2019 தேர்தலை ஒட்டி: நெஞ்சை உலுக்கும் கடந்த ஐந்தாண்டுகள்…

2014 தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 268 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் பக்கம் 336 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்தப் பெரிய வெற்றியின் பின்னணியில் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் உலகமே தங்கள் கைகளில் வந்துவிட்டதாகச் செயல்படத் தொடங்கினர். எல்லோரும் கேலி செய்யும் அளவுக்கு  வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுத் தலைவர்களை வரவழைத்துச் செய்த (இலட்ச ரூ மதிப்புள்ள தங்க சரிகை பொறுத்திய கோட் அணிந்து மினுக்கியது உட்பட) அட்டகாசங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட முடியாது. பிரேசிலின் ஜைர் போல்சனாரோ போலவும், துருக்கியின் ரிசெப் தையிப் எர்டோகான் போலவும், ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் போலவும் அமெரிக்காவின் ட்ரம்ப் போலவும் தன்னை ஒரு ஆக வலிமையான strongman ஆக நரேந்திரமோடி முன்னிறுத்திக் கொண்டார்..

நாட்டில்  கிறிஸ்தவ நீதிபதிகளும் இருபார்களே என்பதைப் பற்றிக் கவலை இல்லாமல் ஒரு ஈஸ்டர் நாளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாநாட்டைக் கூட்டியதும், பிரதமர் அலுவலகம் ஆண்டுதோறும் நடத்தி வந்த இப்தார் விருந்தை ரத்து செய்ததும், இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் பாரம்பரியமான கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, பலஸ்தீனத்தின் மீதான அதன் தாக்குதலை மௌனமாக ஆதரித்ததும், பெரும் விளம்பரங்களுடன் இஸ்ரேலுக்குச் சென்று விருந்தாடி வந்ததும் சில எடுத்துக்காட்டுக்கள்.

அனைத்து அதிகாரங்களும் தம் கைகளில் வந்தாற்போல சங்கப் பரிவாரங்களும் ஆங்காங்கு தம் வேலைகளைத் தொடங்கின. புனேயில் தொழுகை முடித்து வந்துகொண்டிருந்த மொஹ்தின் ஷேக் என்ற ஒரு இளம் சாஃப்ட்வேர் ஊழியர்  (ஜூன் 2, 2014) குத்திக் கொல்லப்பட்டார். அங்கிருந்த முஸ்லிம் கடைகள், குறிப்பாக பேக்கரிகள் மற்றும் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன. டெல்லியில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன (பிப்ரவரி 2015). அடுத்த சில மாதங்களில் உ.பியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என முகம்மது அக்லக் எனும் பெரியவரை சங்கப் பரிவாரக் கும்பலொன்று குத்திக் கொன்றது. அவரது இளம் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் (செப் 2015) மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். ஊர்ப் பொதுவாக உள்ள ஆலய ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து, மக்களை வெறியூட்டித் திரட்டி அக்லக் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்று அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது உலகளவில் கவனத்திற்கு உள்ளாகியபோதும் கூட நரேந்திரமோடி வாய்திறக்கவில்லை. தொடர்ந்து பலர் இவ்வாறு பசுவின் பெயரால் நாடெங்கும் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் மோடியும் அமித்ஷாவும்  வெளிப்படையாக மதவாத அரசியலைச் செய்தனர். ‘வளர்ச்சி’ (விகாஸ்) என வாயாடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி மாநிலத் தேர்தல்களில்  ‘முஸ்லிம்கள்’ எனப் பெயர் உதிர்த்து அடையாளம் காட்டாமலேயே முஸ்லிம் வெறுப்பை விதைத்து, அதை ஓட்டுக்களாகவும் ஆக்கினார். காங்கிரசை முஸ்லிம் கட்சி என அடையாளம் காட்டுவது அவரது தந்திரங்களில் ஒன்று.. “பசுமைப் புரட்சி “க்குப் பதிலாக “ஊதாப் புரட்சி” செய்த கட்சி என பிஹார் தேர்தலின்போது காங்கிரசை அவர் அடையாளப் படுத்தியது குறிப்பிடத் தக்கது. விவசாயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் மாட்டுக் கறி விற்பனையைப் பெருக்கிய கட்சி என்பது அதன் பொருள். “பசுமாடுகள் வளர்த்துப் பால் வியாபாரம் செய்வதற்குக் கடனுதவி செய்ய மாட்டார்கள். ஆனால் மாட்டுக்கறி வணிகம் என்றால் குறைந்த விலையில் எல்லா வசதியும் செய்து தருவார்கள்” – என அக்கட்சியை அடையாளப்படுத்துவது என்பதெல்லாம் நரேந்திரமோடியின் தரக் குறைவான தேர்தல் பிரச்சார உத்திகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்.

காங்கிரஸ் இந்த உத்தியைத் தைரியமாக எதிர்கொள்ளாமல் பம்மியது. நேரடியாக இதை ஒரு மதவாத அரசியல் எனச் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தாமல் ‘நாங்கள் அப்படியெல்லாம் இல்லை’ எனச் சொல்வதையே அது தன் எதிர்வினையாக ஆக்கிக் கொண்டது. இதன் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி தன்னை ஒரு காஷ்மீர் பிராமணனாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்து ஆலயங்களுக்குச் சென்று வணங்கிவிட்டுத் தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மொத்தத்தில் முஸ்லிம்களாக இருப்பதே குற்றம் என்கிற அளவுக்கு முஸ்லிம்கள் உணர வேண்டிய நிலை சென்ற ஐந்தாண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுபவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் வங்கதேச அல்லது ரோகிங்யா “ஊடுருவிகள்”, அவர்கள் இந்துக்களாக இருந்தால் இந்து “அகதிகள்”. மொழியை அத்தனை சாதுரியமாக ஒரு தாக்குதல் ஆயுதமாக அவர்கள் ஆக்கினர். அண்டை நாடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தவர்கள் முஸ்லிம்களாக இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தருவது மட்டுமல்லாமல் குடியுரிமையும் அளிக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கடந்த பல பத்தாண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்து இங்கு விவசாயம் முதலான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருந்த போதும் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. இன்று அசாமில் அவ்வாறு 40 லட்சம் மக்கள் குடியுரிமை பற்றிய கேள்விக்குறியுடன்  வதிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் எந்த நாடுகளில் இருந்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை என்பதை ஆர்.எஸ்.எஸ் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ கொள்கையிலிருந்து எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது. உலகின் எப்பாகத்திலிருந்து யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் கொள்கையைத்தான் அவர்கள் ‘அலியாஹ்’ என்கிறார்கள்.

அக்லக் முதலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது ஒருபக்கம் மோடி மௌனம் காத்தார். இன்னொரு பக்கம் அவரது கட்சிக்காரர்களும் மாநில அமைச்சர்களும் அதை ஆதரித்தனர். மோடி அதைக் கண்டிக்காததற்கு அப்படிக் கண்டிப்பது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகிவிடும் என அவர்கள் தரப்பில் சமாதானம் சொல்லப்பட்டது.

2015 பிஹார் தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவ், “இந்துக்களும்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” எனப் பதிலளித்தபோது, “‘யாதவ் சாதியில் பிறந்துவிட்டு இந்துக்களை அவமானப் படுத்துகிறார்” என மோடி அவரைக் குற்றம் சாட்டியதையும் மறந்துவிடமுடியாது.

இப்படியான அப்பட்டமான மதவாத அரசியல் தொடர்ந்தால் அது எங்கு கொண்டு சென்றுவிடும்?

இதுதான் இந்தத் தேர்தல் நம்முன் எழுப்பும் கேள்வி.

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

MEYPPORUL.COM, ஜூலை 10, 2018

ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. அரசுகளுக்குத் திடீரென இங்குள்ள சூஃபி மற்றும் ஷியா இஸ்லாமியப் பிரிவுகளின் மீது பரிவும் பாசமும் வந்துள்ளது. டெல்லியில் நான்கு நாள் சூஃபி உலக மாநாடு ஒன்று, மோடி அரசின் ஆதரவோடு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது  (மார்ச் 17-20, 2016). பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கி வைத்தார். அல்லாஹ்விற்கு உள்ள 99 பெயர்களும் கருணை, அன்பு ஆகியவற்றை வற்புறுத்துவதாகத்தான் உள்ளன,  ஒன்று கூட வன்முறையைப் போற்றும் பொருளில் இல்லை எனப் பலத்த கைதட்டல்களுக்கு இடையே உணர்ச்சி பொங்கப் பேசினார். இன்றைய அரசுகளுக்கு இப்படியான முஸ்லிம் உட்பிரிவுகள் மீது பாசம் வருவதும் அவற்றை அவை ஆதரவுக் கரம் நீட்டி அணைத்துக் கொள்வதும் சமீப கால உலக வரலாற்றில் புதிதல்ல.

இது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்குமுன் சூஃபியிசம் போன்ற இயற்கை அதீத இஸ்லாமியப் பிரிவுகள் (Mysticism) பற்றிச் சிலவற்றை நாம் மனதில் அசை போடுவது அவசியம். சூஃபியிசத்தை எதிர்ப்பது இங்கு நம் நோக்கமில்லை. இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து மனித உரிமைகள் நோக்கிலிருந்து எழுதிக் கொண்டுள்ள என்னைப் போன்றவர்கள் சூஃபி இஸ்லாம், தர்ஹா  வழிபாடு முதலானவற்றை எல்லாம் எதிர்ப்பதில்லை. பொதுவான மதவெறி, மதவாத அரசியல் ஆகியவைதான் நமது இலக்குகள். சூஃபி இசையை இங்கு விரும்பாதவர் எவரும் இல்லை. அந்தப் பாகிஸ்தானி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானின் “அல்லாஹூ… அல்லாஹூ…” பாடலையும், ‘ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ‘க்வாஜா மேரே க்வாஜா’ பாடலையும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை விரும்பிக் கேட்டு ரசித்தவன் நான். மொய்னுதீன் சிஸ்தி அவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்று பார்த்து வரவேண்டும் என்கிற விருப்பமும் எனக்குண்டு.

இதை ஏன் இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டி உள்ளது என்றால் இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே நமது நோக்கம்.

செப்டம்பர் 11 (2001) இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவும் இதர உலக அரசுகளும் சில கடுமையான சட்டங்களை இயற்றின. ‘தேசப் பாதுகாப்பு’, ‘தேசபக்தி’ (National Security Act / Patriotic Act) முதலானவற்றின் பெயரால் இச்சட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் இஸ்லாம், அதன் வரலாறு, திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமியப் புனித நூல்கள், கருத்துகள், சிந்தனைகள் ஆகியவை குறித்த தீவிரமான ஆய்வுகளுக்கும் இந்த அரசுகள் முக்கியத்துவம் அளித்தன. மொத்தத்தில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் முதலான பயங்கரவாத நடவடிக்கைள், அல்காயிதா, ஐ.எஸ். முதலான அமைப்புகள் ஆகியவற்றில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதன் பின்னணியில் உள்ள வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் முதலானவற்றை ஆய்வது முற்றிலும் கைவிடப்பட்டது, அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டது. முஸ்லிம் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை இஸ்லாமிய மதத்திற்குள் மட்டும் தேடுவதென அரசுகள் தமது ஆய்வுகளைச் சுருக்கிக் கொண்டன.

இதன் விளைவாக இன்றைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதையும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத ரீதியான தலையீடுகள் என்கிற அளவில் சுருக்கிக் கொண்டனர். வரலாற்று அடிப்படையில் பிரச்சினைகளை அணுகி அரசியல் மற்றும் பொருளாதார அணுகல் முறைகளில் உரிய மாற்றங்களைச் செய்வது என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது, மினாராக்கள் வைத்து மசூதிகள் கட்டக் கூடாது என்பன போன்ற சட்டங்களை இயற்றுதல், நீ முஸ்லிமாக இருந்தாலும் லண்டனில் வாழும்போது நீ லண்டன்காரனாக இருப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் (muscle liberalism), இந்தியாவில் பிறந்து விட்டால் நீ “பாரதப் பண்பாட்டை” ஏற்க வேண்டும் என்பது போன்ற வற்புறுத்தல்கள் மட்டுமே தீர்வுகளாகச் சட்டரீதியாகவும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ளப்பட்டன.

இப்படியாக இன்றைய பிரச்சினைகளை மதத்திற்குள், குறிப்பாக இஸ்லாத்திற்குள் தேடுவது என்பதாகச் சுருக்கிக் கொண்டதன் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை “நல்ல முஸ்லிம்கள்” X “கெட்ட முஸ்லிம்கள்” எனப் பிரித்து அணுகுவதாக அமைந்தது. அதாவது முஸ்லிம் அடையாளங்களைத் தரிப்பதில் உறுதி காட்டுபவர்களை எல்லாம் ‘கெட்ட முஸ்லிம்களாக’ வரையறுத்து அவர்களைப் பல்வேறு வகைகளில் ஒடுக்குவது, பிற ‘நல்ல முஸ்லிம்களை’ வெளிப்படையாகப் பாராட்டுவது என்பது அவர்களுக்கு  இரண்டு வகைகளில் பயன்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான தமது கடும் நடவடிக்கைகளை அவர்கள் நியாயப்படுத்துவது ஒரு பக்கம். நல்ல முஸ்லிம்களோடு உரசிக் கொண்டு பாருங்கள் நாங்கள் ஒன்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என உலகின் முன் காட்டிக் கொள்வது இன்னொரு பக்கம். இப்படி நல்ல முஸ்லிம்கள் எனச் சிலரை அடையாளப்படுத்துவதன் ஊடாகவே அவர்கள் மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தினர்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களின் நோக்கம் ஒட்டுமொத்தமான மக்கள் மத்தியில் உள்ள நல்லவர்களையும் கெட்டவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதோ, சாதாரண மக்களை ‘கிரிமினல்’ குற்றவாளிகளிடமிருந்தும், அமைதியை நேசிப்பவர்களை வன்முறையாளர்களிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதோ அல்ல. மாறாக முஸ்லிம்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களில் பெரும்பான்மையரைக் கெட்ட முஸ்லிம்களாக வேறுபடுத்திக் காட்டுவது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

சரி, இதை அவர்கள் எப்படிச் செய்தனர்?

நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம் என்பதன் தூல வடிவமாக சூஃபியிசம் X வஹாபியிசம் அல்லது சன்னி முஸ்லிம் X ஷியா முஸ்லிம் என்பன போன்ற இருமை எதிர்வுகளை அவர்கள் கட்டமைத்தனர். இதை நாம் சொல்வதென்பது சூஃபியிசத்துக்கும் வஹாபியிசத்திற்கும் அல்லது ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் வித்தியாசங்களே இல்லை, இவர்கள் பொய்யாக இந்த வித்தியாசங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பதல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த அடிப்படையான வேறுபாடுகளைச் சொல்வது அவர்களின் நோக்கமல்ல. உண்மையில் இல்லாத வேறு சில வேறுபாடுகளை இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் மீது சுமத்துகிறார்கள். வஹாபியிசம் என்பது அரசியல் இஸ்லாம், சூஃபியிசம் அப்படியல்ல; அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதில் ஆன்மீகமே முக்கியம் என்பதுபோல இவர்கள் புதிதாக வேறுபாடுகளைக் கற்பிக்கின்றனர். சூஃபியிசம், வஹாபியிசம் இரண்டும் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதைக் காட்டிலும் இவற்றின் மீது இப்படியாக இவர்களால் ஏற்றப்படும் பொருளே (meaning) பொதுப் புத்தியில் ஆட்சி செலுத்தும் ஒன்றாக மாற்றப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் அரசுடன் முஸ்லிம் எதிர்ப்பு மதவாத சக்திகள், கார்பொரேட் ஊடகங்கள் முதலியனவும் அமைப்புகளும் துணைபுரிகின்றன. சுய லாபங்கள் கருதிச் செயல்படும் சில தனிநபர்களும் இதற்குத் துணைபோகின்றனர். யார் ஒருவரையும் ‘வஹாபி’ என முத்திரை குத்தினாலே போதும். அவர் ஒரு பிற்போக்குவாதி, மத அடிப்படைவாதி, எல்லாவற்றிற்கும் மத ரீதியான தீர்வுகளை மட்டுமே முன்வைப்பவர், வன்முறைச் செயல்பாடுகளை நியாயப்படுத்துபவர் அல்லது அவரே வன்முறை நடவடிக்கைகளில் பங்கு பெறுபவர் என்கிற பொருள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது. அதேபோல ஒருவரை ‘சூஃபியிசத்தை’ ஏற்பவர் என்றாலே அவர் மதச்சார்பற்றவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி, வன்முறைகளுக்கு எதிரானவர், நல்லவர் என்கிற பொருளும் இதன்மூலம் பதிக்கப்படும்.

ஆனால் அவர்கள் சொல்வதுபோல சூஃபியிசம் என்பது அப்படி ஒன்றும் மத அடையாளங்களை மறுப்பதோ அரசியலை வெறுப்பதோ அல்ல. எல்லாவற்றிற்கும் அரசியல் உள்ளது போலவே சூஃபியிசத்திற்கும் அரசியல் உண்டு. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய உமர் முக்தார் முதலானோர் சூஃபி வழியில் வந்தவர்கள்தான். மொராக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் சூஃபியிசம் முக்கிய பங்கு வகித்துள்ளது குறித்து மிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.

தவிரவும் அரசுகள் இன்று சூஃபிகள் X வஹாபிகள் அல்லது சன்னி முஸ்லிம்கள் X சன்னி அல்லாத முஸ்லிம்கள் எனச் சொல்லி எதிர்வுகளை உருவாக்குவதன் மூலம், இப்படி ‘நல்ல முஸ்லிம்களை’ ஆதரித்து முன்நிறுத்துவது என்பது உண்மையில் அந்த ‘நல்லவர்களின்’ சகிப்புத் தன்மைக்காகவோ, இல்லை அவர்கள் நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களின் வாயிலாக மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்களாக அடையாளம் காட்டுவது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.

இது எப்படியெல்லாம் இன்று இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது என இனிக் காண்போம். முதலில் மோடி அரசு ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் முன்னர் நடத்தப்பட்ட அந்த “உலக” சூஃபி மாநாடு பற்றிப் பார்க்கலாம்.

2014ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்திய முஸ்லிம்கள் மீது பல மட்டங்களில் தாக்குதல்கள் தொடங்கின. புனேயில் ஒரு மதக் கலவரம் ஏற்படுத்தப்பட்டு நிறைய முஸ்லிம் சொத்துகள் அழிக்கப்பட்டன. தொழுகைத் தலங்கள் தாக்கப்பட்டன. முஹ்சின் சாதிக் ஷேக் என்கிற ஒரு ஐ.டி. ஊழியர் தொழுதுவிட்டு வெளியே வரும்போது தாக்கிக் கொல்லப்பட்டார். டெல்லி JNU பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது மட்டுமின்றி மாணவர்கள் பிரிட்டிஷ் காலக் கொடும் சட்டங்களைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டனர். மாணவர் உமர் காலித், பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி முதலானோர் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். வெறுப்புப் பேச்சுகள் ஆங்காங்கு மேலெழும்பின. குடியரசுத் தலைவர் அளித்த ரமழான் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மறுத்தார். வெறுப்புப் பேச்சுகள் எல்லாப் பக்கங்களிலும் தலை எடுத்தன. அப்போது ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய கொடுந் தாக்குதலை உலகமே கண்டித்தபோதும் முதன் முதலில் ஒரு இந்திய அரசு எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தது. உ.பியில் தாத்ரி எனும் ஊரில் முஹம்மது அஃக்லாக் என்பவர் தன் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார். அவர் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இந்தத் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்ததைப் பலரும் கண்டித்தனர். நாடெங்கும் இந்திய எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளைத் துறந்து எதிர்ப்பைக் காட்டியதை உலகமே வியந்து நோக்கியது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லியில் அந்த “உலக சூஃபி மாநாடு” கோலாகலமாக நடத்தப்பட்டது.

முஸ்லிம்களை நாங்கள் ஒன்றும் ஆதரிக்காதவர்கள் இல்லை. முஸ்லிம்கள் நல்லவர்களாக இருந்தால் நாங்கள் எப்போதும் ஆதரிக்கத் தயங்க மாட்டோம். பாருங்கள் இப்படி ஒரு உலக அளவிலான முஸ்லிம்களின் மாநாட்டை நாங்கள் ஆதரித்து நடத்தவில்லையா? முஸ்லிம்களில் நாங்கள் யாரை எதிர்க்கிறோம், எப்படியானவர்களை எதிர்க்கிறோம் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற சேதியை மோடி அரசு இதன் மூலம் உலகத்தின் முன் வைத்தது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இந்த முயற்சியை மோடி அரசு தொடங்கியது. ஆகஸ்ட் 30, 2015 அன்று 40 சூஃபி அறிஞர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் நரேந்திர மோடி, “சூஃபியிசம்தான் இந்தியத் தன்மை, இந்திய மனப்பாங்கு ஆகியவற்றுக்குப் பொருத்தமானது… இதுதான் இன்று இஸ்லாத்தை அடையாளப்படுத்துவதற்குத் தேவையானது” என்றார். அதாவது இப்படியான முஸ்லிம்கள்தான் இந்தியச் சூழலுக்குத் தேவை என்றார்.

‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூலுக்கு நான் எழுதியுள்ள ஒரு விரிவான பின்னுரையில் அமெரிக்கத் தலைநகர் நியூயார்கில் 2009 ல் ‘பார்க் 51’ மசூதி கட்டுவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு பற்றிக் குறித்துள்ளேன். அப்போது நடந்த விவாதம் ஒன்றில் நியூயார்க் மேயர் டேவிட் பீட்டர்சன் சூஃபி இஸ்லாம் பற்றி, “இந்த சூஃபி முஸ்லிம்கள் ஷியாக்கள் மாதிரியானவர்கள் அல்லர். இவர்கள் ஒரு மாதிரி கலவையானவர்கள். கிட்டத்தட்ட மேற்கத்திய மயமானவர்கள். நாம் மைய நீரோட்ட முஸ்லிம் என்று வரையறுக்கிறோமே, அவர்கள் இவர்கள் இல்லை” என்றார்.

உலகெங்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் வெறுப்பாளர்கள் எவ்வாறு மைய நீரோட்ட முஸ்லிம்களையும், சூஃபிகளையும் ஒரே மாதிரி வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நியூயார்க்கில் பீட்டர்சனும் டெல்லியில் நரேந்திர மோடியும் ஒரே குரலில் பேசுவதைக் கவனியுங்கள்.

டெல்லி சூஃபி மாநாட்டை மோடி தொடங்கி வைத்துப் பேசும்போது உலக வரலாற்றில் இஸ்லாத்தின் சாதனைகளை எல்லாம் வெகுவாகப் புகழ்ந்ததோடு அப்படியான ஒரு நல்ல சாதனைதான் சூஃபியிசம் என்றார். தொடர்ந்து பேசுகையில் ‘இதுதான் பயங்கரவாத மற்றும் தீவிரவாதச் சக்திகளை ஒதுக்கி வைத்த இஸ்லாம்’ என்றார். பேசுவதற்கு மோடிக்குச் சொல்லித் தரவா வேண்டும். அவரது அன்றைய உரையைத் தொடர்ந்து கவனிக்கலாம்.

அதாவது இஸ்லாத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்காத இஸ்லாம்; மற்றொன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்கிற இஸ்லாம்.

தொடர்ந்து இதை இன்னும் விளக்கமாக முன்வைக்கிறார். தாங்கள் ஏன் இந்த வகை இஸ்லாத்தை ஏற்கிறோம் என நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறார். இந்தியப் பன்மைத்துவம், இந்திய உணர்வு, பாரம்பரியம், ஆன்மீக மரபு, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், கவிதை என சூஃபியிசத்தின் பங்களிப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார். “சூஃபி இஸ்லாமின் இந்தப் பண்பு, தங்களது தேசத்தின் மீது அது கொண்டுள்ள காதல், தனது நாடு குறித்த அதன் பெருமிதம், அது.. அதுதான் இந்திய முஸ்லிம்களை வரையறுக்கும் அளவுகோல். சூஃபி மரபுதான் இஸ்லாத்தின் இந்த ஆக உயர்ந்த இலட்சியங்களைத் தூக்கிப் பிடிக்கிறது. பயங்கரவாத, தீவிரவாதச் சக்திகளை மறுக்கிறது….”

நல்ல முஸ்லிம்களையும் கெட்ட முஸ்லிம்களையும் வேறுபடுத்திக்காட்டும் இரண்டாவது பண்பு இது. ஒரு நல்ல முஸ்லிம் இந்தத் தேசத்தின் மீது பக்தி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும். இந்தியத் தன்மை கொண்டவராக இருக்கவும் வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், உலகளாவிய இஸ்லாமியப் பொதுமை எனக் கருதி அவர் தாடி வைத்துக் கொண்டாலோ இல்லை ஹிஜாப் அணிந்தாலோ, அல்லது அது என் உரிமை என வாதிட்டாலோ அவர் நல்ல முஸ்லிம் இல்லை. ஏனெனில் அவை இந்தியத் தன்மை அல்ல. அப்படியான அவர்களுக்குப் பெயர் இஸ்லாமியவாதிகள் (Islamists). அவர்களின் இஸ்லாம் ‘அரசியல் இஸ்லாம்’ (Political Islam).

மோடி தன் உண்மையான நோக்கத்தை -இஸ்லாத்திற்குள் ஒரு இருமை எதிர்வை உருவாக்குவதுதான் தன் உண்மையான நோக்கம் என்பதை- வெளிப்படுத்திவிட்டார். நல்ல முஸ்லிம்கள் X கெட்ட முஸ்லிம்கள் என்றால் யார் என அடையாளம் காட்டிவிட்டார். தேச பக்த முஸ்லிம்கள் X பயங்கரவாத முஸ்லிம்கள் என்கிற எதிர்வை உருவாக்கி இந்தியாவிற்குப் பொருத்தமான தேசபக்த முஸ்லிம்கள் யார் எனப் பட்டியலிட்டு அடையாளங்களைச் சொல்லிவிட்டார்.

நல்ல முஸ்லிம்களின் அடையாளங்களைச் சொன்னவர் கெட்ட / பயங்கரவாத முஸ்லிம்களுக்கு ஏன் அடையாளங்களைப் பட்டியலிடவில்லை? அது தேவையில்லை. இந்த நல்ல முஸ்லிம்கள் தவிர மற்ற எல்லோரும் கெட்ட முஸ்லிம்கள், அரசியல் முஸ்லிம்கள், அவ்வளவுதான்.

மோடி ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த மாநாடு மீடியாக்களால் கண்டு கொள்ளப்படாத வழக்கமானதொரு சூஃபி மாநாடு அல்ல. ஊடக வெளிச்சங்கள் கண்ணைக் கூசக் கூசக் கொண்டாடப்பட்ட ஒன்று. இதன் ஊடாக அரசியல் பேசும் பிற அத்தனை முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள் என்கிற சேதி எல்லோருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி அரசின் அடக்குமுறைகளை, மதவாதப் போக்கினை, குண்டர்களின் கொலைவெறித் தாக்குதல்களைக் கண் மூடி ரசிக்கும் அதன் தன்மையைக் கண்டு கொள்ளாமல் இப்படி அவருடன் ஒத்துழைக்கும் சூஃபி முஸ்லிம்கள் மாதிரி அரசு மற்றும் பெரும்பான்மை ஆதிக்கச் சக்திகளின் கைக்கு அடக்கமாய், நல்ல பிள்ளைகளாக “இந்து–முஸ்லிம் ஒற்றுமை”, “வரலாற்றில் இந்தியக் கலைகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு”, “ஸ்ரீரங்கநாதர் சிலையைக் காதலித்த முஸ்லிம் இளவரசி” எனக் காட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிக் கொண்டிருந்தால் ஓகே, நீங்க நல்ல முஸ்லிம், உங்களை நாங்கள் பாராட்டுவோம், மாநாடு நடத்துவோம், நீங்கள் விருதைத் திருப்பிக் கொடுத்து அவமானப்படுத்த மாட்டீர்கள் என்று உறுதியாகும் பட்சத்தில் உங்களுக்கு விருதும் கொடுப்போம். இல்லாவிட்டால் நீங்கள் பயங்கரவாத முஸ்லிம்கள்தான். இடையில் வேறேதும் இல்லை. முஹமது அஃக்லாக்குக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும், ஆமாம்.

இனி இங்கு நடந்து கொண்டுள்ள இதைவிடச் சுவையான இன்னொரு நாடகத்தைப் பார்ப்போம்.

இதுவும் அதே கதைதான். பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன. கெட்ட முஸ்லிம்களின் இடத்தில் அதே பெரும்பான்மை மைய நீரோட்ட முஸ்லிம்கள்தான். நல்ல முஸ்லிம்களின் இடத்தில் இங்கு சூஃபி முஸ்லிம்களுக்குப் பதில் ஷியா முஸ்லிம்கள், அவ்வளவுதான். உலக அளவில் சன்னி / ஷியா முஸ்லிம்களின் இடையேயான பகை குறித்து நாம் அறிவோம். சவூதிக்கும் ஈரானுக்கும் உள்ள ஜென்மப் பகைக்கும் இதுவே அடிப்படை. இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு உண்டு. எனினும் பல வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்திய மைய நீரோட்டத்தில் தென்னிந்திய மாநிலங்கள் -குறிப்பாக தமிழகம்- பல விடயங்களில் வேறுபட்டிருப்பதை அறிவோம், இங்கு ஷியா X சன்னி பகை இதுவரை கிடையாது. ஆனால் வடநாட்டில் இது உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ், பா.ஜக அமைப்புகளும் ஆட்சிகளும். இது குறித்து மிக நுணுக்கமாகக் கவனித்து எழுதியுள்ள இந்தியவியல் அறிஞரும் பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலாவின் கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்களைப் பார்க்கலாம். உத்திரப் பிரதேசத்தை மையமாக வைத்து அவர் சொல்லும் சில செய்திகள் வியப்பூட்டுபவை.

முஹ்சின் ரஸா நக்வி ஒரு காங்கிரஸ்காரர் மட்டுமல்ல, அவர் ஷியா முஸ்லிமும் கூட. 2014ல் காற்று திசை மாறுவதைக் கண்டுகொண்ட அவர் பா.ஜ.கவுக்குத் தாவினார். முதலமைச்சர் ஆன கையோடு யோகி ஆதித்யநாத் அவரை உ.பி. மாநிலத்தின் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஆக்கினார். அதன் பின் மாநில மேலவைத் தேர்தல் வந்தபோது இரண்டு ஷியா முஸ்லிம்களை மாநில மேலவை உறுப்பினர்கள் (M.L.C) ஆக்கினார். ஒருவர் ஏற்கனவே அமைச்சராக்கப்பட்ட நக்வி. மற்றவர் புக்கல் நவாப் என்பவர். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தாவியவர். அது மட்டுமல்ல தான் ஏற்கனவே வகித்து வந்த MLC பதவியை ராஜினாமா செய்து ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒருவர் துணை முதல்வராகத் தொடர வாய்ப்பளித்தவர். இப்போது அவருக்கு மீண்டும் MLC பதவி திருப்பிக் கொடுக்கப்பட்டது. இப்படி MLC பதவி ஏற்குமுன் நக்வி, நவாப் இருவரும் இந்துக் கோவில்களுக்குச் சென்று வணங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முஸ்லிம்கள்!

சென்ற மார்ச் மாதத்தில் மவ்லானா கல்பே ஜவாத் என்பவர் ஷியா-சூஃபி ஒற்றுமை மாநாடு ஒன்றை உ.பியில் நடத்தினார். இதற்கெனச் சில நல்ல சூஃபி முஸ்லிம்களும் இப்போது அவர்களிடம் சிக்கினர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் உ.பி. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா. இதற்கென நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷியா மற்றும் சூஃபி முஸ்லிம்கள், தாங்கள்தான் பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்துக் கொண்டனர். “சில சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமே” தம்மை எதிர்ப்பதாகக் கூறினர். அந்தச் சில “சிறுபான்மை” முஸ்லிம்கள் யார்? இப்படித் தங்களின் மாநாட்டிற்கு பா.ஜ.க. அமைச்சர்களை அழைக்காத சன்னி முஸ்லிம்கள்தான் அவர்கள். ஆனால் அப்படியான சன்னிகள்தான் ஏதோ எல்லா முஸ்லிம்களின் பிரதிநிதிகளைப் போலப் பேசுகின்றனர் எனவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கைப்பிள்ளைகள் குறைபட்டுக் கொண்டனர். ஷியாக்களும் சூஃபிகளும்தான் முதன் முதலில் பயங்கரவாதத்தை எதிர்த்தவர்கள் என்றனர். ஆக இவர்கள் பா.ஜ.க. உதவியுடன் நடத்திய இந்த “ஒற்றுமை” மாநாட்டில் கலந்து கொள்ளாத இதர சன்னி முஸ்லிம்கள்தான் பயங்கரவாதத்தை எதிர்க்காத கெட்ட முஸ்லிம்கள்.

New Delhi: Prime Minister Narendra Modi during the opening ceremony of World Sufi Forum at Vigyan Bhawan in New Delhi on Thursday. PTI Photo by Vjay Verma(PTI3_17_2016_000246b)
New Delhi: Prime Minister Narendra Modi during the opening ceremony of World Sufi Forum at Vigyan Bhawan in New Delhi on Thursday. PTI Photo by Vjay Verma(PTI3_17_2016_000246b)

அங்கு வந்திருந்த முன் குறிப்பிட்ட கல்வே ஜவாதும் சையத் ஹஸ்னைன் பகாய் என்கிற இன்னொரு சூஃபி மதத் தலைவரும் தங்களுக்கு மர்மமான மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். மிரட்டியவர்கள் என்ன சொன்னார்களாம்? “வஹாபியிசத்தையும் பயங்கரவாதத்தையும் கண்டிக்கக் கூடாது” என மிரட்டினார்களாம்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, “நாம் இனி ‘கங்கா ஜமுனா பண்பாட்டை’ மறு உயிர்ப்புச் செய்ய வேண்டும்” என்றார். அதென்ன? வேறொன்றுமில்லை. நவாப் ஆசஃப் உத்தவ்லா தன் ஆட்சிக் காலத்தில் ராம்லீலாவுக்கும் ஈத்காவுக்கும் சம அளவு நிலம் கொடுத்தானாம். அப்படி ராம் லீலாவுக்கு நிலத்தை உவந்தளிக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நல்ல முஸ்லிம்களாகத் திருந்துவதுதான் கங்கா- ஜமுனா பண்பாடாம்.

பாஜகவின் இந்த நல்லாதரவுக்குப் பிரதியாக ஷியாக்கள் இன்னும் தீவிரமாகத் தம்மை நல்ல முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டனர். 2017 ஏப்ரலில் கூடிய “அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் (AISPLB)” செயற்குழுக் கூட்டத்தில் பசுவதைத் தடைக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றினர்.  இப்படித் தீர்மானம் இயற்ற அவர்கள் ஈராக்கில் உள்ள ஐந்து ஷியா ஆயத்துல்லாக்களில் ஒருவரான ஷேக் பஷீர் ஹுசைன் நஜாஃபியிடம் அனுமதி பெற்றதாகவும் சொல்லப்பட்டது. ஷியா சட்ட வாரியச் செயற்குழுவில் இயற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் முத்தலாக்கைத் தடை செய்து சட்டமொன்றை இயற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இன்னொரு பக்கம் கல்பே ஜவாதின் உறவினரும், ‘ஹுசைனி டைகர்ஸ்’ என்கிற அமைப்பின் தலைவருமான ஷமீல் ஷம்சி என்பவர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘ஷியா கோரக்‌ஷா தள்’ (ஷியா பசுப் பாதுகாப்பு தளம்) எனும் அமைப்பொன்றை உருவாக்கி, “பசுக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. எங்காவது யாரேனும் பசுவைக் கொன்றதாகத் தெரிந்தால் உடனே அதைக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்” எனச் சூளுறைத்துத் தன்னை ஒரு ரொம்ப நல்ல முஸ்லிமாக அறிவித்துக் கொண்டார்.

ஷியா சட்ட வாரியம் மட்டுமின்றி அடுத்த சில மாதங்களில் (ஆகஸ்டு 2017) ‘ஷியா வக்ஃப் வாரியமும்’ களத்தில் குதித்தது. “மரியாதைக்குரிய புருஷோத்தமரான ஸ்ரீராமரின் மகாப் புனிதம் மிக்க அவதாரத் தலத்திலிருந்து போதுமான தொலைவில், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற ஒரு பகுதியில் மசூதியைக் கட்டிக்கொள்ள” தாங்கள் சம்மதிப்பதாக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்களின் அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. பாபர் மசூதிப் பிரச்சினையில் ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அதைச் செய்வதாகவும் கூறிக் கொண்டது.

அது மட்டுமல்ல, “உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியம் சமாதான சகவாழ்வில் நம்பிக்கையற்ற தீவிர சன்னி மத வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் அம்மனுவில் கூறப்பட்டது.  “1992ல் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதியைக் கட்டிய பாபரின் தளபதி மீர்பாகி ஒரு ஷியா” என ஒரு போடு போட்டு, “எனவே ஷியா வக்ஃப் வாரியம்தான் இராமர் கோவில் கட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அதிக உரிமை உடையது” எனவும் அம்மனுவில் வேண்டிக் கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்புகளில் ஒன்றான ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’சை இயக்கும் இந்திரேஷ் குமார், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட பல முஸ்லிம்கள் தயாராக” இருப்பதாக அறிவித்தார். இந்த முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் 2016ல் உருவாக்கப்பட்டது. முஹம்மது அஃப்சல் என்பவர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதிப் பிரச்சினையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தங்கள் அமைப்பு மேடை அமைத்துத் தரத் தயார் என அவர் அறிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. “ஆனால் தீர்வைப் பொறுத்த  மட்டில் என் முடிவு மசூதி இருந்த இடத்தில் மீண்டும் அந்த மசூதியைக் கட்டக் கூடாது என்பதுதான்” என அறிவித்துத் தன்னை ஒரு ‘சூப்பர்’ நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

world-sufi-forum_155f4d72-ec7a-11e5-90f8-20a657ae7b03 maxresdefaultஎதிர்பார்த்தது போல மத்தியில் உள்ள மோடி அரசும் இந்த நல்ல முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட ஷியாக்கள் ஏற்கனவே சம்மதித்து விட்டனர். சன்னிகளும் தங்களின் ஆதவரவை அளிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறிப் புன்னகைத்தார்.

அயோத்திப் பிரச்சினை ஒரு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படியான நல்ல முஸ்லிம்களின் துணையோடு (இவர்களுள் சில போரா முஸ்லிம்களும் உண்டு) விரைவில் அதைச் “சுபமாக” முடிக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது. ஒரு வகையில் பாபர் மசூதிப் பிரச்சினையையும் தங்களுக்குச் சாதகமாக முடித்தாற்போல் இருக்கும். இன்னொரு பக்கம் இந்த நல்ல முஸ்லிம்களின் துணையோடு முஸ்லிம் உட்பிரிவுகளுக்கிடையே நிரந்தரப் பிளவை ஏற்படுத்தியதாகவும் அமையும் எனத் திட்டமிடுகின்றன பரிவாரங்கள்.

அனைத்திந்திய ஷியா வக்ஃப் வாரியம் என்பது 2005ல் மிர்சா அதார் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரது மகன் யாசூப் அப்பாஸ் என்பவர் இப்போது சச்சார் குழு போல் ஷியா முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு குழுவை அமைத்து அவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கான முயற்சியில் உள்ளார். 2010 ல் சர்ச்சைக்குரிய பாபர் மசூதித் தீர்ப்பு வந்தபோது மேலே குறிப்பிடப்பட்ட ஷமீல் ஷம்சி ஒரு வேலை செய்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட 15 இலட்ச ரூபாய் நன்கொடை அளித்துத் தன்னை ஒரு ஈடு இணையற்ற நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

இவர்களை முஸ்லிம் சமூகம் மதிப்பதில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவர்கள் மீது வக்ஃப் சொத்துக்களைச் சுருட்டிக் கொண்டவர்கள் எனப் புகார்களும் உண்டு. ஆனால் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களைப் பகடைக் காய்களாக வைத்து ஒரு பெரிய அரசியல் சூதாட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளுக்கும் இவர்களின் யோக்கியதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களைப் பொருத்த மட்டில் பாபர் மசூதி, பசுவதை, முத்தலாக் முதலான முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் சமூக ஒற்றுமையை விரும்பும் முஸ்லிம்கள் எல்லோரும் தமக்கே ஆதரவாக உள்ளார்கள் என நிறுவவும், மற்ற எல்லா முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள், மதத் தீவிரவாதிகள், வஹாபிகள் என அடையாளம் காட்டவும் இந்த நல்ல முஸ்லிம்கள் அவர்களுக்குத் தேவைப் படுகின்றனர்.

இதனூடாக இன்னொரு பலனும் பா.ஜ.க. அரசுக்கு உண்டு. இப்படியான தீவிரப் போக்குடையவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும், நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒரு ஒப்புதலை ஒட்டு மொத்தச் சமூகத்திடமிருந்து பெறுவதற்கும் சூஃபியிசம் X வஹாபியிசம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைப்பதற்கும் இந்த நல்ல முஸ்லிம்கள் பயன்படுகின்றனர்.

முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்வது அவசியம். எல்லா ஷியாக்களும், எல்லா சூஃபிகளும் இப்படி மோடி அரசுக்கும், இந்துத்துவச் சக்திகளுக்கும் துணை போவதில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள சூஃபிகள், ஷியாக்கள் அப்படி பா.ஜ.கவினரின் கைப்பிள்ளைகளாக நடந்துகொள்வதில்லை. சில உதிரிகள் வேண்டுமானால் அப்படி இந்துத்துவச் சக்திகளுக்குத் துணை போகலாம். ஆனால் நாகூர் போன்ற பகுதிகளில் வாழ்கிற சூஃபியிசத்தை ஏற்றுக் கொண்ட சாதாரண மக்களும், சென்னை போன்ற இடங்களில் வாழ்கிற ஷியா முஸ்லிம்களும் பொதுவான முஸ்லிம் பிரச்சினைகளில் பெரும்பான்மை முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படுபவர்களாகவே உள்ளனர். எனினும் கிடைக்கிற கொஞ்ச நஞ்ச இப்படியான நல்ல முஸ்லிம்களைத் தம் நோக்கத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்துத்துவச் சக்திகள்.

பயன்பட்ட ஆக்கங்கள்

  1. Christophe Jaffrelot, Haider Abbas Risvi, “The Curious Friendship”, Indian Express, May 9, 2018
  2. Ashraf Kunnummal, Government Sponsored Sufism, Good and Bad Muslims, Rait, July 8, 2016
  3. Mahmood Mamdani, Good Muslim, Bad Muslim, America, The Cold War and the Roots of Terror, Pantheon, 2004,
  4. Fait Muediny, The Promotion of Sufiism in the Politics of Algeria, 2012, pdf
  5. நாதன் லீன், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், அடையாளம், 2018 (இந்நூலில் உள்ள அ.மார்க்சின் பின்னுரை).

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. அரசுகளுக்குத் திடீரென இங்குள்ள சூஃபி மற்றும் ஷியா இஸ்லாமியப் பிரிவுகளின் மீது பரிவும் பாசமும் வந்துள்ளது. டெல்லியில் நான்கு நாள் சூஃபி உலக மாநாடு ஒன்று, மோடி அரசின் ஆதரவோடு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்தது  (மார்ச் 17-20, 2016). பிரதமர் நரேந்திரமோடி அதைத் தொடங்கி வைத்தார். அல்லாஹ்விற்கு உள்ள 99 பெயர்களும் கருணை, அன்பு ஆகியவற்றை வற்புறுத்துவதாகத்தான் உள்ளன,  ஒன்று கூட வன்முறையைப் போற்றும் பொருளில் இல்லை எனப் பலத்த கைதட்டல்களுக்கு இடையே உணர்ச்சி பொங்கப் பேசினார். இன்றைய அரசுகளுக்கு இப்படியான முஸ்லிம் உட்பிரிவுகள் மீது பாசம் வருவதும் அவற்றை அவை ஆதரவுக் கரம் நீட்டி அணைத்துக் கொள்வதும் சமீப கால உலக வரலாற்றில் புதிதல்ல.

இது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்குமுன் சூஃபியிசம் போன்ற இயற்கை அதீத இஸ்லாமியப் பிரிவுகள் (Mysticism) பற்றிச் சிலவற்றை நாம் மனதில் அசை போடுவது அவசியம். சூஃபியிசத்தை எதிர்ப்பது இங்கு நம் நோக்கமில்லை. இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து மனித உரிமைகள் நோக்கிலிருந்து எழுதிக் கொண்டுள்ள என்னைப் போன்றவர்கள் சூஃபி இஸ்லாம், தர்ஹா  வழிபாடு முதலானவற்றை எல்லாம் எதிர்ப்பதில்லை. பொதுவான மதவெறி, மதவாத அரசியல் ஆகியவைதான் நமது இலக்குகள். சூஃபி இசையை இங்கு விரும்பாதவர் எவரும் இல்லை. அந்தப் பாகிஸ்தானி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானின் “அல்லாஹூ… அல்லாஹூ…” பாடலையும், ‘ஜோதா அக்பர்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் ‘க்வாஜா மேரே க்வாஜா’ பாடலையும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை விரும்பிக் கேட்டு ரசித்தவன் நான். மொய்னுதீன் சிஸ்தி அவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்று பார்த்து வரவேண்டும் என்கிற விருப்பமும் எனக்குண்டு.

இதை ஏன் இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டி உள்ளது என்றால் இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே நமது நோக்கம்.

செப்டம்பர் 11 (2001) இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவும் இதர உலக அரசுகளும் சில கடுமையான சட்டங்களை இயற்றின. ‘தேசப் பாதுகாப்பு’, ‘தேசபக்தி’ (National Security Act / Patriotic Act) முதலானவற்றின் பெயரால் இச்சட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் இஸ்லாம், அதன் வரலாறு, திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமியப் புனித நூல்கள், கருத்துகள், சிந்தனைகள் ஆகியவை குறித்த தீவிரமான ஆய்வுகளுக்கும் இந்த அரசுகள் முக்கியத்துவம் அளித்தன. மொத்தத்தில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் முதலான பயங்கரவாத நடவடிக்கைள், அல்காயிதா, ஐ.எஸ். முதலான அமைப்புகள் ஆகியவற்றில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதன் பின்னணியில் உள்ள வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் முதலானவற்றை ஆய்வது முற்றிலும் கைவிடப்பட்டது, அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டது. முஸ்லிம் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை இஸ்லாமிய மதத்திற்குள் மட்டும் தேடுவதென அரசுகள் தமது ஆய்வுகளைச் சுருக்கிக் கொண்டன.

இதன் விளைவாக இன்றைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதையும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத ரீதியான தலையீடுகள் என்கிற அளவில் சுருக்கிக் கொண்டனர். வரலாற்று அடிப்படையில் பிரச்சினைகளை அணுகி அரசியல் மற்றும் பொருளாதார அணுகல் முறைகளில் உரிய மாற்றங்களைச் செய்வது என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது, மினாராக்கள் வைத்து மசூதிகள் கட்டக் கூடாது என்பன போன்ற சட்டங்களை இயற்றுதல், நீ முஸ்லிமாக இருந்தாலும் லண்டனில் வாழும்போது நீ லண்டன்காரனாக இருப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் (muscle liberalism), இந்தியாவில் பிறந்து விட்டால் நீ “பாரதப் பண்பாட்டை” ஏற்க வேண்டும் என்பது போன்ற வற்புறுத்தல்கள் மட்டுமே தீர்வுகளாகச் சட்டரீதியாகவும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ளப்பட்டன.

இப்படியாக இன்றைய பிரச்சினைகளை மதத்திற்குள், குறிப்பாக இஸ்லாத்திற்குள் தேடுவது என்பதாகச் சுருக்கிக் கொண்டதன் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை “நல்ல முஸ்லிம்கள்” X “கெட்ட முஸ்லிம்கள்” எனப் பிரித்து அணுகுவதாக அமைந்தது. அதாவது முஸ்லிம் அடையாளங்களைத் தரிப்பதில் உறுதி காட்டுபவர்களை எல்லாம் ‘கெட்ட முஸ்லிம்களாக’ வரையறுத்து அவர்களைப் பல்வேறு வகைகளில் ஒடுக்குவது, பிற ‘நல்ல முஸ்லிம்களை’ வெளிப்படையாகப் பாராட்டுவது என்பது அவர்களுக்கு  இரண்டு வகைகளில் பயன்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான தமது கடும் நடவடிக்கைகளை அவர்கள் நியாயப்படுத்துவது ஒரு பக்கம். நல்ல முஸ்லிம்களோடு உரசிக் கொண்டு பாருங்கள் நாங்கள் ஒன்றும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என உலகின் முன் காட்டிக் கொள்வது இன்னொரு பக்கம். இப்படி நல்ல முஸ்லிம்கள் எனச் சிலரை அடையாளப்படுத்துவதன் ஊடாகவே அவர்கள் மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தினர்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களின் நோக்கம் ஒட்டுமொத்தமான மக்கள் மத்தியில் உள்ள நல்லவர்களையும் கெட்டவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதோ, சாதாரண மக்களை ‘கிரிமினல்’ குற்றவாளிகளிடமிருந்தும், அமைதியை நேசிப்பவர்களை வன்முறையாளர்களிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதோ அல்ல. மாறாக முஸ்லிம்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களில் பெரும்பான்மையரைக் கெட்ட முஸ்லிம்களாக வேறுபடுத்திக் காட்டுவது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

சரி, இதை அவர்கள் எப்படிச் செய்தனர்?

நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம் என்பதன் தூல வடிவமாக சூஃபியிசம் X வஹாபியிசம் அல்லது சன்னி முஸ்லிம் X ஷியா முஸ்லிம் என்பன போன்ற இருமை எதிர்வுகளை அவர்கள் கட்டமைத்தனர். இதை நாம் சொல்வதென்பது சூஃபியிசத்துக்கும் வஹாபியிசத்திற்கும் அல்லது ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் வித்தியாசங்களே இல்லை, இவர்கள் பொய்யாக இந்த வித்தியாசங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பதல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த அடிப்படையான வேறுபாடுகளைச் சொல்வது அவர்களின் நோக்கமல்ல. உண்மையில் இல்லாத வேறு சில வேறுபாடுகளை இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் மீது சுமத்துகிறார்கள். வஹாபியிசம் என்பது அரசியல் இஸ்லாம், சூஃபியிசம் அப்படியல்ல; அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதில் ஆன்மீகமே முக்கியம் என்பதுபோல இவர்கள் புதிதாக வேறுபாடுகளைக் கற்பிக்கின்றனர். சூஃபியிசம், வஹாபியிசம் இரண்டும் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதைக் காட்டிலும் இவற்றின் மீது இப்படியாக இவர்களால் ஏற்றப்படும் பொருளே (meaning) பொதுப் புத்தியில் ஆட்சி செலுத்தும் ஒன்றாக மாற்றப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளில் அரசுடன் முஸ்லிம் எதிர்ப்பு மதவாத சக்திகள், கார்பொரேட் ஊடகங்கள் முதலியனவும் அமைப்புகளும் துணைபுரிகின்றன. சுய லாபங்கள் கருதிச் செயல்படும் சில தனிநபர்களும் இதற்குத் துணைபோகின்றனர். யார் ஒருவரையும் ‘வஹாபி’ என முத்திரை குத்தினாலே போதும். அவர் ஒரு பிற்போக்குவாதி, மத அடிப்படைவாதி, எல்லாவற்றிற்கும் மத ரீதியான தீர்வுகளை மட்டுமே முன்வைப்பவர், வன்முறைச் செயல்பாடுகளை நியாயப்படுத்துபவர் அல்லது அவரே வன்முறை நடவடிக்கைகளில் பங்கு பெறுபவர் என்கிற பொருள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது. அதேபோல ஒருவரை ‘சூஃபியிசத்தை’ ஏற்பவர் என்றாலே அவர் மதச்சார்பற்றவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி, வன்முறைகளுக்கு எதிரானவர், நல்லவர் என்கிற பொருளும் இதன்மூலம் பதிக்கப்படும்.

ஆனால் அவர்கள் சொல்வதுபோல சூஃபியிசம் என்பது அப்படி ஒன்றும் மத அடையாளங்களை மறுப்பதோ அரசியலை வெறுப்பதோ அல்ல. எல்லாவற்றிற்கும் அரசியல் உள்ளது போலவே சூஃபியிசத்திற்கும் அரசியல் உண்டு. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய உமர் முக்தார் முதலானோர் சூஃபி வழியில் வந்தவர்கள்தான். மொராக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் சூஃபியிசம் முக்கிய பங்கு வகித்துள்ளது குறித்து மிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.

தவிரவும் அரசுகள் இன்று சூஃபிகள் X வஹாபிகள் அல்லது சன்னி முஸ்லிம்கள் X சன்னி அல்லாத முஸ்லிம்கள் எனச் சொல்லி எதிர்வுகளை உருவாக்குவதன் மூலம், இப்படி ‘நல்ல முஸ்லிம்களை’ ஆதரித்து முன்நிறுத்துவது என்பது உண்மையில் அந்த ‘நல்லவர்களின்’ சகிப்புத் தன்மைக்காகவோ, இல்லை அவர்கள் நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களின் வாயிலாக மற்ற முஸ்லிம்களைக் கெட்ட முஸ்லிம்களாக அடையாளம் காட்டுவது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.

இது எப்படியெல்லாம் இன்று இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது என இனிக் காண்போம். முதலில் மோடி அரசு ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் முன்னர் நடத்தப்பட்ட அந்த “உலக” சூஃபி மாநாடு பற்றிப் பார்க்கலாம்.

2014ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்திய முஸ்லிம்கள் மீது பல மட்டங்களில் தாக்குதல்கள் தொடங்கின. புனேயில் ஒரு மதக் கலவரம் ஏற்படுத்தப்பட்டு நிறைய முஸ்லிம் சொத்துகள் அழிக்கப்பட்டன. தொழுகைத் தலங்கள் தாக்கப்பட்டன. முஹ்சின் சாதிக் ஷேக் என்கிற ஒரு ஐ.டி. ஊழியர் தொழுதுவிட்டு வெளியே வரும்போது தாக்கிக் கொல்லப்பட்டார். டெல்லி JNU பல்கலைக் கழக மாணவர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது மட்டுமின்றி மாணவர்கள் பிரிட்டிஷ் காலக் கொடும் சட்டங்களைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டனர். மாணவர் உமர் காலித், பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி முதலானோர் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். வெறுப்புப் பேச்சுகள் ஆங்காங்கு மேலெழும்பின. குடியரசுத் தலைவர் அளித்த ரமழான் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மறுத்தார். வெறுப்புப் பேச்சுகள் எல்லாப் பக்கங்களிலும் தலை எடுத்தன. அப்போது ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய கொடுந் தாக்குதலை உலகமே கண்டித்தபோதும் முதன் முதலில் ஒரு இந்திய அரசு எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தது. உ.பியில் தாத்ரி எனும் ஊரில் முஹம்மது அஃக்லாக் என்பவர் தன் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார். அவர் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இந்தத் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்ததைப் பலரும் கண்டித்தனர். நாடெங்கும் இந்திய எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அரசு விருதுகளைத் துறந்து எதிர்ப்பைக் காட்டியதை உலகமே வியந்து நோக்கியது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லியில் அந்த “உலக சூஃபி மாநாடு” கோலாகலமாக நடத்தப்பட்டது.

முஸ்லிம்களை நாங்கள் ஒன்றும் ஆதரிக்காதவர்கள் இல்லை. முஸ்லிம்கள் நல்லவர்களாக இருந்தால் நாங்கள் எப்போதும் ஆதரிக்கத் தயங்க மாட்டோம். பாருங்கள் இப்படி ஒரு உலக அளவிலான முஸ்லிம்களின் மாநாட்டை நாங்கள் ஆதரித்து நடத்தவில்லையா? முஸ்லிம்களில் நாங்கள் யாரை எதிர்க்கிறோம், எப்படியானவர்களை எதிர்க்கிறோம் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற சேதியை மோடி அரசு இதன் மூலம் உலகத்தின் முன் வைத்தது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இந்த முயற்சியை மோடி அரசு தொடங்கியது. ஆகஸ்ட் 30, 2015 அன்று 40 சூஃபி அறிஞர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் நரேந்திர மோடி, “சூஃபியிசம்தான் இந்தியத் தன்மை, இந்திய மனப்பாங்கு ஆகியவற்றுக்குப் பொருத்தமானது… இதுதான் இன்று இஸ்லாத்தை அடையாளப்படுத்துவதற்குத் தேவையானது” என்றார். அதாவது இப்படியான முஸ்லிம்கள்தான் இந்தியச் சூழலுக்குத் தேவை என்றார்.

‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூலுக்கு நான் எழுதியுள்ள ஒரு விரிவான பின்னுரையில் அமெரிக்கத் தலைநகர் நியூயார்கில் 2009 ல் ‘பார்க் 51’ மசூதி கட்டுவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு பற்றிக் குறித்துள்ளேன். அப்போது நடந்த விவாதம் ஒன்றில் நியூயார்க் மேயர் டேவிட் பீட்டர்சன் சூஃபி இஸ்லாம் பற்றி, “இந்த சூஃபி முஸ்லிம்கள் ஷியாக்கள் மாதிரியானவர்கள் அல்லர். இவர்கள் ஒரு மாதிரி கலவையானவர்கள். கிட்டத்தட்ட மேற்கத்திய மயமானவர்கள். நாம் மைய நீரோட்ட முஸ்லிம் என்று வரையறுக்கிறோமே, அவர்கள் இவர்கள் இல்லை” என்றார்.

உலகெங்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் வெறுப்பாளர்கள் எவ்வாறு மைய நீரோட்ட முஸ்லிம்களையும், சூஃபிகளையும் ஒரே மாதிரி வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நியூயார்க்கில் பீட்டர்சனும் டெல்லியில் நரேந்திர மோடியும் ஒரே குரலில் பேசுவதைக் கவனியுங்கள்.

டெல்லி சூஃபி மாநாட்டை மோடி தொடங்கி வைத்துப் பேசும்போது உலக வரலாற்றில் இஸ்லாத்தின் சாதனைகளை எல்லாம் வெகுவாகப் புகழ்ந்ததோடு அப்படியான ஒரு நல்ல சாதனைதான் சூஃபியிசம் என்றார். தொடர்ந்து பேசுகையில் ‘இதுதான் பயங்கரவாத மற்றும் தீவிரவாதச் சக்திகளை ஒதுக்கி வைத்த இஸ்லாம்’ என்றார். பேசுவதற்கு மோடிக்குச் சொல்லித் தரவா வேண்டும். அவரது அன்றைய உரையைத் தொடர்ந்து கவனிக்கலாம்.

அதாவது இஸ்லாத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்காத இஸ்லாம்; மற்றொன்று வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஏற்கிற இஸ்லாம்.

தொடர்ந்து இதை இன்னும் விளக்கமாக முன்வைக்கிறார். தாங்கள் ஏன் இந்த வகை இஸ்லாத்தை ஏற்கிறோம் என நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறார். இந்தியப் பன்மைத்துவம், இந்திய உணர்வு, பாரம்பரியம், ஆன்மீக மரபு, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், கவிதை என சூஃபியிசத்தின் பங்களிப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார். “சூஃபி இஸ்லாமின் இந்தப் பண்பு, தங்களது தேசத்தின் மீது அது கொண்டுள்ள காதல், தனது நாடு குறித்த அதன் பெருமிதம், அது.. அதுதான் இந்திய முஸ்லிம்களை வரையறுக்கும் அளவுகோல். சூஃபி மரபுதான் இஸ்லாத்தின் இந்த ஆக உயர்ந்த இலட்சியங்களைத் தூக்கிப் பிடிக்கிறது. பயங்கரவாத, தீவிரவாதச் சக்திகளை மறுக்கிறது….”

நல்ல முஸ்லிம்களையும் கெட்ட முஸ்லிம்களையும் வேறுபடுத்திக்காட்டும் இரண்டாவது பண்பு இது. ஒரு நல்ல முஸ்லிம் இந்தத் தேசத்தின் மீது பக்தி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும். இந்தியத் தன்மை கொண்டவராக இருக்கவும் வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், உலகளாவிய இஸ்லாமியப் பொதுமை எனக் கருதி அவர் தாடி வைத்துக் கொண்டாலோ இல்லை ஹிஜாப் அணிந்தாலோ, அல்லது அது என் உரிமை என வாதிட்டாலோ அவர் நல்ல முஸ்லிம் இல்லை. ஏனெனில் அவை இந்தியத் தன்மை அல்ல. அப்படியான அவர்களுக்குப் பெயர் இஸ்லாமியவாதிகள் (Islamists). அவர்களின் இஸ்லாம் ‘அரசியல் இஸ்லாம்’ (Political Islam).

மோடி தன் உண்மையான நோக்கத்தை -இஸ்லாத்திற்குள் ஒரு இருமை எதிர்வை உருவாக்குவதுதான் தன் உண்மையான நோக்கம் என்பதை- வெளிப்படுத்திவிட்டார். நல்ல முஸ்லிம்கள் X கெட்ட முஸ்லிம்கள் என்றால் யார் என அடையாளம் காட்டிவிட்டார். தேச பக்த முஸ்லிம்கள் X பயங்கரவாத முஸ்லிம்கள் என்கிற எதிர்வை உருவாக்கி இந்தியாவிற்குப் பொருத்தமான தேசபக்த முஸ்லிம்கள் யார் எனப் பட்டியலிட்டு அடையாளங்களைச் சொல்லிவிட்டார்.

நல்ல முஸ்லிம்களின் அடையாளங்களைச் சொன்னவர் கெட்ட / பயங்கரவாத முஸ்லிம்களுக்கு ஏன் அடையாளங்களைப் பட்டியலிடவில்லை? அது தேவையில்லை. இந்த நல்ல முஸ்லிம்கள் தவிர மற்ற எல்லோரும் கெட்ட முஸ்லிம்கள், அரசியல் முஸ்லிம்கள், அவ்வளவுதான்.

மோடி ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த மாநாடு மீடியாக்களால் கண்டு கொள்ளப்படாத வழக்கமானதொரு சூஃபி மாநாடு அல்ல. ஊடக வெளிச்சங்கள் கண்ணைக் கூசக் கூசக் கொண்டாடப்பட்ட ஒன்று. இதன் ஊடாக அரசியல் பேசும் பிற அத்தனை முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள் என்கிற சேதி எல்லோருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி அரசின் அடக்குமுறைகளை, மதவாதப் போக்கினை, குண்டர்களின் கொலைவெறித் தாக்குதல்களைக் கண் மூடி ரசிக்கும் அதன் தன்மையைக் கண்டு கொள்ளாமல் இப்படி அவருடன் ஒத்துழைக்கும் சூஃபி முஸ்லிம்கள் மாதிரி அரசு மற்றும் பெரும்பான்மை ஆதிக்கச் சக்திகளின் கைக்கு அடக்கமாய், நல்ல பிள்ளைகளாக “இந்து–முஸ்லிம் ஒற்றுமை”, “வரலாற்றில் இந்தியக் கலைகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு”, “ஸ்ரீரங்கநாதர் சிலையைக் காதலித்த முஸ்லிம் இளவரசி” எனக் காட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிக் கொண்டிருந்தால் ஓகே, நீங்க நல்ல முஸ்லிம், உங்களை நாங்கள் பாராட்டுவோம், மாநாடு நடத்துவோம், நீங்கள் விருதைத் திருப்பிக் கொடுத்து அவமானப்படுத்த மாட்டீர்கள் என்று உறுதியாகும் பட்சத்தில் உங்களுக்கு விருதும் கொடுப்போம். இல்லாவிட்டால் நீங்கள் பயங்கரவாத முஸ்லிம்கள்தான். இடையில் வேறேதும் இல்லை. முஹமது அஃக்லாக்குக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும், ஆமாம்.

இனி இங்கு நடந்து கொண்டுள்ள இதைவிடச் சுவையான இன்னொரு நாடகத்தைப் பார்ப்போம்.

இதுவும் அதே கதைதான். பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் வேறுபடுகின்றன. கெட்ட முஸ்லிம்களின் இடத்தில் அதே பெரும்பான்மை மைய நீரோட்ட முஸ்லிம்கள்தான். நல்ல முஸ்லிம்களின் இடத்தில் இங்கு சூஃபி முஸ்லிம்களுக்குப் பதில் ஷியா முஸ்லிம்கள், அவ்வளவுதான். உலக அளவில் சன்னி / ஷியா முஸ்லிம்களின் இடையேயான பகை குறித்து நாம் அறிவோம். சவூதிக்கும் ஈரானுக்கும் உள்ள ஜென்மப் பகைக்கும் இதுவே அடிப்படை. இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு உண்டு. எனினும் பல வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்திய மைய நீரோட்டத்தில் தென்னிந்திய மாநிலங்கள் -குறிப்பாக தமிழகம்- பல விடயங்களில் வேறுபட்டிருப்பதை அறிவோம், இங்கு ஷியா X சன்னி பகை இதுவரை கிடையாது. ஆனால் வடநாட்டில் இது உண்டு. அதைப் பயன்படுத்திக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ், பா.ஜக அமைப்புகளும் ஆட்சிகளும். இது குறித்து மிக நுணுக்கமாகக் கவனித்து எழுதியுள்ள இந்தியவியல் அறிஞரும் பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலாவின் கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்களைப் பார்க்கலாம். உத்திரப் பிரதேசத்தை மையமாக வைத்து அவர் சொல்லும் சில செய்திகள் வியப்பூட்டுபவை.

முஹ்சின் ரஸா நக்வி ஒரு காங்கிரஸ்காரர் மட்டுமல்ல, அவர் ஷியா முஸ்லிமும் கூட. 2014ல் காற்று திசை மாறுவதைக் கண்டுகொண்ட அவர் பா.ஜ.கவுக்குத் தாவினார். முதலமைச்சர் ஆன கையோடு யோகி ஆதித்யநாத் அவரை உ.பி. மாநிலத்தின் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஆக்கினார். அதன் பின் மாநில மேலவைத் தேர்தல் வந்தபோது இரண்டு ஷியா முஸ்லிம்களை மாநில மேலவை உறுப்பினர்கள் (M.L.C) ஆக்கினார். ஒருவர் ஏற்கனவே அமைச்சராக்கப்பட்ட நக்வி. மற்றவர் புக்கல் நவாப் என்பவர். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தாவியவர். அது மட்டுமல்ல தான் ஏற்கனவே வகித்து வந்த MLC பதவியை ராஜினாமா செய்து ஆதித்யநாத் அமைச்சரவையில் ஒருவர் துணை முதல்வராகத் தொடர வாய்ப்பளித்தவர். இப்போது அவருக்கு மீண்டும் MLC பதவி திருப்பிக் கொடுக்கப்பட்டது. இப்படி MLC பதவி ஏற்குமுன் நக்வி, நவாப் இருவரும் இந்துக் கோவில்களுக்குச் சென்று வணங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முஸ்லிம்கள்!

சென்ற மார்ச் மாதத்தில் மவ்லானா கல்பே ஜவாத் என்பவர் ஷியா-சூஃபி ஒற்றுமை மாநாடு ஒன்றை உ.பியில் நடத்தினார். இதற்கெனச் சில நல்ல சூஃபி முஸ்லிம்களும் இப்போது அவர்களிடம் சிக்கினர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் உ.பி. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா. இதற்கென நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷியா மற்றும் சூஃபி முஸ்லிம்கள், தாங்கள்தான் பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்துக் கொண்டனர். “சில சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமே” தம்மை எதிர்ப்பதாகக் கூறினர். அந்தச் சில “சிறுபான்மை” முஸ்லிம்கள் யார்? இப்படித் தங்களின் மாநாட்டிற்கு பா.ஜ.க. அமைச்சர்களை அழைக்காத சன்னி முஸ்லிம்கள்தான் அவர்கள். ஆனால் அப்படியான சன்னிகள்தான் ஏதோ எல்லா முஸ்லிம்களின் பிரதிநிதிகளைப் போலப் பேசுகின்றனர் எனவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கைப்பிள்ளைகள் குறைபட்டுக் கொண்டனர். ஷியாக்களும் சூஃபிகளும்தான் முதன் முதலில் பயங்கரவாதத்தை எதிர்த்தவர்கள் என்றனர். ஆக இவர்கள் பா.ஜ.க. உதவியுடன் நடத்திய இந்த “ஒற்றுமை” மாநாட்டில் கலந்து கொள்ளாத இதர சன்னி முஸ்லிம்கள்தான் பயங்கரவாதத்தை எதிர்க்காத கெட்ட முஸ்லிம்கள்.

அங்கு வந்திருந்த முன் குறிப்பிட்ட கல்வே ஜவாதும் சையத் ஹஸ்னைன் பகாய் என்கிற இன்னொரு சூஃபி மதத் தலைவரும் தங்களுக்கு மர்மமான மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். மிரட்டியவர்கள் என்ன சொன்னார்களாம்? “வஹாபியிசத்தையும் பயங்கரவாதத்தையும் கண்டிக்கக் கூடாது” என மிரட்டினார்களாம்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, “நாம் இனி ‘கங்கா ஜமுனா பண்பாட்டை’ மறு உயிர்ப்புச் செய்ய வேண்டும்” என்றார். அதென்ன? வேறொன்றுமில்லை. நவாப் ஆசஃப் உத்தவ்லா தன் ஆட்சிக் காலத்தில் ராம்லீலாவுக்கும் ஈத்காவுக்கும் சம அளவு நிலம் கொடுத்தானாம். அப்படி ராம் லீலாவுக்கு நிலத்தை உவந்தளிக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நல்ல முஸ்லிம்களாகத் திருந்துவதுதான் கங்கா- ஜமுனா பண்பாடாம்.

பாஜகவின் இந்த நல்லாதரவுக்குப் பிரதியாக ஷியாக்கள் இன்னும் தீவிரமாகத் தம்மை நல்ல முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டனர். 2017 ஏப்ரலில் கூடிய “அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் (AISPLB)” செயற்குழுக் கூட்டத்தில் பசுவதைத் தடைக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றினர்.  இப்படித் தீர்மானம் இயற்ற அவர்கள் ஈராக்கில் உள்ள ஐந்து ஷியா ஆயத்துல்லாக்களில் ஒருவரான ஷேக் பஷீர் ஹுசைன் நஜாஃபியிடம் அனுமதி பெற்றதாகவும் சொல்லப்பட்டது. ஷியா சட்ட வாரியச் செயற்குழுவில் இயற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் முத்தலாக்கைத் தடை செய்து சட்டமொன்றை இயற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இன்னொரு பக்கம் கல்பே ஜவாதின் உறவினரும், ‘ஹுசைனி டைகர்ஸ்’ என்கிற அமைப்பின் தலைவருமான ஷமீல் ஷம்சி என்பவர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘ஷியா கோரக்‌ஷா தள்’ (ஷியா பசுப் பாதுகாப்பு தளம்) எனும் அமைப்பொன்றை உருவாக்கி, “பசுக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. எங்காவது யாரேனும் பசுவைக் கொன்றதாகத் தெரிந்தால் உடனே அதைக் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்” எனச் சூளுறைத்துத் தன்னை ஒரு ரொம்ப நல்ல முஸ்லிமாக அறிவித்துக் கொண்டார்.

ஷியா சட்ட வாரியம் மட்டுமின்றி அடுத்த சில மாதங்களில் (ஆகஸ்டு 2017) ‘ஷியா வக்ஃப் வாரியமும்’ களத்தில் குதித்தது. “மரியாதைக்குரிய புருஷோத்தமரான ஸ்ரீராமரின் மகாப் புனிதம் மிக்க அவதாரத் தலத்திலிருந்து போதுமான தொலைவில், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிற ஒரு பகுதியில் மசூதியைக் கட்டிக்கொள்ள” தாங்கள் சம்மதிப்பதாக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்களின் அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. பாபர் மசூதிப் பிரச்சினையில் ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அதைச் செய்வதாகவும் கூறிக் கொண்டது.

அது மட்டுமல்ல, “உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியம் சமாதான சகவாழ்வில் நம்பிக்கையற்ற தீவிர சன்னி மத வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் அம்மனுவில் கூறப்பட்டது.  “1992ல் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதியைக் கட்டிய பாபரின் தளபதி மீர்பாகி ஒரு ஷியா” என ஒரு போடு போட்டு, “எனவே ஷியா வக்ஃப் வாரியம்தான் இராமர் கோவில் கட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அதிக உரிமை உடையது” எனவும் அம்மனுவில் வேண்டிக் கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்புகளில் ஒன்றான ‘முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்’சை இயக்கும் இந்திரேஷ் குமார், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட பல முஸ்லிம்கள் தயாராக” இருப்பதாக அறிவித்தார். இந்த முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் 2016ல் உருவாக்கப்பட்டது. முஹம்மது அஃப்சல் என்பவர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதிப் பிரச்சினையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தங்கள் அமைப்பு மேடை அமைத்துத் தரத் தயார் என அவர் அறிவித்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. “ஆனால் தீர்வைப் பொறுத்த  மட்டில் என் முடிவு மசூதி இருந்த இடத்தில் மீண்டும் அந்த மசூதியைக் கட்டக் கூடாது என்பதுதான்” என அறிவித்துத் தன்னை ஒரு ‘சூப்பர்’ நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

எதிர்பார்த்தது போல மத்தியில் உள்ள மோடி அரசும் இந்த நல்ல முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட ஷியாக்கள் ஏற்கனவே சம்மதித்து விட்டனர். சன்னிகளும் தங்களின் ஆதவரவை அளிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறிப் புன்னகைத்தார்.

அயோத்திப் பிரச்சினை ஒரு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படியான நல்ல முஸ்லிம்களின் துணையோடு (இவர்களுள் சில போரா முஸ்லிம்களும் உண்டு) விரைவில் அதைச் “சுபமாக” முடிக்க பா.ஜ.க. அரசு தயாராக உள்ளது. ஒரு வகையில் பாபர் மசூதிப் பிரச்சினையையும் தங்களுக்குச் சாதகமாக முடித்தாற்போல் இருக்கும். இன்னொரு பக்கம் இந்த நல்ல முஸ்லிம்களின் துணையோடு முஸ்லிம் உட்பிரிவுகளுக்கிடையே நிரந்தரப் பிளவை ஏற்படுத்தியதாகவும் அமையும் எனத் திட்டமிடுகின்றன பரிவாரங்கள்.

அனைத்திந்திய ஷியா வக்ஃப் வாரியம் என்பது 2005ல் மிர்சா அதார் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரது மகன் யாசூப் அப்பாஸ் என்பவர் இப்போது சச்சார் குழு போல் ஷியா முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு குழுவை அமைத்து அவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கான முயற்சியில் உள்ளார். 2010 ல் சர்ச்சைக்குரிய பாபர் மசூதித் தீர்ப்பு வந்தபோது மேலே குறிப்பிடப்பட்ட ஷமீல் ஷம்சி ஒரு வேலை செய்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட 15 இலட்ச ரூபாய் நன்கொடை அளித்துத் தன்னை ஒரு ஈடு இணையற்ற நல்ல முஸ்லிமாகக் காட்டிக் கொண்டார்.

இவர்களை முஸ்லிம் சமூகம் மதிப்பதில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவர்கள் மீது வக்ஃப் சொத்துக்களைச் சுருட்டிக் கொண்டவர்கள் எனப் புகார்களும் உண்டு. ஆனால் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களைப் பகடைக் காய்களாக வைத்து ஒரு பெரிய அரசியல் சூதாட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளுக்கும் இவர்களின் யோக்கியதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களைப் பொருத்த மட்டில் பாபர் மசூதி, பசுவதை, முத்தலாக் முதலான முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் சமூக ஒற்றுமையை விரும்பும் முஸ்லிம்கள் எல்லோரும் தமக்கே ஆதரவாக உள்ளார்கள் என நிறுவவும், மற்ற எல்லா முஸ்லிம்களும் கெட்ட முஸ்லிம்கள், மதத் தீவிரவாதிகள், வஹாபிகள் என அடையாளம் காட்டவும் இந்த நல்ல முஸ்லிம்கள் அவர்களுக்குத் தேவைப் படுகின்றனர்.

இதனூடாக இன்னொரு பலனும் பா.ஜ.க. அரசுக்கு உண்டு. இப்படியான தீவிரப் போக்குடையவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும், நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஒரு ஒப்புதலை ஒட்டு மொத்தச் சமூகத்திடமிருந்து பெறுவதற்கும் சூஃபியிசம் X வஹாபியிசம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைப்பதற்கும் இந்த நல்ல முஸ்லிம்கள் பயன்படுகின்றனர்.

முடிப்பதற்கு முன் ஒன்றைச் சொல்வது அவசியம். எல்லா ஷியாக்களும், எல்லா சூஃபிகளும் இப்படி மோடி அரசுக்கும், இந்துத்துவச் சக்திகளுக்கும் துணை போவதில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள சூஃபிகள், ஷியாக்கள் அப்படி பா.ஜ.கவினரின் கைப்பிள்ளைகளாக நடந்துகொள்வதில்லை. சில உதிரிகள் வேண்டுமானால் அப்படி இந்துத்துவச் சக்திகளுக்குத் துணை போகலாம். ஆனால் நாகூர் போன்ற பகுதிகளில் வாழ்கிற சூஃபியிசத்தை ஏற்றுக் கொண்ட சாதாரண மக்களும், சென்னை போன்ற இடங்களில் வாழ்கிற ஷியா முஸ்லிம்களும் பொதுவான முஸ்லிம் பிரச்சினைகளில் பெரும்பான்மை முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படுபவர்களாகவே உள்ளனர். எனினும் கிடைக்கிற கொஞ்ச நஞ்ச இப்படியான நல்ல முஸ்லிம்களைத் தம் நோக்கத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்துத்துவச் சக்திகள்.

பயன்பட்ட ஆக்கங்கள்

  1. Christophe Jaffrelot, Haider Abbas Risvi, “The Curious Friendship”, Indian Express, May 9, 2018
  2. Ashraf Kunnummal, Government Sponsored Sufism, Good and Bad Muslims, Rait, July 8, 2016
  3. Mahmood Mamdani, Good Muslim, Bad Muslim, America, The Cold War and the Roots of Terror, Pantheon, 2004,
  4. Fait Muediny, The Promotion of Sufiism in the Politics of Algeria, 2012, pdf
  5. நாதன் லீன், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், அடையாளம், 2018 (இந்நூலில் உள்ள அ.மார்க்சின் பின்னுரை).

“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

நெருக்கடி நிலை அறிவிப்பின் 40ம் ஆண்டு – நிலைக்குமா இந்திய ஜனநாயகம்?

சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடி நிலை அறிவிப்பின் 25ம் நினைவு தினத்தைப் போலவே இந்த 40ம் நினைவு தினமும் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடக்கும்போது அமைகிறது. நெருக்கடி நிலையின்போது ஒடுக்குமுறைக்கு ஆளான கட்சிகளுள் இன்றைய பா.ஜ.கவின் முந்தைய வடிவமான பாரதீய ஜனசங் கட்சியும் அதன் வழிகாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் முக்கியமானவை. அப்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 1,40,000 பேர்களில் வாஜ்பேயி, அத்வானி முதலான பா.ஜ.க தலைவர்களும் அடக்கம். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலர் அன்று தலைமறைவாயினர்.
பா.ஜ.கவின் முக்கிய எதிரியான காங்கிரசைத் தோலுரிப்பதற்கு இது அவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம். தவிரவும் நெருக்கடி நிலை அறிவிப்பிற்கு ஒரு காரணத்தை அளித்த ஜெயப்பிரகாசரின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி. இதுபோன்ற சந்தர்ப்பங்களை வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க 25ம் ஆண்டு நினைவைப் போலவே இப்போதும் பெரிய அளவில் இதைக் கையில் எடுக்கவில்லை.

இரண்டு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு அப்பால் இந்த அறிவிப்பின் மூலம் இந்திரா இந்த நாட்டிற்குச் சொன்ன சேதி ‘அரசியல் சட்டம் அப்படி ஒன்றும் புனிதமானதல்ல; அரசியல் சட்டத்தைக் காட்டிலும் அரசு புனிதமானது’ என்பதுதான். இந்த அம்சத்தில் பா.ஜ.க பெரிய அளவில் காங்கிரசுடன் கருத்து மாறுபடுவதற்கில்லை. இரண்டாவது அவர்களுக்கு இந்திராவைக் காட்டிலும் காந்தி, நேரு அப்புறம் சோனியா ஆகியோர்தான் முக்கிய எதிரிகள்.
இந்த நாட்டையும், இந்த அரசையும் எல்லாவிதமான குழப்பங்களிலிருந்தும் காக்கவல்ல ஒரே சாத்தியமாகத் தன்னை எப்படி இந்திரா முன்நிறுத்திக் கொண்டாரோ, அவ்வாறே இப்போது மோடியும் தன்னை நிறுத்திக்கொள்கிறார்.

25ம் நினைவு ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் அத்துமீறல்களில் இந்திராவுக்கு நெருக்கமாக இருந்து துணை புரிந்த பி.டி.பாண்டே, பி.கே.நேரு என்னும் இரு உயர் அதிகாரிகளை அன்றைய பா.ஜ.க அரசு இந்தியாவின் இரண்டாவது உயர் விருதான பத்ம விபூஷன் அளித்துக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

தவிரவும் இன்று குடியரசுத் தலைவராக உள்ளவர் அப்போது அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறல்களை நேரடியாகக் கையாண்ட சஞ்சை காந்தியின் கையாள் என விமர்சிக்கப்பட்டவர். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயமாகச் செய்தது, டெல்லியை அழகு படுத்துவது என்கிற பெயரில் குடிசைப் பகுதிகளை அழிதொழித்து மக்களை விரட்டியது,. குடிமக்களுக்கு உயிர் வாழ்தல் உட்பட அடிப்படை உரிமைகளை மறுத்தது, கடுமையான செய்தித் தணிக்கை முதலான வடிவங்களில் மட்டும் அன்றைய அத்துமீறல்கள் வெளிப்படவில்லை
பெரிய அளவில் அமைச்சரவைக்கிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அமைச்சரவையைக் கூட்டாமலேயே அமைச்சரவைக்கு அப்பாலிருந்த ஒரு சிறு குழுதான் 1975 ஜூன் 25 இரவு நெருக்கடி நிலையை அறிவிப்பதென முடிவு செய்தது. முடிவெடுக்கப்பட்ட பின்னர்தான் உள்துறை அமைச்சர் பிரும்மானந்த ரெட்டி அழைக்கபட்டு உரிய பரிந்துரையில் கையொப்பம் பெறப்பட்டது. அரசின் நிதி ஆதாரங்கள் சஞ்சையை சுற்றியிருந்த கும்பலின் விருப்பத்திற்குச் செலவிடப்பட்டன. சற்றே இடையூறாக இருந்த ஓரளவு நேர்மையான நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியத்திடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு எந்தப் பெரிய அனுபவமும் இல்லாத ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி மேலுயர்ந்தவர்தான் இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இவர்களின் ஆளுகையில்தான் இன்று நாம் நெருக்கடி நிலை காலத்தை மதிப்பிடுகிறோம். எத்தனை குறைபாடுகள் இருந்த போதிலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குண்டு. மேலை நாடுகள் பலவும் எதிர்பார்த்தது போலவும், அண்டை நாடுகளில் நிகழ்ந்தது போலவும் ஒரு தேச அரசுக்கு இருக்க வேண்டிய இனம், மதம், மொழி என்கிற பொதுப் பண்புகள் இல்லாதபோதும் அறுபதாண்டுகளுக்கும் மேலாக அது சிதையாமல் உள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த 21 மாதங்களைத் தவிர பிற காலங்களில் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இராணுவம் அதற்குரிய இடத்தில் எல்லை மீற வழியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்தான் இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை முடக்கினார். மக்களுக்கு அது வழங்கியுள்ள உரிமைகள் தேச நலனுக்கு இடையூறாக இருப்பதைச் சகிக்க முடியாது என்றார். நாட்டு நலனுக்காக இந்தக் கசப்பு மருந்தை நான் புகட்ட வேண்டி உள்ளது என்றார். 42வது திருத்தத்தை இயற்றி (1976) நீதிமன்றத்தின் பரிசீலனையிலிருந்து பாராளுமன்றத்தை நீக்கினார். அரசியல் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று ஆக்கினார். பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்தன.. மத்திய மாநிலத் தேர்தல்களைச் சட்டத் திருத்தங்களின் ஊடாகத் தள்ளி வைத்து ஆட்சிக் காலத்தை 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டார். அந்த 21 மாதங்களிலும் பெரிய அளவில் இதற்கெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்புக்கள் இல்லை. பின் ஏன் அவர் 1977 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றத் தேர்தல்களை அறிவித்தார்? கடும் ஒடுக்குமுறைகளின் போதெல்லாம் அமைதி காத்த இந்திய மக்கள் அடுத்த இரண்டு மாதத்தில் எப்படி இந்திராவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொணர்ந்தனர்?
21 மாதங்களுக்கு முன் ஒரு நீதிமன்ற ஆணையால் பதவி பறிக்கப்பட்ட போது மகன் சஞ்சையிடம் அதிகாரத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு, இன்றைய ஜெயாவைப்போல பதவி விலகி வழக்கை எதிர் கொள்ளாமல் அதிரடியாக நெருக்கடி நிலையை அறிவித்த இந்திரா, 1977 மார்ச் 25 அன்று எப்படி அத்தனை அமைதியாக அதிகாரத்தைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாயிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

நெருக்கடி நிலை அறிவிப்பு, அத்து மீறல்கள், ஜனதா ஆட்சியின் வீழ்ச்சி முதலியன குறித்தெல்லாம் இன்று விரிவான ஆய்வுகளும் சுவையான தகவல்களும் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஜூன் 25, 1975 அன்று காலை முதல் இந்திரா தரப்பிலும், ஜெயப்பிரகாசர் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பேசிய பேச்சுக்கள் இரவு 10 மணிக்கு மேல் துரித கதியில் இந்திரா தரப்பு மேற்கொண்ட நகர்வுகள் எல்லாம் ஒரு திரைப் படத்தின் சுவையுடன் கூமி க்பூர் போன்ற பத்திரிகையாளர்களாலும், ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மேலே உள்ள கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தில் அக்கறையுள்ளோரின் இன்றைய பணியாக இருக்க முடியும்.

சுதந்திரத்திற்குப் பின் அடிப்படை உரிமைகள் விரிவாக வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல் சட்டம் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட முடியாட்சிப் பகுதிகள் குடியரசுடன் இணைக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக ஆளுமைகளில் ஒருவரான ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இங்கே மொழி வாரி மாநிலங்கள் வடிவமைக்கப்பட்டன. தடைகளை உடைத்து இந்து திருமணச் சட்டம். 5 கூறுகளாக நிறைவேற்றப்பட்டது. எத்தனையோ குறைபாடுகள், பின்னடைவுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்திய ஜனநாயகம் இப்படித்தான் கிளை பரப்பியது.
இன்னொரு பக்கம் மாநில அளவில் கட்சிகள் உருவாயின. தலைவர்கள் உருவாயினர். கூட்டணி ஆட்சி என்கிற கருத்தாக்கம் மலர்ந்தது. இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் தம்மை அரசியல் களத்தில் நிறுவிக் கொண்டனர். இது ஜனநாயகப்பாட்டின் அடுத்த கட்டமாக விரிந்தது. இந்த நிலையில்தான் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. பி.என் தர் போன்ற இந்திராவின் நெருக்கத்துக்குரிய அன்றைய அதிகாரிகள் இன்று அதை நியாயப் படுத்தி நூல் எழுதியுள்ளனர், “இந்த அரசியல் சட்டம் இந்திய மண்ணின் மீது வேயப்பட்ட கூரைதான். ஆனால் அதன் ஜனநாயகமற்ற சாரம் அப்படியேதான் உள்ளது” என அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர் கூறியதைச் சுட்டிக் காட்டி அவர்கள் தமது நடவைக்கைகளை நியாயப்படுத்துகின்றனர். அதாவது இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியற்ற நாடு. எனவே நாங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறித்தோம் என்கின்றனர்.

அது உண்மையாயின் ஜனநாயகத்துக்குத் தகுதியற்ற இந்த மக்கள் அடுத்த 21 மாதங்களில் இந்திராவின் ஜனநாயக மறுப்பை எப்படித் தகர்த்தனர்! ஜனநாயகத்துக்கு இந்திய மக்கள் தகுதியானவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது என ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களும், ப்ரான் சோப்ரா போன்ற இதழாளர்களும் முன் சொன்னதற்கு நேர் எதிரான இன்னொரு பதிலைச் சொல்கின்றனர். சோதனைகளை மீறி இந்திய ஜனநாயகம் தழைத்து நிற்கிறது. அதற்கு அடித்தளமிட்டவர்கள் அத்தனை ஆழமாக அதைச் செய்துள்ளனர். இந்த மண்ணில் சர்வாதிகாரமோ பாசிசமோ சாத்தியமில்லை. என்பதுதான் அவர்கள் சொல்வது.
அப்படியாயின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இராணுவத்தின் கரங்களில் சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இதற்கு ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும், மாநிலக் கட்சிகளும், ஏன் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத வகையில் இடதுசாரிக் கட்சிகளும் ஒத்துழைப்பதை என்னென்பது? பாசிசம் என முழுமையாகச் சொல்ல இயலாவிட்டாலும் அதன் கூறுகள் எனச் சொல்லத்தக்க நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் தலைகாட்டுவதை எப்படிப் பார்ப்பது. எனக்கென்னவோ இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த பதில் மேலே சொன்ன இந்த இரு எதிர் எதிர் நிலைபாடுகளுக்கும் இடையில்தான் உள்ளது எனத் தோன்றுகிறது.

இதைப் புரிந்துகொள்ள நெருக்கடிநிலைக்கால அரசியலை மட்டுமல்லாது அதற்கு முந்திய அரசியல் சூழலையும், மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தபின் அவர் சென்ற திசையையும் உற்று நோக்குவது அவசியம்.

2. ஜெயப்பிரகாசரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

நெருக்கடி நிலையை அன்று ஆதரித்ததன் விளைவாகத் தீராப் பழி சுமக்க நேர்ந்துள்ள சித்தார்த்த சங்கர் ரே, குஷ்வந்த் சிங் முதலானோர் இப்போது தம்மை நியாயப்படுத்திக் கொள்ளச் சொல்வது இதுதான்: “நெருக்க்கடி நிலை அறிவித்தது சரிதான். அன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாதிருந்தது. ஆனால் நடந்த அத்துமீறல்கள் ஏற்கமுடியாதவை.. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. ஒரு சில தனி நபர்கள்தான் இந்த அத்துமீறல்களுக்குக் காரணம்”.

அத்து மீறல்கள் அவர்கள் சொல்வது போல தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. அவை. அவசர நிலை அதிகாரத்தின் தர்க்கபூர்வமான வெளிப்பாடு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நெருக்கடி நிலை அறிவிப்பிற்கான நியாயங்களாக அவர்கள் எதைச் சொல்கின்றனர்?  “ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடந்த தேர்தல்கள், நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆகியன இதுகாறும் அடங்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள், ஆதிவாசிகள் ஆகியோரை அரசியல் படுத்தின. ஒற்றைக் கட்சி ஆதிக்கம் சிதைந்து, இதுகாறும் காங்கிரசுக்குள் இருந்த பல்வேறு குறுகிய பிராந்திய நலன்கள் மேலெழுந்தன. இதனால் அரசியலின் செயற்படு களன் அகன்றது” என்கிறார் பி.என்.தர். அவர் நிறையப் படித்தவர் . அரசியல் அனுபவம் மிக்கவர். அவர் சொல்வது சரிதான். ஆனால் எவையெல்லாம் ஜனநாயக விகசிப்பின் அடையாளங்களாகக் காணப்பட வேண்டியவையோ, அவற்றையே, அவர்கள் ஜனநாயகத்தை முடக்கியதற்கான நியாயமாகச் சொல்வதுதான் கொடுமை.

இந்திராவும் சரி, இந்திராவைச் சுற்றியிருந்தவர்களும் சரி, அடிப்படையில் ஜனநாயக நெறிமுறைகளை வெறுத்தவர்கள். இந்திராவுக்கு அவரது 13ம் வயதிலிருந்து ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவரது புகழ்பெற்ற தந்தை எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. அந்தக் கடிதங்களை எழுதிய காலத்தில் ஐரோப்பவில் உருவான பாசிசத்தைக் கண்டு நேரு மனம் பதறியிருப்பதை அதை வாசிக்கும் நாம் உணர்கிறோம். ஆனால் அவை எந்தத் தாக்கத்தையும் அவரது மகளுக்கு ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது உரையாடல்கள், கடிதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நெருக்கடி நிலை அறிவிப்பும் ஆளுகையும் நிரூபணங்களாக உள்ளன. அவற்றை விரிக்கப் புகின் கட்டுரை நீளும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இ.எம்.எஸ் தலைமையில் அமைந்திருந்த கேரள அரசைக் கலைத்தது (1959) ஒன்று போதும் இந்திராவிடம் ஊறியிருந்த ஜனநாயக வெறுப்பிற்குச் சான்று சொல்ல.

ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். லைரண்டாம் உலகப் போரின் முடிவை ஒட்டி, பாசிசம் வீழ்த்தப்பட்டது மட்டும் அலாமல், 1950க்குள் இந்தியா உட்படப் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. சீனம் மற்றும் கிழக்கு ஐரோபிய நாடுகள் சிவப்பாயின. இது உலகெங்கிலும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கைகளை விதைத்தன. தங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அடுத்து இருபதாண்டுகள் காத்திருந்தும் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இந்த மாற்றங்களின் விளைவாக விகசித்த ஜனநாயக நிறுவனங்களின் ஊடாக அடித்தள மக்கள் அரசியல் களத்திற்கு வந்தனர். 1960களின் இறுதியில் உலகெங்கிலும் இந்த எதிர்ப்புகள் வெடித்ததை நாம் காணலாம். அதன் ஓர் அங்கமாகத்தான் இங்கும் மாநிலக் கட்சிகள் தோன்றின. போராட்டங்கள் வெடித்தன. 1972ல் மக்களுக்குப் பொறுப்பான அரசு, தேர்தல் சீர்திருத்தம் முதலான கோரிக்கைகளோடு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் ஒரு பெரும் எழுச்சி உருவானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் “மொத்தப் புரட்சி” எனும் முழக்கத்தோடு அது விசுவரூபம் எடுத்தது.

1966ல் பிரதமராக்கப்பட்ட இந்திர, அவரைப் பிரதமராக்கிய பெரியதலைகளின் நம்பிக்கைக்கு மாறாக மிக விரைவில் அவர்களை ஓரங்கட்டத் தொடங்கினார். மாநில அளவிலான ஆளுமைகள் உருவாவதையும் அவர்கள் செல்வாக்கு வகிப்பதையும் அவர் விரும்பவில்லை. 1969ல் காங்கிரஸ் பிளந்தது. காமராசர், நிஜலிங்கப்பா முதலான மாநில அளவிலான பழைய தலைவர்கள் ‘பழைய காங்கிரஸ்’ ஆகவும், இந்திராவைப் பின்பற்றிய பெரும்பான்மையோர் ‘புதிய காங்கிரஸ்’ ஆகவும் பிரிந்தனர். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்திரா வங்கிகளை தேச உடமையாக்குவது, மன்னர் மாநியங்களை ஒழிப்பது முதலான கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். “‘வறுமையை ஒழிப்போம்” என்கிற முழக்கததை மிதக்கவிட்டார். எந்த வகையிலும் சோஷலிசச் சிந்தனை இல்லாதவரான இந்திரா மூத்த தலைவர்களை வீழ்த்தி தன்னிடம் மட்டுமே அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளவே இவற்றைச் செய்தார். ஏழை மக்களுக்கு உரிய வருமானம் கிடைக்கும் வகையில் திட்டங்களை உருவாக்குவது, வரிச் சீர்திருத்தங்களை அமுலாக்குவது முதலான இதர சோஷலிச நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் இவர் மேற்கொண்ட “வறுமை ஒழிப்பு” முயற்சிகள் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கும், பணவீக்கத்திற்குமே காரணமாயின.
1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி கண்டது அவரது செல்வாக்கை உயர்த்தினாலும் போர் ஏற்படுத்திய நிதிச் சுமை நிலைமையை மேலும் மோசமாக்கியது.1969 -70ல் 0.12 சதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை 1972 -73ல் 1.83 சதமாகியது. 1972ல் பருவ மழை பொய்த்ததும், 1973ல் ஏற்பட்ட உலகளாவிய எண்ணை விலை ஏற்றமும் நிலைமைய மோசமாக்கின. வறுமை ஒழிப்புத் திட்டச் செலவுகள் குறைக்கப்பட்டது, விலைவாசி ஏற்றம், உணவுப் பொருள் பற்றாக்குறை முதலியன நிலைமையை மோசமாக்கின.

இந்தப் பின்புலத்தில் குஜராத்திலிருந்த ஒரு ஊழல் மிகு முதல்வரான சிமன்பாய் படேலுக்கு எதிராக உருவான இயக்கம் ஜெயப்பிரகாசர் தலைமையில் பிஹார் முதலான வட மாநிலங்கள் .பலவற்றிலும் பரவியது.
30 ஆண்டு காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் திடீரென மீண்டும் இப்படித் தீவிர அரசியலில் இறங்கியதும் ஒரு வியப்புக்குரிய நிகழ்வுதான். நேரு குடும்பத்தின் மீது அவருக்குப் பெரிய மரியாதை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜெயப்பிரகசர், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் முதலான சோஷலிஸ்டுகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிருந்த வெறுப்பில் அவர்கள் மதவாத சக்திகள் உள்ளிட்ட யாருடனும் கைகோர்த்துக் கொள்வர், ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனசங் மட்டுமின்றி சுப்பிரமணிய சாமி உட்பட ஜெயப்பிரகாசருக்கு நெருக்கமாக இருந்ததை நாம் மறந்துவிட இயலாது. ஆர்.எஸ்.எஸ்சைப் ‘பாசிஸ்ட்” எனச் சொன்னவர்களைப் பார்த்து “அப்படியானால் நானும் பாசிஸ்ட்தான்” எனச் சீறும் அளவிற்கு ஜெயப்பிரகாசர் அதனுடன் நெருக்கம் காட்டினார். பதவி ஆசை இல்லாதவர், அப்பழுக்கற்ற நேர்மையாளர், காந்தியவாதி என்கிற அளவில் எல்லோராலும் மதிக்கப்பட்டவராயினும் ஜெயப்பிரகாசரைப் பொருத்த மட்டில் காந்தியைப் போல அரசியல் கூர்மை உடையவரோ, பெருந்திரளான மக்களை அரசை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசியல் நிதானமுடையவரோ அல்ல.

அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் இந்திராகாந்திமீது தேர்தலில் ஊழல் செய்ததாக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் நீதியரசர் ஜக்மோகன் லால் சின்ஹா, இந்திராவின் வெற்றியைச் செல்லாததாக்கியது (ஜூன் 12, 1975) ஜெயப்பிரகாசரின் போராட்டத்திற்குப் புத்தெழுச்சியை அளித்தது. தேர்தல் பிரச்சாரர மேடை அமைக்கக் காவல்துறையைப் பயன்படுத்தியது, அரசதிகாரி ஒருவர் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே இந்திராவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டது ஆகிய ஒப்பீடளவில் சாதாரணக் குற்றங்களுக்குத் தேர்தலையே செல்லாததாக்குவது என்பதான சட்டம் இருப்பதும், அதை நீதிமன்றங்கள் அப்படியே பயன்படுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்கிற விமர்சனம் இன்றளவும் உண்டு. இந்திராவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர் கீழ் நீதி மன்றத் தீர்ப்பை உறுதிப் படுத்தினார். இந்திரா மேலும் ஆறு மாத காலம் பதவியைத் தொடரலாம் ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க இயலாது என்றார்.

இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் ஜூன் 24. அடுத்த நாள் மாலை டெல்லி ராம் லீலா மைதானத்தில் “இந்திரா பதவி விலக வேண்டும்” என்கிற கோரிக்கையின் அடிப்படையில் நாடெங்கிலுமான போராட்டத்தை அறிவிக்க மிகப் பெரிய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. ஜெயப்பிரகாசரைக் கூட்டதிற்கு அழைத்துவரச் சென்றவர் அப்போதுதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து ஜானசங் கட்சியில் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கப்பட்டிருந்த சுப்பிரமண்ய சாமி. வரும் வழியில், “இந்திரா இராணுவ ஆட்சியைப் பிரகடனப் படுத்தினால் என்ன செய்வது?” என சாமி கேட்டபோது சிரித்துவிட்டு ஜெயப்பிரகாசர் சொன்னார்: “நீ ரொம்ப அமெரிக்கமயமாகிவிட்டாய். இந்தியாவில் அப்படி நடக்காது. மக்கள் புரட்சி செய்வார்கள்”.

அன்று ஜெயப்பிரகாசரின் பேச்சு கடுமையாக இருந்தது. “காவல்துறை, இராணுவம் எல்லாவற்றையும் உத்தரவுகளுக்குப் பணிய வேண்டாம்” எனச் சொல்லி அரசைக் கவிழ்த்துப் பெருங் குழப்பம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய இயலும் என இந்திரா திரும்பத் திருமபச் சொல்லித் தனது நெருக்கடி நிலை அறிவிப்பை நியாயப்படுத்துவதற்கு ஜெயப்பிரகாசரின் பேச்சு அன்று வழிகோலியது.
அடுத்த சில மணி நேரத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடங்கியது. கடும் பத்திரிக்கைத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோல இந்தியாவில் புரட்சி ஏதும் ஏற்படவில்லை.

3. இந்திராவின் மூன்றாவது முகம்

உண்மையில் அவசர நிலை அறிவிப்புச் செய்யும் அளவிற்கு அன்று நிலைமை இல்லை. ஜெயப்பிரகாசரின் ஆணையை ஏற்று மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் நிலை ஏதும் அன்று இல்லை. உளவுத் துறை அப்படியெல்லாம் கலவரச் சூழல் உள்ளது என அரசுக்குதகவல் ஏதும் தராத நிலையிலேயே இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் வாக்களிக்க இயலாமல் சிறகுகள் முறிக்கப்பட்ட ஒரு பிரதமராகத் தொடர அவர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

தொடர்ந்த அத்துமீறல்கள் உள்நாட்டில் பெரிய அளவில் கண்டிக்கபடாவிட்டாலும் ரோசென்தால், ஈ.பி.தாம்சன், பெர்னார்ட் லெவின், ஜான் க்ரிக் முதலான மத்திக்கத்தக்க வெளிநாட்டு இதழாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ‘டைம்ஸ்’, ‘கார்டியன்’ முதலான பத்திரிக்கைகளின் விமர்சனங்களுக்கும் உள்ளாயின. வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் நேருவுடன் அவரது மகளை ஒப்பிட்டுக் கண்டித்தது குறிப்பிடத் தக்கது. இந்த விமர்சனங்களும், மக்களிடமிருந்து பெரிய எதிர்ப்புகள் ஏதும் வராமையும், சுற்றி இருந்த ஒத்தூதிகள் அளித்த தைரியமும் 18 மாதங்களுக்குப் பின் (ஜனவரி 1977) இந்திரா நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பைச் செய்யக் காரணமாயின.
தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெறும் 153 இடங்களை மட்டுமே பெற்றது. ஜனதா கட்சி 298 இடங்களையும் அதன் ஆதரவுக் கட்சிகள் 47 இடங்களையும் பெற்றன. ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோலப் பெரிய அளவில் புரட்சியில் இறங்காத இந்திய மக்கள் ஜனநாயக நெறிமுறைகளின் ஊடாகச் சரியான தீர்ப்பை வழங்கினர்.

21 மாத காலம் எல்லா அநீதிகளையும் மக்கள் பொறுத்திருந்ததை இந்திரா தவறாகப் புரிந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் கூட இதை விட மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காந்தி, நேரு போன்றோர் பல்லாயிரம் சத்தியாக்கிரகிகளோடு சிறையிடப்பட்டபோதும் கூட மக்கள் அப்படித்தான் இருந்தனர். ஆனால் அன்றைய தலைமை போராட்டங்களின்போது மக்கள் காட்டிய உற்சாகத்தையும், பின்னர் கடைபிடித்த அமைதியையும் ஜெயப்பிரகாசரையோ, இல்லை இந்திராவையோ போலத் தவறாக மதிப்பிட்டுவிடவில்லை.

ஜனதா கட்சி ஒரு கலப்படமான கோமாளிகளின் கூடாரம் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் உறுதியாகியது. இரண்டு நிகழ்வுகள் இதனூடாக நடந்தன. ஒன்று, நெருக்கடி காலத்தில் இந்திரா 42வது அரசியல் சட்டத் திருத்தம் (1976) ஒன்றை உருவாக்கி நெருக்கடி நிலை அறிவிப்பு செய்வதையும், அதைத் தொடர்வதையும் எளிதாக்கி இருந்தார். ஜனதா ஆட்சி நிறைவேற்றிய 44வது திருத்தத்தின் (1978) ஊடாக முன்னதாக இந்திரா செய்திருந்த ஜனநாயக விரோதத் திருத்தங்கள் சரி செய்யப்பட்டன. நெருக்கடி நிலை அறிவிப்பு மேலும் கடுமையாக்கப்பட்டது. நாடாளுமன்ற ஒப்புதல், நீதிமன்றத் தலையீடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கப்பட்டன.
மற்றது காந்தி கொலைக்குப் பின் சற்றே ஓரங் கட்டப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங் கட்சிகள் மேலுக்கு வந்து மையநீரோட்டத்தில் இடம் பெற்றன, ஜனதாகட்சியை உடைத்து வெளியே வந்த பழைய பாரதீய ஜனசங் இப்போது பாரதீய ஜனதா கட்சியாக வடிவெடுத்தது. இந்த இரண்டாண்டு கோமாளித் தனங்களின் விளிவாக விரைவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் இருந்த ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமர் ஆனார்.

இந்திராவின் ஆட்சிக் காலத்தில் அவரது அணுகு முறைகள் முன்று விதமாக இருந்தன. 1966- 75 காலகட்டத்தில் சோஷலிச முழக்கங்களின் ஊடாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 1975 -77 காலகட்டத்தில் நெருக்கடி நிலை அதிகாரம் அவருக்குக் கைகொடுத்தது. நெருக்கடிநிலை மற்றும் ஜனதா ஆட்சிக்குப் பிந்திய மூன்றாவது கட்டத்தில் (1980 – 84) அவரது ‘பாப்புலிச’ அரசியல் இன்னொரு ஆபத்தான திசையை நோக்கி நகர்ந்தது. இனி அரசியல் களத்தில் முக்கிய எதிரியாக அமையப்போகிற பா.ஜ.கவின் அரசியலைத் தான் வரித்துகொண்டு ஒருவகைப் பெரும்பான்மை வாத அரசியலை முன்வைத்து மதம் மற்றும் இதர ஆதிக்க சக்திகளின் துணையோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் மேற்கொண்ட அரசியல் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி காலமாக இர்ந்தது என சுகுமார் முரளீதரன் போன்ற அரசியல் கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருபக்கம் முளைவிடத் தொடங்கியிருந்த உலகமயச் சூழலுடன் இயைந்து (1981) உலக நிதி நிறுவனங்களின் உதவியைப் பெற்றுப் பற்றாக்குறைகளை ஈடுகட்டுவது இன்னொரு பக்கம் வெளிப்படையாக பெரும்பான்மை மதவாதத்துடன் அடையாளம் காண்பது என்பதாக அவரது இந்த மூன்றாவது அணுகுமுறை அமைந்தது. இக்காலகட்டத்தில் மதக் கலவரங்கள் பெருகின. மொரதாபாத் (1980), மும்பை (1984), மீருட் (1982), நெல்லி (1983) முதலான இடங்களில் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. மொத்தத்தில் 1980ல் 427, 81ல் 319, 82ல் 474, 83ல் 500 மதக் கலவரங்கள் நடந்தன. 1981ல் 196 பேர்களும், 92ல் 238 பேர்களும், 83ல் 1143 பேர்களும் இக்கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

கலவரங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லாததால் அதிருப்தியுற்ற முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் ஒத்துழையாமையைத் தொடங்குவோம் என அறிவித்தபோது, “அருகிலுள்ள பெரும்பான்மையை விரோதித்துக் கொண்டு எந்த ஒரு சிறுபான்மையும் பிழைத்துவிட முடியாது” என இந்திரா பதிலளித்ததை ஆர்.எஸ்.எஸ்சின் அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் பாராட்டியது. 1983ல் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்தபோது எந்த ஆதாரமும் இன்றி, “மதமாற்றம் செய்வதற்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது” என்றார். அரிதுவாரில் விஸ்வ இந்து பரிஷத் கட்டிய பாரத மாதா கோவிலைத் திரந்து வைத்தார். இப்படி நிறையச் சொல்லலாம்.

இந்த அணுகல்முறை வாழ்ந்த காலத்தில் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தந்தபோதும் அடுத்த சில ஆண்டுகளில் அது காங்கிரசின் பிரதான எதிரியாக பா.ஜ.க உருவாவதற்கே இட்டுச் சென்றது. ராம ஜென்ம பூமிக் கோரிக்கையோடு அது மேலுக்கு வர இந்திராவின் இந்திராவின் இக்கால அணுகல் முறை பாதை வகுத்துத் தந்தது. காங்கிரஸ் இன்று வரை நெருக்கடி நிலை அறிவிப்பிற்காகத் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லை. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே இங்கே இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி, பல முக்கிய மாநிலக் கட்சிகளின் விருப்பாகவும் உள்ளது. நெருக்கடி நிலை அறிவிப்பில்லாமலேயே ‘கலவரப் பகுதி’ என்றெல்லாம் அறிவித்து அப்பகுதி மக்களின் உயிர் வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் ரத்து செய்து இராணுவம் மற்றும் துணை இராணுவங்களுக்கு வானளாவிய அதிகாரங்களைத் தரக்கூடிய ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFPSA), ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (UAPA) முதலிய ஜனநாயக விரோதச் சட்டங்கள் இங்கு தொடர்கின்றன. இதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கபடாத ஒரு நெருக்கடி நிலை தொடரத்தான் செய்கிறது.

சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில் எல்லாக் காலத்திலுமே இப்படியான ஏதோ ஒரு சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்:ளது என்பதும், இவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களை அணுகும் போதெல்லாம், அவை இத்தகைய சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்து வருவதும் ஜனநாயக நெறிமுறைகளில் அக்கறை உள்ள அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்பை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய ஜனநாயகம், வளர்ந்து வரும் இந்த மதவாதத்தையும், அதனால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு எதிர் எதிராக நிறுத்தப்படுவதையும் அதேபோல வெர்றிகரமாக எதிர் கொள்ளுமா என்பதுதான் இன்றைய கேள்வி.

இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியானது அல்ல, அரசியல் சட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்ட சர்வாதிகாரமே இங்கு நிலைக்கும் என்பதை நெருக்கடி கால அனுபவம் பொய்யாக்கியது. அதே நேரத்தில் இங்கே ஜனநாயகம் ஆழ வேர் கொண்டுள்ளது, எதுவும் இதை அசைக்க முடியாது என்கிற மமதையும் ஆபத்தானது என்பதை நெருக்கடி நிலைக்குப் பிந்திய காலம் நமக்கு உணர்த்துகிறது.