பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டம் – அழிக்கப்படும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் 

மோடி – அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு அதன் “செல்லத் திட்டங்களில்” ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அவர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள் என்றால் யார் தோற்றுள்ளது?

வேறு யாரும் இல்லை. நமது அரசியல் சட்டம்தான் தன் முகத்தில் ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியுள்ளது. 1950 ஜனவரி 26ல் நிறைவேற்றப்பட்ட நமது அரசியல் சட்டம் உலகின் பல ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல் சட்டங்களைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பானது என்பதை அரசியல் சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐ.நா அவை உருவாக்கப்பட்டு போர்க்கால மனித உரிமை மீறல்களை எல்லாம் கணக்கில் கொண்டு மனித உரிமைப் பிரகடனம் உருவான பின்னணியில் அமைக்கப்பட்டதுதான் நம் அரசியல் சட்ட அவை. சிவில் உரிமைகள், மதம், இனம் தொடர்பான உரிமைகள் என எல்லாம் வரையறுக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நம் அரசியல் சட்டம் இந்த உலகளாவிய பிரகடனங்களில் உள்ள நல்ல கூறுகளை எல்லாம் உள்வாங்கி இயற்றப்பட்ட ஒன்று.

ஆனால் பா.ஜ.கவும் அதைப் பின்னின்று இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்த அரசியல் சட்டத்தை எந்நாளும் ஏற்றுக் கொண்டதில்லை. 1999ல் முதன் முதலாக வாஜ்பேயீ தலைமையில் பா.ஜ.க கூட்டணி அரசு உருவானபோது அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் நமது அரசியல் சட்டம் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்ததுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கப் பரிவார அமைப்புகளில் ஒன்று ஸ்லேட்டன் தீவில் வாஜ்பேயிக்கு வரவேற்பு அளித்தது. அந்த நிகழ்வில் அவர், “இன்று நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவோம். அப்போது நாம் நமது கனவு இந்தியாவை உருவாக்குவோம்” என முழங்கியதை யாரும் மறந்துவிட முடியாது.

2014 தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாவிடாலும் பெரும்பான்மைத் தொகுதிகளில் வென்றது, அப்போதைய தேர்தல் அறிக்கையிலேயே இந்துக்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை வழங்குவது பற்றிக் கூறப்பட்டது. இந்தியா பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற நாடு.. இங்கு இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை. ஆனாலும் அவர்கள் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டார்கள்.

இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்கிற கருத்தை அவர்கள் யூத இனவாத அரசான இஸ்ரேலின் ‘அலியாஹ்’ கொள்கையிலிருந்து எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.., உலகின் எந்த நாடுகளில் இருந்தும் வருகிற யூதர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ சட்டம். அதுபோல உலகின் எந்த நாடுகளிலிருந்தும் வரும் இந்துக்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை அளிக்கப்படும் என பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை. அதோடு உச்சநீதிமன்றம் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் சட்ட அடிப்படைகளைப் பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிவிட இயலாது என்பதை உறுதி செய்துள்ளது. அதனால் இன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு பா.ஜ.க அறுதிப் பெரும்பானமையைப் பெற்றிருந்தபோதும் இந்தியாவை பெரும்பான்மை மத அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இப்படித் தம் அரசியல் கொள்கைகளை நசுக்கி நசுக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

2014ல் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது அசாம் மாநிலத்தில் “குடியுரிமைப் பதிவேடு” தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்கள். “தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு” (National Register of Citizens)  உருவாக்கப்படும் என்பதையும் அறிவித்தார்கள். 1971 மார்ச் 24 என்பதை இறுதித் தேதியாக அறிவித்து அதற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்படும் என அறிவித்து ஆயிரம் கோடி ரூ செலவில் இன்று அது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அஸ்சாமில் வசிக்கும் 40 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தார்கள். அதிகம் கல்வி அறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் உரிய சான்றிதழ்களைக் கொடுக்க இயலாமல் பட்ட துன்பம் சொல்லி மாளாது. அதில் வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் இருந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்சினை ஆகியது.  மேலும் கால நீடிப்புச் செய்து பாதிக்கப்படவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது இன்று அஸ்சாமில் குடி உரிமை அற்றவர்களாக 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்திற்கு இடையூறாக உள்ளது. எனினும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருந்தலைவர் மோகன் பகவத் எந்த வகையிலும் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட மாட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார். பா.ஜ.க அமைச்சர்களும் அப்படியான வாக்குறுதிகளை அளித்தனர். அப்படி மத அடிப்படையில் சலுகைகள் காட்டுவது நமது அரசியல் சட்டத்தின் 14, 15, 21 முதலான பிரிவுகளுக்கு எதிரானது என்பது பற்றியெல்லாம் அவர்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை.

அஸ்சாமில் இப்படிக் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிட்லரின் கொடுமைகளின் ஊடாகக் குடியுரிமை அற்றுப் பெருந் துன்பங்களுக்கு ஆளானவர்களில் ஒருவரான அறிஞர் ஹன்னா ஆரென்ட் சொன்னது போல இன்றைய அரசமைப்புகளில் குடியுரிமை என்பது “உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை”. குடியுரிமை அற்றவர்களுக்கு வேலை பெறுவதற்கு, படிப்பதற்கு, வணிகம் செய்வதற்கு.. என எதற்கும் உரிமை இல்லை. அப்படிக் குடியுரிமை அற்ற இலட்சக் கணகானோரை என்ன செய்யப் போகிறார்கள்? அரசிடம் திட்டமில்லை. வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் ஆனாலும் இன்று அங்கே அவர்களை இந்திய அரசு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதற்கான ஒப்பந்தம் (deportation agreement) எதையும் இந்திய அரசு வங்க அரசுடன் செய்து கொள்ளவில்லை. மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை (detention centers) அமைத்து அடைத்து வைக்கப் போகிறார்களா? அப்படியான முகாம்கள் அமைக்கப்படுவதாகபும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது இந்திய அளவில் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்திருப்பதோடு அதன் முதற் கட்டமாக இன்று “குடியுரிமை திருத்த மசோதா” (Ccitizenship Amendment Bill) அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.முக உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் துணையோடு இது நடந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் தி.மு.க முதலான கட்சிகள் எதிர்த்துள்ளன.

இச் சட்டம் குடியுரிமை அற்றவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி டிசம்பர் 31, 2014 என்கிறது. அதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க மூடியும். குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை இதன் மூலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசின் இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் மூன்று முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமையை அளிக்கிறது. அதோடு இந்த உரிமை இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைவதற்கான 1920ம் ஆண்டு ‘கடவுச் சீட்டுச் சட்டம்’ (Passport Act) மற்றும் 1946ம் ஆண்டு ‘வெளிநாட்டர் சட்டம்’ (Foreigners Act) ஆகியவற்றின் தடைகளிலிருந்து இந்த ஆறு மதத்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை.  வேறு சொற்களில் சொல்வதானால் இந்த நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி மற்றவர்களுக்கு அளிக்கப்படும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை என்பதைப் பார்த்தோம்.

ஆனால் இந்த அரசியல் சட்ட மீறலை நியாயப்படுத்த அமித்ஷா சொல்லும் ‘நியாயம்’ ஒன்றுதான். அதாவது இந்த மூன்றும் முஸ்லிம் நாடுகளாம். எனவே அங்கிருந்து முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வருவதற்கு வாய்ப்பில்லையாம். அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வருபவர்களுக்காகத்தான் இந்தச் சலுகைகள் என்றால் அண்டை நாடுகளான மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், இலங்கையிலிருந்து வரும் நம் தமிழகள் ஆகியோரை இச்சட்டம் ஏன் உள்ளடக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலில்லை. நேபாளத்திற்கும் நம் நாட்டிற்கும் ஒரே எல்லைக் கோடுதான். இதுநாள்வரை எளிதில் அங்கும் இங்கும் போய்வரக் கூடிய நிலைதான் உள்ளது. பெரிய அளவில் அங்கிருந்து கூர்காக்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். பின் ஏன் இன்றைய சட்டத்தில் நேபாளம் உள்ளடக்கப்படவில்லை?

அடுத்து இந்த மூன்று நாடுகளும் முஸ்லிம் நாடுகளானாலும் அவற்றில் ஷியா முஸ்லிம்கள், நாத்திகர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும் அவர்களுக்கும் இன்றைய சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆக மத அடிப்படையில் வேறுபாடுகாட்டும் வகையில் நமது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிராக இன்றைய இந்தச் சட்டம் அமைகிறது.  மதச்சார்பின்மையைப் புறக்கணிக்கிறது.

முன்னதாக மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது அதில் இந்த மூன்று நாடுகளிலும் வாழும், இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு” (persecuted minority) மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமித்ஷா முன்வைத்து நிறைவேற்றியுள்ள வடிவில் “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்” எனும் பதம் நீக்கப்பட்டுள்ளது. காரணங்கள் காட்டப்படவில்லை. இவ்வாறு துன்புறுத்தல் இல்லாதபோதும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இதன் மூலம் அமித்ஷா சொல்லும் சேதி.  இஸ்ரேலின் அலியாஹ் சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது.

ஆக மத அடிப்படையில் 15 கோடிக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் மட்டும் இன்று இந்திய மக்களிடையே தனியே பிரித்து நிறுத்தப்படுகின்றனர்.

அஸ்சாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம் முதலான மாநிலங்களின் ‘பழங்குடிப் பகுதிகள்’ (tribal areas) மற்றும் அருணாசலப் பிரதேசம், நாகாலந்து, மிசோராம் முதலான மாநிலங்களின் ‘உட்கோட்டு அனுமதி’ பகுதிகள் (inner-line permit areas) ஆகியவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு இந்த விலக்கு அளிக்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை. அதற்கும் விலக்கு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நிகழ்கின்றன என்றால் அதைத் தடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. வங்க தேசத்திலிருந்து அஸ்சாமுக்குள் ஊடுருவல் நடப்பதைத் தடுக்க இன்று இரட்டை முள்வேலிகள் வைத்து, இராணுவக் காவல் அமைத்து ஊடுருவல் தடுக்கப்படுகிறது. அதை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. ஊடுருவலைச் சாக்காக வைத்துக் கொண்டு இவ்வாறு முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்ட உரிமைகளிலிருந்து ஒதுக்கப்படுவதைத்தான் இன்று நம்மால் ஏற்க இயலவில்லை.

இன்று மோடி – அமித்ஷா அரசின் இந்த நடவடிக்கை உலக அளவில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தடை நடவடிக்கைகள் (sanctions) மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசின் மத உரிமைகள் தொடர்பான கூட்டாட்சி முகமை ஒன்று பரிந்துரைத்துள்ளது.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ரொமிலாதாபர், பிரபாத் பட்நாயக், அருணா ராய் முதலான “மனச்சாட்சியுள்ள” 600 முக்கிய அறிஞர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக இயக்கம் நடந்து கொண்டுள்ளது. ஆனாலும் பா,ஜ,க அரசு நம் அரசியல் சட்டத்திற்கு விரோதமான இந்தச் சட்டத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றில் இந்த நாட்கள் பெருங் களங்கமாகப் பதியும். இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அன்றைய அட்டர்னி ஜெனெரல் நிரேன் டே, “அவசர நிலை அறிவிக்கப்பட்டால் அதன்பின் குடிமக்களுக்குத் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிடையாது” என கரகரத்த குரலில் சொல்லிய அந்தக் காட்சிதான் இன்றைய சூழலில் நினைவுக்கு வருகிறது.

இன்றைய அரசமைப்பில் குடியுரிமை என்பது உயிரினும் மேலானது அது இன்று ஆபத்துக்குள்ளாகி உள்ளது. :

இந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்?

(மார்ச் 2019  ‘மக்கள் களம்’ இதழில் வெளி வந்தது)

சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அஹமட் தர் எனும் 22 வயது இளைஞனின் தற்கொலைத் தாக்குதலால் (2019  பிப்ரவரி 14) குறைந்த பட்சம் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து பத்தொன்பது நாட்கள் கழித்து இக்கட்டுரையை ‘டைப்’ செய்து கொண்டுள்ளேன். இடையில் நிறைய நடந்துவிட்டன. ஆசியாவின் அணுவல்லமை மிக்க இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு யுத்தம் தொடங்கி மிகப் பெரிய அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமோ என்கிற அச்சம் இப்போது சற்றே குறைந்துள்ளது. இந்நிலை உருவானதில்,  நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பாக் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் காரணமாகியுள்ளதை உலகமே பாராட்டுகிறது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொழுது இளைஞன் ஒருவன் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்திவிடுவான் என யாரும் நினைக்கவில்லை. மோடி அரசு பதவி ஏற்றபின் (2014) காஷ்மீரப் பள்ளத்தாக்கில் வேகமாக அமைதி குலைந்தது.எனினும், இதற்கும் முந்தைய பல ஆண்டுகால முஜாஹிதீன் பயங்கரவாதத்திற்கும் 2014 க்குப் பிந்திய அமைதியின்மைக்கும் ஒரு வேறுபாடு உண்டு.2014 க்கும்முன் பள்ளத்தாக்கிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில்காஷ்மீர மகளைக் காட்டிலும் அதிக அளவில் அந்நிய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட முஜாகிதீன்களே அதிகமானதும், முக்கியமானதுமான பங்கு வகித்தனர்.

2014க்குப் பிந்திய இந்த எழுச்சியில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் காஷ்மிர் முஸ்லிம் இளைஞர்களே முக்கியமாக இருந்தனர்.வீதிகளில் கூடி கற்களை வீசி, பெல்லட் குண்டுகளுக்குத் தம் கண்களைப் பறி கொடுத்த நூற்றுக்கணக்கானோரிடம் பெரிய ஆயுதங்களும் இருந்ததில்லை.அவர்கள் பயிற்சிபெற்ற முஜாஹிதீன்களும் இல்லை. புர்வான் வானி  ஆசிரியக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு இளைஞன், அவனது அண்ணன் ஆசையாக வாங்கியிருந்த ஒரு மோட்டார் சைகிளை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனை ஒரு இந்தியவீரன் பிடித்துச் சென்று, கடும் சித்திரவதைகளுக்குப் பின் அவன் கொல்லப்படுகிறான். இது அங்கு அன்றாட நிகழ்வாகிப்போன ஒன்று.சுமார் ஆறு குடிமக்களுக்கு ஒரு படை வீரன் என உலகிலேயே அதிக அளவில் படைகள் நிறுத்தப்பட்டுள்ள மிகச் சில பகுதிகளில் காஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒன்று.இந்தியாவின் எந்தச் சட்டங்களும் நெருங்க இயலாத அளவிற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய படைவீரர்கள் அவர்கள், அவர்கள் செய்யாத கொடுமைகள் இல்லை. அண்ணன் இவ்வாறு இந்தியப் படை வீரர்களால்  கொல்லப்பட்டதை அறியும் புர்ஹான் வானி ஒரு முஜாகிதீன் ஆகிறான். அந்த 22 வயது இளைஞனை இந்திய இராணுவம் பிடித்துக் கைது செய்ய வாய்ப்பொன்று கிடைத்தபோது அவனைக் கைது செய்து விசாரிக்காமல் சுட்டுக் கொன்றபோது (2016) பள்ளத் தாக்கே கிளர்ந்து எழுந்தது. அவனது மரண ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்.

அதற்குப் பின் அங்கு முந்திய சில ஆண்டுகளில் இருந்த அமைதி குலைந்தது. ஆனால் இந்த அமைதிக் குலைவுக்குக் காரணம் பயங்கரவாதிகளோ இல்லை அந்நிய மண்ணில் பயிற்சி பெற்றவர்களோ இல்லை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள்தான, கைகளில் வெறும் கற்களைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லாமல் வீதிகளில் நின்றனர், இராணுவத்தினர் மீது கற்களை வீசினர். இராணுவம் ‘பெல்லட்’ குண்டுகளால் ஆயிரக் கணக்கானோரின் கண்களைக் குருடாக்கிய கதையை உலகறியும்.இப்படியான ஒரு பின்னணியில்தான் புர்ஹான் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் கூட முடிவடையும் முன் இன்றைய போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

நாற்பதுக்கும் குறையாத இந்தியப் ம்படைவீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வோடு இன்றைய அமைதியின்மையும் போர்ச்சூழலும் உருவாகியுள்ளது.

113059-yzpstdrwyp-1550154353

இந்தத் தாக்குதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1இன்று இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான இந்தத் தற்கொலைப் போரளியும் உள்ளூர் காஷ்மீரிதான்.அவன் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவன் ஆனாலும் அவன் பாகிஸ்தானியோ இல்லை வெளியிலிருந்து வந்தவனோ அல்ல, அவன் ஒரு உள்ளூர் காஷ்மீரி.அப்படிப் பொது மக்களிலிருந்து கோபத்துடன் கைகளில் கற்களை மட்டும் ஏந்தி வந்து கண்களைக் குருடாக்கிக் கொண்டஇளைஞர்கள் இப்போது ஒரு தலைமுறைக்குப் பின் மீண்டும் பயிற்சியளிக்கப்பட்ட முஜாஹிதீன்களாகக் பயங்கரமான வெடிமருந்துகளுடன் தன்னை அழித்துக் கொண்டு கூடவே படைவீரர்களுக்குப் பேரழிவு ஏற்படுத்த்ம் தற்கொலைப் போராளி ஆகிறான். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.மீண்டும் நிலைமை பழைய நிலைக்குத் திரும்புகிறது.காஷ்மீர இளைஞர்கள் இன்று முழுமையாக அந்நியமாகிப் போயுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.இதும ்கட்ந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட நிலை..

அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பயங்கரவாதத்திற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் ஜெய்ஷ்ஏ முஹமது அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது..

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்தவர்கள்.அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாத நிலையில் பல காலம் ஆயுதங்கள் எடுக்காமல் போராடி இறுதியில் ஆயுதப் போராட்டத்துத் தள்ளப்படுகின்றனர்.

நீண்ட கால ஆயுதப் போராட்டம், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்றெல்லாம் இருந்து பின் அவர்கள் சற்றே ஓய்ந்திருந்து 2008 வாக்கில் அமைதி வழியில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து பேரணி ஒன்றிற்காகத்  திரண்ட போது மன்மோகன் சிங் அரசு அதை ஒடுக்கியது.

எனினும் 2014 வரை அங்கு பெரிய அளவில் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் இல்லை.அதாவது நிலைமை சரியாகிவிட்டது என்பதில்லை.ஏதோ ஒரு வகையில் காஷ்மீரிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமாக இருந்தது.

மோடி அரசு பதவி ஏற்றபின் நிலமை மீண்டும் மோசமானது.ஆனால் அப்போதும் கூட காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றையப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவன் வெளியிலிருந்து வந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவ்பன் அல்ல, ஜெய்ஷ் அமைப்பு ஒரு உள்ளூர் இளைஞனை இதற்குப் பயன்படுத்தியுள்ளது என்பது சிந்திக்கத் தக்கது. மீண்டும் காஷ்மீர் மக்களின் இந்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த ஐந்தாண்டுகளில் ஜெய்ஷ் போன்ற அமைப்புகள் உள் நுழையக் கூடிய போராட்டமாக மாறியுள்ளது.மக்கள் முற்றிலும் அந்நியமாகியுள்ல நிலையை இன்று ஜெய்ஷ் முதலான அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எந்தப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக இல்லை எனும் நிலைபாட்டை எடுத்துக் கொண்டு, இருக்கும் நிலையில் எந்த மாற்ரத்தையும் ஏற்படுத்த மோடியோ இல்லை ராஜ்நாத் சிங்கோ தயாராக இல்லத சூழலில் மீண்டும் அங்கே பயங்கரவாதம் தலைஎடுத்துள்ளது.

பிரச்சினை இங்கே இருக்கிறது.

பாகிஸ்தானுடனான ஒரு யுத்தம் இதற்குத் தீர்வாகி விடுமா?

1971 க்குப் பின் மீண்டும் இன்றுதான் இந்திய விமானப் படை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் மீதுஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.அதைக் கண்டு எல்லோரும் நடுங்கினோம்.நாம் மட்டுமல்ல உலகே நடுங்கியது.இரண்டும் அணு ஆயுதங்களைக் கையில் கொண்ட நாடுகள்.என்கிற அச்சம் எல்லோருக்கும் உள்ளது.இது ஒரு சமநிலையை எற்படுத்தி அது போரைத் தடுக்க உதவுமா?

ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தியா பாக்கைக் காட்டிலும் 8.5 மடங்கு பொருளாதார பலமும், இரண்டு மடங்கு படைபலமும் உள்ள நாடு.அதன் தாக்குதல் வலிமை பாக்கைவிட மிக அதிகம்,இந்நிலையில் போரில் சமநிலை இல்லாதபோது தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் ஆசை அதற்கு வரலாம்.முதல் ஆசை யாருக்கு வந்தால் என்ன, அழிவது இருவருந்தான்.

ஆனால் இப்படியான போர்ச்சூழல் உருவாகும் என புல்வாமா தாக்குதல் நடக்கும் வரை யாரும்  எதிர் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுகும் இடையில் ஒரு போர்உருவாகலாம் என ஒரு மாதம் முன்பே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது உண்மைதான்.ட்ரம்பும் கூட அப்படி இருவாரங்களுக்கு முன் ஒருமுறை கூறியது செய்தியானது. இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற நம்பிக்கைக்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளதுதான், இந்தியாவைக் காட்டிலும் பாக்கை அதிகமாக ஆதரித்து வந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக வெளிப்படையாக பாக்கைக் கண்டிக்கத் தொடங்கி இருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான பலமான சக்தியாக இருந்த ருஷ்யா இப்போது பலமிழந்து போயிருந்ததாலும், மோடியின் இந்தியா மிகத் தீவிரமாக அமெர்ரிக்க – இஸ்ரேல் அணியில் இணைந்து நின்றதாலும் இப்போது அமெரிக்கா துணிச்சலாக பாக்கின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாகிஸ்தான் தஞ்சமடைய இபோது சீனாவைத் தவிர வேறு கதி இல்லை என்கிற நிலையில் ட்ரம்ப் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து பாக்கிற்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார்..ஜனவரி 2018ல் அமெரிக்கா 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்திய போது பாக்கின் பொருளாதாரமே அட்டம் கண்டது.இதன் விளைவாக பாக்கும் லக்‌ஷர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது முதலான அமைப்புகளுக்கான ஆதரவுகளை நிறுத்தியிருந்தது. அவ்வமைப்புகளும் தம் பயிற்சி முகாம்களைக் கலைத்துச் சிதறி இருந்தன, அதனால்தான் இன்றைய பிரச்சினைகளுக்குச் சில நாட்கள் முன் (பிப்ரவரி 2019) நடைபெற்ற ம்யூனிச் பாதுகாப்பு அமைப்புச் சந்திப்பில் (Munich Security Forum) இந்தியா – பாக் உரசல் குறித்து எந்த விவாதமும் நடை பெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதல் நடந்தது.நரேந்திர மோடியைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருக்கும் அச்சம்தான்.போர்ச்சூழல் உருவாகும் என எதிர்பார்க்காதவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.நரேந்திர மோடியும் பாஜகவினரும் தேசிய உணர்வை மிகத் தீவிரமாக விசிறத் தொடங்கினர்.கம்யூனிஸ்டுகள் உட்பட யாரும் தேசத் துரோகியாக விரும்பாமல் யார் அதிக தேச பக்தர் என நிறுவிக் கொள்வதில் மும்முரமாயினர்.

பிப்ரவரி 26 நள்ளிரவில் இந்தியாவின் மிர்ரேஜ் 2000 விமானங்கள் பன்னிரண்டு பாக் எல்லைக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷே அமைப்பின் பயங்கரவாத முகாம் ஒன்றில் குண்டுகளை வீசி அதிலிருந்த சுமார் 250லிருந்து 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் பெரிய அளவில் செய்திகள் பரப்பப் பட்டன. இது இந்தியாவின் இரண்டாவது “துல்லியத் தாக்குதல்“ (surgical strike) எனக் கூறப்பட்டது. தாக்குதலுக்குச் சில மணி நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய் கோகலே இது ஒரு “இராணுவ நடைமுறையிலான தாக்குதல் அல்ல முன்கூட்டிய பாதுகாப்புத் தாக்குதல்” – எனும் பொருள் பட “preemptive nonmilitary strike” என்றும், “இது பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்” என்றும் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் பங்கிற்கு, “இது இராணுவ நடவடிக்கை அல்ல. ஒரு சிவிலியன் கூட பாதிக்கப்படவில்லை” – என்றார்.

பாக் இராணுவம் தன் பங்கிற்கு, “இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என முழங்கியது.அதாவது தாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என எச்சரித்தது.

சரி நிச்சயம் போர்தான் என அஞ்சினோம்.1971க்குப் பின் பல்வேறு சந்ந்தர்ப்பங்களில் மிகத்தீவிரமாகப் பிரச்சினைகள் வந்த போதெல்லாம் கூட இப்படி இரண்டு நாடுகளுமே எல்லை தாண்டித் தாக்குதலை நடத்தியதில்லை.இனி என்ன ஆகுமோ என்கிற அச்சம் நம் எல்லோரையும் சூழ்ந்தது.

இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாகப் பிரச்சினையைக் கையாண்டது பாக் பிரதமர் இம்ரான் கான் தான்.இரு நாடுகளும் மிகப் பெரிய அழிவாயுதங்களைச் சுமந்துள்ள நாடுகள்.நமக்குள் இப்படியான மோதல் எங்கு கொண்டுபோய் விடும்.பொறுமையாகப் பிரச்சினையை அணுகுவோம் என்றும் அப்படியான பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் தன் நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். இன்னொரு பக்கம் பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கி 300 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பொய் எனவும், அழிக்கப்பட்டது ஆள் இல்லாத மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதிதான் எனவும் சில புகைப்[பட ஆதாரங்களுடன் பாக் தரப்பில் செய்திகள் பரப்பப் பட்டன.l_440199_043358_updates

இந்த நேரத்தில் சில வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் களத்தில் இறங்கின. Huff Post இணைய இதழ் இந்தியா குண்டு வீசிய இடங்களில் வாழ்ந்த ஒரு சிலரைய நேர்கண்டு எழுதிய கட்டுரைச் செய்தி உலகம் முழுதும் பரவியது. ‘அல்ஜசீரா’ போன்ற ஊடகங்களும் அதே போன்ற செய்திகளை வெளியிட்டன.குண்டு வீசப்பட்ட இடத்தில் வாழும் நூரான் ஷேக் என்பவர் 250 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே அவர்களின் உடல்கள் எனக் கேட்டுச் சிரிப்பதைப் படத்துடன் ஹஃப் போஸ்ட் வெளியிட்டது. பெரிய முகாம் இருந்தது உண்மை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்தியாவின் இந்தத் தாக்க்குதல் நடந்த அடுத்த நாள் (பிப் 27) எல்லை தாண்டித் தமது எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய விமானப்படை விமானங்களைத் தான் சுட்டு வீ௳த்தியதாக பாக் அறிவித்தது. வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த விமான ஓட்டி அபிநந்தன் வர்த்தமானன் என்பவர் பாக் இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.இந்தப் பிரச்சினையிலும் இம்ரான் கான் உலகோர் வியக்கும்படி நடந்து கொண்டார். அபிநந்தனுக்கு நல்ல சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் இந்தியாவிடம் ஒப்படைத்தார்,

iaf-pilot-in-pakistani-custody-will-be-governed-under-geneva-convention-2019-02-27

பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷே பயங்கரவாத முகாமை அழித்து 300 பயங்கரவாதிகளைக் கொன்ற செய்தி பொய் என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நிறுவப்பட்ட பின் மார்ச் 04 அன்றுமத்திய தகவல்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அரசுத் தரப்பில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை எனவும் ஊடகங்கள்தான் அப்படிச் செய்தியைப் பரப்பிவிட்டன என்றும் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மார்ச் 4 அன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா அவர்கள், “எங்களின் நோக்கம் இலக்கைத் தாக்குவதுதானே ஒழிய எத்தனை பேர் இறந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார்.இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூடவே மார்ச் 3 அன்று இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித் ஷாஅளந்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லாம் உண்மைதான்.அதேபோல பாக் இராணுவம் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடிய நிலைமைகள் இருந்ததும் உண்மைதான்.ஆனால் நிலைமைகள் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.ஒரு நேரத்தில் தமிழகம் முழுவதும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்கள் எல்லாம் இங்கே ஆயுதப் பயிற்சி முகாம்களை அரசாதரவுடன் நடத்தியதை அறிவோம்.ராஜீவ் கொலைக்குப் பின்னர் அவை கலைத்து ஒடுக்கப்பட்டதையும் அறிவோம்.இன்று பாக்கிலும் ஓரளவு நிலைமை மாறியுள்ளது.பெரிய பயங்கரவாத முகாம்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.இராணுவமும் முன்னைப்போல இப்போது அரசை மீறிய அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கும் நிலையில் இல்லை.இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணு வல்லமை உடைய நாடுகள் மட்டுமல்ல. வறுமை நிறைந்த நாடுகள், அவை தமக்குள் போரிட்டுக் கொள்வதைப்போல மூடத் தனம் ஏதும் இருக்க இயலாது.balacot

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். 1947 தொடங்கி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்ந்தால் அவற்றுக்குப் பின் காஷ்மீர்ப் பிரச்சினை இருப்பது விளங்கும், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் வேறு எத்தனை நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டாலும் அங்கே அமைதியை நிலைநாட்ட முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனும் நிலையை மேற்கொண்டிருக்கும் வரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை.

மேலும் இரு குறிப்புகள்

  1. நாடுகளுக்கிடையேயான கடைபிடிக்கப்படும் சில அவசியமான ஒழுங்குகளில் (Westphalian Order) ஒன்று எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்கோட்டித் தாண்டிப் பிரவேசிக்கவோ தாக்கவோ கூடாது என்பது. 1971 க்குப் பின் நிலைமைகள் எவ்வளவு மோசமான போதும் இந்தியாவும் பாக்கும் அதைக் கடைபிடித்து வந்துள்ளன. எல்லை தாண்டித் தாக்குதல் செய்வதென்பது போர் தொடங்கிவிட்டதான ஓர் அறிவிப்பிற்குச் சமம். கிரீமியாவை ருஷ்யா இணைத்துக் கொண்டதை அவ்வாறே பன்னாட்டுச் சமூகம் எதிர் கொண்டுள்ளது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ருஷ்யாவின் தலையீடும் இவ்வாறே கருதப்படுகிறது. எனினும் இதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவிற்குள் இதுவரை எல்லைதாண்டியத் தாக்குதல் நடத்தியதில்லை. இந்தியா 1971 க்குப் பின் இதுவரை இதுவரை இப்படியான செயற்பாடுகளில் இறங்காதது பன்னாட்டளவில் அதன் மீதான மதிப்பு குறையாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்..
  1. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தியா மேற்கொண்ட சில கண்டிக்கத் தக்க நடவடிகைகளில் ஒன்று ஹுரியத் தலைவர்கள் உட்பட சுமார் 170 பேர்களுக்கு வழங்கி வந்த பாதுபாப்பை இந்திய அரசு ரத்து செய்தது. இதில் உயிராபத்து உள்ள பல காஷ்மீர அரசியல் கட்சித் தலைவர்களும் அடக்கம். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் காஷ்மீர மாணவர்கள், வணிகர்கள், ஊழியர்கள் முதலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்தனர். “இயல்பான தேசபக்தியின் எதிர் விளைவு என இதை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர். டெராடூனில் ஒரு கல்வி நிறுவனம் அடுத்த ஆண்டுமுதல் காஷ்மீர மாணவர்களுக்குத் தம் நிறுவனத்தில் இடமளிப்பதில்லை என பா.ஜ.க மாணவர் அணிக்கு எழுதிக் கொடுத்துள்ள செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும் நடந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் ஒரு நாள் கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 

பீமா கொரெகான் எழுச்சியைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்?

கடந்த நான்கு நாட்களில் வெளியான இரண்டு செய்திகள் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தன. ஒன்று சென்ற ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீமா கொரேகானில் நடைபெற்ற கலவரத்திற்கு மாஓயிஸ்டுகள்தான் காரணம் என சமூகப் போராளிகள் ஐவர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்தி. அந்த ஐவரில் ஒருவர் பிரதமர் மோடியைக் கொலை செய்யும் முயற்சி ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சொல்லப்பட்டது. மற்றொன்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கூறிய ஒரு குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அரசே ஒத்துக் கொண்டுள்ள செய்தி. மோடி முன்வைத்த குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. குஜராத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ்காரர்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்பதுதான் அது. தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படியெல்லாம் பொய் சொல்வது எங்கு கொண்டுபோய் விடும்?.

மாஓயிஸ்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஐவர் கைதாகி இருப்பது குறித்த செய்தியும் இப்படித் தேர்தலுக்காக அவிழ்த்து விடப்பட்ட பொய்தானா இல்லை அதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதைச் சற்று விரிவாக அலசுவோம். பீமா கொரேகான் வன்முறைக்குக் காரணம் இந்த ஐவர் என்கிறார்கள். அதென்ன பீமா கொரெகான்?
1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரத்தில் உள்ள ‘கொரேகான் பீமா’ என்னுமிடத்தில் 824 வீரர்களைக் கொண்ட மகர் தலித் படையின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் படைகளை வென்றது. பாஜிராவின் படையில் அப்போது 28,000 மராத்தா வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி என்பது மட்டுமல்ல தலித் வீரத்தின் ஒரு அழியாத சான்றாகவும் இது அமைந்தது.. உயர் சாதி பேஷ்வா ஆட்சி என்பது பெரிய அளவில் வருணாசிரமம், தீண்டாமை ஆகியவற்றைப் பேணும் ஒன்றாக இருந்து வந்தது. தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இடுப்பில் விளக்குமாறைக் கட்டிக் கொண்டுதான் நடந்து செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது. தலித்கள் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கும் அந்த வெற்றி ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்த வரலாறு இன்றைய ஆட்சியாளர்களுக்குப் .பிடிக்காத ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. எனினும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இப்படியான தலித் மக்களின் வீரம் செறிந்த வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1927 முதல் ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்றும் தலித் உணர்வாளர்கள் கொரேகான் பீமாவில் கூடி உறுதி மேற்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தார்.

இந்த வரலாற்று நிகழ்வின் இருநூறாண்டு நிறைவு சென்ற ஜன 1, 2018 அன்று அமைந்ததை ஒட்டி பல்வேறு தலித் அமைப்புகளும் இணைந்து அதைக் கொண்டாடுவதென முடிவெடுத்தன. முதல் நாள் (டிசம்பர் 31, 2017) அன்று அம்பேத்கர் அமைப்புகள் பலவும் புனேயில் உள்ள ஷானிவர்வதா எனும் இடத்தில் கூடி, “நவீன பேஷ்வாவிய ஒழிப்புப் பிரகடனம்” எனும் ஒரு ஒன்றுகூடலைச் செய்தனர். அதற்குப் ‘பிரகடனக் கூடல்’ (எல்கார் பரிஷத்) எனப் பெயரும் இட்டனர்.

புதிய தலித் எழுச்சியின் சின்னமாக இன்று உருப்பெற்றுள்ள ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் (JNU) போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை ஏகியவர்களில் ஒருவரான உமர் காலித், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் போராடி உயிர் நீத்த ரோஹித் வெமுலாவின் அன்னை ராதிகா வெமுலா எனப் பலரும் அதில் பங்கு பெற்றனர். தலித்கள், சிறுபான்மையினர், இதர பிற்பத்தப்பட்டோர், இடதுசாரிகள் ஆகியோரின் ஒன்றிணைவாக அது அமைந்தது. இந்த ஒற்றுமையை ஆதிக்கத்தில் உள்ளோர் ஆத்திரத்துடன் நோக்கினர்.

அடுத்த நாள் (ஜன 1, 2018) பேஷ்வாக்கள் ஒழிக்கப்பட்ட 200ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்திற்காகப் பெருந்திரளாக பீமா கொரேகானில் மக்கள் கூடியிருந்தபோது ஒரு கும்பல் திரண்டு வந்து அதைத் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான .மனோகர் பிதே என்பவரின் ‘சிரீ சிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ எனும் அமைப்பினரும், பா.ஜ.க வின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் மிலிந்த் ஏக்போட் என்பவரின் ‘சமஸ்த் இந்து ஆகாடி’ எனும் அமைப்பினரும்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என எல்கார் பரிசத் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இரு தரப்புக்கும் இடையேயான கல்லெறி வீச்சில் அவ்வழியே சென்ற 28 வயது இளைஞர் ஒருவர் இறந்தார்.

2014 தேர்தலின்போது நரேந்திர மோடி மனோகர் பிதேயைச் சந்தித்து “குருஜி” என விளித்ததை இன்று ஊடகங்கள் நினைவூட்டுகின்றன. இந்தக் கலவரத்திற்குக் காரணமானவர் என இன்று தலித் மக்களால் குற்றம் சாட்டப்படுகிற மனோகர் பிதேயின் மீது இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவரைக் குற்றமற்றவர் என அறிவித்தார். கலவரத்திற்குக் காரணமான இன்னொருவரான மிலிந்த் ஏக்போடே கைது செய்யப்பட்டாலும் விரைவில் அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பீமா கரேகான் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் இல்லை எனவும் குறிப்பாக மனோகர் பிதேக்கும் கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. தலித்கள்தான் காரணம் எனச் சொல்ல இயலாதாகையால் தலித்கள் மத்தியில் மாஓயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர் என இன்று பா.ஜ.க அரசு சொல்கிறது.. ஆனால் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ளவரும் தேவேந்திர பட்நாவிஸ் அமைச்சரவையில் முத்த அமைச்சராக உள்ளவருமான தலித் தலைவர் ராம்தாஸ் அதாவலே இதை மறுக்கிறார். மனோகர் பிதேதான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் எல்கார் பரிஷத்தில் மாஓயிஸ்டுகள் ஊடுருவிவிட்டதாகச் சொல்வது பொய் எனவும் அதாவலே கூறுகிறார். இதைச் சுட்டிக் காட்டி, “அமைச்சரவைக்குள் ஏன் இந்த முரண், எது உண்மை?” என இன்று காங்கிரஸ் கேட்கிறது. பா.ஜ.க மௌனம் காக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்று டெல்லி, மும்பை, நாக்பூர் முதலான இடங்களில் ஐந்து பேர்களை மாஓயிஸ்டுகள் எனவும் அவர்களே பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான ரோனா வில்சன் டெல்லியில் தங்கியுள்ள வீட்டைச் சோதனை இட்டபோது அவரது லேப்டாப்பில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லும் ஒரு சதித் திட்டம் தொடர்பான கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் ஒரு பரபரப்புச் செய்தியும் கூடவே வெளியிடப்பட்டுள்ளது., ராஜீவ் காந்தியைக் கொன்றது போல மோடியையும் கொல்வது என்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாம்.

இன்று நாடெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்செய்தியை நம்புவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில் இன்று பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் ஐவரும் மிக வெளிப்படையாக இயங்கியவர்கள். கேரளத்தைச் சேர்ந்த ரொனா வில்சன் டெல்லி JNUவில் ஆய்வை முடித்துவிட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர். இவர் பீமா கொரேகானுக்குப் போனதுகூட இல்லை. ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கம்’ என்கிற அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தவர். நான் அவரை அறிவேன். மிகவும் மென்மையான மனிதர். இவ்வளவு படித்த ஒருவர் ஒரு பிரதமரைக் கொல்வது தொடர்பான சதித் திட்டத்தில் உண்மையிலேயே தொடர்புடையவராக இருக்கும் பட்சத்தில், அக்கடிதத்தை இப்படி அலட்சியமாகத் தன் லேப் டாப்பில் வைத்திருப்பார? இன்று எவ்வளவோ நவீனத் தொடர்பு வசதிகள் இருந்தும் ஒரு இயக்கம் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஒரு கடிதத்தை அனுப்பும் என்கிற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை.

மாஓயிஸ்ட் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இன்னொருவர் மஹேஷ் ராவ்த் : மும்பையில் உள்ள ‘சமூக அறிவியல்களுக்கான டாடா நிறுவனத்தில் (TISS) பயின்றவர். ‘பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஆய்வாளராக’ (PMRD) கட்சிரோலி பகுதியில் இருந்து செயல்பட்டவர். அரசு அல்லது கார்பொரேட் நடவடிக்கைகளால் இடப்பெயர்வுகளுக்கு ஆளான பரிதாபத்திற்குரிய மக்களுக்காகப் போராடும் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர். இவருக்கும் பீமாகொரேகான் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கைது செய்யப்பட்ட இன்னொருவரான ஷோமா சென், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியை. பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இருந்து செயல்படுபவர். ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPDR) எனும் முக்கிய மனித உரிமை அமைப்பில் இருந்து செயல்படுபவர். ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் என்ற போதிலும் ஒரு ஆய்வாளர் என்கிற வகையில் மாஒயிஸ்டுகள் குறித்த விமர்சனங்களும் அவருக்கு உண்டு என்கிறார் அவரது மகள் கோயல். கைதாகியுள்ள வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் ‘இந்திய மக்கள் வழக்குரைஞர் சங்கம்’ ( IAPL) எனும் அமைப்பில் உள்ளவர். மாஓயிஸ்ட் என இப்போது தண்டிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கை நடத்திக் கொண்டுள்ளதுதான் இவர் செய்த குற்றம்.

கைது செய்யப்பட்டுள்ள சுதிர் தவாலே புனேயைச் சேர்ந்த கவிஞர். ‘விக்ரோதி’ என்கிற மராத்திய இதழ் ஒன்றின் ஆசிரியர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மாஓஇஸ்ட் எனக் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகாலம் சிறையில் இருந்தவர். இவர்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் எல்லாமே மாஓயிஸ்ட் இயக்கங்கள் என அரசு சொல்கிறது. மாஒயிசச் சார்பு அவற்றில் சிலவற்றிற்கு இருக்கிறது என வைத்துக் கொண்டாலும் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக இயங்கியவர்கள். வன்முறை நடவடிக்கைகளிலோ ஆயுதப் போராட்டங்களிலோ ஈடுபட்டவர்கள் அல்ல. பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் பேரர் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி முதலான தலித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உருவாகிவரும் தலித் + இதர பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் + இடதுசாரிகள் எனும் ஒற்றுமையை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், பீமா கொரேகான் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள படேல் கமிஷனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே இந்தக் கைது நாடகம் நடத்தப்படுகிறது என இவர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி முதலானவையும் இக் கைதுகளைக் கண்டித்துள்ளன. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று மோடியைக் கொல்வது தொடர்பாகக் கண்டெடுக்கப்பட்ட கடிதமே போலியாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

இடைத் தேர்தல்களில் பா.ஜ.க தோற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்படி மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கதை கட்டி அனுதாப அலையை உருவாக்கும் முயற்சி இது எனவும் காங்கிரஸ் சொல்லியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளுக்குப் பின் மோடியின் பிம்பம் கொஞ்சம் குலைந்தபோது 2003 -2007 காலகட்டத்தில் இதேபோல மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பெரிய அளவில் செய்திகள் பரப்பியதையும், கொல்ல வந்தவர்கள் எனச் சொல்லிப் பல என்கவுன்டர் கொலைகள் செய்யப்பட்டதையும், பின்னர் அவை போலி என்கவுன்டர்கள் எனப் பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது. “மோடி வகுத்தளித்த கொள்கையின்படியே இந்த என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன” எனச் சிறையிலிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி டி..ஜி.வன்சாரா எழுதிய கடிதத்தையும் மறந்து விட இயலாது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 2003 ஏப்ரல் தொடங்கி 2014 ஏப்ரலுக்குள் மோடியைக் கொல்வதற்கு ஐந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டதையும் சமூக ஊடகங்கள் சுட்டிக் காட்டி உள்ளன.

பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்றால் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தட்டும். இப்படி மக்கள் பணி செய்யும் பேராசிரியர்கள், கவிஞர்கள், மனித உரிமைப் போராளிகளை எல்லாம் அப்படிப் பொய்க் குற்றம்சாட்டிக் கைது செய்வதும், ஒருவரது வீட்டில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் ஒன்று இருந்தாலே அவர் ஒரு மாஓயிஸ்ட் தீவிரவாதி எனச் சொல்லி UAPA முதலான கொடுஞ் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைப்பதையும் ஏற்க முடியாது.

நாடு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்வதைத்தான் இவை அனைத்தும் காட்டுகின்றன.

ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்

ippodhu.com, Nov 10, 2016

“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”

(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள  அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின்  மொழிபெயர்ப்பு அல்ல)

  1. 1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.
  2. இந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.
  3. ‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்? கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.
  4. ஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.
  5. எந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.

    6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.

    7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.

  6. எனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்?
  7. 1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  8. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.
  9. கடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்

பேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.

உண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.

இப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது  மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும்? ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா?

இன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள்  செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.

 

 

 

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்

அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து “தீண்டாமையைப் புரிந்துகொள்ளல்” என்றொரு ஆய்வை குஜராத்தில் மேற்கொண்டது. சுமார் 1600 கிராமங்களை முறைப்படி ஆய்வு செய்து அது அளித்த அறிக்கை ஏராளமான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் 2009ல் வெளி வந்தது.

இந்த அறிக்கை அளிக்கும் முடிவைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் : இன்னும் குஜராத் கிராமங்களில் 98 சதம் தலித்கள் தீண்டாமைக் கொடுமையை அநுபவிக்கின்றனர் என்பதுதான். ஆலய நுழைவு மறுக்கப்படுதல், பள்ளிகளில் தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுதல், தேநீர்க் கடைகளில் இரட்டை கிளாஸ் முறை முதலியன நடைமுறையில் உள்ளதை விரிவான ஆதாரங்களுடன் நவ்சர்ஜன் வெளியிட்டிருந்தது.

இது குறித்து உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழ்கள் விரிவாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த செய்தித் தலைப்புகள் வருமாறு:

1. “குஜராத்தில் தலித்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” – டிசம்பர் 7, 2009
2. “அதிரும் குஜராத்?” (Vibrant Gujarat) : 98 சத தலித்கள் மத்தியில் இரட்டை கிளாஸ் முறை” – டிசம்பர் 8, 2009. 3. “தலித் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் படுகிறஅவமானங்கள்” -டிச 9, 2009. டைம்ஸ் ஆப் இந்தியா அப்படி ஒன்றும் பா.ஜ.க எதிர்ப்பு நாளிதழல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தி மொழியிலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘அதிரும் குஜராத்’ தின் லட்சணம் இதுதானா என்கிற கேள்வியும் பரவலாக எழும்பியது.

ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த அறிக்கையை அப்படியே ஏற்காவிட்டாலும் ஒரு குழுவை அமைத்து மேலும் ஆய்வு செய்து இந்தக் குறைபாடுகளை ஏற்றுத் தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அப்படியான நிலை இல்லை என ஒரு முடிவைச் சொல்லுமாறு அவர் ஒரு குழுவை அமைத்தார். ‘சுற்றுச் சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மையம்’ (CEPT) எனும் நிறுவனத்தின் பேரா. ஆர்.பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழுவை நியமித்து, “சம வாய்ப்புகளில் சாதி வேறுபாட்டின் தாக்கம் : குஜராத் குறித்த ஓர் ஆய்வு” என்கிற பெயரில் ஒரு அறிக்கையை அளிக்கச் செய்தது.

இந்த ஆய்வு எத்தனை அபத்தமானது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜீவ் ஷா தனது ‘True lies’ எனும் ப்ளாக்கில் அம்பலப் படுத்தியுள்ளார்.

“குஜராத்தில் சாதி வேறுபாடு எதார்த்ததில் இல்லை. அது பார்க்கிறவர்களின் பார்வையில்தான் உள்ளது” -(caste discrimination is a matter of perceptions) என்பதுதான் இந்த அறிக்கை சுருக்கமாகச் சொல்லும் செய்தி.

1589 கிராமங்களை ஆய்வு செய்து நவ்சர்ஜன் அளித்த 300 பக்க அறிக்கையை “முறையாக அரிசீலனை செய்வதற்குப் பதிலாக. குஜராத்தில் நிலவும் கொடிய தீண்டாமையை நியாயப்படுத்தும் செயலையே” மோடியின் பார்த்தசாரதி அறிக்கை செய்துள்ளது என்கிறார் ராஜிவ் ஷா. வெறும் ஐந்து கிராமங்களுக்கு மட்டுமே சென்று, அங்கு மேற்கொள்ளும் அரசு நலத் திட்டங்களைக் கூறி தீண்டாமைக் கொடுமை எல்லாம் இங்கில்லை என அறிவித்தது இந்த அறிக்கை.

“தலித்கள் மட்டும் (கிராமத் திருவிழாக்களின்போது அவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து சோற்றை வாங்கிச் செல்லச் சொல்வதும், அவர்களைக் கடைசியாகச் சாப்பிடச் சொல்வதையும் ஏன் தீண்டாமை எனப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களுடன் சண்டை வேண்டாம் என்பதற்காக தலித் பெரியவர்களே இளைஞர்களிடம் நவராத்திரி முதலான கிராமத் திருவிழாக்களுக்குப் போக வேண்டாம் எனச் சொல்கிறபோது அவர்கள் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்வதில் அர்த்தமென்ன? அதை இளைஞர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்படியும் போகிற தலித் இளைஞர்கள் அந்தத் திருவிழாவில் பங்கேற்காதபோதும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களே” – என்கிற ரீதியில் தீண்டாமை ஒதுக்கல்களை நியாயப்படுத்தி குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவித்து, “பார்க்கிற பார்வையில்தான் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்று இதையெல்லாம் சொன்னால் அப்புறம் எல்லாம் தீண்டாமைதான்” என்கிற ரீதியில் முடித்துக் கொண்டது பார்த்தசாரதி அறிக்கை.

பார்த்தசாரதி அறிக்கை தவிர அப்போதைய சமூகநீதித் துறை அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா தலைமையில் ஒரு அரசியல் சட்டக் ககுழுவையும் அமைத்து மோடி அரசு தனக்குத் தானே க்ளீன் சிட்’டும் கொடுத்துக் கொண்டது. தங்கள் கிராமத்தில் தீண்டாமை இல்லை என தலித்களிடம் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எழுதி வாங்குமாறு அரசு அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அந்தக் காகிதங்களை விரித்துக் காட்டி, “பாருங்கள் குஜராத் அதிருது… தீண்டாமையை நாங்க ஒழிச்சிட்டோம்” எனப் புன்னகைக்கிறார் நர மோடி.

குஜராத் அரசின் இந்த அணுகல்முறையை புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர் கன்ஷியாம் ஷா கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட புராணம் இதுதான்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்ற போதிலும் குஜராத் குறித்த இந்தச் செய்திகளில் நாம் சிலவற்றைக் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அவை:

1. 98 சத தலித்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது மிக அதிகம். இங்குள்ள சில அமைப்புகள் ஏதோ திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் இந்த நிலை என்பதாகப் பேசி வருவது எத்தனை அபத்தம் என்பதற்கு இது ஒரு சான்று

2. தலித்களின் நிலை இவ்வாறு இருப்பதற்கு ஏதோ குஜராத் அரசின் செயல்பாட்டுக்.குறைவு அல்லது திறமையின்மை மட்டும் காரணமல்ல. குஜராத் அரசின், குறிப்பாக நரேந்திர மோடியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த வருணாசிரம அணுகல் முறையும் இதன் அடிப்படையாக உள்ளது என்பதற்கு ஒரு சான்று வருமாறு:

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளைத் தொகுத்து 2007ல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது குஜராத் அரசு.. நூற் தலைப்பு : ‘கர்ம் யோக்’, அதாவது கர்ம யோகம். ‘குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பொரேஷன்’ எனும் பொதுத்துறை நிறுவனம் இந்நூலின் 5000 பிரதிகளை அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டது.

அந்த நூலில் கண்டுள்ள அவரது பேச்சுக்களில் ‘சாம்பிளுக்கு’ ஒன்று :

தலையில் மலம் சுமந்து அகற்றும் சஃபாய் கர்ம்தார் (துப்புரவுத் தொழிலாளர்) குறித்து மோடி இப்படிச் சொல்கிறார்:

“அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த மாதிரித் தொழிலைச் செய்து வருவார்களா? ஏதோ ஒரு காலகட்டத்தில், அவர்களின் இந்தப் பணி (1) ஒட்டு மொத்தச் சமூகம் மற்றும் இறைவனின் மகிழ்ச்சிக்காகாகச் செய்யப்படுகிறது என்பதையும் (2) கடவுளால் அவர்களுக்கு அருளப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் (3) இந்தத் துப்புரவுப் பணி ஒரு ஆன்மீக அனுபவமாகக் காலம் காலமாகத் தொடரப்பட வேண்டும் என்பதையும் ஒரு புத்தொளி அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் முன்னோர்கள் வேறு வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் இந்தப் பணியைத் தேர்வு செய்தார்கள் என நம்ப இயலவில்லை” (கர்ம்யோக், பக். 48,49).

தமிழகம் உட்பட நாடெங்கிலும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் சுதாரித்துக் கொண்ட நரேந்திர மோட, அந்த 5000 நூற்பிரதிகளையும் வெளியில் விடாமல் அமுக்கிக் கொண்டார்.

ஆனால் மோடி தன் இந்தக் கொடூரமான ஆபாசக் கருத்துக்களை எந்நாளும் அமுக்கிக் கொண்டதில்லை என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் 9000 சஃபாய் கரம்சாரிகள் கூடியிருந்த ஒரு மாநாட்டில் பேசும்போது வெளிப்பட்டது. “மலம் அள்ளும் இந்தத் தொழில் பூசை செய்யும் தொழிலுக்குச் சமம்” என அம்மாநாட்டில் நர மோடி பேசினார்.

“பூஜை புனஸ்காரங்களுக்கு முன் கோவில் குருக்கள்கள் ஆலயத்தைத் தூய்மை செய்கின்றனர். நீங்களும் ஆலயப் பூசாரிப் பார்ப்பனர்களும் ஒரே தொழிலைத்தான் செய்கின்றீர்கள்..”

எப்படி இருக்கிறது கதை?

குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் “நீங்கள் இந்து ராஷ்டிரத்தின் (இந்தப்) பகுதிக்குள் நுழைகிறீர்கள்” என ஆயிரக் கணக்கில் சட்ட விரோதமான பலகைகளை நட்டுள்ளனர். இந்த இந்து ராஷ்டிரத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அன்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அண்னல் சொன்னார்:

“இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (greatest menace) அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் (Hinduism is a danger to independence, equality and brotherhood) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்” (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை, பக்.358).