பீமா கொரெகான் எழுச்சியைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்?

கடந்த நான்கு நாட்களில் வெளியான இரண்டு செய்திகள் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தன. ஒன்று சென்ற ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீமா கொரேகானில் நடைபெற்ற கலவரத்திற்கு மாஓயிஸ்டுகள்தான் காரணம் என சமூகப் போராளிகள் ஐவர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்தி. அந்த ஐவரில் ஒருவர் பிரதமர் மோடியைக் கொலை செய்யும் முயற்சி ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சொல்லப்பட்டது. மற்றொன்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கூறிய ஒரு குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அரசே ஒத்துக் கொண்டுள்ள செய்தி. மோடி முன்வைத்த குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. குஜராத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ்காரர்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்பதுதான் அது. தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படியெல்லாம் பொய் சொல்வது எங்கு கொண்டுபோய் விடும்?.

மாஓயிஸ்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஐவர் கைதாகி இருப்பது குறித்த செய்தியும் இப்படித் தேர்தலுக்காக அவிழ்த்து விடப்பட்ட பொய்தானா இல்லை அதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதைச் சற்று விரிவாக அலசுவோம். பீமா கொரேகான் வன்முறைக்குக் காரணம் இந்த ஐவர் என்கிறார்கள். அதென்ன பீமா கொரெகான்?
1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரத்தில் உள்ள ‘கொரேகான் பீமா’ என்னுமிடத்தில் 824 வீரர்களைக் கொண்ட மகர் தலித் படையின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் படைகளை வென்றது. பாஜிராவின் படையில் அப்போது 28,000 மராத்தா வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி என்பது மட்டுமல்ல தலித் வீரத்தின் ஒரு அழியாத சான்றாகவும் இது அமைந்தது.. உயர் சாதி பேஷ்வா ஆட்சி என்பது பெரிய அளவில் வருணாசிரமம், தீண்டாமை ஆகியவற்றைப் பேணும் ஒன்றாக இருந்து வந்தது. தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இடுப்பில் விளக்குமாறைக் கட்டிக் கொண்டுதான் நடந்து செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது. தலித்கள் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கும் அந்த வெற்றி ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்த வரலாறு இன்றைய ஆட்சியாளர்களுக்குப் .பிடிக்காத ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. எனினும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இப்படியான தலித் மக்களின் வீரம் செறிந்த வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1927 முதல் ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்றும் தலித் உணர்வாளர்கள் கொரேகான் பீமாவில் கூடி உறுதி மேற்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தார்.

இந்த வரலாற்று நிகழ்வின் இருநூறாண்டு நிறைவு சென்ற ஜன 1, 2018 அன்று அமைந்ததை ஒட்டி பல்வேறு தலித் அமைப்புகளும் இணைந்து அதைக் கொண்டாடுவதென முடிவெடுத்தன. முதல் நாள் (டிசம்பர் 31, 2017) அன்று அம்பேத்கர் அமைப்புகள் பலவும் புனேயில் உள்ள ஷானிவர்வதா எனும் இடத்தில் கூடி, “நவீன பேஷ்வாவிய ஒழிப்புப் பிரகடனம்” எனும் ஒரு ஒன்றுகூடலைச் செய்தனர். அதற்குப் ‘பிரகடனக் கூடல்’ (எல்கார் பரிஷத்) எனப் பெயரும் இட்டனர்.

புதிய தலித் எழுச்சியின் சின்னமாக இன்று உருப்பெற்றுள்ள ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் (JNU) போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை ஏகியவர்களில் ஒருவரான உமர் காலித், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் போராடி உயிர் நீத்த ரோஹித் வெமுலாவின் அன்னை ராதிகா வெமுலா எனப் பலரும் அதில் பங்கு பெற்றனர். தலித்கள், சிறுபான்மையினர், இதர பிற்பத்தப்பட்டோர், இடதுசாரிகள் ஆகியோரின் ஒன்றிணைவாக அது அமைந்தது. இந்த ஒற்றுமையை ஆதிக்கத்தில் உள்ளோர் ஆத்திரத்துடன் நோக்கினர்.

அடுத்த நாள் (ஜன 1, 2018) பேஷ்வாக்கள் ஒழிக்கப்பட்ட 200ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்திற்காகப் பெருந்திரளாக பீமா கொரேகானில் மக்கள் கூடியிருந்தபோது ஒரு கும்பல் திரண்டு வந்து அதைத் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான .மனோகர் பிதே என்பவரின் ‘சிரீ சிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ எனும் அமைப்பினரும், பா.ஜ.க வின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் மிலிந்த் ஏக்போட் என்பவரின் ‘சமஸ்த் இந்து ஆகாடி’ எனும் அமைப்பினரும்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என எல்கார் பரிசத் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இரு தரப்புக்கும் இடையேயான கல்லெறி வீச்சில் அவ்வழியே சென்ற 28 வயது இளைஞர் ஒருவர் இறந்தார்.

2014 தேர்தலின்போது நரேந்திர மோடி மனோகர் பிதேயைச் சந்தித்து “குருஜி” என விளித்ததை இன்று ஊடகங்கள் நினைவூட்டுகின்றன. இந்தக் கலவரத்திற்குக் காரணமானவர் என இன்று தலித் மக்களால் குற்றம் சாட்டப்படுகிற மனோகர் பிதேயின் மீது இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவரைக் குற்றமற்றவர் என அறிவித்தார். கலவரத்திற்குக் காரணமான இன்னொருவரான மிலிந்த் ஏக்போடே கைது செய்யப்பட்டாலும் விரைவில் அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பீமா கரேகான் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் இல்லை எனவும் குறிப்பாக மனோகர் பிதேக்கும் கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. தலித்கள்தான் காரணம் எனச் சொல்ல இயலாதாகையால் தலித்கள் மத்தியில் மாஓயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர் என இன்று பா.ஜ.க அரசு சொல்கிறது.. ஆனால் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ளவரும் தேவேந்திர பட்நாவிஸ் அமைச்சரவையில் முத்த அமைச்சராக உள்ளவருமான தலித் தலைவர் ராம்தாஸ் அதாவலே இதை மறுக்கிறார். மனோகர் பிதேதான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் எல்கார் பரிஷத்தில் மாஓயிஸ்டுகள் ஊடுருவிவிட்டதாகச் சொல்வது பொய் எனவும் அதாவலே கூறுகிறார். இதைச் சுட்டிக் காட்டி, “அமைச்சரவைக்குள் ஏன் இந்த முரண், எது உண்மை?” என இன்று காங்கிரஸ் கேட்கிறது. பா.ஜ.க மௌனம் காக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்று டெல்லி, மும்பை, நாக்பூர் முதலான இடங்களில் ஐந்து பேர்களை மாஓயிஸ்டுகள் எனவும் அவர்களே பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான ரோனா வில்சன் டெல்லியில் தங்கியுள்ள வீட்டைச் சோதனை இட்டபோது அவரது லேப்டாப்பில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லும் ஒரு சதித் திட்டம் தொடர்பான கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் ஒரு பரபரப்புச் செய்தியும் கூடவே வெளியிடப்பட்டுள்ளது., ராஜீவ் காந்தியைக் கொன்றது போல மோடியையும் கொல்வது என்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாம்.

இன்று நாடெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்செய்தியை நம்புவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில் இன்று பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் ஐவரும் மிக வெளிப்படையாக இயங்கியவர்கள். கேரளத்தைச் சேர்ந்த ரொனா வில்சன் டெல்லி JNUவில் ஆய்வை முடித்துவிட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர். இவர் பீமா கொரேகானுக்குப் போனதுகூட இல்லை. ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கம்’ என்கிற அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தவர். நான் அவரை அறிவேன். மிகவும் மென்மையான மனிதர். இவ்வளவு படித்த ஒருவர் ஒரு பிரதமரைக் கொல்வது தொடர்பான சதித் திட்டத்தில் உண்மையிலேயே தொடர்புடையவராக இருக்கும் பட்சத்தில், அக்கடிதத்தை இப்படி அலட்சியமாகத் தன் லேப் டாப்பில் வைத்திருப்பார? இன்று எவ்வளவோ நவீனத் தொடர்பு வசதிகள் இருந்தும் ஒரு இயக்கம் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஒரு கடிதத்தை அனுப்பும் என்கிற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை.

மாஓயிஸ்ட் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இன்னொருவர் மஹேஷ் ராவ்த் : மும்பையில் உள்ள ‘சமூக அறிவியல்களுக்கான டாடா நிறுவனத்தில் (TISS) பயின்றவர். ‘பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஆய்வாளராக’ (PMRD) கட்சிரோலி பகுதியில் இருந்து செயல்பட்டவர். அரசு அல்லது கார்பொரேட் நடவடிக்கைகளால் இடப்பெயர்வுகளுக்கு ஆளான பரிதாபத்திற்குரிய மக்களுக்காகப் போராடும் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர். இவருக்கும் பீமாகொரேகான் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கைது செய்யப்பட்ட இன்னொருவரான ஷோமா சென், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியை. பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இருந்து செயல்படுபவர். ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPDR) எனும் முக்கிய மனித உரிமை அமைப்பில் இருந்து செயல்படுபவர். ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் என்ற போதிலும் ஒரு ஆய்வாளர் என்கிற வகையில் மாஒயிஸ்டுகள் குறித்த விமர்சனங்களும் அவருக்கு உண்டு என்கிறார் அவரது மகள் கோயல். கைதாகியுள்ள வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் ‘இந்திய மக்கள் வழக்குரைஞர் சங்கம்’ ( IAPL) எனும் அமைப்பில் உள்ளவர். மாஓயிஸ்ட் என இப்போது தண்டிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கை நடத்திக் கொண்டுள்ளதுதான் இவர் செய்த குற்றம்.

கைது செய்யப்பட்டுள்ள சுதிர் தவாலே புனேயைச் சேர்ந்த கவிஞர். ‘விக்ரோதி’ என்கிற மராத்திய இதழ் ஒன்றின் ஆசிரியர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மாஓஇஸ்ட் எனக் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகாலம் சிறையில் இருந்தவர். இவர்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் எல்லாமே மாஓயிஸ்ட் இயக்கங்கள் என அரசு சொல்கிறது. மாஒயிசச் சார்பு அவற்றில் சிலவற்றிற்கு இருக்கிறது என வைத்துக் கொண்டாலும் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக இயங்கியவர்கள். வன்முறை நடவடிக்கைகளிலோ ஆயுதப் போராட்டங்களிலோ ஈடுபட்டவர்கள் அல்ல. பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் பேரர் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி முதலான தலித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உருவாகிவரும் தலித் + இதர பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் + இடதுசாரிகள் எனும் ஒற்றுமையை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், பீமா கொரேகான் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள படேல் கமிஷனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே இந்தக் கைது நாடகம் நடத்தப்படுகிறது என இவர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி முதலானவையும் இக் கைதுகளைக் கண்டித்துள்ளன. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று மோடியைக் கொல்வது தொடர்பாகக் கண்டெடுக்கப்பட்ட கடிதமே போலியாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

இடைத் தேர்தல்களில் பா.ஜ.க தோற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்படி மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கதை கட்டி அனுதாப அலையை உருவாக்கும் முயற்சி இது எனவும் காங்கிரஸ் சொல்லியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளுக்குப் பின் மோடியின் பிம்பம் கொஞ்சம் குலைந்தபோது 2003 -2007 காலகட்டத்தில் இதேபோல மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பெரிய அளவில் செய்திகள் பரப்பியதையும், கொல்ல வந்தவர்கள் எனச் சொல்லிப் பல என்கவுன்டர் கொலைகள் செய்யப்பட்டதையும், பின்னர் அவை போலி என்கவுன்டர்கள் எனப் பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது. “மோடி வகுத்தளித்த கொள்கையின்படியே இந்த என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன” எனச் சிறையிலிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி டி..ஜி.வன்சாரா எழுதிய கடிதத்தையும் மறந்து விட இயலாது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 2003 ஏப்ரல் தொடங்கி 2014 ஏப்ரலுக்குள் மோடியைக் கொல்வதற்கு ஐந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டதையும் சமூக ஊடகங்கள் சுட்டிக் காட்டி உள்ளன.

பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்றால் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தட்டும். இப்படி மக்கள் பணி செய்யும் பேராசிரியர்கள், கவிஞர்கள், மனித உரிமைப் போராளிகளை எல்லாம் அப்படிப் பொய்க் குற்றம்சாட்டிக் கைது செய்வதும், ஒருவரது வீட்டில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் ஒன்று இருந்தாலே அவர் ஒரு மாஓயிஸ்ட் தீவிரவாதி எனச் சொல்லி UAPA முதலான கொடுஞ் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைப்பதையும் ஏற்க முடியாது.

நாடு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்வதைத்தான் இவை அனைத்தும் காட்டுகின்றன.

இந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 17   (தீராநதி, ஜூன் 2018)                    

எந்தச் சம்பாபதிக் கோவிலுள் நுழைந்து மணிமேகலைத் தன் உருவை மாற்றிக் கொண்டாளோ அந்தக் கோவிலில் உறையும் தெய்வத்திடமே அவள் எப்படித் தன் சிவந்த இதழ்கள், முத்துப் பற்கள், வில்லொத்த புருவங்கள், பல்வகைக் கோணங்களுடன் செழித்த மேனி, கூர்நுனி முலை முதலான உறுப்பழகுகளால் தன்னை வசப்படுத்தி வீழ்த்தினாள் எனப் புலம்பிய இளவரசன், “மதியொத்த முகத்தாள் மணிமேகலையின்றி இவ்விடம் அகலேன்” எனச் சூளுரைத்து அதன் காலடியில் வீழ்ந்தான். அதைக் கேட்ட சித்திரப் பாவை ஒன்று இப்படி இம்மூத்தோள் முன் அவன் ஆராயாது “நாவறுமையுற்று” வஞ்சினம் கூறியதைக் கடிந்தது.

அள்ள அள்ளக் குறையாது அமுது சுரக்கும் பாத்திரம், செங்கோல் காட்டி அறமுரைத்த தெய்வம், பேசும் சித்திரம் எனத் தன்முன் விரிந்த வியப்புகளால் சற்றே நிலைகுலைந்த இளவரசன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவ்விடம் விட்டகன்றான்.

மணிமேகலையோ இரந்துண்டு வாழ நேர்ந்த ஆற்றா மக்களுக்காகப் பிறரிடம் ஏற்றலும் பின் அதை அந்த மக்களுக்கு அளித்தலும் நமைப்போன்ற பிக்குணியர் கடமை என அப்படியான ஆற்றா மக்களை நாடி அலைந்தவள். குற்றமிழைத்தோரை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைக்குச் சென்று ஆங்கே பசியுற்றுக் கிடந்த மக்களின் பசியாற்றி நின்ற காட்சி சிறைக்காவலர்களுக்கு வியப்பளித்ததையும், அவர்கள் ஓடி அச் செய்தியை அரசர்க்குரைத்ததையும், அரசன் வியந்து அவளை அழைத்து உரையாடியதையும், பின் அவள் விருப்பைக் கேட்டு அதன்படி சிறைச்சாலையில் இருந்தோரை விடுதலை செய்து அச்சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதையும் அறிவோம்.

அந்தக் காதையில் பெரும்பகுதி மன்னனின் அந்த உல்லாசப் பூம்பொழிலின் அழகைச் சித்திரிப்பவையாக அமையும். ஒரு பக்கம் இப்படியான உல்லாசங்கள், செழிப்புகள் இன்னொருபக்கம் ஏழ்மை, வறுமை, பசித்துயர், சிறைச்சாலைகள், குற்ரவாளிகள் என்பதாக உலகம் பிளவுபட்டுக் கிடப்பதை மணிமேகலை சொல்லிக் கொண்டே போகும்.

மன்னன் தன்னை யார் எனக் கேட்டபொது, “விஞ்சை மகள்யான்” என அறிமுகம் செய்துகொள்வாள் மணிமேகலை. இந்த விஞ்சையன், விஞ்சைமகள் முதலான சொற்கள் கல்வியிற் சிறந்த, வித்தைகள் அறிந்த ‘வித்தியாதரர்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையாக மணிமேகலையில் பாவிக்கப்படுகிறது. கல்வியிற் சிறந்த எனும் பொருளோடு சற்றே அற்புத வித்தைகள் கைவரப் பெற்றோர் என்கிற பொருளும் இதற்குண்டு. காயசண்டிகையும், அவள் கணவனான காஞ்சனனும் அவ்வாறே விஞ்சையர்கள். கற்றறிந்தவர்கள் மட்டுமின்றி  பறந்துசெல்லும் வித்தையையும் அதற்கான மந்திரத்தியும் கைவரப் பெற்றவர்கள்.

அரசன் அழைத்து மணிமேகலை வந்துசென்றது, அவள் வேண்டுகோளின்படி சிறையில் வாழ்ந்த மனிதர்கள் விடுதலை செய்யப்பட்டு அது அறவோர் தங்கும் பள்ளியாக மாற்றப்பட்டது எல்லாவற்றையும் உதயகுமாரனும் அறிந்தான். எனினும் அறிந்தோர் நகைத்தாலும், மன்னவன் காய்ந்தாலும் அவளைப் பற்றியே தீருவேன் எனத் தேரேறி அவள் இருக்கும் உலகவறவியை அவன் அடைந்த அதே நேரத்தில் அங்கு தன் மனைவி காயசண்டிகையைத் தேடிக் காஞ்சனனும் வந்திறங்கினான். அந்தப் பொதியமலை முனி தன் மனைவிக்கு இட்ட சாபம் முடியும் காலமாகிய பன்னிரண்டாண்டுகளும் ஆகிவிட்டன, ஏன் இன்னும் அவள் வரவில்லை எனத் தேடி அவன் பொது இடங்கள் பலவற்றிலும் திரிந்தான்.

சாத்தனார் படைத்துள்ள ஒரு அருமையான பாத்திரம் இந்தக் காஞ்சனன். விழுமிய அறிவுடையோன் மட்டுமின்றி மனைவி மீது நிறைந்த அன்புடையவன். அவள் தன் தீவினையின் விளைவாய், விருச்சிக முனிவனின் சாபத்தால் யானைப்பசி நோய்க்கு ஆளான கதையை அறிவோம். கனிகள், காய்கள் என காஞ்சனன் எதை எதையோ கொண்டுவந்து ஊட்டினும் அவள் பசி தீராமையைக் கண்டு  துடித்துப் போகிறான். அவள் பறக்கும் மந்திரத்தையும் மறந்து போனாள் என்பதை அறிந்து அவன் கலக்கம் மிகுதியாகிறது. வேறு வழியின்றி அவளைப் புகார் நகர் வரை நடந்து சென்று அங்கு செல்வந்தர்கள்பால் உணவு பெற்று வாழுமாறு அறிவுறுத்திச் செல்வான். ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக இந்திரவிழா அன்று பறந்து வந்து மனைவியைக் கண்டு வேதனையுடன் பிரிந்து செல்வான். பன்னிரண்டாண்டுகள் எப்போது முடியும் எனக் காத்திருந்த அவனுக்கு, அது முடிந்தும் அவள் வராதத்தைக் கண்டு கலங்கி அவளைத் தேடி வந்து பொதுமக்கள் கூடும் இடமெல்லாம் அலைகிறான்.

அங்கே காயசண்டிகையைக் கண்டதும் அல்லாமல் அவள் தன் பசி நீங்கியதோடு உலகோர் பசி தீர்த்துக் கொண்டிருந்ததையும் கண்டு வியப்புற்றான். காயசண்டிகை வடிவில் இருப்பது மணிமேகலை என அறியாமல், “ஆனைத்தீ நோய் அரும்பசி அகற்ற வானோர் யாரும் அருளினரோ இதை?” என அவளிடம் பழைய அன்புடன் கேட்டான்.

தன்னை அவன் தன் மனைவி என நினைத்துக்கொண்டு பேசுவதைக்கண்டு சங்கடத்துக்குள்ளானாள் மணிமேகலை. ஆனால் என் செய்வது. அவளால் அக்கணம் உண்மையை உரைக்க இயலாது. அருகே ஏற்கனவே மணிமேகலையைத் தேடி உதயகுமாரன் வந்து நின்றிருந்தான். ஒரு மிக நுணுக்கமான நாடகக் காட்சியாய் இதை வடித்திருப்பார் பெருங்கவி சாத்தனார்.

தவறாகப் புரிந்து கொண்டு அணுகும் காஞ்சனனையும் சமாளிக்க வேண்டும். உதயகுமாரனையும் எச்சரித்தாக வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் காஞ்சனனிடமிருந்து அகன்று உதயகுமாரன் பக்கம் சென்று அங்கே நின்றிருந்த ஒரு வயதான மூதாட்டியைக் காட்டி,

“வெண்மணல் போல் நரைத்த கூந்தல், தோல் திரைந்த நெற்றி, இறால் கருவாடுபோலச் சுருங்கிய புருவங்கள், வழுநீர் சுமந்த கண்கள், சீ வடிகிற மூக்கு, தெற்றி அழகிழந்த சுரை விதை போன்ற பற்கள், வற்றலைப்போல் தொங்கும் காதுகள் முதலான அவளது உறுப்புகளைப் பார்.

இறும்பூதுடன் மதர்த்து நின்ற முலைகள் இன்று வெற்றுப்பை போல் தொங்குகின்றன; வாழைத் தண்டு போல விளங்கிய தொடைகள் தாழைத் தண்டுபோல வற்றிக் கிடக்கின்றன; பூக்களாலும், வாசனைச் சாந்துகளாலும் புலால் நாற்றத்தை மறைத்துக் கட்டுப்படுத்தி, ஆடை அணிகலன்களால் அழகுபடுத்தி முன்னோர் வகுத்துவைத்த வஞ்சகம்தான் இந்த யாக்கையின் அழகு என அறிவாய் இளவரசே” – என அறிவுறுத்தி நின்றாள் காயசண்டிகை எனும் காந்தர்வ உருவத்தில் நின்ற மணிமேகலை.

பின்னாளில் பெண்ணுடல் மீது வெறுப்பைக் கக்கி எழுதப்பட்ட சித்தர்பாடல்களுக்கு ஒரு முன்னோடியாய் அமைகின்றன இவ்வரிகள். எனினும் இது ஒரு நாடகக்க காட்சியாய்த்தான் விவரணம் கொள்கிறதே ஒழிய சித்தர் பாடல்களைப்போலப் பெண்வெறுப்பை முன்னிறுத்தி உரைக்கப்படவில்லை.

மணிமேகலை உதயனுக்கு அறிவுரைக்கும் இந்தக் காட்சி அங்கிருந்த இரு ஆடவர்கள் மத்தியிலும் இரு வேறு எண்ணங்களுக்குக் காரணமாயிற்று.

“தன்னைப் பாராட்டும் என் சொற்களை ஏற்காதவளாகவும் உள்ளாள்; அதே நேரத்தில் பிறன் பின்னும் செல்கிறாள்; என்னைப் பிறன்போலும் பார்க்கிறாள்; மன்னன் மகனுக்கு முது மொழிகளையும் எடுத்துரைக்கிறாள்; அதே நேரத்தில் அவளது சிவந்த கண்களும் முத்துப் பற்களும் அவன்பாற் காதற் குறிப்பைக் காட்டுகின்றன…” எனக் குழம்பிய காஞ்சனன் பகை கொண்ட நெஞ்சினனாய் ஒரு பக்கமாய் மறைந்து ஒளிந்து நின்றான்.

இன்னொரு பக்கம் உதயகுமாரனோ அவளைக் காயசண்டிகை உருவில் மறைந்துள்ள மணிமேகலை எனக் கண்டு கொண்டான். எனினும் பழங்கதை பேசிய இந்தப் புதியவன் யார் எனக் குழம்பினான். இந்த இரவில் அவள் அந்தப் புதியவனுடன் ஓடிவிடுவாள் எனவும் அவனுக்குத் தோன்றவில்லை. இருக்கட்டும் நள்ளிரவில் வந்து இவள் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம் என எண்ணி அகன்றான்.

ஊரே உறங்கிக் கிடந்த யாமத்தில் யானை வேட்டைக்குக் கிளம்பிய புலிபோல மணிமேகலை இருந்த அம்பலத்திற்கு வந்த உதயன் சீறிவரும் விஷ நாகம் ஒன்று புற்றுக்குள் நுழைவதுபோல உள்ளே நுழைந்தான். கர்மவினை அவனை அப்படி அங்கு இட்டுச் சென்றது..

அவனுக்கு முன்பே அங்கே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த காஞ்சனன், “இவன் அவளைத் தேடி வந்தான்” எனப் பெருஞ்சினம் கொண்டெழுந்தான். விஷப் பல் வெளித் தெரியப் படமெடுத்து வரும் ஒரு பாம்பு போல் உதயனின் பின்புறமாகச் சென்று, அவன் தோளைத் தன் வாளால் துண்டித்து வீழ்த்தினான்.

காயசண்டிகையைக் கைக்கொண்டுப் பறந்து செல்வேன் என அவளுருவில் இருந்த மணிமேகலைத் தேடி ஓடிய விஞ்சையனை அந்த அம்பலத்தின் நிலையில் தேவதச்சனான மயன் வரைந்திருந்த கந்திற்பாவை எச்சரித்தது. “அவளை அணுகாதே காஞ்சன! அவள் மணிமேகலை. உருமாறி மறைந்துள்ளாள்” என அவனுக்கு ஒரு பேரதிர்ச்சியையும் அளித்தது. அத்தோடு முடியவில்லை. அவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சியும் காத்திருந்தது. கர்மவினையின் பயனாய் காயசண்டிகைக்கு நேர்ந்த துயர முடிவுதான் அச்செய்தி. அமுதசுரபியில் விளைந்த அன்னத்தை உண்டு தன் கடும்பசியிலிருந்து விடுபட்ட காயசண்டிகை, பிரிந்திருந்த தன் கணவனைப் பார்க்கும் துடிப்பில், தனக்கு மீளக் கிடைத்த பறக்கும் திறனால் வானில் எழுந்து விரைந்தாள். அவள் சென்ற வழியில்தான் விந்திய மலை உள்ளது, அம்மலையைக் காக்கும் அந்தரியான விந்தா கடிகை அதன் உச்சியில் உறைகிறாள். பறக்கும் வரமுள்ளவர்கள் அம்மலையின் உச்சியின் மீது பறந்து கடப்பது வழமையல்ல. அப்படி யாரேனும் கடக்க நேர்ந்தால் பொங்கிச் சினம் கொள்ளும் விந்தாகடிகை அவர்களை ஈர்த்துத் தன் வயிற்றினுள் அடக்குவாள். பிரிந்த கணவனைச் சந்திக்கும் ஆவலில் உச்சிமீது பறந்த காயசண்டிகையும் அப்படி அவள் வயிற்றினுள் அடங்கிவிட்ட சோக வரலாறுதான் காஞ்சனனுக்குக் கிடைத்த அந்த இன்னொரு பேரதிர்ச்சி.

“காஞ்சன ! கைம்மை (சிறுமை) கொள்ளாதே. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.. அது இங்கு உதயகுமாரனின் உயிரை உண்டது. ஆனால் விஞ்சயனான காஞ்சன நீயும் ஆராயாமல் ஒரு கொடிய தீவினையைச் செய்தாய். அவ்வினை உன்னை வந்து அகலாமல் பற்றும்” -என அத் தெய்வம் கூறியது. அது கேட்ட விஞ்சையன் துயருற்றதோடு, கடுவினை பற்றிய நெஞ்சத்தோடு. பறந்து அகன்றான்.

மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்ட கிளைக் கதைகளில் நம் நெஞ்சைப் பிழியும் இன்னொரு சோகக் கதை இது. அவன் விஞ்சையன். அவளும் விஞ்சையள். அறிவிற் சிறந்தவர்கள். வித்தைகள் அருளப்பெற்ற காந்தர்வர்கள். காஞ்சனனைச் சொல்லும் போதெல்லாம் வித்தியாதரன் எனப் பொருள்படும் விஞ்சையன் எனச் சாத்தனார் சொல்லத் தவறுவதில்லை. அறிஞனான அவனும் ஆராயாமல் ஆத்திரம் கொள்கிறான். கொலைப் பழிக்கு ஆளாகிறான். ஊழ்வினை உதயகுமாரனைக் கொன்றது. கொன்றவனையும் அச்செயலூடாக இன்று ஊழ்வினை பற்றுகிறது. கர்ம வினையை எவரும் அனுபவித்தே ஆக வேண்டும். கர்ம வினை என்பதை இந்திய மதங்கள் பொதுவில் ஏற்றுக் கொள்கின்றன. ஆன்மா என்பதை ஏற்பதிலும் மறுப்பதிலிலும்தான் வைதிகமும் பௌத்தமும் வேறுபடுகின்றன.

மணிமேகலைக் காப்பியம் முழுவதும் இப்படியான கர்மவினை குறித்த கரிசனம் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதன் பொருளென்ன? எல்லாம் நம் திட்டப்படி நடப்பதில்லை. நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயல்படும் உலகில் வாழும் நாம் அது குறித்த பிரக்ஞையோடிருத்தல் அவசியம். அந்தப் பிரக்ஞை நாம்மை எப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் அப்படியான எச்சரிக்கையோடு செய்யப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை இல்லாமல் நடந்துகொண்டதன் விளைவாகவே காயசண்டிகை அந்தக் கொடுஞ் சாபத்திற்கு ஆளாக வேண்டிற்று. உதயகுமாரனின் மரணம் எப்படி நிகழ்கிறது? அவன் கர்மவினை அதற்குக் காரணமான போதிலும் இன்னொரு பக்கம் காஞ்சனன் ஆராயாமல் செய்த வெவ்வினை கர்ம விளைவுகளைச் சுமந்த ஒரு தீவினையாய் அக்கொலை மூலம் அவனைச் சூழ்கிறது.

நமக்கு அப்பாற்பட்டு இயங்கும் இச்சக்திகள் குறித்த பிரக்ஞை ஒருவரை அறவாழ்வுக்கு இட்டுச் செல்ல வேண்டும்; நம்முடைய எந்தச் செயலும் யாருடைய துயரத்திற்கும் காரணமாகிவிடக் கூடாது என்கிற பிரக்ஞை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணமும் தேவை என்பதைக் காப்பியம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. மானுடத் துயர்கள் குறித்த பிரக்ஞையுடன் நம்மை வாழ அது அறிவுருத்துகிறது.

காஞ்சனன் வித்யாதரன் மட்டுமல்ல. அவன் தன் மனைவியின்மீது தீராக் காதலுடையவன் என்பதையும் அறிவோம். சாப காலம் முடிந்தவுடன் மனைவியைச் சந்தித்து அள்ளிச் செல்ல வந்தவனுக்கு அவளை இனி சந்திக்க இயலாமலேயே போய்விடுகிறது. அதுமட்டுமல்ல அவன் மீண்டும் ஒரு கொலைப் பழிக்குக் காரணமாகிக் கரும வினைக்கு ஆளாகிறான்.

காயசண்டிகையும் நாம் இந்தக் காப்பியத்தில் சந்திக்கும் இன்னொரு சோக நாயகி. அவளும் வித்தைகள் அறிந்த வித்யாதரிதான். எனினும் அவள் செய்யும் ஒரு குறும்பு அவளை முனிவனின் கொடும் சாபத்திற்கு ஆளாக்குகிறது. சாப காலம் முடிந்து கணவனைக் காண ஆவலோடு பறந்தவளும் வினைக்கு ஆளாகிறாள்.

ஒரு நாயகியை மையமாகக் கொண்ட காப்பியம் மணிமேகலை. உதயகுமாரனைக் காப்பிய நாயகன் எனச் சொல்வதற்கில்லை. அவன் ஒரு எதிர்மறை நாயகனாகவே படைக்கப்படுகிறான். அவனது துயர மரணம் இங்கே காப்பியச் சோகமாக விரியவில்லை. ஆனால் அவனைக் கொலை செய்தவனின் முடிவு இங்கு பெருஞ் சோகமாய் விரிகிறது.

(அடுத்த இதழில்: காப்பியத்தின் இரண்டாம் பாகம்)

 

 

 

 

 

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:உண்மை அறியும் குழு அறிக்கை

NCHRO   National Confederation of Human Rights Organizations

Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal,New Delhi – 110014. Tel: 011-40391642 Mob: 94898 71185, 96 00 222 930,Email: nchromail@gmail.com, www.nchro.org. 

ஜூன் 5,2018;                                                                                                                                                                                           சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்புக்ளை ஏற்படுத்தி சுற்று வட்டார மக்களின் உயிருக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படுத்தி வருவதற்கு எதிராக அப்பகுதி மக்கள், அந்த ஆலையை மூடக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அந்த ஆலை இப்போது விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ஆலையை மூடுவதற்கான மக்கள் போராட்டம் தீவிரமானது. தற்போது தொடங்கிய போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி மே 22 அன்று மக்கள் ஊர்வலமாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக அறிவித்ததை ஒட்டி அரசு 144 தடை உத்தரவை இட்டது. தடையை மீறிச் சென்று முற்றுகையிட்டுக் கைதாவது என மக்கள் சென்ற போது அன்று முற்பகல் 11.30 மணி அளவில் காவல்துறை மக்களை நோக்கிச் சுட்டது. அன்று இரண்டு முறையும், அடுத்த நாள் ஒரு முறையும் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிப் பிரயோகத்தில் இப்போது 14 பேர்கள் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச்சுடு இது. இது குறித்த உண்மைகளை அறிய ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, இக்குழு சென்ற ஜூன் 27,28 தேதிகளில்தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள கிராமங்கள் சிலவற்றிற்கும் நேரில் சென்று பலரையும் சந்தித்தோம்..

குழுவில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

ரெனி அய்லின், தேசியச் செயலாளர், NCHRO, திருவனந்தபுரம்,

வழக்குரைஞர் ப.பா.மோகன், மாநிலத் தலைவர், NCHRO, கோவை,

வழக்குரைஞர். என்.எம்.ஷாஜஹான், மாநிலப் பொதுச் செயலாளர், NCHRO,

வழக்குரைஞர். சென்னியப்பன், மனிதம் சட்ட உரிமை,

இரா.பாபு, அம்பேத்கர் சட்ட ஆதாரமையம், கடலூர்,

வழக்குரைஞர். உதயணன். மதுரை,

அஹமது நவவி, NCHRO, திருநெல்வேலி,

வழ. அப்துல் காதர், NCHRO, மதுரை,

அப்துல் காதர், மனித உரிமை ஆர்வலர், தூத்துக்குடி,

வழக்குரைஞர். எம்.கே.நஜ்முதீன், NCHRO, மதுரை,

வழக்குரைஞர். பி.பொன்ராஜ், NCHRO, மதுரை.

இக்குழு சென்ற மே 27, 28 தேதிகளில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், துப்பாக்கிக் குண்டுக் காயம் மற்றும் காவல்துறையின் தடியடிப் பிரயோகத்தில் எலும்புகள் முறிந்து இன்னும் சிகிச்சையில் உள்ளோர், அன்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களில் சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டுள்ள வழக்குரைஞர்களில் சிலர், காயம் பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், துப்பாக்கிச் சூடு நடந்த அன்று களத்தில் இருந்த மக்களில் பலர், தொடர்ந்து அ.குமாரெட்டிபுரத்தில் ஆலையை மூடும்வரை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து கொண்டுள்ளவர்கள், தூத்துக்குடி வரலாற்றறிஞர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி முதலானோரைச் சந்தித்து உரையாடியது. மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்தூர்ராஜன் முதலானோரை தொலை பேசியிலும் தொடர்பு கொண்டது காவல்துறை கண்காணிபாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்றபோது சந்திப்பதாகச் சொல்லி எங்களைக் காத்திருக்கச் சொன்ன அவர் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் சந்திக்க மறுத்து விட்டார்.sterlite-sniper

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைப் போராட்டம்: இந்த அறிக்கை தூத்துக்குடியில் சென்ற மே 22, 23 தேதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த உண்மைகளையே பிரதானமாகத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. எனினும் சுருக்கமாக இந்த ஆலை மற்றும் இன்றைய போராட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம். 1994 முதல் இங்கு இயங்கும் இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை பன்னாட்டு கார்பொரேட் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட்டின் கிளை அமைப்புகளில் ஒன்று. பொதுவில் தாமிர உருக்காலைகள் கடும் சுற்றுச் சூழல் தீங்குகளை விளைவிப்பவை என்பதால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தாமிரத் தாது ஏராளமாக இருந்தபோதும் அங்கு உருக்காலைகளை அவை அனுமதிப்பதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அங்கிருந்துதான் கப்பல்களில் மூலத் தாதுக்கள் கொண்டுவரப்படுகின்றன. 1993 ல் இந்நிறுவனம் இந்த உருக்காலையை மகாராஷ்டிரத்தில் தொடங்க இருந்தபோது அங்குள்ள மக்கள் இந்தக் காரணங்களுக்காக அதை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அது தமிழகத்தை அப்[போது ஆண்ட ஜெயலலிதா அரசை அணுகி அனுமதி பெற்று தூத்துக்குடியில் இந்த ஆலையைத் தொடங்கியது. அதன் கழிவுகளின் ஊடாக வெளிப்படும் நச்சுக்கள் விளைவிக்கும் ஆபத்துகளை அனுபவரீதியாக உணர்ந்த மக்கள் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்க்கத் தொடங்கினர். ஆண்டொன்றுக்கு நாலு இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை விதிமுறைகளையும் ஒத்துக் கொண்ட கடப்பாடுகளையும் மீறியுள்ளதைப் பலமுறை பாசுமைத் தீர்ப்பாயம் முதலான அரசு நிறுவனங்களும், சுற்றுச் சூழல் அமைப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஏராளமான தகவல்கள் போராடும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த ஆலையின் உற்பத்தியை இரண்டுமடங்காக்கி விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள சூழலில் மூன்று மாதங்களுக்கு முன் தற்போதைய போராட்டம் தொடங்கியது

அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள எட்டு கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு ஈயத் தாது கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. ஆலையைச் சுற்றியுள்ள மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர்  கெட்டுள்ள உண்மையை தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ உடனடியாக வெளியிட்டு மக்களை எச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமே தாங்கள் இதைத் தெரிந்து கொண்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் எங்களிடம் தெரிவித்தார்.

இப்படியான சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளைச், சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமைப் பட்டி வளர்க்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகிறது. ஆனால் வெறும் 25 மீட்டர் பசுமைப் பட்டி அமைத்தால் போதும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சலுகை அளித்துள்ளது எனவும், அதையும் கூட அது சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும் நித்யானந்த் கூறினார். இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலை இப்போது தன் உற்பத்தியை ஆண்டுக்கு எட்டு இலட்சம் டன் தாமிரத் தகடுகள் என இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்கியது. இதை ஒட்டி சென்ற பிப்ரவரி யில் இந்த இறுதிக் கட்டமக்கள் போராட்டம் தொடங்கியது.

மாசுபட்ட காற்று மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் விளைவாகப் புற்று நோய் உட்படப் பல்வகை நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் நாங்கள் சென்றபோதும் ஆலையை மூடும்வரை போராடுவோம் எனத் தொடர்ந்து அ.குமரெட்டிபுரத்தில் மக்கள் அமர்வுப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்த எங்கள் குழு மே 28 அன்று காலை அங்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த பெண்களின் சார்பாகப் பேசிய வள்ளிமயில், தங்களில் பாதிப்பேருக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது எனவும், கருச்சிதைவு, குழந்தையின்மை ஆகியன அதிக அளவில் அப்பகுதியில் உள்ளதாகவும் கூறினார்.

“விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள் எல்லாருமே பாதிக்கப்படுறோம். இந்த நிலையில் இன்னும் பெருசா ஆலையை விரிவாக்கம் பண்ணுனா நாங்க என்ன ஆகுறது.? ஆலைப் பக்கம் போய் (விரிவாக்க) வேலை தொடங்கி இருக்குறதை எல்லாம் பாத்துட்டு ஆலையை விரிவாக்கக் கூடாதுன்னு முதல் கட்டமா எங்க ஊரில்தான் பிப்ரவரி 12 அன்னிக்குப் போராட்டத்தைத் தொடங்கினோம். அதுக்கு நல்ல ஆதரவு எல்லா ஊர்களிலும் இருக்கிறதப் பார்த்துட்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினோம். மூணு மாசம் முன்னாடி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமாத்தான் இது தொடங்குச்சு. இருட்டுன பிறகும் நாங்க எழுந்து போகாம அங்கேயே இருந்தோம். போலீஸ் கலையச் சொன்னபோதும் போகல. அடுத்த நாளMGR பூங்காவுல நுழைந்து உட்காரப் போனோம். நுழைய விடலை. அப்புறந்தான் இது நூறுநாள் போராட்டமா மாறுச்சு இங்கேயே உட்கார ஆரம்பிச்சோம்.. ஏபரல் 9 சாலை மறியல்; ஏப் 23 மாசு கட்டுப்பாட்டு வாரிய முற்றுகை, மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என அறிவிச்சோம். இதுக்கு நடுவுல பத்து தடவை கலெக்டரைப் பார்க்கப் போனோம். அவர் பார்க்க மறுத்துட்டாரு.”

தேதிவாரியாக அந்தப் போராட்ட வரலாற்றை அம்மக்கள் நெஞ்சில் ஏந்தியுள்ளனர். தங்கள் கண்முன் ஸ்டெர்லைட் நிர்வாகம் பெரிய ‘போர்’  கிணறுகளைப் போடுவதைப் பார்த்த அம்மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாயினர். ஏற்கனவே நிலத்தடி நீர் வற்றியுள்ள சூழலில் இந்தப் புத்திய விரிவாக்க முயற்சி முற்றிலுமாக நிலத்தடி நீர் வற்றுவதற்குக் காரணமாகும் என அஞ்சினர். பெரிது பெரிதாக வந்திறங்கும் கருவிகள் அவர்களின் அச்சத்தை அதிகமாக்கிய பின்னணியில் தான் பிப்ரவரி 12 அன்று  மிகவும் தன்னிச்சையாக அந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.. குமரெட்டியபுர மக்களின் இந்தப் போராட்டத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருகியது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி உட்படப் பல இடங்களிலும் அவ்வப்போது ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு இருந்ததா என நாங்கள் கேட்டபோது, “இது மக்கள் போராட்டம் சார். எந்த இயக்கத்தையும் நாங்க வழிகாட்ட அழைக்கல. பாதிக்கப்பட்டிருக்குற எல்லா ஊர் மக்களும் தானா ஒண்ணு திரண்டாங்க. அரசியல்வாதிகள்.உள்ளே நுழைஞ்சுடக் கூடாதுங்குறதுல நாங்க உறுதியா இருந்தோம்” என்றார் அங்கிருந்த ஒரு இளைஞர். முற்றுகைப் போராட்டத்துக்கு மே 22 காலையில் அவ்வூர் மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது வழி மறித்து அடித்து வேன்களில் ஏற்றப்பட்டனர். அப்போது கடுமையாக அடிபட்டவர் அவர். தன் செல்போனில் எல்லா விவரங்களையும், அவர்கள் கொடுத்த மனுக்களையும் பதிவு செய்து வைத்துள்ளார் அவர்.

22 ஆண்டுகளாகப் பல்வேறு மட்டங்களில் இந்தப் போராட்டம் நடந்தபோதும் வை.கோ போன்ற அரசியல்வாதிகள் ஆதவளித்தபோதும் இப்போதைய இந்த நூறுநாள் போராட்டம் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகை என்பது கிராம மக்களே இணைந்து “ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” என்கிற பெயரில் எந்தக் கட்சி அல்லது இயக்கத்தையும் சாராமல் நடத்திய போராட்டம் இது.

இப்படித் தொடங்கிய போராட்டத்தின் ஊடாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் உருவாயின.

போராட்டம் இப்படித் தீவிரமானதை ஒட்டி சென்ற ஏப்ரல் 9 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட ஆணையிட்டது. எனினும் வழக்கமான சீரமைப்புகளுக்காகவே ஆலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் மீண்டும் அனுமதி பெற்றுத் தாங்கள் செயல்படுவோம் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்லி வந்தது. இவ்வாறு இந்த ஆலை மூடப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 2013 மார்ச் 23ல்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரிலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போதைய துப்பாக்கிச் சூட்டை ஒட்டிக். கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டது. கடந்த 28 அன்று தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து ஆலை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆலை பூட்டப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலை மீண்டும் இயங்கும் என்கிற பொருளிலும் வேதாந்தா நிறுவனம் இப்போது பேசி வருகிறது.

சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்டெர்லைட் நிறுவனம் ICICI வங்கிக் காசோலையின் மூலம் பாஜக விற்கு 15 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதைப் பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளதும் (ஜூ.வி 36: 43) நினைவுக்குரியது. பா.ஜ.க. காங்கிரஸ் முதலான அரசியல் கட்சிகளுக்கு அது தாராளமாக நிதி அளிப்பதற்கும் அது தயங்குவதில்லை.

மே 22,23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகள்: துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்நாள்  மே 21 அன்று மாவட்ட நிர்வாகம் அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் மக்கள் அறிவித்துள்ளபடி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தக் கூடாது எனவும், பதிலாக எஸ்,ஏ.வி பள்ளி வளாகத்தில் கூடலாம் எனவும் மாவட்ட நிரவாகம் தரப்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தைக் காட்டிலும் மிகவும் சிறிய அந்த வளாகத்தில் ஏராளமான மக்கள் எப்படிக் கூட முடியும் என்பது குறித்து நிர்வாகம் சிந்திக்கவில்லை. அதன்  நோக்கமெல்லாம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து ஒரு அமர்வுப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதாகவே இருந்துள்ளது. இப்படியான ஒரு முடிவு திணிக்கப்பட்ட  போதும் அது முறையாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இரவு எட்டு மணிவாக்கில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் உரிய முறையில் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அன்று  (மே 21) நடந்த போராட்டக் குழு கூட்டத்தில் 144 தடையை மீறி ஊர்வலம் செல்வது எனவும், காவல்துறை மறித்தால் கைதாவது எனவும் போராட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி சார்பில் ஐ..ஜி. மகேஸ்வரன் இப்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மே 22 போராட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பில் பேசியபோது அமைதியான முறையில் போராட அவர்கள் சம்மதித்ததாகக் கூறுவது (தினத்தந்தி, சென்னை, ஜூன் 3) குறிப்பிடத் தக்கது. அப்படி மக்களக்சொல்லியும் 144 உத்தரவு தளர்த்தப்படவில்லை. பெரிய அளவில் காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று காலை மக்கள் குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். நகரத்தில் கூடிய மக்கள் பனிமயமாதா கோவில் அருகில் உள்ள வெளியில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மடத்தூர் கிராமத்தில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.

நகரத்துக்குள்ளிருந்து வந்தவர்கள் ஆங்காங்கு போடப்பட்டிருந்த தடுப்பரண்களைத் தாண்டி வந்து கொண்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னாக சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ‘VVD சிக்னல்’ அருகே மக்கள் வந்தபோது அங்கே ஒரு மாட்டின் வாலை முறுக்கி வெறியேற்றி விரட்டிக் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்யப்பட்டதைப் பலரும் எங்களிடம் கூறினர். அப்படியும் கூட்டம் கலையாமலும், தடுத்த காவல்துறையினரைப் பொருட்படுத்தாமலும் முன்னேறியபோது காவல்துறை பின்வாங்கி அவர்களை முன்னேற அனுமதித்தது.

மக்கள் மூணாம் மைல் பாலத்தில் இருந்த தடுப்பு அரண்களளைத் தாண்டி முன் செல்ல செல்ல முற்பட்டபோது காவல் படையினர் பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் பார்க்காமல் மார்பில் கை வைத்துத் தள்ளினர்.     மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.காவல்துறை தாக்கத் தொடங்கியது. இளையோர், முதியோர் என்றெல்லாம் பார்க்காமல் மண்டை ஓடு, கை கால்கள் உடையும் வகையில் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. தடியடியோடு இப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. மக்கள் சிதறி ஓடிய போதும் எப்படியும் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து உட்கார்ந்து விடுவது என ஒரு பகுதியினர் முன்னேறியபோது போலீசார் மீண்டும் பின்வாங்கினர், மக்கள் முன்னேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை எட்டியபோது எந்த எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அப்போது காலை மணி 11.30 இருக்கும்.

இதை மக்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் பல திசைகளிலும் ஓடத் தொடங்கினர். போலீசார் துரத்தி வந்து சுட்டனர். வழக்கமான சீருடையில் இல்லாத, மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த படையினர் சுட்டவர்களில் இருந்தனர். இவர்கள் எதிரிகளைக் குறி பார்த்துச் சுடுவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். மிக நவீனமான கொலை ஆயுதமான ஸ்னிப்பர் துப்பாக்கிகள் அவர்கள் கைகளில் இருந்தன கலைந்து சிதறி ஓடிய மக்களைக் கீழே தள்ளி ஏறி மிதித்து லத்திகளாலும் அடித்துக் கைகால்களை உடைத்தனர்.  .

மக்கள் பயந்தோடி வந்து தங்கள் வீடுக்ளை அடைந்தபின்னும் காவல்துறையினர் ஆயுதங்களுடன் மில்லர்புரம், திரேஸ்புரம் முதலான பகுதிகளில் தொடர்ந்து வந்து சுட்டனர், ஆங்காங்கு நின்று கொண்டு நடந்த கொடுமைகளைப் பற்றிப் பேசிக் கொடிருந்த இளைஞர்களை எல்லாம் அடித்து வேன்களில் ஏற்றி மிதித்துத் துவைத்தனர்., சிறுவர்களாக இருந்தபோதும் கடுமையாக அடிக்கப்பட்டனர், மில்லர்புரத்தில் இருவர் சுடப்பட்டுக் கிழே விழுந்தனர். திரேஸ்புரத்தில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாதபோதும்  . அங்கு இளைஞர்களைக் குறிவைத்துத் தேடி வந்து கண்ணில் பட்ட இளைஞர்களை எல்லாம் அடித்துக் கைது செய்ததோடு எந்தத் தேவையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்ற ஜான்சி (34) எனும் மீனவப் பெண் தலையில் குண்டடிபட்டுச் செத்து வீழ்ந்தார். அவர் போராட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர் என்பது குறிப்பிடத் தக்கது

தொடர்ந்து கடுமையான தேடுதல் வேட்டையும் கைதுகளும் தொடங்கின. பிடிபடாமல் தவிர்க்க ஆண்கள் படகுகளில் ஏறிச் சென்று இரவில் கடலில் தங்கும் நிலை அடுத்த மூன்று நாட்கள் வரை இருந்தது. நள்ளிரவில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்கள், கைதுகள் நடந்தன. பூட்டியிருந்த கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பயந்து ஒளிந்து கொண்டிருந்த இளஞர்கள் அடித்துக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுடப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வேன்களில் ஏற்றிக் கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரண்டாவது நாள் அண்ணா நகரில் திரண்டிருந்த மக்கள் திரளைக் கலையச் சொல்லிச் சுட்ட போது 22 வயது காளியப்பன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார், ஆவரது இறந்த உடலை லத்தியால் அடித்தும் மிதித்தும் “நடிக்கிறியா?” எனக் கேட்டுக் காவலர்கள் பகடி செய்தது பெரிய அளவில் ஊடகங்களில் செய்தியானது.

சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து வந்து மட்டூரில் திரண்டு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற மக்களை வழியிலேயே ஆயுதப் படையினர் வந்து அவர்களை அடித்து வேன்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து ஏற்ற முயற்சித்தபோது தாங்கள் மறுத்து ஒரே வேனில்தான் ஏறுவோம் என ஏறிச் சென்றதாக அ.குமரெட்டியபுர இளைஞர் ஒருவர் கூறினார். ரயில்வே கேட்டைத் தாண்டும்போது வாகனத்தின் வேகம் குறைந்தபோது குதித்து மண்டை அடிபட்ட கருப்பசாமி என்பவரையும் பார்த்தோம்.

மே 25 வரை இப்படியான கொடூரமான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. நாங்கள் வந்த பின்னும் ஆங்காங்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வந்தன.

குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்: நூறுநாள் போராட்டத்தில் முன்னணியில் இருந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் கே. சந்தோஷ்ராஜ் பேரணியில் சக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தபோது தலை உடைக்கப்பட்டு இன்னும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளார். புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் குறிவைத்துச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் தொடர்ந்து போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன். தமிழரசனின் கொலை உறுதியாகக் குறிவைத்துச் செய்யப்பட்டதாகவே கருதப் படுகிறது.

தேடி வந்து தாக்குதல்: திரேஸ்புரம் மீனவர்கள் குறிவைத்துத் தக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற முதல் கட்டத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் அன்று மாலை 3 மணி வாக்கில் திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அப்படியானதுதான்.. முதல் கட்டத் துப்பாக்கிச் சூடு நடந்தபின் தப்பித்தோடித் தங்கள் பகுதியான திரேஸ்புரத்தில் வந்து துப்பாக்கிச் சூட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது முற்றிலும் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன. போராட்டத்தில் தீவிரமாக இருந்த இப்பகுதியில் சிலரையாவது கொல்ல வேண்டும் என்றே வந்து  கொன்றிருக்கிறார்கள்.. கல்லெறிந்தார்கள், தீ வைத்தார்கள் எனவே சுட்டோம் என்றெல்லாமும் கூடக் காரணம் கற்பிக்க இயலாத தாக்குதல்கள் இவை. மே 22 காலை முற்றுகைக்குக் கூட சென்றிராத ஜான்சி (46) அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். காலையில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்துவிட்டுத் திரும்பி வந்து அங்கு நடந்தவற்றை அங்குள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருந்த மீனவர் செல்வம் இடுப்பின் வலதுபுறம் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் உள்ளார்.

வேலைக்குச் சென்றிருந்தவர்கள் சுட்டுக் கொலை : மே 22 செவ்வாய்க்கிழமை என்பது ஒரு வேலை நாள். துப்பாக்கிச் சூடு நடந்தது பலரும் வேலைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில். அதையும் சுட்டவர்களும் அதற்கு ஆணையிட்டவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகினர். பாலிடெக்னிப் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரின்ஸ்டன் (22) த/பெ கிளாட்வின் இப்போது இப்படித்தான் துப்பாக்கிச் சூட்டில் தன் வலது காலை இழந்துள்ளார். தினம் மில்லர்புரத்திலிருந்த தன் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் தன் மோட்டார் சக்கிளை சி.ஐ குடோன் அருகே நிறுத்தி வைத்துவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கிக் குண்டு பட்டுக் கீழே விழுந்தவர் அவர். காலை இழந்ததால் தற்போது சென்னையில் கிடைத்துள்ள ஒரு நல்ல வேலைக்கும் இனி அவர் செல்ல இயலாது. தடியடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சாயர்புரம் செல்வசேகர் (40) தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தவர். அன்று போராட்டத்தை ஒட்டி அந்த நிறுவனம் விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அவரைச் சரமாரியாக லத்தியால் அடித்து வீழ்த்தி ஏறி மிதித்துள்ளனர். அவர் அடுத்த நாள் இறந்தார். அவருடைய தாயும் திருமணமாகாத சகோதரியும் அவரது உழைப்பில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணி செல்வராஜ் என்பவர் அஜய் ஜோன்ஸ் மற்றும் அம்ரிதா எனும் இரு குழந்தைகளின் தந்தை. ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் மோட்டார் சைகிளில்  வந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் விவரம்: 1. ரஞ்சித்குமார் (22), தூத்துக்குடி 2. கிளாஸ்டன் (40) லூர்தம்மாள்புரம், தூத்துக்குடி 3.கந்தையா (55) சிலோன் காலனி, தூத்துக்குடி 4. தமிழரசன் (45), குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம் 5. சண்முகம் (25), மாசிலாமணிபுரம், தூத்துக்குடி 6.மாணவி ஸ்னோலின் (17), தூத்துக்குடி 7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி, 8. மணிராஜ் (25), தாமோதர நகர், தூத்துக்குடி 9. கார்த்திக் (20) தூத்துக்குடி 10. ஜான்சி (46), திரேஸ்புரம், தூத்துக்குடி, 11. செல்வசேகர் (40), தூத்துக்குடி 12. காளியப்பன் (22), தாளமுத்து நகர், தூத்துக்குடி 13. ஜெயராமன் (45), உசிலம்பட்டி

இது தவிர ஒரு திருமணத்திற்காகப் பரோலில் வந்திருந்த ஆயுள் கைதி பாரத் என்பவர் சென்ற மே 23 அன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது  காவல்துறையினரால் அடித்து தூக்கிச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டுள்ளார். பின் அவர் நீதிமன்ற ஆணையின் பேரில் பாளை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சரியான சிகிச்சை இன்றி ஜூன் 29 இரவு இறந்துள்ளார். அவர் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

மே 25 அன்று கருங்குளம் எனும் பகுதியில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஒரு அரசுப் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த திருவைகுண்டம் வள்ளியம்மாள் என்பவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மே 31 அன்று இறந்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் சித்திரவதை : 22, 23 தேதிகளில் கண் மண் தெரியாமல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். எவ்வளவுபேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்கள் சொல்லப்படவில்லை. இதன் விளைவாக அவர்களின் வீட்டார்கள் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லை அவர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனரா எனத் தெரியாமல் கலங்கிக் கிடந்தனர். கொல்லப்பட்ட உடல்கள் பல திருநெல்வேலி மருத்துவமனையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.

இவ்வாறு பலர் காணவில்லை என்பது குறித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சந்திரசேகர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நடுவர் பகவதி அம்மாள் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணை நடத்துமாறு விலாத்திகுளம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் காளிமுத்துவேலுக்கு உத்தரவிட்டார்.

அவர் ஆய்வு செய்தபோது வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சித் தளத்தில் 95 பேர்கள் கடும் சித்திரவதைத் தாக்குதல்களின் மூலம் காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த வழக்கு தொடர்பாக அவர்கள் கொண்டுவரப்பட்டு இங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கேட்டபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் திருதிருவென விழித்துள்ளனர். “அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை” என பத்திரிகைகள் இது குறித்து எழுதின (தினத்தந்தி நெல்லைப் பதிப்பு, மே 26), விசாரணை செய்த நடுவர் கண்டித்த பின் அவர்களில் 30 பேர்கள் விடுவிக்கப்பட்டு மீதி 65 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

முதன்மை நீதிபதி சாருஹாசினி வழக்குரைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக உயர்நீதிமன்றப் பதிவாளருடன் தொடர்புகொண்டு, அவரது அனுமதியுடன் அப்போதே வழக்கை விசாரித்து உடனடியாக அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் மேலும் 62 பேர்களைக் கொண்டு வந்து ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்காக நீதிபதி சாருஹாசினி அவர்கள் இரவு 12 மணிவரை நீதிமன்றத்திலேயே காத்திருந்தும் அரசு வழக்குரைஞர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். அவர் ஆஜர் ஆகாததை ஒட்டி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதிகள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கலில் மிக்க கரிசனத்துடன் நடந்து கொண்டதைப் பலரும் குறிப்பிட்டனர்.

இப்போதும் சுமார் 30 பேர்கள் வரை விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளதாக நேற்று (ஜூலை 4) தூத்துக்குடியில் விசாரித்தபோது ஒரு மனித உரிமை ஆர்வலர் குறிப்பிட்டார்.

இணையம், ஏ.டி.எம் சேவைகள் முடக்கம்: எங்கள் குழு சென்ற போது அங்கு இணைய சேவை செயல்படவில்லை. அன்று (மே 27) நள்ளிரவில்தான் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இணைய சேவையை உணர முடிந்தது. மே 22 தொடங்கி தூத்துக்குடி மட்டுமின்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இணைய சேவை நிறுத்தப்பட்டது. நீதிமன்றக் கண்டனத்துக்குப் பின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் இணைய சேவைகள் அளிக்கப்பட்டன. தூத்துக்குடி நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 72 ஏ.டி.எம் களும் வேலை செய்யவில்லை. ‘க்ரெடிட் கார்ட்’ பயன்பாடும் சாத்தியமில்லாமல் ஆனது. மேற்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய மாணவர்கள் சொல்லொணாத் சிரமங்களுக்கு ஆளானதைப் பத்திரிகைகள் கண்டித்தன.

மே 27 காலைதான் 144 தடை நீக்கப்பட்டது. எனினும் ஆங்காங்கு செக் போஸ்டுகள், போலீஸ் கெடுபிடிகள் குறையவில்லை. எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுப் பைகள் முதலியன சோதனை செய்யப்பட்டன. மே 26 வரை வெளியார்கள் சென்று வருவதில் கடும் கெடுபிடிகள் இருந்துள்ளன. வழக்குரைஞர்கள் ஊருக்குள் சென்று வருவதற்கான ஆணையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதன் விளைவாக அவர்களின் நுழைவை மட்டும் தடுக்க இயலவில்லை.

தலைவர்கள் கைது: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மே 25 அன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது அவரும் ஆதரவாளர்களும் என மொத்தம் ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த அன்றே இயக்குநர் கௌதமனைக் காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிய காட்சியத் தொலைக்காசிகள் காட்டின. மே 31 அன்று நடிகர் ரஜினி வீட்டை முற்றுகை இடுவது எனக் கூறிச் சென்ற ‘மக்கள் ஜனநாயக் கட்சி’ தலைவர் கே.எம் ஷெரீஃபும், அவரது ஆதரவாளர்கள் 30 பேர்களும் கைது செய்யப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1 அன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆய்வு செய்ய அங்கு சென்ற TNCRO என்கிற ஒரு மனித உரிமைக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வீடு புகுந்து தேடல், மக்களை உளவு பார்ப்பதெற்கென வானில் பறக்கும் குட்டி விமானங்கள், 6000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என அந்தக் கடலோரச் சிறு நகரே எதோ எதிரி நாட்டு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நகரம்போல இருந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது (மே 27) ஓரளவு குணமடைந்தோர் அனுப்பப்பட்டு அங்கு அப்போது சுமார் 56 பேர்கள்தான் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்கள் 104 பேர்கள். அவர்களில் 17 பேர்கள் ‘ஆபத்தான’ நிலையில் இருந்தவர்கள். வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பாதிரியார் ஜெயசீலன் (70) தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் சென்றபோது அரசு மருத்துவமனை ICU வில் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த இளைஞர் பிரின்ஸ்டன் வைக்கப்படிருந்தார். IMW வில் ராமசந்திரன் (24) த/பெ மாரிமுத்து, ஜஸ்டின் (29) த/பெ மரிய ஃப்ரான்சிஸ் என இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு ‘டயாலிசிஸ்’ நடந்துகொண்டிருந்தது. இருவரும் ஓட்டுநர்கள். இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன் மே 22 காலை 11.30 மணி வாக்கில் நடைபெற்ற தாக்குதலில் உயிருக்கு ஆபத்தாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பணியில் இருந்த மருத்துவர்கள் அவர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறினர். சற்று ஆபத்தான நிலையில் இருந்த மூவர் மதுரையில் சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்ர இருவரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மருத்துவமனை உயரதிகாரிகளைச் சந்தித்தபோது அவர்கள் மூவரும் தங்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். புகழ்பெற்ற தனியார் மருத்துவ மனைகளில் உள்ளதைக் காட்டிலும் சிறந்த மருத்துவத்தைத் தாங்கள் அளித்துள்ளதாகவும், பார்க்க வருகிறவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வருவதுதான் பிரச்சினை எனவும் கூறினர்.

பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களும் மருத்துவர்கள் நல்ல முறையில் பணியாற்றுவதாகக் கூறினர்.  குண்டு மற்றும் தடியடிக் காயங்களுடன் வருபவர்களைப் பதிவு செய்யும் AR எனப்படும் விபத்துப் பதிவேட்டில் போலீஸ் தாக்குதலில்தான் இப்படி ஆனது எனப் பதிவு செய்கிறீர்களா எனக் கேட்டபோது, அப்படிப் பதிவது வழக்கமில்லை எனவும் தாக்கியவர்கள் தெரிந்தவர்களா, தெரியாதவர்களா (Known or Unknown) என்று மட்டுமே பதிவு செய்வதுதான் வழக்கம் எனவும் கூறினர்.

:பாராட்டுக்குரிய நீதித்துறை: உள்ளூர் மருத்துவர்களைப் போலவே, தூத்துக்குடி வழக்குரைஞர்களும், மாவட்ட நீதித்துறையும் மிகவும் இரக்கத்துடனும் கடமை உணர்வுடனும் செயல்பட்டதாக மிக்க நன்றியுடன் எல்லோரும் கூறினர். குறிப்பாகக் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படாமல் துப்பாக்கிப் பயிற்சியகத்தில் அடைத்து வைக்கப்பட்ட மக்களை தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்ததில் நீதித்துறை மிகுந்த பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. குறிப்பாக நீதியரசர்கள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோரை மக்கள் குறிப்பிட்டுச் சொல்லினர்.

இழப்பீடு : வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகள் மற்றும் குவிக்கப்பட்ட படைகள் குறித்து அரசுத் தரப்பில் சொல்லப்படுவது:

பாதுகாப்பு: டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 4 DIG, 8 IG க்கள்,5,000 போலீஸிருந்தனர் மேலும் கமாண்டோ படைகள் உட்பட இன்னும் 1000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் அட்வகேட் ஜெனெரல் செல்லபாண்டியன் மே 25 அன்று நீதிமன்றத்தில் சொன்னது: காயம் பட்டவர்கள் மொத்தம் 72 பேர். இதில் 52 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும். ஒருவர் மதுரையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.. 52ல் 26 பேர்களுக்குத் தலா  3 லட்சமும், மீதி 26 பேர்களுக்கு தலா 2 லட்சமும் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூ என்பது அதிகப்படுத்தப்படும்.

கணக்கில் வராத காயம்பட்டவர்கள்: காயம்பட்டவர்கள் என அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை மிகக் குறைவு. அது மட்டுமல்ல. காவல்துறை தாக்குதலில் படுகாயமுற்ற பலர் அதை வெளிப்படுத்தினால் தங்கள் மீதும் வழக்குப் போடுவார்கள் என அஞ்சி அவற்றை வெளிப்படுத்தாமல் சொந்த முறையில் சிகிச்சை செய்துகொண்டு உள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம். காயம் பட்டவர்கள் வெறும் 72 பேர்கள்தான் எனச் சொல்வது முழுப் பொய். இதற்கிடையில் சில சமூக ஆர்வலர்கள் அப்படி அஞ்சி வெளியே சொல்லாமல் உள்ளவர்களை அணுகி அதை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கொள்வதாகவும் அறிகிறோம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க முயன்றபோது: துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரியைச் சந்தித்தபோது அவசரமாக அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தபோதும் நாங்கள் கூறியவற்றைக் கவனத்துடன் கேட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாங்கள் சொன்ன போது,  அது தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது எனக் கூறிய அவர் “எனினும் நீங்கள் அவற்றை ஒரு மனுவாக எழுதித் தந்தால் எனது பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறினார். FIR ல் துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது துணைத்தாசில்தார்கள் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியபோது நிர்வாக நடுவர்களாக (Executive Magistrates) துணைத் தாசில்தார்களை நியமிக்க இடமுண்டு என்றார். துப்பாக்கிச் சூடு தேவையற்றது என நாங்கள் சொன்னபோது கேட்டுக் கொண்ட அவர் “போராட்டக்காரர்கள் மத்தியிலும் அன்று வன்முறைகள் இருந்ததை மறுக்க முடியாது” என்றார்.

அடுத்து காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) திரு. முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்ற போது சாதிப்பதாகச் சொல்லிக் காத்திருக்கச் சொன்னார்.. எனினும் அதற்குள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட்டது உதவித் தாசில்தார்கள்தான் என்பது குறித்த எங்களின் நேர்காணல்கள் பல சேனல்களில் ஒளிபரப்பாகத் தொடங்கின. சந்திப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் சந்திக்க முடியாது எனச் சொல்லிவிட்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து திரும்பினோம். காவல்துறை அத்துமீறல்கள் குறித்துக் கடும் அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவும் சூழலில் மக்கள் முன் உரிய விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு உயர் அதிகாரி அப்படி நடந்து கொண்டது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய உண்மை:: தூத்துக்குடி வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ள பேராசிரியர் சிவசு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை இன்று தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லாத் தரப்பு மக்களையும் பாதிப்பதை விரிவாக விளக்கினார். தொடக்கத்தில் ஆலைக் கழிவுகளால் மீன் வளம் குறைந்ததை ஒட்டி மீனவர்களே இது குறித்துக் கவலைப்பட்டனர். ஸ்டெர்லைட் நிர்வாகமும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முதலானோருக்கு சிறிய ஒப்பந்தங்கள், தற்காலிக வேலைகள் முதலியவற்றை அளித்து மக்களைப் பிளவுறுத்தும் முயற்சியையும் மேற்கொண்டது. அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் மாசுபட்டது, பல்வேறு வழிகளில் சுற்றுச் சூழல் அழிந்தது ஆகியன எல்லா மக்களையும் பாதித்ததனால் இப்போது கடலோர மக்கள், விவசாயிகள், வணிகர்கள், அடித்தள மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று ஆலைக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ளனர் என்றார். எனவேதான் சில சமூக விரோத சக்திகள் சாதி, மதம் கடந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் எற்பட்டுள்ள இந்த ஒற்றுமையை அழிக்கப் பார்க்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பனிமயமாதா ஆலயம் அருகில் மக்கள் கூடிப் போராட்டத்திற்குப் புறப்பட்டது குறித்துப் பரப்பப்படும் பிளவுப் பிரச்சாரங்கள்: மே 22 காலை பனிமய மாதா ஆலயத்தில் மக்கள் திரண்டு அங்கிருந்துதான மக்கள் சென்றதாகவும் அந்த வகையில் கலவரத்திற்கு கிறிஸ்தவ மதத் தூண்டுதல் காரணம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே என இங்கு எல்லோராலும் மதிக்கப்படும்பாதிரியார்கள் எக்ஸ்.டி.செல்வராசு ,சுந்தரி மைந்தன் ஆகியோரைக் கேட்டபோது அவர்கள்  அதை மறுத்தனர். இந்தப் போராட்டம் மூன்று மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. மாதா கோவில் அருகே பெரிய வெளி இருப்பதால் கூடங்குளம் போல மாதா கோவிலுக்கு அருகில் பந்தலிட்டு போராட்டக்காரர்கள் தினந்தோறும் கூடினர். கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் எல்லா மதத்தினரும் அதில் இருந்தனர். அங்குள்ள பங்கு குருவின் சம்மதம் இன்றி அது நடந்தது. அவர் தொடர்ந்து அவர்களை அங்கு கூடக் கூடாது என வற்புறுத்திக் கொண்டே இருந்தார். கூடங்குளத்தில் அரசு கிறிஸ்தவ சர்ச் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மறந்துவிடவில்லை. எனவே அங்கு கூடவேண்டாம் என மக்களை பங்கு குரு தொடர்ந்து கேட்டுக் கொண்டார் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி எல்லாத் தரப்புப் பிரதிநிதிகளும் இப்படியான பிரச்சாரத்தை வெளிப்படையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

                                  

                                      எமது பார்வைகள்         

 

1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது.   அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத்தாசில்தார்களும் கோட்டக் கலால்துறை அதிகாரி ஒருவரும் சுடுவதற்கு ஆணையிட்டதாக ‘முதல் தகவல் அறிக்கைகள்’ (FIR) தயாரிக்கப்பட்டுள்ளன. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல்  (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR ல் (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஶ்ரீவைகுண்டம் வட்டவழங்கல் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டுள்ள கோபால் எனும் துணைத் தாசில்தார் தன் பெயரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி பரவுகிறது எனப் புகார் செய்துள்ளார். அதை ஒட்டித் தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்துர் ராஜன் இப்படித் துணைத் தாசில்தார்களின் பெயரில் பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மற்ற FIR களும் பொய்தானா என நாங்கள் செந்துர்ராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படித்தான் செய்திகள் பரவுகின்றன, அந்தத் துணைத் தாசில்தார்களும் தொடர்பில் இல்லை என்றார். அவர்கள் பயந்து கிட்டத்ட்ட தலைமறைவான நிலையில் உள்ளனர். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதும் இன்று பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுவதும் தமிழகக் காவல்துறை மீது உள்ள கடைசித் துளி நம்பிக்கையையும் அறச் செய்கிறது. 22ம் தேதி துப்பாக்கிச் சூட்டிற்கு 27ந்தேதி வரை யார் சுடுவதற்கு அனுமதி அளித்தனர் என்பது மக்கள் முன் விளக்கப்படவில்லை. கேள்விக்குத் தமிழக முதல்வர் மழுப்புகிறார் எனப் பத்திரிகைகள் எழுதின. துணைத் தாசில்தார்களை நிர்வாக நடுவர்களாக நியமிக்கலாம் என 1973ல் ஒரு அரசாணை உள்ளது என்றாலும் இப்படித் தேர்தல் துறை, கலால்துறை முதலியவற்றில் உள்ளவர்களை எல்லாம் நடுவர்களாக நியமிப்பது சரியா? மக்களைக் கொல்வதற்கான ஆணை இடலில் இத்தனை பொய்கள் உ:ள்ளதற்கு அரசு முறையான விளக்கம் தர வேண்டும்.ஸ்னோலின்

  1. Tamilnadu Police Standing Order and Police Manual ல் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் கடைபிடிக்கப்பட வேண்டிய 6 விதிகளில் ஒன்று கூட தூத்துக்குடியில் கடைபிடிக்கப்படவில்லை. மக்களுக்கு அச்சமூட்டிக் கலைப்பது மட்டுமே துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் எனபது அந்த நெறிமுறைகளின் அடிநாதமாக உள்ளது. சட்டவீரோதமாகக் கூடியுள்ளீர்கள் என எச்சரிக்கை செய்வது, கண்ணீர்ப்புகை, தண்ணீரைப் பீச்சி அடித்து விரட்டுதல், சுடப்போவதாகவும், மரணங்கள் நேரலாம் எனவும் எச்சரித்தல், வானை நோக்கிச் சுடுதல் என்கிற எதுவும் கடைபிடிக்கப்படாமலேயே அன்று மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், முழங்காலுக்குக் கீழ் என்பதாக அல்லாமல் பெரும்பாலும் மார்புக்கு மேல் மக்கள் சுடப்பட்டுள்ளனர். மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இணையம் முதலான மக்கள் தொடர்புச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 நாட்கள் வெளியார்கள் யாரும் தூத்துக்குடிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போல அரசும் காவல்துறையும் கையாண்டுள்ளன.
  2. இப்படிப் 13 பேர்கள் இன்று தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.. சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். பரோலில் வந்த சிறைக் கைதி ஒருவரும் போலீஸ் தாக்குதலின் பாதிப்பால் செத்துள்ளார். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
  3. இது திடீரென நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு அல்ல. முன்கூட்டி மேல்மட்டத்தில் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை. கார்பொரேட்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு எதிராக பாதிக்கப்படுகிற மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் நடக்கக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கத் தேவையானால் மத்திய படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
  4. இந்த நோக்கில்தான் மே 22 அன்று போராடும் மக்கள் சீண்டப்பட்டுள்ளனர். அவர்கள் அமைதியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதில் அரசும் காவல்துறையும் குறியாக இருந்துள்ளது. நூறு நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் மக்கள் ஒரு பூங்காவுக்குள் நுழைய முயற்சித்தபோதும் இப்படித்தான் விரட்டப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜல்லிகட்டுப்[ போராட்டத்திலும் அவ்வாறே இறுதியில் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு மக்கள் விரட்டப்பட்டனர். இம்முறை வெறுமனே அப்படி விரட்டினால் போதாது என அரசு முன்கூட்டித் தீர்மானித்துத்தான் ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் குறி பார்த்துச் சுடுபவர்களை நிறுத்தி வைத்திருந்தது.
  5. இப்படியான போராட்டங்களில் மக்கள் ஆத்திரம் கொண்டு காவல்துறை வாகனங்களை எரிப்பது ஏற்கத் தகாததுதான் என்றபோதிலும் அது எங்கும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அது, இப்படியான துப்பாக்கிச் சூடுகள் இல்லாமலேயே காவல்துறையால் சமாளிக்கப்படக் கூடிய ஒன்றுதான். வானை நோக்கிச் சுடுதல், அப்படியே சுட்டாலும் ஓரிருவரை மட்டும் முழங்காலுக்குக் கீழே சுடுதல் முதலான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தைக் கலைப்பதே வழமை.. இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும்போதுதான் மக்கள் வைக்கும் குற்றச்சாட்டையும் நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டி உள்ளது. . சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டு, கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றை அவர்கள் மேற்கொண்டனர் என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது என்று மக்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  6. மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் ஒரு திருவிழாவிற்குச் செல்வது போலச் சென்றிருக்க மாட்டார்கள்.. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன், அண்ணன் மனைவி, அவர்களின் 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தைகள் எனக் குடும்பமே அங்கு வந்துள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம்.
  7. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்”, “புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான அமைப்புகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். கூட்டத்தில் தீவிரவாதிகள் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

9 திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள தன் மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்றுகொண்டிருந்த ஜான்சி (46) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் வினிதா என்று காவல்துறை முதலில் பதிவிட்டுள்ளது. அவரது வீட்டார்கள் சென்று அடையாளம் காட்டியபின் அவசரமாக ஜான்சி எனப் பெயரை மாற்றி ‘மெமோ’ பதிவு செய்துள்ளனர். சென்ற 28 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்ட போது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது வெறும் அலட்சியமா இல்லை வினிதா என வேறு யாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்களா என்றெல்லாம் ஐயம் உருவாகிற அளவிற்கு இன்று காவல்துறை நடந்து கொள்கிறது.

  1. மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். என்கவுன்டர் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை இங்கும் கடைபிடிக்கப்பட வேண்டும்
  2. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் தூத்துக்குடியில் கன்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள் ககன்தீப் சிங்,டேவிதார் மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சென்ற மே 26 அன்று கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கெனத் தனியாகவும்  அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு செயல். எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றில் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சில மதவாத சக்திகள் இத்தகைய பிரச்சாரத்தைச் செய்து கொண்டுள்ளபோது  இந்த உயர் அதிகாரிகள் இவ்வாறு மக்களைப் பிரிப்பதன் பொருள் என்ன? இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை எல்லோருக்கும் போதுவானது. இரண்டு தரப்பு மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல இது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் கூட மீனவர்கள் மூவர்; நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் இருவர்; நாயக்கர் ஒருவர், ஆதி திராவிடர் இருவர் (நக்கீரன் 31:15, பக்.6) என அனைத்துச் சமூகத்தினரும் உள்ளனர். அனைத்து மக்களுக்கும் ஒரு கார்பொரேட்டுக்கும் இடையிலான பிரச்சினையை ஏதோ மத மோதல் பிரச்சினை போலக் கையாண்டதற்கு கண்காணிப்புக் குழுவில் இருந்த உயரதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
  3. போராட்டத்தில் வெளியார்கள் (outsiders) புகுந்து விட்டதாக)வும், அதுவே வன்முறைகளுக்குக் காரணம் எனவும் ஒரு மதிக்கத்தக்க ஊடகம் எழுதியது வருந்தத் தக்கது. தமிழக மக்கள் இன்று காவிரி நீர்ப் பிரச்சினை தொடங்கி, ஹைட்ரோகார்பன், அணு உலை வரை பலவகைகளிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த கவலை மக்களுக்கு இருப்பது இயல்பு. கல்பாக்கம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது சென்னை மக்களையும் பாதிக்கும். இந்நிலையில் இத்தகைய போராட்டங்களில் மக்களை வெளியார்கள் X உள்ளூர் மக்கள் (Outsiders X Insiders) என்றெல்லாம் பிரித்து இருமை எதிர்வுகளை (binary oppoositions) உருவாக்கி நிறுத்தும் மொழி விளையாட்டு வருந்தத் தக்கது. அரசும் காவல்துறையும் மக்கள் மத்தியில் சமூக விரோத சக்திகள் புகுந்து விட்டன எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தனர். யார் அந்தச் சமூக விரோதிகள் என அவர்கள் இதுவரை அடையாளம் காட்டவில்லை. ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி’ முதலான அமைப்புகள் மிகவும் வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும் இயங்குபவை. அவர்கள் ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்வதோ, தலைமறைவாக இயங்குவதோ கிடையாது. அப்படியான நிலையில் அவ்வமைப்புகளை இவ்வாறு முத்திரை குத்துவதும், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்க முயற்சிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’, ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் அமைப்பினரும் இன்று அதிக அளவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  4. தூத்துக்குடி அரசுமருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்

கோரிக்கைகள்

1.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூ இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும்.

2.காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

  1. இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
  2. சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தூத்துத்துக்குடி ‘சிப்காட்’ காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) செல்வநாகரத்தினம் ஆகிய இருவரும் மிகவும் கொடுரமாக மக்களைத் தாக்கினர் என்பதை மக்களில் பலரும் எங்களிடம் கூறினர். இவர்கள் இருவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனவும் கூறினர். அவர்கள் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் சொத்து விவரங்கள் முதலியன விசாரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் விசாரணை ஆணையமும் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.
  3. ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும். தாங்கள் சுட உத்தரவிட்டதாகப் பொய்கூறச் சொல்லி வருவாய்த் துறை அதிகாரிகள் வற்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்குத் தெரியாமலேயே இப்படியான பொய் FIR கள் போடப்பட்டது பற்றிய குற்றச்சாட்டும் விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ தலைவர் வேல்முருகன், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர், ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ தலைவர் கே.எம்.ஷெரிஃப் முதலானோர் போராட்டத்தை ஆதரித்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இயக்குநர் கௌதமன் முதலானோர் உள்ளிட்ட இப் போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அனைவர் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்..
  5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை ஒட்டி அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய இழப்பீடுகளை வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அரசு பெற்றுத் தர வேண்டும். வேலை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கும் மாற்று வேலைவாய்ப்புகளுக்கும் அரசு உதவ வேண்டும்.
  6. இத்தனைக்கும் பின்னாவது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது வரவேற்கத் தக்கதுதான் எனினும் இதற்காகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வலுவாக இல்லை என்கிற கருத்தைச் சட்ட வல்லுனர்கள் முன்வைத்துள்ளனர். ஓரு ஆலையை மூடும்போது எத்தகைய விதி மீறல்களுக்காக அது மூடப்படுகிறது, அந்த விதிமீறல்கள் எந்த வகையில் மக்களுக்கும் இயற்கைக்கும் கேடாக உள்ளன என்பது விரிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விளக்கங்கள் இந்த ஆணையில் இல்லை. முன்னதாக இந்த ஆலையை மூடுவது தொடர்பாக வழக்கு நடந்தபோது நீதிபதிகள் தர்மாராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் விரிவாக ஆய்வு செய்து எத்தகைய விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அவர்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். அவை இந்த ஆணையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்., இந்த வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் இப்படியான பிரச்சினைகளில் வல்லுனர்களாக உள்ள வழக்குரைஞர்களின் ஆலோசனையையும் பெற்று அதையும், முன் கூறிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதி மீறல்களையும் உள்ளடக்கிக் கூடுதல் அரசாணை ஒன்றை அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். வேதாந்தா முந்திக்கொள்ளுமுன் தமிழக அரசு இதைச் செய்ய வேண்டும்.

 

தொடர்புக்கு : அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், முதல் குறுக்குத் தெரு, சென்னை-20, செல்: +91 9444120582

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கைரானா: இந்துக்கள் வெளியேற்றம் உண்மை என்ன?

ஜூன் 27, 2016

(டெல்லியிலிருந்து வெளிவரும் ‘மில்லி கெஸட்’ இதழால் அனுப்பப்பட்ட உண்மை அறியும் குழு ஒன்று சென்ற ஜூன் 16 அன்று வெளியிட்டது  அறிக்கையைத் தழுவி எழுதப்பட்டது. 

உ.பி மாநிலம் ஷாம்லி மாவட்டத்திலுள்ள கைரானாவிலிருந்து அங்குள்ள பெரும்பான்மையான முஸ்லிம் மக்களால் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர் எனும் செய்தி இன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இதழ்களாலும் அவற்றின் ஆதரவு உள்ளூர் இதழ்களாலும் பரப்பப்பட்டு பெரிய சர்ச்சையை’ ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவவாதிகளின் இந்தப் பிரச்சாரம் முழுப் பொய் என்பதை இந்த உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே நடுநிலையான பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளதை இன்றைய (ஜூன் 27) இந்து நாளிதழில் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் சுடிக்காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வெளியிடப்பட்ட “வெளியேற்றப்பட்ட இந்துக்கள் பட்டியலில்” பலர் இன்னும் அதே இடங்களில் குடியிருப்பதைப் பத்திரிகைகள் கண்டறிந்து வெளியிட்டன என்கிறார் பன்னீர்செல்வம்.

‘இந்துக்கள் வெளியேற்றம்’ என்கிற இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தது உள்ளூர் பா.ஜ.க எம்.பி ஹுகும் சிங் எனும் நபர். இவர் ஏற்கனவே 2013 முசாஃபர் நகர் கலவரத்தில் பங்குபெற்றவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.

இப்பகுதியின் (ஷஹ்ரான்பூர்) காவல்துறை டி.ஐ.ஜி ஏ.கே.ராகவ் சென்ற ஜூன் 11 அன்று அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஹுகும் சிங் பரப்பிவரும் இந்தச் செய்தி பொய் எனவும், நடக்க உள்ள மாநிலத் தேர்தலில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இதை அவர் செய்து வருவதாகவும் சொல்லியுள்ளார். வரும் தேர்தலில் ஹுகும்சிங் தன் மகளை அந்தத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்த உள்ளதையும் டி.ஜி.பி தன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சிறிய சம்பவத்தையும் மதப் பிரச்சினையாக முன்நிறுத்தி இந்த ஹுகும்சிங் செய்து வரும் பிளவுவாத அரசியலால் மிக விரைவில் அங்கு ஒரு மதக் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அந்த அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கைரானாவில் உள்ள முஸ்லிம்களின் வீதம் 80.74%, இந்துக்கள் 18.34% . முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இன்று இங்கே அடைக்கலமாயுள்ளனர்.

இந்த முஸ்லிம் பெரும்பான்மையினரின் வன்முறையால் இந்தப் பகுதியில் உள்ள 346 இந்துக் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப் பட்டுள்ளனர் என்பதுதான் ஹுகும்சிங் கிளப்பிவிட்ட வதந்தி. உடனடியாக இது பெரிய அளவில் நாடெங்கும் பெரிதுபடுத்தப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசிடம் அறிக்கை கேட்டது. இந்துத்துவ சக்திகள், “முஸ்லிம்களால் இந்துக்களால் கொடுமைப்[ படுத்தப்பட்டு” வெளியேற்றப்பட்டதாக ஊளையிட்டன.விசுவ இந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின், “ஜிகாதிகளால்” இந்துக்கள் வெளியேறுவதாக அறிக்கை விட்ட பின் (ஜுன் 13) மாவட்ட ஆட்சியரும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார்

இந்த விஷ நோக்கமுள்ள பொய் வதந்தி இந்திய அளவில் செய்தியாக்கப்பட்டது இப்படித்தான்.

ஹுகும்சிங் வெளியிட்ட அந்தப் பட்டியலில் உள்ள நான்கு பேர் ஏற்கனவே இறந்துபோயுள்ளனர். பட்டியலிலுள்ள 20 குடும்பங்கள் இன்றும் கைரானாவில் இதர முஸ்லிம் மக்களோடு சுமுகமாக வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர். சென்ற ஜூன் 14 அன்று மில்லி கெசட் குழு அங்கு சென்ற போது ரமலான் நோன்பு தொடங்கிய எட்டாம் நாள் அது. அங்கே எல்லாக் கடைகளிலும் உணவுப் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டுதான் இருந்தன. இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தப் பகையும் இல்லாமல் ஒன்றாகத்தான் இருந்தனர்.

இந்த உண்மைகளையெல்லாம் இந்தக் குழு மட்டுமல்ல இதர பத்திரிகைகள் எல்லாம் அம்பலப்படுத்தியும் கூட கலக நோக்கத்துடன் செயல்படும் பாசிசக் கும்பல் தன் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அருகிலுள்ள கந்த்லா நகரத்திலிருந்து 163 இந்துக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அடுத்த ‘டுபாகூரை’ இன்று அரங்கேற்றியுள்ளன. ஒரு பெரும் மதக் கலவரத்தை உருவாக்கி இரத்தம் குடிக்காமல் அவர்கள் ஓயப்போவதில்லை எனத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் இதழ்களான ‘பாஞ்சஜன்யா’, ‘ஆர்கனைசர்’ எல்லாம் இந்த டுபாகூர்களை அட்டைபடக் கட்டுரைகளாக வெளியிட்டுக் கொண்டுள்ளன. ‘டைனிக் ஜாக்ரான்’, ‘ஸீ டிவி’ முதலியன ஒத்தூதுகின்றன.
.
எனினும் இன்று இந்தக் கும்பல்களின் அவதூறுகளும் பொய்களும் அம்பலப்பட்டுப்போன பின்னணியில் ஹுகும் சிங் சென்ற 14ந் தேதி அன்று ஒரு ‘பல்டி’ அடித்தார். “முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பதன் பின்னணியில் மதக் காரணங்கள் இல்லை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதன் விளைவுதான் இது” என வழிந்தார். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டதுதான் “இந்துக்களின் வெளியேற்றத்துக்கு” காரணம் என்றால் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏன் அப்படி நிகழவில்லை எனும் கேள்விக்கு ஹுகும் சிங்கிடமோ மதக்கலவரத்தைத் தூண்டி இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வினரிடமோ, எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் வகையறாக்களிடமோ எந்தப் பதிலும் இல்லை.

இன்றைய சூழலில் மக்கள் ஊர்களை விட்டு இடம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் இப்படி இடம் பெயர்ந்து வந்து மிக மோசமான சூழலில் வேலை செய்து கொண்டுள்ள வடமாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கை மட்டும் 40 லட்சத்திற்கு மேல் இருக்கலாம். இதில் மதச்சாயம் பூசுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

மில்லி கெசட் குழு கைரானா காவல் நிலைய அதிகாரி எம்.எஸ்.கில்லிடம் (SHO) பேசும்போது, “(இப்படிச் சிலர் வெளியேறுவதை) ‘இந்துக்களின் வெளியேற்றம்’ எனச் சொல்வது அபத்தம். இப்படி நல்ல வாய்ப்புகளுக்காக மக்கள் இடம்பெயர்வது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. 2017 தேர்தலை நோக்கமாகக் கொண்டு சிலர் செய்யும் வேலை இது” என்றார். உதவி ஆய்வாளர் தன்வார் பேசும்போது. “தேவை இல்லாமல் (சில) மீடியாக்கள் இதைப் பிரச்சினையாக்கியுள்ளன. இரண்டு சமூகத் தலைவர்களும் கூடிச் சமூக ஒற்றுமை வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.

இனிப்புத் தின்பண்டங்கள் விற்கும்கடை ஒன்றை வைத்துள்ள ஒரு இந்து நண்பர் கூறியுள்ளது இன்னும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. “என்னுடைய அண்ணன் இப்போது இடம்பெயர்ந்துள்ளார். முகிம் காலா கும்பல் அவரிடம் மிரட்டிப் பணம் கேட்டுக் கொண்டிருந்தது. கிரிமினல் கும்பல்கள் மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லாரையும் மிரட்டி வருகின்றன..”

வாசிம் (42) எனும் உள்ளூர்க்காரர் பேசும்போது, “2013 லிருந்து ஹூகும் சிங் இப்படி ஒரு மதக் கலவரத்தி உருவாக்க முயற்சித்துக் கொண்டுள்ளார். ஆனால் என்ன செய்தபோதும் இந்த இரண்டு சமுதாயத்திற்கும் இடையில் உள்ள பிணைப்பை யாரும் அழித்துவிட இயலாது” என்றார்.
இப்படி ஒரு மதக் கலவரத்தை உருவாக்குவதில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்தபோதிலும் இப்பகுதியில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அமைப்புகளில் உள்ள உள்ளூர்த் தலைவர்களுக்கு இடையே உள்ள அரசியல் போட்டியும் இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் மத்தியில் யார் அதிகப் பிரபலமாக இருப்பது என்பதில் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்குகின்றனர். மே26 அன்று சஹரன்பூரில் மோடி கலந்து கொண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்வானும் மீருட் ச.ம.உ சாங்கீத் சோமும் மோடி அமர்ந்திருந்த மேடை பக்கம் ஹுகும்சிங்கை அனுமதிக்கவில்லை. கடுப்பாகிய ஹூகும்சிங் எப்படியாவது தினம் மீடியாக்களில் இடம் பிடிப்பது எனும் வெறியோடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் விளைவாக இப்படி நாளொரு மேனி வதந்திகளைப் பரப்புவதாகவும் சொல்கின்றனர்.

என்ன கொடுமை பாருங்கள். இவர்கள் தங்களுக்குள் ஒன்றாக இருந்தாலும், பிளவுண்டு நின்றாலும் இரண்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளாகத்தான் வெளிப்படுகின்றன.

இப்படிப் பரப்பப்படும் பொய்களால் தற்போது நடக்க இருந்த 21 இந்துத் திருமணங்கள் ரத்தாகியுள்ளன என்கிறார் காவல் நிலைய அதிகாரி எம்.எஸ்.கில். “இப்படி வதந்திகளைப் பரப்பினால் யாருக்குத்தான் தம் பெண்களை இந்த ஊரில் கட்டிக் கொடுக்க மனம் வரும்” என்கிறார் அவர். தான் இப்பகுதில் நான்கு மாதங்களாகப் பணியில் இருப்பதாகவும், இதற்கு முன் ஒரு சின்ன மதப் பிரச்சினை கூட இங்கு எழுந்ததில்லை எனவும் அவர் மில்லி கெஸட் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். “இது முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள ஊர்தான். ஆனால் 2013ல் முசாபர்நகர் வன்முறை நிகழ்ந்தபோது இங்கிருந்து ஒரு இந்து குடும்பம் கூட வெளியேறவில்லை” என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். வணிகர்கள் பணம் கேட்டுக் கொல்லப்பட்டபோது கூட அப்படி ஏதும் நடக்கவில்லை என்றுள்ளார். மக்கள் அஞ்சி வெளியேறுவதற்கான இந்திச் சொல்லாகிய ‘பலவான்’ எனும் சொல்லைத் தன் வாழ்நாளில் தற்போதுதான் முதன் முதலாகக் கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த நகரத்தில் நடைபெறும் ராமநவமி மற்றும் பாலாஜி ஷோபா யாத்திராக்களில் இந்துக்களைக் காட்டிலும் அதிக அளவில் முஸ்லிகள் கலந்துகொள்வதை நான் பார்த்துள்ளேன். ஆனால் இதையெல்லாம் யாரும் மீடியாக்களில் பேசுவதில்லை” எனவும் அவர் வருத்தப்பட்டார் எனவும் “வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் இங்கே செயல்படுவது உண்மைதான். குறிப்பாக முகீம் காலா கும்பல் இதைச் செய்து வருகிறது. ஆனால் அவர்களின் முக்கிய இலக்கு முஸ்லிம்கள்தானே ஒழிய இந்துக்கள் இல்லை” எனவும் அவர் உண்மை அறியும் குழுவிடம் கூறியுள்ளார். வணிகர்களைப் ‘பாதுகாப்பதாக’ச் சொல்லி அந்தக் கும்பல் இப்படிப் பணம் பறிக்கிறது.அக்டோபர் 2015ல் முகிமும் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்த அவனது கையாள் சபீரும் சிறையில் அடைக்கப்பனர். இருந்தும் சிறைக்குள் இருந்தே அவன் இந்த வேலையைச் தொடர்ந்து வருகிறான் என்கிறார் கில்.

எனினும் இன்றைய பிரச்சினைக்கு முழுவதும் இந்தக் குற்றச் செயல்கள்தான் காரணமல்ல என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். முகீம் காலா கும்பல் போன்ற பணப் பறிப்புக் கும்பல்கள் மத வேறுபாடு இல்லாமல் இரு சமூகங்களிலும் உள்ள பெரும் பணக்காரர்களைத்தான் குறி வைக்கின்றன. ஒரு பணப் பறிப்பு ‘ரவுண்டில்’ ஒரு 40 -50 ஆயிரம் ரூபாய்கள் சேர்ந்தால் கொள்ளை அடித்தவர்களிடம் முகீம் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதும் உண்டு என மக்கள் கூறுகின்றனர்.

இங்கே வருமான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் இரு சமுதாயத்திலும் உள்ள குடும்பங்கள் பிற நகரங்களை நோக்கி வெளியேறுகின்றனர் என்கின்றனர் உள்ளூர் வணிகர்கள். “வெளியேறிய பட்டியலில்” உள்ள பலரும் இப்படிப் போனவர்கள்தான். இங்கிருந்து டெல்லியின் தொலைவு வெறும் 98 கிமீ தான். நிறையப் பேர் வேலைவாய்ப்புகளை நாடி அங்கு இடம்பெயர்கின்றனர்.

கிரிமினல் நடவடிக்கைகளைப் பொருத்தமட்டில் 2014ல் கைரானாவில் 22 கொலைகள் நடந்துள்ளன. அதில் ஏழு பேர்கள்தான் இந்துக்கள். 14 பேர் முஸ்லிம்கள். ஒருவர் குறித்துத் தெரியவில்லை. 2014ல் மூன்று இந்து வணிகர்கள் கொல்லப்பட்டபோது, அதிக அளவில் முஸ்லிம்கள் நிரம்பிய அந்த ஊர் வணிகர் சங்கம் அந்தக் கொலைகளைக் கண்டித்து ஏழு நாட்கள கடை அடைப்பை நடத்தியது.

இந்தப் பிரச்சினையில் ஒரு கவனத்துக்குரிய அம்சம் என்னவெனில் இப்படித் தங்கள் ஊர் மீடியா கவனம் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியாவது இந்த மாதிரியான பிரச்சினைகள் கவனப்படுத்தப்பட்டு நிலைமை சீராக வாய்ப்பாகுமா என்று. எந்த அடிப்படை வசதிகளும் இந்த ஊரில் கிடையாது. வைத்தியம் செய்து கொள்ள வேண்டுமானால் இவ்வூர் மக்கள் அருகிலுள்ள பானிபட் அல்லது மீருட்டுக்குத்தான் செல்ல வேண்டும். தினசரி இங்கிருந்து தினக் கூலி சம்பாதிப்பதற்காக சுமார் 5 -7 லட்சம் பேர் பானிபட்டுக்குச் சென்று வருகின்றனர்.

பாரம்பரியமாக இங்கே ஜெயின்களும் இந்துக்களும்தான் வட்டிக்குக் கடன் கொடுத்து வந்தனர். இப்போது இதைவிடக் குறைந்த வட்டியில் எளிதாக வங்கிகளில்கடன் பெற முடிகிறது. எனவே அவர்களும் வெளியேற நேர்கிறது. கும்பட் மொகலாவில் வசிக்கும் ஒரு பாரம்பரியமான இந்து அல்வா வியாபாரியை மில்லி கெசட் குழு சந்தித்தது. அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். இந்த ஊரில் இப்போது வியாபாரம் சரியாக நடப்பதில்லை என வருத்தப்பட்டுள்ளார் அவர். முன்பெல்லாம் அரியானாவிலிருந்து மக்கள் பொருட்களை வாங்க இங்கே வருவர். 2013 முசாபர் நகர் கலவரத்திற்குப் பின் இங்கு யாரும் வருவதில்லை என்கிறார். அவரது மூத்த மகன் இப்போது அகமதாபாத்தில் ஒரு வங்கி அதிகாரியாக உள்ளான். இளையவன் சார்டட் அக்கவுன்டன்டுக்குப் படித்துக் கொண்டுள்ளான். ஒரே மகள் திருமணமாகிப் போய்விட்டாள். இவர்கள் யாரும் தந்தையின் பாரம்பரியத் தொழிலைச் செய்யத் தயாராக இல்லை. நல்ல விலை வந்தால் அவரும் இந்த ஊரிலுள்ள தம் சொத்துக்களை விற்று விட்டு மனைவியுடன் ஊரைவிட்டு வெளியேறி மகன்களுடன் வசிக்கச் செல்லத் தயாராக உள்ளார். இப்படித்தான் இன்று பலரும் அந்த ஊரை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர்.

இந்துக்கள் மட்டுமல்ல சுமார் 150 முஸ்லிம் குடும்பங்களும் அப்படி வெளியேறியுள்ளதாகக் காவல்துறைப் பதிவுகள் சொல்லுகின்றன. “வெளியேறிய இந்துக்கள் பட்டியலை” ஹுகும்சிங் வெளியிட்ட பிறகு இப்படி “வெளியேறிய முஸ்லிம்களின் பட்டியல்” ஒன்றை முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வெளியேற்றமும் எந்த நிர்ப்பந்தத்தினாலும் நடந்ததல்ல. இதைவிட ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடித்தான் அவர்களும் கைரானாவை விட்டு வெளியேறுகின்றனர்.

டெல்லியிலும் லக்னோவிலும் உள்ள ஆளும் வர்க்கம் இந்தப் பிரச்சினைகளுக்குச் செவிசாய்ப்பதில்லை. இந்த நகர மக்களின் பிரச்சினைகளத் தீர்ப்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. விளைவு, மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் கொழிக்கிறார்கள்.

எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படி “இந்துக்கள் வெளியேற்றம்’ என்கிற ஒரு பொய் அவதூறைப் பரப்பிய பா.ஜ.க எம்.பி மீது இதுவரை குற்றப்பத்திரிகை எதையும் உ.பி அரசு பதிவு செய்யவில்லை.

மில்லி கெஸட் குழுவின் பரிந்துரைகள்

  1. சமூக ஒற்றுமையைச் சீரழிக்கும் வகையில் பொய்யைப் பரப்பிய ஹுகும்சிங் மீது உ.பி காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
    2. சட்டமன்றத் தேர்தளை ஒட்டி உ.பி மாநிலம் முழுமையும், குறிப்பாக கிழக்கு உ.பியில், பா.ஜ.கவும் அதன் கூட்டாளிகளும், இப்படியான மதக் கலவரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதை அரசு கவனமாகக் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.
    3. ஊடகங்கள், குறிப்பாக இந்து ஊடகங்கள் இப்படியான செய்திகளை வெளியிடுவதில் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அடிப்படையற்ற வதந்திகளை அவை உண்மையா என ஆராயாமல் வெளியிடக் கூடாது.

குழு உறுப்பினர்கள்:
சமூக ஆர்வலர் உவைஸ் சுல்தான் கான்; இதழாளர் புஷ்ப் ஷர்மா; இதழாளர் கவ்சர் உஸ்மான்; சமூக ஆர்வலர் மொஹமட் உஸ்மான்.

நன்றி: The Milli Gazette, New Delhi