மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.