ரஜிந்தர் சச்சார் (1923 – 2018)   

மறைந்த நீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான ஆணையத்திற்குத் தலைமை ஏற்று அளித்த அறிக்கையாலேயே இன்று அவர் பெரிதும் நினைவுகூறப்பட்டாலும், அவர் பன்முக ஆளுமை உடையவர். சோஷலிஸ்ட் கட்சிப் பாரம்பரியத்தில் வந்த அவர் இறுதிவரை மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வந்தவர். 

ஒன்று

“அல்லாஹ்விற்கும், இறைத்தூதருக்கும் அடுத்தபடியாகத் தாம் நேசிப்பது ரஜிந்தர் சச்சாரைத்தான் எனப் பல முஸ்லிம்கள் என்னிடம் கூறியுள்ளனர்” -என்றார் சச்சார் அறிக்கையை உருவாக்கிய குழுவின் உறுப்பினரும் செயலாளருமான அபு சலே ஷரீஃப். அறிக்கையின் நகலைத் தயாரித்தது ஷரீஃப்தான் என்பார்கள். அது குறித்துக் கேட்டபோது ஷரீஃப் சொன்னார்:

“இந்த அறிக்கையின் சிறப்புகளுக்கும் நம்பகத் தன்மைக்கும் சச்சாரே காரணம். பொது வெளிகளில் முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிப்புகளுக்குள்ளாகக் கூடிய நிலையில் (vulnerable) உள்ளனர் என்பது குறித்த ப்ரக்ஞை உடையவராக அவர் இருந்தார். இந்த அறிக்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் எவ்வாறு முஸ்லிம்கள் அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் வாழ்வை எதிர்கொண்டுள்ளனர் என்பதைச் சொல்லிக் கொண்டே போகிறது. இந்த அறிக்கையின் தனித்துவம் அதில்தான் அடங்கியுள்ளது”.

சச்சார் என்றவுடன் நமக்கு இன்று ‘சச்சார் அறிக்கை’தான் நினைவுக்கு வருகிறது என்றாலும், அவர் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்டவர். வழக்குரைஞராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும், நீதிபதியாகவும், மனித உரிமைப் போராளியாகவும், ஒரு பொதுநிலைக் கருத்தாளராகவும் (Public Intellectual) நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்.

ஒரு நீண்ட வாழ்வை இந்த மண்ணில் வாழ்ந்த அவர் ஒன்றாக இருந்த இந்தியாவில் பஞ்சாபில் பிறந்தவர். லாகூரில் வழக்குரைஞர் படிப்பை முடித்தவர். பிரிவினைக் கலவரத்தின் போது குடும்பத்தைப் பிரிய நேர்ந்து தப்பித்து வந்தவர். அவரது தந்தை பீம்சேன் சச்சார் ஒரு காங்கிரஸ்காரர். பிரிவினைக்குப் பின் ஐந்தாண்டு காலம் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்தவர். ஆனால் ரஜீந்தர் சச்சார் தந்தையின் கட்சியில் இருக்கவில்லை. அன்று காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில்தான் இருந்தார். ஒரு முறை பிரதமர் நேரு அவரது இல்லத்திற்கு உணவருந்த வந்தபோது அவரோடு அமர்ந்து உண்ண மறுத்வர்தான் சச்சார்.

இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்தபோது சச்சார் அதை ஏற்கவில்லை. இந்திராவின் மரணத்தை ஒட்டி சீக்கியர்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டபோது (1984)  டெல்லியில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அப்போது சீக்கியர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. அவர் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தால் உண்மைகள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சம் அன்று காங்கிரஸ் அரசுக்கு இருந்தது.

சச்சாரின் உருவாக்கத்தில் இளமையில் அவர் கண்முன் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், பிரிவினைக் கலவரக் கொடுமைகள், நெருக்கடிநிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷலிசச் சிந்தனை, அரசியல் சட்ட ஆளுகை , மதச்சார்பின்மை, மனித உரிமைகள் என்கிற இந்த நான்கையும் அவர் தன் அரசியல் நெறிகளாக ஏற்று வாழ்ந்ததை நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பு என்பது பிரிவினைக் கலவர அனுபவங்களின் ஊடாகத்தான் அவருக்கு உருவாகியிருக்க வேண்டும்.

“முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் தாங்கள் ‘தேசவிரோதிகள்’ இல்லை, ‘பயங்கரவாதிகள்’ இல்லை என நிரூபித்திக் காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அவர்களுக்குச் சலுகைகள் (appeasement) காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால் அப்படியான ‘சலுகைகள்’ எந்தச் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுத்திவிடவில்லை. ஏதோ  சில மக்கள் மட்டும் முஸ்லிம்களைச் சந்தேகத்திற்குரியவர்களாகப் பார்க்கிறார்கள் என்பதில்லை. பொது நிறுவனங்களும், அரசமைப்புகளும் கூடத் தம்மை அவ்வாறு பார்ப்பதாக அவர்கள் எங்களிடம் முறையிட்டனர். இப்படியான நிலை அவர்கள் மத்தியில் மிகப் பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது” – என்கிறது சச்சார் அறிக்கை.

“புர்கா, பர்தா, தாடி, தொப்பி முதலியன ஒரு பக்கம் இந்திய முஸ்லிம்களின் தனித்துவத்திற்கான அடையாளங்களாக இருந்தபோதிலும், அவையே பொதுப்புலத்தில் அவர்களின் அச்சத்திற்கான மூல காரணிகளாகவும் அமைந்து விடுகின்றன. கேலிக்குரிய அம்சங்களாக மட்டுமல்ல, சந்தேகப் படுவதற்கான ஆதாரங்களாகவும் அவை ஆகிவிடுகின்றன” என்பதையும் சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிவிடுகிறது.

வேறெந்த உடனடிப் பலனும் சச்சார் அறிக்கையின் மூலம் விளைந்ததோ இல்லையோ முஸ்லிம்களுக்குச் சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக இங்கு இந்துத்துவசக்திகளால் முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை உரிய தரவுகளின் அடிப்படையில் தர்த்தெறிந்தது சச்சார் அறிக்கை.

சச்சார் என்றைக்கும் காங்கிரசை ஆதரித்ததில்லை என்றாலும் மன்மோகன் சிங் அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக முஸ்லிம்களின் சமூக நிலை குறித்து ஆய்வுசெய்ய இந்த ஆணையத்தை அமைத்தபோது அதற்குத் தலைவராக சச்சார் அவர்களையே அழைத்தது. அவரும் அதை ஏற்றுக் கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் இப்படியான ஆணையங்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் சுமார் 15 கோடி அளவு மக்கள் தொகை உள்ள முஸ்லிம் சமூகத்தை மட்டும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு இது ஒன்றுதான்.

இரண்டு 

இந்திய முஸ்லிம்களின் “பாதுகாப்பு, அடையாளம், சமத்துவம்” ஆகியவற்றைத் தனது அணுகல் முறை நோக்கங்களாக  அறிவித்துக் கொண்ட இக்குழு, 2006 நவம்பர் 17 அன்று,  12 அத்தியாயங்கள், 427 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது.  பல்வேறு துறைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மிக விரிவான தகவல்களை, உரிய முறையில் பகுத்தாய்வு செய்து,  நிரல் படத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஓர் ஆவணமாக இன்று நம்முன் உள்ளது.

தன் அணுகல்முறையின் அடிப்படை கோட்பாடாகச் சச்சார் சொல்வது:

“எந்த ஒரு நாடாயினும் அங்கு அமைந்துள்ள அரசு. ஒரு நீதியான அரசாக உள்ளதா இல்லையா எனக் கண்டறிவதற்கான ஒரே சோதனை அங்குள்ள சிறுபான்மை மக்கள் தம் அரசு நடுநிலையாகச் செயல்படுகிறதா இல்லையா என்பது குறித்து என்ன கருத்து வைத்துள்ளார்கள் என்பதுதான்.”

இந்த அறிக்கை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:

1.பலரும் நம்புவதுபோல் இது வெறும் ஒரு இடஒதுக்கீட்டிற்கான அறிக்கை அல்ல.  உறுதியான இடஒதுக்கீட்டுப் பரிந்துரை எதையும் இது செய்யவில்லை எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களைப் பிற சமூகங்களுக்கு இணையாகக் கொண்டு வருதலில் இடஒதுக்கீடு ஓரங்கம் மட்டுமே என்கிற அடிப்படையில் தன் ஆய்வுகளை சச்சார் அறிக்கை முன்வைக்கிறது. (அ)சகல நிறுவனங்களும் சமூகத்தின் பன்மைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அமைவதற்கும் (ஆ), இன்று ஏற்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை ஏற்படுத்தித் தருவதற்கும் உரிய பரிந்துரைகளைச் செய்வதும்தான் சச்சார் அறிக்கையின் நோக்கம்.

2.இந்த நோக்கில் சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவ குறியெண்’ (Diversity Index) ஒன்றை உருவாக்குவது, பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் ஒதுக்கப்படுதல் குறித்தும் அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உணர்வூட்டுவது, உயர் கல்வியில் பன்மைத்துவத்தை நிலைநாட்டும் வண்ணம் சேர்க்கை அளவுகோல்களை உருவாக்குவது, சிறுபான்மையோர் குறித்த தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவது, தனியார் துறைகள் உள்ளிட்டு முஸ்லிம்களுக்கான உறுதியாக்க நடவடிக்கைகளை (Affirmative Actions)) மேற் கொள்வது, பிரிட்டனில் இருப்பதுபோல் “சமவாய்ப்பு ஆணையம்’ (Equal Opportunity Commission ) ஒன்றை உருவாக்குவது, மதரஸா கல்வி முறையை நவீன மயமாக்குவதோடு, அதைப் பொதுக் கல்வியுடன் இணைப்பது, பாட நூல்களின் உள்ளுறையை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது, முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார ரீதியில் சுருங்குவதைத் (ghettoization) தடுக்கும் வகையில் சிவில் சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது என்கிற வகையில் தன் பரிந்துரைகளைச் சச்சார் குழு மேற் கொண்டுள்ளது.

தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரைப் பற்றியும் அது பேசுகிறது.

முஸ்லிம்கள் குறித்த பொய்களைப் பரப்பியே அரசியல் நடத்தும் பாசிஸ சக்திகளின் பல கட்டுக்கதைகளைத் தகர்க்கும் வண்ணம் ஏராளமான தரவுகளைச் சச்சார் குழு தொகுத்துள்ளது. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டுகிறது.

மக்கள் எல்லோருக்குமான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அரசியல் சட்டத்தின் ஆளுகை என்பனவற்றில் சச்சார் மிக உறுதியாக் இருந்தார் என்றேன். பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவராக இருந்து பல்வேறு உண்மை அறியும் செயல்பாடுகள், மக்கள் மன்றங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றில் பங்குபெற்றுத் தன் அனுபவங்களையும் புரிதல்களையும் மக்கள் சேவைக்கு அர்ப்பணித்தவர் அவர்.

நெருக்கடி நிலையின்போது அறிவிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கையை, “இந்தியாவின் ஆன்மாவில் ஏற்பட்ட நிரந்தரக் காயம்” எனவும், நெருக்கடி நிலை தொடர்வதற்கு ஆதரவாக அன்று இந்திய நீதித்துறை இருந்ததை, “அதன் வரலாற்றில் ஒரு கறை” எனவும் கண்டித்தவர் அவர்.

“எழுதப்பட்ட ஒரு அரசியல்சட்டம் உள்ளவரை அதுவே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. தன்னுடைய அதிகாரம் அரசியல் சட்டத்தில் எல்லைக்குட்பட்டதே என்பதை நாடாளுமன்றம் ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்றம் தன் இறையாண்மைக்குக் குறை வந்துவிடுவதாகக் கருதக்கூடாது. அரசு, நீதித்துறை ஆகியவற்றின் இறையாண்மை அரசியல் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று நாடாளுமன்ற அதிகாரமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான். அரசன் எத்தனை அதிகாரம் மிக்கவனாக இருந்தாலும் அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவன் என நாம் இந்தியப் பாரம்பரியத்தில் சொல்கிறோமே அப்படித்தான் இதுவும்” – என அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை எல்லாமும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவையே என்பதை வலியுறுத்தியவர் அவர்.

மூன்று

இறுதிவரை தனது மனதிற்குப் பட்டதைச் சொல்லிக் கொண்டும் அரசுகள் அத்துமீறும்போது அவற்றின் தலைகளில் குட்டிக் கொண்டும் இருந்தவர் சச்சார். நினைவுக்கு வந்த சில மட்டும் இங்கே:

(1) 2016 ஜனவரியில் பாஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தை பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்கியது நினைவிருக்கலாம். அதை ஒட்டி அப்போது இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை மோடி அரசு நிறுத்துவதாக அறிவித்தபோது அதை சச்சார் கண்டித்தார். “பேச்சு வார்த்தைகளை நிறுத்துவது அல்லது ஒத்திப் போடுவது என்பதெல்லாம் நல்லதல்ல. அவை பயங்கரவாதிகளுக்கே உதவும்” என்றார். தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதே இரு நாடுகளுக்கும் நல்லது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

(2) நரேந்திரமோடி அரசு டெல்லியில் பதவி ஏற்ற கையோடு நாட்டைப் பாதிக்கக் கூடிய பல முக்கியமான பிரச்சினைகளில் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அவசரச் சட்டங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கும், நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்ட தனியார்களுக்கும் அனுமதி அளிப்பதை அவசரச் சட்டங்களின் ஊடாக மோடி அரசு நிறைவேற்ற முயற்சித்தபோது ஆகியவற்றை “முற்றிலும் சட்டவிரோதமானது” (absolutely illegal) என்றும், அரசியல் சட்டத்தின் மீது மேற்கொள்ளப்படும் “ஏமாற்று” (fraud) என்றும் சொன்ன சச்சார், இதில் குடியரசுத் தலைவர் கையொப்பமிடக் கூடாது எனவும் சச்சார் கேட்டுக்கொண்டார். “தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால்தான் இப்படி அவசரச் சட்டம் மூலமாக இவற்றை நிறைவேற்ற வேண்டி உள்ளது என வெட்கமில்லாமல் இந்த மோடி அரசு சொல்கிறது. இது ஒன்றே போதும் குடியரசுத் தலைவர் இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பதற்கு” என்றார்.

“குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டங்களை இயற்றுவது என்பதற்குப் பதிலாக, அவசரச் சட்டங்களின் மூலம் இப்படி நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் சட்டங்களை இயற்றுவது என்பது அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு அவசரநிலை அதிகாரம் (emergency power) என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (1987). நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாத ஒரு அசாதாரணச் சூழலில் பயன்படுத்துவதற்காக அரசுக்கு அளிக்ப்பட்டுள்ள அதிகாரம் இது. இதை அரசியல் லாபங்களுக்காககப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத் தொடரை நீடிக்காமல் இப்படி அவசரச் சட்டங்களின் மூலம் பிரச்சினைக்குரிய சட்டங்களை இயற்றுவதன் பின்னணி என்ன? அந்நிய முதலீட்டாளர்களுடன் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்களே இவற்றுக்குப் பின்னணி. ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசுக்கு அதிக அளவில் வருமானம் (dividend) ஈட்டித்தந்த ஒரு நிறுவனம். ‘நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசிய மயமாக்குவதற்கான சட்டத்தின்படி’ நிலக்கரி தோண்ட தனியார்களுக்கு உரிமம் அளிக்க இயலாது. இந்தச் சட்டத்தை இப்படி அவசரச் சட்டம் என்கிற ஒரு  முரட்டு நடவடிக்கையின் மூலம் ஒன்றுமில்லாமல் ஆக்குவதை எப்படி அனுமதிப்பது?” என்றார் சச்சார் (டிச 25, 2014)..

இதன் பின்னரே குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி நரேந்திர மோடி அரசின் இத்தகைய அவசரச் சட்ட ஆளுகையைக் கண்டிக்க நேர்ந்தது.

2013ல் உலக அளவில் செயல்படும் மிகப் பெரிய மருந்து நிறுவனமான ரன்பாக்சி (Ranboxy) கலப்பட மருந்துகளை விற்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அமெரிக்க அரசுக்கு 500 மில்லியன் டாலரை அபராதமாகச் செலுத்த ஒப்புக் கொண்ட செய்தி வெளிவந்தபோது அந்த மருந்துகளை இங்கும் தடை செய்ய வேண்டும் என்றார் ரஜிந்தர் சச்சார். “அமெரிக்க அரசு அதைக் கண்டு பிடித்துத் தடை செய்யும் அதே நேரத்தில் அவை இங்கே அனுமதிக்கப்படுகின்றன என்றால் அதற்குப் பெயர் என்ன? திறமையின்மையா இல்லை கூட்டுக் களவாணித்தனமா (collusion), இல்லை இன்னும் மோசமான ஏதாவது ஒன்றா? எனக்குப் புரியவில்லை” எனக் கூறிய சச்சார் இந்தியக் கடைகளில் அது விற்கப்படுவதையும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அதை அனுமதித்து வருவதையும் சுட்டிக்காட்டிக் கண்டித்தார் (மே 15, 2013). “இந்த மருந்துகளை இங்கு அனுமதித்து வருவது குறித்து நலவாழ்வு அமைச்சகமும், மருந்துக் கட்டுப்பாடு அதிகாரியும் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார்.

சென்ற முறை (1999 -2004) பா.ஜ.க தலைமையிலான ஆட்சி இங்கு நடைபெற்றபோது அவர்கள் பல்கலைக் கழகங்களில் ஜோதிடக் கல்வி, புரோகிதம் ஆகியவற்றில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளைத் தொடங்குவதாக அறிவித்தனர். அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் சச்சார் முதன்மையானவர். “பல்கலைக்கழகங்கள் அரசியல்சட்டத்தின் 52 A பிரிவின் கீழ் அமைக்கப்படுபவை.. பகுத்தறிவு மற்றும் மூட நம்பிக்கைகளை ஏற்க்கக் கூடாது என்பது அப்பிரிவு வற்புறுத்துவதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சோதிடம் என்பது அறிவியல் பூர்வமானது எனில் இங்கு தேதல்களை நடத்தி இங்கு ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியதில்லையே. சோதிடத்தின் மூலம் தகுதியான ஆட்சியாளர்களைக் கண்டுபிடித்து விடலாமே” என்றார்.

நான்கு

ரஜீந்தர் சச்சார் அவர்களுடன் எனக்கு ஒரு சிறிய அனுபவம் உண்டு. தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டுள்ள தோழர்கள் பாஸ்கர், சதீஷ் முதலானோர் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் இருந்தனர். அவர்களது வழக்கையும் நடத்தாமல், பிணையில் விடுதலையும் செய்யாமல் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டித்துத் தோழர்கள் சிறையில் பட்டினிப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். அரசு மசியவில்லை. அப்போது குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழு சிறைக்குள் அவர்களைச் சந்தித்துப் போராட்டத்தை நிறுத்த வேண்டிக் கொள்வது என்றும், அதனூடாக இந்தப் பிரச்சினையை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியை ஏற்று டெல்லியிலிருந்து ரஜிந்தர் சச்சார் வந்திருந்தார். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். உள்ளே சென்று பட்டினிப் போராட்டத்தில் இருந்தவர்களைச் சந்திக்க சிறை அதிகாரிகளும் அனுமதித்தனர், சச்சார் உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்கு இளநீர் கொடுத்துப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

அவரோடு எனக்கிருந்த இன்னொரு தொடர்பு, அவரது சச்சார் அறிக்கை வெளிவந்த சில மாதங்களில், பத்தே நாட்களில் அதைச் சுருக்கித் தமிழில் ஆக்கியதுதான். முக்கிய அட்டவணைகள் எல்லாம் இணைக்கப்பட்டு அழகான வடிவத்தில் வெளிவந்தது அந்த நூல். அநேகமாக என் நூல்களிலேயே மிக அதிகமாக விற்பனையானதும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.   sachar-kuzhu-1-550x600

ஒரு பொது நிலை அறிவுஜீவி (public Intellectual) என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் ரஜீந்தர் சச்சார். ஒரு தேர்ந்த சட்ட வல்லுநர், வல்லுநர்களாக இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழும் அநீதிகளை விளக்கிக் கண்டித்து மக்கள் மத்தியில் கருத்துருவாக்கும் மனத் திராணியும் சமூக அக்கறையும் கொண்டவர். அந்த வகையில் ஒரு சிறிய கல்வி வட்டத்திற்குள் (academic community) மட்டும்சுருங்காமல் பொது வெளியிலும் தாக்கம் விளைவித்தவர் அவர். அவருக்கு நம் அஞ்சலிகள்.

 

சச்சார் அறிக்கையின் பத்தாண்டுகள்

சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

(பிப் 25, 2017 ல் எழுதியது; புதிய விடியல் இதழில் வெளிவந்தது)

ச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ (United Progressive Front -UPA) அரசு அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து இந்தத் திசையில் சில நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தது. ஐ.மு.கூ அரசு ஆண்ட அந்த பத்தாண்டுகளில் (2004 -14) இவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு எந்தப் பெரிய பலன்களும் கிட்டிவிடவில்லை என்ற போதிலும் உலகமயத்துக்குப் பிந்திய புதிய சூழலில் சமூக சமத்துவம் குறித்த செயற்பாடுகள் பழைய மாதிரியாக இருக்க இயலாது என்கிற நிலையில், சில புதிய சாத்தியங்களை நோக்கி நகர்ந்த வகையில் அவை முக்கியமானவையாக அமைகின்றன. இவை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவும் இவற்றை கவனமாக மதிப்பிட வேண்டிய தேவையும் நமக்கு உள்ளது.

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்டவுடன் அது பெரிய அளவில் இந்தியா முழுதும் விவாதிக்கப்பட்டது.  ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த ஒரு விவாத அரங்கு டெல்லியில் நடந்தது. சச்சார் அறிக்கை உருவாக்கத்தில் பங்குபெற்ற பல முக்கிய அறிஞர்களும் வல்லுனர்களும் அதில் பங்கு பெற்றனர்.  எட்டாண்டுகளுக்குப் பின் அரசே பத்து உறுப்பினர்கள் அடங்கிய ஒரு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ஐ.மு.கூ அரசின் இறுதியில் சச்சாரின் பரிந்துரைகளில் முக்கியமானதாகிய ‘சம வாய்ப்பு ஆணையம்’ (Equal Opportunity Commission – EOC) ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியில் இந்தத் திசையில் எந்த நகர்வும் இல்ல்லை.

இப்போது பத்தாண்டுகள் முடிந்துவிட்டதை ஒட்டி இப்போது மீண்டும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்தப் பின்னணியில் நாம் முதலில் இந்தப் பத்தாண்டுகளில் இந்தத் திசையில் என்னென்ன நடந்தன என்பதை முதலில் தொகுத்துக் கொள்வோம்.சச்சார் அறிக்கைப் பரிந்துரைகள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா என அடுத்துப் பார்ப்போம்.

I
சச்சார் அறிக்கைக்குப் பின்னும் என்னவெல்லாம் நடந்தன?

2004 ல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ‘குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் அறிவித்தபடி 2005 மார்ச் 9 அன்று முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி சார்ந்த நிலையைக் குறித்து ஆய்வு செய்ய சச்சார் குழுவை நியமித்தது. அது மட்டுமல்ல 2006 ஜன 29 அன்று முதன் முதலாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான அமைச்சகமும் (Ministry of Minority Affairs) டெல்லியில் உருவாக்கப்பட்டது.

சச்சார் குழு 2006 நவ 17 ல் தன் அறிக்கையை அளித்தது. சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி இப்படி இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மையாகிய முஸ்லிம்களின் நிலையை மட்டுமே தனிக் கவனம் எடுத்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு என்கிற வகையில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த அறிக்கை தான் திரட்டித்தந்த ஏராளமான விவரங்களின் பின்னணியில் 400 க்கும் மேற்பட்ட பக்கங்களில் முஸ்லிம்களின் சமூக, பொறுளாதார மற்றும் கல்வி நிலையைப் பற்றிச் சொன்னதை சுருக்கிச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம். இந்த அம்சங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ள தலித் மக்களைக் காட்டிலும் கீழாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றது சச்சார் அறிக்கை.

இந்த நிலையை மாற்றி அமைப்பதற்குச் சில பரிந்துரைகளையும் அது செய்தது. வெறுமனே இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் என்பவற்றோடு நிற்காமல் மாறிவரும் உலக அளவிலான பொருளாதாரச் சூழலையெல்லாம் கணக்கில் கொண்டு அது முன்வைத்த இரண்டு பரிந்துரைகளை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சமூகம் முழுவதும் அனைத்து நிலைகளிலும் அனைத்து அமைப்புகளிலும் இந்த நாட்டின் பன்மைத்துவம் பிரதிபலிக்கிறதா என்பதை ஆராயவும், அதைச் செயற்படுத்தவும் ‘பன்மைத்துவ ஆணையம்’ (Diversity Commission / Diversity Index) ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஒரு பள்ளிக் கூடம், காவல் நிலையம், புதிதாக உருவாகும் நகர்ப்புறங்கள்.. இப்படி எங்கும், எந்த நிறுவனத்திலும் இச்சமூகத்தில் உள்ளடங்கியுள்ள பலதிறப்பட்டவர்களும் உரிய அளவில் தென்படவேண்டும். அடுத்து வெறும் வேலை வாய்ப்பில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் எல்லாத் தரப்பினருக்கும் சம வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா என எந்த ஒரு நிறுவனத்தையும் அழைத்து விசாரிக்க, விளக்கம் கேட்க, நடவடிக்கைகள் எடுக்க அதிகாரமுள்ள அமைப்பு (Equal Opportunity Commission) ஒன்றை அமைக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தத் திசையில் சில முயற்சிகளில் இறங்கியது. 2007 ஆகஸ்டில் இரு குழுக்களை அது அமைத்தது. ஒன்று ‘பன்மைத்துவ கணிப்பிற்கான வல்லுனர் குழு’ (Expert Group on Diversity Index). டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேரா. அமிதாப் குண்டு தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து வல்லுனர்கள் கொண்ட இந்தக் குழு 2008 ஜூன் 24 அன்று தன் அறிக்கையை அளித்தது. பேரா. என்.ஆர்.மாதவ மேனன் தலைமையில் அமைக்கப்பட்ட இன்னொரு குழு ‘சம வாய்ப்பு ஆணையம்’ Equal Opportunity Commission -EOC)  அமைப்பது தொடர்பானது. ஏழு வல்லுனர்கள் கொண்ட இந்தக் குழு 2008 பிப் 20 அன்று தன் அறிக்கையை அளித்தது.

இந்தக் குழுக்கள் இப்படி விரிவான அறிக்கையை அளித்த போதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரிய சாதனைகளைச் செய்துவிட இயலவில்லை. எனினும் இரண்டாம் முறையும் ஆட்சிக்கு வந்த அந்த ஐ.மு.கூ அரசு தனது பதவி முடியுமுன் 2013 ஆக 5 அன்று பேரா. அமிதாப் குண்டு தலைமையில் பத்துபேர் கொண்ட இன்னொரு வல்லுனர் குழுவை அமைத்தது. ‘சச்சாருக்குப் பிந்திய காலகட்டம் பற்றிய மதிப்பீட்டுக் குழு’  (Post Sachar Evaluation Committee / Kundu Committee) என இது அறியப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பாக,   பிப்ரவரி 20, 2014 அன்று மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ‘சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்தது. ஆனால் அது முன்வைத்த வடிவம் இந்த அமைப்பின் நோக்கத்தையே முறியடிப்பதாக இருந்தது. நான் ஒரு முஸ்லிம் அல்லது, தலித் அல்லது இந்த மொழியைப் பேசுபவன் அல்லது மாற்றுத் திறனாளி அல்லது மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள், அல்லது வேறெதோ ஒரு அடையாளத்தைக் காரணம் காட்டி ஒரு நிறுவனம் வேலை வாய்ப்பையோ இல்லை ஏதோ ஒரு சேவையையோ மறுத்தார்கள் என இந்த ஆணையத்தின் முன் புகாரளித்தால் அழைத்து விசாரித்து அந்தக் குறையை நிவர்த்திக்கவோ இல்லை அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவோ அதிகாரமில்லாத வெறும் பரிந்துரை மட்டுமே செய்யக் கூடிய ஒரு நிறுவனமாக அது இருந்தது. தவிரவும் இப்படி எல்லாவிதமான வேறுபடுத்தல்களையும் தட்டிக் கேட்கும் நிறுவனமாக அன்றி முஸ்லிம்கள் என்கிற அடிப்படையில் வேறுபடுத்தல் இருந்தால் மட்டுமே கவனம் கொள்ளும் அமைப்பாகவும் அது முன்வைக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட மோசமான அம்சம் என்னவெனில் தனியார் நிறுவனங்கள் மீது எந்த அதிகாரமும் இல்லாத ஒன்றாகவும் அது இருந்தது. இர்ஃபான் எஞ்சினீர் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் ஐ.மு.கூ அரசின் இந்த அறிவிப்பு முஸ்லிம்களின் வாக்குகளை நோக்கமாகக் கொண்டு முன் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

சச்சார் அறிக்கைக்குப் பிந்திய காலத்தில் சிறுபான்மை மக்களின் நிலையில் எற்ற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைதாப் குண்டு குழு செப் 29, 2014 அன்று தன் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது மத்தியில் பா.ஜ.க அரசு பதவியில் இருந்தது.

குண்டு குழு அறிக்கையைப் பெற்றுக் கொண்ட நரேந்திரமோடி அரசு அடுத்த இரண்டு மாதங்கள் ஒன்றும் பேசவில்லை. டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இது குறித்து அரசின் கருத்தறிய முயன்றபோது சிறுபான்மையினர் பிரச்சினைக்கான மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துலாவைச் சந்திக்க இயலவில்லை. பின் துணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: “முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவது என்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினை அவர்கள் அரசியல் களத்தில் ஏமாற்றப் படுவதுதான். மதச்சார்பின்மை எனப் பேசுகிறவர்கள் கொடுமையாகவும் மோசமாகவும் இதுகாறும்வரை முஸ்லிம்களை ஏமாற்றி வந்துள்ளார்கள். அதனால்தான் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் முஸ்லிம்கள் மேலே வர இயலாமல் போய்விட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் இரண்டு குறிக்கோள்களையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது குறித்து கவனமாக வேலை செய்கிறோம்” என்றார் (நவ 22, 2014). என்ன அலட்சியம், திமிர், நக்கல் பாருங்கள். சிறுபான்மையினர் நலமடைய இரண்டு குறிக்கோளையும் இவர்கள் நிறைவேற்றப் போகிறார்களாம்.

பா.ஜ.க அரசு இப்போது குண்டு அறிக்கையை முற்றாகக் கைவிட்டுவிட்டது. “மொத்த மைனாரிட்டிகளையும் பற்றிப் பேசாமல் குண்டு அறிக்கை முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளது. அது மேற்கொண்ட ஆய்வு முறை தவறானது. தகவல்கள் ஒழுங்காகத் திரட்டப்படவில்லை ..” என்றெல்லாம் கூறி பேரா. அமிதாப் குண்டு குழு அறிக்கைகளையும் பரிந்துரைகளையும் குப்பையில் எறிந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா, இந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் யாவை என்பவற்றைப் பார்ப்போம்.

II
எட்டாண்டுகளுக்குப் பின் முஸ்லிம்கள் : அமிதாப் குண்டு குழு அறிக்கை

அமிதாப் குண்டு குழு அமைக்கப்பட்டபோது அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனுடைய ஆய்வெல்லைகளாகக் கீழ்க் கண்டவற்றை வரையறுத்திருந்தது.  i) சச்சார் குழு செயல்படுத்தப்பட்ட முறை, ii) பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டம், iii) புதிதாக உருவாக்கப்பட்ட ‘சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளுக்கான மத்திய அமைச்சகம்’ (Ministry of Minority Affairs) தனது திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த மதிப்பீடு, iv) இந்த அமைச்சகம் சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களின் பன்முக வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த மதிப்பீடு, v) முன்னதாக குண்டு தலைமையிலான வல்லுனர் குழு முன்வைத்த ‘பன்மை ஆணையத்தை’ செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குதல்- இவையே அமிதாப் குண்டு குழுவிற்கு அளிக்கப்பட்ட பணிகள்.. கொடுக்கப்பட்ட குறைவான காலத்திற்குள் இதிலுள்ள அனைத்தையும் முடிப்பதில் உள்ள சிரமங்களைத் தாண்டி இந்தப் பணியை ஓரளவு திருப்திகரமாகவே அமிதாப் குண்டு குழு நிறைவேற்றி இருந்தது. எனினும் இது முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே பேசி பிற சிறுபான்மையர்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாகச் சொல்வது உண்மைதானா? பார்ப்போம்.

சுருக்கமாகச் சொல்வதானால் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு நலத் திட்டங்கள் முதலியவற்றின் பலன்கள் உரிய அளவில் சிறுபான்மை மக்களுக்கும் போய்ச் சேர்ந்தனவா எனப் பார்ப்பதுதான் குண்டு குழுவுக்கு இடப்பட்ட பணி. எனவே பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்த பலன்களையும் சிறுபான்மை மக்களுக்குக் கிட்டியதையும் ஒப்பிட்டாக வேண்டும். இந்த ஒப்பீட்டைக் குண்டு குழு எப்படிச் செய்துள்ளது? இந்துக்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், பட்டியல் சாதி இந்துக்கள், பட்டியல் இன மக்கள். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பிற முஸ்லிம்கள், பிற மதங்கள்  சில அம்சங்களில் பிற மதங்கள் என்பதை கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பிறர் என விரித்தும் இந்த ஒப்பீடுகளை அது  செய்து.

முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளதுள்ளது. எனினும் முஸ்லிம்கள் என்பதற்கு ஒப்பீட்டளவில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுள்ளது உண்மைதான். மொத்த சிறுபான்மையினருள் முஸ்லிம்கள் 74 சதம். பிற சிறுபான்மையினரான கிறிஸ்தவர், சீக்கியர், பார்சிகள், சமணர், பவுத்தர் முதலானோர் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்பதாலும், இவர்களுள் முஸ்லிம்களும் பவுத்தர்களும் மட்டுமே மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர் என்பதாலும் இத்தகைய ஆய்வுகளில் எண்ணிக்கையில் மிக அதிகமாக உள்ள  முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்க இயலாததே. அதோடு இந்தக் குழுவின் முக்கிய பணி சச்சார் குழு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையை ஆய்வு செய்வது என்பதுதான். குழுவுக்கு அளிக்கப்பட்ட பெயரே அப்படியானதுதான். சச்சார் குழு என்பது முழுக்க முழுக்க முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு. அதை மதிப்பீடு செய்யும்போது பெரும்பான்மையுடன் ஒப்பிட்டு முஸ்லிம்களின் நிலை இப்போது எப்படி உள்ளது, இந்த இடைக்காலத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுதான் பேச முடியும். இந்நிலையில் குண்டு குழு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது எனக் குற்றஞ் சாட்டி இந்த அறிக்கையை முஸ்லிம் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க அரசு நிராகரிப்பதை என்ன சொல்வது.

சரி. இப்போது அமிதாப் குண்டு குழு அறிக்கையின் முக்கிய பார்வைகளையும் பரிந்துரைகளையும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்: 189 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கை மிக விரிவான தரவுகளுடன் தனது மத்திப்பீடுகளை முன்வைத்துள்ளது. முழு அறிக்கையையும் நீங்கள் இணையத் தளங்களில் காணலாம். சில மட்டும் இங்கே:

1.சச்சார் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தனி அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அரசு நிறுவனங்களின் ஊடாக தேசிய வளர்ச்சியில் முஸ்லிம் சிறுபான்மையினர் பங்கு பெறுவதில் உள்ள குறைகளைக் களைவதை நோக்கி இன்று ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. எனினும் சிறுபான்மை மக்களின் இந்தக் குறைகளைத் தீர்க்கும் அளவிற்கு அரசுத் தலையீடுகள் போதுமானதாக இல்லை. முதலில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் வறுமை நிலையை எடுத்துக் கொள்வோம். 2004-05 முதல் 2011-12 வரையிலான இந்த ஏழு நிதி ஆண்டுகளின் அனைத்து மக்களின் வறுமை நிலை குறித்த தேசியச் சராசரியைக் காட்டிலும் முஸ்லிம்களின் வறுமை நிலை அதிகமாக உள்ளது தொடர்கிறது. சச்சார் அறிக்கைக்குப் பின் முஸ்லிம்களின் வறுமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் தம் அடிப்படை நுகர்வுகளுக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர் (consumption expenditure) என்பது இத்தகைய ஒப்பீட்டிற்கான ஒரு மிக முக்கிய அடிப்படை. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் வறுமையில் உள்ளனர் என்பது பொருள். இந்த அம்சத்தில் முஸ்லிம்களைப் பல்வேறு மக்கள் பிரிவுகளுடனும் ஒப்பிடும்போது அவர்கள் ஆகக் கீழிருந்து மூன்றாவது நிலையில் உள்ளனர். பட்டியல் சாதியினர் மட்டுமே அவர்களுக்குச் சற்றுக் கீழே உள்ளனர்.

  1. இயல்பிலேயே முஸ்லிம் சமூகத்தில் நலவாழ்வுக் குறிகள் (health indices) பாராட்டத்தக்கவையாக இருக்கும். பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது சமமாக இருத்தல், குழந்தை இறப்பு வீதம் குறைவாக இருத்தல் முதலானவை முஸ்லிம்களின் சிறப்புகள் எனலாம். ஆனால் இந்தச் சிறப்புகள் எல்லாம் இன்று அழிந்து கொண்டுள்ளன. முஸ்லிம் பகுதிகளில் போதிய மருத்துவவசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்கிற சச்சார் குழு பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படாமையே இதற்குக் காரணம். நாடெங்கிலும் மருத்துவத்தில் புதிய வசதிகள் அதிகரித்த போதும் அவை முஸ்லிம்களுக்கு எட்டாதவையகவே உள்ளன.
  2. சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் கீழுள்ள அரசு நலத்திட்டங்கள் எல்லாம் போதிய நிதி நல்கை இன்றி வாடுகின்றன. 12ம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளுக்கான அமைச்சகம் 58,000 கோடி கோரியிருந்தது. ஆனால் இந்த அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 17,323 கோடி மட்டுமே. (இந்த அடிப்படையில் குண்டு குழு செய்துள்ள பரிந்துரை: ‘பிரதமரின் 15 அம்சத் திட்டம் என்பது மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டம் (MGREGA) மற்றும் ‘பிரதான் மந்திரி ஜன் தன் திட்டம்’ ஆகியவற்றிற்கும் விரிவாக்கப்பட வேண்டும்’.
  3. 37 அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் பணி நியமன விவரங்களை ஆய்வு செய்தபோது சிறுபான்மையோரின் பங்கேற்பு அவர்களின் வீதத்தைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது தெரிய வருகிறது. மக்கள்தொகையில் சிறுபான்மையினர் கிட்டத்தட்ட 25 சதம். ஆனால் 2006-07 முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில் ‘குரூப் ஏ’ அரசுப் பணிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினர் வெறும் 7.5 சதம்தான். ‘குரூப் பி’ யில் 9.1 சதம்; ‘குரூப் சி மற்றும் டி யில்’ 8.6 சதம் மட்டுமே.
  4. அரசு வழங்கும் ‘முன்னுரிமைத் துறைக் கடன்’ (Priority sector lending (PSL) வசதியைப் பெறுவதிலும் முஸ்லிம்களுக்குச் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்படும் இந்தக் கடன் வசதி 2013-14 ம் ஆண்டில் 16.09 சதம் அளவை எட்டியது எனச் சிறுபான்மைத் துறை அமைச்சகம் அறிவித்தது. அதாவது மொத்தமாக அளிக்கப்படும் கடனில் 16.09 சதம் சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட்டது. எனினும் மொத்தச் சிறுபான்மையருள் 76 சதம் உள்ள முஸ்லிம்களுக்கு இந்தத் தொகையில் எவ்வளவு கிட்டியது? வெறும் 44. 31 சதம் மட்டும்தான். அதாவது ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியை விடக் குறைவு. சீக்கியர்களுக்கு 24.58 சதமும், கிறிஸ்துவர்களுக்கு 21.87 சதமும், பவுத்தர்களுக்கு 2.06 சதமும், பார்சிகளுக்கு 2.23 சதமும், ஜெயின்களுக்கு 4.96 சதமும் கிட்டியது. சிறுபான்மையருள் மிகவும் கீழ் நிலையில் உள்ளோர் முஸ்லிம்களும் பவுத்தர்களும்தான். ஆனால் ஒப்பீட்டளவில் வசதியாக உள்ள பிற சிறுபான்மையினரே அதிக அளவில் இந்தக் கடன் வசதியை அனுபவித்துள்ளனர்.
  5. முஸ்லிம்கள் மத்தியில் கல்வி அறிவு இந்துக்களைக் காட்டிலும் குறைவு என்ற போதிலும் கல்வி அறிவு வீதத்தில் முஸ்லிம்கள் மத்தியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. எனினும் கல்வி பெறுவதில் முஸ்லிம்களின் வீதம் ஆகக் கீழாக உள்ள பழங்குடியயினரின் (ST) அளவே உள்ளது. சமீப காலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் பிள்ளைகளின் சேர்க்கை வீதம் அதிகரித்துள்ள போதிலும் படிப்பைப் பாதியில் நிறுத்துவோரின் அளவு முஸ்லிம்கள் மத்தியில் இன்னும் மிக மிக அதிகமாகவே உள்ளது. இதில் ஆண், பெண், கிராமம், நகரம் என்கிற வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இந்தக் குழந்தைகள் உயர் கல்வியை எட்டுவதே கிடையாது.

7.இத்தகைய நிலையிலிருந்து விடுதலை பெற குண்டு குழு முன்வைக்கும் முக்கிய பரிந்துரை இதுவரையிலான நமது அணுகல்முறையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய அளவில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பதுதான் நாம் இதுவரை பின்பற்றி வரும் அணுகல் முறை. இதுவும் அரசுப் பணிகளிலும் கல்வியிலும் மட்டுமே. அதுவும் கூட இது தனியார் துறைகளில் இல்லை. ‘காட்’ ஒப்பந்தத்திற்கு அடிமையாகிப்போன இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில், குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களில் ஒதுக்கீடு என்பது கனவே. தவிரவும் இட ஒதுக்கீடு என்பதன் மூலம் பணி நிலையங்களில் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கிறது. நகர்மயமாதல், அரசு கடன் திட்டங்களில் பயன்பெறுதல் முதலானவற்றில் இத்தகைய ஒதுக்கீடுகள் இல்லை. எனவே புதிய அணுகல்முறை என்பது அனைத்திலும் சமூகத்தின் பன்மைத் தன்மை வெளிப்படுவதாக அமைய வேண்டும்.

அந்த வகையில் குண்டு குழு முன்வைக்கும் பரிந்துரை ஒரு Anti Discrimination Law இயற்றுவது. அதாவது சாதி, மதம், பாலியல், மாற்றுத் திறன் (disability) ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுக்கிடையே வேறுபடுத்தல்கள் பாராட்டுவதைக் குற்றமாக்கும் சட்டம் ஒன்றை இயற்றுவது. இத்துடன் “பன்மைத்துவக் குறியீடு” (Diversity Index) சட்டம் ஒன்றை இயற்றி ஒவ்வொரு நிறுவனமும் தனது பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் குறித்த விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்போது அனைவருக்கும் உரிய பலன் கிடைக்கும். சமூகத்தின் பன்மை நிலை எங்கும் ஒளிரும்.

  1. 1990 கள் தொடங்கி மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்தல் என்பது வழமையாகிவிட்டது (urbanisation). புதிய தொழில் வளர்ச்சிகள், தொழிற்பேட்டைகள், சிறு நகர மையங்கள் உருவாவது என்பதெல்லாம் நகரங்கள்ளிலும் நகரங்களை ஒட்டியும்தான் நடக்கின்றன. இத்தகைய நகர உருவாக்கங்களில் முஸ்லிம்கள், தலித்கள் முதலானோருக்கு உரிய பங்கிருப்பதில்லை (exclusionary urbanisation). புதிய நகர மையங்களில் முஸ்லிம்கள் பெரிய அளவில் ஒதுக்கப்படுகின்றனர், எனவே அரசு தலையிட்டு இம்மாதிரி ஒதுக்கப்படும் பிரிவினரை அடையாளம் கண்டு அவர்கள் உரிய அளவில் பங்கு பெறுமாறு இலக்கு நோக்கிய ஆளெடுப்புகளை நிறைவேற்ற வேண்டும் (government-led planned and targeted recruitment drives in a time-bound manner). இது இட ஒதுக்கீட்டிலிருந்து சற்று வேறுபட்ட ஒன்று. எந்தப் பிரிவினர் குறைவாக உள்ளனரோ அந்தப் பிரிவினர் உரிய அளவில் இடம் பெறும் இலக்கு நோக்கிய ஆள் தேர்வு ‘targeted recruitment’ இது.
  2. ஒரே ஒரு அம்சத்தில் சிறுபான்மைத் துறை அமைச்சகத்தைப் பாராட்டியாக வேண்டும். சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாகக் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை இந்த இடைக்காலத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்விக்கான உதவி பெறுவோர் இலக்கு 2008-09 ல் வெறும் 3 இலட்சமாக இருந்தது 2002 -13 மற்றும் 2013-14 ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் 40 இலட்சமாக அதிகரித்தது. அதாவது 115- 221 சத அதிகரிப்பு. மேற்கல்விக்கான உதவி பெறுவோரின் எண்ணிக்கை 2008 -09 ல் 75,000 ஆக இருந்தது. அடுத்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு முறையும் 5 இலட்சமாக அது அதிகரித்தது. 121- 178 சத அதிகரிப்பு.

எனினும் இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமக்கு அளிக்கப்பட்ட இந்த உதவித் தொகையை முழுமையாகச் பயன்படுத்திக் கொள்ள இயலாத அளவிற்குச் சிறுபான்மையினர் பின்தங்கியுள்ளனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக 1400 கோடி ரூ ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் பள்ளிக் கல்விக்காக ஒடுக்கப்பட்ட உதவித்தொகையில் 94.81 சததை மட்டுமே சிறுபான்மை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.. மேற்கல்விக்கு ஒதுக்கப்பட்ட உதவித்தொகையில் 71.38 சதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. திறமை அடிப்படையிலான (merit-cum-means) உதவித்தொகையில் 71.23 சதமே பயன்படுத்தப்பட்டது.

மேற்குறித்த இந்த மதிப்பீடுகள் சச்சார் அறிக்கை வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டவை. இப்போது பத்தாண்டுகள் முடிந்துவிட்டன. இந்த இடைக் காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி போய் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இன்று அதிகாரத்தில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியாவது தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற கடப்பாட்டு உணர்வுடன் ஏதோ இந்தக் குழுக்களையாவது அமைத்தது. முஸ்லிம்களுக்கு உரிய நியாயங்களைச் செய்வதையே ஓட்டுவங்கி அரசியல் என எதிர்க்கும் பா.ஜ.க அரசு அதிகாரம் செலுத்தும் காலம் இது. இன்றைய சூழலில் உள்ள நிலையைப் பார்க்கலாம்.

III

பத்தாண்டுகளுக்குப் பின் இன்றைய நிலை 

பல்வேறு அரசுத் துறைகளிலும் உயர் பதவிகள் முதல் எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்களின் இருப்பு என்பது அவர்களின் மக்கள்தொகை வீதத்தைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக உள்ளதை சச்சார் அறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. முன் அத்தியாயத்தில் தொகுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சச்சார் அறிக்கை வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் உள்ள நிலை குறித்து அமிதாப் குண்டு குழு அறிக்கை தொகுத்தவை.

இப்போது சச்சார் குழுவுக்குப் பின் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்றைய நிலையைப் பார்ப்போம். தற்போது கிடைக்கும் தரவுகளோடு ஒப்பிடுகையில் எந்தப் பெரிய மாற்றமும் இதில் ஏற்படவில்லை. பல அம்சங்களில் நிலைமை இப்போது இன்னும் மோசமாகி உள்ளது என்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக சச்சார் அறிக்கையின்படி 2001ல் இருந்த மொத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,209. இதில் முஸ்லிம் அதிகாரிகள் வெறும் 128 தான். அதாவது 4 சதம். மக்கள் தொகையில் 14.2 சதமாக உள்ள முஸ்லிம்கள் ஐ.பி.எஸ் அதிகாரத்தில் வெறும் 4 சதமாகவே இருந்தனர். சரி, இன்று நிலைமை என்ன? ஜனவரி 2016ல் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 3754 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ளது. அதாவது வெறும் 3.19 சதம்தான்.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு வகைகளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநில அளவில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இறுதியில் ஐ.பி.எஸ் அதிகாரிகளாவோர் ஒரு வகை. இன்னொரு வகை UPSC போட்டித் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்படுவோர். 2006 ல் இப்படி மாநில அளவில் பதவி உயர்வு மூலமாக ஐ.பி.எஸ் ஆனோர்  912 பேர். இதில் 65 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் (7 சதம்). 2016 ல் இப்படிப் பதவி உயர்வு பெற்றோர் 1150 பேர்.. இதில் முஸ்லிம்கள் 44 பேர்தான் (3.82 சதம்). அதாவது மாநிலங்களிலிருந்து பதவி உயர்வோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு குறைந்து கொண்டே போகிறது.

எனினும் நேரடித் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெறும் முஸ்லிம்களின் பங்கு சற்று அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வில் பங்குபெற்று  ஐ.பி.எஸ் அதிகாரிகளானோர் 2006 ல் 2,297 பேர் (2.7%). 2016 ல் இப்படித் தேர்ந்தெடுக்க்ப்பட்டோர் 2,604. இதில் முஸ்லிம்கள்  76 பேர் (2.91%).

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தேர்வுகளை எடுத்துக் கொண்டால் 2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் வீதம் 3 சதம். இது 2016 ல் 3.32 சதமாகச் சிறிது அதிகரித்திருந்தது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இரண்டிலுமே முஸ்லிகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் (14.2 சதம்) தேர்ந்தெடுக்கப் படுபவர்களின் எண்ணிக்கை (4 சதத்திற்கும் குறைவு) மிக மிகக் குறைவு என்பது மட்டுமல்ல. அதில் எந்தப் பெரிய மாற்ரமும் இல்லை,. எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதைப் போலவே எவ்வளவு பேர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதும் முக்கியம் எனச் சொல்லும் டாக்டர் அமிதாப் குண்டு, “மொத்த விண்ணப்பதார்களில் 8 சதம்தான் முஸ்லிம்கள்” என்கிறார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 2016 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 172. இதில் உ.பி ஐச் சேர்ந்தோர் 48. பீஹார் மாநிலத்தவர் 34. ஜம்மு காஷ்மீர் 22. தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்டபிற 26 மாநிலங்களையும் சேர்ந்தோர் 58 பேர்கள் தான்.

ஒட்டு மொத்தமாகக்காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படையாகக் குறைந்து வருகிறது. 2006ம் ஆண்டில் மொத்த காவல்துறை பணியாளர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் வீதம் 7.63 சதம். இது 2013ல் 6.27 சதமாகக் குறைந்தது. 2014ல் பா.ஜ.க ஆட்சி வந்தபின் காவல்துறை போன்ற sensitive department களில் இது போன்ற புள்ளி விவரங்களைத் தர இயலாது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம்களின் வீதம்

 

2006 -07 ————–6.03%

2007 -08 ————–8.23%

2008 -09 ————–9.90%

2009 -10 ————–7.28%

2010 -11 ————–10.18%

2011 -12 —————6.24%

2014 -14 —————8.67%

 

 

காவல்துறையில் முஸ்லிம்களின் பங்கு

 

ஆண்டு              முஸ்லிம்கள்              மொத்தம்

2006                 1,06,634 (7.63%)             13,18,295

2013                 1,08,602 (6.27%)             17,31,537

 

மாதாந்திரத் தனிநபர் செலவு (ரூபாய்களில்)

ஆண்டு       முஸ்லிம்கள்          மொத்தம்

2004 -05            635                  712

2009 -10            980                  1128

 

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சர்வ சிக்‌ஷா அபியான் திட்ட்டத்தின் கீழ் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கும் திட்டத்தின் கீழ் இலக்கை எட்டிய விவரம்

2006 -07 ————92.45%

2007 -08 ————51.72%

2007 -09 ————97.40%

2009 -10 ————92.91%

2010 -11 ————99.93%

2011 -12 ————85.105

 

பட்டதாரிகளின் எண்ணிக்கை

ஆண்டு       முஸ்லிம்கள்       மொத்தம்

2001          23.9 லட்சம்          3.76 கோடி

2011          47.52 லட்சம்         6.2 கோடி

 

பள்ளி செல்லாக் குழந்தைகள் (6 முதல் 14 வயது)

ஆண்டு        முஸ்லிம்கள்        மொத்தம்

2004 -05                                      15.3%                                           10.2%

2011 -12             8.7%                 4.4%

 

எழுத்தறிவு பெற்றோர் வீதம்

ஆண்டு         முஸ்லிம்கள்        மொத்தம்

2001                59.1%               64.8%

2011                68.5%               73.0%

IV

வல்லுனர்கள் சிலரின் முக்கிய பார்வைகள்.

2013 ஜனவரி 14 அன்று டெல்லியில் “சச்சார் அறிக்கைக்கு ஆறாண்டுகளுக்குப் பின் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் துறையின் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், சச்சார் அறிக்கையை எழுதியவரும் (member secretary) ‘அமெரிக்க இந்திய அரசியல் நிறுவனத்தின்’ இயக்குனருமான டாக்டர் அபு சாலே ஷரீஃப், சச்சார் குழு உறுப்பினர்களில்  ஒருவரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தகைசால் பேராசிரியருமான டீ..கே. ஊமன் முதலானோர் அதில் கலந்து கொண்டனர்.  அங்கு முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் நம் கவனத்துக்குரியவை.

சல்மான் குர்ஷித்: அமைச்சராக இருந்த குர்ஷித் அனுபவபூர்வமாகச் சிலவற்றைச் சொன்னார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்த அணுகல்முறையில் நிறுவனங்கள் மத்தியில்  ஒரு கருத்துநிலைக் குழப்பம் (conceptual confusion evident at multiple levels) நிலவுகிறது எனவும், அதுவே பல நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தடையாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். .துறைசால் வல்லுனர்கள், சமூக அறிவியலாளர்கள், அரசில் கொளகை உருவாக்குவோர், அதைச் செயல்படுத்துவோர், நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கிடையே இப்பிரச்சினையில் கருத்தொருமிப்பு இல்லை. உச்சநீதி மன்றம் விதித்த ஒரு இடைக்காலத் தடை ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு 4 சத ஒதுக்கீடு அளிக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குள் முஸ்லிம்களுக்கு ஒரு உள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முயன்றபோது உச்ச நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது எனத் தான் ஒரு முறை கூறியபோது தேர்தல் ஆணையத்துடன் தனக்குப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் குர்ஷித் குறிப்பிட்டார். மதரசாக்கள் தொடர்பான பிரச்சினைகள் கல்வித்துறையின் கீழும், ஹஜ் குழு தொடர்பானவை அயலுறவு அமைச்சகத்தின் கீழும் வருவது  என்பதுபோல முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பல அமைச்சரகங்களின் கீழ் அமைவது என்பதெல்லாமும் கூடப் பல நேரங்களில் நல்ல திட்டங்களைச் செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது என்றார் குர்ஷித்.

டாக்டர் அபு சாலே ஷரீஃப்: முஸ்லிம்களின் கல்வி மட்டத்தில் சச்சார் அறிக்கை வந்த ஆறு ஆண்டுகளில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆரம்பம் மற்றும் உயர் கல்வி என எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ள நிலை தொடர்கிறது. கொள்கை அறிவிப்புகளும் முஸ்லிம்களுக்கான திட்ட அறிவிப்புகளும் மட்டும் போதாது. “நிறுவனச் சீர்திருத்தங்கள்” (institutional reforms) தேவை என்றார் ஷரீஃப்.

‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில்” முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டிய அவர் ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தும் கூட வளர்ச்சிக் கடன்கள் முஸ்லிம்களைச் சென்றடைவதில்லை என்பதையும் குறிப்பிட்டார். மார்ச் 2011 வரைக்கும் ‘சிறுபான்மையோர் செறிந்துள்ள மாவட்டங்களுக்கான’ (Minority Concentration Districts) வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 37,800 கோடிதான். ஆனால் அதுவும் கூட முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. 856 கோடி ரூபாய்கள் மட்டுமே மாவட்டங்களைச் சென்றடைந்தது. அதிலும் மக்களைச் சென்றடைந்தது இன்னும் குறைவு. 11வது திட்ட கால இறுதிவரை ஒதுக்கப்பட்ட நிதியில் 3.46 சதம்தான் உண்மையான பயனாளிகளுக்கும் தேவையான பகுதிகளுக்கும் சென்றடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரா டி.கே ஊமன் மற்றும்  ஸகாத் ஃபௌன்டேஷன் தலைவர் சய்யத் ஸஃபார் முகமது: இவர்கள் இருவரும் சிறுபான்மையோர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை பட்டியல் சாதியினருக்கு ஒதுக்குவதால் சிறுபான்மையோர் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வாய்ப்பு தடுக்கப்படுவதன் மீது கவனத்தை ஈர்த்தனர். சிறுபான்மையோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி ஒதுக்கீடு இல்லாத நிலையில், இயற்கையாக அவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையும் பட்டியல் இன ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது .தவிர்க்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

சிறுபான்மையோர் அதிக அளவில் வசிக்கக்  கூடிய பகுதிகளில் தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை வகுக்கும்போது அவற்றைச் சிதைக்காமல், சிறுபான்மையினர் வெல்லக் கூடிய அளவிற்கு தொகுதிகள் செதுக்கி உருவாக்கப்பட வேண்டும் என சச்சார் அறிக்கை கூறியுள்ளது இங்கே நினைவுகூரத் தக்கது. இன்னொன்றையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு சிறுபான்மை மக்களுக்கு இன்று இல்லை என்ற போதிலும் நகராட்சி, மாநகராட்சி முதலான உள்ளாட்சி மட்டங்களில் சிறுபான்மையினருக்கு தொகுதிகள் ஒதுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. தற்போது அது சில மாநிலங்களில் நடைமுறையிலும் உள்ளது. அது குறித்தும் சச்சார் அறிக்கை பதிவு செய்துள்ளதை நான் என் நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன். எனினும் அது ஒரு கோரிக்கையாகக் கூட இங்கு உருப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது..

முடிவாக

அடையாளம், பாதுகாப்பு, சமத்துவம் என்கிற மூன்று அடிப்படை நோக்கிலிருந்து தம்குழு இந்தப் பரிந்துரைகளைச் செய்துள்ளது என நீதியரசர் சச்சார் குறிப்பிடுவார். முஸ்லிம் என்கிற அடையாளமே அவர்களது பாதுகாப்பின்மைக்கும், பிற சமூகங்களுடன் சமமாக வாழ்வதற்கும் அவர்களை இயலாதவர்களாக ஆக்கக்கூடிய நிலை இன்று உள்ளது. இந்தச் சூழலில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் சச்சார் அறிக்கை என்பது இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். இந்தக் குழுவை நியமித்து அதன் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துகிற முயற்சிகளில் ஐக்கிய முன்னணி அரசு குறிப்பிடத் தக்க பங்காற்றிய போதிலும் முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க வின் ‘முஸ்லிம் வாக்குவங்கி அரசியல்’ மற்றும் ‘போலி மதச்சார்பின்மை”  (muslin appeasement / pseudo secularism) முதலிய குற்றசாட்டுகளை எதிர்த்து நின்று அவற்றை நிறைவேற்றும் அரசியல் விறுப்புறுதி (political will) அதற்கு இல்லாததால் அந்தத் திசையில் அதனால் நகர இயலவில்லை.

இப்போதோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர்களே ஆட்சியில் உள்ளனர். இது முஸ்லிம்கள் மத்தியில் இருந்த பாதுகாப்பின்மை உணர்வை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை எல்லாம் நிறைவேற்றுவது குறித்த கோரிக்கைகள் வைப்பதிலேயே ஒரு அவநம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது,

சச்சார் பரிந்துரைகள் மற்றும் அதனடிப்படையிலான மாதவ மேனன் மற்றும் அமிதாப் குண்டு குழு பரிந்துரைகளை மட்டுமல்லாமல் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் நல்லிருப்பையும் உறுதி செய்வதற்கான இதர சில முக்கிய பரிந்துரைகள் மற்றும் சட்ட உருவாக்கங்களையும் கூட அவர்கள் தம் நினைவிலிருந்தே துடைத்தெறியக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான முக்கிய கோரிக்கைகள் இரண்டை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘மதக் கலவரத் தடுப்புச் சட்டம்’ ஒன்று குறித்த விவாதம் இங்கு பல ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பாக இரண்டு மூன்று முறை நகல் சட்டங்களும் அதில் திருத்தங்களும் செய்யப்பட்டன.. அதேபோல முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்துச் சிறுபான்மையினர் நலனையும் கண்க்கில் கொண்டு உருவாக்கப்பட்ட ரெங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை மிக மிக முக்கியமான ஒன்று. இட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு முதலான பல அம்சங்களில் தற்போது சிறுபான்மை மக்கள் ஒதுக்கப்படும் நிலைக்கு மாற்றாக இப்போதுள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் –  என்னென்ன சட்டங்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும், இப்போதுள்ள சட்ட வாசகங்களில் எந்தச் சொல்லை நீக்கி எந்தச் சொல்லைப் பதிலீடு செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு குறிப்பான பரிந்துரைகளை அந்த ஆணையம் செய்திருந்தது. அந்த அறிக்கையை அன்றைய ஐ.மு.கூ அரசு வெளியிடவே தயங்கியது. அதையும் மீறி அது வெளியே கசிந்தவுடன் அதை நிறைவேற்ற மாட்டோம் எனச் சொல்லிக்கொண்டே அதை வெளியிட்டது. இன்று அதைப் பற்றி நாமும் கூடச் சிந்திப்பதில்லை. மறந்தும் போனோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் இன்று சச்சார் அறிக்கையின் பத்தாண்டு ஆயுள் குறித்து பேசத் தொடங்கியுள்ளோம். இங்கு எதிர்காலமே இல்லை என்கிற உணர்வில் இன்று முஸ்லிம் இளைஞர்கள் முழுக்க முழுக்க வளைகுடா நாடுகள், மலேசியா சிங்கப்பூர் எனத் தம் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கெல்லாமும் கூட இப்போது ஆட் குறைப்புகள் தொடங்கி விட்ட நிலையில் சிறுபான்மை மக்கள் இங்கேயே தம் உரிமைகளை வற்புறுத்தி இயங்க இப்போது காலம் கனிந்து விட்டது.

சமவாய்ப்பு ஆணையம், பன்மைத்துவக் குறியீட்டெண், மதக் கலவரத் தடுப்புச் சட்டம் முதலானவை இன்று நமக்கு மிகவும் அத்தியாவசியமான உடனடித் தேவைகள், தற்போது இட ஒதுக்கீடு முதலானவற்றில் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுதலை முடிவுக்குக் கொண்டு வரும் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையும் அத்தகையதே.

இவை குறித்துச் சிந்திப்போம். செயல்படுவோம்.

இணைப்பு

ஆர்.எஸ்.எஸ் சின் பார்வையில் சச்சார் அறிக்கை

(சச்சார் அறிக்கையை மறுப்பவர்கள் என்ன சொல்கின்றனர், அவற்றில் ஏதும் உண்மையோ நியாயமோ உண்டா என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்)

இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை குறித்த சச்சார் அறிக்கை வெளிவந்து 10 ஆண்டுகள் முடிந்ததை ஒட்டி இதழ்களிலும் இணையத் தளங்களிலும் ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டுள்ளன. கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளும் சச்சார் அறிக்கை முன்வைத்த தரவுகளைத்  தற்போதைய தரவுகளுடன் ஒப்பிட்டு நிலைமை மோசமாகியுள்ளதை நிறுவுகின்றன.

இந்நிலையில் ஒரே ஒரு கட்டுரை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. விவேக் வி. குமாஸ்தா என்பவர் எழுதியுள்ளது அது. இவர் அமெரிகாவில் வசிக்கும் இந்தியர். கல்வித்துறை சார்ந்தவர் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துக் கருத்தியலுடன் எல்லாப் பிரச்சினைகளிலும் உடனுக்குடன் “அறிவுசார்ந்த (scholarly)” கட்டுரைகளை ஆங்கில இதழ்கள் மற்றும் தளங்களில் எழுதுகிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக நின்ற அறிஞர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து எழுத்தாளர்கள் பரிசுகளைத் துறந்தது, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அம்பேத்கரை சுவீகரிப்பதைக் மறுத்து ராமச்சந்திர குகா எழுதியது, அரசியல் விமர்சனங்களை முன்வைப்போரை தேசத்துரோகம் எனக் குற்றம்சாட்டுவதை விமர்சிப்பது – முதலானவற்றைக் கண்டித்து இவர் எழுதியுள்ள கட்டுரைகளை புரட்டிப் பார்த்தேன். என்ன மாதிரியான ஆள் என்பது எளிதில் புரிந்தது.

இந்த ஆர்.எஸ்.எஸ் கொள்கைப் பிரச்சார வரிசையில் அவர் சச்சார் குழு அறிக்கையின் பத்தாண்டு நிறைவு குறித்து எழுதி ஹஃப்ஃபிங்ஸ்டன் போஸ்ட் தளத்தில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை பற்றிச் சில.. 10 ஆண்டுகளுக்கு முன் சச்சார் அறிக்கை வெளிவந்தபோது தான் எழுதிய கட்டுரையின் சுருக்கம் என அவர் இப்போது இந்தப் பதிவைச் செய்துள்ளார். அதில் அவர் ஒட்டு மொத்தமாக சச்சார் குழு அறிக்கையையே அபத்தம் என்கிறார். புள்ளிவிவரங்கள் என்பன வெறும் அற்ப எண்களே. அவற்றை வைத்துக்கொண்டு யாரும் எதையும் செய்யலாம். எப்படியும் அவற்றுக்கு விளக்கம் கொடுக்கலாம். அப்படியான ஒரு பக்கச்சார்பான போலி ஆய்வுதான் சாச்சார் அறிக்கை எனச் சொல்லி அந்த ஆள் சுட்டிக்காட்டும் சில மட்டும் இங்கே.

அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் குறைவாக இருப்பதை சச்சார் அறிக்கை மிக விரிவான தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது. அதை இந்த ஆர்.எஸ்.எஸ் குமாஸ்தா எப்படி எதிர்கொள்கிறார் எனப் பார்ப்போம். இதை மறுப்பதற்கு அவர் என்ன செய்ய வேண்டும். அந்தப் புள்ளிவிவரம் தவறு, முஸ்லிம்கள் அவர்களுக்குரிய வீதத்தில் அரசுப்பணிகளில் உள்ளார்கள் என நிறுவ வேண்டும். அவர் அந்த முயற்சியில் இறங்கவில்லை. மாறாக அறிக்கையில் உள்ள வேறொரு புள்ளி விவரத்தைச் சுட்டுகிறார். 20 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் பட்டதாரிகள் வெறும் 3.2 சதம்தான். ஆனால் தேசியச் சராசரியோ 6.7 சதம். ஆக சராசரியில் பாதிகூட முஸ்லிம்கள் இல்லை என்பதை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி பற்றிப் பேசும்போது சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. இப்படிப் போதிய அளவில் முஸ்லிம்கள் படிக்காமல் இருக்கும்போது அவர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் என்பது குமாஸ்தாவின் கேள்வி. சச்சாரின் தரவுகளே கோல்மால் பண்ணப்பட்டது எனச் சொல்லும் இவர் இப்போது சச்சார் சுட்டிக் காட்டும் இன்னொரு தரவைத் தன் வசதிக்காககப் பயன்படுத்திக் கொள்வது இருக்கட்டும். முஸ்லிம்கள் மத்தியில் கல்வி குறைவாக இருப்பது என்பதும் அவர்களின் சமூக நிலை பொது அளவைக்காட்டிலும் தாழ்ந்துள்ளது என்பதற்கு இன்னொரு அளவுகோல். 3.2 சதம் பட்டதாரிகள் என்பது ஒப்பீட்டளவில் குறைவு என்பது ஒரு பக்கம். ஆனால் 15 கோடி முஸ்லிம்களில் 3.2 சதம் என்பது கிட்டத்தட்ட ஒரு 5 மில்லியன் பேர். முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகை வீதத்திற்குச் சரியாக வேலை கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால் இந்த 5 மில்லியன் பட்டதாரிகளில் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் கிடைத்திருக்க மாட்டார்களா/

ஒரு ஒப்பீட்டுக்காகத் தலித்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மத்தியிலும் இந்த வீதம் குறைவுதான். அதை ஈடுகட்டத்தான் இட ஒதுக்கீடு, வேலையில் மட்டுமல்ல கல்வியிலும் கொடுக்கப்பட்டு ஈடு செய்யப்படுகிறது.

வேலை வாய்ப்பு குறைந்துள்ளதைச் சரி செய்வதற்கு, இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகியுள்ள பிற பிரிவினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு போல முஸ்லிம்களுக்கும் உரிய அளவில் முன்னுரிமை அளிப்பது என்பதோடு இப்படி அவர்களை வேலைக்குத் தகுதிப்படுத்துவது என்பதற்கு முதற்படியாக அவர்கள் மத்தியில் கல்வி வீதத்தி அதிகரிக்க வேண்டி உள்ளது.. அதில் அரசுக்கும் கடமை உண்டு.

சச்சார் அறிக்கை பற்றி ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (அது வெளியிடப்பட்டபோதே அது குறித்து என் நூலும் வெளிவந்தது). அப்போது முஸ்லிம்களின் தரப்பில் அந்த அறிக்கை வரவேற்கப்பட்டது மட்டுமல்ல சில விமர்சனகளும் வைக்கப்பட்டன. அவற்றில் மூன்று விமர்சனங்கள் இங்கே குறிப்பிடத் தக்கன. முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு நேர்ந்துள்ள ஆபத்து குறித்து அது பேசவில்லை என்பது ஒன்று. மற்றது, அதில் முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது. மூன்றாவது, அது முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எதையும் தெளிவாகச் சொல்லவில்லை என்பது.  எனவே ஏதோ இட ஒதுக்கீட்டிற்காக சச்சார் புள்ளிவிவரங்களில் கோல்மால் பண்ணிவிட்டதாகச் சொல்வது அபத்தம். அடுத்து சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் அணுகுகிறது. அரசாங்கத்தை மட்டுமே அது குற்றம் சாட்டுவதில்லை. முஸ்லிம்களின் பொறுப்பையும் அது ஆங்காங்கு வலியுறுத்தத் தவறுவதில்லை. மதரசா கல்வியை எப்படி நவீனப்படுத்துவது, அதை எப்படிப் பொதுக்கல்வியுடன் இணைப்பது முதலான ஆலோசனைகளையும் அது சொல்கிறது. தவிரவும் முஸ்லிம் மொஹல்லாக்களின் (குடியிருப்புகளின்) அருகாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அமைக்கப்படாததையும், அமைக்க வேண்டிய அவசியத்தையும் அறிக்கை பிறிதோரிடத்தில் சுட்டிக்காட்டும்.

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதுதான் அவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்கி இருப்பதற்கான காரணம் எனச் சொல்லும் குமஸ்தா, கல்வியில் இப்படிப் பின்தங்கி இருப்பதற்கும் அவர்களே காரணம் என மீண்டும் பழியை அவர்கள் மீதே போடுகிறார். முஸ்லிம் பிள்ளைகள் மதரசா மற்றும் மக்தப் பள்ளிகள் படிக்கின்றனர். தவிரவும் 30 முதல் 50 சதம் பேர் உருது மொழிப் பள்ளிகளில் படிக்கின்றனர். இவை CBSE பள்ளிகளுக்குச் சமமாக இருப்பதில்லை, பின் எப்படி அவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக வர முடியும் என்பது அவரது வாதம். சந்தடி சாக்கில் முஸ்லிம்கள் படிக்கும் இந்தப் பள்ளிகள் அகன்ற பார்வையை உருவாக்காதவை; குறுகிய பார்வை உடையவை என்கிற கருத்தையும் வைக்கிறார். மறுபடியும் மறுபடியும் முஸ்லிம்களே குற்றவாளி ஆக்கப்படுகின்றனர். முஸ்லிம் குழந்தைகளில் மதரசா மற்றும் மக்தப்களில் பயில்வோர் மொத்தத்தில் வெறும் எட்டு சதம் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது..

தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பற்றிச் சொல்லவரும்போது அவற்றில் முஸ்லிம்களுக்கு குறைந்த ஊதியமுள்ள தாழ்ந்த பணிகளே கொடுக்கப்படுவதை சச்சார் சுட்டிக்காட்டி இருப்பார். இது ஊரறிந்த உண்மை. தாழ்ந்த பணிகளுக்குத் குறைந்த ஊதியம்தானே கொடுக்க முடியும் எனச் சாமர்த்தியம் பேசுகிறார் குமாஸ்தா. ஒரே பணியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதுபோல சச்சார் பிரச்சினையைத் திரிப்பதாக இதை அவர் முன்வைக்கிறார். என்னுடைய நூல் ஒன்றில் ஆம்பூர் – வாணியம்பாடி பகுதிகளில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பற்றிய ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி இருப்பேன். என்னுடன் பணி புரிந்த ஒரு பேராசிரியர் தன் ஆய்வுப் பட்டத்திற்காகச் சேகரித்த தரவுகளிலிருந்து தெரிய வருவது இதுதான், தோல்பதனிடும் தொழிலில் ஆகக் கீழான  அசுத்தமான பணிகளில்தான் முஸ்லிம்கள் உள்ளனர். கணக்கெழுதுதல், நிர்வாகம் செய்தல் முதலான பணிகளில் எல்லாம் பிற மதத்தைச் சேர்ந்த உயர் சாதியினர்தான் உள்ளனர். இதுதான் எதார்த்தம்.

முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வறுமை பற்றிப் பேச வரும்போதும் இந்த ஆர்.எஸ்.எஸ் குமாஸ்தா இதே போன்ற தகிடுதத்தங்களைத்தான் செய்கிறார். இந்த அம்சத்தில் மட்டும் அவர் தேசிய அளவிலான புள்ளிவிவரங்களைக் கைவிட்டு தமிழ்நாடு, கர்நாடகா போன்ற பகுதிகளை எடுத்துக்கொண்டு முஸ்லிம்கள் பிற உயர் சாதியினருக்கு வசதியில் தாழ்ந்தவர்கள் இல்லை என “நிறுவுகிறார்”. நான் என் எழுத்துக்களில் தொடர்ந்து ஒன்றைக் குறிப்பிட்டு வருகிறேன். தென் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் நிலைமை பரவாயில்லை என. அதுவும் ஒப்பீட்டளவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உத்தரப்பிரதேசம், பிஹார், மே.வங்கம் முதலிய பகுதிகளில் நிலைமை படு மோசம். ஆகக் கீழான வருமானங்கள் உள்ள பணிகளில்தான் முஸ்லிம்கள் உள்ளனர். ஊதியத்தில் கீழான பணிகள் மட்டுமல்ல, கடின உழைப்பைக் கோரும் பணிகளிலும் அவர்கள்தான் உள்ளனர்..

தமிழகத்தில் மட்டும் என்ன? இங்கே உள்ள பெருந்தொழில்களில் எல்லாம் பார்ப்பனர், நாயுடுகள், மார்வாரிகள் ஆகியோர்தான் உள்ளனர். உயர் கல்வித் தொழிலிலும் கூட ஒப்பீடளவில் முஸ்லிம் அல்லாதவர்களே உள்ளனர். நெல்பேட்டை, மேலப்பாளையம் முதலான பகுதிகளுக்குப் போய்ப் பார்த்தால் முஸ்லிம்களின் வறுமையைப் புரிந்துகொள்ள இயலும்.

 

மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.