சாதி : தோற்றம் – வளர்ச்சி – ஒழிப்பு

ஒன்று

இந்தியத் துணைக் கண்டத்தின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாய் கடந்த இரண்டாயிரமாண்டு கால வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு ஆகியவற்றைக் குறித்த சிந்தனைகளை ஒரு சிறு கட்டுரைக்குள் அடக்கும் முயற்சி ஒரு மிக எளிய செயல்பாடாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையோடு கீழ்க் கண்ட செய்திகளைத் தொகுத்துச் சிந்திப்போம்.

பிறப்பின் அடிப்படையிலான குழுக்களாய்ச் சமூகம் முழுமை யையும் பிளவு படுத்துதல், ஏற்றத் தாழ்வான படி நிலை அமைப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்தல், சமூக உற்பத்தியில் ஒவ்வொரு குழுவிற்கும் ஓர் இடம் (அதாவது பிறப்பின் அடிப்படையில் தொழில்) சமூகச் சடங்ககுகளில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பாத்திரம் (எ‡டு : கிராம திருவிழாக்களில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட கடமை), குழுவிற்குள் மட்டும் சமபந்தி உணவு மற்றும் திருமண உறவு, ஒதுக்கமான குடியிறுப்புகள் ஒவ்வொரு குழுவிற்கு உள்ளும் விவகாரங்களைத் தீர்ப்பதற்கான பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் குழுவின் விதிகளை மீறியவர்களைக் குழுவிலிருந்து விலக்கி வைக்கும் அதிகாரம், ஒவ்வொரு குழுவிற்குமெனச் சில மரபுகள், மற்றும் வழமைகள் ஆகியவற்றைச் சாதியத்தின் முதன்மையான அம்சங்கள் எனலாம். சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மேற்குறித்த கூறுகளின் அடிப்படையிலான செயற்பாடுகளின் விளை வாகச் சமூக உணர்வைப் பெறுகிறான்; தனது சுயத்தைக் கட்டமைத்துக் கொள்கிறான். இத்தகைய சமூக நடைமுறையின் விளைவாகக் கட்டமைக்கப்படும் சமூக முழுமைக்குமான பொதுக் கருத்தியலின் விளிப்பில் ஒவ்வொருவனும் தன்னை ஒரு சாதியனாக அடையாளம் காண்கிறான். தனக்கு ‘கீழான’ சாதியானைக் காட்டிலும் மேலான வனாகவும் ‘மேலான’ சாதியைக் காட்டிலும் கீழானவனாகவும் உணர்கிறான். சமூக உற்பத்தியிலும் சடங்கு நடவடிக்கைகளிலும் சாதி உரிமைகளைக் கற்பிதம் செய்து கொள்கிறான். இத்தகைய உணர்தல் களும், கற்பிதங்களும் அவனை ஒரு சமூகமாய், இனமாய், வர்க்கமாய் அடையாளம் காண்பதில் பெருந் தடைகள் ஏற்படுத்தி விடுகின்றன.

பொதுக் கருத்தியலிலிருந்து விடுதலை பெற்று, செயலுக்கு உந்தப் பெறுவதும், இருக்கும் இழிநிலைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவ தும் தடைக்குள்ளாகின்றது. சாதி உரிமைகள் என்கிற கருத்தோட்டம் ரத்தத்தில் ஊறிக் கிடக்கும்போது சமூக முழுமைக்குமான சம உரிமை கள் குறித்த உணர்வு கிளர்வதற்கு வழி இல்லாமல் போவதால் மனித உரிமைகள், ஜனநாயகப்பாடு ஆகியவை குறித்த ஓர்மையற்றதாகச் சமூகம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இருக்கும் கொடுமை நிகழ்ந்து விடுகிறது (1).

சாதி இயக்கத்தின் மையமான கூறுகள் இவை என்ற போதிலும் மூவாயிரமாண்டு காலச் சமூக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் போது சாதியத்தின் செயற்பாடுகள் எல்லா அம்சங்களிலும் மேற்குறித்தவாறே எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது எனச் சொல்லமுடியாது. சிந்துவெளி காலத்திய சமூகத்தில் சாதியின் தொன்மை வடிவத்திற் கான கூறுகள் இருந்த போதிலும் அதன் இயக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை.

ரிக் வேத சமூகத்தில் நான்கு வருண பாகுபாடு என்பதுகூட முழுமை யாகச் செயல்படவில்லை. பிறபபின் அடிப்படையில் தொழில் என்பது ரிக் வேத கால நடைமுறையாக இல்லை. பின் வேதகாலத்தில் கூட வருணங்களிடையிலான இயக்கம் முற்றிலுமாய் தடைசெய்யப்பட வில்லை.

தமிழகத்திலோ சங்க இலக்கியங்களுக்கு முந்திய காலகட்டத்தில் (கி.மு. 2 நூற்றாண்டுக்கு முன்) சமூக உருவாக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை. இன்றைய வடிவிலான சாதிய உருவாக்கத்தின் தோற்றத்திற்கு ஆதாரமில்லை.

அதே போல சம காலச் சூழலைக் கருத்திற் கொண்டு பார்த்தோ மானாலும் கூட சாதிப் பஞ்சாயத்து, சாதி விலக்கம், சமபந்தி உணவு முதலியவை இன்று பெருமளவில் நடைமுறையில் இல்லை. கிராம அடிப்படையிலான சிறுவீத உற்பத்தியில் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது உறுதியாகச் செயற் படுகிறது. பரந்த அளவிலும் (macro level)), பெருவீத உற்பத்தியிலும் கோட்பாட்டளவிலேனும் இந்நிலைமை இல்லை. (2)

 

ஆக, சாதியத்தின் மையமான கூறுகளென நாம் வரையறுத்தலை முழுமையாகச் செயற்பட்ட காலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில் மட்டுமே எனலாம். தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.

எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்தி, பெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்கு, சாதி பயன்பட்டு வந்துள்ளது.

முதலாளியக் காலக்கட்டத்தில் மட்டுமே உபரியை உறிஞ்சுதல் என்பது முற்றிலும் பொருளாதார அடிப்படையில் செயல்படும் எனவும் முதலாளியத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்களில், மதம் முதலிய ‘பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட’ வற்புறுத்தல்கள் உபரி உறிஞ்சலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் மார்க்சியம் பகரும்.

இந்திய நிலப்பிரபுத்துவத்தில் சாதியமும் அதற்கு தத்துவார்த்த சடங்குப் பாத்திரப் பின்புலத்தை வகுத்தளித்த (இந்தோ ‡ ஆரியப் பார்ப்பனிய) இந்து மதமும் (தமிழகத்தில் இதனை சைவ‡ பார்ப்பனிய இந்துமதம் எனலாம்) உபரி உறிஞ்சுதலைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் உள்ள வேறு சில முக்கிய ஒற்றுமை, வேற்றுமைகளும் இங்கு சிந்திக்கத் தக்கன. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமூகத்திலுங்கூட நிலப்பிரபுகள் தங்களுக் குள்ளேயும், பண்ணையடிமைகள் தங்களுக்குள்ளளேயுந்தான் சமூக உறவுகளைக் கொண்டிருந்தனர். (எ‡டு : திருமணம், விருந்து முதலியன). ஓரளவு தொழில்களுங்கூட

பிறப்பின் அடிப்படையில் இருந்தன எனலாம். ஆனால் இந்த வேறுபாடுகள் நிலப்பிரபுக்கள் (சுரண்டுபவர்கள்), பண்ணையடிமைகள் (சுரண்டப்படுபவர்கள்) என்கிற மட்டத்திலேயே பெரும்பாலும் செயல்பட்டது.

இந்தியச் சமூகம் போல, சுரண்டப்பட்ட மக்களுக்குள்ளேயே ஏராள மான உட்பிரிவுகளும் அவர்களுக்குள் இறுக்கமான அகமண உறவும், சடங்கு ரீதியான பாத்திர வேறுபாடுகளும் அங்கெல்லாம் கிடையாது. அய்ரோப்பிய சமூகத்தில், வர்க்க ரீதியாய் ஒரு வகை அகமண முறை கடைபிடிக்கப்பட்ட போதுங் கூட அவை கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படவில்லை. மத, சடங்கு ரீதியான ஏற்பு வட்டத்திற்குள் அது கொண்டுவரப்படவில்லை. பிறப்பு ரீதியான சமூகத் தகுதியும் இவ்வாறு மத, சடங்கு வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படவில்லை. இங்கிருந்த இந்தோ ‡ ஆரிய, சைவப் ‡ பார்ப்பனிய இந்து மதம் அத்தகைய கோட்டுபாட்டுருவாக்கத்தின் செயல் வடிவமாக இருந்தது.

இதன் அடிப்படையில் சமூக உற்பத்தியும் உபரி உறிஞ்சலும் நடை முறைப்படுத்தப்பட்டன. இத்தகைய நடைமுறையின் விளைவான ‘பொதுக் கருத்தியலின் அடியாக’ அதன் விளிப்பில் சமூக மனிதனின் சுயம் கட்டமைக்கப்பட்டது.

இந்த வகையில் சாதி உணர்வு ஒப்பீட்டளவில் சுயேச்சையான செயல்பாடு கொண்டிருந்தது.

முதலாளியச் சமூகத்தில், ‘வர்க்கம்’ என்பது பிற பொருளாதாரதிற்கு அப்பாற்பட்ட வற்புறுத்தலின் அடியான உறவுகளிலிருந்து விலகி முற்றிலும் ‘ஒரு பொருளாதார வகையினமாக’ மாறும் என்பர். அய்ரோப்பியச் சமூகத்தில் அப்படித்தான் நடந்தது.

இந்தியாவில், ஏகாதிபத்திய நெறியின் கீழ் சனநாயகப்பாடு இல்லாம லேயே முதலாளிய வளர்ச்சி ஏற்பட்ட கதை நமக்குத் தெரியும்.

எனவே இங்கு முற்றிலுமாய் வர்க்கம் ஒரு பொருளாதார வகையின மாக உருப்பெற்றுள்ள பெருவீத உற்பத்தியிலும்கூட சாதி உணர்வு என்பது அதனுடைய அக மணக்கூறுடன் சுயேச்சையான இருப்பைக் கட்டமைத்துக் கொண்டு விடுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தச் சமூக அமைப்பைக் காப்பாற்றி அதன் மூலம் இன்றைய உபரி உறிஞ்சலை யும் அதிகாரச் செயல்பாட்டையும் காப்பாற்ற நினைக்கும் ஆதிக்கச் சக்திகள் தங்கள் நோக்கை நிறைவேற்றிக் கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளில் தலையாயயதாக இச்சாதி உணர்வை நிலை நிறுத்தும் பணியை முதன்மையாக மேற்கொள்கின்றன.

அதற்குரிய வகையில் தேர்தல் அரசியல் உட்பட்ட அரசின் செயல் பாடுகளும் அமைகின்றன. இதனை விரிவாய்ப் பார்க்குமுன்பாக, சாதி யத்திற்குச் சில பொதுப்படையான பண்புகளும் செயல்பாடும் இருந்த போதிலும் வரலாறு முழுவதிலும் இவை ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்கிற புரிதலோடு சாதியின் தோற்றம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வோம்.

இரண்டு

முன்பு நான் எழுதிய குறிப்பொன்றில் ‘சாதியின் தோற்றம்’ குறித்து,

“இந்தியாவில் ஆசிய உற்பத்தி முறை நிலவியதா இல்லையா என்பது விவாதத்திற்குரியதாயினும் அய்ரோப்பாவில் தோன்றிய முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகட்கும் இங்கு தோன்றிய வைகட்கும் முக்கிய வேறுபாடுகள் உண்டு. ‘ஆதிச் சமூகங்களை ஆசிய அடிப்படை வடிவம், ரோமானிய – கிரேக்க வகைச் சமூகம், செர்மானிய வடிவம் என மார்க்ஸ் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமுதாயமாக இருப்பதே ஆசிய வடிவத்தின் சாரம். தனி மனிதன் என்பது ஒரு விபத்துதான். இந்நிலையில் சுரண்டல் வடிவெடுக்கும் போது, ‘அடிமை முறை’ -என்பது கிரேக்க – லத்தின் மாதிரியாக (அதாவது ‘இன்னாரின் அடிமை இன்னார் என  அமையாமல்) ‘பொது அடிமை முறை’ இங்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, அடிமைகள் அனைவரும் சமம் என்கிற நிலை போய், அடிமைப்பட்ட சமூகத்திற்குள்ளிருந்த ஏற்றத்தாழ்வுகள் அடிமை களுக்குள்ளேயான ஏற்றத்தாழ்வுகளாக வடிவெடுத்தன. எனவே அய்ரோப்பாவைப் போலன்றி, இங்கு உழைக்கும் வர்க்கத் திற்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.

பின்னாளில் இந்திய நிலப் பிரபுத்துவ வடிவத்தில் இவை சாதி முறையாக இறுகின. இப்படி நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணிகளை இங்கேயுள்ள புவியியற் தன்மைகள், தட்ப வெப்பச் சூழல்கள், இனக் கலப்பு, இரும்பைப் பயன்படுத்துவதில் தேக்கம், இந்திய அரசுருவாக்கத் தின் தனிப் பண்புகள் ஆகியவற்றில் தேட வேண்டும்” (3 )  என்கிறபடி குறிப்பிட்டிருந்தேன்.

இங்கே இந்தப் பிரத்தியேகக் காரணிகளைச் சற்று விளக்க முற்படுவோம்.

அடிமை முறை வளர்ச்சியுற்ற கிரேக்க சமுதாயத்திற்கும் வருண – சாதி முறை வளர்ச்சியுற்ற இந்தியச் சமூகத்திற்குமிடையேயான வேறுபாடுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:

(அ). கிரேக்க சமுதாயத்தில் கற்காலம், உலோக காலம், இரும்புக் காலம். விவசாயமயமாக்கல், அரசுருவாக்கம், நகர நாகரிகச் சமுதாய அமைப்பு என்பன அடுத்தடுத்து ஒரே சமுதாயத்தில் ஒரே புவிப்பரப்பில் ஒரே இன மக்கள் நடுவில் தோற்றம் கொண்டன. இந்தியச் சூழலில் இந்நிலைமை இல்லை.

காலத்தால் முற்பட்ட சிந்து வெளிப் பண்பாட்டிற்கும் வருண சாதியமைப்பின் தொட்டிலாகிய கங்கைச் சமவெளிப் பண்பாட்டிற்கும் தொடர்ச்சி கிடையாது. சிந்துவெளிப் பண்பாட்டைத் திராவிட இனத்துடன் பேசப்படுகிற கருத்து வலுவாக வேரூன்றியுள்ள போதும் சிந்து வெளி மக்கள் யார் என இதுவரை அய்யத்திற்கிடமின்றி நிறுவப்படவில்லை. சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவுமில்லை. சிந்துவெளிப் பண்பாடு குறித்து வரலாற்றாசிரியர்கள் பொதுவில் கருத்து மாறுபாடினின்றி ஏற்றுக் கொள்ளும் உண்மைகளை இப்படிப் சொல்லலாம்:

சிந்துவெளிச் சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறிந்திராத உலோக காலச் சமூகம். ஏற்றத்தாழ்வும் வர்க்க வேறுபாடும் மிகுந்திருந்த ஒரு வகை நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் இது. விவசாயத்தை இம் மக்கள் அறிந்திருந்தனரெனினும் பிந்திய கங்கை வெளிச் சமூகத்திற்கும் இவர்களுக்குமிடையே வேறுபாடுகள் நிறைய. விரிவான அரசுருவாக்கம் நடைபெறாத இச்சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை நிலைநாட்டுவதில் மதக் கருத்தியலாதிக்கத்தின் பங்கு முக்கியமானது. இவ்வகையில் பின்னாளைய சாதியமைப்பின் தொன்ம மாதிரியை இங்கு அடையாளங் காணமுடியும். சிந்துவெளிப் பண்பாடு எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்தும் ஐயத்துக்கிடமற்ற முறையில் நிறுவப்பட்ட கருத்துகள் ஏதுமில்லை.

ஆரியப்படையயடுப்பு என்கிற கருத்தைக்கூட இன்று ரொமிலா தப்பார் போன்ற வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை (4).

எப்படியோ, சிந்துவெளிக்குப் பிந்திய வேத காலப் பண்பாடு என்றழைக்கப்படும் கங்கைவெளிப் பண்பாடு முற்றிலும் இதிலிருந்து வேறுபட்ட இரும்பைப் பயன்படுத்திய, உழவு மயமாக்கலின அடிப்படை யிலான பண்பாடாக அமைந்தது.செழிப்பான உழவு கிராமங்களும் அவற்றினடியான நகர மற்றும் பல்வேறு வடிவிலான அரசுருவாக்கங் களும் நிகழ்ந்தன.

மகதத்தைக் கருவாகக் கொண்ட கங்கைவெளியே இன்றைய வருண – சாதி அமைப்பின் தொட்டிலாக அமைந்தது. கங்கை வெளியிலிருந்த ஆதிக்குடிகளும் குடியேறிய ஆரிய மொழி மக்களும் இணைந்து உருவாக்கம் பெற்ற இந்தோ – ஆரியப் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாகக் கிழக்கு நோக்கியும் மேற்குக் கடற்கரை வழியாகத் தெற்கு நோக்கியும் பரவியது. உள்நாட்டுக் குடிகளுக்கும் இந்தோ -ஆரிய மயப் பண்பாட்டிற்குமிடையே முரண்பாடுகள் இருந்திருக்கலாமெனினும் முரண்பாட்டைக் காட்டிலும் ஒருமையே பிரதானமாக இருந்தது.

(ஆ). இந்தோ – ஆரியப் பண்பாடு விரவிய கங்கைவெளியில் அக் காலக்கட்டத்திற்கு முன் அங்கிருந்த ஆதிக்குடிகளின் நடுவில் கிரேக்கத்தைப் போல இயல்பான வகையில் இரும்பு நாகரிகம் பரிணமிக்காமற் போனதற்கான காரணத்தை எங்கல்சின் ஒரு கூற்றிலிருந்து தொடங்கி ஆராயலாம்.(5)

புதிய கற்காலத்தின் இறுதியில் மனித சமூகம் கால்நடைகளை வளர்க்கவும் புராதன முறையில் தோட்டச் சாகுபடி செய்யவும் தொடங் கியது. இந்நிலையில் கீழை நாடுகளுக்கும் இதர பண்பாடுகளுக்கு மிடையேயான ஒரு முக்கிய வேறுபாட்டை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கீழை நாடுகளைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு, ஒட்டகம், பன்றி, கழுதை, மான் போன்ற பல்வேறுபட்ட வளர்க்கத்தக்க விலங்குகள் கிடைத்தன. பாலும் கறியும் இவ்வளர்ப்பின் மூலம் ஏராளமாகக் கிடைத்ததனால் வேட்டையாடுதல் குறையத் தொடங்கியது. உழவிலும் ஆர்வமிருக்கவில்லை. கால்நடைகளை வளர்க்க வாய்ப்பற்ற மேலைச் சமூகங்களில் தோட்டக்கலையும் பிறகு முன்னேற்றமடைந்த விவசாய மும் வளரத் தொடங்கியது. செம்பு, வெண்கலம் போன்ற உலோகக் கருவிகளிலும், இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை உழவுக் குப் பயன்படுத்துவதிலும் ஆர்வங்காட்டினர்.

கங்கை வெளியிலோ இந்தோ ஆரிய விரவலுக்குப் பின்பே, ஈரானிலும் பிற மத்திய கிழக்குப் பகுதிகளிலும் இரும்பு பயன்படுத்தப் பட்டு ஏறத்தாழ 200 முதல் 100 ஆண்டுகளுக்குப் பின்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது.

(இ). கிரேக்கத்திற்கும் கங்கை வெளிக்குமிடையேயான இன்னொரு வேறுபாடு விவசாயத்றகுரிய பரப்பளவு. கிரேக்க நாகரிகம் மிகச் சிறிய ஒரு பரப்பளவில் தோன்றியது. விளை நிலங்கள் மிகவும் குறைவு. கங்கை வெளியோ ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமும் சுமார் இரண்டு கோடி ஏக்கர் பரப்பளவுமுள்ள டெல்டா பகுதி.  (6)

(ஈ). அடுத்த முக்கிய வேறுபாடு இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தினருக்கும் ஆதிக்குடிகளுக்கும் இடையிலான இனம், மொழி மற்றும் தோற்றத்தின் அடிப்படையிலானது.

இனி இந்த வேறுபாடுகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதியில் கிட்டதட்ட சிந்துவெளி நாகரிகத் தைப் போல ஒரு நகர நாகரிகம் கிரேக்க – ரோமானியப் பகுதியில் உருவானது. கால்நடை வளர்ப்பு வாய்ப்பில்லாமல் உபரி வளர்ச்சிக்கு உழவையே அச்சமூகம் நம்பியிருந்தது. இரும்பின் பயன்பாடு கண்டு பிடிக்கப்பட்டவுடன் அதனுடைய சாத்தியக் கூறுகள் உழவிற்கும் உபரி உறிஞ்சலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. உலோக-நகரப் பண்பாட்டு உருவாக்கம் நடைபெற்ற அதே சமூகத்திலேயே தொடர்ச்சி யாக இரும்பு -உழவு நாகரிகம் வளர்ச்சியுற்ற போது இறுக்கமாக அங்கு உருவாகியிருந்த அரசமைப்பு உபரியை விரிவாக்க முயன்றபோது அடிமைகளைப் பயன்படுத்தியது. விளை நிலங்கள் குறைவாக இருந்தன என்பதும் இறுக்கமான தொடர்பு வலைப் பின்னல் மூலம் வாழ்தளம் முழுவதும் அரசமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டதும் அடிமைகள் தப்பித்து ஓடுவதற்கு வழிஇல்லாமல் ஆக்கின.

உலோக-நகர நாகரீக வளர்ச்சியின் தொடர்ச்சி அறுந்துபோய் உலோகப் பண்பாடே இல்லாத மேய்ச்சலைப் பெருமளவில் நம்பி யிருந்த உழவு, கைத்தொழில் என்றெல்லாம் வேலைப் பிரிவினை களின் அடிப்படையில் இனக்குழு ஒற்றுமை சிதையாத -குழுவிலிருந்து விலகிய தனி மனிதனே உருவாகும் வாய்ப்பில்லாத – ஒரு சமுதாயத்தில் இரும்பு விவசாய நாகரிகம் என்பது இந்தோ – ஆரிய மயமாக்கலின் விளைவாகத் தோன்றிய போது அது இன்னாருக்கு இன்னார் அடிமை என்றில்லாத பொது அடிமை முறையாகத் தோற்றமெடுத்தது (7).

அரசுருவாக்கமும் உபரி உறிஞ்சலும் இறுக்கமான போது வருண – சாதி அடிப்படையிலேயே வர்க்கமும் வடிவம் கொண்டது. அடிமை கொள்ளப்பட்ட உள்நாட்டுச் சமூகங்களின் சடங்கு ரீதியான பிரிவினை கள் ஏற்றத்தாழ்வுமிக்க சமூக உறவுகளாக உருப்பெற்றன.

மகதம் போன்ற இடங்களில் உறுதியான அரசுருவாக்கமும் அதிகார வலைப்பின்னலும் உருவாவதற்கு முந்தியச் சூழலில் கிரேக்கம் போன்று அடிமைகள் மீது தனிப்பட்ட முறையில் கொடூரமான அதிகாரம் செலுத்த முற்படும் போது ஒடுக்கப்பட்டவர்கள் தப்பித்து ஓடுவதற்கும் புதிய விளை நிலங்களில் புதிய குடியிருப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இங்கு வாய்ப்பிருந்ததையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் இங்கு கிரேக்கம் போன்ற வடிவில் அடிமை முறை தோன்றாததை நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனினும் உபரியை விரிவாக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்ட போது அதிகாரத்தைச் செலுத்தவும் சுரண்டலை மேற்கொள்ளவும் கிரேக்கத்தைக் காட்டிலும் நுணுக்கமான கருத்தியல் வகைப்பட்ட வடிவங்களை கங்கை வெளிப் பண்பாடு மேற்கொள்ள வேண்டியதாயிற்று. வருணாசிரம தருமமாகவும், பார்ப்பனீய இந்து மதமாகவும் இத்தகைய கருத்தியல் வடிவங்கள் வெளிப்பட்டன.

கிரேக்கத்தைப் போன்ற அடிமை முறையை இறுக்கமாகச் செயற் படுத்த இயலாத சூழலில் கங்கை வெளிப் பண்பாட்டின் ஆதிக்கப் பிரிவினரான பூசாரி வர்க்கமும், அரசதிகார வர்க்கமும் தமது சுரண்டலைத் தொடரவும், தக்க வைக்கவும், அதன் பயன்களைத் தமது சந்ததிக்குக் கையளிக்கவும் செய்த உத்திகளில் ஒன்று அம்பேத்கர் சொன்னது போல பிற வர்க்கங்களிடமிருந்து அகமண முறை மூலம் தங்களைக் கதவடைத்துக் கொண்டு ஒதுக்கம் பாராட்டுவதென்பது கூடவே கீழிருக்கும் வர்க்கங்களையும் ஒதுக்குவதுதான். தீட்டு, சடங்கு, தூய்மை போன்ற வடிவங்களில் இந்த ஒதுக்கமும், கதவடைப்பும், அகமணமும் கோட்பாட்டுருவாக்கம் செய்யப்பட்டன. மேலும் மேலும் புதிய இனக்குழுக்கள் உழவுச் சமூகத்திற்குள் உள்வாங்கப்பட்ட போது சில சமயங்களில் அத்தகைய குழுக்களின் ஆதிக்க சக்திகள் இங்குள்ள ஆதிக்க சக்திகளுடன் கதவடைப்பு இல்லாமல் இணைத்துக்கொள்ளப் பட்டதுமுண்டு; முற்று முழுதாக அந்த இனக்குழுவையே கதவடைத்து விலக்கி ஒரு புதிய சாதியாக உருவாக்கியதுமுண்டு.

இந்தக் காரணிகளில் பலவற்றைத் தமிழ்ச் சூழலுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். வரலாற்றுக்கு முந்திய தமிழகத்தின் தொல்குடிகளின் இனம் குறித்து அய்யத்திற்கிடமின்றி திட்டவட்டமாக இன்று எதையும் சொல்ல முடியவில்லை. பழங்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், பெருங்கற்புதைவுக் காலம் ஆகியவற்றிற்குமிடையே இங்கு தொடர்ச்சி இல்லை. கிரேக்கத்திலும் வடஇந்தியாவிலும், தக்காண பீடபூமியிலும் உள்ளதைப் போலன்றி இங்கு உலோக காலமே தோன்ற வில்லை. இரும்பின் பயன்பாடு என்பது வட இந்தியாவைக் காட்டிலும் இங்கு மேலும் இருநூறு ஆண்டுகள் தாமதமாகவே நிகழ்கின்றது. அதிலும்கூட தொடக்க காலத்தில் வேட்டையாடுதலுக்கும், போருக்குமே இரும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டது (8).

உழவிற்கு இரும்பு பயன்படுத்தப்பட்டது பின்னர்தான். வளர்க்கத் தக்க விலங்குகள் வட இந்தியாவைப் போல எப்போதும் நீராடுகிற நீண்ட ஆறுகளும் அகன்ற பெரிய சம வெளிகளுமில்லாத தமிழகத்தில் இரும்புக்குப் பிந்திய உழவு மயமாக்கலும் மருத நிலப் பண்பாடும் எல்லா இடங்களிலும் ஒரே சீராகவும் நடைபெறவில்லை. அருகருகே வெவ்வேறு உற்பத்தி வடிவங்களும் சமூக அமைப்புகளும், பண்பாடு களும் உருவாகின.

கி.மு. 4 ம் நூற்றாண்டுக்குப் பிந்திய வடமொழி நூற்களில்தான் தென்னிந்தியா பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

மேற்குக் கடற்கரை வழியாகத் தமிழகம் வந்த இந்தோ – ஆரியர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே கணிசமான அளவில் இங்கே வந்திருக்க முடியும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சமண, பெளத்த வணிகக் குழுக்களும் இங்கே வந்திருக்கலாம். கங்கைச் சமவெளியில் ஏற்படுத்தியதைப் போல பெரிய அளவில் பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடிய அளவிற்கு இக்கால கட்டங்களில் இடப்பெயர்வும், குடியேற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆரிய தாக்கம் இல்லாத மொழி, பண்பாடு முதலியவை இங்கே தன்னிச்சையாக வளர்ந்து வந்தன. இங்கும் கிரேக்க மாதிரியான அடிமை முறை தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவு.

தமிழகத்தில் மருத நிலப் பண்பாடும், உபரி உறிஞ்சலும், அரசு உருவாக்கமும் வளரத் தொடங்கிய போது உள்நாட்டில் எழுந்த தேவையின் காரணமாக இந்தோ ஆரியத்தின் சுரண்டற் கூறுகளை கொஞ்சம் கொஞ்சமாய் இங்கு வந்து கொண்டிருந்த இந்தோ -ஆரியரிடமிருந்து உள்நாட்டு ஆதிக்க சக்திகள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கிரேக்க மாதிரியான அடிமை உருவாக்கத்தைக்

காட்டிலும் கங்கை வெளி மாதிரியான வருண-சாதி உருவாக்கம், உபரி அதிகரிப் பதற்கு எளிதாக வழி வகுத்தது. சைவ – பார்ப்பனிய மயமாதலாக இங்கே அது வெளிப்பட்டது.

ஒன்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. வருண சாதி உருவாக்கத்தின் தோற்றக் கட்டத்தில் நிலத்தில் தனியுடைமை கிடை யாது. இடைத்தொடர்புகளில்லாமலேயே அரசு நேரடியாக உழவுச் சமூகத்திடமிருந்து உபரியை உறிஞ்சியது. இந்நிலைமை பின்னாளில் படிப்படியாகக் குறைந்து இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறை உருவாகியது. அரசுக்கும் உழவுச் சமூகத்திற்குமிடையே இடை நிலை ஆதிக்க சக்திகள் உற்பத்தி முறையில் பங்கு பெற்றன. மெளரிய – புத்த காலத்துப் பேரரசுகளின் நகரங்கள் இப்போது முக்கியத்துவ மிழந்தன. வணிகம் வீழ்ந்தது. ஆளும் வர்க்கமும், வினைஞர்களும் கிராமமயமாகினர். இடைநிலை ஆதிக்க சக்திகள் மெளரிய காலத்தில் அரசு உறிஞ்சிய உபரியில் பங்கு பெற்றது போலன்றி இப்போது நேரடி யாக உழவுச் சமூகத்திடமிருந்து உபரியை உறிஞ்சினர். இங்கிருந்தே அரசுக்கும் பங்கு போனது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டல் பரந்த மட்டத்திலிருந்து தல மட்டத்திற்கு (micro level)) வந்தது. (9)

எனவே கிராம அளவில் பல்வேறு உற்பத்தி சக்திகளடையே உற்பத்தி உறவுகளை வரையறுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டது. எனவே கிராம அளவில் படிநிலையாக்கம் இறுகியது. பல்வேறு குழுக்களிடையே கடமைகளும் உரிமைகளும், வரையறுக்கப்பட்டன. இதற்கான சடங்கு அடிப்படையிலான கோட்பாட்டு நியாயங்களை இந்து மதம் உருவாக்கித் தந்தது. இவ்வாறு பல்வேறு குழுக்கள் சாதிகளாய் இறுகின. உற்பத்தி வரிவடைந்து நுணுக்கம் பெற்ற போது சாதிகளின் எண்ணக்கையும் பெருகின. தேவைக்கேற்ப வேலைப் பிரிவினைகளும் உருவாகின. அவை புதிய புதிய சாதிகளைப் படைத்தன. காயஸ்தர், கருணீகர் போன்ற கணக்குப் பிள்ளைச் சாதிகள் மிக அண்மையில் ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் உருவாகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று

இந்திய நிலப்பிரபுத்துவக காலந்தொட்டு இன்று வரையிலான சாதியத்தின் செயல்பாட்டை விரிவாக இங்கே பேச முடியாவிட்டாலும் சில முக்கியமான கூறுகளை மட்டும் தொகுத்துக் கொள்வோம்.

பகுதிக்குப் பகுதி எண்ணிக்கையிலும், பெயரிலும் வேறுபட்ட எண்ணற்ற சாதிகள் செயல்பட்ட போதிலும் அவற்றை ஒட்டுமொத்த மாய்க் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். தமிழகத்தைக் கருத்திற் கொண்டு சொல்லப்படுகிற இவை இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளுக்கும் பொருந்தக் கூடியதே அவை :

. ஆதிக்க சாதிகள்

(i). பார்ப்பனர்

(ii). வேளாளர் (10)

. ஒடுக்கப்பட்ட/சுரண்டப்பட்ட சாதிகள்

(i). விவசாயச் சாதிகள் (எ-டு : கள்ளர், மறவர், வன்னியர்…

(ii). கை வினைச் சாதிகள் (எ-டு : தச்சர், கொல்லர், குயவர், மருத்துவர்…

(iii). தாழ்த்தப்பட்டோர் {எ-டு : தேவேந்திரர் (பள்ளர்), ஆதிதிராவிடர் (பறையர்),  அருந்ததியர் (சக்கிலியர்) முதலானோர்} (11)

ஆதிக்கச் சாதிகளான பார்ப்பனரும் வேளாளரும் கிராம அளவில் மட்டுமல்ல ; பரந்த அளவிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். அரசதிகாரம், சடங்குத் தலைமை, கல்வி போன்றவற்றின் மூலமாக இதனை அவர்கள் செயற்படுத்தினர். இவற்றிலிருந்து முற்றாக விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மூன்று பிரிவினரும் பரந்த அளவிலும் நுண்ணிய அளவிலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, அதிகாரத்திற்கு ஆட்படுத்தப்பட்ட பிரிவினராகக் கிடந்தனர். இவர் களுள்ளும் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கும் தீண்டாமைக்கும் ஆளாயினர்.

சோழப் பேரரசு சிதைவுண்ட பொருளாதாரத் தேக்க இடைக் காலத்திலும் ‘சுயதருமம்’ பேணவந்த விசயநகரத் தெலுங்கர் ஆட்சிக் காலத்திலும் சாதி இறுக்கம் மிகுந்தது. கங்கைவெளி போன்று வருணா சிரமமும், சாதியத்திற்கான கோட்பாட்ருவாக்கமும் மேற்கொள்ளப்படாத தமிழ்ச் சூழலில் இக்காலக்கட்டத்தில் இம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இலக்கிய வகை, எழுத்து வகை ஆகியவற்றிலெல்லாம் சாதிப் பாகுபாடுகள் செய்யப்பட்டன.(12)

சங்க இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், குறவஞ்சி எனச் சாதிப் பெயர்களில் இலக்கியங்கள் வடிவெடுத்தன. சைவ மடங்கள் உருவாகி சைவ சித்தாந்தங்கள் ஓங்கின. வருணாசிரம தருமங்களை பாவித்தலை யும், மனுவழி புரத்தலையும் அன்றைய கல்வெட்டுகளும் இலக்கியங் களும் புகழ்ந்தன. அவ்வப்போது சில நாட்டுப்புற இலக்கியங்களிலும் சித்தர் பாடல்களிலும் மிகவும் வலுக்குறைவாகச் சாதி எதிர்ப்புக் குரல்களும் ஒலித்தன.

இந்தச் சூழலில் இங்கே வெள்ளையரின் வருகை நிகழ்ந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களின் விளை வாகக் கிராம சமுதாய அமைப்பு ஆட்டங்கண்டது. உழைப்புச் சக்தி விற்பனைப் பொருளாகியது. சந்தைக்கான உற்பத்தி, பரிமாற்ற மதிப்பு ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. நிலவுடைமை முற்றாக ஒழிக்கப் பட்டு தடையற்ற முதலாளிய வளர்ச்சி ஏற்படாத போதிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வணிகமும் தொழிலும் தோன்றின. வெள்ளையர் ஏற்படுத்திய பிற முக்கிய மாற்றங்கள் ; வரி வசூல் மற்றும் அரசு நிருவாகம் என்பது அய்ரோப்பியப் பாணியில் கட்டமைக்கப்பட்டது. இதன் விளைவாக அரசதிகார வர்க்கமும் அரசுப் பணிகளும் விரி வடைந்தன. சாதி, மத அடிப்படையிலானதாக அமைந்திருந்தாலும் ஓரளவு சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருந்த கல்வி மற்றும் நீதி வழங்கு அமைப்புகள் முறைப் படுத்தப்பட்டு அரசதிகார வலைக்குள் கொண்டுவரப்பட்டன (13).

கல்வி நிறுவனங்களுக்கு மான்யங்களை வழங்கி பதிலுக்கு அரசு நிர்ணயிக் கும் பாடத் திட்டம், தேர்வுமுறை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள கட்டாயப் படுத்தப்பட்டன.

1771 முதற்கொண்டே கிழக்கிந்தியக் கம்பெனியால் சிவில் மற்றும் கிரிமினல் தீர்ப்பு வழங்கு அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். வழமை யிலுள்ள சாதி மத சாத்திர நெறிகளுக்குச் சட்ட வடிவம் அளிக்கப்படும் என வாரன்ஹேஸ்டிங்ஸ் அறிவித்தான். 1802 முதல் மாவட்ட நீதி மன்றங்களில் நீதிபதிகளுக்குத் துணையாக சாத்திர விளக்கமளிக்க பார்ப்பனப் பண்டிதர்களும் பார்ப்பன உதவி யாளர்களும் இசுலாமியச் சட்ட விளக்கமளிக்க மெளல்விகளும் அமர்த்தப்பட்டனர்.

1860 க்குள் இந்துச் சட்டப் பணி முழுமையடைந்தது. சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்சு தொகுத்துள்ள ‘பண்டிதரின் அபிப்பிராயங்கள்’ என்கிற நூலிலிருந்து எந்த அளவிற்கு மனுதருமும், வருணாசிரமச் சட்ட நெறிகளும் இந்நீதிமன்றங்களில் கோலோச்சின என்பது விளங்கும் (14).

‘மிதாட்சரம், ஸ்மிருதி சந்திரிகை, தாய வியாகம், சரஸ்வதி விலாசம், விபவகார நிர்ணயம், பராசர மாதவ்யம், வைத்னாத தீட்சதியம், சுபோதினி, வீர மித்ரோதயம்’ போன்ற பார்ப்பனர்களால் எழுதப்பட்டட வருணாசிரம நூற்களே தீர்ப்பு வழங்கவும் பின்னர் இந்து சட்டம் உருவாக்கவும் ஆதாரங்களாயிருந்தன.

தேவண்ணபட்டின் ஸ்மிருதி சந்திரிகை, மனு ஸ்மிருதி ஆகியவை ஆங்கிலத்திலும் பிற தேசிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. சி.தா.குருசாமி முதலியார் மனு தரும சாத்திரத்தை 1866 லேயே சென்னையில் அச்சிட்டார். 1827 இல் மதுரை கந்தசாமி புலவர் ஸ்மிருதி சந்திரிகையை ‘விவகார சங்கிரகம்’ என தமிழில் வெளியிட்டார். மயிலாடுதுறை முன்சிப் வேதநாயம் பிள்ளை 1805- 1861 காலகட்ட நீதிமன்ற முடிவுகளைத் தொகுத்துத் தமிழில் ‘சித்தாந்த சங்கிரகம்’ என வெளியிட்டார்.

சாதி, வருண வழமைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற முடிவிற் கிணங்க அவை எட்கார் தர்ஸ்டன் (தென்னிந்திய சாதிகளும், பழங்குடி களும்) மார்­ல் (தோடர்களிடையே பயணங்கள்) ராமச்சந்திர அய்யர் (மலபார் சட்டங்களும் வழக்கங்களும்) போன்றோரால் தொகுக்கப் பட்டன. விரிவான மக்கள் தொகை அறிக்கைகளும் உருவாக்கப்பட்டன.

வருண சாதிமுறை இவ்வாறு புத்துயிர்ப்புப் பெற்றதெனினும் கூடவே நிகழ்ந்த வேறு சில மாற்றங்களையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். குடியேற்ற ஆட்சியின் இன்னொரு இணையான நடவடிக்கை கிறித்துவ மதப் பரப்பல். தாழ்த்தப்பட்டோர், நாடார், மீனவர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகள் நடுவில் கிறித்துவம் எளிதில் பரவியது. இத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளின் விளைவாக ஒடுக்கப் பட்ட சாதிகளிலிருந்து ஒரு சிலர் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. கிறித்துவர்களாக மாறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பிற கிறித்துவர்களைப் போலவே தோள் சீலை அணிதல் போன்ற உரிமைகளைக் கோரினர். (15)

ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளேயே மதம் மாறாதிருந்தோரும்கூட தங்களை ஒத்த ஒடுக்கப்பட்ட சாதியினர் கிறித்துவக் கோயிலுக்குள் நுழைவதையும், தோள்சீலை அணிவதையும் பார்த்து இந்து மதத்திற் குள்ளேயே தமக்கும் அவ்வுரிமைகள் வேண்டுமென்று கேட்டனர்.(16)

இத்தகைய உரிமை எழுச்சிகளின் விளைவாகவும், வெள்ளையர் புகுத்திய பிற அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக வும் வெள்ளை ஆட்சியாளரின் சனநாயகப் பாரம்பரியத்தின் விளை வாகவும் அடிமைமுறை (1811), உடன்கட்டை (1829) பார்ப்பனருக்கு மட்டும் மரண தண்டனையில் விலக்கு (1817), மதம்/நிறம்/பிறப்பிடம் காரணமான சிறப்புரிமைகள் (1833), தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி பயிலுதலில் இருந்த தடை முதலியவை சட்ட வழியாக நீக்கப்பட்டன.

கூடவே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, இரட்டையாட்சி முதலியனவும் பின்னர் உருவாயின. சமூக அமைப்பில் ஏற்பட்ட மேற்குறித்த மாற்றங்களின் விளைவுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

அ. கிராமப் பிணைப்புகளிலிருந்து சட்டபூர்வமாய் பிரிக்கப்பட்ட நிலமும் கருவியும் சொந்தமில்லாத அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்கள், இதன் மூலம் நிலப் பிரபுத்துவம் வழங்கிய உயிர் வாழ்க்கையின் குறைந்தபட்ச உத்தரவாதத்தை இழந்தனர்.

தொழில் வளர்ச்சியில்லாததால் இவர்கள் தொழிலாளி வர்க்கமாய் உருப்பெறவும் முடியவில்லை. இடம் பெயர்ந்தவர்கள் உதிரி வர்க்கமயப் பட்டனர். உழவு உறவுகளில் தங்கிப் போனவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாய் உழவுக் கூலிகளாக மாறத் தொடங்கினர். உழவு உற்பத்தியில் முதலாளிய முறை வளராமலேயே இது நிகழ்ந்தது.

இதன் விளைவாக ஒரு புறம் தொண்டூழிய முறை தொடர்ந்தது. இன்னொரு பக்கம்வளர்ந்துவந்த சனநாயக உணர்வுகளின் விளைவாகவும் உயிர் வாழ்க்கையின் குறைந்தபட்ச நிபந்தனைகளை நிறைவு செய்யும் கடமையில்லாமலேயே தொண்டூழியத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தாலும் வரலாற்றில் இதுவரை காணாத புதிய முரண்கள் உருவாகின. ஆலய நுழைவு, தொண்டூழிய எதிர்ப்பு, தேநீர்க் கடைகளில் சம உரிமை கோருதல் என்கிற சனநாயக உரிமைப் போராட்டங்களாக இவை வடிவெடுத்தன. மேற்கட்டுமானத் தளத்தில் நடைபெற்ற போராட்டங்கள் எனினும் சாராம்சமாய் இவை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தவையாக அமைந்தன.

ஆ. குடியேற்ற அரை நிலவுடைமையிலும் அதற்குப் பிந்தியும் உருவான அரசில் அதிகாரவர்க்கத்தின் பங்கு முக்கியமானது. நிலத்தின் அடிப்படையிலான சமூக அதிகாரம் என்பதைக் காட்டிலும் அரசதிகாரத் தின் மூலமான சமூக அதிகாரம் கவர்ச்சிமிக்கதாகவும் பரந்த மட்டத்திலா னதாகவும் இருந்தது. நிலம் விற்பனைப் பொருளானதைத் தொடர்ந்து பார்ப்பனர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்சாதி வேளாளர்களும்  புதிதாய் அறிமுகப் படுத்தப்பட்ட அரசுப் பணிகளை நாடி நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர் (17). தரகு வணிகத்தையும் வட்டித் தொழிலையும் சேட்டுகள், பனியாக்கள், செட்டியார்கள் போன்றோர் தமதாக்கிக் கொண்டனர். குடியேற்ற முகவர்களாக விளங்கிய இவர்களுக்கு நேரடியான அரசு ஆதரவு இருந்தது. அதிகாரத்தின் புதிய வடிவங்களான தொடர்புச் சாதனம் முதலியவற்றைப் பார்ப்பனர்கள் கையகப்படுத்தினர்.

இ. பார்ப்பனர்களின் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல், ரயத்துவாரி முறையின் விரிவாக்கம் பேன்றவற்றாலும் 1947 க்குப் பிந்திய சமீன்தாரி ஒழிப்பு, பசுமைப்புரட்சி போன்ற நடவடிக்கைகளாலும் இதுநாள் வரை பார்ப்பன – வேளாளரின் கீழ், உழவு உற்பத்தியை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த இடைநிலைச் சாதிகளிலுள்ள மேல்தட்டினர் கிராம அளவில் ஆதிக்க சக்திகளாயினர். குடியேற்ற மற்றும் அதற்குப் பிந்திய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் அரசியல் என்பது வழி வகுத்தது. தேர்தல் அரசியல் என்பது இந்தியச் சூழலில் ஆதி முதலாகவே சாதி அரசியலாகவே இருந்து வந்தது. தேசீய இயக்கத்தைப் பார்ப்பன/பனியா சக்திகளும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை பிற உயர்சாதியினரும் இடைநிலைச் சாதிகளில் மேல் நிலை பெற்றோரும் நிறுவன ரீதியான அதிகாரங்களைக் கைப்பற்றும் களமாகவே பயன்படுத்தினர் என்றும் இவ்விரு இயக்கங்களுமே தல அளவிலான குழுக்களை அதிகார மையங் களுடன் இணைக்கும் புறக்காரணிகளாகவே பயன்பட்டன என்றும் வாஷ்புருக் போன்றோர் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. (18).

(ஈ). வெள்ளையருக்குப் பிந்திய காலங்களில் அதிகாரச் செயல்பாட்டில் சாதியத்தின்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுருக்கமாகக் காண் போம்;

நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தைப் போல பார்ப்பன – வேளாள ஆதிக்க சாதிகள் என்பன இக்கட்டத்தில் ஒரே சமயத்தில் பரந்த அளவிலும், கிராம அளவிலும் ஆதிக்க சாதிகளாக இருந்தன எனச் சொல்ல முடியாது. ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் என்கின்ற நிலையில் எந்த மாற்றங்களும் இல்லாத போதிலும் கிராம அளவில் இன்று இடைநிலைச்சாதிகள் ஆதிக்கத்திற்கு வந்துள்ளன. (19)

தேவர், கள்ளர், வன்னியர், கவுண்டர், நாயுடு, நாடார் போன்ற சாதிகள் இவற்றில் அடக்கம். இவற்றில் எது ஒன்று குறிப்பிட்ட தலத்தில் ஆதிக்கச் சாதியாய் இருக்கிறது என்பது அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். தெற்குத் தஞ்சையில் கள்ளர் என்றால் தென் ஆற்காட்டில் இது வன்னியராகவும், சேலத்தில் கவுண்டராகவும் நாகர் கோவிலில் நாடாராகவும் இருக்கும்.

தேர்தல் அரசியலின் தோற்றத்தோடு சாதி ரீதியாய் ஓரிடத்தில் குவிந்து கிடந்து ஓட்டு வங்கிகளாய் செயல்படும் வகையில் இவை இந்த ஆதிக்க இடத்தைப் பெறுகின்றன. இச்சாதிகளைச் சேர்ந்த அனைவரும் ஆதிக்க சாதிகளாக விளங்கு கின்றனர் எனப் பொருளல்ல. இவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பிற்பட்டோரே. எனினும் இவர்களில் மேல் நிலை பெற்றவர்கள் தேர்தல் அரசிய லைப் பயன்படுத்தி நிறுவனங்களில் ஆதிக்கம் பெறுகின்றனர். இந் நிறுவனங்களில் சட்டமன்றம், கட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங் கள் வரை அடக்கம். (20)

இவர்கள் தம் கீழுள்ள சாதி மக்களை ரத்த உறவு, சாதிய உணர்வு ஆகியவற்றினடிப்படையில் திரட்டி வைத்துள்ளனர். இந்த வகையில் சாதி உணர்வைத் தக்க வைக்கும் தேவை இவர்களுக்கிருக்கிறது. சாதி ரீதியான இவர்களது ஆதிக்கம் என்பது கிராம மட்டத்தில், மிகவும் பருண்மையான வடிவங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் மீது விழுகிறது. இத்தகைய கொடுமைகளில் தல அளவில் ஆதிக்க சாதிகளாக உள்ள வர்களுடன் பிற இடைநிலைச் சாதிகள் -குறிப்பிட்ட இடத்தில் அவை சிறுபான்மையாக இருந்த போதும் – இணைந்து கொள்கின்றன. இந்த இணைப்புச் சக்தியாய் பார்ப்பனியக் கருத்தியல் விளங்குகிறது.

சாதியக் கருத்தியலின் விளிப்பில் ஒவ்வொரு சாதியானும் தனக்குக் கீழ் நிலையிலுள்ளவரைக் காட்டிலும் சில உரிமைகளை உணர்வதைக் குறித்து நாம் முன்பு குறிப்பிட்டது இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது.

கிராமத் திருவிழாக்கள் போன்றவற்றில் சாதிகளுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுவது போன்ற நிகழ்ச்சிகளும் சவம் காவுதல், மலம் அள்ளுதல் போன்ற தூய்மைக் குறைவான தொழில்களோடு தாழ்த்தப் பட்டோர் அடையாளம் காணப்படுதலும் இந்நிலை தொடர வழி வகுக்கின்றன. நிலவுடைமை, உழவு, வணிகம் என்கிற மட்டத்தில் இடை நிலைச் சாதிகள் அனைத்தும் ஒன்றுபடுகின்றன. இந்துப் பெருமதவெறி அமைப்புகள் இவர்களை ஒன்றிணைக்கின்றன ; சாதிக் கொடுமை களுக்குப் பின்புலமாகின்றன.

இவ்வாறு இடைநிலைச் சாதிகளிலிருந்து மேல் நிலை பெற்ற ஆதிக்க சக்திகள் அமைச்சர் பதவி, அதிகார வர்க்கப் பதவி போன்றவற்றின் மூலம் பரந்த அளவிலான ஆதிக்கத்திலும் பிற ஆதிக்க சாதிகளுடன் மிகச் சிறிய அளவில் பங்கு பெறுகின்றனர்.

பரந்த அளவிலான அதிகாரம் என்பது பருண்மையான வடிவங் களில் (எ-டு : அரசதிகாரம், அயல் உறவுகள், உயர் தொழில் நுட்பம்

போன்றவற்றைக் கையகப்படுத்துதல் தொடர்புச் சாதனங்களையும் மத நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்) மட்டுமல்ல கருத்தி யல் மட்டத்தில் (எ-டு : இந்து மதக் கருத்தியல், பாரதப் பண்பாடு, ஒருமைப்பாடு போன்றன) பருண்மையற்ற வடிவங்களிலும் (ழிணுவிமிrழிஉமி யிeஸeயி) செயல்படுகின்றன.

இந்த அடிப்படையில் பார்ப்பனர், வேளாளர், ரஜபுத்திரர், ரெட்டியார் போன்றோரே இன்னும் பரந்த மட்டத்தில் ஆதிக்க சாதிகளாக விளங்குகின்றனர். தொழில் மற்றும் நிதி நிறுவனங்களைக் கையில் வைத்திருப்பதன் மூலம் சேட்டுகள், பனியாக்கள், செட்டியார்கள் போன்றோரும் இவர்களோடு பரந்த அளவு ஆதிக்கத்தில் பங்கு பெறுகின்றனர்.

நிலவுகிற சமூக அமைப்பால் பயனடையும் ஏகாதிபத்திய சக்திகள் இருக்கிற நிலையைக் கட்டியமைப்பதில் பரந்த அளவிலான ஆதிக்க சக்திகளும் அவை முன் வைக்கம் பார்ப்பனியக் கருத்தியலுக்கும் ஒருமைப்பாட்டு முழக்கத்திற்கும் துணை போகின்றன.  பொருளாதார மற்றும் தொழில் ‘வளர்ச்சி’த் திட்டங்கள் முழுமையை யும் தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துள்ள இவ்வாதிக்க சக்திகள் அவற்றை ஏகாதிபத்திய நலன் நோக்கிலேயே கையாளு கின்றன. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சுற்றுச் சூழல் தீங்குகள் போன்ற இத்தகைய வளர்ச்சித் திட்டங்களின் விளைவுகளால் முற்று முழுதாய் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்களே. இவர்களில் பெரும்பாலோர் இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரே. (22).

எனினும் இம்மக்களை அரசுடன் இணைக்கும் பாலங்களாக இடைநிலைச் சாதிகளின் மேனிலை பெற்ற ஆதிக்க சக்திகளும், கருத்தியல் நடவடிக்கைகளும் செயல்படுகின்றன23. (23. தாழ்த்தப் பட்டோரிலும் இவ்வாறு மேல்நிலை பெற்றோரும் (தேர்தல் மற்றும் அரசு பதவி மூலம்) கூட பரந்த அளவு ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகிற நிலை இருந்தாலும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவே தவிரவும் கிராம அளவில் இவர்கள் இன்னமும் கொடுமைக்குள்ளாகும் நிலையி லேயே உள்ளதால் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் அளவிற்கு இவர்கள் தீங்கானவர்கள் இல்லை.)

பசுமைப்புரட்சி, இடஒதுக்கீடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக இந்திய அரசு சாதியத்தைக் கட்டிக்காக்கிறது.

நான்கு

சாதியை நாம் ஒழிக்க வேண்டுமென்பது ஏதோ இந்தியப் புரட்சி அல்லது தேசிய இன உருவாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல. உலகில் வேறெங்குமில்லாத வகையில் பிறப்பின் அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு ஏற்றத் தாழ்வுகளை யும் உரிமை மறுப்புகளையும், தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை யும் மக்களை நேசிக்கும் நம்மால் சகித்துக் கொள்ள இயலாமையே முதற் காரணம்.

சாதி ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சாதி என்பது -டூமாண்ட் போன்றவர்கள் கூறியுள்ளதைப் போல – தன்னளவில் நிறைவுள்ள ஒரு முழுமையல்ல. மாறாக மொத்த அமைப்பில் சாதி ஒரு கூறே.  கூறாக்கமான (றீeஆதுeஐமிழிrதீ) ஓர் அமைப்பில் சாதி என்பது தனக்குரிய நிலையில் அமைந்துள்ள ஒரு கூறு மட்டுமே கூறாக்கமான இந்த அமைப்பையே தகர்க்காமல் ஒரு கூறை மட்டும் தனித்து ஒழித்துவிட முடியாது. சாதிய ஆதிக்கம் தனியாக இல்லை என்று சொன்னோம்.

ஏகாதிபத்தியமும், இந்திய அரசும், ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு முகவர்களும் அரசதிகார வர்க்கமும், கிராமப்புற இடைநிலைச் சாதி களைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் சாதியத்தால் பயனடைவதையும், சாதியத்தைக் கட்டிக் காக்க முனைவதையும் கண்டோம். எனவே இந்த அமைப்பு தகர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதிகாரம் வந்து ஓர் அதிகாரமற்ற சமூகம் உருவாக்கப்படும் வரை சாதி ஒழிப்பிற்கான முன் நிபந்தனைகளே நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இநத அமைப்பு தகர்க்கப்பட்டாலுங்கூட சாதியக் கருத்தியலும், சாதிய உறவுகளைத் தக்க வைக்கும் அகமண முறையும், ரத்த உறவுகளும், குடும்ப உறவுகளும், குடும்ப உறவுகளும் தகர்க்கப்படாதவரை சாதி ஒழியாது.

சாதி ஒழிப்பின் எதிரிகளிடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த அமைப்பிற்கெதிராக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்ளாத மனநிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் நடுவில் உடைத்தெறிவது எல்லாவற்றிலும் முதன்மையானது. அரசு மற்றும் ஒடுக்கும் சக்திகட்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையேயான இடை வெளி இன்றைய

பொதுக்கருத்தியலால், சாதி உணர்வால் நிரப்பப் பட்டிருப்பதே இத்தகைய எதிர்ப்பற்ற மன நிலைக்குக் காரணம்.

இந்தப் பணி என்பது கருத்தியல் மட்டத்தில் மிகக் கடுமையான முயற்சிகளைக் கோருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சாதிகளுக்குமிடையே பாலமாக விளங்கும் இடைநிலைச் சாதிகளி லிருந்து மேல்நிலை பெற்ற சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும். இடஒதுக்கீடு போன்ற சாதி அடிப்படையிலான சனநாயகக் கோரிக்கை கள் இதில் பெருமளவில் உதவும். இந்த ஆதிக்க சக்திகளின் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பரந்த அளவிலான ஆதிக்க சாதிகளுடன் ஒன்றி ணைந்து நிற்கும் நிலையை தோலுரித்துக் காட்ட வேண்டும்.

அரசின் திட்டங்கள் அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானதே என்கிற அடிப்படையில் சுற்றுச் சூழல் தீங்கு, தொழில் நுட்ப இறக்குமதி மதவாத எதிர்ப்பு, தொடர்ப்புச் சாதனங்களில் சாதி ஆதிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்தியச் சுரண்டல் போன்றவற்றில் தல அளவிலும், பரந்த அளவிலும் போராட்டங்களைக் கூர்மைப் படுத்துவதன் மூலமும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும். நிலவுடைமைக்கெதிராக ஒடுக்கப்பட்ட சாதிகளை இணைத்து நிறுத்துவதும் நிலத்திற்காகப் போராடுவதும் அவசியம்.

ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான இடைநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கிடையேயான ஒருங்கிணைவு சாதி ஆதிக்க ஒழிப்பிற்கு மிக முக்கியம். தல அளவிலான சாதி ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் இதில் முதன்மைப் பங்கு வகிக்கும். தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள், பொதுச் சுடுகாடு, சவம் காவுதல்/மலம் அகற்றுதல் போன்ற இழிவு களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவற்றில் இழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்றவற்றில் போராட்டங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். தூய்மைக்குறைவான பணிகளை இயந்திரமயப்படுத்து வதற்கு அரசு முக்கியத்துவமளிக்கப் போராடுதலும் அதுவரை அப்பணி களை அவரவரே செய்து கொள்ளும் நிலைமையை ஏற்படுத்துவதும் அவசியம். (23)

கிராமப்புற அளவில் சிறு தொழில்களிலும் வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கலவரப் பகுதிகளில் ஆயுதச் சமநிலை ஏற்பட தாழ்த்தப்பட்டவர்கள் தற்காப்புக் கருவிகள் ஏந்த வேண்டும். கிராமத் திருவிழாக்கள், ஈமச் சடங்கு போன்றவற்றில் சாதிக் கடமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நிலமற்ற ஒடுக்கப்பட்டோருக்கு நிலம் வழங்க வன்மையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், இதழ் போன்ற தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் இன்று ஆதிக்க சாதிகளின் பிடியிலேயே இறுகியுள்ளன. சாதி ஆதிக்கக் கருத்தியலைப் பரப்புவதில் இவற்றின் பங்கு முதன்மை யானது. இவை மூலம் பரப்பப்படும் சாதி ஆதிக்கக் கருத்துக்களுக் கெதிராக இவற்றின் இயக்கத்தையே உறைய வைக்கும் அளவிலான வன்மையான போராட்டங்கள் மிக அவசியம். மாற்றுத் தொடர்பு வடிவங்களையும் நாம் சிந்திக்க வேண்டும்.

சாதி ஒழிப்பில் ஆர்வமுள்ள இயக்கத் தோழர்கள் ரத்த உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளை ஒழிப்பதும், குடும்ப உறவுகளில் இறுக்கங்களைத் தகர்ப்பதும், ரத்த உறவு மற்றும் சாதி ரீதியிலான சடங்குகளை முற்றாகத் தவிர்ப்பதும் இயக்கங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் கருத்துருவாக்கும் நிலையை உருவாக்குவதும் முக்கியம். அதிகாரத்துவமில்லாத மாற்று இயக்க வடிவங்களைச் சிந்திப்பதும், குடும்பத்தில் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையை ஒழிப்பதும் இதனுடன் இணைந்த நடவடிக்கைகள்தாம்.

திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்களைத் தனியே ஒழித்து விடுவது சாத்தியமில்லாத போதிலும் இறுதியில் இந்நிறுவனங்கள் ஒழிக்கப்படவேண்டியவை என்கிற புரிதலோடு செயல்படுவதும் அகமண முறையை மீறிய சாதி ஒழிப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதும் அவசியம். (24). மொத்தத்தில் இன விடுதலை, பெண் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு இவை எதுவும் தனித்தனி யானவை அல்ல என்கிற புரிதலோடு கூடிய செயற்பாடுகள் இன்றைய உடனடித் தேவையாகின்றன.

குறிப்புகள்

  1. சமூகக் கொடுமைகட்கு எதிராக அடித்தட்டு மக்களின் எழுச்சி குறித்து நாம் மிகைப்படுத்திக் கூறி வந்துள்ள போதிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தேறியுள்ளன. அடித்தட்டு மக்களின் முக்கிய இலக்கிய வெளிப்பாடாக நாம் முன் வைக்கும் நாட்டுப்புற இலக்கியங்களில் கூட மோதற் கூறுகளைக் காட்டிலும் சமரசக் கூறுகள் மிகுந்துள்ளன சிந்திக்கத் தக்கது. ( பார்க்க : அ. மார்க்ஸ், மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், பொன்னி, 1991, பக் 113‡127). மற்றவர்களுக்கு உரிமை கொடுப்பது என்பதில் மட்டுமல்ல ; தனக்கு உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் ஆத்திரம் கொள்ளாத அவலம் ஏற்பட்டுவிடுகிறது.
  2. கோட்பாட்டலவில் இந்நிலைமை இல்லை எனினும் நடைமுறையில் பரந்த அளவிலுங்கூட மேற்தட்டு சாதிகள் மேனிலை வேலைகளிலும், தாழ்ந்த சாதியினர் தூய்மைக் குறைவான பணிகளிலும், இடைத்தட்டு சாதியினர் இடைநிலை வேலைகளிலும் மிகுந்துள்ளது கண்கூடு.
  3. அ.மார்க்ஸ் முன்னுரை, சாதியும் வர்க்கமும், பு.ப.இ. வெளியீடு, 1988, பக்.15,16
  4. இப்பகுதி விரிவாக அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி எழுதியுள்ள தமிழக வரலாறு சில குறிப்புகள் (நிறப்பிரிகை – 4) கட்டுரையில் ஆராயப் பட்டுள்ளது. ‘யூலிதுஷ்யிழி வீஜுலிஸ்ரீழிழிr, புஐஉஷ்eஐமி ணூஐdஷ்ழிஐ க்ஷிஷ்விமிலிrதீ, நுrஷ்eஐமி ஸிலிஐஆதுழிஐ, 1978, ஸ்ரீ.226
  5. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.

6.

7.

  1. பார்க்க : அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி முன்குறிப்பிட்ட கட்டுரை.
  2. சங்க கால மூவேந்தர் வீழ்ச்சி, வணிகத்தில் தேக்கம், களப்பிரர் காலத்திற்குப் பிந்திய உழவு மயமாதல், கிராம அளவிலான பார்ப்பன -வேளாள ஆதிக்கம் முதலியவை ஒப்பிடற்குரியன.
  3. சோழிய, தொண்டை மண்டலச் சைவ வேளாளர்கள், முதலியார் கள் ஆகியோரை உள்ளடக்கியே வெள்ளாளர் என்கிற சொல் பயன் படுத்தப்படுகிறது. தெலுங்கராட்சிக்குப் பின்னர் ரெட்டியார் சாதியையும் இதனுள் அடக்கலாம்.
  4. கிராம மயமான உற்பத்தி முறையில் மலையின மக்களைச் சேர்க்கத் தேவையில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாய் இந்த விவசாயச் சமூக அமைப்பால் சுரண்டப்பட்டனர்.
  5. பார்க்க : அ. மார்க்ஸ், சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள், சிலிக் குயில், 1984.
  6. முறைப்படுத்தப்படுதல், ஒழுங்குப் படுத்தப்படுதல், இலக்கணப்படுத்தப்படுதல் என்றாலே அதிகார அமைப்புக்குள் கொண்டுவருவதுதான் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டு
  7. பார்க்க : வே. ஆனைமுத்து, தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பெரியார் நூல் வெளியீட்டகம், 1980, பக்.190-262.
  8. மார்பில் துணி அணியும் உரிமை நாடார் பெண்களுக்கு இல்லாமலிருந்தது. “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் கீழடியார்க்கில்லை” – என பாரதி பாடியதை அறிவோம் (பாஞ்சாலி சபதம்). பிரிட்டிஷ் ஆட்சியின்போது இதற்கு எதிராக நடந்த போராட்டம் ‘தோள்சீலைப் போராட்டம்’ எனப்படும்.
  9. தென்மாவட்ட நாடார்கள் நடுவில் இவ்வாறு ஏற்பட்ட விழிப்புணர்வு, போராட்டங்கள் உயர்சாதியினரின் எதிர்வினைகள் முதலியவற்றை ஆர்.எல்.ஹார்டு கிரேல், தமிழக நாடார் வரலாறு, முருகன் பப்ளி கே­ன்ஸ், 1982 நூலில் விவரமாகக் காணலாம்.
  10. இந்தியாவின் பிற பகுதிகளில் ரஜபுத்திரர்கள், ரெட்டியார்கள் போன்றோரை இவ்வகையில் சொல்லலாம்.)
  11. வாஷ்புரூக்
  12. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் மிகச்சில இடங்களில் இன்னும் கூட பார்ப்பனர்/வேளாளரே நிலவுடை மையாளராகவும் ஆதிக்க சக்திகளாகவும் உள்ளனர்.
  13. அரசியல் கட்சிகள் பலவற்றிலும் இவர்களே தல அளவுத் தலைமைகளில் உள்ளனர்.
  14. நாட்டுப் பிரிவினைச் சக்திகளுக்கு எங்கேனும் ஏகாதிபத்தியம் துணை போகிறது என்றால் அது மத்திய அரசைப் பலவீனப்படுத்தப் பேரம் பேச வைக்கும் உள் நோக்கத்தில் மட்டுமே. மற்றபடி சுயநிர்ணய உரிமையில் அவற்றுக்கு நிலையான ஈடுபாடு ஏதும் கிடையாது.)
  15. இத்தகைய இடங்களில் தாழ்த்தப்பட்டோர் என்பதில் மலையின மக்களும் உள்ளடக்கம்.
  16. இதனால் ஏற்படும் வேலை இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும்).
  17. . நிறப்பிரிகை, 3 இல் வெளிவந்துள்ள சாதி ஒழிப்பு கூட்டுக் கட்டுரையில் சாதி ஒழிப்பில் அக்கறையும் அனுபவமுள்ள பல்வேறு தோழர்களின் பன்முகமான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. தோழர்கள் இவற்றைச் சிந்தித்தல் வேண்டும். நிறப்பிரிகை 2 இல் வெளிவந்துள்ள சாதி ஒழிப்பு குறித்த வேறுபட்ட பார்வைகளும் பயிலத் தக்கன. 

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய கதை

[ஒரு சிறுபான்மைப் பிரிவினரின் புனித நாளில் மதக் கடமையை ஆற்றச் சென்றவர்கள், பச்சிளம் குழந்தைகள் எனவும் பாராமல் கொல்லப்படுவதுதான் எத்தகைய கொடுமை. மத உணர்வு என்பது மத வெறியாக மாறும்போது அது எத்தகைய கொடூரமாக மாறிவிடுகிறது! அன்று கொல்லப்பட்ட 253 பேர்களுக்காகவும் படுகாயம் அடைந்தோருக்காகவும் இன்று உலகமே கண்ணீர் வடிக்கிறது. இந்தன் பின்னணி என்ன, ஒரு காலநூற்றாண்டு க்கும் மேற்பட்டஇந்த அழகிய தீவின் இனம் சார்ந்த முர்டண்பாடுகள் எவ்வாறு மத முரண்பாடாக இன்று மாற்றம் கண்டுள்ளது என்பதைச் சொல்லும் கட்டுரை இது.  தமிழக வாசகர்களுக்காக எழுதப்பட்ட இக் கட்டுரை ‘மக்கள் களம்’ மே 2019 இதழில் வெளிவந்தது]

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வகையில் ஏசு பிறந்த கிறிஸ்துமஸ் நாளைக் காட்டிலும் அவர் மறு உயிர்ப்புச் செய்த ‘உயிர்த்த ஞாயிறு’ (ஈஸ்டர்) புனிதமானது என்பார்கள். கொடும் வதைகளின் ஊடாக உயிர்விட்ட ஏசு இறந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் புனித நாள் அது. நாற்பது நாட்கள் நோன்பிருந்த கிறிஸ்தவர்கள் காலையில் ஆலயங்களுக்குச் சென்று பூசை கண்டு வந்து நோன்பு முறித்து ஏசுவின் மறு உயிர்ப்பைக் கொண்டாடும் திருநாள் அது. ஆனால் இந்த முறை அது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மறக்க இயலாத ஒரு சோக நாளாக விடிந்தது.

இலங்கையில் நீர்க்கொழும்பு, கொழும்பு, மட்டகளப்பு ஆகிய மூன்று ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும், கொழும்பில் உள்ள ஷங்ரிலா, சின்னாமன் கிரான்ட், கிங்ஸ்பரி, மற்றும் தெஹிவளையில் உள்ள  ட்ராபிகல் இன் முதலான சொகுசு ஓட்டல்களிலும் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் 253 அப்பாவி உயிர்களைப் பறித்துச் சென்றன. தொழுது கொண்டிருந்த நிலையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே அவர்களும் வெடித்துச் சிதறினார்கள். மேலும் சுமார் 500 பேர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்குத் தூக்கிச் செல்லப்பட்டார்கள். தெமடகோடாவில் உள்ள ஒரு வசிப்பிடப் பகுதியிலும் குண்டுகள் வெடித்தபோதும் பெரிய உயிர்ச்சேதம் இல்லை. ஏப்ரல் 21 காலை மணி 8.25 லிருந்து மாலை 2.15 க்குள் எல்லாம் முடிந்தன.

இறந்தவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் என்பதல்ல, பிறரும் இருந்தனர். ஓட்டல்களில் கொல்லப்பட்டவர்களில் 42 பேர் வெளிநாட்டினர். இரண்டு காவல்துறையினரும் கூடக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டகளப்பு என மிகத் துல்லியமாகவும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களில் வெடித்துச் சிதறிய மனித வெடிகுண்டுகள் ஏழு பேர்களும் இலங்கையர்கள்தான் என்றபோதிலும், அவர்களை இப்படியான கொடுஞ்செயலில் கரைகண்ட ஏதோ ஒரு பன்னாட்டுப் பயங்கரவாத இயக்கம்தான் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது என்பதும் அன்றே ஊகிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் (ஏப்ரல் 23, 2019) இன்று உலகளவில் மிகப் பெரிய பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் IS, ISIS, IL, ‘இஸ்லாமிய அரசு’ என்றெல்லாம் அழைக்கப்படும் அமைப்பு அந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. ஒரு வாரத்தில் (ஏப் 29) அந்த அமைப்பின் ‘அல் ஃபுர்கான் மீடியா’ வெளியிட்ட ஒரு 18 நிமிட வீடியோவில் அதன் தலைவர் அபூ பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் உயிரிழந்த மனித வெடிகுண்டுகளைப் பாராட்டிய காட்சி ஒளிபரப்பானது. அதன் மூலம் பாக்தாதி இன்னும் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.

1983 முதல் 2009 வரை உள்நாட்டுப் போரில் அமைதி இழந்து கிடந்த நாடு இலங்கை. மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகளையும், தாக்குதல்களையும், மக்களின் இடப் பெயர்வுகளையும், இராணுவ அடக்குமுறைகளையும் சந்தித்த நாடு அது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் மட்டும் குறைந்தபட்சம் 40,000 பேர்கள் கொல்லப்பட்டதை அறிவோம். ஒரு பத்தாண்டுகள் (2009 – 2019) அமைதியாக இருந்த அந்த அழகிய தீவை மீண்டும் இப்படிச் சோகம் கப்பியது. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஐ.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய “தேசிய தவ்ஹீத் ஜமாத்”தின் (NTJ) உறுப்பினர்களைத் தேடும் வேட்டையை அரசு தொடங்கியது.

இந்த NTJ என்பது “ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்” (SLTJ) எனும் அமைப்பிலிருந்து சில ஆண்டுகள் முன் பிரிந்த ஒரு குழு. கடும்போக்கு கொண்ட இந்தக் குழுவில் அதிகபட்சம் 150 பேர்கள்தான் இருப்பார்கள் என அறியப்படுகிறது. இதன் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிம் ஈஸ்டர் தாக்குதலின்போது  ஹோட்டல் ஒன்றில் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறியதும் தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ள அந்த அமைப்பின் பிற உறுப்பினர்களும் மனித வெடிகுண்டுகளாக இருக்கலாம் எனவும், மேலும் இப்படியான தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் பீதி பரவியது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த கால்நூற்றாண்டில் எத்தனையோ தாக்குதல்கள், கலவரங்கள், இன அழிப்புகள், படுகொலைகள் நடந்தபோதும் இன்றைய இந்தத் தாக்குதல் அவற்றிலிருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்டுள்ளது. இப்படியான மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் அப்போதும் கூட நடத்தப்பட்டு ராஜிவ் காந்தி உட்படப் பலர் அவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்றபோதும் இப்படியான ஒருங்கிணைக்கப்பட்ட துல்லியமான தொடர் தாக்குதல்களாக அவை இருந்ததில்லை. அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சொகுசு விடுதிகள் குறிவைத்துக் தாக்கப்பட்டதும் இல்லை.

அதேபோல இதுவரையிலான முரண்பாடுகளும் மோதல்களும் இப்படி மத அடையாளங்களின் அடிப்படையில் நடக்கவும் இல்லை. 2012 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் மொத்த மக்கள் தொகை 22 மில்லியன். அவர்களில் பௌத்தர்கள் 70 சதம். ஹிந்துக்கள் 12.6 சதம். முஸ்லிம்கள் 9.7 சதம். கிறிஸ்தவர்கள் 7.6 சதம். பௌத்தவர்கள் அனைவரும் சிங்களர்கள். இந்துக்கள் எல்லோரும் தமிழர்கள். முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதும் அவர்கள் தனி இனமாகவே அடையாளம் காணப்படுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் சிங்கள இனத்திலும் இருந்தனர், தமிழர்களிலும் இருந்தனர். தமிழ் பேசும் மக்களைப் பொருத்தமட்டில் அவர்கள் பூர்வீகத் தமிழர்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும், மலையகத் தமிழர்கள் எனவும் பிரிந்துள்ளனர்.

சிங்களக் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தனி அரசியல் அடையாளத்துடன் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை ஈழ விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். அதனால் சிங்கள இராணுவம் பலமுறை கிறிஸ்தவ ஆலயங்களைக் குறிவைத்துத் தாக்கியதுண்டு. அப்படியான தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் அவை தமிழர்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அன்று கருதப்பட்டதே ஒழிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்பட்டது இல்லை.

உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்த நிலை முற்றாக மாறியுள்ளது. இன்று இன முரண்பாட்டின் இடத்தை மத முரண்பாடு பிடித்துள்ளது. 2009 க்கு முந்தைய உள்நாட்டுப் போரின்போதும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். அதெல்லாமும் கூட இன முரண்பாடாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டன. பௌத்தர்களும்கூட இலங்கையை பௌத்த நாடாகவும் பௌத்த அரசாகவும் அடையாளப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருந்தபோதிலும் கூட, தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை இன அடிப்படையில்தான் பார்த்தனர். பௌத்தர்கள் இன ஆதிக்கத்தின் ஒரு கருவியாகவே மதத்தைப் பயன்படுத்தினர்.

இன்று அங்கு முரண்பாடுகள் மத அடிப்படைவாத நிலை எடுப்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ‘பொதுபல சேனா’ எனும் பெயரில்  போருக்குப் பிந்தைய இலங்கையில் உருவாகியுள்ள அமைப்பு தன்னைத் தீவிரமான பௌத்த மதவாத அமைப்பாக முன்னிறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரின் மத்தியில் 2004ல் உருப்பெற்ற தீவிர வலதுசாரி இனவாதக் கட்சியான  “ஜாதிக ஹெல உருமய” விலிருந்து போருக்குப் பின் பிரிந்த அமைப்புதான் பொதுபல சேனா. கலகொட ஞானசாரா, கிராம விமல்ஜோதி, திலந்த விதநாகே முதலான பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு 2012ல் தன் முதல் மாநாட்டை நடத்தியது. ‘பௌத்தத்திற்கு ஆபத்து’ என்பதான ஒரு அரசியலை அது முன்னிறுத்தி இன்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்களை இலக்காக்கிய ஒரு மதவாத அரசியலை அது முன்வைக்கிறது. 2014 இறுதியில் இவ்வமைப்பு இலங்கையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் பௌத்த மதவாத அமைப்பான “969” எனும் இயக்கத்தின் தலைவர் பிக்கு விராத்து அழைக்கப்பட்டபோது அவருக்கு விசா அளிக்கக் கூடாது என இலங்கை முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராஜபக்‌ஷே அரசு அவருக்கு விசா அளித்தது. பௌத்தத்திற்கு உலக அளவில் ஆபத்து வந்துள்ளதாகவும், தமது அமைப்பு பொது பல சேனாவுடன் இணைந்து செயல்படும் எனவும் அப்போது அவர் கூறியது குறிப்பிடத் தக்கது. பொதுபலசேனா ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் தொடர்பில் உள்ளது. அதன் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கலந்து கொள்வதாக ஒரு செய்தி வெளியாகிப் பின் அது மறுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர் அரசியல் என்பதில் சைவத்தின் தாக்கம் எப்போதும் இருந்துவந்தது என்றாலும் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ அமைப்பின் வடிவில் அது அமைந்ததில்லை. ஆனால் இன்று அங்கே இந்தியப் பாணியில் சிவசேனா உருவாகியுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தம் தனது தள்ளாத வயதில் இந்திய இந்துத்துவ அமைப்புகள் போல இராணுவச் சீருடையுடன் மேடைகளில் தோன்றுகிறார். ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி  முதலான இந்திய மதவாத அமைப்புகளுடன் இணைந்து தாம் செயல்படுவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார். இந்தியப் பாணியில் மதமாற்றத் தடைச் சட்டம் ஒன்று இலங்கையிலும் நிறைவேற்ற வேண்டும் எனவும், “மாடறுப்பு” (மாட்டுக் கறி) தடை செய்யப்பட வேண்டும் எனவும் கோருகிறார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பசுவதைக்கு எதிரான சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன இப்படியான ஒரு அரசியல் பத்தாண்டுகளுக்கு முன் அங்கு கிடையவே கிடையாது.

கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கு சிறிய அளவில் தொடங்கின. மார்ச் 2018ல் அம்பாறை, கண்டி முதலான இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். முஸ்லிம் உணவு விடுதிகளில் கருத்தடை மாத்திரைகள் உணவில் கலக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு இக்கலவரங்கள் தூண்டப்பட்டன. வன்முறைகளில் இரு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ‘மஹாசேன பலகாய’ எனும் சிங்கள இனவாத அமைப்பும் இதில் முன்னின்றது. கண்டியில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009 க்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் நிலை அப்போதுதான் ஏற்பட்டது. சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. மொத்தத்தில் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இன்று  பொதுபல சேனா, சிங்கள ராவய, மஹாசேன பலகயா, சிங்ஹலே முதலான சிங்கள இனவாத அமைப்புகள் 2012 க்குப் பின் முஸ்லிம்களைக் குறி வைத்து இயங்குகின்றன என அப்போது பத்திரிகைகள் எழுதின.

சுமார் ஒரு மாதம் முன் ஏப்ரல் 16, 2019 ல் அனுராதபுரத்திற்கு அருகில் உள்ள குண்டிச்சான் குளம் எனும் இடத்தில் உள்ள கிறிஸ்தவ மெதாடிஸ்ட் சர்ச் ஒன்று தாக்கப்பட்டது. அன்று கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான “குருத்து ஞாயிறு”. தாக்கியவர்கள் ராஜபக்‌ஷேவின் ‘ஸ்ரீலங்கா மக்கள் கட்சி’யைச் (SLPP) சேந்தவர்கள். அப்போது 12 கிறிஸ்தவர்களை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் The Sunday Times இதழ் எழுதியது (ஏப்ரல் 21, 2019).

இவை எல்லாம் பெரிய அளவிலான மதக் கலவரங்களாக மாறவில்லை ஆயினும், உள்நாட்டுப் போருக்கு முந்தைய வன்முறைகளுக்கும் பிந்தைய வன்முறைகளுக்கும் இடையிலான இந்த அணிசேர்க்கைகளும், பண்புமாற்றங்களும் கூர்மையாகக் கவனிக்கத் தக்கன.

இன்று நடந்துள்ள உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதப் படுகொலைகளைப் புரிந்துகொள்ள நாம் இத்துடன் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய இந்த வன்முறைகளை நிகழ்த்திய மனித வெடிகுண்டுகள் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தீவிரவாத முஸ்லிம் இயக்கம் ஒன்றைச் சேந்தவர்கள் ஆனாலும், அவர்களைத் துல்லியமாகப் பின்னின்று இயக்கியது பன்னாட்டுப் பயங்கரவாத அமைப்பான ISIS. இந்தப் பின்னணியைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மைத்ரிபால – விக்ரமசிங்கே அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து இது குறித்த எச்சரிக்கை இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் ஒருவர் இப்படி நடக்கும் என அஞ்சி தான் உயிர்த்தநாள் பூசைக்குச் செல்லவில்லை என வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். தனக்கு ஏன் இந்த எச்சரிக்கை தெரிவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் கேட்டுள்ளார். பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கும் உள்ள அரசியல் பகையினால் விளைந்த ஆளுகைத் தோல்வி என இதை எடுத்துக் கொள்ளலாமா, இல்லை இதன்பின் ஒரு மிகப் பெரிய சதி மறைந்துள்ளதா என்கிற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.

இலங்கையின் நலவாழ்வு அமைச்சர் ரஜிதா சேனரத்னே ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஈஸ்டர் தாக்குதலில் பங்குள்ளது என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார் (“Srilanka military linked to Easter Sunday Bombers” – JDS, May 02, 2019). ஒரு இரகசியமான உளவுத்துறை அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் முந்தைய ராஜபக்‌ஷே அரசால் இஸ்லாமிய, பௌத்தத் தீவிரவாதிகள் ஊக்குவிக்கப்பட்டனர் (bankrolled) எனக் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையில் உயர் நிலையில் அமர்த்தப்பட்டிருந்த மகிந்தவின் சகோதரர் கோதபயா ராஜபக்‌ஷேதான் அதை வழிநடத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராஸிக் ஒரு இராணுவ உளவுத்துறை உறுப்பினர்” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எந்த அளவிற்கு இவை எல்லாம் உண்மை என்பது காலப்போக்கில் வெளிப்படும். ஆனால் இந்த ஈஸ்டர் பயங்கரவாதத்தை வெறுமனே உள்ளூர் முஸ்லிம் தீவிர அமைப்பு ஒன்றுடன் மட்டும் சுருக்கிக் கொண்டு இலங்கையில் வசிக்கும் எல்லா முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று. இன்று உலகளாவிய பயங்கரவாதக் கண்ணியில் இலங்கையும் சிக்கியுள்ளது. இன்னொன்றும் இங்கு கவனத்துக்குரியது. ஒடுக்கப்படும் மதச் சிறுபான்மையினர் என்கிற வகையில், இலங்கைத் தீவைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இதுவரை ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைப் பலிகடா ஆக்குவதன் ஊடாக நிலைமை இன்னும் மோசமாகும். ஆனால் அதுதான் இன்று நடந்துகொண்டுள்ளது. மிகப் பெரிய அளவில் இதை ஒட்டி முஸ்லிம் வெறுப்பு இலங்கை முழுவதும் பரப்பப்படுகிறது. இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவரும் இன்று தம் குற்றமின்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சந்தடி சாக்கில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதெல்லாம் இன்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போருக்குப் பின் உருவான மதவாத அரசியல் இன்று ஒட்டுமொத்தமாக முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வெறுப்பாக மாற்றப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ மதத் தலைவர்களைப் பொருத்த மட்டில் போப்பாண்டவர் முதல் இலங்கையிலுள்ள உயர் பாதிரிமார்கள் வரை மிகப் பொறுப்புடன் இந்தத் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். அமைதியாக இருக்குமாறும், பொறுமையுடன் இன்றைய துயரத்தை எதிர்கொள்ளுமாறும் தம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அருள் திரு பிஷப் வின்ஸ்டன் எஸ் ஃபெர்னான்டோ அவர்கள், “எந்த நியாயமும் இல்லாது தனக்கு அளிக்கப்பட்ட கொடுந்துன்பங்களை ஏசு தாங்கிக்கொண்டு மக்கள் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது போல நாமும் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டிய தருணம் இது. வேண்டுதல்களின் ஊடாக மனித நேயத்துடனும் நீதியுடனும் தீர்வுகளை நோக்கி நகர்வோம்” எனக் கூறியுள்ளார். கார்டினல் ரஞ்சித், “எந்த மதத்தையும் சேர்ந்த யாரையும் துன்புறுத்தலாகாது” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். “மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்” (CPA) எனும் கிறிஸ்தவ அமைப்பு, “மத விரோதங்களை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் நாம் தவிர்க்க வேண்டும். யாரையும் வெறுக்காமலும், யாருக்கும் அச்சம் விளைவிக்காமலும் இருப்போம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நமது அரசியல் தலைவர்களையும்  மதத் தலைவர்களையும் வேண்டுவது இதுதான்” எனக் கூறியுள்ளார்.

ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உயிர்த்த ஞாயிறு உரையாற்றிய போப்பாண்டவர், “தொழுகையில் இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு என் அன்பான நெருக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க துயரமான சூழலில் உயிர் நீத்த அனைவரையும் இறைவனிடம் நான் ஒப்படைக்கிறேன். இந்தத் தாக்குதலால் காயம்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏதோவொரு வகையில் துன்பத்திற்கு ஆளாகியுள்ளோர் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் கிறிஸ்தவ அடிப்படைவாதத் தலைவர்கள் ஆங்காங்கு இதை அரசியலாகவும், முஸ்லிம் வெறுப்பாகவும் மாற்றுவதற்கு முயற்சிக்காமல் இல்லை. தொடக்கத்தில் சாதாரணமாக அனுதாபம் தெரிவித்த அவர்கள் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதம் இருப்பதை அறிந்தவுடன் கடும் தொனியில் கண்டித்துள்ளனர். ஃப்ரான்சிலுள்ள வலதுசாரி National Rally Party ன் தலைவரான மரீன் லீபென், “உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்டுள்ளவர்கள் அவர்கள் கொண்ட நம்பிக்கையின் விளைவாக இந்நிலைக்கு ஆளாகியுள்ளனர். உலகெங்கிலும் இவ்வாறு துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக நான் மனம் இரங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.

சேலம் கதிர்வேல் என்கவுன்டர் : ஒரு அப்பட்டமான படுகொலை

                                                                          உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம்

மே10, 2019

சேலத்திலுள்ள குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்னும் இடத்தில் கதிர்வேலு எனும் 24 வயது இளைஞன் சென்ற மே 2 காலை ‘என்கவுன்டர்’’ செய்து கொல்லப்பட்ட செய்தி இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக என்கவுன்டர் கொலைகள் என்றாலே திட்டமிட்ட படுகொலை என்கிற நிலை இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போது நடந்துள்ள சேலம் என்கவுன்டரைப் பொருத்தமட்டில் போலீஸ் தரப்புச் செய்திகளில் உள்ள முரண்பாடுகள் மிக வெளிப்படையாக நாளிதழ்களிலேயே சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

பேரா. அ,மார்க்ஸ், தலைவர் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை (9444120582).

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (9894054640),

பி.சந்திரசேகரன், வழக்குரைஞர், சேலம், (9362117499),

கோ.அரிபாபு, வழக்குரைஞர், சேலம் (8870579345),

பி.தமயந்தி, வழக்குரைஞர், சேலம் (75503126669),

எம்.ஜாஹிர் அஹமத், வழக்குரைஞர், சேலம் (9943999001),

எச்.முஹமது ஹாரிஸ், சமூக ஆர்வலர், சேலம் (904343510)

இந்தக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் தங்கி சம்பவம் நடந்தாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு, கொல்லப்பட்ட கதிர்வேலுவின் ஊரான குள்ளம்பட்டியில் அவர் வீடு இருக்கும் பகுதி, வீராணம் காவல் நிலையம், கதிர்வேலுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சேலம் மாவட்ட மருத்துவமனை முதலான பகுதிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தது. என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடுக்கு அருகில் உள்ள செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்கள், கதிர்வேலுவின் உறவினர்கள், கதிர்வேலுவால் கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்படும் காவலர்கள் இருவருக்கும் மருத்துவம் செய்த மருத்துவர், கதிர்வேலுவின் உடலைக் உடற்கூறாய்வு செய்த மருத்துவர் என எல்லோரையும் சந்தித்துப் பேசினர். வாழப்பாடி சரக உதவி காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, வீராணம் காவல் உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோரைக் காவல் நிலையத்தில் காண முடியாததால் தொலைபேசியில் பேசியது. இன்று காலை இந்த என்கவுன்டர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலை, சேலம் மாநகர துணை காவல் ஆணையாளர் தங்கதுரை ஆகியோரிடமும் தொலைபேசினோம்.imag 2

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கனிக்கரைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றபோது அவருக்கு உடனடிப் பணி இருப்பதால் பேச இயலாது எனக் கூறப்பட்டது. நாங்கள் காத்திருந்து பேசவோ, இல்லை அவர் சொல்லும்போது வருவதற்கோ தயார் எனக் கூறியபோது, “இது குறித்து நீதித்துறை விசாரணை நடைபெறுவதால் தான் ஏதும் பேச முடியாது” எனக் கூறித் திருப்பி அனுப்பப் பட்டோம். காவல் உதவி ஆய்வாளர் பூபதி தான் ஊட்டியில் இருப்பதாகவும் தொலைபேசியில் ஏதும் பேச முடியாது  எனவும் கூறினார்,

கதிர்வேல் என்கவுன்டர் குறித்து காவல்துறை கருத்துக்களின் அடிப்படையில் நாளிதழ்கள் முன்வைப்பவை:

சென்ற மாதத்தில் கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலத்தில் மோட்டார் சைகிளில் கோரிமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஆடவர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்துப் பணம் பறித்தது. கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பான புகார் செய்யப்பட்டதை ஒட்டி ரவுடி வெங்கடேஷ் உட்பட அவரைச் சேர்ந்தோர் தேடப்பட்டனர். இது தொடர்பாக அக்கும்பலுடன் தொடர்புகொண்ட முறுக்கு வியாபாரி கணேசனைப் பிடித்து விசாரித்தபோது அவர் எல்லா விவரங்களையும் போலீசில் சொன்னதாகவும் இதனால் கணேசன் மீது வெங்கடேஷ் கும்பலுக்கு ஆத்திரம் வந்ததாகவும் அதனால் அக்கும்பலால் கணேசன் சென்ற ஏப்ரல் 5 அன்று கொல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கதிர்வேல், முத்து, பழனிச்சாமி முதலான சிலர் தேடப்பட்டனர். காட்டூர் ஆனந்தன், முருகன், கார்த்தி, கோபி முதலானோர் பெயர்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

இதைத் தொடந்து காவல்துறை விடுக்கும் கதை வருமாறு: மே 2 அன்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு அருகில் கதிர்வேல் பதுங்கி இருந்ததாகச் செய்தி வந்து ஆய்வாளர் சுப்பிரமணி, எஸ்.ஐ மாரி, பெரியசாமி ஆகிய காவலர்கள் அங்கு சென்றனர். அவர்களைக் கண்டவுடன் கதிர்வேல் தப்பி ஓட முயற்சித்ததோடு போலீசைத் தாக்கவும் செய்தார். இதனால் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் உடலில்  இரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஆய்வாளர் சுப்பிரமணி தற்காப்புக்காகச் சுட்டபோது கதிர்வேலு இறந்தார். காயமடைந்த ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டி.ஐ.ஜி.செந்தில்குமார், எஸ்.பி தீபா கனிக்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

போலீசாரின் இந்தக் கூற்றில் பத்திரிகைகள் கண்ட முரண்கள்:

மே 2 காலை தினத்தந்தியில் கதிர்வேலு முதல் நாள் போலீசில் சரணடைந்தார் எனச் செய்தி வருகிறது. மே 2 மாலை நாளிதழ்களில் கதிர்வேலு அன்று முற்பகலில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வருகிறது. இதன் பொருள் என்ன? காவல்துறை காவலில் இருந்தவர் அன்று காலை கொல்லப்பட்டார் என்பது தானே. அடுத்த நாள் தினத்தந்தி காவல்துறை முதல்நாள் கூறிய செய்தியை (அதாவது கதிர்வேலு முதல்நாள் கைது செய்யப்பட்டார் என்பதை) மறுத்துள்ளதாகக் கூறுகிறது.

மே 4 மாலைமலர் நாளிதழ் சுட்டிக் காட்டிய சில முரண்களை இனி பார்க்கலாம். “சேலம் ரவுடி என்கவுன்டரில் தொடரும் மர்மங்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் எழுப்பப்படும் சில கேள்விகள்: “பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது” எனச் சொல்லும் அந்த இதழ், “முந்தைய நாள் இரவில் கதிர்வேலை போலீசார் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் கைது செய்ததாகவும், பின்னர் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் வைத்து கதிர்வேலிடம் விசாரணை நடத்தியதாகவும், பின்னர் முறுக்கு வியாபாரி கணேசனைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் போலீசாரை தாக்கியதாகவும், அப்போது அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் கதிர்வேல் குள்ளம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், அவரைப் பிடிக்க சென்றபோது அவர் கத்தியால் குத்தியதால் போலீசார் தற்காப்புக்காக அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்படி இந்த என்கவுன்டர் நடந்ததென பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றது.”

மேலும் அந்த நாளிதழ் கணேசன் கொலையில் சரணடைந்த முத்து, பழனிசாமி இருவரும் போலி குற்றவாளிகள் என்று கூறப்படுவதாகவும், சுட்டுக் கொல்லப்படும் அளவுக்குக் கதிர்வேல் குற்றவாளி இல்லை என மக்கள் பேசிக் கொள்வதாகவும் குறிப்பிட்டது. முத்தாய்ப்பாக அந்த இதழ் “எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” – எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்த நான்கைந்து நாட்கள்வரை முத்து, பழனிச்சாமி இருவரும் கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படவில்லை என்பது இத்துடன் ஒத்துப்போவதும் கவனத்துக்குரியது,

மே 3 தேதிய ‘தினத்தந்தி’ நாளிதழ் சுட்டிக் காட்டிய முரண் இன்னும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. அது:

“பிரபல ரவுடி கதிர்வேல் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்  எனக் காலை 11 மணி அளவில் தகவல் வெளியானது. இது தொடர்பாக சம்பவ இடத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள், போலீசாரிடம் ‘எந்த இடம்?’ எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமான தகவல்களைத் தந்தனர். அதாவது மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி எனத் தெரிவித்தனர். இந்த இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் சுற்றித் திரிந்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடம் எனச் சொல்லப்படும் குள்ளம்பட்டியில் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் 4 பேர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். பின்னர்தான் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்’”

imag1நாங்கள் விசாரித்தபோதும் அருகில் செங்கற்சூளையில் பணி செய்து கொண்டிருந்த மக்களும் அப்படி எதையும் தாங்கள் காணவில்லை எனக் கூறியதை முன்பே குறிப்பிட்டோம். அதோடு கொலை செய்த ஆயுதங்களை மறைத்துவைக்க அந்த இடத்தில் எந்த வாய்ப்பும் இல்லை.

 “இது கொலை! என்கவுன்டர் அல்ல” எனும் அறிக்கையில் சொல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி

இந்நிலையில் முகவரி ஏதும் போடப்படாத ஒரு அறிக்கை சுற்றுக்கு வந்தது. அதில், “மே 1 அன்று மாலை 4.20 மணி அளவில் முன்கூட்டி வீராணம் உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசி ஏற்பாடு செய்தபடி கதிர்வேலு அவரிடம் சரண் அடைந்தார். புதிய பேருந்து நிலையம் ‘சரவணா பேக்கரி’ மற்றும் சுற்றியுள்ள CCTV களில் இதற்கான பதிவு உண்டு. பின் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு உயர் அதிகாரியிடம் அவரை ஆஜர்படுத்தி, அதன்பின் மாலை 6.30 தொடங்கி இரவு சுமார் 11 மணிவரை வீராணம் காவல்நிலையத்தில் வைத்திருந்து பின் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கதிர்வேலு காரிப்பட்டி காவல் நிலையப் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார்.”

என்பதுதான் அச்செய்தி. இது பெயரும் முகவரியும் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிக்கை ஆனாலும் இது தினத்தந்தி மே 2 நாளிதழ்ச் செய்தியுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

எமது குழு இது தொடர்ப்பாக சரவணா பேகரி பகுதியில் விசாரித்தபோது அந்த CCTV பதிவு தற்போது காவல்துறையால் நீக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பூபதியிடம் பேசலாம் என வீராணம் காவல்நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது அவர் விடுப்பில் சென்றிருப்பது தெரிந்தது. அங்கு அதிகாரிகள் யாருமில்லை. எழுத்தரும் பெண்காவலர் இருவரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தமக்கு எதுவும் தெரியாது எனவும், மே1 அன்று தம் காவல் நிலையத்தில் அவ்வாறு சரணடைந்த யாரும் வைக்கப்படவில்லை எனவும் கூறினர். எனினும் அவசர அவசரமாக எங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர்கள் தவறவில்லை..

காவல்துறையினரைச் சந்திக்க முயன்றபோது

உதவி ஆய்வாளர் பூபதியைத் தொடர்பு கொண்டு பேசினோம். பொறுமையுடன் பதிலளித்த அவர் நாங்கள் எவ்வளவு வற்புறுத்தியும் தொலைபேசியில் எதையும் சொல்லமுடியாது எனச் சொல்லிவிட்டார்.

வாழப்பாடி சரக டி.எஸ்.பி சூரியமூர்த்தியிடம் பேசியபோது தான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சந்திக்க முடியாது எனவும் கூறினார்.  முதல் நாளே கதிர்வேலு சரணடைந்ததாகச் செய்திகள் வெளியானதை நாங்கள் குறிப்பிட்டபோது அது இல்லவே இல்லை எனத் தீவிரமாக மறுத்தார். இது தொடர்பாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

எஸ்.பி தீபா கனிக்கர் எங்களிடம் பேச மறுத்ததைக் குறிப்பிட்டோம். நீதித்துறை விசாரணை நடப்பது இப்படிக் கருத்துக் கூற மறுப்பதற்கு அவர்களுக்கு ஒரு சாக்காகப் போய் விட்டது.

இந்த என்கவுன்டர் கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி அண்ணாமலையிடம் நாங்கள் பேசியபோது விசாரணை நடப்பதாகவும் இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும் கூறினார். கதிர்வேலு முதல்நாளே கைதுசெய்யப்பட்டார் அல்லது சரண் அடைந்தார் எனச் செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளதை அவரிடம் குறிப்பிட்டபோது அது தன் கவனத்திற்கு வரவில்லை எனவும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை எனவும் கூறினார். மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்கவுன்டருக்கு முதல்நாளே கதிர்வேலு சரணடைந்து அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது அதை அவர் முற்றாக மறுத்தார்.

மருத்துவர்களைச் சந்தித்தபோது                                       

கதிர்வேலுவின் உடலைக் கூறாய்வு செய்த மருத்துவர் டாக்டர் கோகுலரமணாவைச் சந்தித்து கதிர்வேலு உடலில் துப்பாக்கிச் சூடு தவிர வேறு காயங்கள் இருந்ததா முதலான ஐயங்களைக் கேட்டோம்.. பொறுமையாகப் பதிலளித்த அவர் கூறாய்வு முடிவுகள் எதையும் கூற இயலாது எனவும் அவற்றை  கவனத்துடன் செய்து முடிவுகளை சீல் வைக்கப்பட்ட உறையில் அனுப்பி விட்டதாகவும், எல்லாமும் உரிய வகையில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கதிர்வேலுவைப் பிடிக்கச் சென்றபோது அவரால் கத்தியால் குத்தப்பட்டவர்களாகவும், அதனால் அவரைச் சுட்டுக் கொன்றவர்களாகவும் அறியப்படும் உதவி ஆய்வாளர் மாரி, ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முந்திய நாளே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றிருந்தனர், அவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி ராஜ் அசோக்கைச் சந்தித்துப் பேசியபோது மாரிக்கு இரு சிறு காயங்களும் சுப்பிரமணியத்துக்கு  மூன்று சிறு காயங்களும் இருந்ததாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அதற்குச் சிகிச்சை தேவையா எனக் கேட்டபோது சிரித்தார். “அவர்களுக்கு வேறு சில ‘கம்ப்லைன்ட்ஸ்’ இருக்கும். மருத்துவமனையில் சேர்ந்தால் அதையும் கவனித்தாக வேண்டும்” என்றார்.

கதிர்வேலுவின் குடும்பத்தார் மற்றும் அருகிலுள்ளோரைச் சந்தித்தபோது

முதல்நாள் எங்கள் குழு சென்றபோது கதிர்வேலுவின் பெற்றோரைச் சந்திக்க இயலவில்லை. சுற்றியுள்ள மக்களைத்தான் சந்தித்துப் பேச முடிந்தது.  இன்று (மே 10) முற்பகல் அவரது வயதான பெற்றோரையும் ஈனும் சிலரையும் சந்திக்க முடிந்தது. என்கவுன்டருக்குச் சில நாட்கள் முன் காவல்துறையினர் வந்து வீட்டில் இருந்த கதிர்வேலுவின் புகைப்படத்தைப் படம் எடுத்துச் சென்றதாகவும், தொலைக்காட்சியில் செய்தி வந்தபின்னரே தம் மகன் கொல்லப்பட்டதை அறிந்துகொண்டதாகவும் அவர்கள் கூறினர். அவரது உடலில் இருந்த காயங்கள் பற்றிக் கேட்டபோது மார்பில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது தவிர கைகளிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். கதிர்வேலுவின் உடலை முழுமையாகப் பார்ப்பதற்கும் காவல்துறையினர் விடவில்லை எனவும் அருகிலுள்ளோர் கூறினர்.

மே 03 காலை கதிர்வேலுவின் பெற்றோர், தம்பி முதலானோரை ஒரு காரில் போஸ்ட்மார்டம் நடக்கும் மருத்துவமனைக்குக் காவல்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டபின்  கதிர்வேலுவின் சடலத்தை குள்ளம்பட்டிக்குக் கொண்டு செல்லும்போது அந்தக் காருக்கு முன் ஒரு போலிஸ் வேனும், பின்னே மோட்டார் சைக்கிள்களில் இரு போலீஸ்காரர்களும் சென்றுள்ளனர்.

கதிர்வேலு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறித்த ஐயம் பலருக்கும் உள்ளது. தன் கைகால்களை முறிக்கப் போவதாகத் தனக்குத் தகவல்கள் வந்ததாகவும் அந்த பயத்தின் காரணமாகவே  தன் மீதாதான  கொலை வழக்கு காரிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்தபோதும் அவர் மாநகரக் காவல் நிலையத்தில் சரணடைய வந்தார் எனவும் இங்கு பேசப்படுவது குறிப்பிடத் தக்கது. கணேசன் கொலை வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் அதனுடன் தொடர்பில்லாதவர்கள் எனவும் கூறப்படுகிறது. பத்திரிகைகளும் அவ்வாறு எழுதியுள்ளன. அப்படித் தொடர்பில்லாதவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுதல் வேண்டும்,

எமது பார்வைகள்

  1. கதிர்வேலு என்கவுன்டரில் கொல்லப்பட்டு சுமார் பத்து நாட்களுக்குப் பின் நாங்கள் ஒரு குழுவாக இந்த ஆய்வில் ஈடுபட்டபோதும் இக்குழுவில் உள்ள உள்ளூர் தோழர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட முதல்நாள் தொடங்கி நடந்ததைக் கவனித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருந்தனர். சென்ற 4ம் தேதி இங்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை தந்த மக்கள் கண்காணிப்பகமும் முந்தியநாளே சரணடைந்த கதிர்வேலுவை காரிப்பட்டி காவல்துறையினர் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக மக்கள் பேசிக் கொண்டதைக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறை முன்வைப்பதுபோல கதிர்வேலு அப்படியெல்லாம் பெரிய ரவுடி இல்லை எனச் சொல்கிறது, என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி இருக்கும் மக்கள் அன்று அப்படி எல்லாம் எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது. அரசியல் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்பட்ட கொலை இது எனவும் அவ்வறிக்கை பதிவு செய்கிறது. இரண்டு முக்கிய சாதிகள் மற்றும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் இடையே உள்ள முரணும் பகையும் கதிர்வேலுவின் கொலையில் பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் சந்தித்த பலரும் குறிப்பிட்டனர். இதைப் பார்க்கும்போதுதான் ஒரு பகுதியில் பெரும்பான்மையாய் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை வருவாய்த்துறை மற்றும் காவல்துறைகளில் முக்கிய அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்கிற கருத்து வலுப்படுகிறது.
  2. எல்லா என்கவுன்டர் கொலைகளையும்போல இதுவும் ஒரு போலி என்கவுன்டர்தான் என்பதோடு கூடுதலாக இதில் பத்திரிகைகளே வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் அளவிற்கு அப்பட்டமான அற மீறல்கள் நடந்துள்ளன. இரக்கமுள்ள ஒரு அதிகாரியைச் சந்தித்து சரணடைந்து தன் குற்றத்திற்கான தண்டனை அனுபவிப்பை நோக்கி நகர்ந்த ஒரு இளம் குற்றவாளி, மாவட்ட காவல்துறையின் ஒருமித்த சதியால் இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் மணமாகாத ஒரு இளைஞர் மட்டுமல்ல ஒரு குடிசைவாசி, அவனுக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும். வயதான பெற்றோர்களும் உள்ளனர். மகனை இழந்த அவர்கள் நம்மைப்போலத் துக்கம் விசாரிக்கச் செல்பவர்களிடமும் கூட மனம்திறந்து பேச இயலாத அளவுக்குக் காவல்துறை மற்றும் உளவுத்துறைகளின் கெடுபிடிகளுக்கு இடையில் இன்று நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளகியுள்ளனர்.
  3. இப்படியான என்கவுன்டர் கொலைகளின் பின்னணியில் எப்படி வெளிப் பகைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிறைவேற்றலுக்கு அப்பாற்பட்ட காரணிகள் செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தைச் சேந்த காந்திராஜன் எனும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எவ்வாறு சென்னை நகரத்தில் ‘கேங்ஸ்டர்ஸ்’ காவல்துறையினரின் துணையுடன் செயல்படுகின்றனர் என்பது குறித்து ஒரு ஆய்வையே செய்து அது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. அப்படியெல்லாம் இருந்தும், ஆளும்கட்சிகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் கூட இப்படியான என்கவுன்டர் படுகொலைகளைக் கண்டுகொள்ளாததும் கண்டிக்காததும் வேதனைக்குரிய ஒன்று.
  4. இந்தப் படுகொலை தொடர்பாகக் காவல்துறை முன்வைக்கும் கதையாடலில் (narrative) உள்ள முரண்களை நாளிதழ்கள் சுட்டிக் காட்டியமைக்காக எம் குழு இதழியல்துறைக்குப் பாராட்டுக்களை கூறிக் கொள்கிறது. என்கவுன்டரில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றாலே அவரை ‘ரவுடி’ ‘அவன்’, ‘இவன்’ என்றெல்லாம் எழுதுவதையும், காவல்துறை சொல்வதை எல்லாம் கருப்பு வெளுப்பில் பதிவதையும் இதழியற்துறையினர் புறக்கணிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக்கொள்கிறது.

எமது கோரிக்கைகள்

  1. என்கவுன்டர் கொலைகள் நடக்கும்போது அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிக விரிவான நெறிமுறைகளை உச்சநீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் வகுத்துத் தந்துள்ளன. என்கவுன்டர் செய்யும் அதிகாரிகளுக்கு வீரச் சக்கரம் வழங்குதல், பணப்பரிசளித்தல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை தடை செய்துள்ளதோடு என்கவுன்டர் கொலை செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இந்த என்வுன்டர் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது என நிறுவும்வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்பது இந்தப் பரிந்துரைகளின் முக்கியமான அம்சம். இந்த என்கவுன்டரிலும் அது கடைபிடிக்கப்பட வேண்டும். கொலை செய்த இரு போலீஸ்காரர்கள் மட்டுமலாமல் பின்னின்று ஆணையிட்ட உயர் அதிகாரிகளும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரித்து உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கிடைத்துள்ள தகவல்களின்படி கதிர்வேலு கொல்லப்பட்டது ஒரு போலி என்கவுன்டர்தான் என எம் குழு உறுதியாக நம்புகிறது,
  2. என்கவுன்டரில் கொல்லப்பட்ட கதிர்வேலு கொல்லப்படுவதற்கு முதல்நாளே சரண் அடைந்தார் அல்லது கைதுசெய்யப்பட்டார் எனக் குறைந்த பட்சம் ‘தினத்தந்தி’, ‘மாலைமுரசு’, ‘காலைக்கதிர்’ முதலான இதழ்களில் செய்தி வந்துள்ளது. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அறிக்கையும் மக்கள் அவ்வாறு சொல்வதைப் பதிவு செய்துள்ளது. எங்களிடமும் பலர் அவ்வாறே கூறினர். அது உண்மையாயின் காவல்துறை ஏன் அதை மறைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.
  3. இந்த என்கவுன்டர் குறித்து காவல்துறை சொல்வதும் ஊடகங்களும் மக்களும் சொல்வதும் முரணாக இருப்பதால் இந்த என்கவுன்டரை நடத்திய உள்ளூர் காவல்துறையே இவ்வழக்கை விசாரித்தால் நீதிகிடைக்காது என்பதால் கதிர்வேலு கொலை குறித்த புலன் விசாரணையை மத்திய புலனாய்வு முகமையிடம் (CBI) ஒப்படைக்க வேண்டும்.
  4. என்கவுன்டர் கொலைக்குப் பலியான கதிர்வேலுவின் குடும்பநிலையை உத்தேசித்து அவர்களுக்கு உடனடியாக ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வயதான அவரது தம்பி பூபதிக்குக் அவரது கல்வித் தகுதிக்குத் தகுந்த ஒரு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு கோருகிறது.

கோ.அரிபாபு, வழக்குரைஞர், 228, சின்னேரி வயக்காடு, பள்ளப்பட்டி, சேலம் 636009, செல்: 9945311889