உடைபடும் மவுனங்கள்: ஒழுங்கமைத்தல் -மீறல் – கி.ரா-வின் பாலியல் கதைகள்

நுனிக்குறிப்புகள்

1) ‘தினமணி’க்காக தலித் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்துத் தருவது தொடர்பாக அந்த நாளிதழின் (அப்போதைய) ஆசிரியர் திரு. மாலனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது  அவர் ஒன்றைக் குறிப்பிட்டார் – எத்தகைய கதைகளை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஒன்று மட்டும் முக்கியம். எங்கள் கிராமத்தில் ”நரகல்” என்ற சொல்லைக்கூட வாயால் உச்சரிக்கமாட்டார்கள். நெருப்பாய்க் கிடக்கு அந்தப் பக்கம் போகாதீங்க என்று தான் சொல்லுவார்கள். சொற்கள் விசயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்தால் நல்லது – வெளிப்படையாகச் சொல்வதானால் ‘அடித்தள மக்க்ள் இலக்கியம்’ என்ற பெயரில் பீ, மூத்திரம், மசுறு… என எழுதத் தொடங்கி விடாதீர்கள் என்பது மாலனின் வேண்டுகோள். 

2) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கி.ரா. வின் பாலியல் கதைகள் தொடர்பாகக் குடந்தையில் நடத்த இருந்த கருத்தரங்கைப் பற்றிச் சொன்னேன். மாலனால் இதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்ச் சமூகம், தமிழ்ப்பண்பாடு ஆகியவை குறித்து ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் கி.ரா.வின் தொகுப்பு என்கிற கருத்துப்பட மொழிந்த மாலன் * ‘தமிழ்ச் சமூகம் ஒரு Polyandrous Society என்கிற எண்ணத்தை இத்தகைய தொகுப்பு ஏற்படுத்திவிடும்” என்றார். நன்கு கவனியுங்கள் Polygamous Society என அவர் சொல்லவில்லை. ”பல கணவர்களை மணந்து கொள்ளும் பெண்கள் உள்ள சமூகம்” என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்கிறார். ஆண்கள் அப்படிப் பல மணைவியரை ;வைத்துக் கொண்டால்’ பிரச்சினை இல்லையாம். சில நேரங்களீல் அது ஒரு பெருமையும் கூட. ஒவ்வொரு சமூகத்தைப் பற்றிய வரையறையிலும் அச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கற்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்வார்கள். தமிழின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரும், மிகப்பெரிய எழுத் தாளர்களில் ஒருவருமான மாலனின் தமிழ்ச் சமூகம் பற்றிய இந்தக் கருத்தாக்கம் கவனத்திற்குரியது. 

3) எனது மூன்று அனுபவங்கள் : (அ) எனது தந்தையின் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த திரு. சின்னராசு வேலைக்கு வராத தினங்களில் அவரை அழைத்து வரச்சொல்வார் அப்பா. நொண்டி டைலர்  (அனைவராலும் அவர் அப்படித்தான் அழைக்கப்படுவார் என்பதால் அப்படியே குறிப்பிட்டுள்ளேன்.) வீட்டில் இருப்பார் சின்னராசு. இருவருக்கும் ஒரே மனைவி. இது கள்ள உறவு அல்ல. ஊரறிந்த உறவு. பழகுதற்கினிய அந்த அம்மையார் வீட்டில் டீ குடித்து விட்டு சின்னராசுவை அழைத்து வருவேன். (ஆ) கீழ்த் தஞ்சை கிராமம் ஒன்றில் வசிக்கும் என் தங்கை வீட்டில் ஒரு பெண் வேலை செய்கிறார். அவர் கணவர் மரமேறுபவர். அவர்களுக்கு ஒரு மகள். மாதந்தோறும் அவர் ஊதியத்தை வாங்கிக் கொள்வதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக வாங்கிக்கொண்டு சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள தனது முதல் கணவர் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்த அம்மை. இதுவும் ரகசிய உறவல்ல. (இ) நண்பர் வேல்சாமி கடையில் அமர்ந்திருந்தேன் நண்பருக்குத் தெரிந்த சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் அவசரமாக வந்து ஐந்நூறு ரூபாய் கடன் கேட்டார். நண்பர் காரணம் வினவினார். என் பொண்டாட்டியின் புருஷன் செத்துப் போயிட்டான்னு சேதி வந்திருக்கு. திருக்காட்டுப்பள்ளிக்குப் போயி அடக்கம் பண்ணிட்டு வரணும் எனப் பதில் வந்த்து.

4) திரைப் படங்களின் இரட்டை அர்த்த வசனங்களை நாம் அறிவோம். தெரு முனையில் நடைபெறும் அரசியல் கூட்டங்கள் பல வற்றில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேலி செய்யும் முறையில் வரையறுக்கப்பட்ட இலக்கணங்கள் மீறப்படுவதைக் கவனியுங்கள். கிராமப் புறங்களில் நடத்தப்படும் ஸ்பெஷல் நாடகங்களில் முதலில் தோன்றும் பபூன் சுமார் அரை மணி நேரம் ஒரு கதை சொல்வார். மிக வெளிப்படையான பாலியல் விசயங்கள்  மற்றும் தொந்தி பெருத்த கந்துவட்டிக்கார முதலாளி ஒருவர் மலங்கழித்தல் போன்றவை  அக்கதைகளில் தவறாமல் இடம் பெறுவதும் அதனை மக்கள் விழுந்து விழுந்து சிரித்து இரசிப்பதும் குறிப்பிடத்தக்கன. 

5) வீடுகளில், அலுவலகங்களில், வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில், மாணவரிடத்திலெல்லாம் பாலியல் கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் கி.ரா. இவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்கும்போது இத்தனை எதிர்ப்பு ஏன்?                                  

                         ஒழுங்கமைத்தல் – மீறல் – கி.ராவின் பாலியல் கதைகள்  

1. ஒழுங்கமைத்தல் 

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய நிறுவனங்களின் தோற்றத்தோடு, அதிகாரம் சில மையங்களில் குவிக்கப்பட்ட, ஏற்றத் தாழ்வான தந்தை வழிச் சமூக அமைப்பு இறுக்கமடைகின்றது. சகல மட்டங்களிலும் ஒழுங்குகள் கற்பிக்கப்பட்டு இறுக்கமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றன. சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவ விழையும் – பொருளாயத உற்பத்தியிலும் அரசதிகாரத்திலும் முன்னணியில் நிற்கக்கூடிய – ஆதிக்கக் குழுவானது ஏதோ ஒரு வகையில் நிலவும் சமூகம் ஒழுங்கற்று இருக்கிறது என்கிற கருத்தை முன் வைக்கிறது. அத்தகைய ஒழுங்கற்ற நிலைமையை உடனடியாகக் கட்டுக்குக் கொண்டு வருவதன் மூலமே நிலவும் சமூக அமைப்பின் இருப்பை உறுதி செய்ய முடியும் என்கிற கருத்தை அது சமூக உறுப்பினர்கள் மத்தியில் பதிய வைக்க முயல்கிறது. இந்த முயற்சியில் அது பெறுகிற வெற்றி என்பது சமூகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதன் நியாயப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த நியாயப்பாடு என்பது சமூகத்தை ஒழுங்கமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அக்குழுவிற்கு வழங்கிவிடுகிறது. இத்தகைய ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் என்பன ஒரு சேர பொருளாயத உற்பத்தியிலும் (எ-டு : பாசன அடிப்படையிலான விவசாயமயமாக்கல்), அரசு அதிகாரச் செயற்பாடுகளிலும் எ.டு: சீறூர் மன்னர்களை வெல்லுதல், வரி செலுத்துதல் உட்பட்ட குடிமைக் கடமைகளை மீறாதவர்களாக மக்களை ஆக்குதல்), பண்பாட்டுத் தளத்திலும் (எ.டு : சாதி, சடங்கு, மத ரீதியான கட்டுப்பாடுகளை உருவாக்குதல்) மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்றையொன்று வற்புறுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. 

புதிய பொருளாயத ஒழுங்கமைவுக்குரிய தன்னிலைகளாக மொத்தச் சமூக உறுப்பினர்களையும் ஆக்குகிற பண்பாட்டு அரசியல் நடவடிக்கைகளில், மத நடவடிக்கைகள் மொழிச் செயற்பாடுகள்,  தத்துவ/சட்ட உருவாக்கங்கள், இலக்கிய உற்பத்தி போன்றவை அடங்கும். இதற்குரிய வகையில் ஒழுக்க மதிப்பீடுகள் உருவாக்கப்படும். ஒழுங்கமைக்கப்பட வேண்டிய சாதாரண மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்கள், உணவு, மொழி, வழிபாட்டு முறைகள், பாலியல் வழமைகள் முதலியன குற்றம் சார்ந்தவையாய் (எ.டு: கள் புலால் உண்ணல், கொடுந்தமிழ் பேசுதல், அறுத்துக் கட்டுதல், நடுகல் வணங்குதல்), அசுத்தமானவையாய், அருவருக்கத் தக்கதாய் வரையறுக்கப்படும். இத்தகைய குற்ற உணர்ச்சியினடிப்படையில் சமூகத்தின் சகல பிரிவினருக்கும் சகல மட்டங்களிலும் ஒதுக்கல்களை வரையறுத்து அவற்றை மீறுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். உடல், மொழி, அரசியல் என்கிற தளங்களில் இந்த ஒடுக்குமுறைகள் வெளிப்படும். 

இவ்வாறு அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி கலாச்சார நடவடிக்கைகளும் அதிகாரபூர்வமாக்கப்  படுகின்றன. இன்னின்னவற்றை, இந்த மொழியில், இப்பபடித்தான் பேசவேண்டும்;  இன்னின்ன கடவுள்களை இன்னின்ன முறைகளில்தான் வணங்க வேண்டும் ; இன்னின்ன திருவிழாக்கனை, இன்னின்ன நாட்களில், இன்னின்ன முறைப்படிதான் கொண்டாட வேண்டும்;  இன்னின்ன மாதிரியே உடுக்க வேண்டும்; உண்ண வேண்டும்……… என்பதெல்லாம் அதிகாரபூர்வமாக்கப் (Official Culture) படுகின்றன. இந்த அடிப்படையில் இறுக்கமான இலக்கண வரையறைகள் உருவாக்கப் படுகின்றன(1). சங்கமருவிய கால நூற்களான தொல்காப்பியமும் அறநூற்களும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். செந்தமிழ், கொடுந்தமிழ் என மக்கள் பேசும் மொழியை அதிகாரப்பூர்வமானது X அதிகார பூர்வமற்றது எனப் பிரித்ததோடன்றி யாரைப் பாட வேண்டும், எதைப் பாட வேண்டும், எப்படிப்பாடவேண்டும், திருமண ஒழுங்குகள், விலக்குகள் (கைக்கிளை | பெருந்திணை), அவையில் சொல்லக் கூடியவை, சொல்லக் கூடாதவை என்பதெல்லாம் வரையறுக்கப் படுவதைக் காணலாம் (2).

அவையில் சொல்லக் கூடாதவை பற்றி தொல்காப்பியத்தின் கிளவியாக்கம் மற்றும் எச்சவியல் சூத்திரங்களும் அவற்றிற்கான உரையாசிரியர்களின் உரைகளும் இங்கே குறிப்பிடத் தக்கன. அவையில் கிளவி, மறைத்தனர் கிளத்தல், மங்கல மரபு, இடக்கரடக்கல் போன்ற கருத்தாக்கங்கள் மூலம் அவையில் எவ்வெவற்றைச் சொல்லலாம், எவ்வெவற்றைச் சொல்லக்கூடாது, தவிர்க்கப் பட்டவற்றைச் சொல்ல வேண்டுமாயின் எப்படிச் சொல்ல வேண்டும் என்பவை வரையறுக்கப்படுகின்றன. “நன் மக்களால் கூறப்படாத சொல்லை கிடந்தவாறே சொல்லற்க. பிறிது வாய்ப்பாட்டால் மறைத்துச் சொல்க” என்பார் இளம்பூரணர் (3). “செத்தார்’ என்று சொல்லாதே,  ‘துஞ்சினார்’ என்று சொல் ‘சுடுகாடு’ என்னாதே, ‘நன்காடு’ எனச் சொல். “சூத்து கழுவி வந்தேன், எனச் சொல்லாதே. ‘கால் மேல் நீர் பெய்தூம்’  ‘கண் கழீ வருவதூம்’ என்று சொல். சிவந்த சூத்துள்ள மாடு என்னாதே. செம்பின் ஏற்றை எனச் சொல், பெண்ணுருப்பைக் கருமுகம் என்று சொல், எச்சிலை ”வால் எயிறு ஊறிய நீர்” என்று சொல். யாட்டுப் புழுக்கையை ’ஆப்பீ’ எனச் சொல்லலாம் ஆனால் மனிதப் பீயைச் சொல்லாதே. இவை அவைக்களத்துப் பட்டாங்கு கூறின் குற்றம் பயக்கும் என்பார் தெய்வச்சிலையார் (4).

 ‘பண்ணத்தி’ எனத் தொல்காப்பியரால் வகைப் படுத்தப்படும் வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலிய நாட்டுப்புற வழக்குகளை மெய்வழக்கல்லாதவை, எழுதும் பயிற்சியல்லாத புற உறுப்புப் பொருட்கள் என உரையாசிரியர் ஒதுக்குவர் (5). அவற்றை மேலதேபோல் பாட்டென்னாராயினர் நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது எனக் கண்டிக்கும் பேராசிரியர்,  இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் எழுத்தில் தேடாதே,  அவை வல்லார்வாய் கேட்டுணர்க என்கிறார். எடுத்துக் காட்டாகக்கூட அவற்றை எழுத்தில் வடிப்பதை அதிகாரப் பூர்வ நிறுவனம் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது .

வினையுனீங்கி விளங்கியலறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்” (தொல்-649) என்கிற சூத்திரத்திற்கு உரை எழுத வந்த பேராசிரியர், பாட்டு தொகை என அதிகார பூர்வமாகத் தொகுக்கப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்தில் அடங்காத ஒரு சில பாடல்களை எடுத்துக்கொண்டு அவையும் சங்கப் பாடல்களே எனச் சொல்கிற சிலர் இக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய அழி வகுக்குகள் மற்றும்  அடித்தளச் சாதியினர் வழக்குகள் (இழிசனர் வழக்குகள்) ஆகியவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இறந்தொழியும் என முற்றுப்புள்ளி வைப்பது குறிப்பிடத் தக்கது. 

எழுத்து என்பது அதிகாரபூர்வமயமாக்கலுடன் தொடர்புடைய ஒரு செயற்பாடு. அரசு, அதிகார மையங்கள், தனிச் சொத்து, வணிகம் முதலியவை நிலைப்படும் போதுதான் ஒவ்வொரு சமூகத்திலும் எழுத்துக்கள் உருவாகின்றன. அவற்றோடு எவ்வெவற்றை எழுத்தில் பயிலலாம் என்கிற கட்டுப்பாடுகளும் உருவாகின்றன. இதுதவிர சங்கப்பாடல்களில் வெளிப்படும் தூலமான அறவியல் மதிப்பீடுகளும் ஒழுங்கமைவுகள் இறுகிப்போன காலகட்டத்தின் இலக்கிய வெளிப்பாடான பதினெண் கீழ்க்கணக்கு அறவியல் நூற்களில் ஒழுக்க வாதமாய் இறுகி வெளிப்படும் எதிர் மறை மதிப்பீடுகளும் ஒப்பிட்டு நோக்கத் தக்கன. செல்வம்,  இளமை, யாக்கை முதலிய உடல் சார்ந்த வாழ்வியலம்சங்களின் நிலையாமையை வலியுறுத்தல்,  அவற்றிற்குப் பதிலாக அறன், தூய்மை, துறவு, பொறை, சினமின்மை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை, திருடாமை, வசவுச்சொற்களைப் பயன்படுத்தாமை,  இகழ்ந்து உரையாமை, பெரியாரைப் பிழையாமை, நல் இனம் சேர்தல், வேசையர் நட்பு மட்டுமல்ல பூங்குழையார் நட்பையே விலக்குதல், காமத்தைப் பெருங்குற்றமாக உணர்த்துதல்- மொத்தத்தில் மண் சார்ந்த, உடல் சார்ந்த மனித விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் குற்றமாக்கி சிற்றின்பமாக்கி விண் சார்ந்த, ஆன்மீகம் சார்ந்தவற்றைப் பேரின்பமாக்கி வரையறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. உடலை வருணிக்கும் அவசியம் நேரும்போது கூட இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகள், அவற்றின் செயற்பாடுகள் ஆகியவை பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. நாடக அரங்கில் நடிகர்கள் அவையோருக்குப் பின்புறத்தைக் காட்டக் கூடாது என்கிற மரபு கவனிக்கதக்கது. 

II மீறல் 

மக்கள் இந்த ஒடுக்குமுறைகளை கேள்வி முறையின்றி அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதில்லை. தம் மீது விதிக்கப்பட்ட அத்துக்களை மீறுதல் என்பதை அரசியல், சமூகம், கலாச்சாரம், மொழி, என்கிற எல்லாத் தளங்களிலும் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் இந்த மீறல்கள் எதுவும் அதிகாரபூர்வ ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டதில்லை. மேலைச் சூழலில் கலாச்சார பூர்வமற்ற (Un-official) எதிர் கலாச்சார மொழிச் செயற்பாடுகளை மிக விரிவாக மிஷேல் பக்தின் ஆராய்கிறார். நாட்டார் (மக்கள்) என்போரை மேல் தட்டினரையும் அதிகார பூர்வமாக்கப் பட்டவற்றையும் அப்படியே வியந்து பணிந்து ஏற்றுக்கொள்ளும் ஏமாளிகளாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்கிறார் பக்தின். அவர்கள் பெரிய புத்திசாலிகள் இல்லாதபோதும் மேல் தட்டினருக்குத் தண்ணி காட்டும் அளவிற்குத் தந்திரசாலிகள். அவர்கள் நளினமும் நாகரிகமுமற்றவர்கள் மட்டுமல்ல, கச்சாவானவர்கள்; அழுக்கானவர்கள், உடல் சார்ந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள், மொண்டாக் குடியர்கள்; உணவு வேட்கை, புணர்ச்சி ஆர்வம் நிறைந்தவர்கள். மூக்கை நோண்டுவதையும், எல்லோர் மத்தியிலும் இடுப்பை உயர்த்திக் குசு விடுவதையும் பழக்கமாகக் கொள்பவர்கள் மட்டுமல்ல;  அவற்றை மகிழ்ச்சியாக அனுபவித்து அதன் மூலம் புத்துணர்ச்சியும் பெறுபவர்கள். இவற்றின் மூலம் நீங்கள் முன்வைக்கும் உயர்குடி நாகரீகம், புலனடக்கம், கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு முதலிய உன்னத ஒழுகலாறுகளை எள்ளி நகையாடுபவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே எனப் புறந் தள்ளி காடனையும் மாடனையும் கள்ளையும் புலாலையும் வைத்து வணங்கி மகிழ்பவர்கள். 

கிளைக் கலாச்சாரங்களில் வெளிப்படும் கேளிக்கை மற்றும் நகைக்கூறுகளை கவனிக்கச் சொல்கிறார் பக்தின் மேலை நாகரிகத்தில் இதற்கொரு நீண்ட பாரம்பரிய முண்டு. ரோமானியக் களி விழாக்களி லிருந்து  (Saturnalion Functions)  தொடங்கி இதனைப் பார்க்கலாம். இந்த விழாக்களில் சனியின் பொற்காலத்தை நோக்கிய ஒரு தற்காலிகத் திரும்புதல் என்கிற வகையில் அரசன், மதகுரு, அதிகாரி என்கிற படிநிலை வேறுபாடுகள் தற்காலிகமாகவேனும் ஒழிக்கப்படுகின்றன. ஒரே மேசையில் அமர்ந்து எல்லோரும் விருந்துண்கின்றனர். மதகுருவும் அரசனும்  மட்டுமல்ல கடவுளும் கூட அன்று நகையாடப் படுகின்றனர்; கேலியில் மூழ்கடிக்கப் படுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கிடையேயான செயற்கையான இடை வெளிகளெல்லாம் மறைந்து உண்மையான தொடர்பு (Communication) நிலை நாட்டப்படுகிறது. 

மத்திய கால அய்ரோப்பாவில் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இத்தகைய கேளிக்கைகளில் (Carnivals) கழிந்தன. முட்டாள்களின் விருந்து, கழுதை விருந்து. அறுவடை விருந்து எனப் பல விருந்துக்கள் கொண்டாடப் பட்டன. இதில் ”பரமண்டலத் திலிருக்கிற எங்கள் : பிதாவே, அருள் நிறைந்த மரியாயியே” என்பன போன்ற மிகப் புனிதமான இறைத் துதிகளெல்லாம் கேலி செய்யப்பட்டன. Paschal Laughter, Christian Laughter. Easter Laughter, Monkish Prank என்கிற வடிவங்களில் எல்லா மத நிறுவனங்களும், புனிதங்களும், போப்பாண்டவரும் கேலி செய்யப்பட்டார்கள். புனிதத் திருப்பலியைக் கேலி செய்து ’குடிகாரனின் திருப்பலி’,  ’சூதாடியின் திருப்பலி’ யெல்லாம் அரங்கேற்றப்பட்டன. மரபு வழிப்பட்ட புனிதங்கள் இவ்வாறு அவற்றிற்குரிய இடங்களிலிருந்து கவிழ்க்கப்படுவதன் மூலம் ‘புனிதங்கள்’ அவற்றிற்குரிய – உண்மையான இடங்களில் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய சடங்கு ரீதியான மீறல்கள் மூலம் மக்களின் தினசரி வாழ்க்கை குற்ற நீக்கம் பெற்று புனிதமாக்கப்படு கின்றது. ஆட்சியாளனுக்கும் கடவுளுக்கும் பதிலாக கோமாளியும் சாமியாடியும் வைக்கப்படுவதன் மூலமாக மக்களின் அன்றாட வாழ்க்கை நியாயப்படுத்தப்படுகிறது. புனிதமான அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்குப் பதிலாக புனிதமற்ற வசைமொழிகளைக் கலக்கும் நடைமுறைகளையும் பக்தின் ஆய்வு செய்கிறார். மொத்தத்தில் நாட்டார் கேளிக்கைகளை, அதாவது அதிகாரபூர்வமற்ற கலாச்சார வடிவங்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார் பக்தின். அவை 

(1) சடங்கு. நகைச்சுவைகள் (Ritual Spectacles): மேற் குறிப்பிட்ட முட்டாள் விருந்துகள் சந்தைக் கடைகளின் நகைச்சுவை விளையாட்டுகள். அடிமைகளும் தலைவர்களும் ஒன்றாய் விருந்துண்டு, குடித்து, பரிசுகள் வழங்கும் சகஜநிலை. 

(2) நகைச்சுவைச் சொல் விளையாட்டு (Comic Verbal compositions): மேற்குறிப்பிட்ட சிறு கிண்டல் நாடகங்கள்,  இலக்கிய வடிவங்கள் முதலியன. 

3. மீன் சந்தை அரட்டைகள் (Various genres of Billingstate): வசவுகள், விடுகதைகள், கேலிகள், பாலியல் – கதைகள் முதலியன. 

இவை எல்லாவற்றிலும் எல்லா இலக்கணப் புனிதங்களும் கேவலப்படுத்தப்பட்டு அத்துமீறப்படுகின்றன. இலக்கிய மொழியோடு, அதிலிருந்து விலக்கப்பட்ட நாட்டார் மொழியும் கலக்கப்பட்டு இவ்விரண்டிற்கு மிடையேயான புதிய உரையாடலினடியாய் அதிகார பூர்வமாக்கப்பட்ட இலக்கிய கலாச்சார வடிவங்கள் கேலிக்குரிய தாக்கப் படுகின்றன, சந்தைக்கடை என்பதை ஒழுங்கின்மைக்குக் குறியீடாய் அதிகாரபூர்வக் கருத்தியல் முன் வைக்கும். ஆனால் சந்தைக்கடைக் கலாச்சாரத்தில்தான் உறுப்பினர்களுக்கிடையேயான பாஸ்பர உரையாடல், சனநாயகம், சமத்துவம் ஆகியவை நிலவுவதை யோசித்தால் விளங்கிக் கொள்ளலாம். மரியாதையற்ற விளிப்புகள் (என்னடா மச்சான்), நட்புடன் பயன்படுத்தப்படும் வசைச் சொற்கள் (ஒக்காள ஒழி), பரஸ்பர கிண்டல், அசிங்கமான உடலசைவுகள் இவை அனைத்தும், நெருக்கத்தின்  அடையாளங்கள், சந்தைக்கடை அரட்டையில் மொழியின் ஒழுங்குகள், ஆசாரங்கள் எல்லாம் மீறப்பட்டு சபை ஒழுங்குக்கு ஒத்து வராத சொற்கள் முமுமையும் பேசப்படும். இவை மூலம் அதிகாரபூர்வ ஒதுக்கங்கள் கலாச்சார, மொழி தளங்களில் மீறப்படும். 

அதிகாரபூர்வம் தனது மொழிச் செயற்பாடுகளின் மூலம் மக்களுக்குத் தேவையான ‘உண்மைகளை’ எதார்த்தம் பற்றிய ‘சரியான’ படப்பிடிப்பை முன் வைப்பதாகச் சொல்கிறது. எனவே இதில் நகைச்சுவைக்கு இடமில்லை. நமது தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தும் மொழி இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் இப்படி முன் வைக்கப்படும் ‘உண்மைகள்’ எந்த அளவிற்கு உண்மைகள் என்பது மக்களுக்குத் தெரியுந்தானே! எனவே இந்த கேளிக்கைகள் அரட்டைகள் (‘பஜனை பண்றது” என்பது போன்ற புனிதச் சொற்களைக் கேலியாகப் பயன்படுத்துவது, பாலியல் சார்ந்த கேலிக் கதைகள் முதலியன) மூலம் மேற்படி உண்மைகள் தோலுரிக்கப்படுகின்றன. 

இவை வெறும் பொழுது போக்காகவன்றி,  இவற்றின் மூலம் சாதாரண மனிதனுக்கும் எதார்த்தத்திற்குமிடையேயான காவிய இடைவெளி (Epic distance) தகர்க்கப்பட்டு சாதாரண மனிதனுக்கு ஒரு செயலூக்கமான நியாயப்பாடு வழங்கப்படுகிறது. (டானியலின் ‘பஞ்சமரில்* அய்யாண்ணர் பாத்திரப்படைப்பு ஓரளவிற்கு இத்தகைய கேளிக்கைத்தன்மை உடையதாய் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது). இவ்வாறு ஒரு புதிய இரண்டாவது உலகம் அவனுக்காகவும் அவளுக்காகவும் உருவாக்கி அளிக்கப்படுகிறது. தற்காலிகமாகவேனும் வாழ்வதன் மூலம் தனது சாத்தியங்களுக்கும், எதார்த்தத்திற்கும் இடையேயான இடைவெளிகளை அவன் உணர் கிறான். உண்மையான தூலமான எதார்த்தத்துடனான தொடர்புகளைக் கண்டு பிடித்த மகிழ்ச்சி பங்கேற்பாளனுக்குக் கிடைக்கிறது. அதிகாரபூர்வக் கலையில் வெளிப்படும் எல்லாப் பதிலியாக்கங்களும் அவற்றின் வேர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு புனித நீக்கம் செய்யப்படுகின்றன. எல்லாப் புனிதங்களும் கோமாளியின் அத்துமீறல்கள் சேட்டைகள், அரட்டைகளைக் காட்டிலும் உயர்ந்தவையல்ல என்கிற உண்மை உணர்த்தப்படுகிறது. சேக்ஸ்பியர், டிடெராட், செர்வான்டிஸ், ரெபலாய் ஆகியோரிடம் இத்தகைய நாட்டார் கேளிக்கைக் கூறுகள் படிந்து கிடப்பதைப் பக்தின் சுட்டிக் காட்டுகிறார். 

நாட்டாரின் அதிகாரபூர்வமற்ற கலாச்சாரச் செயற்பாடுகளினடியாக முதலாளிய எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதம் ஆகியவற்றினிடத்தில் கோமாளி எதார்த் தம் அல்லது மிகை எதார்த்தம் (grotesque Realism) என்கிற கருத்தாக்கத்தையும் பக்தின் முன் வைக்கிறார். பௌதிக உடற் தத்துவத்திற்கு இங்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவு, குடி, கழிவு, பாலியல் செயல் பாடுகளுடன் கூடிய உடலின் பிம்பங்கள் இங்கே கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. சதை, அடிவயிறு, இடுப் புக்குக் கீழேயுள்ள உறுப்புகளின் கவிதையாக இவை வெளிப்படுகின்றன. அதிகாரபூர்வக் கலாச்சாரம் முன்னிலைப்படுத்தும் தவ வாழ்வு, புனித வாழ்வு, ஆன்மீக மேன்மை ஆகியவற்றிற்கெதிராக ”சதையின் மறு வாழ்வு” அரங்கேற்றப்படுகிறது. நாட்டார் கேளிக்கைகளிலிருந்து உருப்பெறும் இம் மிகைநகை எதார்த்தம் நிலப் பிரபுத்துவ அழகியல் கோட்பாடுகளுக்கு எதிராக அமைகிறது. 

இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படும் உடலியல் அம்சங்களென்பன வாழ்வின் இதர புலன்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, தனிநபர் சார்ந்த வெளிப்பாடாக அமையாமல் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் பிரபஞ்ச விகாசமாய் முன் வைக்கப்படுகின்றன. தனி நபர் என்பவன் அழிந்து போகக் கூடியவன். மக்கள் அழிந்து போகிறவர்களல்ல. மக்கள் என்கிற பிரபஞ்ச நிலையில் மரணம் என்பது அழிவல்ல; அது புதுப்பித்தல் தொடர்ந்து வளர்ந்து கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிற மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலேயே மிகை நகை எதார்த்தம் எல்லாவற்றையும் மிகைப் படுத்திப் பார்க்கிறது; அளவிடற்கரிய தாக்குகிறது. இத்தகைய மிகைப் படுத்தல் என்பது நேர்மறையான, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது; கரு, உயிர்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றோடு இவை தொடர்புடையதாய் உள்ளன. ‘ ‘எல்லா உலகங்களுக்குமான விருந் தாக” அது அமைகிறது. கெர்ச் சுடுமண் சிற்பங்கள், தொந்தி பெருத்த உருவத்துடன் அமைந்த பூவாளிகள், கர்ப்பம் தரித்த சூனியக்காரக் கிழவிகள் சிரிப்பது போன்ற சிற்பங்கள் முதலியன உயிர்ப்புடன் கூடிய மரணத்தைக் குறியீடு செய்கின்றன. 

மிகை நகை எதார்த்தத்தின் அடிப்படைத் தத்துவம் கீழ்நிலைப்படுத்துதல் (degradation) ஆன்மீகமான, கருத்துருவான,  உயர்ந்த அனைத்தையும் கீழே பொருண்மை மட்டத்திற்கு, மண்ணின் மட்டத்திற்கு இறக்குவது. பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையினடியாக உருவாக்கப்பட்ட மிகை நகை எதார்த்தப் படைப்பாகிய ”சைப்ரியன்களின் இரவுணவு” நாடகத்தில் சாலமனின் நீதிகள், கோமாளி மொரால்ஃப்பின் உளறல்களோடு இணைப் பொருத்தம் செய்யப்பட்டு கேலி செய்யப்படுகின்றன. சாலமனுடனான  உரையாடலை உணவு, குடி, கழிவு என உடலியல் மட்டத்திற்கு கொண்டு வருகிறான் மொரால்ஃப். மத்திய கால அய்ரோப்பாவில் இவ்வுரையாடல் மிகவும் புகழ்பெற்றதாய் இருந்தது. 

மேலுலகு, கீழுலகு என்கிற கருத்தாக்கங்கள் என்பவை யெல்பாம் நேரடியாக அச்சொற்கள் சுட்டும் பொருள் சார்ந்தவையாக முன் வைக்கப்படுகின்றன. கீழுலகு அல்லது கீழ்நோக்குதல் என்பதன் மூலம் விண் சார்ந்த விடயங்கள் மட்டுமல்ல முகம், தலை, நெற்றி போன்ற மேலுறுப்புகளிலிருந்து விலகி புணர் உறுப்புகள், வயிறு – பின்புறம் ஆகிய உறுப்புகளைக் குறிப்பிடுகின்றன. எனவே கீழ்நிலைப்  படுத்துதல் என்பது விண்ணிலிருந்து மண்ணிற்குத் திரும்புதல், உடலின் கீழ்ப்பகுதிகளை நோக்கி கவனத்தை ஈர்த்தல், மலம் கழித்தல், புணர்தல், கருவுறுதல், பிறத்தல், இறத்தல் என வயிறு மற்றும் புணர் உறுப்புகள் ஆகியவற்றின் செயற்பாடுகளை நோக்கிச் செல்லுதல். என்பது மிகை நகை எதார்த்தம் முன் வைக்கும் உடல் என்பதில் புற உலகை நோக்கித் திறந்துள்ள உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. அதாவது புற உலகு அந்த உடல் வாய்களின் வழியே உடலுக்குள் புகுகிறது வெளியேறுகிறது. எனவே வாய். பிறப்புறுப்புகள், முலைகள், லிங்கங்கள், ஆசனவாய் என்கிற துளைகள் முக்கியம் பெறுகின்றன. வளர்ச்சியே உடலின் அடிப்படையான பண்பு. எனவே அது புணர்ச்சி, கருத்தரிப்பு: குழந்தை பிறப்பு, சாவு, சாப்பாடு, குடி, மலங்கழித்தல் ஆகிய செயல்களின் மூலமாகத் தனது எல்லைகளைத் தாண்டிக் கொண்டே செல்கிறது. உடல் பற்றிய மிகை நகை எதார்த்த கோட்பாடு தான் நாட்டார் வசவுகள், சாபங்கள் ஆகியவற்றிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. மண்ணை நோக்கிக் கீழிறக்கும் செயல்பாடுகளின் ஓரங்கமாய் வசவுகள் அமைகின்றன. 

அதிகாரபூர்வ கலாச்சாரத்திலும் அங்கதங்கள், நகைச்சுவைகள் உண்டு. ஆனால் அதில் கேலி செய்பவன்,  தன்னைக் கேலி செய்யும் பொருளிலிருந்து விலக்கிக் கொண்டு ஒதுங்கி நின்று உயர்த்திக் கொண்டு சேலி செய்கிறான். எனவே அக் கேலி என்பது உயிர்ப்புத்தன்மை நீக்கப்பட்டது;  தனி நபர் சார்ந்தது; அழிவை நோக்கியது) அருவருப்பானது. நாட்டார் கேளிக்கைகளில் எல்லோரும் ஒன்றாய் நின்று தங்களைத் தாங்களே முட்டாளடித்துக் கொள்வதன் மூலம் நிறுவப்பட்ட உண்மைகளைத் தோலுரிக்கின்றனர். நடைமுறையிலுள்ள உலகப் பார்வைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர். இருக்கும் எல்லாவற்றின் சார்பியல் தன்மைகளை, பன்முகப் பார்வைகளை அங்கீகரிக்கும் உளப்பாங்கு பெறுகின்றனர். நிறுவப்பட்ட உண்மைகள், மரபுகள், அச்சு வார்ப்புகள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் திராணி பெறுகின்றனர். 

இறுதியாய் : அய்ரோப்பிய சூழலை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட மேற்கண்ட முடிவுகளை அப்படியே இந்திய தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க இயலாது. மேலை நாடுகள் போலன்றி இங்கே பார்ப்பனியம் வரையறுத்த ஒதுக்கல்கள் கோட்பாட்டு ரீதியாகவும் நியாயப்படுத்தப்  பட்டவையாக உள்ளன. சமபந்தி போஜனம் மறுக்கப்பட்ட இந்தியச் சூழலில் முட்டாள் விருந்தைக் கற்பனை பண்ண முடியாது. சாதிக்கொரு நீதி விதித்த மனு நீதி கோலோச்சிய மண்ணில் பார்ப்பனியத்தைக் கேலி செய்யும் கேளிக்கைத் திருவிழாக்களை நிலப்பிரபுத்துவ இந்தியா அனுமதித்திருக்காது. இங்கே நகைச்சுவை இலக்கியம் என்கிற இலக்கிய வெளிப்பாடு வளராமற் போனதற்கான காரணங்கள் வெளிப்படை. எனினும் நாட்டார் கதைகள், கிராமியத் திருவிழா நாடகங்கள், நாட்டார் மத்தியில் பயிலப்படும் பாலியல் கதைகள் போன்றவற்றில் பக்தின்’ குறிப்பிடும்  அதிகாரபூர்வமற்ற கலாச்சாரக் கூறுகளைத் தேட முடியும். 

III. கி. ரா. தொகுத்த பாலியல் கதைகள் 

தமிழின் அதிகாரபூர்வ நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன். பல பரிசுகள்  விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவரது நாட்டுப்புறப் பாலியல் கதைத் தொகுப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய ஏற்பு இல்லை. பாலியல் கதைகள் பல வட்டங்களில் சமூகத்தில் நிலவிய போதும் பத்திரிகைகளிலும், புத்தகமாகவும் அச்சு வடிவம் எடுக்கும் போது ஏற்படும் அதிகாரபூர்வமயமாக்கலுக்கு ஏற்படும் எதிர்ப்பாகவே இதனைக் கருதமுடியும். தமிழ்ச் சமூகம் பற்றிய அதிகாரபூர்வ உண்மைக்கு மாறான ஒரு உலகத்தை இத் தொகுப்பு முன்வைப்பதென்பதை நிறுவனங்களால் செரித்துக் கொள்ள இயலாமையை இது காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய மொழிக்கும் மக்களின் பாலியல் அரட்டை மொழிக்கும் இடையேயான உரையாடலின் விளைவாக ’கண்டார ஒளி’,  ‘ஒப்பன ஒளி’ , ’வல்லார ஒளி,’  ‘பேசிப்பளகுதல்’,  ‘பேண்டுகிட்டு’ இருத்தல் போன்ற சொற்கள் கி.ராவின் இத் தொகுப்பில் பதிவு செய்யப்படுதலும்,  இடுப்புக்குக் கீழ்ப்பட்ட உறுப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளைச் சொல்வதுமான பிரதியின் கலகச் செயற்பாடுகளும் நிறுவனங்களுக்கு உவப்பானதாக இல்லை. சர்க்கரையால் பாலம் போடுகிறவன்,  ஆட்டுமந்தையை இடுப்புக்குள் மறைத்துக் கொள்ளும் பெண் முதலான கி.ரா படைக்கும் சித்திரங்கள் மிகைநகை எதார்த்த வகைப்பட்டவை எனலாம். நூல் முழுமையும் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான மீறல்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட உடல் எப்படியும் ”தண்ணி காட்டி விடும்” என்கிறார் கி.ரா. அப்படிச் செய்தால் அதில் தவறென்ன? பாலியல் மீறல்களில் வலுவந்தந்தான்கூடாது என வெளிப்படையாகச் சொல்கிறது கி.ராவின் பிரதி. மேல் வயிற் றுப்பசி X கீழ் வயிற்றுப்பசி ; சாப்பாடு X கீப்பாடு: பசி X பாலியல் தேவை என்கிற எதிர்வுகளை உருவாக்கி நூல் முழுவதும் மீறல்கள் நியாயப் படுத்தப் படுகின்றன. குடும்பம், உறவு முறைகள், நீதித்துறை போன்ற அரசு நிறுவனங்கள் எல்லாம் கேலி செய்து புனித நீக்கம் செய்யப்படுகின்றன.  

இந்த வகையில் கி.ரா.வின் பதிவுகள் என்பன அதிகார எதிர்ப்புச் செயற்பாடுகள்தான், மொழியில் கலகந்தான் எனினும் இவை அனைத்து மக்களும் பங்கேற்கும் நடை முறை சார்ந்த கேளிக்கை வடிவமல்ல. தாத்தா-பேரன்கள் என்கிற ஒரு சில ஆண்களுக்கிடையேயான பரிமாற்றங்களாகவே கதைகள் அமைகின்றன. எனவே பல சந்தர்ப்பங்களில் இவை ஆணாதிக்கக் கருத்தியல் நிறைந்தவையாகவும், மிகை நகை எதார்த்தத்தின் புத்துயிர்ப்புப் பண்பு குறைந்தவையாகவும் வெளிப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். பொது வெளிப்பாடாக இல்லாததால் தனி நபர் வக்கிரங்களாகவும்,  பாலியல் விருப்பு நிறைவேற்றப் பதிலியாகவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கும் நுகர்பொருளாகவும் வீழ்ச்சி அடைவதையும் காணமுடிகின்றது. பொதுவாகவே நாட்டார் கேளிக்கைகளின் அரசியல் செயற்பாடென்பதே வரையறைக்குட்பட்டது தான் என்பார் டெர்ரி ஈகிள்டன். நாட்டார் கேளிக்கை களின்மூலமான கலகம் என்பது ஒரு வகையில் அதிகார பூர்வத்தால் அனுமதிக்கப்பட்ட கலகந்தானே,  அடுத்த நாள் காலை மீண்டும் பழைய உறவுகள் நிலைநாட்டப் பட்டு விடுகின்றனவல்லவா என்பது அவர் கேள்வி. இதர எதிர் அரசியல் செயல்பாடுகளுடன் இணையும்போதே இவற்றால் நாம் விரும்பிய பலன் விளையும். 

இடையில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல், பத்திரி கைக்கான சமரசங்கள் இல்லாமல் கச்சாவாகப் புழங்கும் நாட்டார் மத்தியில் இவை வழங்கப்படும் வடிவிலேயே இக்கதைகளைப் பதிவு செய்வது அவசியம். 

பாலியல் தவிர உடல் சார்ந்த இதர கீழ்நிலையாக்கச் செயற்பாடுகளுடன் கூடிய கதைகளும் தொகுக்கப்படல் வேண்டும். பெண்கள் மத்தியில் புழங்கும் பாலியல் கதைகள் பதிவு செய்யப்படுதல் அவசியம். அவற்றில் பாலாதிக்க எதிர்ப்புக் கூறுகள் கூடுதலாக இருக்கும் என நம்பலாம் (10). 

நமது எதிர்ச் கலாச்சார வடிவங்களில் கேளிக்கைக் கூறுகளுக்கான முக்கியத்துவம் பற்றிச் சிந்தித்தல் அவசியம். 

அடிக்குறிப்புகள்

1. பொ. வேல்சாமி,  அ. மார்க்ஸ், “தொல்காப்பிய உருவாக்கத்தின் பண்பாட்டு அரசியல்” மேலும்,  (பிப், மே-1992)  

2. ”வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சியவர்கட்டாகலான்” தொல் – பொருள் 647. “மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப்பட்ட சொல்லினான”-தொல்- பொருள் 145.

3. ”தகுதியும் வழக்கும் தழீ இயன ஒழுகும் பகுதிக்கிளவி வரைநிலை இலவே” – தொல் சொல்.

17. அதிகாரபூர்வ தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் நானறிந்தவரை மலம் பெய்தல் பற்றிய குறிப்பு நீலகேசியில் மட்டுமே வருகிறது. பூதிகன் என்னும் பார்ப்பனனுடன் வேதத்தை எதிர்த்து நீலகேசி வாதிடுகிறார். வேதம் தான்தோன்றி என்கிற கருத்தை மறுத்து,  “யாரது செய்தவர் அறியிலிங்குரை  எனிலங்கொருவன் ஊரது நடுவனோர் உறையுனில் மலம்பெய்திட்டு ஒளித்தொழியிற் பேரினும் உருவினும் பெறவிலன் ஆதலின்றாக் குறித்துத் தேரினு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே’*  ( நீலகேசி-829 ) என்கிறார். ஊர் நடுவே இரவில் பெய்து கிடக்கும் மலம் யாருடையது என தெரியாதலால் அதனைத் ’தான்தோன்றி’ எனச் சொல்ல முடியுமா என்பது நீலகேசியின் கேள்வி. மேலும், 

”தோற்றமு நாற்றமுஞ் சுவையுட னூரிவற்றாற் தொடங்கி யாற்றவு மாயிரு வேதம் வல்லார்கள். அறிந்துரைப்ப மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மை பெறா நூற்றிறஞ் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவுடையவரே” (நீலகேசி 830) என்கிறார்.  மலத்தின் தோற்றம், நாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பெய்தவன் நோயாளி அல்லது ஆரோக்கியமானவன் எனச் சொல்ல முடியும். ஆனால் உயர் குலத்தான் அல்லது கீழ்க்குலத்தான் எனக் கண்டுபிடிக்க முடியுமா என்பது நீலகேசியின் கேள்வி. சமண பௌத்த மதங்கள் தமிழகத்திற்கு வரும்போது வருணாசிரமத்தை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றன. எனினும் பின்னாளில் இங்கே அரசமதமாக இருந்த சைவத்திற்கு எதிர் நிலையில் இருந்ததன் விளைவாக இதுபோன்ற அதிகாரபூர்வமற்ற கூற்றுகளை இந்த இலக்கியங்களில் தேட முடியும். பெண்களை- அதுவும் கணவனைத் தந்திரமாகக் கொன்ற பெண்களைக்கூட மையமாக வைத்துக் காவியம் படைத்தல் (குண்டலகேசி, நீலகேசி, வளையாபதி  முதலியன) இவற்றில் கவனிக்கத் தக்கன.

5. பாட்டிடைக் கலந்த பொருளவாகில் பாட்டினியல பண்ணத்திய்யே- தொல் பொருள் – 492,  

6. இப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ள பக்தின் கருத்துக்கள் அனைத்தும் அவரது Rebelars and His wor என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. 

7. பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்றெழுந்த கிளவியானும் பொருளொடு புணராப் பொய்மொழியானும் பொருளோடு புணர்ந்த நகை மொழியாயினும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப – தொல் பொருள் 485. என்கிற தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து நான்கு வகை உரை நடை வடிவங்களில் நகைமொழி என்றொரு உரைவகை இருந்தது தெரிகிறது. ”நகை மொழியாவது மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தாதென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்துமுறை பிறக்குமாதலின் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும் உரைவரும் என்றார். மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவும் ஆகும். மகளிர்க்குரைக்குமுறை செவிலிக்குரித்து. மைந்தர்க்குரைக்கும் உரை எல்லார்க்குமுரித்து என்றவாறு.” – (இளம் பூரணர்). நகை மொழி உரை நூற்களுக்கு எடுத்துக்காட்டாய் சிறுகுறீஇ உரை, தந்திர வாக்கியம் என்கிற இரு நூற்களைப் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இருந்த சில நகைமொழி நூற்களும் கூட அதிகாரபூர்வப் பாரம்பரியத்தால் பேணிக் கையளிக்கப் படவில்லை என்பதையே இன்று அந்நூற்கள் அழிந்து பட்டமை காட்டுகிறது.

8. கி. ராஜநாராயணன், ’வயது வந்தவர்களுக்கு மட்டும்’, நீலக்குயில், 1992.

9. சின்ன வயதில் பாலகிருஷ்ணன் என்கிற பார்ப்பன ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட கதை ஒன்று: ஒரு கிராமத்தானுக்குத் தன் குறியைத் தானே வாயால் சுவத்துச் இன்பம் கொள்ளலாமா என்ற அய்யம் வந்து விடுகிறது. ஒரு ஆசிரிரைக் கேட்கிறான். தாசில்தார்தான் இதற்கு முடிவு சொல்ல வேண்டும் என்கிறார் அவர். தாசில்தார் அலுவலகத்தில் மனு எழுதித் தரச் சொல்கிறார்கள். மனுவில் ஸ்டாம்ப் ஒட்டவில்லை என்று திருப்பப்படுகிறது. இப்படிப் போய்க்கொண்டே இருக்கிறது கதை. கடைசியாக ‘எட்டினால் செய்து கொள்ளலாம்’  என தாசில்தார் குறிப்பு எழுத ‘ஃபைல்’ முடிக்கப்படுகிறது. அரசு நடைமுறைகளைக் கேலி செய்யும் ஒரு நாட்டர் நகைச்சுவை இது. 

10. சின்னவயதில் அத்தை என நான் அழைக்கும் மூத்த பெண்மணி ஒருவரிடம் கேட்ட கதை: ஒரு அழகிய பெண் சுள்ளி பொறுக்கக் காட்டிற்குச் சென்ற போது புலி ஒன்று மையல் கொண்டு அவளைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கிறது. ஒரு குகைக்குள் அவளை அடைத்து வைத்திருக்கிறது புலி வெளியே போகும் போது வேடன் ஒருவன் குகைக்கு வந்து விடுவான். புலி வரும் சமயம் அவன் வெளியே போய்விடுவான். ஒரு நாள் வேடன் இருக்கும் போது புலி வந்து விடுகிறது. வேடனைப் பரணியில் ஒளித்து வைக்கிறாள். புலிக்குச் சோறு போடுகிறாள். கொஞ்ச நேரத்தில் மேலே இருந்தவன் அடக்க முடியாமல் மூத்திரம் பெய்கிறான். புலி, ‘என்ன’ என்கிறது. ”ரசம், மறந்துவிட்டேன்” என்கிறாள். பிசைந்து குடித்து விட்டு ’ரசம் பிரமாதம்’ என்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அடக்க முடியாமல் மேலிருந்தவன் மலம் பெய்து விடுகிறான். பருப்பு கடைந்து வைத்திருந்தேன். சாப்பிடுங்கள் என்கிறாள் பெண். புலி ரசித்துச் சாப்பிடுகிறது- நாங்கள் விழுந்து சிரித்தவாறே கதையைக் கேட்போம்.

(1990 களின் தொடக்கத்தில் பாண்டிச்சேரி ‘இன்ன பிற’ அமைப்பு சார்பில் நடத் தப்பட்ட பாலியல் கதைகள் பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.)

இஸ்லாமோ ஃபோபியா: அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]

டாக்டர் சல்மான் சய்யித், லீட்ஸ் பல்கலைக் கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.

டாக்டர் நஸியா காஸி, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், அமெரிக்கா:.

இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்

டாக்டர் சஹர் அஸீஸ், ருட்கர்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும்  பேசுவதற்குமான ஒரு கருவி.

டாக்டர் ஹதீம் பாசியான், பர்க்லி பல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.

சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது

சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.

சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.

டாக்டர் சமி அல் அரியான், இஸ்தான்புல் சபாஹடின் சைம் பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.

சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.

ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.

சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.

நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.

டாக்டர் மொகமட் மொரான்டி, டெஹ்ரான் பல்கலைக் கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.

மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கும் ஒன்றாகக் கருதக் கூடாது.

சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.

சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.

நஸியா: அமெரிக்கப் பேரரை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.

நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”

மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.

நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.

மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.

ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.

நன்றி: TRTWORLD – இந்த வெப் சைட்டில் இருந்து தமிழாக்கியுள்ளேன்.

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

@ @ @

பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக்கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து அரசு பல்கலைக் கழகங்களையும் பத்து தனியார் பல்கலைக் கழகங்களையும் இப்படி “உயர் சிறப்புப் பல்கலைக் கழகம்” எனப் பிற பல்கலைக் கழகங்களிலிருந்து தனியே பிரித்து உயர்நிலை நிறுவனங்களாக மாற்றப்படுவது குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கல்வி உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பாஜக அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் அப்போதே இப்படிப் பல்கலைக் கழகங்களில் உயர்வு – தாழ்வுத் தரவேறுபாடுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால் “உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டம்” எனக் கூறிக்கொண்டு பாஜக அரசு கல்வியாளர்களின் இந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக இருந்து இறுதியில் அதை இன்று இப்படி நடைமுறைப் படுத்தவும் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக ஒதுக்கி மேம்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மட்டும் ஒவ்வொன்றுக்கும் 1000 கோடி அளிக்கப்படும் என இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. . இது தவிர மேலும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனக்களும் இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிறுவனங்களில் 100 மாணவர்களைச் சேர்த்தால் அதில் 30 பேர்கள் வரை வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் எனவும், தகுதி – தர அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் என்பதன் பொருள் நமது மாணவர்கள் 30 பேர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுதான். அது மட்டுமல்ல ஆசிரியப் பணியில் 25 சதம்வரை வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 20 சதம் வரை “ஆன் லைன்’ முறையில் கல்வி பயிற்றுவிக்கவும் இவற்றுக்கு அனுமதி உண்டு.

பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் இந்த நிறுவனங்கள் எவற்றை வேண்டுமானாலும் உள்ளடக்கிக் கொள்ளலாம். (complete flexibility in curriculum and syllabus). இது பொறியியற் கல்விக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையையும் பாடமாகச் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு வழி செய்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பாடங்களில் இது என்ன மாதிரித் தகிடுதத்தங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை என்னவெனில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இந்நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களாயினும் சரி, உள் நாட்டு மாணவர்களாயினும் சரி UGC, ACTE முதலானவற்றின் ஒப்புதல் எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாமே நம்மவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியதுதான். தகுதி, திறமை எனும் பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவுகள் உயர் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பல்கலைக் கழக மான்யக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் கடிதம் ஒன்றை [D.O.No. 1 – 18 / (CPP.II)] அனுப்பியுள்ளது. அதில், ”தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ’தேசிய கல்விக் கொள்கை (2020) இன் அடிப்படையில் உரிய சீர்திருத்தங்களைச் (governance reforms) செய்தாக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்தமாதத் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா ஒரு அதிரடி நடவடிக்கையைச் செய்தார். அப்பல்கலைக் கழகம் IoE நிலை பெறுவதற்குத் தேவையான முதலீடான 1500 கோடி ரூபாய்களையும் தானே திரட்ட முடியும் எனவும், தொடர்ந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய்களையும் தன்னால் திரட்டமுடியும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது அம்பலமானவுடன் இப்போது இந்த IoE பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது,.

இந்தப் பெருந் தொகையை ஒரு பல்கலைக் கழகம் எப்படித் திரட்ட முடியும்? மாணவர் கட்டணம், தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் ஆகிவற்றை எல்லாம் உயர்த்தாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

இல்லை IoE க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தொலைக் கல்வித் திட்டங்களை அறிவித்துக் காசு திரட்டப் போகிறார்களா? பின் எப்படி இந்த நிதியைத் திரட்டப் போகிறார்கள்? சூரப்பர் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?

கல்வி இன்னும் மத்திய மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதையும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என்பதையும் சூரப்பர் மறந்தாரா? இல்லை அதுவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளில் ஒன்று என நினைக்கிறாரா?

இப்படி அவர் மாநில அரசின் ஒப்புதல் எல்லாம் இல்லாமல் முடிவெடுப்பது இது முதல் முறையல்ல. தோல்வியுற்ற பாடங்களில் (arrears) மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து இதற்கு முன் அவர் AICTEக்கு கடிதம் எழுதினார். அதுவும்கூட மாநில உயர்கல்வி அமைச்சரை மீறிய செயல்தான்.

தனது திட்டங்களின் ஊடாக 69 சத இட ஒதுக்கீடு என்பது பாதிப்புக்கு உள்ளாகாது என சூரப்பர் இன்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கான சாத்தியமும் இவர்கள் திட்டத்தில் இல்லை. UGC உருவாக்கியுள்ள IoE வழிகாட்டும் நெறிமுறை பிரிவு 4.2.5 –இல், ” There should be a transparent merit based selection in admissions, so that the focus remains on getting meritorious students ” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தகுதி மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இந்த மாணவர் தேர்வு அமைய வேண்டுமாம். இதற்கெல்லாம் உரிய சட்டத் திருத்தம் இல்லாமல் IoE நிலை திணிக்கப்படுமானால் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியப்படும்?

சரி 69 சத ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதும் என IoE நிலையை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவோம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துக் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் எளிய மாணவர்கள் இந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா?

இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்றெல்லாம் அறிவித்து கல்விச் சந்தை ஒன்றை அரசே உருவாக்குவதை ஏற்க முடியாது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை IoE நிலைக்கு மாற்றுவது எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கெல்லாம் சூரப்பரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் முருகன் துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதையும் காண்கிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கல்வி என்பது இன்னும் மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் அதெப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி ஒரு துணைவேந்தர் எதையும் செய்யலாம்? செய்வோம் என ஒரு ஆளும்கட்சியின் தலைவர் திமிர் பேசுவதன் பொருள் என்ன? இந்த நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

சில கேள்விகளைத் தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. IoE வேண்டாம் எனக் கூறும் மாநில அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை Anna Technical and Research University என்றும் Anna Affiliating University எனவும் இரண்டாகப் பிரித்ததன் பின்னணியும் நோக்கமும் என்ன? இது IoE எனவும் Affiliating University எனவும் இரண்டு தரங்களாகத் தொழிற் கல்வியைப் பிரிப்பதுதானே?

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளது போல் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றால் எஞ்சியுள்ள 20 பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? அவற்றின் நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசிடம் ஏதும் திட்டமுள்ளதா? இல்லை அவை இரண்டாம்தர மூன்றாம்தரக் கல்வி நிறுவனங்களாகத் தொடர வேண்டியதுதான் அவற்றின் தலைவிதியா?

3.தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்துக்குப்பின் UGC கலைக்கபடும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. இனி நிதி மான்யம் வழங்குவதை கல்வி அதிகாரங்களை மிகத் தந்திரமாக சகுனித் தனத்துடன் மையப்படுத்தி வரும் பாஜக அரசு கையில் வைத்துக் கொள்ளப் போகிறது. அதை எதிர்க்காமல் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெற வாய்ப்புண்டா?

4. நிகர்நிலை பல்கலைக்கழகமான வேலூர் VITக்கு IoE நிலை அளிக்கப் பட்டுள்ளதைத் தமிழக அரசு ஏற்கிறதா?

5. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் IoE நிலை வழங்குவது, பல்துறை வளாகங்களாக (Multidisciplinary University) பல்கலைக் கழகங்களை மாற்றுவது, மூன்று தரங்களில் தன்னாட்சி நிலையை (Graded Autonomy) கல்லூரிகளுக்கு வழங்குவது , UGC கலைக்கப்படுவது போன்ற திட்டங்களைத் தேசியக் கல்விக்கொள்கை 2020 முன் வைக்கிறதே அது பற்றி தமிழக அரசின் கருத்தென்ன? . தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தீர்களே அதன் அறிக்கை என்னாயிற்று?

6. துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு, நிதிக்குழு முதலானவற்றின் ஒப்புதல் இல்லாமல் தானே நிதி திரட்டமுடியுமென அறிக்கை விடுகிறாரே அது குறித்துத் தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

7.அண்ணா பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் பகவத் கீதை Credit course ல் வைக்கப்பட்டவுடன் எதிர்ப்பு வரவே அது நிறுத்தப்பட்டது போலப் பாவலா செய்து இப்போது அது Audit courseல் திணிக்கப் பட்டுள்ளது. இது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்துத் தமிழக அரசின் நிலைபாடு என்ன?

மக்களின் இந்த ஐயங்களுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இப்படிக் கல்வி முறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அரசே உருவாக்கிப் பணமும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்விக் கொள்கை. மோடி தலைமையில் பா.ஜ.க அரசு உருவாக்கப்பட்ட கணத்திலிருந்து அந்தத் திசையிலேயே கல்விக் கொள்கை உருவாக்கங்கள் நகர்கின்றன. பெயருக்குத்தான் இன்று கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ளது. மற்றபடி இப்போது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை (2020)-இன்படி கல்வி அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டன, அதன் விளைவே இன்று இப்படி அண்ணா பல்கலைக் கழகம் சீரழிக்கப்படுவது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டது. மற்ற மாநில அரசுகள் அதையும் செய்யவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் தேசிய கல்விக் கொள்கை (2020) ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துக் கொண்டது.

அதன் விளைவே இவை எல்லாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.

எனவே,

அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!

#அண்ணா_பல்கலைக்கழகத்தைக்_காப்போம்!

இப்படிக்கு,

அக்கறையுள்ள கல்வியாளர்களும் தமிழ் மக்களும்

இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள கல்வியாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள்..

1. முனைவர் மு. அனந்தகிருஷ்ணன், மேனாள் துணைவேந்தர்,

அண்ணா பல்கலைக்கழகம்,

(Dr. M. Ananda Krishnan,Former Vice – Chancellor, Anna University),

2. முனை)வர் வே. வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

(Dr. V. Vasanthi Devi, Former Vice Chancellor, Manonmaniam Sundaranar University),

3. முனைவர் ச. சீ. ராஜகோபாலன், மேனாள் ஆட்சிமன்ற உறுப்பினர்,

சென்னை பல்கலைக்கழகம்,

(Dr. S. S. Rajagopalan, Former Senate Member, University of Madras.)

4. பேராசிரியர் அனில் சட்கோபால், மேனாள் தலைவர், கல்வியியல் துறை, தில்லி பல்கலைக்கழகம்,

(Prof. Anil Sadgopal, Former Dean, Department of Education, Delhi University),

5. நீதிஅரசர் அரிபரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை (Justice Hari Paranthaaman, High Court Judge (Rtd), Chennai),

6. முன்னைவர். எஃப்.டி.ஞானம், முன்னாள் பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்,

7. பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,

8. மருத்துவர் சீ. ச.‌ ரெக்ஸ் சற்குணம், மேனாள் இயக்குநர் மற்றும்

கண்காணிப்பாளர், குழந்தை மருத்துவ நிறுவனம் மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை,  எழும்பூர், சென்னை.

(Dr. C. S. Rex Sargunam, Former Director & Superintendent, ICH & GCH, Egmore, Chennai),

9. பேராசிரியர் சோ. மோகனா, மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,

(Professor S. Mohana, Former President, Tamil Nadu Science Forum),

10. பேராசிரியர் ச. மாடசாமி, கல்வியாளர் – எழுத்தாளர்

(Prof. S. Madasamy, Educationist – Writer),

11. முனைவர் பி. இரத்தினசபாபதி, ஆற்றுநர், தமிழக கல்வி ஆராய்ச்சி

மற்றும் வளர்ச்சி நிறுவனம்,

(Dr. P. Ratnasabapathy, Counsellor, Thamizhaga Institute of Research & Advancement),

12. திரு. ஐ. பி. கனகசுந்தரம், மேனாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திரூர்,

(Thiru. I.P.Kanakasundaram, Former Principal, DIET, Tirur).

13. முனைவர் ப. முருகையன், மேனாள் முதல்வர், சிவந்தி கல்வியியல் கல்லூரி, குன்றத்தூர்,

(Dr. P. Murugaian, Former Principal, Sivanthi College of Education, Kundraththoor),

14. முனைவர் வாசு அறிவழகன், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த இந்திய மக்கள் மன்றம்,

‌(Dr. Vasu Arivazhagan, Coordinator,United India Peoples Forum),

15. பேராசிரியர் K. இராஜூ, ஆசிரியர், “புதிய ஆசிரியன்” மாத இதழ்

(Prof. K.Raju, Editor, Puthiya Asiriyan Monthly Journal for Teachers),

16.பேரா.வீ.அரசு, மேநாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்,

17. பேரா. பா.கல்விமணி, கல்வி மேம்பாட்டுக் கழகம், திண்டிவனம்,

18. பேரா சு. இராமசுப்பிரமணியன், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்,

19. பேரா. எஸ்.சங்கரலிங்கம், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், சென்னை,

20. கண்ணன், மாணவர் தலைவர், SFI

21. சேகர் கோவிந்தசாமி, முதுநிலை பொறியியல் ஆலோசகர், சென்னை,

22. மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்

23.கோ.சுகுமாரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர், புதுச்சேரி.

24. முருகப்பன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்,

25, இரா காமராசு, தமிழ்தேசியசிந்தனையாளர், பாப்பாநாடு, தஞ்சாவூர்,

26. முகம்மது சிராஜுதீன்,  நூல் வெளியீட்டாளர், சென்னை,

27.முனைவர் இரா. முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், மதுரை,

28.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்,

29.பேரா. சே.கோச்சடை. மேநாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், காரைக்குடி,

30. பேரா. சங்கர சுப்பிரமணியம், தலைவர், முன்னாள் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், சேலம்,

31. பேரா. மு.திருமாவளவன், மேநாள் முதல்வர், அரசு கல்லூரி, வியாசர்பாடி,

32. தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளர், அனைத்திந்திய மாணவர் மன்றம், AISF,

33. த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இயக்கம்,

34. அப்துல் ரஹ்மான், மாணவர் தலைவர், கேம்பஸ் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு,

35. சு.பொ.அகத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, பெங்களூரு,

36. ஞா.தியாகராஜன் MA, மதுரை,

37. அ.லியாகத் அலி கலீமுல்லாஹ், எழுத்தாளர், கோட்டகுப்பம், புதுச்சேரி,

38. மரு.ச. இராசேந்திரன், சென்னை,

39. பொதியவெற்பன். கவிஞர், எழுத்தாளர், கோவை,

40. எஸ்.கே. நவ்ஃபல், மனித உரிமைச் செயல்பாட்டாளர், கோவை,

41. முனைவர் ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், பேராசிரியர் மானுடவியல் துறை, அசோகா பல்கலைக்கழகம்,

42. சுபகுணராஜன், எழுத்தாளர், பதிப்பாளர், சென்னை,

43. மீனா, ஆசிரியை, திருவண்ணாமலை,

44. அ.மகபூப் பாட்சா, மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை,

45. மணலி அப்துல் காதர், சமூக செயற்பாட்டாளர்,திருத்துறைப்பூண்டி,

46. ப.விஜயலட்சுமி, முன்னாள் இயற்பியல் பேராசிரியை. கும்பகோணம்,

47. எஸ்.ராமன், பொதுச்செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்,

48. அ.கமருதீன், வழக்கறிஞர், திருச்சி,

49. ௭ஸ்.௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

50. ந.செயச்சந்திரன், கல்லூரி நூலகர்(ஓய்வு) திருச்சிராப்பள்ளி,

51. சுரேஷ் குமார் சுந்தர், தமிழ்த்தேச முன்னணி, திருச்சி.

52. ஞா.தியாகராஜன் MA. மதுரை,

53. எஸ்.சுகுபாலா, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், AIDSO,

54. த.பால அமுதன் மாநில அமைப்பாளர், அகில இந்திய மாணவர் கழகம், AISA,

55.பேரா. P. விஜயகுமார், Indian School of Social Sciences, Madurai Chapter,

56. பேரா. பொன்னுராஜ் வழித்துணைராமன், மதுரை,

57. சுவாமிநாதன் ராமன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், பொதுச் செயலாளர், வேலூர்,

58. ஸ்வகீன் எரோனிமஸ், கல்வியாளர், திருச்சி,

59. பீட்டர் துரை ராஜ், சிந்தனையாளர் பேரவை, பல்லாவரம்,

60. ராஜேந்திரன் ஷண்முகம், ௭ஸ். ௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி,

61. செந்தில்குமார், முன்னாள் மாணவர் கிண்டி பொறியியல் கல்லூரி, ,

கோயம்புத்தூர்,

62. இரா. செங்குட்டுவன், முதல்வர் (பொ), மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை. தஞ்சாவூர் மாவட்டம்,

63. ச. பாண்டியன், பன்மை சமூக ,கலை, இலக்கிய ஆய்வு வட்டம் , திருத்துறைப்பூண்டி

64. க.முரளி, தகவல் தொழில்நுட்பத் துறை, சென்னை.

65. பரிமளா, President, Forum for IT-ITES Employees, Tamilnadu

66. ஸ்ரீராம் கிருஷ்ணன் , சமூக ஆர்வலர் , சென்னை,

67. அ.பசுபதி, பெரம்பூர், புதுக்கோட்டை மாவட்டம்,

68. ஜெ. உமா மகேஸ்வரன், கணினி மென்பொருள் பொறியாளர், பரமக்குடி,

69. அருள்மொழி. வழக்கறிஞர், சென்னை,

70. டாக்டர் அரச முருகுபாண்டியன், பேராசிரியர் (ஓய்வு), தரங்கம்பாடி TBML கல்லூரி., பள்ளத்தூர்,

71. டாக்டர் சந்திர மோகன் ,முன்னாள் முதல்வர், சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை,

72. முனைவர். விஜய் ஈனோக், காருண்யா பல்கலைக் கழகம், கோவை,

73. மணிமாறன், ஆசிரியர், திருவாரூர்,

74. சகா. சசிக்குமார், ஆசிரியர், desamtoday.com,

75. அ.ஆலம். தமுமுக வழக்கறிஞர் அணி, திருச்சி,

76. சுரேஷ், தமிழ் தேச மக்கள்  முன்னணி, திருச்சி,

77. பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், புதுச்சேரி,

78.. இரா.தமிழ்க்கனல், இதழியலாளர், சென்னை,

                   ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு முகவரி

1. முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

(Dr.P. Sivakumar, Principal (Rtd), Govt, Arts College, Gudiattam, Cell: +91 9842802010).

2. பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் பேராசிரியர், மனித உரிமை செயல்பாட்டாளர்.(Prof  A. Marx, 1/33,Chella Perumal St., Lakshmipuram Thiruvanmiyur, Chennai – 600 041, Cell: +91 9444120582).

பவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்

பார்ப்பனீயத்தாலும் சைவத்தாலும் அழிக்கப்பட்டுத் தமிழ் மண்ணிலிருந்து துடைக்கப்பட்ட பவுத்தத்தைப் புத்துயிர்க்கும் நோக்கில் சென்ற 150 ஆண்டு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டுப் பலரும் பங்காற்றியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி, அயோத்திதாசர், அநகாரிக தர்மபாலா, பேராசிரியர் லட்சுமி நரசு, தந்தை பெரியார், அறிஞர் சிங்காரவேலர் முதலானோரைக் குறிப்பிட்டுச் செல்லலாம். உ.வே.சா அவர்கள் விரிந்த முன்னுரையுடன் பதிப்பித்த மணிமேகலை, கோபாலய்யரின் உரையுடன் வெளிவந்த வீர சோழியம், மயிலை சீனி வேங்கடசாமி, பேரா.சோ.ந.கந்தசாமி முதலானோரின் பதிப்பு முயற்சிகள் மற்றும் நூலாக்கங்கள் ஆகியன இன்னொரு பக்கம் பவுத்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

எனினும் பவுத்தப் புத்துயிர்ப்பு இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் சற்றே தொய்வுற்று இருந்தது என்றே சொல்ல வேண்டும். எழும்பூர் கென்னத் லேனில் அமைந்துள்ள புத்த மையம் இலங்கை சிங்கள பவுத்தர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவது. மற்றபடி தமிழகத்தில் பெரிய அளவில் வவுத்த வழிகாட்டுத் தலங்கள், ஒரு மதத்தின் இருப்பிற்குத் தேவையான சமூக ஒன்று கூடல் மையங்கள் இங்கு போதிய அளவில் கிடையாது. இல்லை எனவே சொல்லலாம். இத்தனைக்கும் எத்தனையோ புத்த சிலைகள் ஆங்காங்கு மண்ணுக்கடியில் புதையுண்டு கிடந்து கண்டு பிடிக்கப்படுவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இடைக்காலத்தில் அயோத்திதாசரின் மகன், அன்பு பொன்னோவியம், தங்கவயல் வாணிதாசன், பெரியவர் சுந்தரராஜன் ஆகியோர் தம்மப் பணியைத் தொடர்ந்தாலும் வீச்சுடன் செயல்பாடுகள் இல்லை.

இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன் ‘எங்கிருந்தோ வந்தான்….. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..’ என்பதைப்போல இங்கு வந்துதித்தார் பெரியவர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள். அவர் பூர்வாசிரமம் அறியேன். எப்போதாவது அறிய முனைந்தபோது மிகச் சுருக்கமான பதிலே கிடைத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் சென்னையை மையமாகக் கொண்டு தம்மப் பணி மீண்டும் துளிர்த்தது. பவுத்தத்தில் ஆர்வமுடையவர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களை ஒருங்கிணைத்தார் பெரியவர் கிருஷ்ணன். நந்தனம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜெயபாலன், எங்களோடு சுயமரியாதை இயக்கத்தில் பணி செய்த என் அன்பிற்குரிய நடராஜன், தங்கவயல் வாணிதாசன் …. என இன்னும் பல பவுத்த ஆர்வலர்கள் அவரால் ஒன்றிணைக்கப்பட்டனர்.

‘போதிமுரசு’ என்றொரு காலாண்டு இதழும் உருவானது. ‘மெத்தா’ பதிப்பகம் தம்ம நூல்களை வெளியிட என உருவாக்கப்பட்டது. ‘தமிழ்நாடு பவுத்த சங்கம்’ அமைக்கப்பட்டு அதில் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார் கிருஷ்ணன். சங்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய பிக்கு போதிபாலர்.

அப்படித்தான் ஒருநாள் என்னையும் தேடிவந்தார் பெரியவர் கிருஷ்ணன். நான் பேறு பெற்றேன். எனது ‘புத்தம் சரணம்’ நூலை மெத்தா பதிப்பகத்தில் வெளியிட வேண்டும் என்றார். பணிந்து ஏற்றுக் கொண்டேன். “ஒரு சிறந்த தம்மப் பணியாகக் கருதி இந்நூலை வெளீயிடுகிறோம்” என முன்னுரைத்து அந்நூல் அவர்களாலும் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணன் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகங்கத்துடன் ஒருங்கிணைந்து பவுத்தவியல் கருத்தரங்குகளையும் அவ்வப்போது  நடத்தி வருகிறார். அவற்றில் நானும் மறக்காமல் அழைக்கப்படுவதுண்டு.

மெத்தா பதிப்பகம் Life and Consciousness உட்பட 8 ஆங்கில நூல்கள் (இவற்றில் சில முக்கிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து வெளியிடப் பட்டவை), நாகார்ஜுனரின் ‘சுரில்லேகா’ உட்பட 30 தமிழ் நூல்கள், லட்சுமி நரசுவின் ‘பௌத்தம் என்றால் என்ன?’ உட்பட 10 மொழியாக நூல்கள், ‘தீபவம்சம்’ உட்பட பிக்கு போதிபாலரின் 6 நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

ஏதாவது முக்கிய பவுத்த நூல் என அடையாளம் காட்டினால் அவற்றை உடன் ஆர்வத்துடன் வெளியிடுகின்றனர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு இப்போது அச்சில் இல்லாத நூலொன்று என் சேகரத்தில் இருந்தது. முன்னாள் பர்மிய பிரதமர் ஊநு வின் ‘புத்தர் பிரான்’ எனும் அந்நூல் ஊநு அவர்கள் வங்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆற்றிய உரை. நான்கு மொழிகளில் அது மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் தமிழும் ஒன்று.  அந்நூலை நான் நகலெடுத்து அனுப்பி அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தபோது அடுத்த சில வாராங்களில் அதுவும் மெத்தா வெளியீடாகப் புதிய நூலாகியது.

# # #

இருளில் ஒளியும் செஞ்சுடர், ஜே.கே – ஒரு பௌத்தரின் நோக்கில், பௌத்த வாழ்வியல் சடங்குகள், நாகார்ஜுனரின் சுரில்லேகா, திபேத்திய மரணநூல், லட்சுமி நரசுவின் பவுத்தம் என்றால் என்ன?, தலாய்லாமாவின் சொற்பொழிவுகள், தாமரை மலர்ச் சூத்திரம், பௌத்தத்தின் பார்வையில் இந்திய ஞான மரபுகள் முதலான நூல்கள் மற்றும் மொழியாக்கங்கள் பெரியவர் கிருஷ்ணன் அவர்களால் ஆக்கப்பட்டவை. (இது முழுமையான பட்டியல் அல்ல).

கிருஷ்ணனின் சில நூல்கள் ‘காலச்சுவடு’ வெளியீடாகவும் வந்துள்ளன.

கிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் எழுதியுள்ள ‘இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா’ எனும் நூல் ஆர்.எஸ்.எஸ்சின் எடுபிடிகளில் ஒருவரான ம. வெங்கடேசன் எனும் நபர் எழுதியுள்ள ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் ஒரு அபத்த நூலுக்கு எழுதப்பட்ட உடனடியான மறுப்புரை. “பிறக்கும்போது இந்து மதத்தில் பிறந்தேன், சாகும்போது அதில் சாக மாட்டேன்’ எனச் சொல்லி பவுத்தம் தழுவியவரும், ‘சாதிக்கோட்டையில் பிளவை ஏற்படுத்த வேண்டுமானால் பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சிறிதும் இடம் கொடாத வேத சாத்திரங்களுக்கு வெடிவைத்தே ஆக வேண்டும்’ எனவும், ‘(இந்து மதப்) புனிதநூல்கள், புராண சாத்திரங்கள் புனிதமானவையோ. அதிகாரபூர்வமானவையோ அல்ல எனச் சட்டபூர்வமாகச் செய்ய வேண்டும்’ எனவும் ‘பார்ப்பனீயத்தையும் முதலாளியத்தையும்’ இரு பெரும் எதிரிகள் என அடையாளம் காட்டியவருமான அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவவாதியாகச் சித்திரித்து எழுதுவது அம்பேத்கர் அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அவமானம். இதற்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராத நிலையில் அந்தப் பணியைத் தன் மேற் போட்டுக் கொண்டு கிருஷ்ணன் அவர்கள் உடன் எழுதிய அற்புதமான நூல்தான் இது.
# # #

பவுத்தத்தின் மீதும் அம்பேத்கரின் மீதும் ஒரு சேர பற்றும் மதிப்பும் உள்ள ஒருவரின் மனம் இந்த அவதூறால் எத்தனை நொந்து போகும் என்பதற்கு ஒரு வாழும் சாட்சியாக உள்ள அறிஞர் கிருஷ்ணன் அவர்களின் இந்நூலை நேற்று வெளியிட்டுப் பேசும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்றே உணர்ச்சிவயப்பட்டுத்தான் என்னால் அங்கு அந்த உரையை நிகழ்த்த முடிந்தது.

மறைந்த பௌத்த பிக்கு வண,போதிபாலா அவர்கள் மதுரையிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையடிவாரக் கிராமமான குட்லாம்பட்டி எனும் பகுதியில் உருவாக்கியுள்ள ஒரு பௌத்த வணக்கத் தலம்தான் ‘தம்ம விஜய மகா விகாரை’. அமைதி தவழும் அந்த  மலை அடிவாரத்தில்தான் நேற்று அந்த நிகழ்வு நடை பெற்றது.

நேற்றைய நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பன்மொழி அறிஞரும் சிங்களத்தில் மட்டுமின்றித் தமிழிலும்30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவருமான விஜயரத்னே, இலங்கையிலிருந்து வந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்று வரும் வண.பிக்கு மங்கல தேரர், காந்தியியல் அறிஞர் செயப்பிரகாசம், பாலி மொழியிலிருந்து பௌத்த நூல்களை மொழியாக்கம் செய்யும் பேரா. செயப்பிரகாசம், மணிமேகலை ஆய்வாளர் பேரா. அரங்கமல்லிகா, தங்கவயல் வாணிதாசன், பவுத்த ஆய்வாளர் பேரா. ஜெயபாலன் முதலான பலரும் வந்திருந்தனர்.

காலை 11 மணி அளவில் அங்கிருந்த பவுத்த ஆலயத்தில் முறைப்படி பவுத்த வழிபாட்டை வண. போதிபாலர் தொடங்கி வைத்தார். பவுத்தம் தழுவியோர் ஆலய வளாகத்தில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்திலும் எங்களைப் போன்றோர் வெளியே பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலி்களிலும் அமர்ந்திருந்தோம்.

மதிய உணவுக்குப் பின் சுமார் 2.30 மணி அளவில் வண.போதிபாலர் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நூல் வெளீயீடுகள். பின் உரையாற்றுவோருக்கு ஒளிபெற்றவரின் திரு உருக்கள் வழங்கப்பட்டன. பின் சர்வ சமய வழிபாடு நடைபெற்றது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ. பவுத்த மதங்களின் தோத்திரப் பாடல்களும் புனித வசனங்களும் தமிழில் வாசிக்கப்பட்டன.பின் அனைவரும் சுருக்கமாக உரையாற்றினர்.

இறுதியில் முத்தாய்ப்பாக அமைந்தது பெரியவர் ஓ.ரா.ந கிருஷ்ணன் அவர்களின் உரை.

“இந்து மதத்தின் மீது எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை. இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா எனும் மறுப்பு நூலில் நான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத்தான் சொல்லியுள்ளேனே தவிர இந்து மதத்தின் மீது எங்கும் வசையாக எதையும் சொல்லிவிடவில்லை. பவுத்தத்தில் துவேஷம் / வெறுப்புக்கு இடமில்லை. அன்பு, கருணை என்பது தவிர பவுத்தத்தில் வேறெதற்கும் இடமில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். என் அன்பிற்குரிய நண்பர்கள், அம்பேத்கர் பற்றாளர்கள் காந்தி மீது காட்டும் பகை மற்றும் வெறுப்பு எனக்குக் கவலை அளிக்கிறது.

உண்ணாவிரதத்தின் மூலம் காந்தி அம்பேத்கரின் கோரிக்கையை செயல்படுத்த விடாமல் செய்தது (கிட்டத் தட்ட) நூறு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். அவர் இந்து மதத்தைத் திருத்திவிட முடியும் என நம்பினார். அது பொய்த்துவிட்டது. யாருடைய நம்பிக்கைதான் முற்றிலும் நிறைவேறி விட்டது? இந்தப் பகை தேவையற்றது. நமக்கு இன்று அண்ணல் அம்பேத்கரும் வேண்டும். கார்ல் மார்க்சும் வேண்டும். காந்தியும் வேண்டும். தயவு செய்து இதை எல்லோரும் சிந்திக்கப் பணிந்து வேண்டுகிறேன்..”

பேசும்போது பெரியவர் கிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் பெயரைச் சொல்லாவிடாலும் நாம் தந்தை பெரியாரையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியான ஒரு பகைக்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகி வருவதை உணர்கிறேன். சமூக ஊடகங்களிலும் இந்தக் குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

பவுத்தத்தில் வெறுப்புக்கோ பகைக்கோ இடமில்லை.

கூட்டம் முடிந்த பின் பெரியவர் கிருஷ்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு ,”இன்று உங்கள் பேச்சு மனசைத் தொட்டது சார். நீங்கள் சொன்னது மிக முக்கியமான செய்தி..” எனச் சொன்னபோது என் கண்கள் நீரை உகுத்தன. கடைசிச் சொற்கள் தொண்டைக்குள்ளேயே அடங்கின. அருகில் நின்றிருந்த நண்பர் பல்னீசின் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தன.

மதச்சார்பின்மை என்பது என்ன?

அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது

அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமையையும் உறுதி செய்கிறது.

1.பிரித்து நிறுத்தல் : மதநிறுவனங்களையும் அரசு நிறுவனங்களையும் தனித்தனியே நிறுத்துதல். பொதுப்புலத்தில் மதம் பங்கேற்கலாம். ஆனால் சமூகத்தில் எந்த மதமும் எந்த வகையிலும் கூடுதல் முக்கியத்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்த முடியாது.

2. தேர்வுச் சுதந்திரம் : பிறருக்கு எந்த இடையூறும் இன்றி யாரொருவரும் தம் நம்பிக்கையைக் கடைபிடிக்கும் உரிமை. அது மட்டுமல்ல அவர் விருப்பம்போல அதை மாற்றிக் கொள்வதற்கோ, அல்லது, எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்வதற்கோ உள்ள உரிமை. இதையே மனச்சாட்சித் சுதந்திரம் என்கிறோம்.

3. சமத்துவம் : ஒருவரின் மத நம்பிக்கையோ இல்லை அல்லது எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இன்மையோ அவருக்கு எந்த வகையிலும் கூடுதல் உரிமைகளை அனுபவிப்பதற்கோ அல்லது ஏதேனும் உரிமைகள் தடுக்கப்படுவதற்கோ காரணமாகக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நம்பிக்கையாளர்களை மட்டுமல்ல நம்பிக்கை அற்றவர்களின் உரிமைகளையும்  பாதுகாப்பது

மதச்சார்பின்மை என்பது ஒருவரது மதம் மற்றும் இதர நம்பிக்கைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதற்கு உறுதி அளிப்பது. மற்றவர்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாதவரை யாரொருவரும் தன் மதத்தைக் கடைபிடிக்கும் உரிமையைப் பாதுகாப்பது. எந்த ஒரு நம்பிக்கையையும் ஒரு தனிமனிதர் கடைபிடிப்பதற்கான உரிமை என்பது இன்னொரு பக்கம் எந்த ஒரு நம்பிக்கையையும் ஏற்காமலிருக்கும் சுதந்திரத்தை வழங்குவதும் ஆகும்,

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளை அளிக்காது. அதேபோல அதனாலேயே யாரொருவரின் எந்த உரிமையும் பாதிக்கப்படவும் காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளையும் அளிக்காது. அதேபோல அவரது எந்த உரிமையும் பாதிக்கப்படவும் அது காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது மதம் சார்ந்த கோரிக்கைகளைக் காட்டிலும் உலகளாவிய மனித உரிமைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள், ஓரினப் புணர்ச்சியை நடைமுறையில் கொண்டவர்கள் (LGBT), மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற எல்லாவிதமான சிறுபான்மையினரும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை உயர்த்திப் பிடிக்கிறது. சட்டரீதியான இப்படியான சமத்துவம் என்பது ஏதேனும் ஒரு மத அல்லது தத்துவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் அப்படியான நம்பிக்கைகள் இல்லதவர்களும் சம உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்கிறது.

பொதுச் சேவைகளை அனுபவிக்கும் உரிமைகளை எல்லோருக்கும் உறுதி செய்வது

பள்ளிகள், மருத்துவச் சேவைகள், காவல்துறை மற்றும் இதர அரசுச் சேவைகள் ஆகியவற்றைப் மக்கள் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். நடைமுறைப் பயன்பாட்டில் இத்தகைய பொதுச் சேவைகள் அனைத்தும் மதச் சார்பற்றவையாக இருப்பது அவசியம். மத நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மைகளின் அடிப்படையில் இச்சேவைகளை யாருக்கும் மறுக்கக் கூடாது. அரசு நிதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்துள்ளனதாகவோ, எந்த ஒரு நம்பிக்கையையும் உயர்த்திப் பிடிப்பதாகவோ இருக்கக் கூடாது. பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோர்களது மதங்களின் அடிப்படையில் பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை ஒன்றாகத் தர வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், ஏதிலியர் விடுதிகள் போன்ற ஏதேனும் ஒரு பொது நிறுவனம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்பை ஏதேனும் ஒரு சேவைக்கு அனுமதித்தால் அந்தச் சேவை எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அமைப்பு தன் நம்பிக்கைகள அங்குள்ளவர்களின் மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நாத்திகம் அல்ல

விபூதி பூசுவது, ஹிஜாப் அணிவது, மத அடையாளத்தை வெளிப்படுத்தும் தலைப்பாகை முதலான மத நம்பிக்கை உடையவர்கள் பொது வெளியில் அவற்றைக் கடைபிடிக்கவும் வெளிப்படுத்தவும் உள்ள உரிமையைத் தடை செய்யக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பதில் எந்த ஒரு குறிப்பான நம்பிக்கை அல்லது அமைப்பிற்கும் கூடுதல் உரிமைகளை அளிக்க முடியாது. ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் விவாதிக்கப்படுவதற்கு இடமுண்டு.

எல்லாவிதமான மத நம்பிக்கை உடையவர்களும் , நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாகவும், சமத்துவமாகவும் வாழும் வாய்ப்புள்ள ஒரு ஆகச் சிறந்த ஆட்சி முறை என்பது மதச் சார்பற்ற ஆளுகையே.