மலம் அள்ளும் துப்புறவுப் பணி குறித்து காந்தியடிகள்

“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்:

டிசம்பர் 3 1932 அன்று புனே  பகுதி காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்தான் அவை.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரத்னகிரி சிறையில் இருந்த அப்பாசாகேப் பட்டவர்தன் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியுள்ளார். பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்திக் காந்தி இந்தக் கடிதங்களை எழுதுகிறார்.

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஒரு ‘மேல்’ சாதிக்காரர். அந்தக் காலத்தில் எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி

சக கைதிகளின் மலத்தை அள்ளும் தூய்மைப் பணி, துப்புரவுப் பணி.

#    #    #

உங்களுக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; அபத்தம் எனலாம். ஆத்திரம் கூட வரலாம்.

‘பங்கி’கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நீங்கள் கொதிப்பதை என்னால் காண இயலுகிறது.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப் பிரசினைகளில் நவீனமாதல், எந்திரமயமாதல் ஆகியவற்றை எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின் எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தியவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் மலம் அள்ளுவதை ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என நான் சொல்ல வரவில்லை. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

காந்தியை அறியாமலேயே அவர் மீது ஒரு வெறுப்பைச் சுமந்து திரியும் நாம் மட்டும் என்ன ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை ஒழித்துவிட்டோமா என்ன?

 

இப்படியானது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலை பெறும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம் இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இங்கொன்றை மிகவும் அழுத்தமாகப் பதிய விரும்புகிறேன். இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என நினைத்துவிடக் கூடாது, அப்படியாக இந் நிகழ்வை வாசிக்க நம் மீது திணிக்கப்பட்டுள்ள காந்தி வெறுப்பு நம்மை ஆட்படுத்திவிடக் கூடாது.

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, கஸ்தூரி பா காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்ட வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

குறிப்புகள் 1:  முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’காசியும் குமரியும்’ எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் அவர் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை பாவே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவதைத் தயவு செய்து ஒருமுறை படித்துப் பாருங்கள்.  நமக்குத் தோன்றலாம். இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலுமா? நான்தான் சொன்னேனே இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

  1. காந்தி டோயலுக்கு எழுதியுள்ள கடிதங்களை அவரது தொகுப்புகளில் காண்லாம்… நறுக்குத் தெரித்தாற் போன்ற காந்தியின் ஆங்கிலம், அதிகாரிகளுக்கு எழுதும் போதும் சற்றும் வளைந்து கொடுக்காதது. அதே நேரத்தில் அதில் மிளிரும் பண்பு யாரையும் தலை வணங்கச் செய்வது.  இந்தக் கடிதம் எழுதப்படும்போது காந்தியும் ஒரு சிறைவாசி என்பது கவனத்துக்குரியது பட்டவர்தன் அவர்கள் உண்ணா விரதம் இருப்பது காந்தி கேள்விப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வேளை அது தவறாக இருக்கக்கூட வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டு காந்தி எழுதும் வாசகங்கள் இவை..

“If I am misinformed about the present position you will let me know what it really is. If I am correctly informed I would ask you in view of the circumstances brought to your notice please to telegraph instructions that my friend and his associates may be allowed to resume Bhangi work under whatever written guarantee as to its voluntary nature you may deem fit to take from them. Though I am a prisoner, you will not expect me to see a comrade dying by inches, not for any crime, not for any indulgence he desires, but for deprivation of humanitarian service for the prosecution of which Government have recognized the necessity of giving me special facilities…  I am sure that you will treat this as a matter of urgency involving as it does the possibility of great damage being done to a fellow-being under your custody.”

  1. சுதந்திரத்திற்குச் சற்று முன்னதாக காந்தி அளித்த மிக முக்கியமான நேர்காணல்களில் ஒன்றில் “முதல் குடியரசுத் தலைவராக ஒரு பங்கி இனத்துப் பெண் அமைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளதை எனது பழைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்
  2. காந்தி டோயலுக்கு எழுதிய கடிதங்களை Years of Fasts of Mahatma Gandhi என்னும் தலைப்பில் இந்த இணையப் பக்கத்தில் காணலாம்: http://www.mkgandhi.org/fastofmahatma.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *