“திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது உடைமை இயக்கங்கள் செய்ததும் செய்யத் தவறியதும்” – அ.மார்க்ஸ்

(“ஒரு மிகப்பெரிய அறவீழ்ச்சியின் காலம் இது” -சுமார் ஆறு மாதங்கள் முன் 2018 நவம்பர் வாக்கில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்)

1 நிறப்பிரிகையில் காலத்தில் நீங்கள் பேசிய பல விஷயங்கள் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. (அ). மாற்றுக்கல்வி (ஆ).  மாற்றுப்பாலினம் (இ). தன்பால் ஈர்ப்பு முதலியன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உண்மை நிறப்பிரிகை முன்வைத்த பல கருத்துக்கள் இன்று பேசு பொருளாகியுள்ளன.. உங்களைப் போன்றவர்கள் அதை ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நாங்கள் இவற்றைப் பேசியபோது, ஏதோ முக்கிய அரசியல் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் உள் நோக்கத்துடன் அதை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டோம். ‘மணிக்கொடி’ காலம் முதல் தமிழகத்தில் சிறு பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. பல புதிய மேலைச் சிந்தனைகளை எல்லாம் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவற்றுக்கு ஊண்டு. ஆனாலும் ஒரு சில பிரச்சினைகளை அவை கண்டுகொண்டதில்லை.  மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்தும் தந்தை பெரியாரின் பங்களிப்புகள் குறித்தும் அவை பெரிதாக எதுவும் எழுதியதே இல்லை. முதல் முதலில் புதுச்சேரி தோழர் நண்பர் அருணன்தான் கூவாகத்திற்கு நேரடியாகச் சென்று மூன்றாம் பாலினத்தவரின் வருடாந்தர ஒன்றுகூடல் குறித்த கள ஆய்வுக் கட்டுரை ஒன்றை வடித்துத் தந்தார். பெரியார் குறித்த எங்களின் கூட்டு விவாதமும் அதற்கான முன்னுரைப்பாக நண்பர் ராஜன்குறை வடித்துத் தந்த விவாதக் கட்டுரையும், “ஓ ! பெரியாரை இப்படியும் பார்க்க இயலுமா?” என்கிற வியப்பை அன்று தமிழ் கூறும் நல்லுலகில் ஏற்படுத்தியது.  பாவ்லோ ஃப்ரேயரின் மாற்றுக் கல்வி குறித்த என் கட்டுரை நிறப்பிரிகையில் வெளி வந்தபோது ஏராளமான ஊர்களில் அது குறித்து உரையாற்ற அழைகப்பட்டேன். மாற்றுக் கல்வி மட்டுமல்ல, மாற்று அரங்கு குறித்த அகஸ்டோ போவால் போன்றோரின் முயற்சிகள் குறித்தும் ஒரு முழு நாள் கருத்தரங்கையும் நிறப்பிரிகை புதுச்சேரியில் நடத்தியது. தலித் இலக்கியம், தலித் அரசியல் குறித்த தொடக்க ஆய்வுகளையும், கலந்துரையாடல் களையும் நிறப்பிரிகைதான் ஏற்பாடு செய்தது. கூட்டறிக்கையாக வெளியிடவும் செய்தது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியைக் காய்தல் உவத்தல் இன்றி மிக்க கரிசனத்துடனும், துணிச்சலுடனும் தமிழ்க் களத்தில் பேசியதும் எழுதியதும் நாங்கள்தான். பெண்ணியம், குடும்ப அமைப்பின் வன்முறை ஆகியன குறித்து நாங்கள் பேசியவையும் தமிழகத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. அது உண்மையில் ஒரு சிந்தனை விகற்சிகளின் பொற்காலமாகத்தான் இருந்தது.

2.தலித் அரசியலின் தொடக்க காலத்தில் அதாவது 1993 ஆம் ஆண்டு ”தலித் அரசியல் அறிக்கை” எழுதுமளவுக்கு இருந்துள்ளீர்கள் அது குறித்து..?

மேற்கூறிய செயற்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் அதையும் காண வேண்டும். பல்வேறு மாற்றுக்களையும் சிந்தித்துக் கொண்டும், முன்வைத்துக் கொண்டும் இருந்த நாங்கள் அந்த வகையில், சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் பின்னணியில் முன்வைத்த கருத்தாக்கம் தான் தலித் அரசியல். உருவாகி வந்து கொண்டிருந்த தலித் அரசியலுக்கு ஒரு கோட்பாட்டு வரையரையை உருவாக்க வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை முவைத்து எங்களத் தூண்டியது தோழர் கல்யாணி (பேரா.கல்விமணி) தான். நான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இப்போது பொதுச் செயலாளராக உள்ள ரவிக்குமார், கல்யாணி மற்றும் நண்பர்கள் கூடி ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்தோம். பின் அதை விவாதித்து ஒரு நகலறிக்கையாக உருவாக்கி அதைத் தமிழக அளவில் உள்ள இந்தப் புதிய அரசியலில் ஆர்வம் உள்ள பலருக்கும் அனுப்பினோம்.  தஞ்சையில் ஒரு திருமண மண்டபத்தில் விவாதம் ஒன்றை ஒரு நாள் முழுக்க நடத்தி ஜனநாயக முறையில் அதில் திருத்தங்கள் செய்து, இறுதி வடிவு கொடுத்து வெளியிட்டோம். விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழகத்தின் முக்கிய தலித் அமைப்புகள் அனைத்தும் பிரதிநிதிகளை அனுப்பி இருந்தன. முதலில் 2000 பிரதிகள் அச்சிட்டோம். இதுவரை நான்கு பதிப்புகளுக்கு மேல் அது வெளிவந்துள்ளது. கோவையில் மறைந்த தோழர் விடியல் சிவா ஒரு விரிவான ஒரு நாள் விவாதம் ஒன்றை அந்த அறிக்கையின் மீது ஏற்பாடு செய்தார். மறைந்த கருணா மனோகரன், ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், கோவை ஞானி முதலானோர் அதில் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

3- தலித் அரசியலின்   தொடக்க காலத்திற்கும் தற்போதுள்ள சூழலுக்குமா நிலைமை குறித்து உதாரணமாக (அ). பெரியார் ஒரு தலித் விரோதி என தலித் அறிவிஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டது (ஆ). கம்யூனிஸ்டுகள் தலித்துகளுகளுக்கு எதிரானவர்கள் என பிரச்சாரம் செய்வது (இ). தென் தமிழகத்தில் இருக்கும் ஆதி திராவிடர்- தேவேந்திர குலவேளாளர்கள் முரண்பாடு (ஈ). தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இருக்கும் பறையர்- அருந்ததியர் முரண்பாடு இது குறித்து உங்கள் நினைவுகள்…

நாங்கள் வெளியிட்ட அந்த தலித் அறிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு கான்ஷிராம் அவர்களின் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பகுஜன் எனும் சொல்லாக்கத்தை உருவாக்கியவர் புத்த பகவன்.. “பகுஜன் ஹிதய, பகுஜன் சுகய” என்பது புத்த தேவன் வாக்கு. புத்தர் முன்வைத்தது சிறுபான்மையாக ஒதுங்குகிற அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையாகத் திரள்வது. ஏனெனில் ஒடுக்கப்பட்டவர்களே நாட்டில் பெரும்பான்மையினர். ‘பகுஜன்’ என்பது அதிக அளவிலான ‘வெகு மக்கள்’ என்பதைக் குறிப்பது. கான்ஷிராம் என்ன தலித் உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பது இன்றுவரை யாருக்கும் சரிவரத் தெரியாது. தலித் உட்சாதி வேறுபாடுகளைத் தாண்டி அவர் மக்களைத் திரட்டினார். தலித் உட்சாதி ஒற்றுமைக்கு அவர் முன்னுரிமை அளித்தார். வடநாட்டு சாதி அமைப்பு இங்குள்ளதைக் காட்டிலும் வெறுபட்டது. அங்கு சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் குறிப்பிட்ட அளவு உள்ளனர். தமிழகத்தில் சத்திரியர்களே கிடையாது. வைசியர்களும் இங்கு பெரிய அளவில் இல்லை. அதே போல வடக்கில் பார்ப்பனர்கள் 10 சதம் வரை உள்ளனர்.இங்கே இரண்டரை சதம்தான். இந்தப் பின்னணியில் கான்ஷிராம் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து, உட்சாதி வேறுபாடுகளுக்கு அப்பாலான தலித் பிரிவுகள் மற்றும் மிகவும் அடித்தள நிலையில் உள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைத் திரட்டினார். ஆனால் இங்கோ தலித் உட்சாதிகளை மட்டுமாவது ஒன்றாகத் திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ‘புதிய தமிழகம்’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நாங்கள் தலித்களே இல்லை என்றார், ரவிகுமார் போன்ற தலித் தலைவர்கள் பிற தலித்களுடன் ஒற்றுமை பேணுவதைக் காட்டிலும் பார்ப்பனர்களுடன் ஒற்றுமை பேணுவதரற்கு முக்கியத்துவம் அளித்தனர். பார்ப்பனீய எதிர்ப்பு என்பது இங்கு தலித் அரசியலின் முக்கிய கண்ணியாக அமையவே இல்லை. அதற்குப் பதிலாக பெரியாரும் இங்கே முக்கிய எதிரியாகக் கட்டமைக்கப்பட்டார். திராவிடக் கருத்தியலே தலித் அரசியலின் முக்கிய எதிரியாகச் சுட்டிக்காட்டப்படும் நிலையும் ஏற்பட்டது. தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பெருஞ்சரிவு அன்றுதான் தொடங்கியது. இன்றுவரை அது சரி செய்யப்படவே இல்லை. பெரியாரைக் கடுமையாகவும், அநீதியாகவும் விமர்சித்து வி.சி.கவின் பொதுச் செயலாளரான ரவிகுமார் எழுதிய தொடர் கட்டுரையை திருமா அவர்கள் தங்களின் அதிகாரபூர்வமான ‘தாய் மண்’’ இதழில் வெளியிட்டதை எல்லாம் என்ன சொல்வது. நாளெல்லாம் இப்படியான அரசியலைச் செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது அந்தக் கூட்டணியும் உண்மையாக அமைவதில்லை. அதே போல இங்கே தலித் அமைப்புகள் உருவாகும் முன்பு பெரும்பாலும் விவசாயத் தொழிலாளிகளாக இருந்த தலித்களை கம்யூனிஸ்டுகள்தான் இயக்கமாக்கி வைத்திருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க விவாசாயப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். அவர்களது நடைமுறைகளில் பல விமர்சனத்துக்குரிய குறைபாடுகள் இருந்தபோதும் தலித் மக்கள் மீதான பல்வேறு வகைச் சுரண்டல்களையும் ஒதுக்கல்களையும் எதிர்கொண்டதில் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஆனால் தலித் அமைப்புகள் உருவானபோது அவர்களுக்கான அணிகளை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்தே உருவி எடுக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில் கம்யூனிஸ்டுகள் அவ்வப் பகுதிகளில் இங்கே எதிர்த்தரப்பில் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையைக் கம்யூனிஸ்டுகளும் சரியாகக் கையாளவில்லை. விளைவு? இன்று கிழக்குக் கடற்கரையோரம் பெரிய அளவில் ஆர்.எஸ்.எஸ் நிலை கொண்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்  – ஆதி திராவிடர்  முரண்பாடு என்பது தீரும் என நம்புவதற்கு இடமே இல்லை. தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் அப்படியொரு சாதி உயர்வுக் கருத்து எல்லா மட்டங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளது. அவர்கள் தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தை எதிர்க்கவில்லை. அவர்களின் எழுத்துக்கள், பிரகடனங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது அவர்கள்  சொல்வதெல்லாம் தங்கள் மீது தீண்டாமை கூடாது என்பது மட்டும்தான். வாஜ்பேயீ ஆட்சியின்போது முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட இதுக்கீடு அளிப்பது பற்றிப் பேசப்பட்டது. அப்போது நாங்கள் சுய மரியாதை இயக்கம் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் சார்பாக அந்த முயற்சியைக் கண்டித்து நாங்கள் ஒரு பொது மாநாட்டைச் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் கூட்டியபோது அதில் கலந்து கொள்ள கிருஷ்ணசாமி மறுத்தார். தங்கள் மீது தீண்டாமை எல்லாம் கிடையாது என்றார்.

அருந்ததியர் – ஆதி திராவிடர் ஒற்றுமைக்கான நிபந்தனை என்பது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை தயக்கம் இன்றி ஏற்பதில்தான் உள்ளது. வி.சி.க அமைப்பு தெளிவாகவும் வெளிப்படையாகவும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும்.

4. இட ஒதுக்கீடு தேவையில்லை எனச் சொல்லும் கிருஷ்ணசாமியின் குரல் குறித்து.

அவர் அப்படித்தான் பத்தாண்டுகளாகச் சொல்லி வருகிறார். இன்று அச்சமூகத்தில் பலரும் அதைச் சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே அச்சமூகத்தின் மேல் நிலையில் உள்ளவர்களின் பொதுக் கருத்தாகவும் உள்ளது. ஆனால் கிறிஸ்துதாஸ் காந்தி போன்ற அச் சமூகத்தின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட வேறு சிலர் அப்படிச் செய்தால் அது அச்சமூகத்திற்கு இழப்பு என்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட 3 சத ஒதுக்கீட்டை வேண்டாம் என அவர்களில் சில பாதிரிமார்கள் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசி  அதை ரத்து செய்தார்கள். எந்த ஆய்வும் இல்லாமல் அப்படிச் செய்யப்பட்டதால் கிறிஸ்தவச் சமூகத்திற்கு அது நன்மையா தீமையா என்பதே தெரியவில்லை. எனவே தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தில் முறையான கருத்துக் கணிப்பு செய்து இதை முடிவு செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.

5.அருந்ததியர்கள் தெலுங்கர்கள் எனத் தமிழ்த் தேசியர்கள் சொல்லுகிறார்களே….

அவர்களைத் தமிழ்த் தேசியர்கள் எனச் சொல்வது  அபத்தம். பெங்களூரு குணா வழி வந்த அவர்கள் தமிழ் பாசிஸ்டுகள். அவர்கள் கணக்குப்படி திமுக தலைவர் கருணாநிதி உட்பட எல்லோரும் தெலுங்கர்கள்தான். தெலுங்கு மொழியை தமிழ் நட்டில் உள்ளவர்கள் யாரும் வீடுகளில் இப்போது பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் கூட 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழுகிற தெலுங்கு பேசுவோரை நாடு கடத்தவா முடியும். அல்லது அஸ்ஸாமில் இன வெறியர்கள் சொல்வது போல அவர்களை “ஐயத்துக்குரிய வாக்காளர்கள்” (D voters)“ பட்டியலில் வைத்து விட முடியுமா? காலம் காலமாக இங்கே மிகவும் கீழான பணிகளுக்கும் கடுஞ் சுரண்ட்டலுக்கும் ஆட்பட்டுள்ள அருந்ததிய சமூக மக்களைத் தெலுங்கர்கள் என முத்திரை குத்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது எனச் சொல்வதைப் போல மனிதாபிமானமற்ற பாசிச வெறித்தனம் ஏதும் இருக்க இயலாது. 

6. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சாதிகள் இன்று ஒரே சமூகமாக இணைந்ததுபோல ஏன் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகியோர் ஒரே சமூகமாக இணைய முடியவில்லை என்பது குறித்து…

கள்ளர், மறவர், அகமுடையார் என்போர்  பார்ப்பனீயச் சமூக அமைப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களான போதிலும் இன்றைய சாதீயக் கட்டமைப்பில் தலித்களுடன் ஒப்பிடும்போது ஆதிக்க சாதிகள். அவர்கள் தலித் மக்கள் மீது தீண்டாமையையும் சாதி ஒடுக்குமுறைகளையும் கடை பிடிப்பவர்கள். அவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து விட்டனர். ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஒன்றிணைந்து தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்க வேண்டிய  நிலை உருவாகாதது மிகவும் வருந்தத் தக்க ஒன்று. அந்த ஒருங்கிணைவு சமீப காலத்தில் சாத்தியமில்லை. தலித் அரசியல் என்றெல்லாம் நாம் அவற்றை மேன்மைப் படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் அவையும் இங்கு ஒரு உட் சாதி அரசியலாகவே தேங்கிப் போனது வேதனை.

7.அம்பேத்கர் தன்னுடைய சமகாலத்தில் வாழ்ந்த சமூக சிந்தளையாளர்களோடு கொண்ட உறவு குறித்து.. (அ). அயோத்திதாசப் பண்டிதர் (ஆ). காந்தி (இ. ரெட்டைமலை சீனிவாசன் (ஈ). பெரியார்

அம்பேத்கருக்கும் அயோத்திதாசருக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கர் மிகவும் நவீனமான சிந்தனைப் போக்கு உடையவர். பௌத்தத்தை அம்பேத்கருக்கு முன்பே அயோத்திதாசர் ஏற்றுக் கொண்டபோதும் அவரை அம்பேத்கர் அளவு நவீன சிந்தனையாளர் எனக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக அயோத்திதாசர் அருந்ததியர் மீதான தீண்டாமையை நியாயப்படுத்தியதைப் போல அம்பேத்கரிடம் எதையும் காண முடியாது. அம்பேத்கர் காந்தி உறவைப் பொருத்த மட்டில் அவர்கள் காலத்தில் நெருக்கமான உறவு அவர்களுக்கிடையில் சாத்தியமில்லாமலேயே இருந்தது. பூனா ஒப்பந்தம் அவர்களுக்கிடையில் நட்புக்கான பெருந் தடையாக இருந்தது. ஆனால் அந்தப் பிரச்சினையைக் கூர்ந்து அவதானித்தால், பேராசிரியர் அருணன் தன் குறுநூலில் கூறியிருப்பதுபோல அன்றைய சூழலில் தலித்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்துவதற்கே பொது ஒப்புதல் இல்லாமல் இருந்ததை அறிய முடியும். இங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் அதற்கு ஒப்புதல் பெறுவதற்கே காந்தி பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருந்தது. சிறையில் காந்தி இருந்த உண்ணாவிரதம் டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக நடத்தப்பட்டது எனச் சொல்வதைக் காட்டிலும் இட ஒதுக்கீடு என்கிற கோட்பாட்டையே எதிர்த்த காங்கிரசுக்கு எதிராகவும் காந்தி நடத்திய போராட்டம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காந்தி, அம்பேத்கர் இருவரும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை சில அம்சங்களில் அவர்கள் இணைந்தும் கூடச் செயல்பட்டிருக்கக் கூடும். முதல் மனைவியின் மரணத்திற்குப் பின் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோது காந்தியின் உதவியாளரிடம்  அழைப்பிதழைத் தந்த அம்பேத்கர், “காந்தி இருந்திருந்தால் இந்தத் திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” எனச் சொன்னதாக ஒரு பதிவு உண்டு. ரெட்டைமலை சீனிவாசனுடன் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட போதும் அவர்களுக்கிடையில் அப்போது மிக நெருக்கமான உறவு  இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக தலித் தலைவர்களில் சிவராஜுடன் அண்ணலுக்கு நெருக்கமான உறவிருந்தது. எம்.சி.ராஜாவுக்கும் அம்பேத்கருக்கும் இடையில் அப்படியான உறவு இல்லை.  பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நிறைந்த கருத்தொற்றுமையும் நெருக்கமான உறவும் இருந்தது. மதமாற்றம் உட்பட அம்பேத்கரின் அனைத்து முயற்சிகளிலும் தந்தை பெரியார் அவருக்குத் துணையாகவே இருந்தார்.

8-    திராவிட இயக்கங்கள் செய்தது செய்யத்தவறியது குறித்து….

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். இந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் எந்த நாட்டிலும் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்குந்தானே. அதையெல்லாம் பெரிய சாதனை எனச் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் கருணாநிதி மறைந்தபோது அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சிப்பவர்களும், நான் உட்பட,  அவரது ‘சாதனைப் பட்டியலை’ப் பதிவு செய்தோம். அவர் இந்த ஐம்பது ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்துள்ளார், ஏதாவது செய்திருப்பார்தானே. எனினும் அதை எல்லம் பார்க்காமல் அவர் எதைச் செய்தார் என்பதைப் பொருத்த மட்டில் பலவற்றை நாம் பாராட்டவே செய்கிறோம். எனினும் அவர் உருவாக்கிய ஊழல் மிக்க குடும்ப அரசியல் அவரது சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

திராவிடக் கட்சிகளின் சாதனை என்றால் இந்தியாவிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதைச் சொல்லலாம். இந்த அடிப்படையில் மனித வளக் குறியீட்டில் மேலாக உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநில சுயாட்சி என்பதை வலியுறறுத்திய அம்சத்திலும் அதற்கொரு முக்கிய பங்குண்டு. பார்ப்பனரல்லாத பின்தங்கிய சமூகங்களை அதிகாரப் படுத்தியதிலும் அவர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். ஆனால் அதுவே தலித்கள் மீதான ஆதிக்கம் தொடரவும் காரணமாகியது. குடிசை மாற்று வாரியம் அமைத்தது, இந்தி எதிர்ப்பு ஆகியவற்ரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.ஆனால் அதற்கான பழியை அவர்கள் மீது மட்டுமே சுமத்துவது அபத்தம்.  அவர்கள் செய்யத் தவறியவை என்பதைப் பொருத்த மட்டில் காவிரி நீர் உட்பட மாநில உரிமைகள் பலவற்றையும் தமிழகம் கோட்டை விட்டுள்ளதைச் சொல்லலாம். எக்காரணம் கொண்டும் பதவியை இழக்க அவர்கள் தயாராக இல்லை. அப்புறம் அவர்களின் படு மோசமான வாரிசு அரசியல். ஈழப் பிரச்சினை அதன் உச்சத்தில் இருந்தபோது கருணாநிதி தன் பிளைகளுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு டெல்லிக்குப் பறக்கவில்லையா?

9     இடதுசாரிகள் உலக அளவில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள் இது குறித்து மிகவும் விவரித்துச் சொல்லுங்கள்.

இதென்ன, இது எல்லோர் கண்ணிலும் அன்றாடம் காட்சிப் பொருளாக இருப்பதுதானே. ருஷ்யா கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிவிட்டன. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியிலேயே முதலாளித்துவ நடைமுறைகள் செயலாக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன. இவற்றையெல்லாம் நான் மிக்க கவலையோடும் கரிசனத்தோடும்தான் இங்கு சொல்கிறேன். அது மட்டுமல்ல. இதைவிட ஆபத்தான விடயம் என்னவெனில் புதிய தலைமுறை இளைஞர்கள் முழுக்க முழுக்க முதலாளித்துவ மதிப்பீடுகளுக்குப் பலியாகியுள்ளதுதான் இன்னும் பெரிய கொடுமை. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆழமான ஆய்வுகள் இந்தியாவில் போதுமான அளவுக்குக் கிடையாது. கம்யூனிசத்தின் இந்த வீழ்ச்சி பல உயரிய மானுட மதிப்பீடுகளை நாசம் செய்துள்ளது. இன மத வெறுப்புகளும், வெறுப்பு அரசியல்களும் இன்று மேலுக்கு வந்துள்ளன. இந்தியாவை எடுத்துக் கொண்டோமானால் இன்று நூற்றுக் கணக்கான இந்துத்துவ அமைப்புகள் பல்வேறு மட்டங்களில் செய்யும் பணிகளில் பத்தில் ஒரு மடங்கு கூட நாம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் தொலைதூரத் திட்டமிடலுடன் காய்களை நகர்த்துகின்றனர். அவற்றுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்குச் செயலபட முடியாமல் நாம் சோர்ந்து கிடக்கிறோம். பொருளியல் அடிப்படையில் இன்று சோவியத்துக்குப் பிந்திய உலகம் கார்பொரேட்களின் பொற்காலமாக ஆகியுள்ளது. இனி நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் இலவசக் கல்வி, பொது மருத்துவம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒரு மிகப் பெரிய அறவீழ்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. இனி வர்க்கப் போராட்டங்களுக்குக் காலமில்லை, இனி  கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்தான் சாத்தியம் எனக் கூறி இன்று உலகில் மிக ஆபத்தாக உருவாகியுள்ள ‘இஸ்லாமோபோபியா’ வை மறைமுகமாக கார்பொரேட் சிந்தனையாளர்கள் ஆதரிக்கின்றனர்.

10.சர்வதேச அளவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். என்பதும் உங்கள் அவதானிப்பு அது குறித்தும் மிக விரிவாக… சொல்லலாம்.

இதுவும் அன்றாடக் காட்சிகளாக நாம் கண்டு கொண்டிருப்பவைதான். உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த “இஸ்லாமோபோபியா” – எனும் இந்த இஸ்லாமிய வெறுப்பு ஒரு தொழிலாகவே மாறி உள்ளது எனப் பல நூல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன. நாடன் லீன் என்பவர் எழுதியுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் கொல்லப்படுதல் – Lynching  என்பது ஏதோ மாட்டுக் கறி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்திய முஸ்லிம்கள் மீது மட்டும் மேற்கொள்ளப்படும் கொலைவெறித் தாக்குதல் அல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் கூட இப்படி நடந்து கொண்டுதான் உள்ளன. தாடி வைத்திருப்பது, பெண்கள் ஹிஜாப் அணிவது, பெரிய அளவில் தொழுகைத் தலங்களைக் கட்டுவது முதலியன இன்று மேலை நாடுகளில் கடும் எதிர்ப்புக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன. இப்படியான சூழல் பெருகும்போது முஸ்லிம்கள் இயல்பாகவே ஒரு வகையான “பதுங்கு குழி” மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதாவது அவர்களின் அடையாளங்களையே அவர்கள் தமக்கு ஒரு பாதுகாப்பாகக் கருதி அதற்குள் ஒடுங்குகின்றனர். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்களானால் முஸ்லிம்கள் மீதான இப்படியான தாக்குதல்கள் அதிகமான பின்புதான். அவர்களிடம் அதிக அளவில் தாடி வைத்துக் கொள்வது, தவறாது தொழுகைக்குச் செல்வது முதலிய வழமைகள் அதிகமாகியுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்..ளாப்படி அவர்கள் தம் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும்  இயல்பான முயற்சிகளையே  இன்று அவர்களுக்கு எதிராகத் திருப்புகின்றனர் இஸ்லாமோபோபியா வெறியர்கள். ஆக இது ஒரு முடிவற்ற தொடர்ச்சியாகத் தொடரும் நிலை ஏற்படுகிறது.

இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த புரிதல் இடதுசாரி அமைப்பினரிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இடதுசாரி அரசியலிலும், பாசிச எதிர்ப்பிலும் அக்கறையுள்ளவன் என்கிற வகையில் இதை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முஸ்லிம்கள் இன்று தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றை நம்புகிற அளவிற்கு இடதுசாரி அமைப்புகளை நம்புவதில்லை. இதை கம்யூனிஸ்டுகள் மீதான குறையாக மட்டும் நான் கருதவில்லை. முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சிந்தனைகள் மீது ஒரு ஆழமான வெறுப்பு இருக்கவே செய்கிறது. என்னதான் இருந்தாலும் அது ஒரு வணிகச் சமூகம். அவர்களுக்கு இயல்பில் பொது உடைமை எனும் கருத்தில் ஈர்ப்பு இருப்பதில்லை. அவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை நான் சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை.

இது குறித்து இரு தரப்பும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். குறிப்பாக இன்று இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசத்தைப் பொருத்த மட்டில் அதற்கு முஸ்லிம்கள் எந்த அளவுக்கு எதிரியோ அதுபோல கம்யூனிஸ்டுகளும் எதிரிதான். இந்நிலையில் முஸ்லிம்களும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து நின்று பொது எதிரியை எதிர்கொள்வது அவசியம். அது இன்று குறைவக உள்ளது.

11- காந்தியார்.. ?

காந்தியார் பற்றி நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்?எத்தனையோ உலகப் பெரியார்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் சொன்னவற்றைத்தான் நான் திருப்பிச் சொல்லிக் கொண்டுள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் நான் அவரைப் பற்றி நிறையவே எழுதிவிட்டேன். என் அப்பா ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நாடுகடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் கடைசி வரை கதர் ஆடைதான் உடுத்துவார். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த நூற்களில் “மார்க்ஸ் – எங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலும் இருந்தது; “சத்திய சோதனை”யும் இருந்தது. நேரு இறந்த அன்று அப்பா ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் நெஞ்சில் கவிழ்ந்திருக்க கண்ணீருடன் அவரது சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த காட்சியை என்னால் மறக்க இயலாது. காந்தியை இ.எம்.எஸ், ஹிரேன் முகர்ஜி.. இப்படி எத்தனையோ கம்யூனிஸ்டுகள் வியந்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் காந்தியை வெறுப்பதற்கு ஏதுமில்லை. என் பிரியத்துக்குரிய ஜெயகாந்தன் காந்தி குறித்த ரோமன் ரோலந்தின் நூலை மொழியாக்கவில்லையா? காந்தியைப் படியுங்கள். மேன்மையுறுவீர்கள்.

(நேர்கண்டது : பாரதி புத்தகாலயம் சிராஜ்)

“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்

(பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். தடைம்ஸ்தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை,அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளைச் சொல்லுகிறார்ப் நேர்கண்டது: பீட்டர் துரைராஜ், டைம்ஸ் தமிழ்.காமில் ஏப்ரல் 2ஒஇ9ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன் வெளிவந்தது)

 

கேள்வி:பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக,திமுக சார்பில்  யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்

 

பதில்: இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார் : ” பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை.அது எங்களுக்கு அவசியமும்  இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று  சொல்லுவதற்குத்  தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப்  பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ,மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம்  உள்ள  40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின்   மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த  காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு  ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம்  கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

 

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

 

பதில் : 1930 களில்  பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன். அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர்.  கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த  ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு  மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும்  கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது. 1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம்  இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக  சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம்  முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம்  “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில்  மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த  ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை.  முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன்  (Samuel P.Huntington)  போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக,  இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய  சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே  இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே.  .

 

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்தசம வாய்ப்பு ஆணையம்என்ற கோரிக்கை யை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

 

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. .நிரந்தரமான வேலை,ஓய்வூதியம் ,பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவன த்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும்.தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என  ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம். ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.  தங்கள் தேர்தல் அறிக்கை யில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை.ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சி யும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிக மயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும்  இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித். உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள  வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழைமக்களை அதிகாரப் படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும்  தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை  நாம் புரிந்து கொள்ளலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி  பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின்  நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

 

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில்  இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.  மாட்டுக்கறியில் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynchng) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும்  எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

 

கேள்வி: வரவிருக்கிற  தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா

 

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை  தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்எஸ்எஸ் இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற  பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்  மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி  எனது  முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும். பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி  முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை  மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன..ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி  இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம்  கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம்  கட்டணத்தை  முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள்  எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான். விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக  வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. .பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி  ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு  கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.  ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

 

கேள்விமத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை.தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த  தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள்

 

பதில் :அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகளை  திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர். இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக  இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. .சிறுபான்மையினர் மட்டுமின்றி  தலித், ஆதிவாசிகள்  முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.   .

 

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை.தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

 

கேள்வி: சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள்  தங்கள் கட்சிகளின்  சின்னத்தில்  நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார்.திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே

 

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு  ஆதரவாக செயல்பட வைப்பது என்பது  கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத்  தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர்  வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

 

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே  ? 

 

பதில்: தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார்.  2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்  மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர். SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

 

கேள்வி:வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில்  ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடாகவில் நிற்கலாமே?  வயநாட்டில்  போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

 கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின்  விடுதலைக்கு அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் :மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல்  மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும்  ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் மட்டுமின்றி  இஸ்லாமியச் சிறைவாசிகள்,, வீரப்பன் வழக்கில்  சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.. சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA)  திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

 

கேள்வி : இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான   அமைப்புகளில் இயங்கி வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் : அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும்.  1905  தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது.காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை.அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று  இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான்  பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று  கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

 

கேள்வி ; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்

 

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

 

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் ‘சர்வ சமய சங்கீர்த்தனம்’

 நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  26                                                    

ஆசீவகவாதியின் கருத்துக்களத் தொகுத்துக் கொண்டோம். இந்நெறியை முன்வைத்த மற்கலி கோசலர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் என்பதால் கோசலர் எனப் பெயர் பெற்றார் என்பர். மற்கலி என்பதற்கு “இடறி விழாதே” ((மா – கலி) எனப் பொருள்கொண்டு அவாறு அவர்தம் சீடர்களுக்கு அறிவுரைத்ததால் அப்பெயர் பெற்றார் எனக் கூறுவதுமுண்டு. “எதுவும் செய்யாது சும்மா இரு” என்பது ஆசிவகர் கோட்பாடு. என்னும் பொருளில் “மோனாந்து இருந்தனன்” என நீலகேசி ஆசீவகர் குறித்துக் கூறுவதும் குறிப்பிடத் தக்கது.

ஆசீவகரை விட்டு அடுத்து நிகண்டவாதியை நோக்கி மணிமேகலை அகல்வதைக் குறிக்கும் இடத்தே “சொல்தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு” என்பார் சாத்தனார். இதனூடாக ஆசீவகர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்கள் என அவர் கருதுவதை அறிகிறோம். ஆசீவகன் தன் நெறியை விளக்கும்போது முதலில், “நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின், மலை,மரம், உடம்பு எனத் திரள்வதும் செய்யும்” ((27: 116-117) எனக் கூறுவதையும் அடுத்துச் சில வரிகளில் (27 :129) “முது நீரணு, நில அணுவாய்த் திரியா” என அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதில்லை எனச் சொல்வதையும் ஒப்பிட்டுக் காட்டி, அந்த அடிப்படையில் ஆசீவகர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறவர்கள் எனச் சாத்தனார் கூறுவதாக உரையாசிரியர்கள் இதற்கு விளக்கம் அளிப்பர்.

நிகண்டவாதி

மணிமேகலை அடுத்துச் சந்திக்கும் நிகண்டவாதியை ‘நிக்கந்தவாதி’, ‘நிர்க்கிரந்தவாதி’ என்றெல்லாம் குறிப்பிடுவர். ‘நிக்கிரண்டம்’ என்பதற்கு அம்மணம், ஆடையின்மை எனப் பொருள். எனவே இவர்களைச் சமணர்களுள் ஒரு பிரிவினரான திகம்பரர் எனக் கூறுவதுமுண்டு. “ஆசீவக வாதமும் நிகண்ட வாதமும் ஒருவகையினும் அடங்கும்” என உ.வே.சா குறிப்பிடுவார்.

நிகண்டவாதியை அணுகிய மணிமேகலை அவனது தலைவன் யார் எனவும் அவனது நூற்பொருள், அதன் வரலாறு, அது முன்வைக்கும் கட்டு (பந்தம்), அந்தக் கட்டிலிருந்து விடுதலை பெறல் ஆகியவற்றை விளக்கிக் கூறச் சொன்னவுடன் அவன் தொடங்குவான்.

“எம் இறைவன் இந்திரர்கள் அனைவராலும் வணங்கப்படுபவன். தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், காயம், காலாகாயம், தீதற்ற சீவன், பரமாணுக்கள், நல்வினை தீவினை, அவ்வினைகளால் உருவாகும் பந்தம் (கட்டு), வீடுபேறு ஆகிய பத்தும் அவன் தந்த ஆகமப் பொருள். அப்[பொருள் அதன் தன்மையிலும், அது தோன்றும்போதுள்ள சார்பின் தன்மையிலும் நிலைத்தும் நிலையற்றும் நின்று, நுனித்து அறியப்படும் பண்பினால் ஒர் கணத்திற்குள்ளேயே தோன்றுதல், நிலை பெறுதல், கெடுதல் எனப்படும் மாற்றற்கரிய மூன்று இயல்பும் உடைத்தாகும்.

வேம்பின் முளை வேம்பாக முளைப்பதே நித்தியம். அப்படி முளைத்த வேம்பில் அதன் ஆதாரமாக அமைந்திருந்த வித்து அழிவதே அநித்தியம். பயறை வேகவைத்துக் கும்மாயம் (பாயசம் போன்ற ஒரு உணவு) காய்ச்சும்போது அப்பயறு அழியும். எங்கும் அமைந்திருந்து அனைத்தையும் அவ்வவற்றின் வினைகளுக்கு ஏற்ப செயற்படுத்துவதே ஏது தர்மாத்தி காயம் ஆகும். இப்படி ஒவ்வொன்றையும் அவ்வவற்றின் இயல்பில் நிற்க வைப்பதே அதன் மாத்தி காயம் எனப்படும். ‘கணிகம்’ எனும் குறு நிகழ்ச்சி, ‘கற்பம்’ எனும் நெடு நிகழ்ச்சி என கால அளவைகளை உண்டாக்குவதே ‘காலம்’ எனப்படும். எல்லாப் பொருள்களும் அமைய விரிந்து இடமளிக்கும் செயலிற்குரியதே ‘ஆகாயம்’. உடம்போடு ஒத்திருந்து தூய சுவை முதலான புலன்களை உணர்வதே ‘சீவன்’ ஆகும்.

‘புற்கலம்’ என்பது ‘பரமாணு’ எனப்படும் ஒற்றை அணு. அதுவே பொருள்களின் புற உருவமும் ஆகும். நல்வினை, தீவினை இரண்டையும் ஆற்றும்., முன்செய்த அரிய வினைகளின் பயன்களை அனுபவித்துக் கழித்தலே வீடுபேறு ஆகும்”

– எனத் தன் சமயப் பொருளை விளக்கி முடிப்பான் நிகண்டவாதி. அதன்பின் சாங்கிய நெறியாளன் தன் சமய உண்மைகளைச் சொல்லத் துவங்குகிறான்.

சாங்கிய நெறி

பகுத்தறிதல் எனப் பொருள்படும் ”சங்க்யா’ எனும் வேர்ச்சொல்லின் அடியாக உருவானதே ‘சாங்க்யம்’ எனும்சொல். ‘பிரகிருதி’ எனும் ஒரே மூலத்திலிருந்து உலகம் தானாகவே பரிணாமம் அடைந்தது எனக் கூறுவதே சாங்கியம். எனவேதான் அதனை ‘பரிணாமவாதம்’ எனவும் ‘சுபாவவாதம்’ எனவும் கூட அழைப்பதுண்டு. இயல்பாய்த் தோன்றியதே உலகு என்கிற வகையில் இங்கே கடவுள் தேவையற்றவர் ஆகிறார். இனி மணிமேகலையில் சாங்கியவாதி கூறுபவற்றைக் கேட்போம்.

“இதுதான் சாங்கிய மதம்” எனச் சொல்லி வருபவன் ‘மூலப்பகுதி’ எனச் சாத்தனாரால் குறிப்பிடப்படும் பிரகிருதியை விளக்கியவாறு தொடங்குவான்.

“தன்னை இத்தன்மையானது என அறிதற்கு அரியதாகவும், தானே மூவகைக் குணங்களாகவும், அது குறித்த மன நினைவுகளும் இல்லாததாய், மாண்புமிக்க பொது நிலையாய் இருந்து எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமானது எதுவோ அதுவே மூலப் பகுதி ஆகும்.

சித்தம் எனும் இம்மூலப் பகுதியிலிருந்து ‘மான்’ எனக் கூறப்பட்ட புத்திதத்துவம் வெளிப்படும்; அதிலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து வாயுவும், அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும் வெளிப்படும். நீரிலிருந்து நிலம் வெளிப்பட்டுப் பின் அக் கூட்டத்திலிருந்து ‘மனம்’ வெளிப்படும்.

ஆரவாரம் நிறைந்த. அம்மனத்திலிருந்து எழும் ஆங்கார விகாரம், ஆகாயத்தினாலே செவிக்கு அமையும் ஒலி விகாரம், வாயுவினாலே தோன்றும் ஊறு எனும் விகாரம், நெருப்பினாலே கண்ணுக்குத் தோன்றும் ஒளி விகாரம், நீரினால் நிகழும் வாய்ச் சுவை எனும் விகாரம், நிலத்தினால் மூக்குக்குப் புலனாகும் நாற்றமாகிய விகாரம், என்றெல்லாம் சொல்லப்படும் இவற்றுள் மெய்யின் விகாரமாய் வாய், கால், கை, பாயுரு (ஆசனவாய்) உபத்தம் (பிறப்புறுப்பு) என உண்டாகிய இந்த ஐந்தும் வெளிப்படும். இங்கு கூறப்பட்ட பூத விகாரத்தால் மலை, மரம் முதலியனவாகச் சொல்லப்பட்ட எல்லாமே வெளிப்பட்டு, உலகம் நிகழும். பின் அவை அவையும் தாம் வந்தவழியே சென்று அடங்கி, முடிவற்ற பிரளயமாய் ஒடுங்கும்.காலை, ஒன்றாகி எங்கும் பரந்து நித்தியமாகும்.

அறிந்து கொள்ள எளிதாய்,, சாத்விகம், இராட்சதம், தாமசம் எனப்படும் முக்குணங்களும் இல்லாததாய், ஐம்புலன்களும் உணர்விக்கும் பொதுத் தன்மையும் இல்லாது, எப்பொருளும் தோன்றுதற்கு இடமில்லாததாகவும் ஆகி, அப்பொருள்களை எல்லாம் அறிவதற்கான உணர்வாகி, ஏகமாய் எங்கும் பரந்து என்றென்றுமாக நின்று உள்ள உணர்வாக நிலவுவதே புருட தத்துவம்.

இந்தப் புருட தத்துவத்தாலே அறிய[ப்படும் பொருள்கள் இருபத்தைந்து. அவை: நிலம், நீர், தீ, வளி எனப்படும் பூதங்கள் ஐந்து; மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் புலன்கள் ஐந்து; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் உணர்வுகள் ஐந்து, வாக்கு, கை, கால், பாயுரு’  உபத்தம் எனும் ஐந்தும், மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் எனும் நான்கும், இவற்றுடன் உயிர் என ஒன்றும் சேர்ந்து ஆக அவை இருபத்தைந்து பொருள்களாம்.”

எனச் சாங்கியவாதி சொன்னவற்றைக் கேட்டுக் கொண்ட மணிமேகலை அடுத்து வைசேடிக வாதியை அணுகினாள்.

வைசேடிக வாதி

“நின் வழக்கு உரை” என மணிமேகலை கேட்டதும் வைசேடிகவாதி தொடங்கினான்.

“பொய்மையற்ற பொருள் (கெடாத பொருள்), குணம், கருமம் (செயல்), சாமானியம் (பொதுவானவை), விசேடம் (சிறப்பானவை), கூட்டம், (சமவாயம்) எனப் பொருள்கள் ஆறு வகைப்படும்.

இவற்றுள் முதலாவதாக அமையும் .பொருள் என்பது குணமும் தொழிலும் உடையதாகவும், அதன் தொகுதியில் உள்ள பொருள்கள் வகைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயும் அமையும். அப் பொருள்கள் ஒன்பது வகைப்படும். அவை: ஞாலம் (நிலம்), நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் என்பன. இவற்றுள் ஞாலம் என்பது, ஒலி, ஊறு (ஸ்பரிசம்), நிறம், சுவை, நாற்றம் என்கிற ஐந்து குணங்களும் கூடியது. ஏனைய நீர், தீ, காற்று, விண் என்கிற நான்கும் ஓவ்வொரு குணம் குறைவுடையன.

ஓசை, தொடு உணர்வு (ஸ்பரிசம்), நிறம், நாற்றம், சுவை என்பனவும் குற்றமற்ற பெருமை, சிறுமை, வன்மை, மென்மை, சீர்மை, நொய்ம்மை, வடிவம் எனப்படும் பண்புகளும், இடம், வலம் எனும் பக்கம், மேன்மை, கீழ்மை, முன்மை, பின்னம் முதலான அனேகமும் கூறப்பட்ட பொருள்களின் குணங்களாகும்.

பொருள், குணம் எனும் இரண்டும் கருமம் (செயல் அல்லது தொழில்) மேற்கொள்வதற்கு உரியன. பொருள்களின் உண்மைத் தன்மையை உணர்த்துவனதான் முதன்மையான பொதுவாகும். போவதும் நிற்பதும் எல்லாப் பொருள்களுக்கும் பொதுக்குணம். அதுபோல சாதலும், நிகழ்தலும் (இருத்தலும்) அவ்வப் பொருளின் (முதன்மையற்ற) பொதுத்தன்மை. இது சாமானியம். சிறப்பு (விசேடம்) என்பது பொதுவானதாக அன்றி ஒன்றுக்கே உரிய சிறப்புத் தன்மைதான்.

கூட்டம் (சமவாயம் / ஒற்றுமை) ஆவது குணமும் குணியும்தான்”

– என வைசேடிகவாதி தன் நெறியை விளக்கி முடித்தான்.. அப்போது அங்கு வந்த பூதவாதியை நோக்கி, “நீ சொல்” என்றாள் மணிமேகலை..

பூதவாதி

பூதவாதி தன் நெறியுரைக்கலானான்.

“ஆத்திப்பூ, வெல்லம் ஆகியவற்றை இன்னும் பல பொருட்களுடன் கலந்து களியூட்டும் மது பிறந்ததுபோல பொருத்தமான பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். எனினும் அப்பூதங்களின் கூட்டம் கலையும்போது பறை ஓசை ஒன்று செல்லச் செல்ல தேய்ந்து மறைந்தாற்போல அதுவும் தேய்ந்து மறைந்து தன் முதலோடு இணைந்து விடும்.

உயிர்த் தோற்றத்திற்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதமும், உயிரற்ற உணர்வற்ற பூதமும் அந்தந்தப் பூதங்களின் வழியாகவே அவை அவை பிறக்கும். உண்மை இதுவே. இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாதயர்களின் உணர்வுதான். காட்சி அளவை அல்லாது வேறு கருத்துக்கள் நிலை பெறாது அழியும் என்பதால் நாங்கள் ஏற்பதில்லை. இவ்வாழ்வும், இவாழ்வின் பயன்களும் இப்பிறப்போடு கழியும். மறு பிறவி உண்டென்றும், இப்பிறவியின் வினைப்பயன்களை அப்பிறவியில் நுகர வேண்டும் என்பதும் பொய்”

-என்று முடித்துக் கொண்டான் பூதவாதி.

எல்லா மார்க்கங்களையும் அவரவர்தம் வாயாற் கேட்ட மணிமேகலை, “இவை நன்றல்ல என்றபோதும் நான் இவற்றை மறுத்தொன்றும் கூறேன். தான் பிறந்த முற்பிறவியை அறிந்தார் உண்டோ என்ற பூதவாதியின் கருத்தைக் கேட்ட மணிமேகலை அவ்வாறு தன் முற்பிறப்பை அறிந்திருந்த தன்னிடமே அவன் இப்படிக் கூற நேர்ந்ததை எண்ணி நகைத்ததோடு, அதை, அவனிடம் அதைச் சுட்டிக் காட்டவும் செய்தாள்.

“தெய்வ மயக்கத்தாலும், கனவு காணும் திறத்தாலும் மையலுறுவோரின் உரைவகை உன்னுடையது. இது ஐயத்திற்கு இடமாகிறதே ஒழிய உண்மை ஆகாது” என அவன் பதிலுறுத்தான்.

அதற்கு, “உன் தந்தை தாயரை அனுமானத்தில் அல்லாது நீ வேறெப்படி அறிவாய்? மெய்யுணர்வுக்கு ஏதுவான அனுமானம் முதலான அளவைகளால் (தர்க்கங்களால்) அன்றி மெய்ப்பொருள்கள் பலவற்றையும் எவ்வாறு அறிவாய்? ஐயம் என்று உரைப்பதன்றி, இதன் உண்மையை நீ அறியப் பெறாதவன் ஆகிறாய்”- எனத் தன்னை மறைத்திருந்த ஆண் கோலத்திலேயே நின்று தன் கருத்தைச் சொல்லிய மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்தவள் ஆயினள்.

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை இத்துடன் நிறைவுறுகிறது.

பெரும் புலவராக மட்டுமின்றிப் பேரறிஞராகவும் தமிழ்ப் பாரம்பரியத்தில் வெளிப்படும் சாத்தனார் இவ்வாறு தமிழ் மண்ணில் அக்காலத்தே சமயக் களத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உரையாடல்களைத் தொகுத்து அளிக்கிறார். இந்தியத் தத்துவங்களை ஒரே தொகுப்பில் அளிக்கும் ஒப்பற்ற ஆக்கம் என மாதவாச்சார்யரின் ‘சர்வ தர்சன சங்கிரகம்’ எனும் நூலைச் சொல்வர். 14ம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் செழித்திருந்த பதினாறு இந்தியத் தத்துவங்களை அது ஒரே நூலில் அருகருகே நிறுத்தும் நூல் அது எனினும் அதற்குச் சுமார் எட்டு நூற்றாண்டுகள் முன்பே தமிழில் இவ்வாறு சாத்தனார் தம் பெரும் காப்பியத்தின் ஓரங்கமாய் அன்று ஓங்கியிருந்த அளவைவாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவவாதம், வேதவாதம், நிகண்டவாதம், சாங்கியவாதம், ஆசீவகவாதம், பூதவாதம் எனப் பத்துவகை நெறிகளையும் நுணுக்கமாய்த் தொகுத்து அளித்திருப்பது வியப்புக்குரியது. அது மட்டுமல்ல கி.பி ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இப்படிப் பல்வேறு சித்தாந்தங்களுக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடந்த மண்ணாகத் தமிழகம் விளங்கியதும் வரலாற்றில் நாம் சந்திக்கும் ஒரு வியப்பு.

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்

மீமாம்சகமாம் சமய ஆசிரியர்

தாம் பிருகற்பதி சினனே கபிலன்

அக்கபாதன் கணாதன் சைமினி

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சத்தம்

உவமானம் அருத்தாபத்தி அபாவம்

இவையே இப்போதியன்றுள அளவைகள் (27: 78 – 85)

 

என இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பற்சமயவாதத் தொகுப்பை ஆக்கியவர் என்கிற பெருமைக்குரியவர் ஆகிறார் சாத்தனார். எனினும் இந்தியத் தத்துவங்களாக இன்று முன்வைக்கப்படும்தொகுப்புகளில் காட்டப்படும் வேறு சில தரிசனங்கள் இங்கு விடுபட்டுப் போயுள்ளனவே எனத் தோன்றலாம். சாத்தனாரின் காலத்தில் (6ம் நூ) நையாயிகம், சாங்கியம், வைசேடிகம், மீமாம்சம் ஆகிய இந்த நான்கு ‘ஷட்தரிசனகள்’  தான் மேலோங்கி இருந்தன. சாத்தனாரின் சம காலத்தவரான தின்னாகரும் அரிபத்திரரும் கூட இந்த நான்கைத்தான் குறிப்பிடுகின்றனர் என்பது கருதத் தக்கது.

தம் தொகுப்பில் பத்து சமயக் கணக்குகளைத் தொகுத்தளிக்கும் சாத்தனார் இறுதியாக, “ஐவகைச் சமயமும் அறிந்தனள் – ஆங்கு என்” அவற்றை ஐந்தாகச் சுருக்கி முடிப்பதும் இங்கே கவனத்துக்குரியது. இந்தியச் சமயங்கள் குறித்துப் பொதுவாக ‘அறுவகைச் சமயம்’ எனச் சொல்வதே வழக்கம். சாத்தனார் இங்கு பத்து சமயங்களை விளக்கிய போதும் தொகுப்பாக ‘ஐவகைச் சமயம்’ என அவற்றைச் சுருக்குவதைக் காணும்போது இங்கு பயிலப்பட்ட மொத்தத் தத்துவங்களையும் சுருக்கித் தொகுக்கும் இடத்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வோரு வகையில் அவற்றில் சில மேலுக்கு வந்துள்ளன என்பதும் தேர்வுகளுக்கு இடையே அமையும் வேறுபாடுகளும் நம் கவனத்திற்கு வருகின்றன.

(அடுத்த இதழில் தமிழ் இலக்கியத்தில் காஞ்சிபுரம் ஓர் முக்கிய நகராக இடம்பெறுதல் என்பதன் பொருள்).

 

2019 தேர்தலை ஒட்டி: நெஞ்சை உலுக்கும் கடந்த ஐந்தாண்டுகள்…

2014 தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 268 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் பக்கம் 336 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்தப் பெரிய வெற்றியின் பின்னணியில் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் உலகமே தங்கள் கைகளில் வந்துவிட்டதாகச் செயல்படத் தொடங்கினர். எல்லோரும் கேலி செய்யும் அளவுக்கு  வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுத் தலைவர்களை வரவழைத்துச் செய்த (இலட்ச ரூ மதிப்புள்ள தங்க சரிகை பொறுத்திய கோட் அணிந்து மினுக்கியது உட்பட) அட்டகாசங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட முடியாது. பிரேசிலின் ஜைர் போல்சனாரோ போலவும், துருக்கியின் ரிசெப் தையிப் எர்டோகான் போலவும், ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் போலவும் அமெரிக்காவின் ட்ரம்ப் போலவும் தன்னை ஒரு ஆக வலிமையான strongman ஆக நரேந்திரமோடி முன்னிறுத்திக் கொண்டார்..

நாட்டில்  கிறிஸ்தவ நீதிபதிகளும் இருபார்களே என்பதைப் பற்றிக் கவலை இல்லாமல் ஒரு ஈஸ்டர் நாளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாநாட்டைக் கூட்டியதும், பிரதமர் அலுவலகம் ஆண்டுதோறும் நடத்தி வந்த இப்தார் விருந்தை ரத்து செய்ததும், இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் பாரம்பரியமான கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, பலஸ்தீனத்தின் மீதான அதன் தாக்குதலை மௌனமாக ஆதரித்ததும், பெரும் விளம்பரங்களுடன் இஸ்ரேலுக்குச் சென்று விருந்தாடி வந்ததும் சில எடுத்துக்காட்டுக்கள்.

அனைத்து அதிகாரங்களும் தம் கைகளில் வந்தாற்போல சங்கப் பரிவாரங்களும் ஆங்காங்கு தம் வேலைகளைத் தொடங்கின. புனேயில் தொழுகை முடித்து வந்துகொண்டிருந்த மொஹ்தின் ஷேக் என்ற ஒரு இளம் சாஃப்ட்வேர் ஊழியர்  (ஜூன் 2, 2014) குத்திக் கொல்லப்பட்டார். அங்கிருந்த முஸ்லிம் கடைகள், குறிப்பாக பேக்கரிகள் மற்றும் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன. டெல்லியில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன (பிப்ரவரி 2015). அடுத்த சில மாதங்களில் உ.பியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என முகம்மது அக்லக் எனும் பெரியவரை சங்கப் பரிவாரக் கும்பலொன்று குத்திக் கொன்றது. அவரது இளம் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் (செப் 2015) மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். ஊர்ப் பொதுவாக உள்ள ஆலய ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து, மக்களை வெறியூட்டித் திரட்டி அக்லக் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்று அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது உலகளவில் கவனத்திற்கு உள்ளாகியபோதும் கூட நரேந்திரமோடி வாய்திறக்கவில்லை. தொடர்ந்து பலர் இவ்வாறு பசுவின் பெயரால் நாடெங்கும் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் மோடியும் அமித்ஷாவும்  வெளிப்படையாக மதவாத அரசியலைச் செய்தனர். ‘வளர்ச்சி’ (விகாஸ்) என வாயாடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி மாநிலத் தேர்தல்களில்  ‘முஸ்லிம்கள்’ எனப் பெயர் உதிர்த்து அடையாளம் காட்டாமலேயே முஸ்லிம் வெறுப்பை விதைத்து, அதை ஓட்டுக்களாகவும் ஆக்கினார். காங்கிரசை முஸ்லிம் கட்சி என அடையாளம் காட்டுவது அவரது தந்திரங்களில் ஒன்று.. “பசுமைப் புரட்சி “க்குப் பதிலாக “ஊதாப் புரட்சி” செய்த கட்சி என பிஹார் தேர்தலின்போது காங்கிரசை அவர் அடையாளப் படுத்தியது குறிப்பிடத் தக்கது. விவசாயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் மாட்டுக் கறி விற்பனையைப் பெருக்கிய கட்சி என்பது அதன் பொருள். “பசுமாடுகள் வளர்த்துப் பால் வியாபாரம் செய்வதற்குக் கடனுதவி செய்ய மாட்டார்கள். ஆனால் மாட்டுக்கறி வணிகம் என்றால் குறைந்த விலையில் எல்லா வசதியும் செய்து தருவார்கள்” – என அக்கட்சியை அடையாளப்படுத்துவது என்பதெல்லாம் நரேந்திரமோடியின் தரக் குறைவான தேர்தல் பிரச்சார உத்திகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்.

காங்கிரஸ் இந்த உத்தியைத் தைரியமாக எதிர்கொள்ளாமல் பம்மியது. நேரடியாக இதை ஒரு மதவாத அரசியல் எனச் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தாமல் ‘நாங்கள் அப்படியெல்லாம் இல்லை’ எனச் சொல்வதையே அது தன் எதிர்வினையாக ஆக்கிக் கொண்டது. இதன் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி தன்னை ஒரு காஷ்மீர் பிராமணனாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்து ஆலயங்களுக்குச் சென்று வணங்கிவிட்டுத் தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மொத்தத்தில் முஸ்லிம்களாக இருப்பதே குற்றம் என்கிற அளவுக்கு முஸ்லிம்கள் உணர வேண்டிய நிலை சென்ற ஐந்தாண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுபவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் வங்கதேச அல்லது ரோகிங்யா “ஊடுருவிகள்”, அவர்கள் இந்துக்களாக இருந்தால் இந்து “அகதிகள்”. மொழியை அத்தனை சாதுரியமாக ஒரு தாக்குதல் ஆயுதமாக அவர்கள் ஆக்கினர். அண்டை நாடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தவர்கள் முஸ்லிம்களாக இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தருவது மட்டுமல்லாமல் குடியுரிமையும் அளிக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கடந்த பல பத்தாண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்து இங்கு விவசாயம் முதலான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருந்த போதும் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. இன்று அசாமில் அவ்வாறு 40 லட்சம் மக்கள் குடியுரிமை பற்றிய கேள்விக்குறியுடன்  வதிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் எந்த நாடுகளில் இருந்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை என்பதை ஆர்.எஸ்.எஸ் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ கொள்கையிலிருந்து எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது. உலகின் எப்பாகத்திலிருந்து யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் கொள்கையைத்தான் அவர்கள் ‘அலியாஹ்’ என்கிறார்கள்.

அக்லக் முதலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது ஒருபக்கம் மோடி மௌனம் காத்தார். இன்னொரு பக்கம் அவரது கட்சிக்காரர்களும் மாநில அமைச்சர்களும் அதை ஆதரித்தனர். மோடி அதைக் கண்டிக்காததற்கு அப்படிக் கண்டிப்பது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகிவிடும் என அவர்கள் தரப்பில் சமாதானம் சொல்லப்பட்டது.

2015 பிஹார் தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவ், “இந்துக்களும்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” எனப் பதிலளித்தபோது, “‘யாதவ் சாதியில் பிறந்துவிட்டு இந்துக்களை அவமானப் படுத்துகிறார்” என மோடி அவரைக் குற்றம் சாட்டியதையும் மறந்துவிடமுடியாது.

இப்படியான அப்பட்டமான மதவாத அரசியல் தொடர்ந்தால் அது எங்கு கொண்டு சென்றுவிடும்?

இதுதான் இந்தத் தேர்தல் நம்முன் எழுப்பும் கேள்வி.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

அ.மார்க்ஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காட்டிலும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது முக்கியமான கேள்வியாக மேலெழுந்துள்ளது. எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் தொழிற்சங்கத்தினர் எனப் பலரும் பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து பாரதீய ஜனதா கட்சிக்கும் அதற்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் எனப் பொதுமக்களை நோக்கி வேண்டும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது…

தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதும், அவ்வாறு வாக்களிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும் ஒரு அடிப்படை உரிமை. இன்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அவ்வாறு மக்களின் ஆதரவை நாடிப் போய்க் கொண்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான், “யாருக்கு ஓட்டளிப்பது என்கிற உங்களின் தேர்வு உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியையும் நாங்கள் பரிந்துரைக்கவும் இல்லை. அதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மட்டும் நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம்”. – என இன்று பல்வேறு சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலியோர் இந்தியாவெங்கும் களம் இறங்கியுள்ளனர்.

இதற்குமுன் வேறெப்போதும் இப்படியான நிலை ஏற்பட்டதில்லை. இன்று ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது?

நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த முறை அவர்களைத் தோற்கடித்துவிட ஜனநாயகத்தில் வாய்ப்புள்ளது.. ஆனால் நாம் தேர்ந்தெடுப்பவர்கள் இனி தேர்தல் நடத்துவதையே சாத்தியமில்லாமல் செய்யக் கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது?

அப்படியான ஒரு சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இன்று கூட (ஏப்ரல் 06, 2019) சென்னையில் கல்வியாளர்கள், அறிவியல் அமைப்பினர் முதலானோர் ஒன்று கூடி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் “யாரைத்  தேர்ந்தெடுக்கக் கூடாது என” – என விளக்கினார்கள். வரும் ஏப்ரல் 11 அன்று அப்பட்ரியான ஒரு பிரகடனத்தைச் சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள் முன்வைக்கின்றனர்.

இப்போது தேர்தல் தேதிகள் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு மாதம் முன்பு கூட மக்கள் மத்தியில் ஒரு ஐயமும் அச்சமும் இருந்தது. புல்வாமா தாக்குதலைக் காரணமாகச் சொல்லி தேர்தலை ரத்து செய்துவிடுவார்களோ என்கிற ஐயம் இந்தியா முழுமையிலும் ஒரு பேச்சுப் பொருளாக இருந்ததை அறிவோம்.

அப்படி மக்கள் ஐயம் கொள்ளும் அளவிற்கு ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கும் எந்தக் கட்சிக்கும் இல்லாத சில “பெருமைகள்” பா.ஜ.கவுக்கு உண்டு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.முக என எந்தக் கட்சியானாலும் அவை சுயேச்சையாக இயங்குபவை. ஆனால் பா.ஜ.க அப்படியல்ல. அதைப் பின்னிருந்து ஆட்டி வைக்கும் சக்தியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இருப்பதையும், அதுவே பிரதமர் உட்பட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் யார் எனத் தீர்மானிப்பது,ம் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்தான். ஆர்.எஸ்.எஸைப் பொருத்த மட்டில் அதைத் தோற்றுவித்த தலைவர்கள், அது தோன்றிய நாளிலிருந்தே பின்னாளில் பெரும் இகழுக்கு ஆளாகி ஒழித்துக் கட்டப்பட்ட பாசிச சக்திகளுடன் மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்ததைய நாம் அறிவோம். மாரியோ காசெல்லி முதலான ஆய்வாளர்கள் இதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சட்டத்தை இவர்கள் ஏற்பதில்லை என்பதையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம நமது அரசியல் சட்டத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளிப்படையாக முயற்சிப்பதையும் நாம் அறிவோம். மோடியின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எவ்வாறு நீதிமன்றம், திட்ட ஆணையம், சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி முதலான அரசியல் சட்ட  அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், மற்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அமைக்கப்பட்ட நிறுவனங்கள் (statutory bodies) எல்லாம் இவர்களால் சீரழிக்கப்பட்டன என்பதை ‘மக்கள் களம்’ இதழில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.

இன்று இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வரையில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வெளி வரவில்லை. பிற கட்சிகள் அனைத்தும் தத்தம் அறிக்கைகளைத் தந்துவிட்டன. சென்ற நாடாளுமன்ற்த் தேர்தலிலும், தேர்தல் தொடங்குவதற்கு முதல்நாள்தான் தேர்தல் அறிக்கையை அவர்கள் அளித்தார்கள். அதனாலேயே இப்போது தேர்தல் ஆணையம் குறைந்த பட்சம் தேர்தல் தொடங்குவதற்கு இரண்டுநாள் முன்னதாகவாவது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

l_440199_043358_updates

பா.ஜ.க அரசு இப்படியான சட்டபூர்வமான நிறுவனங்களை மட்டும் அல்லாமல் கல்வித்துறையில் பெரிய அளவில் தலையிட்டுள்ளதோடு பட்டியல் இனத்தவரும் இதர அடித்தள மக்களும் மேற்கல்வி படிப்பதற்குப் பல்வேறுவகைகளில் இப்போது தடையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அவர்கள் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ, சில நல்ல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பட்டியல் இனத்தவர் மீதான வன்முறைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பா.ஜ.க ஆட்சியில் நீக்கப்பட்ட 200 புள்ளி ரோஸ்டர் முறையை மீண்டும் கொண்டுவருவதாகவும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்வது குறித்த அர்சியல் சட்டத் திருத்தம் செய்வதாகவும், ‘பஞ்சமி’ மற்றும் ‘மகர்’ நிலங்களை ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றி பட்டியல் சாதியினருக்குத் திருப்பி அளிப்பதாகவும், பாடத் திட்டத்தில் பட்டியல் இன மக்களின் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடங்களைச் சேர்ப்பது எனவும், 6 முதல் 12ம் வகுப்பு வரை தரமான ஆங்கிலம் பயிலக் கூடிய நிலையைப் பட்டியல் இன மாணவர்களுக்கு உருவாக்குவதாகவும், பழங்குடி மக்களின் வன உரிமைகளை நிலைநாட்டப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும், பட்டியல் இன மகக்ளுக்கான போபால் பிரகனத்தில் முன்மொழியப்பட்ட உறுதியாக்க நடவடிக்கைகள் (affirmative action) மற்றும் ஒவ்வொரு அலுவகத்திலும் பன்மைத்துவக் குறியீடு வெளியிடுதல் முதலானவற்றைச் செயல்படுத்துவது  குறித்தும் காங்கிரஸ் அறிக்கை பேசியுள்ளது.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இதை எல்லாம் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போகிறார்களோ இல்லையோ கொள்கை அளவிலேனும் இப்போது அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இந்த வாக்குறுதிகளை பா.ஜ.க எவ்வளவு எரிச்சலுடனும், ஆத்திரத்துடனும் எதிர்கொள்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். “இந்தத் தேர்தல் அறிக்கையை நக்சலைட்கள், ஜிகாதிகள் (அதாவது முஸ்லிம் பயங்கரவாதிகள்) ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் தயாரித்துள்ளது” என அருண் ஜேட்லியும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் இன்று மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்து எதிர்கொண்டு உள்ளதை நாம் பார்க்கிறோம்..

ஆர்.எஸ்.எஸ் 1925 ம் ஆண்டு நாக்பூரில் தொடங்கப்பட்டது. சரியாக நூறாண்டில், அதாவது  2025 ம் ஆண்டில் இங்கே இந்துத்துவ அரசை அமைப்பது என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இது இரகசியமல்ல. வெளிப்படையாக அவர்கள் பேசி வருவதுதான். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024ல் நடக்க உள்ளது. அதில் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க உள்ளனர் என்கிற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி தலித் மற்றும் பழங்குடியினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அவர்கள் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள  நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதாக மாற்றி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவது, அவர்களின் நோக்கங்களில் ஒன்று. அடுத்த கட்டமாக நமது அமைப்பின் இன்னொரு முக்கிய அடையாளமாகிய மதச்சார்பின்மை என்பதை ஒழித்துக் கட்டுவது என்கிற நோக்கில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்கிற அச்சமும் ஜனநாயக உணர்வுடையோர் மத்தியில் உள்ளது. இவை வெளிப்படையாகப் பேசப்பட்டபோதும் இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த மறுப்பும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் உ.பியைச் சேர்ந்த ஒரு சங்கப் பரிவாரத் தலைவர் 2019 தேர்தல்தான் இந்தியாவில் நடக்கும் கடைசி நாடாளுமன்றத் தேர்தல் என வெளிப்படையாகப் பேசியதையும் கூட அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.

இந்த அடிப்படையில்தான் இன்று ஆங்காங்கு ஜனநாயக உணர்வுடையோர், அறிஞர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் எனப் பல தரப்பினரும் “நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்போம்” எனும் முழக்கத்தோடு மக்களைச் சந்தித்து வருகின்றனர்.

ஆம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் சங்கப் பரிவாரங்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். அந்த வகையில்தான் நாம் யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்கிற கேள்வியை இப்போது முன்வைக்க வேண்டியதாக உள்ளது.