தொலைதூர இந்தியாக்களை இணைக்கும் பாலமாக பௌத்தமும் மணிமேகலையும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23           

கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத் தொடர்புகளின் ஊடாக பர்மா (Myanmar), தாய்லந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம் ஆகியவற்றில் பவுத்தம் பரவியது. பொதுவில் தென்கிழக்காசிய பவுத்தத்தைத் தேரவாதம் எனச் சொல்வது வழக்கம். எனினும் பாலி மொழியில் புனித நூற்கள் எழுதப்பட்ட தென்கிழக்காசிய தேரவாதத்திற்கும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் பயிலப்படும் சமஸ்கிருதமயப்பட்ட வடக்கத்திய மகாயனம் மற்றும் தந்திராயனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.  தாய்லாந்து மற்றும்பர்மிய பவுத்தர்கள் பொதுவில் தம்முடைய பவுத்தத்தை கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகரது காலத்திய துறவிகளான சோனா மற்றும் உத்தரா ஆகியோரால் தம்முடைய தங்கத் தீபகற்பத்திற்கு (ஸ்வர்ணபூமி)  கொண்டுவரப்பட்ட ஒன்றாகக் கருதுவதே வழக்கம். அந்த வகையில் தம்முடையதைத் தேரவாத மரபு சார்ந்தது எனச் சொல்வர்.

“தொலைதூர இந்தியா” (Farther India) என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர்த்த தென் கிழக்காசியத் தீவான இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், இந்தோசீன தீபகற்பம் உள்ளிட்ட கங்கைக்கு அப்பாலான இந்தியப் பகுதிகள் ஆகியன அடங்கும். முற்றிலும் வங்க அடையாளங்களுடன் கூடிய அஸ்சாமும் இந்தியத் தாக்கத்திற்கு ஆட்படாத வடக்கு வியட்நாமும் இந்தத் ‘தொலைதூர இந்தியா’வுக்குள் வராது (G.Coeds, Indianized States of South Asia (Ed by Wlter F Vella, Australian National University Press, Canberra, 1975). இந்திய மதங்களான இந்துமதம், பௌத்தம் ஆகிய இரண்டின் தாக்கங்களும் இந்தத் தொலைதுர இந்திய உருவாக்கத்தில் உண்டெனினும் பவுத்தத் தாக்கம் கூடுதல்.  5

தொடக்கத்தில் அது தங்கபூமி. பின் அது மசாலாப் பொருட்கள் (spices), கற்பூரம், சந்தனம் முதலான வாசனை மரங்களுக்குப் பெயர் பெற்ற நிலப்பகுதி, பின் ரப்பர், டின், எண்ணை என வணிகத் தொடர்புகள் இன்னும் தொடர்கின்றன. வணிகத்திற்கு அப்பால் பண்பாட்டு ரீதியான தாக்கம் ஏராளம்.  அதன் மொழி வழக்கில் கலந்துபோன சமஸ்கிருதக் கூறுகள், எழுத்துருக்கள், இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகக் கூறுகளின் தாக்கம் என நிறையக் கண முடியும். இஸ்லாமாக மாறிய பகுதிகளிலும்கூட இந்தத் தொடர்ச்சியை நாம் இன்னும் காண முடிகிறது. சிற்பம், கட்டிடக் கலை ஆகியவற்றில் பவுத்தத்தாக்கம் ஏராளம். 2016 ல் தாய் இளவரசர் Maha Vajiralongkorn மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது தமிழில் பாசுரங்கள் ஓதப்பட்ட செய்தி அப்போதைய நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது (Times Of India, Nov 08, 2016). ‘மணிமேகலை’ எனும் கடற் தெய்வம் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தத் தொலைதூர இந்தியாவுக்கும் பொதுவாக உள்ளது குறித்து நாம் இந்தத் தொடரில் வேறு சில சந்தர்ப்பங்களிலும் பேசியுள்ளோம். பல தமிழ்ச் சொற்களும் கிட்டத்தட்ட அதே ஒலிப்புடன் அங்கு பயிலப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில: தங்கம் (தொங்கம்) குரு (க்ரு). அப்பா (பா), புத்ரன் (புத்ரு). மாலை (மாலெ).

இதில் மிகவும் வேடிக்கை என்னவெனில் இந்தியர்களும், தமிழர்களும் கிழக்கு நாடுகளுக்குத் தாம் அளித்த இந்தக் கொடையைச் சமீப காலம் வரை மறந்திருந்ததுதான். ஃப்ரெஞ்ச் மற்றும் டட்ச் மொழிகளை அறிந்து பாரிஸ் மற்றும் லெய்டன் பல்கலைக் கழகங்களில் பணி செய்த சில பேராசிரியர்கள்தான் முதன் முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது (Sylvain Levi,  Pour L’Histoir du Ramayana, JA, January, February, 1918, Page 80 ff).

துறைமுக நகரமான நாகப்பட்டிணத்தில் இருந்த பௌத்த நிறுவனங்களுக்கும் ஜாவா மற்றும் சுமத்ராவிலிருந்த சைலேந்திர மன்னர்களுக்கும் முதலாம் ராஜராஜன் காலந் தொடங்கி நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதை அவனது அகன்ற லெய்டன் செப்பேடு பதிவு செய்கிறது. ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த மாறவிஜயோத்துங்க வர்மனால் நாகப்பட்டிணத்தில் கட்டப்பட்ட அழகிய சூடாமணி விகாரை குறித்த பதிவு அதில் உள்ளது (K.V.Subramaniya Aiyer, The Larger Leiden Plates, Epigraphia Indica 22/6, (1934), 241, 42). புத்தர் மற்றும் எதிர்கால மைத்ரேய புத்தர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் நாகையில் கிடைத்துள்ளன. சைலேந்திரா என்பது மலையின் இந்திரன் எனப் பொருள்படும் சொல். நாகையில் சீனர்கள் கட்டிய ‘பகோடா’ ஒன்றும் இருநூற்றாண்டுகளுக்கு முன்புவரை இருந்துள்ளதும் நினைவுகூரத் தக்கது. ஜாவாவின் மையமாக உள்ள பாராபுதூரில் உள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்தச் சின்னத்தில் உள்ள இந்தியத் தாக்கங்கள் குறித்து விரிவான பதிவுகள் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்தியாவையும் (அதாவது தமிழகத்தையும்) தென் கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு இலக்கிய ஊடகமாக மணிமேகலை இருந்தது என்பார் ஆனே மோனியஸ் (Anne E Monius, Imagining a Place for Buddhism, Navayana, 2009, Page 110). ஒரு இலக்கிய மொழியாக அமைந்து தென் இந்தியா எனும் மைய நிலத்தை (Main Land) சாவகம் எனுன் விளிம்புடன் (periphery) ஒரு ஒற்றை மத நம்பிக்கையுடன் கூடிய குமுக அலகாகவும் பவுத்த உலகாகவும் இணைக்கும் பணியை தமிழ் நிறைவேற்றுகிறது என்பார் மோனியஸ்.

மணிமேகலைக் காப்பியம் இவ்வாறு ஒரு ஒற்றை  இலக்கிய பிரபஞ்சத்துக்குள் சாவகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பணியை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிலேயே ஒரு தொலைப் பார்வையுடன் செய்தபோதும், அது எதார்த்தமாக நிகழ்வதற்கு இன்னும் ஏழெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஜாவாவை (சாவகத்தை) தனது முக்கிய களங்களில் ஒன்றாகச் சாத்தனார் தேர்வு செய்ய நேர்ந்தது எங்ஙனம்? தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே சாத்தனாரின் காலத்தில் அதிக இலக்கிய வளம் மிக்க பகுதியாக ஜாவாதான் விளங்கியது என்பதை மோனியஸ் சுட்டிக் காட்டுவார். தவிரவும் ஸ்ரீவிஜயத்தின் ஜாவா- சுமத்ரா அரசுப்பகுதிதான் சமஸ்கிருதக் கல்வியிலும் அப்போது சிறந்து விளங்கியிருந்தது. “நாகராக்ருதாகம” எனும் ஒரு காவியத்தை ‘காஞ்சிபுரி’ யைச் சேர்ந்த ஸ்ரீபுத்தாதித்யா என்றொரு கவி பதினான்காம் நூற்றாண்டில் இயற்றியுள்ளது குறித்து இந்தத் தொடரில் நான் முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களில் கடற் கடவுளாக இருந்து எதிர்கால புத்தர் ஒருவரைக் காப்பாற்றிய தெய்வமாகவும், கடல் விபத்துகளில் காப்பாற்றும் தன் கடமையைச் சிலகாலம் தவறி இருந்த தெய்வமாகவும், பத்தினி (கண்ணகி) மற்றும் கோவலனுடன் நெருக்கமாக உறவு கொண்டவராகவும் ஜாதகங்களிலும் நாடுப்பாடல்களிலும் மணிமேகலை ஏராளமாக இடம் பெறுவதும் குறிப்பிடத் தக்கது.3

இனி நாம் நாகபுரத்தை அடைந்த மணிமேகலையைத் தொடர்வோம்.

நாகபுரத்தின் அப்போதைய மன்னனான புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாக அவதரித்திருந்தவன். தருமசாவகன் தனது மன்னனைப் புகழ்ந்து உரைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் தன் உரிமைச் சுற்றத்துடன் அங்கு வந்தான். தருமசாவகனைக் கண்டு வணங்கினான். அறம், மறம், நிலையாமை, நித்தியம், துக்கம், உடலை விட்டுப் பிரிந்த உயிரின் நிலை, பேதமை முதலான பத்துவகைச் சார்பின் தோற்றம், சார்பை அறுத்து உய்தி பெறும் வழி முதலானவற்ரை அவன் அரசனுக்கு எடுத்துரைத்தான். அரசனும் அவற்றை அமைதியாய் ஏற்றுக் கொண்டான்.

பின் அருகிருந்த மணிமேகலையை நோக்கினான் மன்னன். இணையற்ற அழகுடையவளாக இருந்தும் அவளது கண்ணசைவுகள் காமனுக்குத் துணை சேர்க்காததைச் சுட்டிக்காட்டித் தன் அழகிய கைகளில் பாத்திரத்துடன் நிற்கும் இவாள் யார் என வினவினான். அப்போது அரசனுடன் வந்திருந்த கஞ்சுகன், தான் கிள்ளிவளவனைச் சந்திக்க புகார் சென்றபோது அறவண அடிகளீடம் இவள் பிறப்பை அறிந்து வந்து அரசனுக்குரைத்ததை நினைவூட்டினான்.

மணிமேகலை பேசலுற்றாள். “என் கையில் இப்போதுள்ள இப்பாத்திரம் முன்னொரு பிறவியில் உன்கையில் இருந்த ஒன்றுதான். நீ இப்போது உன்னிடம் செர்ந்துள்ள பெருஞ்செல்வத்தில் மயங்கி நிற்கிறாய். எனவே நீ அதையெல்லாம் இப்போது அறியாய். அந்தப் பிறவியை அறியாத போதும், பசு ஒன்றின் வயிற்றில் பிறநதுள்ள இப்பிறப்பினையும் நீ அறியாமற் போனதென்ன? மணிபல்லவம் சென்று அங்கு பீடிகையை வலம்வந்து வணங்கினாலன்றி பற்றுக்களுடன் உன்னைப் பிணிக்கும் பிறவியின் தன்மையை நீ அறியாய். ஆதலின் நீ அங்கு வருவாய் அரசே!” – என மணம் மிக்க மாலையை அணிந்து நின்றிருந்த அரசனிடம் கூறி அவ்விடம் விட்டகல ஆயத்தமானாள்.

வானத்தில் எழுந்த மணிமேகலை கதிரவன் மேற்திசையில் வீழும் முன் வானிலிருந்து இறங்கிப் பூக்களின் நறு மணத்துடனும், சுருண்டெழும் அலைகளுடனும் விளங்கும் மணிபல்லவத் தீவை அடைந்து வலம் வந்தாள். பிறவிப் பிணியை அறுக்கும் மாதவனது பாதபீடிகையின் தரிசனம் கண்டவுடன் அதைத் தொழுது வலம் வந்தாள். தன் பழம் பிறப்பையும் உணர்ந்தாள்.

மணிமேகலை அவ்வாறு தொழுதிருந்த அதே நேரத்தில் அம் மலர்வனத்தை விட்டகன்ற மன்னன் புண்ணியராசன் தன் நகரடைந்தான். அங்கே அவனது வளர்ப்புத்தாயான அமரசுந்தரி அவனது இப்பிறவி வரலாற்றை உணர்த்தினாள். தந்தை முனிவனாகவும் தாய் பசுவாகவும் கொண்டு பிறந்த அவனது பிறப்பும், மாமுனிவன் அருளினால், எல்லா மானுடப் பிறவியும் போலன்றி குடல் மாலையால் சூழப்படாமல் தான் ஆங்கொரு பொன் முட்டையுள் அடங்கிப் பசு வயிற்றினுள் இருந்து, மக்கட்பேறு இல்லாத மன்னன் பூமிசந்திரனால் கொண்டுவரப் பெற்றதையும் அவ்வளர்ப்புத் தாயின் வாயால் கேட்ட ஆபுத்திரன் மிகுதியான துயரடைந்தான்.

சென்ற பிறவியில் தன் தாய் செய்த செயலையும், இப்பிறவியில் தானடைந்துள்ள நிலையையும் ஒரு கணம் நினைவுகூர்ந்தான் மன்னன். ஒரு பக்கம் மன்னர்கள் அவன் செவ்விக்காகக் காத்துக் கிடக்கின்றனர். அரசானாக இருந்து மேலோர்களைப் பேணியும், நாடகம் கண்டும், பாடல்களையும் இன்னிசையையும் கேட்டுக் கொண்டும், தேவியர்தம் ஊடல்களை அனுபவித்துக் கொண்டும், தான் பணிந்து அவற்றை முடிவுக்குக் கொணர்ந்தும், அவர்தம் அழகிய மார்பகங்களில் குங்குமச் சாந்தால் எழுதியும், மலர்களை அவர்களின் சுருண்ட குழலில் சூட்டியும், நறுமுகைகளின் உள்ளே பொதிந்து கிடக்கும்  அமுது போன்றதாகிய அவர்களின் சிவந்த வாயூறலை உண்டும், அவர்தம் மதிமுகத்தில் அலையும் கருங்கண்களின் செம் முனைகள் கலங்குமாறு மன்மதன் மலரம்புகளைத் தூவ, காமக் கள்ளையுண்டு மகிழ்ந்திருக்கும் தன் போக வாழ்வை இகழ்ந்து, “பற்றறுத்துத் துறத்தலே நன்று” என வாய்விட்டு அரற்றினான்.

“தெளிந்த உணர்வுடைய நாதமுனி என் செவியிலிட்ட அறநெறி வித்து இன்று மணிமேகலையைக் காரணமாகக் கொண்டு பழுதற விளைந்தது” என்று பலவாறும் புலம்பினான் புண்ணியராசன்.

“ஆகா, மனம் வேறாயினான் மன்னன்” என உணர்ந்த அமைச்சன் சனமித்திரன் அவனைத் தொழுது வணங்கி, “என் சொற் கேட்பீர் ! நின் தந்தை உம்மை அடைவதற்கு முன்பாக உம் நாடு மழைவளமற்று, பெற்றதாய் தன் குழந்தைக்கு  இரங்காமல், கிடைக்கும் உணவைத் தானே உண்ணும் நிலைக்குச் சரிந்திருந்தது. வெங் கோடை நாளொன்றில் சூல் கொண்ட கருந்திரள் மேகம் ஒன்று எழுந்ததுபோல நீ தோன்றினாய். அன்று முதல் இன்றுவரை வானம் பொய்க்கவில்லை; நிலவளம் குன்றவில்லை; ஊனுயிர்கள் உறுபசி அறியா நிலை எய்தின. இந்நிலையில் நீ எல்லாவற்றையும் விட்டகன்றால் இந்நாடு முழுதுமே தாயற்ற குழந்தை எனும் நிலையை எய்தும்.2

“துயர்நிலை பெற்ற இவ்வுலகை அத்துயர் நீக்கிக் காத்தலன்றி, நீ மட்டும் உயர்நிலை உலகம் ஒன்றை விரும்பிச் செல்வாயாயின் உயிர்கள் அனைத்தும் இறுதி எய்தும்; தன்னுயிரை முதன்மையாகக் கருதாத புத்ததேவன் உரைத்த நெறியும் இதுவல்லவே”- என்று அறம் உரைத்தான் அமைச்சன்.

அமைச்சன் உரைத்த அறவுரை கேட்ட மன்னன், “மணிபல்லவத்தை வலம் கொள்ள எழுந்த என் வேட்கை அத்தனை எளிதாகத் தணியாது. அதனால் அரசையும், மக்களையும் ஒருமாத காலம்வரை காத்துவருதல் நின் கடன்” – எனக் கூறியவாறு எழுந்து மரக்கலம் செய்யும் கம்மியரை “வருக” என அழைத்துத் தன் மரக்கலத்தே ஏறினான். அம்மரக்கலமும் இடை நிற்காது சென்று மணிபல்லவத்தை அடைந்தது. அங்கே மணிமேகலை காத்திருந்தாள். இருவரும் தீவை வலம் வந்தனர். முற்பிறவியை உணர்விக்கும் பீடிகையை மணிமேகலை அவனுக்குக் காட்டினள். ஒரு தூய கண்னாடிபோல அவன் முற்பிறவியை பீடிகை அவனுக்கு உணர்த்தியது.

“என் பிறப்பறிந்தேன். என் இடர் தீர்ந்தேன். தென்தமிழ் மதுரையின் அழகிய கலைப் பாவையே! இரந்துண்ணும் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட என்னிடத்தே, வந்தோர்க்கு அருந்துவதற்குரிய உணவேதும் காணாது வருந்துவோனாகிய என் கையிலே, ‘நாடே வறுமையுற்ற போதிலும் இந்த ஓடு மட்டும் வருமையுறாது. எழுந்து இதனை ஏற்றுக் கொள்!’ – எனக் கூறி அமுதசுரபியைத் தந்து என் பிறவி அறுத்த பாவையே! உணர்வில் தோன்றி, மெய்ப்பொருள் உணர்த்தி அருளும் அணிதிகழ் அவிரொளி மடந்தையே! தேவராயினும், பிரமராயினும், அவர்களின் நாவால் எழும் குற்றத்தைக் கழுவித் தூய்மையாக்கும் நின் திருவடிகளைப் பிறவிகள் தோறும் போற்றுதலன்றி மறந்தும் வாழேன் இனி நான்!” – எனச் சிந்தாதேவியைப் போற்றி நின்றான் முற்பிறவியில் ஆபுத்திரனாக வழ்ந்து இப்பிறவியில் புண்ணியராசனாய்ப் பிறப்பெடுத்தவன்.

(அடுத்து மணிமேகலை வஞ்சி சென்று கண்ணகியின் அறிவுரை பெறுதல்)

பூம்புகார் கடற்கோளில் அழிந்த வரலாற்றின் இலக்கியச் சான்று

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 21,  தீராநதி, அக்டோபர் 2018                     

மாற்றுருக் கொள்ளும் திறனும் வான்வழி பறக்கும் வித்தையும் அருளப் பெற்றவளான மணிமேகலை நினைத்திருந்தால் எப்போதோ அரசியின் கொடுமைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம். எனினும் அவற்றை எல்லாம் அவள் சகித்துக் கொண்டிருந்தது என்பது இந்தத் துன்பங்களை ஏல்லாம் தனக்கு இழைத்த அரசி முற்பிறவியில் தன் காதலனாக இருந்தவனை இப்பிறவியில் வயிற்றில் சுமந்திருந்தவள் என்பதனாலும், மகனை இழந்த துயரின் விளைவாய்த்தான் அவள் இத்தனையையும் செய்கிறாள் என்பதை எண்ணியும்தான் என விளக்கிய மணிமேகலை அரசியை அமைதி அடையுமாறும் தான் உரைக்கும் அறவுரைகளைக் கேட்குமாறும் சொல்லிச் சில எடுத்துக்காட்டுகளுடன் தொடங்கினாள்.

“அறந் தவறிய ஆள்வோரின் கொடுமையால் நிலைதவறிய ஒரு நாட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தான் பெற்ற குழந்தையையும் பிரிந்து எங்கோ சென்று வரையறைகளை மீறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது குழந்தையை ஒரு பார்ப்பனன் யாரும் அறியாது வளர்த்து வந்தான். அப்படி வளர்க்கப்பட்டவன் யாரென அறியாமல் தான் தாயையே புணர்ந்து, உண்மை அறிந்ததும் உயிரை ஈந்தான்.

“நிறை கர்ப்பமான ஒரு இளம் மானின்மீது அம்பெறிந்த ஒரு வேடன், வீழ்ந்த அந்த மானின் விழியிலிருந்து வடிந்த நீரைக் கண்டு அந்த இடத்திலேயே தானும் வீழ்ந்து மடிந்தான்.

“கள்ளுண்ட மயக்கத்தில் எதிர் நிற்பது ஒரு மதங்கொண்ட யானை என்பதை அறியாது அதன் முன் சென்று அதன் வெண்மையான தந்தத்தால் குத்துப்பட்டு வீழ்ந்தான் இன்னொருவன்.

“நெறி தவறி வாழ்வோர் அதன் துயர விளைவுகளிலிருந்து தப்ப இயலாது. களவாகிய ஏரைக் கொண்டு உழுபவன் கடுந்துயரைத்தான் விளைவித்துக் கொள்ள இயலும். கற்ற கல்வி மட்டுமே ஒருவர்க்கு மெய்யுணர்வைத் தந்துவிடாது; ஆத்திரத்தை அடக்காதோர் அறிவுணர இயலாது. அல்லலுற்ற மக்களுக்கு இல்லாததைத் தருவோர், பட்டினி கிடப்போரின் பசி நீக்குபவர், மண்ணுலக உயிர்கள் மீதெல்லாம் அன்பைப் பொழிபவர் எவரோ அவரே தாங்கள் செல்ல விரும்பும் நல்லுலகத்திற்கான வழியை அறிந்தோர்”

-என்றெல்லாம் சொல்லி மகனிறந்த துயரால் நெஞ்சம் எரிந்து கொண்டிருந்த அரசிக்கு ஆறுதல் கூறினாள் மணிமேகலை.

அறம் தவறாத வாழ்வும் மக்களின் பசித்துயர் நீக்கலும் மட்டுமே உய்வதர்கான ஒரே வழி என்பதை வாய்க்கும் இடங்களில் எல்லாம் சாத்தனார் வற்புறுத்தத் தயங்குவதில்லை என்பதைத் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

மனந் தெளிந்த அரசி மணிமேகலையைத் தொழுது நின்றபோது மணிமேகலை ஒருகணம் துடித்துப் போனாள். தன் முற்பிறவிக் கணவனுக்கு இப்பிறவியில் தாயாக அமைந்தவள் அவள்; அதோடு அவள் இந்த நாட்டின் அரசியும் கூட. “நீ எனைத் தொழுவது தகுதியல்ல” எனக் கூறி மணிமேகலை அரசியை வணங்கி நின்றாள்.

இதற்கிடையில் நடந்த துயரச் சம்பவங்களை எல்லாம் அறிந்த மணிமேகலையின் பாட்டியும் முதுகணிகையுமான சித்திராபதி பேத்தியைச் சிறை மீட்க ஓடி வந்து அரசியின் காலடி வீழ்ந்தாள்.

“இந்திரனுக்குப் முன் நடனமாடும்போது குற்றமிழைத்தவர் ஐவர், சாபமிடப்பட்டவர் நூற்றி ஐந்து பேர், இந்திரனுக்கு அழகியர் பெற்றுத்தந்தவர் பதினொருவர் என நூற்றி இருபத்தோறு பெண்கள் தொன்மைச் சிறப்புமிக்க இம்மாநகருக்கு வந்து  ஆடல் மங்கையராகச் சிறப்புற்று வாழத் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை எம்குலமகளிர் எவரும் இன்று யான் பெற்ற துயரைப் பெற்றிருக்கமாட்டார்கள். கோவலன் மறைந்தபின் என் மகள் மாதவி துறவு மேற்கொண்டு பவுத்தப் பள்ளி ஒன்றைச் சென்றடைந்ததை ஒட்டியும், அவள் மகள் மணிமேகலை பிச்சைப் பாத்திரத்துடன் வீடு வீடாகத் திரிவதைக் கண்டும் எம் குலத்தவர் எள்ளி நகையாடுகின்றனர். நாடகக் கணிகையரின் இலக்கணங்களை மீறிய வாழ்வொன்றை இவர்கள் தேர்வு செய்ததின் விளைவாக மன்னவன் மகன் கேடுற்றது மட்டுமின்றி இந்நகருக்கும் இடுக்கண் நேரப் போகிறது….”

என்று பலவாறும் பிதற்றிய சித்திராபதியின் புலம்பலின் ஊடாகச் சாத்தனார் இன்னொரு கிளைக் கதையைக் காவியத்தில் ஏற்றுகிறார்.

கடலோரமாய் உள்ள ஒரு புன்னைமரச் சோலையில் நின்றிருந்த சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளியின் முன் தன்னந்தனியாய்த் தோன்றினாள் ஒருத்தி. அவளைக் கண்ட கண்ணிலும், கேட்ட செவியினும், உயிர்த்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் காமவேளின் மலர்களாலான பஞ்சபாணக்களும் தாக்க நிலைகுலைந்த மன்னன், போர்க்களங்களிலே பலரைப் புறங்கண்டவனாயினும் இப்போது அவளைப் பணிந்து அவள் ஏவலை நிறைவேற்றுபவனாய் அவளோடு கூடி இருந்தான். சுமார் ஒருமாத காலம் அவள் அவனுடன் கழித்தனள். ஆயினும் இறுதிவரை அவள் யாரென அவனிடம் உரைக்கவில்லை என்பது மட்டுமல்ல திடீரென அவள் ஒரு நாள் காணாமற் போனாள்.

வேந்தர் பலரை வென்றவனான கிள்ளி வளவன் அந்த இளங்கொடி நங்கை எங்கு ஒளிந்து கொண்டாளோ எனத் தேடி அலைந்தான். அப்போது நீர், நிலம், வான்வழி என எங்கும் அலைந்து திரியும் சாரணர் ஒருவரைச் சந்தித்து அவரையும் வணங்கி அவளைக் கண்டீரோ என வினவினான். “நான் அவளைக் கண்டதில்லை ஆயினும் அவளை அறிவேன். நாக நாட்டை ஆளும் வளைவணன் என்பவனின் தேவி வாசமயிலை என்பவளின் வயிற்றில் உதித்த பீலிவளை என்பவள் அவள். அவள் பிறந்தபோது, ‘இரவி குலத்தில் (சோழ குலம்) பிறந்த ஒருவனது தழுவலில் கரு உயிர்த்து வருவாள்’ என ஒரு கணியன் உரைத்தான். அவனுக்குப் பிறக்கும் நின் மகன் உன்னிடம் வரலாமேயன்றி அவள் இனி வாராள். நீ புலம்புதல் வேண்டாம்” என உரைத்துச் செல்லும் முன் அவன் இன்னொன்றையும் சொன்னான்.

“நீ ஆண்டுதோறும் எடுக்கும் தீவகச் சாந்தி விழாவை தொடர்ந்து செய்ய வேண்டும். கைவிட்டாயானால் உன் காவல் மாநகர் (பூம்புகார்) கடல்கோளால் அழியும். இது கடல் தெய்வமான மணிமேகலா தெய்வம் வாய்மொழியால் உரைத்தது என்பதை மறவாதே. அது மட்டுமல்ல. அப்படி நீ விழாவைக் கைவிடுவாயானால் இந்திர சாபமும் சேர்ந்து கொள்ளும். எனவே இந்த ஆபத்து தணிவதற்கு வாப்பில்லை. எனவே உன் மாநகர் கடல் வயிறு புகாமல் காக்க வேண்டுமானால் இந்திர விழாவை எக் காரணம் கொண்டும் கைவிடாதே” என எச்சரித்துத் தன் வழிப்போக்கைத் தொடர்ந்தார் அந்தச் சாரணர்.

சித்திராபதியின் புலம்பலின் ஊடாக வெளிப்படும் இச் செய்தியுடன் இக்கிளைக் கதை பாதியில் முற்றுப் பெற்று அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் தொடர்கிறது.

மணிமேகலையை அரசியிடமிருந்து விடுவித்து அழைத்துச் செல்வதிலேயே கருத்தாய் இருந்த சித்திராபதி கிள்ளியின் கதையை அத்துடன் நிறுத்திக் கொண்டு தன் வேண்டுதலைத் தொடர்ந்தாள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைப்பட்டது உட்பட எதிர்கொண்ட துன்பங்களின் விளைவாகத் தன் பேத்தி ‘மனந்திருந்தி’ தன் அறிவுரையை ஏற்று குலத் தொழிலைத் தொடர்வாள் என்கிற நம்பிக்கை வேறு அந்த மூதாட்டிக்கு. “நல்மனம் பிறந்துள்ள நாடகக் கணிகையை என் மனைக்கு அழைத்துச் செல்லுகிறேன்” என அரசியிடம் வேண்டிய போது உண்மையில் “நல்மனம்” பிறந்துள்ளது அரசிக்குத்தான் என அவள் அறிந்திருக்கவில்லை. “கள், பொய், காமம், கொலை, களவு செய்யும் உள்ளம் ஆகிய குற்றங்கள் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.  அவற்றையே தலைமையாய்க் கொண்ட உன்னுடன் வாழ்வதை அஞ்சித்தான் அவள் வெளிப்போந்தாள். இனி அவள் உன்னுடன் உன் அகம் புகாள். அவள் என்னோடிருப்பாள்” என அரசி சீறிய தருணத்தில் மாதவ முனிவரான அறவணர் மாதவியுடனும், சுதமதியுடனும் அங்கே வந்தார்.

மணிமேகலைக்கு நேர்ந்ததை எல்லாம் அறிந்த மாதவி கவலை கொண்டு சுதமதி துணையுடன் அறவணரைச் சென்று சந்தித்தாள். பின் மூவரும் அரசியைச் சந்திக்க வருகின்றனர். நடந்தவற்றை அறிகின்றனர். பணிந்த அரசிக்கு அறமுரைக்கிறார் அடிகள். அதன் பின் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை விளக்கி அங்கிருந்து அகல்கிறாள் மணிமேகலை.

இந்தப் பின்னணியில்தான் பூம்புகார் கடற்கோளால் அழிந்தது. ஆம் சாரணரின் எச்சரிக்கையை மன்னன் கிள்ளிவளவன் மறந்தான். கடற் தெய்வமான மணிமேகலா தெய்வம் சீற்றம் கொண்டு பூம்புகாரை அழித்தது. கி.மு நூற்றாண்டுகளில் ஏதன்ஸ், ரோம் முதலான நகரங்களுடன் வணிகத் தொடர்பில் இருந்த வரலாறு பூம்புகாருக்கு உண்டு என்பதை அறிவோம். ஒரு பெரும் கடற்கோளால் பூம்புகார்ப் பெருநகர் அழிந்ததை இன்று அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. பூம்புகாரை ஒட்டிய கடற்பகுதியில் இப்போது செய்யப்பட்ட ஆய்வுகளில் இதற்குச் சான்றுகள் உள்ளன என்கின்றனர். கடல்கோள் ஏற்பட்டு பூம்புகார் அழிந்ததற்கான முக்கிய இலக்கியச் சான்றாக மணிமேகலை அமைகிறது.

அந்த வரலாற்று நிகழ்வை மணிமேகலைத் தன் காப்பியப் போக்கில் இணைத்துக் கொள்வதைத் தொடர்வோம். இக் காதையின் முடிவில் மணிமேகலை அவர்களிடமிருந்து விடை பெற்று சாவகத் தீவை (நாகபுரம்) அடைகிறாள். அத்தீவை அப்போது ஆண்டு கொண்டிருந்த புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறவி கண்டிருந்தவன். அவனிடம் மணிமேகலை தன்னிடமுள்ள அமுதசுரபியைக் காட்டி அவனது பழம் பிறப்பை அவன் அறிய வேண்டுமானால் மணிபல்லவத் தீவிற்குச் சென்று பீடிகையை வணங்க வேண்டும் என்கிறாள். இருவரும் கப்பலில் தீவை வந்தடைகின்றனர்.

அங்கே அத் தீவின் காவற் தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம் பூம்புகார் கடற் கோளால் அழிந்த கதையைச் சொல்கிறது. அதனூடாகக் கிள்ளி – பீலிவளை வரலாறும் தொடர்கிறது.

“பலர் தொழும் பாத்திரத்தைக் கையிலேந்திய நங்கையே கேள்! நாக நன்நாட்டை ஆள்பவனின் மகள்தான் பெண்களிற் சிறந்த பீலிவளை என்பாள் பனிக்குப் பகைவனான கதிரவனின் வழியில் தோன்றிய தனது இளம் குழந்தையுடன் இத் தீவிற்கு வந்த அவள் புத்த பீடிகையை  வலம் வந்து வணங்கினாள். அப்போது கம்பளச்செட்டி என்பானின் கப்பல் வந்து அங்கே நின்றது. அவனிடம் சென்று உசாவிய பின் உம் மன்னனின் மகன் இவன். இவனைக் கொண்டு செல்” என அவனிடம் குழந்தையைச் சேர்ப்பித்தாள். பழுதற்ற தோற்றத்துடன் எதிர் நின்ற அந்தப் பைங்கொடி தந்த குழந்தையைப் பணிவுடன் ஏற்ற அந்த வணிகன் அக்குழந்தையுடன் அந்தத் துறைமுகத்தை விட்டகன்றான். ஆனால் அப்படிக் குழந்தையுடன் அவன்  சென்ற அன்றிரவே காரிருளில் கரையருகில் அவன் கலம் உடைந்து சிதறியது. உடைந்த கலத்திலிருந்து தப்பிய மாக்கள் உடன் அரசனிடம் சென்று அவனது குழந்தை கடல் விபத்தில் காணாமற் போன அத் துயரச் செய்தியை உரைத்தனர்.

“மகனுக்கு நேர்ந்த கதியை மன்னனால் பொறுக்க இயலவில்லை. தனது நாக மணியை இழந்த அரவம் அதை எப்படி எல்லாம் தேடி அலையுமோ அப்படித் தன் குழந்தையைத் தேடி கானல், கடல், கரை என எல்லா இடங்களுக்கும் சென்று அலைந்தான். அதனால் இந்திரவிழாக் கொண்டாட்டத்தை மாநகர் இழந்தது. மணிமேகலா தெய்வம் அதைப் பொறுக்க இயலாது, ‘அணிநகர் தன்னை அலைகடல் கொள்க !’ எனச் சாபம் இட்டது. புகார் நகர் கடலில் பட்ட கதை இதுதான்.

“கடவுள் அனைய மாநகர் கடலால் கொள்ளப் பட்டதும் வடிவேல் ஏந்திய அகன்ற கையை உடைய வானவன் போன்ற அரசன் தன் நகர் நீங்கினான். விரிந்த அலைகள் வந்து தன் அழகிய நகரை விழுங்கத் தன்னந்தனியனாய் அவ்விடம் விட்டகன்றான் மன்னவன்.

“அருந்தவ முனிவரான அரவணருடன் நின் தாயர் இருவரும் (மாதவி, சுதமதி) துன்பம் ஏதுமின்றி வஞ்சி நகர் சென்றடைந்தனர். மணிமேகலா தெய்வம் உரைத்தனவற்றைக் கேட்க விரும்பினால் கேள் !” எனக் கூறிய தீவதிலகை தொடர்ந்து சொன்னது:

“மறுபிறப்பை உணர்ந்தவளே ! உன் தந்தையாகிய கோவலனின் மரபில் வந்த முன்னோன் ஒருவனை மணிமேகலா தெய்வம் முன்னொருநாள் கடல் விபத்திலிருந்து எடுத்துக் காத்ததையும், அப்படிக் காப்பாற்றப்பட்ட அவ்வணிகன் ஊர் திரும்பியதும் அறங்கள் பல செய்து ஆண்டதையும் அறிய நினைத்தால் கடற் கோளுக்குப் பின் வஞ்சி மாநகரில் உறையும் அறவணன்பாற் சென்று கேள்!”

எனக் கூறி அத்தீவகத் தெய்வம் வானகத்தே எழுந்து பறந்து சென்றது.

(அடுத்து அறவணர் அரசிக்கு உரைத்த அறமும்  வஞ்சிமாநகரில்  கண்ணகியைச் சந்தித்து மணிமேகலை அறவுரை பெறுதலும்)

 

 

 

மணிமேகலை 20 : எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள்

நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள் 20                     

எல்லாம் வினைப்பயன் என்பதன் பொருள் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பதே

கிறிஸ்துவிற்கும், அசோகருக்கும் முந்திய நூற்றாண்டுகளில் பிராமணத்திற்கும் சிரமணத்திற்கும் இடையே கங்கைச் சமவெளியில் நடந்த கருத்து மோதல்களின் பல்வேறு அம்சங்களில் இல்லறத்தையும் துறவறத்தையும் முன்வைத்து நிகழ்ந்த மோதலும் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை பொருள் ஈட்டினும், அவை அனைத்தையும் அவன் அறச்செயல்களிலேயே செலவழித்த போதிலும் தனியனாக இருந்து அவன் அதைச் செய்தால் அவன் புண்ணிய உலகை அடைவது சாத்தியமில்லை என்பது பிராமணச் சிந்தனை. வணிகத்தின் ஊடாகப் பெருஞ்செல்வம் ஈட்டி, மதுரை மாநகரில் அரச விருதுகளுடன் வாழ்ந்து வந்த தருமதத்தனிடம் இல்லறத்தில் ஈடுபட்டு, பத்தினியோடு இணைந்து செய்யாத எந்த அறமும் பயனற்றது என்று அறிவுரைப்பவனாக ‘அந்தணாளன்’ ஒருவனை முன்னிறுத்துவதன் ஊடாக அதுதான் வைதீகம் முன்வைக்கும் அறம் என்பதைச் சாத்தனார் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் பெரும் புலவர் சாத்தனார் அத்தோடு நிறுத்தவில்லை. வழக்கம்போல அன்று வைதீகத்திற்கு எதிர் நிலையாய் நின்ற அவதீகம் (சிரமணம்) இது தொடர்பாக உரைக்கும் மாற்று அறத்தை உடனடியாக அங்கே முவைக்கிறார். பிராமண X சிரமண அறங்களை இவ்வாறு எதிர் எதிராக (juxtapose) வைத்து சிரமணத்தை விளக்குவதும் முன்னிறுத்துவதும் சாத்தனார் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று என்பதைக் கவனித்து வருகிறோம். மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்டுள்ள கிளைக் கதைகள் பௌத்த அறங்களை விளக்கப் பயன்படும் களங்களாக அவரால் அமைக்கப் பட்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தருமதத்தன் – விசாகை கிளைக்கதையும் இங்கு அவ்வாறே அமைக்கப்படுகிறது.

பத்தினி ஒருவளின்றிச் சேர்க்கும் செல்வமும், செய்யும் அறமும் பயனற்றது என்கிற அந்தணாளனின் கருத்தை ஏற்ற தருமதத்தன் தன் அறுபதாம் அகவையில், கன்னி மாடத்தில் வாழ்வைக் கழித்து வரும் விசாகையைப் பத்தினியாக ஏற்றுத் தான் சேர்த்த செல்வங்களை அறச் செயல்களுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் அவளிருக்கும் காகந்தி நகருக்குத் திரும்பிய செய்தியை விசாகை அறிகிறாள். கன்னிமாடத்தை விட்டு நீங்கி அவனைச் சந்திக்க நாணமோ, தயக்கமோ இன்றி பலரும் காண வீதிவழி சென்றாள். ஒரு காலத்தில் ஊர் வம்பால் பிரிய நேர்ந்தவர்கள் அவர்கள். இன்று அவ் ஊரறிய அவனைப் பார்க்கச் செல்கிறாள் அவள். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கிச் செல்லும் முன்பாகவே, அவளே அவனிடம் நோக்கிச் செல்கிறாள். இருவரின் வயதும், வாழ்நெறிகளும் ஊரலர்களுக்கு இன்று வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன் அவர்கள் மீது எழுந்த வீண் பழிச்சொல்லுக்கு இப்போது இடமில்லாமற் போயிற்று.

அவனை நேர்கண்ட அவள், “நாம் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர். முன்பு நம்மைக் குறித்து எழுந்த வம்புகளுக்குக் காரணமான நம் அழகுகள் எங்கு சென்று ஒளிந்தன? நம் இளமையும், காம இச்சையும் இன்று எங்கே போயின? மன உறுதியற்றவனே சொல்! இப்பிறவியில் நான் உன்னடி சேரேன். அடுத்த பிறவியில் நான் உன் மனையாளாகி உன் ஏவல்களை நிறைவேற்றுவேன். இவ் உடல், இளமை, வளந்தரு செல்வம் எவையும் நிலையானவை அல்ல. புண்ணிய உலகை புதல்வர்களாலும் தந்துவிட இயலாது. என்றென்றும் உயிருக்கு உற்ற துணையாய் இருப்பது அறம் ஒன்றே. தானம் செய்!” – என்றனள் விசாகை.

தருமதத்தன் அதை ஏற்றான். மாமன் மகளிடன் தன் மிக்க பெருஞ் செலவத்தைக் காட்டி இருவரும் வானத்து விண்மீன்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமான நல்லறங்களைச் செய்து வாழ்ந்தனர். கன்னியாகவே வாழ்ந்து மூத்தவள் அவள். குற்றமற்றவள் என கந்திற்பாவையால் ஊர் முன் சான்று கூறப்பட்டு வாழ்ந்து வருபவள். ஊர்ப்பழிச் சொற்கள் ஏதுமின்றி தருமதத்தனுடன் அறச் செயல்களைச் செய்து வந்தவள் ஒருநாள் வீதி வழியே வந்துகொண்டிருந்தபோது மன்னன் ககந்தனின் மூத்த மகனும், ஏற்கனவே மருதியிடம் வம்புசெய்து தகப்பனால் கொல்லப்பட்டவனின் அண்ணனுமான ஒருவன் காம வெறியுடன், விசாகையின் கழுத்தில் தன் சுருள் மயிர்த்தலையில் சூடி இருந்த மாலையை எடுத்துச் சூட்டும் நோக்குடன், “முன்னோர் உரைத்த மணம் இதுதான்” எனக் கூறிய வண்ணம், மாலையை எடுக்கத் தன் தலை முடிக்குள் கைவைத்தபோது, அந்தக் கையை அவன் மறுபடி அங்கிருந்து அகற்ற இயலாமற் போயிற்று.

தன் மகனின் உயர்ந்த கை மீண்டும் தாழ இயலாமற் போன அவலத்திற்கு அவன் விசாகையிடம் நடந்து கொண்ட முறை மீறிய செயலே காரணம் என்பதை அறிந்த மன்னன் ககந்தன் கடுஞ்சினம் கொண்டு, மகனை இழக்கும் துயரைப் பற்றிக் கருதாது அவனை வெட்டி வீழ்த்தினான்.

ககந்தனின் இரு மகன்களும் தந்தையின் கரங்களாலேயே வெட்டி வீழ்த்தப்பட்டதற்கான காரணம் அவர்கள் இருவரும் பெண்களின் விருப்பறியாமல் நடந்து கொண்டதே. விசாகையின் வரலாற்றினூடாக சாத்தனர் “யாழோர் மணமுறை” முதலான  “தொல்லோர் கூறிய” மணமுறைகளும் காப்பிய காலத்திற்கு முந்திய சங்க மதிப்பீடுகளும் அவருடைய காலத்தில் மாறிவிட்டன என இரு முறை சுட்டுகிறார். பெண்களின் விருப்பறியாமல் மேற்கொள்ளப்படும் கட்டாய மணங்களை மரண தணடனைக்குரிய குற்றங்களாகக் காட்டுவதன் ஊடாக பௌத்தத்தில் அவற்றுக்கு இடமில்லை என உணர்த்துகிறார். அதே போல “பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும் / புத்தேள் உலகம் புகார்” முதலான வைதீகக் கருத்தாக்கங்களும் பொருந்தாது எனச் சொல்வதன் ஊடாக துறவறத்தை மேன்மைப்படுத்தும் சிரமண மதிப்பீடுகள் போற்றப்படுவதும் இங்கு கவனத்துக்குரியது. ‘பத்தினியோடு இணைந்து செய்யும் தருமம் ஒன்றே பலனளிக்கும்’ – என ஒரு மூத்த அந்தணன் முன்வைக்கும் கருத்தையும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அறச் செயலுக்கு எந்த நிபந்தனையும் இல்லை’ எனத் துறவு மேற்கொண்டு கன்னிமாடம் ஒன்றில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கருத்தையும் எதிர் எதிராக நிறுத்தி அப்பெண்ணின் கருத்தே சரி எனக் காட்டுகிறார் சாத்தனார்.

இந்தக் கிளைக் கதைகள் எல்லாம் அரசனின் மகன் உதயகுமாரன் காஞ்சனனின் வாளால் மாண்ட செய்தியை அவனிடம் பக்குவமாக உணர்த்த வந்த முனிவர்கள் சொன்னவை என்பது கவனத்துக்குரியது. மையக் கதையின் ஊடாக, அதன் ஓட்டம் சிதையாமல், பௌத்த அறங்களை விளக்கும் முகமாகக் கிளைக் கதைகள் மணிமேகலையில் பதிக்கப்பட்டுள்ளன.

இப்படியாக அரசன் மகனாயினும் பெண்களிடம் அத்து மீறும்போது அவர்கள் தண்டிக்கப்படுவது இன்று புதிதல்ல எனும் பொருள்பட “இன்றேயல்ல” (22:19) என அரசனைச் சந்திக்க வந்திருந்த முனிவர்கள் கூறியதைக் கூர்மையாக அவதானித்த மன்னன், “இன்று மட்டுமல்ல எனச் சொன்னீர்களே, இன்று இப்படி ஏதும் நடந்துள்ளதா?” என வினவ, இளவரசன் கொல்லப்பட்ட செய்தியை முனிவர்கள் சொல்கின்றனர்.

அரசன் அதற்கு அமைதியாகப் பதிலளிக்கிறான்:

“நான் அளிக்க வேண்டிய தண்டனையை அதற்குத் தகுதியற்ற விஞ்சையன் அளித்துள்ளான். மன்னனின் காவல் முறையாக இல்லாதபோது முனிவர்களின் தவத்திற்கும், மாதர்களின் கற்பிற்கும் பாதுகாப்பில்லாம்மல் போகும். மகனாயினும் குற்றம் இழைத்ததற்காகத் தண்டித்த மன்னவன் வழி வந்த ஒருவன் மரபில் இப்படி ஒரு தீவினையாளன் தோன்றினான் எனும் செய்தி பிற மன்னவர்கள் காதில் விழுமுன் அவனது உடலை எரியூட்டுவதோடு அந்தக் கணிகையின் மகளையும் காவலில் வை”

-எனச் சோழிய ஏனாதிக்கு (படைத் தளபதி) ஆணையிட்டு அகன்றான் மன்னன்.

மன்னன் அவ்வாறு நீதிக்குத் தக நடந்துகொண்ட போதிலும் அரசி அவ்வளவு எளிதாகத் தன் மகனது மரணத்தை அறம் தவறியமைக்குக் கிடைந்த நியாயமான தணடனை என எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. மகனின் மரணத்திற்குக் காரணமானவளாகத் தன்னால் கருதப்படும் மணிமேகலையை அவள் பழி வாங்கத் திட்டமிட்டாள்.

மன்னவனாயினும், இளவரசனாயினும், அரசியாயினும் அவர்களுக்கு மனக்குழப்பமும் துயரமும் ஏற்படும் காலத்தே தான் கற்றவற்றைத் தன் பேச்சாற்றலின் ஊடாக அவர்களுக்கு எடுத்துரைத்து ஆறுதல் அளிக்கும் அறிவும் தகுதியும் பெற்றவளான வாசந்தவை எனும் மூதாட்டி அரசியை அடைந்து அவள் துயர் நீக்க ஆறுதல் மொழி பகர்கிறாள்.

அரசியைக் குறிப்பிடும் இடத்தே “திருநிலக் கிழமைத் தேவியர்” என்பார் சாத்தனார். “நில உரிமை உடைய தேவியர்” என்பது பொருள். அரசிக்கு நிலக் கிழமை இருந்தது இதன் மூலம் சுட்டப்படுகிறது.

“தன் மண்ணைக் காக்கவோ, இல்லை பிறர் மண்னை வெற்றி கொள்ளவோ மேற்கொள்ளும் போரில் வீரச்சாவு அடைவதைத் தவிர மன்னர்க்கு மூப்படைந்து சாவது உட்பட வேறுவகை இறப்புகள் புகழுக்குரியன அல்ல. நின் மகனின் சாவு குறித்து எந்த ஆறுதல் சொல்லவும் என் நா எழவில்லை.  எனினும் அரசைக் காக்கும் மன்னனின் முன் உன் துயரை வெளிப்படுத்தாதே” என ஆறுதல் சொல்லி அகன்றாள் அந்த மூதாட்டி. ஆனால் அரசி அத்தனை எளிதாக ஆறுதல் அடையத் தயாராக இல்லை.

இதற்கிடையில் மணிமேகலை கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டாள். உரு மாற்றிக் கொள்ளவும், பறந்து செல்லவும் வரம் பெற்றவளான மணிமேகலை அப்படியெல்லாம் செய்யவில்லை.  மணிமேகலையை வஞ்சித்துத் தண்டிக்க மனம் கொண்ட அரசி, அரசனிடம் சென்று, “பிக்குணிக் கோலம் கொண்ட மணிமேகலையின் பின் சென்ற நம் மகன் அரசாளும் தகுதியற்றவன். காமனும் கண்டு மயங்கும் தன் இளமையைப் பிக்குணிக் கோலத்திற்குள் ஒடுக்கிக்கொண்டவளும், நல்லறிவு பெற்றவளுமான மணிமேகலை இருப்பதற்குச் சிறை தகுந்த இடமில்லை. சிறந்த நெறியுடையார்களையே மன்னர்கள் தன் பிள்ளைகளாகக் கருத வேண்டும். அப்படி இல்லாதோர் மறக்கப்பட வெண்டியவர்கள். அவளை இந்தச் சிறை நோயிலிருந்து விடுவி” எனக் கூறி அவளை வஞ்சகமாகத் தன் கைக்குள் கொண்டு வந்து அகன்றாள் அரசி. சிறையை “நோய்” எனச் சாத்தனார் குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

என்னோடு அவள் இருந்தாலும் இருக்கலாம் அல்லது தன்னோடு ஓட்டை எடுத்துக் கொண்டுத் தன் பிச்சை வாழ்வைத் தொடர்ந்தாலும் சரி எனச் சொல்லி அழைத்துச் சென்ற அரசி, மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தைப் புகட்டினாள். ஆனாலும் மறுபிறப்புணர்ந்தவளான மணிமேகலை தன் அறிவு நிலையை இழந்தாள் இல்லை. அடுத்து கல்லா இளைஞன் ஒருவனை அழைத்து மணிமேகலையை வல்லாங்கு செய்து அவளது இள முலைகளில் புணர்ச்சிக் குறிகளைப் பதித்துப் பின் அவளுடன் கூடியிருந்ததாகக் கதை பரப்புமாறு கூறி அவன் கைநிறையக் காசும் கொடுத்து அனுப்பினாள் அரசி. அவனைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்ட மணிமேகலை மந்திரம் ஓதி ஆண் உருவம் அடைந்தாள். அதைக் கண்டு அஞ்சிய அவன் ஊரை விட்டே ஓடினான். அடுத்து அரசி, மணிமேகலைக்குத் தீரா நோய் எனவும், அவள் உணவு உண்ண இயலாதவள் ஆயினாள் எனவும் சொல்லி பட்டினி போட்டுச் சாகடிக்க முனைந்தாள். ஊணின்றி உயிர் வாழும் மந்திர  சக்தி உடையவள்  மணிமேகலை எனும் உண்மை அறியாத அரசி அந்த முயற்சியிலும் தோற்றாள்..

விம்மி நடுங்கிக் கலங்கிய அரசி, “என் மனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாது தவநெறி மிக்க உனக்குச் சிறுமை செய்தேன். பொன்னை ஒத்தவளே பொருத்துக் கொள்வாய்” என மணிமேகலையைத் தொழுது நின்றாள்.

மணிமேகலை பேசத் தொடங்கினாள்:

“உன் மகன் உதயகுமாரன் முன்னொரு பிறவியில் ராகுலனாகப் பிறந்து என் கணவனாக வாழ்ந்த போது திட்டிவிடம் தீண்டி இறந்தான், அதைப் பொறாது நான் என்னுயிரையும் நெருப்பிலிட்டு அழித்துக் கொண்டேன். அன்று உன் இந்த இளவரசனுக்காக நீ எங்கே நின்று அழுதாய்? இப்போது அவன் எரிக்கப்பட்ட போது நீ அவன் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்கழுதாயானால் அந்த உடலைப் புறங்காட்டிலே எரித்தார்களே அவர்கள் யார்? உயிருக்காக அழுதாயானால் வினைப்பயனுக்குத் தக அவ்வுயிர் மீளவும் புகும் இடத்தை அறிந்து உணர்தல் உன்னால் இயலாதது. அன்பிற்குரிய உன் மகனின் அந்த உயிர் இன்று எந்த உடலில் உள்ளது என அறியாத நீ எல்லா உயிர்களிடமுமே அன்பும் இரக்கமும் கொண்டவளாக அல்லவா இருக்க வேண்டும்?

“பெருந்தேவியே! நின் மகனை வெட்டிக் கொன்ற கள்வன் காஞ்சனன் செய்ததைக் கேள். விருந்தினர்க்குச் சோறு படைக்க வந்த சமையற்காரன் தடுக்கி வீழ்ந்து சமைத்த உணவைக் கீழே கொட்டியதைப் பொறுக்காமல் அவனை வெட்டி  வீழ்த்தினான் முற்பிறவியில் உன் மகன். அந்தத் தீவினையின் பயன்தான் இப்பிறவியில் காஞ்சனனின் வாளால் இன்று வெட்டி வீழ்த்தப்பட்டது.

“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என நீ கேட்பாயானால் பூங்கொடியை ஒத்தவளே! அதையும் சொல்வேன்”

– எனக் கூறி உவவனத்தில் தான் மலர் கொய்யப் போனது தொடங்கி, கந்திற் பாவையின் உரையைக் கேட்டுத் தன் முற்பிறவிகளை அறிந்து தான் தெளிவடைந்தது ஈறாக உற்றது அனைத்தையும் ஒன்றும் ஒழியாமல் சொன்னாள் மணிமேகலை.

அவரவர் வினைப்பயனை அவரவர் அனுபவித்தே ஆக வெண்டும். இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். இதை உணர்ந்து உயிர்கள் அனைத்திடமும் சமமான அன்பு செலுத்த வேண்டும். எல்லாம் வினைப்பயன் என்கிறபோது தண்டித்தல், பழிவாங்கல், எந்தக் காரணங்களுக்காகவும் உயிர்களைத் துன்புறுத்துதல் ஆகியன ஆகாது என்பது பௌத்த அறம்.

(அடுத்து அரசிக்கு மணிமேகலை உரைக்கும் அறமும் சாவகம் சென்று ஆபுத்திரன் நாடடைதலும்)

 

 

 

 

 

 

இந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 17   (தீராநதி, ஜூன் 2018)                    

எந்தச் சம்பாபதிக் கோவிலுள் நுழைந்து மணிமேகலைத் தன் உருவை மாற்றிக் கொண்டாளோ அந்தக் கோவிலில் உறையும் தெய்வத்திடமே அவள் எப்படித் தன் சிவந்த இதழ்கள், முத்துப் பற்கள், வில்லொத்த புருவங்கள், பல்வகைக் கோணங்களுடன் செழித்த மேனி, கூர்நுனி முலை முதலான உறுப்பழகுகளால் தன்னை வசப்படுத்தி வீழ்த்தினாள் எனப் புலம்பிய இளவரசன், “மதியொத்த முகத்தாள் மணிமேகலையின்றி இவ்விடம் அகலேன்” எனச் சூளுரைத்து அதன் காலடியில் வீழ்ந்தான். அதைக் கேட்ட சித்திரப் பாவை ஒன்று இப்படி இம்மூத்தோள் முன் அவன் ஆராயாது “நாவறுமையுற்று” வஞ்சினம் கூறியதைக் கடிந்தது.

அள்ள அள்ளக் குறையாது அமுது சுரக்கும் பாத்திரம், செங்கோல் காட்டி அறமுரைத்த தெய்வம், பேசும் சித்திரம் எனத் தன்முன் விரிந்த வியப்புகளால் சற்றே நிலைகுலைந்த இளவரசன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவ்விடம் விட்டகன்றான்.

மணிமேகலையோ இரந்துண்டு வாழ நேர்ந்த ஆற்றா மக்களுக்காகப் பிறரிடம் ஏற்றலும் பின் அதை அந்த மக்களுக்கு அளித்தலும் நமைப்போன்ற பிக்குணியர் கடமை என அப்படியான ஆற்றா மக்களை நாடி அலைந்தவள். குற்றமிழைத்தோரை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைக்குச் சென்று ஆங்கே பசியுற்றுக் கிடந்த மக்களின் பசியாற்றி நின்ற காட்சி சிறைக்காவலர்களுக்கு வியப்பளித்ததையும், அவர்கள் ஓடி அச் செய்தியை அரசர்க்குரைத்ததையும், அரசன் வியந்து அவளை அழைத்து உரையாடியதையும், பின் அவள் விருப்பைக் கேட்டு அதன்படி சிறைச்சாலையில் இருந்தோரை விடுதலை செய்து அச்சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதையும் அறிவோம்.

அந்தக் காதையில் பெரும்பகுதி மன்னனின் அந்த உல்லாசப் பூம்பொழிலின் அழகைச் சித்திரிப்பவையாக அமையும். ஒரு பக்கம் இப்படியான உல்லாசங்கள், செழிப்புகள் இன்னொருபக்கம் ஏழ்மை, வறுமை, பசித்துயர், சிறைச்சாலைகள், குற்ரவாளிகள் என்பதாக உலகம் பிளவுபட்டுக் கிடப்பதை மணிமேகலை சொல்லிக் கொண்டே போகும்.

மன்னன் தன்னை யார் எனக் கேட்டபொது, “விஞ்சை மகள்யான்” என அறிமுகம் செய்துகொள்வாள் மணிமேகலை. இந்த விஞ்சையன், விஞ்சைமகள் முதலான சொற்கள் கல்வியிற் சிறந்த, வித்தைகள் அறிந்த ‘வித்தியாதரர்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையாக மணிமேகலையில் பாவிக்கப்படுகிறது. கல்வியிற் சிறந்த எனும் பொருளோடு சற்றே அற்புத வித்தைகள் கைவரப் பெற்றோர் என்கிற பொருளும் இதற்குண்டு. காயசண்டிகையும், அவள் கணவனான காஞ்சனனும் அவ்வாறே விஞ்சையர்கள். கற்றறிந்தவர்கள் மட்டுமின்றி  பறந்துசெல்லும் வித்தையையும் அதற்கான மந்திரத்தியும் கைவரப் பெற்றவர்கள்.

அரசன் அழைத்து மணிமேகலை வந்துசென்றது, அவள் வேண்டுகோளின்படி சிறையில் வாழ்ந்த மனிதர்கள் விடுதலை செய்யப்பட்டு அது அறவோர் தங்கும் பள்ளியாக மாற்றப்பட்டது எல்லாவற்றையும் உதயகுமாரனும் அறிந்தான். எனினும் அறிந்தோர் நகைத்தாலும், மன்னவன் காய்ந்தாலும் அவளைப் பற்றியே தீருவேன் எனத் தேரேறி அவள் இருக்கும் உலகவறவியை அவன் அடைந்த அதே நேரத்தில் அங்கு தன் மனைவி காயசண்டிகையைத் தேடிக் காஞ்சனனும் வந்திறங்கினான். அந்தப் பொதியமலை முனி தன் மனைவிக்கு இட்ட சாபம் முடியும் காலமாகிய பன்னிரண்டாண்டுகளும் ஆகிவிட்டன, ஏன் இன்னும் அவள் வரவில்லை எனத் தேடி அவன் பொது இடங்கள் பலவற்றிலும் திரிந்தான்.

சாத்தனார் படைத்துள்ள ஒரு அருமையான பாத்திரம் இந்தக் காஞ்சனன். விழுமிய அறிவுடையோன் மட்டுமின்றி மனைவி மீது நிறைந்த அன்புடையவன். அவள் தன் தீவினையின் விளைவாய், விருச்சிக முனிவனின் சாபத்தால் யானைப்பசி நோய்க்கு ஆளான கதையை அறிவோம். கனிகள், காய்கள் என காஞ்சனன் எதை எதையோ கொண்டுவந்து ஊட்டினும் அவள் பசி தீராமையைக் கண்டு  துடித்துப் போகிறான். அவள் பறக்கும் மந்திரத்தையும் மறந்து போனாள் என்பதை அறிந்து அவன் கலக்கம் மிகுதியாகிறது. வேறு வழியின்றி அவளைப் புகார் நகர் வரை நடந்து சென்று அங்கு செல்வந்தர்கள்பால் உணவு பெற்று வாழுமாறு அறிவுறுத்திச் செல்வான். ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக இந்திரவிழா அன்று பறந்து வந்து மனைவியைக் கண்டு வேதனையுடன் பிரிந்து செல்வான். பன்னிரண்டாண்டுகள் எப்போது முடியும் எனக் காத்திருந்த அவனுக்கு, அது முடிந்தும் அவள் வராதத்தைக் கண்டு கலங்கி அவளைத் தேடி வந்து பொதுமக்கள் கூடும் இடமெல்லாம் அலைகிறான்.

அங்கே காயசண்டிகையைக் கண்டதும் அல்லாமல் அவள் தன் பசி நீங்கியதோடு உலகோர் பசி தீர்த்துக் கொண்டிருந்ததையும் கண்டு வியப்புற்றான். காயசண்டிகை வடிவில் இருப்பது மணிமேகலை என அறியாமல், “ஆனைத்தீ நோய் அரும்பசி அகற்ற வானோர் யாரும் அருளினரோ இதை?” என அவளிடம் பழைய அன்புடன் கேட்டான்.

தன்னை அவன் தன் மனைவி என நினைத்துக்கொண்டு பேசுவதைக்கண்டு சங்கடத்துக்குள்ளானாள் மணிமேகலை. ஆனால் என் செய்வது. அவளால் அக்கணம் உண்மையை உரைக்க இயலாது. அருகே ஏற்கனவே மணிமேகலையைத் தேடி உதயகுமாரன் வந்து நின்றிருந்தான். ஒரு மிக நுணுக்கமான நாடகக் காட்சியாய் இதை வடித்திருப்பார் பெருங்கவி சாத்தனார்.

தவறாகப் புரிந்து கொண்டு அணுகும் காஞ்சனனையும் சமாளிக்க வேண்டும். உதயகுமாரனையும் எச்சரித்தாக வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் காஞ்சனனிடமிருந்து அகன்று உதயகுமாரன் பக்கம் சென்று அங்கே நின்றிருந்த ஒரு வயதான மூதாட்டியைக் காட்டி,

“வெண்மணல் போல் நரைத்த கூந்தல், தோல் திரைந்த நெற்றி, இறால் கருவாடுபோலச் சுருங்கிய புருவங்கள், வழுநீர் சுமந்த கண்கள், சீ வடிகிற மூக்கு, தெற்றி அழகிழந்த சுரை விதை போன்ற பற்கள், வற்றலைப்போல் தொங்கும் காதுகள் முதலான அவளது உறுப்புகளைப் பார்.

இறும்பூதுடன் மதர்த்து நின்ற முலைகள் இன்று வெற்றுப்பை போல் தொங்குகின்றன; வாழைத் தண்டு போல விளங்கிய தொடைகள் தாழைத் தண்டுபோல வற்றிக் கிடக்கின்றன; பூக்களாலும், வாசனைச் சாந்துகளாலும் புலால் நாற்றத்தை மறைத்துக் கட்டுப்படுத்தி, ஆடை அணிகலன்களால் அழகுபடுத்தி முன்னோர் வகுத்துவைத்த வஞ்சகம்தான் இந்த யாக்கையின் அழகு என அறிவாய் இளவரசே” – என அறிவுறுத்தி நின்றாள் காயசண்டிகை எனும் காந்தர்வ உருவத்தில் நின்ற மணிமேகலை.

பின்னாளில் பெண்ணுடல் மீது வெறுப்பைக் கக்கி எழுதப்பட்ட சித்தர்பாடல்களுக்கு ஒரு முன்னோடியாய் அமைகின்றன இவ்வரிகள். எனினும் இது ஒரு நாடகக்க காட்சியாய்த்தான் விவரணம் கொள்கிறதே ஒழிய சித்தர் பாடல்களைப்போலப் பெண்வெறுப்பை முன்னிறுத்தி உரைக்கப்படவில்லை.

மணிமேகலை உதயனுக்கு அறிவுரைக்கும் இந்தக் காட்சி அங்கிருந்த இரு ஆடவர்கள் மத்தியிலும் இரு வேறு எண்ணங்களுக்குக் காரணமாயிற்று.

“தன்னைப் பாராட்டும் என் சொற்களை ஏற்காதவளாகவும் உள்ளாள்; அதே நேரத்தில் பிறன் பின்னும் செல்கிறாள்; என்னைப் பிறன்போலும் பார்க்கிறாள்; மன்னன் மகனுக்கு முது மொழிகளையும் எடுத்துரைக்கிறாள்; அதே நேரத்தில் அவளது சிவந்த கண்களும் முத்துப் பற்களும் அவன்பாற் காதற் குறிப்பைக் காட்டுகின்றன…” எனக் குழம்பிய காஞ்சனன் பகை கொண்ட நெஞ்சினனாய் ஒரு பக்கமாய் மறைந்து ஒளிந்து நின்றான்.

இன்னொரு பக்கம் உதயகுமாரனோ அவளைக் காயசண்டிகை உருவில் மறைந்துள்ள மணிமேகலை எனக் கண்டு கொண்டான். எனினும் பழங்கதை பேசிய இந்தப் புதியவன் யார் எனக் குழம்பினான். இந்த இரவில் அவள் அந்தப் புதியவனுடன் ஓடிவிடுவாள் எனவும் அவனுக்குத் தோன்றவில்லை. இருக்கட்டும் நள்ளிரவில் வந்து இவள் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம் என எண்ணி அகன்றான்.

ஊரே உறங்கிக் கிடந்த யாமத்தில் யானை வேட்டைக்குக் கிளம்பிய புலிபோல மணிமேகலை இருந்த அம்பலத்திற்கு வந்த உதயன் சீறிவரும் விஷ நாகம் ஒன்று புற்றுக்குள் நுழைவதுபோல உள்ளே நுழைந்தான். கர்மவினை அவனை அப்படி அங்கு இட்டுச் சென்றது..

அவனுக்கு முன்பே அங்கே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த காஞ்சனன், “இவன் அவளைத் தேடி வந்தான்” எனப் பெருஞ்சினம் கொண்டெழுந்தான். விஷப் பல் வெளித் தெரியப் படமெடுத்து வரும் ஒரு பாம்பு போல் உதயனின் பின்புறமாகச் சென்று, அவன் தோளைத் தன் வாளால் துண்டித்து வீழ்த்தினான்.

காயசண்டிகையைக் கைக்கொண்டுப் பறந்து செல்வேன் என அவளுருவில் இருந்த மணிமேகலைத் தேடி ஓடிய விஞ்சையனை அந்த அம்பலத்தின் நிலையில் தேவதச்சனான மயன் வரைந்திருந்த கந்திற்பாவை எச்சரித்தது. “அவளை அணுகாதே காஞ்சன! அவள் மணிமேகலை. உருமாறி மறைந்துள்ளாள்” என அவனுக்கு ஒரு பேரதிர்ச்சியையும் அளித்தது. அத்தோடு முடியவில்லை. அவனுக்கு இன்னொரு பேரதிர்ச்சியும் காத்திருந்தது. கர்மவினையின் பயனாய் காயசண்டிகைக்கு நேர்ந்த துயர முடிவுதான் அச்செய்தி. அமுதசுரபியில் விளைந்த அன்னத்தை உண்டு தன் கடும்பசியிலிருந்து விடுபட்ட காயசண்டிகை, பிரிந்திருந்த தன் கணவனைப் பார்க்கும் துடிப்பில், தனக்கு மீளக் கிடைத்த பறக்கும் திறனால் வானில் எழுந்து விரைந்தாள். அவள் சென்ற வழியில்தான் விந்திய மலை உள்ளது, அம்மலையைக் காக்கும் அந்தரியான விந்தா கடிகை அதன் உச்சியில் உறைகிறாள். பறக்கும் வரமுள்ளவர்கள் அம்மலையின் உச்சியின் மீது பறந்து கடப்பது வழமையல்ல. அப்படி யாரேனும் கடக்க நேர்ந்தால் பொங்கிச் சினம் கொள்ளும் விந்தாகடிகை அவர்களை ஈர்த்துத் தன் வயிற்றினுள் அடக்குவாள். பிரிந்த கணவனைச் சந்திக்கும் ஆவலில் உச்சிமீது பறந்த காயசண்டிகையும் அப்படி அவள் வயிற்றினுள் அடங்கிவிட்ட சோக வரலாறுதான் காஞ்சனனுக்குக் கிடைத்த அந்த இன்னொரு பேரதிர்ச்சி.

“காஞ்சன ! கைம்மை (சிறுமை) கொள்ளாதே. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.. அது இங்கு உதயகுமாரனின் உயிரை உண்டது. ஆனால் விஞ்சயனான காஞ்சன நீயும் ஆராயாமல் ஒரு கொடிய தீவினையைச் செய்தாய். அவ்வினை உன்னை வந்து அகலாமல் பற்றும்” -என அத் தெய்வம் கூறியது. அது கேட்ட விஞ்சையன் துயருற்றதோடு, கடுவினை பற்றிய நெஞ்சத்தோடு. பறந்து அகன்றான்.

மணிமேகலைக் காப்பியத்தில் பதிக்கப்பட்ட கிளைக் கதைகளில் நம் நெஞ்சைப் பிழியும் இன்னொரு சோகக் கதை இது. அவன் விஞ்சையன். அவளும் விஞ்சையள். அறிவிற் சிறந்தவர்கள். வித்தைகள் அருளப்பெற்ற காந்தர்வர்கள். காஞ்சனனைச் சொல்லும் போதெல்லாம் வித்தியாதரன் எனப் பொருள்படும் விஞ்சையன் எனச் சாத்தனார் சொல்லத் தவறுவதில்லை. அறிஞனான அவனும் ஆராயாமல் ஆத்திரம் கொள்கிறான். கொலைப் பழிக்கு ஆளாகிறான். ஊழ்வினை உதயகுமாரனைக் கொன்றது. கொன்றவனையும் அச்செயலூடாக இன்று ஊழ்வினை பற்றுகிறது. கர்ம வினையை எவரும் அனுபவித்தே ஆக வேண்டும். கர்ம வினை என்பதை இந்திய மதங்கள் பொதுவில் ஏற்றுக் கொள்கின்றன. ஆன்மா என்பதை ஏற்பதிலும் மறுப்பதிலிலும்தான் வைதிகமும் பௌத்தமும் வேறுபடுகின்றன.

மணிமேகலைக் காப்பியம் முழுவதும் இப்படியான கர்மவினை குறித்த கரிசனம் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதன் பொருளென்ன? எல்லாம் நம் திட்டப்படி நடப்பதில்லை. நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயல்படும் உலகில் வாழும் நாம் அது குறித்த பிரக்ஞையோடிருத்தல் அவசியம். அந்தப் பிரக்ஞை நாம்மை எப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் அப்படியான எச்சரிக்கையோடு செய்யப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை இல்லாமல் நடந்துகொண்டதன் விளைவாகவே காயசண்டிகை அந்தக் கொடுஞ் சாபத்திற்கு ஆளாக வேண்டிற்று. உதயகுமாரனின் மரணம் எப்படி நிகழ்கிறது? அவன் கர்மவினை அதற்குக் காரணமான போதிலும் இன்னொரு பக்கம் காஞ்சனன் ஆராயாமல் செய்த வெவ்வினை கர்ம விளைவுகளைச் சுமந்த ஒரு தீவினையாய் அக்கொலை மூலம் அவனைச் சூழ்கிறது.

நமக்கு அப்பாற்பட்டு இயங்கும் இச்சக்திகள் குறித்த பிரக்ஞை ஒருவரை அறவாழ்வுக்கு இட்டுச் செல்ல வேண்டும்; நம்முடைய எந்தச் செயலும் யாருடைய துயரத்திற்கும் காரணமாகிவிடக் கூடாது என்கிற பிரக்ஞை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணமும் தேவை என்பதைக் காப்பியம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. மானுடத் துயர்கள் குறித்த பிரக்ஞையுடன் நம்மை வாழ அது அறிவுருத்துகிறது.

காஞ்சனன் வித்யாதரன் மட்டுமல்ல. அவன் தன் மனைவியின்மீது தீராக் காதலுடையவன் என்பதையும் அறிவோம். சாப காலம் முடிந்தவுடன் மனைவியைச் சந்தித்து அள்ளிச் செல்ல வந்தவனுக்கு அவளை இனி சந்திக்க இயலாமலேயே போய்விடுகிறது. அதுமட்டுமல்ல அவன் மீண்டும் ஒரு கொலைப் பழிக்குக் காரணமாகிக் கரும வினைக்கு ஆளாகிறான்.

காயசண்டிகையும் நாம் இந்தக் காப்பியத்தில் சந்திக்கும் இன்னொரு சோக நாயகி. அவளும் வித்தைகள் அறிந்த வித்யாதரிதான். எனினும் அவள் செய்யும் ஒரு குறும்பு அவளை முனிவனின் கொடும் சாபத்திற்கு ஆளாக்குகிறது. சாப காலம் முடிந்து கணவனைக் காண ஆவலோடு பறந்தவளும் வினைக்கு ஆளாகிறாள்.

ஒரு நாயகியை மையமாகக் கொண்ட காப்பியம் மணிமேகலை. உதயகுமாரனைக் காப்பிய நாயகன் எனச் சொல்வதற்கில்லை. அவன் ஒரு எதிர்மறை நாயகனாகவே படைக்கப்படுகிறான். அவனது துயர மரணம் இங்கே காப்பியச் சோகமாக விரியவில்லை. ஆனால் அவனைக் கொலை செய்தவனின் முடிவு இங்கு பெருஞ் சோகமாய் விரிகிறது.

(அடுத்த இதழில்: காப்பியத்தின் இரண்டாம் பாகம்)

 

 

 

 

 

இந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 13  

(மணிமேகலைக் காப்பியத் தொடர் – பிப்ரவரி, ‘தீராநதி’)

          

பிராமண மதத்தைச் சிரமண மதங்கள் எதிர்கொண்ட விதம் தனித்துவமானது. ஆன்மா, இறை, வேள்வி முதலானவை குறித்த பிராமண மதக்  கருத்தாக்கங்களைச் சிரமண மதங்கள் முற்றிலுமாக மறுத்தாலும் இந்திய மதங்களுக்கென உருவாகி இருந்த சில பொது நம்பிக்கைகள், கதைகள், கடவுளர்கள் ஆகியவற்றை அவை ஏற்றுக் கொண்டன. ஆனால் அவற்றை பிராமண மதம் எவ்வாறு முன்வைத்ததோ அப்படியாக அல்லாமல் முறிலும் எதிராகவும் பல நேரங்களில் தலைகீழாகவும் அவற்றை அவை ஆக்கிய விதம் நுணுக்கமானது மட்டுமல்ல சுவையானதும் கூட. அப்படி ஏற்றுக் கொண்ட கடவுளர்களில் ஒருவந்தான் இந்திரன்.

இந்திரனோ தேவர் தலைவன். ஒரு எளிய, யாருமற்ற, பெற்றோர் யாரென அறியாத ஆபுத்திரனை, “மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன்” என அவனுக்குச் சமமாக நிறுத்துகிறார் சாத்தனார். இந்த மாபெரும் உலகில் வசிக்கும் உயிர்கள் அனைத்தின் பசியையும் போக்கும் பெரும் பேறு பெற்றவம் ஆபுத்திரன். அந்தப் பெருமை தேவர் தலைவனுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கருத்து. “பேராற்றல் மிக்க தேவர்களின் வேந்தனே! மண்ணுலகில் உள்ள எம் போன்றோரில் நல்வினை, தீவினைகளை அங்கிருந்து கொண்டு மதிப்பிடுகிறவர்கள் நீங்கள். தருமம் செய்யும் மக்கள், எளியோரைப் பாதுகாத்திருப்போர், நற்றவம் செய்வோர், பற்றறுக்க முயல்வோர் முதலானோர் வாழும் உலகு வாய்க்கப் பெறாதவர் நீங்கள்”- எனத் தேவருலகைக் காட்டிலும் இம் மண்ணுலகம் சிறந்தது எனத் தனக்கு வரம் அளிக்க வந்த இந்திரனுக்குச் சொல்வான் அந்த எளியவன்.

“பசித் துயருடன் வந்தோரின் கொடும்பசியைத் தீர்த்து அவர்கள் முகத்தை இனிதாக்கும் பணியே தெய்வம் எனக்குக் காட்டிய வழி. இந்தப் பணிக்குரிய எனக்குத் தேவர் கோமான் நீ என்ன தந்துவிட இயலும்? உண்டியா, உடுப்புக்களா, பெண்களா இல்லை என்னைப் பாதுகாக்க யாருமா?” என்றந்தப் பெற்றோர் பெயரறியா இளைஞன் எள்ளி நகையாடியபோது தேவருலகத் தலைவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

புராண தெய்வங்களுக்கே உரித்தான குயுக்தியும் தந்திரமும் மிக்க இந்திரன் குறுக்கு வழியில் யோசித்தான். இவ்வுலகில்; பசி இருந்தால்தானே அதை ஆற்றுவாய்.. பசியே இல்லாமல் செய்தால்? “இந்த நீணிலம் முழுமையும் நீர் பெருகி வளம் சுரக்க” என ஆணையிட்டு அகன்றான் தேவர் தலைவன். பன்னிரண்டு ஆண்டுகளாக மழையின்றிக் காய்ந்து கிடந்த பாண்டி நாட்டில் பெருமழை பெய்ய அங்கு எல்லா வளமும் சுரந்தது. பசித்தோர் இல்லாத அந்த நாட்டில் அவன் தன் தெய்வ ஆணையை எப்படி நிறைவேற்றுவான்? என்னேரமும் பசித்தோர் நிறைந்திருந்த அவனது அம்பலப் பீடிகை இப்போது சோம்பேறிகள், காமுகர்கள், தூர்த்தர்கள், வம்பு பேசுவோர், சூதாடுவோர் முதலானோரால் நிறைவதாயிற்று.

தன் அம்பலத்தை விட்டு நீங்கிப் பசித்தோரைத் தேடித் திரிந்த அவன் கேலிக்குரியவன் ஆனான். தன் எல்லாச் செல்வங்களையும் கடலில் பறிகொடுத்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனை அப்போதுதான் கப்பலிலிருந்து இறங்கிய சிலர் கண்டு சாவக நாட்டில் (Jawa) பெரும் பஞ்சம் நிலவி உயிர்கள் செத்தழிவதைக் கூறினர்.

சாவகம் செல்லும் அக்கப்பலில் ஏறினான் ஆபுத்திரன். வழியில் கடல் சீற்றம் காரணமாக அம்மரக்கலம் மணிபல்லவத்தீவில் நின்றது. இறங்கியவன் ஏறினான் என எண்ணி நள்ளிறவில் அம்மரக்கலம் அகன்றது.

தன்னை விட்டு விட்டு மரக்கலம் அகன்றதை அறிந்த ஆபுத்திரன் துயரம் கொண்டலைந்தான். அள்ள அள்ளக் குறையாத அந்த அரிய பாத்திரம் பயனற்றுத் தன் கரங்களில் இருப்பதை வெறுத்தான். அங்கிருந்த கோமுகிப் பொய்கையில் அதனை விட்டு, “ஆண்டுக்கு ஒருமுறை இப்பாத்திரம் வெளிப்படட்டும்.  அருளரம் பூண்டு ஆருயிர் ஓம்பும் யாரும் இங்கு தோன்றும் நாளில் அவர் கைப் புகுவாய்” என அதை வேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான்.

கீழ்த் திசையில் தோன்றி மேற்திசையில் மறையும் ஞாயிறுபோல மணிபல்லவத்தீவில் உடலைத் துறந்த ஆபுத்திரன் சாவகத்தில் வாழ்ந்திருந்த மண்முக முனிவன் வளர்த்த பசுவயிற்றில் மீண்டும் பிறப்பெடுத்தான் என்று ஆபுத்திரன் வரலாற்றையும் அந்த தெய்வப் பாத்திரம் மணிமேகலையை வந்தடைந்ததையும் விளக்குவார் அறவணர். இப்போது ஆபுத்திரனை வயிற்றில் ஏந்திய பசுதான் தன் முற்பிறப்பில் அவனுக்குப் பாலூட்டிய பசுவும் கூட. பசு ஈன்ற அம்மகவைப் பிள்ளைப் பேறற்ற சாவக மன்னன் ஏந்தி வளர்த்து அரசன் ஆக்குவான். ஆபுத்திரன் இப்பிறவியில் சாவக நாட்டின் அரசனான கதை இது.

அப்போது சோழ நாட்டில் பெரும் பஞ்சம். இந்நிலையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை வீணே வைத்திருக்கல் ஆகாது என அரும்பசி ஆற்ற மணிமேகலையை ஆயத்தப்படுத்தி அகல்வார் அறவணர்.

மதுமலர்க் குழலி என இக் காவியத் தொடக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட அச்சிறுமி துறவுக் கோலத்துடனும் கையில் அமுதசுரபியுடனும் வீதியில் இறங்கினாள். அது அம்மக்களுக்குப் பேராச்சரியத்தை அளித்தது. கூடிய மக்களில் சிறியோர், அவளது அழகில் ஈர்ப்புற்றோர், காமுகர் எனப் பல திறத்தாரும் இருந்தனர் என்கிறார் சாத்தனார்.

அப்படி நின்றவருள் என்ன உண்டாலும், எத்தனை உண்டாலும் தீராப்பசி எனும் நோயுடைய காயசண்டிகையும் ஒருத்தி. வடதிசைப் பிறந்து தென் திசை அடைந்து பொதியமலையில் தவமிருந்த ஒரு முனிவனின் சாபத்தால் இந்தக் கொடிய நோயை அடைந்தவள் அவள். அப்படியான சாபம் பெற்றதற்கும் அவளது பழ வினையே காரணம்.

மணிமேகலை ஒரு பவுத்த காவியமாயினும் இந்தியத் துணைக் கண்டத்தில் புத்தர் வரலாற்றுடன் இணைந்த புனிதத் தலங்களான லும்பினி, புத்த கயா முதலானவை காப்பியத்தில் இடம் பெறுவதில்லை. முற்றிலும் இன்னொரு புதிய புத்த வெளி ஒன்று இங்கு கட்டமைக்கப்படுகிறது. தென்னிந்தியா, இலங்கை, சாவகம் முதலான தென் கிழக்காசியா என்றொரு புதிய புத்த பிரபஞ்சம் ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. தென்கிழக்காசிய என்பது பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலப்பகுதியாக உருப்பெற்ற காலம் அது. இன்றும் அங்கு பவுத்தம் என்பது அதற்கே உரிய வடிவில் முக்கிய மதமாக உள்ளதை அறிவோம்.

‘பொதியில்’ எனும் பொதியமலை அகத்தியருடன் இணைத்துப் பேசப்படும் ஒன்று. அகத்தியர் முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதும் மணிமேகலையில்தான். பரிபாடலிலும் அகத்தியர் உண்டெனினும், அதுவும் சங்க இலக்கியங்களிலேயே மிகவும் பின்னுக்கு வந்த ஒன்று. ‘பொதியில்’ எனும் சொல்லாக்கம் போதி + இல் என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம் எனவும் புத்தரின் அடுத்த அவதாரமாகக் கருதப்படும் அவலோகீதீஸ்வரர் ஆலயம்தான் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோவில் என்றும் சொல்கிறார் பவுத்த அறிஞர் ஹிகாசோகா. தேரன் + ஊர் என்பதுதான் தேரூர் என ஆகியது என்பது அவர் கருத்து. அகத்தியருக்குச் சிலைகள் தென்கிழக்காசிய நாடுகளில் உண்டு. மணிமேகலையைப் போல இன்றும் அழியாமல் நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பவுத்த நூலான வீரசோழியம் அகத்தியரை அவலோகிதீஸ்வரருடன் இணைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் நிலைபெற்றிருந்த தெற்கத்திய பவுத்தத்தில் அகத்தியருக்கு ஒரு முக்கிய இடமிருந்தது என்பார் ஆனே மோனியஸ்.

(அடுத்த இதழில் பணிமேகலையும் பத்தினி வழிபாடும்)