காந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்

(பா.ஜ.க ஆட்சி வந்த கையோடு காந்தியைக் கொன்ற கோட்சேக்கு ஊர்தோறும் சிலை வைப்பதாய் தமிழக இந்துத்துவ இயக்கம் ஒன்று அறிவித்தது. அப்[போது மூத்த வழக்குரைஞர் இரத்தினம் அவர்கள் காந்தி கொலை தொடர்பாக நாம் சில கேள்விகளைத் தயாரித்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் கொடுப்போம். அதை அவர்கள் பூர்த்தி செய்து தந்த பின் சரியான விடைகளை அவர்களுக்குத் தருவோம். இந்த வடிவில் காந்தி கொலையாளிகள் பற்றிய உண்மையை மக்கள் மத்தியில் தோலுரிப்போம் என்றார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தயாரிக்கப்பட்ட வினா- விடைப் படிவம் இது.)

1. கேள்வி: சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயங்கரவாதச் செயல்

அ. காந்தி கொலை ஆ. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் இ. மும்பை தாக்குதல்

1.சரியான பதில் ‘அ’. காந்தி படு கொலை யாரோ சிலர் தன்னிச்சையாக மேற்கொண்ட அரசியல் கொலை அல்ல. இந்த நாட்டை ஒரு “இந்து அரசாக” (இந்து ராஷ்ட்ரா) அமைப்பதற்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த காந்தி தடையாக இருந்தார் என்பதற்காக அவரை ஒழித்துக் கட்டும் முயற்சி 1934 தொடங்கி மேற்கொள்ளப்பட்டது. அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. அமைபுகளிலிருந்து இந்தக் கொலைக் கும்பல் விலகிவிட்டதாகக் காட்டிக் கொண்டதும்கூட அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுதான். இந்தத் தாக்குதலின் போது காந்தியுடன் சேர்ந்து அருகில் நிற்போறும் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை என்பதால்தான் முன்னதாக மேற்கொண்ட கொலை முயற்சிகளில் வெடி குண்டுகளையும் பயன்படுத்தினர்.

2. 1948 ஜனவரி 30 அன்று மாலை 5 மணி அளவில் மகாத்மா காந்தி டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவரது நெஞ்சில் மூன்று குண்டுகளைச் சுட்டு அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே

அ. ஒரு முஸ்லிம் ஆ. ஒரு சித்பவன் பார்ப்பனன் இ. ஒரு கிறிஸ்தவன்

சரியான பதில். ‘ஆ’. காந்திக்கு முன்னதாக இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்துச் சமூகத்தின் மேட்டிமைச் சக்திகளாலேயே நிரப்பப் பட்டிருந்தது. வெள்ளை அதிகாரிகளைக் கொன்று விரட்டும் தீரச் செயல்களாகவே அவை இருந்தன. காந்தி அதை வெகு மக்கள் போராட்டமாக, இதுக்கள் முஸ்லிம்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பும் இணைந்து நடத்தும் போராட்டமாக மாற்றினார். இதைப் பொறுக்காமல் அவரைக் கொல்வது என்கிற முயற்சி அவர் இந்தியா வந்த காலம் முதலே தொடங்கியது. கடைசி 5 முயற்சிகள் குறித்த விரிவான புலனாய்வுகள் உள்ளன. அனைத்தும் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. காந்தி கொல்லப்பட்ட உடன் அதைச் செய்தது முஸ்லிம்கள் என்பதாகச் செய்தி பரப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக, “காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல” எனத் தொடர்ந்து அன்று வானொலியில் ஒலி பரப்பப் பட்டது.

3. காந்தியைச் சுட்டுக் கொன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சே மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவனது சகோதரன் கோபால் கோட்சே ஆகிய இருவரும் இளம் வயது முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தோம். இல்லை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொல்வது பொய். அது கோழைத்தனம் என சிறையிலிருந்து விடுதலை ஆனபின் கோபால் கோட்சே பேட்டி அளித்தது

அ. உண்மை ஆ. பொய் இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’ . “நாங்கள் இளம் வயதில் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலேயே வளர்ந்தோம்” – இது கோபால் கோட்சே, சிறையிலிருந்து வெளிவந்தபின் அளித்த நேர்காணல். தங்களுக்கு கோட்சேக்களுடன் தொடர்பு இல்லை என மறுத்த இயக்கங்களை அவர் கோழைகள் எனவும் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்து தாங்கள் விலகவே இல்லை எனவும், நாதுராம் கோட்சே ஆர்,எஸ்.எஸ் அமைப்பில் ஒரு சிந்தனை உழைப்பாளியாக (பாவ்திக் கார்யவாக்) இயங்கினான் எனவும், கோல்வால்கரும் சங்கமும் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், நிலைமையை மேலும் சிக்கல் ஆக்காமல் இருப்பதற்காக, அதிலிருந்து விலகி விட்டதாகத் தன் சகோதரன் சொல்ல வேண்டி இருந்தது எனவும் அவர் நேர்காணலில் கூறியுள்ளார் நாதுராம் ஒரே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்சிலும் இந்து மகாசபையிலும் வேலை செய்ததையும் அவர் பதிவு செய்துள்ளார் (Frontline 1994 Jan 28).

4. காந்தி கொலைக்காக 1949 நவம்பர் 15 அன்று தூக்கிலேற்றப்பட்ட நாராயண் ஆப்தே என்பவனும் இந்து மகா சபையில் இருந்தவன்தான் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’.

5. காந்தி கொலையில் ஏழாவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கர் முன்னதாக இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர்.

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ஆ’. 1937ல் சாவர்கர் இந்து மகாசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 வரை அப்பதவியில் இருந்தார்.

6. காந்தி கொலை நடந்தபோது இந்து மகாசபையின் தலைவராக இருந்தது

அ. அப்போது நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் பாரதீய ஜனசங் கட்சியை (இப்போதைய பா.ஜ.க) தொடங்கியவருமான சியாமா பிரசாத் முகர்ஜி
ஆ. தற்போது பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாயி
இ. தற்போது பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள மதன் மோகன் மாளவியா

சரியான பதில்: ‘அ’ .

7. காந்தி கொலையில் ஏழாவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கரை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலிடம் ஜனசங் கட்சியைத் துவங்கிய சியாமா பிரசாத் முகர்ஜி வற்புறுத்தினார் என்பது

அ. பொய் ஆ. உண்மை இ.தெரியாது

சரியான பதில்: ‘ஆ’ சாவர்க்கரைத் தொடர்ந்து 1944 முதல் சியாமா பிரசாத் முகர்ஜி இந்து மகாசபையின் தலைவராக இருந்தார். தலைவராக இருந்து கொண்டே சுதந்திரத்திற்குப் பிந்திய நேரு அமைச்சரவையில் ‘தொழில் மற்றும் விநியோக’ அமைச்சராகவும் இருந்தார். காஷ்மீருக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கக்கூடாது என்று அமைச்சரவையில் .அழுத்தம் கொடுத்தார். காந்தி கொலையில் இந்து மகாசபை தொடர்பு கொண்டிருந்ததை ஒட்டி காந்தி கொல்லப்பட்ட பின் முகர்ஜிக்குச் சில பிரச்சினைகள் எழுந்தன. அப்போது கூட யாரும் அவரைப் பதவி விலக வேண்டும் எனக் கூறவில்லை. ஒன்று அவர் இந்து மகாசபையிலிருந்து விலக வேண்டும் அல்லது இந்து மகாசபை அரசியலை விட்டுவிட வேண்டும் என்று மட்டுமே அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். எனினும் அந்த நிலையிலும் அவர் சாவர்க்கரை கொலை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என படேலை வற்புறுத்தினார். 1950ல் அவர் ஆர்.எஸ்.எஸ்சின் ஆணையை ஏற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி 1951ல் ‘பாரதீய ஜனசங்’ கட்சியைத் தொடங்கினார். நேருவின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சியிலும் அன்று வலதுசாரி இந்துத்துவ சக்திகளின் கை ஓங்கியிருந்தது, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், துணைப் பிரதமர் வல்லபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நந்தா, உ.பி முதல்வர் கோவிந்த வல்லப பந்த் எனப் பல இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவாளர்கள் அப்போது காங்கிரசுக்குள் இருந்தனர். பெரும் மக்கள் செல்வாக்கு இருந்தும் கட்சிக்குள் நேருவின் நிலை பலவீனமாகவே இருந்தது.

8. காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அமைப்பு

அ. ஆர்,எஸ்.எஸ் ஆ. இந்துமகா சபை இ.. இந்த இரண்டு அமைப்புகளும்

சரியான பதில்: மூன்று பதில்களுமே சரிதான். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் இரண்டிலுமே ஒரே நேரத்தில் கோட்சே வேலை செய்தான். இரண்டு அமைப்புகளுமே காந்தி கொலையைக் கொண்டாடின. சரியாக இந்த நேரத்தில் “நல்ல சேதி” வரும் என அவர்கள் வானொலி முன் காத்திருந்து கொல்லப்பட்ட செய்தி வந்தவுடன் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

9. காந்தி கொலையை ஒட்டி பயங்கரவாதத்திற்குக் காரணமான அமைப்பு என்கிற வகையில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது

அ. சரி ஆ. தவறு இ. கருத்துஇல்லை

சரியான பதில்: ‘அ’ . காந்தி கொலையை ஒட்டி 1948 பிப் 4 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அது உறுப்பினர் பட்டியல் முதலான ஆவணங்கள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. காந்தி கொலையாளிகள் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தடையை நீக்க அது அரசுக்குத் தூது விட்டது. அரசில் இருந்த அதன் ஆதரவாளர்களும் அதற்குச் சாதகமாக இருந்தனர். சட்ட வரைவு ஒன்றை (constitution) அது தயாரித்து இயங்க வேண்டும் என்கிற அரசின் மெல்லிய நிபந்தனையை ஏற்றுப் பின் அது ஒரு வரைவை அரசுக்குத் தந்தது. ஜூலை 1949ல் அரசு தடையை நீக்கியது.

10. காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அப்ரூவர் உட்பட்ட 12 பேர்களுக்கும் உள்ள பொதுமையான அம்சம் அவர்கள் அத்தனை பேரும் இந்துத்துவ அமைப்புகளில் இருந்தனர் என்பது

அ. சரி ஆ. தவறு இ .தெரியாது

சரியான பதில்:. ‘அ’. சங்கப் பரிவாரங்கள் பல்வேறு உள் அமைப்புகளாக இயங்குகின்றன. எல்லாவற்றையும் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கிறது. கடும் இரகசிய அமைப்புகளாக இயங்கும் இவை எதுவும் உறுப்பினர் பட்டியல் முதலியவற்றை வைத்துக் கொள்வதில்லை.

11. பின்னாளில் காந்தி கொலையில் முக்கியமாகப் பங்கேற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்து மகாசபையை 1914ல் அரித்துவாரைத் தலைமையிடமாகக் கொண்டு தோற்றுவித்து வழி நடத்தியவர்களில் முக்கியமானவர்

அ. பா.ஜ.க அரசால் பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ள மதன்மோகன் மாளவியா ஆ. மோதிலால் நேரு இ. கோல்வால்கர்

சரியான பதில்:. ‘அ’. இந்து மகா சபை காந்திய வழி முறைகளை கடுமையாக எதிர்த்தது. ‘ஒத்துழையாமை’ ‘அகிம்சை’ முதலான அணுகல்முறைகளை அது ஏற்கவில்லை. இந்துக்களை ஒருங்கிணைப்பது, இந்து ராஷ்டிரம் ஒன்றை அமைப்பது என்பதைத் தாண்டி அது எந்த ஏகாதிபத்திய எதிர்ப்பையும் காட்டவில்லை. 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும் அது எதிராகவே இருந்தது. காந்தி கொலையில் முக்கிய கொலையாளிகளாகத் தண்டிக்கப்பட்ட கோட்சே சகோதரர்கள், நாராயண் ஆப்தே, திகம்பர் பாட்கே, விஷ்ணு கர்காரே, மதன்லால் பாவா, சாவர்கர் எல்லோரும் இந்து மகா சபையின் முக்கிய உறுப்பினர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

12. மோடி அரசால் பாரத ரத்னா வழங்கப்பட்ட மாளவியா பார்ப்பனனாகிய தான் சாப்பிடுவதைச் சூத்திரர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக மறைவாக உட்கார்ந்து சாப்பிடுவதைத் தந்தை பெரியார் கண்டித்தார் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’. செப் 6, 1931 குடியரசில் எழுதியுள்ள துணைத் தலையங்கத்தில் பெரியார் சொல்வதில் சில வரிகள் : “மாளவியாஜி அவர்களோ கீழ் ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்றும்,அவர்களுக்கு வேறு இடம் வேறு கோயில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்.பார்ப்பனரல்லாதவரிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியை விட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி ஹிந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு
வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார்.

இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்திய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? .

இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர். சுயராஜ்யம் வாங்கப்போகும் போது கூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்ததாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜ்யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா?”

13. காந்தி ஒரு இந்துமத அடிப்படைவாதி என்பது சரியா?

அ. சரிதான் ஆ. இல்லை அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்றவர்

சரியான பதில்: ‘ஆ’. காந்தி இந்து மதத்தை நம்பியவர் ஆயினும் இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே உரியது எனக் கூறவில்லை. இந்துக் கோவில்களுக்குச் செல்லுதல், வழிபடுதல், துலாபாரம் கொடுத்தல் முதலியவற்றை அவர் செய்ததுமில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வசமய வழிபாட்டுச் சங்கமிப்புகளாகவே இருந்தன. இராமனை அவர் ஒரு லட்சிய மனிதனாகக் கருதினாலும் அவனை அயோத்தியில் அவதரித்த ஒரு வரலாற்று மனிதனாகவோ அந்த அடிப்படையிலான அரசியலையோ அவர் ஏற்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திர இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக இல்லாமல் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

14. காந்தியை இவர்கள் கொன்றதற்கான காரணம்

அ. சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவை ஒரு இந்துராஷ்டிரமாக அமைப்பதற்கு அவர் தடையாக இருந்தார்
ஆ. அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்
இ. அவர் அஹிம்சை வழியில் போராடினார்

சரியான பதில்: இந்த மூன்று காரணங்களுக்காகவுமே அவரைக் கொன்றனர். ஆனாலும் நீதிமன்றத்தில் கோட்சே அளித்த வாக்குமூலத்தில் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வெண்டிய 55 கோடி ரூபாய்களை இந்தியா கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதற்காகவே காந்தியைத் தான் கொன்றதாகக் கூறினான். இது முழுப் பொய். இவர்களின் கொலை முயற்சி 1934 முதல் தொடங்குகிறது அப்போது பாகிஸ்தான் பிரிவினை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இவர்கள் முஸ்லிம்களை எதிரியாக்கி நிறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் காந்தியின் அரசியல் பிரவேசம் முஸ்லிம்களை இணைத்துக் கொண்ட கிலாஃபத் இயக்க வடிவில் அமைந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதும், இநது ராஷ்டிரமாக இந்தியா அமையாமல் அதை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக முன்வைத்ததுமே இவர்களின் ஆத்திரத்திற்குக் காரணம்.

15. கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முன் காந்தி மீது எத்தனை முறை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

அ. ஏழு முறை ஆ. நான்கு முறை இ. இரண்டு முறை

சரியான பதில்: ‘ஆ’. மொத்தம் ஏழு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அதில் ஐந்து குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் இந்துத்துவவாதிகளாலேயே, அதுவும் பார்ப்பனர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

16. மே 1944 ல் பூனாவுக்கு அருகில் உள்ள பஞ்ச்கனியிலும், செப்டம்பர் 1944ல் ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் மும்பையிலிருந்து சேவாக்ரகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதும், 1948 ஜனவரி 20 அன்று பிர்லா இல்லத்தில் இருந்தபோதும், இறுதியில் 1948 ஜனவரி 30ல் வெற்றிகரமாகக் கொன்றபோதும் காந்தியைக் கொல்ல மேற்கொண்ட தாக்குதல்களில் மூன்றில் நாதுராம் கோட்சேதான் முக்கிய பங்கேற்றான் என்பது

அ. உண்மை ஆ. பொய். இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’. சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்சால் பயிற்றுவிக்கப்பட்டவனும் அந்த அமைப்பில் அறிவுத்துறை
ஊழியனாக (பாவ்திக் கார்யவாக்) செயல்பட்டவனுமான நாதுராம் கோட்சே கடைசி முயற்சிகளில் முக்கிய பங்காற்றியுள்ளான்.

17. தன்னைக் கொல்ல இந்துத்துவ அமைப்புகள் சதி செய்து வந்ததை காந்தி

அ. அறிந்திருக்கவில்லை ஆ. அறிந்திருந்தார் இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’. ஜனவரி 20, 1948ல் அவரது பிரார்த்தனைக் கூட்டத்தில் நடந்த் குண்டு வீச்சைப் பற்றி அடுத்த நாள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர், “நேற்று ஒரு பைத்தியக்காரன் இப்படிச் செய்தானே” எனச் சொன்னபோது காந்தி இடை மறித்து, “முட்டாள், யார் பைத்தியக்காரன்? இதற்குப் பின்னால் ஒரு சதி இருப்பது உனக்குத் தெஇயவில்லையா?” என்றார். கொல்லப்படும் நாளில் அவருக்காக மருந்து அரைத்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து, இப்போது என்ன அவசரம், நாளை உயிருடன் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்” எனச் சொன்னார். இப்படியான ஒரு ஆபத்து அவருக்கு உள்ளதை அரசு தெரிந்திருந்தும் கூட உரிய பாதுகாப்பை அளிக்க உள்துறை அமைச்சகம் தவறியது. ஒரு காந்தியியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளது போல காந்தியின் கடைசி ஆண்டுகளில் அவரும் கோட்சேயும் ஒரே திசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். கோட்சே கொல்வதை நோக்கியும், காந்தி கொல்லப்படுவதை நோக்கியும்.

18. காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்கர்

அ. தண்டிக்கப்பட்டார் ஆ.அவருக்கு காந்தி கொலையில் தொடர்பே இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டார். இ. சாட்சியம் இருந்தும் அது உறுதி (corroborate) செய்யப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டார்

சரியான பதில்: ‘இ’

19. சாவர்கருக்கு காந்தி கொலையில் முக்கிய பங்கிருந்ததா என்பது குறித்து 1964ல் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஜீவன்லால் கபூர் ஆணையம் போதிய சாட்சியம் இருந்தும் அவர்கள் விசாரிக்கபடவில்லை எனக் கூறியது.

அ. ஆம் ஆ. இல்லை இ. தெரியாது

சரியான பதில்: ‘அ’ கோ ட்சேயையும் மற்றவர்களையும் பலி கொடுத்து சாவர்கரைக் காப்பாற்ற அரசில் வலிமையாக இருந்த இந்துத்துவ சக்திகள் இணைந்து முயன்றனர். நீதிமன்றத்திலும் சாவர்கர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். கோட்சே முதலியவர்களிடம் அவர் பேசுவதையே தவிர்த்தார். இது குறித்து கோட்சேயே வருத்தப்பட்டான். சரியாகப் 14 ஆண்டுகளில் காந்தி கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எந்தச் சிக்கலுமின்றி விடுதலை செய்யப்பட்டனர். 1964 டிசம்பர் 12 அன்று அப்போது விடுதலையாகி வெளிவந்திருந்த கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்காரே ஆகியோருக்கு ஒரு வரவேற்பு விழா புனேயில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் திலகரின் பேரனான ஜி,வி.கேட்கர். அவர் பேசும்போது காந்தியைக் கொல்வதற்கு ஆறு மாதங்கள் முன்பாகவே கோட்சே தன்னிடம் இது குறித்துக் கூறியதாகவும், தான் அதை எதிர்த்ததோடு அன்றைய மும்பை மாநில முதல்வர் பி.ஜி கெர்ரிடம் இதைத் தெரிவித்தகவும் கூறினார். நவம்பர் 14 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இந்தச் செய்தி சர்ச்சையாகப்பட்டபின் காந்தியைத் தகவல் தெரிந்தும் அரசு காப்பாற்றத் தவறியது குறித்து நாடெங்கும் பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது. .கேட்கர் கைது செய்யப்பட்டார். 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து விசாரணை கோரி அழுத்தம் கொடுத்த பின் அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டியதாயிற்று. விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் வெளிப்பட்டுத்திய உண்மைகளில் ஒன்று சாவர்கர் இக்கொலையில் உடந்தையாக இருந்தது குறித்த அப்ரூவரின் சாட்சியத்தை உறுதி செய்யும் கூடுதல் சாட்சியங்கள் (corroborative evidences) இரண்டு இருந்தும் அவை விசாரிக்கப்படவில்லை என்பது. அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தால் காந்தி கொலையில் சாவர்கரின் பங்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

20. காந்தியைக் கொல்வதற்கு முன் கோட்சேயும் ஆப்தேயும் 1948 ஜனவரி 14, 17 தேதிகளில் சாவர்கரைச் சந்தித்து ஆலோசனைகளையும் ஆசிகளையும் பெற்றதை நேரில் பார்த்த சாவர்கரின் மெய்க்காவலர் ராமச்சந்திர கசாரையும் அவரது செயலர் கஜானன் விஷ்ணு தாம்லேயையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்காமல் சாவர்கரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு அன்றைய நேரு அமைச்சரவையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துமகாசபை ஆதரவாளர்களே காரணம் என்பது

அ. தவறு ஆ. சரி இ. தெரியாது

சரியான பதில்: ‘ஆ’

21. காந்தி கொலைக்காக தூக்கிலேற்றப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் கொலை செய்வதற்கு முன் சாவர்கரை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்ற போது சாவர்கர் என்ன சொல்லி ஆசி வழங்கினார்?

அ. “வெற்றியோடு திரும்பி வாருங்கள்” ஆ. “இந்த முயற்சி ஆபத்தானது எச்சரிக்கை”. இ. “காந்தி நல்லவர், அவரைக் கொல்ல வேண்டாம்”.

சரியான பதில்: ‘அ’. “யஷாஸ்வி ஹௌன் யா” என கொலையை வெற்றிகரமாக முடித்து வர வாழ்த்தி அனுப்பினார்.

22. காந்தி கொலைக்குத் தத்துவ ஆசானாக இருந்த சாவர்கரின் படம் இந்திய நாடாளுமன்றத்தில் காந்தியின் படத்திற்கு முன் திறந்து வைத்துக் கொண்டாடியது எந்த ஆட்சியில்?

அ. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆ. தேவகவுடா பிரதமராக இருந்த ஜனதா ஆட்சியில் இ. வாஜ்பேயி பிரதமராக இருந்த பா.ஜ.க ஆட்சியில்.

சரியான பதில்: ‘இ’. குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் அவர்கள் பதவியில் இருந்தவரை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்திற்கு எதிராக சாவர்கரின் படத்தைத் திறக்க ஒப்பவில்லை. நாராயணனுக்குப் பின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற அப்துல் கலாம் அந்தக் காரியத்தை எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றிச் செய்து முடித்தார்.

23. காந்தியைக் கொன்ற இந்துத்துவ சக்திகள் தமது எதிரிகள் என அடையாளம் காட்டியது

அ. அன்றைய அந்நிய ஆட்சியாளர்களை ஆ. இந்திய முஸ்லிம்களை

சரியான பதில்: ‘ஆ’. பாசிஸ்டுகள் எப்போதுமே உள் நாட்டுக்குள்ளேயே எதிரிகளைத் தேடுவர். ஹிட்லர் ஜெர்மானிய யூதர்களை எதிரியாக்கியது போல. சாவர்கர் கூட அவரது முதல் நூலில் இந்துக்களும் முஸ்லிம்களிம் ஒன்றாக இணைந்து பிடிஷ்டிக்காரர்களை எதிர்க்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அவர் பிரிட்டிஷ் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு முஸ்லிம் எதிர்ப்பைப் பேசினார்.

24. காந்தி கொலைகாரன் கோட்சேக்கு சிலை வைப்போம் என இன்று வெளிப்படையாக இந்துத்துவ சக்திகள் இறங்கியுள்ளதை

அ. கண்டிப்போம் ஆ. ஆதரிப்போம் இ. கருத்துக் கூற விரும்பவில்லை

சரியான பதில்: (உங்கள் கருத்தைப் பதியவும்)

25. காந்தி கொலைக்குத் தத்துவ ஆசானாக இருந்த சாவர்கர், கொலைக்குப் பின்னணியில் இருந்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மாளவியா போன்றோருக்கு பா.ஜ.க அரசு உயர் விருதுகளையும் மரியாதைகளையும் அளிப்பது

அ. சரி ஆ. தவறு இ. கருத்துக் கூற விரும்பவில்லை

சரியான பதில்: (உங்கள் கருத்தைப் பதியவும்)

(உங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *