தஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி

தஞ்சை வடவாற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் சிறு கோவில்கள் எனச் சொல்லத்தக்க பல கல்லறைகளைக் காண்லாம், ‘ராஜா கோரி’ . ‘சையத் கோரி’ என அவற்றைச் சொல்வார்கள். சையத் கோரி சற்றுத் தொலைவில் தெரியும். இஸ்லாமியக் கட்டிடக் கலை வடிவில் அது காட்சியளிக்கும்.

எழுத்தாளர் டேனியல் அவர்களின் கல்லறைக்குச் செல்லும்போதெல்லாம் இவற்றை நோட்டம் விட்டுச் செல்வதுண்டு. அருகில் நெருங்கிப் பார்த்ததில்லை.

ராஜா கோரி என்பது மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதி என்றும் சையத் கோரி என்பது துக்கோஜி, இரண்டாம் ஈகோஜி, சுஜான்பாய், பிரதாப சிம்மன் ஆகியோரின் காலத்தில் கோட்டைத் தளபதியாகவும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (1735 – 38) king maker ஆகவும் இருந்த ஒரு முஸ்லிம் ‘கில்லேதாரரின்’ கல்லறை என்றும் விசாரித்தபோது தெரிய வந்தது.

மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி எனப்படும் முதலாம் ஈகோஜியால் (1674 – 86) தொடங்கி வைக்கப்பட்டது தஞ்சை மராட்டிய அரச வம்சாவளி (1674 – 1855). முதலாம் சரபோஜி மன்னனின் (1711 – 27) மரணத்திற்குப் பின் அவனது மகன் காட்டுராஜா உடனடியாக ஆட்சி பீடத்தில் அமர முடியவில்லை. சரபோஜியின் அதிகாரபூர்வமான மனைவியருக்கு அவன் பிறந்திராததே காரணம்.. சரபோஜியின் சகோதரன் துக்கோஜி (1728 -36) அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டான். அதன்பின் அவனது மகன் இரண்டாம் ஈகோஜி ஓராண்டு காலம் ஆண்டான். அவனது அகால மரணத்திற்குப் பின் அவனது மனைவி சுஜான்பாயியிடம் அதிகாரம் சென்றது.

ஆனால் விரைவில் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் சரபோஜியின் மகன் காட்டுராஜா, இரண்டாம் சாகுஜி, என்கிற பெயரில் ஆட்சிகட்டிலில் அமர்ந்ததில் (1938) சய்யிதின் பங்கு முக்கியமாக இருந்தது. சுஜான்பாயியைப் பிடித்துச் சிறையிலிட்டான் சய்யித்.

தஞ்சை அரசின் அதிகாரத்திற்குட்பட்ட காரைக்காலை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு அளிக்குமாறு சாகுஜியை வற்புறுத்தி வந்தான் ஃப்ரெஞ்சுக்காரர்களுடன் நெருக்கமாக இருந்த சந்தா சாகிப். முதலில் ஒப்புக் கொண்டபோதும் இறுதியில் சாகுஜி மசியவில்லை. படை எடுத்து வந்த சந்தா சாகிப் சாகுஜி முறையாகப் பிறந்த மகனில்லை எனக் காரணம் சொல்லி அவனை அரச பதவியிலிருந்து வெளியேற்றினான் (1739).

காலியான அரச பதவியில் துக்கோஜியின் மகன் பிரதாப சிம்மன் (1739 – 63) அமர்ந்து கொண்டான். பிரதாபன் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த காரியங்களில் ஒன்று சய்யிதைக் கொன்றது. தன் மகளைச் சந்தா சாகிபின் மகனுக்குக் கட்டி வைத்துத் தஞ்சை ஆட்சியைக் கவரச் சதி செய்ததாக சய்யித் குற்றம் சாட்டப் பட்டான். சய்யிதின் தம்பி காசிம் இதில் அரசனுக்கு உடந்தையாக இருந்தான்.

இதுதான் சய்யிதின் கதை.

உலகிலேயே பெரியது எனச் சொல்லப்படும் கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோவிலின் தென் மேற்கு மூலையில் அமைதுள்ளது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் வம்சாவளியைச் சொல்லும் இம் மராட்டிய மொழிக் கல்வெட்டுடன் காலின் மெக்கன்சி தொகுத்துள்ளவற்றிலுள்ள இது தொடர்பான சுவடிகளையும் ஒப்பிட்டு மெக்கன்சி சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, 1987, பதிப்பாசிரியர் கே.எம்.வேங்கடராமையா). தரமான ஆய்வுப் பதிப்பு.

இந்த நுலை நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தபோது மெக்கன்சி சுவடியில் (எண் 318, எம் 79) சய்யித் பற்றி இருந்த குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அதில் சில வரிகள் மட்டும் (பக்.100):

“…..இதுவுமல்லாமல் இவன் (சய்யிது/ சையிந்து) அகிறுத்தியம் பண்ணிக் கொண்டு வந்த தென்ன வென்றால் யெகோஜி ராஜா தஞ்சாவூர் றாட்சியத்துக்கு முதல் அதிபதியான பிற்பாடு இதுக்கு முன்னே பண்ணியிருக்கிற தற்ம்மமும் தஞ்சாவூர் றாட்சியத்திலே வெகு தேவாலையங்கள் காவேரி தீரத்தில் வெகு பிறாமணாள் வாசமா யிருக்கிறார்களென்று அக்கிறாரம் கட்டிவிக்கிறது, தேவாலையும் கட்டிவிக்கிறது, பிறாமணாளுக்கு சறுவமானியங் கொடுக்கிறது, யெக்கியம் (யக்ஞம்/வேள்வி) பண்ணிவிக்கிறது, அன்னசத்திரம் போடுவிக்கிறது, இந்த விதமாய் அனேக தற்ம்மங்கள் யெகோஜி மகராஜா நாள் முதல் பரம்பரையாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். அப்பால் பிரதாப சிம்ம ராஜா பட்டத்துக்கு வந்த நாள் முதல் விசேஷ தற்மம் பண்ணிக்கொண்டு வந்தார். இந்த தற்மத்துக்கெல்லாம் சய்யிது விரோதம் பண்ணி வந்தான்.”

ஆக, பார்ப்பனர்களுக்கு செய்யப்பட்ட சிறப்புச் சலுகைகளை ஏதோ ஒரு வகையில் சய்யிது எதிர்த்து வந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இது பிடிக்காமலிருந்திருப்பதும் தெரிகிறது. இப்படிச் சொல்வதன் பொருள் சய்யிதை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்த வீரனாகவும் தியாகியாகவும் தூக்கிப் பிடிப்பதல்ல. முழு விவரங்களும் நமக்குத் தெரியவில்லை. அன்றைய குழப்பமான சூழலில், தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளத் தன்னளவில் எல்லா வகைகளிலும் சய்யிதுவும் முயற்சித்திருப்பான் என்பதில் அய்யமில்லை.

வம்சாவளியைச் சொல்லும் இச்சுவடி தொடர்ந்து சய்யிது மீது வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு எத்தகைய கோணத்திலிருந்து வைக்கப்படுகிறது என்பதுதான் ஒரு கணம் நம்மை இந்தியத் துணைக் கண்ட அரச நீதியைப் பற்றிச் சிந்திக்க வைகிறது.

“இதுவுமல்லாமல் தான் துலுக்க சாதியாக யிருந்தும் கற்ணாட்டச் சாதி (கர்நாடக சாதி) தேவடியாள் கோவில் தேவடியாளைக் கெடுத்துப் போட்டான். அதிலே ஒருத்தி மொஹனா என்கிற தாசியைக் கெடுத்துப் போட்டு அவளைத் தன்னுடைய வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டான். இப்படிக்கொத்த துஷ்கிருத்தியமும் கிறுத்திறமும் மஹாறாஜாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் தாம் நூதினமாய் ராச்சியத்துக்கு வந்திருக்கிறோம் என்று அந்த சயிந்துக்கு தெண்டினை (தண்டனை) பண்ணாமல் சிறிது நாள் வரைக்கும் அவனுடைய அதிகாரமும் நடப்பித்தார்…..”

இப்பைச் செல்கிறது வம்சாவளி வரலாறு. அடுத்த சில வரிகளில் சய்யிது கொல்லப்படும் நிகழ்வு விரிவாக விளக்கப்படுகிறது.

மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும், அவர்களது விருப்பத்தை மீறி உறவு கொண்டாலோ, கடத்திச் சென்றாலோ அது குற்றம் என்பதில் யாருக்கும் கருத்து மறுபாடு இருக்க இயலாது. ஆனால் இங்கே சய்யிது மீது சாத்தப்படும் குற்றச்சாட்டு அத்தகைய உயரிய நோக்கிலிருந்து எழவில்லை.

பாலியல் தொழில் செய்வோர், கோவில்களுக்குப் பொட்டுக் கட்டிக் கொண்ட தேவதாசியர் முதலானோர் அதிகாரத்தில் உள்ளோரால் எந்த அளவிற்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர், பாலியல் உறவில் அவர்களது சுய விருப்பம் மற்றும் தேர்வுகளுக்கு எவ்வாறு இடமில்லாமல் இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காடுகள் உண்டு,. மூன்றாம் குலொத்துங்க சோழனது ஆட்சிக்காலத்திய திருக்காளத்தி (காளஹஸ்தி} கோவில் கல்வெட்டொன்றில் காணப்படும் செய்தி ஒன்று குறித்து நான் ஆதாரங்களுடன் என் கட்டுரைகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளேன். கோவிலுக்கென்று கொண்டுவரப்பட்டுப் பொட்டுக்கட்டப்பட்ட தெவதாசியரை குலோத்துங்க மன்னன் கட்டாயமாகத் தன் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று விடுகிறான். மக்கள் இதை அறிந்து எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவாக வேறு வழியின்றி மன்னன் அவர்களைக் கோவிலுக்குத் திருப்பி அனுப்பிய செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுதான் அது.

தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கொடுமைகள் எந்த அளவிற்கு இருந்தன என்பதற்கு தஞ்சை மோடி ஆவணங்கள் சாட்சி பகர்கின்றன. மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்படுள்ள மோடி ஆவணங்களில் ஓரிரு மூட்டைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டு, அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆவணத் தொகுதிகள் மூன்றைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது (தொகுப்பாசிரியர் பா.சுப்பிரமணியன்).. இந்த மூன்று தொகுதிகளிலேயே ஏராளமான பாலியல் வன்முறைகளும் பெற்றோர்களிடமிருந்தும், கணவன்மார்களிடமிருந்தும் பெண்கள் கடத்திச் செல்லப்படுகிற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அப்படியான சில சம்பவங்களைப் பேரா.ஆ.சிவசுப்பிரமணியம் தொகுத்து:ள்ளார் (’உங்கள் நூலகம்’, அக்டோபர் 2012).

மன்னர்களின் அதிகாரபூர்வமான மனைவியர் (ராணிகள்) தவிர ‘அபிமான மனைவியர்’, ‘விரும்பிக் கொண்ட மனைவியர்’, ‘சேர்த்துக் கொண்ட மனைவியர்’ என்கிற பெயர்களில் பலர் இருந்ததை வம்சாவளி வரலாறுகள் பதிவு செய்துள்ளன. இவர்கள் தவிரவும் பல காமக் கிழத்தியர்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கென தனி மாளிகைகள் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அரசாங்க நிதியிலிருந்து அவர்களுக்கு ‘சம்பளம்’ வழங்கப்பட்டது. அவர்களுக்குச் சமையல் செய்ய ஆட்களும், சமைக்கத் தனி விடுதிகளும் இருந்தன.

பெரிய அறிவுஜீவியும், நூல் சேகரிப்பாளனுமாகிய இரண்டாம் சரபோஜி மன்னனின் (1798 – 1832) இத்தகைய காமக் கிழத்தியர் திருவையாற்றில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள ‘கல்யாண மஹாலில்’ தங்க வைக்கப்பட்டனர். இரண்டாம் சிவாஜியின் (1832 – 55) 48 காமக் கிழத்தியர் தஞ்சை கீழ வீதியில் உள்ள மங்கள விலாசத்தில் இருந்தனர்ஈந்த மாளிகைகள் இரண்டும் இன்னும் திருவையாற்றிலும் தஞ்சையிலும் உள்ளன. இவர்களோடு இவகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அங்கு வசிப்பர். சிவாஜி இறந்தபோது 10 பெண் குழந்தைகளும், 15 ஆண் குழந்தைகளும் மங்களவாசத்தில் இருந்தனர். இறந்தபோது அவனுக்கு 303 ‘வைப்பாட்டிகள்’ இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவர் போர்பஸ் அரசுக்குக் கடிதம் எழுதினார் (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1987, பக்.7).

இவர்கள் ‘சத்மம்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் தாசிகளா? என்கிற கேள்வியை வெள்ளை நிர்வாகம் எழுப்பியபோது, அரண்மனை சிரேஸ்தார் வெங்கடராவ் அன்றைய வெள்ளை அதிகாரிக்கு (ரெசிடென்ட்) அளித்த பதிலில்,

“தாசிகளும் தோழிகளும் அநேக புருஷர்களுடன் சகவாசஞ் செய்வார்கள். அவர்களுக்கு மானமோ வெட்கமோ கிடையாது. விபச்சாரம் அவர்களுடைய தொழில். மங்கள விலாசப் பெண்கள் அப்படி அல்ல. மானத்துடன் ஒரே புருஷனிடத்தில் இருந்து வருபவர்கள். அந்தப் புருஷனுக்குப் பின்னர் பிழைத்திருக்கும் வரையில் வெளியே போகாமல், புருஷன் இறந்துபோன பின்பு ஸ்திரி புழங்க வேண்டிய முறைப்படி இருப்பார்கள்”

ஆனாலும் உண்மை நிலை அப்படி இல்லை என்பதை மோடி ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. இப்படி நூற்றுக் கணக்கான மனைவியரைப் பாலியல் ரீதியாக இந்தச் சோம்பேரி மன்னர்கள் எப்படிச் சமாளித்திருக்க முடியும்? இப்படி அடைப்பட்டுக் கிடந்த பெண்கள் தவிர்க்க இயலாமல் பிற ஆடவருடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், அது தொடர்பாக அரண்மனை அதிகாரிகளுக்கு புகார்க் கடிதங்கள் எழுதப்பட்டதையும் (அவற்றில் சில மொட்டைக் கடிதங்கள்) மோடி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. ரெங்கசாமினாயகர் என்பவர் 16.08.1876 அன்று எழுதிய புகார்க் கடிதத்தில்,

““தஞ்சாவூர் சிவாஜி மகாராஜன் வைப்பாட்டி என்கிற மங்கள விலாசத்தில் ஒருவளாகிய கோவிந்தாபாயி, லெட்சுமி அம்மாள் இவர்கள் இரண்டு பேரும் திருவையார் சகஜிநாயகர் அக்கிரகாரத்திலுள்ள அய்யங்கார் பிள்ளை, திருவேங்கடத்தையங்காரை இடைவிடாமல் வைத்துக் கொண்டு ரொம்பவும் கெட்ட செய்கைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு அனேக பெட்டிஷன்கள் எழுதியும் தாங்கள் கவனிக்கவில்லை. இப்பொழுது தாங்கள் தயவு செய்து விசாரிக்கும்படியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.”

எனக் கூறப்பட்டிருந்தது (மோடி ஆவணம் தொகுதி 2; 149 – 153).போகட்டும். இது நமக்குப் பிரச்சினை இல்லை. அந்தப் பெண்களை நாம் குற்றம் சொல்ல இயலாது.

நம்முடைய கவலை என்னவெனில் இப்படி அரசர்களாலும் அரண்மணை அதிகாரிகளாலும் கொண்டு செல்லப்பட்ட பெண்கள் பலர் குடும்பங்களிலிருந்தும், ஆதரவில்லாமலிருந்தும் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள்தான். தேவதாசியரைப் பொருத்த மட்டில் கேட்க வேண்டியதில்லை. மோடி ஆவணங்களிலிருந்து சிவசுப்பிரமணியம் சுட்டும் இரு நிகழ்வுகள்:

புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலம்பாயி எனும் பெண், தன் 9 வயது மகளை விசாலாட்சி எனும் தாசியிடம் மூன்றரை ரூபாய்க்கு அடமானம் வைத்துச் செல்கிறாள் (1842). திரும்பி வந்து பணத்தைத் தந்து மகளைக் கேட்டபோது, அரண்மனையிலிருந்து வந்தவர்கள் கட்டாயமாக அவளைக் கொண்டு சென்றுவிட்டனர் எனப் பதில் வருகிறது. தன் மகளை மீட்டுத் தரச் சொல்லி ஆங்கில ரெசிடென்டுக்கு எழுதிய கடிதம் ஒரு ஆவணமாகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (2:153 – 154).

அக்கச்சிப்பட்டி எனும் ஊரிலிருந்து பிழைக்க வந்த சிதம்பரம் பிள்ளையுடன் வந்த பெண்களை அரண்மனையார் கட்டாயமாகப் பிடித்துச் செல்கின்றனர். விடச் சொல்லிக் கேட்டபோது அவர் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார். அப் பெண்களை விலைக்கு விற்றதாக அவர் எழுதிக் கொடுக்க வேண்டியதாகிறது. ஆங்கில ரெசிடென்டிடம் புகார் அளித்தாலோ அவனும் விரட்டி அடிக்கிறான். கவர்னருக்குப் புகார் அளிக்கலாமென்றாலோ உள்ளூர் தபாலாபீசில் புகாரைப் பெற மறுக்கின்றனர் (2: 157- 159).

மாமனார் வீட்டில் விட்டுச் சென்ற தன் பால்ய மனைவி மீனாட்சி, பருவமெய்தியிருப்பாள் என அழைத்துச்செல்ல ஆவலோடு வந்த இளங் கணவன், அவள் இப்போது ஆனந்தவல்லி என்கிற பெயருடன் அரண்மனையில் வாழ்வதாக அறிந்து கவர்னர் துரைக்கு அளித்த புகார் இன்னொரு ஆவணம் (2: 160 -162).

அரண்மனை அதிகாரத்திற்கு எதிராகப் புகார் அளிக்கும் நடுவர்களாக ஆங்கில நிர்வாகத்தை மக்கள் கருத வேண்டிய நிலை இருந்தது என்பதும், பெரும்பாலும் ஆங்கில நிர்வாகம் அதிகாரத்திற்கே துணை போயுள்ளதையும் நாம் விளங்கிக் கொள்கிறோம். எனினும் பல நேரங்களில் நேர்மையுள்ளம் படைத்த ஆங்கில அதிகாரிகளும் இருந்துள்ளனர் என்பதற்கு அரண்மனைப் பார்ப்பன அதிகாரக் கும்பலால் உடன்கட்டை என்கிற பெயரில் தீக்கிரையாக்க முயற்சிக்காட்ட கிளாவரிந்த பாயைக் காப்பாற்றிய ஆங்கில ரெசிடென்ட் லிட்டில்டன் ஒரு சாட்சி (மாதவையாவின் ‘கிளாரிந்தா).

இப்படியான பின்னணியில்தான் “கோவில் தேவடியாளான” மொஹனா என்கிற பெண்ணை கோட்டைத் தளபதி சய்யிது கட்டாயமாக உறவு பூண்டு வீட்டுக்கும் கொண்டு சென்றதை மட்டும் பெருந் துஷ்கிருத்தியமென வரையறுக்கிறது போன்சே வம்ச வரலாறு. கட்டாயமாகத் தேவதாசி ஒருவரைக் கொண்டு சென்றதல்ல இங்கு குற்றம். ‘துலுக்க சாதியைச்” சேர்ந்த ஒருவன், “கற்ணாட்டச் சாதியச் சேர்ந்த ஒருத்தியைக் கொண்டு சென்றதால்தான் அது குற்றம். அவன் கோட்டைக் கில்லேதாரராக இருந்தாலும் துலுக்க சாதியைச் சேர்ந்தவன்: அவள் ‘கோவிற் தேவடியாளாக” (மன்னிக்கவும் இச் சொல்லைப் பயன்படுத்த நேர்ந்ததற்கு) இருந்தபோதும் கற்ணாட்டச் சாதியைச் சேர்ந்தவள்.

பிரச்சினை அறம் சார்ந்தது அல்ல: அது சாதி சார்ந்தது: மத அடிப்படையிலானது.

இதுதான் இன்று இந்துத்துவ சக்திகள் இன்று உன்னத அரச மாதிரியாக முன்வைக்கும் சிவாஜி மன்னர்கள் மற்றும் பேஷ்வா ஆட்சிகளின் அரச நீதி.

மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.

போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை]

இரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் மனோகரன் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை பெரும்பாக்கத்தில் வசித்து வருபவருமான இத்ரிஸ் என்பவரை பா.ஜ.க தலைவர் முருகனின் கொலை சம்பந்தமாக விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து சரியான தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து நாம் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கூறினா ர். இத்ரிசின் ஊரைச் சேர்ந்தவரும், திருச்சியில் சிறைக் காவலராக உள்ளவருமான மதார் சிக்கந்தர் என்பவர் பெயரைச் சொல்லி இத்ரிஸ் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் இருவர் குறித்தும் சரியான தகவல் இல்லையென்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

“சரி, நீங்கள் இது பற்றி ஹேபியாஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு மனு) ஏதாவது போட முடியுமான்னு பாருங்க. மேலப்பாளயத்திலேயும் கடுமையா பிரச்சினைகள் இருக்குன்னு ஏதாவது செய்திகள் வந்துட்டே இருக்கு. அடுத்த வாரத்தில எல்லாத்தையும் சேர்த்து ஏதாவது ஃபேக்ட் ஃபைன்டிங் பண்ணலாமான்னு பார்ப்போம். முடிந்தால் நம்ம அறிக்கையை டி.ஜி.பிய நேர்ல பார்த்து குடுக்க முயற்சிப்போம்” என்று சொன்னேன்.

இது தொடர்பாக மேலதிக விவரங்களைத் திரட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுள்ளபோதே சற்று முன் திருச்சி வழக்குரைஞர்கள் கென்னடி மற்றும் கமருதீன் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகப் பிறந்தால் எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பது இது போன்ற போலீசின் அத்து மீறல்களளையும், விசாரணை என்னும் பெயரில் நடத்துகிற சட்ட மீறல் மற்றும் அப்பட்டமான பொய் வழக்குகளையும் தொடர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. நடந்தது இதுதான்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இத்ரீசும் மதார் சிக்கந்தரும். இத்ரீஸ் பெரும்பாக்கத்திற்கு (சென்னை) இடம் பெயர்ந்ந்து ஏதோ தொழில் செய்துகொண்டுள்ளார். மதாருக்கு சிறைக்காவலர் வேலை கிடைத்து திருச்சி சிறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பணியில் அமர்ந்த நாள் தொடங்கியே காவல்துறையினராலும் உளவுத் துறையினராலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறாயா எனப் பலமுறை மிரட்டப்பட்டும் விசாரிக்கப்பட்டும் இருந்துள்ளார். முஸ்லிம்கள் யாரேனும் இத்தகைய பணிகளில் நியமிக்கப்படும்போது இப்படி ’விசாரிக்கப்படுவதும்’ கண்காணிக்கப்படுவதும் வழக்கமாம். இது தொடர்பாக வழக்குரைஞர்களின் ஆலோசனையின் பேரில் மதார் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தது இவரை இவ்வாறு ‘விசாரித்து’ வந்தவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. சென்ற மாதத்தில் பலநாட்கள் அவரிடம் ஏதோ விசாரணை என தொலை பேசியில் மிரட்டியுள்ளனர். இறுதியில் ஜூலை 30 அன்று அவரைக் கட்டாயமாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றி மிரட்டி செல்போனில் யார் யாருடனோ பேசச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இது நடந்துகொண்டுள்ள போதே மதார் அழைப்பதாகச் சொல்லி இத்ரீசைக் கொண்டு சென்ற விசாரணைப் படையினர் அவரைக் கடுமையாகச் சித்திரவதைகள் செய்து முருகனைக் கொன்றது தான்தான் என ஒத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முருகன் கொலையை விசாரித்து வரும் ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் படையைச் சேர்ந்த இன்ஸ்பெச்டர் மாடசாமி மற்றும் 15 காவலர்கள் கொண்ட படைதான் இந்தக் கொடுமைகளைச் செய்துள்ளது. முழு விவரங்களியும் நீங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார்க் கடிதங்களின் நகல் மற்றும் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை வாசித்தால் விளங்கும்.

இப்போது இந்தக் கொடூர நாடகத்தின் மூன்றாம் காட்சி தொடங்குகிறது. இதே ஊரைச் சேர்ந்த எஸ்.பாண்டி, என்.சுந்தரவேல் இருவரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவர்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2ல் கடந்த 15ம் தேதி முதல் தினம் கையொப்பமிட்டு வருகின்றனர். இவர்கள் சென்ற 30 அன்று கையொப்பமிட்டு வெளியே வரும்போது மேற்படி காவல் படையினர் இவர்களைக் கட்டாயமாக இரண்டு டெம்போ வான்களில் தனித்தனியாக ஏற்றி (எண் TN 59 G 0930; TN 59 G 0915), கண்களைக் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடையாளந் தெரியாத ஓரிடத்தில் இறக்கி, தாங்கள் என்கவுன்டர் வெள்ளத்துரை ‘டீம்’ எனவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். எனினும் முருகன் கொலை வழக்கில் தாங்கள் சொல்வதுபோலச் சாட்சி சொன்னால் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். அதாவது, திருச்சியில் தங்கள் ஊரைச் சேர்ந்த மதார் சிக்கந்தரின் அறையில் தங்கி தினந்தோறும் நீதிமன்றத்திற்குச் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு இத்ரிஸ் முதலானோர் முருகனைக் கொலை செய்வது குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்குத் தாங்கள் நேரடி சாட்சி எனச் சொல்ல வேண்டும் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். உயிருக்குப் பயந்து அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறியுள்ளனர்.

பிறகு அவர்களைக் கொண்டு சென்று திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் அடுத்த நாள் அவர்கள் அவ்வாறே அழைத்துச் சென்று மிரட்டப்பட்டபோது சங்கிலியால் கட்டப்பட்ட இத்ரிசை இவர்களின் கண்முன்னால் சித்திரவதை செய்துள்ளனர். இரும்புத் தடியால் அடிப்பது, கொரடால் நகங்களைப் பிடுங்குவது. கால்களை எதிரெதிர்த் திசையில் இழுப்பது உட்படச் சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இந்த நேரத்தில் அங்கே அவர்கள் ஊரைச் சேர்ந்தவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள சரவணபவன் என்பவரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு நிற அப்பாச்சி டூ வீலரில் வந்து இத்ரிஸ் முருகனைக் கொலை செய்ததைத் தான் பார்த்ததாக அவர் சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். அவர் அதை மறுத்துள்ளார். அடுத்த நாள் பூட்டி வைக்கப்பட்ட ஓட்டல் அறையிலிருந்து இவர்களைக் கொண்டுவந்த மாடசாமி குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அமர்ந்துகொண்டு உள்ளே சென்று கையொப்பமிட்டு வருமாறு கூறியுள்ளனர். உள்ளே வந்த பாண்டியும் சுந்தரவேலனும் அங்கிருந்த வழக்குரைஞர் கென்னடி மற்றும் அவருடன் செயல்படும் இளம் வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரிடம் தங்களின் பரிதாபக் கதையை முறையிட்டுள்ளனர். எனது பக்கங்களைப் பின்பற்றி வருவோர்க்கு இவ் வழக்குரைஞர்களை நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி வழக்கில் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆஜராகி என்.எஸ்.ஏ முதலிய சட்டப் பிரயோகங்களை உடைத்து அவரைப் பிணையில் வெளிக் கொணர்ந்தவர்கள்தான் கென்னடியும் கமருதீனும். அவர்கள் உடனடியாக பாண்டியையும் சுந்தரவேலனையும் நீதித் துறை நடுவர் திரு எம்.ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதியரசர் ராஜேந்திரன்,

1) உயிராபத்து உள்ளிட்ட கிரிமினல் மிரட்டல்கள்

2) பொய் சாட்சியங்களை உருவாக்க மோசடி செய்தல்

3) அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாடசாமி என்கிற பெயரில் வந்த போலீஸ் கிரிமினல் கும்பலை விசாரிக்க திருச்சி சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

(“இந்த் நாட்டிலேயே அமைப்பாக்கப்பட்ட மிகப் பெரிய கிரிமினல் கும்பல் காவல்துறைதான்” என்கிற கருத்தைக் கூறியது அலகாபாத் நீதிமன்றம்.) திருச்சி நீதித்துறை நடுவர் ராஜேந்திரனின் இந்த வரவேற்கத்தக்க ஆணை ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் படையினது மட்டுமல்ல, தமிழகக் காவல்துறையின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது (பார்க்க இணைப்பு). பொய் சாட்சியம் சொல்வதெற்கென அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகன எண்கள், இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விடுதிகளின் பெயர்கள், அறை எண்கள் எல்லாமும் இணைப்புகளில் உள்ளன. நான் மிகச் சுருக்கமாக இங்கே இவற்றைப் பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து நண்பர்கள் முழுமையாக இந்தப் புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் நமது காவல்துறையின் லட்சணம் புரியும்.

இதுபோன்ற கொடூரங்களை வெளிக் கொணர்வதற்காக எங்களைத் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்களான ஜெயமோகன் போன்றோரின் லட்சணங்களும் புரியும். கொலை செய்யப்பட்ட முருகனது கடை ஒன்றிலிருந்த சிசி டிவியில் (கண்காணிப்புக் காமரா) இத்ரிஸ் முதலானோர் எதிரே இருந்த சாலையில் நடந்து சென்ற பதிவு ஒன்று உள்ளதாம். அந்த அடிப்படையில்தான் இந்த விசாரணையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் வீதிகளின் வழியே செல்லாமல் வேறெப்படிச் செல்வார்கள். அப்படியே காவல் துறைக்குச் சந்தேகமிருந்தால் முறைப்படி விசாரித்து, உண்மையான சாட்சியங்கள் ஏதேனும் கிடைத்தால் அதன் பின்பே குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பொய் சாட்சியங்களை உருவாக்கி விரைவாக வழக்கை ‘முடித்து’ மயில்வாகனன்களும் மாடசாமிகளும் அவார்டுகளும் பதவி உயர்வுகளும் பெற இத்ரீஸ்களும் மதார் சிக்கந்தர்களும் தங்கள் வாழ்வை இழக்க வேண்டியுள்ளது. இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படியாக ‘விசாரிக்கப்பட்டு’க் குற்றம் “உறுதி செய்யப்பட்டவர்கள்”தான். கென்னடி, கமருதீன், நீதியரசர் ராஜேந்திரன் முதலானோரின் தலையீடுகள் மூலம் நீதி கிடைத்தவர்களின் எண்ணிக்கை வெகு வெகு சொற்பம். இப்படி ஒரு சமூகம் இந்த நாட்டின் காவல்துறை மற்றும் புலனாய்வுகளில் நம்பிக்கை இழப்பது எங்கு கொண்டுபோய்விடும்?

இணைப்பு 1:

பதிவு அஞ்சல் மற்றும் இமெயில் வழியாக

திருச்சி, 31.07.2013.

அனுப்புதல்:

கா.மதார் சிக்கந்தர்,

இரண்டாம் நிலை சிறைக் காவலர்,

மத்தியச் சிறை,

திருச்சி-20.

பெறுதல்,

1. உயர்திரு. சிறைத்துறை துணைத்தலைவர் அவர்கள்,

திருச்சி சரகம்,(digprisontry@dataone.in)

திருச்சி.

2. உயர் திரு. சிறைக் கண்காணிப்பாளர் அவர்கள்,

மத்தியச் சிறை,(supdtcjl@bsnl.in)

திருச்சிராப்பள்ளி 620 020.

ஐயா,

நான் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 23.02.2011 முதல் பணிபுரிந்து வருகிறேன். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இடைக்காட்டூர் ஆகும். எனது குடும்பத்தினர் தற்சமயம் பரமக்குடியில் வசித்து வருகின்றனர். நான் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து பட்டம் பெற்றேன். எனக்கு சிறு வயது முதலே காவல் துறையில் பணிபுரிய வேண்டுன்றே ஆசை அதிகம். அதனால் 2011ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சிறைக்காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணியை நான் நல்ல முறையில் செய்துவந்ததினால் என் மீது இன்று வரையில் எந்த குறையும் கிடையாது.

நான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரையில் எந்தவிதமான அரசியல் இயக்கங்களிலும் பங்கு கொண்டதும் கிடையாது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பணியில் இருந்தபோது சிறை கேண்டீன் கேட் பாரா பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவரிடம் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமுருகன் (Central I.G. Zone Team ஐ சேர்ந்தவர்) என்பவர் என்னிடம் வந்து “என்னடா துலக்கப் பயலுங்களா, என்ன திட்டம் போடுறீங்க? நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா? குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா?” என்றும் இன்னும் பலவிதமான தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அவர் என்னை திட்டிய பிறகுதான் நான் பேசிகொண்டிருந்த சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் முஸ்லீம் என்றே எனக்கு தெரியும். பலபேர் முன்னிலையில் என்னை திட்டியதால் எனக்கு அவமானமாகி விட்டது. அதனால் அமைதியாக வந்துவிட்டேன். உடனே நான் இது குறித்து எனது மேலதிகாரி சிறை அதிகாரி திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களிடம் வாய் மூலமாக தகவல் தெரிவித்தேன். சிறை அதிகாரி அவர்கள் மேற்படி திருமுருகன் என்பவரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்.

மேலும் என்னிடம் “பலபேர் இதுபோலதான் தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பார்கள். உன் வேலையை மட்டும் பார்” எனக் கூறி என்னையும் அனுப்பிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஐ.ஜி டீம் போலீசாரும், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் என்னிடம் மிகுந்த காழ்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் என்பவர் என்னை விசாரணை என்ற பெயரில் பல முறை பரமக்குடி காவல் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் முறையாக என்னை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவ்வாறு அழைக்காமல் தொலைப்பேசியில் மட்டும் பேசி டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து எனது அண்ணன் பைசல் ரஷீத் என்பவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் முதுகுளத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் என்பவரை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகார் அளித்தார். மேலும் பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்தினக்குமார் அவர்களையும் சந்தித்து விபரம் கேட்ட போது பரமகுடியில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்து போனவரின் உறவினர் கடையை கடந்து நான் நடந்து சென்றதாகவும், அந்தக் கடையின் வாசலில் உள்ள CCTV யில் எனது உருவம் பதிவாகி உள்ளதாகவும், அதனால் என்னை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார். ஆனால் அது குறித்து மேலும் சரிவர விபரங்கள் ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின் அது குறித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை.

இதற்கிடையில் கடந்த 19.07.2013 அன்று எனது செல்போனுக்கு (8973774922) மாலை 5.30 மணியளவில் 8760182068 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் என்னிடம் “மானாமதுரை புரபஷ்னல் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், எனக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. உடணே அந்த பார்சலை வாங்க சொல்லி எனது அண்ணன் பைசல் ரஷீத் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு என்னுடன் பணிபுரியும் என்னுடன் குடியிருப்பில் இருக்கும் எனது ஊரை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் பேசியபோதுதான் எனக்கு பேசிய அதே எண்ணிலிருந்து அவருக்கு பேசிய ஒருவர் தான் SBCID யை சேர்ந்த S.I. என்றும் ஒரு ரகசிய விசாரணை என்றும் கூறி பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்டு பிறகு நான் மேற்படி எண்ணிற்கு மீண்டும் பேசிய போது அதில் பேசியவர் தான் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர் என்று கூறினார்.

ஆனால் எனக்கு எந்த பதிலையும் சரிவர தெரிவிக்கவிலை. இந்நிலையில் நேற்று (30.07.2013) மாலை 6.20 மணியளவில் நான் பணி முடிந்து வந்து எனது குடியிருப்பில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த இருவர் தாங்கள் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் என்னை விசாரணைக்காக அவர்களோடு வருமாறு அழைத்தனர். நான் அவர்களோடு செல்ல மறுத்தபோது நீ ஒரு அரசு ஊழியர், நீ எங்களோடு வரவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, எனது செல்போனையும் பறித்துகொண்டு, என்னை வலுக்கட்டாயமாக அவர்களோடு அழைத்துச் சென்றனர். கொட்டப்பட்டு ஆனந்தா பேக்கரி அருகே நிறுத்தி வைத்திருந்த TN 59 G 0930 என்ற காவல்துறை வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டு, மதுரை புறவழிச்சாலை மணிகண்டம் அருகே கொண்டுசென்று TN 59 G 0915 என்ற வாகனத்துக்கு என்னை மாற்றினார்கள். அந்த இரு வாகனத்திலும் இருந்த சுமார் 15 நபர்கள் தங்களை மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அனைவரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி என்றும், இன்னும் இருவர் S.I மோகன், மற்றும் சரவணன் என்றும் எனக்கு தெரியவந்தது.

இதற்கிடையில் எனது அறையில் தங்கி திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவரும் எனது ஊரை சேர்ந்த சரவணபவ என்பவர் மூலம் தகவல் தெரிந்துகொண்ட எனது அண்ணன் பைசல் ரஷீத் என்னை தொடர்புகொண்டு எங்கே இருகிறாய் என்று கேட்கவும் உடணே என்னை மீண்டும் எங்கள் குடியிருப்பருகே அழைத்து வந்து எனது அண்ணனிடம் நான் வீட்டில்தான் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்று மிரட்டி பேச வைத்தனர். அதேபோல எங்க ஊரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சரவணபவ இருவரையும் எனது செல்போன் மூலம் அழைத்து என்னை மிரட்டி பேசவைத்தது போலவே அவர்களையும் எனது அண்ணனிடம் எந்த பிரச்சனையும் இல்லை என பேச வைத்தனர். அதற்கு பிறகு என்னையும் சரவணபவையும் மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களது டெம்போ டிராவலர் வாகனத்தில் சுமார் 10மணியளவில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி எனது செல்போன் மூலம் பலருக்கும் பேசவைத்தனர். பதட்டத்தில் எனக்கு யாரிடம் பேசினேன் என்னபேசினேன் என்று நினைவில்லை.

இடையிடையே எனது அண்ணன் தொடர்பு கொண்டாலும் என்னையும், மேற்படி சரவணபவயும் மிரட்டி திருச்சியிலேயே இருப்பது போல அவரிடம் பேசவைத்தனர். அதற்குப்பிறகு சென்னை பெரும்பாக்கத்தில் செல்போன் கடை நடத்திவரும் எங்கள் ஊரை சேர்ந்த இத்ரீஸ் என்பவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி என்னை பேசச் சொல்லி அவரை பெரும்பாக்கம் பஸ்டாப் அருகே வரவழைத்து, அவரையும் எங்களோடு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். இத்ரீசை வண்டியில் ஏற்றியவுடன் அவனது கண்ணை கட்டிவிட்டனர். அப்போது 31.07.2013 அதிகாலை மணி சுமார் 4.30 இருக்கும். அதன் பின்னர் எங்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் திருச்சிக்கு எங்களை கொண்டு வந்தனர். என்னை மட்டும் தனியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரையும் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவிலை. என்னை சுமார் 12.40 மணிக்கு மீண்டும் வண்டியில் ஏற்றிச்சென்று திருச்சி மத்திய சிறை அருகே இறக்கிவிட்டு விட்டு பணிக்கு செல்லுமாறும், மீண்டும் மாலை 7.00 மணிக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால்தான் மற்ற இருவரையும் விடுவோம் என்றும் இதை யாரிடமாவது கூறினால் இருவரின் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் என்னை மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். நானும் சரியாக 1.00 மணிக்கு பணியில் சேர்ந்து மாலை 6.00 மணி வரையில் லையன் கேட் பணியில் இருந்தேன். கடுமையான மிரட்டலாலும், பயத்தாலும் என்னால் உடணடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்குள் எனது அண்ணனும் என்னைத் தேடி திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

பணி முடிந்து நான் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு தங்களிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். என்னை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தபோது எனது செல்போனில் முஸ்லீம் பெயரில் உள்ள பலருக்கும் என்னை மிரட்டி போன் செய்யவைத்து ஏதேதோ பேச வைத்தனர். என்னை சம்பந்தமில்லாமல் ஏதேதோ விசாரணை செய்தனர். இடையில் பல முறை பலரும் துலுக்கப்பயலே நீயெல்லாம் ஏன் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தே? உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் பலவாராக மிரட்டினார்கள். சில வெற்று பேப்பர்களிலும் மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். துப்பாக்கி முனையில் என்னை பலமுறை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், நான் சார்ந்த மதத்தையும் பலவாறாக இழிவாக பேசினார்கள். தற்சமயம் வரையில் இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்.அப்பாவி. என் மீது பணியில் சேர்வதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பின்பும் எந்த குற்ற வழக்கும் கிடையாது. நான் எந்த காலத்திலும் எந்த விதமான அரசியல் இயக்கங்களிலும் தொடர்பில் இருந்ததில்லை. நான் முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் காவல்துறையால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன்.

நான் முஸ்லீம் என்பதால் மட்டும் போலீசாரால் பலவிதமான பாகுபாடுகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாகி வருகிறேன். என்னை தேவையில்லாமல் கடத்திச் சென்று, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அழைகழித்து, அடைத்து வைத்து மிரட்டியதோடு இல்லாமல், எனது நண்பர்கள் இருவரையும் பணயமாகப் பிடித்துவைத்துக் கொண்டு என்னை தற்போதுவரையில் மிரட்டி வருகின்றனர். ஆகவே ஐயா அவர்கள் என்னை கடத்திச்சென்று, அடைத்து வைத்து, துன்புறுத்தி எனது நண்பர்களையும் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நண்பர்களை மீட்டுத்தரும்படியும், நான் அமைதியாக வாழவும், பணி செய்யவும் உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, கா.மதார் சிக்கந்தர்.

அஸ்ஸாம் கலவரமும் வங்கதேச முஸ்லிம்களும் 

[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி]

அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 500 கிராமங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் மக்கள் வரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 273 முகாம்களில் இவர்கள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும்கூட இல்லை என்பதோடு பெரிய அளவில் இங்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி செய்திகள் குவிகின்றன. இத்தகைய முகாம்களின் நிலை எப்படி இருக்கும் என இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியடில்லை.

கொல்லப்பட்டவர்களிலும் அகதிகளாக்கப்பட்டவர்களிலும் சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பிறர் போடோ பழங்குடியினர். போடோ பழங்குடி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் அருகருகே வாழ்ந்து வந்த போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலையில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளஞர்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாகச் சென்ற ஜூலை 19 அன்று ‘போடோ விடுதலைப் புலிகள்’ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 20 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில்தான் மேற்குறிப்பிட்ட அவலங்கள் அரங்கேறின. இந்த நாட்களில் அஸ்ஸாம் தலைநகரான குவாகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த சுமார் 32 வேக ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, குவாகாட்டி ரயில் நிலையத்தில் பல்லாயிரம்பேர் 72 மணி நேரம் போதிய உணவு, தண்ணீரின்றித் தவித்திருந்தனர். விமானச் சேவைகள் பயணத் தொகையை இரட்டிப்பாக்கின. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் ஓடி வந்து பார்த்துவிட்டு இது ஒரு தேசீய அவமானம் என்றார். இப்படியான ஒரு கலவரத்திற்கு எல்லாவிதமான சாத்தியங்கள் உள்ளன என அறிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆறு நாட்கள்வரை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவுமில்லை.

இன அடிப்படையில் கலவரங்கள் உருவாவதும் மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆக்கப்பட்டும் துன்புறுவதும் அஸ்ஸாமுக்குப் புதிதல்ல. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இது நடைபெற்று வருகிறது. வெளியார் ஊடுருவல் மற்றும் குடியுரிமை வழங்குதல் தொடர்பாக 1970 மற்றும் 80களில் அங்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றதை அறிவோம். 1983 இல் நடைபெற்ற நெல்லிப் படுகொலையில் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். இன்றுவரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தி யாரும் தண்டிக்கப்படவுமில்லை. வெளி நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குடியுரிமை குறித்த 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் உடன்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பும் 1993-94ம் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தம் வீடுவாசல்களை இழந்து ஓடவேண்டியதாயிற்று. எனினும் இதுவரை நடந்த இந்தக் கலவரங்கள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியினர் உள்ளிட்ட அஸ்ஸாமியர்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்குமான மோதல்கள் என்பதில்லை. 1996-98 இல் சந்தாலிகள், ஓரான் மற்றும் முண்டா முதலான பழங்குடியினர் இலக்காக்கித் தாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அஸ்ஸாமின் பூர்வகுடியினரும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நில உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுமான போடோக்கள் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் தொடங்கினர். 1993ல் போராட்டத்தை முன்னெடுத்திருந்த ‘அனைத்து போடோ மாணவர் இயக்கத்திற்கும்’ (ABSU) அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓரளவு சுயாட்சித் தன்மையுடைய ‘போடோ சுயாட்சிக் கவுன்சில்’ (BAC) உருவாக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடையாத ஏராளமான போடோ இளைஞர்கள் தலைமறைவாயினர். முழு மாநில அந்தஸ்து கோரி தீவிரமான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ‘போடோ நாட்டிற்கான தேசிய ஜனநாயக முன்னணி’ (NDFB) மற்றும் ‘போடோ விடுதலைப் புலிகள்’ (BLT) எனும் அமைப்புகள் கடும் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசும் தன் தரப்பில் இன்னும் கொடும் வன்முறைகளுடன் இதை எதிர்கொண்டது.

2003ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக போடோ விடுதலைப் புலிகள் தம் பெயரை ‘போடோ மக்கள் முன்னணி’ (BPF) என மாற்றிக் கொண்டு, புதிய ஒப்பந்ததின்படி உருவாக்கப்பட்ட ’போடோ பிரதேச கவுன்சிலில்’ (BTC) பங்கேற்றது. அதன் தலைவர் ஹகராமா மொகிலாரி கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் ஆனார். எனினும் அனைத்து போடோ மாணவர் இயக்கமும் போடோ தேசிய ஜனநாயக முன்னணியும் முழு மாநில அந்தஸ்து என்கிற கோரிக்கையைத் தொடர்ந்தன. 2003 ஒப்பந்தத்தில் போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கறாராக வற்புறுத்தப்படாததன் விளைவாக போடோ விடுதலைப் புலிகள் மற்றும் போடோ தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் திரிவது என்பது போடோலான்டில் அன்றாட நிகழ்வுகளாகியது.

தற்போதைய கலவரத்தில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியினர் வழக்கமாகப் பயன்படுத்துகிற எந்திரத் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் முஸ்லிம்களைக் கொல்வதற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என உளவுத்துறை கூறுகிறது. ஹகராமா மொகிலாரியும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

மொகிலாரியின் தலைமையில் உள்ள போடோ பிரதேச கவுன்சில் ஊழலுக்கும் திறமையின்மைக்கும் பெயர்பெற்ற ஒன்றாகிவிட்டது. தாருண் கோகோய் தலைமையிலான அஸ்ஸாம் மாநிலக் காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. இன்னொருபக்கம் சட்ட ஒழுங்கு அதிகாரம் அதாவது போலீஸ் அதிகாரம் இல்லாத போடோ பிரதேச நிர்வாகத்தால் தமக்கு எந்தப் பயனுமில்லை என்கிற கருத்து போடோக்களிடம் உள்ளது. போடோ மாவட்டக் கவுன்சிலுக்குள் பழங்குடியினரல்லாத அந்நியர்கள் யாரும் 2003க்குப்பின் நிலம் வாங்கக்கூடாது. அதாவது முஸ்லிம்கள், அஸ்ஸாமுக்குள் பழங்குடியினராக வரையறுக்கப்படாத சந்தாலிகள் ஆகியோர் இங்கு புதிதாக நிலம் வாங்கக்கூடாது. ஆனால் முன்னதாக இப்பிரதேசத்தில் அவர்கள் பெற்றிருந்த நில உரிமை செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவையும் போடோக்கள் ஏற்பதில்லை. அவர்களின் கருத்துப்படி ஏற்கனவே அவர்களின் நிலங்களெல்லாம் பறிபோய்விட்டதால் பழைய நில உரிமைகளை ஏற்க முடியாது.

இங்கொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஸ்ஸாம் பழங்குடியினரிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் போடோக்கள்தான் எனினும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே. போடோ பிரதேச மாவட்டத்திற்குள்ளும் கூட இன்று அவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. சுயாட்சி உரிமை பெற்றுள்ள இந்த மாவட்டக் கவுன்சிலில் மூன்றில் இரு பங்கினர் போடோ அல்லாதவர்கள். இவர்கள் எல்லோரும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களும் அல்லர். சந்தாலி, முண்டா, ஓரான் போன்ற இதர பழங்குடியினர், ராஜ்பங்சிகள், நேபாளிகள், மார்வாரிகள், முஸ்லிம்கள் எனப் பலரும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இவர்கள் ‘போடோ அல்லாதவர் சுரக்‌ஷா சமிதி’ (NBSS) என்றொரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு தமது பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையாகத் தாமிருந்தும் அதிகாரத்தில் தமக்கிடமில்லை என்பது இவர்களின் பெரும் குறை. பட்டியல் சாதியில் இடம் மறுக்கப்பட்டுள்ள கோச் ராஜ்பங்க்சிகள் தாம் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியை உருவாக்கி அதற்குக் ‘காம்டாபூர்’ எனப் பெயரிட்டு சுயாட்சி வழங்கக் கோருகின்றனர்.

வழக்கம்போல பிரச்சினை மிகவும் சிக்கலானது. இந்துத்துவவாதிகள் இதை ‘இந்து’ போடோக்களுக்கும் “அந்நிய’ முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரமாகக் கட்டமைக்க முயல்கின்றனர். எண்பதுகளுக்குப் பின் உலகெங்கிலும் உருவாகியுள்ள இந்த அடையாள அரசியலை (identity assertion) இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சொல்வதுபோல போடோக்கள் எல்லோரும் இந்துக்களல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள கிறிஸ்தவம் போடோக்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வேர்பிடித்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் எல்லோரும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுள்ளும் கோரியா, டேசி எனப் பல பிரிவுகள் உண்டு. எல்லோரும் அந்நியர்களுமல்ல. எல்லோரும் தற்போது ஊடுருவி வந்தவர்களுமல்ல. வங்க தேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அஸ்ஸாம் மாவட்டங்களில் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளைக் காட்டிலும் மக்கள்தொகையின் அளவு மற்றும் பண்பு மாற்றம் (demographic change) சற்றுக் கூடுதல்தான் என்றபோதிலும் இந்தக் கூடுதல் “சற்று”தான் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் தொகைக் கணக்கீடுகளிலிருந்து இந்தப் பத்தாண்டு சனத்தொகை மாற்றம் (decadal population increase) கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆண்டு        இந்தியா        அஸ்ஸாம்         துப்ரி             தேமாஜி            கர்பி ஆங்லாங்

 

 

1971-91           54.51               54.26                     46.65             107.50                      74.72

 

1991-01           21.54                18.92                     22.97             19.45                        22.72

 

2001-11           17.64                 16.93                    24.40              20.30                        18.69

 

துப்ரி, தேமாஜி, கர்பி ஆம்லாங் என்கிற எல்லையோர மாவட்டங்களில் ஒவ்வொரு பத்தாண்டு சனத்தொகை மாற்றமும் இதர இந்திய மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் மேற்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்படுகிறது. 1971;91 ஆண்டுக் கணக்கு இருபதாண்டுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ளவும். 1981 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வேறுபாடு தொடக்கத்தில் சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும் போகப் போக இது பெரிதும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்துத்துவ சக்திகள் சொல்வதுபோல இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலைச் சாகுபடிக்காக வங்க தேசத்திலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் ஆசைகாட்டியும், கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இலங்கை மற்றும் மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளிகள் கொண்டு செல்லப்பட்டதுடன் இதை ஒப்பிடலாம். இது தவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து ‘செட்டில்’ ஆகியுள்ளனர். புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா சொல்வதுபோல போடோக்கள் எதையும் சற்று ‘மெதுவாக’ச் (லேஹி…..லேஹி) செய்பவர்கள். கடும் உழைப்பாளிகளான வங்கதேச முஸ்லிம்கள் எதிலும் வேகம் காட்டுபவர்கள். நிலப் பஞ்சம் மிகுந்த வங்கப் பகுதியிலிருந்து இவர்கள் வளமிக்க பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கின் ஆற்றங்கரையோரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறி விவசாயம் செய்து நிலங்களை உரிமையாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தவை.

போடோக்களின் பழங்குடி மனப்பாங்கில் நிலத்தைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கு இடமிருக்கவில்லை. பாசன விவசாயத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. சமூக உடைமை, இடம் பெயர் விவசாயம் என்பதாக இருந்த அவர்கள் நில உரிமையை இழந்த வரலாறு இதுதான். ஆற்றங்கரையோரம் குடியேறி இடம்பிடித்த முஸ்லிம்கள் காலப்போக்கில் சற்று உள்ளேயும் இடம்பெயர்ந்தனர். தேர்தல் அரசியல் உருப்பெற்றபோது குறிப்பிட்ட அளவு அரசியலதிகாரம் பெறவும் தொடங்கினர்.

இதெல்லாம் ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீபகாலத்தில் நடைபெற்ற பெரிய அளவு புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதும் ஏற்பட்டதுதான். மேற்கண்ட அட்டவணையில் 1971-91 காலகட்டத்தில் ஏற்பட்ட சற்றுக் கூடுதலான அதிகரிப்பு இந்தப் பின்னணியில் உருவானதே. இந்த அதிகரிப்பெல்லாம் கூட வெறும் வங்கதேச முஸ்லிம்களால் மட்டுமே ஏற்பட்டது என்பது தவறு. தேமாஜி மற்றும் கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 1.84 மற்றும் 2.22 சதங்கள் மட்டுமே. இன்று கலவரம் நடந்துள்ள கோஹ்ராஜ்பூரில்தான் கடந்த பத்தாண்டில் அஸ்ஸாமிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள்தொகை அதிகரிப்பு (5.19சதம்) நடந்துள்ளது.

அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடல் அவிழ்த்து விடப்பட்டபின் இந்திய அரசு எல்லையோர ஊடுருவலைப் பெரிய அளவில் தடுத்துள்ளது. 4000கி.மீ நீளமுள்ள எல்லையில் 80சதம் இரட்டை முள்வேலியாலும் , தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் மின் விளக்குகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லை ஓரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருளை ஊடுருவக்கூடிய தொலைநோக்கிகளைக் கொண்டு இரவு பகலாக ஊடுருவல் கண்காணிக்கப்படுகிறது. வங்கதேசத் தூதரக அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவிய 600 வங்கதேச முஸ்லிம்கள் இன்று இந்தியச் சிறைகளில் அடைபட்டுள்ளனர். தவிரவும் அமார்த்யா சென் உருவாக்கிய ‘பிரடிசி ட்ரஸ்டின்’ முன்னாள் இயக்குனர் ஏ.ஜே.பிலிப் கூறியுள்ளதுபோல அஸ்ஸாமின் இப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் சமூக வளர்ச்சிப் புள்ளிகள் இன்று ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து இங்கே இப்போது புலம்பெயர்வதற்கான தேவையுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க அஸ்ஸாம் பற்றி எரிந்து கொன்டிருந்தபோதே அத்வானி, அருண்ஜேட்லி, நரேந்திரமோடி போன்றோர் பிரச்சினையை அந்நிய ஊடுருவலாகத் திசை திருப்பியதிலும், முஸ்லிம் வெறுப்பைப் பரப்பியதிலும், மோடி ஒருபடி மேலே போய் “இந்த ஊடுருவல் தேசப் பாதுகாப்பிற்கே ஆபத்து” என்பதாக முழங்கியதிலும் வழக்கம்போல எள்ளளவும் நியாயமில்லை. 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி (1). 1966க்கு முன் வந்தவர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை உண்டு. (2). 1966லிருந்து மார்ச் 24, 1971 வரை இடம்பெயர்ந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அடுத்த பத்தாண்டுகளில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். (3). 1971 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கு வந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி பெரிய அளவில் 1971க்குப் பின் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் நிகழவில்லை என்பதால் தற்போது கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டுமுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அனைவருமே சட்டபூர்வமான குடிமக்கள்தான். இதில் கொடுமை என்னவெனில் இன்று அகதிகளாகியுள்ள முஸ்லிம்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அத்தோடு அவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.

பிரச்சினை வழக்கம்போலச் சிக்கலானது. பூர்வகுடிகளான போடோக்கள், வங்கத்திலிருந்து தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம்கள் இருசாரருமே இன்று சமூகத்தின் ஆக அடிநிலையில் இருப்பவர்கள். இந்த முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்த வேர்களை இழந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. அவர்களை அந்நியர்கள் எனச் சொல்லி வெளியேற்றுவது அடிப்படை மனித நியாயங்களுக்குப் புறம்பான ஒன்று. போடோக்கள் முஸ்லிம்கள் இருசாரரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருப்பது பத்திரிக்கைப் பேட்டிகளைப் படிக்கும்போது விளங்குகிறது. பொருளாதார ரீதியாக அப்பகுதி மேம்படுத்தப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது முதலான நடவடிக்கைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சத்திலிருந்து விடுவிப்பதன் மூலமாகவுமே அங்கே அமைதி ஏற்படுத்தப்படவேண்டும். இன, மத வெறுப்புகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாட்டெல்லைகள் என்பன மிகச் சமீபமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால் மனித உறவு காலங்காலமானது. இன்னுங் காலங்காலமாய்த் தொடரக்கூடியது.

Top of Form