பாஜக இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்

இந்தத் தேர்தலில் நமது நிலைபாடு என்னவாக இருக்க முடியும்?

யோசித்துப் பார்த்தால் ஒரு எதிர்மறையான பதிலைத்தான் நாம் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆம். யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்பதைத்தான் நாம் அழுத்திச் சொல்ல முடியும். அதிலிருந்துதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை நாம் தருவித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

உறுதியாக பா.ஜ.கவையோ, அதை ஓர் அங்கமாக்கிக் கூட்டணி அமைத்திருக்கும் எந்த ஒரு கட்சியையுமோ நாம் ஆதரிக்கவே முடியாது. அந்த வகையில் இந்த முறை நாம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் ஆதரிக்க முடியும். இப்படியான ஒரு எதிர்மறை அணுகல் முறையின் ஊடாகத்தான் நாம் நம் ஆதரவு குறித்து முடிவெடுக்க வேண்டியதாக நம் சூழல் உள்ளது. இப்படியான ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது  ஏதோ இந்த மாநிலத் தேர்தல் குறித்த ஒன்று மட்டுமல்ல. அகில இந்திய அளவிலான தேர்தல்களிலும் இப்படித்தானே நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணியை நாம் ஆதரிக்க நேர்வதும் இப்படித்தானே. ஒருவேளை பா.ஜ.க எனும் கட்சியே இல்லை என வைத்துக் கொள்வோம். அப்போது  நாம் காங்கிரசை ஆதரிப்போமா என்பது ஒரு கேள்விக் குறிதான். அப்படியான சூழலில் காங்கிரசை நிராகரிப்பதற்கு நமக்குக் காரணங்கள் உண்டு.  குறிப்பாகப் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.கவுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்றை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்த மட்டில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்பன அளவு ரீதியானவைதான். பண்பு ரீதியானவை அல்ல. தனியார் மயம், கார்பொரேட் மயம், அமெரிக்க ஆதரவு என்பவற்றிலெல்லாம் கொள்கை அளவில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன வேறுபாடு? பெரிய அளவில் ஏதும் இல்லை. ஒபாமாவுடன் மன்மோகன் சிங் அணுக் கொள்கை தொடர்பாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா எதைஎல்லாம் விட்டுக் கொடுத்தது என்பதை ஒபாமா தன் நாட்டிற்குச் சென்று அவர்களின் செனட் முதலான அவைகளில் சொன்ன பிறகுதானே நம்மூர் மக்களுக்குத் தெரிய வந்தது. அப்படி நம் மக்களுக்கே சொல்லாமல், நமது உயிர் காக்கும் உரிமைகளை விட்டுக் கொடுத்து நடந்த ஒரு ஒப்பந்தம்தானே அது.

இதேபோல கார்பொரேட் மயம் ஆவது என்பதை எடுத்துக் கொண்டாலும்  காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒரு அளவு மாற்றம்தான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கொஞ்சம் கூடுதல் குறைச்சல் என்பதுதான். மற்றபடி தொழில்களைக் கார்பொரேட் மயப்படுத்துவது என்பதில் பெரிய வேறுபாடுகள் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கிடையாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். மன்மோகன்சிங் தலைமையில் இந்தியா இருந்தபோது இப்படி ஒரு கொரோனா தாக்குதல் ஏற்பட்டிருந்தால் மோடி ஆட்சியில் புலம் பெயர் தொழிலாளிகள் இவ்வாறு வீதிகளில் செத்துத் தொலைந்தது போல அப்போது நடந்திருக்காது. கொஞ்சம் ‘cash transfer’ (பண விநியோகம்) நடந்து இப்படியான நிலை தவிர்க்கப் பட்டிருக்கலாம். பிள்ளைகள் புல்லைப் பிடுங்கி அவித்தும் தின்றிருக்கும் அவல நிலையைப் பத்திரிகைகள் படங்களுடன் பிரசுரிக்கும் நிலை ஏற்படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்குத்தான் பொருளாதாரத் துறை, உலக மயம் முதலானவற்றில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடுகள். மற்றபடி நவதாறாளவாதப் பொருளாதாரம் என்பதை நடைமுறைப் படுத்துவதில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

பண்பு மாற்றம் என இங்கு சொல்வது அரசியலைப் பொருத்தமட்டில் முழுமையான கொள்கை மாற்றத்தைத்தான். காங்கிரசுக்கு இந்த நாட்டை ஒரு இந்து நாடாக ஆக்கும் வெளிப்படையான திட்டமோ இல்லை இரகசியத் திட்டமோ உறுதியாகக் கிடையாது எனலாம். எனினும் அவர்களும் கூட இன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மகாத்மா காந்தியைப்போல உறுதியாக நின்று மத அடையாள அரசியலை எதிர்காமல் அனுசரித்துப் போகிற அளவிற்கு இந்துத்துவம் வலுவாகி உள்ளது. ராகுல் காந்தி சட்டையைக் கழற்றி விட்டு ஆலயம் ஒன்றுக்குள் சென்று நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ”நானும் இந்துதான்”.. ”நானும் இந்துதான்” என்று முரசறைய நேர்ந்ததைப் பார்த்தோமே.

தி.மு.க பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தாங்கள் ஒன்றும் பெரியார் வழியில் வந்தவர்கள் இல்லை. நாத்திகம் எங்கள் கொள்கை அல்ல. பெரும்பான்மை மதவாதம் பற்றிப் பேசுவது எங்கள் வேலையில்லை என்பதாகத்தான் அவர்கள் தம் நிலைபாட்டை இப்போது முன்வைக்கின்றனர். இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்துகொண்டுள்ள அதே நேரத்தில் இன்றைய தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து தீவிர சங்கியான ரங்கராஜ் பாண்டேயின் கருத்தொன்று வெளி வந்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் அது பா.ஜ.க தேர்தல் அறிக்கை என்பது போலத்தான் உள்ளது” – என அவர் கூறி அதைப் பாராட்டியுள்ள செய்திதான் அது.

இடது, வலது கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேல் மே.வங்கத்தில் ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இன்று அவர்கள் எதிர்க் கட்சியாகக் கூட வரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கே அவர்களும், அவர்களின் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசும் இன்று கூட்டணி அமைத்தும் கூட வரும் தேர்தலில் மூன்றாவது அணியாக வரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் அங்கு ஆண்ட அந்த இருபதாண்டுகள் அத்தனை அத்து மீறல்களுடன் இருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் இன்று சுட்டிக் காட்டுகின்றனர்.

எனினும் இன்று இந்திய அளவில் இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆகியோரைத்தான் நாம் ஆதரிக்க வேண்டி உள்ளதற்கு முக்கிய காரணமாக இந்துத்துவ ஆபத்து ஒரு பொது மக்கள் எதிரியாக நம் முன் உள்ளது. அது ஒன்றிற்காகவே நாம் இப்படியான ஆகக் கொடூரமான வாரிசு அரசியல், ஊழல்கள், காடையர்தனம் இன்ன பிற எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நாம் இந்த “மதச் சார்பற்ற கூட்டணிகளுக்கு” வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனெனில் இந்துத்துவம் அரசாள நேர்வது எல்லாவற்றையும் விடப் பெரும் கொடுமை என்பதுதான் முக்கிய காரணம். அது மட்டுமல்ல இன்றைய இந்துத்துவ வெற்றியின் ஊடாக அவர்கள் கற்றுக் கொண்டுள்ள பாடம் அவர்களை ஒரு சுய பரிசோதனை செய்யும் வாய்ப்பிற்குத் தள்ளியுள்ளது என நாம் நம்பலாம்.

எதற்கு நான் இத்தனையையும் சொல்கிறேன் என்றால் இந்துத்துவத்தின் வளர்ச்சி வேகம் ஆக அச்சத்தை ஊட்டக் கூடிய நிலையில் உள்ளது. மதவாத சக்திகளை எதிர்ப்பதே இன்று நம் முக்கிய கடமையாக உள்ளது. எனவே வாக்குகளைப் பிரித்து நாமும் தோற்று, மதச் சார்பற்ற கட்சிகளையும் தோற்கடிக்கக் கூடாது என்கிற நிலையை நாம் ஏற்கிறோம். ஆனால் இந்த இக்கட்டான நிலையை மதச் சார்பற்ற பெரிய கட்சிகள் முற்றிலும் அறமின்றித் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை வேதனையாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இந்தத் தேர்தல் கூட்டணி உருவாக்கத்தின் போது எத்தனை கேவலமாக நடத்தப்பட்டனர்? முஸ்லிம்கள் மத்தியில் இந்திய அளவில் வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ மற்றும் உவைசின் மஜ்லிஸ் கட்சி ஆகியன இந்தத் தேர்தல் கூட்டணியில் எப்படி விரட்டி அடிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் சேர்த்து பன்னிரண்டே தொகுதிகள் என்பதெலாம் எந்த ஊர் நியாயம்? இரண்டுக்கும் சேர்த்து ஒரு 30 தொகுதிகள் ஒதுக்கக் கூட அவர்களுக்குத் தகுதி இல்லையா? தனியாக நின்றால் வெல்ல முடியாது எனும் நிலையைப் பெரிய கட்சிகள் எத்தனை மோசமாகப் பயன்படுத்திக் கொண்டன! பல்வேறு வகைகளில் தனித்துவமாகவும் கொள்கை வேறுபாடுகளுடனும் விளங்கும் கட்சிகளை எல்லாம் தங்கள் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்தால்தான் கூட்டணியில் இடம் என மிரட்டும் கூட்டணிச் சர்வாதிகாரம் எத்தனை கொடிது?

முஸ்லிம் கட்சிகளின் நிலை இப்படி என்றால் தமிழ்க் கிறிஸ்தவ மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அரசியல் பிரக்ஞையையும் ஒற்றுமையையும் கிறிஸ்தவர்களிடம் காண முடியாது. கிறிஸ்தவத்திற்குள் ஊடுருவியுள்ள சாதி வேறுபாடுகள், தீண்டாமை முதலியன இப்படியான ஒரு அரசியல் ஒற்றுமை அவர்கள் மத்தியில் உருவாகாததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் செல்வாக்காக உள்ள தம் மத நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என்கிற நம்பிக்கையும் அவர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது.  அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் ஒரு நிகழ்வை நினைவூட்டுவது வழக்கம். சுமார் எழுபதாண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் ஒருமுறை திரளாக வந்து அண்ணல் அம்பேத்கரைச் சந்தித்து அறிவுரை கேட்டார்கள். சற்றும் தயங்காமல் அம்பேத்கர் சொன்னதின் சாராம்சம் இதுதான்: “நீங்கள் முதலில் அரசியல்படுங்கள்… தலித்கள் உங்கLளைவிடக் கல்வி முதலியவற்றில் முன்னேற்றம் அடையாமல் இருந்தபோதும் இன்று ஓரளவு அவர்கள் படித்து மேலுக்கு வருவதற்கெல்லாம் காரணம் அவர்கள் அரசியல் பட்டிருப்பதுதான். நீங்களும் அரசியல் படுங்கள்..” – என்றார். மீண்டும் இந்தத் தேர்தல் நேரத்திலும் அதைத்தான் சொல்ல வேண்டி உள்ளது. கிறிஸ்தவர்களும் ஒரு அரசியல் உணர்வுமிக்க சமூகமாகப் பரிணமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பா.ஜ.க ஆட்சி என்பதன் ஆபத்தை உணர வேண்டும். அதற்கு யாருடன் இணைந்து நிற்பது எனும் தெளிவு வேண்டும்.

இந்தியா ஏராளமான மக்கள் தொகை உள்ள ஒரு நாடு. பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள் என உள்ள ஒரு நாடு. இங்கே அமெரிக்கா போலவெல்லாம் இரு கட்சி ஆட்சி முறை அமைய முடியாது. அமையவும் கூடாது. ஆனால் இன்றைய கூட்டணிச் சூழல் அப்படி ஒரு இரு கட்சி ஆட்சி முறையை உருவாக்கியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிச் சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகள், இனம், மொழி என இத்தனை வேறுபாடுகள் மிக்க ஒரு மக்கள் திரளுக்கு இப்படிக் கூட்டணி வடிவத்தில் இரு கட்சி ஆட்சி பொருத்தமில்லை. ஆனால் இன்றைய கூட்டணிக்குள் நடந்த தொகுதிப் பகிர்வுகளில் சிறு கட்சிகள் அவற்றுக்குரிய மதிப்புகளுடன் நடத்தப்பட்டனவா எனும் கேள்வியை நாம் சற்றே எழுப்பிப் பார்க்க வேண்டி உள்ளது. கூட்டணிக் கட்சிகள் தம் தனித்துவத்தைக் காட்டும் வண்ணம் தனிச் சின்னங்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு அடிப்படை ஜனநாயகம் இல்லையா? அது மறுக்கப்படும்போது அது ஒருவகையில் அக்கட்சிகளின் அடையாளத்தை மறுப்பதுதானே.

எப்படியோ பா.ஜ.க இல்லாத வலுவான கூட்டணி ஒன்றாவது நமக்குக் கிடைத்துள்ளதே என்பதுதான் நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.

இங்கே ”வலுவான” என நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிராகக் கிளம்பியுள்ள கமல ஹாசன், சீமான் முதலானோரின் கட்சிகள் மதச் சார்பற்ற வாக்குகளைப் பிரித்து மதவாத சக்திகளுக்குத் துணை புரியும் நிலையை எண்ணித்தான். தலித்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோர் இதில் ஏமாறக் கூடாது. கவனமாக இருத்தல் அவசியம்.

இத்தனையையும் கணக்கில் கொண்டுதான் நாம் வரும் தேர்தல் குறித்த முடிவை எடுத்தாக வேண்டும். ஒரு காலத்தில் காமராசர் “எல்லாம் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்’ என்றார். நாம் அப்படிச் சொல்லாவிட்டாலும் நாம் ஆதரிக்க நேர்பவர்கள் குறித்து அதிக நம்பிக்கை நமக்குத் தேவை இல்லை. கட்சிக்காரர்கள் வேண்டுமானால் அப்படி நம்பிக்கை ஊட்டலாம். மக்கள் அப்படி நம்ப வேண்டியதில்லை. ஆனாலும் இன்று நாட்டை எதிர்நோக்கியுள்ள ஆபத்தை மனதிற்கொண்டு நாம் பா.ஜ.கவையும் அதன் கொடியை ஏந்தி வலம் வரும் எடப்பாடி கும்பலையும் இந்தத் தேதலில் நிலைகுலைய வைப்பது அவசியம்.

முன்னாள் நக்சல்பாரி இயக்கங்களிலிருந்து பிரிந்து இன்று பல்வேறு குழுக்களாகச் செயல்படும் சுமார் 50 சிறு அமைப்புகள் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒட்டிச் சமீபத்தில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் ஒற்றை வரியில் தங்கள் முடிவை அறிவித்தனர். அது, “பா.ஜ.க வை வீழ்த்துவோம்” என்பது. அடுத்த சில தினங்களில் அந்த அந்த ஒருமிப்பை ஏற்பாடு செய்ததில் முன்னணியாக நின்ற தோழர்கள் நால்வர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இன்றும் அவர்கள் கோவைச் சிறையில் வாடுகின்றனர். ”பா.ஜ.கவை வீழ்த்துவோம்” எனும் குரலை பாசிஸ்டுகள் எத்தனை கொடூரமாய் எதிர்கொள்கின்றனர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது.

பா.ஜ.கவை வீழ்த்துவோம்! பா.ஜ.க இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்!!.

அமெரிக்கத் தேர்தல் : ட்ரம்பின் வீழ்ச்சியும் ஜோ பைடனின் வெற்றியும்

Biden Supporters

.மார்க்ஸ்

நடந்து முடிந்துள்ள அமெரிக்காவில் தேர்தல் குறித்து எழுதத் தொடங்கும்போது இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு வன்முறை நடந்தேறியுள்ளது. உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் பெரும்பான்மை அடிப்படையில் ஐயத்திற்கு இடமின்றி வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை ஒன்றை அரங்கேற்றியுள்ளார் தேர்தலில் தோற்றவரும் தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப். ஐந்து பேர்கள் இறந்துள்ளனர். சுமார் 50 பேர்கள் வரை காயமடைந்துள்ளனர். உலகமே இன்று ட்ரம்பைக் கண்டித்துள்ளது. அவரைத் தன் முன்மாதிரியாக்க் கொண்டுள்ள நரேந்திர மோடியும் வேறு வழியின்றி மெல்லிய குரலில் கண்டித்துள்ளார். கடும் கண்டன்ங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் இப்போது தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கத் தேர்தல்முறை; ஒரு குறிப்பு

அமெரிக்கக்  குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. ஒரு ஜனாதிபதி, அவர் எவ்வளவு செல்வாக்கு உடையவராக இருந்தபோதும் இரண்டு முறைகள் – அதாவது எட்டாண்டுகளுக்கு மேல் அதே பதவியில் தொடர முடியாது. அதற்குப்பின் அவர் மீண்டும் போட்டியிட முடியாது. வேறெப்படியும் அரசியல் அதிகாரத்தைச் செலுத்தவும் முடியாது.

பதவி ஏற்ற நான்காவது ஆண்டில் நடைபெறும் அடுத்த தேர்தலில் மட்டும் அவர் நிற்கலாம். வெற்றி பெற்றால் இன்னொரு நான்காண்டுகள் அவர் பதவியில் தொடரலாம். எனவே யாரும் ஆயுளுக்கும் பதவியில் இருக்க முடியாது. தனக்குப் பிந்திய ஜனாதிபதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையும் இல்லை. அவர் சகாப்தம் அரசியல் அளவில் அத்தோடு முடியும்.

அமெரிக்காவில் “ஜனநாயகக் கட்சி” மற்றும் “குடியரசுக் கட்சி” என இரண்டே கட்சிகள்தான் உண்டு. ஜனாதிபதி தேர்தல் என்பது அங்கு ஜனவரியில் தொடங்கி பல்வேறு மட்டங்களில் எட்டு மாதங்கள் நடக்கும். இதில் முதல் கட்டத்தில் (Primary Election) கட்சி வேட்பாளர் யார் என்பதை ஒவ்வொரு கட்சியும் உட்கட்சித் தேர்தல் ஒன்றின்மூலம் தீர்மானிக்கும். அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் ஒவ்வொன்றாக முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி/ பிப்ரவரி முதல் ஜூன் மத்தியில் வரை) கட்சியின் வேட்பாளர் யார் என்பது வாக்களிப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படும். சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் நமது நாட்டில் உள்ளது போலக் கட்சித் தலைமை அடுத்த பிரதமர் வேட்பாளரைத் தீர்மானிப்பதுபோல அமெரிக்காவில் தீர்மானிக்க முடியாது. மாறாகக் கட்சி உறுப்பினர்கள்தான் வாக்களித்து தங்கள் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பர். எனவே கட்சித் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கு தனது அடுத்த அரசியல் வாரிசு யார் எனத் தீர்மானிக்கும் ஆக முக்கிய அதிகாரம் இருப்பதில்லை.

இப்படி முதற்கட்டமாக நடைபெறும் வேட்பாளர் தேர்தலில் ”Primary Election” மற்றும் ”Caucuses”  என இரண்டு வடிவங்கள் உண்டு. Primary Election என்பதை அரசும் அம்மாநில நிர்வாகங்களும் (State and Local Governments) நடத்தும்; Caucuses என்பதில் அரசியல் கட்சிகள் தனியார் அமைப்புகளுடன் இணைந்து இதனை நடத்தும். சில மாநிலங்களில் இரண்டு வடிவமும் கூட இருக்கும்.

இதில் ஒரு நல்லஅம்சம் என்னவெனில் இந்தியா போல அங்கு கொடுமையான ஒரு வாரிசு அரசியல் சாத்தியமில்லை என்பதுதான்.

அமெரிக்கத் தேர்தலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவெனில் வெற்றிபெற்றவர் உடனடியாகப் பதவி ஏற்பது கிடையாது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்தான் பதவி ஏற்பு நடைபெறும். வரும் ஜனவரி 20 அன்றுதான் இப்போது வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனும் துணைத் தலைவராக வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிசும் பதவி ஏற்கின்றனர்.

இந்த இடைவெளியில்தான் ஜனவரி 04 அன்று வரலாறு காணாத வடிவில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியுற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடென் வெற்றி பெற்றதை ட்ரம்ப் அடியாட்கள் ஏற்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு நாட்கள் முன்பு நடந்த இரு தொகுதித் தேர்தல்களிலும் கூட ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக ட்ரம்ப் கட்சியினர் தொடுத்த வழக்கிலும் அவர்களுக்கு வெற்றி இல்லை. ஆனாலும் இப்படி ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை ஏற்க இயலாது என ட்ரம்ப் பிடிவாதம்  செய்தார். இந்த நிலையை ஜனநாயக உணர்வுள்ள எல்லோரும் – அமெரிக்கக் கூட்டாளியான இங்கிலாந்து பிரதமர் உட்பட – கண்டித்துள்ளனர். இந்நிலையில் வேறு வழியின்றி இன்று நரேந்திர மோடியும் கண்டித்துள்ளார். இறுதியில் ட்ரம்ப் பணிய வேண்டியதாயிறு

பெர்னி சாண்டர்சும் ஜோ பைடனும்

இம்முறை நடந்த இந்த முதற்கட்டக் கட்சி அளவிலான தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ்சும் ஜோ பைடனும் போட்டியிட்டனர். உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள் எல்லோரும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெறவேண்டும் என மனதார விரும்பினர். மற்ற நாடுகளைப் போலன்றி அமெரிக்கத் தேர்தல் உலக அளவில் கவனம் பெறுவதை அறிவோம். உலகின் மிகப் பெரிய வல்லரசு என்கிற வகையில் அதற்கு இந்த மதிப்பளிக்கப்படுகிறது. டிரம்பின் இந்த நான்காண்டு கால ஆட்சி, உலகெங்கிலும் வாழும் ஜனநாயக சக்திகள், வெறுப்பு அரசியலை வெறுப்போர் என எல்லோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததை அறிவோம். அந்த வகையில் எப்படியாவது இம்முறை அங்கு ஜனநாயக் கட்சி வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம். அதிலும் ஜனநாயகக் கட்சிக்குள் ஜோ பைடனைக் காட்டிலும் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றால் நல்லது என நினைத்தோம்.

பெர்னி சாண்டர்ஸ் ஒப்பீட்டளவில் அமெரிக்க அரசியல் எல்லைக்குள் பைடனைக் காட்டிலும் கூடுதலான இட்துசாரிப் பண்புகளைக் கொண்டவர். ஒருவகையான “ஜனநாயக சோஷலிஸ்ட்” என அவர் குறிப்பிடப்படுவார். பொதுவான வகையில் எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைக் கொள்கையாகக் கொண்டவர் என இவர் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவைப் பொருத்தமட்டில் “எல்லோருக்கும் பயனளிக்கும் பொருளாதாரத் திட்டம்” என்பதுதான் ஆக முற்போக்கான அணுகல் முறை. தொழிலாளிகள் மற்றும் ஏழை எளியோர்களுக்குப் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கை என்றெல்லாம் அங்கு பேச இயலாது. ட்ரம்ப் அல்லது இதர குடியரசுக் கட்சியினரைப்போல வெளிப்படையாக முதலாளியப் பொருளாதாரத்தை ஆதரிக்காத நிலை என்பதே அங்கு பெரிய முற்போக்கு அரசியல்தான்.

”கல்வி உரிமை எல்லோருக்குமானது- பணம் உள்ளவர்களுக்கே சிறந்த கல்வி என்பது கூடாது”,

“மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது என்கிற வகையில் கருச்சிதைவு செய்துகொள்வதைக் குற்றமாக்கக் கூடாது”,

”மத்திய அளவில் குறைந்த பட்ச கண்ணியமான ஊதிய நிர்ணயம் செய்தல்”, “எல்லோருகுமான நலவாழ்வுத் திட்டம்,”

“போர் எதிர்ப்பு”,

“நிகரகுவா, கியூபா போன்ற சற்றே இடதுசாரி அணுகல்முறையுள்ள நாடுகளைக் கடும் எதிரியாகப் பாராமை”,

“இஸ்ரேலின் யூத இனவெறியைக் கண்டித்தல்”

-முதலான அம்சங்களில் இவ்வாறு சாண்டர்ஸ் ஒப்பீட்டளவில்  முற்போக்கான கொள்கைகளைக் கொண்டவராக இருந்தார். அதனாலேயே அவர் முதற்கட்டத் தேர்தலிலேயே தோற்கடிக்கவும் பட்டார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது டெல்லியில் நடந்த வன்முறை அதில் முஸ்லிம்கள் அதிக அளவில் கொல்லப்பட்டது ஆகியவற்றை சாண்டர்ஸ் கண்டித்ததும், அதை சங்கிகள் இங்கு எதிர்த்ததும் நினைவுகூரத் தக்கது.

சாண்டர்சைக் காட்டிலும் பைடனை ஜனநாயகக் கட்சியினர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவர் நின்றால்தான் ட்ரம்புக்கு எதிரான வெற்றி வாய்ப்பு அதிகம் (electability in the general election)  என்பதே காரணம் என ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது. அதாவது அமெரிக்க மக்களின் உளவியலின்படி பெர்னி சாண்டர்ஸ் கொள்கை அளவில் ஒரு தீவிரவாதி (!). எனவே அவரை வேட்பாளராக நிறுத்தினால் பொதுவானவர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். எளிதில் மீண்டும் ட்ரம்பே வெற்றி பெறுவதற்கு அது இட்டுச் செல்லும். எனவே ஒப்பீட்டளவில் மிதவாதியான ஜோ பைடனை ஆதரிப்பதே வெற்றி வாய்ப்புக்கு வழியாக இருக்கும் என அவர்கள் கட்சியில் இருந்த சற்றே முற்போக்கானவர்களும் கூட நினைத்தனர் என்பது இதன் பொருள்.

பைடனைப் பொருத்த மட்டில் அவர் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே ஒரு வலதுசாரி எனலாம். அவர் துணைத்தலைவராக இருந்த காலத்தில் ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைகளை ஆதரித்தவர் அவர். குடிமக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு முதலானவற்றிலும் அவர் அப்படி ஒன்றும் முற்போக்கான பார்வையைக் கொண்டவரல்ல. இப்படியான முதலாளிய ஆதரவு வலதுசாரி அணுகல் முறைகளே  ஆமெரிக்க ஜனநாயகத்தில் வெற்றி வாய்ப்புக்கு உரியன என்பது கவனத்துக்குரியது.

இந்திய அமெரிக்க உறவின் எதிர்காலம்

இந்திய – அமெரிக்க உறவைப் பொருத்தமட்டில் மன்மோகன் ஆட்சிக் காலம் தொட்டே இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாகி வந்ததை அறிவோம். இந்த நிலை மோடி ஆட்சியில் மிக அதிகமாகியது. இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ட்ரம்ப் ஆளுகையின்போது இது உச்சத்தைத் தொட்டது. செய்தித் தொடர்பு வலுவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் (Defence cooperation pacts like the Communications Compatibility and Security Agreement – COMCASA),  தொழில் பாதுகாப்பு இணைப்பு (Industrial Security Annex -ISA), மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் முதலியன எல்லாமும் இனி பைடனின் ஆட்சியிலும் பெரிய மாற்றங்கள் இன்றித் தொடரும் எனவும், இராணுவ ரீதியான நெருக்கத்தில் குறைவு ஏதும் இருக்காது என்றும் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த ஆண்டுகளில் கால்வான் முதலான எல்லைப் பகுதிகளில் சீன – இந்திய மோதல்கள் ஏற்பாட்டுள்ள நிலையில், ஏற்கனவே சீனாவுடன் இலங்கைத் தீவு இன்னும் நெருக்கமாக உள்ள சூழலில், பொது எதிரியான சீனாவுக்கு எதிராக இந்திய – அமெரிக்க உறவு நெருக்கமடைந்திருப்பதை அறிவோம்., மிகப் பெரிய அளவில் இந்தியா அமெரிக்காவுடன் ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்திய – அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சிகள் முதலியன ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதையும் நாம் அறிவோம். பைடனின் ஆட்சியில் இதிலெல்லாம் எந்த மாற்றங்களும் இருக்காது என இது தொடர்பான கட்டுரைகள் குறிக்கின்றன (Dr. Bappaditya Mukherjee, Joe Biden’s foreign policy priorities and interests: Implications for India, Financial Express, December 21, 2020).

பைடனின் ஆட்சிக் காலத்தில் பருவநிலை மாற்றம் முதலிய பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் மத்திய கிழக்கு நடவடிக்கைகளில்  ட்ரம்ப் கால அணுகல்முறையில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பது கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர் கொள்வதைப் பொருத்தமட்டில் ஒபாமா கால அணுகல்முறை தொடரும் என்கின்றனர்.

கமலா ஹாரிஸ் நம்ம ஊர் மாமியா?

பைடனால் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ”கமலா ஹாரிஸ் மன்னார்குடி அய்யராக்கும். தினம் அவ இட்லிதான் சாப்பிடுறாள்” என இங்கே பார்ப்பனர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கூட, குறிப்பாக அ.தி.மு.க வினர் கும்மியடித்து மகிழ்ந்ததைப் பார்த்தோம்.

அந்த அம்மையாரை தமிழாள், பிராமணாள் என்றெல்லாம் இவர்கள் கொண்டாடுவது அபத்த நகைச்சுவை. அவர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் செட்டில் ஆன ஒரு குடும்பத்தில் அங்குள்ள இனக் கலப்பில் பிறந்தவர். சரி ஏதோ ஒரு வகையில் தமிழ் நாட்டு இரத்தம் ஓடுகிறது என்று கற்பித்துக் கொண்டாலும் அதில் பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை அவரது முந்திய சில அணுகல் முறைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜோ பிடென் இவரைத் தனது துணைத் தலைவர் வேட்பாளாரகத் தேர்வு செய்தபோதே பைடனை ஆதரித்த பலரும் முகம் சுளித்தனர். எனினும் அதை ஒரு பிரச்சினை ஆக்கி பைடனின்  வெற்றியக் கெடுக்க வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் மௌனம் காத்தனர். பைடனை ஆதரித்தவர்களின் தேர்வு இந்த அம்மையார் அல்ல. முன்னதாக பெர்னி சாண்டர்ஸ் துனைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்திருந்த எலிசபெத் வாரன்தான் சரியான தேர்வு என்பதே ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் பைடென் பிடிவாதமாகக் கமலா ஹாரிசையே தேர்வு செய்தார்.

கமலா ஹாரிசை சாதாரண மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?

முன்னதாக அந்த அம்மையார் சான்ஃப்ரான்சிஸ்கோவில் மாவட்ட அட்டர்னி ஜெனரல் ஆகவும் பின்னர் கலிஃபோர்னியா மாநில அட்டர்னி ஜெனெரல் ஆகவும் இருந்தபோது அவர் எடுத்த சில பிற்போக்கான நிலைபாடுகள் அவர் எப்படியானவர் என்பதை நிறுவி இருந்தன. பெரும்பாலான அடித்தள மக்களுக்கு, குறிப்பாகக் கருப்பின மக்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அவர் எதிராக இருந்தார் என்பதுதான் அவர் மீதான அதிருப்தியின் காரணம். உயர் நிலை மேல்தட்டினருக்கேயான ஒழுக்கவாத அணுகல்முறையுடன் அச்சட்டங்களை அவர் அணுகியதுதான் அவரது அத்தகைய நிலைபாட்டிற்குக் காரணமாக இருந்தன. சில எடுத்துக்காட்டுகள் இப்போது சுட்டிக் காட்டப்படுகின்றன. அவை:

(1) மாணவர்கள் மூன்று முறை அவர்களின் பாட வகுப்புகளுக்கு சுமார் 30 நிமிடங்கள் வரை வராதிருந்தால் அவர்களை (தண்டனைக்குரிய சிறு குற்றங்களைச் செய்த) குற்றவாளிகளாக ஆக்கும் சட்டத்தை (truancy as a misdemeanor) கமலா ஆதரித்தார்.

(2) போதைப் பொருளான மரிஜுவானாவைப் பழக்கமாக இல்லாமல், எப்போதாவது கொண்டாட்டங்களின் போது பாவிப்பதைப் (use of recreational marijuana) பெருங் குற்றமாக ஆக்கக் கூடாது என்கிற கருத்து சட்டமாக்கப்படுவதை அவர் எதிர்த்தார்.

(3)இந்திய உயர்சாதிப் பாரம்பரியத்தில் வந்தவரல்லவா, அவர் மரண தண்டனையை ரத்து செய்யும் சட்ட ஆக்கத்திற்கும் (death penalty initiative) எதிராக இருந்தார். மரண தண்டனை ரத்துக் கருத்துக்கள் மேலுக்கு வந்த இரு முறைகளும் அவர் அவ்வாறே நிலைபாடுகளை எடுத்தார்.

(4) கருப்பின மக்கள் இருவர் காவல்துறையால சுட்டுக் கொல்லப்பட்டபோது அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.

கமலாவின் தேர்வை எதிர்த்துக் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என பைடனின் ஆதரவாளர்கள் மௌனம் சாதித்தபோதும், அவரது தேர்வைக் கண்டித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். ’சன்ரைஸ்’ இயக்கத்தின் (Sunrise Movement) அரசியல் இயக்குநர் ஈவான் எபெர் ஜோ, கமலாவின் தேர்வை பைடனின் சொந்தத் தேர்வு எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார். பெர்னி சாண்டர்சுக்கு ஆதரவான “அவர் ரெவொல்யூஷன் (Our Revolution) அமைப்பின் லாரி கோஹென், ”கமலா ஒன்றும் எலிசபெத் வாரென் அல்லது கரேன் பாஸ் அளவு இல்லை ஆயினும்… இப்போது அதை விமர்சிப்பதில் பொருளில்லை என நினைக்கிறேன்,,” எனத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். எப்படியாவது ட்ரம்ப் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகவும் இருந்ததால் யாரும் இதைப் பெரிய பிரச்சினை ஆக்கவில்லை..

பைடனும் ஒரு நேரத்தில் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். அவர் குறித்தும் கூட அப்படி ஒன்றும் பெரிய மரியாதை எல்லோருக்கும் இருந்தது எனச் சொல்ல முடியாது. தீவிரமானவராக இல்லாதபோதும் ஓரளவு அனுசரித்துப் போகக் கூடியவர் எனும் நம்பிக்கை ஜனநாயகக் கட்சிக்கார்களுக்கு பைடென் மீது இருந்தது. அவ்வளவுதான். ஆனால் அப்படியான நம்பிக்கை கமலா ஹாரிசிடம் அவர்களுக்கு இல்லை. எனினும் சகித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.

பைடென் ஜனாதிபதி நாற்காலியைக் குறி வைத்து இயங்கியது குறைந்தபட்சம் இது மூன்றாவது தடவை. மிக மோசமான இனவாதியாக அறியப்பட்ட ஸ்ட்ரோம் தெர்மோண்டின் ஆதரவாளராக இருந்தவர் பைடென். தெர்மோண்ட் புகழ்பெற்ற அமெரிகக் குடியரசுத் தலைவர்களில் ஒருவரான ஃப்ரான்க்லின் டி ரூஸ்வெல்ட்டை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர். பைடன் , எல்லோரையும் விட்டுவிட்டு, கமலா ஹாரிசைத் தன் சகபாடியாகத் தேர்ந்தெடுத்தபின் பலரும் இதை எல்லாம் நினைவு கூர்கின்றனர்.

பைடெனுக்கும் கமலா ஹாரிசுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே உறுதியான கொள்கைகள் உடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் இல்லை. அமெரிக்க அரசியலில் இந்த “ஹெல்த் இன்சூரன்ஸ்” என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை அறிவோம். அதிலும் கமலா நிலையான கருத்தை முன்வைத்ததில்லை. முதலில் அரசாங்கமே இன்சூரன்ஸ் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென பல்டி அடித்து இன்னொரு திட்டத்தை அவர் முன்வைத்ததையும் இன்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிடென் கமலாவைத் தேர்ந்தெடுத்தது இப்போதைக்கு ட்ரம்பை வீழ்த்துவது எனும் நோக்கில் எல்லோராலும் மௌனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இனி ஜனநாயகக் கட்சியின் எதிர்காலம் கமலா போன்றவர்களின் கையில் போவது குறித்த கவலை இனவாதத்தை எதிர்க்கும் எல்லோர் மனத்திலும் உருப்பெற்றிருப்பதை இது குறித்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் முற்போக்குச் சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.

மொத்தத்தில் இந்த பிடென் – கமலா வெற்றி என்பதை சாதித்துக் கொடுத்துள்ளது யார் அல்லது எது எனச் சற்று ஆழ்ந்து யோசித்தால் அந்தப் புண்ணியத்தைத் தேடிக் கொள்வது ட்ரம்ப் வெறுப்புத்தான். எப்படியாவது ட்ரம்பைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணம் உள்ளவர்களின் எண்ணிக்கை சற்றே, ஆம் சற்றே, கூடுதலாக உள்ளது என்பது மட்டுமே நாம் இந்தத் தேர்தல் முடிவின் ஊடாகப் பெறும் ஒரே ஆறுதல்.

இஸ்லாமோ ஃபோபியா: அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]

டாக்டர் சல்மான் சய்யித், லீட்ஸ் பல்கலைக் கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.

டாக்டர் நஸியா காஸி, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், அமெரிக்கா:.

இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்

டாக்டர் சஹர் அஸீஸ், ருட்கர்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும்  பேசுவதற்குமான ஒரு கருவி.

டாக்டர் ஹதீம் பாசியான், பர்க்லி பல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.

சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது

சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.

சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.

டாக்டர் சமி அல் அரியான், இஸ்தான்புல் சபாஹடின் சைம் பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.

சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.

ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.

சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.

நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.

டாக்டர் மொகமட் மொரான்டி, டெஹ்ரான் பல்கலைக் கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.

மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கும் ஒன்றாகக் கருதக் கூடாது.

சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.

சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.

நஸியா: அமெரிக்கப் பேரரை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.

நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”

மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.

நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.

மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.

ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.

நன்றி: TRTWORLD – இந்த வெப் சைட்டில் இருந்து தமிழாக்கியுள்ளேன்.

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

@ @ @

பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக்கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து அரசு பல்கலைக் கழகங்களையும் பத்து தனியார் பல்கலைக் கழகங்களையும் இப்படி “உயர் சிறப்புப் பல்கலைக் கழகம்” எனப் பிற பல்கலைக் கழகங்களிலிருந்து தனியே பிரித்து உயர்நிலை நிறுவனங்களாக மாற்றப்படுவது குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கல்வி உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பாஜக அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் அப்போதே இப்படிப் பல்கலைக் கழகங்களில் உயர்வு – தாழ்வுத் தரவேறுபாடுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால் “உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டம்” எனக் கூறிக்கொண்டு பாஜக அரசு கல்வியாளர்களின் இந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக இருந்து இறுதியில் அதை இன்று இப்படி நடைமுறைப் படுத்தவும் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக ஒதுக்கி மேம்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மட்டும் ஒவ்வொன்றுக்கும் 1000 கோடி அளிக்கப்படும் என இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. . இது தவிர மேலும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனக்களும் இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிறுவனங்களில் 100 மாணவர்களைச் சேர்த்தால் அதில் 30 பேர்கள் வரை வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் எனவும், தகுதி – தர அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் என்பதன் பொருள் நமது மாணவர்கள் 30 பேர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுதான். அது மட்டுமல்ல ஆசிரியப் பணியில் 25 சதம்வரை வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 20 சதம் வரை “ஆன் லைன்’ முறையில் கல்வி பயிற்றுவிக்கவும் இவற்றுக்கு அனுமதி உண்டு.

பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் இந்த நிறுவனங்கள் எவற்றை வேண்டுமானாலும் உள்ளடக்கிக் கொள்ளலாம். (complete flexibility in curriculum and syllabus). இது பொறியியற் கல்விக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையையும் பாடமாகச் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு வழி செய்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பாடங்களில் இது என்ன மாதிரித் தகிடுதத்தங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை என்னவெனில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இந்நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களாயினும் சரி, உள் நாட்டு மாணவர்களாயினும் சரி UGC, ACTE முதலானவற்றின் ஒப்புதல் எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாமே நம்மவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியதுதான். தகுதி, திறமை எனும் பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவுகள் உயர் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பல்கலைக் கழக மான்யக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் கடிதம் ஒன்றை [D.O.No. 1 – 18 / (CPP.II)] அனுப்பியுள்ளது. அதில், ”தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ’தேசிய கல்விக் கொள்கை (2020) இன் அடிப்படையில் உரிய சீர்திருத்தங்களைச் (governance reforms) செய்தாக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்தமாதத் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா ஒரு அதிரடி நடவடிக்கையைச் செய்தார். அப்பல்கலைக் கழகம் IoE நிலை பெறுவதற்குத் தேவையான முதலீடான 1500 கோடி ரூபாய்களையும் தானே திரட்ட முடியும் எனவும், தொடர்ந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய்களையும் தன்னால் திரட்டமுடியும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது அம்பலமானவுடன் இப்போது இந்த IoE பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது,.

இந்தப் பெருந் தொகையை ஒரு பல்கலைக் கழகம் எப்படித் திரட்ட முடியும்? மாணவர் கட்டணம், தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் ஆகிவற்றை எல்லாம் உயர்த்தாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

இல்லை IoE க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தொலைக் கல்வித் திட்டங்களை அறிவித்துக் காசு திரட்டப் போகிறார்களா? பின் எப்படி இந்த நிதியைத் திரட்டப் போகிறார்கள்? சூரப்பர் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?

கல்வி இன்னும் மத்திய மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதையும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என்பதையும் சூரப்பர் மறந்தாரா? இல்லை அதுவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளில் ஒன்று என நினைக்கிறாரா?

இப்படி அவர் மாநில அரசின் ஒப்புதல் எல்லாம் இல்லாமல் முடிவெடுப்பது இது முதல் முறையல்ல. தோல்வியுற்ற பாடங்களில் (arrears) மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து இதற்கு முன் அவர் AICTEக்கு கடிதம் எழுதினார். அதுவும்கூட மாநில உயர்கல்வி அமைச்சரை மீறிய செயல்தான்.

தனது திட்டங்களின் ஊடாக 69 சத இட ஒதுக்கீடு என்பது பாதிப்புக்கு உள்ளாகாது என சூரப்பர் இன்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கான சாத்தியமும் இவர்கள் திட்டத்தில் இல்லை. UGC உருவாக்கியுள்ள IoE வழிகாட்டும் நெறிமுறை பிரிவு 4.2.5 –இல், ” There should be a transparent merit based selection in admissions, so that the focus remains on getting meritorious students ” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தகுதி மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இந்த மாணவர் தேர்வு அமைய வேண்டுமாம். இதற்கெல்லாம் உரிய சட்டத் திருத்தம் இல்லாமல் IoE நிலை திணிக்கப்படுமானால் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியப்படும்?

சரி 69 சத ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதும் என IoE நிலையை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவோம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துக் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் எளிய மாணவர்கள் இந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா?

இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்றெல்லாம் அறிவித்து கல்விச் சந்தை ஒன்றை அரசே உருவாக்குவதை ஏற்க முடியாது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை IoE நிலைக்கு மாற்றுவது எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கெல்லாம் சூரப்பரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் முருகன் துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதையும் காண்கிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கல்வி என்பது இன்னும் மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் அதெப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி ஒரு துணைவேந்தர் எதையும் செய்யலாம்? செய்வோம் என ஒரு ஆளும்கட்சியின் தலைவர் திமிர் பேசுவதன் பொருள் என்ன? இந்த நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

சில கேள்விகளைத் தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. IoE வேண்டாம் எனக் கூறும் மாநில அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை Anna Technical and Research University என்றும் Anna Affiliating University எனவும் இரண்டாகப் பிரித்ததன் பின்னணியும் நோக்கமும் என்ன? இது IoE எனவும் Affiliating University எனவும் இரண்டு தரங்களாகத் தொழிற் கல்வியைப் பிரிப்பதுதானே?

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளது போல் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றால் எஞ்சியுள்ள 20 பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? அவற்றின் நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசிடம் ஏதும் திட்டமுள்ளதா? இல்லை அவை இரண்டாம்தர மூன்றாம்தரக் கல்வி நிறுவனங்களாகத் தொடர வேண்டியதுதான் அவற்றின் தலைவிதியா?

3.தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்துக்குப்பின் UGC கலைக்கபடும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. இனி நிதி மான்யம் வழங்குவதை கல்வி அதிகாரங்களை மிகத் தந்திரமாக சகுனித் தனத்துடன் மையப்படுத்தி வரும் பாஜக அரசு கையில் வைத்துக் கொள்ளப் போகிறது. அதை எதிர்க்காமல் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெற வாய்ப்புண்டா?

4. நிகர்நிலை பல்கலைக்கழகமான வேலூர் VITக்கு IoE நிலை அளிக்கப் பட்டுள்ளதைத் தமிழக அரசு ஏற்கிறதா?

5. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் IoE நிலை வழங்குவது, பல்துறை வளாகங்களாக (Multidisciplinary University) பல்கலைக் கழகங்களை மாற்றுவது, மூன்று தரங்களில் தன்னாட்சி நிலையை (Graded Autonomy) கல்லூரிகளுக்கு வழங்குவது , UGC கலைக்கப்படுவது போன்ற திட்டங்களைத் தேசியக் கல்விக்கொள்கை 2020 முன் வைக்கிறதே அது பற்றி தமிழக அரசின் கருத்தென்ன? . தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தீர்களே அதன் அறிக்கை என்னாயிற்று?

6. துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு, நிதிக்குழு முதலானவற்றின் ஒப்புதல் இல்லாமல் தானே நிதி திரட்டமுடியுமென அறிக்கை விடுகிறாரே அது குறித்துத் தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

7.அண்ணா பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் பகவத் கீதை Credit course ல் வைக்கப்பட்டவுடன் எதிர்ப்பு வரவே அது நிறுத்தப்பட்டது போலப் பாவலா செய்து இப்போது அது Audit courseல் திணிக்கப் பட்டுள்ளது. இது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்துத் தமிழக அரசின் நிலைபாடு என்ன?

மக்களின் இந்த ஐயங்களுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இப்படிக் கல்வி முறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அரசே உருவாக்கிப் பணமும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்விக் கொள்கை. மோடி தலைமையில் பா.ஜ.க அரசு உருவாக்கப்பட்ட கணத்திலிருந்து அந்தத் திசையிலேயே கல்விக் கொள்கை உருவாக்கங்கள் நகர்கின்றன. பெயருக்குத்தான் இன்று கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ளது. மற்றபடி இப்போது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை (2020)-இன்படி கல்வி அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டன, அதன் விளைவே இன்று இப்படி அண்ணா பல்கலைக் கழகம் சீரழிக்கப்படுவது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டது. மற்ற மாநில அரசுகள் அதையும் செய்யவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் தேசிய கல்விக் கொள்கை (2020) ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துக் கொண்டது.

அதன் விளைவே இவை எல்லாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.

எனவே,

அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!

#அண்ணா_பல்கலைக்கழகத்தைக்_காப்போம்!

இப்படிக்கு,

அக்கறையுள்ள கல்வியாளர்களும் தமிழ் மக்களும்

இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள கல்வியாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள்..

1. முனைவர் மு. அனந்தகிருஷ்ணன், மேனாள் துணைவேந்தர்,

அண்ணா பல்கலைக்கழகம்,

(Dr. M. Ananda Krishnan,Former Vice – Chancellor, Anna University),

2. முனை)வர் வே. வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

(Dr. V. Vasanthi Devi, Former Vice Chancellor, Manonmaniam Sundaranar University),

3. முனைவர் ச. சீ. ராஜகோபாலன், மேனாள் ஆட்சிமன்ற உறுப்பினர்,

சென்னை பல்கலைக்கழகம்,

(Dr. S. S. Rajagopalan, Former Senate Member, University of Madras.)

4. பேராசிரியர் அனில் சட்கோபால், மேனாள் தலைவர், கல்வியியல் துறை, தில்லி பல்கலைக்கழகம்,

(Prof. Anil Sadgopal, Former Dean, Department of Education, Delhi University),

5. நீதிஅரசர் அரிபரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை (Justice Hari Paranthaaman, High Court Judge (Rtd), Chennai),

6. முன்னைவர். எஃப்.டி.ஞானம், முன்னாள் பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்,

7. பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,

8. மருத்துவர் சீ. ச.‌ ரெக்ஸ் சற்குணம், மேனாள் இயக்குநர் மற்றும்

கண்காணிப்பாளர், குழந்தை மருத்துவ நிறுவனம் மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை,  எழும்பூர், சென்னை.

(Dr. C. S. Rex Sargunam, Former Director & Superintendent, ICH & GCH, Egmore, Chennai),

9. பேராசிரியர் சோ. மோகனா, மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,

(Professor S. Mohana, Former President, Tamil Nadu Science Forum),

10. பேராசிரியர் ச. மாடசாமி, கல்வியாளர் – எழுத்தாளர்

(Prof. S. Madasamy, Educationist – Writer),

11. முனைவர் பி. இரத்தினசபாபதி, ஆற்றுநர், தமிழக கல்வி ஆராய்ச்சி

மற்றும் வளர்ச்சி நிறுவனம்,

(Dr. P. Ratnasabapathy, Counsellor, Thamizhaga Institute of Research & Advancement),

12. திரு. ஐ. பி. கனகசுந்தரம், மேனாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திரூர்,

(Thiru. I.P.Kanakasundaram, Former Principal, DIET, Tirur).

13. முனைவர் ப. முருகையன், மேனாள் முதல்வர், சிவந்தி கல்வியியல் கல்லூரி, குன்றத்தூர்,

(Dr. P. Murugaian, Former Principal, Sivanthi College of Education, Kundraththoor),

14. முனைவர் வாசு அறிவழகன், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த இந்திய மக்கள் மன்றம்,

‌(Dr. Vasu Arivazhagan, Coordinator,United India Peoples Forum),

15. பேராசிரியர் K. இராஜூ, ஆசிரியர், “புதிய ஆசிரியன்” மாத இதழ்

(Prof. K.Raju, Editor, Puthiya Asiriyan Monthly Journal for Teachers),

16.பேரா.வீ.அரசு, மேநாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்,

17. பேரா. பா.கல்விமணி, கல்வி மேம்பாட்டுக் கழகம், திண்டிவனம்,

18. பேரா சு. இராமசுப்பிரமணியன், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்,

19. பேரா. எஸ்.சங்கரலிங்கம், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், சென்னை,

20. கண்ணன், மாணவர் தலைவர், SFI

21. சேகர் கோவிந்தசாமி, முதுநிலை பொறியியல் ஆலோசகர், சென்னை,

22. மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்

23.கோ.சுகுமாரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர், புதுச்சேரி.

24. முருகப்பன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்,

25, இரா காமராசு, தமிழ்தேசியசிந்தனையாளர், பாப்பாநாடு, தஞ்சாவூர்,

26. முகம்மது சிராஜுதீன்,  நூல் வெளியீட்டாளர், சென்னை,

27.முனைவர் இரா. முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், மதுரை,

28.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்,

29.பேரா. சே.கோச்சடை. மேநாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், காரைக்குடி,

30. பேரா. சங்கர சுப்பிரமணியம், தலைவர், முன்னாள் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், சேலம்,

31. பேரா. மு.திருமாவளவன், மேநாள் முதல்வர், அரசு கல்லூரி, வியாசர்பாடி,

32. தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளர், அனைத்திந்திய மாணவர் மன்றம், AISF,

33. த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இயக்கம்,

34. அப்துல் ரஹ்மான், மாணவர் தலைவர், கேம்பஸ் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு,

35. சு.பொ.அகத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, பெங்களூரு,

36. ஞா.தியாகராஜன் MA, மதுரை,

37. அ.லியாகத் அலி கலீமுல்லாஹ், எழுத்தாளர், கோட்டகுப்பம், புதுச்சேரி,

38. மரு.ச. இராசேந்திரன், சென்னை,

39. பொதியவெற்பன். கவிஞர், எழுத்தாளர், கோவை,

40. எஸ்.கே. நவ்ஃபல், மனித உரிமைச் செயல்பாட்டாளர், கோவை,

41. முனைவர் ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், பேராசிரியர் மானுடவியல் துறை, அசோகா பல்கலைக்கழகம்,

42. சுபகுணராஜன், எழுத்தாளர், பதிப்பாளர், சென்னை,

43. மீனா, ஆசிரியை, திருவண்ணாமலை,

44. அ.மகபூப் பாட்சா, மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை,

45. மணலி அப்துல் காதர், சமூக செயற்பாட்டாளர்,திருத்துறைப்பூண்டி,

46. ப.விஜயலட்சுமி, முன்னாள் இயற்பியல் பேராசிரியை. கும்பகோணம்,

47. எஸ்.ராமன், பொதுச்செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்,

48. அ.கமருதீன், வழக்கறிஞர், திருச்சி,

49. ௭ஸ்.௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

50. ந.செயச்சந்திரன், கல்லூரி நூலகர்(ஓய்வு) திருச்சிராப்பள்ளி,

51. சுரேஷ் குமார் சுந்தர், தமிழ்த்தேச முன்னணி, திருச்சி.

52. ஞா.தியாகராஜன் MA. மதுரை,

53. எஸ்.சுகுபாலா, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், AIDSO,

54. த.பால அமுதன் மாநில அமைப்பாளர், அகில இந்திய மாணவர் கழகம், AISA,

55.பேரா. P. விஜயகுமார், Indian School of Social Sciences, Madurai Chapter,

56. பேரா. பொன்னுராஜ் வழித்துணைராமன், மதுரை,

57. சுவாமிநாதன் ராமன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், பொதுச் செயலாளர், வேலூர்,

58. ஸ்வகீன் எரோனிமஸ், கல்வியாளர், திருச்சி,

59. பீட்டர் துரை ராஜ், சிந்தனையாளர் பேரவை, பல்லாவரம்,

60. ராஜேந்திரன் ஷண்முகம், ௭ஸ். ௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

61. செந்தில்குமார், முன்னாள் மாணவர் கிண்டி பொறியியல் கல்லூரி, ,

கோயம்புத்தூர்,

62. இரா. செங்குட்டுவன், முதல்வர் (பொ), மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை. தஞ்சாவூர் மாவட்டம்,

63. ச. பாண்டியன், பன்மை சமூக ,கலை, இலக்கிய ஆய்வு வட்டம் , திருத்துறைப்பூண்டி

64. க.முரளி, தகவல் தொழில்நுட்பத் துறை, சென்னை.

65. பரிமளா, President, Forum for IT-ITES Employees, Tamilnadu

66. ஸ்ரீராம் கிருஷ்ணன் , சமூக ஆர்வலர் , சென்னை,

67. அ.பசுபதி, பெரம்பூர், புதுக்கோட்டை மாவட்டம்,

68. ஜெ. உமா மகேஸ்வரன், கணினி மென்பொருள் பொறியாளர், பரமக்குடி,

69. அருள்மொழி. வழக்கறிஞர், சென்னை,

70. டாக்டர் அரச முருகுபாண்டியன், பேராசிரியர் (ஓய்வு), தரங்கம்பாடி TBML கல்லூரி., பள்ளத்தூர்,

71. டாக்டர் சந்திர மோகன் ,முன்னாள் முதல்வர், சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை,

72. முனைவர். விஜய் ஈனோக், காருண்யா பல்கலைக் கழகம், கோவை,

73. மணிமாறன், ஆசிரியர், திருவாரூர்,

74. சகா. சசிக்குமார், ஆசிரியர், desamtoday.com,

75. அ.ஆலம். தமுமுக வழக்கறிஞர் அணி, திருச்சி,

76. சுரேஷ், தமிழ் தேச மக்கள்  முன்னணி, திருச்சி,

77. பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், புதுச்சேரி,

78.. இரா.தமிழ்க்கனல், இதழியலாளர், சென்னை,

                   ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு முகவரி

1. முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

(Dr.P. Sivakumar, Principal (Rtd), Govt, Arts College, Gudiattam, Cell: +91 9842802010).

2. பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் பேராசிரியர், மனித உரிமை செயல்பாட்டாளர்.(Prof  A. Marx, 1/33,Chella Perumal St., Lakshmipuram Thiruvanmiyur, Chennai – 600 041, Cell: +91 9444120582).

இஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]

டாக்டர் சல்மான் சய்யித், லீட்ஸ் பல்கலைக் கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.

டாக்டர் நஸியா காஸி, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், அமெரிக்கா:.

இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்

டாக்டர் சஹர் அஸீஸ், ருட்கர்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும்  பேசுவதற்குமான ஒரு கருவி.

டாக்டர் ஹதீம் பாசியான், பர்க்லி பல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.

சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது

சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.

சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.

டாக்டர் சமி அல் அரியான், இஸ்தான்புல் சபாஹடின் சைம் பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.

சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.

ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.

சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.

நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.

டாக்டர் மொகமட் மொரான்டி, டெஹ்ரான் பல்கலைக் கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.

மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கு ஒன்றாகக் கருதக் கூடாது.

சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.

சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.

நஸியா: அமெரிக்கப் பேரரசை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.

நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”

மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.

நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.

மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.

ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.

நன்றி: TRTWORLD