நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்

(மார்ச் 16, 2016 ல் எழுதப்பட்ட இக்கட்டுரை ippodhu.com ல் அப்போது வெளிவந்தது) 

‘நல்ல முஸ்லிமையும்’ ‘கெட்ட முஸ்லிமையும்’ பிரித்தறிய இப்போது இந்துத்துவவாதிகள் ஒரு புதிய ‘ஈஸி’யான சூத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ‘பாரத் மாதா கி ஜே” என யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் நல்ல முஸ்லிம்கள். எவ்வளவுக்கெவ்வளவு சத்தமாகச் சொல்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு ரொம்ப நல்ல முஸ்லிம்கள். யார் இதைச் சொல்ல மறுக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கெட்ட முஸ்லிம்கள்.இதுதான் இப்போது நல்ல முஸ்லிம்களைக் கண்டறிவதற்கான ‘லிட்மஸ் டெஸ்ட்’ இதை பாஜக நடிகர் அனுபம் கெர் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

இந்தச் சோதனையில் சமீபத்தில் வெற்றி பெற்று நல்ல முஸ்லிம்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இந்தித் திரைப்பட உலகில் புகழ்பெற்ற கவிஞர், திரைக் கதாசிரியர் ஜாவேத் அக்தரும், சமீபத்தில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘அனைத்திந்திய உலமா மற்றும் மஷாய்க் வாரியத்தால்’ நடத்தப்பட்ட ‘உலக சூஃபி மாநாட்டில்’ கூடியிருந்த முஸ்லிம்களுந்தான்.
மாநிலங்களவை உறுப்பினரான ஜாவேத் அக்தார் தனது பதவி இறுதிநாளில் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையில் மூன்று முறை “பாரத் மாதா கீ ஜே!” என முழக்கமிட்டு தான் ஒரு ‘தேஷ் பிரேமி’ என்பதை நிரூபித்துக் கொண்டார். சூஃபி மாநாட்டில் கூடியிருந்த முஸ்லிம்களோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நரேந்திர மோடி “இஸ்லாம் சமாதானத்திற்கான மதம்” எனச் சொன்னபோதெல்லாம் “பாரத் மாதா கி ஜே !” என முழக்கமிட்டுத் தாங்கள் நல்லவர்கள் என நிறுவிக்கொண்டனர்.

ஜாவேத் அக்தார் மற்றும் உலக சுஃபி மாநாட்டைக் கூட்டிய உலமாக்களின் இந்த பாரத் மாதா முழ்க்கம் பற்றி விரிவாக எழுதியுள்ள ஜாவேத் ஆனந்த் சொல்லியுள்ளது போல நல்ல வேளையாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் யாரும் தொப்பி எதையும் மோடியிடம் கொடுத்து அணிந்துகொள்ளச் சொல்லவில்லை. அப்படி முன்பு ஒருமுறை தந்தபோது அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை யாரோ அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும்.

இவர்களின் இந்த ‘நல்ல முஸ்லிம்’ சோதனையில் சமீபத்தில் தோற்று ‘தேஷ் துரோகி’ ஆகி இருப்பவர்கள் ‘அனைத்திந்திய மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன்’ (AIMIM) அமைப்பின் தலைவர் அஸதுத்தீன் உவைஸியும் அவரது கட்சியின் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரான வாரிஸ் பதானும்தான். “ஜெய் ஹிந்த் எனச் சொல்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் பாரத் மாதா கி ஜே எனச் சொல்வதற்கு எங்கள் நம்பிக்கையில் இடமில்லை” என்பது அவர்கள் நிலைப்பாடு.

இதற்காக அவர்கள் மிகக் கடுமையாக இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர். வாரிஸ் பதான் இதை மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கூறியபோது சிவசேனை எம்.எல்.ஏ குலாப்ராவ் படீல், “இந்த நாட்டில் இருக்க வேண்டுமானால், நாய்களே, நீங்கள் வந்தே மாதரத்தைப் பாட வேண்டும்” என்றார். இரண்டு நாள் கழித்து காங்கிரஸ்காரர்கள் கேட்டுக் கொண்டதை ஒட்டி அவைத் தலைவர் இந்த வரிகளை சட்டமன்றப் பதிவிலிருந்து நீக்கினார். இந்தப் பாரத் மாதா கீ ஜே பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாடும் பாஜகவின் நிலைப்பாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஒருவர்தான் இதைக் கண்டித்துள்ளார்.

ஆக,விடுதலைப் போராட்டத்தில் ஒரு புல்லையும் கூடப் பிடுங்கிப் போடாதவர்களும், வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துப் பிழைத்தவர்களுமான சங்கப் பரிவாரிகள் இன்று இந்த ‘பாரத் மாதா கீ ஜே’ சோதனையை நடத்தி எல்லோருக்கும் தேசபக்தர் மற்றும் தேசத் துரோகி சான்றிதழ்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனந்த் தன் பதிவில் மறந்துபோன சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்கிறார்.

ஜாவேத் அக்தரைப் பொருத்த மட்டில் அவர் மத இணக்கம் பேணும் பாரம்பரியத்தில் வந்தவர். மற்ற மதங்களையும், சக நம்பிக்கையாளர்களையும் சமமாக அணுகி ஏற்கும் ஒரு பாரம்பரியம் இந்தித் திரைப்பட மரபில் வந்த உருதுக் கவிஞர்களுக்கு உண்டு. பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானில் குடியேறிய சாதத் ஹஸன் மன்டோ, ஃபெய்ஸ் அகமத் ஃபெய்ஸ் உட்பட இந்தியாவிலேயே வாழ்ந்த, வாழ்ந்து வருகிற சாஹிர் லுத்வானி, கைஃபி ஆஸம், மஜ்ரு சுல்தான்புரி, ஜன்நிசார் அக்தார், மஜாஸ் என்றொரு பட்டியலைச் சுட்டிக்காட்டுகிறார் சபா நக்வி. இவர்களில் பலர் 1930 களில் புகழ்பெற்றிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தவர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். ஒன்றாக இருந்த கம்யுனிஸ்டுக் கட்சியிலும் இருந்தவர்கள்.

ஜாவேத் அக்தர் ஜன்நிஸார் அக்தரின் மகன், கைஃபி ஆஸ்மி அவரது மாமனார். மஜாஸ் அவரது தாய்மாமன்.

எல்லாம் சரிதான். ஜாவேத் அக்தர் அவர்களே நீங்கள் இப்படியான ஒரு பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் ஒன்றை மறந்து போனீர்கள். இது 1930 கள் அல்ல. இது உங்கள் தந்தை ஜன்நிஸார் அக்தர் வாழ்ந்த காலமல்ல. இது வெறுப்பு அரசியல் அரியணையில் ஏறியுள்ள காலம். ஒரு கையில் தேசபக்திச் சான்றிதழுடனும் இன்னோரு கையில் கொலை ஆயுதங்களுடனும் பரிவாரிகள் அலையும் காலம். “‘பாரத் மாதா கீ ஜே’ எனச் சொல்லாவிட்டால், நாய்களே, நீங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்கிற குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் காலம். இந்த கருத்துரிமைப் பறிப்பை எதிர்த்து இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் தம் விருதுகளைத் துறந்து நிற்கும் காலம், உயர் கல்வி மாணவர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறைகளில் அடைக்கப்படும் காலம்…..

உலக சூஃபி மாநாடு கூட்டி நரேந்திர மோடிக்கு விருந்து வைக்கும் உலமா மற்றும் மஷாய்க் வாரியப் பெரியவர்களே நீங்களும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்த, மத நம்பிக்கைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறைத்த பாரம்பரியத்தில் (syncretic tradition) வந்தவர்கள்தான். மத ஒற்றுமையின் சின்னங்களாக டெல்லியிலும், ஆஜ்மீரிலும் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா மற்றும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி ஆகியோரின் அடக்கத் தலங்களைத் தேடி வரும் இலட்சக் கணக்கான மக்களின் வருகையால் பெருமையுற்றவர்கள் நீங்கள்.

நீங்களும் ஒன்றை மறந்துவிடலாகாது. ஹஜ்ரத் நிஜாமுதின் அவர்கள் எட்டு சுல்தானின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் எந்த அதிகாரத்தையும் தன் அருகே அவர் அண்ட விட்டதில்லை. அவர்களின் அரசவைக்கு அவர் சென்றதுமில்லை. சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் அவன் எப்படியாவது ஹஜ்ரத் அவர்களைத் தரிசித்துவிட முயன்றான்.மாறுவேடத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அவன் செல்லத் திட்டமிட்டிருந்ததை ஹஜ்ரத் அவர்களின் முக்கிய சீடரும், கில்ஜியின் அரசவையில் அதிகாரியாகவும் இருந்த அமிர் குஸ்ரோ ஹஜ்ரத் அவர்களுக்குத் தெரிவிக்க அவரும் கில்ஜி வரும் நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அமிர் குஸ்ரோவின் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் போது அவர் சொன்னார் : “எனக்கு முன் இரண்டே தேர்வுகள்தான் இருந்தன. ஒன்று நான் ஹஜ்ரத்துக்குத் துரோகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நான் என் ‘ஈமானை’ (நம்பிக்கையை) இழப்பேன்.. அல்லது உங்களுக்குத் துரோகம் இழைக்க வேண்டும். அப்போது நான் என் ‘ஜான்’ ஐ (உயிரை) இழப்பேன். நான் விரைவில் ஜானை இழந்து என் ஈமானைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்”.
கில்ஜி அமீர் குஸ்ரோ மீது சாட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டை மன்னித்தார் என்பது வரலாறு. இங்குள்ள பல சூஃபி மரபுகளில் (சில்சாலா) அதிகாரத்தை அண்டவிடாதவையும் இருந்தன, சமரசம் செய்து கொண்டவையும் இருந்தன. ஆனால் ஹஜ்ரத் நிஜாமுதீனும், க்வாஜா அகமத் சிஸ்டியும் எந்நாளும் அதிகாரத்துடன் சமரசம் செய்துகொண்டதில்லை.

சூஃபி மரபைப் பின்பற்றி வரும் ஒருவர் இந்த வரலாற்றை எல்லாம் சொல்லி, “இன்று உலக சூஃபி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்ததன் மூலம் அழைத்தவர்கள் தங்கள் ஈமானை இழந்தார்களோ இல்லையோ நிச்சயம் தங்களின் சில்சாலாவை இழந்தனர்” என்று முடித்ததையும் இது குறித்த தன் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார் ஜாவேத் ஆனந்த்.

அஸஸுத்தீன் உவைசி இன்று இந்திய அளவில் வளர்ந்து வரும் ஒரு முஸ்லிம் தலைவர். ஒரு நல்ல நாடாளுமன்றச் செயல் வீரர். முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியை துணிச்சலாக எதிர்கொள்பவர். எனினும் அவரது வழிமுறைகளில் ஒருவருக்குக் கருத்து மாறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் ஒப்பீட்டளவில் சூஃபி மரபின் மீதும், இஸ்லாமிற்குள் மத நல்லிணக்கத்திற்கு முதன்மை அளித்துச் செயல்பட்டு வரும் ஜாவேத் அக்தார் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையையும் நெருக்கத்தையும் பேணும் எங்களைப் போன்றவர்களும்…….. மன்னிக்கவும் ஜாவேத் அக்தார் அவர்களே, உலக சூஃபி மாநாட்டைக் கூட்டிய உலமாக்களே, உங்களோடு சேர்ந்து கொண்டு இந்த ‘பாரத் மாதாகி ஜே முழக்கத்தை ஒலிக்க நாங்கள் தயாராக இல்லை.

சீரழிக்கப்படும் உயர் கல்வி

குங்குமம், ஜூலை 20, 2018

முதல்முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபோது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி கே.ஆர். மல்கானி கல்வி என்பது ஒரு மேலைக் கருத்தாக்கம் எனவும் இந்தியர்களுக்கு அது முக்கியமில்லை எனவும் கூறியது அன்று பெரிய சர்ச்சையானது. வேதம் வழங்கப்பட்டவர்களாகக் கருத்தப்படும் ‘செமிடிக்’ மதத்தினருக்கே கல்வி முக்கியம், அப்படியான ஒரு அருளப்பட்ட நூல் என எதுவும் இல்லாத எமக்கு கல்வி அடிப்படையான ஒன்று அல்ல என்பது இதன் பொருள்.

ஆனால் இன்று இப்படி வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் அதை அவர்கள் நடைமுறையில் தொடங்கிவிட்டனர்.  உலகத் தரமான பல்கலைக்கழகங்கள், “மாண்புமிகு கல்வி நிறுவனங்கள்” (Institute of Eminence-IoE) என ஒருபக்கம் வாயளவில் முழங்கினாலும் உயர்கல்வியை பா.ஜ.க அரசு குறி வைத்துத் தாக்குவதை நாம் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள் முதலான கருத்தாக்கங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் உருவானபோது அதற்கான வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு அக்கால அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. ஷ்லெர்மேயர். ஃபிச்டே, வில்லியம் வான் ஹம்போல்ட் முதலான தத்துவ ஞாநிகளிடமே அது கொடுக்கப்பட்டது. இன்றளவும் முனைவர் பட்டம் பெறுவோருக்கு Doctor of Philosophy ((Ph.D), Master of Philosophy (M.Phil) என்றுதான் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ‘தத்துவம்’ என்கிற கருத்துடன் உயர்கல்வி இணைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் அறிவியல் படிப்பவர்களாயினும் ஷேக்ஸ்பியரையும், சங்க இலக்கியங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி.

வெறும் பொறியாளர்களையோ, ‘ரொபாட்’ களையோ தயாரிக்கும் நிறுவனங்கள் அல்ல பல்கலைக்கழகங்கள். இன்றளவும் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் என்றால், அவை பல்கலைக்கழகங்கள் தானே ஒழிய எவ்வளவுதான் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாயினும் அவற்றிற்கு அந்தப் பெருமையில்லை.

ஆனால் இன்று மோடி அரசு அறிவித்துள்ள ‘மாண்புமிகு கல்வி நிறுவனங்களில்” (Institutions of Eminence- IoE) இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. முதற்கட்டத் தேர்விலேயே அவை தள்ளப்பட்டன. விண்ணப்பித்திருந்த 74 பொதுப் பல்கலைக்கழகங்களில் மூன்று மட்டுமே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக் கழகங்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்படுவதாகச் சொல்லி ரிலையன்சின் ‘ஜியோ’, மணிப்பாய் அகாடெமி முதலானவற்றிற்கு மாண்பு மிகு பல்கலைக்கழகத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் எனப் பார்த்தாலும்கூட சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டதில் பொருள் இல்லை. அதிலும் தனியாருக்கே இங்கு முக்கியத்துவம்.

பல்கலைக் கழகங்கள் என்கிற கருத்தாக்கம் இன்று பல்வேறு வகைகளில் அழிக்கப்படுகிறது. டெல்லி ஜே.என்.யூவில் இனி ஐ.ஐ.டி போலத் தொழில்நுட்பக் கல்விகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பாடங்களை (humanities) ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் கருத்தியலாளரான ராதா ராஜன் என்பவர் ஐ.ஐ.டி யில் ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ கலைப்பாட வகுப்பு தொடங்கப்பட்டதும், பாடத்திட்டத்தில் ‘பன்மை ஒழுங்கு அணுகல்முறை’ (Interdisciplinary Approaches) கடைபிடிக்கப்பட்டதும்தான் “இப்படியான சீரழிவுக்குக் காரணம்” எனப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத் தக்கது.

மோடி அரசு பதவி ஏற்றவுடனேயே பல்கலைக் கழக ஆய்வு மாணவர்களுக்கு இனி ஆய்வு உதவித் தொகை கிடையாது என அறிவிக்கப்பட்டது. போராட்டங்கள் வெடித்தபின் இப்போது அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜே.என்.யூ வில் ஆண்டுக்கு 1408 மாணவர்கள் ஆய்வுப் படிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். சென்ற கல்வி ஆண்டில் இது 242 ஆகக் குறைக்கப்பட்டது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்திலும் அவ்வாறே ஆய்வுப் படிப்பிற்கான சேர்க்கைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த “பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு” (UGC) இப்போது ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்த உடனேயே அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று பொதுப் பல்கலைக் கழகக் கல்விக் கட்டணங்களும் கூட ஆயிரம் மடங்கு அளவுவரை உயர்ந்துள்ளன.

விடுதலை அடைந்த இந்தியாவில் உயர்கல்வியை வளர்க்க வேண்டும் என்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புதான் யு.ஜி.சி. பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குவது, 80,000 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்குவது ஆகியவற்றோடு பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பு வழங்குவது, அவை விதிமுறைகளின்படிச் செயல்படுகின்றனவா எனக் கண்காணிப்பது ஆகியனவும் அதன் பணிதான்.

இப்படி அரசுத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் யு.ஜி.சியை மட்டுமின்றி, அதே போன்று பிற கல்வித் துறைகளில் செயல்படும் “தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழகம்” (AICTE / NCTE), “மருத்துவக் கல்விக் கழகம்” (MCI), தேசிய கல்வி ஆராய்ய்ச்சி நிறுவனம் (NCERT) முதலான உயர்கல்விக்கான ஒழுங்காற்று நிறுவனங்கள் எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, பதிகலாக  அதிகாரப்படுட்தப்பட்ட ஒரே மைய  நிறுவனமாக்குதல் என்கிற முயற்சியை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மோடி அரசு தொடங்கியது. கல்விக் கொள்கை அறிக்கையில் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதை நடைமுறைப் படுத்தும் முயற்சி தொடங்கிவிட்டது. யு.ஜி.சி ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் “இந்திய உயர் கல்வி ஆணையம்” (HECI) அமைக்கப்படும் என அறிவித்தாயிற்று. நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கலைக்கப் படுகிறது..

காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அது ஜின்டால், ஜியோ, ஷிவ் நாடார் எனக் கார்பொரேட் மயமாக்கப்படுகிறது. உலகப் பல்கலைக் கழகங்களும் இங்கே கால்  பதிக்கப் போகின்றன.

உயர்கல்வி ஒரு பக்கம் கல்வி நீக்கம் செய்யப்பட்டு வெறும் தொழில்நுட்ப மயமாக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அது எளிய மக்களுக்கு எட்டாக் கனி ஆகிறது. அந்த இடத்தில் “திறன் பயிற்சி” (skill training) என்பது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் வெறும் திறன் பயிற்சிக்கு மட்டுமே தகுதியானவர்கள் என எளிய மாணவர்களை ஒதுக்கப் போவதும் இன்று புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டு விட்டது.

“மேக் இன் இந்தியா” வுக்கு இது போதாதா?

 

குறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்

2011 ல் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டல்களும் இல்லாமல் கிளர்ந்தெழுந்த அராபிய வசந்தத்தை நாம் அத்தனை எளிதாக மறந்துவிடக் கூடாது. இவற்றின் ஊடாக 30, 40 ஆண்டுகள் எவ்விதப் பெரிய எதிர்ப்புகளுமின்றி நடந்து வந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டன. துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் பென் அலி, ஹோஸ்னி முபாரக் போன்ற சர்வாதிகாரிகள் “இடிபட்ட சுவர்கள்” போல வீழ்ந்து மண்ணாயினர். அமெரிக்கா போன்ற முதலாளிய ஜனநாயக நாடுகளும்கூட வால்ஸ்ட்ரீட் அமர்வின் வெற்றியில் அதிர்ச்சி அடைந்து தனது உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளில் சில மாற்றங்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதாயிற்று.

புதிதாய்ப் பிறப்பெடுத்திருந்த சமூக ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்ததை உலகமே வியந்து நோக்கியது. எஞ்சியிருந்த சர்வாதிகாரிகளும், புதிதாய் உருவானவர்களும் அப்போதிருந்தே சமூக ஊடகங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். அவற்றின் மீதான கண்காணிப்புகளும் மிகுந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்களும் ஆங்காங்கு முயற்சிக்கப்பட்டன. இன்னொருபக்கம் அவற்றை அவற்றின் வழியிலேயே எதிர்கொள்ளும் முயற்சிகளும் தொடங்கின. எங்கேனும் கிளர்ச்சிகள் என்றால் அப்பகுதியில் சமூக ஊடகங்களை முடக்குவது என்பதை அரசுகள் வழமையாக்கிக் கொண்டன.

defendfreedom-696x447

2015 ல் அயான் ப்ரெம்மர் எழுதிய இது தொடர்பான கட்டுரை ஒன்றில் (Time, Nov 5, 2015) சமூக ஊடகங்களை எதிர்கொள்வது தொடர்பான இப்படியான நடவடிக்கைகளைப் பெரிய அளவுகளில் மேற்கொண்ட நாடுகள் என ஐந்தைக் குறிப்பிடுகிறார். அதில் முதலாக இடம்பெறுவது சர்வாதிகாரி எர்டோகானின் துருக்கி. 2015 ல் மட்டும் நீதிமன்றத் தீர்ப்புகளைக் காட்டி முடக்கப்பட்ட ட்விட்டர் பதிவுகளில் 92 சதம் துருக்கி மக்களின் சமூக ஊடகப் பதிவுகள் என்பது குறிப்பிடத் தக்கது. சமூக ஊடகங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கென எர்டோகான் 6000 பேர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அவர்களின் பணி சமூக ஊடகங்களின் மூலம் பொதுக் கருத்தைத் தனக்கு ஆதரவாக உருவாக்குவது. சமூக ஊடகங்களை ஒருபக்கம் இவ்வாறும், மறுபக்கம் சட்ட நடவடிக்கைகளின் ஊடாக ஒடுக்கியும் கையாண்டதன் மூலமே 2018 தேர்தலில் எர்டோகான் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்திலேனும் வெற்றி பெற முடிந்தது என இது குறித்து எழுதுவோர் சொல்கின்றனர்.

இரண்டாவதாகச் சீனாவும், மூன்றாவதாக சர்வாதிகாரி புடினுடைய ருஷ்யாவும் இவ்வாறு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நான்காவதாக இடம்பெறுவது பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் (ISIS). 90,000 ட்விட்டர் அக்கவுன்ட்களை அது கட்டுப்படுத்துகிறது சமூக ஊடகங்களின் ஊடாகவே சுமார் 20,000 வெளிநாட்டவர்களை அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை நோக்கி உறுப்பினர்களாக ஈர்த்துள்ளது எனச் சொல்லப்படுகிறது..

ஐந்தாவதாக இடம்பெறுவது நரேந்திரமோடியின் இந்தியா. சமூக ஊடகங்களுக்கு எதிராகப் பெரிய அளவில் சட்ட நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாவிட்டாலும் மக்களின் கருத்துருவாக்கத்தில் தலையிட்டு அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்பதில் இந்துத்துவ சக்திகள் கவனமாகச் செயல்படுகின்றன. தமிழகத்தில் இது பெரிய அளவில் உணரப்படாவிட்டாலும் வடமாநிலங்களில் இதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. 2015 டிசம்பர் கணக்குப்படி நரேந்திர மோடியின் ட்விட்டர் அக்கவுன்டை ‘ஃபாலோ’ பண்ணுகிறவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன். அவரது பதிவுகள் 30 மில்லியன், அதாவது மூன்று கோடி ‘லைக்’கள் வரை பெற்றுள்ளன. இதெல்லாம் மூன்றாண்டுகளுக்கு முந்திய கணக்கு. இப்போது இது இன்னும் அதிகரித்திருக்கலாம். அன்று ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அதிக ‘லைக்’குகள் வாங்குபவராக மோடிதான் இருந்தார். வெளிநாடு வாழ் உயர்சாதி இந்தியர்கள் இந்த மாதிரிப் பணிகளில் இந்துத்துவ சக்திகளுக்குப் பெரிய அளவில் கை கொடுக்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் இன்று வந்துள்ள ஒரு செய்தி நம் கவனத்தை ஈர்க்கிறது. எகிப்திய சர்வாதிகாரி அப்தல் படா அல் சிசி யின் அரசு இரண்டு நாள் முன்னர் (ஜூலை 16, 2018) ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ளது. இதன் மூலம் சமூக ஊடக ‘அக்கவுன்ட்’களை முடக்கும் அதிகாரத்தை எகிப்திய அரசு பெறுகிறது. “பொய்ச் செய்திகளை” வெளியிடுவதற்குக் காரணமான ஊடகவியலாளர்களைத் தண்டிக்கவும் இச்சட்டம் அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
அது மட்டுமல்ல 5000 க்கும் மேற்பட்டவர்களால் பின்பற்றப்படும் (அதாவது ‘ஃபாலோயர்ஸ்’ உள்ள) முகநூல், ட்விட்டர், ப்ளாக் முதலான சமூக ஊடகங்கள் யாவும் இனி செய்தி வெளியீட்டு ஊடகங்களாகவே (Media Outlet) கருதப்பட்டு, ‘தவறான செய்திகள்’ மற்றும் ‘சட்ட மீறல்களைத் தூண்டிவிடக் கூடிய செய்திகள்’ ஆகியனவற்றைப் பதிவது கடுமையான குற்றங்களாக அணுகப்படும்.

i5இந்தக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, “ஊடக நிர்வாகத்திற்கான உச்சநிலைக் குழு” (Supreme Council for the Administration of the Media) என ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது. இதன் தலைவரை சர்வாதிகாரி அல்சிசி நியமிப்பார்.barison

இனி எந்த ஒரு இணையத் தளங்களும் (websites) தொடங்கப்பட வேண்டுமானால் இந்த நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் செயல்படுபவற்றை முடக்கவும், அவற்றைச் செயல்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்கள் யாரும் இனி, “தடைசெய்யப்பட்ட பகுதிகளில்” எந்த வீடியோ பதிவும் செய்யக் கூடாது.

மிக விரைவில் இங்கும் இப்படியான சட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்படும் வாய்ப்புகளுண்டு என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியம்.

அருவமாக்கப்படும் முஸ்லிம்கள்

(MEIPPORUL.IN  ல் செப் 17, 2018 ல் வெளிவந்தது)

நான்கு நாட்களுக்கு முன்னர் (ஜூலை 13, 2018) முஸ்லிம்களுக்கு  காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி அளித்த இஃப்தார் விருந்து இன்றைய சூழலில் மிகவும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒன்று. தமிழகத்தில் வாழும் நமக்கு ஒருவேளை அது பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் இந்திய அளவில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. மதவெறிக் கும்பல்களால் முஸ்லிம்கள் கொல்லப்படுவது ஒரு அன்றாட நிகழ்வாக ஆகிப்போன நிலையில், அப்படி முஸ்லிம்கள் கொல்லப்படுவது இன்று ஒரு செய்தியல்ல, தினசரி ஒரு பேப்பர் விநியோகிப்பவன் வீட்டு வாசலில் அன்றைய நாளிதழை வீசிவிட்டு அகல்வது போல அல்லது ஒரு பால்காரர் பால்பாக்கெட்டைப் பெட்டியில் போட்டுவிட்டுப் போவது போல ஒரு அன்றாட நிகழ்வு என்றாகிப் போன நிலையில், யாராவது இதைப் பெரிதாக நினைத்துப் பேசினால் அவரை வினோதமாகப் பார்க்கக் கூடிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ராகுலின் இம்முயற்சி வரவேற்கத் தக்கதாக அமைகிறது.

காங்கிரஸ் இப்படி இஃப்தார் விருந்து அளிப்பது அப்படி ஒன்றும் புதிதல்ல. 2015 வரை அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இஃப்தார் விருந்து அளித்துக் கொண்டிருந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தவரை அவரும் இஃப்தார் விருந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபின் அதை நிறுத்தினார். அது மட்டுமல்ல பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் அளித்து வந்த இஃப்தார் விருந்தை மோடி புறக்கணிக்கவும் செய்தார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறியபின் இனி இங்கு இஃப்தார் விருந்தளிப்பது இல்லை என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 2015க்குப் பின் 2016, 2017 ஆண்டுகளில் ஏனோ இஃப்தார் விருந்தளிக்கவில்லை. குஜராத் 2002 படுகொலைகளுக்குப் பின், அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியைத் துக்கம் விசாரிக்க சோனியா காந்தி செல்ல விரும்பியபோது அன்றுள்ள நிலையில் அங்கு சென்றால் பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தப்பட்டதை ஒட்டி அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். 2004, 2008 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முஸ்லிம்களின் பிரச்சினையைப் பேசினாலே எதிர்மறையாகப் போகும் எனக் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் மௌனம் காத்தது. சமீபத்திய குஜராத் மாநிலத் தேர்தலின்போது ராகுல் ஒவ்வொரு இந்துக் கோவிலுக்காய்ச் சென்று வழிபட்டதை விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, தான் ஒரு பூணூல் அணிந்த இந்து என்று வேறு அறிவித்துக் கொண்ட நிலையில், இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவர் இஃப்தார் விருந்தளித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு மாற்றம்தான்.

மூத்த பத்திரிகையாளர் சீமா முஸ்தஃபா சரியாகவே சொல்லியுள்ளதுபோல், இன்று இந்திய முஸ்லிம்கள் ஒரு inviscibilisation-க்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதென்ன? முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் யாரும் கண்டுகொள்வதில்லை. தேர்தலில் அவர்களின் வாக்குகளும் யாருக்கும் தேவையில்லை. யாரும் அவர்களுக்கு ரமழான் வாழ்த்துக்களும் சொல்வதில்லை. ஆக இப்படி ஒரு இருபது கோடி மக்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பதே “காட்சியிலிருந்து மறைந்துபோன” ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதைத்தான் inviscibilisation என்கிறார் அவர். அதாவது “அருவமாக்கப்படுதல்” எனலாம். முஸ்லிம்கள் உருமறைக்கப்படுகின்றனர்; அருவமாக்கப்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் ராகுல் அளித்த இந்த இஃப்தார் விருந்து முக்கியமாகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ப்ரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தி.மு.கவின் கனிமொழி எனப் பலரும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் உடல்நிலை காரணமாக சோனியா அவர்கள் கலந்துகொள்ள இயலவில்லை என அறிகிறோம்.

சமீபத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக ராகுல் மேற்கொண்ட இன்னொரு முயற்சியும் வரவேற்கத்தக்க ஒன்று. சென்ற ஜூலை 11 அன்று டெல்லியில் முஸ்லிம் அறிவுஜீவிகளை ராகுல் சந்தித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது இன்னொரு முக்கியமான திருப்பம். முஸ்லிம்களை அடையாளப்படுத்துவது என்றாலே முல்லாக்கள், மதத் தலைவர்கள் என ஆகிப்போன நிலையில் இம்முறை முஸ்லிம் அறிவுஜீவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அழைக்கப்பட்டது கவனத்துக்குரியது. முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அறிவுப் பாரம்பரியம் உண்டு என்பது பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இந்தச் சந்திப்பில் பேரா. இர்ஃபான் ஹபீப், முன்னாள் திட்ட ஆணைய உறுப்பினர் சயீதா ஹமீத், கல்வியாளர் இல்யாஸ் மாலிக், சச்சார் ஆணைய உறுப்பினரும் செயலருமான அபூசாலிஹ் ஷரீஃப் , முன்னாள் துணைவேந்தர் இஸட். கே. ஃபைஸான், முன்னாள் அரசு உயர் அதிகாரி ஏ. எஃப். ஃபரூக்கி முதலான பலர் இதில் பங்குபெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் தவிர மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பிரியங்கா சதுர்வேதி முதலானோர் கலந்து கொண்டுள்ளனர். முஸ்லிம்கள், தலித்கள் முதலானோர் அச்சுறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ள இன்றைய நிலையில், காங்கிரசும் இந்து வாக்கு வங்கியை நோக்கி ஒரு ‘மென்மையான இந்துத்துவ’ அணுகுமுறையைக் கையாண்டு வரத் தொடங்கிய சூழலில் இந்த நிலையை மாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என முஸ்லிம் அறிவுஜீவிகள் தம் கவலையை அங்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் ஏற்பாடு செய்த இந்தச் சந்திப்பும் ஒரு முக்கியமான திருப்பமே. முஸ்லிம்கள் என்றாலே முல்லாக்களும் மதத் தலைவர்களும்தான்  என்பதாக மட்டுமே கருதப்பட்டும் அணுகப்பட்டும் வந்ததும் கூட ஒரு வகையில் வரலாற்றுப் பிழைதான். முஸ்லிம்கள் மத்தியிலும் அறிஞர்கள், அறிவுஜீவிகள், புகழ்பெற்ற நடிகர்கள், அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் என எவ்வளவோ பேர் இருக்கையில் பன்முகப் பரிமாணங்கள் உள்ள அம்மதத்தினரை ஒரு இறுக்கமான மதம் சார்ந்த அடையாளத்திற்குள் மட்டுமே சிறைப்படுத்துவதும் பெரும் பிழைதான். முஸ்லிம் இன்டெலெக்சுவல்களை முன்னிலைப்படுத்தவும், அவர்களின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும் வேண்டிய காலம் இது

பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி சொல்வதுபோல், கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார். உண்மைதானே. 1990கள் வரை இடஒதுக்கீடு பற்றி முஸ்லிம் கட்சிகள் பேசவில்லையே. இன்றளவும் இந்திய அளவில் அவர்கள் வலுவான அரசியல் கட்சியாக உருப்பெறவில்லையே. பொதுவான அரசியல் பிரச்சினைகளில் அவர்கள் போதுமானளவு கருத்துச் சொல்வது இல்லையே. எடுத்துக்காட்டாக இன்று பாஜக அரசு உயர் கல்வி மீது தொடுக்கும் தாக்குதல் குறித்து முஸ்லிம் கட்சிகளின் கருத்து என்ன?

ஃபைசல் தேவ்ஜி ஒப்பீட்டுக்காக இன்னொன்றையும் சுட்டிக் காட்டுவார். இந்தியாவில் உள்ள இன்னொரு சிறுபான்மையாகிய தலித்களை அம்பேத்கர் அப்படித் திரட்டவில்லை. அவர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை முன்வைத்து அவர்களை அவர் ஒன்றிணைத்தார். ஒரு அரசியல் சக்தியாக அவர்களை உருவாக்குவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அப்படியான ஒரு சூழல் இன்று அவசியம் தேவை. அந்த வகையில் முஸ்லிம் அரசியலில் இன்னும் அதிக அளவில் இன்டலக்சுவல்கள், அரசியல் களப் போராளிகள் பங்குபெற வேண்டும். இந்தப் பின்னணியில் ராகுல் அப்படியான முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு சந்திப்பை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்க ஒன்று.

இப்படியாக முஸ்லிம்களை invisibility எனும் நிலையிலிருந்து அவர்களைப் பார்வைப் புலத்திற்குள் கொண்டுவரும் இந்த எளிய முயற்சிகளையும் கூட   நரேந்திரமோடி, நிர்மலா சீதாராம் போன்றோரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. அறிவு ஜீவிகளுடனான அந்தச் சந்திப்பில் பேசும்போது ராகுல், “முஸ்லிம்கள் இன்று தலித்களைப்போல பலவீனப்படுத்தப்பட்ட ஒரு சிறுபான்மையாக ஆகியுள்ளனர்.  காங்கிரஸ் பல்வீனமானவர்களின் நலன்களுக்கான கட்சி என்கிற வகையில் அது முஸ்லிம்களுக்கான கட்சியும் கூட” எனும் பொருளில் பேசியதை அவர்கள் கண்டித்துள்ளனர்.

“காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி மட்டுமா?” என நரேந்திரமோடி  கேட்டுள்ளார். அதாவது முத்தலாக் முதலான பிரச்சினைகளில் முஸ்லிம் பெண்களோடு நிற்காமல் முஸ்லிம் ஆண்களோடு மட்டுமே காங்கிரஸ் நிற்கிறதாம்.

என்ன கொடுமை பாருங்கள்,  முஸ்லிம்கள் X இந்துக்கள் என்கிற எதிர்மையோடு இன்று கூடுதலாக இன்னொரு இருமை முஸ்லிம்களுக்குள்ளேயே கட்டமைக்கப்படுகிறது. முஸ்லிம் ஆண்களும் பெண்களும் ஏதோ சந்திக்கவே இயலாத இரு துருவங்களாக முத்தலாக் பிரச்சினையில் பிரிந்து நிற்பதைப் போல முன்வைத்து முஸ்லிம் ஆண்கள் X முஸ்லிம் பெண்கள் என்கிற ஒரு இருமையை மோடி போன்றோர் மிதக்கவிடுவது ஆபத்தானது. இப்படிப் பேசுவதோடு அவர்கள் நிற்கவில்லை. பாஜக-வில் உள்ள சிறுபான்மைப் பிரிவின் சார்பாக முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கென ஒரு சந்திப்பையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.

இன்னொரு பக்கம் பாஜக-வின் வீரப் பெண்மணி நிர்மலா அம்மையார் ராகுலின் பேச்சைத் திரித்து, “காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி எனச் சொல்லியுள்ளது. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் கொடுஞ்செயல் இது” எனவும், “2019 தேர்தலை முன்வைத்து அது இப்படிச் செய்கிறது எனவும், “இது 1947ல் உருவானதுபோல ஒரு மதப்பிளவுக்கு வழிவகுக்கும்” எனவும் விஷத்தைக் கக்கியுள்ளார். 1947 எனக் குறிப்பிட்டதன் ஊடாக ஒரு மதக் கலவரத்துக்கும் தாங்கள் தயார் என்கிற நிலையை எடுத்து அவர் பேசியுள்ளார். பாஜக தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி, “தேர்தல் வந்தால் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் மீது பரிவு வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் எப்போதும் invisible ஆகவே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பார்வைப் புலத்திற்குள் அவர்கள் கொண்டுவரப்படக் கூடாது என்பதில் இவர்கள் எத்தனை வெறியாகவும் குறியாகவும் உள்ளார்கள் என்பதற்கு காங்கிரசின் வரவேற்கத்தக்க இம்முயற்சிகளுக்கு இவர்கள் காட்டும் இந்த ஆபத்தான எதிர்வினைகள் ஒரு சான்று.

இஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்

(அடையாளம் பதிப்பகத்தின் நாதன் லீன் எழுதிய ‘இஸ்லாமிய வெறுப்புத் தொழில்’ நூலுக்கு எழுதிய முன்னுரை, , ஜனவரி 21, 2018)

அமெரிக்காவில் செழித்து வளரும் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் முன்னணியில் உள்ள மிக முக்கியமான நபர்களில் ஒருவர் ராபர்ட் ஸ்பென்சர். இந்த வேலையில் அவர் படு ‘பிசி’. ‘Truth About Muhammed’ என்பதைப் போல நபிகளையும், இஸ்லாமையும் பற்றிய அவதூறுகள் நிரம்பிய நூற்களை எழுதுதல், “அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்குவதை நிறுத்து’ (Stop Islamisation of America) முதலான இயக்கங்களை மிதக்க விடுதல், இஸ்லாமிய வெறுப்பு ‘ப்ளாக்’ ஒன்றில் வெறுப்பைக் கொட்டி எழுதித் தள்ளுதல், பல்கலைக் கழகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இப்படியான கருத்துக்களை முன்வைத்தல், ஏராளமான வெறுப்புப் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்குதல் என ஓய்வறியாமல் இயங்குபவர்.

2010 அக்டோபரில் The Tennessian எனும் புலனாய்வு இதழ் மேற்கொண்ட ஆய்வொன்று இவர் பற்றி, “இஸ்லாம் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் ஊட்டிக் காசு சம்பாதிக்கும் பலரில் ஒருவர்” எனக் குறிப்பிட்டது. அமெரிக்க வரி வசூல் துறையின் (Internal Revenue Service) ஆவணங்களை 2008 முதல் அந்த இதழ் ஆய்வு செய்து ஓரு குறிப்பிட்ட ஆண்டில் இப்படியான வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் டேவிட் ஹாரோவிட்ஸ்சின் Freedom Centre எனும் அமைப்பிலிருந்து ஸ்பென்சர் பெற்ற ஊதியம் 132,537 டாலர் என்பதையும், இவரது நிகழ்ச்சிகளின் வழியாக டேவிட் ஹாரோவிட்சுக்கு அந்த ஆண்டில் கிடைத்த வருமானம் 400,000 டாலர் என்பதையும் வெளிக்கொணர்ந்தது. டேவிட் ஹாரோவிட்ஸ் அமெரிக்காவின் இன்னொரு பெரிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முதலாளி. இங்கே குறிப்பிட்டுள்ளது ஒரு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் ஸ்பென்சரும் அந்த நிறுவனமும் சம்பாதித்த தொகை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் எப்படியானவை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள்.

ஸ்பென்சர் குறித்து நான் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தபோது அவரது அட்டகாசமான உரை ஒன்றின் Live வீடியோ பதிவு கிடைத்தது. மேலே சொன்ன டேவிட் ஹாரோவிட்சின் Freedom Center சார்பில் 2017 நவம்பர் 16-19 தேதிகளில், Florida Palm Beach ல் உள்ள Breakers Hotel ல் நடந்த நிகழ்ச்சி அது.
“எல்லோருக்கும் நன்றி” – என உரையைத் தொடங்கும் ஸ்பென்சர் தனது சமீபத்திய “அனுபவம்” என்று ஒரு “கதை”யைச் சொல்கிறார்: “சில நாள் முன்னர் நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். கூட்ட நெருக்கடியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்திருந்த ஒரு சிறுவன்  மேனேஜர் அறையில் நின்றிருந்தான். மேனேஜர் அவனை விசாரித்துக் கொண்டிருந்தார்.
“உன் பெயர் என்ன?”.

“முஹம்மது”

“ம்.. உன் அம்மாவைக் காணோமா?”

“ஆமாம்”

“உன் அம்மா பாக்குறதுக்கு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா?”

“இல்லை எனக்கு அதைப் பற்றி ஒரு கருத்தும் கிடையாது (No, I don’t have any idea)”

இந்த இடத்தில் ஒரு புன்னகையோடு ஸ்பென்சர் சொல்லுகிறார்: “இதுதான் Clash of Civilization”.
கொல்லென்று அரங்கில் ஒரே சிரிப்பு. அவ்வளவுதான். ஸ்பென்சர் தன் பேச்சைத் தொடர்கிறார்.
Clash of civilization என்பது சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் சாமுவேல் ஹட்டிங்டன் எழுதிய நூலின் தலைப்பு. பனிப்போர்க் காலம் முடிந்துவிட்டது. “இனி உலக அளவில் முரண்பாடுகள் மோதல்கள் எல்லாம் ‘முதலாளித்துவம் X கம்யூனிசம்’ என்பது போன்ற பழைய வடிவங்களில் நடக்கப் போவது இல்லை. இனி மோதல் என்பது நாகரீகங்களுக்கு இடையேதான்” – என்பதுதான் அந்த நூல் சொல்லும் சேதி. ஒரு பேரரசாக (Empire) தனக்குக் கீழ் உள்ள நாடுகளைத் தன் அதிகாரத்தின் கீழ் தொடர வைப்பதற்கு இப்போது முதலாளியக் கருத்தியலாளர்கள் கண்டுபிடித்ததுதான் இந்த “நாகரிகங்களின் மோதல்”. பச்சையாகச் சொல்வதானால் இனி நமக்கு எதிரி இஸ்லாம்தான். இஸ்லாமிய பயங்கரவாதம்தான் என்கிறது அந்நூல்.

இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய வெறுப்புத் தொழில் (Islmophobia Industry). மேலே உள்ள ஸ்பென்சரின் பேச்சைக் கூர்மையாகக் கவனியுங்கள். “முகம்மது” என்கிற பெயரின் ஊடாக அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம் என பார்வையாளர்கள் முன் அடையாளம் காட்டப்படுகிறான். நமது பண்பாட்டில் அம்மாவைப் பற்றிச் சொல்லச் சொன்னால நமது குழந்தைகள் அம்மா அப்படி இருப்பார்கள், இப்படி உடுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் சொல்லும். அதற்குத் தன் அம்மாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கும். “நமது பண்பாட்டில்” மட்டுமல்ல எந்தப் பண்பாட்டிலும் குழந்தைகள் அப்படிச் சொல்லும். ஆனால் ஒரு முஸ்லிம் குழந்தையால் அப்படிச் சொல்ல முடியாது என்கிறார் ஸ்பென்சர். ஒரு முஸ்லிம் குழந்தை அத்தகைய பண்புடன் உருவானதோ, வளர்க்கப்பட்டதோ அல்ல என்றெல்லாம் இந்தக் கதை மூலம் அவர் சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் குழந்தையால் என்ன அடையாளத்தைத்தான் சொல்லிவிட முடியும்? கருப்பு ஹிஜாப் அணிந்திருப்பாள் என்பதைத் தவிர என்றும் கேட்பவர்கள் பொருள் கொள்ள முடியும்.

i5இன்னொன்றையும் கவனியுங்கள். இது தாயைப் பிரிந்து வந்த “ஒரு” முஸ்லிம் குழந்தையின் கதை மட்டுமல்ல. எல்லா முஸ்லிம்களுமே அப்படித்தாரன். பெற்ற தாய் குறித்துக்கூட “எந்தக் கருத்தும்” இல்லாதவர்கள் அவர்கள் என்பதும் அதில் உட்பொதிந்து உள்ளது..
கதையின் முடிவில் “முஸ்லிம்கள் வேறு, நாம் வேறு”,. இருவரும் எந்தப் புள்ளியிலும் சந்திக்கவே இயலாத இரு வேறுபட்ட பண்பாட்டுக்குரியவர்கள். இந்த இரு துருவங்களுக்கும் இடையில் உரையாடல் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் பார்வையாளர்கள் மனத்தில் பதிக்கப்படுகிறது. ஒரு கேலியில் தொடங்கி வெறுப்பில் முடிகிறது ஸ்பென்சர் அவிழ்க்கும் கதை.

இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படும் விதங்களில் மேலே சொன்னது ஒரு வகை. முஸ்லிம்களைக் “கேலி” “கிண்டல்” (derison) செய்வது என்கிற வகையில் இதை அடக்கலாம். முஸ்லிம்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கேலிக்குரியதாகுவதன் ஊடாக அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட பண்புடையவர்களாய்ச் சித்திரிக்கும் போக்கு இது. அவர்கள் மீது வெறுப்பை (hatred) விதைப்பது, அவர்கள் பற்றி அச்சத்தை (fear) ஊட்டுவது என்பன இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின் இதர இரண்டு வடிவங்கள்.

இது டேவிட் ஹாரோவிட்ஸ் போன்றோருக்குப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழிலாகவும் உள்ளதைப் பார்த்தோம். ஜூன் 2016ல் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகமும் ‘அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான கழகமும்’ (Council on American-Islamic Relations -CAIR) இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டன. “2008 – 2013 காலகட்டத்தில் மட்டும் இப்படியான பல்வேறு அமைப்புகள் இந்தத் தொழிலில் செய்த முதலீடு 200 மில்லியன் டாலர். இது தன்னளவில் முழுமையான ஒரு தொழிலாக உள்ளது. கோடிக் கணக்கான டாலர் லாபத்தை இப்படி அவர்கள் ஈட்டுகின்றனர். தம்மை இஸ்லாமியர் மற்றும் இஸ்லாம் தொடர்பான பிரச்சினைகளில் பெரிய அறிஞர்கள் போல அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அப்படி அல்ல என்பதுதான் உண்மை. இப்படியான 74 அமைப்புகளை நாங்கள் எங்கள் ஆய்வில் அடையாளம் கண்டோம்” – என்கிறது அந்த அறிக்கை.

2.

‘அஸ்லான் மீடியா’ எனும் ஊடக நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக உள்ள நதன் லீன் 2012 ல் எழுதிய இந்நூல் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுப் பெரிய அளவில் வரவேற்பிற்குள்ளான ஒன்று. இந்நூலின் செம்மைப் படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பிலிருந்து (2017) இது மொழியாக்கப்பட்டுள்ளது. இஸ்லாம், மேற்கு நாடுகள், இரண்டுக்குமான உறவு ஆகியன குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவர் நதன் லீன். Understanding Islam and the West எனும் அவரது இன்னொரு நூல் விரைவில் வெளிவர உள்ளது. இந்நூலில் அவர் இப்போது அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு எப்படி மிகப் பெரிய தொழிலாகவும் ஆபத்தாகவும் வளர்ந்துள்ளது என்பதை விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூலின் தொடக்கத்தில் முஸ்லிம் என்பதற்காகவே ஒரு டாக்சி ஓட்டுநர் முன்பின் தெரியாத ஒரு நபரால் எந்தக் காரணமும் இன்றிக் கத்தியால் குத்தப்படும் ஒரு சம்பவம் உள்ளது. வாசிக்கும் யாரும் இதை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. இப்படியுமா நடக்கும் என்றுதான் யோசிக்கத் தோன்றும். ஆனால் அப்படித்தான் நடக்கிறது. “இஸ்லாமிய ஆபத்து” குறித்து ஊட்டப்படும் அச்சமும் வெறுப்பும்தான் இத்தகைய சம்பவங்களின் பின்னணியாக அமைகின்றன.

முன்னதாக Know Nothing, இப்போது Tea Party, American Protective Organisation முதலான அமைப்புகள், ட்ரம்ப், ந்யூட் கிங்ரிச், புஷ் போன்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் இந்த வெறுப்பு ஒவ்வொரு நிமிடமும் பொது வெளியில் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

“முஸ்லிம் பயங்கரவாதம்” என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்படையில் ஆபத்தானது, எல்லா முஸ்லிம்களுமே பயங்கரவாதத்தை மனதளவில் ஏந்தி இருப்பவர்கள்தான், திருக்குர் ஆன் என்பது வன்முறையை ஒரு வழிமுறையாகப் பரிந்துரைக்கும் நூல், நபிகள் நாயகம் பயங்கரவாதத்தின் முன்னோடி என்கிற கருத்தாக்கங்கள் பல மட்டங்களில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க இராணுவப் பயிற்சியகங்களில் (US Military Academy), “மிதவாத இஸ்லாம் (Moderate Islam) என எதுவும் இல்லை” என மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் படுகின்றது. “அல்குவேடா ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அதை மறந்து விடுங்கள். இப்போது நாம் இஸ்லாமிய நம்பிக்கையின் மீதே (Islamic Faith itself) கவனம் செலுத்த வேண்டும்” என அவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது.

எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடத்திலும் கூட இந்தப் போக்கை அடையாளம் காண முடியும். கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் ஒரு புகழ்பெற்ற நாத்திகப் பிரசாரகர். “புதிய நாத்திகர்கள்” என அழைக்கப்படுவோரில் ஒருவர். இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் உலகெங்கும் நிறுத்தப்படுவது குறித்து அவர், “அந்தப் படையினர் வீசும் க்ளஸ்டர் குண்டுகளிலிருந்து தெறிக்கும் எஃகுச் சில்லுகள் அவர்களின் (அதாவது முஸ்லிம்களின்) உடல்களை மட்டுமல்ல அவர்களின் இதயங்களில் சுமந்துள்ளார்களே அந்தக் குர் ஆனையும் துளைத்துச் செல்லட்டும்” எனப் புளகித்துச் சொல்வதை அவருடைய God is not Great எனும் நூலில் காணலாம். இப்படியான முற்போக்குகள் தம் இன வெறுப்பை வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள். சொல்லப்போனால் வெறுப்புத் தொழிலில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூடக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் இனவாதம், மதவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றைக் கண்டிப்பது என்கிற சாக்கில் முஸ்லிம்கள் மீதுத் தம் பங்கு இன வெறுப்பைச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது கொட்டுவார்கள்.

A protester holds a sign which reads " Islamophobia is not freedom" outside the French Embassy in London on August 25, 2016 during a "Wear what you want beach party" to demonstrate against the ban on Burkinis on French beaches and to show solidarity with Muslim women. French Interior Minister Bernard Cazeneuve warned Wednesday against stigmatising Muslims, as a furore over the banning of burkinis grew with the emergence of pictures showing police surrounding a veiled woman on a beach.  Dozens of French towns and villages, mostly on the Cote d'Azur, have banned beachwear that "conspicuously" shows a person's religion -- a measure aimed at the full-body Islamic swimsuit but which has also been used against women wearing long clothes and a headscarf. / AFP PHOTO / JUSTIN TALLIS
A protester holds a sign which reads ” Islamophobia is not freedom” outside the French Embassy in London on August 25, 2016 during a “Wear what you want beach party” to demonstrate against the ban on Burkinis on French beaches and to show solidarity with Muslim women.
French Interior Minister Bernard Cazeneuve warned Wednesday against stigmatising Muslims, as a furore over the banning of burkinis grew with the emergence of pictures showing police surrounding a veiled woman on a beach. Dozens of French towns and villages, mostly on the Cote d’Azur, have banned beachwear that “conspicuously” shows a person’s religion — a measure aimed at the full-body Islamic swimsuit but which has also been used against women wearing long clothes and a headscarf. / AFP PHOTO / JUSTIN TALLIS

நாங்கள் X அவர்கள் என்கிற எதிர்வு இன்று மிக நுணுக்கமாக எல்லா மட்டங்களிலும் முன்வைக்கப்படுகிறது. ‘நாங்கள்’ என்பது அமெரிக்கர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், மேற்கத்தியப் பண்பாட்டை ஏற்போர். ‘அவர்கள்’ என்பது இன்றைய நிலையில் முஸ்லிம்களையே குறிக்கிறது. “வஞ்சக ஜிஹாத்” (stealthy jihad), “ஊர்ந்துவரும் ஷரியா” (creeping sharia) என்பன போன்ற வெறுப்புச் சுமையுடன் கூடிய சொற் பாவனைகளை முஸ்லிம்கள் குறித்த அவர்களின் எழுத்துக்களில் நிறையக் காண முடியும்.

 

‘முஸ்லிம்கள்’, ‘இஸ்லாம்’ என்பவற்றின் ஊடாக அவர்கள் இந்தப் பரந்துபட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணற்ற பண்பாட்டு வேறுபாடுகள், மொழிகள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் வாழும் முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான, ஆபத்தான அச்சுப் பதிவுகளாகக் (stereotype) கற்பிக்கின்றனர்.

தீவுக்கூட்டமாக உள்ள தென்கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக் கண்டம், உயர் நிலப் பகுதியான ஆப்கானிஸ்தான், யூரேசிய ஸ்தெப்பிகள், டைக்ரிஸ் மற்றும் யூப்ரேட்ஸ் நீரிடைப் பகுதிகள், பாலைவன அரேபியத் தீபகற்பம், துருக்கி, கிழக்கு ஐரோப்பாவின் அல்பேனியா, போஸ்னியா, மத்திய ஆசிய டர்கிக் நாடுகள் எனப் பல்வேறு தட்ப வெப்பப் பகுதிகள், பண்பாடுகளின் ஊடாகப் பரவியுள்ள உலகு தழுவிய ஒரு மதத்தைப் பின்பற்றும் பல்லின மக்களை ‘முஸ்லிம்’ என ஒரே அச்சுப்பதிவாகக் குவித்து நோக்க இப்படியான வெறுப்புப் பார்வை ஒன்றால் மட்டுமே இயலும். இதன் மூலம் ஏதேனும் ஒரு பண்பாட்டுக்குரிய வழமையை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பண்பாகவே அடையாளப்படுத்த முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொன்னால் எளிதில் விளங்கும். “இருக்கும்’’ எனும் தமிழ்ச் சொல்லை “இரிக்கும்” என ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பாவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தால் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களையே அந்தச் சொல்லிக் கொண்டு கிண்டல் செய்வதைத் தமிழில் ஒரு முஸ்லிம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார் பிர்தௌஸ் ராஜகுமாரன் எழுதியுள்ள ‘ரணங்கள்’ எனும் நாவலில் தான் பள்ளி மாணவனாக இருந்தபோது பிற மாணவர்கள் அப்படி அழைத்துக் கேலி செய்தது தன்னை எந்த அளவு பாதித்தது என்பதைச் சொல்லுவார்.  முஸ்லிம்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதாக சில நகைச்சுவைகளும் இங்கு உண்டு. “பாலிருக்கும் பழமிருக்கும்” என்கிற திரைப் பாடலை ஒரு முஸ்லிம் பாடினால் அது எப்படி இருக்கும் எனக் கேட்டு, விடையாக “பாலிரிக்கிம், பழமிரிக்கிம்’ எனப் பாடுவார்கள் என நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்கள் கேலி செய்வது நினைவுக்கு வருகிறது. இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படி இஸ்லாமை ஒற்றை அடையாளமாக்கி ‘இஸ்லாமிய மூர்க்கம்’ (Islamic Rage) என்றெல்லாம் சித்திரிப்பது கேட்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டி வெறுப்பை உருவாக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பேருந்தில் பக்கத்தில் வந்து உட்காரும் எந்த ஒரு முஸ்லிமையும் ஒரு பயங்கரவாதியாகக் கருதித் துணுக்குறச் செய்யும் உத்தி இது.

இப்படியான வெறுப்பூட்டல்கள் அவர்களுக்கு வேறு பல அரசியல் பயன்களையும் ஈட்டித் தருகிறது.. மேலாதிக்க நோக்குடன் ஆஃப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின் மீது அவர்கள் மேற்கொண்ட படைஎடுப்புகள், ஈரான் முதலான நாடுகளின் மீது அவர்கள் விதித்த தடைகள், எல்லை மீறி அவர்கள் புகுந்து மேற்கொள்ளும் “துல்லியத் தாக்குதல்கள்” (surgical strikes) ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் இப்படி நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இப்படியான நடவடிக்கைகளால் அவர்கள் உலகளவில் சம்பாதிக்கும் கெட்ட பெயர்களையும் முஸ்லிம்கள் பற்றிப் பரப்பப்படும் இத்தகைய வெறுப்புக் கருத்துக்களால் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய போர்கள் வேறு வகைகளிலும் அவர்களுக்குப் பயனீட்டித் தருகின்றன. லாபம் ஈட்டும் போர் தொடர்பான தொழில்கள் (war industry) செழிக்கவும், நிதிநிலை அறிக்கைகளில் இராணுவத்துறைக்கு பிற நலத்துறைகளைக் காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊழலுக்கு வழி வகுக்கவும் பயன்படுகின்றன. ‘தேசபக்திச் சட்டம்’ (Patriotic Act) போன்ற உள்நாட்டு அடக்குமுறைச் சட்டங்களை இயற்றவும், மக்களின் சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், பேச்சுரிமையைக் குறைக்கவும், கல்வி நிலையங்களில் தலையிட்டு கல்விச் சுதந்திரத்தை (academic freedom) அழிக்கவும், எல்லாவிதமான மாற்றுக் கருத்துக்களையும் ஒடுக்கவும் முஸ்லிம் வெறுப்பு இவர்களுக்குப் பயன்படுகிறது. இப்படி ஒரு வெறுப்பு மொழியினூடாக பொதுச் சிந்தனை, பேச்சு, பார்வை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது அரசியல், அடக்கு முறை, பொருளீட்டல் என்கிற பொருளாயதப் பலன்களைக் குவிப்பதாகவும் ஆகிறது.

இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டு, இப்படியான அடக்குமுறைச் சட்டங்கள் அவர்களுக்கு முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தச் சமுதாயத்தையும் மிரட்டி வைக்கவும் அவர்களுக்குப் பயன்படுகிறது.

இன்னொரு பக்கம் தங்களின் ஒரு சார்புக் கொள்கைகளுக்கு மக்களிடம் ஆதரவு தேடுவது என்பதற்கு அப்பால் மக்களின் பார்வைகளையே திருத்தித் தங்களுக்கு இயைபாக்கவும் வெறுப்புத் தொழில் அவர்களுக்குப் பயன்படுகிறது.

3.

அமெரிக்க வரலாற்றைப் பார்த்தீர்களானால் இப்படிப் பிற சமூகங்களின் மீது வெறுப்பைக் கக்குவது அவர்களுக்குப் புதிதல்ல என்பது விளங்கும். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய அமெரிக்கா என்பது வெகு சமீபத்தில் ஐரோப்பிக் குடியேற்றங்களால் உருவாகிய நாடு. நீண்ட வரலாற்றுப் பின்னணியற்ற அந்நாட்டில் சுதந்திரம் அடைந்த காலந் தொட்டே (1776) பிற நாடுகள், பிற மக்கள், பிற மதங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் மீது அதற்கு ஒரு ஐயமும் அச்சமும் இருந்து வருகிறது. தொடர்ந்து அது வெளியுலகில் மட்டுமின்று தன் நாட்டுக்குள்ளேயும் ஒரு ஆபத்தான எதிரியைத் தேடிக் கொண்டே இருந்தது எனலாம். அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளார்ந்து இருந்த இந்த உளவியல் சிக்கல் அவர்களின் அரசியலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பது குறித்த வரலாற்றறிஞர் ரிச்சர்ட் ஹாஃப்ஸ்டாடர் எழுதியுள்ள   The Paranoid Style in American Politics எனும் கட்டுரை முக்கியமான ஒன்று.

1790 களில் அமெரிக்கர்களின் இந்த அச்சமும் வெறுப்பும் அறிவொளிக்கால இல்லுமினாட்டிகளுக்கு எதிராக இருந்தது. பவேரியன் இல்லுமினாட்டி என்பது மூடநம்பிக்கைகள், பொதுவாழ்வில் மதத்தின் தலையீடு முதலானவற்றை எதிர்த்து 1770 களில் உருவான ஒரு இரகசிய அமைப்பு. அது குறித்த அச்சமும் வெறுப்பும் அப்போது மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் மத்தியில் வெளிப்பட்டன. 1850 களில் இல்லுமினாட்டிகள் குறித்த அச்சம் விலகி, பதிலாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இப்போது அமெரிக்கர்களின் வெறுப்புக்கு இலக்காயினர். கத்தோலிக்கர்களின் புலப்பெயர்வு குறித்து மிகப் பெரிய அச்சம் அபோது பரப்பப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கர்களின் வெறுப்புக்கும் அச்சத்திற்கும் அப்போது உலகெங்கிலும் வளர்ந்து வந்த கம்யூனிசம் காரணமாகியது.

1940 களில் விஸ்கான்சின் செனட்டராக இருந்த ஜோசப் மெக் கார்த்தியின் காலத்தில் கம்யூனிஸ்டுகள் என்கிற ஐயத்திற்கு உள்ளான அனைவரும் பெரிய அளவில் துன்புறுத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்து, அவதூறு செய்து, தண்டனைக்கும் உள்ளாக்கப்படும் அவலத்தைக் குறிக்க ‘மெரக்கார்த்தியிசம்” (McCarthyism) என்றொரு சொல்லே உருவானது. Americans Battling Communism, (ABC) என்றொரு அமைப்பும் அப்போது கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்பட்டது.

21ம் நூற்றாண்டு விடிந்தபோது அமெரிக்கர்களின் வெறுப்பு அரசியலுக்கு முஸ்லிம்கள்  இலக்காக்கப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம். முஸ்லிம்கள் மீது 1970கள் தொடங்கியே வெறுப்பு பரப்பப்ப்பட்டு வந்த போதும் அது சீறி வெளிப்படும் புள்ளியாக 9/11 அமைந்தது. அதை ஒட்டி அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் கக்கிய விஷச் சொற்கள் வெளிப்படையாக வெறுப்பைக் கக்கின.

“அந்தத் தேவடியா மகன்களை (bastards) துரத்திப் பிடிப்போம்”

“ஆப்கானிஸ்தானில் உள்ள தாயோழிகளை (mother fuckers) குண்டு வீசி அழிப்போம்’

“ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசி அதைக் கற்காலத்துக்கு அனுப்புவோம்”

i3என்றெல்லாம் ஒரு மிக முன்னேறிய நாட்டின் தலைவர் சொற்களை உதிர்த்ததை உலகம் வேடிக்கை பார்த்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கர்களின் மொழி நன்மை X தீமை (Good x Evil) என்கிற வடிவில் கட்டமைத்த இருமை எதிர்வுகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:

நாம்   X  அவர்கள்

நாகரிகம் X   காட்டுமிராண்டித்தனம்

ஜனநாயகம் X  பயங்கரவாதம்

சட்டம் ஒழுங்கு X சட்டவிரோதம்

நீதி  X  அநீதி

கோழை  X  வீரம்

சகிப்புத்தன்மை  X  சகிப்பின்மை

இடப்புறம் உள்ள அனைத்தும் மேற்குலகையும், (West), வலப்புறம் உள்ளவை முஸ்லிம்களையும் இஸ்லாமையும் (Islam) குறிப்பன. இந்த இரண்டு எதிர்வுகளும் ஒன்றை ஒன்று சந்திக்க இயலாதவை, முற்றிலும் வேறுபட்டவை, சாராம்சமான பண்புகளைக் கொண்டவை என்பது இதன் உட்கிடக்கை. Evil என்கிற கிறிஸ்தவக் கருத்தாக்கம் இங்கே முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. ”மீட்பரின்” (Messiah) வருகைக்குத் தயார் செய்ய இங்குள்ள யூதரல்லாதவர்கள் அனைவரையும் வெளியேற்றித் தூய்மைப் படுத்த வேண்டும் என்பது சியோனிச மதவாதம் முன்வைக்கும் ஒரு கருத்தாக்கம். அதை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றுவதுதான் மேற்குலகின் மீட்சிக்கு (redemption) அவசிய நிபந்தனை என்கிற வடிவில் இந்த இஸ்லாம் குறித்த அச்சம் மதச் சிந்தனைகளின் ஊடாகவும் புனிதப்படுத்தப் பட்டது.

மொத்தத்தில் முஸ்லிம் = பயங்கரவாதி ; இஸ்லாம் = பயங்கரவாதம் என்கிற சமன்பாடு மேற்குலகம் முழுவதும் உறுதியாகப் படிந்தது.

தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே, “முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவது தடுக்கப்பட வேண்டும்” எனப் பேசியதையும், அவர் அதிகாரத்திற்கு வந்த கையோடு ஏழு முஸ்லிம் நாடுகள் மீது அத்தகைய தடை விதிக்கப்பட்டதையும் அறிவோம்.

இப்படியான அமெரிக்க மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது?

கோட்பாட்டாளரும் தத்துவச் சிந்தனையாளருமான ஸ்லாவோஜ் சிசெக் 1975 ல் வெளிவந்த ஸ்பீல்பெர்கின் புகழ் பெற்ற Jaws எனும் திரைப்படம் குறித்து வைத்த விமர்சனத்தை இதற்குப் பொருத்திப் பார்க்கலாம். பீட்டர் பெஞ்ச்லியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. ‘அமிட்டி’ தீவில் கடற்கரைக்கு வரும் மக்களைத் தாக்கிக் கொன்று சாப்பிடும் ஒரு சுறா மீன் பற்றிய கதை அது. ஆனால் சிஸெக் அது சுறா மீன் பற்றிய படம் அல்ல என்றார். சுறாமீன் அதில் ஒரு குறியீடுதான். உண்மையில் அது ‘பாசிசம்’ குறித்த ஒரு கதையாடல் என்பது அவர் முன்வைக்கும் கருத்து.

ஒவ்வொறு கோடையிலும் எண்ணற்ற ‘டூரிஸ்டுகள்’ அமிட்டி தீவில் வந்து குவிகின்றனர். அந்த வருகை அங்கு வாழும் மக்களுக்குப் பல்வேறு விதமான அச்சங்களையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. டூரிஸ்டுகளின் இந்தப் படைஎடுப்பு பெரிய அளவில் அத் தீவைக் குப்பையாக்குகிறது, பொது ஒழுங்கு குலைகிறது, குற்றச் செயல்பாடுகளுக்கு வழி வகுக்கிறது. மொத்தத்தில் அவர்களின் பாரம்பரியத் தீவு வாழ்க்கை சிதைகிறது. இந்த அச்சங்கள் அச் சமூகத்தில் கூட்டு மனத்தில் ஒரு அழுத்தத்திற்குக் காரணமாகிறது. இங்கே அந்தச் சுறாமீன் என்பது இத்தகைய பல்வேறு அச்சங்களையும் உள்ளடக்கும் ஒரு குடையாக அவர்கள் முன் அமைகிறது என்கிறார் சிஸெக்.

சரி மொத்தப் பிரச்சினைகளுக்கான அச்சங்களையும் இப்படி ஒரு புள்ளியில் குவிப்பதால் அவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைக்கிறது? இந்த ஒரு பூதத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அந்தச் சமூகம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிற பொய்யான ஆறுதல்தான் அது.

ஹிட்லரின் ஜெர்மனியில் அன்று அந்தச் சமூகம் சந்தித்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் யூதர்கள் இலக்காக்கப்பட்டது அப்படித்தான். யூதர்கள்தான் அவர்களின் ஆட்கொல்லிச் சுறா. 9/11 க்குப் பிந்திய மேற்குலகிற்கு முஸ்லிம்கள்தான் அந்தச் சுறாமீன். அவர்களை ஒழித்தால், வெளியேற்றினால் தங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இன்று உள்ளனர்.

அவர்கள் வெளிப்படுத்தும் வெறுப்பு உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால் இதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வரத் தடைவிதித்ததற்கு ட்ரம்ப் என்ன காரணம் சொன்னார்? 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத்தான் சுட்டிக் காட்டினார். ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதலை நடத்தியவர்களில் யாரும் இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. அது மட்டுமல்ல1975 முதல் 2015 வரையிலான இந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஏழு நாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரும் ஒரு அமெரிக்கரையும் கொன்றதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் அமெரிக்க உளவியல் அந்த நாடுகளின் மக்களை வெளியேற்றினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நம்புகிறது. அமிட்டி தீவு மக்கள் அந்தச் சுறாவைக் கொன்றுவிட்டால் அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் ஒழிந்துவிடும் என நம்பியதைப் போல.

இப்படி ஏதோ ஒன்றைத் தங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கற்பித்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தாங்கள் எவ்வாறு காரணமாக உள்ளோம் என்பதை அவர்கள் எளிதாக மறந்து விடவும் முடிகிறது.

4       

அமெரிக்க மண்ணில் 1970 தொடங்கியே முஸ்லிம் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான அச்சுப் பதிவாகவும், பயங்கரவாதிகளாகவும், பயங்கரவாதத்துக்குத் துணை போகிறவர்களாகவும் சித்திரிக்கும் நிலை ஏற்பட்டது. 9/11 ஐ ஒட்டி இது ஒரு மிகப் பெரிய பரிணாம மாற்றத்தை எட்டிய வரலாற்றைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டுள்ளோம்.

இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?

  1. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கு அதிகரித்தன. முன் குறிப்பிட்ட CLAIR அமைப்பைச் சேர்ந்த வில்ஃப்ரெடோ அம்ர் ரூயிஸ், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்துடன் தாங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது (ஜூன் 2016), “ஃப்ளோரிடா மாநிலத்தில் மட்டும் சென்ற ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 500 மடங்கு அதிகரித்துள்ள” என்றார். இவற்றில் முஸ்லிம்கள் மீதான நேரடியான தாக்குதல்கள் தவிர மசூதிகள், முஸ்லிம் சந்திப்பு மையங்கள் ஆகியவை தாக்கப்படுதல், முஸ்லிம் அமைப்புகளுக்கு வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் விடுத்தல் ஆகியவையும் அடங்கும். அமெரிக்காவில் வாழும் பல்வேறு இனங்கள் மத்தியிலும் ஆய்வு மேற்கொண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை முஸ்லிம்கள்தான் அதிக இனவெறுப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது. 18 சத முஸ்லிம்கள் தாங்கள் எப்போதும் (regularly) இன வெறுப்புக்கு ஆளாவதாகவும், 26 சதம் பேர் அவ்வப்போது இன வெறுப்பை அனுபவிப்பதாகவும், 16 சதம் பேர் எப்போதாவது இப்படியான அனுபவங்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். Institute for Social Policy and Understanding (ISPU) எனும் அமைப்பின் இயக்குநர் மெய்ரா நகாஸ், “ஒவ்வொறு ஐந்து அமெரிக்க முஸ்லிம்களிலும் ஒருவர் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்புச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு கருத்துக் கணிப்பில் அறிய வந்துள்ளது” எனக் கூறியதை அல் ஜசீரா தளத்தில் (2016 ஜூன் 24) காணலாம்.
  2. கடந்த பத்தாண்டுகளில் இந்த முஸ்லிம் வெறுப்பு இன்னொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. முஸ்லிம் தொழுகைத் தலங்கள் (mosques) மற்றும் சமுதாய மையங்கள் (community centers) கட்டுவதற்கு எதிர்ப்புகள் மிகுகின்றன. இதன் அடுத்த கட்டமாக இப்போது, “முஸ்லிம்கள் தங்களின் ஷரியா சட்டத்தை அமெரிக்காவில் திணிக்கப் பார்க்கிறார்கள்” என்கிற கருத்து மிகப் பெரிய அளவில் பரப்பப் படுகிறது. கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஷரியாவுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. 2013 தொடங்கி முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களின் எண்ணிக்கை மட்டும் 81. பெரும்பாலும் இவற்றை முன்மொழிந்தது குடியரசுக் கட்சிதான்.

குடியரசுக் கட்சி செனட்டர் ஆலன் ஹேய்ஸ் பேசும்போது, “எங்களின் மதம், அரசியல், அமைதியான வாழ்க்கை எல்லாமே ஷரியா மற்றும் இஸ்லாமின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எனது நாட்டின் மீதும் மதத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் இந்தப் படை எடுப்பிலிருந்து (invasion) என் சந்ததியைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்வது தேசத் துரோகம் (sedition). எங்கள் அரசையும் தேசத்தையும் (country) அவர்கள்: கவிழ்க்க (overthrow) முனைகிறார்கள்” என்று கூறியதை நீங்கள் இணையத் தளங்களில் காணலாம் (அல்ஜஸீரா, ஜூன் 24, 29016). இந்த வெறுப்புரையில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக் கவனியுங்கள். இப்படி ஏராளமாகச் சொல்ல முடியும். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

அமெரிக்கர்களை நாம் பண்பாட்டிலும் அறிவிலும் முன்னேறியவர்கள் என நினைப்பது எத்தனை அபத்தம். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் ஒரு சதம்தான். ஐரோப்பாவில் அவர்கள் 6 சதம். இந்த ஒரு சதம் மக்கள் அமெரிக்காவின் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்துவிடப் போகிறார்கள் என ஒரு அரசியல்வாதி பேசுகிறார். அதை ஏற்றுக் கொள்வதற்கும் அங்கு ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது.

அமெரிக்காவில் அமெரிக்கச் சட்டம்தான் இறுதியானது. இந்நிலையில் ஷரியா சட்டம் அமெரிக்கச் சட்டத்தை அழித்துவிடும் என்பதன் பொருளென்ன? இப்படியான ஒரு சூழல் இருப்பதாகச் சொல்லி இதற்கெதிராகச் சட்ட வரைவுகள் மொழியப்படுவதும் முஸ்லிம்கள் ஷரியாவைக் கைவிடவேண்டும் என முழக்கங்கள் உருவாவதும் எத்தனை அபத்தம். அமெரிக்காவில் Federal Arbitratin Act (1925) ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன்படி அமெரிக்கச் சட்டங்களின்படிச் செயல்படும் நீதிமன்றங்களுக்கு வெளியே “மத்தியஸ்த” முறையில் (arbitration) இரு தரப்பினர் தமக்குள்ளான விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால் இருதரப்பும் அதை ஏற்றுக் கொண்டால்தான் அது சாத்தியம். ஏதேனும் ஒரு தரப்பு அதை ஏற்றுக் கொள்ளாதபோது அமெரிக்கச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில்தான் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

i2ஷரியா குறித்து அது கையை வெட்டுவது, பொது வெளியில் தலையைக் கொய்வது என்பது போன்ற சொல்லாடல்களை முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவதும் அபத்தம். ஷரியா என்பது தண்டனைச் சட்டமல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள் ஷரியாவைக் கடை பிடிக்கிறார்கள் எனில் அது இங்கு குற்றச் செயல்களை விசாரித்துத் தண்டனை வழங்குவது என்கிற வடிவில் அல்ல. ஷரியா என்பது அடிப்படையில் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கான ஒரு வழிகாட்டி.. அது முற்றிலும் தனிநபர் சார்ந்த (personal), இறைவனுக்கும் அவனை விசுவசித்து வணங்குபவருக்குமான தனிப்பட்ட உறவு சார்ந்த ஒன்று. ஐந்து வேளை தொழுவது, ரமலான் நோன்பிருப்பது முதலான மதக் கடமைகளைச் சொல்வது அது. அமெரிக்காவிலோ இந்தியாவிலோ வாழ்கிற எந்த முஸ்லிமும் தங்களின் ஷரியா சட்டம் அமெரிக்க அல்லது இந்தியச் சட்டங்களை எல்லா அம்சங்களிலும் மீறிச் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிமை நோக்கி நீ ஷரியாவைக் கைவிட வேண்டும் எனச் சொல்வது நீ முஸ்லிம் மதத்தையே கைவிடு எனச் சொல்வதுதான்.

முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி எல்லா மதங்களிலுமே இப்படியான மத வழிகாட்டல்கள் உண்டு. கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்குக் Canon Law, யூதர்களுக்கு Halakhah என்பனவெல்லாம் ஷரியாவுக்கு இணையாக அம்மதங்களில் வழங்கப்படும் சட்டங்கள்தான். “(மதத்தைக் கடைபிடிப்போர் நடக்க வேண்டிய பாதை” என்பதாகவே இவை பொருள் கொள்ளப்படுகின்றன.

2012ல் மன்ஹாட்டன், டென்னெஸ்சி, விஸ்கான்சின், கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ் முதலான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிரான தீவிர இயக்கங்கள் எழும்பின. பள்ளிவாயில்களை “பேய்வீடு” என்னும் பொருள்பட Monster Mosques என இவர்கள் முன்வைத்தனர். மன்ஹாட்டனில் ‘பார்க் 51 இஸ்லாமிய மையம்’ ஒன்றை முஸ்லிம்கள் அமைக்கத் தொடங்கியபோது அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் உருவாயின. வலதுசாரி இயக்கங்களான “டீ பார்டி” மற்றும் Grand Old Party (GOP) என அழைக்கப்படும் குடியரசுக்கட்சி ஆகியவை வெளிப்படையாக இம்முயற்சியை எதிர்த்துக் களம் இறங்கின. கட்டுவதற்கு முன்னதாகவே “Not Welcome” “, “No More Mosques in America” முதலான முழக்கங்களை அந்தப் பகுதிகளில் எழுதுவது, வளர்ப்பு நாய்களுடன் வந்து மசூதிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவது எனப் பல வடிவங்களில் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. வாகனங்களை நிறுத்த இடஞ்சலாக இருக்கின்றன என்பனபோன்ற (parking issues) அற்பப் பிரச்சினைகள் எல்லாம் ஊதிப் பெருக்கப் பட்டன. இதை ஒட்டி இந்த மாதிரியான இடங்களில்தான் இத்தகைய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என மாநில அரசுகள் அவசர ஆணைகளை (Zoning Ordinances) இட்டன.

பார்க் 51 க்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற இஸ்லாமிய வெறுப்பாளி பமீலா கெல்லர் முக்கியமானவர். American Freedom Defense Initiative ,  Stop Islamization of America முதலான இஸ்லாமிய வெறுப்பு அமைப்புகளின் ஊடாகவும் அவரது PamelaGeller.com தளத்தின் ஊடாகவும் அவர் வெளிப்படுத்தும் மிக வன்முறையான வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நீங்கள் இணையத்தில் ஏராளமாகக் காண முடியும். இவரது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் Islamofacism முதலான கருத்தாக்கங்களும் சொல்லாட்சிகளும் பெரிய அளவில் இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முனைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பார்க் 51 இஸ்லாமிய மையம் கட்டும் முயற்சிக்கான எதிர்ப்பில், “the ground zero mega-mosque,”  “monster mosque,” முதலான சொல்லாட்சிகளை உருவாக்கியும் “stab in the eye of America.” முதலான முழக்கங்களை முன்வைத்தும் வெறியூட்டியவர் இவர். ‘லவ் ஜிகாத்’ என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்தாக்கங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டு அவை முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு பயன்படுத்தப் படுவதையும், அதை ஊடகங்கள் முதல் நீதிமன்றங்கள் வரை ஏற்றுக் கொண்டுள்ளதையும் நாம் இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியான விஷம் தோய்ந்த சொல்லாட்சிகளின் உருவாக்கம் எப்படி அப்பாவி மக்களைப் பாதிக்கிறது என்பதற்கு இன்று கேரளப் பெண் ஹாதியாவின் வாழ்க்கை ஒரு சான்று.

2011 ஆகஸ்டில் நார்வே நாட்டில் நடந்துகொண்டிருந்த இளைஞர் பயிற்சி முகாம் ஒன்றில் புகுந்து 77 பேர்களைச் சுட்டுக் கொன்று 200 பேர்களைக் காயமாக்கிய ஆந்த்ரே ப்ரெய்விக் தன் 1500 பக்க அறிக்கையில் பமீலா கெல்லரின் இணையத் தளத்தைக் குறிப்பிட்டுத் தான் அதனால்தான் எழுச்சி பெற்றதாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ப்ரெய்விக்கின் இந்தப் பயங்கரவாத நடவடிக்கையைக் கெல்லர் வெளிப்படையாகப் பாராட்டினாள். “நார்வேயை எதிர்காலத்தில் முஸ்லிம்களால் நிரப்ப இருந்த கட்சியின் வருங்காலத் தலைவர்களைத்தான் ப்ரெய்விக் சுட்டுத் தள்ளியுள்ளான்” எனச் சொன்ன கெல்லர், “(கொல்லப்பட்டவர்களின்) அந்த மூஞ்சிகளைப் பாருங்கள். தூய நார்வேஜிய முகங்கள் அல்ல அவை. மத்திய கிழக்குச் சாயல் கலந்த மூஞ்சிகள் அவை” என அப்பட்டமாக அந்தப் பயங்கரவாதத்தை கெல்லர் ஆதரித்து எழுதியதையும் நீங்கள் காணலாம்.

ஆக மத்திய கிழக்கு, அதாவது முஸ்லிம் சாயல் உள்ள யாரையும் சுட்டுத் தள்ளலாம்.

5.

இப்படியாக இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மிகத் தீவிரமாக மேலை நாடுகளில் நடந்துகொண்டுள்ளது. இங்கிருந்து சென்று வாழ்கிற இந்திய உயர்சாதியினர் அவற்றால் ஊக்கம் பெறுகின்றனர். அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றனர்.

இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் ரிச்சர்ட் டாவ்கின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் போன்ற நவ நாத்திகர்கள், பமீலா கெல்லர் போன்ற பெண்கள், ஃபரீட் ஸகாரியா போன்ற முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் உண்டு. மதங்களை விமர்சிப்பது பெண்ணியச் சிந்தனைகளை ஆதரிப்பது முதலான வடிவங்களில் தம்மை மிகவும் முற்போக்காகக் காட்டிக் கொண்டு இப்படி இஸ்லாமிய வெறுப்பை முன்வைப்பவர்கள் இந்த முஸ்லிம் வெறுப்புத் தொழிலில் மிக எளிதாக முன்னுக்கு வருவதையும் நீங்கள் காணலாம். தாங்கள் அப்படி ஒன்றும் முஸ்லிம்களை ஒதுக்குகிறவர்கள் அல்ல, எங்கள் நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களுக்கும் இடமுண்டு எனக் காட்டுவதற்குத் தொழில்முறை முஸ்லிம் வெறுப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வதை உலகெங்கிலும் காண முடியும். இவர்களும் அந்த மேடைகளில் ஏறி நின்று வழக்கத்துக்கு அதிகமாகவே முஸ்லிம் வெறுப்பைக் கூவுவர். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது, பெண்ணுரிமைகளைப் பேசுவது என்கிற போர்வையில் அவர்கள் அந்த மேடைகளில் நின்று கொண்டு வெறுப்புத் தொழிலுக்கு வலு சேர்ப்பர். இந்தியா, அமெரிக்கா முதலான நாடுகளில் ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள நிலையில் இப்படியானவர்களை ஊடகங்களும் பெரிய அளவில் கண்டு கொள்ளும். இஸ்லாமிய வெறுபின் ஊடாகக் கிடைக்கும் பொருட் பலன்கள் தவிர இப்படி எத்தனையோ பலன்கள் அவர்களுக்கு உண்டு.

முஸ்லிம்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ, முஸ்லிம் மதம் குறைகளற்றது என்றோ இதன் பொருளல்ல. இன்று முஸ்லிம்களை இலக்காக்கி உலகளவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புக்குத் தீனி போடுவதாக அந்த விமர்சனங்கள் அமைந்து விடக்கூடாது என்பதுதான். ஆனால் இப்படியானவர்களின் செயல்கள் அப்படித்தான் ஆகிவிடுகின்றன. இதை அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதல்ல. அறிந்தே செய்கிறார்கள். பலன் கருதிச் செய்கிறார்கள்.

இப்படியான ஒரு இக்கட்டான நேரத்திலும் சூழலிலும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் 2012ல் வெளிவந்தபோது எழுதப்பட்ட விமர்சனங்கள் அத்தனையிலும் “சரியான தருணத்தில்” வந்துள்ள நூல் என்கிற வாசகத்தைக் காண இயலும். தமிழிலும் அது மிகச் சரியான தருணத்தில் வெளிவருகிறது.

இஸ்லாமிய வெறுப்பு குறித்து இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான நூல்கள், கட்டுரைகள் ஆய்வுகள் ஆகியனவும் வந்துள்ளன. Charis Allen, Islamophobea (2010); Deepak Kumar, Islamophobea and Politics of Empire (2012); Arun Kundnani, End of Tolerance: Racism in 21st Century (2007); Bikhu Parekh, A New Politics of Identity (2008); George Morgan & Scot Poynting, Global Islamophobea- Muslim and the Moral Panic in the World (2012); Stephen Sheehi, Islamophobea, The Ideological Campaign Against Muslims (2011) முதலியன சில முக்கியமான நூல்கள். இத்தனை நூல்கள் வந்துள்ளன என்பதே இது இன்றைய உலகில் எத்தனை முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதற்குச் சான்று..

இஸ்லாமிய வெறுப்பு என்பது எப்படி இன்று ஒரு தொழிலாகவே உருப்பெற்றுள்ளது என்பதற்கு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்ட நூல் இது. எப்படி வரலாற்றில் நாஜிகளின் கீழ் யூதர்கள் பட்ட கொடுமைகளையே மூலதனமாக்கி இன்றைய யூதர்களும் இஸ்ரேலும் தங்களின் எல்லா அநீதிகளையும் நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நூல் ஒன்று (Halocaust Industry) 2010 ல் வெளிவந்தது. இதை எழுதிய Norman Finkelstein ஒரு யூதர். பேராசிரியர், செயல்பாட்டாளர். வார்ஸா நாஜி வதை முகாமில் அவரும் அவரது பெற்றோர்களும் துன்பங்களை அனுபவித்தவர்கள். இருந்த போதிலும் கண்முன் இன்று இஸ்ரேலும் யூதர்களும் அவர்களின் துயரங்களையே விற்பனைப் பண்டமாக்கி லாபகரமான தொழிலை நடத்துகின்றனர், பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கின்றனர் என்பதைக் காணப் பொறாமல் அதைத் தோலுரித்து எழுதிய நூல்தான் அது. அதையே ஒரு முன்னோடியாகக் கொண்டு நதன் லீன் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த நூல் அமெரிக்கப் பின்னணியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க இன்றைய நமது அனுபவங்களுக்கு மிகவும் நெருக்கமான நூல். இதில் நடமாடும் அத்தனை பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நீங்கள் சற்று யோசித்துப் பார்த்தால் இங்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் அடையாளம் காண முடியும்.

சரியான தருணத்தில் சிறப்பாக இந்நூலைக் கொணரும் ‘அடையாளம்’ பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள்.