கஸ்தூரிரங்கனின் கல்விக் கொள்கையும் பா.ஜ.க கொள்கையும் சந்திக்கும் புள்ளிகள்

தேசியக் கல்விக் கொள்கை 2019 (2) [மக்கள் களம், ஜூலை, 2018)

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை:

ஒருகல்விக் கொள்கையை உருவாக்குபவர்கள் எத்தகைய அணுகல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்?

“உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் கல்விக் கொள்கை என்பது உலகளவில் உள்ள கல்விப் போக்கு குறித்த ஒரு கவனமும், அதை நோக்கி நமது இலக்கு அமையவேண்டும் எனும் விருப்பும் கொண்டிருப்பது தவிர்க்க இயலாது என்பது ஆட்சியாளர்கள் முன்வைக்கும் கருத்து. இன்று உலகளவில் வேலைவாய்ப்புகளைத் தேடி நம் இளைஞர்கள் அலைந்து கொண்டுள்ள நிலையில் நாம் ஒன்றும் அதை முரட்டடியாக மறுத்துவிட முடியாது.

edn policy

ஆனால் உலக அளவிலான கல்வி குறித்த அணுகல்முறை என்கிற கருத்தக்கத்தை நாம் நமது மண், நமது மக்கள் என்கிற பின்னணியில் வைத்துப் பார்ப்பது மிக மிக அவசியம் என்பதை நாம் எக்காரணம் கொண்டும் புறக்கணித்துவிடவும் முடியாது. இந்த நாட்டின் சாதி, ஏழ்மை, தீண்டாமை முதலான தனித்துவங்கள், மக்கள்தொகை, கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் உலகத்தரம் பற்றி நாம் பேசிவிட முடியாது.

சமீபகால வரலாற்றில் நாம் எது குறித்தாவது மகிழ்ச்சி கொள்ள முடியுமானால் அது நமக்கு ஒப்பீட்டளவில் ஒரு நல்ல அரசியல் சட்டம் கிடைத்துள்ளது என்பதுதான். அதையும்கூட “ஒப்பீட்டளவில்” என்கிற நிபந்தனையுடன்தான் சொல்ல முடியும். இரண்டாம் உலகப்போரை ஒட்டி உலகளவில் மேலெழுந்த சமத்துவம், ஜனநாயகம், மானுட உரிமைகள் குறித்த சிந்தனைகளின் பின்னணியில் டாக்டர் அம்பேத்கர் போன்றோரால் உருவாக்கப்பட்ட சட்டத் தொகுப்பு நம்முடையது. எனவே எந்த ஒரு வரைவு, கொள்கை, திட்டம் ஆனாலும் அரசியல் சட்டம் முன்வைக்கும் இந்த மதிப்பீடுகளே உரைகல்லாக இருக்க முடியும்,

இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் எந்த ஒரு கொள்கையையும் மதிப்பிட முடியும். முன்னாள் விண்வெளி ஆய்வு விஞ்ஞாநி கஸ்தூரிரங்கன் உருவாக்கியுள்ள இந்த ஆகப் பெரிய அளவிலான (484 பக்கம்) கல்விக் கொள்கை அறிக்கை இன்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை முதலான அரசியல் சட்ட மதிப்பீடுகள் கஸ்தூரிரங்கன் அறிக்கையில் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன என்பது இதன்மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம். பதிலாக நமது பாரம்பரியம், நமது மொழிகள், நமது பழம் கல்விமுறை முதலானவை குறித்து இவ் அறிக்கை எழுப்பும் தவளைக் கூச்சல் குறித்த கண்டனக் குரலை இதுவரை இவ் அறிக்கை குறித்து விமர்சித்துள்ள (நான் உட்பட) எல்லோரும் முன்வைத்துள்ளனர். எனவே அது குறித்து விரிவாகப் பேசாமல் ஓரிரண்டை மட்டும் சுட்டிக்காட்டி மேலே செல்வோம்.

eklavya-drona

அரசு வெளியிட்டுள்ள இவ் அறிக்கையின் ஆங்கில வடிவில் (பக்கம் 26) இந்தியக் கல்விமுறையின் விளைச்சலாக, “சரகர், சுஸ்ருதர், ஆர்யபட்டர், பாஸ்கராச்சாரியர், சாணக்கியர், பதஞ்சலி, பாணினி மற்றும் எண்ணற்றோர்..” உள்ளனர் என இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. தொடர்ந்து இவர்கள் கணிதம், வானியல், மருத்துவ அறிவியல், அறுவை சிகிச்சை, கட்டிடக் கலை, கப்பல் கட்டும் தொழில்,  யோகா, நுண்கலைகள் … மற்றும் “பலதுறைகளில்” வல்லுனர்களாக இருந்தனர் எனச் சொல்கிறது.

இப்படியான பட்டியல் இடுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இதில் சுட்டிக்காட்டப்படும் கல்வித் துறைகளில் சிலவற்றிற்கும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளவர்களின் பெயர்களுக்கும் தொடர்பே இல்லை. ‘சாணக்கியர்’ போன்றோர் அவர்தம் அறிவுத் திறனுக்காகப் போற்றப்படுவதைக் காட்டிலும் அவர் முன்மொழிந்த குறுக்கு வழிகளுக்காக இகழ்ச்சிக்குரியவராகவே வரலாற்றில் மதிப்பிடப் படுகின்றனர். சரகர், சுஸ்ருதர் போன்றோர் அறுவை சிகிச்சை முதலானவற்றிற்காக மதிக்கப்பட்டாலும் இங்கு உருவான பார்ப்பனீய வரலாறு, “அம்பட்டம் சிகிஸ்தனம்” எனக் கூறி அவர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே ஒதுக்கி வைத்த கதையை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற இந்தியத் தத்துவவியல் அறிஞர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். “மருத்துவர்” என்போர் இங்கு தீண்டத் தகாதவர்களாகவே மதிப்பிடப்பட்டனர், மேற்சாதியினரை நாடி பிடித்துப் பார்க்கும்போது கூட அவர்களைத் தொட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு பட்டுத்துணியைச் சுற்றி அதன்மீது விரல்களை வைத்துத்தான் மருத்துவர்கள் நாடி பார்க்க வேண்டும் எனும் நிபந்தனை இங்கிருந்ததையும் எப்படி மறந்துவிட இயலும்?

அதோடு இங்கு குறிப்பிடப் பட்டுள்ள பெருமக்கள் எல்லோரும் வடமொழிப் பாரம்பரியத்திலேயே வந்தவர்கள், திராவிடப் பாரம்பரியத்தில் சுட்டிக்காட்ட யாருமே கஸ்தூரிரங்கனின் கண்களில் படவில்லையா? பாணினியைச் சொல்லும் வாய் தொல்காப்பியரைச் சொல்லாதா?

இங்கே குறைந்தபட்சம் இரு பாரம்பரியங்கள் இருந்துவந்துள்ளன. வடமொழிப் பாரம்பரியங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல தென்மொழிப் பாரம்பரியங்கள். ஆனால் இந்த உண்மையைக் கஸ்தூரிரங்கன் அறிக்கை புறக்கணித்துள்ளது. பண்டைய அறிஞர்கள் என்றால் “ஆர்யபட்டா, பிரமகுப்தா, பாஸ்கரா, மாதவா” முதலானவா எழுதியவை மட்டுந்தான் (பக் 98) பண்டைய முக்கிய ஞானநூல்கள் என்றால் ‘பஞ்சதந்திரம், ஜாதகம், ஹிதோபதேசம்’ என்பனதான் (பக் 97). செவ்வியல் இசை என்றால் அது “கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்” தான் (பக். 89). கஸ்தூரிரங்கன்களின் கண்களில் திருவள்ளுவர் படமாட்டார். வள்ளுவர் அவர் குறிப்பிடும் வரிசையில் வைக்கத் தக்க  அறிஞர் அல்ல. தப்பித்தவறி பௌத்த மரபில் வந்த ஜாதகத்தை இவ்வறிக்கை குறிப்பிட்டுவிட்டது. அது வடமொழி ஒன்றில் இருந்ததால்தான் அந்தத் தகுதி அதற்குக் கிடைத்துள்ளது. ஆனால் பஞ்சதந்திரத்திற்கும், ஜாதகக் கதைகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ‘பஞ்சதந்திரம்’ எப்படி மற்றவர்களை ஏமாற்றி வாழ்வது எனும் தந்திரத்த்தை மக்களுக்குப் புகட்டியது, பௌத்த ஜாதகமோ அறவாழ்வின் அடிப்படைகளைக் கதை வடிவில் உரைத்தது.

மாணவர்கள் மத்தியில் ஒரே சீரான அறிவுவளர்ச்சிக்கு இன்றைய கல்விமுறை காரணமாகிறது எனக்கூறி, அதையே இன்றைய கல்வியின் குறைபாடகவும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது (பக் 27). இதன் மூலம் மாணவர்களின் தனித்துவமான திறன்கள் ஊக்குவிக்கப் படுவதில்லையாம். இது நமது பாரம்பரியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிரானது என்கிறது இவ் அறிக்கை. ஏகலைவன் (மகாபாரதம்), சம்புகன் (இராமாயணம்) ஆகியோரின் தனித்துவமான திறமைகளுக்கு என்ன மரியாதையை உங்கள் கல்விமுறை கொடுத்தது எனும் கேள்வியை கும்கும்ராய் முன்வைக்கிறார்.

eklavya

“சமூகத்தில் பெண்களின் உயர்நிலை மற்றும் பெண் கல்வி” ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது எனப் புகழும் இக்கட்டுரை, அரசியல், மதம், இலக்கியம், முதலான துறைகளிலும், பொதுவில் இந்தியச் சமூகத்திலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி இந்தியப் பாரம்பரியத்தை ஆகா ஓகோ என்கிறது இந்த அறிக்கை (பக்.145). பிரிட்டிஷ் ஆட்சி வரும்வரை இங்கே பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் அதன் பின்னரே இங்கு உடன்கட்டை முதலான கொடுமைகள் ஒழிக்கப்பட்டன, பெண்கல்வி என்பது சாத்தியமாயிற்று என்பவற்றையும் இங்கே நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. அறிக்கை சொல்வதில் ஓரம்சத்தை வேண்டுமானால் ஏற்கலாம். வரலாற்றுத் தொடக்கத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக அறிவுமிக்கவர்களாக வாழ்ந்தது உண்மைதான். அவ்வையார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களை நாம் சங்க காலத்தில் பார்க்கிறோம். கார்கி போன்ற பெண் அறிஞர்களை வேதகால கங்கைச் சமவெளியிலும் பார்த்தோம். ஆனால் அதற்குப் பிற்பட்ட 2500 ஆண்டுகளில் ஏன் பெரிய அளவில் பெண்பால் அறிஞர்கள் என யாரையும் காண இயலவில்லை? குடும்பப் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது இதில் முக்கிய காரணம் வகிக்கிறது. 18ம் நூற்றாண்டில் மறைப்பணி செய்யவந்த சீகன்பால்கு அன்றைய தமிழகத்தின் கல்விமுறை குறித்துச் சேகரித்த தகவல்களின்படி பெண்களில் தேவதாசியருக்கு மட்டுந்தான் சில குறிப்பிட்ட நூல்கள் மட்டும் பயிற்றுவிக்கப்பட்டன என்பதை அறிய வருகிறோம். “குடும்பப் பெண்கள்’ என்போருக்குக் கல்வி மறுக்கப்பட்டதுதான் நம் பாரம்பரியம். ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் கூட ஒருவகையில் குடும்ப வாழ்வைத் துறந்தவர்கள்தானே.

பொற்கால “இந்து இந்திய” பழம் பெருமைகளைத் தேவையே இல்லாமல் இங்கு பேசியதன் மூலம் இந்த அறிக்கை 484 பக்கங்களுக்கு நீண்டதுதான் மிச்சம்.

சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலே செல்வோம். 

வரவேற்கத்தக்க முன்வைப்புகளும் அதனுடன் கூடிய வில்லங்கங்களும்

1498511027-3391

அப்படியானால் இந்த அறிக்கையில் வரவேற்பதற்கு ஒன்றுமே இல்லையா எனும் கேள்வி எழுகிறது.. வரவேற்க வேண்டியவற்றை வரவேற்பதில் நமக்கு எந்த வயிற்றெரிச்சலும் இல்லை. 6 வயது முதல் 14 வயது வரையில் மட்டுமே ‘கல்வி உரிமைச் சட்டம்’ மூலமான பாதுகாப்பு என்பது இப்போது மூன்று வயது முதல் 18 வயதுவரை என இவ்வறிக்கை விரிவாக்கிப் பரிந்துரைக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனால் இதோடு நிறுத்தாமல் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு 3 வயது முதல் தொடங்குவதாக இவ் அறிக்கை முன்மொழிகிறது. இதுவரை பள்ளிப் படிப்பு 5 வயதுமுதல்தான் தொடங்குவதாகக் கணக்கிடப்பட்டது. எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி முதலான இரண்டாண்டுகள் பள்ளிப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. இந்த வயதில் கற்கையைக் காட்டிலும் விளையாட்டுகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை மூன்று வயதுமுதல் கல்வி தொடங்குவதாக அறிவிக்கிறது. 9 வயதில் அதாவது 5ம் வகுப்பில் அக்குழந்தை பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்கிறது, அது மட்டுமல்ல. 7 மற்றும் 9ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுத வேண்டுமாம். 8ம் வகுப்பில் பாஸ் – ஃபெயில் முறையை மோடி அரசு கொண்டுவந்தபோதே தமிழகம் அதை எதிர்த்தது. இன்று 3ம் வகுப்பிலிருந்து பொதுத் தேர்வைப் புகுத்துவதற்கு இவ் அறிக்கை சொல்லும் சமாதானம் குழந்தைகளின் 85 சத மூளை வளர்ச்சி இந்த வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது என்பதுதான். வளர்ச்சி அடைந்த ஏழை நாடுகளின் புள்ளிவிவரங்களை கல்வி வளர்ச்சி குறைந்த நம் நாடுகளில் எந்திரகதியாக எப்படிப் பொருத்த முடியும்?

பள்ளிக் கல்வியை மூன்று வயதில் தொடங்கும்போது இதுவரை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு எனச் செயல்பட்டுவரும் அங்கன்வாடிகளின் நிலை என்ன? இதுவரை அவை பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பில் இருந்ததில்லை. ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின்’ (WCD) பொறுப்பில்தான் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பரிந்துரைக்கு ஏற்ப இவ்விரு அரசுத் துறைகளுக்கு இடையில் பொறுப்புப் பகிர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கிறது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை இப்போது இருப்பதைக் காட்டிலும் இரண்டு மடங்காக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையின் இன்னொரு வரவேற்கத் தக்க பரிந்துரை. நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருந்ததுதான் இது. முந்தைய கல்விக் குழுக்களும் இதைப் பரிந்துரைத்திருந்தன.

தவிரவும் உயர் கல்வி என்பது அரசு நிதியில் மேற்கொள்ளப்படுவதே சரியாக இருக்கும் எனவும் அறிக்கை சொல்லி வைக்கிறது. அப்படி உயர்கல்வியில் தனியார் கொள்ளை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் நல்லதுதான். ஆனால் இன்றைய நடைமுறை இதற்கு எதிராகவே உள்ளது. பெரிய அளவில் மோடி ஆட்சியில் உயர் கல்வி தனியார் மயமாக்கப் பட்டுள்ளது அம்பானியின் ஜியோ மற்றும் ஜிண்டால், ஷிவ் நாடார் முதலானோர் எல்லாம் இன்று “உயர்சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களுக்கு” (Institutes of Eminence) அடிக்கல்நாட்டிப் பணி தொடங்கிய நிலையில் இந்தப் பரிந்துரையை எப்படிச் சாத்தியப்படுத்துவது? அது குறித்து இவ்வறிக்கை ஏதும் பேசவில்லை.

இந்த அறிக்கையின் இன்னொரு பாராட்டத்தக்க அம்சம் ஆசிரியர் பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம். இது குறித்து மிக விரிவாக இவ் அறிக்கை பேசுகிறது. இது தொடர்பாகச் சில வரவேற்கத்தக்க திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள் மீது ஆசிரியர் அல்லாத பணிகளைத் திணிக்கக் கூடாது என்பது வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம், முறையான பதவி உயர்வு ஆகியனவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நிரந்தர ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இருவருக்கும் இடையில் ஊதிய வேறுபாடோ மிக மிக அதிகம், ஒரே வேலைக்கு இரு ஊதியம் என்கிற அநீதி ஆசிரியத் தொழிலில் மிக அதிகம். இந்த நிலை முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எனினும் இது குறித்து இவ் அறிக்கை ஏதும் பேசவில்லை.

ஆசிரியப் பற்றாக் குறையை நீக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மிகக் குறைந்த ஊதியத்தில் ‘சிக்ஷா  கர்மி’ மற்றும் ‘சிக்ஷா மித்ரா’ எகிற பெயர்களில் இருவகை பகுதி நேர ஆசிரியர்களை (para teachers) நியமிக்கப் பரிந்துரைக்கிறது. ஆனால் 2022 க்குள் இந்த நடைமுறையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கூறுகிறது. அதன் பின் அந்த கர்மிகள் மற்றும் மித்ராக்களின் கதி? அது குறித்து கஸ்தூரிரங்கன் குழுவின் பதில் மௌனம்தான். இப்படியாக இன்று இந்தியா முழுவதிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஆசிரியர்கள், எந்த ஒப்பந்தங்களும் இல்லாத guest lecturers முதலானோர் நிரந்தரமாக்கப்படுதல் அவசியம். 

இட ஒதுக்கீடுக்கு எதிராக

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை உயர்சாதி மேட்டிமைத்தனத்துடன் இருப்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிப்பது பற்றிய இவ் அறிக்கையின் பரிந்துரை. “இந்தக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநில மாணவர்களுக்கான சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்படும் எந்தப் (புதிய) இட ஒதுக்கீடு தொடர்பான வழிமுறைகளையும் ஏற்று நடத்தவேண்டும் என தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆணையிட முடியாது என்கிறது கஸ்தூரிரங்கன் குழு (பக்.334).

இட ஒதுக்கீடு தொடர்பாக அடித்தள சாதியினருக்கு சலுகைகள் அளிக்க தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை கஸ்தூரிரங்கன் குழு மிக மெலிதாகத் திணிப்பது கவனத்துக்குரியது.

அதேபோல இந்த அறிக்கை முழுவதிலும் ஆங்காங்கு “தரம்” (merit)     எனும் கருத்காக்கம் அளவுக்கு மீறி வற்புறுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *