குல மரபுகளை ஏற்க மறுக்கும் பவுத்தம்

(நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -16 , தீராநதி, மே 2017)                                                 

தன் சந்ததி தனது குலமரபிற்கு மாறகத் துறவறப் பாதையில் காலடி வைப்பதை சித்திராபதியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவரவர் குலமரபை அவரவர் காக்க வேண்டும். அதுவே அவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து  உய்வதற்கான பாதை. என உரைத்த வைதீகச் சிந்தனைகளை எதிர்த்துக் கிளர்ந்த மதம் பௌத்தம்.  பௌத்த அறங்களையும், கோட்பாடுகளையும் விளக்க வந்த மணிமேகலைக் காப்பியம் தன் ஒவ்வொரு காதையிலும் வெவ்வேறு நுட்பங்களுடன் காவிய அழகு சிதையாமல் அதைச் செய்து முடிக்கும். இங்கு குல மரபு காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை முன்னெடுத்து வாதிடுபவளாக மூத்த தலைமுறையினளான சித்திராபதியையும், அதை மறுத்து முன் செல்லும் இளைய தலைமுறையாக மாதவியையும் மணிமேகலையையும் முன்னிறுத்துகிறார் சாத்தனார்.

உதயகுமாரன் இந்த உலகை ஆளும் வண்டு. அவன் அருந்திக் களிக்க விரும்பிய மணிமேகலையை அவனிடம் கொண்டு சேர்ப்பேன். ஒரு பிச்சைப் பாத்திரத்தைப் பெருமையோடு கையில் ஏந்தித் திரிகிறாளே அந்தச் சிறு பெண் அதைப் பிடுங்கி அங்கு திரியும் பிச்சைக்கார்களின் கையில் திணிப்பேன். அவளை உதயகுமாரனின் பொற்றேறில் ஏற்றிக் கொண்டு செல்வேன் – எனப் பலவாறும் ஆத்திரத்தை வெளிப்படுத்தித் தேரோடும் வீதியில் அவள் விரைந்து சென்ற போது அவளோடு வளை செறிந்த கைகளுடன் கூடிய பிற நாடக மங்கையரும் சென்றனர் என்கிறார் சாத்தனார். மக்களைப் பல்வேறு குலங்களாகப் பிரித்து நிறுத்தி, அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மரபை வரையறுப்பது மட்டுமின்றி அந்த மரபு குறித்த பெருமையை அவர்களுக்கு ஊட்டுதல் என்பதில்தான் வருண – சாதி அடிப்படைகளிலான குல மரபுகள் இங்கே மக்களின் ஒப்புதலுடன் பேணப்பட்டு வருகின்றன..buddha-amongst-lotus-flowers

பத்தினி ஒழுக்கத்தைப் பெருமையோடு முன்வைக்கும் அதே சமூகம்தான் இங்கு பலர் கைப்பட வாழும் கணிகையர் மரபையும் கொண்டாடுகிறது. பத்தினி ஒழுக்கத்தைக் கொண்டாடும் குலங்கள் மட்டுமின்றி, எந்தக் குலத்திடமிருந்து பத்தினி ஒழுக்கம் விலக்கி வைக்கப்படுகிறதோ அந்தக் குலமும் தங்களுக்கு அந்த ஒழுக்கமின்மையைக் கொண்டாடுகிறது. இந்தக் காதையில் வெளிப்படுவது ஒரு பாட்டி தன் பேத்தி குறித்துக் கொள்ளும் கவலை மட்டுமல்ல. அந்தச் சமூகமே அதை ஏற்கவில்லை. மணிமேகலையை உதயகுமாரனிடம் கொண்டு சேர்ப்பேன் எனச் சித்திராபதி வஞ்சினம் கூறிச் செல்லும்போது அந்தச் சமூகமே அவளுடன் செல்கிறது. இப்படியாகக் குல வழக்கங்களை மீறியோர் அதன்பின் சக அரங்கக் கூத்தியர்களின் வீட்டிற்குள் கூட நுழைய இயலாத பழியோடுதான் வாழ நேரும் என்பதையும் சொல்லிவிடுகிறார் சாத்தனார்.

ஆனால் குல மரபைப் புறந் தள்ளித் துறவற வாழ்வை ஏற்கும் மணிமேகலை அந்தப் பழியோடு வாழ நேரவில்லை. அவள் ஏற்ற பௌத்தம் அவளை அந்தப் பழியிலிருந்து காப்பாற்றுகிறது. காப்பாற்றுவது மட்டுமல்ல, பல்வேறு சமயக் கணக்கர்களையும் வென்று சிறக்கும் ஒரு அறிஞையாகவும், தூயோளாகவும் போற்றப்படும் நிலைக்கு அவளை உயர்த்தவும் செய்கிறது.

சக நடன மங்கையர் புடை சூழ வஞ்சினம் கூறி வெஞ்சினத்துடன் செல்லும் சித்திராபதி இளவரசன் வீற்றிருக்கும் உல்லாச மண்டபத்தை அடைகிறாள். வெண்சாமரம் வீசும் மங்கையர் மத்தியில் உல்லாசமாக அமர்ந்திருக்கும் உதயகுமாரனின் காலடியில் வீழ்கிறாள்.

ஒரு பக்கம் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரியும் மக்கள் கூட்டம். இன்னொரு பக்கமோ சித்திர விதானங்களுடன் கூடிய பளிங்கு மண்டபங்களில் உல்லாசம் அனுபவிப்போர். இப்படித்தான் தமிழகம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இருந்திருக்கிறது என்பதையும் மணிமேகலைக் காப்பியம் ஆங்காங்கு சுட்டிக் கொண்டே செல்கிறது.

“மாதவியும் மணிமேகலையும் கொண்ட பிக்குணிக் கோலம் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டுள்ளதா?” எனக் கேட்டு நகைக்கிறான் இளவரசன்.

பலர் மத்தியில் அமர்ந்து கொண்டு இவ்வாறு நகையாடும் இளவரசனிடம், “என் பேத்தி மணிமேகலை பூப்பெய்தி, உன்னால் கூடுவதற்குரிய பருவம் அடைந்து விட்டாள். இப்போது இந்த மூதூரின் புறப்பகுதியில் அமைந்துள்ள அம்பலத்தில்தான் உள்ளாள், அவளைச் சென்றடைவாயாக”  என்கிற செய்தியை சித்திராபதி பூடகமாகச் சொல்வதாக இப்பகுதி அமைகிறது. சாத்தனாரின் கவித்திறத்திற்கு ஒரு சான்றாக இந்த உரையாடலை உரையாசிரியர்கள் வியப்பார்கள்.. குருகு எனும் சொல்லுக்கு பறவையினம் என்றொரு பொருளுண்டு. குருகு என்பதைக் குருக்கத்தி எனக் கொண்டால் அதை மாதவி எனப் பொருள்படும் ஒரு மலராகவும் கருதலாம். அதேபோல காஞ்சி எனும் சொல் காஞ்சி மரத்தையும் குறிக்கும்; மேகலையையும் குறிக்கும். குருகினங்கள் கரு உயிர்க்கும் வண்ணம் மணிக்காஞ்சி மரம் பூத்து அவிழ்ந்துள்ளது. உதயகுமாரன் எனும் வண்டு அந்த அவிழ்ந்த மலரை உறிஞ்சி உண்ணுதற்குரிய நேரம் கனிந்துவிட்டது எனப் பொருள் தொனிக்கும் வண்ணம் இதை  உதயகுமாரனிடம் சித்திராபதி சொல்வதாக இந்த உரையாடலைச் சாத்தனார்  அமைத்திருப்பார்.

கப்பல் கவிழ்ந்து கடலில் அலைக்கழிக்கப்பட்டவன் கைப்பற்ற ஒரு புணை கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படிக் களிப்புற்ற உதயகுமாரன் தான் முன்னம் ஒருநாள் மணிமேகலையைப் பளிக்கறையில் கண்டு தவித்ததை விவரிப்பான். அப்போது தெய்வமோ, தெய்வத்தன்மை கொண்ட ஒரு திப்பியமோ தோன்றி “தவத்திறம் கொண்டவள் அவள். அவளிடம் உன் திறத்தைக் காட்டாதே” என எச்சரித்ததையும் சொல்வான். “காமக் களியாட்ட மயக்கத்தில் செய்தவற்றையெல்லாம் மற” எனச் சொல்லிச் சிரிக்கும் சித்திராபதி,

nun-and-monks“வாள் திறம் மிக்க அரசே! கோதம முனிவனின் மனைவி மீது கொண்ட காமத்துக்காக எத்தனை துன்பங்களை இந்திரன் ஏற்றுக் கொண்டான். கற்புக்கரசிகள் பலரைத் தன் கணவனான அக்னிதேவன் புணர ஆசைப்[பட்டபோது, அவன் மனைவி ஸ்வாஹா தேவி, அந்தக் கற்புக்கரசிகள் ஒவ்வொருவரின் வடிவத்தையும்,மேற்கொண்டு அவன் ஆசையைத் தணித்தாளே. இதையெல்லாம் கேட்டபின்னுமா நீ தெய்வம் உரைத்தது அது, இது என்றெல்லாம் சொல்கிறாய்?”- என அவன் தயக்கத்தைப் புறந் தள்ளுவாள்.

பௌத்த அற மதிப்பீடுகள் எத்தனை மேன்மையானவை என்பதையும் அக்காலத்தே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வந்த வைதீக மதிப்பீடுகளும் புராண நம்பிக்கைளும் எத்தனை அறக்கேடானவை என்பதையும் உணர்த்தும் வண்ணம் இந்தக் காதை முழுவதும் அமைக்கப்படிருத்தல் கருதத்தக்கது. தொடர்ந்து குல மரபு, குலப் பெருமை, குல நியதி ஆகிவற்றை வற்புறுத்தும் தத்துவங்களும், நம்பிக்கைகளும் எத்தனை இழிவானவை என்பதை சித்திராபதியின் வாதங்களினூடாக அம்பலப்படுத்துவார் சாத்தனார்.

“குல மகளிர்தான் எல்லாப்  பருவங்களிலும் காவலுக்குட்பட்டவர்கள். குழந்தைப் பருவத்தில் பெற்றோர், திருமணமானபின் கணவன், அந்தக் கணவன் செத்தால் பிள்ளைகள் ஆகியோரால் காவலுக்கும் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறவர்கள். இப்படிக் கற்பைக் காத்து, பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காது, கொண்டவனைத் தவிர தெய்வத்தையும் கூடப் பேணாத குலத்திற் பிறந்தவரல்ல நாங்கள். நாட்டு மக்கள் காண அரங்கேறி ஆடல், பாடல், அழகு எல்லாவற்றையும் காட்டிக் காமத்தைத் தூவி, கண்களால் வலை வீசி, கண்டோர் நெஞ்சில் புகுந்து, கொஞ்சு மொழியால் பயன் பல அடைந்து, தேனுண்டபின் மலரைத் துறந்தோடும் கொண்டி மகளிரான எம்மைத் தன்வயமாக்கி அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல் தானே அரச நெறி!” – என உதயகுமாரனின் உள்ளத்தைப் பிளப்பாள் சித்திராபதி.

இவ்வாறு மகளிர் பலரையும் கவர்ந்து கொண்டு சென்று அந்தப்புரங்களை நிறைப்பதுதான் அரச நெறி – கோன்முறை – எனச் சித்திராபதி கூறுவது கவனத்துக்குரியது. பௌத்தம் உரைக்கும் அரச நெறி இதற்கு முற்றிலும் எதிரானது. பௌத்த அரச நெறிக்கு வாழ்ந்த ஒரு எடுத்துக்காட்டு அசோகச் சககரவர்த்தி. அவர் தருமச் சக்கரத்தை உருட்டியவர். சிறைக் கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கியவர். பௌத்த அறத்திற்கான புனைவு வெளிப்பாடுகள் எத்தனையோ பௌத்த ஜாதகக் கதைகளாக இந்தத் துணைக்கண்டம் முழுவதும் பரவியுள்ளன, பிற மதப் புராணங்களிலும் ஊடுருவியுள்ளன. சிபிச் சக்கரவர்த்தியின் கதை உட்பட இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.  இவ்வாறு, பௌத்தம் சொல்வனவற்றையும், பௌத்தத்தை மறுப்பவர்கள் முன்வைப்பவற்றையும் ஒப்பிட்டு இவற்றில் எவை பொய்யுரைகள் என்கிற கேள்வியை மிக நுணுக்கமாக நம்முள் எழுப்புகிறது மணிமேகலைக் காப்பியம்.

இப்படியான உரையாடலின் ஊடாக இளவரசனின் மனத்தைக் கரைத்து, நினைத்ததை சாதித்து விடுகிறாள் சித்ராபதி. வெறியூட்டப்பட்ட இளவரசன் பாய்ந்தோடும் பரிகள் பூட்டப்பட தேரில் ஏறி விரைகிறான். அமுதசுரபி கொண்டு மணிமேகலை  தீப்பசி கொண்ட மாக்களின் கடிப்பசி களைந்து கொண்டிருந்த அம்பலத்தை அடைகிறான். மக்களின் பசி ஆற்றுதல் என்பது பௌத்தம் போற்றும் உன்னத அறங்களில் ஒன்று என்பதற்கு. ‘கடிப்பசி’, ‘தீப்பசி’ என்றெல்லாம் பசியைச் சாத்தனார் கடிவது ஒரு சான்று.

அடங்காத காமத்துடன் அவள் முன் சென்றவனுக்கு அவளது துறவிக் கோலத்தைக் காணத் தாளவில்லை. நோன்பிருந்து உண்டு, உடலிளைக்கத் தவம் ஏற்று என்ன வாழ்க்கை இது. “நால்லாய் ! எதற்காக இந்த நற்றவம் புரிந்தது?” எனத் துணிந்து கேட்கிறான்.

மணிமேகலையிடம் துறவுக்குரிய ஏதுக்கள் கனியத் தொடங்கி இருந்தும் இன்னும் அது முற்றவில்லை. இராகுலன் எனும் பெயரில் முற்பிறவியில் தன்மீது அன்பு செலுத்திய கணவனாக இருந்தவன்தான் இப்பிறவி உதயகுமாரன் என்பதை அறிந்திருந்த மணிமேகலை, “இவன் அடி தொழுதலும் தகும்” எனக் கூறி அவனை வணங்கினாள். “வசமிழந்த என் நெஞ்சம் அவன்பால் அணுகினாலும், வளையணிந்த என் முன்கையை அவன் பற்றினும், முற்பிறவிக் காதலனின் சொல்லை எதிர் மறுத்தல் நன்றி அன்று” என ஒரு கணம் நடுங்கி மயங்கினாள் அச் சிறுபெண். எனினும் எல்லாம் ஒரு கணம்தான். வைராக்கியம் வென்றது.

“நீ கேட்டதற்குப் பதிலுரைப்பேன். கேட்டு உணரும் திறம்படைத்த செவி உடையவனாக நீ இருந்தாய் எனில் சொல்வேன். பிறத்தலும், மூத்தலும், பிணிபட்டு இரங்கலும், இறத்தலும் உடையதுதான் இந்த உடல். இது துயரங்களின் கொள்கலம். யாக்கையின் இந்த இயல்பு அறிந்தேன். எனவே இந்த உடலின்பங்களை வெறுத்து நல்லறங்களில் நாட்டமுற்றேன். போர்க்களத்தே எதிரிகளை அழிக்கும் களிறு போன்ற உனக்கு பெண்டிர் கூறத் தக்க பேரறிவும் உண்டோ? எனினும் நான் சொல்பவற்றை கேட்பவர் ஆயின் நீயும் அறத்தை விரும்பி ஏற்றவர் ஆகுக” என்றனள் மணிமேகலை.

முன்னதாக சுதமதியும் இவ்வாறே அவனுக்கு யாக்கை நிலையாமை குறித்து அறமுறைத்தது நினைவிருக்கலாம். மணிமேகலையைத் தன் தேரிலேற்றி வருவேன் என எட்டிகுமரனிடம் சூளுரைத்து மலர்வனம் அடைந்து வெறிகொண்டு நின்றவனை நோக்கி, “இளமை நாணி, முதுமை எய்தி / உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு / அறிவும், சால்பும், அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?” (4: 107-110) எனச் சுதமதி அப்போது அவனுக்கு அறிவுரைப்பாள்.

இந்த இரண்டு தருணங்களிலும் “பெண்டிர் கூறும் பேரறிவும் உண்டோ” எனவும், “செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?” எனவும் சொல்வதை ஒட்டி, பெண்களை ஆண்களுக்கு அறிவு கொளுத்தும் ஆற்றல் அற்றவர்களாகச் சாத்தனார் கூறுவதாகக் கருத வேண்டியதில்லை. அவர்கள் வாயால் அப்படிச் சொல்லினும் பெண்களின் வாயால் அறிவு கொளுத்தப்படும் நிலையில் இளவரசர்களும் கூட உள்ளனர் என்பதே இங்கு குறிப்பு. பெண்களுக்கு அத் தகுதி கிடையாது என்கிற பொதுப்புத்தியை நுணுக்கமாக விமர்சிக்கும் பாங்கே இது. ஒரு இளம் பெண்ணைக் காவிய நாயகியாக்கி நாயகனில்லாத ஒரு காப்பியத்தை யாத்தவர் சாத்தனார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.Green-Tara

இந்தச் சொற்களால் உதயன் திருந்திவிடுவான் என மணிமேகலை நம்பவில்லை. “ஆடவர்கள் என்ன செய்வார்கள் என்பதை யாரறிவார்” என மனதிற்குள் சொல்லிக் கொண்டு வாள்வலி மிக்க இளவரசனிடமிருந்து விலகி, அருகிலுள்ள மூத்த முதல்வி சம்பாபதியின் குறுங் கோவிலுள் நுழைந்தாள். சம்பாபதியை வணங்கி முன்னதாக மணிமேகலா தெய்வம் அவளுக்கு அருளியிருந்த வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை ஓதி காயசண்டிகையின் வடிவெடுத்து உதயகுமாரன் முன் தோன்றினள்.

எனினும் அவள் கையில் அந்தப் பிச்சைப் பாத்திரம், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி இருந்தது. என்ன ஆபத்து சூழ்ந்த போதிலும் மக்களின் கடி பசி நீக்கும் அந்த அற்புதத்தை அவள் எப்படித் துறப்பாள்.

உதயகுமாரனும் அதைக் கண்டான். பெரும்பசியால் வருந்தி உழன்ற காயசண்டிகையிடம் இப்பிச்சைப் பாத்திரத்தை அளித்துவிட்டு மணிமேகலை தன் மாயத் திறத்தால் தன்னை எங்கோ ஒளித்துக் கொண்டாள். இங்கு இந்தச் சுதைமண் பாவைகள் மத்தியில் இவளை யாரென உணர்வேன்? “அவள்தான் இவளென்று நீ அவளை அடையாளம் காட்டாவிட்டால் எத்தனை நாளானாலும் இங்கேயே பழி கிடப்பேன்” என உருமாறிய மணிமேகலையிடம் முறையிட்டான் உதயன்.

காம உணர்வும் காதலுணர்வும் மிகுந்து பலவாறும் அவள் முன் மணிமேகலையின் உடலழகை வியந்து பிதற்றத் தொடங்கினான். யாழினும் இனிய குரலில் அவள் அவனுக்கு அறம் உரைத்ததையும் சொன்னான். “மதியொத்த முகத்தினள் மணிமேகலையை விட்டு நீங்கிச் செல்லேன். உன் திருவடி தொழுதேன். என் குறை தீர்” எனத் தொழுது நின்றான்.a32f46d6929ff6be0eda9b9ac1212c05

(அடுத்த இதழில் உதயகுமாரனைக் கொல்லும் விஞ்சையன்: இந்த இருவரில் யாரின் ஊடாகக் காப்பியச் சோகம் விரிகிறது?)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்

கார்ல் மார்க்ஸ் -12 , மக்கள் களம், மே, 2018                                

இன்று (மே 5, 2018) கார்ல் மார்க்சின் 200 ஆவது பிறந்த நாளில் முன்னாள் மேற்கு ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் உள்ள கார்ல் மார்க்சின் இல்லத்தை நோக்கி பெருந்திரளாகப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர் என்றும், ஆனால் சுமார் நாற்பதாண்டுகாலம் ‘கம்யூனிஸ்ட்’ ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெர்மனியில் இறுக்கமான மௌனம் தொடர்கிறது எனவும் இன்றைய ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது.m2

1994ல் நான் ஜெர்மனி சென்றபோது ட்ரையர் நகரில் உள்ள மார்க்சின் வீட்டிற்குப் போனது நினைவுக்கு வருகிறது. தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள அந்த நகரத்திற்கு ரைன் நதி ஓரமாகச் சென்ற அந்த நீண்ட பயணம் மறக்க முடியாதது. இன்றைய கம்யூனிஸ்ட் கட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த இல்லம் எங்கிருக்கிறது என ஊருக்குள் பலரிடம் விசாரித்தும் யாராலும் சரியாகப் பதிலளிக்க இயலவில்லை. ஒரு வயதான மூதாட்டி சற்று நேரம் நின்று நெற்றியில் விரலைத் தட்டி யோசித்துவிட்டு, “இங்கே எங்கேயோ அப்படி இரு வீட்டைப் பார்த்துள்ளேன்” – எனச் சொல்லி அகன்றார். எப்படியோ அந்த வீட்டைக் கண்டு பிடித்து அங்கு சென்ற போது அங்கு எங்களைத் தவிர யாருமில்லை.

இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் ழீன் க்ளாட் ஜுங்கர், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆன்ட்ரி நேல்ஸ் உட்பட ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலரும் இன்று அங்கு சீன அரசால் அன்புடன் அளிக்கப்பட்ட 5.5 மீ உயரமுள்ள கார்ல் மார்க்சின் சிலையடியில் நின்று உரையாற்றிக் கொண்டுள்ளனர். வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவரான ஆங்கெலா மெர்கல் உட்பட சீன அரசு உவந்தளித்த இந்தச் சிலையை வரவேற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

ட்ரையர் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி மேயர் லெய்ப் ட்ரையர், “முப்பதாண்டுகளுக்கு முன் இது சாத்தியமே இல்லை…. எனினும் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசிற்கும் சோஷலிசத்திற்குமான இடைவெளி அதிகமாக உள்ள சூழலில் மார்க்சுடன் உரையாட இது சரியான  தருணம்” எனக் கூறியுள்ளார்.

இன்று மிக அதிகமாக விற்பனையாகும் நூற்களில் ஒன்று மார்க்சின் டாஸ் கேபிடல் என ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது. மார்ஸ் குறித்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என மார்க்சின் கருத்துக்கள் கொண்டாடப் படுகின்றன.  சென்ற ஞாயிறன்று வலதுசாரி பூர்ஷ்வா இதழான Frankfurter Allgemeine Zeitung முதற் பக்கத்தில்  மார்க்ஸின் படத்தோடு அவரது முக்கிய மேற்கோள்களையும் வெளியிட்டு இருந்தது. Süddeutsche Zeitung எனும் இதழின் முன்னாள் ஆசிரியரும் மார்க்சின் தத்துவப் பார்வை குறித்த ஒரு சமீபத்திய நூலை எழுதியவருமான தாமஸ் ஸ்டெய்ன்ஃபீல்ட், “2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின் மார்க்சிய அணுகல்முறைக்கு மிகப்  பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார அமைப்பு பிரச்சினை இல்லாமல் செயல்படும் போது மட்டுமே நம்முடைய பொருளாதார நிபுணர்களால் அதை விளக்க முடிகிறது. ஆனால் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை” என்கிறார். அதோடு, “எல்லாவற்றையும் மதப் பின்புலத்திலும் புனித ஒழுங்குகளின் (divine order) அடிப்படையிலும் விளங்கிக் கொள்வதற்கு இது மத்திய காலம் (middle age) அல்ல. முதலாளித்துவ உறவுகள் மத்தியிலேயே நாம் இன்று வாழ்கிறோம். முதலாளிய இயக்கம் பற்றிய அறிவின் ஊடாகவே நாம் இன்று நம்மை விளங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் மார்க்சை நோக்கித் திரும்புவது இன்று தவிர்க்க இயலாததது” – எனவும் அவர் கூறுவது கவனத்துக்குரியது.

இடதுசாரிக் கட்சிகளில் ஒன்றான ‘டை லின்க்’ கட்சியைச் சேர்ந்த டயட்டர் கோவாலிக் சொல்லுகையில், “மார்க்ஸை வாசிப்பதைப் பொருத்தமட்டில் மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியைக் காட்டிலும் முற்போக்காக உள்ளது” என்கிறார்.

மேற்கு ஜெர்மனி இது வரையிலும் முதலாளியப் பொருளாதாரம் மற்றும் முதலாளிய ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திய ஆட்சிகளின் கீழ் இருந்தது. கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் வீழ்ச்சி வரை சோவியத் பாணி “சோஷலிச ஆட்சி”யின் கீழ் இருந்தது. மேற்கு ஜெர்மனி மார்க்சைக் கற்றுக் கொள்ள தயாராக இருப்பதையும், கிழக்கு ஜெர்மனி அதற்குத் தயாராக இல்லாத நிலையையும் நாம் இந்தப் பின்னணியில் கவனம் கொள்ள வேண்டும்.

m 1இது கிழக்கு ஜெர்மனிக்கு மட்டும் பொருந்துவதல்ல. உல்கெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட சோஷலிசக் கட்டுமானங்களின் கீழ் வாழ நேர்ந்த மக்கள் எல்லோரது நிலையும் இன்று இதுதான். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆளுகைகளை மறு பரிசீலனை செய்யத் தயாராக இல்லை. இது எப்படி நேர்ந்தது?

சோஷலிசமாக ரஷ்ய – சீன பாணிகளில் கட்டமைக்கப்பட்ட அரசியலும் பொருளாதாரமும் மார்க்சின் ஆழமான தத்துவப் பார்வைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுத்தப்பட்டவை அல்ல. மார்க்சின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட பல மார்க்சிய விரோதப் போக்குகள்தான் இன்று மார்க்ஸ் மீதும், மார்க்சீயத் தத்துவத்தின் மீதுமான வெறுப்பாக மக்கள் மத்தியில் வேர் கொண்டுள்ளது..  பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் எனும் ஒரு அபத்தப் பெயரின் கீழ் அவை முற்றிலும் ஜனநாயகமற்ற ஆட்சிகளாக (totalitarian regimes) ஆயின. ஸ்டாலின் அல்லது போல்பாட் போன்ற ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. ப்ளெகானோவ், லெனின், மாஓ… யாரும் மார்க்ஸை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் மார்க்சின் பெயராலும், மார்க்சீயத்தின் பெயராலுமே எல்லாவற்றையும், எல்லாத் தவறுகளையும் செய்தார்கள்.

தீவிர மார்க்சியராகத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் பலரும் மார்க்சின் பிரதிகளை நேருக்கு நேர் வாசித்துப் புரிந்துகொள்ளும் திராணி அற்றவர்களாகவே இருந்தனர், இருக்கின்றனர். அதற்குக் காரணங்கள் இர்ண்டு, மார்க்ஸ் காலத்திய அரசியல் மற்றும் தத்துவ விவாதங்கள் குறித்த வாசிப்பவர்களின் புரிதலின்மை என்பது ஒன்று. ‘பதினெட்டாவது புருமேர்’ என்பதை ஒரு மன்னரின் பெயராகப் புரிந்து கொண்டு எழுதியவர்கள் இங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மற்றது கார்ல் மார்க்சை எளிமையான சில வாய்ப்பாடுகளை நமக்குச் சொன்னவராகப் புரிந்து கொண்டு அவரது சிந்தனைகளை விதிகளாகச் சுருக்கிப் பட்டியலிட்டுப் புரிந்து கொண்டது. நமது எல்லா தினசரிப் பிரச்சினைகளுக்கும் மார்க்ஸ் விடை சொல்வார் என நம்பியது. இல்லாவிட்டால் இயங்கியல் முறையில் மீன் பிடிப்பது பற்றியெல்லாம் மாஓவின் பெயரால் இங்கு சொல்லாடல்கள் உருப்பெற்றிருக்க முடியுமா?

மார்க்சின் எந்த ஒரு எழுத்தையும் நம்மால் ஏன் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலவில்லை? ஏன் அவரது எழுத்துக்கள் மிகவும் சிக்கலாகத் தோன்றுகின்றன? தன்னிடம் எல்லாக் கேள்விகளுக்கும் எளிய விடைகள் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்ததுதான் அவை சிக்கலாக வெளீப்பட்டதன் அடிப்படை. பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

மனிதர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் என்பதை அவர் உணர்ந்திருந்ததன் விளைவே தொழிலாளிவர்க்கம் அதன் பிரச்சினைகளை அதுவே தீர்த்துக் கொள்ளத் தகுதியானது என அவர் சொன்னதன் பின்னணி.

“நான் மார்க்சிஸ்ட் அல்ல” என மார்க்ஸ் ஒருமுறை சொன்னதாகச் சொல்வார்கள். மார்க்சிஸ்ட் என்கிற சொல்லின் ஊடாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள மொத்தத்துவக் கருத்தியலைக் கண்டு அவர் கொண்ட அச்சமே இந்தக் கூற்றின் அடிப்படை. அவர் ஒரு தத்துவ ஞானி. அப்படிச் சொல்வது அவரை மக்களிடமிருந்தோ அல்லது. அரசியலிலிருந்தோ பிரித்து நிறுத்துவது அல்ல. அவர் மற்ற தத்துவ ஞானிகளிடமிருந்து வேறுபட்டவர் என்பது யாருக்கும் தெரியும். ஆனால் அடிப்படையில் ஒரு philosopher  என்பதை நாம் மனதிற் கொண்டே அவரை நாம் அணுக வேண்டும். அவரது ஆக எளிய அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் கூட நாம் ஒரு தத்துவ ஆசிரியன் எழுதிய அரசியற் கையேடு என்கிற அடிப்படையிலேயே அணுக வேண்டும்.

0f21fe8e-3faf-11e8-b6d9-57447a4b43e5-1280x720-161305ஒரு கட்சியின் அறிக்கை என்பது நிகழ் காலத்தைச் சுட்டிக் காட்டி, அதைக் கடந்து எதிர்காலத்தை முன் ஊகித்துச் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு மார்க்சும் எங்கல்சும் எழுதிய இந்த அறிக்கைதான். மார்க்ஸ் காலத்தில் (1840 கள்) முதலாளியம் அப்போதுதான் உருப்பெற்று, நிலை கொள்ள எத்தனித்து, அம்முயற்சியில் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போதே அது எதிர்காலத்தில் எத்தகைய நிலையை எடுக்கும், எப்படியெல்லாம் வேர்பரப்பும் என்பதை விரிவாகவும் சரியாகவும் சுட்டிக்காட்டியது மார்க்ஸ் – எங்கல்சின் அந்த அறிக்கை. இன்று அது உலகமயமாகியிருக்கிறது, நிதிமூலதன மயமாகியுள்ளது. அது தொடாத இடமில்லை; கால் பாவாத பகுதியில்லை.

“nestle everywhere, settle everywhere, establish connexions everywhere” என அறிக்கை சொன்னதை 1970 களில் மார்க்சியர்களிலேயே சிலர் எதிர்த்தனர். மூன்றாம் உலக நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்? ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்கிற முதலாளிய நகர் மையங்களைத் (metropolis) தாண்டி இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்டனர். ஆனால் 1991 க்குப் பின் அது சாத்தியமாகியுள்ளதற்கு நாம் இன்று சாட்சிகளாக நிற்கிறோம்.

“உலகச் சந்தையின் மீதான சுரண்டல் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஒரு உலகளாவிய தன்மையை அளிக்கும்” (“exploitation of the world-market” would give “a cosmopolitan character to production and consumption in every country”).  என்று அறிக்கை சொன்னதை இடதுசாரிகளே ஐயத்துடன் நோக்கிய காலம் ஒன்றும் இருந்ததுதானே. ஒவ்வொரு நாட்டிலும் இன்று எல்லா உற்பத்தியும் நடக்கிறது; நுகர்வும் நடக்கிறது. ஆனால் அவை உண்மையில் அந்தந்த நாட்டு உற்பத்திகளா? எனினும் உற்பத்தி ஒரு உலகளாவிய நிலையை எடுத்ததாகத் தோற்றம் கொள்ளவில்லையா? இன்று சுமார் 20 இலட்சம் இந்திய / சீனத் தொழிலாளிகள் உலக உழைப்புச் சந்தையில் மிதந்து கொண்டிருக்க வில்லையா? மூலதனம் உலகமயமாவதற்கிருந்த ஒரே தடையான சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்க்கப்பட்டு இன்று உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா? தகர்க்கப் படாமலேயே இன்று சீனம் உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா?

அறிக்கை எழுதப்பட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ வாழ்வின் அடிநாதமான வழமைகளைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க முகமையாக இருந்தது நீராவி எந்திரங்கள்தான். தொழில் முதலாளிகள், பெரு வணிகர்கள் என்கிற புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுக்களின் இருப்பையும் ஆதிக்கத்தையும் தகர்த்தெறிந்து சமூக ஆதிக்கத்தையும் தம் வயமாக்கிக் கொண்டன. இன்று செயற்கை நுண்ணறிவும் தானியங்கிகளும் (artificial intelligence and automation) அத்தகைய அச்சத்திற்குரிய முகமைகளாக ஆகவில்லையா? “எல்லா நிரந்தரமான, உறைந்த உறவுகளையும் துடைத்தெறிந்து தொடர்ந்து உற்பத்திசக்திகள் புரட்சிகரமயமாகும்” என அறிக்கை சொன்னதை நாம் இன்று கண்முன் காணவில்லையா?  – “உற்பத்தி தொடர்ந்து புரட்சிகரமாகும்; எல்லாச் சமூக எதார்த்தங்களும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும்; தொடர்ந்த உறுதியின்மை, குழப்பங்கள் என்பனதான் இனி எதிர்காலமாக அமையும்” என அறிக்கை அன்று சொன்னதைத்தானே – “constant revolutionising of production, uninterrupted disturbance of all social conditions, everlasting uncertainty and agitation”-  இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

மார்க்ஸ் இவ்ற்றை எல்லாம் நல்ல ‘சகுனங்களாகவே’ கண்டார். இவை மிகப் பெரிய அதிருப்தியை உருவாக்கும்; அது இந்த அமைப்பைக் கவிழ்க்கும் என்றார். “கண்முன் உறுதியாக இருந்தவை எல்லாம் உருகிக் காற்றில் கரையும். புனிதமாகத் தோற்றம் காட்டியவை எல்லாம் அசிங்கமானவைகளாகத் தோற்றம் கலையும்” என்கிறது அறிக்கை. “மிகவும் மோசமான ஏழ்மை என்கிற நிலையிலிருந்து ஒப்பீட்டளவிலான ஏழ்மை என்கிற நிலைக்கு முன்னேறியுள்ளோமே” என அவர்கள் சமாளித்த போதிலும், தாங்கமுடியாத அசமத்துவம், கொடூரமான பேராசை, பருவநிலை மாற்றம். வங்கி மூலதனங்களும் பெரும் பண முதலைகளும் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வசப்படுத்திக் கேலிக்கூறாக ஆக்கியுள்ளமை ஆகியவைதானே இன்று எதார்த்தமாக உள்ளன?

அறிக்கையைத் தெளிவாக வாசித்திருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் வியப்பளிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் எதிர்பார்த்தவைதான். “ஒட்டு மொத்தமான சமூகமும் எதிர் எதிரான இரு முகாம்களாகப் பிரிந்து ஒன்றை ஒன்று நேரடியாக எதிர்கொண்டு நிற்கும்” என்பதும் அறிக்கை நமக்குச் சொன்னதுதானே. உற்பத்தி என்பது மேலும் மேலும் எந்திரமயமாகிறது. சமகால நாகரீகத்தை இயக்கும் விசையாக மேலும் மேலும் லாபம் எனும் கார்பொரேட் வெறி பூதாகரமாக உருப்பெறுகிறது. சமூகம் நேர் எதிர் எதிரான சக்திகளாகப் பிளவுண்டு நிற்கிறது. இடையில் சிக்கிய மத்தியதர வர்க்கத்திற்கு அழிவே விதியாகப் போகிறது.
(தொடரும் – அடுத்த இதழில் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்)

 

ரஜிந்தர் சச்சார் (1923 – 2018)   

மறைந்த நீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான ஆணையத்திற்குத் தலைமை ஏற்று அளித்த அறிக்கையாலேயே இன்று அவர் பெரிதும் நினைவுகூறப்பட்டாலும், அவர் பன்முக ஆளுமை உடையவர். சோஷலிஸ்ட் கட்சிப் பாரம்பரியத்தில் வந்த அவர் இறுதிவரை மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வந்தவர். 

ஒன்று

“அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் அடுத்தபடியாகத் தாம் நேசிப்பது ரஜிந்தர் சச்சாரைத்தான் எனப் பல முஸ்லிம்கள் என்னிடம் கூறியுள்ளனர்” -என்றார் சச்சார் அறிக்கையை உருவாக்கிய குழுவின் உறுப்பினரும் செயலாளருமான அபு சலே ஷரீஃப். அறிக்கையின் நகலைத் தயாரித்தது ஷரீஃப்தான் என்பார்கள். அது குறித்துக் கேட்டபோது ஷரீஃப் சொன்னார்:

“இந்த அறிக்கையின் சிறப்புகளுக்கும் நம்பகத் தன்மைக்கும் சச்சாரே காரணம். பொது வெளிகளில் முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிப்புகளுக்குள்ளாகக் கூடிய நிலையில் (vulnerable) உள்ளனர் என்பது குறித்த ப்ரக்ஞை உடையவராக அவர் இருந்தார். இந்த அறிக்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் எவ்வாறு முஸ்லிம்கள் அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் வாழ்வை எதிர்கொண்டுள்ளனர் என்பதைச் சொல்லிக் கொண்டே போகிறது. இந்த அறிக்கையின் தனித்துவம் அதில்தான் அடங்கியுள்ளது”.

சச்சார் என்றவுடன் நமக்கு இன்று ‘சச்சார் அறிக்கை’தான் நினைவுக்கு வருகிறது என்றாலும், அவர் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்டவர். வழக்குரைஞராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும், நீதிபதியாகவும், மனித உரிமைப் போராளியாகவும், ஒரு பொதுநிலைக் கருத்தாளராகவும் (Public Intellectual) நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்.

ஒரு நீண்ட வாழ்வை இந்த மண்ணில் வாழ்ந்த அவர் ஒன்றாக இருந்த இந்தியாவில் பஞ்சாபில் பிறந்தவர். லாகூரில் வழக்குரைஞர் படிப்பை முடித்தவர். பிரிவினைக் கலவரத்தின் போது குடும்பத்தைப் பிரிய நேர்ந்து தப்பித்து வந்தவர். அவரது தந்தை பீம்சேன் சச்சார் ஒரு காங்கிரஸ்காரர். பிரிவினைக்குப் பின் ஐந்தாண்டு காலம் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்தவர். ஆனால் ரஜீந்தர் சச்சார் தந்தையின் கட்சியில் இருக்கவில்லை. அன்று காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில்தான் இருந்தார். ஒரு முறை பிரதமர் நேரு அவரது இல்லத்திற்கு உணவருந்த வந்தபோது அவரோடு அமர்ந்து உண்ண மறுத்வர்தான் சச்சார்.

இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது சச்சார் அதை ஏற்கவில்லை. இந்திராவின் மரணத்தை ஒட்டி சீக்கியர்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டபோது (1984)  டெல்லியில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அப்போது சீக்கியர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. அவர் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தால் உண்மைகள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சம் அன்று காங்கிரஸ் அரசுக்கு இருந்தது.

சச்சாரின் உருவாக்கத்தில் இளமையில் அவர் கண்முன் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், பிரிவினைக் கலவரக் கொடுமைகள், நெருக்கடிநிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷலிசச் சிந்தனை, அரசியல் சட்ட ஆளுகை , மதச்சார்பின்மை, மனித உரிமைகள் என்கிற இந்த நான்கையும் அவர் தன் அரசியல் நெறிகளாக ஏற்று வாழ்ந்ததை நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பு என்பது பிரிவினைக் கலவர அனுபவங்களின் ஊடாகத்தான் அவருக்கு உருவாகியிருக்க வேண்டும்.

“முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் தாங்கள் ‘தேசவிரோதிகள்’ இல்லை, ‘பயங்கரவாதிகள்’ இல்லை என நிரூபித்திக் காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அவர்களுக்குச் சலுகைகள் (appeasement) காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால் அப்படியான ‘சலுகைகள்’ எந்தச் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுத்திவிடவில்லை. ஏதோ  சில மக்கள் மட்டும் முஸ்லிம்களைச் சந்தேகத்திற்குரியவர்களாகப் பார்க்கிறார்கள் என்பதில்லை. பொது நிறுவனங்களும், அரசமைப்புகளும் கூடத் தம்மை அவ்வாறு பார்ப்பதாக அவர்கள் எங்களிடம் முறையிட்டனர். இப்படியான நிலை அவர்கள் மத்தியில் மிகப் பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது” – என்கிறது சச்சார் அறிக்கை.

“புர்கா, பர்தா, தாடி, தொப்பி முதலியன ஒரு பக்கம் இந்திய முஸ்லிம்களின் தனித்துவத்திற்கான அடையாளங்களாக இருந்தபோதிலும், அவையே பொதுப்புலத்தில் அவர்களின் அச்சத்திற்கான மூல காரணிகளாகவும் அமைந்து விடுகின்றன. கேலிக்குரிய அம்சங்களாக மட்டுமல்ல, சந்தேகப் படுவதற்கான ஆதாரங்களாகவும் அவை ஆகிவிடுகின்றன” என்பதையும் சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிவிடுகிறது.

வேறெந்த உடனடிப் பலனும் சச்சார் அறிக்கையின் மூலம் விளைந்ததோ இல்லையோ முஸ்லிம்களுக்குச் சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக இங்கு இந்துத்துவசக்திகளால் முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை உரிய தரவுகளின் அடிப்படையில் தர்த்தெறிந்தது சச்சார் அறிக்கை.

சச்சார் என்றைக்கும் காங்கிரசை ஆதரித்ததில்லை என்றாலும் மன்மோகன் சிங் அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக முஸ்லிம்களின் சமூக நிலை குறித்து ஆய்வுசெய்ய இந்த ஆணையத்தை அமைத்தபோது அதற்குத் தலைவராக சச்சார் அவர்களையே அழைத்தது. அவரும் அதை ஏற்றுக் கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் இப்படியான ஆணையங்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் சுமார் 15 கோடி அளவு மக்கள் தொகை உள்ள முஸ்லிம் சமூகத்தை மட்டும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு இது ஒன்றுதான்.

இரண்டு 

இந்திய முஸ்லிம்களின் “பாதுகாப்பு, அடையாளம், சமத்துவம்” ஆகியவற்றைத் தனது அணுகல் முறை நோக்கங்களாக  அறிவித்துக் கொண்ட இக்குழு, 2006 நவம்பர் 17 அன்று,  12 அத்தியாயங்கள், 427 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது.  பல்வேறு துறைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மிக விரிவான தகவல்களை, உரிய முறையில் பகுத்தாய்வு செய்து,  நிரல் படத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஓர் ஆவணமாக இன்று நம்முன் உள்ளது.

தன் அணுகல்முறையின் அடிப்படை கோட்பாடாகச் சச்சார் சொல்வது:

“எந்த ஒரு நாடாயினும் அங்கு அமைந்துள்ள அரசு. ஒரு நீதியான அரசாக உள்ளதா இல்லையா எனக் கண்டறிவதற்கான ஒரே சோதனை அங்குள்ள சிறுபான்மை மக்கள் தம் அரசு நடுநிலையாகச் செயல்படுகிறதா இல்லையா என்பது குறித்து என்ன கருத்து வைத்துள்ளார்கள் என்பதுதான்.”

இந்த அறிக்கை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:

1.பலரும் நம்புவதுபோல் இது வெறும் ஒரு இடஒதுக்கீட்டிற்கான அறிக்கை அல்ல.  உறுதியான இடஒதுக்கீட்டுப் பரிந்துரை எதையும் இது செய்யவில்லை எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களைப் பிற சமூகங்களுக்கு இணையாகக் கொண்டு வருதலில் இடஒதுக்கீடு ஓரங்கம் மட்டுமே என்கிற அடிப்படையில் தன் ஆய்வுகளை சச்சார் அறிக்கை முன்வைக்கிறது. (அ)சகல நிறுவனங்களும் சமூகத்தின் பன்மைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைவதற்கும் (ஆ), இன்று ஏற்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை ஏற்படுத்தித் தருவதற்கும் உரிய பரிந்துரைகளைச் செய்வதும்தான் சச்சார் அறிக்கையின் நோக்கம்.

2.இந்த நோக்கில் சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவ குறியெண்’ (Diversity Index) ஒன்றை உருவாக்குவது, பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் ஒதுக்கப்படுதல் குறித்தும் அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உணர்வூட்டுவது, உயர் கல்வியில் பன்மைத்துவத்தை நிலைநாட்டும் வண்ணம் சேர்க்கை அளவுகோல்களை உருவாக்குவது, சிறுபான்மையோர் குறித்த தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவது, தனியார் துறைகள் உள்ளிட்டு முஸ்லிம்களுக்கான உறுதியாக்க நடவடிக்கைகளை (Affirmative Actions)) மேற் கொள்வது, பிரிட்டனில் இருப்பதுபோல் “சமவாய்ப்பு ஆணையம்’ (Equal Opportunity Commission ) ஒன்றை உருவாக்குவது, மதரஸா கல்வி முறையை நவீன மயமாக்குவதோடு, அதைப் பொதுக் கல்வியுடன் இணைப்பது, பாட நூல்களின் உள்ளுறையை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது, முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார ரீதியில் சுருங்குவதைத் (ghettoization) தடுக்கும் வகையில் சிவில் சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது என்கிற வகையில் தன் பரிந்துரைகளைச் சச்சார் குழு மேற் கொண்டுள்ளது.

தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரைப் பற்றியும் அது பேசுகிறது.

முஸ்லிம்கள் குறித்த பொய்களைப் பரப்பியே அரசியல் நடத்தும் பாசிஸ சக்திகளின் பல கட்டுக்கதைகளைத் தகர்க்கும் வண்ணம் ஏராளமான தரவுகளைச் சச்சார் குழு தொகுத்துள்ளது. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டுகிறது.

மக்கள் எல்லோருக்குமான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அரசியல் சட்டத்தின் ஆளுகை என்பனவற்றில் சச்சார் மிக உறுதியாக் இருந்தார் என்றேன். பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவராக இருந்து பல்வேறு உண்மை அறியும் செயல்பாடுகள், மக்கள் மன்றங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றில் பங்குபெற்றுத் தன் அனுபவங்களையும் புரிதல்களையும் மக்கள் சேவைக்கு அர்ப்பணித்தவர் அவர்.

நெருக்கடி நிலையின்போது அறிவிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கையை, “இந்தியாவின் ஆன்மாவில் ஏற்பட்ட நிரந்தரக் காயம்” எனவும், நெருக்கடி நிலை தொடர்வதற்கு ஆதரவாக அன்று இந்திய நீதித்துறை இருந்ததை, “அதன் வரலாற்றில் ஒரு கறை” எனவும் கண்டித்தவர் அவர்.

“எழுதப்பட்ட ஒரு அரசியல்சட்டம் உள்ளவரை அதுவே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. தன்னுடைய அதிகாரம் அரசியல் சட்டத்தில் எல்லைக்குட்பட்டதே என்பதை நாடாளுமன்றம் ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்றம் தன் இறையாண்மைக்குக் குறை வந்துவிடுவதாகக் கருதக்கூடாது. அரசு, நீதித்துறை ஆகியவற்றின் இறையாண்மை அரசியல் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று நாடாளுமன்ற அதிகாரமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான். அரசன் எத்தனை அதிகாரம் மிக்கவனாக இருந்தாலும் அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என நாம் இந்தியப் பாரம்பரியத்தில் சொல்கிறோமே அப்படித்தான் இதுவும்” – என அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை எல்லாமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவையே என்பதை வலியுறுத்தியவர் அவர்.

மூன்று

இறுதிவரை தனது மனதிற்குப் பட்டதைச் சொல்லிக் கொண்டும் அரசுகள் அத்துமீறும்போது அவற்றின் தலைகளில் குட்டிக் கொண்டும் இருந்தவர் சச்சார். நினைவுக்கு வந்த சில மட்டும் இங்கே:

(1) 2016 ஜனவரியில் பாஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தை பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்கியது நினைவிருக்கலாம். அதை ஒட்டி அப்போது இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை மோடி அரசு நிறுத்துவதாக அறிவித்தபோது அதை சச்சார் கண்டித்தார். “பேச்சு வார்த்தைகளை நிறுத்துவது அல்லது ஒத்திப் போடுவது என்பதெல்லாம் நல்லதல்ல. அவை பயங்கரவாதிகளுக்கே உதவும்” என்றார். தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதே இரு நாடுகளுக்கும் நல்லது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

(2) நரேந்திரமோடி அரசு டெல்லியில் பதவி ஏற்ற கையோடு நாட்டைப் பாதிக்கக் கூடிய பல முக்கியமான பிரச்சினைகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அவசரச் சட்டங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கும், நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்ட தனியார்களுக்கும் அனுமதி அளிப்பதை அவசரச் சட்டங்களின் ஊடாக மோடி அரசு நிறைவேற்ற முயற்சித்தபோது ஆகியவற்றை “முற்றிலும் சட்டவிரோதமானது” (absolutely illegal) என்றும், அரசியல் சட்டத்தின் மீது மேற்கொள்ளப்படும் “ஏமாற்று” (fraud) என்றும் சொன்ன சச்சார், இதில் குடியரசுத் தலைவர் கையொப்பமிடக் கூடாது எனவும் சச்சார் கேட்டுக்கொண்டார். “தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால்தான் இப்படி அவசரச் சட்டம் மூலமாக இவற்றை நிறைவேற்ற வேண்டி உள்ளது என வெட்கமில்லாமல் இந்த மோடி அரசு சொல்கிறது. இது ஒன்றே போதும் குடியரசுத் தலைவர் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பதற்கு” என்றார்.

“குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டங்களை இயற்றுவது என்பதற்குப் பதிலாக, அவசரச் சட்டங்களின் மூலம் இப்படி நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் சட்டங்களை இயற்றுவது என்பது அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு அவசரநிலை அதிகாரம் (emergency power) என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (1987). நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாத ஒரு அசாதாரணச் சூழலில் பயன்படுத்துவதற்காக அரசுக்கு அளிக்ப்பட்டுள்ள அதிகாரம் இது. இதை அரசியல் லாபங்களுக்காககப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத் தொடரை நீடிக்காமல் இப்படி அவசரச் சட்டங்களின் மூலம் பிரச்சினைக்குரிய சட்டங்களை இயற்றுவதன் பின்னணி என்ன? அந்நிய முதலீட்டாளர்களுடன் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களே இவற்றுக்குப் பின்னணி. ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசுக்கு அதிக அளவில் வருமானம் (dividend) ஈட்டித்தந்த ஒரு நிறுவனம். ‘நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசிய மயமாக்குவதற்கான சட்டத்தின்படி’ நிலக்கரி தோண்ட தனியார்களுக்கு உரிமம் அளிக்க இயலாது. இந்தச் சட்டத்தை இப்படி அவசரச் சட்டம் என்கிற ஒரு  முரட்டு நடவடிக்கையின் மூலம் ஒன்றுமில்லாமல் ஆக்குவதை எப்படி அனுமதிப்பது?” என்றார் சச்சார் (டிச 25, 2014)..

இதன் பின்னரே குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி நரேந்திர மோடி அரசின் இத்தகைய அவசரச் சட்ட ஆளுகையைக் கண்டிக்க நேர்ந்தது.

2013ல் உலக அளவில் செயல்படும் மிகப் பெரிய மருந்து நிறுவனமான ரன்பாக்சி (Ranboxy) கலப்பட மருந்துகளை விற்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அமெரிக்க அரசுக்கு 500 மில்லியன் டாலரை அபராதமாகச் செலுத்த ஒப்புக் கொண்ட செய்தி வெளிவந்தபோது அந்த மருந்துகளை இங்கும் தடை செய்ய வேண்டும் என்றார் ரஜிந்தர் சச்சார். “அமெரிக்க அரசு அதைக் கண்டு பிடித்துத் தடை செய்யும் அதே நேரத்தில் அவை இங்கே அனுமதிக்கப்படுகின்றன என்றால் அதற்குப் பெயர் என்ன? திறமையின்மையா இல்லை கூட்டுக் களவாணித்தனமா (collusion), இல்லை இன்னும் மோசமான ஏதாவது ஒன்றா? எனக்குப் புரியவில்லை” எனக் கூறிய சச்சார் இந்தியக் கடைகளில் அது விற்கப்படுவதையும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அதை அனுமதித்து வருவதையும் சுட்டிக்காட்டிக் கண்டித்தார் (மே 15, 2013). “இந்த மருந்துகளை இங்கு அனுமதித்து வருவது குறித்து நலவாழ்வு அமைச்சகமும், மருந்துக் கட்டுப்பாடு அதிகாரியும் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார்.

சென்ற முறை (1999 -2004) பா.ஜ.க தலைமையிலான ஆட்சி இங்கு நடைபெற்றபோது அவர்கள் பல்கலைக் கழகங்களில் ஜோதிடக் கல்வி, புரோகிதம் ஆகியவற்றில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளைத் தொடங்குவதாக அறிவித்தனர். அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் சச்சார் முதன்மையானவர். “பல்கலைக்கழகங்கள் அரசியல்சட்டத்தின் 52 A பிரிவின் கீழ் அமைக்கப்படுபவை.. பகுத்தறிவு மற்றும் மூட நம்பிக்கைகளை ஏற்க்கக் கூடாது என்பது அப்பிரிவு வற்புறுத்துவதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சோதிடம் என்பது அறிவியல் பூர்வமானது எனில் இங்கு தேதல்களை நடத்தி இங்கு ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியதில்லையே. சோதிடத்தின் மூலம் தகுதியான ஆட்சியாளர்களைக் கண்டுபிடித்து விடலாமே” என்றார்.

நான்கு

ரஜீந்தர் சச்சார் அவர்களுடன் எனக்கு ஒரு சிறிய அனுபவம் உண்டு. தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டுள்ள தோழர்கள் பாஸ்கர், சதீஷ் முதலானோர் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் இருந்தனர். அவர்களது வழக்கையும் நடத்தாமல், பிணையில் விடுதலையும் செய்யாமல் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டித்துத் தோழர்கள் சிறையில் பட்டினிப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அரசு மசியவில்லை. அப்போது குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழு சிறைக்குள் அவர்களைச் சந்தித்துப் போராட்டத்தை நிறுத்த வேண்டிக் கொள்வது என்றும், அதனூடாக இந்தப் பிரச்சினையை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியை ஏற்று டெல்லியிலிருந்து ரஜிந்தர் சச்சார் வந்திருந்தார். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். உள்ளே சென்று பட்டினிப் போராட்டத்தில் இருந்தவர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகளும் அனுமதித்தனர், சச்சார் உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்கு இளநீர் கொடுத்துப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

அவரோடு எனக்கிருந்த இன்னொரு தொடர்பு, அவரது சச்சார் அறிக்கை வெளிவந்த சில மாதங்களில், பத்தே நாட்களில் அதைச் சுருக்கித் தமிழில் ஆக்கியதுதான். முக்கிய அட்டவணைகள் எல்லாம் இணைக்கப்பட்டு அழகான வடிவத்தில் வெளிவந்தது அந்த நூல். அநேகமாக என் நூல்களிலேயே மிக அதிகமாக விற்பனையானதும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.   sachar-kuzhu-1-550x600

ஒரு பொது நிலை அறிவுஜீவி (public Intellectual) என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் ரஜீந்தர் சச்சார். ஒரு தேர்ந்த சட்ட வல்லுநர், வல்லுநர்களாக இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழும் அநீதிகளை விளக்கிக் கண்டித்து மக்கள் மத்தியில் கருத்துருவாக்கும் மனத் திராணியும் சமூக அக்கறையும் கொண்டவர். அந்த வகையில் ஒரு சிறிய கல்வி வட்டத்திற்குள் (academic community) மட்டும்சுருங்காமல் பொது வெளியிலும் தாக்கம் விளைவித்தவர் அவர். அவருக்கு நம் அஞ்சலிகள்.