போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?

(நேர்கண்டது: சிவ. காளிதாசன்)

போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன என்று கூறியுள்ளீர்கள். எப்படி என்று விளக்க முடியுமா….?

இந்த கூட்டியக்கம் சென்ற ஆண்டு நடுவில் உருவாக்கப்பட்டது. தமிழக அளவில் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் இதற்கு முன்னதாக 2007 ஜுன் 26 ஆம் நாள் மும்பையில், இந்திய அளவில் மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஒரு மாநாடு நடத்தின. போலி மோதல்களுக்கு எதிரான பரப்புரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குசாரத்தில் வன்சாரா, இராஜ்குமார் பாண்டியன் முதலிய IPS அதிகாரிகள் முன்னின்று நடத்திய சொராபுதீன் மோதல் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலப்பட்டுத் துணைக்கண்ட அளவில் விவாதப் பொருளான நிலையில் அந்த மாநாடு கூட்டப்பட்டது. இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற போலி மோதல் கொலைகள் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்கு வந்தது. “அவுட்லுக்” வார இதழ் (மே 27,2007) என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிறப்பிதழ் ஓன்றை வெளியிட்டது. 100 என்கவுண்டர் செய்தவன் 80 செய்தவன் என்றெல்லாம் புகைப்படங்களுடன் ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டது.

மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருவம் கதைதான். 80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும் இம்முறையில் கொல்லப்பட்டார்கள். ராசாராமும்,சரவணனும் சிறையில் இருக்கும்போதே காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி இம்முறை ஆட்சிக்கு வந்த கையோடு மூன்று நான்கு ரவுடிகள்,மோதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியைக்காட்டிலும் தாங்கள் ஓன்றும் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறைந்தவர்களல்ல எனக் காட்டிக் கொள்வதற்காகவே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன எனப் பத்திரிக்கைகள் எழுதின.

இந்நிலையில் தான்,இத்தகைய போலி மோதல்களை எதிர்க்கக் கூடிய பல்வேறு சிறிய மனித உரிமை அமைப்புகள் ஓன்றாக இணைந்து போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கத்தை உருவாக்கினோம். சென்ற ஜுலை மாதத்தில் சென்னையில் எழுச்சிமிக்க கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தினோம்.போலி மோதலுக்கு எதிரான ஓரு விரிவான துண்டறிக்கையை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுத் தமிழகமெங்கும் விநியோகித்தோம். இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி 99சத மோதல்கள் போலி மோதல்கள்தான். முன்னரே பிடித்துச்சென்று நிராயுதபாணியான நிலையில் கொன்றுவிடும் படுகொலைகள்தான்,இந்த மோதல்கள். எதிலும் காவல்துறையினர் கொல்லப்படுவதில்லை. பெரிய காயங்கள் அடைவதும் கிடையாது. ஆனால் காவல் துறையினரால் குறிவைக்கப் படுபவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப் படுகின்றனர். தப்பிச் சென்றதாகவோ காயங்களுடன் பிடி பட்டதாகவோ வரலாறு கிடையாது. இது ஒன்றே எல்லா மோதல்களும் போலி மோதல்களே என்பதற்குப் போதிய சான்று.

தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போலி மோதல் கொலைகள் நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்தக் காவல்துறை உத்தி, எப்போது,எப்படி தொடங்கியது….? மோதல் கொலைக்குப் பலியாகிறவர்கள் யார்….?

நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் அப்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றதையொட்டி இத்தகைய மோதல் கொலைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், 80களில் காலிஸ்தான் போராட்டம் தீவிரமாகச் செயல்பட்ட பின்னணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96ல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டது தெரிய வந்தது. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தர்மபுரியில்,தேவாரம் தலைமையில் நடைபெற்ற கொலைகளை முன்னரே குறிப்பிட்டேன். 90களுக்குப்பின் மோதல் படுகொலைகள் முஸ்லீம் தீவிரவாதிகள் மீதும் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இவ்வாறு பெருமளவில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகச் சொல்லி இர்ஷத் ஜெகான் என்கிற 19 வயதுக் கல்லூரி மாணவி கொல்லப்பட்டது ஊரறிந்த உண்மை.

ரவடிகள், தாதாக்கள் கொல்லப்படுவது, உலகமயம், ரியல்எஸ்டேட் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று. தாதாக்களையும் ரவுடிகளையும் அரசியல்வாதிகளும், காவல் துறையுமே உருவாக்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களால் தங்களுக்கே ஆபத்து எனும்போது அவர்களைக் கொன்று விடுகின்றனர். ஆக, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்படும் மோதல் படுகொலைகள் மூன்று தரப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஒன்று, பயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் பெரிய அளவில் முஸ்லீம்கள் கொல்லப் படுகிறார்கள். இரண்டாவதாக வட மாநிலங்களில், குறிப்பாக தண்டகாரண்யப் பகுதியிலும் காஷ்மீரத்திலும், வட கிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாவோயிஸ்டுகளும்,தேசிய இனப் போராளிகளும் கொல்லப்படுகினற்னர். மூன்றாவதாக தாதாக்கள், ரவுடிகள் முதலிய கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஒருபுறம் மோசமான ரவடிகளுக்கும் மறுபுறம் தீவிரவாதிகள் எனப்படுவோருக்கும் எதிராக இந்தப் போலி மோதல் படுகொலை உத்தி கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலி மோதல் தொடர்பான நிலவரம் என்ன?

சி.கே.காந்திராசன் என்கிற IPS அதிகாரி சென்னையைச் சேர்ந்த 19 ரவுடிக் கும்பல்களை ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வேட்டுச் சுருக்கம் சென்ற ஏப்ரல் 15 “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் வெளிவந்தது. அமைப்பு ரீதியாக மேற் கொள்ளப்படும் எந்தக் குற்றமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கூட்டுறவின்றிச் சாத்தியம் இல்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சுமார் 12 போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்களுக்குப் பல்வேறு வகைகளில் ஆலோசனை சொல்பவர்களாய் இருப்பதாகவும் இத்தகைய ஆலோசனைகளுக்கு 50 ஆயிரம் முதல் பல இலட்சம் வரை ஊதியம்(royalty) பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில எடுத்துக் காட்டுகளும் கொடுக்கப் பட்டிருந்தன.

சென்ற மாதம் திருச்சியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட “பாம்” பாலாஜிக்கும், தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் குமாரவேலுவுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டார். “பாம்” பாலாஜி மோதலில் கொல்லப்பட்டார். ஜுனியர் விகடனில் டாக் ரவி, வரிச்சலூர் செல்வம் என்கிற இரு ரவுடிகள் தாங்கள் மோதலில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ரவியின் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவர், ரவியைக் கொல்வதற்காக அவருக்கு எதிரான கும்பல் ஒன்று மிகப் பெரியஅளவில் பணம் செலவழிப்பதாகக் கூறியுள்ளார்.

இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், சில ஆண்டுகளுக்கு முன் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்த இந்தித் திரைப்படம் வெளிவந்தது. “ஜதெக் 56″ அதாவது 56 என் கவுண்டர் செய்தவன் என்பது அதன் பெயர். நானா படேகருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர் பிரதிப்வர்மா என்கிற உண்மையான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். இவர் 80 மோதல் கொலைகள் செய்தவர். இவருடைய சீடர் தயா நாயக் 100 மோதல் கொலைகளைச் செய்தவர். இவர்கள் இருவரும் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். ஒரு ரவுடிக்கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொரு ரவுடிக் கும்பலைக் கொன்று அளவுக்கதிமாகச் சொத்து சேர்த்தனர் என்பது அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியான பிரதீப் வர்மாவின் சொத்து 100 கோடி. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய அம்மா பெயரில் பள்ளி ஒன்றை நிறுவி அமிதாப்பச்சனை அழைத்துத் திறந்து வைத்தவர் அவர். இப்படி நிறையச் சொல்லலாம். அவுட்லுக் வெளியிட்ட “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”ஆல்பம் பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதில் குறிப்பிடப்பட்ட பலரில் ரஜ்பீர்சிங் என்பவரும் ஒருவர். 100 என்கவுண்டர் செய்தவர், இவர் சென்ற மார்ச் இறுதியில் ரியல் எஸ்டேட் தகராறு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முடக்கும் போது ஏற்பட்ட தகராறு இது. தமிழகத்தில்கூட இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுள்ளன. மோதலில் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி அவரைக் கொல்வதற்கு 60இலட்சம் ரூபாய் கைமாறியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலி மோதல் தொடர்பான சட்டவிதிகள் என்ன? இவை மதிக்கப்படுவதும் மிதிக்கப்படுவதும் எந்த அளவில்?

தற்காப்புக்காக-தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக- தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம்.

ஆனால், கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46, உட்பிரிவு 3 வரையறுக்கிறது. குற்ற நடைமுறைச் சட்டம் 176வது பிரிவில் 1983ம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தத்தின்படி ஒரு நிர்வாக நடுவர் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இது நடு நிலையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.மோதல் நடக்கும்போது கொல்லப்பட்டவரின் மீது அவர் காவல்துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 370ம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். பின்னர் குற்றவாளி உயிருடன் இல்லை என்பதைக் காரணம் காட்டி விசாரணை இன்றி வழக்கை முடித்து விடுகிறார்கள். பெயருக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) விசாரணை ஒன்றை நடத்தி மூடிவிடுகிறார்கள்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மோதல் கொலைகளை ஊற்றி மூடுகிற நடைமுறையில் காவல்துறையினரும், சிவில் நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்,இணைந்து செயல்படுகின்றனர்,நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. இராசாராம், சரவணன் என்கிற இரு தமிழ்த் தீவிரவாதிகள் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது கொல்லப் பட்டனர். அவர்கள் கொல்லப்படுவது முன்னரே தெரியும். அவர்கள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தியும் இருந்தனர். காவல் நீடிப்பிற்காக அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் அழைத்துச் செல்வதே வழக்கம். ஆனால், அன்று அவர்கள் மாலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்டரல் ரயில்நிலையம் அருகே இருந்த மத்திய சிறைக்கு, சைதாப்பேட்டையிலிருநது அண்ணா சாலை வழியாக வருவதே வழக்கம். அன்று அவர்கள் கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். சாலைப் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் பொய்யுரைத்தது. காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டன என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி.

மோதல் சாவுகள் குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் யாவை? தமிழக அரசு அவற்றைக் கடைப்பிடிக்கிறதா…?

ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகம் (APCLC) 94 மார்ச்30ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தது. அதையொட்டி தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5ல் தனது பார்வைகளைப் பதிவு செய்தது.1997 மார்ச்சு 29ல் ஆந்திர முதல்வருக்கு விரிவான நெறி முறைகளை அனுப்பிய ஆணையம் இதன் நகல்களை எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது. சென்ற ஆண்டில் இது தொடர்பான விவாதங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மேலுக்கு வந்த போது சென்ற 2007 ஆகஸ்டு 8ல் தமிழக அரசு இது குறித்து நெறிமுறை ஒன்றை உருவாக்கி மிக அவசரம் என்று தலைப்பிட்டு, தலைமைச் செயலாளரே ஒப்பமிட்டு, காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியது. இதன் நகல்கள் சிறைத்துறையின் துணைக்காவல் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மோதல் கொலைகள் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்பன இந்த ஆணையின் சாரம்.

மோதல் கொலைகள் நடை பெற்றவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உரிய பதிவேட்டில் அதைப் பதிவு செய்ய வேண்டும். RDO விசாரணைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். இவ் விசாரணையில் கொல்லப்பட்டவரின் உடனடி உறவினர்கள் பங்கேற்பது அவசியம். அவர்களது குற்றச் சாட்டுகளைப் பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மோதலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது. மோதலில் பங்கு பெற்ற அதிகாரி அதே காவல்நிலையத்தைச் சேர்ந்தவராக இருப்பின் வேறு சுதந்திரமான சிபிசிஐடி போன்ற புலன் விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டும். இவை அந்நெறி முறைகளில் முக்கியமானவை.

மோதல் என்பது ஒரு கொலை. காவல்துறை செய்தாலும் சரி, சாதாரண ஆள் செய்தாலும் சரி, கொலை கொலைதான் என்கிற அடிப்படையில் கைது செய்து, குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கொலைக் குற்றமாகவே அதைக் கருத வேண்டும். தற்காப்புக்காகக் கொன்றேன் என மெய்ப்பிக்கும் வரை அந்த அதிகாரி கொலைக் குற்றவாளிதான். அதிகாரியின் மீது குற்றம் நிரூபிக்கப்படுமானால் கொல்லப்பட்டவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த நெறிமுறைகளில் இருந்தது. இந்த நெறி முறைகளை அவற்றின் ‘வார்த்தை, தொனி’ ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அப்படியே பின்பற்றவேண்டும் எனவும். இல்லையேல் ‘ கடுமையாகக் கருதப்படும்’ எனவும், மாவட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

நமக்கெல்லாம் பெரிதும் ஆறுதல் அளித்த அந்த நெறிமுறைகளுக்காகப் போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாகத் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தோம். கூடவே இது நடைமுறைப் படுத்தப்படுமா,அல்லது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுமா என்கிற அய்யத்தையும் வெளியிட்டிருந்தோம். நமது அய்யம் இன்று உறுதியாகி விட்டது. ஆறு மாதம் அமைதிகாத்த நம் காவல்துறையினர் சென்ற மாதத்தில் மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளனர். மேற்கண்ட நெறிமுறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஏப்ரல் 3 அன்று தஞ்சையில் மிதுன் சக்கரவர்த்தி என்பவரை மோதலில் கொன்ற காவல்துறையினருக்குக் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜயகுமார் உடனடியாகப் பரிசுளை வழங்கியுள்ளார். நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அவர் மீதும், நடவடிக்கையில்லை. அப்படியானால் இந்த நெறிமுறைகள் யாரை ஏமாற்றுவதற்கு?

போலி மோதல் கொலைகள் குறித்த பொது மக்களின் பார்வை பொதுவாக எப்படியுள்ளது?

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை மோதல் கொலைகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது வேதனையான உண்மை. காவல்துறையின் பலம் இதுதான். கிரிமினல்களை வெளியே விட்டால் அவர்கள் மேலும் மேலும் கொலைகளைத் தானே செய்வார்கள்? சட்டத்தின் மூலம் அவர்களைச் சிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிரிமினல் குற்றங்களை ஒழிப்பதற்கு மோதல் கொலைகள் தான் வழி என்ற கருத்தைக் காவல்துறையே பரப்பி வருகிறது.

கிரிமினல்கள் மட்டுமே கொல்லப் படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடக்கின்றன என்பதெல்லாம் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். மோதல்கொலைகளுக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் தொடர்பே இல்லை. சென்னை நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில்,18 மோதல் கொலைகள் நடை பெற்றுள்ளன. ஆனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. கிரிமினல்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்களிடம் விளக்கியாக வேண்டும். காசு வாங்கிக் கொண்டு மோதல் கொலைகள் நிகழ்த்துவது, உன் மகனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டாரிடம் பணம் பறிப்பது, இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இவற்றையும் நாம் விளக்கியாக வேண்டும். பஸ்ஸை எரித்து மாணவிகளைக் கொன்றவர்கள். பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொன்றவர்கள் இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபடுத்தித் தேர்வு செய்கிற உரிமையை காவல் துறையினருக்கு யார் அளித்தது?

கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என 135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவே படாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அரசுச் சட்டத்தின் 21வது பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அரசியல் சட்டம் 14வது பிரிவின்படி எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மிக அடிப்படையான உரிமைகளை யெல்லாம் குழிதோண்டிப் புதைப்பவையாக மோதல் கொலைகள் உள்ளன என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்வது அவசியம்.

போலி மோதலை நியாயப்படுத்தும் ஊடகங்கள் அப்படிச் செய்வது ஏன்?

ஊடகங்கள், குறிப்பபாக திரைப்படங்கள் என்கவுண்டரை நியாயப்படுத்தவே செய்கின்றன. இது மிகவும் வேதனைக்குரிய நடைமுறை. சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நவீன் பிரசாத் என்கிற மாவோயிஸ்டு கொல்லப்பட்டது குறித்து அவர்களிடம் பேசும்போது, மோதல் கொலைகள் குறித்த அப்பட்டமான நடுத்தரவர்க்க மனநிலையே அவர்களிடம் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இதில் திரைப்படத் துறையை மட்டும் சொல்லிப் பயனில்லை. நம் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் ஆகியோரும் இதைக் கண்டு கொள்வது இல்லை, இத்தகைய திரைப்படங்களை கண்டிப்பதில்லை. பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் புலனாய்வு இதழ்கள் ஒரளவு பாதிக்கப் பட்டவர்கள் தரப்புச் செய்திகளை வெளியிடுவது, சில உண்மைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ளது. கூடவே காவல்துறை அளிக்கிற அப்பட்டமான பொய்ச் செய்திகளையும், கொல்லப்பட்டவர் குறித்த அவதூறுகளையும் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகக் காவல்துறையின் கருத்துகளுக்கு ஆதரவு ஏற்படும் நிலையே உள்ளது.

டில்லி, மும்பை, குஜராத்தில் போலி மோதல் வல்லுநர்கள் என்றே சில காவல்துறை அதிகாரிகள் பெயர் பெற்றனர். இங்கும் சிலருக்கு அந்தப் பெயர் உள்ளது. சட்டவிரோதமாகச் செய்வதை இப்படிப் பெருமைப்படுத்தலாமா? நான் முன்பே சொன்னேன், தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய மோதல் கதாநாயகர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வீரர்களாகப் பாராட்டுகிற நடைமுறையை அரசுகள் பின்பற்றுகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். தேவாரத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா மட்டும் அன்றைய மதிப்பின்படியே ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நெறிமுறைகள் கறாராக நடைமுறைப்படுத்தப் பட்டால் இந்தக் கதாநாயகர்களின் சாயம் வெளுக்கும். கொடூர முகங்கள் அம்பலமாகும்.

அண்மைக்காலத்தில் தமிழகத்தில் போலி மோதல் கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது ஏன்?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 68 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக,அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அது போலீஸ் ஆட்சிதான். தேவாரம் செய்த கொலைகள் எல்லாம் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில்தான் நடந்தன. நான் முன்பே சொன்னபடி அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 15 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இன்னொன்றையும் நாம் இங்கு நினைத்துப் பார்ப்பது அவசியம். செப்டெம்பர் 11க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன. இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் உலகமயம், தாராளமயம், ஊடாகப் பெரிய அளவில் கனிமவளமும், நீர்வளமும் உள்ள நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. அப்பாவிப் பழங்குடி மக்களின் நிலங்கள் இவ்வாறு பெரிய அளவில் பறிக்கப்படுகின்றன.

மாவோயிஸ்டுகளின் நடைமுறை குறித்து நமக்கு விமர்சனம் இருந்த போதும், அவர்கள்தாம் இந்தப் பிரச்சனைகயைக் கையில் எடுக்கின்றனர். எனவே உள்நாட்டுப் பாதுகாப்பு என்கிற ஒலத்தை மைய அரசு தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உள்துறை அமைச்சர்களை எல்லாம் கூட்டிக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்படியெல்லாம் மோதல் கொலை அதிகரிப்பின் பின்னணியை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதில் ஆளும் கட்சியை மட்டும் சொல்லிப் பயனில்லை. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைத் தவிர மற்றத் தலைவர்கள் யாரும் மோதல் கொலைகளைக் கண்டிக்கவில்லையே…!

போலி மோதல் கொலைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு பார்க்கின்றன?

நீதிமன்றங்கள் அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ரிட் எண் 16868/1995). நீதி அரசர்கள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. ஒரு குடிமகனின் உயிர் வாழ்வில் இடையீடு செய்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திச் சொன்ன அவர்கள் காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவுமே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குல்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும, பியசிஎல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி,சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மிகச்சமீபத்தில் ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அல்டாப் ஆலம், பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வீ ஆகியோர் காஷ்மீர மாநிலத்தில் வீரப் பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஆனால் எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துள்ளன எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்கின்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை. காட்டாக, சமீபத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு நவீன் பிரசாரத்தின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது. மோதலில் கொல்வதற்கு முன்னரே நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அது குறித்து ஆட்கொணர்வு மனு போட்டால் விரைவாகத் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தாங்கள் பொதுச் சேவர்கள் அல்ல,அரசமைப்புச் சட்டக் காப்பாளர்கள் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் சட்டக் காப்பாளர்கள் மட்டுமல்ல, குடிமக்களின் உயிரையும் காக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் பல உயிர்களைக் காக்க முடியும். சிறையில் இருந்த மணல்மேடு சங்கரின் தாய், தன் மகன் என்கவுண்டர் செய்யப்படலாம் என நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யென காவல்துறை சொல்லியது. ஆனால், அவர் அவ்வாறே கொல்லப்பட்ட போது இந்த நீதிமன்றம் என்ன செய்தது? இதுபோன்ற பல வழக்குகளையும் என்னால் சொல்ல முடியும்.

போலி மோதல் குறித்து நீதிமன்றம் உறுதியாக நடவடிக்கை எடுத்த வழக்கு ஏதும் உண்டா?

சில வழக்குகள் பற்றிச் சற்றுமுன் சொன்னேன். ஆனால் ஒன்று. இதுவரைக்கும் பெரிய அளவில் காவல்துறையினர் இத்தகைய வழக்குகளில் தண்டிக்கப்பட்டது இல்லை. சொராபுதின் வழக்கு இந்தியத் துணைக்கண்ட அளவில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியதால் வன்சாரா,ராஜ்குமார் பாண்டியன் மற்றும் பல காவல் துறையினர் சுமார் இரண்டாண்டுகளாகப் பிணையில் வெளிவராத நிலையில் உள்ளனர். வன்சாராவைப் பெரிய தேசபக்தன் எனவும், தேசத்துரோகம் செய்ய வந்த முஸ்லிமைக் கொன்ற வீரன் எனவும் இந்துத்துவவாதிகள் முன்வைத்து ஆதரவு திரட்டுகின்றனர். வன்சாரா நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் ‘பாரு பாரு யாரு வருது, குஜராத்தின் சிங்கம் வருது’ என்று அவரின் சாதிக்காரார்களையும் உறவினர்களையும் வைத்து முழக்கமிடச் செய்கின்றனர். இப்படியான அரசியலும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலி மோதல் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது. 1949ல் ஜவஹர்லால் நேரு தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என மூன்று பிரிவினரைச் சுட்டிக் காட்டினார். 1.வகுப்பு வாதிகள் 2.கம்னியூஸ்டுகளில் சிலர் 3.தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள். இன்றைய அரசியல் மொழியில் இந்த மூன்று பிரிவினரையும் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: 1.முஸ்லீம் தீவிரவாதிகள், 2.மாவோயிஸ்டுகள், 3.தேசிய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள். உலகமயச் சூழலில் தற்போது ரவுடிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் அவ்வளவுதான்.

பொதுவுடமையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மனித உரிமையைப் பற்றிப் பேசியதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. சோவியத்து ருஷ்யாவில் மக்களுக்கு ஆட் கொணர்வு மனு உரிமைகூட அளிக்கப்பட்டது இல்லை. இபொக,மார்க்சிஸ்டுக் கட்சி இரண்டுமே பொதுவாக மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களே மனிதவுரிமை மீறல்களுக்குக் காரணமாகவும் இருக்கிறார்கள். பிற சிறிய அமைப்புகளும்கூட அவரவர் சார்ந்த மனிதவுரிமை மீறல்கள் நடைபெறும்போது மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றன. முஸ்லீம்கள் பிரச்சனையில் பொதுவாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லீம்களும் அவர்கள் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இன்று எல்லாத் தரப்பினர் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதை முன்னிட்டுச் சிறிய அமைப்புகள் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்நிலையில் சென்ற 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி இது குறித்துப் பேசும்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயற்கைச் சீரழிவுகளின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பது போலத் தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் ஒத்துழைக்க வேண்டுமாம். இது காவல்துறை அத்துமீறல்களை ஊக்குவிக்கும் பேச்சு. இதை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.

போலி மோதல் கொலைகளை வெளிப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற என்ன செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

முதலில் போலி மோதல் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகளை நீக்குவதற்குக் கருத்துப் பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மனிதவுரிமைகளில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து போலி மோதல்களை எதிர்க்க வேண்டும். ஊடகத் துறையினர்,அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு போலி மோதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். போலி மோதல்கள் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்தவர் இராமதாசு அவர்கள் கூறியுள்ளது போல எல்லா மோதல் கொலைகள் குறித்தும் விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

“ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகளை நாங்கள் ஆயுதம் கொண்டு எதிர்கொள்ளாமல் சாக வேண்டுமா?” எனக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்படியான சந்தர்பங்களில் அவர்கள் கேமரா(camera) பொருத்திய துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையிலேயே கொல்லப்பட்டவர்கள் தப்பியோட முயன்றார்களா,எதிர்த் தாக்குதல் மேற் கொண்டார்களா,தற்காப்புக்காகத்தான் சுட்டார்களா என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும். தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளே காண முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். 2006ம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக்குழு, பந்தோப்பாத்தியாயா என்கிற ஒய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. மேற்கு வங்கத்தில் நக்சல்களை எதிர்கொள்வதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். முன்னாள் உத்திரப்பிரதேசக் காவல்துறை இயக்குனர் பிரகாஷ் சிங், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சுக்தியோ தோரத், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பாலகோபால் மற்றும் பலர் இக்குழுவில் பணியாற்றினர். இவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் ஏப்பரல் 28 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்துள்ளது. பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் இடமே அவர்களுக்குச் சொந்தமில்லாத நிலை… இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகி நக்சல் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என அக்குழு அறிவுறுத்தியுள்ளது. கருணாநிதியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தெனாலிராமனை நேசிக்க முடியவில்லை முல்லாவைப் பிரிய மனமில்லை

ரொம்ப சின்ன வயதிலிருந்தே எனக்கு முல்லாவுடன் பரிச்சயம் உண்டு. அந்தப் பேறை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நான் ‘குமுதம்’ இதழுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ‘நல்லாத்தான் சொன்னாரு முல்லா’ என்கிற தலைப்பில் குமுதத்தில் முல்லா கதைகளை வெளியிட்டு வந்தார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குட்டி இலவச வெளியீடாக முல்லா கதைகளின் சிறு தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் ஞாபகம்.

சாண்டில்யனையும், ரா.கி.ரங்கராஜனையும், சுஜாதாவையும் ஆவலுடன் வாசித்துக் கொண்டிருந்த காலம் அது. இவற்றுக்கிடையே கண்ணில் தட்டுப்பட்ட முல்லா எல்லோருக்கும் மேலாக நெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். சஃபி சொல்வது போல பிரிய நண்பராய் மட்டுமல்ல, இனிய தோழராய், பாசமுள்ள தந்தையாய், ஆசைப் புதல்வியாய், இனிக்கும் காதலியாய், எதார்த்த வாழ்வின் தர்க்கங்களால் கெட்டி தட்டிப் போன மனத்தை இளக்கித் தரும் ஔடதமாய் முல்லா நெருக்கம் கொண்டார். இந்த அனுபவம் என்னைப் போலவே முல்லாவை அறிந்த மற்றவர்களுக்கும் கிட்டியிருக்கும் என நம்புகிறேன்.

இதே காலகட்டத்தில் பாட நூல்களின் வாயிலாக அறிமுகமான தெனாலிராமனுடன் இத்தகைய ஒட்டுதல் எனக்கு ஏற்பட்டதில்லை. பாட நூல்களின் மூலமான அறிமுகம் மட்டும் அதற்குக் காரணமாகவில்லை. வேறு ஏதோ ஒன்று தெனாலிராமனுடன் ஒட்டுதல் ஏற்படுவதற்குத் தடையாக இருந்தது. இத்தனைக்கும் ஒரு வகையில் ராமன் நமது உள்ளூர்க்காரர். அரசையும் (பார்பன) அரச குருவையும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மட்டம் தட்டும் அவரது விகட சாகசம் ரசிக்கத் தக்கதுதான். இருந்தாலும் முல்லாவைப் போல ராமன் நம் நெஞ்சில் இடம் பிடித்ததில்லை.

சஃபி மொழியாக்கித் தொடுத்துள்ள இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போதுதான் இதற்குரிய விடை கிடைக்கிறது. தெனாலிராமன் ஒரு புத்திசாலி, கெட்டிக்காரர், சாதுர்யமிக்கவர். யாரிடமும் அவர் தோற்பதில்லை. தன்னை அவமானப் படுத்தியவர்களை அவர் மன்னித்ததில்லை. அரசாலும் இனம் காண முடியாத ராஜ துரோகிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி ராமன் அவர்களைக் கொல்லாமலும் வருவதில்லை.

முல்லை பி.எல். முத்தையா தொடுத்துள்ள 48 தெனாலி ராமன் கதைகளை என்.சி.பி.எச் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 1986 தொடங்கி பிப்ரவரி 2006க்குள் 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன. முத்தையாவின் மிகச் சிறிய முன்னுரை ஒன்று அதில் உண்டு. தெனாலிராமன் கதைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,

“மந்திரம், மாயம், தெய்வீகம் எதுவும் ஊடாடாமல் தந்திரம், யுக்தி, நகைச்சுவை, பகுத்தறிவு இவையே பிரதானமாகக் கொண்டு (இவை) விளங்குகின்றன…. வாசகர்களின் அறிவு வளர்ச்சியைக் கருதி, பல்வேறு துறையில் நூல்களை வெளியிடுவதில் முன்னணியில் திகழ்கின்ற “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்” இந்நூலை வெளியிடுவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி”.
என்பார் முத்தையா.

நமது மரபில் தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன வாசகரின், கேட்போரின் “அறிவு வளர்ச்சி கருதியவை”. பஞ்ச தந்திரக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆர்தர் டபிள்யூ. ரைடர் (1925) அவற்றை, “புத்திசாலித்தனமாக வாழ்வதற்கான கலையைக் கற்றுத்தரும் ஒப்புயர்வற்ற வழிகாட்டி” என்பார். ‘பஞ்ச தந்திரம்’ ஒரு “நீதி சாஸ்திரம்”. ‘நீதி’ என்பதன் கொருள் ‘justice’ அல்ல. வாழ்வைக் கெட்டிக்காரத் தனமாக வாழ்வதே ‘நீதி’. துறந்தவர்களுக்கான தருமம் அல்ல நீதி; மாறாக சமூக வாழ்விலுள்ளவர்கள் பாதுகாப்புடனும், வளத்துடனும், உறுதியுடனும் வாழ்ந்து வெற்றி பெறுவதற்கான வழி முறைகளே நீதி என விளக்கமளிக்கிறார் ரைடர்.

கிறிஸ்துவிற்குச் சில நூற்றாண்டுகள் முந்தியதாகச் சொல்லப்படும் ‘பஞ்ச தந்திரம்’ உருவானதற்குச் சொல்லப்படும் முன்னுரைக் கதையும் இதையே சொல்கிறது. ஒரு அரசனுக்கு மூன்று பிள்ளைகள். படிப்பே ஏறாத அந்த முட்டாள்ப் பிள்ளைகளைக் கெட்டிக்காரர்களாக்க வழி தேடுகிறான் மன்னன். முறையான கல்வி பயிற்றுவிப்பதென்றால் இலக்கணம் கற்கவே பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். பிறகு இதர சாஸ்திரங்களைக் கற்க வேண்டும். பின்னரே அறிவுக்கண் திறக்கும். எனவே சுருக்கு வழியொன்றை அமைச்சர்கள் உரைக்கின்றனர். “விஷ்ணு சர்மன் என்றொரு கிழப் பிராமணன் உள்ளான். பல்வேறு கலைகளிலும், வித்தைகளிலும் பயிற்சியுள்ளவன். உங்கள் பிள்ளைகளின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்கு அவனே வல்லவன்” என்பதே அவர்கள் காட்டிய வழி.

விஷ்ணு சர்மன் ஆறே மாதத்தில் அந்த மூன்று மர மண்டைகளிலும் அறிவு கொளுத்தினான். அதற்கு அவன் கண்ட உபாயமே பஞ்ச தந்திரம். அய்ந்து தலைப்புகளில் அவன் சொன்ன 84 பஞ்ச தந்திரக் கதைகளினால் அவர்கள் புத்திசாலிகளாயினர்.

புத்த ஜாதகக் கதைகள் சற்று வித்தியாசமானவை. மனிதத் துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு அறவாழ்வையே ஒரே வழிமுறையாக உபதேசித்துத் திரிந்த புத்த பகவன் வாழ்வறங்களை விளக்குவதற்காக அவ்வப்போது சொன்ன சுமார் 500க்கும் மேற்பட்ட கதைகளே புத்த ஜாதகக் கதைகள். குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் தொகுக்கப்பட்டவை இவை. பாலி மொழியிலிருந்து பேரா. ஈ.பி., கோவெல் அவர்களின் தலைமையில் மொழி பெயர்க்கப்பட்ட 537 கதைகள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

கோதம புத்தருக்கு முன் ‘எண்ணில் புத்தர்கள்’ தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்தப் போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாகப் பகவன் புத்தர் சொன்ன கதைகளே இவை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கே புத்தர் இந்தக் கதையைச் சொன்னார் என்கிற முன்னுரையுடன் இவை தொடங்கும். கதைக்குப் பின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் இப்பிறவியில் யாராக உள்ளனர் எனப் புத்தர் விளக்கக் கதை முடியும். அற அடிப்படையிலான திறன் சார்ந்த வாழ்வை வற்புறுத்தியவர் புத்தர். இதே அறங்களை விளக்கும் முகமாக இக்கதைகள் அமைந்தன.

ஆக ஏதோ ஒரு வகையில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழி முறைகளைச் சொன்னவையாக நமது மரபுக் கதைகள் அமைந்தன. மிகப் பழைய பஞ்ச தந்திரங்களனாலும் மிகச் சமீபத்திய (கிருஷ்ண தேவராயர் காலத்திய) தெனாலி ராமன் கதைகளானாலும் சரி அவை நிகழ் வாழ்வின் விதி முறைகளையும், தர்க்கங்களையும் விளக்கி அவற்றிற்கேற்ப வாழ்வை அமைத்து முன்னேறத் தோன்றியவை.

முல்லாவின் கதைகள் இந்த இடத்தில்தான் வேறுபடுகின்றன. முல்லாவை நம்மில் ஒருவராய் உணர்ந்து நெருக்கம் கொள்ளும் தருணம் இதுதான். முல்லா நிகழ் வாழ்வின் தர்க்கங்களை ஏற்பதில்லை. முல்லா அவற்றைக் கலைத்துப் போடுகிறார். முல்லா சாதுர்யமானவர் அல்ல. இன்றைய வாழ்வு மதிப்பீடுகளின்படி வெற்றி பெற்றவருமல்ல. அவரது சாதுரியமெல்லாம் பேச்சில் மட்டுமே. அவர் பல ஞானவான்களையும், பிரதாபங்களைக் கொட்டி அளக்கும் போர் வீரர்களையும் எதிர்கொண்டு நம்மைச் சிரிக்க வைத்தவர்தான். ஆனால் அவர்களுக்கும் மேலாகத் தன்னை நிறுவிக் கொள்வதன் மூலம் அவர் அதைச் செய்வதில்லை. ‘வீரப்பிரதாபம்’ (131), ‘ஆன்மீக குரு’ (159) முதலிய கதைகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். தன்னை முட்டாளடித்துக் கலைத்துப் போடுகிறார். முல்லாவிடம் காணப்படும் சுய எள்ளலை நமது மரபில் காணவே முடியாது. முல்லா ஒரு புத்திசாலித்தனமான முட்டாள்.

எந்த நீதியையும் அவர் சொல்வதில்லை. எந்த அற போதனையையும் அவர் செய்வதில்லை. பதில் சொல்ல இயலாத எந்தக் கேள்விக்கும் அவரிடம் நீங்கள் விடை தேட முடியாது. அவருக்கு அதைப்பற்றியெல்லாம் ‘எதுவும் தெரியாது’. அவரே சொல்வது போல (‘பள்ளி’ – 54). “விஷயங்கள் உண்மையில் அதனதன் தன்மையில் அப்படி ஏன் இருக்கின்றன?” என்பது குறித்த சிந்தனையை உசுப்புவதே அவரது பணியாக அமைகிறது. வழக்கமாக நாம் உலகைப் பார்க்கும் முறையிலிருந்து நம்மைத் திசை திருப்பிவிடுகிறார் முல்லா.

எதார்த்த வாழ்வின் “அர்த்தங்களை” அவர் குலைத்துப் போடுகிறார். ஆளைவிட ஆடைக்குத்தான் இங்கு மரியாதை எனில் விருந்துப் பலகாரங்களை அந்த ஆடைக்கு அர்ப்பணிப்பது தானே சரியாக இருக்க முடியும்?. ‘அர்த்தம்’ (பொருள்), அர்த்தத்தின் பின்னே உள்ள ‘ஒழுங்கு’, ‘குறியீடு’, ‘அமைப்பு’ ஆகியவை குறித்த முன்னூகங்களையும் நம்பிக்கைகளையும் அவரது பேச்சுக்கள் கலைத்துப் போடுகின்றன; அவற்றுடன் சமர் புரிகின்றன. தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் முல்லா அத்தோடு உலகை நியாயப் படுத்துவதற்கு நமது கலாச்சாரம் பயன்படுத்தும் மரபுகளையும் ஒழுங்கு முறைகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கிறார்.

நடைமுறையிலுள்ள தர்க்கங்கள், பகுத்தறிவு சார்ந்த மதிப்பீடுகள் ஆகியவற்றின் தோல்விகள் மீது கவனத்தைத் திருப்பும் முல்லா வெளிப்படையாகத் தெரியும் மேல்மட்ட அர்த்தங்களுக்கு அப்பாலுள்ள இரண்டாம் நிலை அர்த்தங்களின் மீது நம்மை ஈர்க்கிறார்.

பிளேட்டோவும் பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளும் எழுப்பிய கேள்விகளைத் தாண்டி பின் வந்த தத்துவவாதிகள் யாரும் எதையும் புதிதாய்ச் சொல்லிவிடவில்லை என்றொரு கருத்து உண்டு. பிளேட்டோ காலத்திருந்து இன்று வரை நமது மொழி மாறாத போது நமது கேள்விகள் மட்டும் எப்படி மாறும் என்பார் விட்கென்ஸ்டெய்ன். முல்லா நமக்குப் புதிய மொழியையோ. புதிய தர்க்கத்தையோ கற்றுத் தந்துவிட்டார் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் நமது மொழியின் மாறா நிலையை, நமது தர்க்கத்தின் வன்முறையை நமக்கு உணர்த்திவிடுகிறார் முல்லா.

நகைச்சுவை என்பது ஒரு வகை உணர்வோ. அறுசுவைகளின் ஒன்று மட்டுமோ அல்ல. உலகை வழமையான பார்வையிலிருந்து விலகிப் பார்க்கும் முறைமைகளில் ஒன்று. இந்த வகையில் தான் எப்போதும் நகைச்சுவை என்பது ஒரு விமர்சனமாகவே அமைந்து விடுகிறது. நகைச்சுவை, பைத்திய நிலை, கனவு முதலியன அதிகாரங்களுக்கு எதிராகவே அமைவதன் பின்னணி இதுதான்.

இதனால்தான் பாசிசத்தால் நகைச்சுவையைச் சகிக்க இயலாமலுள்ளது. ஹிட்லர் ஆட்சியில் நகைச்சுவை ஒடுக்கப்பட்டது குறித்த நூலொன்று சமீபத்தில் வந்துள்ளது. ஜெர்மன் மொழித் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான ருடால்ஃப் ஹொஸோக் எழுதியுள்ள ஒரு நூலில் சொல்லப்படும் சில செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. 1944ம் ஆண்டு மரியன் எலிஸ்கே என்கிற ஒரு ஜெர்மன் தொழிலாளி மரண தண்டனைக் குள்ளாக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் ‘ஜோக்’ ஒன்றைப் பரப்பியதுதான். ‘வெறுப்புக் கருத்துக்கள் மூலம் அரசின் போர் முயற்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்’ என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர் சொன்ன நகைச்சுவை இதுதான். பெர்லின் நகரிலிருந்த வானொலி கோபுரத்தின் மீது ஹிட்லரும் கோயரிங்கும் நின்றிருந்தனர். “பெர்லின் நகரவாசிகளை குஷிப்படுத்த நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன்” என்றார் ஹிட்லர். “அப்படியானால் நீங்கள் இங்கிருந்து கீழே குதிக்கலாமே” – இது கோயரிங். இதைச் சொன்னதற்காகவே மரண தண்டனை.

அப்படியும் ரகசியமாகப் பல ஜோக்குகள் நாஜி ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கவே செய்தன. அவற்றில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. ஹிட்லர் ஒரு பைத்தியக்கார விடுதியைப் பார்வையிடச் சென்றார். பைத்தியங்கள் எல்லோரும் ஒழுங்காக உடை உடுத்தப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தது. ஹிட்லர் அவர்களை பார்வையிட வந்த போது ஒரே நேரத்தில் அனைவரும் கையுயர்த்தி அவருக்கு வணக்கம் சொன்னார்கள். பார்வையிட்டு வந்த ஹிட்லர் ஒரு நபர் மட்டும் வணக்கம் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து எரிச்சலுற்றார். “ஏன் வணக்கம் சொல்லவில்லை?” என உறுமினார். நடுங்கிய அந்த நபர் சொன்னார் “மெய்ன் ஃப்யூரர், நான் ஒரு நர்ஸ், பைத்தியமல்ல”.

ஹிட்லரின் ஆட்சித் தொடக்கத்தில் புழக்கத்திலிருந்த ‘ஜோக்’ இது. நாளாக நாளாக கெடுபிடிகள் அதிகமாயின. ‘ஜோக்’குகள் மூலம் பாசிசத்தையோ. அதிகாரங்களையோ வென்றுவிட முடியும் என்பதல்ல. ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை ஒடுக்கப்பட்ட மக்களின் மன இறுக்கத்தை நெகிழ்த்துகின்றன. காந்தி ஒரு முறை சொல்லவில்லையா? “நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ செத்திருப்பேன்” என்று. காந்திக்கு மட்டுமன்று நம் எல்லோருக்கும் பொருத்தமானதே இது.

நமது அரங்க மரபில் ‘விதாஷகர்கள்’ நாயகர்களைச் சுற்றி எழுப்பப்படும் அதிகாரங்களைக் குலைத்துப் போடுவதைக் காண முடியும். வீரப்பிரதாபங்களுடன் அரங்கில் முன்னிறுத்தப்படும் நாயகனை விதூஷகன் வெகு சாதாரணமாகக் கிண்டலடித்து விடுவான். ஒரு வகையான ‘அந்நிய மாதல்’ உத்தியாகவும் அது விளங்கும். இந்த நிலை எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற ‘சூப்பர் ஹீரோ’க்கள் உருவான போது ஒழிந்தது. கதாநாயகர்களுக்கு சூத்து கழுவுபவர்களாக நகைச்சுவை நடிகர்கள் மாற்றப்பட்டனர். கவுண்டமணி காலத்தில் கொஞ்சம் நிலைமை மாறியது. ஆனால் அதனாலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தனது படங்களில் அவரைத் தவிர்க்கக்கூடிய நிலையும் உருவாகியது.

சின்ன வயதில் நமக்கு நெருக்கமாக இருந்த முல்லா, நமக்கு வயதாக ஆக அந்நியமாகிப் போகும் நிலையை சஃபி தனது கவிதையொத்த முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வாழ்வின் தர்க்கங்களுக்கு நாம் பலியாகிப் போவதன் விளைவு அது. எந்த ஒரு பிரச்சினையும், கெட்டிக்காரத் தனமாக மட்டுமே அணுகுவதற்கு நாம் நம்மைத் தயார் படுத்தி வைத்துள்ளோம். சூழலின் இயங்கு விதிகளை அதற்காகவே நாம் அறிந்து வயப்படுத்துகிறோம். இதன் மூலம் நாம் வெற்றி பெறுவது உண்மை தான். ஆனால் இந்த வெற்றியினூடாக நாம் சூழலுக்குள் அமிழ்ந்துவிடுகிறோம். ஆனால் முல்லா பலமுறை சூழலின் விதிகளுக்கு எதிராகவே எதிர்வினையாற்றுகிறார். தான் பொற்காசுகளை மறைத்து வைத்த இடத்தில் ஒட்டகச் சாணம் இருப்பதைப் பார்த்து அவர் பதறுவதில்லை. யார் அதை எடுத்துச் சென்றிருப்பார் எனத் துப்பறியத் தொடங்குவதுமில்லை. மாறாக இந்த மலை உச்சிக்கு ஒட்டகம் எப்படி வந்தது என்ற வியப்பில் ஆழ்வார். சூழலின் விதிகளை உணர்ந்து இயங்காமல் அவர் ‘தப்பு’ செய்கிறார். ஆனால் அதன் மூலம் சூழலில் அமிழ்ந்து விடாமல் ‘தப்பித்து’ விடுகிறார். பிழை செய்கிறார். அதனால் பிழைத்துவிடுகிறார். ஆனால் நாமோ வெற்றி பெற்று சூழலுக்குள் அமிழ்கிறோம். நமது தனித்துவத்தை இழக்கிறோம்.

சற்றே நம்மை இந்தத் தர்க்கத்தின் வன்முறையிலிருந்து தப்புவதற்கு உதவி செய்த சஃபிக்கும் இதை வெளியாகும் ‘புதிய காற்று’ நிறுவனத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். இஸ்லாமில் சுஃபி, பவுத்தத்தில் ‘ஸென்’, ஆகிய உட்கிளை மரபுகளில் இவ்வாறு அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் கதைகள் உருவாகியது நமது சிந்தனைக்குரிய ஒன்று. உருது மற்றும் அரபி மொழிகளில் உருவான ‘லாடஇஃப்’, ‘லடிஃபா’, ‘ஹகாயத்’ முதலிய முதலியன போல பழம்பெருமை மிக்க நம் தமிழில் ஏன் உருவாகவில்லை? வீரமாமுனிவர் எனப்பட்ட தமிழறிஞரும் கிறிஸ்தவப் பாதிரியாருமான கான்ஸ்டான்டினோ பெஸ்கி அவர்களின் ‘பரமார்த்த குரு கதை’க்கு முன்னதாக இப்படியானதொரு இலக்கிய வகை இங்கு உண்டா?

டாக்டர் ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்

(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது)

நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி.
இடம் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனை, திண்டிவனம்.
பங்கேற்பு : நிறப்பிரிகை ஆசிரியர் குழு(அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி)வைத் தவிர தோழர் பா.கல்யாணி.

குறித்த நேரத்திற்கு டாக்டர் ராமதாஸ் காத்திருந்தார். நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிறப்பிரிகை இதழ்களைப் படித்திருந்தது பேச்சில் வெளிப்பட்டது. கத்தர், காகர்லிட்ஸ்கி பேட்டிகளும், சாதி ஒழிப்புக் கட்டுரையும் அவரைக் கவர்ந்திருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகளுக்குரிய குயுக்தி, தந்திரம், சாதுரியம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகப் பதில்கள் வந்தன. இடையில் இரண்டு நோயாளிகள் வந்தனர். பெயரச்சிடப்படாத வெள்ளைத் தாள்களில் மருந்துகள் எழுதினார். ஒரு சிறுவன் மருந்துச் சீட்டைக் கொடுத்து – அம்மாவுக்கு குணமாகவில்லை வேறு மருந்து வேண்டுமென்றான். சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு – ஒரு தடவை மட்டும் சாப்பிட்டிருப்பாங்க, இன்னும் இரண்டு வேளை சாப்பிட்டு விட்டு வரச் சொல் – என்றார். பேட்டி தொடங்கியது.

கேள்வி:
ஓட்டுக் கட்சிகளில் பா.ம.க. மட்டுமே பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாத கட்சி என அறிகிறோம். இன்று தமிழகத்தில் ‘பார்ப்பன மறுமலர்ச்சி’ என்று சொல்லத்தக்க நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில் வேதாகமக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இருபது சத இட ஒதுக்கீட்டிற்காக வன்மையான போராட்டம் நடத்தியது போல இப்போதும் நடத்துகிற திட்டம் ஏதுமுண்டா?

பதில்:
பார்ப்பனர்களை நாங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. வருணாசிரமம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்றைய சாதீய உறவுகளுக்குக் காரணமாக இருப்பதால் தான் இந்த முடிவு.

வேதாகமக் கல்லூரி, கோயில்களுக்கு நிதி திரட்டுவது முதலியன பார்ப்பனியத்தை வளர்க்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள். பாரதீய ஜனதா கட்சியின் புரிதலுடன் ஜெயலலிதா செயல்படுகிறார். சங்கர மடத்தின் அறிவுரைகளும் பின்னணியில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்கள், மக்களைப் பாதிக்கிற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பதை பாரதீய ஜனதா, காங்கிரஸ், பார்ப்பனர்கள் தவிர மற்ற எல்லோருமே எதிர்க்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளுக்குள் நாங்கள் வித்தியாசமான கொள்கையுடையவர்கள். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதன் ஆபத்துக்களை விளக்கி அறிக்கைகள் முதலியவற்றை பா.ம.க. இளைஞர்களுக்கு வினியோகிக்கிறோம். மாவட்ட அளவில் இளைஞர் அணி, மாதர் அணி போன்றவற்றைக் கூட்டி விளக்குகிறோம். ஒட்டுமொத்தமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சார வேலையில் இறங்கியுள்ளோம்.

பஸ் கட்டண உயர்வு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களுக்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள். எதற்கு உடனடி முக்கியத்துவமளிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போராட்டம் ஒரு மாதத்தில் முடிகிற காரியமல்ல. போராட்டம், பின் விளைவுகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். பின்னர் வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்கும்போது பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.

கேள்வி:
தி.மு.க. மேற்கொண்டிருக்கும் ‘திராவிட மறுமலர்ச்சி’ நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் எனப் பேசி லாபமடைந்தவர்கள் ஒரு சில சாதியினர் தான். ஒட்டுமொத்தமான திராவிட சமுதாயமல்ல. பார்ப்பனரல்லாதவர் எனப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார நிலையிலும், சமுதாய நிலையிலும் முன்னேறியிருந்த ஒரு சில சாதியினர் தான் பலன் பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை எதுவாக இருந்தாலும் அவர்கள் தான். எனவே இன்று திராவிட மறுமலர்ச்சி என்று அவர்கள் பேசும்போது ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் இந்த வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

இது பற்றிய வெளிப்படையான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இருந்ததில்லை. பல முறை நான் இதனைப் பகிரங்கமாகப் பேசி இருக்கிறேன். தி.க. மாநாடுகளிலே கூடப் பேசி இருக்கின்றேன். அப்போதெல்லாம் பதில் சோல்லி என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் என்றெல்லாம் கேலி பேசினார்கள். சில வருடங்களுக்கு என்னை அவர்கள் மாநாடுகளுக்கு கூப்பிடாமல் கூட இருந்தார்கள்.

கேள்வி:
இன்றைய தேர்தல் அரசியலில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாடே ஆதரவாக இருந்தது. இன்று ஈழத் தமிழர்களுக்கெதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கெதிராக மக்கள் எழுச்சி ஏற்படாததில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கிறது. பா.ம.க. பற்றி எழுதும்போது கூட ஒவ்வொரு முறையும் “An outfit of Vanniyar Sangam” என்று எழுதத் தயங்குவதில்லை. இவற்றை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டதுண்டா? இதனை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்:
பத்திரிகைகள் பார்ப்பனர்கள் கையிலிருக்கிறது. மேலும் சில பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட – நாடார்களின் கையில் இருந்தாலும் அவையும் வியாபார நோக்கில் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் ஈழ மக்களுக்கெதிராக, புலிகளுக்கெதிராக, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நாங்கள் – பல குறைகள் இருந்தாலும் கடந்த – மூன்றாண்டு காலமாக தினசரி ரூ.2,000/- நஷ்டத்தில் தினப்புரட்சி” நடத்துகிறோம். ஆட்சியாளர்கள்-ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் என யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்கிறோம். இதனால் எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடையாது. ஒரு ஐம்பது வன்னியர்கள் ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் போட்டுத் தொடங்கிய நிறுவனம் இது. இதில் முழுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சமூக மாற்றத்தை உள்ளடக்கும் நோக்கில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு ஜீவிகள், அறிஞர்கள் இதனை ஒரு சாதிப் பத்திரிகையாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் இதனைத் தங்களது பத்திரிகையாக ஆக்கிக் கொள்ளலாம். எந்த விமர்சனமும் செய்யலாம். குறைகளை நீக்க வழி செய்வோம். வியாபார-பார்ப்பனப் பத்திரிகைகளுக்கெதிராக வெகுமக்கள் பத்திரிகையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நோக்கில் வேறு யாரேனும் பத்திரிகை தொடங்கினால் அதையும் வரவேற்கிறோம். தேவையான ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் எதிரியே இந்த பார்ப்பன-வியாபாரப் பத்திரிகைகள்தான். நம் முன்னர் இருக்கும் உடனடிப் பிரச்சினை இதுதான். டி.வி., ரேடியோவும் வெகு மக்களுக்கு எதிரானதுதான் என்றாலும், அரசதிகாரத்தைக் கைப்பற்றாமல் அதை நாம் உடனடியாக மாற்ற முடியாது.

கேள்வி:
மாற்றுப் பத்திரிகை என்பது ஒரு தீர்வுதான். இந்தச் சூழலிலேயே மக்களுக்கெதிராக அவதூறுகள் பரப்புகிற பத்திரிகைகளில் தலையிடுவதும் ஒரு தீர்வாக அமையலாமே. இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இப்படி நடந்ததே. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டவுடன் நிலைமை சற்று மாற்றமடைந்ததே! அருண்சோரி போன்றோர் நீக்கப்பட்டதற்குக் கூட இது ஒரு காரணமில்லையா?

பதில்:
உண்மைதான். இவ்வாறு அவதூறுகள் பரப்பப்படும்போது டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் முன் உடனடியாகக் கூடிப் போராடலாம். ஓட்டுப் பொறுக்காத கட்சிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் குரல் கொடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு சிறிய அளவிலாவது வன்முறையுடன் கூடிய பாடம் கற்பித்தாலொழிய – பாதிப்புகளை உருவாக்கினாலொழிய இது சரியாகாது. பார்ப்பனர்களே முழுக்க முழுக்கத் தொலைக்காட்சி-ரேடியோவை ஆக்கிரமித்துள்ள நிலை மாறி தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் பெரிய அளவில் பங்குபெறும் போது அங்கும் நிலைமை ஓரளவு சீரடையலாம். “தினமலர்” போன்ற மக்கள் விரோதப் பத்திரிகைகளை வாங்கக் கூடாது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செவதும் பயனளிக்கும்.

கேள்வி:
பொதுவான மக்கள் மத்தியிலும் கூட பா.ம.க. என்பது வன்னியர் கட்சி என்கிற எண்ணமே நிலவுகிறது. புவியியல் ரீதியாகவும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பா.ம.க. இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்கிறீர்கள்? பொதுவான தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக இதனை உருவாக்குவது எப்படி?

பதில்:
இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. சமீபத்திய பஸ் மறியல் போராட்டத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் 400 பேரும், மதுரையில் 1200 பேரும் அடைபட்டிருந்தனர். கோவை, குமரி மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் வளரக் கூடாது என அரசு எந்திரமும், ஊழல் பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை வன்னியர் கட்சி, படையாச்சி கட்சி எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கட்சி வளரக் கூடாது என்கிற கருத்து இந்தச் சக்திகளிடம் உள்ளது. இதை விட நல்ல சிந்தனையுள்ள ஒரு கட்சி இருந்தால் நான் அதில் சேர்ந்து விடத் தயார். தனி நபர் வழிபாடு உருவாகாமல் தடுக்கவும் முயற்சிக்கிறோம்.

போஸ்டரில் என் படம் பெரிதாய்ப் போடுவதைக் குறைக்கச் சொல்கிறோம். தினப்புரட்சியில் என் படம் தலைப்பில் போட வேண்டும் எனச் சொன்ன போது, கடுமையாகப் போராடி அதனை மாற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படம் போட வைத்தோம். தனி நபர் வழிபாட்டைக் குறைக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். சமுதாயம் தெளிவு பெற்றால் இந்நிலைமை மாறும். கட்சி கார்டில் கூட என் படம் இல்லை.

கட்சியின் கொள்கையில் ஓட்டு வாங்குவது கடைசிக் குறிக்கோள் தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே நோக்கம். தேர்தல் சமயத்தில் கூட இதனால்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் விலகி நின்றோம்.

கேள்வி:
“தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம்” என அறிவித்த ஒரே கட்சியாக இருந்த போதிலும் கூட, தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பா.ம.க. மீது ஒரு ஐயம் இருக்கவே செய்கிறது. இதனை எவ்வாறு போக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறீர்கள்?

பதில்:
முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எங்கள் போஸ்டர் ஒட்டினால் கிழிப்பார்கள். இப்போது நிலைமை மாறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கையிலான கட்சியாக பா.ம.க.வை முன் வைக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் இவர்களுக்குள் மோதல் கூடாது. இம்மக்களுள் அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்கள் போன்றோர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓட்டு வாங்கத்தான் இப்படிச் சோல்கிறோம் என்கிற பயம் தேர்தல் நேரத்தில் இருந்திருக்கலாம். திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமே முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். ஷெட்யூல்டு இன மக்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுய நலமில்லாத அரசியல் ரீதியான தலைவர்கள் யாருமே இல்லை. இப்போதுள்ள தலைவர்களின் பிடியிலிருந்து என்றைக்கு விடுபடுகிறார்களோ சமூக மாற்றமும், அரசியல் மாற்றமும் அப்போதுதான் பிறக்க வழி ஏற்படும். இந்த அரசியல் தலைவர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் வெகு சீக்கிரமே பா.ம.க. அம்மக்களைப் புரிய வைத்து ஒரு பெரிய வலுவான அரசியல் இயக்கமாக ஆக முடியும். விரைவில் பா.ம.க.வை நம்பி ஷெட்யூல்டு இன மக்கள் நிச்சயம் வருவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பா.ம.க. சில திட்டங்களை அறிவித்துள்ளது. பறையடித்தல், பிணம் சுடுதல், செத்த மாடு புதைத்தல் போன்றவற்றை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக்குளம், பொதுக்கிணறு ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், மறைமுகமான தீண்டாமைக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்து செயல்படுத்துகிறோம். பா.ம.க.வால் மட்டுமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். வெகு மக்களாக உள்ள ஷெட்யூல்டு இன, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தச் சமூக மாற்றத்தை விரும்பி ஏற்கும்போது வேறு எந்தச் சக்தியும் குறுக்கே வந்து நிற்க முடியாது.

பா.ம.க. என்றால் வன்னியர் கட்சி எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைப்பது ஒரு புறம். இன்னொரு பக்கம் இந்தப் பிரச்சினை குறித்து சமூகப் பிரக்ஞையுள்ள கம்யூனிஸ்ட், தி.க. கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே வன்னியர்/ஆதி திராவிடர், தெற்கே முக்குலத்தோர்/பள்ளர், கோவையில் கொங்கு வேளாளர்/அருந்ததியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஓட்டுப் பொறுக்காத பொதுவான அமைப்புகள் கருத்தரங்கம், மாநாடு நடத்தினால் அங்கெல்லாம் பா.ம.க. துணை நிற்கும்.

கேள்வி:
இம்முடிவுகளை அணிகள் மத்தியில் கொண்டுபோகும் போது உங்கள் அனுபவம் எப்படி? தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் தீண்டாமைக் கொடுமையே தலையான பிரச்சினை. இதற்கெதிரான போராட்டங்கள் ஏதும் எடுத்துள்ளீர்களா? பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட அணியினர் மத்தியில் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையைத் துடைத்தெறிய என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:
கிராம அளவில் இப்பிரச்சினைகள் பேசப்படும் அளவிற்குப் பதிய வைத்துள்ளோம். கூட்டங்களில் நானே மாடு புதைப்பேன் எனப் பேசியது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பறை அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே தங்களது வருமானம் பாதிக்கப்படுகிறது எனத் தானாகவே முன்வரும்போதுதான் ஏதும் செய முடிவதில்லை. இழிவு என்பதனால் அதைச் செய்யவே வேண்டாம் எனச் சொல்கிறோம். செயல் வடிவத்தில் முழுமையாக வரா விட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். தாழ்த்தப்படவர்களுக்குக் குடியிருப்பு ஊர் நடுவில் கட்ட வேண்டுமென்கிறது எங்கள் தேர்தல் அறிக்கை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தைத் திரித்து எல்லா இடங்களிலும் பேசித் திரிந்தது தி.க., தி.மு.க.வினர்தான். “டாக்டர் பாரு, பறையனையெல்லாம் நடுவில் வைக்க வேண்டுமென்கிறார்” என ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினர் பேசினர். இதன் விளைவாக ஒரு அரை சதவீதம் ஓட்டுக்கள் எங்களுக்குக் குறைந்தது என்றாலும், இது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கட்சிப் பொறுப்புகளில் கூட எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் முன் வருகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். பிற கட்சிகளில் இந்நிலைமை இல்லை. தாழ்த்தப்பட்டவர் அணி எனத் தனியாக வைத்து அதில் பொறுப்புத் தருவார்களே யொழிய பொதுப் பொறுப்புகளைத் தருவதில்லை. எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரே தாழ்த்தப்பட்டவர். செங்கை மாவட்டத்தில் தலைவர், தஞ்சையில் தலைவர், நாகை மாவட்டத்தில் செயலாளர் இவர்களெல்லாம் ஆதி திராவிடர்கள்தான். எங்கள் கட்சியின் மூதறிஞர் அணித் தலைவர் மணியரசு நாராயணசாமி அவர்களும் ஒரு ஆதி திராவிடர்தான்.

கேள்வி:
தீண்டாமைக் கொடுமை என்பது கலாச்சார ரீதியாக வெளிப்படுவது. இதனை எதிர்த்த நடவடிக்கைகள் கலாச்சாரத் தளத்திலும் நடைபெற வேண்டும். அத்தகைய திட்டங்கள் ஏதும் உண்டா? மஞ்சள் துண்டணிவது, அக்னித் திருவிழாக்கள் நடத்துவதென்பதெல்லாம் பா.ம.க.வினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொருளென்ன? தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையும் பொதுக் குறியீடாக மாற்றும் திட்டமுண்டா?

பதில்:
குறிப்பிட்ட வடிவம் ஏதும் கிடைத்தால் செய்வதில் தடையில்லை. கட்சிக் கொடியில் மஞ்சள் சிவப்புடன் நீலமும் இருக்க வேண்டும் என்கிற கருத்து வந்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ‘டீ க்ளாஸ்’ வைக்கும் பழக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டு அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். மீன் சுருட்டியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டீ குடித்து அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தனி டீ கிளாஸ் பழக்கம் எங்காவது இருந்தால் அங்கு நானே வந்து போராடுவேன் எனப் பேசியதைத் தொடர்ந்து பல ஊர்களில் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டது. கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்கும் போது கூட பொதுக்கிணற்றில் நீர் எடுப்பது, கோயில்களில் சம மரியாதை போன்ற செயல் திட்டங்களுடன் இணைந்த கூட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் போறேன்.

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை தமிழக அரசு சரியாகக் கொண்டாடவில்லை. நாங்கள் சிறப்பாகக் கொண்டாடினோம். சுமார் பத்து இடங்களில் அம்பேத்கருக்குச் சிலைகள் திறந்துள்ளோம். இது இளைஞர்கள் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் பதட்டம் குறைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விஷயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களானாலும் இதுவரை செய்யப்பட்டுள்ளவை ரொம்பக் குறைவுதான். இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவும் இருப்பதால் இத்தகைய பிரச்சினைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மக்களைப் பாதிக்கிற இதர பிரச்சினைகளும் வந்து விடுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தபு இயக்கங்கள் எதுவும் இப்படியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்களுக்காக எங்களை அணுகியதில்லை.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
கட்சியில் பல்வேறு வெகுஜன அணிகள் வைத்திருக்கிறீர்கள். தீண்டாமை ஒழிப்பு அணி என்று ஒன்று தனியாக அமைக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் அது இயங்கலாம். தீண்டாமைப் பிரச்சினைகளை மட்டுமே அது கவனத்தில் எடுத்துச் செயல்படலாம்.

பதில்:
ரொம்ப அருமையான கருத்து. இதுவரை யாரும் சொன்னதில்லை. இதை உடனடியாக நிறைவேற்றுவோம். சாதி ஒழிப்புக் கூட்டு விவாதத்தில் உங்கள் வீட்டில் மாட்டுக்கறி விருந்தளித்ததாகப் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நாங்களும் இப்படிச் செய்வோம். நான் கூட கூட்டங்களில் பேசுவதுண்டு – உங்களில் பாதிப் பேர் பன்றிக் கறி சாப்பிடுகிறீர்கள். பன்றியாவது மலம் தின்கிறது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறி சாப்பிடுங்கள் – என்பேன்.

கேள்வி:
அரசில் குறுக்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்வது என்கிற போராட்ட வடிவத்தை எங்கிருந்து முன்மாதிரியாகப் பெற்றீர்கள்?

பதில்:
முன்மாதிரி என்று எதையும் பார்க்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ரொம்பவும் நியாயமான கோரிக்கை என்பதால் மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நாங்கள் பங்கு கோருகிறோம் என்கிற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 சதம் வன்னியர்களுக்கு 20 சதம் எனப் போராடினோம்.

கேள்வி:
ஈழ மக்களுக்கெதிராக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக ஓட்டுக் கட்சிகளில் ஓரளவு குரல் கொடுத்தது பா.ம.க.தான். இன்னும் வன்மையாக நீங்கள் குரல் கொடுத்திருக்க முடியும். அதன் மூலம் திராவிட இயக்கங்களைத் தோலுரித்து ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க முடியும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறோம்.

பதில்:
ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினேன். ஆதரவாக நின்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தபோது அதனையும் கண்டித்தோம். ராமகிருஷ்ணன் முதலியோரை சிறையில் சென்று பார்த்தேன். இதர சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து இதனைச் செய்வோம். இதில் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்சியைத் தடை செய்தாலும் சரி.

கேள்வி:
தாராளவாதம் என்கிற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு இந்தியா அடிமையாகி வருகிறது. இவற்றின் விளைவாக கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் கூட இன்று வணிகமயமாகி வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. பா.ம.க. இவை பற்றி எல்லாம் பேசுவதாகத் தெரியவில்லையே?

பதில்:
மன்மோகன் சிங் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இது குறித்தும் சர்வதேச நிலைமைகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் பேசுகிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

கேள்வி:
மக்களே Local Power, அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது இன்று அண்டை மாநிலங்களிலெல்லாம் நடைமுறையாகி வருகிறது. உங்கள் கருத்தென்ன?

பதில்:
Local Power – ஐ மக்களே கையிலெடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு என்பதே என் தனிப்பட்ட கருத்து. மக்கள் கண்காணிப்பு அணிகளை ஆங்காங்கு உருவாக்கிச் செயல்படுத்துவது அவசியம்.

கேள்வி:
சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் நமது அமைப்புக்களை நாம் சனநாயகப்படுத்த வேண்டும். பா.ம.க.வில் அத்தகைய திட்டம் ஏதும் உண்டா?

பதில்:
இன்னும் இரண்டு மாதங்களில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல்கள் நடத்த இருக்கிறோம். சில மாவட்டங்களில் அமைப்பு கட்ட வேண்டியுள்ளதும், சிவில் தேர்தல்கள் இடையில் அறிவிக்கப்பட்டதும் தான் தாமதத்திற்குக் காரணம்.

கேள்வி:
கல்விப் பிரச்சினைகளில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பா.மக.வின் கல்விக் கொள்கை என்ன?

பதில்:
கல்வியைப் பொறுத்த மட்டில் இதோ இருக்கிறாரே (கல்யாணியைச் சுட்டிக்காட்டி) இவர் சொல்வதுதான். மக்கள் கல்வி இயக்கத்தின் கொள்கையை முழுவதுமாக ஏற்கிறோம். இன்றைய கல்வி முறை கிராமப்புற மக்களைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு மேய்க்கத்தான் பயன்படும். தமிழ்வழிக் கல்வி முதலியவற்றுக்காகப் போராடுவதற்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
புதிய தீவிர வடிவங்கள் தேவை என்பது ஒரு புறம். இப்போது இருக்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இயல்பாயுள்ள போர்க்குணத்தை – Militancyயையும் அல்லவா குறைத்து விடுகின்றன. நிறப்பிரிகை 600 பிரதிகளே அச்சிடப்பட்டாலும் சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடியவர்கள் மத்தியில் செல்லும் ஒரு இதழ். இதன் மூலம் நீங்கள் எதையேனும் சொல்லலாம்.

பதில்:
பா.ம.க. பற்றிய குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். தினப்புரட்சி நமது பத்திரிகை. அதில் எல்லோரும் எழுதலாம். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

(நிறப்பிரிகை, பிப்ரவரி 4, 1992)