பொது சிவில் சட்ட விவாதத்தின்போது நினைவிற் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

(‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள பொது சிவில் சட்டம் பற்றிய நூலின் முகப்புக் கட்டுரை. மேலே உள்ள படம்: ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் சஃபியா நியாஸ்)

1.விருப்ப அடிப்படையில் எந்த மதத்தினர் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ‘பொது சிவில் சட்டம்’ ஒன்று இப்போதும் நடைமுறையில் உள்ளதுதான். 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriages Act, 1954) இத்தகையதுதான். குறிப்பான மதச் சட்டங்கள் வேண்டாம் எனக் கருதும் யார் வேண்டுமானாலும் இதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இச்சட்டத்தை 1925 ம் ஆண்டு ‘இந்திய வாரிசுரிமை சட்டம்’ (Indian Succession Act) முதலானவற்றுடன் இணைத்து வாசித்தால், திருமணம், விவாக ரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை முதலான அம்சங்களில் மதம் சாராத சட்டங்களுக்கு யாரொருவரும் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியும். எனவே இப்போது பொது சிவில் சட்டமே இல்லை எனச் சொல்வது தவறு.

2.தலாக்” என ஒரே நேரத்தில் மும்முறை சொல்லி ஒரு ஆண் தன் மனைவியை விவாக ரத்து செய்வதற்கு திருக்குர் ஆனிலோ, ஹதீஸ்களிலோ இடமில்லை. ஆண்கள் இருவர் அவ்வாறு தாம் உடனே ரத்து செய்துவிட்டதாக வந்தபோது நபிகள் அதை ஏற்காததோடு அவர்களை, “நான் உயிரோடு இருக்கும்போதே திருக்குர் ஆன் சட்டத்தை நகைப்புக்கு இடமாக்குகிறீர்களா?” எனக் கடிந்து அவர்களின் உடனடி முத்தலாக்கை ரத்து செய்தார் என்பதற்கு ஆறு ஹதீஸ்கள் உள்ளன.

3.ஒரு முறை தலாக் சொல்லி மூன்று மாதத்திற்குள் அப்படிச் சொன்னதை கணவன் ரத்து செய்யலாம். இரண்டாம் முறை சொன்ன பிறகும் கூட அப்படி ரத்து செய்யலாம். அப்படி மூன்று மாதத்திற்குள் சொன்ன தலாக்கை ரத்து செய்யாமலும், மூன்று தலாக்குகளைப் போதுமான இடைவெளியில் சொல்லாமலும் இருந்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழத் தடையில்லை. அதாவது அந்த மனைவி இடையில் வேறொருவருடன் இன்னொரு திருமணம் செய்யாமல் (ஹலாலா) அவரையே திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து அவருடன் வாழ்க்கை நடத்தலாம். சொன்ன தலாக்கை மூன்று மாதத்திற்குள் ரத்து செய்ய வாய்மொழியாக ரத்து செய்து அறிவிக்கக் கூடத் தேவையில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானது.

4.கலீபா உமரின் காலத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது என ‘முத்தலாக்கை’ ஆதரிப்பவர்கள் சொல்வது சரியல்ல. வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பேர் அப்படிச் சொல்லிக் கொண்டு உமரிடம் வந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததை அவர் ஏற்கவில்லை. அவர்களைக் கடுமையாகக் கண்டித்ததோடு சாட்டை அடி கொடுத்து தண்டிக்கவும் செய்தார். பின் அந்த மனைவியரிடம் தம் கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா என விசாரித்தபோது அவர்கள் ‘இல்லை’ எனச் சொன்னார்கள். அதன் பின்னரே அந்தத் திருமணங்களை ரத்தானவையாக உமர் அறிவித்தார். ஒரு வேளை அந்த மனைவியர் விவாகரத்தை ஏற்கவில்லை எனக் கூறி இருந்தால் அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதே பொருள். கோபத்தில் கணவர்கள் முத்தலாக் சொல்லிவிட்டுப் பின் வருத்தம் தெரிவித்தால் கூட மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அந்தப் பெண் ‘ஹலாலா’ செய்ய வேண்டும் எனச் சில முல்லாக்கள் சொல்வதை அது முஸ்லிம் சட்டத்திற்கு எதிரானது என தாகிர் முகம்மது போன்ற சட்டவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

5.ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது என்பதை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இப்படியான தீர்ப்பு குறித்து நான் வேறு கட்டுரை ஒன்றில் விரிவாகச் சொல்லியுள்ளேன். மசூத் அகமத் வழக்கில் (டெல்லி உயர்நீதி மன்றம், 2008) நீதிபதி பாதர் துரேஸ் அகமத் அவர்களும் இதை உறுதி செய்துள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அகமத் அவர்களின் மகன். எனவே இதையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே சொல்லப்படுவதாக நாம் நினைக்கத் தேவை இல்லை.

6.ஈராக், ஜோர்டான், எகிப்து, சிரியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரபு முஸ்லிம் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஒரே தடவையில் முத்தலாக் சொல்வது செல்லாது என சட்டம் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் முதலான நமது துணைக் கண்ட முஸ்லிம் நாடுகளிலும் கூட விவாகரத்து நடமுறைக்கு வர மூன்றுமாத கால அவகாசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் ஒரே நேர முத்தலாக்கிற்கு அங்கும் இடமில்லை எனக் கருதலாம்.

7.இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவர் முஸ்லிமாக மதம் மாறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (Sushmita Ghosh Writ Petition No. 509 of 1992). அப்படிச் செய்பவர் மீது இ.த.ச 494 மற்றும் 495 வது பிரிவுகளின்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். இதே போல வேறு சில தீர்ப்புகளும் உண்டு. முஸ்லிமாக மாறி இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர் தான் முஸ்லிமாக மாறுவதை உண்மையிலேயே அம்மதத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்ததாகவும், மாற்றத்துக்குப் பின் தான் முஸ்லிமாகவே வாழ்வதாகவும் நிறுவ வேண்டும். இப்படி ஏமாற்று மதமாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய தீர்ப்புகளைக் காட்டி ஏமாற்றுபவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வசதி உள்ளது. இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் இப்படியான ஏமாற்று மதமாற்றங்களைத் தடை செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென ‘இந்தியச் சட்ட ஆணையம்’ அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளது (எண்:227, ஆண்டு 2009). பலதாரத் திருமணம் தொடர்பான இஸ்லாமியச் சட்டத்திற்கும் இது எதிரானது என்கிறது சட்ட வாரியம். ஷரியத் சட்டத்தின்படி எல்லா மனைவியருக்கும் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பலதார மணத்திற்கான நிபந்தனை. முதல் மனைவி ஒரு மதத்திலும் அடுத்த மனைவி இன்னொரு மதத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளபோது கணவன் இருவருக்கும் சம நீதியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்கிறது சட்ட வாரியம்.

8.முஸ்லிம் ஆணைப் போலவே முஸ்லிம் பெண்ணும் சுய விருப்பின் அடிப்படையில் தன் கணவரை விவாக ரத்து செய்யலாம். இதை ‘குலா’ என்பர். பெண் தன் கணவரை ‘குலா’ செய்வதற்கு கணவரின் சம்மதம் வேண்டும் எனச் சில மவுலவிகள் சொல்வது தவறு. நம்பிக்கை உள்ளவர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுலானா மவுதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் கூட ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தம் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைத் தீர்மானிப்பது அந்த மனைவி மட்டுமே. அவள் கணவனோ இல்லை காஸியோ இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த மனைவியின் விருப்பை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது மட்டுமே காஸியின் பணி. விவாகரத்து செய்யப்படும் கணவன் மனைவிக்கு அளித்திருந்த ‘மெஹ்ர்’ தொகையைத் திரும்பக் கோரினால் அவர் அதைத் திருப்பித் தர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. திருமணத்தின்போது மெஹ்ர் தொகை கொடுக்கப்படாதிருந்தால் ரத்தின் போது மனைவி எதையும் தர வேண்டியதில்லை. தவிரவும் ‘குலா’ வைப் பொருத்தமட்டில் அது சொல்லப்படும் கணத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. ‘தலாக்’ போல காத்திருப்புக் காலம் கிடையாது. இது குறித்து தாரிக் மெஹ்மூத் அளிக்கும் விளக்கம்: ஆண் வலிமையானவன்; பெண் பலவீனமானவள். அவன் அளை வற்புறுத்தில் பணிய வைக்க முடியும். அந்த வாய்ப்பை அவனுக்கு அளிக்கலாகாது என்பதே இதன் பொருள். ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்வதாகக் கூறுகிறார். நபிகள் அவளது கருத்தை மறு பரிசீலனை செய்யச் சொல்கிறார். அந்தப் பெண் அவரிடம், “இது கட்டளையா, ஆலோசனையா?” என்கிறாள். “ஆலோசனை மட்டுமே” என நபிகள் பதிலுறுக்கிறார். அப்படியானால் அதை நான் ஏற்கவில்லை என அப்பெண் பதிலளிக்க நபிகள் அவ்வாறே அதை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் சொல்லிய குலாவை அங்கீகரித்ததாக வரலாறு.

9.வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை என்கிற கருத்தை நம் அரசியல் சட்டம் வற்புறுத்துவதாகக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் என்பது நம் அரசியல் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் (List III) வைக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய -மாநிலப் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்லது. அதாவது மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் இதன் மீது சட்டம் இயற்றலாம். இதன் பொருள் தனிநபர் சட்டங்களைப் பொருத்த மட்டில் அந்தந்த தேச வழமைகளுக்கு மதிக்களிக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் இன்று கேரள அரசு இயற்றியுள்ள ‘கூட்டுக் குடும்ப ஒழிப்புச் சட்டம் (1975) ன் ஊடாக மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) ன் பல பிரிவுகள் பெரிய மாற்றத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. அதேபோல நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்து திருமணச் சட்டத்தில் (1955) தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் முதலான மாநிலங்கள் பல மாற்றங்களைச் செய்துள்ளன. காஷ்மீரில் உள்ள முஸ்லிம் குடும்பச் சட்டப் பிரிவுகளுக்கும் உ.பி யிலுள்ள முஸ்லிம் சட்டப் பிரிவுகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. புதுச்சேரி மற்றும் கோவா போன்று 1947 க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்களில் வாழும் இந்துக்களுக்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்துச் சட்டங்களிலிருந்து விலக்குகள் உண்டு. புதுச்சேரியிலுள்ள ஒரு இந்து விருப்பப்பட்டால் ஃப்ரெஞ்ச் காலச் சிவில் சட்டத்தைத் தொடரலாம்; தன் மனைவி குழந்தை பெறவில்லை அல்லது ஆண் குழந்தை பெறவில்லை எனக் காரணம் காட்டி கோவாவில் உள்ள ஒரு இந்து ஆண் இரண்டாம்  திருமணம் செய்து கொள்ளலாம். நாகாலந்த், மிசோராம் மக்களுக்குப் பழங்குடி வழமைகளைச் சட்டமாகக் கொள்வதற்கு இந்துச் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 13ம் திருத்தம் (1962) நாகாலந்துக்கு இந்த உரிமையை அளிக்கிறது. நாகாலந்து உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றமோ இல்லை நாடாளுமன்றமோ மாற்ற முடியாது. மிசோராம், நாகாலந்து, மணிபூர், கேரளா, கோவா முதலான மாநிலங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களிடையே உள்ள வேறுபட்ட வழமைகள் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு இயற்றியுள்ள சட்டங்களோடு இவையும் நடைமுறையில் உள்ளன என்கிறார் Uniform Civil Code: Fictions and Facts எனும் நூலாசிரியர் பேரா. தாஹிர் முகம்மது. பார்சி திருமணம் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க சிறப்பு பார்சி திருமண நீதிமன்றங்களை உருவாக்க சட்டத்தில் இடம் உள்ளது. திருமணங்கள், விவாக ரத்து, மகளுக்குச் சொத்து வழங்கல் முதலியவற்றில் பார்சி சட்டங்கள் முஸ்லிம் சட்டங்களுக்கு நெருக்கமாக உள்ளன. இப்படியான வேறுபாடுகள் இன்று அனைத்து மதத்தினருக்கும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் இன்று முஸ்லிம்கள் மட்டுமே எதோ சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுபோல இலக்காக்கப்படுகின்றனர்.

10.”முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ளன. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் இதை ஏற்க முடியாது’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மதசார்பற்ற நாடு என்பதன் பொருள் எந்த ஒரு மதநம்பிக்கையும் அதன் சடங்குகளும் பிற நம்பிக்கையாளர்கள் மீது திணிகப்படக் கூடாது என்பதே. மற்றபடி அவரவர் நம்பிக்கைகளை அவரவர் கடைபிடிப்பதை மதச்சார்பின்மை என்கிற பெயரில் தடை செய்வதோ இல்லை அவற்றில் தலையிடுவதோ முடியாது. அதோடு முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மட்டுமே அவர்களின் மத நம்பிக்கைகளோடு தொடர்புடையதாக உள்ளன என்பதும் தவறு. இந்து திருமணச் சட்டம் ‘சப்தபதி’, ‘கன்யாதன்’ முதலான மதச் சடங்குகளை நிபந்தனைகளாக ஏற்றுக் கொள்வது பலராலும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

11.’பொதுசிவில் சட்டம் என்னும் கருத்தை முஸ்லிம்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். முற்போக்கான மாற்றங்களுக்கு அவர்கள் எதிராக உள்ளனர்’ என்கிற கூற்றிலும் பொருள் இல்லை. தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற கருத்து 1950 களில் அம்பேத்கர் போன்றோரால் முன்மொழியப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்துமகா சபையினர்தான். மற்ற மதங்களை விட்டு விட்டு ஏன் இந்து மதத்தில் கைவைக்கிறீர்கள் எனக் கடுமையாக எதிர்த்தனர். இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதை பாரதீய ஜனசங் கட்சியைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். இந்துச் சட்டத்தின்படி பெண்கள் தம் குழந்தைகட்கு 5 வயதுவரை மட்டுமே காப்பாளராக இருக்க முடியும்; அதற்குப் பின் தந்தையே காப்பாளராக இருக்க முடியும். மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கில்லை. ஆண்களுக்குப் பலதார உரிமை உண்டு. பெண்கள் விவாகரத்து செய்ய இயலாது. இன்றளவும் மனைவி பிரிய நேர்ந்தால் குடும்பச் சொத்தில் (marital property)  மனைவிக்கு உரிய பங்கு கிடையாது என்பன போன்ற பல பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்த இந்துச் சட்டத்தில் எந்த மாற்றங்களும் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் காட்டினர். இன்றும் கோவா வில் இந்து ஆண்கள் இரண்டாம் தாரம் திருமணம் செய்ய உள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அங்குள்ள இந்துத்துவ சக்திகள் எதிர்க்கின்றன.

12.”பொது சிவில் சட்டம் என்கிற கோரிக்கையை முஸ்லிம் பெண்கள் ஆதரிக்கின்றனர். முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற பிற்போக்கான மத அமைப்புகளும் மட்டுமே எதிர்க்கின்றனர்” எனச் சொல்வதும் தவறு. “பாரதீய முஸ்லிம் மகிள அந்தோலன்’ (BMMA) எனும் அமைப்பு இவ்வாறு குறிப்பாகக் குற்றம் சாட்டப் படுகிறது. ஒரு முஸ்லிம் தமிழ் வார இதழ் இந்த அமைப்பை பா.ஜ.க அமைப்பு என்று கூட எழுதியிருந்தது. இது தவறு. இது ஒரு சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அமைப்பு. இது பா.ஜ.க அரசின் ‘பொது சிவில் சட்டம்’ எனும் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. முத்தலாக் சொல்லி பெண்களை உரிய பொருளாதாரப் பாதுகாப்புகள் அளிக்காது ஆண்கள் தன்னிச்சையாக விவாக ரத்து செய்வதைத்தான் அது எதிர்க்கிறது. 13 மாநிலங்களில் கிளைகளையும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நூர்ஜஹான் சஃபியா நியாஸ் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழுக்கு (அக்டோபர் 11, 2016) அளித்துள்ள நேர்காணலில் மிகத் தெளிவாகத் தாங்கள் பொதுச் சிவில் சட்டம் என்கிற பா.ஜ.கவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும், ஷரியத் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்டு பெண்கள் சம உரிமை பெறும் வண்ணம்  முஸ்லிம் தனிநபர் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோருவதாகவும் சொல்லியுள்ளார். முத்தலாக் மற்றும் ஹலாலா நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் கோரிக்கை எனவும், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோருடனும் பேசி வேண்டுமானால் அவர்களின் தனிநபர் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்து கொள்ளட்டும் எனவும் கூறும் நூர்ஜெஹான், பொது சிவில் சட்டம் என்பது ஒரு அகன்ற விரிவான பிரச்சினை, அதில் அரசு ஆர்வமாக இருந்தால், வேண்டுமானால் அதை சிறப்புத் திருமணச் சட்டம் போலக் கட்டாயமாக்காமல், தனிநபர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம் என்கிறார். எனினும் இவ்வமைப்பினர் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் நிலைபாட்டையும் அதன் “மத்திய கால மனநிலை” யையும் ஏற்பதில்லை. முத்தலாக் சொல்லி தன்னிச்சையாக விவாகரத்து செய்வதை ஏற்க இயலாதென முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என சற்று கட்டுப்பெட்டித் தனமான அமைப்பாகிய ஜமாத் ஏ இஸ்லாமியின் தலைவர் சலீம் எஞ்சினீயர் கூட ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ அமைப்பு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஷரியத் நீதி அமைப்புகளை அமைக்க உள்ளதற்கு அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) ஆதரவு அளித்துள்ளது. இடதுசாரிப் பெண்கள் அமைப்பும் இன்று இதே நிலையைத்தான் முன்வைக்கின்றன. “நாங்கள் பொது சிவில் சட்டத்தைக் கோரவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சமத்துவம், சமநீதி என்கிற அடிப்படையில் சீர்திருத்தங்களையே வேண்டுகிறோம்” என்கிறார் ‘அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க’த்தின் சட்டத்துறை ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான கீர்த்தி சிங். ‘இந்தியப் பெண்களின் தேசியக் கூட்டமைப்பின்’ (NFIW)  பொதுச் செயலர் ஆனி ராஜா, “நாங்களும்  பொது சிவில் சட்டம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். எனினும் இவர்கள் பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்துச் சட்டத்தை எல்லோர் மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர் என்கிறபோது எங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளோம்” என்கிறார். இவர்களும் இப்போது தனிநபர்ச் சட்டங்கலீல் உரிய திருத்தங்கள் என்கிற கோரிக்கையோடு இப்போது நிறுத்திக் கொள்கின்றனர் (‘ஃப்ரன்ட்லைன்’ நவ 11, 2016).

13.வேறு சில சிறிய முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் செய்வதையும் உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் கோருகின்றன.

14.’அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்’ (AIMPLB) என்பது 1973 ல் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் அடையாளம் நீக்கப்படுதல் முதலான முயற்சிகள் மேலெழுந்த ஒரு காலகட்டதில், பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான அமைப்பு இல்லாத சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஷா பானு, பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்க்காற்றிய இந்த அமைப்பு கடந்த 43 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவது என்கிற வகையில் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் நிரம்பிய அந்த அமைப்பில் தேவ்பந்தினரின் ஆதிக்கம் இருந்தது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பரேல்வி பிரிவினர் இதிலிருந்து விலக நேரிட்டது. ஷியா பிரிவினர் இப்போது தனியாக ஒரு சட்ட வாரியத்தை அமைத்துள்ளனர். அதே போல முஸ்லிம் பெண்களுக்கான சட்ட வாரியம் ஒன்றும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் இப்போது நான்கு முஸ்லிம் சட்ட வாரியங்கள் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது. AIMPLB என அறியப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்குடையது என்று முஸ்லிம் அறிஞர்களான தாரிக் முகம்மது, ஏ.ஜி.நூரானி முதலானோராலும் ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ போன்ற பெண்கள் அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றனர். தற்போது நடைபெறும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் சட்ட வாரியம் “பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்” எனக் கூறியுள்ளதும் இன்று கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2009 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லோருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது இது மதரசா கல்விமுறையைப் பாதிக்கும் என இச்சட்ட வாரியம் எதிர்த்ததும் அப்போது விமர்சனத்துக்குள்ளாகியது.. எனினும் இன்று பொது சிவில் சட்டம் தொடர்பான வழக்கில் இவர்கள் தலையிட்டு அளித்துள்ள மனுவில் முத்தலாக்கை ஏற்க இயலாது எனவும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது எஞ்சிய வாழ்நாளுக்குப் போதுமான ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தலையீட்டால் உருவாகியுள்ள நீதி வழங்குக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

15.முத்தலாக், ஜீவனாம்சம் முதலான அம்சங்களில் நீதிமன்றத் தலையீட்டால் இன்று முஸ்லிம் பெண்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பு, மற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பின்னணியில் உருவாகியுள்ள கருத்து வளர்ச்சி முதலியன தனியே ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவமும்  உலகமயமும்

 பொருளியல் (economics)  குறித்த விவாதங்கள் இன்று சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொது அரங்குகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் கூட இன்று மிக வேகமாக இந்தியப் பொருளாதாரம் அந்நியமூலதனத்துடன் பிணைக்கப்படும் சூழலில் அதிர்ந்துபோய் வாயடைத்துப் போயிருக்கும் சூழல்தான் நிலவுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அசுடோஷ் வார்னே சொல்வது போல இந்தியாவில் என்றைக்குமே பொருளியல் குறித்த விவாதங்கள் அதற்குரிய முக்கியத்துவம் பெற்றதில்லை எனச் சொல்லலாம். சாதி, மதம், இனம் சார்ந்த அடையாளங்களின் அடிப்படையில்தான் அரசியலும் விவாதங்களும் இங்கு அதிக அளவில் மையங் கொண்டிருந்தன.

அடையாளங்கள் குறித்த இப்படியான விவாதங்கள் முக்கியமற்றவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த விவாதங்களும் பிரச்சினைகளும் பொருளியலிலிருந்து தனித்தவை அல்ல. பொருளியலைப் புறக்கணித்து விட்டு இவற்றை மட்டும் பேசுவது பெரும் ஆபத்து.

ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு உள்ளது? சென்ற வாரத்தில்தான் “ஆசியாவிலேயே அந்நிய மூலதனத்திற்கு அதிகமாகத் திறந்து விடப்பட்ட நாடாக இந்தியா ஆகியுள்ளது” எனச் சொல்லும்படியான சில பொருளாதார நடவடிக்கைகள் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது குறித்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு ஜீவன் கூட வாய் திறக்கவில்லை. ஆனால் சுவாதி கொலை பற்றிப் பேசாதவர்கள் இல்லை. மோடி தினந்தோறும் வெளிநாட்டு அரசுகளுடனும் கார்பொரேட்களுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். கல்வி தொடர்பான ‘காட்’ ஒப்பந்தத்தில் இன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. கல்வி இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் ‘வணிகப் பொருள்’ ஆக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவுடன் செய்த அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து அந்நிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் முன்னதாகக் கூட அதானி நிறுவனத்திற்கு சுற்றுச் சூழல் விதிகளை மீறியதற்காக முந்தைய அரசால் விதிக்கப்பட்ட 200 கோடி ரூ அபராதம் நீக்கப்பட்டுள்ளது. மோடி அதிகாரத்திற்கு வந்தபின் அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் இது குறித்தெல்லாம் பெரிய அளவில் எந்த விவாதமும் இங்கு பொதுப்புலத்தில் நடைபெறவில்லை.

இது ஒரு சாதாரண விஷயம் இல்லை. இப்படி அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடிய நிலை மிகவும் ஆபத்தான ஒன்று.

பாசிசம் மக்கள் மீது வன்முறையாகத் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது ஒரு வகையில் பெரும்பாலானவர்களின் ஒப்புதலுடன் தான் அது அரங்கேறுகிறது. 1930 களில் ஐரோப்பாவில் தலை எடுத்த classical fascism ஆனாலுஞ் சரி, இன்றும், 1998 லும் இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்துத்துவமும் சரி இரண்டுமே இப்படி மக்கள் ஆதரவுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இப்படிப் பாசிசம் ஆட்சிக்கு வந்த இந்தத் தருணங்களி்ன் சில பொதுவான கூறுகளை நாம் அடையாளம் காண இயலும். அவை:

1.இடதுசாரிகள் பலமிழந்திருப்பர்.

  1. ஓரளவு தாராள மனப்பாங்குடைய, பாசிசத்திற்கு இடங்கொடாத முக்கிய அரசியல் கட்சி (எ.கா: காங்கிரஸ்) உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் திராணியற்றதாகவும், ஊழல் மலிந்ததாகவும் பெயரெடுத்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும்.

3.பாசிச சக்திகளை ஒரு ‘மாற்று’ என ஏற்கும் மனநிலை ஒன்று பரவலாக உருப்பெற்றிருக்கும்.

ஜெர்மனியில் ஹிட்லர் மேலெழுந்த சூழலில் இந்த மூன்று அம்சங்களும் பொருந்திப் போவதை இது குறித்துப் படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள இயலும். 1998 ல் தேவகவுடா தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் 2014ல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் இப்படி அன்றைய வெய்மார் குடியரசுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்..

இன்று மிகப் பெரிய அளவில் மத்தியதர வர்க்கம் வீங்கிப் பெருத்துள்ளது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதம் அளவு மத்தியதர வர்க்கம் உள்ளது. IT துறை முதலியவற்றின் ஊடாக உருப்பெற்றுள்ள இந்த மத்தியதர வர்க்கம் ஏழ்மை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம், இட ஒதுக்கீடு, தொழிற்சங்க உரிமைகள் முதலான அரசியலில் ஆர்வம் கொள்வதில்லை. சில நேரங்களில் நம் நாடு முன்னேறாமைக்கு இவையே காரணம் என வெறுக்கவும் செய்கின்றது. இத்தகையோர் நரேந்திர மோடியை ஒரு உருப்படியான மாற்று என எளிதில் ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்த மட்டில் வெட்டிப் பேச்சுக்கள்.

இந்தப் பின்னணியில்தான் இந்துத்துவம் இங்கே ஆட்சி அதிகாரத்தை இதுவரை (1996, 1998, 1999, 2014) கைப்பற்றியுள்ளது.

 

இரண்டு

 

1991 ல் இந்தியப் பொருளாதாரம் தீவிரமாக அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்படும் நிலை தொடங்கியது.

அப்போதைய இந்தியப் பொருளாதார நிலை எப்படி இருந்தது?

எண்ணை விலை ஏற்றத்தின் விளைவாகவும், மூலதன வாய்ப்புகள் சுருங்கியதாலும் இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்தது. fiscal மற்றும் current account களில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. வெளி நாட்டுக் கடன்களைக் கட்ட முடியாமல் திணறும் நிலையை குறைந்த பட்சம் இரண்டு தடவைகள் இந்தியா சந்திக்க நேர்ந்தது. செலவினங்களில் பெருங் குறைப்பு. ரூபாய் மதிப்பு 20 சதம் குறைப்பு முதலிய நடவடிக்கைகளை இந்திய மக்கள் சந்திக்க நேர்ந்தது. IMF க்குக் கட்ட வேண்டிய நிலுவைத் தொகை 1.6 பில்லியன் டாலர் அளவு உயர்ந்தது.

கட்டுமானத் தகவமைப்பு நடவடிக்கைகள் (structural adjustment programmes), புதிய பொருளாதாரக் கொள்கை, சுங்க வரி வீதக் குறைப்பு என்பதாக நரசிம்மா ராவ் அரசால் இந்தியப் பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடப்பட்டது இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்தது.

இந்த நிலையில்தான் மேற்சொன்னவாறு பா.ஜக முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது அதன் முன் இருந்த மூன்று தேர்வுகளை இப்படிச் சொல்லலாம்.

  1. முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த பொருளாதாரத் திறப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
  2. அது சாத்தியமில்லை எனக் கருதி இருந்தால் முந்தைய அரசுகள் மேற்கொண்டிருந்த இந்தப் பொருளாதார நடவடிக்கைகளை மாற்றமின்றித் தொடர்வதோடு நின்றிருக் கலாம்.

3.இன்னும் தீவிரமாக இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திற்குத் தி்றந்து விட்டிருக்கலாம்.

தாங்கள் இதுகாறும் முழங்கி வந்த சுதேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பவர்களாக இருந்திருந்தால்  அவர்கள் முதல் தேர்வைத்தான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அல்லது நரசிம்மாராவ் காலந் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வந்த பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன எனவும், மிகப் பெரிய அளவில் மேலை நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் எனவும் பா.ஜ.க அரசு தயங்கி இருந்தால் அதையும் கூட நாம் புரிந்து கொள்ள இயலும்.

அதுதான் பிரச்சினை எனில் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்திருப்பதோடு நின்றிருக்க வேண்டும். அதாவது முன் குறிப்பிட்ட மூன்று தேர்வுகளில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வாஜ்பேயி தலைமையில் இருந்த பா.ஜ.க அரசு என்ன செய்தது?

மூன்றாவது தேர்வை, அதாவது நரசிம்மாராவ் தொடங்கி வைத்த பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்துவது எனும் நிலையை எடுத்தது.

தனது அந்நிய எதிர்ப்பு, சுதேசி வாய் வீச்சுக்கள் ஆகிய அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக அந்ந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்து விடும் நிலையை அவ்வளவு சாதாரணமாக எப்படி இந்துத்துவத்தால் எடுக்க முடிந்தது?

ஏன் அதற்குப் பெரிய எதிர்ப்புகள் உள்ளிருந்து வரவில்லை?

தீவிர சுதேசியம் பேசியவர்கள் என் வாயடைத்துப் போனார்கள்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் விளங்க நாம் இந்துத்துவத்தின் ‘தேசியம்’ குறித்த அணுகல் முறையைச் சற்று ஆழமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

Top of Form


மூன்று

தேசியம் என்பதன் செவ்வியல் வரையறைப்படி அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. காந்தி இந்திய அரசியலில் நுழைந்தபோதும், அதற்கு முன்னும் கூட இங்கு உருவான தேசிய உணர்வு ஆங்கில ஏகாபத்திய எதிர்ப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்; இந்திய மண்ணை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதே அப்போதைய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக இருந்தது.

காந்திக்கும், காந்திக்கு முந்திய திலகர் – அரவிந்தர் கால ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் உள்ள வேறுபாடு ‘இந்தியர்கள்’ யார் என வரையறுப்பதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பின் வடிவத்திலும்தான் இருந்தது. ‘இந்தியர்கள்’ என்பதை மத அடிப்படையில் ‘இந்துக்கள்’, அதிலும் குறிப்பாக உயர்சாதி இந்துக்கள் என காந்திக்கு முந்தி சுதேசியம் பேசியோர் வரையறுத்தனர். தவிரவும் பெரும் மக்கள் திரள் போராட்டம் என்பதைக் காட்டிலும் தனிநபர் பயங்கரவாதத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர். காந்தி இந்த இரண்டு அமசங்களையும் மிகப் பெரிய அளவில் மாற்றி அமைத்தார். ‘இந்தியர்’ என்பதில் அவர் முஸ்லிம்கள், தலித்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் உள்ளடக்கினார். அவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, இரண்டாண்டுகள் நாடெங்கும் சுற்றி ஆய்வு செய்தபின் தொடங்கிய முதல் அரசியல் செயற்பாடு ‘கிலாஃபத்’ இயக்கம் என்பது குறிப்பிடத் தக்கது. முந்தைய தலைமுறையிடமிருந்து காந்தி வேறுபட்ட அடுத்த புள்ளி தனிநபர் பயங்கரவாதம் என்பதை மறுத்து அமைதி வழியிலான பெரும் மக்கள் திரள் போராட்டம் என்பதாக இருந்தது.

எனினும் காந்தி மற்றும் அவர்க்கு முந்திய தலைமுறை சுதேசியர் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தனர்.

எனினும் காந்தி ‘சுதேசியம்’ , ‘சுய ஆட்சி’ என்பதில் உள்ள “சுயம்” என்கிற கருத்தாக்கத்திற்கு அளித்த பொருள் மிகவும் ஆழமானது. அது வெறும் உள்ளூர் மக்களின் ஆட்சி மற்றும் அந்நியப் பொருட்களின் புறக்கணிப்பு என்கிற அளவில் சுருங்கிவிடவில்லை. மாறாக ஒவ்வொருவரும் (தம்) சுயத்தை ஆளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் கருதினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சுய விருப்புகளைச் சுருக்கிக் கொள்ளுதல், ஆடம்பரமான வாழ்கையையும், அதிக அளவில் சொகுசளிக்கும் எந்திரங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றை அவர் தன் ‘ஸ்வராஜ்’ எனும் கருத்தாக்கத்திற்குள் அடக்கினார். அதை அவரைத் தவிர வேறு யாருமே முழுமையாகப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இல்லை என்பது வேறு விஷயம்.

அது இருக்கட்டும். ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது காந்தி மற்றும் அவருக்கு முந்திய சுதேசியர்களின் பொதுப் பண்பாக இருந்தது. ஆனால் 1920 களுக்குப் பின் இங்கு வெளிப்படையான ‘இந்து ராஷ்டிரம்’ என்கிற கோரிக்கையுடன் மேலுக்கு வந்த இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகள் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதைப் பின்னுக்குத் தள்ளின. இந்துக்களின் ஆட்சி என்பதில் முந்தைய திலகர் – அரவிந்தர் கால சுதேசியத்துடன் இவர்கள் இணைந்திருந்தாலும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பின்னுக்குத் தள்ளியதில் இவர்கள் திலகர் முதலானோருடனும் கூட வேறுபட்டிருந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பை மட்டுமல்லாமல் அனைத்துச் சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய காந்தியையும் அவர் வழிகாட்டலில் அன்று செயல்பட்ட காங்கிரசையும் அவர்கள் முற்றிலும் எதிர்நிலையில் வைத்தனர். அந்நிய ஆட்சியை மட்டுமின்றி அந்நிய மூலதனைத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரிகளையும் அவர்கள் கடும் எதிரிகளாகக் கருதினர் என்பதை விளக்க வேண்டியதில்லை.

1920 களில் உருவெடுத்த இந்துத்துவம் இப்படி எதிரியை அந்நிய ஏகாதிபத்தியத்திடம் அடையாளம் காணாமல் உள்நாட்டுக்குள்ளேயே தங்கள் அரசியல் எதிரியைக் கட்டமைத்தது. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் அவர்களின் தாக்குதல் இலக்காயினர்.

ஆக, இந்துத்துவம் வரையறுத்த “சுதேசியம்” என்பது “இந்துக்களின் ஆட்சி” (இந்து ராஷ்டிரம்) என்கிற அளவில் சுருங்கியது. அவர்கள் எந்நாளும் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தவில்லை. ஆங்கில அரசுக்கு அவர்கள் பூரண ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களின் வரையறையில் “அந்நியர்” என்போர் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதே.

தொடக்கம் முதலே அவர்களின் பன்னாட்டு அரசியல் தொடர்புகள் பாசிச சக்திகளுடன் மட்டுமே இருந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மன் பாசிஸ்டுகளுடன் இந்திய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இருந்த அமைப்பு ரீதியான உறவுகளை மார்சியோ காசலோரி எனும் இத்தாலிய ஆய்வாளர் விரிவாக ஆராய்ந்துள்ளார் (பார்க்க: எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ பக்:171 – 194) ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே முசோலினியை நேரில் சந்தித்து வந்தவர். முசோலினியின் பாசிச அறிக்கை இவர்களால் இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி நிறையச் சொல்லலாம்.

சுருங்கச் சொல்வதானால் இவர்களின் சுதேசியத்தில் அந்நிய எதிர்ப்பு பிரதானமாக அமைந்ததில்லை. இந்துமத ஆளுகை என்கிற அளவில் இவார்களின் அந்நிய எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் கலாச்சார மட்டத்தோடு சுருங்கியது. தவிரவும் “பலமான இந்து ராஷ்டிரம்” என்கிற வகையில் அந்நிய மூலதனம், அந்நியத் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அவர்கள் என்றும் அவர்கள் எதிர்ப்புக் காட்டியதில்லை. தொண்ணூறுகளில் அவர்களின் தேர்தல் முழக்கம்,

“கம்ப்யூடர் ‘சிப்ஸ்’ வேண்டும், உருளைக்கிழங்கு சிப்ஸ் வேண்டாம்” (Computer chips yes, Potato chips no) என முன்வைக்கப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

காங்கிரஸ் ஆட்சியும் காந்திய சுதேசியத்தை எந்நாளும் கடைபிடித்ததில்லை, நேருவிற்குப் பின் அந்நிய மூலதனத்திற்கு இருந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெரிய அளவில் தளர்த்தினர் என்ற போதும் பழைய எச்ச சொச்சமாக, ‘திட்டமிட்ட பொருளாதாரம்’, ‘அரசுக் கட்டுப்பாடு’, ‘கலப்புப் பொருளாதாரம்’ முதலியவற்றை அவர்கள் கடைசி வரையில் ஏதோ உச்சரித்துக் கொண்டாவது இருந்தனர்.

ஆனால் பா.ஜ.க எந்நாளும் இவற்றை மதித்ததே இல்லை. இன்று மோடி ஆட்சியில் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு விட்டதும், முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாடுகள் அனைத்துத் துறைகளிலும் தளர்த்தப்பட்டுள்ளதும் அவர்களைப் பொருத்த மட்டில் பெரிய திசை மாற்றங்கள் இல்லை. அவர்களின் அடிப்படைக் கொள்கைக்கு இவை முரணானவை அல்ல.

இந்தப் பின்னணியில்தான் அவர்கள் 1996ல் ஆட்சியைப் பிடித்தனர். ஆனால் அந்த ஆட்சி 13 நாட்களே நீடித்தது, மீண்டும் 1998 ல் அவர்கள் ஆட்சியைப் பிடித்த போது சற்றுமுன் நாம் பார்த்த அந்த மூன்றாம் பாதையைத் தேர்வு செய்தனர். அதாவது இந்தியப் பொருளாதாரத்தைக் காங்கிரஸ் செய்ததைக் காட்டிலும் பெரிய அளவில் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டனர்.

எனினும் ஆட்சிக்கு வருவதற்கு முன்வரை அவர்கள் தம் இரட்டை நாவைச் சுழற்றி பல சுதேசிய வசனங்களையும் பேசிக்கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் உடனடியாக விட்டுவிட்டதாகக் காட்டிக் கொள்ள முடியுமா என்ன? மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு என்ரான் நிறுவனத்துடன் 2.9  மில்லியன் டாலரில் மின் உற்பத்தி ஒப்பந்தம் ஒன்றைச் செய்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த பா.ஜ.க, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் “என்ரானைத் தூக்கி அரபிக் கடலில் வீசுவோம்” என முழங்கினர்.

“நாங்கள் வெளியில் முன்வைக்கும் திட்டம் ‘சுதந்திர வணிகம்’, வெளியில் சொல்லாத உண்மையான திட்டம் ‘பொருளாதாரத் தேசியவாதம்’ “

“எங்கள் அணுகல்முறை ‘கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிசம்’ (calibrated socialism)”

“உள்நாட்டில் தாராளமயம் (liberalization) தொடர்ந்த போதிலும் அந்நிய மூலதனத்திலிருந்து இந்தியத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க அரசு தலையிடும்”

“கம்யூனிசம், முதலாளியம் இரண்டுமே வெளிநாட்டுச் சரக்குகள்”

“எங்கள் கட்சி வித்தியாசமானது (party with a difference)”

முதலிய முழக்கங்கள் எல்லாம் இவர்கள் அதிகாரத்திற்கு வருமுன் உதிர்த்தவை. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் என்ன நடந்தது? நினைவுக்கு வரும் சில:

1.மகாராஷ்டிராவில் பதவிஏற்ற பா.ஜ.க – சிவசேனா அரசு என்ரான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தது.

  1. இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்தவர்கள் 1998 ல் மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த IRDA Bill (1998) சட்ட வரைவு இன்சூரன்ஸ் துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய ஈக்விடிக்கும் வழிவகுத்தது.
  2. தயாரிப்பு முறைக்கு (patent) வேண்டுமானால் ‘பேடன்ட்’ உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு (process) பேடன்ட் உரிமம் வழங்கக் கூடாது எனச் சொல்லி வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் பேடன்ட் உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கினர் (1998).
  3. உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கான (WTO) டங்கல் வரைவை (GATT) எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் WTO வில் தொடர்ந்தனர். சுங்க வரி ஒழிப்பில் தீவிரம் காட்டினர். இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெகுவாகத் தளர்த்தினர்.
  4. முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு (FDI) கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், அகக் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தனர். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி அமைத்தனர்.

நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற யஷ்வந்த் சின்ஹா ‘சுதேசி’ என்பதற்கு அளித்த வரையறை அவர்கள் யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியது. சொன்னார்:

“சுதேசி என்பதன் பொருள் இந்தியாவை மகத்தான நாடாக ஆக்குவது என்பதுதான். நாம் பொருளாதாரத்தில் ‘சூப்பர் பவர்’ ஆகும்போதுதான் இது சாத்தியமாகும். நமது இராணுவத்தை இணையற்ற வலுவுடையதாக ஆக்க நாம் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். உலக வல்லரசுகளுடன் போட்டியிடும்போதுதான் நாம் மகத்தான நாடானுயர முடியும். சுதேசியம், உலகமயம், தாராளமயம் என்பனவெல்லாம் ஒன்றோடொன்று முரண்படுபவை அல்ல. என் சொந்தக் கருத்து என்னவெனில் சுதேசியாக இருப்பதற்கான சிறந்த வழிமுறை உலகமயமாவதுதான்….”

இது எப்படி இருக்கு?

“உலகமயந்தான் சுதேசியமாம்”.

துணிச்சல்காரர்கள்தான். இப்படி சுதேசியத்தை வரையறுக்க யாருக்கு முடியும்?

 

நான்கு

முதலில் ‘பாரதீய ஜன சங்’ எனவும் பிறகு ‘பாரதீய ஜனதா கட்சி’ (பா.ஜ.க) எனவும் முன்னிறுத்தப்பட்ட இந்துத்துவ அரசியல் பிரிவின் வரலாற்றை ஆய்வு செய்வோர் தொடக்கம் முதலே அதற்குள் இரண்டு போக்கினர் இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுவார்கள். அவர்கள்:

1.முதலாளியப் பொருளாதாரத்திற்குச் சார்பான நடைமுறை எதார்த்த அரசியலுக்கு ஆதரவானவர்கள் (pragmatic pro capitalistic wing) .

2.பொருளாதாரத்தில் அந்நியத் தலையீட்டை எதிர்க்கும் கருத்தியல் ஆதரவாளர்கள் (ideological wing opposed to foreign involvement in economy).

பா.ஜ.க ஒரு எதிர்க்கட்சியாக இருந்த வரைக்கும் அதன் தீவிர ஆதரவாளர்களை இயக்கும் ஊக்க சக்தியாக பொருளாதார சுதேசியம் விளங்கியது. ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் ஆட்சியில் அமர வாய்பிருந்ததோ அப்போதெல்லாம் அதிக அளவில் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் யாரென்றால், கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட முதலாளிய ஆதரவு சக்திகள்தான். கட்சிக்குள்ளும் அவர்களே அதிக செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். உலகமயச் செயல்பாடுகளுடன் மேலுக்கு வந்த நடுத்தரவர்க்கத்தின் ஆதரவும் இவர்களுக்குத்தான் இருந்தது. பாரம்பரியமாக பொருளாதாரச் சுதேசியம் பேசிவந்த கருத்தியலாளர்கள் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் பதவிகளில் அமர்த்தப்பட்டனர் என்பது உண்மையே.. எனினும் அவர்களுடைய அந்நிய மூலதன எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு, இறுதியில் அவர்களது எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, தற்போது அவர்களின் பங்கே கிட்டத் தட்ட இல்லை என்கிற அளவிற்கு ஆகிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு (1992) உலக அளவில் பா.ஜ.கவிற்கு ஒரு மதவாத பிற்போக்கு சக்தி என்கிற பெயர் ஏற்பட்டிருந்த சூழலில்தான் இவர்கள் முதன் முதலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்தனர் (1996). உலக அளவில் ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது. கடல்கடந்து பணிபுரிந்த இந்துத்துவ ஆதரவு மத்தியதர வர்க்கம் வெளிநாடுகளில் அந்தப் பணியைச் செவ்வனே செய்தது (பார்க்க எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ பக்: 93-97). அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரியும் இந்திய மத்தியதர வர்க்க உயர் வருண இந்துக்கள், காவி அமைப்பின் தூதுவர்களாக அவர்கள் வசிக்கும் நாடுகளில் பல்வேறு மட்டங்களில், பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். ‘பா.ஜ.க வின் கடல் கடந்த நண்பர்கள்” (Overseas Friends of BJP), ‘இந்து சுயம் சேவக் சங்’ (Hindu Swayam Sevak Sangh), ‘இந்து மாணவர்கள் சங்கம்’ என்பன சில எடுத்துக்காட்டுகள். வெளிநாடுகளில் ‘சாகா’க்கள் நடத்துவதிலிருந்து, தேர்தல் நிதி திரட்டி இந்தியாவுக்கு அனுப்புவது, ஆராய்ச்சி என்கிற பெயரில் கழுதைப் படத்தைக் குதிரைப் படமாக மாற்றி சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகம்தான் என ‘ஆய்வுக்’ கட்டுரைகள் வெளியிடுவது, இந்துத்துவத் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு விருதும் விருந்தும் அளிப்பது என இவர்கள் செய்யும் இந்துத்துவ ஆதரவு வேலைகள் ஏராளம். குஜராத் பூகம்ப நிவாரண நிதி என அமெரிக்காவில் திரட்டப்பட்ட தொகை அங்கு வகுப்புக் கலவரங்களைத் தூண்டப் பயன்படுத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு.

இப்போது இவர்கள் அமெரிக்காவில் செயல்படும் சியோனிச யூதக் குழுக்களுடன் இணைந்து இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் தீவிரச் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர். இது குறித்து சில ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் இணையத்தில் படிக்கலாம்.

இவர்கள் அமெரிக்காவில் வேலை, வீடு என ‘செட்டில்’ ஆகி விட்டவர்கள். அமெரிக்கா அல்லது பிரிட்டனை விட்டு அவர்களால் இனி வர முடியாது. அதே நேரத்தில் அவர்கள் அமெரிக்கர்களால் சமமாக மதிக்கப்படுவதும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இப்படியான இந்துத்துவ நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு திருப்தியுறுகின்றனர். இவர்களை ‘என்.ஆர்.ஐ இந்துக்கள்’ , ‘இன்டெர்நெட் தேசியவாதிகள்’, ‘கடல்கடந்த தேசபக்தர்கள்’ என்றெல்லாம் சொல்வதுண்டு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட கையோடு இவர்கள் ஒரு வேலை செய்தனர். பா.ஜ.கவில் முதலாளியப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களில் ஒருவரும், முஸ்லிமுமான சிக்கந்தர் பக்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். பா.ஜ.க எப்போதும் தன்னுடைய பிடியில் இப்படியான சில முஸ்லிம்களை வைத்துக் கொள்வதுண்டு. அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘கார்னெஜி இன்ஸ்டிடியூட்’ முதலானவற்றில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தனர். மொய்னிஹான், சொலார்ஸ் போன்ற முன்னாள் அமெரிக்கத் தூதுவர்கள் கையொப்பமிட்ட ஆதரவு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இவர்களின் தூண்டுதலால் ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ இதழில் (11.01.1993) கார்னெஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் க்ளாட், “இந்தியாவில் இனி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள பா.ஜ.கவுடன் உறவு வைத்துக் கொள்வது அமெரிக்காவுக்குச் சரியாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்’ என எழுதினார்.

“பாரதீய ஜனதாவுக்கு ஒரு சர்வதேசப் பரிமாணத்தை அளிப்பது எங்கள் நோக்கம். அதற்கெதிரான இடதுசாரிப் பிரச்சாரங்களை முறியடிக்கிறோம். அமெரிக்கக் கொள்கைகளை வடிப்போர், அதிகாரிகள், சிந்தனையாளர்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டுகிறோம்” என்றார் கடல்கடந்த இந்துத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் சேகர் திவாரி.

#    #    #

1996 ல் அவர்கள் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோது, “வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் பிளவுவாதிகள்” என்கிற கெட்ட பெயரிலிருந்து வெளிவருவது அவர்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது. எல்லோராலும் ஏற்றுகொள்ளக் கூடியவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள அவர்கள் பா.ஜ.கவுக்குள் இருந்த இரண்டு சக்திகளில் சுதேசியக் கருத்தியல்வாதிகளைச் சற்றே பின்னுக்குத் தள்ளி முதளாளிய மற்றும் உலகமய ஆதரவு சக்திகளை முன்னிறுத்த வேண்டியதாயிற்று.

அவர்களின் முதல் மத்திய அமைச்சரவையில் பொருளாதாரத் தாரளவாதத்துக்கு ஆதரவாளர்களான சிக்கந்தர் பக்த், பி.ஆர்.குமாரமங்கள்ம், ராம்ஜேத் மலானி, ராமகிருஷ்ண ஹெக்டே, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் முறையே தொழில்துறை, ஆற்றல் (Power), வீட்டு வசதி, வணிகம், நிதி ஆகிய துறைகளில் அமைச்சர்களாக்கப்பட்டனர். ஜஸ்வந்த் சிங்கிற்கு நிதிப் பொறுப்பு அளிக்கப்பட்டதை கருத்தியல்வாதிகள் எதிர்த்தபோது அவருக்கு அயலுறவு மற்றும் திட்ட ஆணைய உதவித் தலைவர் முதலிய பதவிகள் அளிக்கப்பட்டன. பிறகு நிதித்துறை யஷ்வந்த் சின்ஹாவிற்கு அளிக்கப்பட்டது. இவர் சந்திரசேகர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து முதன் முதலில் பொதுத்துறைப் பங்குகளில் 20 சதத்தைத் தனியார்களுக்கு விற்பது என்கிற முடிவை எடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு உள் துறை, கல்வி முதலான முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு கருத்தியல்வாதிகள் ஆறுதல் படுத்தப்பட்டனர்.  அந்நிய மூலதனத் திறப்பிற்கு ஆதரவான பிரிஜேஷ் மிஸ்ரா, என்.கே சிங் போன்றோரும் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் ஆக்கப்பட்டனர். பொருளாதாரம், வணிகம், தொழில்துறை ஆகியவற்றுக்கான ஆலோசனைக் குழுவில் உலகமயத்திற்கு ஆதரவான முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ஐ.ஜி.படேல், அர்ஜுன் சென்குப்தா, மான்டே சிங் அலுவாலியா, தொழிலதிபர்கள் ரதன் டாடா, முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா, என்.ஆர்.நாராயண மூர்த்தி ஆகியோர் அமர்த்தப்பட்டனர். ‘கட்டுப்படுத்தப்பட்ட உலகமயம்’போதும் எனச் சொல்லாடிய ஜேய் துபாஷி, ஜகதீஷ் செட்டிகார், ராகுல் பஜாஜ் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

உலகமயத்திற்கு ஆதரவானவார்களால் நிரப்பப்பட்ட “பிரதமர் அலுவலகம்” (PMO) ஒரு உயர் அதிகார மையமாக உருவாக்கப்பட்டு அமைச்சரவைகள் அதை அனுசரித்துச் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்சூரன்ஸ் துறையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுதல், ‘பேடன்ட்’ சட்டத்தைத் திருத்துதல் ஆகியவற்றில் சுதேசியக் கருத்தியல்வாதிகளின் குரல்கள் அமுக்கப்பட்டு உலகமய ஆதரவாளர்களின் கை ஓங்கியது.  ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’சின் தாதோபந்த் தெங்காடி முதலானோரின் முணுமுணுப்புகள் முறியடிக்கப்பட்டன.

டாக்டர் ராதாகிருஷ்ணன், பேரா. கோத்தாரி முதலான கல்வியாளர்கள் கல்விக் கொள்கைகளை வகுத்த நிலைக்கு முற்றிலும் எதிராக முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்த பிர்லா தலைமையில் உயர் கல்வியைத் தனியார் மயமாக்குவது பற்றிப் பரிந்துரை அளிக்க கல்விக்குழு உருவாக்கப்பட்டதும் இவர்களின் ஆட்சியில்தான்.

பா.ஜ.க வின் தேசியச் செயற்குழு கூட்டப்பட்டபோது, அது தன் பொருளாதாரத் தீர்மானத்தில் அரசின் இத்தகைய செயற்பாடுகளைப் பாராட்டியது. யஷ்வந்த் சின்ஹாவிடம் நிதித்துறை அளிக்கப்பட்டதை ஆர்.எஸ். எஸ்சும் அங்கீகரித்தது.

ஐந்து

தாதோபந்த் தெங்காடி (1920 -2014) ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர். இந்துத்துவத்தின் தொழிற்சங்க அமைப்பான ‘பாரதீய மஸ்தூர் சங்’, சுதேசியத்தை முழங்குவதற்கான ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவர். பா.ஜ.க அரசின் பொருளாதார தாராளவாதக் கொள்கைகளையும், தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும் அடிக்கடி சாடிப் பேசுவது இவர் வழக்கம். பா.ஜ.க ஆட்சியாளர்களின் சுதேசிய விரோதச் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது ‘திருட்டுப் பயல்கள்’ என்கிற சொற்களையெல்லாம் கூட அவர் பயன்படுத்துவார்.

ஆனால் விரைவில் அவரும் வழிக்குக் கொண்டுவரப்பட்டார். வழிக்குக் கொண்டு வர வழிகளா இல்லை.

தனியார் தொண்டு அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிப்பதற்காக உள்ள நிறுவனங்களில் ஒன்று ‘கிராமப்புறத் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் நடவடிக்கைக்கான குழு’ (CAPART). ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை இது தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிரித்தளிக்கிறது. வாஜ்பேயி அரசு இந்நிறுவனத்தை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் ஆட்களைக் கொண்டு நிறப்பியது. டாக்டர் என்.விஜயா, பிரசன்னா சப்ரே, அனில் காச்கே, யோகேஷ் சுக்லா, அஜய் ஜம்ப்வால், உமேந்திர தத்தா, பாரத் பதக், பி.என்.குப்தா, ராஜேந்திர பிரசாத், ரஜ்னீஷ் அரோரா, விவேக் குல்கர்னி, நரேந்திர மெஹ்ரோத்ரா, வாசுதேவ், ஜே.என்.சுக்லா, மேஜர் என்.மாதூர், கிரிஜா பிரசாத் சிங், வசந்த் முதலானோர் இவர்களில் சிலர். இப்படி இந்த நிறுவனம் முழுக்க முழுக்க இந்துத்துவத்தின் கைவசம் ஆனது. இவர்கள் தம் வசம் கையளிக்கப்பட்ட நிதி ஆதாரங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிறுவனங்களுக்கு வாரி வழங்கினர்.

அப்படிப் பயனடைந்தவற்றில் ஒன்று தெங்காடியின் ‘சுதேசி ஜாக்ரான் ஃபவுன்டேஷன்’ (SJF). இது 1996ல் அதாவது பா.ஜ.க ஆட்சியில் அமரும்போது அவர்களால் தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒன்று

தொடக்கத்தில் அதன் மொத்த நிதி 8.5 லட்சம். இரண்டே ஆண்டுகளில் அதன் ஆண்டு வரவு செலவுக் கணக்கு எட்டு கோடி (100 மடங்கு) ஆனது. ‘சுதேசி ஜாக்ரான் மஞ்ச்’, ‘பாரதீய சந்தை வளர்ச்சி மையம்’ முதலியன SJF ன் துணைஅமைப்புகள்.

இரண்டு வகைகளில் இவற்றுக்கு நிதி சேந்தன. CAPART மூலம் பெறும் நிதி ஒரு புறம். இன்னொரு பக்கம் ‘சுதேசி மேளா’  எனும் பெயரில் அரசு மைதானங்களை வாடகைக்கு எடுத்து, அரங்கங்களை அமைத்து சுதேசிக் கண்காட்சிகளில் ‘ஸ்டால்கள்’ அமைக்கப் பெருந் தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுப்பது.. வாஜ்பேயி போன்ற பெருந்தலைகள் திறப்பு விழாக்களுக்கு வரும் அந்த மேளாக்களின் மூலம் கணக்கில் வந்தும், வராமலும் தெங்காடியின் அமைப்பிற்குக் குவிந்த பணம் ஏராளம் (பார்க்க ; எனது ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள், பக். 269- 274).

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனிடம் ‘அவுட்லுக்’ இதழ் விசாரித்தபோது, “சுதேசி நிறுவனம் வேறு எப்படித் தன் செலவுகளைச் சமாளிப்பது” எனப் புன்னகைத்தார்.

தெங்காடி போன்றவர்கள் தங்கள் விமர்சனங்களைள அளவோடு நிறுத்திக் கொள்வதற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணமாக இருந்தது. அப்படியும் சுதேசியத்தின் பெயரால் முணுமுணுப்பத்  தொடர்ந்தவர்கள் 1998 ல் பொகாரனில் அத்வானி தலைமையில் நடத்தப்பட்ட அணு வெடிப்புச் ‘சாதனை’ யோடு வாயை மூடிக் கொண்டனர். பொகாரனில் நடத்தப்பட்ட இந்த இரண்டாம் அணு வெடிப்புச் சோதனை உண்மையிலேயே ஒரு ‘சாதனை’தானா? என்கிற கேள்வியை இந்தத் துறை வல்லுனர்கள் பலர் எழுப்பியுள்ளனர் (பார்க்க: எனது ‘இந்துந்துவம் : பன்முக ஆய்வுகள்’, பக். 84-92). எப்படி இருந்த போதிலும் இதை ஒரு சாதனையாக முன்னிறுத்தி, ‘தாங்கள் ஒன்றும் இந்தியாவை விற்றுவிடுபவர்கள் அல்ல’ என உலகமய ஆதரவாளர்கள் காட்டிக் கொண்டனர்.  இதுவரை பகை நாடுகளுடனான (குறிப்பாக பாக்) தங்கள் அணுகல்முறை தாக்கினால் ‘திருப்பித் தாக்குதல்’ (reactive) என்கிற அளவிலேயே இருந்ததாகவும், இனி தீவிரவாதிகளுக்கு ஊக்கமளித்தால் ‘முதல் தாக்குதலே’ (pro active) எங்களுடையதாகத்தான் இருக்கும் எனவும் சவால் விட்டார் அத்வானி.

சூடான அணுகல்முறை’ (hot pursuit) என இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார். “அரசியலில் இனி அறத்திற்கு இடமில்லை” எனவும், “எதார்த்த அரசியலுக்கே (real politiq) இனி காலம்” எனவும்  முழங்கினார். தான் யாரை நோக்கிச் சவால் விடுகிறோமோ அவர்களும் அணுவல்லமை உடையவர்கள்தான் என்பது குறித்து அவர் கவலைப்படவில்லை.

எனினும் கட்சிக்குள் தங்களின் உலகமய ஆதரவுச் செயல்பாடுகளை எதிர்ப்பவர்களின் வாய்களை அடைக்க இந்தச் சவடால்கள் முதலாளியத் தாராளவாத ஆதரவாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. அந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதால் நமது இறையாண்மை குலைகிறது என்கிற கருத்தை அவர்கள் அணு குண்டு வெடிப்புச் சோதனை மூலம் முறியடித்தனர். அணு வல்லமையுடைய நமது இறையாண்மைக்கு யார் ஆபத்து விளைவித்துவிட இயலும் எனக் கேட்டனர்.

இந்துத்துவக் கருத்தியல்களுடன் இதழ்களில் பத்திகள் எழுதுபவரும், சமீபத்தில் மோடி அரசால் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப் பட்டவருமான ஸ்வபன்தாஸ் குப்தா இதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். “98ம் ஆண்டு அணு குண்டு வெடிப்பு உலகமய ஆதரவாளர்களின் கையில் ஒரு ஆயுதமாகச் சேர்ந்து வலு சேர்த்தது. இந்தக் குண்டு வெடிப்புடன் உலகமயச் செயல்பாடுகள் வேகமெடுத்தன” என்கிறார்.

சுதேசிக் கருத்தியலாளர்களைத் திருப்திப் படுத்த அவர்களது பொறுப்பற்ற இந்துத்துவ ஆதரவுப் பேச்சுக்கள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்கிற நிலைபாட்டை உலகமய ஆதரவாளர்கள் மேற்கொண்டனர். சுதேசியக் கருத்தியல் ஆதரவாளர்களைப் பொருத்த மட்டில், இந்துத்துவப் பிடிவாதம் மற்றும் ஆக்ரோஷத்தின் அடையாளங்களாக அமைச்சரவையில் வெளிப்பட்ட உமாபாரதி அல்லது சாத்வி பிரச்சி போன்றோரின் இருப்பே அவர்களுக்கு ஓரளவில் திருப்தியை அளித்தது. அவர்களின் வன்முறையை விதைக்கும் பேச்சுக்கள், டொகாடியா போன்றோரின் சிறுபான்மையினரைச் சீண்டும் செயற்பாடுகள் முதலியவற்றை உலகமய ஆதரவாளர்கள் முழுமையாக அனுமதித்தனர். பொது சிவில் சட்டம், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு, மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடுப்பு முதலானவற்றில் இரு தரப்பும் கருத்தொருமிப்பு காட்டித் தம் ஒற்றுமையை உறுதி செய்து கொண்டனர்.

பிடிவாதமாக தாராளமயத்தை எதிர்த்த சுதேசியர்கள் இனி ஒன்றும் செய்ய இயலாது என உணர்ந்து விரைவில் அடிபணிந்தனர். வாஜ்பேயி அமைச்சரவையில் இருந்த சோம்பால் சாஸ்திரி மோடி பிரதமரானபின் முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (2015 -16) விவசாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளுக்கு விரோதமான பட்ஜெட் என்றார். ஆர். எஸ்.எஸ் அமைப்பும் அப்படியே கூறியது அடுத்த சில மாதங்களில் குடும்ப சகிதம் சோம்பால் சாஸ்திரி, இடைக்காலத்தில் தான் சரண்புகுந்திருந்த சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி, பா.ஜ.கவில் சேர்ந்தார்.  கடுமையாகக் கண்டித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மோடி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இப்படி நிறையச் சொல்லலாம்.

ஆக இரு தரப்பினரும் தத்தம் எல்லைகளை உணர்ந்து அவற்றை மீறாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். எதார்த்தத்தை உணர்ந்து இரு தரப்பும் மிகவும் நுட்பத்துடன் கூடிய வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டன. இரு தரப்புக்கும் இடையில் அவர்கள் வரைந்து கொண்ட ‘லக்ஷ்மண் ரேகா’ எல்லைக் கோடு தாண்டப்படாமல் புனிதத்துடன் காக்கப்பட்டது.

ஆக இந்துத்துவம் என்பது நடைமுறையில் 1.இந்துக்களின் ஆட்சி (இந்து ராஷ்டிரா) 2. கலாச்சார தேசியம் 3. வலிமையான இந்தியா என்பதாகச் சுருங்கியது. பொருளாதாரத் தேசியம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது.

வலிமையான இந்தியா என்பது 1. இராணுவ ரீதியான வலிமை (இதில் அணு வல்லமை முதலிடம் வகிக்கும்) 2.பொருளாதார வலிமை என்கிற இரண்டையும் உள்ளடக்கும் என்பதும், இந்த இரண்டையும் சாத்தியமாக்க உலகமயமும் பொருளாதாரத் திறப்பும் தவிர்க்க இயலாதது என்பதும் பொதுப் புரிதலாக அமைந்தது.

மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் பிரதீப் சிப்பர் கூறுவது போல, பா.ஜ.க வின் தேர்தல் வெற்றிகள் என்பன அதன் இந்துத்துவ அரசியல் மற்றும் மத அடிப்படையிலான பிளவுறுத்தல்களால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக இவ்வாறு மத உணர்வு பெற்ற இந்துக்களையும், இட ஒதுக்கீடு, திட்டமிட்ட பொருளாதாரம் முதலான “அதிகபட்ச அரசுத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டவர்களாகத்” தம்மை உணரும் மத்தியதர வர்க்கத்தையும் வெற்றிகரமாக இணைத்து நிறுத்தியதன் விளைவாகவே பா.ஜ.கவின் வெற்றியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரத் தாராளவாதமும் இந்துத்துவப் பிளவுறுத்தல்களும் நுட்பமாக இணைக்கப்பட்டன. நுகர்வு அடிப்படையினான வளர்ச்சி என்பது விதியாகியது. இந்த ‘வளர்ச்சி’யால் பாதிக்கப்பட்ட அடித்தள மக்களின் கண்ணை மறைக்க இந்து உணர்வைக் கிளறிவிடுதல் என்கிற யுத்தி அவர்களுக்குப் பயனளித்தது. இடதுசாரிகளின் பலவீனம், பாசிச சக்திகள் என வரையறுக்க இயலாத காங்கிரஸ் போன்ற தாராளவாத சக்திகளின் ஊழல் மற்றும் பல்வீனங்கள் முதலியன இந்துத்துவ அரசியலின் வெற்றியை எளிதாக்கின.

ஆறு

 

மத்தியதர வர்க்கம் பா.ஜ.கவை ஆதரிப்பது பற்றிப் பார்த்தோம். பா.ஜ.கவிலும் கூட அவர்கள் ஐயத்துகிடமின்றி உலகமயத்தை ஆதரிப்பவர்களைத்தான் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த இன்டெர்நெட் இந்துத்துவவாதிகள் அத்வானி, ஜோஷி போன்ற பழைய பா.ஜ.கவினரைக் காட்டிலும் மோடியைப் போன்ற ‘உறுதியாக முடிவெடுத்துச் செயல்படுத்தக் கூடியவர்களையே” விரும்புகின்றனர்.  மோடியிடம் அதிகாரம் கைமாறுவதற்கு கட்சிக்குள் யாரேனும் தடையாக இருந்தால் அவர்களை மூர்க்கமாக எதிர்த்து வீழ்த்த அவர்கள் தயாராக உள்ளனர்.

இவர்கள் தம்மை வெளிப்படையாக வலதுசாரிகள் என அறிவித்துச் செயல்படுகின்றனர். ‘right’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘சரி’ / ‘வலது’ எனும் இரு பொருள்கள் உள்ளதை மிகவும் லாவகமாகப் பயன்படுத்துகின்றனர். தம்மை ‘bold and right’ என அழைத்துக் கொள்கிறது ராஜேஷ் ஜெயின் என்பவர் உருவாக்கியுள்ள Niti Central எனும் இணையத் தளம். கோவையைச் சேர்ந்த அமர்நாத் கோவிந்தராஜன், பிரசன்னா விஷ்வநாத் என்பவர்கள் தொடங்கியுள்ள (2010) இணையத் தளத்தின் பெயர் Central Right India, Swaraj Mag.

2014 தேர்தலில் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன் வைப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருந்தது கட்சியின் மூத்த தலைவர் அத்வானி யின் எதிர்ப்புதான் என்பதை அறிவோம்.. இந்த எதிர்ப்பின் விளைவாக தொடக்கத்தில் மோடி தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மட்டுமே அறிவிக்கப்பட்டார் (ஜூன் 2013). எனினும் அடுத்த 15 மாதங்களில் நிலைமை மாறியது. செப்டம்பர் 2014ல் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இடையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் மேற்குறிப்பிட்ட இணையத் தளங்கள் முக்கிய பங்கு வகித்தன. ‘நிதி சென்ட்ரல்’ தளத்தில் தொடர்ந்து அத்வானியைத் தாக்கிக் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. எடுத்துக்காட்டாக ஒரே ஒரு தலைப்பு மட்டும் இங்கே: “அத்வானி போன்ற நண்பர்கள் இருக்கையில் பா.ஜ.கவுக்கு வேறு எதிரிகள் தேவை இல்லை”.

அத்வானி மட்டுமல்ல, கட்சிக்குள் மோடிக்கு எதிராக இருந்த கேசுபாய் படேல், கோர்தான் சபாடியா, காஷிராம் ராணா, சஞ்சை ஜோஷி ஆகியோரும் தாக்கப்பட்டனர். கட்சிக்கு வெளியிலும் டாக்டர் அமார்த்ய சென் போன்ற வறுமை ஒழிப்பு ஆய்வாளர்கள் தாக்கப்பட்டனர். நாளந்தா பல்கலைக் கழகத்திலிருந்து சென் வெளியேற நேர்ந்ததில் இந்த இணையங்களின் பங்கு முக்கியமானது. காந்தி, நேரு மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தெல்லாம் அதிகமாக எழுதி வரும் ராமச்சந்திர குஹாவும் அவர்களின் தாக்குதலைச் சந்தித்தவர்களில் ஓருவர்.

இது தவிர ‘லவ் ஜிஹாத்’ பற்றியும் கிறிஸ்துவை அவதூறு செய்தும் கூட இந்த இணையங்களில் கட்டுரைகள் தொடர்ந்தன.

இவர்களுக்கு மிகவும் வெளிப்படையாகவே மோடியின் ஆதரவு இருந்தது. ஆக 12, 2014 அன்று மோடியின் கட்டுரை ஒன்று நிதி சென்ட்ரலில் வெளிவந்தது. இந்தத் தளங்களைச் சேர்ந்த ராஜேஷ் ஜெய்ன், ரோஷ்னி பவாரி ஆகியோருக்கு குஜராத் அரசில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

#    #    #

பாசிசத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாக பேரா. லாரன்ஸ் ப்ரிட் முன்வைக்கும் 14 கூறுகளில் ஒன்று கார்பொரேட் அதிகாரத்திற்கு பாசிச அரசு முழு ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கும் என்பது. அதே போல பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதில் கார்பொரேட் முதலாளியமும் மிக முக்கிய பங்கு வகிக்கும். பாசிச ஆட்சியில் கார்பொரேட்களும் பாசிச ஆட்சியாளர்களும் பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணைந்து நிற்பர் என்கிறார் பிரிட்.

இன்றைய சூழலில் இது எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளது என்பதை இங்கே விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. மோடி வெளி நாடுகளுக்குச் செல்லும்போது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அழைத்துச் செல்கிறாரோ இல்லையோ அதானி தவறாமல் அந்தப் பயணத்தில் இருப்பார் என ஊடகங்கள் கேலி செய்யும் அளவிற்கு நிலைமை உள்ளது. 2014 தேர்தலில் மோடி தலைமையில் ஆட்சி அமைய செலவழிக்கப்பட்ட தொகை 500 கோடி. கிட்டதட்ட ஒபாமாவுக்கு ஆன செலவு. அதானி நிறுவனம் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு விமானத்தையே தந்தது.

மோடி ஆட்சியில் குஜராத்தில் நடந்த வன்முறை மற்றும் இன அழிப்பின்போது (2002), அன்றைய நிலையில் கார்பொரேட்கள் அவரைக் கண்டித்தன. HDFC யின் தீபக் பரேக், “உலகளவில் நம் பெயர் கெட்டுள்ளது. இது ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் அடையாளத்தை இப்போது இழந்துள்ளது. முதலமைச்சர் (நரேந்திர மோடி) இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்றார். பிற கார்பொரேட்களும் கூட இப்படி மத அடிப்படையில் நாடு பிளவுற்று அமைதி இழப்பது வணிகம் தழைப்பதற்குக் கேடு எனக் கண்டித்தனர்.

மோடி உடனடியாக ஒரு வேலை செய்தார். டெல்லியில் கார்பொரேட்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அங்கேயும் அவர்கள் கடுமையாக மோடியை விமர்சித்தனர். பதிலுக்கு அவர்களை குஜராத்தை அவமானப் படுத்துகிறார்கள் எனவும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் எனவும் மோடி  சாடினார். தொடர்ந்து மோடிக்கு ஆதரவான கார்பொரேட்கள் களத்தில் இறக்கப்பட்டனர். இந்திய வணிக சங்கத்திற்கு (CII) எதிராக  Resurgent Group of Gujarat (RGG) என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. டெல்லியில் இருந்த வாஜ்பேயி அரசும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. இதைக் கண்டு CII தலைவர் தாருண் தாசுக்கு அச்சம் ஏற்பட்டது. கார்பொரேட்கள் பணிந்து மோடியுடன் ஒத்துழைக்கத் தயாராயினர். மோடியும் தனது மாநிலத்தில் தொழில் தொடங்கும் கார்பொரேட்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்தார்.

அப்படித் தொடங்கிய மோடியின் கார்பொரேட் உறவு இன்று உச்சத்தை அடைந்துள்ளது. 2014ல் மோடி பிரதமரானபின் உருவாக்கப்பட்ட பட்ஜெட் அனைத்திலும் கார்பொரேட்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டன. உற்பத்தித் துறை, e வணிகம், பாதுகாப்பு, இன்சூரன்ஸ் எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறையைத் தனியார் மயமாக்குவதற்கான முதலாமாண்டு இலக்கு மட்டும் 58,425 கோடி. ரூ. கார்பொரேட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை 5 ஆண்டுகளில் 25,000 கோடி.. துறைமுகம், விமான நிலையம், அதிவேகச் சாலைகள், பொருளாதார மண்டலங்கள், 16 மெட்ரோக்கள், 100 ஸ்மார்ட் நகரங்கள் அனைத்தின் உருவாக்கத்திலும் தனியார்துறைக்கு அனுமதி. இரண்டாவது பசுமைப்புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தை கார்பொரேட் மயமாக்குவது…. இப்படி நிறையச் சொல்லலாம் (பார்க்க: எனது மோடியின் காலம் தொகுதி 1,2).

அதே நேரத்தில் இன்னொரு பக்கம் விவசாயம், பாசனம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, மக்கள் நலம் முதலான அனைத்து மக்கள் நலத் துறைக்கும் முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கிய நிதி பல இலட்சம் கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டது.. எந்தத் துறைக்கேனும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் அது பாதுகாப்பு மற்றும் இராணுவத்திற்கு மட்டுமே (பார்க்க: என் மேற் குறிப்பிட்ட நூற்கள்).

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீடுகளுக்கான பொறுப்பை அந்நிய கார்பொரேட்களிடமிருந்து விலக்கி அதை நமது மக்கள் தலையில் சுமத்தியது குறித்து தொடக்கத்தில் குறிப்பிட்டேன். கார்பொரேட்களுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொடுப்பதில் காங்கிரஸ் அரசு உருவாக்கியிருந்த சில முக்கிய நிபந்தனைகளை நீக்க முயற்சித்துத் தோற்றது மோடி அரசு, கார்பொரேட்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை நிறைவேற்றி வருவது, ஓய்வூதியப் பாதுகாப்பை ஒழிப்பது, தொழிலாளிகளின் ப்ராவிடன்ட் ஃபன்ட்  சேமிப்பிலும் கைவைப்பது என மோடி அரசின் கார்பொரேட் மற்றும் அந்நிய மூலதன ஆதரவுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தியாவிற்குள் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்கும் ஏழைகளின் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது அது 370 மடங்கு. அதேநேரத்தில் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்கும்  மேலை நாட்டுப் பணக்காரர்களின் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.

“இந்தியாவின் நரேந்திர மோடியை புதிய ரீகனாகக் குடியரசுக் கட்சியினர் கருதுகின்றனர்” என அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் எழுதியது குறிப்பிடத் தக்கது.

முடிவாக

தென் ஆசியா முழுவதும் இப்படியான சூழல் உருவாகியுள்ளது கவலை அளிக்கிறது. மியான்மர், வங்கதேசம், இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான் என எல்லா நாடுகளிலும் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்கள் பிளவுறுத்தப்படுகின்றனர். சிறுபான்மை மக்கள் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை வன்முறைக்கு இலக்கான்றனர். அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். வெளிப்படையான தணிக்கை, அவசர நிலை ஆகியவை இல்லாத போதும் ஜனநாயகம் சிதைந்து பலமிழந்து கொண்டே போகிறது.

இதில் இன்னொரு கவனிக்கத்தக்க நிலை என்னவெனில் ஒரு நாட்டில் சிறுபான்மையைத் துன்புறுத்தும் பெரும்பான்மை, இன்னொரு நாட்டில் பெரும்பான்மையால் துன்புறுத்தப்படும் சிறுபான்மையாக இருப்பதுதான். வங்க தேசத்தில் வன்முறை விளைவிப்பது பெரும்பான்மை முஸ்லிம் மதவெறி  என்றால் இந்தியாவிலும் மியான்மரிலும், இலங்கையிலும் பெரும்பான்மை வன்முறைக்குப் பலியாகிறவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். திபெத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பவுத்தர்கள் மியான்மரிலும் இலங்கையிலும் வன்முறைக்குக் காரணமாகிறார்கள். இலங்கையிலும் வங்கத்திலும் வன்முறைக்குப் பலியாகும் இந்துக்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராகத் திரட்டப்படுகின்றனர்.

இவர்கள் தத்தம் வன்முறையை இன்னொரு நாட்டில் நடைபெறும் வன்முறையுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம் வன்முறையாளர்கள் ஒன்றாகச் சேருகின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் மீதும் முஸ்லிம்களின் மீதும் வன்முறையை ஏவும் ‘பொது பல சேனா’வை இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் பாராட்டுகிறார். “பொது பல சேனா முன்வைக்கும் பிரச்சினைகள் செயலூக்கமுள்ள ஆதரவிற்கும் அனுதாபத்திற்கும் உரியவை” எனக் கூறுகிறார். பொதுபல சேனா தலைவர் பிக்கு கலகோடத்தே ஞானசாரா தங்களின் இயக்க மாநாட்டிற்கு மியான்மரின் பின் லேடன் என அழைக்கப்படும் பிக்கு அஸ்வின் விராத்துவை அழைக்கிறார். இருவரும் வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் இந்திய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் மூன்று அமைப்புகளும் இணைந்து இப்பகுதியில் “அமைதி மண்டலம்” (!!!) ஒன்றை உருவாக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.  ராம் மாதவ் இதை மறுத்து அப்படியான கலந்துரையாடல் நடக்கவில்லை எனச் சொன்னபோதும் அவர்களை ஆதரித்துள்ளார்.

தென் ஆசியாவில் இப்படியான வன்முறைகளுக்குக் காரணமாகும் நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக உள்ள அம்சம் இவை அனைத்தும் தீவிரமாக உலகமயத்தையும், பொருளாதாரத் தாராளவாதத்தையும் செயல்படுத்துபவை என்பதுதான். பொருளாதாரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மூன்றிலும் ஏற்பட்டுள்ள இத்தகைய வலது திருப்பமும் பின்னடைவும் மிகவும் கவலைக்குரிய நிலையை இப்பகுதியில் உருவாக்கியுள்ளன.

பழைய கதைகளையே பேசிக் கொண்டிருக்காமல் புதிய சூழல்களுக்குரிய இடதுசாரி அரசியலைச் சிந்திக்கும் பொதுவுடமையாளர்கள், சிறுபான்மை மக்கள், சமூக ரீதியில் அடித்தள நிலையில் இருப்போர், ஜனநாயக சக்திகள் இவர்கள் ஒன்றிணைந்து இந்த நிலையை எதிர் கொள்ளத் துணிவது மட்டுமே நமக்கு முன்னுள்ள ஒரே வழி.

ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு

  (இரண்டாண்டுகளுக்கு முன் உலகக் குடியரசு தினத்தை ஒட்டி இலங்கை ‘தினக்குரல்’ இதழுக்கு எழுதிய கட்டுரை. அரசியல் சிறுபான்மை என்பது மாறக்கூடியது. ஆனால் மதம், மொழி,இனம் அடிப்படையிலான சிறுபான்மைகள் பெரும்பான்மைகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இச்சூழலில் ஜனநாயக அரசமைவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி பன்னாட்டுச் சட்டங்கள் என்ன சொல்கின்றன, தத்துவ சிந்தனையாளர்கள் என்ன சொல்கின்றனர் என ஆராய்கிறது இக்கட்டுரை)        

இன்று உலக குடியாட்சி தினம் (International Democracy Day). மனித குலம்   அரசு ஒன்றை உர்வாக்கி அதற்குள் வாழ நேர்ந்த இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் எத்தனையோ வகையான ஆட்சிகளைக் கண்டுள்ளதாயினும் இவற்றுள் ஒப்பீட்டளவில் சிறந்த ஆட்சி முறையாக ஜனநாயகம்தான் உள்ளது. இதிலும் இன்னும் தீர்க்கபடாத பல பிரச்சினைகள் இருக்கின்றன என்கிற போதிலும் இதைக் காட்டிலும் சிறந்த மாற்று நமக்கு ஏதும் தெரியவில்லை.

புரட்சிகரமான நோக்கங்களுடனும் உள்ளடக்கங்களுடனும் உருவான சோஷலிச நாடுகள் இறுதியில் மக்களாலேயே தூக்கி எறியப்பட்டன என்றால் அவை பெயரளவிலும் கூட ஜனநாயகத்தை ஏற்காமல் தம்மைப் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ என அழைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்டு வந்ததுதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சர்வாதிகாரம் என்றால் அது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக் இருந்தால் என்ன, முதளாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருந்தால் என்ன. சர்வாதிகாரம் சர்வாதிகாரம் தானே. மக்கள் அரசிலிருந்து அந்நியப்படுவது அதில் தவிர்க்க இயலாததுதானே. இன்று லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் பலவும் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ எனும் கருத்தைத் தூக்கி எரிந்து விட்டு ஒரு கட்சி ஆட்சி முறைக்கும் முடிவு கட்டியுள்ளன.

ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அரசியல் சார்ந்த விடயம் அல்ல. அது முதன்மையாக ஒரு தத்துவார்த்தச் சிந்தனை. பிளேட்டொ, தூசிடைடிஸ் தொடங்கி, கார்ல் மார்க்ஸ், ஹென்ரி டேவிட் தோரோ, ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெஃபர்சன், சோரென் கீர்கேகார்ட், தொமஸ் ஹாப்ஸ், எட்மன்ட் பர்க் எனப் பலரும் ஜனநாயகம் குறித்து ஆழமாகப்  பேசியுள்ளனர். வால்ட் விட்மன், எட்கார் ஆலன் போ போன்ற படைப்பளிகளும் இதில் அடக்கம்.

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (constitutional governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள் என்கிறோம்.

இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளன. “பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாகச் (counterpart) “:சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது “பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது” (Majority Takes All) என்கிற பொருள் வந்து விடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வது போல “கும்பல் ஆட்சி” (mob rule) ஆகி விடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர்.

ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துக்களைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாட்ப்பும் அளிக்கப்பட்டதுதான் ஜனநாயகம்.

இங்கொன்றை விளக்குவது முக்கியம். இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது அரசியல் சிறுபான்மை குறித்து. இதில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் மாறி மாறி வருவது சாத்தியம், இலங்கையில் சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பது போலவும் தமிழகத்தில் தி.மு.க, அ.திமு.க போலவும் அரசியல்  ரீதியான பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்கிற நிலை தேர்தலுக்குத் தேர்தல் மாறலாம். ஆனால் மொழி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பன அப்படி மாறக் கூடியவை அல்ல. இந்தியாவில் முஸ்லிம்களும், இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு இனத்தவரும் இப்படி என்றென்றைக்குமே சிறுபான்மையாக இருக்கக் கூடியவர்கள். இவர்கள் குறித்து மீண்டும் இறுதியில் பேசுவோம்.

அதே போலத்தான் கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல் என்பதையும் நாம் நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கருத்தொருமிப்பை எப்போதுமே புனிதமாகக் கருத வேண்டியதில்லை. ஜனநாயகத்தில் கருத்தொருமிப்பைப் போலவே கருத்து வேறுபாடுகளும் முக்கியம். வால்ட் விட்மன் சொல்வது போல ஜனநாயகத்தின் அடிப்படையே ஒவ்வொன்றுக்கும் ஒரு மறுதலை உள்ளது என்பதை ஏற்பதுதான். ஏற்பது என்பதன் பொருள் ஜனநாயகத்தில் அதற்கும் ஒரு இடமுண்டு என்பதுதான். பெரும்பான்மையின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்ட கருத்துக்களை எள்ளி நகையாடுவது என்பதோ அதற்கு இடமே இல்லை என மறுப்பதற்கோ ஜனநாயகத்தில் இடமில்லை.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதிலும் பல ஆழமான பிரச்சினைகள் உள்ளன. ஜனநாயகத்தில் குடிமக்கள் எல்லோருமே ஆட்சி பீடத்தில் அமர இயலாது. மக்கள் தமது பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்ய முடியும். பிரதிநிதிகளால் அமைக்கப்படும் இந்த அரசு எப்போதும் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் அதிகாரம் மக்களிடமிருந்தே வருகிறது என்பதுதான் அது.. அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் தனி நபர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதை அரசு அங்கீகரிக்கும்போதே அது ஒரு சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.

அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் இந்தத் தனி நபர்களை அதாவது குடிமக்களை அந்த அதிகாரத்தைத் கையளித்தவர்களாக ஏற்று அணுகுவதற்கான ஒரே பொறியமைவாக உள்ளது அரசியல் சட்டம்தான். அது குடிமக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குகிறது. அதை நடைமுறைப்படுத்தும் கருவியாக நிர்வாகமும் (Executive), அந்நிலை கெடும்போது அதை வெளிக்கொணர்பவையாக ஊடகங்களும் (media), தட்டிக் கேட்கும் நிறுவனமாக நீதிமன்றமும் (Judiciary) ஜனநாயகத்தில் பாத்திரங்கள் வகிக்கின்றன என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறை அப்படியாக இருந்ததே இல்லை. ஜனநாயக அரசுகள் “அரசின் காரணங்களுக்காக” (raison de etat) எனச் சொல்லி எந்தக் கணத்திலும் “நெருக்கடி நிலை” (state of exception)  அறிவித்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தம் கைவசம் எப்போதும் வைத்துள்ளன. ரோமப் பேரரசிலேயே “இயூஷியம்” என்கிற பெயரில் நெருக்கடி நிலை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு தன் கையில் வைத்திருந்தது என்பார் ஜியார்ஜியோ அகம்பன்.

ஆக வழக்கமான அரசியல் சட்டத்தின் மூலம் ஆளுகை சாத்தியமில்லை எனக் கூறி ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யப்படும்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாகிறது. இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு உண்மையிலேயே அரசியல் சட்ட ஆளுகை சாத்தியமில்லையா எனச் சொல்ல வேண்டும். அனால் நீதிமன்றங்கள் அப்படிச் சொல்வதில்லை. அரசுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமை உள்ளது எனக் கூறி அதை நியாப்படுத்துவதையே உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நாடுகளில் பார்க்கிறோம். இந்த நோக்கில் அரசியல் சட்டம் வழங்கும் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் கருப்புச் சட்டங்களையும் அரசுகள் உருவாக்கி வைத்துக் கொள்கின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட இன்றைய அரசுகள் எல்லாமே ஜனநாயகம் என்கிற நிலையைத் தாண்டி “நெருக்கடி நிலை அரசுகளாகவே” (State of Exceptions) உள்ளன என்பார் ப்ரெஞ்சுச் சிந்தனையாளர் அகம்பன்..

இரண்டு

யாரும் இன்னொருவரைப் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலாது என நவீன தத்துவச் சிந்தனையாளர்கள் கூறுவர். ஆனால் மக்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலும் என்கிற அடிப்படையில்தான் இயங்குகின்றன இன்றைய ஜனநாயக அரசுகள். இந்தியாவில் இதை ஒரு அரசியல் பிரச்சினை ஆக்கினார் டாக்டர் அம்பேத்கர். சட்டமியற்றும் மன்றங்களில் தலித் பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சத ஒதுக்கீட்டை அரசு அளித்தபோது அது போதாது, அந்தப் 18 சத மக்களும் தலித்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் (Separate Electorate) என்றார் அவர். எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக இருந்து தாம் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாதவர்களாக இந்தியாவில் முஸ்லிம்களும் தலித்களும் உள்ளனர். இலங்கையிலும் கூட இப்போது மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களின் விளைவாக அந்த வாய்ப்பைச் சில பகுதிகளில் இனி முஸ்லிம்களும் தமிழர்களும் இழக்க நேரிடலாம்.

இந்தியாவில் தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டும் தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அதுவும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதியே (Separate Electorate) இருந்தது. தாங்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யும் பிரதிநிதிகள் மட்டுமே தமக்கு உண்மையாக இருப்பர், தம்மை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்வர் என்றார் அம்பேத்கர். ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் நின்று எல்லோரும் வாக்களித்து ஒரு தலித்தோ, முஸ்லிமோ தேர்வு செய்யப்படும்போது அவர்கள் தமது மக்களின் உண்மையான் பிரதிநிதிகளாக் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம்மை வேட்பாளராக நிறுத்திய கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருப்பர். இன்றைய இந்தியா இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஜனநாயக ஆளுகை எதிர் கொள்கிற இன்னொரு முக்கிய பிரச்சினை இந்தப் இந்தப் “பெரும்பான்மை’ குறித்தது. 50சதத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை நாம் பெறும்பான்மை என்கிறோம். இது இரண்டு நிலைகளில் நிறுவப்பட வேண்டும். முதலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுபவர்கள் 50 சத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி 50 சத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அந்த 50 சத உறுப்பினர்களும் மொத்தத்தில் 50 சத வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள போட்டியிடுபவர்களில் “அதிக வாக்குகளைப் பெறுவோரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் முறையில்” (First Past The Post System) பொதுவாக 30லிருந்து 35 சத வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர். எனவே 65 லிருந்து 70 சத வாக்காளர்களின் ஆதரவு அற்ற ஒருவர் வெற்றி பெற்றவராக ஆகிறார். அதே போல 30 சத வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் 50 சதங்களுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. எடுத்துக்காட்டாகத் தற்போது இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க வாங்கிய வாக்கு வீதம் 31 சதம். ஆனால் அது 52 சத உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இது பெரும்பான்மையின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்தையே கேலிக்குள்ளாக்குகிறது. எனினும் ஜனநாய நாடுகளில் வேறு சில தேர்வு முறைகள் பயன்படுத்தப்பட்டு 50 சத வாக்குகள் பெற்றவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கும் நிலை உள்ளது. அவை ஒரளவு இந்தப் பிரச்சினையில் நியாயம் செய்கின்றன எனலாம். நேபாளம், இலங்கை முதலான நாடுகளில்  உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (proportional representation) இந்தியாவில் உள்ள அதிக வாக்குகளைப் பெற்றோரை வெற்றி பெற்றோராக அறிவிக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தது.

மூன்று

ஒரு ஜனநாயக அரசில் மொழி, இன, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வாறு காக்ககப்படும்? பெரும்பான்மையின் அடிப்படையில் அதிகரம் பெறுகிற அரசமைவில் எந்நாளும் பெரும்பான்மையாக ஆக இயலாதவர்களின் உரிமைகள் குறித்துச் சர்வதேசச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என ஒன்றிருந்தால் சிறுபான்மையும் இருக்கும்; கருத்து ஒற்றுமை என்பதைப் போலவே கருத்து வேறுபாடும் முக்கியமானது என்றோம். சிறுபான்மையினர் நலனுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் ஜனநாயகத்தில் எப்போதும் உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு. இது அரசியல் சிறுபான்மைக்கு மட்டுமின்றி மொழி, மத, இனச் சிறுபான்மைக்கும் முழுமையாகப் பொருந்தும். ஜனநாயக அறத்தின் அடிப்படையில் மட்டுமின்றி சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையிலும் இதுவே உண்மை.

டாக்கியவெலி சொல்வது போல பெரும்பான்மை ஒன்றே “உச்ச அதிகாரத்தின் உத்தரவாதமாக இருக்க முடியாது. அது கொடுங்கோன்மைக்கே வழி வகுக்கும்.” மொழி, மத, இனச் சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்கள் சிறுபான்மையராக இருக்கிற காரணத்திற்காகவே மறுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.அப்படி நடக்கும்போது ஜனநாயகம் பாசிசத்தின் எல்லைக்குள் நுழைகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டனை குறித்த உடன்பாடு (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, in 1948), ஐ.நா. அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்பாடு ( International Covenant on Civil and Political Rights, 1966)  ஆகியன சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தேசிய அரசுகள் புறக்கணிக்கலாகாது என்பதை வற்புறுத்துகின்றன.  சிறுபான்மையினர் தம் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றைக்  கடைபிடிப்பது, பரப்புவது முதலியவற்றிற்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும்  என்பவற்றை இவை வலியுறுத்துகின்றன.

20ம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘கூட்டணி நாடுகள்’ (allied powers) பல்வேறு சிறிய நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் சிறுபான்மையினர் உரிமைகள் விரிவாக பேசப்பட்டன. முதன் முதலில் போலந்துடன் போடப்பட்ட “வெர்சைல்ஸ் சிறிய ஒப்பந்தத்தில்” (Little Treaty of Versailles) இது தொடங்கி வைக்கப்பட்டது. அப்போதிருந்த உலக நாடுகள் அவை (League of Nations),  “பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டமொழி, மதம் ,இனம் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராகக் கருதப்படுவர்” என வரையறுக்கப்பட்டது. அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் உயிரும் உரிமைகளும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதும் போலந்து ஒப்பந்ததில் வலியுறுத்தப்பட்டன. இவை மீறப்படும்போது பாதிக்கப்பட்ட சிறுபான்மையர் உலக நாடுகளின் அவையிடம் புகாரளிக்கலாம். அது அவற்றை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

பின் தொடர்ச்சியாகப் பல்வேறு ஒப்பந்தங்களிலும் சிறுபான்மையினர் குறித்த வரயறை விரிவாக்கப்பட்டதோடு அவர்களின் கலாச்சார, பண்பாட்டு, கல்வி உரிமைகள் வற்புறுத்தப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் கடமையும் அரசுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. முன் குறிப்பிட்ட ஐ.நா ஒப்பந்தங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன.

சிவில் மற்றும் அர்சியல் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் 27ம் பிரிவுக்கு எஃப். கார்டோ போடியாகோ அளித்த விளக்கத்தில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைந்து இருக்க வேண்டும் என்றொரு நிபந்தனை இருந்தது. அதுவும் கூடப் கூடப் பின்னர் கைவிடப்பட்டது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளியர் எண்ணிக்கையில் 54 சதமாக இருந்த போதிலும் அவர்கள் பிற வேறுபடுத்தல்களின் அடிப்படையில் சிறுபான்மையராகக் கருதப்படுவது சுட்டிக்காட்டப்பட்டு இந்த நிபந்தனை கைவிடப்பட்டது.

1995 ல் உருவாக்கப்பட்ட தேசியச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உடன்பாடு  (Framework Convention for the Protection of National Minorities) சிறுபான்மையினர் தம் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உள்ள உரிமைகள், இவற்றுக்குரிய அரசு கடப்படுகள், அந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டங்கள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான கருவிகள் ஆகியன குறித்து மிகத் துல்லியமான வரையறைகளை உருவாக்கியது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர சகிப்புத் தன்மையை வளர்த்தல், கலாச்சார உரையாடல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு நிறுவனங்கள் முக்கிய பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இந்த உடன்பாட்டில் வற்புறுத்தப்பட்டது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, புரிதல், கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அரசுக்குள்ள பொறுப்பை அது சுட்டிக்காட்டியது.

இதற்கான சட்டங்களை உருவாக்குதல் என்பதோடு அரசின் கடமைகள் முடிந்துவிடவில்லை, அதற்குரிய கொள்கைகளை உருவாக்குதல், மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளுதல் ஆகியனவும் அரசின் கடமைகள் எனவும் அந்த உடன்பாடு வற்புறுத்தியது

ஆக, மொழி, மதம், இன அடிப்படையிலான சிறுபான்மையினரின் 1. உயிர், உடமை, உரிமைகள் பாதுகாக்கப்படுதல் 2. அவர்கள் தம் பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைப் பேணுதல் மற்றும் பரப்புதல், 3. சமூகங்களுக்கிடையே பரஸ்பர நட்பு, மரியாதை ஆகியவை காக்கப்படுதல், 4. இவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களை இயற்றுதல் 5. இச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளை அமைத்தல் ஆகியவற்றை சர்வதேச ஒப்பந்தங்கள் இன்றைய அரசுகளின் கடப்பாடுகளாக்குகின்றன..

இவை மீறப்படும்போது பாதிக்கப்படும் சிறுபான்மையினர் சர்வதேச அமைப்புகளில் புகாரளிக்கவும். சர்வதேச அமைப்புகள் தலையிட்டு நீதியை நிலை நாட்டுவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவற்றை ஏற்று சாத்தியப் படுத்துபவைகளே உண்மையான பொருளில் ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.

 

 

 

ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்

ippodhu.com, Nov 10, 2016

“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”

(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள  அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின்  மொழிபெயர்ப்பு அல்ல)

  1. 1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.
  2. இந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.
  3. ‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்? கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.
  4. ஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.
  5. எந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.

    6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.

    7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.

  6. எனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்?
  7. 1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  8. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.
  9. கடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்

பேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.

உண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.

இப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது  மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும்? ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா?

இன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள்  செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.

 

 

 

பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்

போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக  இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி நீலிக் கண்ணீர் வடிப்பதாக இருக்கட்டும் இதை யாரும் நம்புவதில்லை. ஆனாலும் இன்று அவர்கள் உருவாக்கியுள்ள பிளவு அரசியலின் துணையோடு இவற்றைப் பெரிய எதிர்ப்புகளின்றி வெற்றிகரமாகச் செய்துகொண்டு உள்ளனர்.

மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் மனைவி, தன் கணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈசான் ஜாஃப்ரி கண்ணெதிரே கண்டதுண்டமாக வெட்டி எரிக்கப்பட்டதற்கு நீதி வேண்டி 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஸாகிய ஜாஃப்ரி, என்கவுன்டர்கள் என்று சொல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இர்ஷத் ஜெஹான் மற்றும் ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீவி என்கிற இந்த முஸ்லிம் பெண்கள் மீதெல்லாம் இரக்கம் தோன்றாத மோடி முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறாராம். இதற்கான ஒரே தீர்வு பொதுசிவில் சட்டமாம்.

முதலில் ‘பொது சிவில் சட்டம்’ எனச் சொல்வதே தவறு. இங்கே கிரிமினல் சட்டங்களும், சிவில்சட்டத்தில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை முதலான தனிநபர் சட்டங்கள் தவிர பிற அனைத்து சிவில்சட்டங்களும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளன. பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான். இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

தவிரவும் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்மைத் தன்மையின் அடிப்படையில் இங்கே நூற்றுக்கனகான தனிநபர்ச் சட்டங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலப் பழங்குடிகள் மத்தியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால் அங்கு மட்டும் அது தனிநபர் உரிமைகளில் ஒன்றாக்கப் பட்டுள்ளது. .

ஏதோ இன்று முஸ்லிம் சட்டத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, இந்துச் சட்டத்தில் எல்லாம் சரியாக்கப்பட்டுவிட்டன  என்பதில்லை. இன்றும் கூட ஒரு இந்துக் கணவன் தன் மனைவி அவனது பெற்றோருடன் இருக்க மறுக்கிறாள் எனச் சொல்லி அவளை விவாகரத்து செய்ய முடியும். கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து போன பின்னும் கூட இந்துக் குடும்பம் என்றாலே கூட்டுக் குடும்பம் என நம் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்வதன் விளைவு இது. கூட்டுக் குடும்பம் என்கிற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதம் உள்ள இந்துக்கள் வரிச் சலுகை பெறுவதால் ஆண்டுக்குப் பல லட்சம் கோடி இழப்பு நாட்டுக்கு ஏற்படுகிறது.

சொல்லப்போனால் பொதுத் தனிநபர் சட்டத்தை வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்ததே தவறு. பொது தனிநபர் சட்டம் மத்திய அரசுக்கு உட்பட்டது மட்டுமல்ல. மாநில அரசாங்கச் சட்டங்களும் உண்டு. அம்பேத்கரைப் பொறுத்த மட்டில் அவர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தில் பெண்கள் மற்றும் அடித்தள மக்கள் மீதான வன்முறைகளும் ஒதுக்கல்களும் அதிகம் என்பதால் அதை முதலில் சரி செய்தாக வேண்டும் என்பதையே முக்கிய கரிசனமாகக் கொண்டிருந்தார்.  ஆனால் அன்றைய சூழலில் அதற்கு ஆதரவில்லை. அதனால்தான் பொது சிவில் சட்டம் என்பதை வழிகாட்டு நெறிமுறையில் பொதிந்து அப்போதைக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பேத்கர் இந்துச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது அவருக்கு ஆதரவில்லை. மனம் நொந்து அவர் பதவி விலகினார். பின்னாளில் நேரு இந்துச் சட்டத் தொகுதியைத் தனித்தனியாகப் பிரித்துச் சட்டமாக்கினாலும் அவற்றில் பல சமரசங்களும் இடம் பெற்றன.

இரண்டு அம்சங்களை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.இப்படிச் செய்ததன் மூலம் ‘பொது சிவில் சட்டம்’ இயற்றுதல் என்கிற அரசியல் சட்ட நோக்கத்திலிருந்து விலகி ‘இந்துத் தனிநபர் சட்டம்’ மட்டும் திருத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு வகையில், பொது சிவில் சட்டம் அல்லது பொது தனிநபர் சட்டத்தைச் சாத்தியப் படுத்துவது சிக்கல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. இந்துத் தனிநபர்சட்டம் திருத்தப்பட்டதால் பெண்களுக்கோ, அடித்தள மக்களுக்கோ எந்தப் பெரிய பலனும் ஏற்பட்டுவிடவில்லை. எடுத்துக்காட்டாக இன்று இந்துக்கள் மத்தியில் பலதாரமணம் சட்டபூர்வமாக் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அளவில் உள்ள புள்ளி விவரங்களின்படி பலதார மணத்தைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்துக்களாயின் முதல் தாரம் தவிர மற்ற தாரங்கள் concubine, keep, mistress, வைப்பாட்டி என்றே அழைக்கப்படுகின்றனர். நீதிமன்றமும் அதே சொற்களையே பயன்படுத்துகிறது. அவர்களுக்கு சொத்து, ஜீவனாம்சம் என மனைவிக்குச் சமமான பாதுகாப்புகளும் கிடையாது. முஸ்லிம் ஆண்கள் நான்குதாரங்கள் வரை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தாலும் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை என்பது ஒரு பக்கம். அப்படியே ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும் அவரது மனைவியர் எல்லோரும் சட்டபூர்வமாக அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆகின்றனர். அதோடு முஸ்லிம் பெண்களுக்குக் கணவன் வீட்டார் வழங்கும் ‘மகர்’ எனும் பாதுகாப்பும் உண்டு.

இந்துச் சமூகத்திற்குள் விதவைகள் முதலானோரின் நிலையில் இன்று வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றால் அவை சட்டத் திருத்தங்களின் மூலமாக ஏற்பட்டவையல்ல. மாறாக சமூகத்திற்குள்ளிருந்தும், புற உலகில் ஏற்பட்டுள்ள பௌதீக மாற்றங்களின் ஊடாகவும்தான் இது நிகழ்ந்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் இப்போது முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்று முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து  மோடியும் மற்றவர்களும் சொல்வதென்ன? 1. முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்கள் மும்முறை ‘தலாக்’ எனச் சொல்லி எளிதில் விவாகரத்து செய்துவிடுகின்றனர். 2. விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கான ஜீவனாம்சம் ‘இத்தா’ எனப்படும் அடுத்த மூன்று மாதவிடாய்க் காலத்திற்கு (menstrual cycles) மட்டுமே அளிக்கப்படுகிறது. 3, மணவிலக்கு பெற்றுப் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேந்து வாழ வேண்டுமானால் அந்தப் பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற வேண்டும்.

இவை பெண்களுக்கு எதிரானவை என்பதில் ஐயனில்லை.  முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவைதான். ஆனால் நடைமுறையில் இவை இன்று நீதிமன்றத் தலையீட்டின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷா பானு வழக்குத் தீர்ப்பு (1895 SCR (3) 844) , ராஜிவ் காந்தி இயற்றிய முஸ்லிம் பெண்கள் சட்டம் (The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986) ஆகியவற்றுக்குப் பின்னும் கூட இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் முத்தலாக், இத்தா காலத்திற்கு மட்டுமே ஜீவனாம்சம் முதலியவற்றை ஏற்பதில்லை. டானியல் லத்திஃபி வழக்கில் (Writ Petition (civil) 868 of 1986 ) வழங்கப்பட்ட தீர்ப்பில் (2011) இத்தா காலத்திற்கு மட்டுமின்றி விவாகரத்து செய்யப்பட்ட மனைவி உயிருடன் இருக்கும் வரை அல்லது வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  Shamim Ara v State of UP வழக்கு (2002) மற்றும் Dagdu Pathan v Rohimbi Pathaan (2002) ஆகிய வழக்குகளில் தொடர்ந்து மும்முறை தலாக் சொல்வது, சாட்சிகளின்றி தலாக் சொல்வது, போதிய இடைநிலையாளர்களை வைத்து சமரச முயற்சிகள் செய்வது ஆகிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத விவாகரத்துகள் செல்லாது எனத் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன (விவரங்களுக்குப் பார்க்க: amarx.in/ முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

 

இந்தத் தீர்ப்புகளுக்குப் பின் இன்று எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் இந்த உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை அணுகினால் அவர்களுக்கு நீதிவழங்கப்படுகிறது. மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்ட தலாக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. புதிய சட்டத் திருத்தங்கள் செய்யாவிட்டாலும் இவை இன்று நீதிமன்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சட்டக் கொள்கைகளாக (judicially evolved principles) ஏற்புப் பெற்றுவிட்டன. எப்படி ‘அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை’ என்பது இன்று சட்ட ஏற்பு பெற்றுள்ளதோ அப்படி.

சரி, இதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுவது இயல்பு. இந்தப் பிரச்சினை இப்போது உருவான பின்னணியைப் பார்ப்போம். சில மாதங்கள் முன் ஷயாரா பானு எனும் முஸ்லிம் பெண் தனக்குச் சொல்லப்பட்ட தலாக் செல்லாது எனவும், தான் கணவர் வீட்டில் இருந்தபோது வன்முறைக்குள்ளாக்கப் பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தார். இவரது வழக்குரைஞரான பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு பா.ஜ.க அனுதாபி ஊடக கவனம் பெறும் பொருட்டு இந்த வழக்கைத் திசை திருப்பினார். தலாக்கை ரத்து செய்தல், ஜீவனாம்சம், குடும்ப வன்முறைக்குத் தண்டனை என்கிற வேண்டுதல்களை நீதிமன்றம் முன் வைக்காமல் ‘பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிற வேண்டுதலை வைத்தார். உடனடியாக ‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB)’ இதில் தலையிட வேண்டியதாயிற்று. தேன் கூட்டைக் கலைத்தது போல இன்று இதை முஸ்லிம்களைத் தாக்கும் ஆயுதமாக இந்துத்துவம் கையில் எடுத்துள்ளது. நரேந்திர மோடிவரைக்கும் தங்களின் ‘முஸ்லிம் அன்பை’க் காட்ட ஒரு வாய்ப்பாகி விட்டது.

இந்தப் பிரச்சினையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சத்திற்கு வருவோம். எதிர்பார்த்தது போலவே ஆணாதிக்க மதிப்பீடுகள் நிறைந்த முஸ்லிம் சட்ட வாரியம் இதை எதிர்த்தது. அதன் மனுவில் காணப்பட்ட சில வாசகங்கள் பெண்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் சட்ட வாரியம் முன்வைத்த வேண்டுதலில் இரண்டு அம்சங்கள் வரவேற்கத்தன. 1. சற்று முன் குறிப்பிட்ட டானியல் லத்தீஃபி வழக்கைச் சுட்டிக்காட்டி  உயிருள்ளவரை ஜீவனாம்சம் வழங்குதல் முதலியவற்றை சட்டவாரியமும் ஏற்றுக் கொண்டது. 2.அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையைப் பொருத்த மட்டில் சில ஆண்டுகள் முன் இயற்றப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொதுவான ‘குடும்ப வன்முறைச் சட்ட’த்தைப் பயன்படுத்தி உரிய நிவாரணம் பெறலாம் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.

ஆக, நீதிமன்றங்கள் முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்களில் இப்போது ஏற்படுத்தியுள்ள திருத்தங்களை ஓரளவுக்குச் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையே இந்திய மக்களின் பொதுவான கருத்தாக நாம் கருத இடமுண்டு.

தனிநபர் சட்டங்கள் என்பன ஒரு வகையில் சிறுபான்மைச் சமூகங்களின் அடையாளங்களில் ஒன்றாகிவிடுகின்றன. மேலும் மேலும் பாதகமான அரசியல் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுத் தாங்கள் இந்தியச் சமூகத்திற்குள் இரண்டாம் நிலையினராக முத்திரை குத்தப்படும் நிலையை மனதில் கொண்டு இன்று முஸ்லிம்கள் கொண்டுள்ள கவலையையும், எதிர்வினையையும் நாம் மதிப்பிட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினையை ஆராயும்போது நாம் வரக்கூடிய முடிவுகளை இப்படிச் சுருக்கலாம்.

  1. பல்வேறுபட்ட சமூகங்கள் அருகருகே வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ‘பொது சிவில் சட்டம்’, அல்லது ‘பொது தனிநபர் சட்டம்’ என்பன சாத்தியமில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மதத்திற்குமான தனி நபர்ச் சட்டப் பிரிவுகள் திருத்தங்களே செய்யப்படக் கூடாதவை என்பதல்ல. அவை திருத்தங்களுக்கு உட்பட்டவையே.
  2. தனிநபர்ச் சட்டங்களுக்கும் அரசியல் சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உள்ள முரண்களும், இடைவெளிகளும் காலப் போக்கில் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. முஸ்லிம்களுக்குள்ளேயும் முற்போக்கு சக்திகளால் இவை முன்னெடுக்கபடுகின்றன. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன் (BMMA)’ எனும் அமைப்பு இது தொடர்பாக 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கையொப்பங்கள் பெற்றுள்ளது. பல முஸ்லிம் ஆண்களும் அதில் கையொப்[பமிட்டுள்ளனர். இர்ஃபான் ஹபீப், ஜாவேத் ஆனந்த், ஃபைஸான் முஸ்தபா முதலான முஸ்லிம் அறிவுஜீவிகளும் இதை முன்னெடுக்கின்றனர். இது வரவேற்கப்பட வேண்டும்.
  3. இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை. உள்ளுக்குள் எழும் சீர்திருத்தக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ச்சி பெறும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். உரிய ஜனநாயகபூர்வமான விவாதங்கள், கருத்தொருமிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லாமல் அவசரமாகத் தலையிட்டு சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது. இதை அரசியலாக்கி மக்களைப் பிளவு படுத்தும் இந்துத்துவ அரசியல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..