அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 14     

தீராநதி, மார்ச் 2018              

பௌத்தத்தில் பத்தினி வணக்கம் முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தன்னை ஒரு பவுத்த காவியமாக முன்னிறுத்திக் கொள்ளும் மணிமேகலை இவ்வகையில் சற்று பௌத்த மரபிலிருந்து விலகி நிற்கிறது எனலாம். தான் தேர்ந்து கொண்ட என்பதைக் காட்டிலும் தனக்குத் தேர்ந்தளிக்கப்பட்ட வாழ்வைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு, தனது பேறாய்க் கிடைத்த அந்த அற்புத்தப் பாத்திரத்துடனும் உள்ளத்தில் சிலிர்த்த பேருவகையுடனும் பிச்சை ஏற்க வீதியில் இறங்கிய மணிமேகலை, “பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் பெரும் பெருமைக்குரியதாய் அமையும்” என்றனள்.

இந்த இடத்தில் மணிமேகலைக் காப்பியத்தினுள் இரு துணைக்கதைகள் பதிக்கப்படுகின்றன. அவற்றினூடாக இன்னும் சில அடிப்படையான பௌத்த அறங்கள் முன்வைக்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல இந்தப் பின்னணியில் தென் ஆசியப் பவுத்தப் பிரபஞ்சம் ஒன்றும் நம் முன் விரிக்கப்படுகிறது.

இங்கு அறிமுகமாகும் காயசண்டிகை எனும் பாத்திரத்தின் துயர் நிறைந்த கதையைச் சொல்லும்முன் அவள் வாயிலாக அறிமுகமாக்கப்படும் ஆதிரை  மற்றும் அவளது கணவன் சாதுவன் ஆகியோரின் வரலாறு பௌத்த அறங்களை விளக்க முற்படுகிறது எனப் பார்க்கலாம். பவுத்தம் எவ்வாறு மக்களுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டு, சில அம்சங்களில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியும், சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் இடமளித்தும் மக்கள் மத்தியில் தனக்கொரு இடத்தை நிறுவிக்கொள்கிறது என்பதையும் காணலாம்.

“ஒரு குளத்திற்கு அதனுள் பூத்திருக்கும் தாமரை மலர்கள் அழகு சேர்ப்பன. அவறுள் ஓங்கி வளர்ந்து அழகு சேர்க்கும் ஒரு திருமலர் போன்ற கற்பின் சிறப்பைப் பெற்றவளான ஆதிரை வாழும் வீடு இதுதான்” எனக் கூறி அவளிடம் சென்று முதற் பிச்சை ஏற்றல் தகும் என காயசண்டிகை சொல்வதனூடாக ஆதிரை சாதுவன் இணையரின் வரலாறு இங்கே பதியம் கொள்கிறது.

சாதுவன் தீய ஒழுக்கங்கள் பலவற்றின் ஊடாக மனையறம் பேணற்குரிய தகவு அற்றவனாகி, மனைவியைப் பிரிந்து, கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். வட்டாடல், சூதாடல் என எல்லாத் தீய ஒழுக்கங்களின் ஊடாகவும் தன் பொருளனைத்தையும் இழந்தான். அவனிடம் பொருள் இருந்தவரை அவனைப் பேணிக் கொண்டாடிய அக் கணிகையும் அவனை ஒன்றும் இல்லாதவன் எனப் பழித்துக் கைவிட்டாள்.

மீண்டும் செல்வந்தன் ஆகவேண்டும் என்கிற அடங்கா வேட்கையுடன் சாதுவன் மரக்கலம் ஒன்றில் ஏறி வணிகர்களுடன் பொருள் தேடிச் சென்றான். கோவலனின் கதையுடன் சில அம்சங்களில் ஒப்புமை உடைய சாதுவனின் வரலாறு பல அம்சங்களில் அதிலிருந்து வேறுபடுகிறது. மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் அவளை வெறும் பொறுளாசை மிக்க ‘வேசி’ என்பது போன்ற வழமையான கருத்தாக்கத்திலிருந்து வேறுபடுத்தி நிறுத்துவார் இளங்கோ அடிகள். மாதவியைப் பொருத்த மட்டில் அதே பார்வையுடன் அவளை இன்னும் ஒரு படி உன்னதப் படுத்தி பௌத்த அறம் பேணும் துறவு நிலை எட்டுபவளாகச் சித்திரிக்கும் சாத்தனார் இங்கு இந்தக் கணிகையை வழக்கமான பொதுப் புத்தி எப்படிப் பார்க்குமோ அப்படியே பதிவு செய்கிறார்ம. எனினும் காப்பியத்தின் போக்கு அக் கணிகையைத் தொடர்வதில்லை. அவள் இங்கு முக்கிய பாத்திரம் இல்லை.

கணிகையின் தொடர்பால் பொருளிழந்த கோவலனைப் போலவே மீண்டும் பொருள் தேடச் செல்லும் சாதுவனின் வரலாறும் பெரிதும் அதிலிருந்து வேறுபடுகிறது. அவன் சென்ற கலம் கவிழ்கிறது. எனினும் அவன் உயிர் பிழைத்து நிர்வாணச் சாரணப் பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலைப் பக்கமாய்க் கரை ஒதுங்குகிறான்.

மரக்கலம் சிதைந்து, சிதைந்த மரத் துண்டுகளைப் பற்றிக் கொண்டு அவனைப் போலவே கடலில் தத்தளித்த சக வணிகர்களில் சிலர் புகாரை அடைந்து சாதுவனின் மனைவி ஆதிரையிடம் அவன் விபத்தில் மறைந்தான் என்பதாகத் தகவல் அளிக்கின்றனர். கணவன் ‘இறந்த’ சேதி அறிந்த ஆதிரை, “சிறந்த என் கணவன், தன வினைப்பயன் உற்று இறந்தனன். நானும் உயிர் நீத்து அவனைத் தொடர்வேன்” எனக் கூறி தீப்பாய்கிறாள். ஆனால் அந்தத் தீ அவளைப் பற்றவும் சுட்டெறிக்கவும் மறுக்கிறது. தீக்குழியுனுள் அவள் அமைத்துக் கொண்ட படுக்கையும், அவள் உடுத்தியிருந்த்க கூறையும், அவள் கூந்தலை அணிசெய்திருந்த மாலையும் தீப்பற்றாது நின்றதோடன்றி தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல எந்த ஊறும் அடையாது ஒளிவீசி நின்றாள்  ஆதிரை.

“தீயும் கொல்லாத் தீவினையாடி ஆயினேன்” என அவள் ஏங்கி நிற்கும் தருணம் அசரீரி இறங்கி அவள் கனவன் உயிர் பிழைத்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது. ஆறுதல் கொண்டு வீட்டிற்குச் சென்று கணவனின் வருகைக்குக் காத்திருந்த ஆதிரையை, தன் கற்புத் திறத்தால் மழை பொழிய வைக்கவும் வல்ல பிற பத்தினிப் பெண்டிர் தொழுது போற்றும் பெருமை பெற்றவள் எனக் கூறுவதன் ஊடாகப் பத்தினிப் பெண்டிர் பெருமையைத் தொடர்கிறார் சாத்தனார்.

இன்னொரு பக்கம் கதை சாதுவனைப் பின்தொடர்ந்து பவுத்த அறங்களை விளக்க முற்படுகிறது. பவுத்த அறங்களை மட்டுமின்றி பவுத்தம் மக்களை அணுகிய வழிமுறைகளில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாக சாதுவன் வரலாறு பதிக்கப்படுகிறது. பிற அவைதீக அறக் கோட்பாடுகளை முன்நிறுத்திய சமணம் முதலான மதங்களைப் போலன்றி பவுத்தம் நீண்ட காலம் இந்திய மண்ணிலும் இன்னும் தென் ஆசிய நாடுகளிலும் நிலை கொண்டதற்கான காரணங்களில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகவும் அமைகிறது.

அங்கே கரை ஒதுங்கிய சாதுவன் ஒரு மலையடிவார மரநிழலில் மயங்கிக் கிடந்த தருணத்தில், அவ்விடத்தே வசிக்கும் நர மாமிசம் உண்ணும் வழமையுடைய நக்க சாரணர் அவனைக் கண்டனர். ‘தனியனாய் வந்து துயருற்றுக் கிடக்கிறான். எனினுன் ஊனுடை இவ்வுடல் நமக்கு நல்ல உணவாகலாம்’ என எண்ணி அவனை அணுகி எழுப்பினர்.

சாதுவன் வணிகன். பல நாடுகள் சென்று அம்மக்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களிடம் தன் பண்டங்களை விற்று தனக்குத் தேவையானவற்றை வாங்கி வரும் திறன் மிக்கவன். “மற்றவர் பாடை (மொழியை) மயக்கறு மரபிற் கற்றவன்” என அவனைக் குறிப்பார் சாத்தனார். யராயினும் அவரவர் பாடையில் (மொழியில்) பேசுதல் என்பது அவரோடு நட்பு பேணுதற்கும், நம் கருத்துக்களை அவரிடத்தே கொண்டு செல்லவும் நல்ல உபாயமாக இருக்கும். பிற மதங்கள் இங்கு வரும்போது அவை இங்குள்ள மொழிகளில் மக்களை அணுகியதையும், அத்னூடாக இங்குள்ள மொழிகளுக்கு அவை வளம் சேர்த்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கல் தகும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் இங்கு தமிழுக்கு வளம் சேர்த்தமையையும், இங்கு அவை நிலை கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்ததையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்தும் அணுக வேண்டும். தம் மொழியை உன்னதப் படுத்தி தேவ பாஷையாக நிலை நிறுத்தல் என்பதற்குப் பதிலாக அவை நம் மொழியில் பேசி நம் மொழிக்கு வளம் சேர்த்து நம்மோடு நிலை கொண்டன. சாதுவன் மற்றவர் மொழியை மயக்கமறக் கற்றவன் மட்டுமல்ல. அதை அதன் மரபு அறாமலும் கற்றவன்.

தம் மொழியில் சாதுவன் பேசியதைக் கண்டு வியப்புற்ற அச்சாரணர் அவனை வணங்கி அவர்களின் குருமகனிடம் அழைத்துச் சென்றனர். கள் காய்ச்சும் பானைகள், கழிவுகளின் முடை நாற்றம், வெயிலிற் காய்ந்து கிடக்கும் வெள்ளெலும்புத் துண்டுகள் சூழ்ந்த தன் இருப்பிடத்தில் கரடியொன்று தன் துணையோடு இருந்தாற்போலக் காட்சியளித்தான் அந்தக் குரு மகன்.

உரையாடல் தொடங்கியது. மொழி அவர்களைப் பிணைத்து நெருக்கமாக்கியது என்கிறார் சாத்தனார். “பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி” குளிர்ந்த பரநிழலில் அவனருகே சென்றமர்ந்த சாதுவனை, “நீ இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாருங்கள் மக்களே! இந்த நம்பிக்கு மிக்க இளமையுடைய ஒரு பெண், வெம்மையான கள், மாமிசம் எல்லாவற்றையும் வேண்டும் மட்டும் கொடுங்கள்” என ஆணையிட்டான்.

இந்த விருந்துபசார வார்த்தைகள் சாதுவனைத் துயருறச் செய்தன என்கிறார் சாத்தனார். இந்த இடத்தில் சாதுவனுக்கும் சாரணர் தலைவனுக்கும் இடையில் விவாதம் தொடங்குகிறது. “கொடிய சொற்களைக் கேட்டேன்! இது எதுவும் வேண்டேன்” என அவன் அவசரமாக மறுத்தது அந்தப் பழங்குடித் தலைவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆத்திரம் மட்டுமல்ல வியப்பும் தோன்றியது.

“அழகிய பெண்கள், சுவை மிகு உணவு இவை எல்லாம் இல்லாவிட்டால் மக்கள் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன்? அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல்!”

சாதுவன் சொல்லத் தொடங்கினான்:

“மயக்கும் கள்ளையும், உயிர்களைக் கொல்லுதலையும் சீறிய அறிவுடையோர் ஏற்பதில்லை. பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது.  நல்லறங்களைச் செய்வோர் நல்லுலகம் அடைதலும், நல்லதல்லாதவற்றைச் செய்வோர் அருநரகடைதலும்தான் முடிவு என உணர்ந்தோர் அவற்றைக் களைந்தனர். நீயும் இதை அறிந்து கொள்”

கட கடவென நகைத்தான் அந்தத் தலைவன். “உடம்பை விட்டகலும் அவ்வுயிர் ஒரு வடிவத்தில் இன்னொரு இடம் சென்று புகும் என்றாயே அது எப்படி? எனக்குச் சொல்” என்றான்.

“கோபப்படாமல் இதக் கேள். உடம்பில் உயிர் தரித்திருக்கும் வரை உடல் உறும் இன்ப துன்பங்களை அது உணரும். ஆனால் அந்த உயிர் உடலை விட்டு அகன்றால் எரியும் நெரிப்பில் இட்டாலும் அதை அது உணராது. எனவே இவற்றை எல்லாம் உணர்கின்ற உயிர் ஒன்றும் உள்ளதென்பதை அறிந்து கொள்” – இது சாதுவன்.

இது கேட்டதும், எரியும் விழிகளையுடைய அந்த நாகர் தலைவன் நன்கறிந்த அந்த செட்டியின் (சாதுவனின்) காலில் வீழ்ந்தான். “கள்ளையும், கறியையும் விட்டுவிட்டல் இந்த உயிரை நான் எப்படிக் காப்பேன். நான் சாகும் வரை வாழ்வதற்குரிய நல்லறங்களைச் சொல்” என வேண்டி நின்றான்.

“நல்லது. நன்னெறியில் உன் வாழ்க்கை தொடரட்டும். உனக்குத் தகுந்த (ஒல்லும்) அறம் உரைப்பேன். என்னைப்போல மரக்கலம் கவிழ்ந்து தப்பிப் பிழத்து வந்தடைவோரைக் கொல்லுதலைக் கைவிடு. அவர்களின் அரிய உயிரைக் காப்பாற்று. மூப்படைந்து வீழ்ந்து சாகும் விலங்குகளை அல்லாமல் பிற உயிர்களைக் கொல்லும் செயலைக் கைவிடு.”

சாதுவனின் இந்த அறவுரையைக் கேட்ட அந்தச் சிறுமகன், “இது எனக்குப் பொருந்தும். இதை ஏற்று என்னால் கடை பிடிக்க இயலும். இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள். இதுவரை மரக்கலம் கவிழ்ந்துத் தப்பி வரும் மக்களை எல்லாம் கொன்றோம். உண்டோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டனவே இவை. எல்லாம் சந்தனம், அகில் முதலான மண மரங்கள், மெல்லிய ஆடைகள், மிக்க மதிப்புடைய பொருட் குவியல்கள். எடுத்துக் கொள்” என்றனன்.

அவற்றை ஏற்றுக் கொண்ட சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகண் வந்த கப்பலொன்றில் ஏறி ஊர் திரும்பினான். அன்பு மனைவி ஆதிரையோடு இனிய அற வாழ்க்கை வாழ்ந்தான் என்பது மணிமேகலை உரைக்கும் சாதுவன் – ஆதிரை வரலாறு.

மணிமேகலைக் காப்பியத்துல் பதித்து அழகு சேர்க்கப்பட்ட இந்தத் துணைக் கதையின் ஊடாக பவுத்தப் பரவல் குறித்துச் சிலவற்றை நம்மால் உணர் முடிகிறது. பவுத்தத்திற்கு இறுக்கமான அறக் கோட்பாடுகள் இருந்த போதும் அவற்றை மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இறுக்கமாகவும் சமணத்தைப் போன்று மிக உச்சமாகவும் வற்புறுத்துத்துவதில்லை. மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து அவை தகவமைக்கப்பட்டன. இந்தக் கதஈல் உயிர்க் கொலை, மது, மாமிசம் பாலியல் பிறழ்வுகள் ஆகிய நான்கையும் கைவிடச் சொல்லித் தன் அறவுரையைத் தொடர்கிறான் சாதுவன். பெண்டிரை விடுதல் என்பது முற்றிலும் பாலியல் வேட்கையைக் கைவிடல் என்பதல்ல. இப்படியாக இளம் பெண்களைப் பரிசளித்தல், தாசிகள் என்றொரு பிரிவினை உருவாக்கல் முதலானவற்றைக் கைவிடுதலே பெண்டிரைக் கைவிடல் என்பதன் பொருளாகிறது. முற்றான துறவு என்பதையோ காமம் என்கிற உணர்வையே கைவிட வேண்டும் எனவோ சாதுவன் வற்புறுத்தவில்லை.

நாகர்களோ ஒரு கடலோர மலையடிவார நிலப்பகுதியில் வாழ்வோர். விவசாய வாய்ப்பு அங்கில்லை. கடலுணவு, மாமிசம் ஆகியவற்றை அவர்கள் தவிர்க்க இயலாது. எனவே இந்த அம்சத்திலும் சாதுவன் ஒரு சமரசத்திற்கு இணங்குகிறான். மாமிசத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் விருந்துகளுக்கெனவே கொல்லுதல் முதலானவற்றைத் தவிர்த்தல் தகும். இறந்த உடலங்களை உண்ணுதல் ஏற்கத்தக்கது என இந்த அம்சத்திலும் ஒரு முடிவு எய்தப்படுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சாதுவன் தொடக்கத்தில் வற்புறுத்திய அறங்களில் முற்றிலும் விட்டுக் கொடுக்காமல் அமைவது மயக்கும் மதுவைத் தவிர்த்தல் மட்டுமே.

ஆக ஒரு அற பேரம் (negotiation) ஒன்றுக்கு பவுத்தம் தயாராக இருந்தது.

(பவுத்தம் காட்டும் இறுதி உய்விற்கான ஒரே வழி – அடுத்த இதழில்)

 

மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10   

(தீராநதி, நவம்பர் 2017)              

புத்தர் தோன்றியதும் புத்தம் அரும்பியதும் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில்தான். புத்தர் அவதரித்த லும்பினி இன்று நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ளது. புத்தர் நிர்வாணம் அடைந்த புத்த கயா நேபாளத்திற்குக் கீழ் அமைந்துள்ள பீஹார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ளது. அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநாரா உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலிருந்து சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் நேபாள எல்லையில் உள்ளது.

எனினும் அடுத்த சுமார் மூன்று நூற்றாண்டுகளில் மாமன்னர் அசோகரது காலத்தில் பவுத்தம் இலங்கை முதலான தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தடம் பதிக்கத் தொடங்கி இருந்தது. மணிமேகலைக் காப்பியம் புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றியது. புகார், வஞ்சி, காஞ்சி எனும் தமிழகத்தின் அன்றைய மூன்று முக்கிய நகரங்கள் தவிர மணிபல்லவம், சாவகம் முதலான இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயும்  பௌத்தம் செழித்திருந்த பல நிலப்பரப்புகளையும் மணிமேகலை நம் முன் விரிக்கிறது. மணிமேகலையில் காட்சிப்படுத்தப்படும் மணிபல்லவத் தீவு இன்றைய இலங்கையின் நயினாத்தீவுதான் என்றொரு கருத்துண்டு. சாவகம் என்பது இன்றைய ஜாவா என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியா, இலங்கை, தாய்லந்த், கம்போடியா, லாவோஸ், ஜாவா, சுமத்ரா (இந்தோனேஷியா) என ஒரு தென்கிழக்காசிய பவுத்த வெளி ஒன்று அன்று உருவாகியிருந்தது என ஆனே மோனியஸ் போன்ற இன்றைய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மணிமேகலையில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வெளிப்படும் காஞ்சிபுரத்திற்கும் சாவகத்திற்கும் இடையில் அடுத்த பல நூற்றாண்டுகள் வரை நெருக்கமான தொடர்பும் இருந்துள்ளது. பதினான்காம் நூற்றாண்டு ஜாவா காவியமான ‘நாகரக்ருதாகம’ எனும் நூலில் ஆறு பவுத்த விகாரைகள் அமைந்த “காஞ்சிபுரி” யிலிருந்து வந்த ஸ்ரீபுத்தாதித்யா எனும் பிக்கு எழுதிய கவிதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக மோனியஸ் கூறுகிறார்.

இப்படியான ஒரு அகன்ற தெனிந்திய – தென் கிழக்காசிய இலக்கிய – பண்பாட்டு வெளி ஒன்று குறித்து தனக்கும் முன்பாக சில்வேய்ன் லெவி பதிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார். இந்த நிலப்பகுதிகள் அனைத்தையும் இப்படி இணைக்கும் பண்பாட்டுக் குறியீடாக பவுத்த கடவுளர்களில் ஒன்றான மணிமேகலா தெய்வத்தை லெவி சுட்டிக் காட்டுகிறார். “தமிழ்நாடு, சிலோன், பர்மா, சயாம், கம்போடியா முதலான நாடுகளில் மணிமேகலா தெய்வம் அறியப்பட்டிருந்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன” எனக் கூறும் லெவி “இந்த நில, நீர் பரப்புகளுக்கு அப்பால் அதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

கடல் கடந்து வணிகம் செய்வோரின் கடற்பயணங்களில் அவர்களைக் காப்பவராக வணிகர்களால் வணங்கப்பட்டதுதான் மணிமேகலா தெய்வம். பவுத்த புனிதத் தொகுப்புகளான மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களிலும் எதிர்கால புத்தர் ஒருவர் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்தபோது அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது என மணிமேகலா தெய்வம் குறிப்பிடப் படுகிறது. தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணி இரண்டிலும் அப்படிக் காப்பாறப்பட்ட எதிர்கால புத்தர் ஒருவர் கோவலனின் மூதாதையர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுவார். மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த கோவலன், “எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக” எனக் கூற, மணிமேகலைக்கு அத் தெய்வத்தின் பெயர் இடப்பட்டது என்பது இளங்கோவடிகள் கூற்று (அடைக்கலக் காதை). “பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ எனவும் மணிமேகலாவை ஒரு கடற் தெய்வமாக சாத்தனாரும் குறிப்பார். பாலி இலக்கியங்களில் இந்தக் கதையாடல் சற்று வேறுபட்டு இருக்கும். மணிமேகலா தெய்வம் தனது காவற் பொறுப்பைச் சற்று மறந்திருந்ததால் கப்பல் கவிழ்ந்து ஏழு நாள் கழித்தே எதிர்காலப் புனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது என்று அவற்றில் கூறப்படும். ‘புத்சாரணா’ ‘சதர்மாலங்காரா’ முதலான சிங்கள நூல்களிலும் மணிமேகலா தெய்வம் போற்றப்படும். ஜாவாவின் (அதாவது சாவகத்தின்) தென்மேற்கு முனையில் உள்ள ‘பெலாபுஹான் ராட்டு’ எனும் கடற்கரைச் சிற்றூர் மணிமேகலா தெய்வம் தங்கி இளைப்பாறும் இடமாக இன்றும் கருதப்படுகிறது.

அந்த மணிமேகலா தெய்வம்தான் நம் காப்பிய நாயகி மணிமேகலையை உரிய ஏது நிகழ்ச்சிகளுடன் துறவு நோக்கி ஆற்றுப்படுத்துபவராக இங்கு வெளிப்படுகிறார். அந்தத் தெய்வம் உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றி அவளறியாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வான்வழி பறந்து சென்று, புகாருக்கு தெற்காக முப்பது யோசனைத் தூரத்தில் வைத்துத் திரும்பும். அத்தோடு நில்லாமல், “விடியட்டும் அவளை என் கையில் கொணர்வேன்” என உறக்கம் வராமல் கிடந்த உதயகுமாரன் முன் தோன்றி அரசனின் கடமையை நினைவூட்டி,”தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” என எச்சரித்து அகலும்.

அடுத்து உவவனம் செல்லும் அத் தெய்வம் அங்கு களைத்து உறங்கும் சுதமதியை எழுப்பி இந்திரவிழா காணப் புகாருக்கு வந்த தான் வேறு பொறுப்புக்களை மெற்கொள்ள வேண்டிய தேவை வந்ததை விளக்கும். “மணிமேகலையை புத்த தேவனின் அற வழியில் ஆற்றுப்படுவதற்கான ‘ஏது’ முதிர்ந்துளது. அதனால் அவளை மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். அங்கவள் முற்பிறப்புணர்ந்து இன்றிலிருந்து ஏழாம் நாள் திரும்புவாள். அன்று இங்கு நிகழ இருக்கும் ‘ஏதுக்கள்’ பல உள்ளன” என்றுரைத்து நீங்கும்.

உவவனத்திலிருந்து சுதமதி மாதவியின் இல்லம் நோக்கிச் செல்லும் வழியில் புகார் நகரின் அந்த இரவு நேரத்தை ஒரு பெருங் காப்பியத்திற்குரிய அழகுடன் சாத்தனார் விரித்துரைப்பார் (‘துயிலெழுப்பிய காதை).

அந்த இரவிலும் அந் நகரில் ஆடல் மங்கையர் தம் நடன அரங்குகளில் நாட்டியம் பயின்று கொண்டிருப்பர்; பல்வேறு இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருக்கும்; பரத்தை வீடு சென்று திரும்பிய கணவனிடம் ஊடி அகன்று படுத்திருந்த மனையாள் காமம் மீதூற கோபம் மறைந்து அவனைக் கட்டி அணைவாள்; சிறு தேர் இழுத்து தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களை அவர்தம் செவிலித் தாய்மார்கள் படுக்கைக்கு அழைத்துச் சென்று வாசனைப் புகை காட்டி உறங்க வைப்பர். அடுத்து அந்தப் பெரு நகரில் நடுச்சாமத்திலும் ஒலிக்கும் பல்வேறு ஒலிகள் குறித்தும் சுமார் இருபத்திரண்டு வரிகளில் மிக விரிவாக காப்பியச் சுவையோடு எடுத்துரைக்கப்படும். அதன் பின் சுதமதி சக்கரவாளக் கோட்டம் தாண்டி ஊரம்பலத்தே சற்று இளைப்பாறுவாள். அவள்முன் தோன்றிய கந்திற்பாவை மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகிய மூவரும் சகோதரிகளாக  முறையே தாரை, வீரை, இலக்குமி என்கிற பெயர்களில் ரவிவர்மன் என்பானின் மகள்களாகப் பிறந்த முற்பிறப்பு வரலாற்றை உரைக்கும்.  அடுத்து சுமார் பதினாறு வரிகளில் புகார் நகரில் இரவு அடங்கி வைகறை விடியும் காட்சி அமையும். இறுதியாக மணிமேகலை இன்னும் வராததால் கவலையுற்றுக் கிடக்கும் மாதவியை அடைந்து நடந்த கதைகளை விளக்குவாள் சுதமதி.

இவற்றை இங்கு இத்தனை விரிவாகச் சொன்னதற்குக் காரணமுண்டு. இங்கே புகார் நகரம் கண்விழிக்கும் அதே நேரத்தில் அங்கே முப்பது காத தூரத்தில் அந்தச் சிறுபெண் மணிமேகலையும் கண் விழிப்பாள். அது இதனின்றும் முற்றிலும் வேறுபட்ட பின்புலம். புகாரில் அது ஒரு விழாக் காலம்; அது ஒரு பெருநகர், தலை நகர், அங்கு காண்பவை ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், படுக்கையில் முயங்கிக் கிடக்கும் காதலர்கள், சிறு தேர் உருட்டி விளையாடும் சிறார்கள்.. மணிபல்லவத்திலோ நாம் காண்பது முற்றிலும் வேறுபட்ட காட்சிகள். நில அமைப்பு மட்டுமல்ல அனைத்தும் வேறுபட்ட ஒரு சூழலில் கண் விழிக்கிறாள் மணிமேகலை. இந்தப் புதிய சூழல் உணர்த்துவதும், அது காட்டும் வழித்தடமும்தான் இனி அவள் வாழ்வாகப் போகிறது. அவளுக்குக் காட்டப்படும் இந்தப் புதியவாழ்வின் பொறுப்புகளை, அதன் கடமைகளை, இவற்றின் பின்புலமாக இருக்கும் உன்னதங்களை அவள் இனிதான் உணரப் போகிறாள். இந்த முரண்பட்ட இரு சூழல்களை அருகருகே அமைப்பதன் மூலம் (juxtapose) வாசிக்கும் நம்முள்ளும் எல்லாமும் வெறும் தகவல்களாகவன்றி ஒரு அனுபவமாக மலர்ந்து விகசிக்கின்றன.

மணிமேகலை விழித்தெழும் இடம் ஒரு கடற்கரை. அலைகள் சூழ்ந்த அந்தத் தீவில் யாரும் இல்லை. முத்து விளையும் வயல்கள், சிதறிக் கிடக்கும் செம்பவளத் துண்டுகள், ஆங்காங்கு தென்படும் மணற் குன்றுகள், கடல் அலைகள் உருட்டி வந்து சேர்த்துள்ள மரத் துண்டுகள், தனித்து நிற்கும் ஒரு புலிநகக் கொன்றை மரம், ஒரு மலர் சூழ்ந்த பொய்கை என இவைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றன. சுற்றிலும் அலைகளால் முற்றுகை இடப்பட்ட ஒரு பாடிவீட்டுக்குள் அடை பட்டிருப்பது போன்று அவள் உணர்கிறாள், இதுவரை கண்டறியாத, மனித வாடையே இல்லாத அந்தச் சூழலில் ஒரு மர நிழலில் கண்விழித்தெழும் ஒரு சிறு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும். அவள் எழுந்த இடம் அவள் உறங்கத் தொடங்கிய உவவனம் இல்லை. உறங்குமுன் அருகிருந்த சுதமதி எங்கே? மலர் கொய்யச் சென்ற நான் இன்னமும் வாராததைக் கண்டு அன்னை மாதவி எத்தனை துயருறுவாள்?

இந்தச் சிந்தனைகள் அலைக்கழிக்க அவள் வாய்விட்டு “ஐயாவோ” எனக் கூவி அழத் தொடங்கினாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம். அவள்முன் எழுந்தது புத்த தேவனின் தர்மாசனம். மூன்று முழ அளவிற்கு நிலத்திற்கு மேலுயர்ந்து, நான்கு முழ அளவிற்கு அகன்று வெளிப்பட்டது ஒளி வீசும் அந்த தர்ம பீடிகை. தன்னை மறந்து கைதொழுதாள் மணிமேகலை. கண்களில் திரண்ட முத்துக்கள் அவளது முலைகள் மீது உதிர்ந்தன. இடம் வலமாக புத்த தேவன் அமர்ந்த அந்தத் தர்மாசனத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். மின்னலொன்று வானிலிருந்து நழுவி மண்ணில் சரிந்ததுபோல வீழ்ந்து வணங்கினாள்.

அப்படி வீழ்ந்து அவள் எழுந்தபோது அவள் தன் முற்பிறப்பு உணர்ந்தவளாய் வெளிப்பட்டாள். மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் முற்பிறவியில் சகோதரிகள் என அவளுக்கும் உணர்த்தப்பட்டது. இலக்குமி என முன்பிறவியில் அறியப்பட்ட மணிமேகலையின் கணவன் இராகுலன் திருமணம் ஆன எட்டாம் நாள் பார்வையாலேயே கொல்லும் திட்டிவிடப் பாம்பு தீண்டி இறந்தான். கணவனோடு அழற் பாய்ந்து உயிர்விட்டாள் இலக்குமி.

இலக்குமி (அதாவது முற்பிறவி மணிமேகலை), அப்பிறவியில் பிறவிப் பெருங்கடல் அறுக்கும் பேறு பெற்றிருக்கவில்லை. அதற்குரிய ‘ஏது நிகழ்ச்சி’ ஏதும் அப்போது முதிரவில்லை. “எனவே நீ அடுத்த பிறவி ஒன்றை எடுப்பாய். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். உனக்கொரு பெருந்துயர் வரும். மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்து வந்து இந்தத் தீவில் வைக்கும். அங்கு நீ பிறவிப்பிணியிலிருந்து விடுவிக்கும் மருத்துவனான புத்தன் அமர்ந்து அறம் உரைத்த ஆசனத்தின் காட்சி அருளப் பெறுவாய்..” என மணிமேகலைக்கு முற்பிறவி வரலாறு உணர்த்தப்பட்டது.

மணிமேகலைக் காப்பியத்தில் பதினாறு கிளைக் கதைகள் பதிக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு புத்த நெறியை விளக்குமாறு அமைந்துள்ளன என்றேன்.  இந்திய மதங்கள் எல்லாவற்றிலும் இந்த கர்ம வினைக் கோட்பாடு, அதாவது இறப்புக்குப் பின் மீண்டும் உயிர்கள் மறுபிறப்பு எடுப்பது என்பது ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவங்களுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தொடரில் முதலாவதாக கோதமை அவள் மகன் சார்ங்கலன் ஆகியோரின் கதையைப் பார்த்தோம். பேயைக் கண்ட அதிர்ச்சியில் மரணமுற்ற மகனை உயிர்ப்பித்துத் தருமாறு சம்பாபதி என்னும் தெய்வத்திடம் வேண்டி அழுவாள் கோதமை. தன்னுயிரை எடுத்துக் கொண்டு அவனது உயிரைத் தருமாறு அவள் கோருவாள். ஒரு உயிர் போனது என்றால் போனதுதான். இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினை சார்ந்து அது இன்னொரு பிறவி எடுத்தே ஆக வேண்டும். இது விதி. எம்மைப் போன்ற தெய்வங்கள் நினைத்தாலும் அதை மாற்ற இயலாது என ஆற்றல் மிகு தெய்வமான சம்பாபதி சொல்லி அகலும்.

பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான ஏதுக்கள் நிகழும் தகுதி பெற்று அதன் வழிச் செல்லும்வரை ஒருவர் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்பது ஒரு பவுத்த நம்பிக்கை. மணிமேகலையின் முற்பிறவிக் கதையைச் சொல்லி வரும்போதும் சாத்தனார் அப்பிறவியில் பிறப்பறுத்தற்குரிய ஏதுக்கள் நிகழாததால் இப்போது மணிமேகலையாய் மறு பிறவி எடுக்க வேண்டியதாயிற்று என்பதை வற்புத்துவது கவனிக்கத் தக்கது.

தன் முற்பிறவி உணர்ந்த மணிமேகலை அப்பிறவியில் தன் கணவனாக அமைந்த இராகுலன் இப்பிறவியில் எங்குளன் எனக் கேட்கும்போது மணிமேகலா தெய்வம் தோன்றி  இப்பிறவியில் அவன்தான் உதயகுமாரன் எனத் தெளிவுறுத்தும். அது மட்டுமல்ல முற்பிறவியில்  மணிமேகலை விண்ணிலிருந்து இறங்கிய சாது சக்கரன் என்கிற முனிவனுக்கு அமுதூட்டிய நல்லறத்தின் பயனாகப் பிறவி அறுக்கும் பேறுடையதாக இப்பிறவி அவளுக்கு வாய்த்துள்ளது என்பதையும் விளக்கும். “இப்பிறவியில் உதயகுமாரன்பால் உன் மனம் சென்றால் உனக்கு வாய்த்த இந்த நற்பேற்றை நீ இழந்தவள் ஆவாய். மிக உயர்ந்த நெல் வித்தொன்று வெங்களர் நிலத்தில் வீழ்ந்து பாழாவதற்கொப்ப அது முடியும். நீ அறத்தின் வித்து. நீ அப்படிப் பாழாகக் கூடாது. நீ நல்வழியில் உறுதிப்பட வேண்டுமென்றுதான் இங்கு கொணர்ந்தேன்” என தெய்வம் அவளுக்கு விளக்கும்.

“முற்பிறவியில் உன் தமக்கையர் இருவரும் ஒரே ஆடவனை மணந்தனர். அவர்கள் அப்பிறவியில் புத்த தேவனின் பாதங்கள் படிந்த பாதபங்கய மலையத் தொழும் பாக்கியம் பெற்றதனால் இப்போது மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உன்னோடும் வாழும் பேறு பெற்றனர்” என்பதையும் சொல்லி முடிக்கும்.

 

(அடுத்த இதழில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் பவுத்த அறம் மணிமேகலையில் வெளிப்படுதல்)