“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா?” – மாதவம் நேர்காணல்

{சனவரி 2018 ‘மாதவம்’  நண்பர் அய்யப்பன் அவர்கள் செய்த மிக விரிவான நேர்காணல். இந்து மதம், முஸ்லிம்களுக்குள் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக ஒரு சிலரால் வைக்கப்படும் குற்றச்சாட்டு, தமிழகத்தில் வஹாபியிசம் பற்றி குற்றம் சாட்டும் முஸ்லிம் அறிவுஜீவிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஏன் பெரியாரைக் காய்கிறார்கள், மாற்றுக் கலாசாரம் பற்றிய உரையாடல் தேவைதானா இன்னபிற கேள்விகளுக்கு அ.மார்க்ஸ் பதில்கள்}

1.தங்களது இளமைப்பருவம்? மற்றும் தங்களைப் பற்றி?

 பெரிதாக ஒன்றுமில்லை குறிப்பாக ஏதாவது சொல்வதென்றால் நான் நான்காவது வகுப்பு வரை பள்ளி சென்று படித்ததில்லை. எனக்கென்று ஒரு சொந்த ஊர், உற்றார் உறவினர்கள் என நான் சிறு வயதில் வாழ்ந்ததில்லை. நான் பிறந்த போது (1949) தஞ்சை மாவட்டத்தில் ஒரு மிகவும் பின் தங்கிய கிராமத்தில்தான் என் பெற்றோர் வசித்தனர். அது என் சொந்த ஊரோ இல்லை என் சொந்த சாதி சனங்கள் வாழ்ந்த ஊரோ  அல்ல. நாடுகடத்தப்பட்டு வந்திருந்த அப்பாவுக்கு வேலையும் இல்லை. அம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த விவரம் அறியாத சின்னப் பெண். எனக்கு ஐந்து வயதாகும்போது அந்த ஊரை விட்டு அங்கிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ள இன்னொரு கிராமத்திற்கு இடம் பெயர்ந்தோம். அங்கும் நாங்கள் ஒரு தனிக் குடும்பம்தான். அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் என் ஒன்பதாம் வயதில்தான் நான் முதன் முதலாக ஒரு அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேக்கப்பட்டேன். நம் சாதி, நம் மதம், நம் உறவுகள், நம் ஊர் என்கிற பிரக்ஞை இல்லாமலும், விளையாட்டுப் பருவத்தில் புத்தகச் சுமைகளைத் தூக்கித் திரியாமலும் என் பால்யப் பருவம் கழிந்தது.

 

தொடர்ந்து அரசு கல்லூரிகளிலேயே படித்து நான் ஒரு வேலைக்குச் சென்ற சில மாதங்களில் பெற்றோரை இழந்தேன். எனக்குக் கீழே உள்ள என் ஒரு தம்பி, மூன்று தங்கைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழலுக்கும் ஆளானேன். இத்தனைக்கும் மத்தியில் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளரான என் தந்தையால் ஊட்டப்பட்ட சமூக உணர்வு, அறிமுகம் செய்யப்பட்ட நூல்கள் ஆகியன என் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. இன்று வரை சாதி, மத உணர்வுகள் இல்லாமல் வாழ நேர்ந்ததற்கு எனது அந்த இளமைக் கால அனுபவங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே நம்புகிறேன்.

 

  1. தங்களைப் பாதித்த ஆசிரியர் பற்றி?

 

நான் சின்ன வயதில் பள்ளியே சென்றதில்லை என்றேன். வீட்டுப் பாடம், தேர்வு, மணி அடிப்பதற்கு முன் பள்ளி செல்லும் அவசரம், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நிர்ப்பந்தம், ஆசிரியரின் கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்தேன். என் ஒன்பது வயது வரை எனக்கு என் அம்மாதான் ஆசிரியை. ஐந்தாம் வகுப்பில் முதன் முதலில் பள்ளியில் சேர்ந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்த யோகநாத ராவ், உயர்நிலைப் பள்ளியில் என் ‘எஞ்சினீரிங்’ ஆசிரியராக இருந்த சம்பந்தம் சார் இவர்களை எனக்குப் பிடிக்கும். மற்றபடி வாழ்க்கையில் நான் சந்திக்கும் எல்லோரிடமும் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொண்டே உள்ளேன். சின்ன வயதில் நான் விரும்பிப் படித்த ஜெயகாந்தன் எழுத்துக்களின் ஊடாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்துள்ள நற் குணங்களை மட்டுமே கண்டு வியப்பது குறித்துக் கற்றுக் கொண்டேன்; கார்ல் மார்க்சைப் படித்தகாலத்தில் வரலாற்றையும் சமூகத்தையும் புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டேன். இப்போது புத்தனைப் பயின்று கொண்டுள்ளேன். அறம் சார்ந்த வாழ்வு குறித்துப் பேராசான் புத்தனிடம் கற்றுக் கொண்டுள்ளேன். ரொம்பவும் ‘பீலா’ விடுவதாக நினைக்க வேண்டாம். இப்படி எல்லாவற்றையும் கற்று முடித்து அதன்படி வாழ்வதாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது இத்துதான். எதிர்வரும் எல்லோரிடமிருந்தும் எதையேனும் கற்றுக் கொள்ள இயலும் என்கிற மனப்பாங்கை ஓரளவு வரித்துக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.

 

  1. மதம் மாறிய தலித் முஸ்லீம்கள் பற்றி எதிர் கொள்ளும் சாதிய மேலாதிக்கம் குறித்த தங்கள்கருத்து என்ன?

 

நீங்கள் நாகர்கோவில்காரர். இங்கே சிலர் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்குகின்றனர். அதன் விளைவே இந்தக் கேள்வி. இங்குள்ள முஸ்லிம் நண்பர்கள் சிலர் இந்தப் பிரச்சினைக்கு அதற்கு எந்த அளவு முகியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே என் கருத்து. அப்படி இவர்கள் எழுதுவதன் மூலம் இப்படியான பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வு ஏற்படுவதைக் காட்டிலும் மிக நுணுக்கமாக இங்கு சிலரால் பரப்பப்படும் முஸ்லிம் வெறுப்பிற்கு வலு சேர்ப்பதுதான் நடந்துகொண்டுள்ளது. இதன் மூலம் சில லௌகீகப் பலன்களையும் இப்படி மிகைப்படுத்திப் பேசுகின்றவர்கள் அடைகின்றனர். இன்று வேகமாகப் பரவி வரும் முஸ்லிம் வெறுப்பு அரசியலால் அடித்தள முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்தப் பின்னணியில் இன்று பல முஸ்லிம் கட்சிகள் முளைத்து வருகின்றன. நாட்டுப் பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களின் நலன்களைப் பேணுவதற்கென எந்தக் கட்சியும் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் உட்பட பிராந்தியக் கட்சிகளாகவே அமைந்தன. இந்திய அளவில் முஸ்லிம்கள் திரள்வதற்குரிய ஒரு நிலை இன்றளவும் இல்லாமல்தான் உள்ளது. அந்த நிலையில் ஏதோ ஓரளவு முஸ்லிம் நலன்களைப் பாதுகாக்க இன்று ஆங்காங்கு உருவாகும் இத்தகைய முஸ்லிம் கட்சிகளை எல்லாம் ‘வஹாபியிசம்’ பேசும் முஸ்லிம் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் ஒரு சிலர்தான் இந்த முஸ்லிம் தீண்டாமை குறித்தும் பேசுகிறவர்களாக உள்ளார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்க்கவே கூடாது என நான் சொல்லவில்லை. முஸ்லிம்கள் அமைப்பாகத் திரள்வதையே ‘திவிரவாதம்’ எனச் சொல்பவர்கள் இவர்கள். பீர்முகமது என்று ஒருவர் உங்கள் ஊரில் இருக்கிறார். இவரை ஆ.இரா.வெங்கடாசலபதி என்றொரு பேராசிரியர் பேட்டி எடுக்கிறார். அதை ஆங்கில இந்து நாளிதழ் நடுப்பக்கத்தில் வெளியிடுகிறது.  அவர் இப்படியான சாதாரண நபர்களை எல்லாம் பேட்டி கண்டு எழுதுகிறவரும் அல்ல. அந்த மாதிரி பேட்டிகளைப் போடுகிற பத்திரிகையும் அதுவல்ல. ஆனால் முஸ்லிம்களை, முஸ்லிம்களை வைத்தே திட்டுவதற்கு ஏதேனும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் பத்திரிகைகள் முந்திக்கொண்டு வரும். இப்படியாக முஸ்லிம்களைத் திட்டுகிற முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து ஆவணப் படம் எடுப்பார்கள். தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பதைத்தான் சொல்கிறேன்.

 

சரி சற்று முன் குறிப்பிட்ட அந்த நேர்காணலுக்குத் திரும்புவோம். பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் உள்ள த.மு.மு.க வை ஒரு வஹாபியிசத் தீவிரவாதக் கட்சி என பீர்முகமது குற்ரஞ்சாட்டுகிறார். மற்ற நம்பிக்கைகளைச் சகியாத கட்டுப்பெட்டிகளை உருவாக்கும் கட்சி என்கிற பொருளில். ஆனால் அந்தக் கட்சி அப்போது நடந்த தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் “மகாமகத் திருவிழாவைத் தேசியத் திருவிழாவாக நடத்துவோம்” எனவும் “நவக்கிரஹக் கோவில்களுக்கு பயண வசதிகளும், யாத்ரீகர்களுக்குத் தங்கும் வசதிகளும் செய்து தருவோம்” எனவும் வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்களைப் போய் ‘வஹாபியிஸ்ட்’ என்றால் என்னத்தைச் சொல்றது. இப்படி நிறையச் சொல்ல முடியும். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

 

இப்போது நீங்கள் கேட்ட முஸ்லிம் தீண்டாமை குறித்துப் பார்க்கலாம். முஸ்லிம் மதத்தில் கோட்பாட்டளவில் தீண்டாமை என்பதற்கு இடமில்லை. முஸ்லிம்கள் தங்களின் இலட்சிய மாதிரியாகக் கொண்டுள்ள நபிகள் நாயகத்திடமும் அந்தப் பண்புகள் இம்மியும் இல்லை. அடிமைகள், கருப்பர்கள் எல்லோருக்கும் நபிகள் சமத்துவம் அளித்தார். இந்திய முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் வட மாநிலங்களுக்கும் தென்னகத்திற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. வடமாநிலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரஃப், அஸ்லஃப், அர்சல் என மூன்று பிரிவுகள் உண்டு. அங்கு தீண்டாமையால் பாதிக்கப்படும் கீழ் நிலையில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் எனவும் கேட்கின்றனர். சச்சார் குழு அறிக்கை அந்தப் பரிந்துரை செய்துள்ளது. நான் இது குறித்து எழுதியும் உள்ளேன். தமிழகத்தில் இந்த அள்விற்கெல்லாம் தீண்டாமை இல்லை. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகம். பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் தொகுதியினர் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவரவர்கள் தம் திருமண உறவுகளை அந்த உறவுகளுக்குள்ளேயே வைத்துள்ளனர். மேலப் பாளையம் முஸ்லிம்கள் பற்றி ஒரு இன வரைவியலை சாந்தி எழுதியுள்ளார். அவர்கள் அனைவரும் மேலப்பாளையத்திற்குள்தான் தம் திருமண உறவை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் நாகூர் சென்றிருந்தேன். அங்குள்ள முஸ்லிம்கள் நாகப்பட்டிணத்தைத் தாண்டி திருமண உறவை வைத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர் பக்கம் அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் உள்ள முஸ்லிம்களும் அப்படித்தான். எனக்கே அது தொடர்பாக ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சாந்தியின் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். முஸ்லிம் வெறுப்பு சமூகத்தில் அதிகமாக அதிகமாக இப்படி தங்களுக்குள் ஒடுங்கும் நிலை இன்னும் அவர்கள் மத்தியில் கூடுதலாகிறது. இதைச் சமூகவியலாளர்கள் ஒரு வகைப் ‘பதுங்கு குழி மனப்பான்மை’ என்கின்றனர்.

 

சரி தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தீண்டாமை இல்லவே இலையா? அப்படி நான் சொல்லவில்லை. கவிஞர் இன்குலாப் கூடத் தான் முஸ்லிம்களில் ‘நாவிதர்’ தொழில் செய்யும் சற்றே கீழ்நிலையில் உள்ள முஸ்லிம் எனச் சொல்லியுள்ளார். ஆனால் அவர் இந்தக் கருத்தை முஸ்லிம் வெறுப்பை விதைப்பவர்களிடம் விற்றுப் பேர் சம்பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இப்படியான ஒதுக்கலை ஏதோ இந்துக்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உள்ள அளவிற்கு இருப்பதாக ‘பில்ட் அப்’ கொடுத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா அதுதான் கொடுமை.

 

சரி. இப்படி இருப்பதை பேசவே கூடாது என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் பேச வேண்டும். ஆனால் இவர்கள் பேசுவதுபோல அல்ல. இன்று நிலவுகிற மிகக் கொடுமையான அரசியல் பின்னணியில் மிகவும் எச்சரிக்கயுடன் இதைக் கையாள வேண்டும். இப்படியான ஏற்றத் தாழ்வுகளை உள்ளுக்குள் இருந்து போராட வேண்டும். அதற்கான சாத்தியங்கள் இன்று ஏராளமாக உள்ளன. முஸ்லிம் பத்திரிகைகளும் இயக்கங்களும் இதில் கரிசனம் கொள்ள வேண்டும். அவர்கள் இதற்குரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதன் விளைவு பீர்முகமது போன்றவர்கள் போகிற போக்கில் எல்லாவற்ரையும் மிகைப் படுத்திப் பேட்டி கொடுத்து, புத்தகம் எழுதி முஸ்லிம் வெறுப்பைப் பரப்புகிறவர்களுக்குச் சேவை செய்து பெயர் வாங்குவது என்பதோடு நின்று விடுகிறது.

 

  1. தமிழ் தேசிய வாதிகள் பெரியாரை விமர்சிக்கும் நோக்கம் என்ன? உள்நோக்கம் ஏதாவது உண்டுமா?

 

பெரியார் பார்ப்பனீயம், பெண்ணடிமைத்தனம், சாதீயம் ஆகியவற்றை எதிர்த்தார். தேசபக்தி, மொழிவெறி, மதவெறி, சாதிவெறி ஆகிய நான்கும் சுயமரியாதைக்குக் கேடு என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அவரது அரசியலின் அடிப்படை சுயமரியாதை என்பதுதான். தேசம், மொழி, மதம், சாதி இந்த எந்த அடிப்படையிலும் ஒதுக்கல்கள், எற்றத்தாழ்வுகள் கூடாது என்பதுதான் அவர் சொன்னது. இந்த நான்கு பற்றுக்களும் சுயமரியாதைக்குக் கேடு என்று சொன்ன பெரியாரை இந்த நான்கின் அடிப்படையிலேயே அரசியலைச் செய்யும் தமிழ்த் தேசியர்கள் வெறுப்பதில் என்ன வியப்பு. தமிழ்நாட்டில் பலநூற்றாண்டுகளாக வசிக்கும் நம் மக்களைப் பார்த்து நீ தெலுங்குச் சாதி, கன்னடச் சாதி நீ இங்கு வாழக் கூடாது, நீ அருந்ததியன், நீ மலம் அள்ளவேண்டும், ஆனால் உனக்கு இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்பவர்கள்தானே தமிழ்த் தேசியர்கள். பார்ப்பனீயத்தை எதிர்த்தவர் பெரியார். பார்ப்பனீய எதிர்ப்பைப் பேசுவதே பாவம் என நினைப்பவர்கள் தமிழ்த் தேசியர்கள். எங்காவது தலித் மக்கள் தாக்கப்படும்போது அங்கே தமிழ்த் தேசியர்கள் தென்படுகின்றனரா என யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு இங்குள்ள சாதி, தீண்டாமை ஒழிப்பு என்பதில் எல்லாம் அக்கறை கிறையாது. அதை எல்லாம் பேசினால் அப்புறம் சாதித் “தமிழர்கள்” வரமாடார்களே.

 

  1. கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக அமையவேண்டும்

 

கருத்துரிமை என்பது மிக அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று. கருத்துரிமை என்கிற போது ஒரு கருத்தை வைத்திருப்பது என்பது மட்டுமல்ல அதைப் பிரச்சாரம் செய்யும் உரிமையும் அதில் அடக்கம். அந்தக் கருத்துப் பரவலில் வன்முறை கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. நமது அரசியல் சட்டத்தில் இது ஒரு அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை இரண்டு வகைகளில் இப்போது ஒடுக்கப்படுகிறது. முதலில் தேசத் துரோகச் சட்டம் முதலான பிரிட்டிஷ் அரசு காலச் சட்டங்களின் மூலம் அரசு கருத்துரிமையை முடக்குவதோடு தண்டிக்கவும் செய்கிறது. இன்னொரு பக்கம் கௌரி லங்கெஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் முதலானோர் கருத்துரிமைக்கு எதிரான மதவாத வன்முறைக் கும்பல்களால் கொல்லப்படுகின்றனர். இவை தவிர பத்திரிகைகளுக்கு அரசு மூலமாகவும், ஆளும் கட்சியினர் வழியாகவும் அளிக்கப்படும் அழுத்தங்களின் ஊடாகவும் மாற்றுக் கருத்துக்கள் ஊடகங்களில் இடம் பெறாமல் தடுக்கப்படுகின்றன. பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகின்றன. அரங்குகளை அரசெதிர்ப்புக் கூட்டங்களுக்கு கொடுக்கக் கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். ஜனநாயகத்தில் கருத்துரிமை என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. அது மறுக்கப்படுவதை நாம் ஏற்க முடியாது. கருத்துரிமை மறுப்பால் பாதிக்கப்படுகிற எல்லோரும் இணைந்து நின்று, தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து போராட வேண்டும். நவீன ஊடகங்களையும் நாம் ஒரு மாற்றாகப் பயன்படுத்துவது என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

  1. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் இன்றைய சூழலில் எப்படிப்பட்டதாக அமையவேண்டும்என்று கருதுகிறீர்கள்?

 

ஈழத் தமிழர்கள் ஒரு மிகப் பெரிய அழிவைச் சந்தித்துச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளனர். யுத்தத்துக்கு முந்திய நிலையில் இருந்த அதே நிலையிலேயே, சொல்லப்போனால் அதையும் விட மோசமான நிலையில் இன்று அவர்கள் உள்ளனர். யுத்தகால மனித உரிமை மீறல்களுக்கான நீதி விசாரணை, காணாமலடிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த எந்தக் கூடுதல் தகவலும் இன்மை, நிறுத்திவைக்கப்பட்ட இராணுவம் திரும்பப் பெறப்படாத நிலை, அதிகாரப் பகிர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு என எதிலும் முன்னேற்றமற்ற சூழல் தொடர்கிறது. இன்று உடனடியாக மீண்டும் ஒரு விடுதலைப் போர் என்பது அங்கு சாத்தியமில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு உடனடி வாய்ப்பில்லை. மாற்று வழிகளைத்தான் யோசிக்க வேண்டும். இந்திய அரசை நம்புவதில் எந்தப் பயனுமில்லை என்பதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். காங்கிரஸ் அரசோ. பா.ஜ.க அரசோ யாரானாலும் தனி ஈழத்தை ஆதரிக்கப் போவதில்லை, தமிழர்கள், முஸ்லிம்கள் இரு தரப்பும் இணைந்து நின்று ஆயுதப் போராட்டம் அல்லாத வழிமுறைகளில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடுவது ஒன்றுதான் இப்போதைக்கு ஒரே வழியாகத் தெரிகிறது.

 

  1. நமது கலாச்சார சாயல்கள் சிதறடிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற காலச்சூழலில் எது மாற்று கலாச்சாரம் என்ற நிர்ணயிக்க விரும்புகிறீர்கள்?

 

பண்பாடு என்பது தொடர்ச்சியாக மாறி வரும் ஒன்று. பண்பாட்டுக் கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வரலாறு என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே பண்பாட்டுக் கலப்புகளும் நடந்து கொண்டுதான் உள்ளன. காலந்தோறும் நம் சூழல்கள் மாறுகின்றன; அதை ஒட்டி நம் கருத்துக்கள், பார்வைகள் மாறுகின்றன. தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. பல்வேறு புதிய தொடர்புகள் உருவாகின்றன. இரண்டு நாள் முன்னர் ஜவஹர்லால் நேருவின் உரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. கட்டிடக் கலைஞர்கள் (architects) மாநாடு ஒன்றில் அவர் ஆற்றிய நிறைவுரை அது. காலந்தோறும் கலை வடிவங்கள் மாறி வருவது தவிர்க்க இயலாது என்பதை வற்புறுத்தும் நேரு, “தாஜ்மகால் மிக அழகான ஒரு கட்டிடக் கலைச் சாதனைதான். ஆனால் இப்போது நாம் இப்படி ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டிய ஒரு சூழல் நமக்கு ஏற்பட்டால் அந்தச் சின்னம் உறுதியாக தாஜ்மகாலைப் போல இருக்காது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்” என்கிறார். காலம் மாறுகிறது, நம் பார்வை மாறுகிறது, தொழில்நுட்பம் மாறுகிறது. அப்புறம் கலை, பண்பாடு எல்லாம் மாறத்தானே செய்யும். இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. வெளி மட்டுமல்ல காலமும் சுருங்கி விட்டது. சீகன்பால்கு இங்கு வந்தபோது டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடிக்கான பயணக் காலம் ஆறு மாதங்கள். இன்று ஆறு மணி நேரத்தில் அங்கு போய்விடலாம். விருபுகிறோமோ விரும்பவில்லையோ உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. எனவே மிக வேகமாக எல்லாமே மாறிக் கொண்டுள்ளன. எனவே பண்பாட்டுச் சாயல்கள் மாறுவதும் தவிர்க்க இயலாத ஒன்று. அது குறித்துக் கவலை கொள்ளுதல் அபத்தம். ஒரு முப்பதாண்டுகளுக்கு முன் “நிறப்பிரிகை” யின் ஊடாக மாற்றுக் கலாச்சாரம் பற்றி அதிகம் பேசினோம். மாற்றுகளைத் தேடி என்று ஒரு தொகுப்பைக்கூட வெளியிட்டோம். கல்வியில் மாற்று, அரங்க இயலில் மாற்று, பாவ்லோ ஃப்ரெய்ரே, அகஸ்தோ போவால், சிந்தனைகளில் புரட்சி, தெரிதா, ஃபூக்கோ என்றெல்லாம் நிறையப் பேசினோம். எதிர் கலாச்சரம் என்றோம். பின் நவீனத்துவம் என்றோம். மாற்று அரசியல், அடித்தள மக்களின் விளிம்பு நிலைக் கதையாடல்கள் என்றெல்லாம் பேசினோம். இந்த முப்பதாண்டுகளில் அவை ஓரளவு நம் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உள்வாங்கப்பட்டு விட்டன. சில துறைகளில் நாம் விரும்பிய பார்வை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  இந்த மாற்றங்களை மறு மதிப்பீடு செய்யும் காலம் இன்று வந்துவிட்டது. கல்வி முதலானவற்றில் இன்று உலகளாவிய மாற்றங்கள் வந்துவிட்டன. தொலைத் தொடர்பில் ஏற்பட்டுள்ள பெரும் புரட்சி நாம் கற்பனையிலும் நினைத்திராத ஒன்று. பழைய உலகை நினைத்து ஏங்குவதோ, இல்லை நாம் நினைத்த மாதிரி இந்தப் புதிய உலகு அமையவில்லை எனக் கலங்குவதோ பயனில்லாத ஒன்று. இந்த உலகை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்வதற்கான அறம் சார்ந்த அணுகல்முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

 

  1. அரசுப்பணியிலும், அரசியல் பங்களிப்பிலும் எந்ததெந்தச் சூழலில்   

   வெளியேற்றப்பட்டிருக்கின்றீர்கள்-?

 

ஒன்றிலிருந்து வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது என்பது இன்னொன்றுக்குள் நுழைவதும் கூட. வெளியேற்றம் நிகழும்போது அது வலி மிக்க ஒன்றாகக்கூட அமைந்திருக்கலாம். நீண்ட பயணத்தின் ஊடே திரும்பிப் பார்க்கும்போது அந்த வெளியேற்றங்கள் இப்போது வெளியேறியபோது இருந்த உணர்வுகளை எழுப்புவதில்லை. மாறாக ஒரு புன்னகையையும். சில நேரங்களில் நிறைவையும், மகிழ்வையும்கூட ஏற்படுத்துவதாகவே அவை அமைந்துவிடுகின்றன. காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் வல்லமை மிக்கது. தம்பி தங்கைகளின் பொறுப்பை என் தலையில் சுமத்திவிட்டு ஆறுமாத இடைவெளியில் என் பெற்றோர் மறைந்தனர். கூடப் பிறந்தவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு அவர்களிடமிருந்து வெளியேறினேன். ஆமாம் “வெளியேறினேன்” என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். நான் தேர்வு செய்த ஒரு அரசியல் வாழ்வில் அதற்குப் பின் அவர்களுக்கு இடமிருக்கவில்லை. நான் பணிபுரிந்த அரசு கல்லூரிகளிலிருந்து கிட்டத் தட்ட நான்குமுறை என் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்பட்டேன். ஆசிரியர் இயக்கங்களில் தீவிரமாக இருந்தேன் என்ற குற்றச்சாட்டில் ஒரு முறை; தலித் மாணவர்களைப் போராட்டத்திற்குத் தூண்டினேன் என ஒரு முறை.  நான் இணைந்து பணியாற்றிய ஒரு இடதுசாரிக் கட்சி என்னை வெளியேற்றியது. இன்னொரு நக்சல்பாரிக் கட்சியிலிருந்து நானாகவே வெளியேறினேன். எல்லோருடனும் நான் இப்போது நல்லுறவையே பேணுகிறேன். அவர்களும் என்னைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றே நம்புகிறேன். நுழைவது, வெளியேறுவது இரண்டுமே நாம் வளர்ந்து கொண்டிருப்பது அல்லது மாறிக் கொண்டிருப்பதன் அடையாளங்கள்தானே.

 

  1. தங்களது மறக்கவே முடியாத நண்பர்கள் என்று யாரையும் வகைப்படுத்த விரும்புகிறீர்களா?

 

அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. பழகும் எல்லோரிடமும் மிகத் தீவிரமாகப் பழகுவது, பிரிந்து வேறு சூழலுக்குப் போகும்போது முற்றிலும் புதிய அறிமுகங்கள், நட்புக்கள்.. இப்படியே வாழ்க்கை ஓடி விட்டது. முற்றிலும் வேற்பட்ட வாழ்க்கைகள், அரசியலிலும் கூட வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமான அரசியல்கள், அவற்றுக்குத் தக வெவ்வேறு நட்புகள், பின்பு அவை தொடர்பற்றுப் போவது என்பதாகவே என் வாழ்வு அமைந்து விட்டது. பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும்போது மிக்க ஆவலோடு பேசத் தொடங்கினால் ஒரு இரண்டு மணி நேரத்தில் பேச வேண்டிய செய்திகள் முடிந்து விடுகின்றன. அதன் பின் மௌனம்தான். முற்றிலும் என் வாழ்க்கை பழையதிலிருந்து தொடர்பற்றுப் போன புதிய ஒன்றாகவே ஆகிவிட்டதன் விளைவுதான் இது. மற்றபடி எனது எந்தக் காலகட்ட வாழ்விலும் நான் சந்தித்துப் பழகியவர்களோடு அந்தக் கணத்தில் மிக்க அர்ப்பணிப்புடனும் காதலுடனும்தான் வாழ்ந்துள்ளேன்.

 

  1. அம்பேத்காரின் போர்குரல் எழுதிய தாங்கள்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” எழுதுமளவிற்குகாந்தியிடம் வந்துசேர்ந்தது எப்படி?

 

அம்பேத்கரையோ, மார்க்சையோ விட்டுவிட்டு நான் காந்தியை வந்தடையவில்லை. அவர்களை ஏந்திக் கொண்டும் சுமந்து கொண்டும்தான் நான் காந்தியை வந்தடைந்துள்ளேன். எல்லோரையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளும் வல்லமையுடையவர் காந்தி. காந்தி பற்றித்தான் எத்தனை மூட நம்பிக்கைகளும் பொய்யுரைகளும், அபத்தங்களும் இங்கே பதிக்கப்பட்டுள்:ளன. குறிப்பாகத் தமிழகம்தான் இந்த அபத்தங்கள் உச்ச நிலையைத் தொட்ட ஒரு மாநிலம். ஒரு பன்மைச் சமூகம் இது. இந்தியா அளவிற்குப் பல்வேறுபட்ட மொழிகள், இனங்கள், நம்பிக்கைகள், மதங்கள், சாதிகள், பிளவுகள் உள்ள நாடு எங்குள்ளது? இப்படியான மக்கட் சமூகங்கள் ஒன்றை ஒன்று நேசித்துக் கலந்து வாழ வழி கண்டவர் காந்தி. அதற்கான அரசியலை கண்டடைந்தவர் அவர். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கு இந்துக்களையும். முஸ்லிம்களையும் ஒன்றே போல நேசித்த வேறொரு மனிதனை நான் என் வாழ்வில் தரிசித்ததில்லை. காந்தி வரலாற்றை வெறுத்தவர்; லட்சியத்தை உன்னதமாக்கியவர். ராமன் அயோத்தியில் பிறந்தானா என்றொரு விவாதம் எழுந்த போது அவர் நாவிலிருந்து வெடித்துச் சிதறிய அந்தச் சொற்கள்.. ஓ! அவற்றை எப்படி மறக்க இயலும்? “நான் சொல்லும் இராமன் ஒரு வரலாற்று மனிதன் அல்ல. அவன் ஒரு இலட்சிய ஜீவன்”. அவரது இராமன் எல்லா நற்குணங்களும் மிக்க ஒரு இலட்சியத் திரு உரு. இந்த ஊரில் இந்தப் பட்டா நம்பரில்தான் இராமன் பிறந்தான் எனச் சொல்லி ஒரு வெறுப்பு அரசியலை விதைப்பவர்களால் அவரை எப்படிச் சகிக்க முடியும். மூன்று குண்டுகள் அவர் நெஞ்சில் பாய்ந்தது எத்தனை தர்க்கபூர்வமானது. அவருக்கு அளிக்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதை அல்லவோ அது. சுதந்திர இந்தியாவின் முதல் நடவடிகையாகப் பசு வதைத் தடைச் சட்டம் இயற்ற வேண்டும் என வல்லபாய் படேல் வந்து நின்ற போது “நான் சின்ன வயது முதல் கோமாதா பூஜை செய்து வருபவன். ஆனால் என் மதம் எப்படி இன்னொருவர் மதமாக ஆகமுடியும்?” என்று கேட்டவரல்லவா அவர். காந்தி வைதீக மரபில் வந்தவர் அல்லர். புத்தன், அசோகன் என ஓர் சிரமண மரபில் உதித்த பேரொளி அது. ஒரு உண்மையான தியாக வாழ்வை வாழ்ந்த யாரும் இறுதியில் நிறைவடையும் இடம் காந்தியாகத்தான் இருக்க இயலும். “ஒரு காலத்தில் காந்தி சிலைகளை உடைத்துத் திரிந்த நான் இன்று காந்தியைப் புரிந்து கொண்டு ஏற்கிறேன்” என்கிறாரே தோழர் தியாகு. புத்தனுக்குப் போதி மர நிழலில் கிடைத்த ஞானம்போல் தியாகுவுக்கு தூக்குமரத்தின் நிழலில் அன்றோ காந்தி தரிசனம் கிடைத்துள்ளது..

 

  1. கள் குடித்தல் மக்கள் பேறு என்று தாங்கள் எழுதியதாக நினைவு? பள்ளி மாணவிகள் மதுஅருந்தக்கூடியதாக காண்பிக்கப்படும் பிம்பப்படுத்தப்படுகின்ற இந்தச் சூழலில் தங்களது கருத்து இப்போதும் அப்படியே உள்ளதா?

 

அதெல்லாம் ஒரு விவாதப் போக்கில் சொன்னது. மதுவிலக்கு என்பது ஒரு மூடத்தனம் என்பது என் கருத்து. என்னடா காந்தி பற்றி இப்படிப் பேசிவிட்டு இங்கே தலைகீழ் பல்டி அடிக்கிறேனே என உங்களுக்குத் தோன்றலாம். காந்தி பொதுவாகத் தன் இலட்சியங்களை எல்லாம் மக்கள் மீது சட்டங்களாகத் திணித்ததில்லை. காந்தியப் பொருளாதாரத்தை அவர் அரசு கொள்கையாக ஆக்கவில்லையே. காங்கிரஸ் ஆட்சிகளில் இரண்டு முறையும் காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி குமரப்பா திட்ட ஆணையத்திலிருந்து பதவி விலகத்தானே நேர்ந்தது. இராட்டை சுழற்றுவதை அவர் ஓர் அரசியல் செயல்பாடாக மட்டுமல்ல உன்னதமான ஒரு ஆன்மீகச் செயல்பாடாகவும் அதை அவர் முன்வைத்தார். எனினும் அவருடைய ஆதாரக் கல்வி கட்டாயமாக்கப்படவில்லையே. இவை எல்லாம் அரசின் கொள்கைகளாகவும் தண்டனைக்குரிய சட்டங்களாகவும் அன்றி சுய கட்டுப்பாடுகளின் ஊடாக ஏற்பட வேண்டும் என அவர் நினைத்தார். அதுபோலத்தான் மது விலக்கு குறித்தும் நான் கருதுகிறேன். மது விலக்கு தோற்கும், அது அபத்தம் என நான் சொல்வது அரசே இப்படி வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்பதல்ல.

 

  1. இந்துத்துவத்தின் முகங்கள் பலவடிவநிலைகளில் வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறச் இச்சூழலில் அதன் எதிர் நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று   நினைக்கிறீர்கள்?

 

இந்துத்துவ சக்திகள் தம் பிளவு அரசியலைச் மிகத் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகின்றனர். உலக அளவிலான அரசியற் சூழலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, கம்யூனிசம் தோற்றுவிட்டது எனும் கருத்தக்கம் ஆகியன ஒரு வலதுசாரி அரசியலை நோக்கிய சாய்வை இன்று உலகமெங்கும் ஏற்படுத்தியுள்ளன. கார்பொரேட் பொருளாதாரக் கொள்கைகளுடன் எளிதில் பொருத்திக் கொண்டு அடித்தள மக்களைக் கருவியாகக் கொண்டு ஒரு உயர்சாதி அரசியலைச் செய்கிறது இந்துத்துவம். தமிழ்நாட்டில் நாகர்கோவில். துத்துக்குடி, கோவை மாவட்டங்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை ஆகிய சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதிகளை மையப்படுத்தி  அவர்கள் வேலை செய்கின்றனர். இதற்கிணையான எதிர்ச் செயல்பாடுகள் மதச்சார்பற்ற சக்திகளிடம் இல்லை. மதச்சார்பற்ற சக்திகள் முதலில் இந்த நிலை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அந்த முதற்கட்ட ஓர்மையே இன்னும் இங்கு ஏற்படவில்லை.

 

  1. தங்களின் விரிவான செயல்பாடுகளுக்கு தங்கள் தந்தையின் அரசியல் செயல்பாடுகள் ஒருகாரணமாக அமைந்திருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

 

நிச்சயமாக. அவர் தனது அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி வந்து அன்றாட வாழ்க்கையோடு போராட நேர்ந்த காலத்தில் பிறந்தவன் நான். எனினும் அவரது விரிந்த பார்வை, யாரும் ஊரும் அற்ற நாடுகடத்தப்பட்ட இரு இளைஞர்களைத் தன் பிள்ளைகளாக ஏற்று, தன் உறவுப் பெண்களையே திருமணம் செய்வித்து, எனக்கு பாரதியையும், சரத்சந்திரரையும், மார்க்சையும் அறிமுகம் செய்து, தன் பெயரில் ஒரு பைசா கூட சொத்தில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரின் நினைவுகள் என் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளன என்பதில் ஐயமில்லை.

 

14 கோவிலுக்குள் வழிபட வருகின்ற பெண்களிடம் உடைக்காட்டுப்பாடு இருந்தது. அது இன்று விலக்கிக் கொள்ளப்பட்டாலும் வெளிப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.ஏற்பு மறுப்பு     என்ற நிலைப்பாடு இன்றும் இருக்கின்ற சூழலில் தங்களின் கருத்து என்னவாக உள்ளது?

 

உடை என்பது நமது சவுகரியத்திற்கான ஒன்று. கோவிலில் மட்டுமல்ல பள்ளிகளில் ஆசிரியைகளுக்கு, பெரும் வசதியுடையவர்களின் மாலை நேரச் சந்திப்பு மையங்களான காஸ்மோபோலிடன் க்ளப் எனப் பல இடங்களிலும் இப்படியான கட்டுப்பாடுகள் இன்று நடைமுறையில் உள்ளன. இந்துக் கோவில்களில் மட்டுமின்றி முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் கூட சில உடைக் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தலையில் தொப்பி அணிந்து வரவேண்டும் என்பதுபோல. பொதுவாக உடைக் கட்டுப்பாடு என்பது ஒரு வகையான regimentation – ஒழுங்குபடுத்தலின் அடையாளம்.தான். அடிப்படையில் decent ஆன ஒரு உடை என்பதற்கு அப்பால் இந்தமாதிரி கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து. உடை என்பது நம் வாழ்க்கை முறைக்கேற்ற வகையில் எளிதில் நம்மோடு பொருந்திப் போவதாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

 

  1. இந்துமதத்தை நீங்கள் எதிராக பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா? அதற்கு காரணங்கள் உண்டுமா? காரணங்கள் உண்டு என்றால் அது பிற மதங்களில் இருந்து வேறுபட்டவையா?

 

நான் இந்து மதத்தை எதிராகப் பார்க்கிறேன் எனச் சொல்வது என்னை முற்றிலும் புரிந்து கொள்ளாமையின் விளைவு. இந்து மதத்தை நான் வெறுப்பவனும் இல்லை. தீண்டாமை, சாதி, வருண ஏற்றத் தாழ்வுகள், வருண அடிப்படையில் தொழில் என்பவற்றை மட்டும்தான் நான் வெறுக்கிறேன். இவை இந்து மதத்தில் மட்டுமல்ல எந்த மதத்தில் இருந்தாலும் அவற்றை எதிர்க்கிறேன். இந்தியத் துணைக் கண்டத்தை வந்தடைந்த எல்லா மதங்களிலுமே இவற்றின் சாயல் படிந்துதான் இருக்கிறது. கிறிஸ்தவம் கிட்டத் தட்ட அதை அப்படியே ஏற்றுக் கொண்டது. இஸ்லாம் அதைப் பெரிய அளவில் எதிர்த்து நின்றாலும் வட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்படியான தலித் முஸ்லிம் என்கிற ஒரு பிரிவு உருவாகியுள்ளது. இவை எல்லாமே களைந்தெறியப்பட வேண்டியவைதான். எனினும் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களில் கோட்பாட்டளவில் இவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. .இந்துமதத்தைப் பொருத்த மட்டில் அதற்கென எல்லோரும் ஏற்றுக் கொண்ட அடிப்படைக் கோட்பாடு ஏதும் இல்லை. இந்து மதத்திற்குள்ளேயே நின்று கொன்டு இவற்றை எதிர்த்தவர்களும் உண்டு. இராமானுஜர் ஓரளவு சில சீர்திருத்தங்களை முயற்சித்தார். நமது இராமலிங்க அடிகள், கேரளத்தில் நாராயண குரு முதலானோர்களும் இப்படியான முயற்சிகளைச் செய்தனர். நமது சித்தர்கள் வெளிப்படையாக இவற்றைக் கண்டித்தனர். இத்தகைய வாய்ப்புகளும் இந்து மதத்திற்குள் உள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

 

எனில் நாம் இதை இப்படிச் சொல்லலாமா? வருண சாதி க் கோட்பாட்டை பொதுவில் ஒரு இந்தியத் துணைக் கண்டப் பண்பாடு எனலாமா?

 

அப்படியும் பொதுமைப்படுத்திவிட முடியாது. பவுத்தம், சமணம் ஆகியவை இதை ஏற்கவில்லை. ஆனால் அவையும் கூட காலப் போக்கில் ஓரளவு வருண -சாதிக் கட்டமைப்பிற்குள் வந்தன. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களை தலித் பவுத்தர்கள் எனச் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது. அதேபோல சமணத்திற்குள்ளும்  நடைமுறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் காண முடிகிறது. ஆக வருண சாதி வேறுபாட்டை ஒரு வகையில் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பண்பு எனலாம்.

 

அடுத்து நாம் இன்னொரு அம்சத்தையும் கவனம் கொள்ள வேண்டும். மேலை மதங்களைப் பொருத்த மட்டில் மிகவும் exclusive – அதாவது தன்னை மற்றவற்றிடமிருந்து ஒதுக்கிக் கொள்பவை. மற்ற நம்பிக்கைகளை உள்ளே அண்ட விடாத அளவு தம்மை வரையறுத்துக் கொண்டவை. கிறிஸ்தவம், முஸ்லிம்  முதலான மதங்கள் அப்படியானவை. இந்து மதம் அதற்கென ஒரு இறுக்கமான வேதம் முதலியன இல்லாமையால் அது ஒரு inclusive மதமாகவே இருந்தது. அது மற்ற நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முதல் சென்சஸ் கணகெடுப்பின் போது பல பகுதிகளில் நீங்கள் என்ன மதம் எனக் கேட்டபோது அந்த மக்களால் தாங்கள் இந்துக்களா இல்லை முஸ்லிம்களா எனச் சொல்லத் தெரியவில்லை என்பது வரலாறு.

 

இந்த இடத்தில்தான் பிரச்சினை உருவாகிறது. 18, 19ம் நூற்றாண்டு தொடங்கி இங்கு உருவான ஆர்ய சமாஜம், ப்ரும்ம சமாஜம் முதலான சீர்திருத்த இயக்கங்கள் 20ம் நூற்றாண்டில் உருவான இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் இந்து மதத்தையும் மேலை செமிடிக் மதங்களைப் போல ஒரு exclusive மதமாக கட்டமைக்க முனைந்தன. எழுதப்பட்ட அடிப்படைப் புனித நூல் ஒன்று இல்லாத இந்து மதத்திற்கு ‘பகவத் கீதையை’ புனிதநூலாக அவர்கள் கண்டுபிடித்தனர். வேதங்கள், தர்ம சாத்திரங்கள், வருணாசிரமம் என்பதாக இந்து மதத்தை இந்தியா முழுவதும் ஒரே சீராகக் கட்டமைக்கும் முயற்சி தொடங்கியது. இன்னும் அந்தத் திட்டம் முழுமையாக முடியாத போதும் தீவிரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

 

ஆக நான் வெறுப்பது இந்துமதத்தை அல்ல. சொல்லப்போனால் இறுக்கமான ஒரு புனிதமான நூல் இல்லாத மதம் என்கிற வகையில் அதை நேசிக்கவே செய்கிறேன். நான் வெறுப்பதும், எதிர்ப்பதும் இந்துத்துவத்தைத் தான். சாதி மற்றும் வருண ஏற்றத் தாழ்வுகளைத்தான். அவை கிறிஸ்தவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கிறேன். எனினும் எங்களிடம் இந்துத்துவ எதிர்ப்பே மேலுக்கு வருவதற்குக் காரணம் அவர்கள் இந்துமதத்தை இவ்வாறு கட்டமைத்து ஒரு வன்முறை வெறுப்பு அரசியலை மும்மெடுப்பதால்தான். இந்த நாட்டின் பன்மைத் தன்மையை ஒழிக்க முற்படுவதற்காகத் தான்..

 

  1. இந்துமதம் பன்முக தன்மையற்ற ஒற்றைப்படை தன்மைக் கொண்டது என நினைக்கிறீர்களா?

 

இல்லை. உண்மையில் இந்துமதம் தான் ஒரு வகையில் பன்மைத் தன்மையுள்ள மதம். inclusive மதம் என்பதன் பொருளும் அதுதானே. பிற மதங்களையும் உள்ளே ஏற்றுக் கொள்ளும் மதம் அது. மையத்தில் மட்டுமே வருண தர்ம இறுக்கங்களுடன் கட்டமைக்கப்பட்ட மதம். விளிம்புகள் பல்வேறு மட்டங்களில் சுதந்திரமாகவும், இறுக்கமற்றும் இருந்த மதம். இறுக்கமான மறை நூல் இல்லாததால் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகள் உள்ளே புகுந்து அதை மேலும் inclusive ஆக்குவதற்கு வாய்ப்பளிக்கும் மதம். பிரச்சினை என்னவெனில் சுமார் இரு நூற்றாண்டுகளாக இந்துத்துவம் இந்து மதத்தின் இந்தப் பூர்வ பண்புகளை ஒழித்து இறுக்கமான, ஒரே சீரான, நெளிவு சுளிவு இல்லாத வருண தர்மமாகக் கட்டமைத்ததுதான்.

 

  1. உங்கள் பார்வையும் அணுகுமுறையும் கலை இலக்கியத்திற்கு எதிரானது எனும் கருத்துஉள்ளது? என்ன பதில் சொல்கிறீர்கள்?

 

சொல்லிவிட்டுப் போகட்டும். எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்ன. யானையைப் பார்த்த குருடனின் கதை என்க் கேள்விப் பட்டிருப்பீர்கள். புத்தர் சொன்ன கதை அது. அப்படிச் சொல்கிறவர்கள் என்னை அர்சியல் மட்டுமே தெரிந்தவன் என்கிறார்கள்.  ஆனால் இன்னொரு பக்கம் வரட்டு அரசியல் பேசுகிற தமிழ்த் தேசியவாதிகள், கிழட்டு மார்க்சியர்கள், அசட்டுப் பெரியாரியவாதிகள் இவர்கள் என்னை அரசியல் தெரியாதவன் என்கிறார்கள். நான் பாரதியையும், ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், மாதவையாவையும், டால்ஸ்டாயையும் பற்றி உருகிக் கரைந்து எழுதுவதைப் புரிந்து கொள்ளாத மூடர்களான இவர்கள் அதையே என்மீதான் குற்றச்சாட்டாகவும் வைக்கின்றனர். அவர்களின் எழுத்துக்களைக் கொண்டாடுவதற்காக என்னை ஏசுகின்றனர். என் தந்தை எனக்கு மார்க்சை மட்டுமல்ல பாரதியையும், டால்ஸ்டாயையும், ஜெயகாந்தனையும் கூட அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிப்பது என்பது என்னிடம் ஒரு கட்டத்தில் நின்று போனது. கடந்த முப்பது ஆன்டுகளில் நான் தீவிரமாகப் புனைவு இலக்கியங்களைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். நிறுத்திக் கொண்டேன் எனச் சொல்வதைக் காட்டிலும் எனக்கு நேரம் இருப்பதில்லை. தொன்மை இலக்கியங்கள் நிறைந்த நம் தமிழின் வரலாற்றில் கூடுதலாக ஆர்வம் கொள்ள நேரிட்டது. இப்போது பவுத்த இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டுள்ளேன். மணிமேகலையையும் வீரசோழியத்தையும் அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளேன்.

 

எனக்கு இலக்கியம் தெரியாது எனக் குற்றம் சாட்டுபவர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் எழுதிக் குவிக்கும் ஏகப்பட்ட எழுத்துக் குவியல்களைப் படித்து ஆகா ஓகோ என எதையாவது எழுதினால் இலக்கியம் தெரிந்தவர்கள், இல்லாவிட்டால் இலக்கிய விரோதிகள். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது.

 

  1. பாரதியைப் பற்றி பெரியர் கூறும்போது கஞ்சா கிறுக்கன், குடிகாரன் அவன் குடித்துவிட்டு உளறுவதை கவிதை என்கிற ஒரு கூட்டம் இங்கிருக்கிறது என்று ஒரு பொதுக்கூட்டத்தில்    பேசியுள்ளதாக படித்துள்ளேன். இது பற்றிய உங்களுடைய எண்ணம் என்ன?

 

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். காந்தியையோ பெரியாரையோ பெரிதும் மதிப்பதால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. இப்படி யாரையாவது ஒருவரைத் தூக்கிப்பிடித்துப் பக்தி செலுத்தும் மூடர்களில் ஒருவனாக என்னைப் பார்த்தீர்களானால் அதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் மிகப் பெரிய அவமானம். இவர்களிடம் நல்ல சிந்தனைகள், சிறந்த அணுகல்முறைகள் நிறைய உள்ளன; இவர்கள்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்மைத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள், அவர்களின் அரசியலே இன்றைக்குப் பொருத்தமானது என்று மட்டுமே நான் சொல்கிறேன். அந்த வகையில் மட்டுமே அவர்களை நான் கொண்டாடுகிறேன். இவர்கள் எல்லோரிடமும் எனக்கு விமர்சிக்க வேண்டிய அம்சங்களும் உண்டு. பெரியார் தமிழ் இலக்கியங்கள் பற்றிக் கூறியவற்றில் எல்லாம் பல சிக்கல்கள் உண்டு. அந்தமாதிரி அம்சங்களில் அவரை ஒரு scholar ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது பங்களிப்புகளையும் அவரையும் நாம் கொண்டாடுவதற்கும் வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு. தவிரவும் ஒரு நீண்ட காலம் அரசியலில், ஆய்வுலகில் வாழந்தவர்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை வைத்து மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது, பாரதியை இப்படிச் சொன்ன பெரியார்தான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தனது ‘குடிஅரசு’ இதழில் முதல் பக்க முகப்புக் கவிதையாக பாரதி பாடலை வெளியிட்டுவந்தார். நானும் சிவத்தம்பியும் எழுதிய நூலில் அதைக் குறிப்பிட்டுள்ளோம். காந்தி பற்றியும் பெரியார் அப்படி முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லியுள்ளார். ஒரு காலத்தில் ‘காந்தி பொம்மை உடைப்பு’ போராட்டங்களை நடத்தியவர் காந்தி கொல்லப்பட்டபோது கண்ணீர் விட்டார். இந்த நாட்டுக்கு காந்திதேசம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றார்.

 

  1. காந்தி, நேரு இவங்களுடைய கருத்தாக்கங்கள் இன்றைக்கு மறுவாசிப்பு பண்ணக்கூடிய ஒரு காலகட்டமாகவும், அவர்களை வேறு விதமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த நிலை மாறி     அவர்களின் கருத்துகள் தேவை என்கிற மாதிரி சூழல் தெரிகிறது. இது சரிதானா? இது பற்றிய தங்களின் கருத்து என்ன?

 

மிகவும் வரவேற்கத் தக்க போக்கு இது. அருந்ததி ராய் போன்ற அரை வேக்காடுகள் இவர்கள் பற்றி வைக்கும் அசட்டுத்தனமான எதிர் மதிப்பீடுகளை இன்று ஆய்வாளர்கள் யாரும் பொருட்படுத்துவதில்லை. ரால்ஃப் மிலிபான்ட் ஒரு முக்கியமான நவ மார்க்சிய அறிஞர். நானெல்லாம் மிக விரும்பிப் படித்த ஒருவர். அவரது இரு மகன்களும் பிரிட்டிஷ் லேபர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். அவர்களில் ஒருவர் லேபர் கட்சி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து பின் பிரதமர் பதவிகக்குப் போட்டியிட்டுத் தோற்றார். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது நேர்காணல் ஒன்று பத்திரிகைகளில் வந்தது. அதில் ஒரு கேள்வி. “உங்கள் தந்தை ஒரு பெரிய மார்க்சிய அறிஞராச்சே. உங்களுக்கு அவர் என்ன மாதிரி புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்?”. அவர் சற்று யோசித்துவிட்டுச் சொல்வார்: “நேருவின் உலக சரித்திரம் முதலான நூல்கள்”.

 

நான் இதைப் படித்தபோது ஒரு கணம் மெய்சிலிர்த்தேன். நேருவின் இந்த நூல்களில் இப்போது சில வரலாற்றுப் பிழைகளும் இருக்கக் கூடும். இருக்கின்றன. சிலர் சுட்டிக்காட்டியும் உள்ளனர். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை அவை. வரலாறு எழுதியல் (histriography)  மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. நீலகண்ட சாஸ்திரியாரின் நூல்கள் பல இன்று outdated. ரொமிலா தாபர் முதலான அறிஞர்கள், கோசாம்பி ஆகியோரின் எழுத்துக்கள் ஆகியவற்றிலிருந்து இன்றைய சஞ்சய் சுப்பிரமணியனின் அணுகல்முறைகள் வேறுபடுகின்றன. அது அப்படித்தான். நாளாக நாளாகப் பல புதிய வரலற்ருத் தரவுகள் கிடைக்கின்றன. இவற்றின் ஊடாக வரலாறு குறித்த பார்வையும் மாறுகிறது.

 

நேரு ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அல்ல. அவர் அந்தத் துறையில் ஒரு lay man எனலாம். அத்தோடு அவர் சிறையில் இருந்தபோது எழுதியவை அவை. எந்தப் பெரிய அளவு reference களும் இல்லாமல் எழுதப்பட்டவை அவை. பிழைகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும் அந்த நூல்களை ஏன் மிலிபான்ட் போன்ற நவீன அறிஞர்கள் தன் மகனுக்குப் படிக்கப் பரிந்துரைத்தனர்? என்னைப் பொறுத்த மட்டில் வரலாற்று நூல்களில் பொதிந்துள்ள வரலாறுகளைக் காட்டிலும் வரலாறு குறித்த அவற்றின் பார்வையே முக்கியம். வரலாற்றை எப்படிப் பார்ப்பது. ஒரு வரலாற்றுச் சான்றை நீ எப்படி அணுகுகிறாய், அதை எப்படி நீ interpret பண்ணுகிறாய் என்பதுதான் முக்கியம். இந்தியாவின் ஒரு பன்மைப் பாரம்பரியத்தை, அமார்த்யா சென் சொல்வதைப்போல ஒரு argumentative வரலாற்று வளர்ச்சியைச் சொல்வன அவரது அணுகுமுறைகள்.

 

காந்தியைப் பொருத்தமட்டில் அவர் குறித்து இங்கு பரப்பப்பட்டுள்ள மூடக் கருத்துக்கள் அறிவு வளர்ச்சியைத் தடுத்து அழிப்பவை. காந்தி குறித்து ஒரு மிகப் பெரிய அறிவுப் பாரம்பரியம் இன்று உலகெங்கிலும் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதமான ஆங்கில நூல்களையும் கட்டுரைகளையும் நீங்கள் காணமுடியும். அவற்றை எல்லாம் நாம் வெறுத்து ஒதுக்குவதுபோல அறியாமையும் மௌடீகமும் ஏதுமில்லை.

 

  1. தங்களிடம் காந்தியைப் பற்றி முன்னால் இருந்த பார்வையும் இப்போது புதிய பார்வையும் என்ன மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது? இது வருவதற்கான காரணமென்ன-?

 

நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். எப்போதும் நான் திறந்த மனத்துடன் எல்லாவற்றையும் அணுகுகிறேன். நினைவிற் கொள்ளுங்கள் திறந்த மனதே தெளிந்த அறிவிற்கு வழி. உங்களை நீங்கள் மூடிக் கொள்வது உங்களின் அறியாமை தொடரவே வழி வகுக்கும். எல்லாவற்றையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் மேன்மையுறுவீர்கள். அச்சம் அறியாமையின் இன்னொரு பக்கம்.

 

  1. நேரு காலத்துக்கு பிறகு அரசியலில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களை அவருக்கு பின் வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள் ஆரோக்கியமான போக்கில் கொண்டு சென்றிருக்கிறார்களா? அது இன்றைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

 

ஒன்றை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன். இதையெல்லாம் சொல்வதால் நேருவை நான் அப்படியே விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறேன் என்பதல்ல. காஷ்மீர் குறித்த பிரச்சினையிலும், எல்லைப் பிரச்சினையில் சீனாவை அவர் அணுகிய விதத்திலும் அவரை நாம் ஏற்க முடியாது. திட்டமிட்ட பொருளாதாரம் (planned economy), உலக அரசியலில் அணிசேராக் கோள்கை (Non Alligned Movement), அண்டை நாடுகளுடனான உறவுகளில் பஞ்சசீலம், நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தைக் காட்டிலும் தொழில்வளர்ச்சிக்கு, குறிப்பாகப் பொதுத்துறைக்கு (Public Sector)) முக்கியத்துவம் அளித்தல், உள்நாட்டு அரசியலில் inclusiveness இவைதான் நேரு. பாபர் மசூதிக்குள் இந்துத்துவவாதிகள் ராமர் சிலையைக் கொண்டு வைத்தபோது அவர் துடித்த துடிப்பு நமக்குக் கண்ணீர் வரவழைக்கக் கூடியது. இது தொடர்பான அவரது கடிதம் ஒன்றை மொழிபெயர்த்தபோது நான் கண்னீர் விட்டிருக்கிறேன். முஸ்லிம்கள் கூட அன்று அது குறித்து அத்தனை கவலைப்படவில்லை. அப்படியானால் அவரே அன்று அதைத் துக்கி எறிந்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம்.. அங்குதான் அவரை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு ஜனநாயகவாதி. உ.பி முதல்வர் வல்லப பந்த்துக்கு அவர் கடிதங்கள் எழுதி அப்படி வற்புறுத்தினார். அதற்கு மேல் அவர் மாநில உரிமையில் தலையிட விரும்பவில்லை. ஆனால் அவருடன் இருந்தவர்களும், அவர் மகள் உட்பட அந்தப் பண்புகளையும் நோக்குகளையும் தொடரவில்லை. அவர் கண்முன்னே தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள அமைச்சரவையை அவர் மகள் கவிழ்த்தார்.

 

இன்றைய நரேந்திர மோடி நேருவின் எதிர் முனை. நேர்விடமிருந்து அனைத்து அம்சங்களிலும் நூறு சதம் எதிரானவர்.

 

  1. உலகத்தில் கிருத்துவத்தை மையமாக கொண்டு ஒரு பகுதியினரும், அரபு உலகம் இஸ்லாத்தை மையமாகவும் கொண்டியங்கும் சூழலில், இந்தியாவில் பெருவாரியான மக்கள் இந்து சமூகத்துக்குள்ள இருக்கும்போது அப்படி  ஒரு பார்வை வந்த என்ன தப்பு? உங்களுடைய பேச்சிலும் எழுத்திதும் வேற மாற்றம் தெரியறமாதிரி இருக்கே அதை கொஞ்சம் விளக்க முடியுமா?

 

மேற்குலகோ இல்லை அரபுலகோ நாம் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய மாதிரிகள் அல்ல. சொல்லப்போனால் அவை நாம் எந்த வகையிலும் பின்பற்றக் கூடாத எதிர் மாதிரிகள். நமது நாடு ஒற்றை மதம் உள்ளதாக, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி என்பதாக என்றைக்குமே இருந்ததில்லை. வேதங்கள் செழித்திருந்த போதுதான் பவுத்தமும், சமணமும், ஆஜீவகமும் ஓங்கி இருந்தன. சஸ்கிருதத்தில் வேதங்கள் எழுதப்பட்டபோதுதான் புத்தரும் மகாவீரரும் பிராகிருதம், பாலி முதலான அடித்தள மக்கள் மொழிகளில் பேசித் திரிந்தனர். இங்கு வந்த முகலாயர்களும், பிரிட்டிஷாரும் இந்து மதத்தை அழிக்க முயன்றதாகச் சொல்லப்படுவது அபத்தம். முன்னூறு ஆண்டு காலம் சகல அதிகாரங்களுடனும் கோலோச்சிய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெறும் இரண்டு சதம் பேர்தான் கிறிஸ்தவத்துக்கு மாறினர். ஆதுவும் ஆட்சி அதிகாரத்தின் ஊடாக அல்ல. மிஷனரி நடவடிக்கைகளின் ஊடாகத்தான்.

 

எழுநூறு ஆண்டுகள் இங்கு ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்களின் காலத்தில் நடந்த மதமாற்றங்கள் எதுவும் அவர்கள் வலுவாக ஆட்சி செலுத்திய பகுதிகளில் நடைபெறவில்லை. இன்றைய பாகிஸ்தானிலும் (மேற்கு பஞ்சாப்), இன்றைய வங்க தேசத்திலும் (கிழக்கு வங்கம்) உறுதியான முஸ்லிம் ஆட்சிகள் நடைபெற்றதில்லையே. முஸ்லிம்கள் ஆண்ட மத்திய இந்தியாவில் ஒப்பீட்டளவில் முஸ்லிம் மத மாற்றங்கள் குறைவு. முஸ்லிம் மதப் பரவல் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்துள்ள ரிச்சர்ட் ஈடன், ஃப்ரான்சிஸ் ராபின்சன் முதலானோர் நீர்ப்பாசனம், விவசாயம் முதலான தொழில்நுட்பப் பரவல்கள், சுஃபி ஞானிகளின் ஊடாட்டம் ஆகிவற்றை இஸ்லாமியப் பரவலுக்கான முக்கிய காரணங்களாகச் சொல்கின்றனர். இந்து மதமும் ஒற்றைத் தன்மையானதாக இங்கு இருக்கவில்லை. அதற்குள்ளேயே பல போக்குகளும் இருந்தன. சித்தர்கள் இன்றைய இந்து மதத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கினர். இப்படி வட நாட்டிலும் நிறையச் சொல்ல முடியும். இதுதான் நம் பாரம்பரியம் இதைத்தான் argumentative Indian என்றெல்லாம் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதை விட்டுவிட்டு ஒற்றை அடையாளத்துடன் கூடிய மேற்கத்திய மற்றும் அரேபிய மாதிரிகளை ஏன் பின்பற்ற வேண்டும்?

 

  1. நீதிமன்றம் எத்தனை உறுதியான தீர்ப்புகளை தந்தாலும் மாநில உரிமைகளில் மக்கள் உரிமைகளில் தங்கள் அரசியல் அழுத்தங்களினால் அவை நிராகரிக்கப்படுகின்ற சூழலை கண்டு வருகிறோம்? இந்தப்போக்கு சரியானது தானா?

 

நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் எல்லாமுமே சரியானவை என முதலில் நாம் கருத வேண்டியதில்லை. எதையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அரசுகளிடம்தான் உள்ளன. அவற்றை நிறைவேற்றும் விருப்புறுதி அவற்றுக்கு இல்லாத போது நாம்தான் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லையே என்றால் நாம் அளிக்கும் அழுத்தங்கள் போதவில்லை என்றுதான் பொருள்.

 

  1. கருத்துகளின் வழி இன்றைக்கு  சமூகம் முரண்படுகின்ற சூழலை காணமுடிகிறது. இது நடுநிலை கருத்துகளினால் தானா–? நடுநிலையாளர் என்றால் ஒரு சார்பு பேச்சு வரக்கூடாது நீங்கள் நடுநிலையாளாரா?

 

இந்தியா போன்ற ஒரு மிகப் பெரிய நாட்டில் பல கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். பல கருத்துக்கள் நிலவும்போது கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் தவிர்க்க இயலாதவை. இது ஒரு வகையில் ஆரோக்கியமானதே. இது குறித்து நாம் கவலைப் படுவது தேவையற்றது. பல கருத்துக்களை, அவை கருத்துக்களாக இருக்கும் வரைக்கும் அவற்றை பொறுமையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கு வேண்டும். எல்லாவற்றிற்கும் போலவே கருத்துச் சுதந்திரத்திற்கும் எல்லைகள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மற்றபடி நடுநிலை, மதச்சார்பின்மை என்பதை எல்லாம் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஏற்காத நிலை அல்ல. அதாவது நாத்திகம் அல்ல. மதச்சார்பின்மைக்கு ஒரு மிகச் சிறந்த எருத்துக்காட்டும் காந்திதான். அவருக்கு இந்துமதத்தின் மீது மிக உறுதியான நம்பிக்கை இருந்தது. ஆனால். “என் மதம் எப்படி இன்னொருவரின் மதமாக இருக்க முடியும்?” என்றார் அவர். நபிகள் சொன்னது போல அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதுதான் மதச்சார்பின்மை. நான் ஒரு மத நம்பிக்கையைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களின் நம்பிக்க்கையை முழுமையாகக் கடைபிடிக்க அனுமதிப்பதுதான் மதச் சார்பின்மை. அதேபோலத்தான் ‘நடுநிலை’ என்பதும். நடுநிலை என்பது கருத்துக்களே இல்லாத நிலை அல்ல. எனக்கு ஒவ்வொன்றின் மீதும் ஒரு கருத்துண்டு. ஆனால் என் கருத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்ரையும் தீர்மானிக்க வேண்டும், மற்றவர்களும் என் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்பது நடுநிலை அல்ல.

 

  1. ஒருவன் மீது கொண்ட ஈர்ப்பு என்பது அவர் மீதான விமர்சனங்களால் கவரப்படுவதுதானே?  நீங்கள் கொண்டாடுகின்றவர்களை எந்த விமர்சனத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?

 

ஒருவர் மீதான ஈர்ப்பு அவர் மீதான விமர்சங்களால்தான் ஏற்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எதிர்மறை ஈர்ப்பு மட்டுமல்ல. உடன்பாட்டு ஈர்ப்பும் உண்டுதானே.

 

26.தங்களின் விமர்சனங்கள் ஒரு கட்டிப்போடப்பட்ட மனைநிலையை வாசிப்பவனுக்கும் வழங்கும் ஆனந்தம் தருவதாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உங்கள் மீதான விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? அல்லது எப்படி வைக்க விரும்புகிறீர்கள்?

 

விமர்சனத்தையும் அவதூறையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நான் யாரையும் பொய்யாக அவதூறு செய்ததில்லை. ஒரு வேளை மனம் புண்படும்படிக்கூட பேசி இருக்கலாம். ஆனால் பொய்களின் அடிப்படையில் நான் பேசியதில்லை. ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். உங்கள் ஊரின் ஒரு முக்கிய எழுத்தாளர் ஜெயமோகன். அவரை ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர் எனவும், அவரது விஷ்ணுபுரம் நூல் ஆர்.எஸ்.எஸ் கடைகளில் வைத்து விற்கப்படுகிறது எனவும் நான் எழுதியுள்ளேன். இது ஒரு உண்மைத் தகவல். அவரது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்சிற்கு உவப்பானவை என்கிற என் விமர்சனத்திற்குச் சான்றாக இதை நான் முன்வைத்தேன்.

 

அவர் ஆற்ரிய எதிர்வினை என்ன தெரியுமா? 2008ம் ஆண்டில் “அரசியல் கைதிகள் விடுதலைக்கான இயக்கம்” என்கிற மாஓயிச ஆதரவு மனித உரிமை இயக்கம் ஒன்று பேரா. அமித் பட்டாசார்யா அவர்களின் தலைமையில் காஷ்மீருக்கு ஒரு உண்மை அறியும் குழுவை அனுப்பியது.  என் சொந்தச் செலவில் அந்தக் குழுவில் நான்பங்கு பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பணம் வாங்கினேன் என எழுதினார். என்னைக் கடுமையாகத் திட்டுபவர்களும் கூட என் நேர்மையைச் சந்தேகிப்பதில்லை. அவர் அப்படிச் சொன்னார். நான் மறுத்தபோதும் திரும்பச் சொன்னார். நான் அவர் மீது வைத்தது விமர்சனம். அவர் என் மீது வைத்தது அவதூறு. எல்லாவற்றையும் போலவே விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தீர்மானிப்பதும் உண்மைதான். சமீப காலமாக அவர் என்மீது இப்படியான அவதூறுகளை வைப்பதை நிறுத்தியுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 

27.மாணவர்கள் மத்தியில் சமூகப்பொறுப்பு குறைந்துள்ளதாக  தங்களின் குற்றச்சாட்டு ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. சமூகப்பொறுப்பு என்பதற்கு   எதையாவது உங்கள் மனதில் பிம்பமாக வைத்திருக்கிறீர்களா?

 

குற்றச்சாட்டு என்பதில்லை. ஒரு observation அவ்வளவுதான். இன்றைய கல்வி முறையே அப்படியாகிவிட்டது. சக மாணவர்களைத் தோழர்களாக எண்ணாமல் போட்டியாளர்களாகப் பார்க்க வைக்கும் கல்வி முறை அது. தொடர்ந்து தேர்வுகளுக்கு ஆட்படுத்தும் இந்த செமஸ்டர் முறை, internal assessment, campus interview என்பன சொன்னதைச் செய்யும் ‘ரோபோ’ க்களாக மாணவர்களை மாற்றிவிட்டன. சமீபத்தில் சென்னையில் People’s Watch ஏற்பாடு செய்த ஒரு மாணவர் சந்திப்பில் எப்படி தனியார் பொறியியல் கல்லூரிகளில் அடியாட்கள் வைத்து மாணவர்களை அடிப்பதற்கென dark room அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியெல்லாம் மாணவர்கள் சொன்ன போது அங்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். Overspecialisation மற்றும் கலைப்பாடங்களின் (humanities) புறக்கணிப்பு எல்லாமும் மாணவர்களின் சமூகப் பொறுப்பை அழித்து வருகின்றன என்பது என் கருத்து. எல்லோருக்கும் இளம் வயதில் சுய முன்னேற்றம் குறித்த ஒரு பிரக்ஞை இருக்கும்தான். ஆனால் அது வெறும் சுய நலமாக மாறிவிடும்போது சமூகப் பிரக்ஞை குன்றியவர்களாக அவர்கள் ஆகிவிடுகின்றனர்.

 

  1. புதிய கல்விக்கொள்கை குறித்த 50க்கம் மேற்படட கட்டுரைகள் வாசித்துவிட்டேன். அவை ஒரு முடிவுக்கு வராத தன்மையை தருவதாகவே இருந்தன. பொதுவுடமைகாரர்களின் கருத்தியல்போடு ஒன்றிய கருத்தை வெளிப்படுத்தி வரும் தாங்கள் தீர்வாக எதையாக வைத்திருக்கிறீர்கள்?

 

புதிய கல்விக் கொள்கை பற்ரிய என் நூல் வந்து மூன்று மாதங்களாகின்றன. 1986 முதல் நான் கல்விக் கொள்கைகளை விமர்சித்து வருகிறேன். 1986 ராஜிவ் காலத்திய கொள்கை two parallal stremes எனும் பெயரில் கல்வியைப் பெரிய அளவில் சுய நிதி நிறுவனங்களுக்குத் திறந்து விட வழி வகுத்தது. இலவசக் கல்வி, அருகாமைப் பள்ளிகள் முதலான கருத்தாக்கங்கள் அத்தோடு ஒழிந்தன. தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் என கல்விக் கொள்ளை தொடங்கியது. ஒரு மருத்துவ மேற்படிப்புக் கல்லூரியில் இடம் வாங்க 5 கோடி ரூ தேவை என்கிற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. இப்போது மோடி அரசு உருவாக்கியுள்ள கொள்கை GATS ஒப்பந்தத்திற்கு நமது கல்வியை இயைபாக்கும் முயற்சியாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இனி வெளிநாடுகளின் தரக்குறைவான பல்கலைக் கழகங்கள் இங்கே கடைவிரிக்கப் போகின்றன. இது இன்னும் பெரிய கேடு. இதற்குத் தீர்வு சொல்வதெல்லாம் அத்தனை எளிதல்ல. இது வெறும் கல்வி சார்ந்த பிரச்சினை இல்லை. உலக அளவில் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்டுள்ள அறக்கேடான மாற்றங்களின் விளைபொருள் இது.

 

29.இன்றைய நவீனமாக்கப்பட்ட காலத்தில் தூரங்கள் என்பது தூர்ந்து போனதாக, எல்லைக்கோடுகள் அழியும் சூழலில்   தேசப்பற்றை பரந்துப்பட்ட அளவில் பார்க்க வேண்டுமா?  தன்னைச்சுற்றி மட்டும் பார்க்கும் தேசப்பற்று போதுமானதா?

 

தந்தை பெரியார், மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், அண்ணல் அம்பேத்கர் எல்லோரும் ஒன்றுபடும் புள்ளி ஒன்று உண்டெனில் அது தேசபக்தியை வெறுப்பதுதான். “தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடசிப் புகலிடம்”  என்பதை அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளதை நீங்கள் இணையத்தில் காணலாம். டால்ஸ்டாயின் இது தொடர்பான கட்டுரையைத் தயவுசெய்து படித்துப் பாருங்கள். தேசபக்தி மட்டுமல்ல, பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னதுபோல, “தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்” இவை நான்கும் மனிதர்களை உரிமைகளின்பால் நாட்டமற்ற மிருகங்களாக ஆக்கும்.. தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று, சாதிப்பற்று இந்நான்கையும் ஒன்றாக்கி, இவை சுயமரியாதைக்கு இழுக்கு எனச் சொன்னதைத்தான் பெரியார் நமக்களித்துச் சென்ற ஒப்பற்ற சிந்தனையாக நான் கருதுகிறேன்.

 

  1. சிற்றிதழ் சார்ந்த செயல்பாட்டாளர்களோடு தாங்கள் நெருக்கம் வைத்ததாக தெரிகிறது. இன்றைய சிற்றிதழ் சார்ந்த போக்கு எப்படியிருக்கிறது?

 

இன்று அச்சு மற்றும் விநியோகங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எலக்ட்ரானிக் புரட்சி பெரிய இதழ்களையே விழி பிதுங்க வைத்துவிட்டது. சிறுபத்திரிகைகள் பற்றிக் கேட்கவா வேண்டும். சிறு பத்திரிகைகள் என்பன இன்று அழிந்து வரும் ஒரு இனம். எல்லாவற்றையும் இத்தனை சொற்களுக்குள் ‘ட்வீட்’ பண்ண வேண்டும் எனச் சொல்லும் காலம் இது. பள்ளித் தேர்வுகளும் கூட multiple choice எனும் நிலையில் ‘டிக்’ பண்னி முடிப்பதாக மாறிவிட்டது. analtycal ஆக ஒரு முடிவைத் தருவிப்பது என்பதெல்லாம் காலம் கடந்த வழமைகள் ஆகிவிட்டன. இவை, வரவேற்கத்தக்க மாற்றங்கள் என நான் சொல்லவில்லை. அதே நேரத்தில் ‘எல்லாம் கெட்டுப் போச்சு’ எனப் புலம்பிக் கொண்டிருக்கும் பழைய தலைமுறை ஆட்களாகவும் நாம் ஆகிவிடக் கூடாது. இந்த மாற்றங்களின் ஊடாகத்தான் நாமும் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த நேர்காணலைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். இத்தனை விரிவான உரையாடல் ஒன்று இன்றைய ஊடகங்களில் சாத்தியமா? தன்னந் தனியாக இப்படி ஒரு சிற்றிதழை இத்தனை காலம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். இத்தனை விரிவாகப் பேச வாய்ப்பளித்த உங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பத்துக்கும், உங்களின் வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *