“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” – அ.மார்க்ஸ்

1.இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினைப் பற்றி எப்படி அவதானம் கொள்கிறீர்கள்?

மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன அழிப்பு, இடப்பெயர்வுகள், அகதிகள் உருவாக்கம், இராணுவமயமாதல் எனப் பல்வேறு அழிவுகள், பாதிப்புகள், துயர நினைவுகள் ஆகியவற்றுக்குக் காரணமான யுத்தம் இது. ஏற்கனவே இருந்து வந்த இன அடிப்படையிலான வெறுப்புகள், பிளவுகள் ஆகியன இன்று அதிகமாகியுள்ளன. இன ஒற்றுமை மேலும் சிதைந்துள்ளது. அரசியல் தீர்வுகள் எனும் திசையிலளொரு சிறிதளவும் முன்னோக்கிய நகர்வு இல்லை.

2.இலங்கை முஸ்லிம்கள், தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இரண்டு சமுதாயத்தினரதும் அரசியல் இயங்கு நிலை தொடபில் உங்கள் அவதானம் என்ன?

இரு சமூகங்களும் இரண்டு நாடுகளிலும் சிறுபான்மைச் சமூகங்கள். பெரும்பான்மைத் தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்கொண்டுள்ள மதங்கள். தமிழக முஸ்லிம்கள் தங்களின் முஸ்லிம் அடையாளத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில் தமிழர் எனும் இன அடையாளத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை. முஸ்லிம் என்பதை மத அடையாளமாகவும், தமிழர் என்பதை இன அடையாளமாகவும் காண்கின்றனர். அங்கே உருது பேசுகிற முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். அவர்களும் கூட தம்மைத் தமிழர்களாகவே முன்னிறுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு உருது பேசும் முஸ்லிம் வழியில் வந்தவர்.

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட அவ்வளவுபேரும் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதிலும், தமிழை நேசிப்பவர்களாயினும், தமிழுக்குப் பங்களிப்புகள் செதவர்களாயினும் தம்மைத் தமிழர்களாக முன்னிறுத்திக் கொள்வதில்லை. இங்கே தமிழ் பேசும் பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்கின்றனர்.

அடையாள உருவாக்கம் என்பது இயற்கையானது அல்ல. அது அரசியல் மற்றும் வரலாற்றின் ஊடாக அமையும் ஒரு கட்டமைப்பு (construction) என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இங்கிருந்த பவுத்த தேசியத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி நிறுத்திக்கொள்ளும் முகமாக சென்ற இருநூற்றாண்டுகளில் எதிர்வினை ஆற்றிய தமிழ்த் தேசியம் தன்னை மிகவும் இறுக்கமாகச் சைவ அடையாளத்துடன் பிணைத்துக் கொண்டது. தமிழைச் சைவத்துடன் பிரிக்க இயலாமற் செய்தது இப்படித் தமிழ் பேசும் மக்கள் இரண்டு இனங்களாகப் பிரிந்து கிடக்க நேரிட்டுள்ளது. மூன்று இனங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர் என்றும் சொல்லலாம். மலையகத் தமிழர்களும் தம்மைத் தனித் தேசிய இனமாகத்தானே உணர்கின்றனர். வரலாறு முழுவதிலுமே இங்கு பெரும்பான்மையாக உள்ள தமிழ்ச் சைவம் தன்னை இந்தியாவிலுள்ள சைவத்துடனேயே அடையாளம் கண்டு உறவையும் பேணி வந்தது. எனவே இங்கு தமிழர்கள் மத்தியில் மொழியைக் காட்டிலும் மதம் அடையாள உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.  

3.இலங்கையில் அப்படியான ஒரு நிலை ஏற்பட்டதன் பின்னணி என்ன?

வரலாறு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றேன். சமீபமான ஒரு இருநூறாண்டு கால வரலாறு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் நடந்ததுபோல இங்கொரு சுதந்திரப் போராட்டமும் நடக்கவில்லை. போராட்டம் இல்லாமலேயே இங்கொரு சுதந்திரம் கிடைத்தது. மிகப் பெரிய இந்து முஸ்லிம் கலவரத்துடன்தான் இந்தியாவில் சுதந்திரம் விடிந்தது என்றாலும் 1947 க்கு முந்திய ஒரு 30 ஆண்டுகாலம் காந்தி என்கிற ஒரு மனிதரின் தலைமையின் கீழ் நடந்த சுதந்திரப் போரட்டம் மிக முக்கியமான ஒன்று.

மதச்சார்பின்மை என்பதற்கும் சமூக நல்லிணக்கம் என்பதற்கும் ஒரு அடையாளமாக உலக வரலாற்றில் திகழ்பவர் மகாத்மா காந்தி. சுமார் 22 ஆண்டுகள் அவர் தென் ஆப்ரிக்காவில் இருந்தார். ஒரு இந்திய முஸ்லிம் வணிகரின் வழக்குரைஞராகத்தான் அவர் அங்கு சென்றார். அவரது ஆண்டு வருமானம் அப்போது 6000 பவுண்டு. அன்று அது மிகப் பெரிய தொகை. தனது பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த காந்தி இரண்டு கம்யூன்களை உருவாகினார். அந்தக் கம்யூன்களில் பல மொழி பேசுகிற பல சாதி மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்கள் இருந்தன. எல்லோரது வருமானமும் ஒன்றாக்கப்பட்டு எல்லோரும் ஒரே மாதிரியான உணவு, உடை, வாழ்க்கை என எல்லோரும் எல்லாவற்றையும் சமமாகப் பகிர்ந்து கொண்டனர். வேலைகளையும் அவ்வாறே பகிர்ந்து கொண்டனர். இந்தியா என்பது பல மொழி பேசுகிற, பல நம்பிக்கைகளைக் கடைபிடிக்கிற ஒரு நாடு என்கிற கருத்து மிக அழமாக அவருக்கு அங்கு பதிந்தது. அவர் நடத்திய பத்திரிக்கை ஆங்கிலம், தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளி வந்தது.

இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபடுவது என அவர் முடிவெடுத்தபோது அங்கு பெரிய அளவில் பிரிட்டிஷ் எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. திலகர், அரவிந்தர் முதலான உயர் சாதி இந்துக்கள் தலைமையில் நடந்த அந்தப் போராட்டத்தில் அடித்தள மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் ஈடுபடுத்தப்படவில்லை. வெகுஜனப் போராட்டமாக அது மாறவில்லை. குதிராம் போஸ் போன்ற இந்து இளைஞர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றுவிட்டுத் தூக்கு மேடை ஏறியபோது தம் இறுதி ஆசையாகக் கையில் பகவத் கீதையை வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் அளவுக்கு அன்று சுதந்திரப் போராட்டம் இந்து மயமாகித் தன் வெகுஜனத் தன்மையை இழந்திருந்தது.

அபோது குடும்பத்தோடு இந்தியா புறப்பட்ட காந்தி திலகர், அரவிந்தர் எல்லோரையும் தவிர்த்துவிட்டு கோபால கிருஷ்ண கோகலே என்கிற மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத, தீண்டாமை முதலான சமூகக் கொடுமைகளை ஏற்காத ஒரு தலைவரிடம் ஆலோசனை கேட்டார். “நீ இந்தியாவை முதலில் புரிந்து கொள். அது தென் ஆப்ரிகா போல ஒரு சின்ன நாடு கிடையாது. பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடு இது. பலமாதிரிப் பிரச்சினைகள் உள்ள நாடு இது. ஒரு இரண்டாண்டு காலமாவது இந்திய மக்களைக் கவனித்துப் பின் அரசியலில் இறங்கு..” என்கிற ரீதியில் அவரது அறிவுரை அமைந்தது.

அப்படியே இரண்டாண்டு காலம் இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள். பிரச்சினைகள் எல்லாவற்றையும் கவனித்து, முடிந்தவரை பங்கு பெற்று விட்டு அவர் முதன் முதலில் அறிவித்த போராட்டம் ‘கிலாஃபத் இயக்கம்’தான். ஆம் உலகளாவிய ஒரு முஸ்லிம் பிரச்சினையைத்தான் முதலில் எடுத்தார் அவர். பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் இந்தியாவுக்குள் இருந்த அக்காலத்தில் பெரிய அளவில் இருந்த முஸ்லிம்களை விட்டுவிட்டு நடத்தும் எந்தப் போராட்டமும் ஒற்றுமைக்கு வழி வகுக்காது என்பதை உணர்ந்தார். உணர்த்தினார்.

அப்படி ஒரு இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கட்டமைத்த போது, அதைக் கண்டு கலங்கிய இந்துமதவாத அமைப்பினர்தான் ஐந்து முறை முயன்று ஆறாம் முறை அவரைக் கொன்று தீர்த்தனர். காந்தி இந்து மதத்தை முழுமையாக நம்பியவர். ஏற்றவர். இராம பக்தர். அதே நேரத்தில், “என் மதம் எப்படி இன்னொருவர் மதமாக முடியும்?” என பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனச் சொன்னவர்களை நோக்கிக் கேட்டு அவர்களின் அம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்கிற நபிகள் நாயகத்தின் கூற்றிற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாக இருந்தவர். அவரது துயர முடிவுக்குப் பின் என்னென்னவோ நடந்துவிட்டன. அடுத்த ஒரு முப்பதாண்டு காலமும் கூட அவர் உருவாக்கியிருந்த இந்தக் கருத்தியல் அடித்தளம் அவ்வளவு எளிதாகச் சிதையவில்லை.

நாம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் வீதம் 6 சதம். இலங்கையில் உள்ளதைக் காட்டிலும் கொஞ்சம்தான் குறைவு. எனினும் இங்கே தமிழ் அடையாளத்தை அவர்கள் துறக்க இயலாமற் போனதில் இங்கு உருவான திராவிடக் கருத்தாக்கத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. முஸ்லிம்களை உள்ளடக்கியே இங்கு திராவிட இயக்க வழியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த தி.மு.க முதலான இயக்கங்களும் தம் அரசியலைச் செய்தன. காலமெல்லாம் கடவுள் மறுப்புப் பேசிக் கொண்டிருந்த தந்தை பெரியார் இன்னொரு பக்கம் “இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” எனக் கூறி சாதி, தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் முஸ்லிமாக மாறுங்கள் என்றெல்லாம் பேசியதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. ம.பொ.சிவஞானம் என அங்கொருவர் இருந்தார். அவர்தான் திராவிட தேசியத்தை எதிர்த்துத் தமிழ்த் தேசியம் ஒன்றை இந்து அடையாளத்துடன் முன்வைக்க முயன்று தோற்றார்.

இங்கே அப்படியான முஸ்லிம்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியச் சொல்லாடல் எழவே இல்லை. இங்கே உருவான சைவத்தை முதன்மைப் படுத்திய தமிழ்த் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் இன்றளவும் இங்குள்ள பஞ்சம சாதியினர், மலையகத்தார், முஸ்லிம்கள் யாரையும் உள்ளடக்குவது பற்றிய பிரக்ஞை கொண்டிருக்கவில்லை.

போர் இந்தப் பிளவைக் கூர்மைப்படுத்தித்தான் உள்ளதே ஒழிய குறைக்கவில்லை. புலிகளின் கையில் அதிகாரம் இருந்தபோது நாங்கள் சாதி, மதம் என்கிற வேறுபாடுகளை எல்லாம் ஒழித்துவிட்டோம் எனச் சொன்னார்கள். ஆனாலும் போரின் ஊடாக தமிழ் – முஸ்லிம் பிளவு அதிகரித்துக் கொண்டுதான் போனது. இன்று இரண்டு நாட்களுக்கு முன் நான் கிழக்கு மாகாணம் சென்று வந்தேன். முஸ்லிம் நண்பர்கள் பலரையும் சந்தித்தேன். கிட்டத் தட்ட எல்லா தமிழ் முஸ்லிம்களுமே இன்று வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்கவில்லை. வெளிப்படையாக அப்படிச் சொல்லாதவர்களும் கூடத் துருவிக் கேட்கும்போது, “அது நடக்கப் போவதில்லை. எதற்காக அதைப் பற்றிப் பேச வேண்டும்” என்றுதான் சொல்கிறார்கள். அமைச்சர் ரவூப் ஹக்கிம் அவர்களே அப்படிச் சொன்னதாக ஒரு நண்பர் கூறினார்.

4. இந்த நிலை மாற வாய்ப்பு உள்ளது எனக் கருதுகிறீர்களா?

மாறினால் நல்லதுதான். பவுத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு முன் மற்றவர்கள் ஒன்றாக இணைவது நல்லதுதானே. ஆனால் இன்று பிரச்சினை முற்றிலும் எதிரான நிலை நோக்கி அல்லவா போய்க் கொண்டுள்ளது. நான் இங்கு வந்த அன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் ஒன்றைச் சொல்லியிருந்தார். இன்று இங்கு ஏற்பட்டுள்ள ஆதிக்கப்போட்டியில் மைத்ரிபால அரசு கவிழ்ந்து மீண்டும் ராஜபக்சே அதிகாரத்திற்கு வரக் கூடிய நிலை உருவாகியுள்ளது பற்றி அவர் சொல்லியுள்ள ஒரு கருத்தை நான் முகநூலில் பார்த்தேன். ”ராஜபக்சே பற்றி சிங்கம் புலி என்கிற ரீதியில் சிலர் பேசுகிறார்கள். அவர் ஒரு தேசியவாதி அவ்வளவுதான். வெளிநாட்டு மதங்களை ஆதரிப்பவர்கள்தான் இப்படிச் சொல்லுகிறார்கள்..” என்கிற ரீதியில் அவர் கருத்து இருந்தது. நண்பர் ஒருவரிடம் இதைக் கேட்டபோது அவர் சொன்னார். அரசியல் ரீதியில் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அதை மனதில் வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்…”

இங்குள்ள தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் தமிழ்த் தேசியத்துடன் எப்போதும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் இருந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தந்தை எனச் சொல்லப்படும் தந்தை செல்வா அவர்களே ஒரு கிறிஸ்தவர்தான். போர்க்காலத்திலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். தந்தை செல்வாவோ, இல்லை அமிர்தலிங்கமோ இல்லை பிரபாகரனோ இவர்கள் யாரும் இதுவரை தமிழ்க் கிறிஸ்தவர்களை அயல்நாட்டு மதத்தவர், அயல்நாட்டிலிருந்து வந்த மதங்கள் என்றெல்லாம் சொல்லாடியதாகத் தெரியவில்லை. எங்கள் நாட்டில்தான் இப்படியான அரசியல் சொல்லாடல்கள் இதுவரை உதிர்க்கப்பட்டு வந்தன. விக்னேஸ்வரன் அவர்களின் இந்தப் பேச்சை மூத்த பத்திரிகாசிரியர் தனபாலசிங்கம் அவர்கள் முகநூலில் விமர்சித்திருந்தார். அடுத்த நாள் அவருக்கு ஒரு நீண்ட மறுப்பை மறவன்புலவு சச்சிதானந்தம் எழுதி இருந்தார். அப்படி எல்லாம் சொல்லிவிடாதீர்கள், வெளிநாட்டு மதங்கள் இங்கே பெரிய அளவில் மதமாற்றங்கள் செய்கிறார்கள் என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.

சிவசேனா என்பது இந்தியாவில் உள்ள மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் இயக்கங்களில் ஒன்று. அந்தப் பெயரில் சச்சிதானந்தம் இங்கு இயக்கம் அமைக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் காக்கி யூனிஃபார்ம் எல்லாம் போட்டுக் கொண்டு இந்தியாவில் உள்ள மதவாத இயக்கங்களைப்போல போஸ் கொடுக்கிறார். மதமாற்றம் செய்கிறார்கள் எனச் சொல்லி சிறுபான்மை மத வெறுப்பை கக்குவதும் ஒரு அப்பட்டமான இந்திய இந்துத்துவ ‘ஸ்டைல்’தான். யாழ்ப்பாண வீதிகளில் நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கு இந்த அமைப்பு பசுவதை எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டி இருந்ததைப் பார்த்தேன். இதுவும் இந்திய இந்துத்துவவாதிகளின் அணுகல்முறைதானே. இதுவரை இங்கு பசுவதை எதிர்ப்பு, மாட்டுக்கற்றி சாப்பிடக் கூட்டாது என்றெல்லாம் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? தமிழ்நாட்டில் தீவிர புலி ஆதரவாளரான காசி ஆனந்தன் மகாராஷ்டிரத்திலிருந்து சிவசேனா இயக்கத்தவரை அழைத்து வந்து மாநாடு போடுகிறார்.

பொதுபல சேனா இலங்கையில் மாநாடு நடத்துகிறது. அதற்கு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற இயக்கம் நடத்தும் பிக்கு விராத்து அழைக்கப்படுகிறார். பொதுபல சேனா போருக்குப் பின் இப்போது இலங்கையில் முஸ்லிம்களை இலக்காக்கி தாக்குதல் நடத்துகிறது. இன்னொரு பக்கம் இப்படி சிவசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம்களை இலக்காக்கி பசுவதை முதலானவற்றைப் பேசுகின்றன. இதெல்லாம் போருக்குப் பின் இப்போது இங்கு உருவாகியுள்ள புதிய, ஆபத்தான் போக்குகள்.

5.இலங்கையில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லிம்களைதமிழ் பேசும் மக்கள்என்று அழைக்கிறார்கள். அப்படியான அழைப்புக்குள் உட்படுத்துவது சரிதானா? அல்லது அவர்களை இனரீதியாகப் பார்ப்பது சரியா?

என்னைப் பொருத்தமட்டில் அடையாளம் (Identity) எவ்வளவுக்கு எவ்வளவு விரிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது சமூகத்திற்கு நல்லது.  அடையாளம் சுருங்கச் சுருங்க உறுதியாக அது இனவாத அரசியலுக்கே உரமாகும். எனவே நாம் விரிந்த அடையாளத்திற்குள் போவது நல்ல விடயம்தான். அவ்வாறு விரிந்த அடையாளத்திற்குள் போவது என்பது நமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக இருக்கிற போதுதான் சிறு இனங்கள் தம் இன அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் ‘நாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று அறிவிக்க நேர்ந்தது அப்படித்தான். அதை வெறுமனே சொன்னதோடு அவர் நிற்கவில்லை. தீண்டாமைக்குக் காரணமான இந்து மதத்தை விட்டு வெளியேறவும் சொன்னார். ஆக விரிவான அடையாளம் என்பது யாரொருவரின் தனித்துவத்தையும் அழித்துக் கொள்வது அல்ல.  விரிவான அடையாளம் வேண்டும், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் முதலில் மற்றவர்களின் தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டும். அப்படி ஏற்காத நிலையில் பல உள் அடையாளங்கள் தன்னைத் தீவிரமாக வெளிப்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாது.

எனவே மக்கள் மத்தியில் இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் பெரும்பான்மை மக்களின் பங்கும் பொறுப்பும் அதிகமாகிறது. நான் அடிக்கடி காந்தியைப் பற்றிச் சொல்லுகிறேன் என நினைக்காதீர்கள். சமூக ஒற்றுமை என்பதைச் சாத்தியமாக்கியதில் அவர்தான் இன்று மிக முக்கியமான, பின்பற்றப்பட வேண்டிய ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவர் தனது பெரும்பான்மை இந்து அடையாளத்தை மறைத்துக் கொண்டதில்லை. தன்னை ஒரு இராம பக்தராக அடையாளப் படுத்திக் கொண்ட அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைத்து மதத்தினரும் இருந்தனர், அனைத்து மொழியினரும் இருந்தனர். ‘வைஷ்ணவ ஜனதோ’ எனப் பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் “கிருஸ்துவைப் பாடலாமா?” என்கிறார். “நல்ல கருத்து வாருங்கள் பாடுவோம்” என்கிறார் காந்தி. இன்னொருவர் அல்லா வைப் புகழ்ந்து பாடுகிறார்.

இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர நாளன்று ‘பசுவதைத் தடைச் சட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை இந்துத்துவவாதிகள் முன்வைக்கின்றனர். பெரிய அளவில் அந்தக் கோரிக்கை பிரச்சாரம் செயப்படுகிறது. அப்படியான சட்டம் இயற்ற வேண்டும் என ஏராளமான தந்திகள் அடிக்கப்படுகின்றன. காந்தி தங்கியிருந்த நிலையத்திற்கு துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வல்லபாய் படேல் வருகிறார். கூட வந்த உதவியாளர் ஒரு பெரிய மூட்டையைக் கொண்டு வந்து வைத்துப் பிரித்துக் காட்டுகிறார். அவ்வளவும் பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என வற்புறுத்தும் தந்திகள். அவற்றைப் பார்த்துவிட்டு காந்தி, “ஆமாம். எனக்கும் இப்படி நிறையத் தந்திகள் வந்துள்ளன. நான் சின்ன வயது முதல் கோமாதா வணக்கம் செய்து வருபவன். ஆனால் என்னுடைய மதம் எப்படி இன்னொருவரின் மதமாக இருக்க முடியும்?” – எனக் கேட்கிறார். அவ்வளவுதான். அந்தக் கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் காந்தியை இந்து மதவதிகள் கொல்கின்றனர். அதற்கும் அடுத்தடுத்த மாதங்களில் இந்திய மாநிலங்கள் பலவும் மதமாற்றத் தடைச் சட்டங்களை இயற்றுகின்றன. பெரும்பான்மை மதம் அல்லது இனத்திலிருந்து இப்படிப் பேசும் குரல்கள் எழ வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? பெரும்பான்மை மத, இன வாதங்கள் என்பன மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் அதிகாரம் பெறுவதற்கான வழிகள் ஆகி விடுகின்றன. அதுதான் பிரச்சினையே.

அரசியல் – politics- எனும் கருத்தாக்கம் polity- polys – poly எனப் பன்மைத்துவம் எனும் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். பலரும் இணைந்து ஒன்றாக வாழும் கலை என்பதுதான் politics – அரசியல் என்பது. இன்றோ மக்களைப் பிரித்து, எதிர் எதிராக நிறுத்தி அதன் மூலம் அதிகாரம் பெறுவதைக் குறிப்பதே அரசியல் என்றாகிவிட்டது.

உலக அளவிலும் இன்று அரசியல் இப்படித்தானே இருக்கிறது. முதலாளித்துவம் X சோஷலிசம் அல்லது நேட்டோ X வார்சா ஒப்பந்த நாடுகள் அல்லது அமெரிக்கா X சோவியத் யூனியன் என உலகம் இரு துருவங்களாக எதிர் எதிராக நின்ற பனிப்போர்க் காலத்தைக் காட்டிலும் இன்றைய ஒரு துருவ உலகம் அநீதியான ஒன்றாகத்தானே ஆகியுள்ளது. பேரழிவு ஆயுங்களை வைத்திருந்தார் எனவும், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமானார் என்றும் சொல்லி ஈராக் மீது படை எடுத்து, அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட்ட ஜனாதிபதியைத் தூக்கிலேற்றி…..ஏன்னென்ன நடந்துவிட்டது இந்தச் சில ஆண்டுகளில்… கடைசியாக அந்தக் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க இயலாமற் போன போது. “intelligence failure – எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது” எனச் சொல்லிப் புன்னகைக்க முடிகிறதே அவர்களால். பெரும்பான்மை மக்களுக்கும்கூட பன்மைத்துவம் காப்பாற்றப்படுவதே நல்லது என்பதை உலகம் உணர வேண்டும். இன்றைய ஒரு துருவ உலகத்தில்தானே சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், சங்கம் வைத்துப் போராடும் உரிமை, இலவசக் கல்வி, மருத்துவம்….. எனப் போராடிப் பெற்ற எல்லா சமூகப் பாதுகாப்புகளும் நாசமாக்கப்பட்டன.

6. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, காத்தான்குடி, எறாவூர் முதலான இடங்களில் முஸ்லிம்கள் படுகொலை செயப்பட்டது இப்படியான யுத்த பாதிப்புச் செய்தி இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறது?

நான் முதன் முதலாக இலங்கை வந்தபோது அப்போதுதான் போர் முடிந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்திற்குச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனினும் பேரா ந.இரவீந்திரன் மற்றும் அவருக்குத் தெரிந்த ஒரு தமிழ் உயர் அரசு அதிகாரி ஆகியோரின் உதவியால் யாழ்ப்பாணம் மட்டுமின்றி முள்வேலி முகாம்கள் மற்றும் போரழிவுகள் நடைபெற்ற பகுதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். மாவீரர் கல்லறைகள், திலீபன் நினைவுச் சின்னம் எல்லாமும் அப்போது சிதைக்கப்படாமல் இருந்தன. காத்தான்குடியில் அந்தப் பள்ளிவாசலுக்கும் சென்று அப்பகுதி மக்களையும் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் வெறிச்சோடிக் கிடந்த முஸ்லிம் பகுதி மட்டுமல்லாமல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழும் புத்தளம் அகதி முகாம்களுக்கும் நண்பர் சிராஜ் மசூர் என்னை அழைத்துச் சென்றார். அப்படியான அகதிக் குழந்தைகள் பயிலும் ஒரு முஸ்லிம் பள்ளிக்கும் சென்றேன்.

மனதை உருக்கிய அக்காட்சிகளை இரண்டு மூன்று இதழ்களிலும் எழுதினேன். அக்கட்டுரைகள் வெளிவந்தவுடன் அவற்றில் சில கொழும்பு ‘தினக்குரல்’ நாளிதழில் உடனுக்குடன் வெளிவந்தன. குமுதம் வார இதழில் வெளிவந்த திலீபன் நினைவுச் சின்னம் பற்றிய என் கட்டுரை ‘தினக்குரலில்’ மறு வெளீயீடு கண்டபோது ராஜபக்‌ஷே அரசு அதை இடித்தது என அப்போது அதன் ஆசிரியராக இருந்த தனபால சிங்கம் அவர்கள் சொன்னார்.

படத்துடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழகத்திலும் கவனம் பெற்றன. எனினும் தமிழகத்தில் அன்றிருந்த ஈழ ஆதரவு எழுச்சி என்பது காத்தான்குடி மற்றும் எறாவூர் முதலான இடங்களில் அப்பாவி முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதையும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் முகாம்களில் படும் துயரையும் நான் எழுதியபோது அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்ல எனது ஈழ அனுபவங்கள் தொடர்பாக தமிழகத்தில் நடத்தப்பட்ட நான்கு கூட்டங்களில் இரண்டில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வந்து கூட்டத்தைக் குழப்ப முயற்சித்தனர். புலிகளின் இத்தகைய செயற்பாடுகளை விமர்சிப்பது என்பது இன்றளவும் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அங்கு பேசப்படவே இல்லை. இதில் இன்னும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் இங்கு தமிழ்ழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களும் கூட இன்றளவும் அதை அதற்குரிய அழுத்தத்துடன் பேசவில்லை என்பதுதான். 

7. தமிழக மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை உணர்ந்துள்ளார்களா?

பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அளவிலேயே இங்குள்ள மக்களின் அவதானமும் ஆதரவும் உள்ளது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தனித்துவமான பாதிப்புகள் தமிழ்த் தேசிய இயக்கங்களால் மூடி மறைக்கப்பட்டன என்பதே உணமை. மற்றவர்களும் அதைப் பேசத் தயங்கினர். இன்றளவும் அத் தயக்கம் உள்ளது. மனித உரிமை அமைப்புகளும் பேசவில்லை. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது. அதைப் பேசுவதும் கண்டிப்பதும் முதன்மையானது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க இயலாது. ஆனால் முஸ்லிம்களின் துயரங்கள் இங்கு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். என்னைப்  பொருத்த மட்டில் என் நூல்களில் நான் இரண்டையும் எழுதியுள்ளேன். சொல்லப்போனால் நான் மட்டுமே அவற்ரை எழுதியுள்ளேன்.

8.இலங்கையினுடைய இனப் பிரச்சினைக்கு ஆயுதங்களை வழங்கி அதனை ஓர் ஆயுதப் போராட்டமாக மாற்றப்பட்டமையின் முழுப் பொறுப்பும் இந்தியாவின் மீதே சாட்டப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு அவதானம் கொள்கிறீர்கள்?

ஈழப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கியது, அவர்க்ளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. இந்தியாவைப் பின்தளமாக வைத்துச் செயல்படுத்த எல்லா அனுமதிகளையும் வழங்கியது, ஈழ ஆயுத அமைப்புகள் இங்கே ஆயுதப் படை முகாம்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்தின என்பதெல்லாம் உண்மை. ஆனால் ஆயுதப் போரட்டத்தையே இந்தியாதான் உருவாக்கி நடத்தியது என்பதை ஏற்க இயலாது. ஈழ ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த உறவை ராஜிவ் காந்தி கொலைக்கு முன், பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கவும் வேண்டும். ராஜிவ் காந்தி கொலைக்குப் பின் இங்கு ஈழத் தமிழர்கள் கடுமையான கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர். அகதிகள் முகாம்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் பேர் திருப்பி அனுப்பப் பட்டனர்.

இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனி ஈழம் பிரித்துக் கொடுப்பது என்பது இந்தியாவின் அஜென்டாவாக என்றைக்குமே இருந்தது இல்லை. இருக்கவும் முடியாது. அப்படித் தனி ஈழம் பிரிவது என்பது இந்தியாவிற்குள்ளும் அப்படியான பிரிவினை எண்ணங்களை ஊக்குவிக்கும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.

பின் ஏன் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்குத் தொடக்கத்தில் இந்தியா ஆதரவாக இருந்தது என்றால் அதனூடாக இலங்கையைச் சீனாவின் பக்கம் சாய விடாமல் தன் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் நோக்கத்தோடுதான்.

ஆயுதப் போராட்டக் குழுக்கள் இந்தியாவில் முகாம்களை அமைத்துக் கொள்ளவும். பயிற்சி பெறவும் அனுமதித்த போதும் கூட அவை முழுச் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன எனச் சொல்ல முடியாது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருந்தது.

9. இலங்கையைத் தமிழீழம் எனப் பிரிப்பதற்குத் தமிழ்நாட்டுத் தலைவர்கள்தான் அதிகம் கோஷம் எழுப்புபவர்களாக இருக்கின்றனர். இதற்குப் பின்னணி என்ன?

எல்லாத் தமிழ்நாட்டுத் தலைவர்களும் அப்படி எனச் சொல்ல முடியாது. இங்குள்ள தமிழ்த் தேசிய அமைப்பினர்தான் அப்படித் தீவிர கோஷம் எழுப்புகின்றவர்களாக உள்ளனர். காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றாக இருக்கும் இலங்கை என்கிற கருத்தாக்கம் கொண்டவைதான். கம்யூனிஸ்டுகளைப் பொருத்தமட்டில் சுயாட்சி உரிமையுடன் கூடிய ஒன்றாக இருகும் இலங்கை என்பதுதான் அவர்களின் நோக்கம். தமிழ்த் தேசியர்கள் தனித் தமிழ் ஈழம் எனக் கோருவதில் வியப்பில்லை. அவர்கள் இங்குள்ள தமிழர் பிரச்சினையைப் பேசுவதைக் காட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினையைப் பேசுவதே அதிகம் என நீங்கள் சொல்வது உண்மைதான். அப்படி அவர்கள் பேசுவது என்பதில் அவர்கள், அதாவது இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்களளை என்றைக்கும் கணக்கில் கொண்டதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றி அவர்கள் என்றைக்கும் பேசியதில்லை. விடுதலைப் புலிகளால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி யாராவது பேசினால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் ஆனால்தான் புலிகள் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தவே செய்வர்.

10. நீங்கள் நினைக்கிறீர்களா முஸ்லிம்கள் அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று?

நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ்நாட்டு முஸ்லிம்களில் கூட ஒரு குறிப்பிட்ட அளவு உருது பேசுபவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கிட்டத் தட்ட அவ்வளவு பேரும் தமிழ் பேசுகிறவர்கள்தான். தமிழ் பேசுபவர்களாக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்த ஒரு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை இவர்களின்  ஆதரவும் இருந்தது. இப்போதுதான் அது முழுக்க முழுக்க சிதைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் முஸ்லிம்களும் கூட தமிழீழக் குழுக்களில் இருந்துள்ளனர். மிகச் சிலர் முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளனர். முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களுக்குப் பின்பே முற்றிலும் இந்த ஒற்றுமை சிதைந்தது. முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் எனச் சொல்வதை ஏற்க இஅலாது. ஒரு சிலர் காட்டுக் கொடுத்திருக்கலாம். ஏன் தமிழர்களிலும் கூடத்தான் பலர் காட்டிக் கொடுத்துள்ளனர். அப்படியான காட்டிக் கொடுத்தவர்கள், உளவு சொன்னவர்கள் ஆகியோரைப் புலிகள் தண்டித்தும் உள்ளனர். ஆனால் அவ்வாறு காட்டிக் கொடுத்தவர்கள் இந்துத் தமிழர்களாக இருந்தால் காட்டிக் கொடுத்த அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் என்கிறபோது ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமூகமே அல்லவா தாக்கப்பட்டது.

11. அவ்வாறு ஒரு சில சம்பவங்களுக்காக ஒரு சமூகத்தயே, ஒரு பூர்வீகத்தையே வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?

உறுதியாக அப்படி இருக்க முடியாது. அது கண்டிக்கத் தக்கது. தொடக்கம் முதல் தமீழீழப் போராட்டம் ஒரு வகையில் சைவக் கருத்தியல் சார்ந்து உருவானது இதற்கொரு அடிப்படையாக இருக்கலாம். இன்று மறவன்புலவு சச்சிதானந்தம் முதலானோரின் முயற்சிகள் மேலும் இந்தப் பிளவை வலுப்படுத்தவே செய்யும்.

12. பல மாநிலங்கள் கொண்ட இந்தியாவைப் புறந்தள்ளி இலங்கையில் ஒரு தனி நாட்டை உருவாக்க இயலுமா?

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கை ஒரு சின்னஞ் சிறு நாடு என்பதாலேயே இந்தியாவைச் சார்ந்தே இலங்கை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியா ஒரு வலுவான, அணு ஆயுத பலம் கொண்ட வளர்ந்து வரும் நாடு என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் உறவு சுமுகமாக உள்ளது எனச் சொல்ல முடியாது. இன்னொரு அணு ஆயுத பலமுள்ள பாகிஸ்தானுக்கும் அதற்குமுள்ள பகை முற்றுகிறது. அதேபோலத்தான் சீனாவும். பல வகைகளில் இந்தியாவைக் காட்டிலும் வலுவாக உள்ள நாடான சீனாவுடனும் அதற்கு நல்ல உறவில்லை. தங்களின் உள் நாட்டு அரசியலில் அளவுக்கு மீறித் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டை நேபாளமும் இந்தியா மீது வைக்கிறது. எனவே கடல் எல்லை இல்லாத அந்த இமயமலை ஓர நாடு இப்போது சீனாவுடன் அதிகம் நெருக்கம் பேணுவதைக் காணலாம். இந்தியாவின் துணையுடன் உருவான வங்க தேசத்திற்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவும் அத்தனை சீராக இல்லை. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்த ஆயுதக் குழு ஒன்றின் உதவியுடன் மாலத்தீவில் ஒரு அரசு கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா தலையிட்டு அம்முயற்சியை முறியடித்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்கு ஒரு அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது இந்தியாவால் அப்படித் தலையிட முடியவில்லை.  இப்போது அதை வேடிக்கை பார்க்க மட்டுமே அதனால் முடிந்தது. சீனப் போர்க் கப்பல் ஒன்று மாலத்தீவிற்கு அருகாக நிறுத்தப்பட்டதோடு மெலிதான ஒரு எச்ச்சரிக்கையையும் அது செய்தபோது இந்திய்யா ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே இந்தியா ஒரு வலுவான பெரிய நாடான போதிலும், அதைச் சுற்றியுள்ள நாடுகள் அவை எவ்வளவு சிறிய நாடாயினும், அந்தச் சிறிய நாடுகள் இந்தியாவை நம்பித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இலங்கையின் உள்நாட்டு அரசியல் இந்தியாவின் நிலைபாட்டைப் பொறுத்து அமைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதல்ல. இந்தியாவைப் பொறுத்த மட்டில் இலங்கை துண்டாவதை அது பொதுவாக விரும்பாது. ஏன் என்பதை முன்பே சொல்லியுள்ளேன்.

13. இந்தியாவில் உருவாகியுள்ள பாரதீய ஜனதா கட்சியிலான ஆட்சி இலங்கையின் உள்நாட்டு அரசியலில் என்ன மாதிரியான தாக்கங்களை விளைவிக்கலாம்?

இலங்கை, இந்தியா இரண்டுமே இப்போது பெரும்பான்மை மதவாத ஆட்சிகள் நடக்கும் நாடுகள். ஆனால் இந்தியாவை ஆளும் பெரும்பான்மை மதம் இலங்கையில் ஒரு சிறுபான்மை மதம். எனினும் இப்போதைக்கு இரண்டு நாட்டிலும் உள்ள பெரும்பான்மை மதங்களும் அவரவர் நாட்டில் முஸ்லிம்களை எதிராக நிறுத்தி அரசியல் செய்யக் கூடியவையாக உள்ளன. நான் சற்று முன் சொன்னது போல இந்தியா இலங்கை துண்டாடப்படுவதை விரும்புவதில்லை. ஒரு வேளை இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைப்பு எனும் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியை இந்தியா செய்யலாம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த இணைப்புக்கு ஆதரவில்லாத நிலையில் ஒரு வேளை பா.ஜ.க தலைமையிலான இந்தியா அந்த இணைப்பை வலியுறுத்தலாம்.

14. உலகெங்கிலும் இவ்வாறு பிரிவினைக் கோரிக்கைகள் உருவாகி வலுப்பெற்று வருவது குறித்து உங்கள் கருத்தென்ன?

உண்மைதான் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து ஸ்காட்லந்து பிரான்சிலிருந்து அல்சேஸ், ஸ்பெயிலினிலிருந்து கேடலோனியா எனக் கிட்டத்தட்ட 14 பிரிவினைக் கோரிக்கைகள் இன்று மேலெழுந்துள்ளது உண்மைதான். ஆனால் இன்று எழுந்துள்ள இந்தப் பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் சென்ற நூற்றாண்டில் உருவான பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் உள்ள ஒரு வேறுபாட்டை நீங்கள் காண வேண்டும். முந்திய நூற்றாண்டில், இலங்கை உட்பட உருவான பிரிவினைக் கோரிக்கைகள் இன ஒடுக்கு முறை, இன வெறுப்பு அதனடிப்பட்டையிலான வன்முறைகள் என்கிற பின்னணியில் உருவானவை. கடும் பகை, ஆயுதப் போராட்டங்கள், அப்பாவிகள் கொல்லப்படுதல் என்பதாக அவை அமைந்தன. இன்று உருவாகும் பிரிவினைக் கோரிக்கைகள் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி, பெரிய இராணுவ வலிமை தேவை இல்லாத சூழல் முதலான பின்னணிகளில் சுயேச்சையான அரசியல், பொருளாதார நிர்வாகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் முன்வக்கும் கோரிக்கைகள். இவற்றில் பெரும்பாலும் வன்முறையில்லை. இந்தக் கோரிக்கைகள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் வாப்புகளை உள்ளட்டக்கியவையாக உள்ளன. இந்த வேறுபாட்டையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்கள் முன் நண்பர் ஒருவருடன் கிழக்கு மாகாணத்தில் காரில் வந்து கொண்டிருந்தேன். வாகனத்தை ஓட்டியவண்னம் எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த முஸ்லிம் ஓட்டுநர் சொன்ன்னார்: “இனங்களுக்குள் வேறுபாடு இங்கே அதிகரித்துக் கொண்டே போகிறது. தனித்தனியாய்ப் போறது நல்லதுதான். ஆனா இங்கே உள்ள இந்த மூன்று இன மக்களும் தனித்தனையாய்ப் பிரிந்து ஆளுவதற்கு உரிய மாதிரி இங்கே நிலப் பரப்பும் சனச் செறிவும் இல்லை. அதுதான் பிரச்சினை..”

15. இந்திய இராணுவத்தின் இலங்கை மீதான படை எடுப்பு, இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றை நீங்கள் எவ்வாறு பார்க்குறீர்கள்?

அமைதிப் படை என்கிற பெயரில் இந்திய இராணுவம் பல அத்து மீறல்களை மேற்கொண்டது. ஓரு ஆக்ரமிப்பு இராணுவம் எப்படிஎல்லாம் நடந்து கொள்ளுமோ அந்த அளவுக்கு அதன் அத்துமீறல்கள் இருந்தன. ஆனாலும் அதை இலங்கை மீதான இந்தியப் படை எடுப்பு என்பதாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஜெயவர்த்தனா அரசின் ஒத்துழைப்புடன், அனுமதியுடன் நுழைந்த படைதான் ‘இந்திய அமைதி காப்புப் படை’ (IPKF). ஜெயவர்த்தனா ராஜீவ் காந்தியை விட புத்திசாலி. இந்தியப் படைகளை வைத்துத் தன் திட்டத்தை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் பொருத்த மட்டில் அதில் இருந்த சில நல்ல கூறுகளும் கூட இன்னும் நிறைவேற்றப்படாமலும், உடனடி எதிர்காலத்திலும் கூட நிறைவேற்றப்படும் வாப்பும் இல்லாமல்தானே உள்ளன.

16. இலங்கை அனுசரணையுடந்தான் வந்தார்களா, இல்லை அவர்களே ஆதிக்கமாகத்தான் வந்தார்களா?

பிரேமதாசாவின் காலத்தில் இந்திய விமானப் படை இலங்கை எல்லைக்குள் நுழைந்து உணவுப் பொதிகளைப் போட்டுச் சென்றது என்பதை ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதைக் காட்டிலும் இந்தியா இலங்கைக்கு அளித்த ஒரு எச்சரிக்கை என்றுதான் பார்க்க வேண்டும். ஜெயவர்த்தனா, நான் சற்று முன் சொன்னது போல, இந்த மிரட்டலை மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். உள்ளே வந்த இந்தியப் படை ஒரு கட்டத்தில் அதுவாகவே, பெரிய இழப்புகளுடன், வெளியேற நேர்ந்தது.

17. இறுதி யுத்தத்தில் இந்தியா வழி நடத்தியதாகவும், உதவிகள் வழங்கியதாகவும் இந்திய தமிழ்த் தலைவர்கள் சொல்கிறார்கள். இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்.

அப்படியான குற்றச்சாட்டில் உண்மைகள் உள்ளன. அதே நேரத்தில் அந்தக் குற்றச்சாட்டில் பல சற்று மிகைப்படுத்தியும் முன்வைக்கப்பட்டன; இன்றும் முன்வைக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் அதன் முன்னாள் பிரதமர் ஒருவரைப் புலிகள் கொன்றது என்பது புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோப ரீதியான தவறு. அதனால் அவர்களுக்கு இழப்புகள்தான் மிஞ்சினவே ஒழிய பலன் ஏதும் இல்லை.  

18. இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு என நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

சற்று முன் நான் பயணம் செய்த ஒரு வாகன ஓட்டுநர் சொன்னதைக் குறிப்பிட்டேன். இங்கு மூன்று தேசியங்கள் பேசப்படுகின்றன. மலையகத் தமிழர்களையும் சேர்த்தால் நான்கு. தமிழ் பேசும் மக்கள் என மொழி அடிப்படையில் ஒன்றிணைவதற்கான வாப்பு குறிந்து கொண்டே போகிறதே ஒழிய கூடவில்லை. ஆனால் இப்படியான தேசியங்களின் அடிப்படையில் இந்தச் சின்னத் தீவைப் பிரிப்பதற்கான புவி இயல் சாத்தியங்களும் இல்லை. போர் முடிந்து இங்கு வந்து சென்றபோது நான் எழுதிய எல்லாவற்றிலும் வடக்கு – கிழக்கு இணைந்த காணி மற்றும் போலீஸ் அதிகாரமுள்ள முழுமையான சுயாட்சியுடன் கூடிய இலங்கை என்கிற கருதைத்தான் முன்வைத்திருந்தேன். இப்போது பார்க்கும்போது அதுவும் கூடச் சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதை முஸ்லிம்கள் முழுமையாகப் புறக்கணிப்பதை அவர்களுடனான உரையாடல்களின் ஊடாகக் காண முடிந்தது. இதற்கு அவர்களை மட்டும் குற்றஞ்சாட்டிப் பயனில்லை. இப்போது வடக்கு தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்துத்துவ தமிழ் தேசியம் தமிழ் என்கிற அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களுக்கும் தமிழ்ச் சைவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் சாத்தியங்களை மேலும் குறைத்துள்ளது. போருக்கு முன் தமிழ்த் தேசியத்தை விமர்சிக்கும்போது அதன் சைவப் பின்புலத்தைத்தான் என்னைப் போன்றவர்கள் முன்வைத்தோம். அதைவிட இன்று உருவாகிவரும் இந்திய பாணியிலான இந்துத்துத்துவ தமிழ்த் தேசியம் இன்னும் பிரச்சினையைச் சிக்கலாக்குகிறது. தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மேலும் சிதைவதற்கே இது இட்டுச் செல்லும்.  

19. தமிழ்நாடு பிரியவேண்டும் என்பதில் எந்த அளவு ஆதவும் எதிர்ப்பும் உள்ளது?

இதுபோன்ற விடயங்களில் உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த அளவுக்குச் சாத்தியம் என்கிற கேள்வியோடு தொடர்புடையதுதான்  இப்படியானவற்றிற்கான மக்களின் ஆதரவு என்பது. வாய்ப்பு உள்ளது என்கிற போது வெளிப்படுகிற ஆதரவுக்கான அளவைக் காட்டிலும் வாய்ப்பு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிறபோது ஆதரவு குறைவாகவே இருக்கும். பொதுவாகத் தமிழ்நாடு இன ரீதியாக அதன் தனித்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரம்பரியம் உள்ள ஒன்று. இன்று ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பதில் தீவிரமான ஒன்று. இந்த நோக்கில் அதன் நடவடிக்கைகள் பலவும் தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்துவதன் ஊடாக இந்தத் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடித்துவிடலாம் என இந்துத்துவ தேசியம் நினைத்து அதைத் தீவிரப் படுத்துகிறது. தமிழ்த் தேசியம் இந்தச் சூழலைச் சரியாக விளங்கிக் கொள்ளாத நிலை தொடர்ந்தால் இந்துத்துவ தேசியத்திற்கு அது பலியாவது உறுதி. இந்துத்துவ தேசியத்தை வலுவாக எதிர்க்க வேண்டுமானால் தமிழ்த் தேசியம் அதிலிருந்து தன்னை வெளிப்படையாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். இந்துத்துவமயமாக்கும் முயற்சியை அது கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படியான சாத்தியங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் தமிழ்த் தேசியம் இன்றில்லை.

20. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பார்வை என்னவாக உள்ளது?

தமிழக மீனவர்கள் மிக்க நெருக்கடியில் உள்ளனர்.  பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட சமூகம் அது. சுமார் 7,000 கிமீ நீளமுள்ள கடற்கரையை உடைய நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசில் மீன்வளத்துறைக்கு ஒரு அமைச்சகம் கூட இல்லை. தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கைக்கும் இந்திய அரசு செவி மடுப்பதில்லை. இந்நிலையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சில திட்டங்கள் மேலும் கவலை அளிக்கக் கூடியவையாக உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கடல் எல்லையில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் மீன் பிடிக்க உரிமை அளிக்கும் திட்டம், அதற்குரிய வகையில் மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கும் ‘சாகர்மாலா’ திட்டம் முதலியன அவற்றில் சில. இவை மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியவை.

தமிழக மீனவர்களைப் பொருத்த மட்டில் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இது மிகவும் சிக்கலான ஒன்று. இதை முழுமையாகத் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனச் சொல்ல முடியாது. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்கிறது என ஒரு ஒற்றை வாப்பாடாகவே இங்குள்ள தமிழ்த் தேசியம் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடல் எல்லையில் பாரம்பரிய உரிமை உண்டு என்பதையும், கடல் எல்லை என்பது நில எல்லை போல வேலி போட்டுத் தடுத்துவிட முடியாத ஒன்று என்பதும் உண்மை. பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் இந்திய மீனவர்கள் பெரிய எந்திரப் படகுகளில் வந்து மீன்பிடிப்பதால் எங்களால் அவர்களுடன் போட்டி போட இயலவில்லை. எங்கள் வலைகளை எல்லாம் அவர்களின் பெரும் படகுகள் அழித்துவிடுகின்றன எனப் புகார் கூறும் இலங்கை மீனவர்கள் யாரும் சிங்களர்கள் அல்ல, அவர்கள் பெரும்பாலும் தமிழ் மீனவர்கள் என்கிற உண்மை தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. விளக்கிச் சொல்லும்போது வியப்பார்கள். இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.

நிறையப் பிரச்சினைகள் அறைகுறைப் புரிதலுடந்தான் எதிர்கொள்ளப் படுகின்றன. தமிழக முஸ்லிம்கள் பலருக்கும் கூடப் போரின் ஊடாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்ட கதை எல்லாம் தெரியாது.

21. யுத்தத்திற்குப் பிறகு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இலங்கையின் யுத்த முடிவு என்பதை உலகளவில் அதே காலகட்டத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களுடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். உலக அளவில் ஆயுதப் போராட்டங்கள் இப்போது பின்னடைவை அடைந்துள்ளன. ஷைனிங் பாத், ஹமாஸ் எனப் பல இயக்கங்கள் இப்போது ஆயுதப் போரட்டத்தைக் கைவிட்டுள்ளன. இன்னொரு பக்கம் மார்க்சியம் பொது உடைமை, மதச்சார்பின்மை, இன ஒற்றுமை முதலான மேன்மை மிக்க பல கருத்தாக்கங்கள் இன்று பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. உலகெங்கிலும் ‘இஸ்லாமிய வெறுப்பு’ (islamophobia) என்பது இன்று லாபம் கொழிக்கும் ஒரு தொழிலாகவே ஆகியுள்ளது. பௌத்த பேரினவாதம், இந்துத்துவம் முதலான மத அடிப்படைவாதங்களின் எழுச்சிக் காலமாக இந்த நூற்றாண்டு தொடங்கி உள்ளது. இப்படியான இயக்கங்களுக்கு இன்று நிதி ஒரு பொருட்டாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் ராமகிருஷ்ணா மிஷன் எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளது. அன்று நான் அக்கறைப்பற்றுவிலிருந்து வந்து கொண்டிருந்தபோது சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஒரு இடத்தில் இந்தியச் சாமியார் ஒருவர் எதோ ஒரு மடத்திற்காக வாங்கி வேலி போட்டப்பட்டிருந்த இடத்தை நண்பர் ஒருவர் காட்டினார். புதிய வடிவில் பெரும்பான்மை மதவாதம் மேலெழுந்து வரும் கால கட்டம் இது. பாரம்பரியமாக நம் மக்கள் மத்தியில் மத, சாதி, இன வேறுபாடுகளைத் தாண்டி இருந்த ஒற்றுமைகள் எல்லாம் பாழாகி வரும் காலகட்டம் இது. இன ஒற்றுமையும், நல்லிணக்கமும் அழிந்து போவது என்பது இன்று ஒரு உலகளாவிய போக்காகவே உள்ளது. மார்க்சீயத்தின் வீழ்ச்சி என்பது என்னைப் பொருத்த மட்டில் இந்த வகையில் மிகப் பெரிய ஒரு இழப்பு. மார்க்சியத்தின் வீழ்ச்சி என்பது உண்மையில் அது மார்க்சியத்தின் அல்லது சோவியத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல. உலகளாவிய முற்போக்குச் சிந்தனைகள் அனைத்தின் வீழ்ச்சி அது.

எங்கள் நாட்டில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் எனும் வகுப்புவாத வன்முறை இயக்கம் முற்போக்குச் சிந்தனைகள் ஓங்கியிருந்த சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆனால் மிகத் தீவிரமாகத் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. இன்று சாதகமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதன் பின்னணியில் மிகவும் வெளிப்படையாக வெளிவந்து செயல்படுகிறது.

மொத்தத்தில் பிற்போக்குப் பிளவுவாத சக்திகள் வெளிப்படையாக இயங்கும் காலம் இது. இந்தப் புரிதலோடுதான் நாம் இயங்க வேண்டும்.

22. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவ சக்திகளும், இலங்கையில் அதிகரித்து வரும் பவுத்த சக்திகளும், இவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா?

இந்தியாவில் உருவான பவுத்த மதம் இந்தியாவில் அழிந்தது. புத்தர் மறைந்த சுமார் 700 ஆண்டுகளில் அந்த அழிவு துவங்கியது. புஷ்ய மித்திர சுங்கன் எனும் இந்து மன்னனின் காலத்தில் பவுத்த பிக்குகளின் தலைகளுக்கு விலை கூறி பவுத்தம் அழிக்கப்பட்ட வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளார். சுமார் 12, 13ம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவில் பவுத்தம் ஓரளவு செழித்திருந்தது. பின்னர் அதன் சுவடுகள் இல்லாமற் போயின. பவுத்தர்களின் ஆகப் புண்ணிய தலமாகிய புத்தகயா ஒரு இந்து வழிபடு தலமாக மாற்றப்பட்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அநகாரிக தர்மபாலா பிரிவு கவுன்சில் வரை சென்று வழக்காடி அதை மீட்டார். அதே தர்மபாலாதான் இன்றைய சிங்கள பவுத்த தேசிய எழுச்சியின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

அநகாரிக தர்மபாலா, கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி முதலானோர் இந்திய மதங்களில் ஆர்வம் கொண்டு அவற்றின் புத்தெழுச்சிக்குக் காரணமானவர்கள் என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அந்தப் பின்னணியில்தான் சிங்களப் பேரினவாதம், இந்துத்துவ பாங்கரவாதமும் தழைத்தன. பவுத்தத்தில் ‘இறை’ (God), ‘ஆன்மா’ முதலான கருத்தாக்கங்கள் கிடையாது. புத்தர் தன்னை ஒரு இறைத்தூதர் என்றும் கூட அறிவித்துக் கொண்டதில்லை. இறைவாக்கு என அவர் எதையும் சொன்னதும் இல்லை. சென்ற இடமெல்லாம் அறம் உரைத்துச் சென்ற “ததாகதர்” (வழிப்போக்கர்) அவர்.

ஆனாலும் அது ஒரு மதமாக ஆக்கப்பட்ட போது அதற்குக் கடவுள் தேவையிருந்தது, வழிபாடுகள் தேவையாயின. சடங்குகளும் தேவையாயின. எனவே அது ஆங்காங்கு மரபு வழியில் வணங்கப்பட்ட தெய்வங்களையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்டது. இன்றளவும் பவுத்த ஆலயங்களில் இந்துக் கடவுளர் வணங்கப்படுவது அப்படித்தான். பவுத்தம் ஒரு ஆசிய மதம். ஆசியாவில் காணப்படும் மதங்கள், வழிபாடுகள் ஆகியவற்றை அது ஆங்காங்கு இணைத்துக் கொண்டது. கீழைத் தேய மதங்கள் ஒரு வகையில் இப்படி inclusive ஆனவை; செமிடிக் மதங்கள் அப்படி அல்ல. அவை exclusive ஆனவை.

இந்தியாவில் இந்து மதத்தைப் பொருத்த மட்டில் இப்போது பவுத்தம் ஒரு எதிரியே அல்ல. பவுத்தத்தை அது முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. எனவேதான் இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசம், தன்னால் உள்வாங்க இயலாததாகவும், பரவும் சாத்தியமுள்ளதாகவும் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களையே தன் முக்கிய எதிரியாகக் கருதுகிறது. 

அந்த வகையில் போருக்குப் பிந்திய இன்றைய சூழலை உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்காக்கி இன்றைய இனவாத பவுத்தமும் இந்துத்துவமும் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. போருக்குபின் உருவான பொதுபல சேனா போன்ற அமைப்புகள் இன்று முஸ்லிம்களை முதன்மை இலக்காக்கிச் செயல்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாண்டுகளுக்கு முன் பொதுபல சேனா இங்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் மியான்மரில் இருந்து முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிக்கு விராத்து அழைக்கப்பட்டதை அறிவீர்கள் அம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அழைக்கப்பட்டுகந்தச் செய்தி வெளியானவுடன் அது ரத்து செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். இலங்கை பவுத்த இனவாதம் முஸ்லிம்களை இலக்காக்கும்போது இந்திய இந்துத்துவம் அதனுடன் கைகோர்க்கத் தயங்காது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 23. இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள இடதுசாரி இயக்கங்கள் பூரண அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

உண்மைதான். வாசுதேவ நாணயக்காரா போன்றவர்கள் ஏதும் பேசுவதில்லை. ஜே.வி.பி யும் ஒரு இனவாத இயக்கமாகவே மாறியது. உலக அளவில் இன்று இடதுசாரி இயக்கங்கள் பல்வீனமடைந்துள்ளன. இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மத்தியிலும் இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் ஒரு உள்ளார்ந்த வெறுப்பு உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுபான்மை மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கென இப்போது கட்சிக்குள் அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் முத்தலாக் பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டபோது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் பெற்ற தலைவர் சண்முகதாசன் (சண்) எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.

24. ஈழப் போராட்டம் தோல்விஅடைந்து விட்டதா உங்கள் பார்வையில்?

ஈழப் போராட்டம் அடிப்படையில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம். அதற்கான நியாயங்கள் அதனிடம் இருந்தன. இன்னும் இருக்கின்றன. எனினும் அதன் வழிமுறைகளில் பல தவறுகள் இருந்தன. தனி ஈழம் என்கிற கோரிக்கை பல்வேறு அம்சங்களில் தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது உண்மைதான்.

25. தமிழ்ச் சமூகம் எதிலிருந்து எழும்ப வேண்டி இருக்கிறது?

“தமிழ்ச் சமூகம்” என நீங்கள் பொதுவாக தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிச் சொன்னது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ச் சமூகத்ததிற்கென பொதுப் பிரச்சினைகள் உள்ளதையே அது காட்டுகிறது. தமிழ்ச் சமூகத்திற்கென ஒரு பொது எதிரி உள்ளதையும் அது ஏற்கிறது. அதுதான் பேரினவாதம். காணி ஆக்ரமிப்பு, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், மொழிஉரிமை, இராணுவ நீக்கம் முதலான அம்சங்களில் ஒன்றுபட்டு எழுதலுக்கு தமிழ்ச் சமூகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

“ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளது” – அ.மார்க்ஸ்

(பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். தடைம்ஸ்தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை,அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளைச் சொல்லுகிறார்ப் நேர்கண்டது: பீட்டர் துரைராஜ், டைம்ஸ் தமிழ்.காமில் ஏப்ரல் 2ஒஇ9ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன் வெளிவந்தது)

 

கேள்வி:பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக,திமுக சார்பில்  யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள்

 

பதில்: இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார் : ” பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை.அது எங்களுக்கு அவசியமும்  இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று  சொல்லுவதற்குத்  தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப்  பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ,மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம்  உள்ள  40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின்   மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த  காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு  ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம்  கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

 

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

 

பதில் : 1930 களில்  பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன். அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர்.  கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த  ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு  மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும்  கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது. 1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம்  இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக  சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம்  முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம்  “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில்  மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த  ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை.  முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன்  (Samuel P.Huntington)  போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக,  இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய  சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே  இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே.  .

 

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்தசம வாய்ப்பு ஆணையம்என்ற கோரிக்கை யை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

 

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. .நிரந்தரமான வேலை,ஓய்வூதியம் ,பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவன த்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும்.தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என  ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம். ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.  தங்கள் தேர்தல் அறிக்கை யில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை.ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சி யும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிக மயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும்  இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித். உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள  வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழைமக்களை அதிகாரப் படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும்  தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை  நாம் புரிந்து கொள்ளலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி  பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின்  நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

 

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில்  இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை.  மாட்டுக்கறியில் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynchng) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும்  எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

 

கேள்வி: வரவிருக்கிற  தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா

 

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை  தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்எஸ்எஸ் இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற  பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்  மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி  எனது  முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும். பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி  முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை  மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன..ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி  இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம்  கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம்  கட்டணத்தை  முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள்  எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான். விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக  வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. .பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி  ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு  கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.  ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

 

கேள்விமத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை.தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த  தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள்

 

பதில் :அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகளை  திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர். இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக  இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. .சிறுபான்மையினர் மட்டுமின்றி  தலித், ஆதிவாசிகள்  முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.   .

 

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை.தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

 

கேள்வி: சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள்  தங்கள் கட்சிகளின்  சின்னத்தில்  நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார்.திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே

 

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு  ஆதரவாக செயல்பட வைப்பது என்பது  கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத்  தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர்  வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

 

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே  ? 

 

பதில்: தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார்.  2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்  மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர். SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

 

கேள்வி:வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில்  ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடாகவில் நிற்கலாமே?  வயநாட்டில்  போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

 கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின்  விடுதலைக்கு அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் :மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல்  மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும்  ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் மட்டுமின்றி  இஸ்லாமியச் சிறைவாசிகள்,, வீரப்பன் வழக்கில்  சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.. சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA)  திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

 

கேள்வி : இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான   அமைப்புகளில் இயங்கி வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்

 

பதில் : அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும்.  1905  தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது.காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை.அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று  இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான்  பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று  கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

 

கேள்வி ; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்

 

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

 

“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?” – மாதவம் நேர்காணல்

{சனவரி 2018 ‘மாதவம்’  நண்பர் அய்யப்பன் அவர்கள் செய்த மிக விரிவான நேர்காணல். இந்து மதம், முஸ்லிம்களுக்குள் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக ஒரு சிலரால் வைக்கப்படும் குற்றச்சாட்டு, தமிழகத்தில் வஹாபியிசம் பற்றி குற்றம் சாட்டும் முஸ்லிம் அறிவுஜீவிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஏன் பெரியாரைக் காய்கிறார்கள், மாற்றுக் கலாசாரம் பற்றிய உரையாடல் தேவைதானா இன்னபிற கேள்விகளுக்கு அ.மார்க்ஸ் பதில்கள்}

1.தங்களது இளமைப்பருவம்? மற்றும் தங்களைப் பற்றி?

 பெரிதாக ஒன்றுமில்லை குறிப்பாக ஏதாவது சொல்வதென்றால் நான் நான்காவது வகுப்பு வரை பள்ளி சென்று படித்ததில்லை. எனக்கென்று ஒரு சொந்த ஊர், உற்றார் உறவினர்கள் என நான் சிறு வயதில் வாழ்ந்ததில்லை. நான் பிறந்த போது (1949) தஞ்சை மாவட்டத்தில் ஒரு மிகவும் பின் தங்கிய கிராமத்தில்தான் என் பெற்றோர் வசித்தனர். அது என் சொந்த ஊரோ இல்லை என் சொந்த சாதி சனங்கள் வாழ்ந்த ஊரோ  அல்ல. நாடுகடத்தப்பட்டு வந்திருந்த அப்பாவுக்கு வேலையும் இல்லை. அம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த விவரம் அறியாத சின்னப் பெண். எனக்கு ஐந்து வயதாகும்போது அந்த ஊரை விட்டு அங்கிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ள இன்னொரு கிராமத்திற்கு இடம் பெயர்ந்தோம். அங்கும் நாங்கள் ஒரு தனிக் குடும்பம்தான். அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் என் ஒன்பதாம் வயதில்தான் நான் முதன் முதலாக ஒரு அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேக்கப்பட்டேன். நம் சாதி, நம் மதம், நம் உறவுகள், நம் ஊர் என்கிற பிரக்ஞை இல்லாமலும், விளையாட்டுப் பருவத்தில் புத்தகச் சுமைகளைத் தூக்கித் திரியாமலும் என் பால்யப் பருவம் கழிந்தது.

 

தொடர்ந்து அரசு கல்லூரிகளிலேயே படித்து நான் ஒரு வேலைக்குச் சென்ற சில மாதங்களில் பெற்றோரை இழந்தேன். எனக்குக் கீழே உள்ள என் ஒரு தம்பி, மூன்று தங்கைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழலுக்கும் ஆளானேன். இத்தனைக்கும் மத்தியில் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளரான என் தந்தையால் ஊட்டப்பட்ட சமூக உணர்வு, அறிமுகம் செய்யப்பட்ட நூல்கள் ஆகியன என் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. இன்று வரை சாதி, மத உணர்வுகள் இல்லாமல் வாழ நேர்ந்ததற்கு எனது அந்த இளமைக் கால அனுபவங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே நம்புகிறேன்.

 

  1. தங்களைப் பாதித்த ஆசிரியர் பற்றி?

 

நான் சின்ன வயதில் பள்ளியே சென்றதில்லை என்றேன். வீட்டுப் பாடம், தேர்வு, மணி அடிப்பதற்கு முன் பள்ளி செல்லும் அவசரம், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நிர்ப்பந்தம், ஆசிரியரின் கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்தேன். என் ஒன்பது வயது வரை எனக்கு என் அம்மாதான் ஆசிரியை. ஐந்தாம் வகுப்பில் முதன் முதலில் பள்ளியில் சேர்ந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்த யோகநாத ராவ், உயர்நிலைப் பள்ளியில் என் ‘எஞ்சினீரிங்’ ஆசிரியராக இருந்த சம்பந்தம் சார் இவர்களை எனக்குப் பிடிக்கும். மற்றபடி வாழ்க்கையில் நான் சந்திக்கும் எல்லோரிடமும் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொண்டே உள்ளேன். சின்ன வயதில் நான் விரும்பிப் படித்த ஜெயகாந்தன் எழுத்துக்களின் ஊடாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்துள்ள நற் குணங்களை மட்டுமே கண்டு வியப்பது குறித்துக் கற்றுக் கொண்டேன்; கார்ல் மார்க்சைப் படித்தகாலத்தில் வரலாற்றையும் சமூகத்தையும் புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டேன். இப்போது புத்தனைப் பயின்று கொண்டுள்ளேன். அறம் சார்ந்த வாழ்வு குறித்துப் பேராசான் புத்தனிடம் கற்றுக் கொண்டுள்ளேன். ரொம்பவும் ‘பீலா’ விடுவதாக நினைக்க வேண்டாம். இப்படி எல்லாவற்றையும் கற்று முடித்து அதன்படி வாழ்வதாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது இத்துதான். எதிர்வரும் எல்லோரிடமிருந்தும் எதையேனும் கற்றுக் கொள்ள இயலும் என்கிற மனப்பாங்கை ஓரளவு வரித்துக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.

 

  1. மதம் மாறிய தலித் முஸ்லீம்கள் பற்றி எதிர் கொள்ளும் சாதிய மேலாதிக்கம் குறித்த தங்கள்கருத்து என்ன?

 

நீங்கள் நாகர்கோவில்காரர். இங்கே சிலர் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்குகின்றனர். அதன் விளைவே இந்தக் கேள்வி. இங்குள்ள முஸ்லிம் நண்பர்கள் சிலர் இந்தப் பிரச்சினைக்கு அதற்கு எந்த அளவு முகியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே என் கருத்து. அப்படி இவர்கள் எழுதுவதன் மூலம் இப்படியான பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வு ஏற்படுவதைக் காட்டிலும் மிக நுணுக்கமாக இங்கு சிலரால் பரப்பப்படும் முஸ்லிம் வெறுப்பிற்கு வலு சேர்ப்பதுதான் நடந்துகொண்டுள்ளது. இதன் மூலம் சில லௌகீகப் பலன்களையும் இப்படி மிகைப்படுத்திப் பேசுகின்றவர்கள் அடைகின்றனர். இன்று வேகமாகப் பரவி வரும் முஸ்லிம் வெறுப்பு அரசியலால் அடித்தள முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்தப் பின்னணியில் இன்று பல முஸ்லிம் கட்சிகள் முளைத்து வருகின்றன. நாட்டுப் பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களின் நலன்களைப் பேணுவதற்கென எந்தக் கட்சியும் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் உட்பட பிராந்தியக் கட்சிகளாகவே அமைந்தன. இந்திய அளவில் முஸ்லிம்கள் திரள்வதற்குரிய ஒரு நிலை இன்றளவும் இல்லாமல்தான் உள்ளது. அந்த நிலையில் ஏதோ ஓரளவு முஸ்லிம் நலன்களைப் பாதுகாக்க இன்று ஆங்காங்கு உருவாகும் இத்தகைய முஸ்லிம் கட்சிகளை எல்லாம் ‘வஹாபியிசம்’ பேசும் முஸ்லிம் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் ஒரு சிலர்தான் இந்த முஸ்லிம் தீண்டாமை குறித்தும் பேசுகிறவர்களாக உள்ளார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்க்கவே கூடாது என நான் சொல்லவில்லை. முஸ்லிம்கள் அமைப்பாகத் திரள்வதையே ‘திவிரவாதம்’ எனச் சொல்பவர்கள் இவர்கள். பீர்முகமது என்று ஒருவர் உங்கள் ஊரில் இருக்கிறார். இவரை ஆ.இரா.வெங்கடாசலபதி என்றொரு பேராசிரியர் பேட்டி எடுக்கிறார். அதை ஆங்கில இந்து நாளிதழ் நடுப்பக்கத்தில் வெளியிடுகிறது.  அவர் இப்படியான சாதாரண நபர்களை எல்லாம் பேட்டி கண்டு எழுதுகிறவரும் அல்ல. அந்த மாதிரி பேட்டிகளைப் போடுகிற பத்திரிகையும் அதுவல்ல. ஆனால் முஸ்லிம்களை, முஸ்லிம்களை வைத்தே திட்டுவதற்கு ஏதேனும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் பத்திரிகைகள் முந்திக்கொண்டு வரும். இப்படியாக முஸ்லிம்களைத் திட்டுகிற முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து ஆவணப் படம் எடுப்பார்கள். தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பதைத்தான் சொல்கிறேன்.

 

சரி சற்று முன் குறிப்பிட்ட அந்த நேர்காணலுக்குத் திரும்புவோம். பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் உள்ள த.மு.மு.க வை ஒரு வஹாபியிசத் தீவிரவாதக் கட்சி என பீர்முகமது குற்ரஞ்சாட்டுகிறார். மற்ற நம்பிக்கைகளைச் சகியாத கட்டுப்பெட்டிகளை உருவாக்கும் கட்சி என்கிற பொருளில். ஆனால் அந்தக் கட்சி அப்போது நடந்த தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் “மகாமகத் திருவிழாவைத் தேசியத் திருவிழாவாக நடத்துவோம்” எனவும் “நவக்கிரஹக் கோவில்களுக்கு பயண வசதிகளும், யாத்ரீகர்களுக்குத் தங்கும் வசதிகளும் செய்து தருவோம்” எனவும் வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்களைப் போய் ‘வஹாபியிஸ்ட்’ என்றால் என்னத்தைச் சொல்றது. இப்படி நிறையச் சொல்ல முடியும். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

 

இப்போது நீங்கள் கேட்ட முஸ்லிம் தீண்டாமை குறித்துப் பார்க்கலாம். முஸ்லிம் மதத்தில் கோட்பாட்டளவில் தீண்டாமை என்பதற்கு இடமில்லை. முஸ்லிம்கள் தங்களின் இலட்சிய மாதிரியாகக் கொண்டுள்ள நபிகள் நாயகத்திடமும் அந்தப் பண்புகள் இம்மியும் இல்லை. அடிமைகள், கருப்பர்கள் எல்லோருக்கும் நபிகள் சமத்துவம் அளித்தார். இந்திய முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் வட மாநிலங்களுக்கும் தென்னகத்திற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. வடமாநிலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரஃப், அஸ்லஃப், அர்சல் என மூன்று பிரிவுகள் உண்டு. அங்கு தீண்டாமையால் பாதிக்கப்படும் கீழ் நிலையில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் எனவும் கேட்கின்றனர். சச்சார் குழு அறிக்கை அந்தப் பரிந்துரை செய்துள்ளது. நான் இது குறித்து எழுதியும் உள்ளேன். தமிழகத்தில் இந்த அள்விற்கெல்லாம் தீண்டாமை இல்லை. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகம். பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் தொகுதியினர் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவரவர்கள் தம் திருமண உறவுகளை அந்த உறவுகளுக்குள்ளேயே வைத்துள்ளனர். மேலப் பாளையம் முஸ்லிம்கள் பற்றி ஒரு இன வரைவியலை சாந்தி எழுதியுள்ளார். அவர்கள் அனைவரும் மேலப்பாளையத்திற்குள்தான் தம் திருமண உறவை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் நாகூர் சென்றிருந்தேன். அங்குள்ள முஸ்லிம்கள் நாகப்பட்டிணத்தைத் தாண்டி திருமண உறவை வைத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர் பக்கம் அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் உள்ள முஸ்லிம்களும் அப்படித்தான். எனக்கே அது தொடர்பாக ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சாந்தியின் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். முஸ்லிம் வெறுப்பு சமூகத்தில் அதிகமாக அதிகமாக இப்படி தங்களுக்குள் ஒடுங்கும் நிலை இன்னும் அவர்கள் மத்தியில் கூடுதலாகிறது. இதைச் சமூகவியலாளர்கள் ஒரு வகைப் ‘பதுங்கு குழி மனப்பான்மை’ என்கின்றனர்.

 

சரி தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தீண்டாமை இல்லவே இலையா? அப்படி நான் சொல்லவில்லை. கவிஞர் இன்குலாப் கூடத் தான் முஸ்லிம்களில் ‘நாவிதர்’ தொழில் செய்யும் சற்றே கீழ்நிலையில் உள்ள முஸ்லிம் எனச் சொல்லியுள்ளார். ஆனால் அவர் இந்தக் கருத்தை முஸ்லிம் வெறுப்பை விதைப்பவர்களிடம் விற்றுப் பேர் சம்பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இப்படியான ஒதுக்கலை ஏதோ இந்துக்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உள்ள அளவிற்கு இருப்பதாக ‘பில்ட் அப்’ கொடுத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா அதுதான் கொடுமை.

 

சரி. இப்படி இருப்பதை பேசவே கூடாது என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் பேச வேண்டும். ஆனால் இவர்கள் பேசுவதுபோல அல்ல. இன்று நிலவுகிற மிகக் கொடுமையான அரசியல் பின்னணியில் மிகவும் எச்சரிக்கயுடன் இதைக் கையாள வேண்டும். இப்படியான ஏற்றத் தாழ்வுகளை உள்ளுக்குள் இருந்து போராட வேண்டும். அதற்கான சாத்தியங்கள் இன்று ஏராளமாக உள்ளன. முஸ்லிம் பத்திரிகைகளும் இயக்கங்களும் இதில் கரிசனம் கொள்ள வேண்டும். அவர்கள் இதற்குரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதன் விளைவு பீர்முகமது போன்றவர்கள் போகிற போக்கில் எல்லாவற்ரையும் மிகைப் படுத்திப் பேட்டி கொடுத்து, புத்தகம் எழுதி முஸ்லிம் வெறுப்பைப் பரப்புகிறவர்களுக்குச் சேவை செய்து பெயர் வாங்குவது என்பதோடு நின்று விடுகிறது.

 

  1. தமிழ் தேசிய வாதிகள் பெரியாரை விமர்சிக்கும் நோக்கம் என்ன? உள்நோக்கம் ஏதாவது உண்டுமா?

 

பெரியார் பார்ப்பனீயம், பெண்ணடிமைத்தனம், சாதீயம் ஆகியவற்றை எதிர்த்தார். தேசபக்தி, மொழிவெறி, மதவெறி, சாதிவெறி ஆகிய நான்கும் சுயமரியாதைக்குக் கேடு என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அவரது அரசியலின் அடிப்படை சுயமரியாதை என்பதுதான். தேசம், மொழி, மதம், சாதி இந்த எந்த அடிப்படையிலும் ஒதுக்கல்கள், எற்றத்தாழ்வுகள் கூடாது என்பதுதான் அவர் சொன்னது. இந்த நான்கு பற்றுக்களும் சுயமரியாதைக்குக் கேடு என்று சொன்ன பெரியாரை இந்த நான்கின் அடிப்படையிலேயே அரசியலைச் செய்யும் தமிழ்த் தேசியர்கள் வெறுப்பதில் என்ன வியப்பு. தமிழ்நாட்டில் பலநூற்றாண்டுகளாக வசிக்கும் நம் மக்களைப் பார்த்து நீ தெலுங்குச் சாதி, கன்னடச் சாதி நீ இங்கு வாழக் கூடாது, நீ அருந்ததியன், நீ மலம் அள்ளவேண்டும், ஆனால் உனக்கு இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்பவர்கள்தானே தமிழ்த் தேசியர்கள். பார்ப்பனீயத்தை எதிர்த்தவர் பெரியார். பார்ப்பனீய எதிர்ப்பைப் பேசுவதே பாவம் என நினைப்பவர்கள் தமிழ்த் தேசியர்கள். எங்காவது தலித் மக்கள் தாக்கப்படும்போது அங்கே தமிழ்த் தேசியர்கள் தென்படுகின்றனரா என யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு இங்குள்ள சாதி, தீண்டாமை ஒழிப்பு என்பதில் எல்லாம் அக்கறை கிறையாது. அதை எல்லாம் பேசினால் அப்புறம் சாதித் “தமிழர்கள்” வரமாடார்களே.

 

  1. கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக அமையவேண்டும்

 

கருத்துரிமை என்பது மிக அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று. கருத்துரிமை என்கிற போது ஒரு கருத்தை வைத்திருப்பது என்பது மட்டுமல்ல அதைப் பிரச்சாரம் செய்யும் உரிமையும் அதில் அடக்கம். அந்தக் கருத்துப் பரவலில் வன்முறை கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. நமது அரசியல் சட்டத்தில் இது ஒரு அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை இரண்டு வகைகளில் இப்போது ஒடுக்கப்படுகிறது. முதலில் தேசத் துரோகச் சட்டம் முதலான பிரிட்டிஷ் அரசு காலச் சட்டங்களின் மூலம் அரசு கருத்துரிமையை முடக்குவதோடு தண்டிக்கவும் செய்கிறது. இன்னொரு பக்கம் கௌரி லங்கெஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் முதலானோர் கருத்துரிமைக்கு எதிரான மதவாத வன்முறைக் கும்பல்களால் கொல்லப்படுகின்றனர். இவை தவிர பத்திரிகைகளுக்கு அரசு மூலமாகவும், ஆளும் கட்சியினர் வழியாகவும் அளிக்கப்படும் அழுத்தங்களின் ஊடாகவும் மாற்றுக் கருத்துக்கள் ஊடகங்களில் இடம் பெறாமல் தடுக்கப்படுகின்றன. பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகின்றன. அரங்குகளை அரசெதிர்ப்புக் கூட்டங்களுக்கு கொடுக்கக் கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். ஜனநாயகத்தில் கருத்துரிமை என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. அது மறுக்கப்படுவதை நாம் ஏற்க முடியாது. கருத்துரிமை மறுப்பால் பாதிக்கப்படுகிற எல்லோரும் இணைந்து நின்று, தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து போராட வேண்டும். நவீன ஊடகங்களையும் நாம் ஒரு மாற்றாகப் பயன்படுத்துவது என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

  1. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் இன்றைய சூழலில் எப்படிப்பட்டதாக அமையவேண்டும்என்று கருதுகிறீர்கள்?

 

ஈழத் தமிழர்கள் ஒரு மிகப் பெரிய அழிவைச் சந்தித்துச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளனர். யுத்தத்துக்கு முந்திய நிலையில் இருந்த அதே நிலையிலேயே, சொல்லப்போனால் அதையும் விட மோசமான நிலையில் இன்று அவர்கள் உள்ளனர். யுத்தகால மனித உரிமை மீறல்களுக்கான நீதி விசாரணை, காணாமலடிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த எந்தக் கூடுதல் தகவலும் இன்மை, நிறுத்திவைக்கப்பட்ட இராணுவம் திரும்பப் பெறப்படாத நிலை, அதிகாரப் பகிர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு என எதிலும் முன்னேற்றமற்ற சூழல் தொடர்கிறது. இன்று உடனடியாக மீண்டும் ஒரு விடுதலைப் போர் என்பது அங்கு சாத்தியமில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு உடனடி வாய்ப்பில்லை. மாற்று வழிகளைத்தான் யோசிக்க வேண்டும். இந்திய அரசை நம்புவதில் எந்தப் பயனுமில்லை என்பதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். காங்கிரஸ் அரசோ. பா.ஜ.க அரசோ யாரானாலும் தனி ஈழத்தை ஆதரிக்கப் போவதில்லை, தமிழர்கள், முஸ்லிம்கள் இரு தரப்பும் இணைந்து நின்று ஆயுதப் போராட்டம் அல்லாத வழிமுறைகளில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடுவது ஒன்றுதான் இப்போதைக்கு ஒரே வழியாகத் தெரிகிறது.

 

  1. நமது கலாச்சார சாயல்கள் சிதறடிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற காலச்சூழலில் எது மாற்று கலாச்சாரம் என்ற நிர்ணயிக்க விரும்புகிறீர்கள்?

 

பண்பாடு என்பது தொடர்ச்சியாக மாறி வரும் ஒன்று. பண்பாட்டுக் கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வரலாறு என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே பண்பாட்டுக் கலப்புகளும் நடந்து கொண்டுதான் உள்ளன. காலந்தோறும் நம் சூழல்கள் மாறுகின்றன; அதை ஒட்டி நம் கருத்துக்கள், பார்வைகள் மாறுகின்றன. தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. பல்வேறு புதிய தொடர்புகள் உருவாகின்றன. இரண்டு நாள் முன்னர் ஜவஹர்லால் நேருவின் உரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. கட்டிடக் கலைஞர்கள் (architects) மாநாடு ஒன்றில் அவர் ஆற்றிய நிறைவுரை அது. காலந்தோறும் கலை வடிவங்கள் மாறி வருவது தவிர்க்க இயலாது என்பதை வற்புறுத்தும் நேரு, “தாஜ்மகால் மிக அழகான ஒரு கட்டிடக் கலைச் சாதனைதான். ஆனால் இப்போது நாம் இப்படி ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டிய ஒரு சூழல் நமக்கு ஏற்பட்டால் அந்தச் சின்னம் உறுதியாக தாஜ்மகாலைப் போல இருக்காது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்” என்கிறார். காலம் மாறுகிறது, நம் பார்வை மாறுகிறது, தொழில்நுட்பம் மாறுகிறது. அப்புறம் கலை, பண்பாடு எல்லாம் மாறத்தானே செய்யும். இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. வெளி மட்டுமல்ல காலமும் சுருங்கி விட்டது. சீகன்பால்கு இங்கு வந்தபோது டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடிக்கான பயணக் காலம் ஆறு மாதங்கள். இன்று ஆறு மணி நேரத்தில் அங்கு போய்விடலாம். விருபுகிறோமோ விரும்பவில்லையோ உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. எனவே மிக வேகமாக எல்லாமே மாறிக் கொண்டுள்ளன. எனவே பண்பாட்டுச் சாயல்கள் மாறுவதும் தவிர்க்க இயலாத ஒன்று. அது குறித்துக் கவலை கொள்ளுதல் அபத்தம். ஒரு முப்பதாண்டுகளுக்கு முன் “நிறப்பிரிகை” யின் ஊடாக மாற்றுக் கலாச்சாரம் பற்றி அதிகம் பேசினோம். மாற்றுகளைத் தேடி என்று ஒரு தொகுப்பைக்கூட வெளியிட்டோம். கல்வியில் மாற்று, அரங்க இயலில் மாற்று, பாவ்லோ ஃப்ரெய்ரே, அகஸ்தோ போவால், சிந்தனைகளில் புரட்சி, தெரிதா, ஃபூக்கோ என்றெல்லாம் நிறையப் பேசினோம். எதிர் கலாச்சரம் என்றோம். பின் நவீனத்துவம் என்றோம். மாற்று அரசியல், அடித்தள மக்களின் விளிம்பு நிலைக் கதையாடல்கள் என்றெல்லாம் பேசினோம். இந்த முப்பதாண்டுகளில் அவை ஓரளவு நம் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உள்வாங்கப்பட்டு விட்டன. சில துறைகளில் நாம் விரும்பிய பார்வை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  இந்த மாற்றங்களை மறு மதிப்பீடு செய்யும் காலம் இன்று வந்துவிட்டது. கல்வி முதலானவற்றில் இன்று உலகளாவிய மாற்றங்கள் வந்துவிட்டன. தொலைத் தொடர்பில் ஏற்பட்டுள்ள பெரும் புரட்சி நாம் கற்பனையிலும் நினைத்திராத ஒன்று. பழைய உலகை நினைத்து ஏங்குவதோ, இல்லை நாம் நினைத்த மாதிரி இந்தப் புதிய உலகு அமையவில்லை எனக் கலங்குவதோ பயனில்லாத ஒன்று. இந்த உலகை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்வதற்கான அறம் சார்ந்த அணுகல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

 

  1. அரசுப்பணியிலும், அரசியல் பங்களிப்பிலும் எந்ததெந்தச் சூழலில்   

   வெளியேற்றப்பட்டிருக்கின்றீர்கள்-?

 

ஒன்றிலிருந்து வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது என்பது இன்னொன்றுக்குள் நுழைவதும் கூட. வெளியேற்றம் நிகழும்போது அது வலி மிக்க ஒன்றாகக்கூட அமைந்திருக்கலாம். நீண்ட பயணத்தின் ஊடே திரும்பிப் பார்க்கும்போது அந்த வெளியேற்றங்கள் இப்போது வெளியேறியபோது இருந்த உணர்வுகளை எழுப்புவதில்லை. மாறாக ஒரு புன்னகையையும். சில நேரங்களில் நிறைவையும், மகிழ்வையும்கூட ஏற்படுத்துவதாகவே அவை அமைந்துவிடுகின்றன. காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் வல்லமை மிக்கது. தம்பி தங்கைகளின் பொறுப்பை என் தலையில் சுமத்திவிட்டு ஆறுமாத இடைவெளியில் என் பெற்றோர் மறைந்தனர். கூடப் பிறந்தவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு அவர்களிடமிருந்து வெளியேறினேன். ஆமாம் “வெளியேறினேன்” என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். நான் தேர்வு செய்த ஒரு அரசியல் வாழ்வில் அதற்குப் பின் அவர்களுக்கு இடமிருக்கவில்லை. நான் பணிபுரிந்த அரசு கல்லூரிகளிலிருந்து கிட்டத் தட்ட நான்குமுறை என் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்பட்டேன். ஆசிரியர் இயக்கங்களில் தீவிரமாக இருந்தேன் என்ற குற்றச்சாட்டில் ஒரு முறை; தலித் மாணவர்களைப் போராட்டத்திற்குத் தூண்டினேன் என ஒரு முறை.  நான் இணைந்து பணியாற்றிய ஒரு இடதுசாரிக் கட்சி என்னை வெளியேற்றியது. இன்னொரு நக்சல்பாரிக் கட்சியிலிருந்து நானாகவே வெளியேறினேன். எல்லோருடனும் நான் இப்போது நல்லுறவையே பேணுகிறேன். அவர்களும் என்னைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றே நம்புகிறேன். நுழைவது, வெளியேறுவது இரண்டுமே நாம் வளர்ந்து கொண்டிருப்பது அல்லது மாறிக் கொண்டிருப்பதன் அடையாளங்கள்தானே.

 

  1. தங்களது மறக்கவே முடியாத நண்பர்கள் என்று யாரையும் வகைப்படுத்த விரும்புகிறீர்களா?

 

அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. பழகும் எல்லோரிடமும் மிகத் தீவிரமாகப் பழகுவது, பிரிந்து வேறு சூழலுக்குப் போகும்போது முற்றிலும் புதிய அறிமுகங்கள், நட்புக்கள்.. இப்படியே வாழ்க்கை ஓடி விட்டது. முற்றிலும் வேற்பட்ட வாழ்க்கைகள், அரசியலிலும் கூட வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமான அரசியல்கள், அவற்றுக்குத் தக வெவ்வேறு நட்புகள், பின்பு அவை தொடர்பற்றுப் போவது என்பதாகவே என் வாழ்வு அமைந்து விட்டது. பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும்போது மிக்க ஆவலோடு பேசத் தொடங்கினால் ஒரு இரண்டு மணி நேரத்தில் பேச வேண்டிய செய்திகள் முடிந்து விடுகின்றன. அதன் பின் மௌனம்தான். முற்றிலும் என் வாழ்க்கை பழையதிலிருந்து தொடர்பற்றுப் போன புதிய ஒன்றாகவே ஆகிவிட்டதன் விளைவுதான் இது. மற்றபடி எனது எந்தக் காலகட்ட வாழ்விலும் நான் சந்தித்துப் பழகியவர்களோடு அந்தக் கணத்தில் மிக்க அர்ப்பணிப்புடனும் காதலுடனும்தான் வாழ்ந்துள்ளேன்.

 

  1. அம்பேத்காரின் போர்குரல் எழுதிய தாங்கள்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” எழுதுமளவிற்குகாந்தியிடம் வந்துசேர்ந்தது எப்படி?

 

அம்பேத்கரையோ, மார்க்சையோ விட்டுவிட்டு நான் காந்தியை வந்தடையவில்லை. அவர்களை ஏந்திக் கொண்டும் சுமந்து கொண்டும்தான் நான் காந்தியை வந்தடைந்துள்ளேன். எல்லோரையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளும் வல்லமையுடையவர் காந்தி. காந்தி பற்றித்தான் எத்தனை மூட நம்பிக்கைகளும் பொய்யுரைகளும், அபத்தங்களும் இங்கே பதிக்கப்பட்டுள்:ளன. குறிப்பாகத் தமிழகம்தான் இந்த அபத்தங்கள் உச்ச நிலையைத் தொட்ட ஒரு மாநிலம். ஒரு பன்மைச் சமூகம் இது. இந்தியா அளவிற்குப் பல்வேறுபட்ட மொழிகள், இனங்கள், நம்பிக்கைகள், மதங்கள், சாதிகள், பிளவுகள் உள்ள நாடு எங்குள்ளது? இப்படியான மக்கட் சமூகங்கள் ஒன்றை ஒன்று நேசித்துக் கலந்து வாழ வழி கண்டவர் காந்தி. அதற்கான அரசியலை கண்டடைந்தவர் அவர். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கு இந்துக்களையும். முஸ்லிம்களையும் ஒன்றே போல நேசித்த வேறொரு மனிதனை நான் என் வாழ்வில் தரிசித்ததில்லை. காந்தி வரலாற்றை வெறுத்தவர்; லட்சியத்தை உன்னதமாக்கியவர். ராமன் அயோத்தியில் பிறந்தானா என்றொரு விவாதம் எழுந்த போது அவர் நாவிலிருந்து வெடித்துச் சிதறிய அந்தச் சொற்கள்.. ஓ! அவற்றை எப்படி மறக்க இயலும்? “நான் சொல்லும் இராமன் ஒரு வரலாற்று மனிதன் அல்ல. அவன் ஒரு இலட்சிய ஜீவன்”. அவரது இராமன் எல்லா நற்குணங்களும் மிக்க ஒரு இலட்சியத் திரு உரு. இந்த ஊரில் இந்தப் பட்டா நம்பரில்தான் இராமன் பிறந்தான் எனச் சொல்லி ஒரு வெறுப்பு அரசியலை விதைப்பவர்களால் அவரை எப்படிச் சகிக்க முடியும். மூன்று குண்டுகள் அவர் நெஞ்சில் பாய்ந்தது எத்தனை தர்க்கபூர்வமானது. அவருக்கு அளிக்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதை அல்லவோ அது. சுதந்திர இந்தியாவின் முதல் நடவடிகையாகப் பசு வதைத் தடைச் சட்டம் இயற்ற வேண்டும் என வல்லபாய் படேல் வந்து நின்ற போது “நான் சின்ன வயது முதல் கோமாதா பூஜை செய்து வருபவன். ஆனால் என் மதம் எப்படி இன்னொருவர் மதமாக ஆகமுடியும்?” என்று கேட்டவரல்லவா அவர். காந்தி வைதீக மரபில் வந்தவர் அல்லர். புத்தன், அசோகன் என ஓர் சிரமண மரபில் உதித்த பேரொளி அது. ஒரு உண்மையான தியாக வாழ்வை வாழ்ந்த யாரும் இறுதியில் நிறைவடையும் இடம் காந்தியாகத்தான் இருக்க இயலும். “ஒரு காலத்தில் காந்தி சிலைகளை உடைத்துத் திரிந்த நான் இன்று காந்தியைப் புரிந்து கொண்டு ஏற்கிறேன்” என்கிறாரே தோழர் தியாகு. புத்தனுக்குப் போதி மர நிழலில் கிடைத்த ஞானம்போல் தியாகுவுக்கு தூக்குமரத்தின் நிழலில் அன்றோ காந்தி தரிசனம் கிடைத்துள்ளது..

 

  1. கள் குடித்தல் மக்கள் பேறு என்று தாங்கள் எழுதியதாக நினைவு? பள்ளி மாணவிகள் மதுஅருந்தக்கூடியதாக காண்பிக்கப்படும் பிம்பப்படுத்தப்படுகின்ற இந்தச் சூழலில் தங்களது கருத்து இப்போதும் அப்படியே உள்ளதா?

 

அதெல்லாம் ஒரு விவாதப் போக்கில் சொன்னது. மதுவிலக்கு என்பது ஒரு மூடத்தனம் என்பது என் கருத்து. என்னடா காந்தி பற்றி இப்படிப் பேசிவிட்டு இங்கே தலைகீழ் பல்டி அடிக்கிறேனே என உங்களுக்குத் தோன்றலாம். காந்தி பொதுவாகத் தன் இலட்சியங்களை எல்லாம் மக்கள் மீது சட்டங்களாகத் திணித்ததில்லை. காந்தியப் பொருளாதாரத்தை அவர் அரசு கொள்கையாக ஆக்கவில்லையே. காங்கிரஸ் ஆட்சிகளில் இரண்டு முறையும் காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி குமரப்பா திட்ட ஆணையத்திலிருந்து பதவி விலகத்தானே நேர்ந்தது. இராட்டை சுழற்றுவதை அவர் ஓர் அரசியல் செயல்பாடாக மட்டுமல்ல உன்னதமான ஒரு ஆன்மீகச் செயல்பாடாகவும் அதை அவர் முன்வைத்தார். எனினும் அவருடைய ஆதாரக் கல்வி கட்டாயமாக்கப்படவில்லையே. இவை எல்லாம் அரசின் கொள்கைகளாகவும் தண்டனைக்குரிய சட்டங்களாகவும் அன்றி சுய கட்டுப்பாடுகளின் ஊடாக ஏற்பட வேண்டும் என அவர் நினைத்தார். அதுபோலத்தான் மது விலக்கு குறித்தும் நான் கருதுகிறேன். மது விலக்கு தோற்கும், அது அபத்தம் என நான் சொல்வது அரசே இப்படி வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்பதல்ல.

 

  1. இந்துத்துவத்தின் முகங்கள் பலவடிவநிலைகளில் வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறச் இச்சூழலில் அதன் எதிர் நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று   நினைக்கிறீர்கள்?

 

இந்துத்துவ சக்திகள் தம் பிளவு அரசியலைச் மிகத் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகின்றனர். உலக அளவிலான அரசியற் சூழலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, கம்யூனிசம் தோற்றுவிட்டது எனும் கருத்தக்கம் ஆகியன ஒரு வலதுசாரி அரசியலை நோக்கிய சாய்வை இன்று உலகமெங்கும் ஏற்படுத்தியுள்ளன. கார்பொரேட் பொருளாதாரக் கொள்கைகளுடன் எளிதில் பொருத்திக் கொண்டு அடித்தள மக்களைக் கருவியாகக் கொண்டு ஒரு உயர்சாதி அரசியலைச் செய்கிறது இந்துத்துவம். தமிழ்நாட்டில் நாகர்கோவில். துத்துக்குடி, கோவை மாவட்டங்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை ஆகிய சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதிகளை மையப்படுத்தி  அவர்கள் வேலை செய்கின்றனர். இதற்கிணையான எதிர்ச் செயல்பாடுகள் மதச்சார்பற்ற சக்திகளிடம் இல்லை. மதச்சார்பற்ற சக்திகள் முதலில் இந்த நிலை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அந்த முதற்கட்ட ஓர்மையே இன்னும் இங்கு ஏற்படவில்லை.

 

  1. தங்களின் விரிவான செயல்பாடுகளுக்கு தங்கள் தந்தையின் அரசியல் செயல்பாடுகள் ஒருகாரணமாக அமைந்திருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

 

நிச்சயமாக. அவர் தனது அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி வந்து அன்றாட வாழ்க்கையோடு போராட நேர்ந்த காலத்தில் பிறந்தவன் நான். எனினும் அவரது விரிந்த பார்வை, யாரும் ஊரும் அற்ற நாடுகடத்தப்பட்ட இரு இளைஞர்களைத் தன் பிள்ளைகளாக ஏற்று, தன் உறவுப் பெண்களையே திருமணம் செய்வித்து, எனக்கு பாரதியையும், சரத்சந்திரரையும், மார்க்சையும் அறிமுகம் செய்து, தன் பெயரில் ஒரு பைசா கூட சொத்தில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரின் நினைவுகள் என் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளன என்பதில் ஐயமில்லை.

 

14 கோவிலுக்குள் வழிபட வருகின்ற பெண்களிடம் உடைக்காட்டுப்பாடு இருந்தது. அது இன்று விலக்கிக் கொள்ளப்பட்டாலும் வெளிப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.ஏற்பு மறுப்பு     என்ற நிலைப்பாடு இன்றும் இருக்கின்ற சூழலில் தங்களின் கருத்து என்னவாக உள்ளது?

 

உடை என்பது நமது சவுகரியத்திற்கான ஒன்று. கோவிலில் மட்டுமல்ல பள்ளிகளில் ஆசிரியைகளுக்கு, பெரும் வசதியுடையவர்களின் மாலை நேரச் சந்திப்பு மையங்களான காஸ்மோபோலிடன் க்ளப் எனப் பல இடங்களிலும் இப்படியான கட்டுப்பாடுகள் இன்று நடைமுறையில் உள்ளன. இந்துக் கோவில்களில் மட்டுமின்றி முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் கூட சில உடைக் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தலையில் தொப்பி அணிந்து வரவேண்டும் என்பதுபோல. பொதுவாக உடைக் கட்டுப்பாடு என்பது ஒரு வகையான regimentation – ஒழுங்குபடுத்தலின் அடையாளம்.தான். அடிப்படையில் decent ஆன ஒரு உடை என்பதற்கு அப்பால் இந்தமாதிரி கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து. உடை என்பது நம் வாழ்க்கை முறைக்கேற்ற வகையில் எளிதில் நம்மோடு பொருந்திப் போவதாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

 

  1. இந்துமதத்தை நீங்கள் எதிராக பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா? அதற்கு காரணங்கள் உண்டுமா? காரணங்கள் உண்டு என்றால் அது பிற மதங்களில் இருந்து வேறுபட்டவையா?

 

நான் இந்து மதத்தை எதிராகப் பார்க்கிறேன் எனச் சொல்வது என்னை முற்றிலும் புரிந்து கொள்ளாமையின் விளைவு. இந்து மதத்தை நான் வெறுப்பவனும் இல்லை. தீண்டாமை, சாதி, வருண ஏற்றத் தாழ்வுகள், வருண அடிப்படையில் தொழில் என்பவற்றை மட்டும்தான் நான் வெறுக்கிறேன். இவை இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்தில் இருந்தாலும் அவற்றை எதிர்க்கிறேன். இந்தியத் துணைக் கண்டத்தை வந்தடைந்த எல்லா மதங்களிலுமே இவற்றின் சாயல் படிந்துதான் இருக்கிறது. கிறிஸ்தவம் கிட்டத் தட்ட அதை அப்படியே ஏற்றுக் கொண்டது. இஸ்லாம் அதைப் பெரிய அளவில் எதிர்த்து நின்றாலும் வட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்படியான தலித் முஸ்லிம் என்கிற ஒரு பிரிவு உருவாகியுள்ளது. இவை எல்லாமே களைந்தெறியப்பட வேண்டியவைதான். எனினும் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில் கோட்பாட்டளவில் இவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. .இந்துமதத்தைப் பொருத்த மட்டில் அதற்கென எல்லோரும் ஏற்றுக் கொண்ட அடிப்படைக் கோட்பாடு ஏதும் இல்லை. இந்து மதத்திற்குள்ளேயே நின்று கொன்டு இவற்றை எதிர்த்தவர்களும் உண்டு. இராமானுஜர் ஓரளவு சில சீர்திருத்தங்களை முயற்சித்தார். நமது இராமலிங்க அடிகள், கேரளத்தில் நாராயண குரு முதலானோர்களும் இப்படியான முயற்சிகளைச் செய்தனர். நமது சித்தர்கள் வெளிப்படையாக இவற்றைக் கண்டித்தனர். இத்தகைய வாய்ப்புகளும் இந்து மதத்திற்குள் உள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

 

எனில் நாம் இதை இப்படிச் சொல்லலாமா? வருண சாதி க் கோட்பாட்டை பொதுவில் ஒரு இந்தியத் துணைக் கண்டப் பண்பாடு எனலாமா?

 

அப்படியும் பொதுமைப்படுத்திவிட முடியாது. பவுத்தம், சமணம் ஆகியவை இதை ஏற்கவில்லை. ஆனால் அவையும் கூட காலப் போக்கில் ஓரளவு வருண -சாதிக் கட்டமைப்பிற்குள் வந்தன. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களை தலித் பவுத்தர்கள் எனச் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது. அதேபோல சமணத்திற்குள்ளும்  நடைமுறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் காண முடிகிறது. ஆக வருண சாதி வேறுபாட்டை ஒரு வகையில் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பண்பு எனலாம்.

 

அடுத்து நாம் இன்னொரு அம்சத்தையும் கவனம் கொள்ள வேண்டும். மேலை மதங்களைப் பொருத்த மட்டில் மிகவும் exclusive – அதாவது தன்னை மற்றவற்றிடமிருந்து ஒதுக்கிக் கொள்பவை. மற்ற நம்பிக்கைகளை உள்ளே அண்ட விடாத அளவு தம்மை வரையறுத்துக் கொண்டவை. கிறிஸ்தவம், முஸ்லிம்  முதலான மதங்கள் அப்படியானவை. இந்து மதம் அதற்கென ஒரு இறுக்கமான வேதம் முதலியன இல்லாமையால் அது ஒரு inclusive மதமாகவே இருந்தது. அது மற்ற நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முதல் சென்சஸ் கணகெடுப்பின் போது பல பகுதிகளில் நீங்கள் என்ன மதம் எனக் கேட்டபோது அந்த மக்களால் தாங்கள் இந்துக்களா இல்லை முஸ்லிம்களா எனச் சொல்லத் தெரியவில்லை என்பது வரலாறு.

 

இந்த இடத்தில்தான் பிரச்சினை உருவாகிறது. 18, 19ம் நூற்றாண்டு தொடங்கி இங்கு உருவான ஆர்ய சமாஜம், ப்ரும்ம சமாஜம் முதலான சீர்திருத்த இயக்கங்கள் 20ம் நூற்றாண்டில் உருவான இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் இந்து மதத்தையும் மேலை செமிடிக் மதங்களைப் போல ஒரு exclusive மதமாக கட்டமைக்க முனைந்தன. எழுதப்பட்ட அடிப்படைப் புனித நூல் ஒன்று இல்லாத இந்து மதத்திற்கு ‘பகவத் கீதையை’ புனிதநூலாக அவர்கள் கண்டுபிடித்தனர். வேதங்கள், தர்ம சாத்திரங்கள், வருணாசிரமம் என்பதாக இந்து மதத்தை இந்தியா முழுவதும் ஒரே சீராகக் கட்டமைக்கும் முயற்சி தொடங்கியது. இன்னும் அந்தத் திட்டம் முழுமையாக முடியாத போதும் தீவிரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

 

ஆக நான் வெறுப்பது இந்துமதத்தை அல்ல. சொல்லப்போனால் இறுக்கமான ஒரு புனிதமான நூல் இல்லாத மதம் என்கிற வகையில் அதை நேசிக்கவே செய்கிறேன். நான் வெறுப்பதும், எதிர்ப்பதும் இந்துத்துவத்தைத் தான். சாதி மற்றும் வருண ஏற்றத் தாழ்வுகளைத்தான். அவை கிறிஸ்தவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கிறேன். எனினும் எங்களிடம் இந்துத்துவ எதிர்ப்பே மேலுக்கு வருவதற்குக் காரணம் அவர்கள் இந்துமதத்தை இவ்வாறு கட்டமைத்து ஒரு வன்முறை வெறுப்பு அரசியலை மும்மெடுப்பதால்தான். இந்த நாட்டின் பன்மைத் தன்மையை ஒழிக்க முற்படுவதற்காகத் தான்..

 

  1. இந்துமதம் பன்முக தன்மையற்ற ஒற்றைப்படை தன்மைக் கொண்டது என நினைக்கிறீர்களா?

 

இல்லை. உண்மையில் இந்துமதம் தான் ஒரு வகையில் பன்மைத் தன்மையுள்ள மதம். inclusive மதம் என்பதன் பொருளும் அதுதானே. பிற மதங்களையும் உள்ளே ஏற்றுக் கொள்ளும் மதம் அது. மையத்தில் மட்டுமே வருண தர்ம இறுக்கங்களுடன் கட்டமைக்கப்பட்ட மதம். விளிம்புகள் பல்வேறு மட்டங்களில் சுதந்திரமாகவும், இறுக்கமற்றும் இருந்த மதம். இறுக்கமான மறை நூல் இல்லாததால் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகள் உள்ளே புகுந்து அதை மேலும் inclusive ஆக்குவதற்கு வாய்ப்பளிக்கும் மதம். பிரச்சினை என்னவெனில் சுமார் இரு நூற்றாண்டுகளாக இந்துத்துவம் இந்து மதத்தின் இந்தப் பூர்வ பண்புகளை ஒழித்து இறுக்கமான, ஒரே சீரான, நெளிவு சுளிவு இல்லாத வருண தர்மமாகக் கட்டமைத்ததுதான்.

 

  1. உங்கள் பார்வையும் அணுகுமுறையும் கலை இலக்கியத்திற்கு எதிரானது எனும் கருத்துஉள்ளது? என்ன பதில் சொல்கிறீர்கள்?

 

சொல்லிவிட்டுப் போகட்டும். எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்ன. யானையைப் பார்த்த குருடனின் கதை என்க் கேள்விப் பட்டிருப்பீர்கள். புத்தர் சொன்ன கதை அது. அப்படிச் சொல்கிறவர்கள் என்னை அர்சியல் மட்டுமே தெரிந்தவன் என்கிறார்கள்.  ஆனால் இன்னொரு பக்கம் வரட்டு அரசியல் பேசுகிற தமிழ்த் தேசியவாதிகள், கிழட்டு மார்க்சியர்கள், அசட்டுப் பெரியாரியவாதிகள் இவர்கள் என்னை அரசியல் தெரியாதவன் என்கிறார்கள். நான் பாரதியையும், ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், மாதவையாவையும், டால்ஸ்டாயையும் பற்றி உருகிக் கரைந்து எழுதுவதைப் புரிந்து கொள்ளாத மூடர்களான இவர்கள் அதையே என்மீதான் குற்றச்சாட்டாகவும் வைக்கின்றனர். அவர்களின் எழுத்துக்களைக் கொண்டாடுவதற்காக என்னை ஏசுகின்றனர். என் தந்தை எனக்கு மார்க்சை மட்டுமல்ல பாரதியையும், டால்ஸ்டாயையும், ஜெயகாந்தனையும் கூட அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிப்பது என்பது என்னிடம் ஒரு கட்டத்தில் நின்று போனது. கடந்த முப்பது ஆன்டுகளில் நான் தீவிரமாகப் புனைவு இலக்கியங்களைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். நிறுத்திக் கொண்டேன் எனச் சொல்வதைக் காட்டிலும் எனக்கு நேரம் இருப்பதில்லை. தொன்மை இலக்கியங்கள் நிறைந்த நம் தமிழின் வரலாற்றில் கூடுதலாக ஆர்வம் கொள்ள நேரிட்டது. இப்போது பவுத்த இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டுள்ளேன். மணிமேகலையையும் வீரசோழியத்தையும் அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளேன்.

 

எனக்கு இலக்கியம் தெரியாது எனக் குற்றம் சாட்டுபவர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் எழுதிக் குவிக்கும் ஏகப்பட்ட எழுத்துக் குவியல்களைப் படித்து ஆகா ஓகோ என எதையாவது எழுதினால் இலக்கியம் தெரிந்தவர்கள், இல்லாவிட்டால் இலக்கிய விரோதிகள். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது.

 

  1. பாரதியைப் பற்றி பெரியர் கூறும்போது கஞ்சா கிறுக்கன், குடிகாரன் அவன் குடித்துவிட்டு உளறுவதை கவிதை என்கிற ஒரு கூட்டம் இங்கிருக்கிறது என்று ஒரு பொதுக்கூட்டத்தில்    பேசியுள்ளதாக படித்துள்ளேன். இது பற்றிய உங்களுடைய எண்ணம் என்ன?

 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். காந்தியையோ பெரியாரையோ பெரிதும் மதிப்பதால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. இப்படி யாரையாவது ஒருவரைத் தூக்கிப்பிடித்துப் பக்தி செலுத்தும் மூடர்களில் ஒருவனாக என்னைப் பார்த்தீர்களானால் அதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் மிகப் பெரிய அவமானம். இவர்களிடம் நல்ல சிந்தனைகள், சிறந்த அணுகல்முறைகள் நிறைய உள்ளன; இவர்கள்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்மைத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், அவர்களின் அரசியலே இன்றைக்குப் பொருத்தமானது என்று மட்டுமே நான் சொல்கிறேன். அந்த வகையில் மட்டுமே அவர்களை நான் கொண்டாடுகிறேன். இவர்கள் எல்லோரிடமும் எனக்கு விமர்சிக்க வேண்டிய அம்சங்களும் உண்டு. பெரியார் தமிழ் இலக்கியங்கள் பற்றிக் கூறியவற்றில் எல்லாம் பல சிக்கல்கள் உண்டு. அந்தமாதிரி அம்சங்களில் அவரை ஒரு scholar ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது பங்களிப்புகளையும் அவரையும் நாம் கொண்டாடுவதற்கும் வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு. தவிரவும் ஒரு நீண்ட காலம் அரசியலில், ஆய்வுலகில் வாழந்தவர்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை வைத்து மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது, பாரதியை இப்படிச் சொன்ன பெரியார்தான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தனது ‘குடிஅரசு’ இதழில் முதல் பக்க முகப்புக் கவிதையாக பாரதி பாடலை வெளியிட்டுவந்தார். நானும் சிவத்தம்பியும் எழுதிய நூலில் அதைக் குறிப்பிட்டுள்ளோம். காந்தி பற்றியும் பெரியார் அப்படி முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லியுள்ளார். ஒரு காலத்தில் ‘காந்தி பொம்மை உடைப்பு’ போராட்டங்களை நடத்தியவர் காந்தி கொல்லப்பட்டபோது கண்ணீர் விட்டார். இந்த நாட்டுக்கு காந்திதேசம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றார்.

 

  1. காந்தி, நேரு இவங்களுடைய கருத்தாக்கங்கள் இன்றைக்கு மறுவாசிப்பு பண்ணக்கூடிய ஒரு காலகட்டமாகவும், அவர்களை வேறு விதமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த நிலை மாறி     அவர்களின் கருத்துகள் தேவை என்கிற மாதிரி சூழல் தெரிகிறது. இது சரிதானா? இது பற்றிய தங்களின் கருத்து என்ன?

 

மிகவும் வரவேற்கத் தக்க போக்கு இது. அருந்ததி ராய் போன்ற அரை வேக்காடுகள் இவர்கள் பற்றி வைக்கும் அசட்டுத்தனமான எதிர் மதிப்பீடுகளை இன்று ஆய்வாளர்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை. ரால்ஃப் மிலிபான்ட் ஒரு முக்கியமான நவ மார்க்சிய அறிஞர். நானெல்லாம் மிக விரும்பிப் படித்த ஒருவர். அவரது இரு மகன்களும் பிரிட்டிஷ் லேபர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். அவர்களில் ஒருவர் லேபர் கட்சி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து பின் பிரதமர் பதவிகக்குப் போட்டியிட்டுத் தோற்றார். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது நேர்காணல் ஒன்று பத்திரிகைகளில் வந்தது. அதில் ஒரு கேள்வி. “உங்கள் தந்தை ஒரு பெரிய மார்க்சிய அறிஞராச்சே. உங்களுக்கு அவர் என்ன மாதிரி புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்?”. அவர் சற்று யோசித்துவிட்டுச் சொல்வார்: “நேருவின் உலக சரித்திரம் முதலான நூல்கள்”.

 

நான் இதைப் படித்தபோது ஒரு கணம் மெய்சிலிர்த்தேன். நேருவின் இந்த நூல்களில் இப்போது சில வரலாற்றுப் பிழைகளும் இருக்கக் கூடும். இருக்கின்றன. சிலர் சுட்டிக்காட்டியும் உள்ளனர். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அவை. வரலாறு எழுதியல் (histriography)  மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. நீலகண்ட சாஸ்திரியாரின் நூல்கள் பல இன்று outdated. ரொமிலா தாபர் முதலான அறிஞர்கள், கோசாம்பி ஆகியோரின் எழுத்துக்கள் ஆகியவற்றிலிருந்து இன்றைய சஞ்சய் சுப்பிரமணியனின் அணுகல்முறைகள் வேறுபடுகின்றன. அது அப்படித்தான். நாளாக நாளாகப் பல புதிய வரலற்ருத் தரவுகள் கிடைக்கின்றன. இவற்றின் ஊடாக வரலாறு குறித்த பார்வையும் மாறுகிறது.

 

நேரு ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அல்ல. அவர் அந்தத் துறையில் ஒரு lay man எனலாம். அத்தோடு அவர் சிறையில் இருந்தபோது எழுதியவை அவை. எந்தப் பெரிய அளவு reference களும் இல்லாமல் எழுதப்பட்டவை அவை. பிழைகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும் அந்த நூல்களை ஏன் மிலிபான்ட் போன்ற நவீன அறிஞர்கள் தன் மகனுக்குப் படிக்கப் பரிந்துரைத்தனர்? என்னைப் பொறுத்த மட்டில் வரலாற்று நூல்களில் பொதிந்துள்ள வரலாறுகளைக் காட்டிலும் வரலாறு குறித்த அவற்றின் பார்வையே முக்கியம். வரலாற்றை எப்படிப் பார்ப்பது. ஒரு வரலாற்றுச் சான்றை நீ எப்படி அணுகுகிறாய், அதை எப்படி நீ interpret பண்ணுகிறாய் என்பதுதான் முக்கியம். இந்தியாவின் ஒரு பன்மைப் பாரம்பரியத்தை, அமார்த்யா சென் சொல்வதைப்போல ஒரு argumentative வரலாற்று வளர்ச்சியைச் சொல்வன அவரது அணுகுமுறைகள்.

 

காந்தியைப் பொருத்தமட்டில் அவர் குறித்து இங்கு பரப்பப்பட்டுள்ள மூடக் கருத்துக்கள் அறிவு வளர்ச்சியைத் தடுத்து அழிப்பவை. காந்தி குறித்து ஒரு மிகப் பெரிய அறிவுப் பாரம்பரியம் இன்று உலகெங்கிலும் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதமான ஆங்கில நூல்களையும் கட்டுரைகளையும் நீங்கள் காணமுடியும். அவற்றை எல்லாம் நாம் வெறுத்து ஒதுக்குவதுபோல அறியாமையும் மௌடீகமும் ஏதுமில்லை.

 

  1. தங்களிடம் காந்தியைப் பற்றி முன்னால் இருந்த பார்வையும் இப்போது புதிய பார்வையும் என்ன மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது? இது வருவதற்கான காரணமென்ன-?

 

நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். எப்போதும் நான் திறந்த மனத்துடன் எல்லாவற்றையும் அணுகுகிறேன். நினைவிற் கொள்ளுங்கள் திறந்த மனதே தெளிந்த அறிவிற்கு வழி. உங்களை நீங்கள் மூடிக் கொள்வது உங்களின் அறியாமை தொடரவே வழி வகுக்கும். எல்லாவற்றையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் மேன்மையுறுவீர்கள். அச்சம் அறியாமையின் இன்னொரு பக்கம்.

 

  1. நேரு காலத்துக்கு பிறகு அரசியலில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களை அவருக்கு பின் வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள் ஆரோக்கியமான போக்கில் கொண்டு சென்றிருக்கிறார்களா? அது இன்றைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

 

ஒன்றை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன். இதையெல்லாம் சொல்வதால் நேருவை நான் அப்படியே விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறேன் என்பதல்ல. காஷ்மீர் குறித்த பிரச்சினையிலும், எல்லைப் பிரச்சினையில் சீனாவை அவர் அணுகிய விதத்திலும் அவரை நாம் ஏற்க முடியாது. திட்டமிட்ட பொருளாதாரம் (planned economy), உலக அரசியலில் அணிசேராக் கோள்கை (Non Alligned Movement), அண்டை நாடுகளுடனான உறவுகளில் பஞ்சசீலம், நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தைக் காட்டிலும் தொழில்வளர்ச்சிக்கு, குறிப்பாகப் பொதுத்துறைக்கு (Public Sector)) முக்கியத்துவம் அளித்தல், உள்நாட்டு அரசியலில் inclusiveness இவைதான் நேரு. பாபர் மசூதிக்குள் இந்துத்துவவாதிகள் ராமர் சிலையைக் கொண்டு வைத்தபோது அவர் துடித்த துடிப்பு நமக்குக் கண்ணீர் வரவழைக்கக் கூடியது. இது தொடர்பான அவரது கடிதம் ஒன்றை மொழிபெயர்த்தபோது நான் கண்னீர் விட்டிருக்கிறேன். முஸ்லிம்கள் கூட அன்று அது குறித்து அத்தனை கவலைப்படவில்லை. அப்படியானால் அவரே அன்று அதைத் துக்கி எறிந்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம்.. அங்குதான் அவரை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு ஜனநாயகவாதி. உ.பி முதல்வர் வல்லப பந்த்துக்கு அவர் கடிதங்கள் எழுதி அப்படி வற்புறுத்தினார். அதற்கு மேல் அவர் மாநில உரிமையில் தலையிட விரும்பவில்லை. ஆனால் அவருடன் இருந்தவர்களும், அவர் மகள் உட்பட அந்தப் பண்புகளையும் நோக்குகளையும் தொடரவில்லை. அவர் கண்முன்னே தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அமைச்சரவையை அவர் மகள் கவிழ்த்தார்.

 

இன்றைய நரேந்திர மோடி நேருவின் எதிர் முனை. நேர்விடமிருந்து அனைத்து அம்சங்களிலும் நூறு சதம் எதிரானவர்.

 

  1. உலகத்தில் கிருத்துவத்தை மையமாக கொண்டு ஒரு பகுதியினரும், அரபு உலகம் இஸ்லாத்தை மையமாகவும் கொண்டியங்கும் சூழலில், இந்தியாவில் பெருவாரியான மக்கள் இந்து சமூகத்துக்குள்ள இருக்கும்போது அப்படி  ஒரு பார்வை வந்த என்ன தப்பு? உங்களுடைய பேச்சிலும் எழுத்திதும் வேற மாற்றம் தெரியறமாதிரி இருக்கே அதை கொஞ்சம் விளக்க முடியுமா?

 

மேற்குலகோ இல்லை அரபுலகோ நாம் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய மாதிரிகள் அல்ல. சொல்லப்போனால் அவை நாம் எந்த வகையிலும் பின்பற்றக் கூடாத எதிர் மாதிரிகள். நமது நாடு ஒற்றை மதம் உள்ளதாக, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி என்பதாக என்றைக்குமே இருந்ததில்லை. வேதங்கள் செழித்திருந்த போதுதான் பவுத்தமும், சமணமும், ஆஜீவகமும் ஓங்கி இருந்தன. சஸ்கிருதத்தில் வேதங்கள் எழுதப்பட்டபோதுதான் புத்தரும் மகாவீரரும் பிராகிருதம், பாலி முதலான அடித்தள மக்கள் மொழிகளில் பேசித் திரிந்தனர். இங்கு வந்த முகலாயர்களும், பிரிட்டிஷாரும் இந்து மதத்தை அழிக்க முயன்றதாகச் சொல்லப்படுவது அபத்தம். முன்னூறு ஆண்டு காலம் சகல அதிகாரங்களுடனும் கோலோச்சிய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெறும் இரண்டு சதம் பேர்தான் கிறிஸ்தவத்துக்கு மாறினர். ஆதுவும் ஆட்சி அதிகாரத்தின் ஊடாக அல்ல. மிஷனரி நடவடிக்கைகளின் ஊடாகத்தான்.

 

எழுநூறு ஆண்டுகள் இங்கு ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்களின் காலத்தில் நடந்த மதமாற்றங்கள் எதுவும் அவர்கள் வலுவாக ஆட்சி செலுத்திய பகுதிகளில் நடைபெறவில்லை. இன்றைய பாகிஸ்தானிலும் (மேற்கு பஞ்சாப்), இன்றைய வங்க தேசத்திலும் (கிழக்கு வங்கம்) உறுதியான முஸ்லிம் ஆட்சிகள் நடைபெற்றதில்லையே. முஸ்லிம்கள் ஆண்ட மத்திய இந்தியாவில் ஒப்பீட்டளவில் முஸ்லிம் மத மாற்றங்கள் குறைவு. முஸ்லிம் மதப் பரவல் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்துள்ள ரிச்சர்ட் ஈடன், ஃப்ரான்சிஸ் ராபின்சன் முதலானோர் நீர்ப்பாசனம், விவசாயம் முதலான தொழில்நுட்பப் பரவல்கள், சுஃபி ஞானிகளின் ஊடாட்டம் ஆகிவற்றை இஸ்லாமியப் பரவலுக்கான முக்கிய காரணங்களாகச் சொல்கின்றனர். இந்து மதமும் ஒற்றைத் தன்மையானதாக இங்கு இருக்கவில்லை. அதற்குள்ளேயே பல போக்குகளும் இருந்தன. சித்தர்கள் இன்றைய இந்து மதத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கினர். இப்படி வட நாட்டிலும் நிறையச் சொல்ல முடியும். இதுதான் நம் பாரம்பரியம் இதைத்தான் argumentative Indian என்றெல்லாம் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதை விட்டுவிட்டு ஒற்றை அடையாளத்துடன் கூடிய மேற்கத்திய மற்றும் அரேபிய மாதிரிகளை ஏன் பின்பற்ற வேண்டும்?

 

  1. நீதிமன்றம் எத்தனை உறுதியான தீர்ப்புகளை தந்தாலும் மாநில உரிமைகளில் மக்கள் உரிமைகளில் தங்கள் அரசியல் அழுத்தங்களினால் அவை நிராகரிக்கப்படுகின்ற சூழலை கண்டு வருகிறோம்? இந்தப்போக்கு சரியானது தானா?

 

நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் எல்லாமுமே சரியானவை என முதலில் நாம் கருத வேண்டியதில்லை. எதையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அரசுகளிடம்தான் உள்ளன. அவற்றை நிறைவேற்றும் விருப்புறுதி அவற்றுக்கு இல்லாத போது நாம்தான் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லையே என்றால் நாம் அளிக்கும் அழுத்தங்கள் போதவில்லை என்றுதான் பொருள்.

 

  1. கருத்துகளின் வழி இன்றைக்கு  சமூகம் முரண்படுகின்ற சூழலை காணமுடிகிறது. இது நடுநிலை கருத்துகளினால் தானா–? நடுநிலையாளர் என்றால் ஒரு சார்பு பேச்சு வரக்கூடாது நீங்கள் நடுநிலையாளாரா?

 

இந்தியா போன்ற ஒரு மிகப் பெரிய நாட்டில் பல கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். பல கருத்துக்கள் நிலவும்போது கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் தவிர்க்க இயலாதவை. இது ஒரு வகையில் ஆரோக்கியமானதே. இது குறித்து நாம் கவலைப் படுவது தேவையற்றது. பல கருத்துக்களை, அவை கருத்துக்களாக இருக்கும் வரைக்கும் அவற்றை பொறுமையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கு வேண்டும். எல்லாவற்றிற்கும் போலவே கருத்துச் சுதந்திரத்திற்கும் எல்லைகள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மற்றபடி நடுநிலை, மதச்சார்பின்மை என்பதை எல்லாம் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஏற்காத நிலை அல்ல. அதாவது நாத்திகம் அல்ல. மதச்சார்பின்மைக்கு ஒரு மிகச் சிறந்த எருத்துக்காட்டும் காந்திதான். அவருக்கு இந்துமதத்தின் மீது மிக உறுதியான நம்பிக்கை இருந்தது. ஆனால். “என் மதம் எப்படி இன்னொருவரின் மதமாக இருக்க முடியும்?” என்றார் அவர். நபிகள் சொன்னது போல அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதுதான் மதச்சார்பின்மை. நான் ஒரு மத நம்பிக்கையைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களின் நம்பிக்க்கையை முழுமையாகக் கடைபிடிக்க அனுமதிப்பதுதான் மதச் சார்பின்மை. அதேபோலத்தான் ‘நடுநிலை’ என்பதும். நடுநிலை என்பது கருத்துக்களே இல்லாத நிலை அல்ல. எனக்கு ஒவ்வொன்றின் மீதும் ஒரு கருத்துண்டு. ஆனால் என் கருத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்ரையும் தீர்மானிக்க வேண்டும், மற்றவர்களும் என் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்பது நடுநிலை அல்ல.

 

  1. ஒருவன் மீது கொண்ட ஈர்ப்பு என்பது அவர் மீதான விமர்சனங்களால் கவரப்படுவதுதானே?  நீங்கள் கொண்டாடுகின்றவர்களை எந்த விமர்சனத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

 

ஒருவர் மீதான ஈர்ப்பு அவர் மீதான விமர்சங்களால்தான் ஏற்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எதிர்மறை ஈர்ப்பு மட்டுமல்ல. உடன்பாட்டு ஈர்ப்பும் உண்டுதானே.

 

26.தங்களின் விமர்சனங்கள் ஒரு கட்டிப்போடப்பட்ட மனைநிலையை வாசிப்பவனுக்கும் வழங்கும் ஆனந்தம் தருவதாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உங்கள் மீதான விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? அல்லது எப்படி வைக்க விரும்புகிறீர்கள்?

 

விமர்சனத்தையும் அவதூறையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நான் யாரையும் பொய்யாக அவதூறு செய்ததில்லை. ஒரு வேளை மனம் புண்படும்படிக்கூட பேசி இருக்கலாம். ஆனால் பொய்களின் அடிப்படையில் நான் பேசியதில்லை. ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். உங்கள் ஊரின் ஒரு முக்கிய எழுத்தாளர் ஜெயமோகன். அவரை ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர் எனவும், அவரது விஷ்ணுபுரம் நூல் ஆர்.எஸ்.எஸ் கடைகளில் வைத்து விற்கப்படுகிறது எனவும் நான் எழுதியுள்ளேன். இது ஒரு உண்மைத் தகவல். அவரது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்சிற்கு உவப்பானவை என்கிற என் விமர்சனத்திற்குச் சான்றாக இதை நான் முன்வைத்தேன்.

 

அவர் ஆற்ரிய எதிர்வினை என்ன தெரியுமா? 2008ம் ஆண்டில் “அரசியல் கைதிகள் விடுதலைக்கான இயக்கம்” என்கிற மாஓயிச ஆதரவு மனித உரிமை இயக்கம் ஒன்று பேரா. அமித் பட்டாசார்யா அவர்களின் தலைமையில் காஷ்மீருக்கு ஒரு உண்மை அறியும் குழுவை அனுப்பியது.  என் சொந்தச் செலவில் அந்தக் குழுவில் நான்பங்கு பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பணம் வாங்கினேன் என எழுதினார். என்னைக் கடுமையாகத் திட்டுபவர்களும் கூட என் நேர்மையைச் சந்தேகிப்பதில்லை. அவர் அப்படிச் சொன்னார். நான் மறுத்தபோதும் திரும்பச் சொன்னார். நான் அவர் மீது வைத்தது விமர்சனம். அவர் என் மீது வைத்தது அவதூறு. எல்லாவற்றையும் போலவே விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தீர்மானிப்பதும் உண்மைதான். சமீப காலமாக அவர் என்மீது இப்படியான அவதூறுகளை வைப்பதை நிறுத்தியுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 

27.மாணவர்கள் மத்தியில் சமூகப்பொறுப்பு குறைந்துள்ளதாக  தங்களின் குற்றச்சாட்டு ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. சமூகப்பொறுப்பு என்பதற்கு   எதையாவது உங்கள் மனதில் பிம்பமாக வைத்திருக்கிறீர்களா?

 

குற்றச்சாட்டு என்பதில்லை. ஒரு observation அவ்வளவுதான். இன்றைய கல்வி முறையே அப்படியாகிவிட்டது. சக மாணவர்களைத் தோழர்களாக எண்ணாமல் போட்டியாளர்களாகப் பார்க்க வைக்கும் கல்வி முறை அது. தொடர்ந்து தேர்வுகளுக்கு ஆட்படுத்தும் இந்த செமஸ்டர் முறை, internal assessment, campus interview என்பன சொன்னதைச் செய்யும் ‘ரோபோ’ க்களாக மாணவர்களை மாற்றிவிட்டன. சமீபத்தில் சென்னையில் People’s Watch ஏற்பாடு செய்த ஒரு மாணவர் சந்திப்பில் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகளில் அடியாட்கள் வைத்து மாணவர்களை அடிப்பதற்கென dark room அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியெல்லாம் மாணவர்கள் சொன்ன போது அங்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். Overspecialisation மற்றும் கலைப்பாடங்களின் (humanities) புறக்கணிப்பு எல்லாமும் மாணவர்களின் சமூகப் பொறுப்பை அழித்து வருகின்றன என்பது என் கருத்து. எல்லோருக்கும் இளம் வயதில் சுய முன்னேற்றம் குறித்த ஒரு பிரக்ஞை இருக்கும்தான். ஆனால் அது வெறும் சுய நலமாக மாறிவிடும்போது சமூகப் பிரக்ஞை குன்றியவர்களாக அவர்கள் ஆகிவிடுகின்றனர்.

 

  1. புதிய கல்விக்கொள்கை குறித்த 50க்கம் மேற்படட கட்டுரைகள் வாசித்துவிட்டேன். அவை ஒரு முடிவுக்கு வராத தன்மையை தருவதாகவே இருந்தன. பொதுவுடமைகாரர்களின் கருத்தியல்போடு ஒன்றிய கருத்தை வெளிப்படுத்தி வரும் தாங்கள் தீர்வாக எதையாக வைத்திருக்கிறீர்கள்?

 

புதிய கல்விக் கொள்கை பற்ரிய என் நூல் வந்து மூன்று மாதங்களாகின்றன. 1986 முதல் நான் கல்விக் கொள்கைகளை விமர்சித்து வருகிறேன். 1986 ராஜிவ் காலத்திய கொள்கை two parallal stremes எனும் பெயரில் கல்வியைப் பெரிய அளவில் சுய நிதி நிறுவனங்களுக்குத் திறந்து விட வழி வகுத்தது. இலவசக் கல்வி, அருகாமைப் பள்ளிகள் முதலான கருத்தாக்கங்கள் அத்தோடு ஒழிந்தன. தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் என கல்விக் கொள்ளை தொடங்கியது. ஒரு மருத்துவ மேற்படிப்புக் கல்லூரியில் இடம் வாங்க 5 கோடி ரூ தேவை என்கிற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. இப்போது மோடி அரசு உருவாக்கியுள்ள கொள்கை GATS ஒப்பந்தத்திற்கு நமது கல்வியை இயைபாக்கும் முயற்சியாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இனி வெளிநாடுகளின் தரக்குறைவான பல்கலைக் கழகங்கள் இங்கே கடைவிரிக்கப் போகின்றன. இது இன்னும் பெரிய கேடு. இதற்குத் தீர்வு சொல்வதெல்லாம் அத்தனை எளிதல்ல. இது வெறும் கல்வி சார்ந்த பிரச்சினை இல்லை. உலக அளவில் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்டுள்ள அறக்கேடான மாற்றங்களின் விளைபொருள் இது.

 

29.இன்றைய நவீனமாக்கப்பட்ட காலத்தில் தூரங்கள் என்பது தூர்ந்து போனதாக, எல்லைக்கோடுகள் அழியும் சூழலில்   தேசப்பற்றை பரந்துப்பட்ட அளவில் பார்க்க வேண்டுமா?  தன்னைச்சுற்றி மட்டும் பார்க்கும் தேசப்பற்று போதுமானதா?

 

தந்தை பெரியார், மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், அண்ணல் அம்பேத்கர் எல்லோரும் ஒன்றுபடும் புள்ளி ஒன்று உண்டெனில் அது தேசபக்தியை வெறுப்பதுதான். “தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடசிப் புகலிடம்”  என்பதை அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளதை நீங்கள் இணையத்தில் காணலாம். டால்ஸ்டாயின் இது தொடர்பான கட்டுரையைத் தயவுசெய்து படித்துப் பாருங்கள். தேசபக்தி மட்டுமல்ல, பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னதுபோல, “தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்” இவை நான்கும் மனிதர்களை உரிமைகளின்பால் நாட்டமற்ற மிருகங்களாக ஆக்கும்.. தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று, சாதிப்பற்று இந்நான்கையும் ஒன்றாக்கி, இவை சுயமரியாதைக்கு இழுக்கு எனச் சொன்னதைத்தான் பெரியார் நமக்களித்துச் சென்ற ஒப்பற்ற சிந்தனையாக நான் கருதுகிறேன்.

 

  1. சிற்றிதழ் சார்ந்த செயல்பாட்டாளர்களோடு தாங்கள் நெருக்கம் வைத்ததாக தெரிகிறது. இன்றைய சிற்றிதழ் சார்ந்த போக்கு எப்படியிருக்கிறது?

 

இன்று அச்சு மற்றும் விநியோகங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எலக்ட்ரானிக் புரட்சி பெரிய இதழ்களையே விழி பிதுங்க வைத்துவிட்டது. சிறுபத்திரிகைகள் பற்றிக் கேட்கவா வேண்டும். சிறு பத்திரிகைகள் என்பன இன்று அழிந்து வரும் ஒரு இனம். எல்லாவற்றையும் இத்தனை சொற்களுக்குள் ‘ட்வீட்’ பண்ண வேண்டும் எனச் சொல்லும் காலம் இது. பள்ளித் தேர்வுகளும் கூட multiple choice எனும் நிலையில் ‘டிக்’ பண்னி முடிப்பதாக மாறிவிட்டது. analtycal ஆக ஒரு முடிவைத் தருவிப்பது என்பதெல்லாம் காலம் கடந்த வழமைகள் ஆகிவிட்டன. இவை, வரவேற்கத்தக்க மாற்றங்கள் என நான் சொல்லவில்லை. அதே நேரத்தில் ‘எல்லாம் கெட்டுப் போச்சு’ எனப் புலம்பிக் கொண்டிருக்கும் பழைய தலைமுறை ஆட்களாகவும் நாம் ஆகிவிடக் கூடாது. இந்த மாற்றங்களின் ஊடாகத்தான் நாமும் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த நேர்காணலைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். இத்தனை விரிவான உரையாடல் ஒன்று இன்றைய ஊடகங்களில் சாத்தியமா? தன்னந் தனியாக இப்படி ஒரு சிற்றிதழை இத்தனை காலம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். இத்தனை விரிவாகப் பேச வாய்ப்பளித்த உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பத்துக்கும், உங்களின் வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

 

“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”

(‘தி இந்து’ நாளிதழில் இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் நேர்காணல். நேர்கண்டது : ஆசை)

தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து – ஆசை

தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?

என்னுடைய அப்பா மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் மூலமாகத்தான் கம்யூனிஸக் கருத்துகள் சிறிய வயதிலேயே என்னை வந்தடைந்தன. என் அப்பா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றியும் ஒரு ஆக்கபூர்வமான பிம்பத்தையே என்னிடத்தில் ஏற்படுத்தினார். வரலாற்றில் இவர்களை எதிரெதிர் தரப்பில் வைத்து எதிரிகளாகச் சித்தரிக்க முடியாது என்ற பார்வையை என்னிடம் அவர் ஏற்படுத்தினார். காந்தியை என்றுமே எதிரியாக நான் பார்த்ததில்லை. அவரை விமர்சித்திருக்கிறேன். என்றாலும் பலரும் காந்தியைத் தட்டையாகப் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. சமூகத்தின் பன்மைத்துவத்தை நேசிக்கிற யாரும் காந்தியை வெறுக்க முடியாது.

நெருக்கடி நிலை, பாபர் மசூதி இடிப்பு, ஈழத்தில் நிகழ்ந்த இனஅழிப்பு ஆகிய மூன்று வரலாற்று நிகழ்வுகளும்தான் என்னை மேலும் காந்தியை நோக்கித் தள்ளின.

பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை என்பது இந்திய வரலாற்றில், குறிப்பாகச் சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை.இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்கவில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத்தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும் தலித்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மைத் தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள், முஸ்லிம்கள், தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.

இன்னொரு பக்கம், ஈழப் போராட்டம். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தால் கடைசியில் யாருக்கும் விடுதலை கிடைக்காதது மட்டுமல்லாமல், இனஅழிப்பும் நிகழ்ந்தது. 1990-களுக்குப் பிறகு ஹமாஸ், ஸ்காட்லாந்தில் உள்ள ஆயுதப் போராட்ட இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பலவும் ஆயுதப் பாதையைக் கைவிட்டு வேறு விதமான பாதைக்குச் செல்வது என்று முடிவெடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அமைதி வழியைத் தேர்ந்தெடுத்தவர் காந்தி.

காந்தி மட்டும் இல்லையென்றால் புரட்சியின் மூலம் ஆங்கிலேயரை அடித்துத் துரத்தி இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தியிருக்கலாம் என்று தீவிர இடதுசாரிகள் தரப்பில் அடிக்கடி சொல்லப்படுகிறதே?

அவர்களிடம் ஒரு எளிய கேள்வி. ஆனானப்பட்ட புரட்சியாளர் லெனின் புரட்சி ஏற்படுத்திய ரஷ்யாவில் இன்று என்ன நிலை என்று கேட்க வேண்டும். மாவோ ஏற்படுத்திய சீனப் புரட்சியின் இன்றைய நிலை என்ன? சும்மா பேசலாம். ஆனால், இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை. வன்முறை மூலம் ஒரு தலைமுறையானது தனது நிகழ்காலத்தை இழக்கிறது. உன்னதமான லட்சியங்களைக் காரணம் காட்டித்தான் நிகழ்காலத்தை இழக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உன்னத லட்சியமொன்றைக் காட்டிக்கூட ஒருவரது நிகழ்காலத்தைப் பறிப்பதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. எதிர்காலம் என்பது அப்படியொன்றும் உத்தரவாதமான எதிர்காலமும் அல்ல.

பலவீனமான மக்கள், பிரம்மாண்டமான எதிரி. இந்நிலையில் வன்முறையின் மூலம் அந்த பிரம்மாண்டமான எதிரியை வீழ்த்த நினைத்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அறிந்தே காந்தி அகிம்சையைத் தேர்ந்தெடுக்கிறார். பலவீனமான மக்களைக் கொண்டு பலம் பொருந்திய எதிரியை வீழ்த்துகிறார். எதிரியை வெறுக்காமல் எதிர்ப்பது எப்படி என்பது அவரது அருமையான உத்திகளுள் ஒன்று!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கியப் பங்கு என்னவென்று நினைக்கிறீர்கள்?

மேல்தட்டினர் கையில் அன்றைய சுதந்திரப் போராட்டம் இருந்தது. பெருந்திரளாக மக்களைத் திரட்டும் நோக்கம் அவர்களுக்குக் கிடையாது. காந்தியின் வருகைக்குப் பிறகு கதையே வேறு. இவ்வளவு பெருந்திரளான மக்களை, குறிப்பாக ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் போன்றோரை காந்தி அளவுக்கு அரசியலுக்குள் கொண்டுவந்தவர்கள் உலக வரலாற்றில் அரிது. கூடவே, முஸ்லிம்களை விட்டுவிட்டுப் பெறும் சுதந்திரம் சுதந்திரமாக இருக்காது என்றும் காந்தி கருதினார்.

காந்தி வருணாசிரமக் கருத்துகளை ஆதரித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?

காந்தி தேங்கிப்போன ஒரு மனிதரல்ல. தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வந்தவர் அவர். ஆரம்பத்தில் வருணாசி ரமத்தின் மீது சிறிது ஈர்ப்பு கொண்டவராகத் தோன்றி னாலும் தீண்டாமையைத் தனிப்பட்ட வாழ்விலோ அவரது கம்யூன்கள், ஆசிரமங்கள் எதிலுமோ அவர் கடைப் பிடித்ததே இல்லை.

காந்தி தீண்டாமைக்கு எதிராக தென்னாப்பிரிக்க காலத்திலிருந்தே பேசிவந்திருக்கிறார். மயிலாடுதுறையில் பெருந்திரளான பிராமணர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அந்த உரையில், அந்தப் பகுதியில் நிலவிய தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசுகிறார். தீண்டாமைக் கொடுமையையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி முன்னேறப்போகிறீர்கள் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

போகப்போக முற்றிலும் புரட்சிகரமான கருத்துகள் அவரிடம் உருவாகின்றன. ஒரு கட்டத்தில் தன் ஆசிரமத்துக்குள் கலப்புத் திருமணம் மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று அறிவித்தார். அதுவும் மணமக்களில் ஒருவர் தலித்தாக இருப்பது அவசியம் என்றார். அதையே கடைப்பிடிக்கவும் செய்தார்.

காந்தி சொன்னார் என்று தங்கள் சொத்து சுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தலித்களுக்காகப் பணிபுரிய வந்த பிராமணர்கள் ஏராளம். அம்பேத்கர், பெரியார் போன்றவர்களெல்லாம் ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் முன்னோடிகள்தான். இந்த அம்சத்தில் காந்தியின் கருத்து மாற்றத்துக்குக் காரணமானவர்கள் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். ஆனால், அவர்களின் போராட்டங்கள் முடிந்த பிறகு கோயில்களில் மறுபடியும் பழைய கதையே தொடர்ந்திருக்கிறது. காந்தி நுழைந்த பிறகு, ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில்கள் திறந்துவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு ஆலயப் பிரவேசப் போராட்டங்களை பெரியார், அம்பேத்கர் நடத்தினர். காந்தியோ பாதிப்புகளுக்கு எந்தத் தரப்பு காரணமோ அந்தத் தரப்பை முன்னிறுத்துகிறார். மதுரையில் வைத்தியநாத அய்யர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடக்கிறது. இதைப் பற்றியெல்லாம் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’என்ற புத்தகத்தில் விரிவாக விவாதித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் விரிவாக்கிய பதிப்பு பிரக்ஞை பதிப்பகத்தால் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.

கீதையை எப்போதும் காந்தி தூக்கிப்பிடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதல்லவா?

எதிரியை அழிப்பதற்கான ஒரு உத்தி நூல் போல், ஒரு வன்முறை நூலாக திலகர், அரவிந்தரில் ஆரம்பித்து பாரதியார் வரைக்கும் உரை எழுதுகிறார்கள். கீதைக்கு காந்தியும் உரை எழுதுகிறார். ‘நமக்கு எதிரே இருக்கும் எதிரியை வீழ்த்துவதற்கான புத்தகம் அல்ல இது. நமக்கு உள்ளே இருக்கும் தீமையை, எதிரியை வீழ்த்துவதற்கான வழிமுறையைச் சொல்லக் கூடிய, சமாதானத்தை வலியுறுத்தக்கூடிய புத்தகம் இது’ என்கிறார் காந்தி. இந்துத்துவவாதிகள் இதை எதிர்த்தாலும், அவருக்கு மாபெரும் செல்வாக்கு இருந்ததல்லவா! ஆகவே, அவர் சொன்னதை வேதவாக்காக மக்கள் எடுத்துக்கொண்டார்கள். புனிதப் புத்தகங்களாக இருந்தாலும் கூட இந்தக் காலத்துக்குப் பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பொருத்தமில்லாவற்றை விட்டுவிட வேண்டும் என்பது அவரது கருத்து.

இந்துத்துவவாதிகள் அவரைக் கொன்றதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. பாகிஸ்தான் பற்றிய பேச்சு இல்லாதபோதே, முப்பதுகளிலிருந்தே காந்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. சனாதனத்தின் மீது காந்தி நிகழ்த்திய பெரும் தாக்குதல்தான் அவரது படுகொலைக்கு முக்கியமான காரணம்.

அம்பேத்கர்-காந்தி எதிரெதிராகச் சித்தரிக்கப்படுகிறார்களே?

அம்பேத்கர்-காந்தி இருவரையும் எப்போதும் எதிரிகளாகப் பார்க்க முடியாது. இருவரின் அரசியல் அணுகுமுறையும் வேறுவேறு, அவ்வளவுதான்.

பூனா ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அம்பேத்கருக்கு பெரியார் போன்ற ஒருசிலரே ஆதரவாக இருந்தார்கள். எம்.சி. ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள்கூட அம்பேத்கருக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். தலித்களை சிறுபான்மையினராக உள்ளடக்கி, அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி அளிப்பதை காந்தி ஆதரித்திருக்கலாம்தான். காந்தியின் பிழைகளில் ஒன்று என இதைச் சொல்லவும் இடமுண்டு. ஆனால், அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு எனச் சொல்லிவிடவும் முடியாது. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை அவர்கள் சில ஆண்டு அனுபவங்களுக்குப் பின், அது தங்களை அந்நியப்படுத்துகிறது என்று சொல்லி, வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

அரசியல் நிர்ணய சபையிலும், முதல் அமைச்சரவையிலும் தகுதியானவர் என்கிற வகையில் அம்பேத்கரை உள்ளடக்கியதில் காந்தியின் பங்கும் இருந்ததுதானே.

காந்தியின் இந்தியாவுக்கும் மோடியின் இந்தியாவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?

காந்தி தேசம் பல வண்ண தேசம். மோடி தேசம் ஒற்றை வண்ண தேசம்; காவி தேசம்.

காந்தியுடன் உங்களால் உடன்பட முடியாத இடங்கள் என்னென்ன?

அவரது கட்டாய மது விலக்கு, காந்தியப் பொருளா தாரம் போன்றவற்றில் நடை முறைச் சிக்கல்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அதை காந்தியே உணர்ந்திருந்தார். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் அதிகாரங்களில் இருந்த போதெல்லாம் அவர் தனது பொருளாதாரத் திட்டத்தை வற்புறுத்தவில்லை. காந்தியப் பொருளாதார வல்லுநரான ஜே.சி.குமரப்பா இருமுறையும் பதவி விலகத்தான் நேர்ந்தது. ஆனால், இன்றைய புதிய உலகச் சூழலில் காந்தியப் பொருளாதாரத்தையும் கூட நாம் மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டியுள்ளது.

எனக்கு காந்தியை விட மார்க்ஸ்தான் அதிக விருப்பத்துக்குரியவர். ஆனால், என் விருப்பத்துக்குரிய மார்க்ஸோ, மதிப்புக்குரிய காந்தியோ, பெரியார், அம்பேத்கரோ யாராக இருந்தாலும் இன்று முற்றிலும் பொருந்துவார்கள் என்று சொல்ல முடியாது. மார்க்ஸைப் பற்றி லெனின் சொன்னது நினைவுக்கு வருகிறது :

`மார்க்ஸின் காலகட்டம் வேறு, நம் காலகட்டம் வேறு. அது முதலாளித்துவக் காலகட்டம். நம்முடையது ஏகாதிபத்தியக் காலகட்டம். இந்தக் காலகட்டத்தை விளக்க 70 மார்க்ஸ்கள் தேவைப்படுவார்கள்.’ ஆகவே, இந்த முன்னோடிகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதைவிட அவர்களின் வழிகாட்டுதல்களை எடுத்துக்கொண்டு நமக்கான அரசியலை இன்று நாமே உருவாக்கிக்கொள்வதுதான் முக்கியம்.

– ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)

 (இலங்கையில் வெளிவரும் வார இதழ் “மீள்பார்வை” யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்)

 

1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி நோக்குகிறீர்கள் அதன் எதிர்காலம் எவ்வகையில் அமையும் என கருதுகிறீர்கள்?

 

இன்றைய நிலை கவலைக்குரியதாகத்தான் உள்ளது. அமெரிக்கா -இஸ்ரேல் – இந்தியா என்பதாக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. ‘ஷங்காய் கார்பொரெஷன்’, அணிசேரா நாடுகள் (NAM) அமைப்பு போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பு முயற்சிகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. அப்படி ஆனதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அது ஆதரவாக இருக்கும் எனத் தமிழகத்தில் பேசி பாஜகவை  மறைமுகமாக ஆதரித்த தமிழ்த் தேசியர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கின்றனர். இதர அண்டை நாடுகளுடனான, குறிப்பாக நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. உள்நாட்டில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பாஜக ஆட்சி ஏற்பட்டபின் நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, GST வரி விதிப்பு முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணா துன்பத்தை விளைவித்ததோடு அதனால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனும் உண்மை இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் இந்த வெறுப்புகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்க் கட்சிகள் போதிய திறமையுடனும் வலுவுடனும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் மாநிலக் கட்சிகளும் கூடப் பலமிழந்து கிடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை ஊட்டி அதன் மூலம் அரசைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக செய்யும் தீவிர முயற்சிகளும் அவற்றின் விளைவான வன்முறைகள் அதிகரிப்பதும் மிக்க கவலை அளிப்பதாக உள்ளன.

 

2) இந்தியாவில் அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது குறித்து.

 

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியன. 1. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் இப்படியான நவ தாராளவாத, நவ பாசிச சக்திகள் மேலுக்கு வந்துள்ள ஒரு உலகளாவிய போக்கின் ஓரங்கமாகவும் இதை நாம் காண வேண்டு. செப்டம்பர் 11 (9/11) க்குப் பின் உலகளவில் மேற்கொள்ளப்படுகிற “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”, முஸ்லிம் வெறுப்பு முதலியன பா.ஜ.க வளர்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலயாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கைகள், பொருளாதாரத்திலும் சிந்தனையிலும் ஓர் இடது சாய்வு, பஞ்ச சீலம்’ அணிசேரா நாடுகள் முதலான அறம் சார்ந்த அரசியல் கோட்பாடுகள், அணிசேர்க்கை முயற்சிகள் எல்லாம் இன்று அழிந்துள்ளன. இந்த உலகளாவிய பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தையும் நாம் காண வேண்டும். 2. இரண்டாவதாக இதில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் பா.ஜ.க எனும் அரசியல் கட்சிக்குப் பின்னுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிக மிக வலுவான கட்டமைப்பும் வலைப்பின்னலும். மதத்தின் பெயரால் அவர்கள் கட்டமைத்துள்ள எண்ணற்ற அமைப்புகள், அர்ப்பணிப்பு மிக்க தீவிரவாத சக்திகள், காந்தி கொலைக்குப் பின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட காலத்திலும் கூடத் தம்மை அவர்கள் அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வளர்ந்த முறை ஆகியன அவர்களின் இன்றைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் இந்தத் தீவிரப் பணிக்கு இணையாக இங்கு எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இன்று வேலை செய்யவில்லை. பல்லாயிரக் கணக்கான கல்வி நிலையங்கள், ‘சாகா’க்கள் எனப்படும் இராணுவப் பயிற்சிகள், ‘கர்வாபசி’ எனப்படும் மதமாற்றங்கள் என இயங்கும் அவர்களின் தீவிரப் பணிகளை எதிர் கொள்ள இங்கு யாருக்கும் மன உறுதியும் இல்லை. அதோடு இன்று வெளிநாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்தியர்கள் மத்தியில் உருவாகிவரும் ஒருவகைத் தொலைதூரத் தேசியம் (long distance nationalism) பெரிய அளவில் இவர்களுக்கு நிதி சேகரிக்கவும் உலக அளவில் ஆதரவு திரட்டவும் பயன்படுகிறது. இது குறித்து நான் மிக விரிவாக எழுதிவரும் கட்டுரைத் தொடரை (#இந்துத்துவமும்_சியோனிசமும்) என் முகநூல் பக்கத்தில் காணலாம்.

 

3) முத்தலாக் தீர்ப்பையும் அதற்கு பின்னாலுள்ள அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

முத்தலாக் முறை இங்கு முஸ்லிம் சமூகத்தில் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்க்கு எதிரானவர்கள் அல்ல. குர்ரானிய நெறிமுறைகளுக்கு மாறாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லிக் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களின் நியாயங்களைத்தான் இவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இங்கொன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் கட்டுப்பெட்டித் தனமான ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ உட்பட முஸ்லிம் உலமாக்களும் கூட யாரும் இபந்த்டி தொலைபேசி மூலம், தபால் மூலம் முத்தலாக் சொல்வதை எல்லாம் ஏற்பதில்லை. இருந்தாலும் ஆங்காங்கு இது ஒரு சிறிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது உண்மை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. கூடுதலாக நீங்கள் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அமசம் என்னவெனில் இந்திய நீதிமன்றங்கள் பல காலமாகவே இந்த ஒரே நேர முத்தல்லாக்கைச் (Instant triple Talaq) சட்டபூர்வமானது என ஏற்பதில்லை. நீதிநெறிமுறை ஊடாக உருவாக்கப்படும் கோட்பாடாக (judicially evolved principle) இன்று இது செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இதன் மூலம் உரிய நீதி வழங்கப்பட்டுள்ளனர். அதே போல முத்தலாக் சொல்லப்படும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பதையும் இந்திய நீதிமன்றங்கள் உறுதியாகக் கடை பிடித்து வந்துள்ளன. குடும்பத்திற்குள் பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் பொதுவான “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட”த்தின் மூலம் முஸ்லிம் பெண்களும் நீதி பெற முடியும். இம்மாதிரியான பல வழக்குகளையும் தீர்ப்புகளையும் நான் எனது நூலிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். பிரச்சினை என்னவெனில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் குறைந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இப்படியான உரிமைகள் நடைமுறையில் இருப்பதை எல்லாம் முஸ்லிம் ஜமாத்கள், அரசியல் அமைப்புகள், மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களால் கீழே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரே நேர முத்தலாக்குகளும் இங்கே நடைமுறையில் இருந்தன. இதனால் சமூகத்தின் கீழ்த் தட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

முஸ்லிம் வெறுப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து இயங்கும் பா.ஜகவின் ஒரு முக்கிய ஆயுதம் முஸ்லிம் தனி நபர் சட்டத்தை (Muslim Personal Law) ஒழித்துக் கட்டுவது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான். திருமணம், வாரிசு, வக்ஃப் சொத்துக்கள் முதலானவை மட்டும் தனி நபர்ச் சட்டத்திற்குள் வருகின்றன. அதையும் ஒழிப்பது என்பது முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தையே அழிப்பது என்கிற வகையில் இந்துத்துவத்தின் இந்த முயற்சியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் எதிர்த்து வருகின்றனர்.

 

இந்தப் பின்னணியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண் தனக்கு அளிக்கப்பட்ட முத்தல்லாக்கிற்கு எதிராக ஒரு முஸ்லிம் பெண் ஒரு வழக்குரைஞரை அணுகினார். அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். அவர் அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது என்பதற்கு அப்பால் தலாக் கிற்கே எதிராக அந்த வழக்கைத் தொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடி இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானார். பா.ஜ.க அரசும் இதற்கு ஆதரவாகக் களத்தில் புகுந்தது. இதில் வெற்றி அடைந்தால் இதன் மூலம் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்பது அதன் கணக்கு.

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு இப்போது வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: (அ) ஒரே நேர முத்தலாக் செல்லாது (ஆ) இந்தத் தீர்ப்பு முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தின் மீது பிற விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது (incobsequential) (இ) தனிநபர்ச் சட்டம் முதலான மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதோ மதம் தொடர்பான நடவடிக்கைகளில் நுழைந்து அவை சரி, தவறு எனச் சொல்வதோ நீதிமன்றத்தின் வேலை அல்ல – என்பன தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். ஆக இது உண்மையில் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கும் தீர்ப்புத்தான். இதன் மூலம் தனி நபர் சட்டங்கள் என்பன அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்கிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரே நேர முத்தலாக் செல்லாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். எனவேதான் முஸ்லிம் சட்ட வாரியமே இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. மோடி அரசு இது ஏதோ தனக்கு வெற்றி எனச் சொல்லிக் கொள்வது தன் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்குத்தான்.

 

4) இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்புக்கள் அதிகரிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்ன?

 

நான் ஏற்கனவே சொன்னவைதான். இதை உலகளாவிய ஒருவகை அரசியல் அற வீழ்ச்சியின் விளைவாகவும், இந்தியாவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் பின்னணியிலும் பார்க்க வேண்டும். கூடுதலாக உலகமயச் செயற்பாடுகளின் ஊடாக மத்தியதர வர்க்கம் ஊதிப் பெருப்பதும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இவர்கள் மத்தியில் தேசப் பாதுகாப்பு / அதற்கு ஆபத்தாக பாகிஸ்தான் அருகமைந்திருப்பத /, அது ஒரு முஸ்லிம் நாடாக இருப்பது / இந்திய முஸ்லிம்கள் அதற்கு விசுவாசமாக உள்ளனர் என்பன போன்ற அடிப்படைவாதக் கருத்துக்கள் எளிதில் செல்லுபடியாகின்றன.

 

5) அண்மையில் நரேந்திர மோடி இலங்கை வந்தார். இப்பின்னணியில் இலங்கையில் இந்திய அரசியலின் தாக்கம் எந்தளவு தூரம் இருக்கும்?

 

போருக்குப் பிந்திய சூழலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய மூலதனத்தை விரிவாக்குவது, இலங்கை சீனாவுக்கு நெருக்கமாவதைக் கூடிய வரையில் தடுப்பது என்பனதான் மோடி அரசின் நோக்கம். அதற்கு மேல் தமிழர் நலனை முதன்மைப்படுத்தியதாக அவரின் அணுகல் முறை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திரிகோணமலை துறைமுகக் கட்டுமானப் பணியில் பங்கு, திரிகோணமலை மற்றும் ஹம்பந்தோட்டாவில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பங்கு முதலியவைதான் இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுப் பொருளாக அமைந்ததே ஒழிய போர்க் குற்ற விசாரணை, தமிழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுதல், காணாமற் போன தமிழர்கள் பற்றிய உண்மைகள், இலங்கை இந்திய ஒப்பந்த நிறைவேற்றம் ஆகியவை பேசப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மோடியின் வருகை மகத்தான வெற்றி எனவும் இரண்டு பிரதமர்களுக்கும் இடையேயான ‘இரசாயனம்’ படு பிரமாதமாக ஒத்துப் போவதாகவும் இலங்கை அமைச்சர் சரத் அமானுகமா சொல்லியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஒன்றை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனி ஈழம் அமைய அது உதவாது. இலங்கை சிங்கள இனவாத அரசுகளுக்கே அது துணையாக அமையும். தனி ஈழம் பிரிந்தால் அது இந்தியா சிதைய ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதே இந்திய அரசியலாரின் புரிதல். தமிழ் அல்லது இந்து எனும் அடையாளத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு தனக்கு உதவும் என எண்ணி ஈழத்தில் சிவசேனா போன்ற பெயர்களில் இந்து அடையாளங்களுடன் கூடிய அமைப்புகளை உருவாக்கும் மறவன் புலவார், யோகேஸ்வரன் முதலானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் என்கிற அடிப்படையிலும் சிங்கள இனவெறிக்குப் பலியாகிறவர்கள் என்கிற அடிப்படையிலும் இணைந்து நிற்க வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் பிளவுபடுவதற்கே இது இட்டுச் செல்லும். இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சென்ற முறை இலங்கை வந்தபோது தமிழ்த் தலைவர்கள் அவரைச் சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவாறு வடக்கு – கிழக்கு மாௐஆணங்களின் இணைப்பை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியபோது என்ன நடந்தது? இனிமேல் இந்தியா அதை வற்புறுத்தாது என அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

 

6) இலங்கை அரசியலின் அண்மைக்காலப் போக்குகளை நீங்கள்  எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

போருக்குப் பிந்திய சூழலை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டும், இலங்கை அரசியலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்திய அரசின் நோக்கங்கள், மற்றும் இன்றைய புவி அரசியல் சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கில் கொண்டு அரசியல் காய்களை நகர்த்துவதாக இன்றைய இலங்கை அரசியல், குறிப்பாக தமிழர்களின் அரசியல் இல்லை. மாறாக தேர்தல் அரசியல் சார்ந்த அபத்தங்கள், முரண்கள், பதவிப் போட்டிகள் என்பதாகத் தமிழர் ஒற்றுமை பலவீனமாகும் நிலையே உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி போருக்குப் பிந்திய சூழலில் மேலெழுந்த எந்தக் கோரிக்கையிலும் பெரிதாக முன் நகர்வு இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி முப்பதாண்டுகள் ஆகியும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தத் திசையில் கடந்த ஓராண்டில் சில நகர்வுகள் தென்பட்டபோதும் இன்னொரு பக்கம் பவுத்த தலைமைப் பீடம் அதை வெளிப்படையாக எதிர்த்துள்ளதால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அமைப்பில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுவதைப் பற்றி இலங்கை அரசோ பவுத்தத தலைமையோ கவலைப்படுவதாக இல்லை.

 

7) சர்வதேச அரசியல் போக்குகள் குறித்து..

 

நான் முன்னரே சொன்னதுதான். சோவியத்தின் வீழ்ச்சி என்பது வெறும் சோவியத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கத் தலைமையிலான NATO வுக்கு மாற்றாக அமைந்த COMECON, NAM எதுவும் இன்று இல்லை. லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் சற்றுத் தாக்குப் பிடித்தாலும் அவை பொருளாதார ரீதியாகப் பலவீனமாகவே உள்ளன. சோவியத்திலிருந்த பிரிந்த நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை NATO வில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வாக்குறுதியை மீறி இன்று அவை அதில் உள்ளடக்கப்படுவது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கொல்லைப்புறம் வரைக்கும் இன்று NATO படைகளும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பனிப்போர்க் கால முடிவுக்குப் பின்னும் கூட இன்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும்தான் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட அரபு எழுச்சி மிகவும் நம்பிக்கையூட்டத் தக்கதாகத் தொடக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லை. மீண்டும் எகிப்தில் இராணுவ ஆட்சி; துருக்கியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு வேகமாக உள்ளது. நம் கண்முன் அழிந்து கொண்டுள்ள சிரியா இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள அற வீழ்ச்சியின் ஒரு பௌதிக வெளிப்பாடு. முஸ்லிம் நாடுகள் மத்தியில் அமெரிக்க ஏஜன்டாக இருந்து செயல்படும் சவுதி அரசின் செயல்பாடுகள் மிக ஆபத்தானவையாக உள்ளன. எனினும் உலக மயமான முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திப்பது தொடர்கிறது. முதலாளியம் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்கிற மார்க்சின் கணிப்பு பொய்க்கவில்லை. தொழிலாளிகளின் தலைமையில் சோஷலிச அரசு என்பதுதான் இன்று பொய்த்துள்ளது.

 

8) அறிவுஜீவிகள் எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை கையாள்கிறார்கள்?

 

சமூக ஊடகங்கள் நமது கால கட்டத்தின் ஒரு மிக முக்கியமான வளர்ச்சி. முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஒரு வகையில் எதேச்சாதிகார அரசுகளுக்குமே கூட அது ஒரு மிகப் பெரிய சவால். உண்மைகளை இனி அவ்வளவு எளிதாக அதிகாரத்தின் துணை கொண்டு மறைத்துவிட இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பதை நோக்கி இன்று அதிகாரங்கள் நகர்கின்றன. ஒரு ஜனநாயகப் படுத்தப்பட்ட ஊடகம் என்கிற வகையில் எளிதில் அது அக்கப்போர்களால் நிரம்புகிற ஆபத்தையும் நாம் கூடவே காண முடிகிறது. இந்த ஊடகங்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது என்பது நம் கையில்தான் உள்ளது. இதற்கான சரியான பயிற்சியை நாம் இளைஞர்களுக்கும் இயக்க அணிகளுக்கும் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நிச்சயமாக இவை பயனுள்ள, சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நமக்கு அமையும்.

 

மிக்க நன்றிகள்…