ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

     கார்ல் மார்க்ஸ் 9       மக்கள் களம், பிப்ரவரி 2018                                 

இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற  ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதான்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues  எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.

அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.

ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:

உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous)  என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.

இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது  அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.

இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.

பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள்  இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு /  சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?

பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது  அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு  என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.

“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.

இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.

கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.

சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.

மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.

 

 

 

 

 

 

பெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்

பெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்…

பெரியாரியம் – அமார்க்ஸ்

டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்

{ஆக 2017  ‘புத்தகம் பேசுது’ இதழில் நூல் விமர்சனமாக வெளி வந்துள்ள என் விரிவான கட்டுரை }

1.

நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேத்தி, “என்ன தாத்தா கடைசிக் காலத்திலே பைபிள் படிக்க ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேலி செய்கிறாள். இது வரை நான் பைபிள் படித்து அவள் பார்த்ததில்லை. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனானாலும் என் தந்தை அந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும் நம்பிக்கையுடன் வாழ்ந்த என் தாயின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதும் இல்லை. விசேட நாட்களில் என் அம்மா மாதா கோவிலுக்குச் செல்வதிலும் குறைந்த் பட்ச மதக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவர் தலையிட்டதில்லை.

என் அப்பாவின் தூண்டுதலால் பல முக்கிய இலக்கிய ஆளுமைகளின் புனைவுகள், மார்க்ஸ், காந்தி, நேரு ஆகியோரின் அரசியல் எழுத்துக்கள் எனப் படித்துத் திரிந்த காலத்திலும், அதற்குப் பின் நானே எழுதத் தொடங்கிய இந்த முப்பது ஆண்டுகளிலும் கூட எனக்கு பைபிளைப் படிக்கும் விருப்பு ஏற்பட்டதில்லை. சில முக்கியமான தருணங்களில, குறிப்பாக ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்கிற கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது ஏசுவின் மலைப் பிரசங்கத்தை எடுத்து வாசித்தது என்பது போன்ற சந்தர்ப்பங்கள் தவிர விவிலியத்தை முழுமையாக வாசிக்க முனைந்ததில்லை.

இப்போது அவ்வளவு ஆர்வமாக என்னை விவிலியத்தைப் புரட்டத் தூண்டியது வழிப்போக்கன் மொழியாக்கியுள்ள டால்ஸ்டாயின் ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ நூல்தான். இந்த நூலை வாசித்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அவர், ‘அன்னா கரீனா’வையும், ‘புத்துயிர்ப்பை’யும் எனக்கு வாங்கித் தந்து, “பெரிசா இருக்கேன்னு மலைக்காதே. தொடங்கும்போது போரடிக்குதேன்னும் நினைக்காதே. முழுசும் படிச்சுப் பாரு. இந்தப் புத்தகங்கள் உனக்கு நிறைய விஷயத்தைக் கத்துக் குடுக்கும்..” என்று சொன்னதோடு நிற்கவில்லை. “உனக்குத் தெரியுமா காந்தியையே மாத்துன புத்தகங்கள்டா … பைபிளைப் பத்திக் கூட டால்ஸ்டாய் ஒரு புத்தகம் எழுதி இருக்காராம். தமிழ்ல அது எனக்குக் கிடைக்கல. எங்காவது கிடைச்சா அதையும் படிச்சுப்பாரு. இங்கிலீஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்கும் பழக்கம் வரும்போது நிச்சயம் அதைத் தேடிப் படி..” என்று சொன்ன காட்சி என் நினைவுக்கு வந்தது.

நான் அப்பா சொன்ன அந்த டால்ஸ்டாயின் விவிலியத்தை pdf ல் தரவிரக்கம் செய்தபோது அவர் இறந்து கால் நூற்றாண்டாகி இருந்தது. அபோதும் கூட என் வாசிப்புஇல் அது முன்னுரிமை பெறவில்லை. அதன் முக்கியத்துவத்தை நான் உணரவில்லை.

இப்படியான ஒரு பின்னணியில்தான் சென்ற ஆறு மாதங்களுக்கு முன் ‘பாரதி புத்தகாலயத்தில்’ ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’ என்கிற இந்தத் தமிழாக்கத்தைக் கண்டபோது அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் இந்த மொழியாக்கத்தில் ஆறாம் அத்தியாயத்தைப் படிக்கும்போது எனக்கொரு அய்யம் வந்தது. இதென்ன? இவை எல்லாம் திருமறைகள் என திருச்சபையால் வெளியிடப்பட்டுள்ள சுவிசேஷங்களில் உள்ளவைதானா? இல்லை டால்ஸ்டாயின் கற்பனையா? சுவிசேஷங்களின் சுருக்கம் என்றால் இவர் எதைச் சுருக்கியுள்ளார்? – என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நூலின் ஆங்கில, தமிழ் இரு வடிவங்களிலும் உள்ள இறுதி இணைப்பில் டால்ஸ்டாயின் நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு முக்கிய வசனமும், மத்தேயு, லூக்கா, யோவான், மார்க்கு முதலான  திருமறைகளில் எங்கெங்கு காணப்படுகின்றன என்பது துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளதைக் கண்டேன்.

திருமறைகளில் உள்ளவற்றைத்தான் மீண்டும் எழுதுகிறார் என்றால் பின் இங்கு டால்ஸ்டாய் என்னதான் புதிதாகச் செய்துள்ளார்?

இதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் நான் இப்போது என் பேத்தி கேலி செய்கிற அளவுக்கு கிறிஸ்தவர்களின் ஆகப் புனிதமான திருவிவிலியத்தைப் புரட்டிக் கொண்டிருப்பது.

2

டால்ஸ்டாய் சுருக்கித் தரும் சுவிசேஷங்களில் இருப்பவை அனைத்தும் அப்படியே திருமறை என இதுகாறும் அறியப்பட்ட ‘புதிய ஏற்பாட்டில்’ உள்ளவைதான். கிட்டத் தட்ட அதே சொற்களில்தான் அவை அமைந்துள்ளன. அது மட்டுமல்ல அதே கால ஒழுங்குடன்தான் அமைந்துள்ளன. யோசேப்புக்கும் மரியாளுக்கும் திருமணம். ஏசு பிறக்கிறார். பன்னிரண்டு வயதில் பெற்றோருடன் ஒரு திருவிழாவிற்குச் சென்று வரும்போது அவர் காணாமல் போகிறார். மூன்றாம் நாள் அவர் எருசலேமில் ஒரு கோவிலில் மூத்தோர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்படுகிறார். அளவற்ற ஞானமுடையவனாக வளரும் அம் மகன் தன் முப்பதாம் வயதில் பரலோக ராச்சியம் பற்றிப் பேசிக்கொண்டும், அதனால் ஈர்க்கப்பட்டு வருவோருக்குத் திருமுழுக்கு அளித்துக்கொண்டும் இருக்கிற தீர்க்கதரிசி யோவானைத் தேடிச் சென்று அவரிடம் திருமுழுக்குப் பெறுகிறார். பின் அவர் பாலைவனத்தில் நீரும் உணவும் இன்றி நாற்பது நாள் நோன்பிருக்கிறார். அப்போதுதான் அவர் உயிர் வாழ்வின் இரு சாத்தியங்களை உணர்கிறார். ஆவியின் வாழ்வுக்கும் மாமிசத்தின் வாழ்விற்கும் உள்ள போராட்டத்தில் மாமிச வாழ்வை வெல்கிறார்…. இப்படிச் செல்லும் அவரது வரலாறு திருச்சபையின் விவிலியத்தில் காணப்பட்டவாறே நகர்ந்து அதே முக்கிய திருப்பங்களுடன் இறுதியில் அவர் மத மற்றும் அரச அதிகாரங்களால் கல்வாரி மலையில் கொல்கதா என்னுமிடத்தில் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவதில் சட்டென்று முடிகிறது.

இயேசுவின் வழக்கமான வரலாறுதான். எனில் டால்ஸ்டாய் செய்த புதுமைதான் என்ன? ஏன் அதை ஏற்கவே இயலாது எனத் திருச்சபை செய்தது? ருஷ்ய ஜார் அரசும் அதற்கு இசைந்தது?

3

டால்ஸ்டாய்க்கு 1800 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து சிலுவையில் ஏற்றப்பட்ட ஏசுவை அன்றைய மதமும் அரசும் எந்தக் காரணங்களுக்காக அதைச் செய்ததோ அதே காரணங்களுக்காகத்தான் இன்றைய திருச்சபையும் ஜார் அரசும் அவரை வெறுத்தன. அவரது சுவிசேஷமும் கருத்துக்களும் தடை செய்யப்பட்டன.

முதலில் சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அளவிற்கு ஏசு என்ன செய்தார் எனப் பார்ப்போம். இறைவன் மனிதர்களின் ஆவிக்குரிய வாழ்விற்கான அறக்கட்டளைகளை ஏற்கனவே தந்திருந்தார். அன்றைய மதமும் அரசும் அவற்றைக் கறைப் படுத்தி மக்களை அத்தகைய அற வாழ்விலிருந்து அகற்றி இருந்தன. ஏசுவின் பணி அந்தக் கறைகளை எல்லாம் நீக்கி மீண்டும் மனிதர்களின் ஆவிக்குரிய வாழ்விற்கான கடளைகளைத் தந்தது என்பதுதான். ஆனால் மக்களை மாமிசத்திற்குரிய வாழ்வில் அமிழ்த்து வைத்திருப்பதே தங்களின் அதிகாரத்திற்கான வழி என்பதை உணர்ந்திருந்த அரசும் மதமும் ஏசுவின் செயல்களை ஏற்கவில்லை. அதைப் பேராபத்தாகக் கருதின. அதன் விளைவே அவர் சிலுவையில் அறையப்படது.

ஏசுவுக்குப் பின் உருவான கிறிஸ்தவம் தொடக்கத்தில் அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களை ஏற்று தன் பயணத்தைத் துவங்கியபோதும் விரைவில், குறிப்பாக மன்னன் கான்ஸ்டான்டின் கிறிஸ்தவத்தை ஏற்ற பின்னால், ஏசு எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ அவற்றை எல்லாம் மீண்டும் கிறிஸ்தவத்திற்குள் கொண்டு வந்தது. மனிதர்கள் ஆவிக்குரிய அற வாழ்விலிருந்து விலகி மாமிசத்திற்குரிய பொருளாயத வாழ்வுக்குரியவர்களாக இருப்பதையே மத அதிகாரமும் அரசதிகாரமும் விரும்பின. தமது அதிகாரங்கள் நிலை கொள்ள அதுவே வழி என்பதை அவை புரிந்து கொண்டன. மக்களை ஏசு காட்டிய வழியிலிருந்து விலக்கி மீண்டும் பழைய வாழ்வை நோக்கி இயக்குவதற்கு மீண்டும் இயற்கை அதீத கற்பனைகளையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் புகுத்தி ஏசுவால் தூய்மை செய்யப்பட்டிருந்த இறைவனின் கட்டளைகளை மீண்டும் கறைப்படுத்தி இருந்தன என்பதனைக் கண்டு கொண்ட டால்ஸ்டாய் மீண்டும் ஏசு 1800 ஆண்டுகளுக்கு முன் செய்த திருப்பணியை இப்போது மேற்கொள்ள முனைகிறார். ஏசுவின் வரலாறாகவும், உரையாடல்களாகவும் பிந்தைய கிறிஸ்தவ மதத்தால் முன்வைக்கப்பட்ட புனித நூல்களை ஆழமாக வாசித்து, புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்தக் கறைகளை நீக்கித் தூய்மை செய்து, மீண்டும் அவற்றைக் கிறிஸ்துவிற்கு உரியதாக ஆக்க முயல்கிறார் டால்ஸ்டாய். அவற்றிலுள்ள இயற்கை அதீதக் கூறுகளை (supernatural elements), மிகைப்படுத்தல்களை, மகத்துவங்களை, புனிதங்களை, சடங்குகளை எல்லாம் களைந்து மீண்டும் கிறிஸ்துவுக்குரிய விவிலியத்தைச் செதுக்குகிறார்.

ஆக இப்போது டால்ஸ்டாயின் பணி ஏற்கனவே வழங்கப்படும் சுவிசேஷங்களில் புதிதாய் எதையும் சேர்ப்பதல்ல. மாறாக ஏசுவுக்குப் பின் இடைக்காலங்களில் சேர்க்கப்பட்ட அழுக்குகளை அவற்றிலிருந்து நீக்குவதே.

அப்படி நீக்கப்பட்டுத் தூய்மை செய்யப் பட்டதுதான் டால்ஸ்டாயின் ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’.

4

ஏசுவின் பிறப்பு இவ்வாறாக இருந்தது..சுவிசேஷங்களிலிருந்து இயற்கை அதீத கற்பனைகளை, புனிதங்களை, அற்புதச் செயல்களை, இறை மகத்துவங்களை எல்லாம் கவனமாக நீக்கி ஏசு என்கிற மகத்தான மனிதனைப் படைத்துக் காட்டுகிறார் டால்ஸ்டாய்  அவர் இதை எப்படிச் செய்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டும் பார்க்கலாம். ஏசு ஒரு இறைமகன். அவர் எல்லா உயிர்களையும் போல ஆண் – பெண் பாலியல் உறவின் ஊடாக உயிர்ப்பிக்கவில்லை என்பது புனித விவிலியம் சொல்லும் செய்தி. பரிசுத்த ஆவியின் அருளால் மரியாள் கருத்தறித்து ஈன்றவரே ஏசு. டால்ஸ்டாயின் ஏசு வரலாறு இப்படித் தொடங்குகிறது:

“இயேசுவின் தாயாரான மரியாளுக்கு யோசேப்புடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழத் துவங்கும் முன்னரே மரியாள் கர்ப்பவதியாக இருப்பதைப்போலத் தோன்றியது. யோசேப்பு ஒரு நல்ல மனிதனாக இருந்தமையினால் மரியாளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க அவன் எண்ணவில்லை. எனவே அவளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு அவள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை அவளிடன் உறவு கொள்ளாமலேயே அவன் இருந்தான். மரியாள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுத்து அக்குழந்தைக்கு ஏசு என்று பெயரிட்டாள்.ஏசுவின் பிறப்பு இவ்வாறாக இருந்தது.”

5

மதபோதகர்கள்தான் இப்படி என்றால் மத நம்பிக்கைகளை ஏற்காதவர்களும் அதையே செய்தனர். அதாவது ஏசுவை முற்றாக நிராகரித்தனர். இயேசு ஒரு கடவுள் இல்லை என்கிற அவர்கள் அவரை ஒரு மனிதராகக் கருதி அவரது சொற்களின் அடிப்படையிலேயே அவரை ஆய்வு செய்திருக்க வேண்டும். மாறாக இவர்களும் மதபோதகர்கள் சொன்ன ஏசுவையே எடுத்துக் கொண்டார்கள். மதபோதகர்கள் இடைச்செருகல்களாகச் சேர்த்தவற்றிற்கெல்லாம் ஏசுவைப் பொறுப்பாக்கி அவரை நிராகரித்தார்கள். ஆக இருசாரருமே ஏசு முன்வைத்த உண்மையான கருத்துக்களை நிராகரிப்பவர்களாகவே உள்ளனர். வரட்டு நாத்திகம் பேசுகிறவர்களும் இறை நம்பிக்கையாளர்களும் இணையும் புள்ளி இது.

1800 ஆண்டுகளுக்கு முன் ஒரு பரம ஏழை தான் கொண்ட கருத்திற்காக சாட்டையால் அடித்துச் சிலுவையில் ஏற்றிக் கொல்லப்பட்டான். எனினும் இன்றுவரை கோடிக்கணக்கானோர் அவனை இறைவன் என நம்பி ஏற்கின்றனர். இது எப்படி நிகழ்ந்தது? அவன் என்னதான் சொன்னான் என்பதை ஆராய்வதுதான் இதை அறிவதற்கான ஒரே வழி.

6

டால்ஸ்டாயின் இந்த நூல் முழுவது ஏசு என்ன சொன்னார் என்பவற்றைத்தான் பேசுகிறது. சுருக்கம் கருதி ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். அது ஏசுவின் புகழ்பெற்ற மலைப் பிரசங்கம்.

“ஏழைகளும் தங்குவதற்கு இடமில்லாதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்வில் மட்டுமல்ல உள்ளத்திலும் எளிமையாக இருப்போரே எளியோர். அவர்களே கடவுளின் சித்தப்படி வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் பணக்காரர்களுக்கோ அய்யோ. அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்துத் தீர்த்துவிட்டார்கள். இனி அவர்கள் பசியோடு இருப்பார்கள்.”

இந்த முன்னுரையோடு, கூடி நின்ற மக்களை நோக்கிய ஏசு அவர்களின் முந்தைய சட்டங்களைச் சொல்லி அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் சொல்கிறார். மொத்தத்தில் ஐந்து கட்டளைகளாக அவர் சுருக்கி முன்வைப்பவை:

1.கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடன் இருங்கள்.

2.விபச்சாரம் செய்து மனைவியைக் கைவிடாதீர்கள்

3.ஆண்டவனின் பெயரால் ஆணையிடாதே என்பது பழைய கட்டளை. நான் சொல்கிறேன் எந்த உறுதிமொழியையுமே எடுக்காதீர்கள்.

4.தீமையை எதிர்க்காதீர்கள். யாரையும் நியாயம் தீர்க்காதீர்கள் (Do not Judge). யாருடனும் வழக்காடாதீர்கள்.

5.வெவ்வேறு நாடுகளிடையே பிளவுகளை உருவாக்காதீர்கள். உங்கள் நாட்டவரைப்போலவே பிற நாட்டவரையும் நேசியுங்கள்.

கொலை செய்யாதே என்கிற வடிவில் இருந்த முந்தைய கட்டளையை கொலை மட்டுமல்ல யாருக்கும் மன வருத்தத்தையே ஏற்படுத்தாதே, எல்லோருடனும் சமாதானமாக இரு என்பதாக ஏசு மாற்றி அமைக்கிறார். இன்னொரு பெண்ணை விரும்பி மனைவியை விவாகரத்து செய்ய அனுமதி அளிக்கும் முந்தைய கட்டளையை மறுக்கும் ஏசு உடலிச்சையை முதன்மைப் படுத்தும் வாழ்வு ஆவிக்குரியதல்ல என்கிறார்,

ஆண்டவனின் முன் ஆணையிடாதே எனும் பழைய கட்டளையை “எந்த உறுதிமொழியையும் எடுக்காதே (Do not take oath)” என்பதாகத் திருத்துவதன் மூலம், அரசுகள் தேசபக்தி உட்படப் பல்வேறு அடையாளங்களை முன்னிறுத்தி உங்களிடம் பணிவிற்கான உறுதிமொழியைக் கோரும். அதை ஏற்காதீர்கள் எனத் திருத்துகிறார். டால்ஸ்டாயை “கிறிஸ்துவ அரசுமறுப்புவாதி” (Christian Anarchist) எனச் சொல்வது இந்த அடிப்படையில்தான். ‘தீமையை எதிர்க்காதீர்கள்’ என்பதைப் பொருத்த மட்டில் இதன் பொருள் தீமைக்குப் பணியுங்கள் என்பதல்ல. ஏசு வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் அப்படியானதல்ல. தீமையைத் தீமையால் எதிர்க்காதே என்பதுதான். பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதாக இந்த எதிர்ப்பு அமையக் கூடாது. அதனால் பகைதான் தொடருமே ஒழிய தீமை அழியாது. அன்பு செய்யுங்கள். தீமை தீமையை வளர்ப்பது என்பது போல அன்பும் அன்பை வளர்க்கும்.  இதன் மூலம் அவர் யாரையும் குற்றவாளிகளாக்கித் தீர்ப்பளிக்கும் உரிமையையும் மறுக்கிறார்.

நாடுகளிடையே பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள் என்பதைப் பொருத்த மட்டில் முன்னதாக இருந்த கட்டளை அவரவர் நாட்டை அவரவர் நேசிக்க வேண்டும் என்பது. எனவே இது பிற நாட்டவரையும் நேசி என்கிற வகையில் மீண்டும் ‘தேசபக்தி’ எனும் கருத்தை மறுக்கும் ஒரு அரசெதிர்ப்பு அராஜகச் சிந்தனையாக அமைகிறது. இங்கே நாடு என்பது மொழி, சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுறுத்தப்பட்ட எல்லா மக்கள் திரள்களையும் உள்ளடக்கும்.

7

ஆறாம் அத்தியாயம் முழுவதையும் ஆவிக்குரிய வாழ்வு என்பதையும் மாமிசத்துக்குரிய வாழ்வு என்பதையும் வேறுபடுத்தி விளக்கும் முகமாக டால்ஸ்டாய் அமைத்துள்ளார். ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் அவற்றை விளக்குகிறார். சுருங்கச் சொல்வதானால் மாமிசத்திற்கான வாழ்வு எனில் இவ்வுலகப் பெருமைகள், இன்பங்கள், இச்சைகள், சுகங்கள், சொத்துக்கள் ஆகியவற்றுக்கான வாழ்க்கை. ஆவிக்குரிய வாழ்வு எனில் அது மேன்மைப் படுவதற்கான ஒரு வாழ்வு. தந்தை, அதாவது இறைவனுக்கான வாழ்வு. எனில் அது என்ன? இதையும் சுருங்கச் சொல்வதானால் முன் கூறிய அனைத்தின் மீதான பற்றுக்களையும் துறந்த வாழ்வு. இந்தப் பற்றுக்களில் குடும்பப் பற்றும் அடங்கும். ஏசுவின் வாழ்வையே அதற்கொரு சான்றாக முன்வைக்கிறார் டால்ஸ்டாய். அவரைப் பார்க்க அவரைச் சுமந்து ஈன்ற அன்னையும் அவரது சகோதரர்களும் வந்து காத்திருக்கும் செய்தி அவருக்குக் கவனப்படுத்தப்பட்ட போதும் ஏசு மக்கள் பணியையே முதன்மைப் படுத்தி அகல்கிறார்.

எல்லாப் பற்றுக்களைக் காட்டிலும் சொத்துக்கள் மீது பற்றுக் கொள்ளும் மூடத் தனத்தை ஏசு எள்ளி நகையாடும் இடங்களை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில் தொகுத்துத் தருகிறார். அதோ மரணம் வாசற் கதவருகில் காத்து நிற்பதை அறியாமல் சொத்து சேகரிப்பில் லயித்திருப்போரைப் பார்த்து நகைக்கிறார். “ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது” எனும் ஏசுவின் புகழ் மிக்க வாசகத்தை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில்தான் பயன்படுத்துகிறார். “ஒருவன் தனக்காக சொத்துக்களை வைத்துக் கொண்டு தந்தையின் சித்தத்தின்படி வாழ முடியாது” என்கிறார். அதாவது சொத்துடையோருக்கு ஆவிக்குரிய வாழ்வு சாத்தியமே இல்லை என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்.

அது மாத்திரமல்ல, எல்லா இறைக் கட்டளைகளையும் சிறுவயது முதலே நிறைவேற்றி வருகிறேனே எனச் சொல்லி அவர்முன் நின்றவனின் மேனியை அலங்கரித்த விலையுயர்ந்த ஆடையைப் பார்த்துவிட்டு, கொலை செய்யாதிருப்பாயாக, இச்சை கொள்ளாதிருப்பாயாக, பொய் சொல்லாதிருப்பாயாக, தன்னைப்போலப் பிறரையும் நேசிப்பாயாக என்கிற கட்டளைகளையெல்லாம் நீ உண்மையிலேயே நிறைவேற்றுகிறவனாக இருந்தால் முதலில் இங்கிருந்து கிளம்பிச்  சென்று உன் சொத்துக்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவா எனச் சொல்லி சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதை அடிப்படை நிபந்தனை ஆக்குகிறார்.

ஆவியினைப் பாதிக்கும் நோய்களிலேயே மிகவும் கொடியதானது பணக்காரனாக வேண்டுமென்று பொருளினைச் சேர்க்கும் ஆசையே என முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிக்கிறார்.

நூலின் இறுதி அத்தியாயத்தில் பயம், கோபம் முதலான பண்புகளும் தீமைக்கு இணங்குவதிலேயே போய் முடியும் என்பதனை ஏசுவை மரண தண்டனைக்கெனக் கைது செய்யும் தருவாயில் அவரது முக்கிய சீடர்களின் எதிர்வினைகளைக் கொண்டு சுட்டிக் காட்டுவார் டால்ஸ்டாய்.

ஐம்பது வயதில்தான் டால்ஸ்டாய் கிறிஸ்தவத்தைத் தழுவினார் என்று சொல்வதுண்டு. இதன் பொருள் அவர் பிறக்கும்போது கிறிஸ்தவ மதத்தில் பிறக்கவில்லை என்பதல்ல. இதற்கு முன அவர் இவற்றையெல்லாம் சிந்தித்ததில்லை என்பதுதான். ஐம்பது வயதில் அவரை ஆட்கொண்ட மரணம் குறித்த சிந்தனைகள் அவரை விவிலியத்தின் உண்மைப் பொருளின்பால கொண்டு சேர்த்தன. ஏசு என்கிற புரட்சியாளனை அவர் அப்போதுதான் அடையாளம் கண்டார். சுவிசேஷங்களின் சுருக்கம் மட்டுமின்றி The kingdom of God is within you, A confession முதலான நூல்களும் அவரது பிற்கால வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் அவரது இந்த நூலில்வெளிப்படும் கருத்துக்களின் அடிப்படையிலானவையாகவே அமைந்தன.

இந்த அருமையான நூலை மிகச் சிறந்த முறையில் மொழியாக்கியுள்ள வழிப்போகனின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. இந்த நூல் ஒரு வெறும் ஏசுவின் வரலாற்றைச் சொல்லும் நூலல்ல. மிகவும் உன்னதமான மானுட மேன்மைகளை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு தீவிர முயற்சி. இதற்குரிய ஒரு மொழி நடையையும், சொற்களையும், வாக்கிய அமைப்புகளையும் வழிப்போக்கன் தேர்வு செய்துள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு கூற்றை முடிக்கும்போது “என்று சொன்னார்” என்பதாக அல்லாமல் நூல் முழுக்க “என்றே சொன்னார்” எனக் கையாண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இது உருவாக்கும் ஓசை நயம் ஏதோ ஒரு வகையில் இதன் பேசு பொருளுடன் ஒத்திசைவதாக படிக்கும்தோறும் உணர்ந்தேன்.

பிழைகள் ஏதுமின்றி சிறந்த முறையில் அச்சிட்டு நியாயமான விலையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தையும் பாராட்ட வேண்டும்.

வெகு நாட்களுக்குப் பின் ஒரு மேன்மையான அனுபவமாக இந்த நூல் வாசிப்பு எனக்கு அமைந்தது.

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை

               உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,

ஏப்ரல் 22, 2017

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் கடந்த பத்து நாட்களாகப் பரபரப்பான செய்தியாக உள்ளது. கோவிந்தனின் குடும்பத்தார் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில் அவரது உடல் தற்போது இராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பான பிரச்சினையாக உள்ளதோடு இது ஒரு சாதிப் பிரச்சினையாகவும் உருப்பெறக்கூடிய நிலை உள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்த நாங்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து நேற்று முழுவதும் இப்பகுதியில் பலரையும் சந்தித்தோம்.

எம் குழு உறுப்பினர்கள்:

1.பேரா.அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

  1. வழக்குரைஞர் ரஜினி, மதுரை,
  2. வழக்குரைஞர் ஏ.செய்யது அப்துல் காதர் (NCHRO), மதுரை,
  3. வழக்குரைஞர் எம். காஜா நஜ்முதீன் (NCHRO) , மதுரை,

5, வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், (NCHRO), மதுரை,

  1. மு.சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்,
  2. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை.

இக்குழுவினர் நேற்று முழுவதும் உசிலன்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இது தொடர்பாகப் பலரையும் சந்தித்துப் பேசியது. நாங்கள் சந்தித்தவர்கள்: கோவிந்தனின் மனைவி பவானி (34), அவரது மகள்கள் பாண்டியம்மாள் (19), மோனிஷா (17), தனலட்சுமி (14), சகோதரர்கள் குமார் மற்றும் கண்ணன், தந்தை பாலு, தாய் காளியம்மாள், சகோதரி ஜெயந்தி, என்கவுன்டரில் கொலை செய்தவர்களும் தற்போது இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுமான எஸ்.ஐ .தங்கமுனியசாமி குழுவினர், இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிகண்டன். பரமக்குடி வழக்குரைஞர் சி.பசுமலை ஆகியோர் உட்படப் பலரையும் சந்தித்தனர். எமது வழக்குரைஞர்கள் அப்துல் காதர், காஜா நிஜாமுதீன் இருவரும் இராமநாதபுரம் சிறைக்குச் சென்று அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள துல்கருனை, சின்ராஜ் ஆகியோரை மனு போட்டு சந்தித்துப் பேசியபோது தங்களுக்குக் காவல்துறையினரே வக்கீலுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தாங்கள் அவர்களுடன் பேச முடியாது எனவும் கூறினர். கேணிக்கரைக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது இப்போது பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரே அதற்கும் பொறுப்பாக உள்ளார் என்றனர். அங்கு சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இன்று காலை தொலைபேசியில் அவரிடம் பேசினோம்.

சம்பவம்:

கோவிந்தன் தேவேந்திரகுல வேளாளர் எனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் பாண்டித்துரை என்பவர் 1997 ல் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுகிறார். இப்பகுதியில் இவ்விரு பிரிவினருக்கும் இடையில் சாதிப் பகை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோவிந்தன் சாதிப் பிரச்சினையில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் கூட. பாண்டித்துரையின் கொலைக்குக் காரணமானவர் எனக் கருதப்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1998ல் கொல்லப்பட்டதை ஒட்டி கோவிந்தன் உட்பட 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனினும் இறுதியில் கோவிந்தன் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கோவிந்தன் அப்பகுதியில் சாதி மோதல்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்பவரானார், இதை ஒட்டி அவர் மீது சில வழக்குகளும் உண்டு. சென்ர ஆண்டில் பழையனக்கோட்டையைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் சிலர் சென்ற ஆண்டு கோவிந்தன் வீட்டில் இருந்தபோது அவரைத் தாக்க வந்ததாகவும் கோவிந்தன் அவர்களை அடித்து விரட்டி இருவரைப் பிடித்து வைத்ததாகவும் இதை ஒட்டி அவர் மீது ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவரது வீட்டார் கூறினர். காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்தபோது கோவிந்தன் மீது இப்படி மூன்று வழக்குகள் உள்ளன என்றார். எனினும் அவர் மீது கொள்ளை மற்ரும் வழிப்பறி தொடர்பான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதை அவரது வீட்டாரும் பிறரும் உறுதிபடக் கூறினர்.

சென்ற 13 ம் தேதி மாலை 6.30 மணி அளவில் சாதாரண உடையில் வந்த சிலர் கோவிந்தனை ஏதோ விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் நாண்ட நேரம் அவர் வராததை ஒட்டி சில மணி நேரம் கழித்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அடுத்த நாள் வருடப் பிறப்பிற்கு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் இரவு பத்தரை மணிக்குப் பின் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. செல்போனை யாரும் எடுக்கவில்லை என அவரது மனைவி கூறினார். காலை 5 மணி அளவில்தான் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.

இது ஒரு பச்சைப் படுகொலை எனக் கூறி அவரது உடலை வீட்டார்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமல் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் முன்னர் கோவிந்தனின் வீட்டுக்கு வந்த போலீசார் கோவிந்தனின் உடல் மார்ச்சுவரியில் அழுகிக் கிடப்பது சுகாதாரக் கேடு உட்படப் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது எனவும் உடனடியாக உடலை எடுத்துச் செல்லாவிடால் தாங்களே எரியூட்டி விடுவதாகவும் எச்சரித்து ஒரு அறிக்கையை ஏப்ரல் 19 அன்று வீட்டுச் சுவர்களில் ஒட்டிச் சென்றுள்ளனர். குடும்பத்தார் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதும், அடிக்கடி போலீஸ் வாகனம் வந்து செல்வதாகவும், தாங்கள் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்படுவதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஊட்டி நிம்மதியைக் குலைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

சி.பி.ஐ விசாரணை, மறு பிரேத பரிசோதனை ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தை அணுகியபோது அவற்றை நீதிமன்றம் மறுத்துள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதையும், வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் காரணமாகச் சொல்லியுள்ளது.

தாங்களே கோவிந்தனின் உடலை எரித்துவிடுவதாகக் காவல்துறை அவரது வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது குறித்து கோவிந்தனின் மனைவி அடுத்த நாள் (ஏப்ரல் 21) உயர்நீதி மன்றத்தை அணுகினார். தற்போது அதற்குத் திங்கட்கிழமை வரை (ஏப் 24) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

காவல்துறை சொல்வது:

தொண்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (எண் 111/17, தேதி ஏப்ரல் 14, 2017) இ.த.ச 279, 294(b), 332, 307, குற்ற நடவடிக்கைச் சட்டம் 176 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சங்கு வகைகள், கடல் ஆமை  முதலான தடை செய்யப்பட்ட பொருள்களை விற்கும் ஒரு வணிகர் எனக் கூறப்படுகிரது. இவர் சென்ற 11ம் தேதி தனது காரில் 9 இலட்ச ரூபாய்  பணத்துடன் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கோவிந்தன் அவரைத் தாக்கி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார், இது குறித்து காசிநாதன் இரண்டு நாள் கழித்து 13-ம் தேதி இராமநாதபுரம் கேணிக்கரைக் காவல் நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார் (குற்ற எண் 291/17, பிரிவுகள் இ.த.ச 341, 395, 397,365). தனது ஓட்டுனர் தொண்டியைச் சேர்ந்த துல்கருணை என்பவர் மூலம் தான் பணம் கொண்டுவருவதை அறிந்து கோவிந்தன் இந்த வழிப்பறியைச் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடனடியாக இராமநாதபுரம் உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின்படி இராமநாதபுரம் B2 நகரக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி  கேணிக்கரை பொறுப்பு காவல் ஆய்வாளர் கணேசனுக்கு உதவியாக சௌந்தரபாண்டியன், மோகன், மாரிமுத்து மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் சுரேஷ்  பண்டியன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் ஆஜராகியதாக தங்க முனியசாமி மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் (தொண்டி 111/17) கூறுகிறார். துல்கர்னையை விசாரித்தபோது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன்பங்காக கோவிந்தனால் கொடுக்கப்பட்ட ரூ 80,000 த்தை ஒப்படைத்ததாகவும். பின் ஒரு இன்டிகா காரை (TN 65 6361) வாடகைக்கு எடுத்துக் கொண்டு துல்கருனையை அழைத்துக் கொண்டு சென்றபோது கோவிந்தன் துல்கருனைக்குப் போன் செய்து சின்ராஜிடம் மேலும் 60,000 ரூ கொடுத்து அனுப்புவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு போய்விடு எனச் சொன்னாராம். சற்று நேரத்தில் சின்ராஜ் அந்தப் பணத்தைக் கொண்டு வந்தாராம். தங்கமுனியசாமி குழுவினர் சின்ராஜையும் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிந்தனைத் தேடிச் சென்றார்களாம். தொண்டியிலிருந்து திருவாடனை நோக்கி அம்பாசடர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த கோவிந்தனை மடக்கியபோது அவர் தன் காரால் இவர்கள் காரை மோதிவிட்டுத் தப்பி ஓடியதாகவும்,  திருவெற்றியூர் சவேரியார் நகரில் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓட முயற்சித்த கோவிந்தன்  முதல்நிலைக் காவலர் சவுந்தரபாண்டியனையும் தன்னையும் அரிவாளால் வெட்டியதாகவும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிந்தனைத் தான் காலில் சுட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டுத் தானும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தன் இறந்ததைத் தான் பின்னரே அறிந்ததாகவும்  தங்கமுனியசாமி கூறுகிறார். ஊடகங்களில் இதுவே செய்தியாகவும் வெளி வந்துள்ளது.

கேணிக்கரைக் காவல்நிலையத்திற்குத் தற்போது பொறுப்பில் உள்ள ஆய்வாளர் டி.ஏ.வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் இந்தப் பகுதிக்குப் புதியவர் எனவும் இங்குள்ள காவலர்களின் பின்னணி தனக்குத் தெரியாது எனவும் காசிநாதன் வழிப்பறி குறித்துப் புகார் அளித்தபோது தான் அந்தக் காவல் நிலையத்திற்குப் பொறுபாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் எங்களிடம் கூறியவை:

காவல்துறைக் கண்காணிப்பாளர் என். மணிகண்டன் அவர்கள் எம் குழுவிடம் விரிவாகப் பேசினார். எங்கள் ஐயங்களை முன்வைத்தபோது தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் இப்போது தான் இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு “மூன்றாம் நபர்” (third party) எனவும், தான் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறினார். இப்படியான ‘மோதல்’ கொலைகளில் சுட்டுக் கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் தான் உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி தற்காப்பிற்காகவே சுட்டுக் கொன்றதாகவும் நிறுவும் வரை என்கவுன்டர் செய்த காவலர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம், உச்சநீதி மன்றம் முதலியன கூறியுள்ளதையும் அவருக்குக் கவனப்படுத்திய போது அப்படி இருந்தால் அதை இப்போது பொறுப்பேற்றுள்ள சி.பி.சி.ஐ.டி தான் செய்ய வேண்டும் என்றார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடனேயே இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேட்டபோது தான் இது தொடர்பான விதிகளைப் பரிசீலிப்பதாகச் சொன்னார். சட்டவிரோதக் கடத்தல் தொழில் செய்யப்படுவதாகச் கூறப்படும் ஒரு நபர் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஒரு புகாரைச் செய்துள்ள நிலையில் உடனடியாக மற்ற காவல் நிலையம் ஒன்றிலிருந்து காவல்துறையினரை வைத்து ஒரு சிறப்புப்படை அமைக்க வேண்டிய அவசரம் ஏன் எனக் கேட்டபோது, கடத்தல்காரர் என்பதற்காகவே அவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் இருக்க முடியாது எனவும், இப்படியான சிறப்புப் படை அமைப்பது வழக்கம்தான் எனவும் அவர் கூறினார். இது ஒரு சாதி வெறுப்புகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு பகுதி என்கிறபோது இப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பலர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்கிற குற்றச்சாட்டு பற்ரிக் கேட்டபோது இதில் எல்லாம் சாதியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே எற்றுக் கொண்டுள்ளபோது இப்படி நீங்கள் சொல்வது சரிதானா எனக் கேட்டபோது இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி எல்லாப் பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

இராமநாதபுரம் மருத்துவமனையில் ‘சி’ வார்டில் ‘சிகிச்சை’ பெற்றுவரும் தங்கமுனியசாமியையும் சௌந்தரபாண்டியனையும் பார்த்தோம். தங்கமுனியசாமி எதையும் சொல்லமுடியாது என மறுத்துவிட்டார். நீங்கள் காலில்தான் சுன்டீர்கள், பின் எப்படி அவர் இறந்தார் என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. அவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில் அங்கு பொறுப்பில் இருந்த செவிலியர் ஒருவரை விசாரித்தபோது அவர் சிரித்துக் கொண்டே தற்போது  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என ஒத்துக்கொண்டார்.

எமது பார்வைகள்:

  1. சாதிமுரண்கள் மிகவும் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் இது குறித்த சிந்தனை சற்றும் இன்றிக் காவல்துறை செயல்பட்டுள்ளது. அதன் செய்ல்பாடுகள் இப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக உள்ளன. திருவாடனைச் சரகத்தில் உள்ள ஐந்து காவல்நிலையங்களிலும் உளவுத்துறையினராக (SBCID) ஆதிக்க சாதியினரே இருப்பதாகவும் குறிப்பாக திருவாடனையில் உள்ள ராஜா என்பவர் மிகவும் சாதி உணர்வுடன் செயல்படுவதாகவும் நாங்கள் சந்தித்த பட்டியல் சாதியினர் குற்றம் சாட்டினர். அதுவும் இதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினராக உள்ளதால் சாதி வெறுப்பு காவல் நிலையங்களில்கூடுதலாக உள்ளது என்பதையும் அவர்கள் கூறினர். என்கவுன்டர் செய்வதற்கு அனுப்பப்பட்டவர்களில் தங்கமுனியசாமியும் கமுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினரே. அவர்தான் என்கவுன்டர் செய்தவரும் கூட. அந்த டீமில் இருந்த சௌந்தரபாண்டியன் என்பவர் பட்டியல் இனத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இது வழக்கமாகக் காவல்துறை செய்வதுதான். அப்படியான ஒருவரையும் அவர்கள் டீமில் இணைப்பது இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத்தான்.
  2. பரமக்குடி வழக்குரைஞர் பசுமலை அவர்களைச் சந்தித்தபோது அவர் உரிய ஆதாரங்களுடன் ஒரு முக்கிய தவலைக் கூறினார். சில ஆண்டுகள் முன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் (2011) ஆறு பட்டியல்சாதியினரைச் சுட்டுக் கொன்றதை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் கமிஷன் முன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான முத்துக்குமார் என்பவரின் மனைவி பான்டீஸ்வரி ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் தன் கணவரைச் சுட்டுக் கொன்றது இந்த தங்கமுனியசாமி எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைப்பொன்றில் இருந்து செயல்படுபவரும், பஞ்சாயத்துக்கள் செய்பவருமான கோவிந்தனைப் பிடிக்க அனுப்பியது என்பதைக் காவல்துறை எப்படி விளக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
  3. 2011 பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தற்போது நடந்துள்ல இந்த என்கவுன்டர் எல்லாவற்ரையும் பார்க்கும்போது காவல்துறை பட்டியல்சாதியினரைத் தொடர்ந்து காழ்ப்புடன் அணுகிவருவது உறுதியாகிறது.
  4. கோவிந்தன் மீது சாதிப் பஞ்சாயத்துகள் செய்பவர், சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற புகார்கள் இருந்தபோதும் அவர் மீது வழிப்பறி செய்ததாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
  5. இந்த என்கவுன்டருக்குத் துணை செய்த துல்கர்னை, சின்ராஜ் முதலானோருக்கு வழக்குரைஞர் முதலானோரை வைத்து எல்லா உதவிகளையும் செய்து காவல்துறை அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல ஐயங்களுக்குக் காரணமாகிறது.
  6. பணம் பறிகொடுத்ததாகச் சொல்லப்படும் காசினாதன் என்பவர் ஒரு கடத்தல்காரர். 11ம் தேதி பணத்தைப் பரிகொடுத்ததாகச் சொல்லும் இவர் ஏன் 13ம் தேதிவரை புகார் கொடுக்காமல் இருந்தார் என்பதும், புகார் கொடுத்தவுடன் உடனடியாக ஒரு சிறப்புப்படையை நியமித்து அதில் இன்னொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த தங்க முனியசாமியைக் குறிப்பாகச் சேர்த்ததும் தற்செயலானவை அல்ல.
  7. எந்தப் பெரிய காயங்களும் இல்லாத தங்கமுனியசாமியை மருத்துவமனையில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. காவல்துறையின் பிடிவாதத்தாலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள செவிலியரும் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றனர். காவல்துறை இந்தப் போலி என்கவுன்டருக்கு ஒரு ‘அலிபி’யை உருவாக்குவதற்காகவே இதைச் செய்கிறது. இதற்கு எந்த அறமும் இன்றி மருத்துவ நிர்வாகம் ஒத்துழைப்பது இழிவானது.
  8. என்கவுன்டர் செய்து கொன்ற தங்கமுனியசாமி முதல் தகவல் அறிக்கையில் தான் கோவிந்தனைக் கால்களிலேயே சுட்டதாகக் கூறுகிறார். காலில் சுடப்பட்டு உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 42 வயதுள்ள ஆரோக்கியமான யாரும் அடுத்த சிலமணி நேரங்களில் இறப்பது என்பது சாத்தியமே இல்லை. கொவிந்தனின் உடலின் வீடியோ ஒன்றை எங்கள் குழு பரிசீலித்தபோது அவருக்கு விலா மற்றும் உடலின் மேற்பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் உற்றார் உறவினர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் தன்னிச்சையாக பிரேத பரிசோதனை செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இதைக் காவல்துறையும் மருத்துவத் துறையும் விளக்க வேண்டும்.

 

கோரிக்கைகள்:

  1. இது ஒரு போலி என்கவுன்டர் என்று எம் குழு உறுதியாகக் கருதுகிறது. இதைக் கொலைக் குற்றமாகக் கருதி தங்கமுனியசாமி உள்ளிட்ட என்கவுன்டர் கொலைக்குக் காரணமானவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
  2. கோவிந்தனின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் முன்னிலையில் மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  3. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனடியாக அதிகாரிகளை நியமிப்பதோடு விச்சாரனையை முடிக்க காலகெடுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
  4. சாதிபார்த்தெல்லாம் காவல்துறையினரை நியமிக்கக் முடியாது எனக் கண்காணிப்பளர் சொல்வதை ஏற்க முடியாது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதை அரசே ஏற்றுக்கொண்டதன் விளைவாகத்தான் இங்கே வன்கொடுமத் தடுப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் இயற்ற்றப்பட்டுள்ளன. சமூகத்தின் பன்மைத் தனமை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை சச்சார் கமிஷன் அறிக்கை உட்படப் பல ஆய்வுகளும் அறிக்கைகளும் சுட்டிக் காட்டியுள்ளன. சாதி முரண் கூர்மைப்பட்டுள்ள இப்பகுதியில் பதவியில் உள்ள காவல்துறையினர், உளவுத்துறையினர் முதலானோரின் சமூகப் பின்னணி குறித்துக் காவல்துறை உரிய முறையில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல கோவிந்தனைப் பிடிக்க தங்கமுனியசாமி முதலானோர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்படும் சாதி உணர்வுள்ள உளவுத்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
  5. இந்தப் போலி மோதலில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் குடும்பத்துக்கு உடனடியாகப் பத்து இலட்சரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மகள்களில் ஒருவருக்கு தகுதியுள்ள அரசு வேலை ஒன்று அளிக்கப்பட வேண்டும்.
  6. பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும், அடிக்கடி காவல்துறை வாகனங்களை அனுப்பி அந்தக் குடும்பத்தின் மீதே மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுமாறு செய்வதையும் இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றை உடனடியாகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  7. இதுபற்றியான செய்தி வெளியீட்டில் ஊடகங்கள் சில காவல்துறையின் பொய்களை எந்த ஆய்வுகளும் இன்றி அப்படியே வெளியிடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்தைக் கேட்டே ஒருவர் பற்றிய குற்றச்சாட்டை வெளியிட வேண்டும் என்பதே ஊடக தர்மம். இந்தியாவில் நடைபெறும் என்கவுன்டர் கொலைகளில் 90 சதம் போலியானவை என்பது ஊடகத்தினர் அறியாத ஒன்றல்ல.

 

 

இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு

பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன்.  அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் நான்கைந்து பேர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். மூன்று பையன்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இல்லை. படிக்கிற வயதில் வேலைக்குப் போக நேர்ந்த விடலை இளைஞர்கள். அதில் ஒருவனை எனக்குத் தெரியும். அருகிலுள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனிடம் இன்னொருவன் ஸ்பைக் வைத்துத் தலை சீவும் வித்தையைக் கேட்டான். அவன் எங்கே என்ன மாதிரி ஜெல் வாங்க வேண்டும், அதிலுள்ள ‘வெரைடி’கள் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்றாமவன் சொன்னான்: “ஏய், அப்டி ஸ்பைக் வச்சு ஒரு போடோ எடுத்து ஃபேஸ் புக்ல போடு.. போட்டியன்னா ஃபேஸ் புக் ஓனர் மாற்கு வே அசந்துடுவாரு..” என்றான். “ஃபேஸ் புக்ல போட்டு எல்லாரையும் ஒரு அசத்து அசத்தத்தாண்டா கேக்குறேன். சும்மா நூறு லைக்காவது விழுவும் பாரு..”

அங்கே டீ குடித்துக் கொண்டிருந்த இன்னொருவரையும் நான் அடிக்கடி பார்த்துள்ளேன். வயதானவர். எங்கள் வீட்டில் ஒரு குழாய் ரிப்பேர் செய்ய வந்த ப்ளம்பருக்கு உதவியாளராக ஒருமுறை வந்துள்ளார்.  சில நேரங்களில் வாடகை டயர் மாட்டு வண்டி ஒன்றையும் ஓட்டி வருவார் ஒரு கைலி, பனியனுடன் டீ உறிஞ்சிக் கொண்டிருந்தார். காலில் ஏதோ அடிபட்டிருந்தது. குச்சி ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பையன்களைப் பார்த்து அவர் சொன்னார் : “டெக்கான் ஹைதராபாத்தை நம்ம சன் டிவி காரங்க வாங்கிட்டாங்க..”. திரும்பி என்னைப் பார்த்தும் ஒரு புன்னகையை வீசினார். எனக்கு கிரிக்கெட் விஷயங்கள் தெரியாது, ஐ.பி.எல் பற்றியும் அதிகம் தெரியாது என்பதை அவர் அறியார். நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெடக்கூடாது என நானும் புன்னகைத்து வைத்தேன்.

முடி வெட்டுகிறவர்கள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்துள்ளார்கள், ஐ.பி.எல் பற்றிப் பேசுகிறார்கள் எனச் சொல்வதல்ல என் நோக்கம். உலகிலேயே அதிகம் இன்டெர்நெட் பாவிப்பதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்றாலும் அது இங்குள்ள மக்கள் தொகையால் வந்த எண்ணிக்கைப் பெருக்கம். இன்னும் கூட 10 சதம் மக்களே நம் நாட்டில் கணினி பாவிக்கின்றனர்.

ஆனாலும் இதுபோன்ற விடயங்களில் ஒரு ஜனநாயகப்பாடு இங்கே நடந்துள்ளது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. தொழில் நுட்பம் இதில் பெரும்பங்கு வகித்துள்ளது. தொழில் நுட்பத்திற்கு இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று அது சமூகத்தை ஜனநாயகப்படுத்தும்; மற்றது அது தன்னைப் புறக்கணிப்போரைக் கடுமையாகப் பழி வாங்கிவிடும். கணினி அச்சுக் காலத்தில் ஒரு அச்சக உரிமையாளர் ஈய எழுத்துக்களைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் கதி என்னாகும்?

குக்கிராமங்களில் உள்ளோரும் கேபிள் டிவி, செல் போன் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. ஒரு ஏழு, எட்டாயிரம் ரூபாயில் ஒரு ஆன்ட்ராய்ட் செல் வைத்திருந்தால் யாரையும் சார்ந்திராமல் ஒரு ஃபேஸ் புக் அக்கவுன்ட் தொடங்கி விடலாம். பேஸ்புக்கில் பலமாதிரி செய்திகள் வந்து கொண்டே உள்ளன. டி.வியில் 24 மணி நேரமும் ஏகப்பட்ட செய்திகள். ‘நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு உலக விஷயங்கள் அலசப்படுகின்றன.

ஓரளவு தகவலறிந்த சமூகமாக நாம் உருப்பெற்றுக்கொண்டே உள்ளோம்.

ஆனால் ஒன்று.

ஏகப்பட்ட தகவல்கள் நம்மை இப்படி வந்தடைந்தபோதும் இவை பெரும்பாலும் எல்லாம் ஒரு contemporary தன்மையதாகவே உள்ளன. வரலாற்று ரீதியான தகவல்களாக அவை இருப்பதில்லை. ஆர்வமுள்ளவர்கள் வரலாற்று ரீதியாகவும் நவீன நுட்பங்களின் உதவியால் நிறையத் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும் வந்து சேர்பவை மிகவும் சமகால விஷயங்கள்தான். இந்த சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாகவே நாம் உள்ளோம்.

ஒரு இருபதாண்டுகளுக்கு முந்திய வரலாறும் கூட தெரியாதவர்களாகவே நம் சராசரி இளைஞர்கள் இருக்கின்றனர்.

இன்று மோடி அலை வீசுவதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.