அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)

 (இலங்கையில் வெளிவரும் வார இதழ் “மீள்பார்வை” யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்)

 

1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி நோக்குகிறீர்கள் அதன் எதிர்காலம் எவ்வகையில் அமையும் என கருதுகிறீர்கள்?

 

இன்றைய நிலை கவலைக்குரியதாகத்தான் உள்ளது. அமெரிக்கா -இஸ்ரேல் – இந்தியா என்பதாக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. ‘ஷங்காய் கார்பொரெஷன்’, அணிசேரா நாடுகள் (NAM) அமைப்பு போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பு முயற்சிகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. அப்படி ஆனதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அது ஆதரவாக இருக்கும் எனத் தமிழகத்தில் பேசி பாஜகவை  மறைமுகமாக ஆதரித்த தமிழ்த் தேசியர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கின்றனர். இதர அண்டை நாடுகளுடனான, குறிப்பாக நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. உள்நாட்டில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பாஜக ஆட்சி ஏற்பட்டபின் நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, GST வரி விதிப்பு முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணா துன்பத்தை விளைவித்ததோடு அதனால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனும் உண்மை இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் இந்த வெறுப்புகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்க் கட்சிகள் போதிய திறமையுடனும் வலுவுடனும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் மாநிலக் கட்சிகளும் கூடப் பலமிழந்து கிடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை ஊட்டி அதன் மூலம் அரசைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக செய்யும் தீவிர முயற்சிகளும் அவற்றின் விளைவான வன்முறைகள் அதிகரிப்பதும் மிக்க கவலை அளிப்பதாக உள்ளன.

 

2) இந்தியாவில் அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது குறித்து.

 

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியன. 1. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் இப்படியான நவ தாராளவாத, நவ பாசிச சக்திகள் மேலுக்கு வந்துள்ள ஒரு உலகளாவிய போக்கின் ஓரங்கமாகவும் இதை நாம் காண வேண்டு. செப்டம்பர் 11 (9/11) க்குப் பின் உலகளவில் மேற்கொள்ளப்படுகிற “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”, முஸ்லிம் வெறுப்பு முதலியன பா.ஜ.க வளர்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலயாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கைகள், பொருளாதாரத்திலும் சிந்தனையிலும் ஓர் இடது சாய்வு, பஞ்ச சீலம்’ அணிசேரா நாடுகள் முதலான அறம் சார்ந்த அரசியல் கோட்பாடுகள், அணிசேர்க்கை முயற்சிகள் எல்லாம் இன்று அழிந்துள்ளன. இந்த உலகளாவிய பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தையும் நாம் காண வேண்டும். 2. இரண்டாவதாக இதில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் பா.ஜ.க எனும் அரசியல் கட்சிக்குப் பின்னுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிக மிக வலுவான கட்டமைப்பும் வலைப்பின்னலும். மதத்தின் பெயரால் அவர்கள் கட்டமைத்துள்ள எண்ணற்ற அமைப்புகள், அர்ப்பணிப்பு மிக்க தீவிரவாத சக்திகள், காந்தி கொலைக்குப் பின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட காலத்திலும் கூடத் தம்மை அவர்கள் அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வளர்ந்த முறை ஆகியன அவர்களின் இன்றைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் இந்தத் தீவிரப் பணிக்கு இணையாக இங்கு எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இன்று வேலை செய்யவில்லை. பல்லாயிரக் கணக்கான கல்வி நிலையங்கள், ‘சாகா’க்கள் எனப்படும் இராணுவப் பயிற்சிகள், ‘கர்வாபசி’ எனப்படும் மதமாற்றங்கள் என இயங்கும் அவர்களின் தீவிரப் பணிகளை எதிர் கொள்ள இங்கு யாருக்கும் மன உறுதியும் இல்லை. அதோடு இன்று வெளிநாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்தியர்கள் மத்தியில் உருவாகிவரும் ஒருவகைத் தொலைதூரத் தேசியம் (long distance nationalism) பெரிய அளவில் இவர்களுக்கு நிதி சேகரிக்கவும் உலக அளவில் ஆதரவு திரட்டவும் பயன்படுகிறது. இது குறித்து நான் மிக விரிவாக எழுதிவரும் கட்டுரைத் தொடரை (#இந்துத்துவமும்_சியோனிசமும்) என் முகநூல் பக்கத்தில் காணலாம்.

 

3) முத்தலாக் தீர்ப்பையும் அதற்கு பின்னாலுள்ள அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

முத்தலாக் முறை இங்கு முஸ்லிம் சமூகத்தில் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்க்கு எதிரானவர்கள் அல்ல. குர்ரானிய நெறிமுறைகளுக்கு மாறாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லிக் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களின் நியாயங்களைத்தான் இவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இங்கொன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் கட்டுப்பெட்டித் தனமான ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ உட்பட முஸ்லிம் உலமாக்களும் கூட யாரும் இபந்த்டி தொலைபேசி மூலம், தபால் மூலம் முத்தலாக் சொல்வதை எல்லாம் ஏற்பதில்லை. இருந்தாலும் ஆங்காங்கு இது ஒரு சிறிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது உண்மை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. கூடுதலாக நீங்கள் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அமசம் என்னவெனில் இந்திய நீதிமன்றங்கள் பல காலமாகவே இந்த ஒரே நேர முத்தல்லாக்கைச் (Instant triple Talaq) சட்டபூர்வமானது என ஏற்பதில்லை. நீதிநெறிமுறை ஊடாக உருவாக்கப்படும் கோட்பாடாக (judicially evolved principle) இன்று இது செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இதன் மூலம் உரிய நீதி வழங்கப்பட்டுள்ளனர். அதே போல முத்தலாக் சொல்லப்படும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பதையும் இந்திய நீதிமன்றங்கள் உறுதியாகக் கடை பிடித்து வந்துள்ளன. குடும்பத்திற்குள் பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் பொதுவான “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட”த்தின் மூலம் முஸ்லிம் பெண்களும் நீதி பெற முடியும். இம்மாதிரியான பல வழக்குகளையும் தீர்ப்புகளையும் நான் எனது நூலிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். பிரச்சினை என்னவெனில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் குறைந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இப்படியான உரிமைகள் நடைமுறையில் இருப்பதை எல்லாம் முஸ்லிம் ஜமாத்கள், அரசியல் அமைப்புகள், மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களால் கீழே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரே நேர முத்தலாக்குகளும் இங்கே நடைமுறையில் இருந்தன. இதனால் சமூகத்தின் கீழ்த் தட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

முஸ்லிம் வெறுப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து இயங்கும் பா.ஜகவின் ஒரு முக்கிய ஆயுதம் முஸ்லிம் தனி நபர் சட்டத்தை (Muslim Personal Law) ஒழித்துக் கட்டுவது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான். திருமணம், வாரிசு, வக்ஃப் சொத்துக்கள் முதலானவை மட்டும் தனி நபர்ச் சட்டத்திற்குள் வருகின்றன. அதையும் ஒழிப்பது என்பது முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தையே அழிப்பது என்கிற வகையில் இந்துத்துவத்தின் இந்த முயற்சியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் எதிர்த்து வருகின்றனர்.

 

இந்தப் பின்னணியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண் தனக்கு அளிக்கப்பட்ட முத்தல்லாக்கிற்கு எதிராக ஒரு முஸ்லிம் பெண் ஒரு வழக்குரைஞரை அணுகினார். அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். அவர் அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது என்பதற்கு அப்பால் தலாக் கிற்கே எதிராக அந்த வழக்கைத் தொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடி இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானார். பா.ஜ.க அரசும் இதற்கு ஆதரவாகக் களத்தில் புகுந்தது. இதில் வெற்றி அடைந்தால் இதன் மூலம் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்பது அதன் கணக்கு.

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு இப்போது வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: (அ) ஒரே நேர முத்தலாக் செல்லாது (ஆ) இந்தத் தீர்ப்பு முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தின் மீது பிற விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது (incobsequential) (இ) தனிநபர்ச் சட்டம் முதலான மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதோ மதம் தொடர்பான நடவடிக்கைகளில் நுழைந்து அவை சரி, தவறு எனச் சொல்வதோ நீதிமன்றத்தின் வேலை அல்ல – என்பன தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். ஆக இது உண்மையில் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கும் தீர்ப்புத்தான். இதன் மூலம் தனி நபர் சட்டங்கள் என்பன அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்கிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரே நேர முத்தலாக் செல்லாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். எனவேதான் முஸ்லிம் சட்ட வாரியமே இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. மோடி அரசு இது ஏதோ தனக்கு வெற்றி எனச் சொல்லிக் கொள்வது தன் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்குத்தான்.

 

4) இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்புக்கள் அதிகரிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்ன?

 

நான் ஏற்கனவே சொன்னவைதான். இதை உலகளாவிய ஒருவகை அரசியல் அற வீழ்ச்சியின் விளைவாகவும், இந்தியாவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் பின்னணியிலும் பார்க்க வேண்டும். கூடுதலாக உலகமயச் செயற்பாடுகளின் ஊடாக மத்தியதர வர்க்கம் ஊதிப் பெருப்பதும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இவர்கள் மத்தியில் தேசப் பாதுகாப்பு / அதற்கு ஆபத்தாக பாகிஸ்தான் அருகமைந்திருப்பத /, அது ஒரு முஸ்லிம் நாடாக இருப்பது / இந்திய முஸ்லிம்கள் அதற்கு விசுவாசமாக உள்ளனர் என்பன போன்ற அடிப்படைவாதக் கருத்துக்கள் எளிதில் செல்லுபடியாகின்றன.

 

5) அண்மையில் நரேந்திர மோடி இலங்கை வந்தார். இப்பின்னணியில் இலங்கையில் இந்திய அரசியலின் தாக்கம் எந்தளவு தூரம் இருக்கும்?

 

போருக்குப் பிந்திய சூழலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய மூலதனத்தை விரிவாக்குவது, இலங்கை சீனாவுக்கு நெருக்கமாவதைக் கூடிய வரையில் தடுப்பது என்பனதான் மோடி அரசின் நோக்கம். அதற்கு மேல் தமிழர் நலனை முதன்மைப்படுத்தியதாக அவரின் அணுகல் முறை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திரிகோணமலை துறைமுகக் கட்டுமானப் பணியில் பங்கு, திரிகோணமலை மற்றும் ஹம்பந்தோட்டாவில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பங்கு முதலியவைதான் இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுப் பொருளாக அமைந்ததே ஒழிய போர்க் குற்ற விசாரணை, தமிழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுதல், காணாமற் போன தமிழர்கள் பற்றிய உண்மைகள், இலங்கை இந்திய ஒப்பந்த நிறைவேற்றம் ஆகியவை பேசப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மோடியின் வருகை மகத்தான வெற்றி எனவும் இரண்டு பிரதமர்களுக்கும் இடையேயான ‘இரசாயனம்’ படு பிரமாதமாக ஒத்துப் போவதாகவும் இலங்கை அமைச்சர் சரத் அமானுகமா சொல்லியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஒன்றை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனி ஈழம் அமைய அது உதவாது. இலங்கை சிங்கள இனவாத அரசுகளுக்கே அது துணையாக அமையும். தனி ஈழம் பிரிந்தால் அது இந்தியா சிதைய ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதே இந்திய அரசியலாரின் புரிதல். தமிழ் அல்லது இந்து எனும் அடையாளத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு தனக்கு உதவும் என எண்ணி ஈழத்தில் சிவசேனா போன்ற பெயர்களில் இந்து அடையாளங்களுடன் கூடிய அமைப்புகளை உருவாக்கும் மறவன் புலவார், யோகேஸ்வரன் முதலானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் என்கிற அடிப்படையிலும் சிங்கள இனவெறிக்குப் பலியாகிறவர்கள் என்கிற அடிப்படையிலும் இணைந்து நிற்க வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் பிளவுபடுவதற்கே இது இட்டுச் செல்லும். இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சென்ற முறை இலங்கை வந்தபோது தமிழ்த் தலைவர்கள் அவரைச் சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவாறு வடக்கு – கிழக்கு மாௐஆணங்களின் இணைப்பை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியபோது என்ன நடந்தது? இனிமேல் இந்தியா அதை வற்புறுத்தாது என அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

 

6) இலங்கை அரசியலின் அண்மைக்காலப் போக்குகளை நீங்கள்  எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

போருக்குப் பிந்திய சூழலை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டும், இலங்கை அரசியலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்திய அரசின் நோக்கங்கள், மற்றும் இன்றைய புவி அரசியல் சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கில் கொண்டு அரசியல் காய்களை நகர்த்துவதாக இன்றைய இலங்கை அரசியல், குறிப்பாக தமிழர்களின் அரசியல் இல்லை. மாறாக தேர்தல் அரசியல் சார்ந்த அபத்தங்கள், முரண்கள், பதவிப் போட்டிகள் என்பதாகத் தமிழர் ஒற்றுமை பலவீனமாகும் நிலையே உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி போருக்குப் பிந்திய சூழலில் மேலெழுந்த எந்தக் கோரிக்கையிலும் பெரிதாக முன் நகர்வு இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி முப்பதாண்டுகள் ஆகியும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தத் திசையில் கடந்த ஓராண்டில் சில நகர்வுகள் தென்பட்டபோதும் இன்னொரு பக்கம் பவுத்த தலைமைப் பீடம் அதை வெளிப்படையாக எதிர்த்துள்ளதால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அமைப்பில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுவதைப் பற்றி இலங்கை அரசோ பவுத்தத தலைமையோ கவலைப்படுவதாக இல்லை.

 

7) சர்வதேச அரசியல் போக்குகள் குறித்து..

 

நான் முன்னரே சொன்னதுதான். சோவியத்தின் வீழ்ச்சி என்பது வெறும் சோவியத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கத் தலைமையிலான NATO வுக்கு மாற்றாக அமைந்த COMECON, NAM எதுவும் இன்று இல்லை. லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் சற்றுத் தாக்குப் பிடித்தாலும் அவை பொருளாதார ரீதியாகப் பலவீனமாகவே உள்ளன. சோவியத்திலிருந்த பிரிந்த நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை NATO வில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வாக்குறுதியை மீறி இன்று அவை அதில் உள்ளடக்கப்படுவது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கொல்லைப்புறம் வரைக்கும் இன்று NATO படைகளும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பனிப்போர்க் கால முடிவுக்குப் பின்னும் கூட இன்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும்தான் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட அரபு எழுச்சி மிகவும் நம்பிக்கையூட்டத் தக்கதாகத் தொடக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லை. மீண்டும் எகிப்தில் இராணுவ ஆட்சி; துருக்கியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு வேகமாக உள்ளது. நம் கண்முன் அழிந்து கொண்டுள்ள சிரியா இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள அற வீழ்ச்சியின் ஒரு பௌதிக வெளிப்பாடு. முஸ்லிம் நாடுகள் மத்தியில் அமெரிக்க ஏஜன்டாக இருந்து செயல்படும் சவுதி அரசின் செயல்பாடுகள் மிக ஆபத்தானவையாக உள்ளன. எனினும் உலக மயமான முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திப்பது தொடர்கிறது. முதலாளியம் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்கிற மார்க்சின் கணிப்பு பொய்க்கவில்லை. தொழிலாளிகளின் தலைமையில் சோஷலிச அரசு என்பதுதான் இன்று பொய்த்துள்ளது.

 

8) அறிவுஜீவிகள் எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை கையாள்கிறார்கள்?

 

சமூக ஊடகங்கள் நமது கால கட்டத்தின் ஒரு மிக முக்கியமான வளர்ச்சி. முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஒரு வகையில் எதேச்சாதிகார அரசுகளுக்குமே கூட அது ஒரு மிகப் பெரிய சவால். உண்மைகளை இனி அவ்வளவு எளிதாக அதிகாரத்தின் துணை கொண்டு மறைத்துவிட இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பதை நோக்கி இன்று அதிகாரங்கள் நகர்கின்றன. ஒரு ஜனநாயகப் படுத்தப்பட்ட ஊடகம் என்கிற வகையில் எளிதில் அது அக்கப்போர்களால் நிரம்புகிற ஆபத்தையும் நாம் கூடவே காண முடிகிறது. இந்த ஊடகங்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது என்பது நம் கையில்தான் உள்ளது. இதற்கான சரியான பயிற்சியை நாம் இளைஞர்களுக்கும் இயக்க அணிகளுக்கும் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நிச்சயமாக இவை பயனுள்ள, சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நமக்கு அமையும்.

 

மிக்க நன்றிகள்…

 

அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?

(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்)

பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே வினையாற்றி வருகிற அ.மா, ஈழப்போர் அதன் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து, ஒரு உரையாடலுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். போருக்குப் பிந்திய அந்த மயானவெளிக்குள் இரண்டுமுறை பயணம் மேற்கொண்ட அவர், தற்போது மூன்றாவது முறையாக கடந்த 8.2.13 அன்று பல்வேறு கருத்தரங்க விவாதங்களில் பங்கேற்பதன் பொருட்டு சென்றிருந்தார்.

முதல்நாள் கூட்டத்திலேயே இலங்கை அரசு அதிகாரிகளால் அவரது பேச்சிற்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மற்ற கருத்தரங்கக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக இலங்கைப் பயணத்திற்குப் பின்பு ‘என்ன நடக்குது இலங்கையில்’ என்று தனது பார்வைகளை அம்பலப்படுத்தும் அ.மா.விடம், ‘என்ன நடந்தது இலங்கையில்’ என்பது குறித்து விவாதிப்பதற்காய் சென்னை திரும்பிய அவரைச் சந்தித்தோம். இலங்கை அரசின் தடை, தொடரும் அதிகார அத்துமீறல்கள், வரவிருக்கும் ஐ.நா.தீர்மானம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே..

தீராநதி : தோழர்.நா.சண்முகதாசனின் இருபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரை ஆற்றுவதற்காகத் தான் நீங்கள் இலங்கை சென்றதாக அறிகிறோம். முதலில், தோழர் சண்முகதாசன் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்..

அ.மா : நா.சண்முகதாசன் என்றொரு தமிழர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்ததெல்லாம் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகளாவிய பொதுவுடைமை இயக்கப் பிளவின்போது அவர் மாஓ பக்கம், அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். மாஓ உடன் நெருங்கிப் பழகியவர் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எண்பதுகளில் கைலசாபதி, சிவத்தம்பி ஆகியோரது நூல்களை எல்லாம் நாங்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஆவலுடன் படித்த நூல்களில் ஒன்று சண்முகதாசனின் மார்க்சீயப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இலங்கை வரலாறு.

அவர் உருவாக்கிய செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு தொழிலாளர் இயக்கம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் என்றும் அவருக்கு ஒரு பெயருண்டு. ஒரு கட்சித் தலைவராக மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எது குறித்தும் ஆழமாக உடனுக்குடன் கருத்துக்கள் சொல்லவும் எழுதவும் வல்லவராகவும் அவர் இருந்தார். இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்புகளாகவும் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதி, தீண்டாமைக் கொடுமைகளைக் கவனத்தில் எடுத்து, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றைக் கட்டியது அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவரைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டவர். அவர் மூலமாக எனக்கு ‘சண்’, ஆம் அவர் இலங்கை மக்கள் மத்தியில் அப்படித்தான் அறியப்பட்டிருந்தார் எண்பதுகளின் தொடக்கத்தில் பழக்கமானார். 83 கருப்பு யூலைக்குப் பின் தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் அவர் சென்னை வந்திருந்தபோது, சிறிய சந்திப்பு ஒன்றைச் சென்னை விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தோம்.

தீராநதி : சரி. அவரது நினைவுப் பேருரையில் கலந்துகொண்டது, உங்கள் பேச்சு தடை விதிக்கப்பட்டது பற்றி கூறுங்கள்…

அ.மா : அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் பெயரில் இயங்கும் ‘மார்க்சீயக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்’ அவரது இருபதாம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்திருந்தது. அவரது நூல் தொகுப்பு ஒன்றும் அதில் வெளியிடப்பட இருந்தது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் செந்தில்வேல், அஜித் ரூபசிங்க, எழுத்தாளர் சிவசேகரம் ஆகியோர் பேச இருந்தனர். சண்ணின் இறுதிக் காலம் வரை அவரோடு இருந்தவரும், தொடர்ந்து அவரது நூல்களை மொழியாக்கி வெளியிட்டு வருபவருமான ‘தினக்குரல்’ நாளிதழ் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். புகழ் பெற்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தற்போதைய தலைவர் பேரா. சபா. ஜெயராசா தலைமையில் சென்ற 10ந்தேதி மாலையில் நடை பெற இருந்த கூட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை அரசின் நான்கு ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து நான் பேசக் கூடாது என்றார்கள்.

தீராநதி : உங்கள் உரையின் தலைப்பு அப்படியொன்றும் இலங்கை அரசை நேரடியாக விமர்சிப்பது கூட இல்லையே.. உங்களை அழைத்து ஏதும் விசாரித்தார்களா?

அ.மா : என்னிடம் ஏதும் பேசவில்லை. தனபாலசிங்கம் மற்றும் ஜெயராசா ஆகியோருடந்தான் பேச்சு நடந்தது. அவர்களுக்கு ஏதோ புகார் வந்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் விசாரித்தபோது அது உண்மை எனத் தெரிந்ததாகவும் எனவே நான் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். எந்த விதி அல்லது சட்டத்தின் கீழ் பேசக்கூடாது எனக் கேட்டபோது ‘டூரிஸ்ட்’ விசாவில் வந்தவர்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்றார்கள்.

தீராநதி : நீங்கள் ஏன் டூரிஸ்ட் விசாவில் சென்றீர்கள்? ‘கான்ஃபெரன்ஸ்’ என விசா வாங்கி இருக்கலாம் தானே?

அ.மா : நான் இதுவரை பலமுறை வெளிநாடுகள் சென்றுள்ளேன். எல்லாமே கூட்டங்களில் பேசுவதற்காகத்தான். டூரிஸ்ட் விசாவில் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் அப்படித்தான் எல்லோரும் போய் வருகிறார்கள், இலங்கைக்கும் அப்படித்தான் இரு முறை சென்று வந்தேன். கூட்ட அழைப்பிதழைக் காட்டி விசா கேட்டால், என்ன கூட்டம், யார் ஏற்பாடு, நீங்கள் பேசப் போவதை எழுதித் தாருங்கள் என்றெல்லாம் விசாரணை நடக்கும். கால தாமதம் மட்டுமின்றி அந்த அடிப்படையில் விசா மறுக்கவும் படலாம். அதனால் ட்ராவெல் ஏஜன்சிகளே, “நீங்க ஏன் சார் அதை எல்லாம் சொல்றீங்க? எல்லோரும் டூரிஸ்டுன்னு சொல்லித்தான் போய் வராங்க. நீங்களும் அப்படியே போடுங்க” என்பார்கள்.

தீராநதி : சரி, அப்புறம் என்ன நடந்தது?

அ.மா : தனபாலசிங்கமும் ஜெயராசாவும் விளக்கிச் சொன்னார்கள். ஏற்கனவே நான் சிவத்தம்பி நினைவுரைக்கு வந்ததையும், இப்போதும் கூட அடுத்த சில நாட்களில் தமிழ்ச் சங்கத்திலேயே, “சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இரட்டைக் காப்பியங்கள்” என நான் உரை நிகழ்த்த இருப்பதையும், கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் நான் பேச இருப்பதையும் விளக்கிச் சொன்னார்கள். வந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர் தமிழர். தன்னை ஜெயராசாவின் மாணவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. மேலிடத்து ஆணை” என்றார்கள். சரி மேடையிலாவது அமரலாமா? எனக் கேட்டபோது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு அதுவும் கூடாது என்றார்கள். ஆனால் கூட்டம் நடத்தத் தடை இல்லை நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். சரி அரங்கத்தில்கூட அவர் இருக்கக் கூடாதா எனக் கேட்டபோது மறுபடியும் யாருடனோ பேசிவிட்டு இருக்கலாம் என்றார்கள். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டபின்பே சென்றார்கள். தொடர்ந்து உளவுத் துறையினர் கூட்டத்தைக் கண்காணித்தனர்.

தீராநதி : இந்தத் தடை தமிழர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

அ.மா : சண் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. என்னுடைய உரை அச்சிடப்பட்டுத் தயாராக இருந்தும் வினியோகிக்கப்படவில்லை. வந்திருந்தவர்களில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலியோரும் இருந்தனர். சேகு தாவூத் முன்னாள் ‘ஈரோஸ்’ காரார். நிறப்பிரிகை வாசகர். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் ஏதாவது ஒரு கூட்டத்திற்கு வந்து விடுவார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆறுதல் சொல்ல மட்டுந்தான் முடிந்தது. ராஜபக்‌ஷே குடும்பத்தைத் தவிர அங்கு கேபினட் அமைச்சர்கள் உட்பட அங்கு யாருக்கும் அதிகாரமில்லை. கைகளைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்த மனோ கணேசன், “பரவாயில்லை விடுங்கள். நீங்கள் பேசியிருந்தால் இந்த முன்னூறு பேரோடு போயிருக்கும். இப்போது மூவாயிரம் பேருக்குச் செய்தி போயுள்ளது” எனக் கூறி அகன்றார். உடனடியாக, முகநூல் ஆகியவற்றின் ஊடாகச் செய்தி பரவியது. பி.பி.சி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களிலிருந்து என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நடந்ததைத் தவிர கூடுதலாக நான் எதையும் கூற மறுத்துவிட்டேன். லெனின் மதிவானம், ஃபர்சான் ஆகியோருடன் தொடர்புகொண்டு மலையகத்திலும், கிழக்கிலும் நடக்க இருந்த கூட்டங்களை ரத்து செய்தேன். கிழக்குப் பல்கலைக் கழக நண்பர்களிடமும் பேசி ரத்து செய்யச் சொன்னேன்.

தீராநதி : உங்கள் வருகை குறித்து அரசிடம் யாரோ புகார் அளித்ததாகச் சொன்னீர்கள். இந்த புகாரின் அடிப்படையில் தான் தடை விதிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? உங்களின் மற்ற கூட்டங்கள் என்னவாயின?

அ.மா : இதுவரை நான் சென்ற போதெல்லாம் அங்கு கூட்டங்களில் பேசும்போது நேரடியாக அரசை விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால் இங்கு வந்தபின் அங்குள்ள சூழலை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை அரசின் கவனத்திற்குச் சென்றதை அறிவேன். தீராநதியில் நான் ‘என்ன நடக்குது இலங்கையில்’ தொடர் எழுதியபோது முதல் இதழுக்குப் பின் இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் வந்த இதழ்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படவில்லை. நண்பர்கள் கடிதம் எழுதி இங்கிருந்து பிரதிகள வாங்கினார்கள். நான் வந்து சென்ற பிறகு கூட்டம் நடத்திய சிலரிடம் என் வருகை குறித்து விசாரித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கார்கில் யுத்தம் நடந்தபோது நான் அது குறித்து ‘சரிநிகர்’ இதழில் எழுதியபோது இந்திய தூதரக அதிகாரிகள் வந்து விசாரித்ததைச் சரிநிகர் நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தபாலில்தான் கட்டுரைகள் அனுப்புவேன். இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் அவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. ஜூ.வியில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் அப்படியே அங்கு மீள்பிரசுரமானது.

யார் புகார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. பல ஊகங்கள் உள்ளன. அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மௌனகுருவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: ‘சரி விடுங்க மார்க்ஸ். இதுவும் நல்லதுக்குத்தான். உங்களைப் பற்றி உங்க ஊரில் அரசாங்க ஆதரவுடன் வந்து போறீங்கன்னு சிலர் ஏதாவது எழுதுவாங்கதானே. இப்ப அவங்க ஒண்ணும் பேச முடியாதில்லே..” என்றார். நான் சொன்னேன்: “சார் என்னைப் பத்தி அப்படியெல்லாம் எழுதுறவுங்க உண்மை தெரியாம எழுதுறதில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் எழுதுவாங்க. இப்ப கூட, ‘இது ராஜபக்‌ஷேவும் அ.மார்க்சும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி’ன்னு எழுதினாலும் எழுதுவாங்க” என்று சொல்லிச் சிரித்தேன்.

பொதுக் கூட்டங்கள் ரத்தானாலும் மலையகத்திலும் கிழக்கிலும் நண்பர்களின் வீடுகளில் சந்திப்புகள் நிகழ்ந்தன. கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பள்ளியிலும், காத்தான்குடியில் விபுலானந்தர் பெயரில் இயங்கும் நுண்கலைத் துறையிலும், கிழக்குப் பல்கலைக் கழக ஸ்டாஃப் டெவெலப்மேன்ட் சென்டரிலும் சந்திப்புகள் நடந்தன.

தீராநதி : இப்போது அங்கு நிலைமைகள் எப்படி உள்ளன? ஐ.நா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் அங்கே ஏதாவது அச்சத்தை உருவாக்கியுள்ளதா?

அ.மா : நிச்சயமாக ஒரு அச்சம் உருவாகித்தான் உள்ளது. ராஜபக்‌ஷேவின் இந்திய வருகை இந்திய அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப்படாமை குறித்தும் பத்திரிகைகள் எழுதின. இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் தூதுவர் நவனீதம் பிள்ளை ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருப்பது குறித்தும், பிரிட்டன் வெளி விவகார இணை அமைச்சர் அலிஸ்டெர் பேர்ட் வடக்கில் நிலைமை சீரடையவில்லை, இராணுவ இருப்பு குறையவில்லை என்றெல்லாம் எழுதியுள்ளது குறித்தும் அங்கு விரிவாகச் செய்திகள் வெளிவந்தன. வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்லெவ போன்றோரும் சில பிக்குமார்களும் வீரம் பேசுவதும் கூட ஒருவகை அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு எந்த வகையிலும் தன் போக்குகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமை அவை கூட உள்ள சூழலில் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகா பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ பக்‌ஷே குடும்ப விசுவாசி ஒருவர் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். அரசால் கடத்திக் கொல்லப்பட்ட லசந்த விக்ரமசிங்க ஆசிரியராக இருந்த அதே ‘சண்டே லீடர்’ இதழின் இன்றைய உதவி ஆசிரியர் அஸ்கர் பரான் சவுகத் அலி நான் அங்கிருந்தபோது சுடப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ‘தினக்குரல்’ நாளிதழ் விற்பனை முகவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மீள்குடியேற்றம் நிகழவிடாமல் இராணுவம் தமிழ்ப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதற்கு ஏதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறுகின்றன. நான் அங்கிருந்தபோது இவ்வாறு வலிகாமம் வடக்கில் முப்பதாயிரம் பேர் குடியமர்த்தப்படாமல் இருப்பதைக் கண்டித்துத் தெல்லிப்பழையில் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடந்தது, அரசுக்கு எதிராக உருவாகியுள்ள பத்து கட்சிக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்ணாவிரதத்திலும் இறுதியாகச் சிலர் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இவர்கள் வடபகுதி இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்ருசிங்கவின் கூலிப் படையினர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் குற்றம் சாட்டினார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொண்டு ஏராளமாகப் பிள்ளை பெற்றுக் கொள்வதாக பவுத்த பிக்குகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். ‘ஹலால்’ முத்திரை குத்திப் பொருட்களை விற்கக் கூடாது என பிக்குகளின் ‘பொது பல சேனா’ என்கிற அமைப்பு கெடு விதித்துப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மாத்தளையில் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் இந்திய அரசால் அதன் கடுமைகள் எல்லாம் நீர்க்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது. ராஜபக்‌ஷே அரசே நியமித்த மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி அந்த அரசே ஒரு குழுவை அமைத்து போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம். இதை விட எளிமையாக என்ன தீர்மானம் இருக்க முடியும். அதைக் கூடச் செய்ய மறுக்கிறது இலங்கை அரசு. கிரிசாந்த டி சில்வா என்ற இராணுவத் தளபதி ஒருவர் தலைமையில் படைத் தளபதிகளின் குழு ஒன்றை அமைத்து ‘விசாரணை’ ஒன்று நடத்தப்பட்டு அந்த அறிக்கை சென்ற வாரம் தலைமைத் தளபதி ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டது.. இலங்கை இராணுவம் எதுவுமே செய்யவில்லை எனவும், புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. யார் விசாரிக்கப்பட வேண்டியவர்களோ அவர்களே தம்மை விசாரித்துக் குற்றம் அற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் அதிசயம் இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்காது.

தீராநதி : சேனல் 4 வீடியோ ஆதாரங்கள், சர்வதேச நெருக்கடிகள், மனித உரிமைப்புகளின் கண்டனங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசு இத்தனை துணிச்சலாக அதிகாரத்தை உமிழ்வதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

அ.மா : பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த அதே நாளில் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டிலும் கூட பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்றுள்ளது என்பதுதான் அது. நான் அங்கிருந்தபோது நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அமைதி நிலவுகிறது என்று பேசினார். மிலோசெவிக் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டது போலத் தன் மீது நடத்துவது சாத்தியமில்லை என ராஜபக்‌ஷே நம்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினர் கிடையாது. எனவே ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதலுடன்தான் ராஜபக்‌ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலும். அதற்கு சீனா, ருஷ்யா முதலிய நாடுகள் சம்மதிக்காது என்பது ராஜபக்‌ஷேக்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுதல்.

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா இலங்கைப் பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காது. இந்து மகா சமுத்திரம் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்தியாவும் அமெரிக்காவும் ‘strategic partners’. இலங்கைத் தீவின் கீழும் மேலும், அம்பாந்தோட்டவிலும், மன்னாரிலும் சீனா உறுதியாகக் கால் பதித்துள்ளது. பத்தாயிரம் சீனக் கைதிகள் இன்று இலங்கை முழுதும் பல்வேறு பணிகளில் உள்ளனர். கட்டுநாயக்கா உயர் வேகப் பாதை உட்பட பல கட்டுமானப் பணிகளை இன்று சீனா இலங்கையில் செய்து வருகிறது. மலேசியாவுக்கு அடுத்தபடியாக இன்று மிக அதிக அளவு இலங்கையில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா. அவ்வளவு எளிதாக இவர்கள் எல்லாம் நம்மை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ராஜபக்‌ஷேக்களுக்கு.

தீராநதி : அப்படியானால் வரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்கிறீர்களா?

அ.மா : நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆனால் இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளித்து விஷயம் முடிக்கப்படுமோ என்பது நமது அச்சம். உண்மையிலேயே இன்றைய சூழலில் இலங்கை மீதான நடவடிக்கையின் உச்சபட்சமான சாத்தியம் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு அதற்கு இந்திய அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். நேற்று சானல் 4 வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றை உறுதி செய்கின்றன. கடைசி நேரத்தில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது ஏதோ போரின் ஊடான தாக்குதலில் அல்ல என்பதுதான் அது. இது பிடித்து வைத்து systematic ஆகச் செய்யப்பட்ட படுகொலை. இந்தக் கொலைகளுக்கான command responsibility மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷேக்களுக்கும் அன்றைய தளபதி ஜெனெரல் ஃபொன்சேகாவிற்கும் உண்டு. அந்த வகையில் அவர்கள் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்படத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். புலிகளும் செய்தார்கள் நாங்களும் செய்தோம் என்று அவர்கள் சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கூற்றுப்படி புலிகள் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே நானும் செயல்படுவேன் என ஒரு அரசு எப்படிச் சொல்ல முடியும்?

மேலும் ஓராண்டு கால அவகாசம் என்பதாக இல்லாமல் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறியுள்ளபடி போர்க் குற்றங்கள் மற்றும் காணமலடிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தை நீர்க்கச் செய்யாமல் நிறைவேற்றுவதற்கு இந்தியா மனப்பூர்வமாகச் செயல்படவேண்டும். செயல்படுமா?!!

இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

(தோழர் நா.சண்முகதாசன் 20ம் நினைவுநாள் பேருரை)

 

இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் நா.சண்முகதாசன் அவர்களின் 20ம் நினைவு நாள் பேருரையை அளிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறே.ன். மார்க்சியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத் தொழர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் சண்முகதாசனின் வாழ்க்கை (1919 – 93) உலகக் கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்துடன் இணையாக அமைந்த ஒன்று. உலக அளவில் மட்டுமின்றி இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் வரலாற்றிலும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த அவர் இடதுசாரி இயக்கத்திற்கும், அரசியலுக்கும், சிந்தனைகளுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கன. ஒரே நேரத்தில் பொதுவுடமை இயக்கத்தை வழி நடத்துபவராகவும், தொழிற்சங்க முன்னோடியாகவும் மட்டுமின்றி மார்க்சீயக் கருத்தியல் தளத்தில் நின்று இலங்கையின் வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்கிய மிகச் சிறந்த ஒரு இடதுசாரி அறிஞராகவும் விளங்கியவர் அவர். அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் கட்சித் தலைவராக மட்டுமின்றி கருத்தியல் தளத்திலும் ஆழத் துறை போகி அரசியல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை விளக்கி வழிகாட்டிய தோழர்கள் டோக்ளியாட்டி (இத்தாலி), ஹோ சி மின் (வியட்நாம்), மாரிஸ் தோரெஸ் (ஃப்ரான்சு), மாஓ (சீனம்), பி.சி.ஜோஷி (இந்தியா) ஆகியோரைப்போல ஒரே நேரத்தில் இயக்கத்திற்குத் தலைமையை அளிக்கத் தக்கவராகவும், அரசியல் சிக்கல்களுக்கு விளக்கம் அளித்து வழிநடத்தும் தகைமையைப் பெற்றவராகவும் தோழர் சண் அவர்கள் விளங்கினார்கள்.

தொண்ணூறுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் இதுகாறும் கூடுதலாகக் கவனம் அளிப்பதற்குத் தவறிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வெண்டியதன் அவசியங்கள் பற்றிய பேச்சு இன்று உருவாகியுள்ளது. இறுக்கமான வர்க்க அடிப்படையிலிருந்து மட்டுமே சமூக முரண்களை அணுகுவதைத் தாண்டி, பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டும் ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டல்களும், சமத்துவமின்மைகளும் சாத்தியம் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இன்று உலகப் பொதுவுடமை இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதை அறிவோம். அந்த வகையில் தமிழ்ச் சமூகங்களுக்கே உரித்தான சாதிய முரணையும், தீண்டாமைக் கொடுமையையும் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையில் இந்தியப் பொதுவுடமை இயக்கங்களுக்கு தோழர் சண் ஒரு முன்னோடியாக விளங்கினார் என்பது மிகையாகாது.

ஒரே நேரத்தில் இலங்கை வரலாற்றையும், சீனப் பாதையில் ஏற்பட்ட வழி விலகல்களையும், சுற்றுச் சூழல் முக்கியம் குறித்தும், முக்கிய அண்டை நாடான இந்தியாவில் உருவான முஸ்லிம் தனிநபர் சட்டம் குறித்த விவாதம் பற்றியும், இலங்கையில் இந்திய வம்சாவழியினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி குறித்தும், இலங்கைச் சிறுபான்மையோரின் உரிமைகள் குறித்து லெனாட் வூல்ஃபின் கருத்துகள் குறித்தும் மார்க்சிய அறிவுடையோர் மட்டுமின்றி, பரந்துபட்ட வாசகர்களும் படித்துப் பயனடையும் வண்ணம் உடனுக்குடன் கருத்துச் சொல்லத் தக்கவராக அவர் இருந்தார்.

1983 யூலைக் கலவரத்தை ஒட்டி அவர் தமிழகம் வந்திருந்ததும் அப்போது அவர் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு அறைக் கூட்டம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்து, அதில் அவர் உரையாற்றியதும் எனக்கு நினைவுக்கு வருகிறது, தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவர்களின் மூலம் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசாகத் தோழர் சண் அவர்களின் அறிமுகம் அமைந்ததை இச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன்.

### ### ### ### ### ###

இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

பின்னணி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகித் திரட்சி பெற்ற மார்க்க்சீயக் கோட்பாடுகளின் அடியாக, இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சிகளான சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் சென்ற நுற்றாண்டின் இறுதியில் கடும் பின்னடைவுக்கு உள்ளாயின. முதலாளிய நாடுகளில் இருந்த அளவிற்குப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஓரளவு அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பூர்த்தி செய்யப்பட்ட சமூகங்களாகவும் அவை அமைந்தபோதும் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ‘சோஷலிச’ அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன.

இப்படியானதில் உலக ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் பங்கு உண்டென்றபோதிலும், அவ்வவ் நாட்டு மக்களால் வெறுக்கப்படும் அரசுகளாகவும் இவை அமைந்திருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. ருமேனியா முதலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொதித்தெழுந்த மக்களே அவ்வாட்சிகளைத் தூக்கி எறிந்தனர். ரசியா போன்ற நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளை முன்னூகித்துத் தம்மை முதலாளிய சனநாயகப் பாதைக்குத் திரும்பிய நாடுகளாக அறிவித்துக் கொண்டன. நமக்கெல்லாம் பெரும் நம்பிக்கையை அளித்துக் கொண்டிருந்த சீனமோ கடும் அடக்குமுறைகளினூடாக எதிர்ப்பைச் சமாளித்தது. அந்நிய முதலீடுகளை அநுமதித்தல். ஏற்றுமதிப் பொருளாதாரம், உலக முதலாளிய அமைப்புகளில் அங்கமாதால் என்கிற வகைகளில் ‘தேசியச் சுய மைய வளர்ச்சி’ (National Auto centric Development) என்கிற நிலையிலிருந்து விலகி உலக முதலாளிய வலைப் பின்னலில் இன்று அது ஒரு குறிப்பிட்ட அளவு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. நிகிதா குருஷ்சேவ் இன்று இல்லையாயினும் அவரது உலக முதலாளியத்துடன் ‘சமாதானச் சகவாழ்வு’ எனும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நாடாக இன்று அது உள்ளது. அரசால் வழிநடத்தப்படும் முதலாளிய அரசு என்கிற அளவிற்கே இன்று நம்மால் அதை மதிப்பிடமுடிகிறது.

எஞ்சியுள்ள லத்தீன் அமெரிக்கச் சோஷலிச முயற்சிகள் சென்ற நூற்றாண்டுச் சோஷலிச முயற்சிகளிலிருந்துப் பெரிதும் விலகி நிற்கின்றன. இது குறித்துச் சற்றுப் பின் விரிவாகக் காண்போம்.

சென்ற நூற்றாண்டுச் சோஷலிச முயற்சிகளின் வீழ்ச்சி உலகெங்கிலுமுள்ள மார்க்சீயர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்ச்சியைச் சொல்லத் தேவையில்லை. ஓரளவு இதை எதிர்பர்த்தவர்களுக்கும் கூட இது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சென்ற ஒன்றரை நூற்றாண்டு காலமாகவே ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு மார்க்சியத்திற்குக் கல்லறை வாசகங்களை அவ்வப்போது எழுத முயற்சித்துக் கொண்டிருந்த உலக முதலளியம் இதைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டது. மார்க்சியம் காலாவதி ஆகிவிட்டது எனவும், சோஷலிச முயற்சிகள் சாத்தியமில்லாதவை எனவும், சோஷலிசமும் ஜானநாயகமும் ஒன்றாகவே இருக்க இயலாது எனவும், சந்தைப் பொருளாதாரமே எல்லாப் பிரசினைகளுக்கும் தீர்வு எனவும் சொல்லாடல்கள் உலகமெங்கும் விரிக்கப்பட்டன. ஓரளவு திட்டமிட்டப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த இந்தியா முதலான நாடுகள் விரைந்து தம் பொருளாதாரத்தையும் சந்தையையும் திறந்துவிட்டன, சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி பொருளாதாரத்தில் மட்டுமின்றி உலக அரசியலிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதை ஒட்டி மார்க்சீய நெறிமுறைகளாக அறியப்பட்ட பல்வேறு அம்சங்களைக் கைவிட்டதாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் காட்டிகொண்டன. எடுத்துக்காட்டாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டைத் தம் திட்டங்களிலிருந்து இத்தாலி உட்படச் சில நாட்டுக் கட்சிகள் நீக்கிக் கொண்டதாகச் அறிவித்ததைச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து,

முதலாளியக் கட்டுமானம் = சந்தைப் பொருளாதாரம் = ஜனநாயகம் எனவும்,

சோஷலிசக் கட்டுமானம் = மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் = அதிகார வர்க்க மயமாதல் = ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுதல் என்பதாகவும்

புரிந்து கொள்ளக் கூடிய நிலை இன்று உலகமெங்கிலும் ஏற்பட்டுள்ளது. மார்க்சீயர்களாகிய நாம் சந்தித்துக் கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடி இது.

சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் தோல்வியுற்றன எனக் குரல் எழுப்புகிற யாரும் அதைத் தர்க்கபூர்வமாக நிறுவிவிடவில்லை என்பது குறீப்பிடத்தக்கது. முதலளியத்தின் தவிர்க்க இயலாத நெருக்கடிகள் குறித்து மார்க்சியம் இதுவரை முன்வைத்துள்ள கோட்பாடுகள் எதற்கும் இவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. மார்க்சீயம் முன் ஊகித்த இந்த நெருக்கடிகளை முதலாளியம் இன்று சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்முன் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சென்ற நூற்றாண்டுப் பொருளாதாரச் சரிவுகளை அது சமாளித்ததைப்போலச் சமீபத்திய நெருக்கடிகளை அது சமாளிக்க இயலாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் இன்று மேலைச் சமூகங்களில் மார்க்சீயக் கோட்பாடுகளின்பால் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.

பொதுவுடமைத் திட்டமும் மார்க்சீயமும் காலாவதியாகிவிட்டன எனச் சொல்பவர்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுகிற ஒரே ஆதாரம் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமே. இவை சோஷலிசக் கட்டுமானம் குறித்த சில அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இந்த அடிப்படையில் பொதுவுடமை என்கிற கோட்பாடும் மார்க்சியம் என்கிற தத்துவமும் காலாவதியாகிவிட்டன என்பதில் எந்தப் பொருளும் இல்லை. மார்க்சியம் என்பது புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் குறித்த ஒரு அறிவியல் அல்ல. அதன் பல்வேறு பரிமாணங்களில் இது ஒன்று என வேண்டுமானால் சொல்லலாம். முதலாளியச் சமூகத்தின் இயக்க விதிகளைக் கண்டறிவதெ மார்க்சின் பிரதான பணியாக இருந்தது. எதிர்காலச் சமூகம் குறித்த துல்லியமான வரையறை எதையும் உருவாக்குவதில் அவர் ஆர்வம் காட்டவுமில்லை. “வர்க்க சமூகத்தில் மனிதனிடமிருந்து பறிக்கப்பட்ட முழுமையான மனிதாயம் மீண்டும் அவனுக்குக் கையளிக்கப்படும்” என்பது போன்ற தத்துவச் செறிவுள்ள வாசகங்களையே மார்க்ஸ் இது குறித்து உதிர்த்துள்ளார்.

தவிரவும் பு.பி சமுதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகக் கட்டமைக்கப்பட்டதில்லை. நாட்டுக்கு நாடு முயற்சிகள் வேறுபட்டன. எந்த அளவிற்கு இவை எல்லாமும் மார்க்சியப் பாதையில் சென்றன என்பதும் கேள்விக்குறிதான். தோழர் சண் உட்பட மாஓயிஸ்டுகள் யாரும் ரசியாவைச் சோஷலிசச் சமுதாயமாக ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய சமூகங்களில் எற்பட்ட நெருக்கடிகளை மார்க்சீயம் மற்றும் சோஷலிச நிர்மாண முயற்சிகளின் தோல்வியாகச் சொல்வது நியாயமான வாதமல்ல.

தவிரவும் இவர்களின் இந்த வாதத்தின் இன்னொரு பக்கமான முதலாளியக் கட்டுமானங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்பதிலும் எந்தப் பொருளும் இல்லை. முதலாளியம் என்றால் அது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மட்டுமல்ல. அங்கெல்லாமும் கூட இன்று முதலாளியப் பொருளாதாரமும் சமூகமும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இந்தியா, இலங்கை, வங்கதேசம், கானா… எல்லாமும் கூட முதலாளிய நாடுகள்தான். கடும் ஏற்றத்தாழ்வுகளும், வறுமையும், ஒடுக்குமுறையும் உள்ள நாடுகள்தான். சோஷலிச முயற்சிகளில் ஊழல், அதிகாரத்துவம், அடிப்படை உரிமைகள் மறுப்பு என்பன பரவலாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்த அம்சங்களில் முதளாளிய நாடுகள் பலவற்றில் நிலைமை இன்னும் மோசம் என்பதை யார் மறுக்க முடியும்? முதலாளிய ஜனநாயகம் என்பது வெறும் “முதலாளிய” ஜனநாயகம் மட்டுமே. அது உண்மையான ஜனநாயகம் ஆகாது என்பதை மார்க்சியம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. சோஷலிச முயற்சிகளில் பட்டினிச் சாவுகள் இருந்ததில்லையே. சோஷலிச முயற்சிகளின் அடிப்படையான மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலைத் தவிர்த்தலும், முதலாளியப் பொருளாதாரத்திற்குரிய சந்தைப் பொருளாதாரத்தையும் தனிச்சொத்துரிமையையும் அடிப்படையாகக் கொள்வதும் எந்த விதத்திலும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வாழ்விற்கு உத்தரவாதமாகிவிடாது என்பதற்கு தென் ஆப்ரிக்கா, சிலி, ஈரான், மார்கோசின் பிலிப்பைன்ஸ், மியான்மர் முதலான ஏராளமான நாடுகள் எடுத்துக் காட்டுகள் இல்லையா? சோஷலிச முயற்சிகள் சந்தித்த அனைத்து நெருக்கடிகளையும் இதனினும் அதிக அளவில் முதலாளிய நாடுகள் சந்தித்துக் கொண்டுள்ளன என்பதே உண்மை.

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக் காடாக மாறுகிற சாத்தியத்தை மறுத்த ஒரு வளர்ச்சிப்பாதையை இந்தியா, இலங்கை முதலான விளிம்பு நாடுகளுக்குத் தந்துவிட இயலும் என எந்த ஒரு முதாலாளியப் பொருளாதார வல்லுனராவது முதலாளியத்தைப் பரிந்துரைப்பாரா? இத்தகைய வளர்ச்சிப் பாதை ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் உள்ளூர்த் தரகர்களுக்கும் மட்டுமே உகந்ததாக இருக்கும் என்பதை வரலாறும் நிரூபித்துள்ளதே. அதே நேரத்தில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் வழங்கப்படுதல், ஒப்பீட்டளவில் பெண்கள் விடுதலை பெற்றிருத்தல் போன்ற அம்சங்களில் புரட்சிக்குப் பிந்திய (பு.பி).சமூகங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருந்ததை யரும் மறுக்க இயலாது.

இதை எல்லாம் சொல்லுவது சோஷலிச முயற்சிகளில் பிரச்சினைகளே இல்லை எனச் சொல்ல வருவதற்கல்ல. இருந்த பிரச்சினைகளை ஏற்றுக் கொள்வது இத்தகைய தவறுகளிலிருந்து மீள்வதற்கான முதல் நிபந்தனை என்கிற வகையில் அது குறித்துச் சிரிது காண்போம். சோஷலிசக் கட்டுமான முயற்சிகளின் பொதுப்படையான அம்சங்களாகச் சொல்லப்படுபவற்றைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமையை ஒழிப்பது,
மையப்படுத்தப்பட்டத் திட்டமிடுதலின் கீழ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி,
உலகமுதலாளிய அமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்ளுதல்,
இவற்றை நடைமுறைப்படுத்த கீழ்க்கண்ட வடிவங்கள் பு.பி.சமுதாயங்களில் மேற்கொள்ளப்பட்டன.

பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என்கிற பொதுவுடைமைக் கட்சியின் மேலாண்மையிலான ஒரு கட்சி ஆட்சி முறை.. கருத்து வேறுபடுகளுக்கு இடமின்மை.
வர்க்க சர்வாதிகாரம் என்கிற வகையில் எல்லோருக்கும் சமமான அடிப்படை உரிமைகள் என்கிற கருத்தை மறுத்தல்.
முதலில் குறிப்பிடப்பட்ட மூன்றும் சோஷலிசச் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான அவசிய நிபந்தனைகள் (Necessary Conditions). ஆனால் அவை போதுமான நிபந்தனைகள் (Sufficient Conditions) ஆகா. ஏனெனில் சோஷலிசக் கட்டுமானத்தின் நோக்கம் (அ) நகரம்/கிராமம், தொழிலாளி/விவசாயி, மூளையுழைப்பு/ உடலுழைப்பு முதலானவற்றில் வேறுபாடுகளை ஒழித்து சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டு வருதல். (ஆ) உண்மையான அரசியல் மற்றும் சமூக ஜனநாயகத்தை நிறுவி சோஷலிசப் பண்பாட்டையும் அதனடிப்படையிலான புதிய மனிதரையும் உருவாக்குதல் என்பன.

உற்பத்திப் புள்ளியில் உற்பத்தியின் மீதும், சகலவிதமான கருத்துருவாக்க மற்றும் நிர்வாக நடைமுறைகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் ஆளுமையை நிறுவி அதை உண்மையான பொருளில் ஆளும் வர்க்கமாக வளர்த்தெடுத்தல் மூலமே இதை நிறைவேற்ற முடியும். அதற்குரிய வகையில் முதலாளிய நிறுவன வடிவங்களையும் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் சோஷலிசத்திற்கான போதுமான நிபந்தனையை நாம் பூர்த்தி செய்ததாக ஆகும். பு.பி.சமுதாயங்கள் எதிலும் இந்த நிபந்தனை, அதாவது உற்பத்திப் புள்ளியில் உற்பத்தி சாதனங்களின் மீது பாட்டாளி வர்க்கத்தின் ஆளுமை நிறுவப்படவே இல்லை என்பதே பு.பி சமுதாயங்களின் தோல்விக்குக் கரணமாக அமைகிறது.

அப்படியானதற்கு நடைமுறைச் சோஷலிச முயற்சிகளின் தோல்விக்கு நாம் மேலே கண்ட 4 மற்றும் 5வது அம்சங்களே காரணமாகியுள்ளன என்பது இன்று பல கம்யூனிஸ்ட் கட்சிகளும் மார்க்சிய அறிஞர்களும் முன்வைக்கும் கருத்து. அந்த அடிப்படையில் சில பொதுவுடைமைக் கட்சிகள் இன்று பா.வ.சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டைக் கைவிட்டுள்ளதை முன்பே குறிப்பிட்டேன். அப்படி வெளிப்படையாகக் கூறாத கட்சிகளும் கூட பா.வ சர்வாதிகாரத்தை ஆதரித்துப் பேசுவதில்லை. லந்தின் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் பல கட்சி ஆட்சி முறையையும், தேர்தல் அரசியலையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

சோஷலிச ஜனநாயகமானது முதலாளியச் ஜனநயகத்தைக் காட்டிலும் ஆழமானது என நாம் வாயளவில் சொல்லி வந்த போதிலும் நடைமுறை அப்படியாக இல்லை. கருத்து வேறுபடுகளுக்கு இடமில்லாமற் போனதும், கட்சியை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்ததும், உள்ளடக்கத்தை மாற்றினால் போதும் என அனைத்து அம்சங்களிலும் முதலாளிய வடிவங்களை அப்படியே ஏற்றுக் கொண்டதும் உற்பத்திப் புள்ளியில் உற்பத்தி சாதனங்களிலிருந்து .பாட்டாளி வர்க்கம் அந்நியப் பட்டிருக்கும் நிலை தொடர்வதற்கு மட்டுமல்ல, அதிகமாவதற்கும் காரணமாகியது. கிட்டத்தட்ட எல்லா சோஷலிச முயற்சிகளிலுமே அதிகாரத்துவம், ஊழல், அடக்குமுறை ஆகியன மலிந்திருந்தன. வடகொரியா போன்ற நாடுகளில் வாரிசு அரசியலும்கூடத் தலையெடுத்தது.

பு.பி சமுதாயங்களின் அனுபவங்களை ஒட்டி இன்றைய இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொண்டுள்ள முதல் சவால் இது, பா.வ. சர்வாதிகாரம் என்பதை நாம் முற்றாக மறுக்கப் போகிறோமா? இல்லை, கருத்து மாறுபாடுகள், உலகளாவிய அடிப்படை உரிமைகள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் வகையில் நமது அணுகல் முறைகளை எவ்வாறு மாற்றி அமைக்கப் போகிறோம்?

எதார்த்தம்

உலகெங்கிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் சோவியத் அல்லது சீன வடிவங்களையே முன்மாதிரியாகக் கொண்டன. இன்று முன்மாதிரியாய்ச் சொல்ல சோவியத் யூனியன் இல்லை. சீனத்தை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வது என்பதில் எல்லாக் கட்சிகளுக்கும் குழப்பங்கள் உள்ளன, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி முதலானவை சீனத்தை விமர்சிக்காதபோதும் வெளிப்படையாக அதை சோஷலிச அரசாவும் ஏற்பதில்லை.

ஆனால் எதேனும் ஒரு கட்சியை முன்மாதிரியாகக் கொண்டு பழக்கப்பட்டுவிட்ட பொதுவுடமைக் கட்சிகளுக்கு இன்று நம்பிக்கை அளிக்கக் கூடியனவாக காஸ்ட்ரோவின் கியூபாவும் சாவேஸின் வெனிசுலாவும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொலிவியா, ஈக்வடார் முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளும் உள்ளன. ஆனால் இங்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. கியூபாவில் கடுமையான கருத்துச் சுதந்திர மறுப்பும் ஒடுக்குமுறைகளும் உள்ளன. சாவேசைச் சுற்றி உருவாகியுள்ள அதிகாரக் குழு பற்றிய விமர்சனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கியூபாவில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகள் தன்னிறைவு பெற்றுள்ளபோதிலும் மிக அடிப்படையான வசதிகளும்கூட அங்கில்லை. சோவியத் உதவிகள் நின்றபின் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. எனினும் நீண்ட கால அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளையும், கவிழ்ப்புச் சதிகளையும் எதிர்கொண்டு நிற்கிற வகையில் கியூபா மீது உள்ள மதிப்பும் வியப்பும் குறையவில்லை.

பிற லத்தீன் அமெரிக்க இடதுசாரிக் கட்சிகளைப் பொருத்தமட்டில் அவை அனைத்தும் மரபுவழிப்பட்ட இடதுசாரி முன்மாதிரிகளைக் கைவிட்டு பலகட்சி ஆட்சி முறையையும் தேர்தல் பாதையையும் ஏற்றுக் கொண்டுவிட்டன. எனினும் முழுமையான முதலாளியப் பொருளாதார வழிமுறைகளிலிருந்து அவை பல அம்சங்களில் விலகி நிற்கின்றன. லத்தீன் அமெரிக்க பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தி ஏகாதிபத்தியங்களை முற்றிலும் சார்ந்திராமலும், பொருளாதாரத்தை முற்றிலும் திறந்து விடாமலும் ஒரு இடது சாய்வு நிலையைத் தக்கவைத்துள்ளன. “நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவியக் கூட்டணி” (ALBA) இந்த வகையில் முக்கியமான ஒன்று.

இந்த நாடுகளில் குவிந்துள்ள நிலத்தடி எண்ணையும் கனிம வளமும் இவற்றின் முயற்சிக்குக் கைகொடுக்கின்றன, இந்த அடிப்படையில் இவை வெளிநாட்டுச் சொத்துக்களைத் தேசவுடைமை ஆக்குவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்போது சொத்திழந்த நாடுகள் கடும் எதிர்ப்புகளைக் காட்ட முடிவதில்லை. பெரிய அளவிலான இலக்கு நோக்கிய சமூக நலத் திட்டங்கள் (targeted social welfare measures) குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக மீண்டும் மீண்டும் இந்த இடதுசாரிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், Currency stability போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும் வறுமை எண் முதலியன குறைந்துள்ளன. சாவேஸ் அரசு தன் எண்ணை வளத்திற்கு மாற்றீடாக கியூப மருத்துவ நிபுணர்கள், தாதிகள் ஆகியோரின் சேவையைப் பெற்று மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வழி வகுத்துள்ளது.

இந்த நாடுகள் முன்வைக்கும் “21ம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்” என்கிற கருத்தாக்கம் ஜெர்மானிய மார்க்சிஸ்டான ஹெய்ன்ஸ் டைய்ட்ரிச் ஸ்டெஃபானின் சிந்தனைகளை அடியொற்றியதாக அமைகிறது. முதலாளியத் தனிநபர்வாதம், முன்னுரிமைகள், சுயநலம் ஆகியவற்றிற்கு மாற்றாக இது அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை முன்வைக்கிறது. ஏசுதான் முதல் சோஷலிஸ்ட் என்கிறார் சாவேஸ். ‘பிரதிநிதித்துவ ஜனநாயகம்’ (representative democracy) என்பதற்குப் பதிலாக, ‘பங்கேற்கும் ஜனநாயகம்’ (participatory democracy) என்கிற கருத்தாக்கத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். ‘சமத்துவமும்’ ‘உரிமையும்’ பிரிக்க இயலாதவை என்பது இவர்களின் இன்னொரு முழக்கம். சோஷலிசம் என்றால் எல்லா அதிகாரங்களும் அரசுக்கே என்பதல்ல என்கிறார் சாவேஸ். இந்த வகையில் அவர்கள் தனிச் சொத்துரிமையையும் ஏற்கின்றனர். பொருளாதாரத்தில் கூட்டு முயற்சிகள் கூட்டுறவு ஆகியவற்றை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, கிராமங்களை விடுவித்து நகரங்களை முற்றுகை இடுவது, நீண்டகால ஆயுதப் போராட்டம் முதலிய வழிமுறைகளும் இன்று பின்னடைவுக்குள்ளகியுள்ளன. நேபாள மாவோயிஸ்ட் கசியினர் ஆயுதங்களை ஐ.நா பார்வையாளரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் பாதைக்குத் திரும்பியுள்ளனர். இந்திய மாவோயிஸ்டுகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறபோதிலும் அவர்களின் செல்வாக்கு இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வனப் பிரதேசங்களிலும் பழங்குடியினர் மத்தியிலுமே முடங்கியுள்ளது. நகர்ப்புறங்களிலோ தொழிலாளர் மத்தியிலோ ஆதரவில்லை. சமீபத்திய கடும் அரச அடக்குமுறைகளினூடாக உயர்மட்டத் தலைவர்கள் பலரும் ஒன்று கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.. பெருவின் ‘ஒளிரும் பாதை’ (Shining Path), கொலம்பியாவின் ஃபார்க் (FARC) முதலியன இன்று கடும் அடக்குமுறைகளினூடாகப் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. புரட்சியைச் சக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்கிற கொள்கையை ஃபிடல் காஸ்ட்ரோ 1980 களிலேயே மாற்றிக் கொண்டார். சிலி நாட்டுப் புரட்சிகர அமைப்பான FPMR இடம், “ஆயுதப் போராட்டங்களின் காலம் முடிந்துவிட்டது” என அறிவித்தார். அதற்குப் பின் ஃபிடலும் அவர் சகோதரர் ராலும் ஆயுத இயக்கங்களுக்கும் அரசுகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கே முன்னுரிமை அளிததனர்.

ஆயுதப் போராட்டங்களை நடத்திய, பெரும் தொழிற்சங்க இயக்கப் பின்புலமுள்ள மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இடத்தில் இன்று செயல்படுகிற ‘மலேசிய சோஷலிஸ்ட் கட்சி’ (PSM) மற்றும் ‘ஜனநாயக நடவடிக்கைக் கட்சி’ (DAP) முதலியன தேர்தல் சார்ந்த கட்சிகளாக இயங்குவதோடு தொழிற்சங்கங்களை முற்றாக இழந்துள்ளன.

மிகத் தீவிரமாக நவ தாராளவாதத்தை நடைமுறைப் படுத்திவரும் இந்திய அரசின் கீழ் தேர்தல் மூலம் மாநில அளவில் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த இடது சாரிக் கூட்டணி இன்று கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 34 ஆண்டு கால ஆட்சிக்குப் பின் இன்று மேற்கு வங்கத்தில் அது தோல்வியுற்றுள்ளது. இந்தத் தோல்வி குறித்து இந்திய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதம் நடக்கிறது.

தேர்தல் மூலம் கிடைத்த தமது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில் வளர்ச்சி, கார்பொரேட் முதலீடு முதலிய சொல்லாடல்களில் அமிழ்ந்து, மார்க்சீய அரசியல் நடைமுறையின் மூன்று அடிப்படை அம்சங்களான,

முதலாளியத்தைக் கடந்து செல்லல்
எகாதிபத்திய விரிவாக்கத்தை எதிர்த்தல்
அடிப்படை வர்க்க நலன்களைப் பிரதானப் படுத்துதல்
என்பவற்றைக் கைவிட்டதன் விளைவே இன்றைய தோல்விக்கும் கட்சியின் சீரழிவுகளுக்கும் காரணம் எனத் தொடர்ந்து இக்கட்சிகளை ஆதரித்துவந்த மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், ஹிரேன் கோஹெய்ன் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

சவால்கள்

ஒரு துருவ உலகம், உலக மயம், திறந்த பொருளாதாரம் ஆகியவற்றினூடாக இன்று உலகம் உலகளாவிய முதலாளிய வலைப் பின்னலில் சிக்குண்டு கிடக்கிறது. இலக்கு நோக்கிய சமூக நலத் திட்டங்கள் என்பதும் நாளுக்கு நாள் பலவீனபடுத்தப்படுகிற disciplinary neo liberal சகாப்ததில் இன்று நாம் வாழ்கிறோம். சோஷலிசம் இனி சாத்தியமில்லை, சந்தையே எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்கிற கருத்துக்கள் மேலுக்கு வந்துள்ள நிலையில் இவற்றிற்கு எதிர்ப்புகள் என்பதும் இன்னொரு பக்கம் வெளிப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. வால் ஸ்ட்ரீட் போராட்டம், அரபுலக எழுச்சி, தங்களின் பாரம்பரிய உடைமைகளைப் பாதுகாப்பதற்கான பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் எனப் பல வடிவங்களில் இவை வெளிப்படுகின்றன.

புதிய பொருளாதார மாற்றங்களினூடாக இன்று தொழிலாளி வர்க்கம் பலவீனப்பட்டும் பிளவுபட்டும் கிடக்கிறது. பெரிய அளவில் மூலதனத்தை இறக்குமதி செய்து விளிம்பு நாடுகளில் தொழில்களை நிறுவும் அந்நிய மூலதனம் முதலில் குறி வைப்பது தொழிற்சங்க உரிமைகளையே. ஏகாதிபத்திய ஆணையின் கீழ் மாற்றி அமைக்கப்படுகிற தொழிற் தகராறுச் சட்டங்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கின்றன. இந்தியப் பெருந்தொழில்கள் பலவற்றிலும் இன்று மூன்றில் இரு பங்கினர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக உள்ளனர். இதன் விளைவாக இன்று இங்கெல்லாம் வேலை நிறுத்தப் போராட்டங்கள் சாத்தியமற்றுள்ளன.

தொழிற்சங்க அமைப்புகள் இன்று இடதுசாரிகளிடமிருந்து கைநழுவிப் போயுள்ளன. முதலாளிய அரசியல் கட்சிகளிடமும், சாதி, இனம் சார்ந்த பிரிவினைகளின் அடிப்படையிலும் பிளவுண்டு கிடக்கின்றன.

இத்தகைய பின்னணிகளில் இருபத்தியோராம் நூற்றாண்டின் இடதுசாரி இயக்கங்கள் பலவும் தமது குறிக்கோளை ‘மாற்றம்’ என்கிற நிலையிலிருந்து ‘எதிர்ப்பு’ என்கிற நிலைக்கு இறக்கியுள்ளன. அதாவது ஏகாதிபத்தியம். முதலாளியம் ஆகியவற்றை வீழ்த்துவதாக அல்லாமல் எதிர்ப்பது என்கிற அளவிற்குத் தம் நிலைபாட்டைச் சுருக்கியுள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஒருவகைச் சீரமைப்புச் சக்திகளாக (cvilizing forces) மாறியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட இன்னொரு முக்கிய மாற்றம் புதிய வகை அமைப்பு எதிர்ப்பு இயக்கங்கள் (Anti Systemic Movements) உருவானது. சுற்றுச் சூழல் இயக்கங்கள், பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஒடுக்குமுறைக்கும், சுரண்டல்களுக்கும் இதுகாறும் ஆட்பட்டு வந்த இன/மத/மொழிச் சிறுபன்மையினர், தலித்கள், பெண்கள், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோர் தத்தம் அடையாளங்களை முன்வைத்து இயங்கிய அரசியல் முதலியன இவ்வகைப்பட்டவை. மரபு வழிப்பட்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகள் இயக்கங்களிலிருந்து இவை பல அம்சங்களில் வேறுபட்டவை, சுருங்கச் சொல்வதானால் முதலாளியத்தைக் கடந்து செல்லல், ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் முதலான தொலை நோக்கான குறிக்கோள்களோ செயல்திட்டங்களோ அவற்றிற்குக் கிடையாது.

எனினும் அவையே இன்றைய காலகட்டத்தின் முக்கிய இயக்கங்களாக வெளிப்படுகின்றன. தொலை நோக்கான குறிக்கோள்களுடன் அவை இயங்காதபோதும், தன்னளவில் அவை நியாயமானவையாகவும், இதுகாறும் இடதுசாரி இயக்கங்கள் உள்ளிட்ட எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடுபவையாகவும் உள்ளன.

சோஷலிச முயற்சிகளின் பின்னடைவுக்குப் பிந்தைய இத்தகைய மாற்றங்களை இடதுசாரி இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. மார்க்சியம் இத்தகைய அம்சங்களின் முக்கியத்துவத்தை மறுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய முன்னோடிகளைப் பொருத்தமட்டில் அன்று அவர்களுடைய கவனமெல்லாம் முதலாளிய விரிவாக்கத்தின் விதிமுறைகளைக் கண்டறிவதிலேயே குவிந்திருந்தது, கொடூரமான ஆதி மூலதனத் திரட்டலின் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள். இத்தனைக்கும் மத்தியில் பெண் விடுதலை, சுற்றுச் சூழல் ஆகியவற்றிலும் அவர்களின் கூர்மையான பார்வைகள் குவியவே செய்தன.

‘மூலதனம்’ 15ம் அத்தியாயத்தின் இறுதியில் மார்க்ஸ் தனக்கே உரித்தான கவித்துவத்துடன், “முதலாளித்துவ விவசாயத்தில் காணப்படும் எல்லா முன்னேற்றங்களும் (விவசாயத்) தொழிலாளிகளைச் சுரண்டிக் கொழுக்கும் கலையில் காணப்படும் முன்னேற்றம் மட்டுமல்ல; மண்ணின் வளத்தைக் கொள்ளையடிக்கும் கலையில் காணும் முன்னேற்றமும்கூட; குறிப்பிட்ட ஒரு சாகுபடியில் விளைவை அதிகரிப்பதில் காணும் முன்னேற்றமெல்லாம் அந்த மண்னின் வளத்தை என்றென்றைக்குமாய் அடியோடு அழிப்பதில் காணும் முன்னேற்றம்தான்” என்பார். இத்தனை இரத்தினச் சுருக்கமாக சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் முதலாளியத்தின் கோரப்பசி அதை அழிக்கும் கொடூரத்தையும் யார் சொல்ல இயலும்?

ஜனநாயகம், தேசிய உரிமை, உலகளாவிய மனித உரிமைகள் முதலானவற்றை முதலாளியத்தின் மேற்கட்டுமானம் என்கிற வகையில் அணுகாமால் அவற்றை எல்லா வர்க்க அரசியலுடனும் ஒருங்கிணைக்கும் (articulate) சாத்தியத்தை இன்றைய மார்க்சிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதும் கவனத்திற்குரியது.

இதுகாறும் கூறியவற்றின் பின்னணியில், களத்திலுள்ள இன்றைய இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்:

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கருத்தைக் கைவிடல். மையப்படுத்தப்பட்ட அரசதிகாரம் என்பதைத் தவிர்த்து அதிகாரப் பரவலை ஏற்றுக்கொள்ளல்.
பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகள் என்பதை விரித்து இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கி பரந்துபட்ட குடிமக்களின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்குதல்.
இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட பரப்புகளான சுற்றுச் சூழல், நகர விரிவாக்கம் முதலானவற்றில் கவனம் குவித்தல்.
செயல்படும் எல்லா இடதுசாரி இயக்கங்களிலும் இம்மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தியாவில் இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2000க்குப் பிந்திய சூழலில் தீண்டாமை ஒழிப்பிற்கென இயக்கம் அமைத்துச் செயல்படுவதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் அதி தீவிரமாக இயங்கியதும் இந்திய மாவோயிஸ்டுகள் வன உரிமை மற்றும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னிற்பதும், நேபாள மாவோயிஸ்டுகள் தலித்கள், மாதேசிகள், ஜனஜாதிகள், பெண்கள் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதும் சில எடுத்துக்காட்டுகள்.

எனினும் இந்த முயற்சிகளில் அனுபவபூர்வமாகக் காணும் சில பிரச்சினைகளை இறுதியாகத் தொகுத்துக் கொள்வோம்:

நடைமுறையில் இத்தகைய அம்சங்களும் போராட்டங்களும் உள்வாங்கப்பட்டபோதிலும் அவற்றைக் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் தைரியம் இன்னும் இடதுசாரி இயக்கங்களுக்கு வரவில்லை.
இத்தகைய இயக்கங்களை மிகவும் உன்னதப்படுத்தி romanticise பண்ணிப் பார்க்கும் போக்கு இடது அணிகளிடம் காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய இயக்கங்களின் குறுகிய வட்டம், தொலை நோக்கின்மை முதலானவை குறித்த பிரக்ஞை நமக்கு வேண்டும். அடையாள இயக்கங்கள் பிற அடையாளங்களின் மீது உச்சபட்சமான வெறுப்பைக் கக்கும் இயக்கங்களாக மாறும் சாத்தியத்தை மறந்துவிடலாகாது.
இத்தகைய இயக்கங்களில் பங்கெடுக்கும்போதும், இத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுக்கும்போதும் இடதுசாரிகள் அதில் உண்மையான ஈடுபாடு காட்ட வேண்டும். அங்கிருந்து அணிகளை வென்றெடுப்பது, தலைமையைக் கைப்பற்றுவது முதலான நோக்கங்களுடன் செயல்படுவது அந்நியப்படுதலுக்கே வழிவகுக்கும். ஆனால் அத்தகைய நோக்குடனேயே இடதுசாரிக் கட்சிகள் அவற்றை அணுகுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய போராட்டங்களை இடதுசாரி அரசியலின் அடிப்படை நோக்கங்களாகிய ‘முதலாளியத்தைக் கடந்து செல்லுதல், ஏகாதிபத்திய எதிர்ப்பு, அடிப்படை வர்க்கங்களின் நலனை முன்னிறுத்தல்’ ஆகிய குறிக்கோள்களுடன் ஒருங்கிணைப்பது அவசியம். இதற்குரிய கோட்பாட்டுருவாக்க்கத்திற்கான எந்த முயற்சிகளும் இல்லை.
முதலாளிய அரசுகளின் கீழ் பிராந்திய/மாநில அளவுகளில் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது 1) முதலாளியக் கொள்கைகளுக்குத் தகவமைதல் 2) காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்றல், 3) அதிகாரவர்க்கத்துடன் சமரசமாதல், 4) கட்சி என்பது மக்கள் மீது அதிகரம் செலுத்தும் கருவியாதல் ஆகிய பிழைகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பைக் கவனிக்கத் தவறலாகாது.. இதன் எதிர்மறைப் பலன்களை இன்று இந்தியக் கம்யூனிஸ்டுகள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஆட்சியையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி என்பது “முதலில் முதலாளித்துவ வளர்ச்சி பிறகு சோஷலிச ஜனநாயகம்” என்கிற கொள்கை விலகலுக்கு வழி வகுக்கும். இது அடிப்படை வர்க்கங்களிடமிருந்து அந்நியப்படுதலுக்கு இட்டுச் செல்லும். இந்தியாவில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இதுதான் நிகழ்ந்தது.

கட்சியை முன்னணிப்படை என்று உன்னதப்படுத்தி அடிப்படை வர்க்கத்திற்கும் மேலானதாகக் கருதிய தவறு சோஷலிச முயற்சிகளில் பெரும் பின்னடைவுகளுக்குக் காரணமாகியது, கட்சி என்பது அணிகளை மையப்படுத்தியதாகவும், அரசியல் திட்டத்தை முதன்மைப் படுத்தியதாகவும், உறுப்பினர்களுக்குக் கருத்து மாறுபடுவது, மாறுபட்ட கருத்தைப் பிரச்சாரம் செய்வது, பிற உறுப்பினர்களுடன் கிடைமட்ட உறவுகளைப் பேணுவது ஆகிய உரிமைகளை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

21ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ள நிலையைப் புரிந்து அங்கீகரிப்பதுதான் இன்றைய பிரச்சினைகளையும் அவை முன்வைக்கும் சவால்களையும் புரிந்து அவற்றை எதிர் கொள்வதற்கான முதற்படி. “மார்க்சுக்குப் பிந்திய மாற்றங்களைப் புரிந்து எதிர்கொள்வதற்கு இன்னும் எழுபது மார்க்சுகள் வேண்டும்” என்று லெனின் ஒருமுறை கூறினார். இன்றைய மாற்றங்களை எதிர் கொள்ள இன்னும் எழுநூறு மார்க்ஸ்களேனும் தேவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிக்கல்களின் பன்முகத் தன்மையை அங்கீகரிப்போம். தேர்தல் பாதையா? ஆயுதப் புரட்சியா?, சீனம் நல்லதா? கெட்டதா? என்பது போன்ற எளிமைப்படுத்தப்பட்ட இதுவா இல்லை அதுவா என்பது போன்ற கேள்விகளிலிருந்து விடுபடுவோம்.

காலத்திற்கொவ்வாத வரட்டுக் கோட்பாடுகளையும் எதுவுமே நடக்கவில்லை என்கிற மமதையையும் கைவிடுவோம். புதிய உலகின், புதிய யுகத்தின் பிரச்சினைகளை அடையாளம் காண்போம். முதலாளியத்தைக் கடந்து செல்லல், ஏகாதிபத்திய விரிவாக்கத்தை எதிர்த்தல், அடிப்படை வர்க்கங்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல் என்கிற மார்க்சிய அடிப்படைகளுக்குள் நின்று, சென்ற நூற்றாண்டு அனுபவங்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் துணையோடு நமது புரட்சிகர நடவடிக்கைகளை மேலும் மேலும் ஜனநாயகப் படுத்துவோம். சோஷலிச ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்கிற வாய்ச்சொல்லோடு நிற்காமல், உண்மையான ஜனநாயகமே சோஷலிச ஜனநாயகம் என்கிற புரிதலோடு முன் நகர்வோம்.

நாள்: பிப்ரவரி 10, 2013

இடம்: மார்க்சியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்.