கில் கொண்டு இது ஒருகொலையாகவும் இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

சார்லசின் மரணம் தற்கொலையாகவே இருந்தாலும் கூட பங்குப் பேரவையின் முடிவைத் தன்னிச்சையாக மாற்றியது, அடித்தளச் சமூகத்தைப் பிளவு படுத்தியது. ஊருக்கு முக்கியமானவர்களே இல்லாமல் டிராக்டர் வைத்து சப்பர ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றின் மூலம் சார்லசுக்குத் தீராத மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சார்லஸ் செய்து கொண்டது தற்கொலை ஆயின் அவர் இந்த வகையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என்றே ஆகிறது. எனவே வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என்பதிலிருந்து மாற்றி தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்காக (இ.த.ச 306) விசாரிக்கப்பட வேண்டும். தவிரவும்சார்லஸின் மரணம் அது எப்படி ஆயினும் அதற்கு திருச்சபையே பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு திருச்சபை 10 இலட்ச ரூபாய் இழப்பீட்டை திருச்சபை அளிக்க வேண்டும்.

(‘மக்கள் களம்’ இதழில் வெளிவந்த கட்டுரை)