கொடிது கொடிது குண்டர் சட்டம்

தமிழக அரசு “குண்டர் சட்டத்தில்” இப்போது (2014 ஆகஸ்ட்) கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மிகவும் மோசமானவை. தடுப்புக் காவல் சட்டங்கள் எல்லாமே அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்வதுதான். ஆனாலும் அரசுகள் எப்போதுமே தன் மக்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகளை வழங்கியது இல்லை. பண்டைய கிரேக்கக் குடியரசிலேயே ‘நெருக்கடிநிலையை’ அறிவிக்கும் உரிமையை (Iuitium) அரசு தன்கையில் வைத்திருந்தது என்கிறார் வாழும் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் Georgio Agamban. ‘அரசின் காரணங்களுக்காக’ (raison de etat) அடிப்படை உரிமைகளை  ரத்து செய்தால் பின் அதைக் கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை. 1947 தொடங்கி இந்திய அரசு எந்நாளும் இப்படியான சட்டங்கள் இல்லாமல் வாழ்ந்தது இல்லை.

பிரிட்டிஷ் காலத்து தேசத்துரோகச் சட்டம் முதல், Defence of India Rules, MISA, TADA, POTA, NSA, ESMA, AFPSA, UAPA, மாநிலங்கள் தோறும் இயற்றப்பட்டுள்ள ஏகப்பட்ட COCA சட்டங்கள்… இப்படி எத்தனை எத்தனை. நீதிமன்றங்கள் எந்தக் காலத்திலும் இச்சட்டங்களை ‘அரசியல் சட்ட ஆளுகைக்கு எதிரானவை’ எனச் சொல்லி ரத்து செய்ததில்லை. வழமையான சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் சூழல் உண்மையிலேயே அரசுக்கு இல்லையா என்கிற கேள்வியை அவை எழுப்பியதில்லை. மாறாக இப்படியான சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா எனக் கேள்வியைத் திருப்பிப்போட்டு இச்சட்டங்களுக்கு அவை ஏற்பு வழங்கிவிடுகின்றன.  தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவர இயலாது.

குண்டர் சட்டம் போன்றவைகளைப் பயன்படுத்த அரசு சொல்லும் காரணத்தை மக்களின் பொதுப்புத்தியும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. தொடர்ந்து குற்றங்களை இழைப்பவர்கள் (habitual offenders) மீது சாதாரணச் சட்டங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகின்றனர் என்பதுதான் அரசின்வாதம். இப்போது 1600 க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் தமிழகச் சிறைகளில் உள்ளனர். (2009ல் இது 1690 ஆகவும், 2010ல் 1781 ஆகவும், 2011ல் 1364 ஆகவும் இருந்தது. இவர்கள் எல்லோரும் habitual offenders அல்ல .ஒரு சிலர் அப்படி இருக்கலாம். பலரை முதன் முறையாகக் கைது செய்து விட்டுப் பின் அவர்கள் சிறையில் உள்ளபோதே வேறு சில வழக்குகளை அவர்கள் மீது திணித்துப் பின் குண்டர் சட்டத்தையும் பிரயோகிக்கின்றனர். நான் அப்படிச் சிலருக்காக board முன்சென்றுவாதிட்டுள்ளேன். குண்டர் சட்டத்தை ஒருவர் மீது பிரயோகிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ்-கள் யாரும் தங்கள் மூளையையோ, மனத்தையோ பயன்படுத்தி இந்த ஆணையை இடுவதில்லை. காவல்துறை நீட்டுகிறதாளில் கையொப்பம் இடுவார்கள். அதற்குப் பின் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் 12 நாட்களுக்குள். இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

இதெல்லாம் எத்தனை குரூர நகைச்சுவை பாருங்கள். அரசுதான் இப்படி அநியாயமாக அவர்களைக் கைது செய்கிறது. பிறகு அரசிடமே விண்ணப்பிப்பதால் என்ன பயன். யாருக்கும் அதன் மூலம் விடிவு கிடைதந்தாக வரலாறு இல்லை. பல நேரங்களில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கிடைக்கவில்லை எனக் கூறி உறவினர்களின் மனுக்களைத் தள்ளிவிடுவதும் உண்டு. பிறகு ஏழு வாரத்திற்குள் (50 நாட்கள்) இதற்கான ‘போர்ட்’முன் அவரைக் கொண்டுவந்துநிறுத்துவார்கள். அந்த போர்டில் ஓய்வுபெற்ற ஆம் “ஓய்வுபெற்ற”  ஒரு நீதிபதி உட்பட ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி என மூவர் இருப்பர். ஒது ஒரு நிர்வாக விசாரணைக் குழுதான். அவர்கள் முன்பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது நெருங்கிய உறவினர், நண்பர்யாராவது போய்ப்பேசலாம்.

அவர்கள் வழக்குரைஞர்களாக இருக்கலாகாது என்பது நிபந்தனை.ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு இந்தப் பதவியே பெரியவரப்பிரசாதம். பிறகென்ன…. அந்த அறையில் அந்த மூன்று நீதிபதிகளுக்கும்முன் இரண்டுவட்டங்கள் போட்டிருப்பார்கள். இடப்புர வட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர். வலப்புற வட்டத்தில் அவருக்காகப் போகிறவர்கள் நின்றுகொண்டு தங்கள் பக்க நியாயங்களைச் சொல்லலாம். நான் அப்படிப் போய் பேசிய சிலரில் கூடங்குளத்திலிருந்து வந்த பையன் ஒருவன். பெயர் சிந்துபாரத். எஸ்.பி. உதயகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த பையனின் கேஸ்கட்டுகளை எல்லாம் படித்துவிட்டு ஒரு மனுவையும் தயாரித்துக் கொண்டு போயிருந்தேன். அந்த இளைஞன் இதற்குமுன் எந்த வழக்கிலும் தொடர்பில்லாதவன். போராட்டத்திலும் அவனுக்குப் பங்கில்லை. ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ எழுதுவது அவன் தொழில். போராட்டக்காரர்களுக்கு ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ தயாரித்துக் கொடுக்கக்கூடாது எனப் போலீஸ் எச்சரித்துள்ளது. அவன் என்ன செய்வான். அந்த ஊரில் கடை வைத்திருப்பவன். அந்த மக்கள் போராடுகின்றனர். எப்படி அவனால் மறுக்க முடியும்? அவனுக்குத் திருமணமான பன்னிரண்டாம் நாள் அவனைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் போடுகிறது நமது இரக்கமுள்ள காவல்துறை. அது காதல் திருமணம் வேறு. பெற்றோர்விருப்பம் இல்லாமல் செய்யப்பட்ட கலப்புத் திருமணம். அவன் மீது இதற்கு முன் எந்த வழக்கும் கிடையாது என்றேன். ஆனால் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னதாக அவன் சிறையில் இருக்கும்போதே வேண்டும் என்றே வேறு சில வழக்குகளையும் அவன் மீது போட்டார்கள்.

கூடங்குளத்தில் அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இன்னொருவருக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சென்றுவாதாடினார். அடுத்த சிலமாதங்களில் அவரையே குண்டர் சட்டத்தில் போட்டது ஜெயலலிதா அரசு. சென்றமுறை வலப்புறவட்டத்தில் நின்று பேசிய மணி அவர்கள் இம்முறை இடப்புறவட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று. அவருக்காக யார் பேசினார்கள் எனத் தெரியவில்லை. அவரே பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் எப்போது இடப்புறவட்டத்தில் நிற்கப்போகிறேனோ தெரியவில்லை. புதிய சட்டத்திருத்தத்தின்படி . முகநூலில் ஸ்டேடஸ் போட்டாலும்கூடக் குண்டர் சட்டமாமே.. நண்பர்களே எச்சரிக்கை.

பாலியல் குற்றங்களுக்கும் இனிகுண்டர் சட்டமாம். பாலியல் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அதற்கு உரிய, இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டங்களே போதுமானவை. சாதி மீறியகாதல்களிள், மனமொத்து காதலர் இருவரும் தலைமறைவானாலும்கூட, இந்த உறவைப் பிடிக்காத பெற்றோர் தம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகத் தான் புகார்கொடுப்பர். அதுபோதாதா நம் காவல்துறைக்கு?

பெரிய அளவில்(122 பேர்) பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்ட போதும் அதை நாங்கள் கண்டிக்கவே செய்தோம். சாதிவெறிப் பேச்சுகளுக்கு இதுவேண்டும் தானே எனச் சிலர் நினைக்கலாம். அப்படியான பேச்சுக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே போதுமானது. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதும். பெரிய அளவில் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளவர்கள் தலித் மக்கள் உள்ளிட்ட மிகவும் அடிநிலையில் உள்ளவர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக நீதிமன்றங்கள் விடுதலை செய்ததுண்டு. கொளத்தூர் மணி மற்றும் அவரது கட்சிக்காரர்களும் அப்படித் தான் விடுதலை ஆனார்கள். அரசுக்கும் தெரியும். இது வம்புக்காகப் போடப்பட்ட வழக்கு. மிகவும் பலவீனமான ஒன்று. நிச்சயம் நீதிமன்றத்தில் அடிபட்டுப்போகும் என்று. ஆனாலும் அவர்கள் ஏன் இதைப் பயன்படுத்துகின்றனர்? நீதிமன்றத்தில் கேஸ் உடைவதற்குள் ஆறேழு மாதங்கள் ஓடிவிடுமே…. இப்போதைய சட்டத்திருத்ததில் ஒருவரை குண்டர் சட்டத்தில் போட அவர் habitual offender ஆக இருக்க வேண்டியதில்லையாம்.

ஆக இனி நீதிமன்றத்திற்குப் போயும் அப்பாவிகள் விடுதலை ஆவது குதிரைக் கொம்புதான். அம்மா கொண்டுவந்துள்ள இச்சட்டத்திருத்தம் வியப்புக்குரிய ஒன்றல்ல. எல்லாம் எதிர்பார்த்ததுதான். எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ளாத மனம் படைத்த ‘அம்மா’ வுக்கு இப்போது கோபம் எல்லாம் முகநூல் முதலான சமூக ஊடகங்கள் மீதுதான் இதை ஒடுக்கும் முயற்சியாகத்தான் .இப்போது ‘சைபர்’ குற்றங்களும் குண்டர் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது கருத்துரிமையைப் பறிக்கும் முயற்சி. நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை (Article 19) மற்றும் சட்ட விரோதமாகச் சிறையில் அடைப்பதற்கு எதிரான உரிமை (Article 22 (2) ஆகியவற்றிற்கு எதிரானது. ஆனால் இதில் வேதனை என்னவெனில் இதற்கு எந்தப் பெரிய எதிர்ப்பும் தமிழகத்தில் இல்லை என்பதுதான்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும்

[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து எழுதியுள்ள நூலுக்கு நான் எழுதிய முன்னுரை]

தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் தீண்டாமை அடிப்படையில் வன்கொடுமைகள் நடப்பவை என அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 542.. அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு எனில் உண்மை நிலை இன்னும் பலமடங்காக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.பதிவான வழக்குகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் வன்கொடுமைகளைக் குறித்துப் புகாரளிக்கவோ அல்லது ஏதேனும் எதிர்ப்புக்காட்டி அதைச் செய்தியாக்கவோ இயலாத நிலையுள்ள கிராமங்கள் இன்னும் ஏரா:ளமாக உள்ளன என்பதை இதுபோன்ற பிரச்சினைகளில் அக்கறை உள்ளோர் அறிவர். இரு வாரங்களுக்கு முன் கூட பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீண்டாமை ஒதுக்கல்களை அவர் விரிவாகச் சொன்னார். ஏதாவது செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தக் கொடுமைகளைப் பட்டியலிட்டு ஏதாவது போராட்டம் நடத்துங்களேன் என்றேன். அதெல்லாம் இங்கு செய்து பார்த்தும் பலனில்லை, மேற்கொண்டு எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லாமல்தான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் அவர்.

வன்கொடுமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தலித் இயக்கங்களும் தீண்டாமைப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிற பிற இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி, இத்தகைய வன்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய சூழல் உருவான பின்னும் நிலைமை இப்படித்தான் உள்ளது. ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யால் கவனப்படுத்தப்படாதவரை உத்தபுரத்தில் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருந்தது யாருக்குத் தெரியும். இன்னும்கூட இந்த கிராமங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்தபாடில்லை.

தமிழகத்தில் இச்சட்டங்களின் (1955 மற்றும் 1988ம் ஆண்டுச் சட்டங்கள்) அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதாக மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளது (New Indian Express, July 3, 2012) குறிப்பிடத் தக்கது. முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்யாமை, சரியான நேரத்தில் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமை, நியமிக்கப்படும் சிறப்பு வழக்குரைஞர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசீலனை செய்யாமை முதலானவற்றை இதன் காரணங்களாகச் சுட்டிக்காட்டி, இவை நீக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இச்சட்டத்துன் கீழ் வேண்டுமென்றே உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வழி இருந்தும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல் துறை அதிகாரியும் கூட இதற்காகத் தமிழகத்தில் தண்டிக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்காகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகிற தேர்வுகளில் இச்சட்டம் குறித்த அறிவைக் கோரும் தேர்வு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2008 – 2010 ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் தேசிய அளவில் 31 சதமாக இருக்க, தமிழகத்தில் அது வெறும் 17.4 சதமாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகமும் உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது (The Hinde, Dec, 15, 2013).

நிலைமை இப்படியிருக்க இங்கு வன்கொடுமைத் தடுபுச் சட்டத்திற்கு எதிராக ஆதிக்க சாதிக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்பட்டுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியுடன் ஒரு முறையும், பா.ஜ.கவுடன் ஒருமுறையும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இருமுறையும் இந்த இரு கட்சிகளும் சில மாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையில் இயங்கிய ஆட்சிகளைக் கவிழ்த்தன. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை முதல்வர் மாயாவதி கறாராகப் பயன்படுத்தியமைக்கு எதிராகவே இந்த இரு ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது. சாதி, மத, இன அடிப்படைகளில் இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய நாடுகளில் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் அக் கொடுமைகளால் பாதிக்கப்படுவோரை ஆற்ற்றல்படுத்த வேண்டிய அவசியங்களும் எழுகின்றன. ஏதோ இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு சட்டம் செயல்படுவது போல இங்குள்ள ஆதிக்க சாதிகள் சொல்வது அப்பட்டமான பொய்.

ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் இத்தகைய “புறக்கணிப்புகளுக்கு எதிரான சட்டங்கள்” (Anti – Discrimination Acts) செயல்படுகின்றன. ‘ஒதுக்கல்களுக்கு எதிரான சட்டம், 1991’ (ஆஸ்திரேலியா), Law Agains Racism, 2010 ((பொலிவியா), Race Relations Amendment Act, 2000 ((பிரிட்டன்) முதலியன சில எடுத்துக்காட்டுகள். நிலைமை இப்படி இருக்க தமிழக ஆதிக்க சாதி அமைப்புகள் இச்சட்டம் குறித்த தவறானதும், பொய்யானதுமான பல செய்திகளைப் பரப்பி எப்படியாவது இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளனர்.

நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை “ஒழிக்கப்பட்டு” விட்டது. தீண்டாமை ஒரு குற்றம். எனினும் நமது வழமையான குற்றவியல் சட்டங்களில், நடைமுறையில் உள்ள பல தீண்டாமைச் செயல்கள் குற்றப்பட்டியலின் கீழ் வரா. அப்படியே வந்தாலும் அதற்குரிய கடுமையுடன் அவை முன்வைக்கப் படாமல் மிகச் சாதாரணக் குற்றங்களாகவும், குறைந்த தண்டனைக்குரியவையாகவுமே அவை அணுகப்பட்டிருக்கும். 1948ம் ஆண்டின் உல்களாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டபின் உருவான நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஓரளவு நன்றாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான குற்றவியல் மற்றும் சிவில் உரிமைச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வடிவிலேயே தொடர்கின்றன. அரசியல் சட்டத்திற்குத் தக அவை ஒத்திசையச் (tune) செய்யப்படவில்லை.

எனவே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு உண்மையிலேயே அமுலாக்கப்பட வேண்டுமானால் அதற்குத் தக குற்றவியல் சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் இரு மாற்றங்கள் இதற்குத் தேவையாகின்றன. அவை.:

குற்றவியல் சட்டங்களில் காணப்படாத புதிய குற்றங்களை வரையறுப்பது. (சமூக விலக்கு செய்தல், சொத்துக்களை அனுபவிக்க இயலாது தடுத்தால், எதிர் வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்தக் குற்றங்களுக்கு தண்டனைகளையும், சில குற்றங்களுக்கான குறைந்தபட்சத் தண்டனைகளாகக் குற்றவியல் சட்டங்கள் விதித்துள்ளதையும் அதிகரிப்பது. (குற்றம் செய்தவர் அரசு ஊழியராயின் அதுபோன்ற குற்றங்களுக்குச் சாதாரணமாக வழங்கபடும் குறைந்த பட்சத் தண்டனையைக் கூட்டுவது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீனை மறுப்பது, அவரது சொத்துக்களை முடக்குவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தகையோரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வது முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்த அடிப்படையில்தான் 1955ல் ‘சிவில் உரிமைச் சட்டமும்’, பின் அதன் போதாமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து, 1989ல் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்’, 1995ல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலேயுள்ள இவ்விரு கூறுகளையும் தவிர மேலும் மூன்று முக்கிய வரவேற்கத் தக்க கூறுகளைக் கொண்டதாக அமைந்தது. அவை:

குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாரரும் எந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அவசிய நிபந்தனைகள் ஆக்கப்பட்டன. ஒரு சனநாயக அரசியல் அமைப்பில் இது சாத்தியமில்லை. குற்றவியற் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க இயலும். குற்றம் இழைத்தவர் தலித் அல்லாதவராக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர் தலித்தாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை உருவாக்க இயலாது. ஆனால் இன்று இச்சட்டத்தில் அப்படியான ஒரு நிபந்தனை உருவாக்கப் பட்டது ஒரு மிக முக்கியமான மாற்றம். சாதிக்கொரு தண்டனை என்கிற மனு நீதி கோலோச்சிய நாட்டில் அந்நிலை முதன்முதலாக இப்படித் தலை கீழாக்கப்பட்டது என்பது ஒரு புரட்சி எனலாம்.
பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைத்தல் ஆகியவை இச்சட்டத்தில் விரிவாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், சாட்சிகள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், பயணப்படி முதலியவற்றை அளித்தல், பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல் முதலியன இதில் அடங்கும்.
இவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த உரிய கருவிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வழி வகுக்கிறது.. இந்த வழக்குகளை விரைவாக நடத்தித் தண்டனைகளை வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், வழக்கை நடத்தச் சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்தல்,. வன்கொடுமை நடக்கக் கூடிய பகுதிகளை அடையளம் கண்டு கண்காணிக்கவும், ஆய்வு நடத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் உரிய ‘செல்’களை அமைத்தல் முதலியன இதில் அடங்கும்.
இப்படியான வழிமுறைகளெல்லாம் இருந்தபின்னும் ஏன் உரிய பலன்களை இந்தச் சட்டத்தின் மூலம் தலித் மற்றும் பழங்குடியினர் பெரிய பயன் ஏதும் பெற இயலவில்லை? தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் குறையவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ஆய்வு நூல். இச்சட்டத்தின் பயன்பாடு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. கடலூர், விழுப்புரம், ஈரோடு கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் 2012வரை நடை பெற்ற தலித் மக்களின் மீதான் வன்கொடுமைகளை இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகள், நேரடியான கள ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ் வன்கொடுமைகள் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் கையாளப்பட்டன என்பதை விரிவான ஆதாரங்களுடன் தொகுத்து ஆய்வு செய்கின்றனர் இதன் ஆசிரியர்களான முருகப்பனும் ஜெசியும். வன்கொடுமை மேற்கொள்ளப்படுவது தொடங்கி புகார் பதிவு செய்யப்படுவது, வழக்கு விசாரிக்கப்படுவது, சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுவது, நீதிமன்றம் இவ்வழக்குகளைக் கையாள்வது என ஒவ்வொரு நிலையையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மட்டத்திலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது, வன்கொடுமைகளை மேற்கொண்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர் என்பவற்றைத் துல்லியமாக நிறுவுகின்றனர்.

மதுரையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம் 2007ம் ஆண்டு இதே போல ஒரு ஆய்வு நுலை வெளியிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு முடிவுகளை எம்.ஏ.பிரிட்டோ தொகுத்திருந்தார். 1996 லிருந்து 2001 வரை நடைபெற்ற கொடுமைகள் அந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த நூலின் முடிவுகளைத் தற்போது நண்பர்கள் முருக்கப்பனும் ஜெசியும் கண்டடைந்துள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில் எத்தகைய முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது விளங்குகிறது. காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றிற்கு, மொத்தத்தில் அரசிற்கு இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்புறுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அளவில் நீதிம்ன்றங்கள் எவ்வாறு இச்சட்டத்திற்குத் தவறான விளக்கங்களை அளித்து குர்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ராஜேஷ் சுக்லா ஆய்வு செய்துள்ளார் (Economic and Political Weekly, Oct 21, 2006). அதைச்சுருக்கித் தமிழாக்கி 2008ல் ‘சஞ்சாரம்’ எனும் இதழில் வெளியிட்டேன். எனது ‘நெருக்கடி நிலை உலகம்’ நூலிலும் (எதிர் வெளியீடு, 2008) அது உள்ளது.

இவ்வாறு குற்றம் செய்கிற ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள இச் சட்ட வாசகங்கள் சிலவற்றையும், ஒட்டுமொத்தமாகச் சில பிரிவுகளஈயும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக அக்கறையுள்ளோர் மத்தியில் தற்போது தேசிய அளவில் கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. இது குறித்தும் சென்ற ஆண்டு ‘மக்கள் களம்’ என்னும் தலித் மாத இதழில் விரிவாக எழுதியுள்ளேன். எனது இணையத் தளத்திலும் அது உள்ளது.

முருகப்பனும் ஜெசியும் தொகுத்துள்ள இந்நூலின் முதற் பகுதி மிக விரிவாக தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகளின் வரலாற்றையும், அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சரளமான நிரடலற்ற மொழியில் சொல்லியுள்ளது மொத்தத்தில் தமிழக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இது அமைந்துள்ளது.. இவ்வகையில் நூலாசிரியர்களையும் இவ் ஆய்வை மேற்கொண்ட ‘இளைஞர்களுக்கான சமூக விழிபுணர்வு மையம், தமிழ்நாடு’ (SASY) மற்றும் ‘நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புது டெல்லி’ (NDMJ) ஆகிய அமைப்புகளையும்கும் இவ் வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கறையுள்ள நாம் எல்லோரும் பாராட்டக்க் கடமைப்பட்டுள்ளோம்.

இறுதியாக ஒன்று. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச்சட்டத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் ஓரிரு பொய் வழக்குகளைப் பெரிதுபடுத்தி இச்சட்டத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையே கொச்சைப்படுத்துடுகின்றன ஆதிக்க சாதி அமைப்புக்கள். இதன் மூலம் இச்சட்டம் உண்மையில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வன்கொடுமை செய்யும் சாதியினர் காப்பாற்றப்படுவதற்கே வழி வகுக்கப்படுகிறது என்கிற உண்மை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறைக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், தமது ஆதரவாளர்கள் மூலமாகவும் செயல்படுத்துகிற சமூக வலைத்தளங்கள் இதில் முன்னிற்கின்றன. இந்நிலை கவலைக்குரியது. இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாறு பொய் வழக்குத் தொடுப்போரை வெளிப்படையாகக் கண்டித்து அவ்வழக்குகளைத் திரும்பப்பெற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கரையுள்ளோர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறின்றி நாம் மௌனம் சாதிப்போமேயானால் அது ஆதிக்க சாதியினரின் பொய்ப் பிரச்சாரத்திற்கே வலு சேர்க்கும்.

அ.மார்க்ஸ்,

14-03- 2014,

குடந்தை

ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வார் இருவரும் சொந்த மகளையும் அவளது காதலனையும் கொன்று குற்றத்தை மறைத்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அளவில் ஊடகங்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்டு வந்தது.

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பனும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காகவும் இந்த டாக்டர் தம்பதியருக்கு சென்ற வாரம் காசியாபாத் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது..

2008 மே 16 அன்று இருவரையும் கொன்ற டாக்டர் தம்பதியர் ஹேம்ராஜே தம் மகளைக் கொன்றதாக ஐயத்தை உருவாக்கினர். எனினும் அடுத்த நாள் பூட்டப்பட்டிருந்த மாடியில் ஹேம்ராஜின் அழுகிய பிணம் கண்டெடுக்கப்பட்டபோது அதை டாக்டர் தம்பதியரால் மட்டுமல்ல யாராலும் விளக்க இயலவில்லை. ராஜெஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். எனினும் இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்பதற்காக இவழக்கைத் தொடராமல் முடித்துக் கொள்வதாக. இவ் வழக்கைப் புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுத் சென்ற டிசம்பர் 29, 2010ல் அறிவித்தது.

இவ்வாறு வழக்கு முடிக்கபடுவதை ஏற்றுக் கொல்ளாத உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மறு விசாரணைக்கு ஆட்படுத்தியது. இன்று டாக்டர் தம்பதியர் தண்டிக்கப்பட்டதில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது என்பதை யாரும் ஏற்க இயலாது என்கிற வகையில் உச்ச நீதிமன்றம் பாராட்டுக்குரியதாகிறது.. .

எனினும் இதை வரவேற்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. இராகவன் போன்றோர் கவனப்படுத்தும் (The Hindu, Nov 29, 2013) இத் தீர்ப்பின் அடிப்படை மனித உரிமை நோக்கிலிருந்து பார்ப்போருக்குக் கவலை அளிக்கிறது. 2002 குஜராத் படுகொலைகளின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரி உட்பட 68 பேர் கோடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேந்திர மோடி மற்றும் 58 பேர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என நற்சான்றிதழ் வழங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை ஏற்றவர் இந்த இராகவன் என்பது குறிப்பிடத் தக்கது.

குற்றத்தை நிறுவத்தக்க “முடிவான சான்றுகள்” (conclusive evidences) இல்லாதபோதும், “நியாயமான அய்யங்களுக்கு அப்பால்” (beyond reasonable doubt) குற்றம் உறுதியாக நிறுவப்படாத போதும் கூட, வெறும் “சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களின்” (circumstantial evidences) அடிப்படையிலேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்படாலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இத்தீர்ப்பை இம் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலும் குற்றவியல் நீதிமுறை கீழ்க்கண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அவை:

குற்றம் அய்யத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படும்வரை குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியாகவே கருதப்படுவார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்கு மவுனமாக இருக்க உரிமை உண்டு.
குற்றத்தை நிரூபிக்கும் கடமை குற்றத்தைச் சுமத்துகிற கவல்துறையுடையதே தவிர அது நீதிமன்றத்துடையது அல்ல; அதேபோல குற்றத்தைத் தான் செய்யவில்லை என நிறுவும் பொறுப்பும் குற்றம் சுமத்தபட்டவருக்குக் கிடையாது: அய்யத்திற்கிடமின்றி அதை நிறுவுவது காவல்துறையின் பொறுப்பு.

இதில் இரண்டாவது அம்சத்தைக் கொஞ்சம் விளக்க வேண்டும். “தன்னைத்தானே குற்றவாளியாக்கிக் கொள்ளும் நிலைக்கு எதிரான காப்புறுதி” (guaranteed protection against self incrimination) என இது அழைக்கப்படுகிறது. தன்னை நோக்கி விசாரணையின்போது வைக்கப்படும் கேள்வி ஒன்றிற்குத் தான் அளிக்கும் பதில் தன்னைக் குற்றச் செயலுடன் தொடர்புபடுத்தும் என ஒருவர் கருதினால் அவர் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க நமது அரசியல் சட்டமும் {A 20 (3)}, குற்ற நடைமுறைச் சட்டமும் {Cr PC 161 (2)}. இடமளிக்கின்றன.

ஆனால், தேங்கிக் இடக்கும் ஏராளமான கிரிமினல் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடாமல் அவர்கள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகப்படுத்துவது என்கிற பெயர்களில் மேற்கண்ட மூன்று அடிப்படை நீதி வழங்கும் நெறிமுறைகளையும் ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

குற்ற நீதி வழங்குமுறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கென இந்திய அரசால் அமைக்கப்பட்ட ‘மாலிமத் குழு’ மற்றும் ‘மாதவ மேனன்’ குழு முதலியன இதை நோக்கிப் பரிந்துரைகளை அளித்துள்ளன. இன்றைய நீதிவழங்கு முறை “நீதி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளது” எனக் குற்றம் சாட்டும் மாலிமத் குழு அதற்கு மாற்றாகச் சொல்லும் வழிமுறை மிக ஆபத்தாக உள்ளது.

இன்றைய நீதிமுறையில் நீதிபதி என்பவர் ஒரு நடுநிலையாளர் (umpire). இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டதா என நிறுத்து முடிவெடுக்க வேண்டியது அவர் பொறுப்பு. இந்நிலையை ஒழித்து, நீதிபதி ஒரு நடு நிலையாளராக மட்டும் அமையாமல், அவரே குற்றத்தை நிறுவும் பாத்திரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இவ் அறிக்கை. அதாவது நீதிமன்றம் என்பது, “விசாரணையின் ஊடாக நீதிவழங்கும் அமைப்பு” என்கிற நிலையிலிருந்து விலகி, “குற்றத்தை நிறுவி தண்டனை வழங்கும் அமைப்பாக” (inquisitorial system) மாற வேண்டுமாம்.

அதாவது முடிவான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்தைக் காவல்துறை முழுமையாக நிறுவாதபோதும், வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நீதிபதி குற்றத்தை உறுதி செய்து தண்டனையை வழங்கலாம். ஏதூனும் ஒரு கேள்விக்குக் குற்றம் சுமத்தபட்டவர் பதிலளிக்க மறுத்தால் அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் கொண்டு தண்டனை வழங்கலாம்.

அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டாத யார் மீதும் கடுங் குற்றங்களைச் சுமத்திப் போதிய ஆதாரங்களின்றி அவர்களைப் பழிவாங்கவும், சிறையிலடைக்கவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் அடித்தள மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் முதலானோருக்காகப் போராடுகிற இயக்கத்தவர், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் டாக்டர் பினாயக் சென் போன்றோர் எந்தக் குற்றமும் செய்யாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்படுவதற்கும் கடும் தண்டனைக்குள்ளாவதற்கும் இது வழி வகுக்கும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியன தலைதூக்கியுள்ள ஒரு காலகட்டத்தில், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பியபோதும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நீதி வழங்கு நெறியை ஏற்க இயலாது என்கிற சொல்லாடல்கள் இன்று மிதக்கவிடப்படுகின்றன. மாறாக, “ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டபோதும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது” என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. தேசப் பாதுகாப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகரித்தல் என்கிற பெயர்களில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைக் குடிமக்களுக்கு மறுத்துவிட இயலாது. இப்படியான சந்தர்ப்பங்களில் தேசப்பாதுகாப்பு முதலியவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடையில் மிகவும் நுணுக்கமான ஒரு சமச் சீர்மையைக் (balance) கையாள்வது நீதிமன்றத்தின் பொறுப்பாகிறது. எக்காரணம் கொண்டும் அரசு, காவல்துறை மற்றும் இதர நிறுவனங்கள் மக்களுக்கும், அடிப்படை நெறிமுறைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய தன்மையைப் (accountability) பலி கொடுத்துவிட இயலாது.

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பை “கவுரவக் கொலைகளுக்கு” எதிரான தீர்ப்பு என்றும் சிலர் கொண்டாடுவதையும் ஏற்க இயலாது. கவுரவக் கொலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இடுப்பதற்கு உரிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது என்பதும் அடிப்படை நீதி வழங்கு நெறிகளை அப்படியே தூக்கிக் கடாசி எறிவதும் ஒன்றல்ல. அதேபோல டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மட்டும் சிறுவனாக இருந்ததால் அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது அது குறைந்த தண்டனை என எழுந்த கண்டனங்களும் இத்தகையதே. சாதிப் பெருமையைக் காரணம் காட்டிக் காதலர்கள் கொலை செய்யப்படுவதும், அதே போலப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் கவுரவக் கொலை, அல்லது பாலியல் வன்முறை, தேசப் பாதுகாப்பு என எதன் பெயராலும் அடிப்படை நீதி வழங்கு நெறிமுறைகளை மீறுவது அரசு மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும். அரசியல் சட்ட ஆளுகையில் எந்நாளும் இவற்றுக்கு இடமில்லை.

“சந்தேகத்தின் பலன்களை” மட்டுமின்றி “சந்தர்ப்ப சூழல்களின் பலன்களையும் கூட ”குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு“ மட்டுமின்றி, “குற்றம் நிறுவப்பட்டவர்களுக்கும்” கூட வழங்க வேண்டும் என்பதே நீதி வழங்கு நெறிமுறையின் அடிப்படை. இந்த வகையிலேயே சட்ட நூல்களில் வரையறுக்கப்பட்டு இருக்காவிட்டாலும் கூட, நீதி வழங்கு நெறியினூடாகவே, “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படவேண்டும்” என்பது போன்ற எழுதப்படாத சட்டங்கள் (judicially evolved principles) உருவாகியுள்ளன. நாளை ஆருஷி வழக்குத் தீர்ப்பும் கூட இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையாக மாறினால், அது உறுதியாக அது ஒரு ஜனநாயக ஆளுகையின் அடையாளமாக இருக்காது.

தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப் போராடியபோது அவருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என வெள்ளையர்கள் அறிவித்திருப்பார்கள். ஊமைத்துரை அடைக்கலம் தேடி சிவகங்கைக்கு வருவார். அப்போது சிவகங்கையை மருது சகோதரர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். சின்ன மருது ஊமைத் துரையை மறைந்திருக்கச் சொல்லிவிட்டு அண்ணனிடம் வந்து அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பார். தற்போதுள்ள சூழலில் ஆங்கிலேயரைப் பகைத்துக் கொண்டு வாழ இயலாது என்று மறுப்பார் பெரிய மருது.

அப்போது அருகிலுள்ள அறையிலிருந்து ஊமைத்துரை உள்ளே வருவார். என்ன காரியம் செய்துவிட்டாய் எனப் பெரியவர் தம்பியைக் கண்டித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வரும் ஆங்கிலத் தளபதி ஊமைத் துரையின் மடியைப் பிடித்துக் கைது செய்ய முயல்வான். அப்போது பெரிய மருது, “என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் அடைக்கலம் வந்த ஒருவரை என் கண்முன்னே கைது செய்வாய்?” எனச் சீறி அவனை வெளியே அனுப்புவார். அவனும் இதன் விளைவுகளை நீ அனுபவிப்பாய் என எச்சரித்து அகல்வான். பின்னர் வெள்ளையரின் படை இதைச் சாக்காகக் கொண்டு சிவகங்கை மீது படை எடுத்து மருது சகோதரர்களை அழிப்பதாகக் கதை செல்லும்.

முன்னதாக ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலப் படைகளால் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம்தான் இந்த மருது சகோதரர்களும் ராணி வேலுநாச்சியாரும் அடைக்கலம் கோரிச் சென்றனர், ஹைதரும் அவரது மகன் திப்புவும் தங்கள் திண்டுக்கல் கோட்டையில் இவர்களுக்கு ஏழாண்டுகாலம் அடைக்கலமளித்துக் காத்ததோடு, இறுதியில் அவர்கள் மீண்டும் இழந்த ஆட்சியைப் பிடிக்க படைகளும் பொருளும் உதவினர் என்பது வரலாறு.

இப்படி உயிரைக் கொடுத்தேனும் அடைக்கலம் வந்தோரைக் காப்பது என்றொரு மரபு நமக்குண்டு. புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் வந்த ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டி, அதை வேட்டையாட வந்த பருந்துக்கு புறாவின் எடைக்குச் சமமான சதையைத் தன் தொடையிலிருந்து வெட்டித் தருவான். இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படியான மரபு நமக்கு உண்டெனினும் இன்றும் நமது நாடு அகதிகளுக்கு உரிய பாதுகாப்புகளும் உரிமைகளும் அளிப்பது தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாட்டிலும் (UN Convention on the Status of the Refugees), 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தத்திலும் (optional protocol) கையொப்பமிடவில்லை. ஆனாலும் சுதந்திரத்திற்குப் பிந்திய பிரிவினைக் கலவரம் தொடங்கி இன்றுவரை சுமார் இரண்டரை கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாக ஒரு கணக்கு உள்ளது. 53,000 சக்மாக்கள் உட்பட 150,000 பர்மியர்கள், 90,000 திபெத்தியர்கள், 70,500 ஈழத் தமிழர்கள், 19,000 ஆஃப்கானியர்கள் என இப்போது 4,50,000 ஏதிலியர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் ரோகினியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களில் இருந்து, ஆஃப்கன் மற்றும் பாக்கிலிருந்து வந்துள்ள சீக்கியர்கள், இந்துக்கள் எனப் பல மதத்தினரும், இனத்தினரும் உள்ளனர். இதில் பலர் இனி சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

அப்படி இருந்தும் இந்திய அரசு இது தொடர்பான ஐ.நா ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ, தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் கொள்கையை உருவாக்கவோ தயாராக இல்லை. பின் எந்த அடிப்படையில் ஏதிலியர் இந்திய அரசுகளால் கையாளப்படுகின்றனர்? அவ்வப்போதைக்குத் தற்காலிகமாக உருவாக்கப்படுகிற அணுகல்முறைகளே (ad hocism) கடைபிடிக்கப்படுகின்றன. இதன்விளைவாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான வகையில் வெவ்வேறு நாட்டு அகதிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுல்ளது.

எடுத்துக்காட்டாக, திபெத்திய அகதிகளுக்கு இமாசலப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் கூடத் தரப்பட்டுள்ளன. பிள்ளைகள் படிக்கத் தனிப் பள்ளிக்கூடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 113 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு (designated refugee camps) வரும் ஏதிலியர் அங்கு பிரித்தனுப்பப் படுகின்றனர். பூடான் மற்றும் நேபாளத்திலிருந்து வந்துள்ளோர் இரு நாட்டு நட்புறவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றனர். சிலருக்கு வேலை அனுமதியும் கூட (work permit) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பர்மா, ஆஃப்கன் முதலான பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் நிலை படு மோசம்.

இந்தியாவுக்குள் பெரிய அளவில் ஒரு நாட்டிலிருந்து அகதிகள் வந்து குவியும்போது அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்படுகின்றனர். தென் ஆசிய நாடுகள் அல்லது அவ்வளவு சுமுகமான உறவுகளில்லாத பிற நாடுகளிலிருந்து வருவோர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், ஆய்வுகளுக்குப் பின் ‘அடைக்கலம் தேடுவோர்’ (asylum seekers) என்பதாக ஏற்கப்படுகின்றனர். அவர்களுக்கு விரிவான ‘அகதிகள் நிலை’ (refugee status) அளிக்கப்படுவதில்லை. பிற நாடுகளிலிருந்து வரும் சிலர் ஐ.நா அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கு அதன் விதிகளுக்குட்பட்டுத் தங்களுக்குத் தனிநபர் அடிப்படையில் அகதி நிலை அளிக்குமாறு விண்ணப்பிக்கின்றனர். இந்த அலுவலகம் டெல்லியில் மட்டும் உள்ளது. மற்றபடி தமிழகத்திலும் அது சிறிய அளவில் உதவிகள் அளிக்கின்றது.

ஆக இந்தியாவில் உள்ள ஏதிலியரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (அ) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் (எ.கா: ஈழ மற்றும் திபெத் அகதிகள்). (ஆ) ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படாத உரிமையுடன் முழு அகதி நிலை வழங்கப்பட்டோர் (பர்மிய மற்றும் ஆஃப்கன் அகதிகள்) (இ) இந்திய அரசாலோ, ஐ.நா ஆணையத்தாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள் (மிசோராமில் வாழும் பர்மிய சின் அகதிகள்).

இந்திய அரசுக்கு அகதிகளுக்கான ஏதாவது ஒரு கொள்கை உள்ளது என்றால் அது திபெத்திய அகதிகள் குறித்து நேரு அப்போது சொன்னதுதான். இந்தியா தன் நாட்டுக்கு வரும் அகதிகளைப் பொருத்தமட்டில் மூன்று அடிப்படைக் காரணிகளின் அடிப்படையில் நடத்தப்படுவர் என்றார். அவை:

எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டுடன் உள்ள நட்புறவு.,
தேச மற்றும் எல்லைப் பாதுகாப்பு..
அகதிகளின் மீதான அனுதாபம்.
ஆக, இருநாட்டு அரசியலே இங்கு முதன்மை ஆகிறது. பன்னாட்டு ஒப்பந்தங்கள், அவற்றுக்கான கடப்பாடுகள் இங்கு ஒரு பொருட்டல்ல. இதன் விளைவுதான் மேற்குறிப்பிட்ட அகதிகளுக்கான அணுகல்முறைகளில் உள்ள சீரற்ற தன்மைகள்.

இந்தியா அகதிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிடாதபோதும் எல்லா நாடுகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட, “வரும் அகதிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமை” என்கிற Non-refoulement கொள்கையைப் புறக்கணிக்க இயலாது. தவிரவும் இந்திய அரசு 1966ம் ஆண்டின் ஐ.நா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டையும், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா அவையின் குழந்தைகள் உரிமைக்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளது இவை அகதிகளின் உரிமைகளையும் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. அதோடு குடிமக்களுக்கிடையே சமத்துவம், அவர்களின் வாழ்வுரிமை. மத உரிமை ஆகியவற்றை ஏற்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 21, 25 ஆகிய பிரிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இங்கு வரும் அகதிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளிலேயே நமது நீதிமன்றங்கள் பன்னாட்டு உடன்பாடுகளில் உள்ள உரிமைகள், அந்த உடன்பாடுகளில் இந்தியா கையொப்பமிடாதபோதும், இங்கு வாழும் அகதிகளுக்கும் உண்டு என்கிற நெறிமுறையை (judicially evolved principle) உருவாக்கியுள்ளன. சக்மா அகதிகள் வழக்கில் (National Human Rights Commission v State of Arunachal Pradesh, AIR 1996 SC 1234). உச்ச நீதிமன்றம் மேற்குறித்த அரசியல் சட்ட உரிமைகள் இங்கு வாழநேர்ந்த அகதிகளுக்கும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அதேபோல இந்திய அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பர்மிய அகதிகளை வெளியேற்ற முயற்சித்தபோது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் (Malvika Karlekar v Union of India-Criminal Writ Petition No 243 of 1988), அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதை நிறுத்துமாறு ஆணையிட்டது.

இந்தியா இவ்வாறு அகதிகளுக்கான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காவிட்டாலும் பொதுவில் ‘அகதிகளைத் திருப்பி அனுப்பாமை’ முதலான நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகக் கூறுவது வழக்கம். ஆது ஓரளவு உன்மைதான் எனினும் பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காததன் விளைவாக மேற்குறித்தவாறு அகதிகளைக் கையாளுவதில் சீரற்ற தன்மை இருப்பது முதலிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிரவும் அரசியல் காரணங்களை முன்னிட்டு அகதிகளைத் திருப்பி அனுப்பாமை என்கிற கொளகையையும் கூட இந்திய அரசு விட்டு விடக்கூடியதுதான் என்பதற்கு ராஜீவ் கொலையை ஒட்டிப் பெரிய அளவில் ஈழஅகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு.

இப்படியான நிலையை இந்தியா எடுப்பதற்கு அடிப்படையாக இருப்பது இன்று அகதிகளைக் கையாள்வதற்கு அது பயன்படுத்தக் கூடிய 1939ம் ஆண்டு வெளிநாட்டார் பதிவுச் சட்டம், 1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் மற்றும் இங்குள்ள பல கடவுச் சீட்டுச் சட்டங்கள் முதலியவைதான். இச்சட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டார் சட்டம் அகதிகளுக்கானதல்ல. இச்சட்டம் (அ) தங்களது நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வரும் அகதிகளையும், (ஆ) இங்குள்ள வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புகள் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் வருகிற புலம் பெயர்ந்தவர்களையும் (legal and illegal migrants) (இ) உரிய பயண ஆவணங்களுடன் இங்கு வருபவர்களையும் வேறுபடுத்தி அணுகுவதில்லை. இந்தச் சட்டமும், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1971ல் வெளியிடப்பட்ட ஆணையும், 2004ல் வாஜ்பாயி அரசாங்கத்தால் இச்சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அபரிமிதமான அதிகாரங்களை இந்திய அரசுக்கு அளிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத யாரையும் கைது செய்யவும், தடுத்து நிறுத்தவும், சிறையிலடைக்கவும், தேவையானால் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டமும் வெளிநாட்டாருக்கு எதிரான அரசின் அதிகாரங்களை வலுவாக்குகிறது.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளுக்கென செங்கல்பட்டு, பூந்தமல்லி முதலான இடங்களில் ‘சிறப்பு அகதிகள் முகாம்கள்’ எனப்படும் நிழற் சிறைகளையும் (shadow prisons) செயல்படுத்துகின்றன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தாங்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருவது அறிந்த ஒன்று.

தங்கள் நாட்டில் வாழவே இயலாது துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதையும் அங்கு கண்ணியமாக அவர்கள் நடத்தப்படுவதையும் ஒரு உரிமையாக ஏற்கும் கடப்பாடு, பன்னாட்டுச் சட்டங்களில் கையெழுத்திடாதபோதும் இந்தியாவிற்கு உண்டு என்பதைச் சற்று முன் பார்த்தோம். அப்படி வருகிறவர்களிடம் உரிய பயண ஆவணங்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அப்படி இல்லை என்பதற்காக வெளிநாட்டார் சட்டம் அல்லது உகாண்டா நாட்டினருக்கான 1972ம் ஆண்டு ஆணை முதலியவற்றின் அடிப்படையில் அவர்களைத் திருப்பி அனுப்புவது அல்லது சிறையிடுவாது எப்படிச் சரியாகும்?

ஐ.நா உடன்பாடு மற்றும் விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிடாததற்கு இந்தியா மூன்று காரணங்களைச் சொல்கிறது. அவை:

1. 1951ம் ஆண்டு உடன்பாடு ஐரோப்பிய நலன்களை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. பனிப்போர் காலத்திய பின்னணியில் உருவாக்கப்பட்டது அது.

2. தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியன தலைதூக்கியுள்ள சூழலில் இவ்வாறு அகதிகளை எளிதாக அனுமதித்துவிட இயலாது.

3. அகதிகளுக்கு இத்தனை உரிமைகளைக் கொடுத்தால் அருகிலுள்ள நாடுகளிலிருந்தூ ஏராளமானோர் இங்கு வரக்கூடும்.

இதில் சில உண்மைகள் இருந்தபோதிலும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்தியா ஐ.நா உடன்பாடுகளில் கையெழுத்திடாமலும், அகதிகளுக்கான பொதுச் அட்டம் ஒன்றை உருவாக்காமலும் உள்ளதை ஏற்க இயலாது. இந்திய அரசியல் சட்டத்தின் 51(c) பிரிவின்படி இந்தியா பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க வேண்டிய கடப்பாடுடையதாக உள்ளது. தவிரவும் தென் ஆசியாவில் ஒரு முக்கியமான வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிற, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகத் துடிக்கிற, பன்னாட்டு அரசியலில் முக்கிய பங்காற்ற விழைகிற ஒரு நாடு இத்தகைய அடிப்படைப் பன்னாட்டுக் கடப்பாடுகளை மறுப்பதை எப்படி ஏற்க இயலும்? பனிப்போர்க் காலத்திய உடன்பாடு என்றால் இன்று பனிப்போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் அதன் பொருளென்ன? தேவையான திருத்தங்களுடன் புதிய உடன்பாடுகளை உருவாக்க இயலாதா? 1951ம் ஆண்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அரசு இன்னும் அந்த அடிப்படை உடன்பாட்டிலேயே கையொப்பமிடாதிருப்பது பெருங் கேலிக் கூத்து.

அகதிகள் என வருகிற யாரும் அப்படியே உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பரிசீலனைகள், விசாரணைகளுக்குப் பின்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தவிரவும் ‘சார்க்’ நாடுகளின் 2004ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒபந்தம் ‘பயங்கரவாதிகள் என சந்தேகப்படக் கூடியவர்களுக்கு அகதிகள் நிலை அளிக்கக் கூடாது எனக் கூறுகிறது. அதை விதியை இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானால் இன்னும் விளக்கமாக பாதுகாப்பு அடிப்படையில் இன்னும் இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை இணைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் அண்டை நாட்டார் இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கே வரக்கூடும் என்கிற அச்சமும் ஏற்புடையதல்ல. பா.ஜ.க வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் விளைபொருளாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கதேச முஸ்லிம்கள் இவ்வாறு அதிக அளவில் ஊடுருவி விட்டனர் என்று பிரச்சாரம் செய்வது அவர்களின் வழமையான அரசியல்களில் ஒன்று. இன்று வங்கதேச எல்லையில் இரட்டை முள்வேலிகள் இடப்பட்டும் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டும் தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டும் அத்தகைய நுழைவு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. பிற இத்தகைய பகுதிகளிலும் இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய அரசு அகதிகள் தொடர்பான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்க இயலாது எனச் சொல்வதற்கான காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. தென் ஆசிய நாடுகளில் சீனாவும், ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே 1951ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

2004ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபது பி.என். பகவதி அவர்கள் இந்தப் பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென அகதிகள் நிலைக்கான ஒரு மாதிரி சட்ட வடிவை உருவாக்கினார். பின் 2006ல் அந்த அடிப்படையில் அகதிகள் நிலைக்கான ஒரு சட்ட வரைவையும் இந்திய அரசு உருவாக்கியது. எனினும் இன்றுவரை அதைப் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவில்லை. அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் இந்தச் சட்ட வரைவை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார். வேறு பலரும் இவ்வரைவு குறித்துக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வரைவைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தித் தேவையான திருத்தங்களுடன் சட்டமாக்க வேண்டும். பிற நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறுபவர்கள் உரிய விசாரணைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவது, அவர்கள் எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படாமல் கண்ணியமான வாழ்வொன்றை அமைத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது என்கிற வகையில் இச் சட்டம் அமைய வேண்டும்..

இப்படிப் புலம் பெயர நேர்ந்தவர்களுக்கு உரிய முறையான, முறைசாராத மற்றும் தொழிற் கல்விகளை அளிப்பது, அவர்களது (உடல்) நலத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வேலை வாய்ப்புக்களுக்கு வழி செய்வது, அவர்கள் அவர்களது சொந்தப் பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் ஆகியவற்றைத் தொடர்வதற்கு வாய்ப்பளிப்பது, கொடும் பாதிப்பிற்குரிய வகையில் உளவியல் ரீதியில் தாக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உரிய வகையில் ஆதுகாப்பு அளிப்பது என்கிற வகையில் அது அமைய வேண்டும். அவர்களுக்கும் பிற குடிமக்களைப் போலவே இந்த நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவது, எங்கு வேண்டுமானாலும் நிரந்தரத் தங்குமிடத்தை அமைத்துக் கொள்வது, பிற குடிமக்களைப் போலவே எந்தத் தொழிலையும் செய்வது, தம் நலனுக்கான அமைப்புக்களை உருவாக்குவது, பத்திரிகைகள் உள்ளிட்ட கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலான உரிமைகள் வழங்கபட வேண்டும்.

1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் முதலியன இதற்குரிய முறையில் திருத்தப்பட வவேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் நிழற் சிறைகளை அமைக்கும் விதிமுறைகளை நீக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாக நான் பலமுறை தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அறிக்கைகள் இணையத் தளங்களில் உள்ளன. சமீபகாலமாக எல்லா முகாம்களிலும் மேலெழுந்துள்ள ஒரு பிரச்சினை இளைஞர்கள் இந்தியாவிலிருந்து பிற மேலை நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இருப்பதுதான். ஈழ அகதி முகாம்களில் இருப்போர் நிறையப் பணம் கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து இதற்கான முகமைகளின் மூலம் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதும் அம்முயற்சியில் பலர் உயிரிழப்பதும், கைதாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே ஈழ அகதிகள் வாழ்ந்து கொண்டுள்ளனர். சொந்த மண்ணின் வாசத்தை நுகராத ஒரு தலைமுறை இந்த மண்ணில் பிறந்து வளர்ந்துள்ளது. குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளும், அகதிகளுக்குரிய சட்டப் பாதுக்காப்புகளுமின்றி ஆனாலும் ‘அகதி’ப் பட்டத்தைச் சுமந்து கொண்டு எந்நாளும் ‘அந்நியராக’ வாழ்வதை இவர்கள் வெறுக்கின்றனர். இதே நேரத்திலும், ஏன் அதற்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தவர்களுக்கெல்லாம் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளபோது தொப்பூள் கொடி உறவு குறித்து முழங்கும் அரசியல்வாதிகள் மலிந்த நமது நாட்டில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்காதிருப்பது வருந்தத் தக்கது.

எனவே உருவாகும் சட்டத்தில் இபடி நீண்ட ஆண்டுகளாக இங்கே அகதிகளாக வாழ்வோருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வழிமுறைகளையும் உள்ளடக்க வேண்டும்.

1951ம் ஆண்டு அகதிகள் உடன்பாட்டில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கும், உரிய வகையில் தேசிய அளவிலான ஏதிலியர் கொள்கை ஒன்றையும் சட்டமொன்றையும் உருவாக்குவதற்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இங்கு வாழும் ஏதிலியர்களுக்கும் நம் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்கி இம்மக்கள் நம்மவர்களுடன், காந்தியடிகள் சொன்னதுபோல, “பாலில் சக்கரை கலப்பதுபோல” இரண்டறக் கலப்பதற்கு ஏதிலியர் பிரச்சினையில் அக்கறையுள்ளோர் உதவ வேண்டும். காந்தியடிகளின் இந்த உதாரணம் கூட இங்கு முழுமையாகப் பொருந்தாது. பாலில் சர்க்கரை போலத் தம் அடையாளங்களை ஏதிலியர் இழக்க வேண்டியதில்லை. தத்தம் அடையாளங்களுடன் அவர்கள் நம்மவர்களாக ஆகவேண்டும்.