“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”

(‘தி இந்து’ நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை)

தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து – ஆசை

தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?

என்னுடைய அப்பா மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் மூலமாகத்தான் கம்யூனிஸக் கருத்துகள் சிறிய வயதிலேயே என்னை வந்தடைந்தன. என் அப்பா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றியும் ஒரு ஆக்கபூர்வமான பிம்பத்தையே என்னிடத்தில் ஏற்படுத்தினார். வரலாற்றில் இவர்களை எதிரெதிர் தரப்பில் வைத்து எதிரிகளாகச் சித்தரிக்க முடியாது என்ற பார்வையை என்னிடம் அவர் ஏற்படுத்தினார். காந்தியை என்றுமே எதிரியாக நான் பார்த்ததில்லை. அவரை விமர்சித்திருக்கிறேன். என்றாலும் பலரும் காந்தியைத் தட்டையாகப் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. சமூகத்தின் பன்மைத்துவத்தை நேசிக்கிற யாரும் காந்தியை வெறுக்க முடியாது.

நெருக்கடி நிலை, பாபர் மசூதி இடிப்பு, ஈழத்தில் நிகழ்ந்த இனஅழிப்பு ஆகிய மூன்று வரலாற்று நிகழ்வுகளும்தான் என்னை மேலும் காந்தியை நோக்கித் தள்ளின.

பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை என்பது இந்திய வரலாற்றில், குறிப்பாகச் சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை.இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்கவில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத்தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும் தலித்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மைத் தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள், முஸ்லிம்கள், தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.

இன்னொரு பக்கம், ஈழப் போராட்டம். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தால் கடைசியில் யாருக்கும் விடுதலை கிடைக்காதது மட்டுமல்லாமல், இனஅழிப்பும் நிகழ்ந்தது. 1990-களுக்குப் பிறகு ஹமாஸ், ஸ்காட்லாந்தில் உள்ள ஆயுதப் போராட்ட இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பலவும் ஆயுதப் பாதையைக் கைவிட்டு வேறு விதமான பாதைக்குச் செல்வது என்று முடிவெடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அமைதி வழியைத் தேர்ந்தெடுத்தவர் காந்தி.

காந்தி மட்டும் இல்லையென்றால் புரட்சியின் மூலம் ஆங்கிலேயரை அடித்துத் துரத்தி இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தியிருக்கலாம் என்று தீவிர இடதுசாரிகள் தரப்பில் அடிக்கடி சொல்லப்படுகிறதே?

அவர்களிடம் ஒரு எளிய கேள்வி. ஆனானப்பட்ட புரட்சியாளர் லெனின் புரட்சி ஏற்படுத்திய ரஷ்யாவில் இன்று என்ன நிலை என்று கேட்க வேண்டும். மாவோ ஏற்படுத்திய சீனப் புரட்சியின் இன்றைய நிலை என்ன? சும்மா பேசலாம். ஆனால், இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை. வன்முறை மூலம் ஒரு தலைமுறையானது தனது நிகழ்காலத்தை இழக்கிறது. உன்னதமான லட்சியங்களைக் காரணம் காட்டித்தான் நிகழ்காலத்தை இழக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உன்னத லட்சியமொன்றைக் காட்டிக்கூட ஒருவரது நிகழ்காலத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. எதிர்காலம் என்பது அப்படியொன்றும் உத்தரவாதமான எதிர்காலமும் அல்ல.

பலவீனமான மக்கள், பிரம்மாண்டமான எதிரி. இந்நிலையில் வன்முறையின் மூலம் அந்த பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்த நினைத்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அறிந்தே காந்தி அகிம்சையைத் தேர்ந்தெடுக்கிறார். பலவீனமான மக்களைக் கொண்டு பலம் பொருந்திய எதிரியை வீழ்த்துகிறார். எதிரியை வெறுக்காமல் எதிர்ப்பது எப்படி என்பது அவரது அருமையான உத்திகளுள் ஒன்று!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கியப் பங்கு என்னவென்று நினைக்கிறீர்கள்?

மேல்தட்டினர் கையில் அன்றைய சுதந்திரப் போராட்டம் இருந்தது. பெருந்திரளாக மக்களைத் திரட்டும் நோக்கம் அவர்களுக்குக் கிடையாது. காந்தியின் வருகைக்குப் பிறகு கதையே வேறு. இவ்வளவு பெருந்திரளான மக்களை, குறிப்பாக ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் போன்றோரை காந்தி அளவுக்கு அரசியலுக்குள் கொண்டுவந்தவர்கள் உலக வரலாற்றில் அரிது. கூடவே, முஸ்லிம்களை விட்டுவிட்டுப் பெறும் சுதந்திரம் சுதந்திரமாக இருக்காது என்றும் காந்தி கருதினார்.

காந்தி வருணாசிரமக் கருத்துகளை ஆதரித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?

காந்தி தேங்கிப்போன ஒரு மனிதரல்ல. தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வந்தவர் அவர். ஆரம்பத்தில் வருணாசி ரமத்தின் மீது சிறிது ஈர்ப்பு கொண்டவராகத் தோன்றி னாலும் தீண்டாமையைத் தனிப்பட்ட வாழ்விலோ அவரது கம்யூன்கள், ஆசிரமங்கள் எதிலுமோ அவர் கடைப் பிடித்ததே இல்லை.

காந்தி தீண்டாமைக்கு எதிராக தென்னாப்பிரிக்க காலத்திலிருந்தே பேசிவந்திருக்கிறார். மயிலாடுதுறையில் பெருந்திரளான பிராமணர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அந்த உரையில், அந்தப் பகுதியில் நிலவிய தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசுகிறார். தீண்டாமைக் கொடுமையையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி முன்னேறப்போகிறீர்கள் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

போகப்போக முற்றிலும் புரட்சிகரமான கருத்துகள் அவரிடம் உருவாகின்றன. ஒரு கட்டத்தில் தன் ஆசிரமத்துக்குள் கலப்புத் திருமணம் மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று அறிவித்தார். அதுவும் மணமக்களில் ஒருவர் தலித்தாக இருப்பது அவசியம் என்றார். அதையே கடைப்பிடிக்கவும் செய்தார்.

காந்தி சொன்னார் என்று தங்கள் சொத்து சுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தலித்களுக்காகப் பணிபுரிய வந்த பிராமணர்கள் ஏராளம். அம்பேத்கர், பெரியார் போன்றவர்களெல்லாம் ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் முன்னோடிகள்தான். இந்த அம்சத்தில் காந்தியின் கருத்து மாற்றத்துக்குக் காரணமானவர்கள் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். ஆனால், அவர்களின் போராட்டங்கள் முடிந்த பிறகு கோயில்களில் மறுபடியும் பழைய கதையே தொடர்ந்திருக்கிறது. காந்தி நுழைந்த பிறகு, ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில்கள் திறந்துவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு ஆலயப் பிரவேசப் போராட்டங்களை பெரியார், அம்பேத்கர் நடத்தினர். காந்தியோ பாதிப்புகளுக்கு எந்தத் தரப்பு காரணமோ அந்தத் தரப்பை முன்னிறுத்துகிறார். மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடக்கிறது. இதைப் பற்றியெல்லாம் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’என்ற புத்தகத்தில் விரிவாக விவாதித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் விரிவாக்கிய பதிப்பு பிரக்ஞை பதிப்பகத்தால் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.

கீதையை எப்போதும் காந்தி தூக்கிப்பிடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதல்லவா?

எதிரியை அழிப்பதற்கான ஒரு உத்தி நூல் போல், ஒரு வன்முறை நூலாக திலகர், அரவிந்தரில் ஆரம்பித்து பாரதியார் வரைக்கும் உரை எழுதுகிறார்கள். கீதைக்கு காந்தியும் உரை எழுதுகிறார். ‘நமக்கு எதிரே இருக்கும் எதிரியை வீழ்த்துவதற்கான புத்தகம் அல்ல இது. நமக்கு உள்ளே இருக்கும் தீமையை, எதிரியை வீழ்த்துவதற்கான வழிமுறையைச் சொல்லக் கூடிய, சமாதானத்தை வலியுறுத்தக்கூடிய புத்தகம் இது’ என்கிறார் காந்தி. இந்துத்துவவாதிகள் இதை எதிர்த்தாலும், அவருக்கு மாபெரும் செல்வாக்கு இருந்ததல்லவா! ஆகவே, அவர் சொன்னதை வேதவாக்காக மக்கள் எடுத்துக்கொண்டார்கள். புனிதப் புத்தகங்களாக இருந்தாலும் கூட இந்தக் காலத்துக்குப் பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பொருத்தமில்லாவற்றை விட்டுவிட வேண்டும் என்பது அவரது கருத்து.

இந்துத்துவவாதிகள் அவரைக் கொன்றதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. பாகிஸ்தான் பற்றிய பேச்சு இல்லாதபோதே, முப்பதுகளிலிருந்தே காந்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. சனாதனத்தின் மீது காந்தி நிகழ்த்திய பெரும் தாக்குதல்தான் அவரது படுகொலைக்கு முக்கியமான காரணம்.

அம்பேத்கர்-காந்தி எதிரெதிராகச் சித்தரிக்கப்படுகிறார்களே?

அம்பேத்கர்-காந்தி இருவரையும் எப்போதும் எதிரிகளாகப் பார்க்க முடியாது. இருவரின் அரசியல் அணுகுமுறையும் வேறுவேறு, அவ்வளவுதான்.

பூனா ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அம்பேத்கருக்கு பெரியார் போன்ற ஒருசிலரே ஆதரவாக இருந்தார்கள். எம்.சி. ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள்கூட அம்பேத்கருக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். தலித்களை சிறுபான்மையினராக உள்ளடக்கி, அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி அளிப்பதை காந்தி ஆதரித்திருக்கலாம்தான். காந்தியின் பிழைகளில் ஒன்று என இதைச் சொல்லவும் இடமுண்டு. ஆனால், அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு எனச் சொல்லிவிடவும் முடியாது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை அவர்கள் சில ஆண்டு அனுபவங்களுக்குப் பின், அது தங்களை அந்நியப்படுத்துகிறது என்று சொல்லி, வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

அரசியல் நிர்ணய சபையிலும், முதல் அமைச்சரவையிலும் தகுதியானவர் என்கிற வகையில் அம்பேத்கரை உள்ளடக்கியதில் காந்தியின் பங்கும் இருந்ததுதானே.

காந்தியின் இந்தியாவுக்கும் மோடியின் இந்தியாவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?

காந்தி தேசம் பல வண்ண தேசம். மோடி தேசம் ஒற்றை வண்ண தேசம்; காவி தேசம்.

காந்தியுடன் உங்களால் உடன்பட முடியாத இடங்கள் என்னென்ன?

அவரது கட்டாய மது விலக்கு, காந்தியப் பொருளா தாரம் போன்றவற்றில் நடை முறைச் சிக்கல்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அதை காந்தியே உணர்ந்திருந்தார். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் அதிகாரங்களில் இருந்த போதெல்லாம் அவர் தனது பொருளாதாரத் திட்டத்தை வற்புறுத்தவில்லை. காந்தியப் பொருளாதார வல்லுநரான ஜே.சி.குமரப்பா இருமுறையும் பதவி விலகத்தான் நேர்ந்தது. ஆனால், இன்றைய புதிய உலகச் சூழலில் காந்தியப் பொருளாதாரத்தையும் கூட நாம் மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டியுள்ளது.

எனக்கு காந்தியை விட மார்க்ஸ்தான் அதிக விருப்பத்துக்குரியவர். ஆனால், என் விருப்பத்துக்குரிய மார்க்ஸோ, மதிப்புக்குரிய காந்தியோ, பெரியார், அம்பேத்கரோ யாராக இருந்தாலும் இன்று முற்றிலும் பொருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. மார்க்ஸைப் பற்றி லெனின் சொன்னது நினைவுக்கு வருகிறது :

`மார்க்ஸின் காலகட்டம் வேறு, நம் காலகட்டம் வேறு. அது முதலாளித்துவக் காலகட்டம். நம்முடையது ஏகாதிபத்தியக் காலகட்டம். இந்தக் காலகட்டத்தை விளக்க 70 மார்க்ஸ்கள் தேவைப்படுவார்கள்.’ ஆகவே, இந்த முன்னோடிகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதைவிட அவர்களின் வழிகாட்டுதல்களை எடுத்துக்கொண்டு நமக்கான அரசியலை இன்று நாமே உருவாக்கிக்கொள்வதுதான் முக்கியம்.

– ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)

 (இலங்கையில் வெளிவரும் வார இதழ் “மீள்பார்வை” யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்)

 

1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி நோக்குகிறீர்கள் அதன் எதிர்காலம் எவ்வகையில் அமையும் என கருதுகிறீர்கள்?

 

இன்றைய நிலை கவலைக்குரியதாகத்தான் உள்ளது. அமெரிக்கா -இஸ்ரேல் – இந்தியா என்பதாக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. ‘ஷங்காய் கார்பொரெஷன்’, அணிசேரா நாடுகள் (NAM) அமைப்பு போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பு முயற்சிகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. அப்படி ஆனதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அது ஆதரவாக இருக்கும் எனத் தமிழகத்தில் பேசி பாஜகவை  மறைமுகமாக ஆதரித்த தமிழ்த் தேசியர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கின்றனர். இதர அண்டை நாடுகளுடனான, குறிப்பாக நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. உள்நாட்டில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பாஜக ஆட்சி ஏற்பட்டபின் நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, GST வரி விதிப்பு முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணா துன்பத்தை விளைவித்ததோடு அதனால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனும் உண்மை இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் இந்த வெறுப்புகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்க் கட்சிகள் போதிய திறமையுடனும் வலுவுடனும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் மாநிலக் கட்சிகளும் கூடப் பலமிழந்து கிடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை ஊட்டி அதன் மூலம் அரசைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக செய்யும் தீவிர முயற்சிகளும் அவற்றின் விளைவான வன்முறைகள் அதிகரிப்பதும் மிக்க கவலை அளிப்பதாக உள்ளன.

 

2) இந்தியாவில் அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது குறித்து.

 

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியன. 1. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் இப்படியான நவ தாராளவாத, நவ பாசிச சக்திகள் மேலுக்கு வந்துள்ள ஒரு உலகளாவிய போக்கின் ஓரங்கமாகவும் இதை நாம் காண வேண்டு. செப்டம்பர் 11 (9/11) க்குப் பின் உலகளவில் மேற்கொள்ளப்படுகிற “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”, முஸ்லிம் வெறுப்பு முதலியன பா.ஜ.க வளர்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலயாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கைகள், பொருளாதாரத்திலும் சிந்தனையிலும் ஓர் இடது சாய்வு, பஞ்ச சீலம்’ அணிசேரா நாடுகள் முதலான அறம் சார்ந்த அரசியல் கோட்பாடுகள், அணிசேர்க்கை முயற்சிகள் எல்லாம் இன்று அழிந்துள்ளன. இந்த உலகளாவிய பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தையும் நாம் காண வேண்டும். 2. இரண்டாவதாக இதில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் பா.ஜ.க எனும் அரசியல் கட்சிக்குப் பின்னுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிக மிக வலுவான கட்டமைப்பும் வலைப்பின்னலும். மதத்தின் பெயரால் அவர்கள் கட்டமைத்துள்ள எண்ணற்ற அமைப்புகள், அர்ப்பணிப்பு மிக்க தீவிரவாத சக்திகள், காந்தி கொலைக்குப் பின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட காலத்திலும் கூடத் தம்மை அவர்கள் அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வளர்ந்த முறை ஆகியன அவர்களின் இன்றைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் இந்தத் தீவிரப் பணிக்கு இணையாக இங்கு எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இன்று வேலை செய்யவில்லை. பல்லாயிரக் கணக்கான கல்வி நிலையங்கள், ‘சாகா’க்கள் எனப்படும் இராணுவப் பயிற்சிகள், ‘கர்வாபசி’ எனப்படும் மதமாற்றங்கள் என இயங்கும் அவர்களின் தீவிரப் பணிகளை எதிர் கொள்ள இங்கு யாருக்கும் மன உறுதியும் இல்லை. அதோடு இன்று வெளிநாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்தியர்கள் மத்தியில் உருவாகிவரும் ஒருவகைத் தொலைதூரத் தேசியம் (long distance nationalism) பெரிய அளவில் இவர்களுக்கு நிதி சேகரிக்கவும் உலக அளவில் ஆதரவு திரட்டவும் பயன்படுகிறது. இது குறித்து நான் மிக விரிவாக எழுதிவரும் கட்டுரைத் தொடரை (#இந்துத்துவமும்_சியோனிசமும்) என் முகநூல் பக்கத்தில் காணலாம்.

 

3) முத்தலாக் தீர்ப்பையும் அதற்கு பின்னாலுள்ள அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

முத்தலாக் முறை இங்கு முஸ்லிம் சமூகத்தில் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்க்கு எதிரானவர்கள் அல்ல. குர்ரானிய நெறிமுறைகளுக்கு மாறாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லிக் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களின் நியாயங்களைத்தான் இவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இங்கொன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் கட்டுப்பெட்டித் தனமான ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ உட்பட முஸ்லிம் உலமாக்களும் கூட யாரும் இபந்த்டி தொலைபேசி மூலம், தபால் மூலம் முத்தலாக் சொல்வதை எல்லாம் ஏற்பதில்லை. இருந்தாலும் ஆங்காங்கு இது ஒரு சிறிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது உண்மை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. கூடுதலாக நீங்கள் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அமசம் என்னவெனில் இந்திய நீதிமன்றங்கள் பல காலமாகவே இந்த ஒரே நேர முத்தல்லாக்கைச் (Instant triple Talaq) சட்டபூர்வமானது என ஏற்பதில்லை. நீதிநெறிமுறை ஊடாக உருவாக்கப்படும் கோட்பாடாக (judicially evolved principle) இன்று இது செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இதன் மூலம் உரிய நீதி வழங்கப்பட்டுள்ளனர். அதே போல முத்தலாக் சொல்லப்படும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பதையும் இந்திய நீதிமன்றங்கள் உறுதியாகக் கடை பிடித்து வந்துள்ளன. குடும்பத்திற்குள் பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் பொதுவான “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட”த்தின் மூலம் முஸ்லிம் பெண்களும் நீதி பெற முடியும். இம்மாதிரியான பல வழக்குகளையும் தீர்ப்புகளையும் நான் எனது நூலிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். பிரச்சினை என்னவெனில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் குறைந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இப்படியான உரிமைகள் நடைமுறையில் இருப்பதை எல்லாம் முஸ்லிம் ஜமாத்கள், அரசியல் அமைப்புகள், மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களால் கீழே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரே நேர முத்தலாக்குகளும் இங்கே நடைமுறையில் இருந்தன. இதனால் சமூகத்தின் கீழ்த் தட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

முஸ்லிம் வெறுப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து இயங்கும் பா.ஜகவின் ஒரு முக்கிய ஆயுதம் முஸ்லிம் தனி நபர் சட்டத்தை (Muslim Personal Law) ஒழித்துக் கட்டுவது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான். திருமணம், வாரிசு, வக்ஃப் சொத்துக்கள் முதலானவை மட்டும் தனி நபர்ச் சட்டத்திற்குள் வருகின்றன. அதையும் ஒழிப்பது என்பது முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தையே அழிப்பது என்கிற வகையில் இந்துத்துவத்தின் இந்த முயற்சியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் எதிர்த்து வருகின்றனர்.

 

இந்தப் பின்னணியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண் தனக்கு அளிக்கப்பட்ட முத்தல்லாக்கிற்கு எதிராக ஒரு முஸ்லிம் பெண் ஒரு வழக்குரைஞரை அணுகினார். அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். அவர் அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது என்பதற்கு அப்பால் தலாக் கிற்கே எதிராக அந்த வழக்கைத் தொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடி இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானார். பா.ஜ.க அரசும் இதற்கு ஆதரவாகக் களத்தில் புகுந்தது. இதில் வெற்றி அடைந்தால் இதன் மூலம் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்பது அதன் கணக்கு.

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு இப்போது வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: (அ) ஒரே நேர முத்தலாக் செல்லாது (ஆ) இந்தத் தீர்ப்பு முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தின் மீது பிற விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது (incobsequential) (இ) தனிநபர்ச் சட்டம் முதலான மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதோ மதம் தொடர்பான நடவடிக்கைகளில் நுழைந்து அவை சரி, தவறு எனச் சொல்வதோ நீதிமன்றத்தின் வேலை அல்ல – என்பன தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். ஆக இது உண்மையில் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கும் தீர்ப்புத்தான். இதன் மூலம் தனி நபர் சட்டங்கள் என்பன அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்கிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரே நேர முத்தலாக் செல்லாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். எனவேதான் முஸ்லிம் சட்ட வாரியமே இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. மோடி அரசு இது ஏதோ தனக்கு வெற்றி எனச் சொல்லிக் கொள்வது தன் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்குத்தான்.

 

4) இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்புக்கள் அதிகரிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்ன?

 

நான் ஏற்கனவே சொன்னவைதான். இதை உலகளாவிய ஒருவகை அரசியல் அற வீழ்ச்சியின் விளைவாகவும், இந்தியாவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் பின்னணியிலும் பார்க்க வேண்டும். கூடுதலாக உலகமயச் செயற்பாடுகளின் ஊடாக மத்தியதர வர்க்கம் ஊதிப் பெருப்பதும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இவர்கள் மத்தியில் தேசப் பாதுகாப்பு / அதற்கு ஆபத்தாக பாகிஸ்தான் அருகமைந்திருப்பத /, அது ஒரு முஸ்லிம் நாடாக இருப்பது / இந்திய முஸ்லிம்கள் அதற்கு விசுவாசமாக உள்ளனர் என்பன போன்ற அடிப்படைவாதக் கருத்துக்கள் எளிதில் செல்லுபடியாகின்றன.

 

5) அண்மையில் நரேந்திர மோடி இலங்கை வந்தார். இப்பின்னணியில் இலங்கையில் இந்திய அரசியலின் தாக்கம் எந்தளவு தூரம் இருக்கும்?

 

போருக்குப் பிந்திய சூழலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய மூலதனத்தை விரிவாக்குவது, இலங்கை சீனாவுக்கு நெருக்கமாவதைக் கூடிய வரையில் தடுப்பது என்பனதான் மோடி அரசின் நோக்கம். அதற்கு மேல் தமிழர் நலனை முதன்மைப்படுத்தியதாக அவரின் அணுகல் முறை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திரிகோணமலை துறைமுகக் கட்டுமானப் பணியில் பங்கு, திரிகோணமலை மற்றும் ஹம்பந்தோட்டாவில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பங்கு முதலியவைதான் இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுப் பொருளாக அமைந்ததே ஒழிய போர்க் குற்ற விசாரணை, தமிழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுதல், காணாமற் போன தமிழர்கள் பற்றிய உண்மைகள், இலங்கை இந்திய ஒப்பந்த நிறைவேற்றம் ஆகியவை பேசப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மோடியின் வருகை மகத்தான வெற்றி எனவும் இரண்டு பிரதமர்களுக்கும் இடையேயான ‘இரசாயனம்’ படு பிரமாதமாக ஒத்துப் போவதாகவும் இலங்கை அமைச்சர் சரத் அமானுகமா சொல்லியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஒன்றை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனி ஈழம் அமைய அது உதவாது. இலங்கை சிங்கள இனவாத அரசுகளுக்கே அது துணையாக அமையும். தனி ஈழம் பிரிந்தால் அது இந்தியா சிதைய ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதே இந்திய அரசியலாரின் புரிதல். தமிழ் அல்லது இந்து எனும் அடையாளத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு தனக்கு உதவும் என எண்ணி ஈழத்தில் சிவசேனா போன்ற பெயர்களில் இந்து அடையாளங்களுடன் கூடிய அமைப்புகளை உருவாக்கும் மறவன் புலவார், யோகேஸ்வரன் முதலானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் என்கிற அடிப்படையிலும் சிங்கள இனவெறிக்குப் பலியாகிறவர்கள் என்கிற அடிப்படையிலும் இணைந்து நிற்க வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் பிளவுபடுவதற்கே இது இட்டுச் செல்லும். இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சென்ற முறை இலங்கை வந்தபோது தமிழ்த் தலைவர்கள் அவரைச் சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவாறு வடக்கு – கிழக்கு மாௐஆணங்களின் இணைப்பை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியபோது என்ன நடந்தது? இனிமேல் இந்தியா அதை வற்புறுத்தாது என அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

 

6) இலங்கை அரசியலின் அண்மைக்காலப் போக்குகளை நீங்கள்  எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

போருக்குப் பிந்திய சூழலை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டும், இலங்கை அரசியலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்திய அரசின் நோக்கங்கள், மற்றும் இன்றைய புவி அரசியல் சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கில் கொண்டு அரசியல் காய்களை நகர்த்துவதாக இன்றைய இலங்கை அரசியல், குறிப்பாக தமிழர்களின் அரசியல் இல்லை. மாறாக தேர்தல் அரசியல் சார்ந்த அபத்தங்கள், முரண்கள், பதவிப் போட்டிகள் என்பதாகத் தமிழர் ஒற்றுமை பலவீனமாகும் நிலையே உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி போருக்குப் பிந்திய சூழலில் மேலெழுந்த எந்தக் கோரிக்கையிலும் பெரிதாக முன் நகர்வு இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி முப்பதாண்டுகள் ஆகியும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தத் திசையில் கடந்த ஓராண்டில் சில நகர்வுகள் தென்பட்டபோதும் இன்னொரு பக்கம் பவுத்த தலைமைப் பீடம் அதை வெளிப்படையாக எதிர்த்துள்ளதால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அமைப்பில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுவதைப் பற்றி இலங்கை அரசோ பவுத்தத தலைமையோ கவலைப்படுவதாக இல்லை.

 

7) சர்வதேச அரசியல் போக்குகள் குறித்து..

 

நான் முன்னரே சொன்னதுதான். சோவியத்தின் வீழ்ச்சி என்பது வெறும் சோவியத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கத் தலைமையிலான NATO வுக்கு மாற்றாக அமைந்த COMECON, NAM எதுவும் இன்று இல்லை. லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் சற்றுத் தாக்குப் பிடித்தாலும் அவை பொருளாதார ரீதியாகப் பலவீனமாகவே உள்ளன. சோவியத்திலிருந்த பிரிந்த நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை NATO வில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வாக்குறுதியை மீறி இன்று அவை அதில் உள்ளடக்கப்படுவது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கொல்லைப்புறம் வரைக்கும் இன்று NATO படைகளும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பனிப்போர்க் கால முடிவுக்குப் பின்னும் கூட இன்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும்தான் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட அரபு எழுச்சி மிகவும் நம்பிக்கையூட்டத் தக்கதாகத் தொடக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லை. மீண்டும் எகிப்தில் இராணுவ ஆட்சி; துருக்கியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு வேகமாக உள்ளது. நம் கண்முன் அழிந்து கொண்டுள்ள சிரியா இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள அற வீழ்ச்சியின் ஒரு பௌதிக வெளிப்பாடு. முஸ்லிம் நாடுகள் மத்தியில் அமெரிக்க ஏஜன்டாக இருந்து செயல்படும் சவுதி அரசின் செயல்பாடுகள் மிக ஆபத்தானவையாக உள்ளன. எனினும் உலக மயமான முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திப்பது தொடர்கிறது. முதலாளியம் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்கிற மார்க்சின் கணிப்பு பொய்க்கவில்லை. தொழிலாளிகளின் தலைமையில் சோஷலிச அரசு என்பதுதான் இன்று பொய்த்துள்ளது.

 

8) அறிவுஜீவிகள் எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை கையாள்கிறார்கள்?

 

சமூக ஊடகங்கள் நமது கால கட்டத்தின் ஒரு மிக முக்கியமான வளர்ச்சி. முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஒரு வகையில் எதேச்சாதிகார அரசுகளுக்குமே கூட அது ஒரு மிகப் பெரிய சவால். உண்மைகளை இனி அவ்வளவு எளிதாக அதிகாரத்தின் துணை கொண்டு மறைத்துவிட இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பதை நோக்கி இன்று அதிகாரங்கள் நகர்கின்றன. ஒரு ஜனநாயகப் படுத்தப்பட்ட ஊடகம் என்கிற வகையில் எளிதில் அது அக்கப்போர்களால் நிரம்புகிற ஆபத்தையும் நாம் கூடவே காண முடிகிறது. இந்த ஊடகங்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது என்பது நம் கையில்தான் உள்ளது. இதற்கான சரியான பயிற்சியை நாம் இளைஞர்களுக்கும் இயக்க அணிகளுக்கும் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நிச்சயமாக இவை பயனுள்ள, சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நமக்கு அமையும்.

 

மிக்க நன்றிகள்…

 

அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?

(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்)

பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே வினையாற்றி வருகிற அ.மா, ஈழப்போர் அதன் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து, ஒரு உரையாடலுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். போருக்குப் பிந்திய அந்த மயானவெளிக்குள் இரண்டுமுறை பயணம் மேற்கொண்ட அவர், தற்போது மூன்றாவது முறையாக கடந்த 8.2.13 அன்று பல்வேறு கருத்தரங்க விவாதங்களில் பங்கேற்பதன் பொருட்டு சென்றிருந்தார்.

முதல்நாள் கூட்டத்திலேயே இலங்கை அரசு அதிகாரிகளால் அவரது பேச்சிற்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மற்ற கருத்தரங்கக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக இலங்கைப் பயணத்திற்குப் பின்பு ‘என்ன நடக்குது இலங்கையில்’ என்று தனது பார்வைகளை அம்பலப்படுத்தும் அ.மா.விடம், ‘என்ன நடந்தது இலங்கையில்’ என்பது குறித்து விவாதிப்பதற்காய் சென்னை திரும்பிய அவரைச் சந்தித்தோம். இலங்கை அரசின் தடை, தொடரும் அதிகார அத்துமீறல்கள், வரவிருக்கும் ஐ.நா.தீர்மானம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே..

தீராநதி : தோழர்.நா.சண்முகதாசனின் இருபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரை ஆற்றுவதற்காகத் தான் நீங்கள் இலங்கை சென்றதாக அறிகிறோம். முதலில், தோழர் சண்முகதாசன் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்..

அ.மா : நா.சண்முகதாசன் என்றொரு தமிழர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்ததெல்லாம் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகளாவிய பொதுவுடைமை இயக்கப் பிளவின்போது அவர் மாஓ பக்கம், அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். மாஓ உடன் நெருங்கிப் பழகியவர் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எண்பதுகளில் கைலசாபதி, சிவத்தம்பி ஆகியோரது நூல்களை எல்லாம் நாங்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஆவலுடன் படித்த நூல்களில் ஒன்று சண்முகதாசனின் மார்க்சீயப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இலங்கை வரலாறு.

அவர் உருவாக்கிய செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு தொழிலாளர் இயக்கம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் என்றும் அவருக்கு ஒரு பெயருண்டு. ஒரு கட்சித் தலைவராக மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எது குறித்தும் ஆழமாக உடனுக்குடன் கருத்துக்கள் சொல்லவும் எழுதவும் வல்லவராகவும் அவர் இருந்தார். இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்புகளாகவும் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதி, தீண்டாமைக் கொடுமைகளைக் கவனத்தில் எடுத்து, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றைக் கட்டியது அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவரைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டவர். அவர் மூலமாக எனக்கு ‘சண்’, ஆம் அவர் இலங்கை மக்கள் மத்தியில் அப்படித்தான் அறியப்பட்டிருந்தார் எண்பதுகளின் தொடக்கத்தில் பழக்கமானார். 83 கருப்பு யூலைக்குப் பின் தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் அவர் சென்னை வந்திருந்தபோது, சிறிய சந்திப்பு ஒன்றைச் சென்னை விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தோம்.

தீராநதி : சரி. அவரது நினைவுப் பேருரையில் கலந்துகொண்டது, உங்கள் பேச்சு தடை விதிக்கப்பட்டது பற்றி கூறுங்கள்…

அ.மா : அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் பெயரில் இயங்கும் ‘மார்க்சீயக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்’ அவரது இருபதாம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்திருந்தது. அவரது நூல் தொகுப்பு ஒன்றும் அதில் வெளியிடப்பட இருந்தது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் செந்தில்வேல், அஜித் ரூபசிங்க, எழுத்தாளர் சிவசேகரம் ஆகியோர் பேச இருந்தனர். சண்ணின் இறுதிக் காலம் வரை அவரோடு இருந்தவரும், தொடர்ந்து அவரது நூல்களை மொழியாக்கி வெளியிட்டு வருபவருமான ‘தினக்குரல்’ நாளிதழ் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். புகழ் பெற்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தற்போதைய தலைவர் பேரா. சபா. ஜெயராசா தலைமையில் சென்ற 10ந்தேதி மாலையில் நடை பெற இருந்த கூட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை அரசின் நான்கு ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து நான் பேசக் கூடாது என்றார்கள்.

தீராநதி : உங்கள் உரையின் தலைப்பு அப்படியொன்றும் இலங்கை அரசை நேரடியாக விமர்சிப்பது கூட இல்லையே.. உங்களை அழைத்து ஏதும் விசாரித்தார்களா?

அ.மா : என்னிடம் ஏதும் பேசவில்லை. தனபாலசிங்கம் மற்றும் ஜெயராசா ஆகியோருடந்தான் பேச்சு நடந்தது. அவர்களுக்கு ஏதோ புகார் வந்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் விசாரித்தபோது அது உண்மை எனத் தெரிந்ததாகவும் எனவே நான் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். எந்த விதி அல்லது சட்டத்தின் கீழ் பேசக்கூடாது எனக் கேட்டபோது ‘டூரிஸ்ட்’ விசாவில் வந்தவர்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்றார்கள்.

தீராநதி : நீங்கள் ஏன் டூரிஸ்ட் விசாவில் சென்றீர்கள்? ‘கான்ஃபெரன்ஸ்’ என விசா வாங்கி இருக்கலாம் தானே?

அ.மா : நான் இதுவரை பலமுறை வெளிநாடுகள் சென்றுள்ளேன். எல்லாமே கூட்டங்களில் பேசுவதற்காகத்தான். டூரிஸ்ட் விசாவில் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் அப்படித்தான் எல்லோரும் போய் வருகிறார்கள், இலங்கைக்கும் அப்படித்தான் இரு முறை சென்று வந்தேன். கூட்ட அழைப்பிதழைக் காட்டி விசா கேட்டால், என்ன கூட்டம், யார் ஏற்பாடு, நீங்கள் பேசப் போவதை எழுதித் தாருங்கள் என்றெல்லாம் விசாரணை நடக்கும். கால தாமதம் மட்டுமின்றி அந்த அடிப்படையில் விசா மறுக்கவும் படலாம். அதனால் ட்ராவெல் ஏஜன்சிகளே, “நீங்க ஏன் சார் அதை எல்லாம் சொல்றீங்க? எல்லோரும் டூரிஸ்டுன்னு சொல்லித்தான் போய் வராங்க. நீங்களும் அப்படியே போடுங்க” என்பார்கள்.

தீராநதி : சரி, அப்புறம் என்ன நடந்தது?

அ.மா : தனபாலசிங்கமும் ஜெயராசாவும் விளக்கிச் சொன்னார்கள். ஏற்கனவே நான் சிவத்தம்பி நினைவுரைக்கு வந்ததையும், இப்போதும் கூட அடுத்த சில நாட்களில் தமிழ்ச் சங்கத்திலேயே, “சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இரட்டைக் காப்பியங்கள்” என நான் உரை நிகழ்த்த இருப்பதையும், கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் நான் பேச இருப்பதையும் விளக்கிச் சொன்னார்கள். வந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர் தமிழர். தன்னை ஜெயராசாவின் மாணவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. மேலிடத்து ஆணை” என்றார்கள். சரி மேடையிலாவது அமரலாமா? எனக் கேட்டபோது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு அதுவும் கூடாது என்றார்கள். ஆனால் கூட்டம் நடத்தத் தடை இல்லை நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். சரி அரங்கத்தில்கூட அவர் இருக்கக் கூடாதா எனக் கேட்டபோது மறுபடியும் யாருடனோ பேசிவிட்டு இருக்கலாம் என்றார்கள். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டபின்பே சென்றார்கள். தொடர்ந்து உளவுத் துறையினர் கூட்டத்தைக் கண்காணித்தனர்.

தீராநதி : இந்தத் தடை தமிழர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

அ.மா : சண் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. என்னுடைய உரை அச்சிடப்பட்டுத் தயாராக இருந்தும் வினியோகிக்கப்படவில்லை. வந்திருந்தவர்களில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலியோரும் இருந்தனர். சேகு தாவூத் முன்னாள் ‘ஈரோஸ்’ காரார். நிறப்பிரிகை வாசகர். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் ஏதாவது ஒரு கூட்டத்திற்கு வந்து விடுவார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆறுதல் சொல்ல மட்டுந்தான் முடிந்தது. ராஜபக்‌ஷே குடும்பத்தைத் தவிர அங்கு கேபினட் அமைச்சர்கள் உட்பட அங்கு யாருக்கும் அதிகாரமில்லை. கைகளைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்த மனோ கணேசன், “பரவாயில்லை விடுங்கள். நீங்கள் பேசியிருந்தால் இந்த முன்னூறு பேரோடு போயிருக்கும். இப்போது மூவாயிரம் பேருக்குச் செய்தி போயுள்ளது” எனக் கூறி அகன்றார். உடனடியாக, முகநூல் ஆகியவற்றின் ஊடாகச் செய்தி பரவியது. பி.பி.சி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களிலிருந்து என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நடந்ததைத் தவிர கூடுதலாக நான் எதையும் கூற மறுத்துவிட்டேன். லெனின் மதிவானம், ஃபர்சான் ஆகியோருடன் தொடர்புகொண்டு மலையகத்திலும், கிழக்கிலும் நடக்க இருந்த கூட்டங்களை ரத்து செய்தேன். கிழக்குப் பல்கலைக் கழக நண்பர்களிடமும் பேசி ரத்து செய்யச் சொன்னேன்.

தீராநதி : உங்கள் வருகை குறித்து அரசிடம் யாரோ புகார் அளித்ததாகச் சொன்னீர்கள். இந்த புகாரின் அடிப்படையில் தான் தடை விதிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? உங்களின் மற்ற கூட்டங்கள் என்னவாயின?

அ.மா : இதுவரை நான் சென்ற போதெல்லாம் அங்கு கூட்டங்களில் பேசும்போது நேரடியாக அரசை விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால் இங்கு வந்தபின் அங்குள்ள சூழலை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை அரசின் கவனத்திற்குச் சென்றதை அறிவேன். தீராநதியில் நான் ‘என்ன நடக்குது இலங்கையில்’ தொடர் எழுதியபோது முதல் இதழுக்குப் பின் இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் வந்த இதழ்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படவில்லை. நண்பர்கள் கடிதம் எழுதி இங்கிருந்து பிரதிகள வாங்கினார்கள். நான் வந்து சென்ற பிறகு கூட்டம் நடத்திய சிலரிடம் என் வருகை குறித்து விசாரித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கார்கில் யுத்தம் நடந்தபோது நான் அது குறித்து ‘சரிநிகர்’ இதழில் எழுதியபோது இந்திய தூதரக அதிகாரிகள் வந்து விசாரித்ததைச் சரிநிகர் நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தபாலில்தான் கட்டுரைகள் அனுப்புவேன். இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் அவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. ஜூ.வியில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் அப்படியே அங்கு மீள்பிரசுரமானது.

யார் புகார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. பல ஊகங்கள் உள்ளன. அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மௌனகுருவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: ‘சரி விடுங்க மார்க்ஸ். இதுவும் நல்லதுக்குத்தான். உங்களைப் பற்றி உங்க ஊரில் அரசாங்க ஆதரவுடன் வந்து போறீங்கன்னு சிலர் ஏதாவது எழுதுவாங்கதானே. இப்ப அவங்க ஒண்ணும் பேச முடியாதில்லே..” என்றார். நான் சொன்னேன்: “சார் என்னைப் பத்தி அப்படியெல்லாம் எழுதுறவுங்க உண்மை தெரியாம எழுதுறதில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் எழுதுவாங்க. இப்ப கூட, ‘இது ராஜபக்‌ஷேவும் அ.மார்க்சும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி’ன்னு எழுதினாலும் எழுதுவாங்க” என்று சொல்லிச் சிரித்தேன்.

பொதுக் கூட்டங்கள் ரத்தானாலும் மலையகத்திலும் கிழக்கிலும் நண்பர்களின் வீடுகளில் சந்திப்புகள் நிகழ்ந்தன. கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பள்ளியிலும், காத்தான்குடியில் விபுலானந்தர் பெயரில் இயங்கும் நுண்கலைத் துறையிலும், கிழக்குப் பல்கலைக் கழக ஸ்டாஃப் டெவெலப்மேன்ட் சென்டரிலும் சந்திப்புகள் நடந்தன.

தீராநதி : இப்போது அங்கு நிலைமைகள் எப்படி உள்ளன? ஐ.நா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் அங்கே ஏதாவது அச்சத்தை உருவாக்கியுள்ளதா?

அ.மா : நிச்சயமாக ஒரு அச்சம் உருவாகித்தான் உள்ளது. ராஜபக்‌ஷேவின் இந்திய வருகை இந்திய அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப்படாமை குறித்தும் பத்திரிகைகள் எழுதின. இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் தூதுவர் நவனீதம் பிள்ளை ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருப்பது குறித்தும், பிரிட்டன் வெளி விவகார இணை அமைச்சர் அலிஸ்டெர் பேர்ட் வடக்கில் நிலைமை சீரடையவில்லை, இராணுவ இருப்பு குறையவில்லை என்றெல்லாம் எழுதியுள்ளது குறித்தும் அங்கு விரிவாகச் செய்திகள் வெளிவந்தன. வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்லெவ போன்றோரும் சில பிக்குமார்களும் வீரம் பேசுவதும் கூட ஒருவகை அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு எந்த வகையிலும் தன் போக்குகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமை அவை கூட உள்ள சூழலில் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகா பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ பக்‌ஷே குடும்ப விசுவாசி ஒருவர் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். அரசால் கடத்திக் கொல்லப்பட்ட லசந்த விக்ரமசிங்க ஆசிரியராக இருந்த அதே ‘சண்டே லீடர்’ இதழின் இன்றைய உதவி ஆசிரியர் அஸ்கர் பரான் சவுகத் அலி நான் அங்கிருந்தபோது சுடப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ‘தினக்குரல்’ நாளிதழ் விற்பனை முகவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மீள்குடியேற்றம் நிகழவிடாமல் இராணுவம் தமிழ்ப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதற்கு ஏதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறுகின்றன. நான் அங்கிருந்தபோது இவ்வாறு வலிகாமம் வடக்கில் முப்பதாயிரம் பேர் குடியமர்த்தப்படாமல் இருப்பதைக் கண்டித்துத் தெல்லிப்பழையில் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடந்தது, அரசுக்கு எதிராக உருவாகியுள்ள பத்து கட்சிக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்ணாவிரதத்திலும் இறுதியாகச் சிலர் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இவர்கள் வடபகுதி இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்ருசிங்கவின் கூலிப் படையினர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் குற்றம் சாட்டினார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொண்டு ஏராளமாகப் பிள்ளை பெற்றுக் கொள்வதாக பவுத்த பிக்குகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். ‘ஹலால்’ முத்திரை குத்திப் பொருட்களை விற்கக் கூடாது என பிக்குகளின் ‘பொது பல சேனா’ என்கிற அமைப்பு கெடு விதித்துப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மாத்தளையில் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் இந்திய அரசால் அதன் கடுமைகள் எல்லாம் நீர்க்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது. ராஜபக்‌ஷே அரசே நியமித்த மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி அந்த அரசே ஒரு குழுவை அமைத்து போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம். இதை விட எளிமையாக என்ன தீர்மானம் இருக்க முடியும். அதைக் கூடச் செய்ய மறுக்கிறது இலங்கை அரசு. கிரிசாந்த டி சில்வா என்ற இராணுவத் தளபதி ஒருவர் தலைமையில் படைத் தளபதிகளின் குழு ஒன்றை அமைத்து ‘விசாரணை’ ஒன்று நடத்தப்பட்டு அந்த அறிக்கை சென்ற வாரம் தலைமைத் தளபதி ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டது.. இலங்கை இராணுவம் எதுவுமே செய்யவில்லை எனவும், புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. யார் விசாரிக்கப்பட வேண்டியவர்களோ அவர்களே தம்மை விசாரித்துக் குற்றம் அற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் அதிசயம் இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்காது.

தீராநதி : சேனல் 4 வீடியோ ஆதாரங்கள், சர்வதேச நெருக்கடிகள், மனித உரிமைப்புகளின் கண்டனங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசு இத்தனை துணிச்சலாக அதிகாரத்தை உமிழ்வதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

அ.மா : பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த அதே நாளில் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டிலும் கூட பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்றுள்ளது என்பதுதான் அது. நான் அங்கிருந்தபோது நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அமைதி நிலவுகிறது என்று பேசினார். மிலோசெவிக் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டது போலத் தன் மீது நடத்துவது சாத்தியமில்லை என ராஜபக்‌ஷே நம்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினர் கிடையாது. எனவே ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதலுடன்தான் ராஜபக்‌ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலும். அதற்கு சீனா, ருஷ்யா முதலிய நாடுகள் சம்மதிக்காது என்பது ராஜபக்‌ஷேக்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுதல்.

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா இலங்கைப் பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காது. இந்து மகா சமுத்திரம் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்தியாவும் அமெரிக்காவும் ‘strategic partners’. இலங்கைத் தீவின் கீழும் மேலும், அம்பாந்தோட்டவிலும், மன்னாரிலும் சீனா உறுதியாகக் கால் பதித்துள்ளது. பத்தாயிரம் சீனக் கைதிகள் இன்று இலங்கை முழுதும் பல்வேறு பணிகளில் உள்ளனர். கட்டுநாயக்கா உயர் வேகப் பாதை உட்பட பல கட்டுமானப் பணிகளை இன்று சீனா இலங்கையில் செய்து வருகிறது. மலேசியாவுக்கு அடுத்தபடியாக இன்று மிக அதிக அளவு இலங்கையில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா. அவ்வளவு எளிதாக இவர்கள் எல்லாம் நம்மை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ராஜபக்‌ஷேக்களுக்கு.

தீராநதி : அப்படியானால் வரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்கிறீர்களா?

அ.மா : நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆனால் இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளித்து விஷயம் முடிக்கப்படுமோ என்பது நமது அச்சம். உண்மையிலேயே இன்றைய சூழலில் இலங்கை மீதான நடவடிக்கையின் உச்சபட்சமான சாத்தியம் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு அதற்கு இந்திய அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். நேற்று சானல் 4 வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றை உறுதி செய்கின்றன. கடைசி நேரத்தில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது ஏதோ போரின் ஊடான தாக்குதலில் அல்ல என்பதுதான் அது. இது பிடித்து வைத்து systematic ஆகச் செய்யப்பட்ட படுகொலை. இந்தக் கொலைகளுக்கான command responsibility மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷேக்களுக்கும் அன்றைய தளபதி ஜெனெரல் ஃபொன்சேகாவிற்கும் உண்டு. அந்த வகையில் அவர்கள் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்படத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். புலிகளும் செய்தார்கள் நாங்களும் செய்தோம் என்று அவர்கள் சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கூற்றுப்படி புலிகள் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே நானும் செயல்படுவேன் என ஒரு அரசு எப்படிச் சொல்ல முடியும்?

மேலும் ஓராண்டு கால அவகாசம் என்பதாக இல்லாமல் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறியுள்ளபடி போர்க் குற்றங்கள் மற்றும் காணமலடிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தை நீர்க்கச் செய்யாமல் நிறைவேற்றுவதற்கு இந்தியா மனப்பூர்வமாகச் செயல்படவேண்டும். செயல்படுமா?!!

“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ

அ.மார்க்ஸ் நேர்காணல்

October 16, 2012 at 1:06pm

{“தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழானஅணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மார்க்சின் வீட்டில் அவரைச் சந்தித்து எடுக்கப்பட்டது. முன்னணியின் மாநிலப் பொருளாளர் ஆர்.ஜெயராமன், மாநிலக் குழு உறுப்பினர்கள் நீதிராஜன் மற்றும் எஸ்.கே.சிவா ஆகியோர்வெண்மணிசார்பாகப் பங்கேற்றனர்.

1960 களின் பிற்பகுதி தொடங்கி சென்னைக் குடிசை வாழ் மக்களின் பிரச்சினைகள், உலக வங்கித் தலையீட்டால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், பெரும்பான்மைக் குடிசை மக்கள் தலித்களாகவும் டொழிலாளிகளாகவும் இருந்தபோதும் அவர்களின் பிரச்சினைகள் தலித் பிரச்சினையாகவும் தொழிலாளிகளின் பிரச்சினையாகவும் பார்க்கபடாமற் போன வரலாறு, உலக மயம் மற்றும் உலகத் தரமான பெருநகர உருவாக்கங்களினூடாக  சென்னைகுள்ளேயே இரு சென்னைகள் உருவாகும் அவலம் முதலிய பல பிரச்சினைகள் இந் நேர்காணலில் அலசப்படுகின்றன.} 

 

வெண்மணிசென்னை நகரில் அடிக்கடிக் குடிசைகள் தீப்பற்றி எரிவது குறித்து உண்மை அறியும் குழுக்களை அமைத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளீர்கள். எவ்வளவு காலமாக இப்படிக் குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன? இதனுடைய பின்புலமென்ன?

 

.மார்க்ஸ்நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே இதுபோல ஒரு மிகப் பெரிய தீ விபத்து நடந்தது. தீப்பிடிக்காத சுமார் 5000 வீடுகளை தி.மு.க அரசு அப்போது எரிந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்தது. குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் இயற்கையாகக் கூட நடக்கலாம். சமீப காலமாகச் சென்னை நகரில் நடக்கும் தீ விபத்துக்களை அரசு தானாகவே ஏற்பட்டவை எனவும் மின் கசிவு முதலியவைதான் காரணம் எனவும் சொல்லுகிறது. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை. அப்படி நம்பாததற்குக் குறிப்பாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்த விபத்துக்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அறிவிக்கப் படும் இடங்களிலேயே நடை பெறுகின்றன. திட்டங்களுக்காக அப்பகுதியிலுள்ள குடிசைகளை அகற்ற வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அம் மக்கள் மத்தியில் வந்து பேசியிருப்பார்கள். கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். மக்கள் அதற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள். திடீரென அப்பகுதிக் குடிசைகள் தீப்பற்றி எரியும். 2009 இறுதியில் வியாசர்பாடி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில்  320 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அதற்குச் சில நாட்களுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக அப் பகுதியினர் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் கூட்டம் நடத்திப் பேசியிருந்தார்கள். அருகிலுள்ள பி.கே.புரம் மற்றும் புது நகரிலும் அதே காலகட்டத்தில் சுமார் 130 வீடிகள் தீப்பற்றி எரிந்தன. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக இங்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, அவர்களது வீடுகளெல்லாம் அளந்து குறியிடப்பட்டிருந்ததையும் நாங்கள் பார்த்தோம். 2009 ஜூனில்  அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் விரிவு ஆகிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து எரிந்தன. அடையாறு-போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவேக்காக நிலம் அளந்து கல் பதிக்கப்பட்ட இடம் இது. தீ விபத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடையாறு பூங்கா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு இம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி இவர்களிடம் “கருத்துக் கேட்கப்பட்டு” இருந்தது. இப்படி நிறையச் சொல்லலாம். சென்ற மாதத்தில் அசோக் பில்லர் அருகே அம்பேத்கர் காலனி எரிந்து 500 குடிசைகள் சாம்பலாகியதல்லவா? அருகில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திற்கு,  இப்பகுதி மக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள  ஒரு கிரவுண்ட் தேவை எனச் சொல்லிப் பிரச்சினை இருந்தது. ஆக இந்த ‘விபத்துக்களெல்லாம்’ திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்கிற ஐயம் மக்களுக்கு உள்ளது.

 

இரண்டாவதாக, தற்போது குடிசைகள் எரியும்போதெல்லாம், முன்னைப்போல அதே இடங்களில் தீப்பிடிக்காத குடியிருப்புகளை அரசு கட்டித் தருவதில்லை. உடனடியாக அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, நகருக்கு வெளியே துரைப்பாக்கம், ஓக்கியம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் விரிவிலிருந்த 106 வீடுகளும் எரிந்த ஒரு வாரத்தில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு உள்ளே யாரும் நுழையக் கூடாது எனப் பலகைகளும் நடப்பட்டன. பெருங்களத்தூர் கன்னடபாளையம் அருகில் ஆள் நடமாட்டமும் எந்த வசதியும் இல்லாத பகுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு சென்ட் நிலத்தைக் கொடுத்துக் கட்டாயமாக அவர்கள் கொண்டு விடப் பட்டனர். தற்போது எரிந்துள்ள அசோக்நகர் மற்றும் மக்கீஸ் கார்டன் பகுதிகளிலும்கூட உடனடியாக வந்து பார்வையிட்ட அமைச்சர்களும் மேயரும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொன்னது, இங்கிருந்து நீங்கள் போய்விடுங்கள் என்பதுதான். எரியும் பகுதிகளில் இருந்தவர்களுக்குச் சில ஆயிரம் நிவாரணப் பணம் வழங்குவதோடு முடித்துக் கொள்ளுகிறார்கள். முன்னைப்போல அந்தந்த இடங்களிலேயே தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த விபத்துக்கள் எல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

 

வெண்மணிமக்களுக்கு இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் பலமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்று அறிக்கை அளித்துள்ளீர்கள். உங்கள் கருத்து என்ன? இந்தத் தீவிபத்துகளுக்குப் பின் ஏதாவது சதி உள்ளதா?

 

.மாஎங்களின் உண்மை அறியும் குழு அறிக்கைகளில் நாங்கள் நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உள்ளவற்றைத்தான் இறுதி முடிவாகச் சொல்வது வழக்கம். அப்படிச் சாத்தியமில்லாத நிலையில் அரசும் ஊடகங்களும் முன்வைக்கும் கதைகளில் உள்ள முரண்களை அம்பலப்படுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மறைக்க முயல்கிற அம்சங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்போம். முழுமையாக நடந்ததை வெளிக் கொணர வேறு சாத்தியமான விசாரணை முறைகளைக் கோருவோம். இந்த விஷயத்திலும் நாங்கள் அப்படித்தான் சொல்கிறோம். மக்களின் அய்யங்களில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும் காரணங்கள் பலவும் நம்பும்படியாக இல்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த புகழ் பெற்ற மூர் மார்க்கெட்டைக் கொளுத்தித்தானே அங்கு கடை வைத்திருந்தோரை  வெளியேற்றினார்கள். இந்தத் தீவிபத்துக்கள் எல்லாவற்றையும் மின் கசிவு என்பதுபோலக் காரணம் சொல்லி, “விசாரணையில் உள்ளது” எனப் பதிவு செய்து கொஞ்ச காலத்தில் கதையை முடித்து விடுகிறார்கள். தீயணைப்புத் துறையைக் கேட்டால், “நாங்கள் சேவை செய்யும் அமைப்பு மட்டுந்தான். விசாரிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. நீங்கள் சொல்வது போல இது திட்டமிட்ட சதி வேலையாகவும் இருக்கலாம். எந்தெந்தப் பகுதியில் தீ விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். குடிசைப் பகுதிகளுக்கு மிக அருகாக தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது, குழாய்களைக் கொண்டு சென்று தீயை அணைக்க முயலும் முன் காரியம் முடிந்து விடுகிறது. இந்தப் பகுதிகளில் நிரந்தரமாகத் தண்ணீரை அதற்கான தொட்டிகளில் வைத்திருப்பதையும் ‘சாலிட் ஹைட்ரன்ட்’ முதலான தொழில் நுட்ப வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் அரசு இதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை” என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மக்கீஸ் கார்டனில் சுமார் 200 குடிசைகள் மூன்று வாரங்களில் தவணை முறையில் எரிந்து சாம்பலாயின. எல்லாவற்றையும் மின்கசிவு எனச் சொல்லி மேல் விசாரணை இல்லாமல் வைத்திருந்தார்கள், இது குறித்து ஆயிரம் விளக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம் கேட்டோம். மக்களின் ஐயங்களைச் சொல்லி, இப்படித் தவணை முறையில் எரிவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே, அவர்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சி என்கிற கோணத்தில் இதை விசாரிக்க முடியாதா எனக் கேட்டோம். அவர் சிரித்தார். “அப்படீன்னா, அரசாங்கமே இப்படிச் செய்யுது என்று விசாரிக்கணும் என்கிறீங்களா? அது எப்படி சார் முடியும்?  அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதானே செய்யும்?” என்றார். ஆக, போலீஸ் விசாரணை மூலம் இந்தத் தீவிபத்துக்கள் குறித்த   உண்மைகள் வெளிவராது.

 

இன்று சென்னையில் நான்கைந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்  செயலில் உள்ளன. துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுர வாயில் வரை கூவம் ஆற்றின் ஓரமாகவும், அடையாறு மலர் மருத்துவ மனையிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் வரையில் அடையாற்றங்கரை ஓரமாகவும், எண்ணூர்- பேசின் பிரிட்ஜ்- வால்டாக்ஸ் சலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாகவும் கட்டப்படும் அதி வேக உயர் நெடுஞ்சாலைகள் இவற்றில் முக்கியமானவை. இந்த நதிக்கரை ஓரங்களில்தான் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் உள்ளன. மிகவும் சுகாதாரக் கேடான, எந்த வசதியும் இல்லாத இந்தச் சாக்கடைக் கரையோரங்களில்தான்  புழுக்களைப்போல நம் மக்கள் வசித்து வருகின்றனர், நகர்ப் புறத்தில் அமைந்துள்ள வாழ்வாதாரங்களுக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் காலங் காலமாக இங்கே வசித்து வருகின்றனர். இந்த வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துக் கடன் தரும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குத் தக இன்று நமது அரசுகள் நகர்ப்புறக் குடியிருப்பு உருவாக்கம் தொடர்பான தனது கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. குடிசைகள் இருந்த இடங்களிலேயே உறுதியான வீடுகளைக் கட்டித் தருவது, வசதிகளை மேம்படுத்துவது என்பதற்குப் பதிலாக, குடிசை மக்களை நகர் மையங்களிலிருந்து வெளியேற்றி தூரமாகக் கொண்டு சென்று பிற குடிமக்களிடமிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தத் தீவிபத்துக்கள் மிகுந்த சந்தேகத்திற்குரியவைகளாக உள்ளன. இதனை நமது காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிசைப் பகுதி தீ விபத்துக்கள் குறித்து  நீதி விசாரணை ஒன்று வேண்டும் என்கிறோம்.

 

வெண்மணிஉலக நிதி நிறுவனங்களின் தலையீட்டால் மத்திய மாநில அரசுகள் குடிசை மாற்று தொடர்பான தமது அணுகள் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன என்று சொன்னீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?

 

.மாமிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று இது. கூடிய வரை சுருக்கமாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில், குறிப்பாக அறுபதுகள் தொடங்கி கிராமப் புறங்களிலிருந்து பெரிய அளவில் அடித்தள மக்கள் நகரங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அரசின் தவறான கொள்கைகள், கிராமப்புறம் மற்றும் விவசாய வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டாமை, நேரு காலத்தியத் தொழில் முயற்சிகள் யாவும் நகரங்களை மையப்படுத்தி இருந்தது முதலியன இப்படியானதற்குக் காரணங்களாக இருந்தன. இவர்கள் ஆக அடித்தள மக்கள் மட்டுமல்ல. ஆக அடித்தளச் சாதிகளையும் சேர்ந்தவர்கள். இன்று சென்னையிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதம் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், வீடற்றவர்களாகவும் உள்ளனர். வீடற்றவர்கள் என்பது நடைபாதை ஓரங்கள் முதலானவற்றில் ஒண்டியிருப்பவர்கள். இந்தக் குடிசை வாழ் மக்கள் மற்றும் வீடற்றோர்களில் 90 சதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

வெண்மணிஆகக் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தலித் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் அல்லவா?

 

.மாநிச்சயமாக. அதைத்தான் சொல்ல வருகிறேன். இங்கிருந்த பாரம்பரியமான தலித்கள், கடலோரங்களில் வசித்த மீனவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் முதலான உதிரித் தொழிலாளிகள் போன்றோரில் பெரும்பகுதியும் உறுதியான வீடுகளின்றிக் குடிசைப் பகுதிகளில் வசித்தவர்கள்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடது. எனினும் புதிதாக இடம்பெயர்ந்து வந்த அடித்தளச் சாதியினர் நகரத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அசுத்தமானப் பகுதிகளில், குறிப்பாக இன்று சாக்கடைகளாக மாறிப்போன நதிக்கரைகளில் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இவர்களில் 90 சதம் பேர் தலித்களாகவே இருந்தபோதும் சென்னை நகரத் தலித்கள் என்றால் பரம்பரியமாக இங்கிருந்த தலித்கள் மட்டுமே மனம் கொள்ளப்பட்டனர். புதிதாகக் குடியேறிய இந்தக் குடிசை மக்களைத் தலித்களாகப் பார்க்கும் வழமை இங்கில்லை. சாதி என்பதை பிறப்புடனும் பிறந்த நிலத்துடனும் (Nativity) தொடர்புபடுத்திப் பார்க்கும் நமது மனநிலையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

 

இறுக்கமான மார்க்சீய வரையறையின்கீழ் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை. வேலை உறுதி,  தொழிற் கள உரிமைகள் எதுவும் இல்லாமல் துண்டு துக்காணி வேலைகள் (piecemeal works) செய்து வாழ்பவர்கள் இவர்கள். வீட்டு வேலைகள் செய்வது, கார்ப்பொரேஷன் பள்ளி வாயில்களில் நாவற் பழம், மலிவான மிட்டாய்கள் முதலியவற்றை விற்பது, பூ விற்பது, வண்ணம் பூசுவது, வண்டி இழுப்பது, மெக்கானிக் ஷாப்களில் இரும்பு அடிப்பது,  சாவு மேளம் அடிப்பது, பாலியல் தொழிலாளியாகச் செயல்படுவது, சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, கட்டிடத் தொழிலாளிகளாக ஒப்பந்தக் காரர்களிடம் பணிபுரிவது, குழந்தைத் தொழிலாளிகளாக ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்வது, குப்பை பொறுக்குவது, குழி தோண்டுதல், லாரிகளில் சுமை ஏற்றுதல் முதலானக் கடின வேலைகளைச் செய்வது முதலியன இவர்களில் பெரும்பாலானோரது தொழில்கள். இந்தத் தொழில்களில் பல கடினமானவை மட்டுமல்ல,  பாலியல் சுரண்டல் மட்டுமின்றிப் பல்வேறு வகையான  சுரண்டல்களுக்கும் வழி வகுப்பவை. இப்படியான உதிரித் தொழில்களைச் செய்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை.

 

ஆக வர்க்க அடிப்படையில் அணி திரட்டியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைத் திரட்டியவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்.

 

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அணுகல் முறைகளிலிருந்து அவர்கள் பல அம்சங்களில்

வேறுபட்டனர், தங்களுடைய ஆதரவு சக்திகளாக இருந்த குடிசை வாழ் மக்கள் முதலானோருக்கு உடனடிப் பலன்கள் கிட்டுமாறு சில திட்டங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தினர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் மற்றும் 1971ம் ஆண்டு நகரத் திட்டமிடல் சட்டம் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1970 டிசம்பர் 23 அன்று நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் ‘தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தை’த் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் ஏழாண்டுகளில் சென்னை நகரில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாகச் சூளுரைத்து அதற்கென 40 கோடி ரூபாய்களை ஒதுக்கவும் செய்தார். 1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி சென்னையிலுள்ள குடிசை வாழ் மக்களின் என்ணிக்கை 7.37 இலட்சம். 2001ம் ஆண்டுக் கணக்கின்படி இது 10.79 இலட்சம். இது மொத்தச் சென்னை மக்கள்தொகையில் 26 சதம். இன்றைய நிலையில், நடைபாதையில் வசிப்போர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது உயர்ந்த பட்சம் 30 சதமாக இருக்கலாம்.

 

திமு.க அரசு தான் அறிவித்த குறிக்கோளை நிறைவேற்ற இயலாமற் போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால்  தொடக்கத்தில் இது தொடர்பாக அது கொண்டிருந்த அணுகல் முறை உண்மையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று. குடிசைகளை ஒழித்து அந்த இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை உருவாக்குவது என்பதில் குடிசை மக்கள் அதே இடங்களில் குடியமர்த்தப் படுவது என்பது முக்கிய அம்சமாக இருந்தது. நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், அயோத்தி குப்பம் முதலான மீனவர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்படித்தான் உருவாயின. இராம.அரங்கண்ணல்  போன்ற கட்சித் தலைவர்கள் குடிசை மாற்று வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கட்டப்பட்ட குடியிருப்புகளை யாருக்கு அளிப்பது என்கிற அதிகாரம் வாரியத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ‘ஹட்கோ’ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் உலக நிதி நிறுவனங்கள் இதில் தலையிட்டு மிகப் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தன. இதன் முக்கியமான அம்சம் என்னவெனில் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி  வெகு தொலைவில் கொண்டு சென்று பிற நகர மக்களிலிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பதே. 1972லிருந்து உலக வங்கியின் தலையீடு தொடங்கியது. இதற்கென அது சில கொள்கை அறிக்கைகளையும் உருவாக்கியது, Urbanisation (1972), Sites and Services Projects (1974), Housing (1975) முதலியன இவற்றில் சில. இது குறித்து நித்யா ராமன் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (EPW, July 30, 2011). குடிசை மாற்று நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டைக் குறைத்து அதிகாரவர்க்க மயப்படுத்துவது (bureucritisation),  மக்கள் நலன் என்பதைக் கட்டிலும் இந்தத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியை எவ்வாறு சிக்கனமாகவும் மீட்டெடுக்கும் வகையிலும் பயன்படுத்துவது முதலான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னதாக நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு இக்குடியிருப்புகள் வழங்கப்படும்போடு அவர்கள் மாதந்தோறும் வெறும் 10 ரூபய்கள் கொடுத்தால் போதுமானது எனவும், வைப்புத் தொகையான 500 ரூபாயையும் கூட அவர்கள் கட்ட வேண்டியதில்லை எனவும் தி.மு.க அரசு உத்தரவிட்டிரூந்தது குறிப்பிடத்தக்கது.

1977ல் மொத்தத் திட்டத் தொகையான 62 மில்லியன் டாலரில் 24 மி டாலரை உலக வங்கி கடனாக அளித்தது.  சென்னை நகர வளர்ச்சித் திட்டம்1 (MUDP 1) என இதற்குப் பெயர். 1980-88ல் MUDP 2க்கு 42மி டாலரும், 1988-97 காலகட்டத்தில் தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 255 மி டாலரும் கடனளிக்கப்பட்டது. குடிசைப் பகுதி மக்களை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றாமல் அவரவர் இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை கட்டிக் குடியமர்த்துவது என்கிற தமிழக அரசின் கொள்கையை உலக வங்கி வெறுப்புடன் பார்த்தது. நகருக்கு வெளியே இடங்களைக் கண்டுபிடித்து அங்கே தங்குவதற்கான ‘வசதிகளை  ஏற்படுத்தி’ தகுதியானவர்களுக்கு அளிப்பது, கூடியவரை கட்டிடங்களாகக் கட்டி அளிப்பது என்பதைத் தவிர்ப்பது, அரசு மாநியங்களைப் பெரிய அளவில் குறைப்பது, வாரியத் தலைவர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது முதலியன உலகி வங்கியின் கொள்கைகளாக அமைந்தன. கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு அளிக்கும்போது, அவர்களிடமிருந்து உடனடியாகக் கட்டுமானச் செலவில் பத்து சதத்தை வசூலிப்பது, மீதத் தொகையை 12சத வட்டியில் 20 ஆண்டுகளில் வசூலிப்பது முதலியன உலக வங்கி ஏற்படுத்திய சில மாற்றங்கள். முன்னதாக 4 சத வட்டியே பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இப்படித் தொடங்கியதுதான் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி ஓக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது. 1986ல் மெரீனா கடற்கரையை அழகு படுத்துவது என்கிற பெயரில் மீனவர் குடியிருப்புகளக் காலி செய்ய எம்.ஜி.ஆர் அரசு நடவடிக்கை மேற்கொண்டதும், இடம்பெயர மறுத்த மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர்கள் கொல்லப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

 

வெண்மணிசென்னைக்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களே கட்டுவது இல்லை என்பதுதான் அரசு முடிவா?

 

.மா: ஆமாம். அரசு அப்படித்தான் முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கீஸ் கார்டனில் குடிசைகள் எரிந்ததையொட்டி நாங்கள் குடிசை மாற்று வாரியத்தில் விசாரித்தபோது இத்தகைய பதில்தான் வந்தது. பட்டினப்பாக்கம் தவிர இனி சென்னைக்குள் குடிசை மாற்றுக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டமே இல்லை என உறுதியாகச் சொன்னார்கள். மேயர் சைதை துரைசாமியும் அதைத்தான் சொன்னர். “சென்னைக்குள் எங்கே சார் இடமிருக்கு? இருந்தா காட்டுங்க, அம்மாட்ட சொல்லி உடனே கட்டித் தருகிறேன்” என்றார்.

 

வெண்மணிஅவர்கள் சொல்வது உண்மைதானா? சென்னை நகர மையத்தில் இனிமேல் இடமே கிடையாதா?

 

.மா: இல்லை. அது தவறான கருத்து.  தவறு என்பதைக் காட்டிலும் அது முழுப் பொய். இது குறித்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரும்  “Transparent Chennai’ என்கிற அமைப்பு சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது.

 

அதன்படி. சென்னை நகருக்குள் புதிதாகக் குடிசைக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே இருந்த போதிலும் 1985க்குப் பின் புதிய குடிசைப் பகுதிகள் ஏதும் அராசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் புதிய குடிசைப் பகுதிகள் உருவாகும்போது அவற்றைக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டுமென்பது விதி. கடைசியாக இது குறித்த விரிவான ஆய்வு 1971ல் செய்யப் பட்டது. அப்போது 1202 புதிய குடிசைப் பகுதிகள் அடையாளம் கண்டு அறிவிக்கப் பட்டன. அதற்குப் பின் 1985ல் அந்தப் பட்டியலில் மேலும் 17 குடியிருப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.அதன்பின் நூற்றுக்கணக்கான புதிய குடிசைப் பகுதிகள் உருவாகியிருந்த போதிலும் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.  சிலவற்றில் வாழ்ந்தவர்கள் உரிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

 

ஆனால் இப் புதிய குடிசைப் பகுதிகள் அனைத்தும் சென்னை நகரத்திற்குள் மிகக் குறைந்த சிறு நிலப் பரப்பிலேயே அமைந்துள்ளன. குடிசை மாற்று வாரியம் 2002ல் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின் படி இந்த அங்கீகரிக்கப் படாத புதிய குடிசைப் பகுதிகள் சென்னை நகரின் மத்தியப் பகுதியில் வெறும் 1.7 சதுர கி.மீ பரப்பிலேயே அமைந்துள்ளன. மொத்தச் சென்னைப் பெரு நகரப் பகுதியிலும் வெறும் 4.8 சதுர கி.மீ பரப்பில்தான் இவை உள்ளன. இது விரிவாக்கப் பட்ட கார்பொரேஷனின் மொத்தப் பரப்பில் வெறும் 1.1 சதம் மட்டுமே.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டதைப் பயன்படுத்தி பாடம் நாராயணன்  அறிந்துள்ள ஒரு தகவலின்பட்டி நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சென்னை முழுவதிலும் அரசு கையகப் படுத்தியுள்ள மொத்த நிலத்தில் பயன்படுத்தப் படாது கைவசமுள்ள நிலம் 10.42 சதுர கி.மீ. ஆக அரசு நினைத்தால் இந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்வை அழிக்காமல் சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த இயலும். வெறும் 4.8 சதுர கி.மீயில் சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இவர்களை உபரியாக உள்ள 10.42 சதுர கி.மீ பரப்பில் குடியேற்ற முடியாதா என்ன?

 

ஆனால் சிங்காரச் சென்னைக்குப் பொருத்தமற்ற அழுக்குகளாகக் கருதி இம்மக்களை செம்மஞ்சேரி முதலான பகுதிகளுக்கு வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கும் அரசுகள் நகருக்குள் இடமே இல்லை எனச் சாதிக்கின்றன. குடிசைப் பகுதிகள் எரியும்போது அந்த இடத்திலேயோ, இல்லை 5கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றியோ அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு  கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன.  சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்.  வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த  மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை.

 

வெண்மணிஏன் இப்படிக் குடிசைப் பகுதிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்த்துள்ளீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 

.மாஎந்த வகையிலும் குடிசைப் பகுதி மக்களுக்குச் சட்டபூர்வமான நிலை அளித்துவிடக் கூடாது என்பதுதான்.  இவர்களை எப்போதும் சட்ட விரோத ஆக்ரமிப்பாளர்களாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  குடிசைப் பகுதிகள் பலவற்றில் மக்கள் தாமாகவே மின் இணைப்புகளைக் கொடுத்துக் கொள்கின்றனர். அசோக் பில்லர் அருகிலுள்ள அம்பேத்கர் காலனிக்கு நாங்கள் சென்றபோது எரிந்து போன இடங்களில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்களாகவே இணைப்புக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் இதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்த “மின் திருட்டு” அறிந்தே அனுமதிக்கப் படுகிறது. குடிசை வாழ் மக்களை பிற குடிமக்களுக்குச் சமமானவர்களாக நடத்த அரசு விரும்பவில்லை. அவர்களை ஒருவகைச் சட்ட விரோதக் குடிமக்களாகவும், குற்ற நிலையினராகவுமே வைத்துக்கொள்ள அரசு நினைக்கிறது. குடிசைப் பகுதிகளை அங்கீகரித்தால், அவர்களை நினைத்தபடி வெளியேற்ற இயலாது. சில விதி முறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.

 

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கண்ணகி நகர் போன்ற இடங்களில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை பற்றி எங்கள் அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளோம். முன்பிருந்த இடங்களிலிருந்து சுமார் 20,30 கி.மீ தொலைவில் இவர்கள் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்படும்போது முதலில் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுகிறது. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் அவற்றைத் தொடர இயலுவதில்லை. பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. கடன், கந்து வட்டி, கள்ளச் சாராயம், ராவுடியிசம், தற்கொலைகள், இப்படித்தான் அங்கே வாழ்க்கை அமைந்துள்ளது.

 

இப்போது பெரும்பாக்கத்தில் ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்ட்த் திட்ட’த்தின் கீழ்  மிகப் பெரிய மெகா குடியிருப்பு ஒன்றை அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் 950 கோடி ரூபாய் நிதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு எட்டு மாடி வளாகம். 27,158 வீடுகள் இங்கே கட்டபடுகிறதாம். ஒவ்வொரு வீடும் 200 சதுர அடியாம். இப்படியான மெகா குடியிருப்புத் திட்டம் மிக மிக மோசமானது. முதலில் இவ்வாறு அடித்தள மக்களை சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டு சென்று ஒதுக்கி வைப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து, இந்த ஜவஹர்லால் நேரு திட்டம், ராஜீவ் அவாஸ் யோஜனா (JNNURM / RAY) என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளை அந்த்தந்த இடங்களிலேயே (in situ) வைத்து மேம்படுத்துவது என்பதுதான். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது தவறு.

 

பெரும்பாக்கம் குடியிருப்பில் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்வதையும் நாம் நம்ப இயலாது. பாடம் நாராயணன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலின்படி அங்கே 20 அங்கன்வாடிகள் 3 நர்சரிப் பள்ளி, 5 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகள், 1 கல்லூரி, 1 விடுதி, 50 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனை எல்லாம் கட்டித்தரப்படுமாம்.  ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர்கள் இருப்பதாகக் கொண்டால் பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ள  27,158 வீடுகளிலும் 1,35,790 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு எப்படி 50 படுக்கை கொண்ட மருத்துவமனை போதும்? குறைந்த பட்சம் 100 அங்கன்வாடிகள் 20 பள்ளிகள் தேவைப்படாதா? அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 க்கும் மேற்பட்ட லிஃப்ட்கள் பொருத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்கு இவை ஒழுங்காக வேலை செய்யும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன.

4 அல்லது 5 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இப்படி ஒரே இடத்தில் கட்டுவது மிகப் பெரிய அபத்தம். அரசு அதிகாரிகளே இந்த முட்டாள்தனமான திட்டத்தை எதிர்த்துள்ளதாக அறிகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 

வெண்மணிஇன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். சென்னை நகரக் குடிசை வாழ் மக்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

 

.மாநிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. உலகமயம் பல்வேறு தளங்களில் அடித்தள மக்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. “தேச அரசுகள் தனியார் மயப் படுத்தப்படல்” (privatization of nation states)

Top of Form