ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு

 திராவிட இயக்க ஆட்சியின் மூன்று அடையாளங்கள்..

அண்ணா தலைமையில் திராவிடக் கட்சிகள் பதவி ஏற்று இன்றோடு (பிப் 7) 50 ஆண்டுகள் ஆகின்றன.

  1. மொழி, இன அடிப்படையிலான மாநில வாதம், ஆனால் அது இன/மொழி வெறிகளாகவும் வெறுப்புகளாகவும் மாறாமை (regionalism without chauvinism). அல்லது இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால் எல்லோரையும் உள்ளடக்கிய தேசியம் (inclusive nationalism);
  2. அரசியல் திரட்சியில் மத அடையாளங்களைத் தவிர்த்தல். சிறுபான்மை மத அடையாளத்தினர் அந்நியமாக உணராத அணி திரளல் (secular and minority friendly)
  3. கீழ் நோக்கிய அதிகாரப் பரவல்

இவை திராவிட இயக்கங்களின் தனிச் சிறப்புகள் எனலாம். மேலே குறிப்பிட்டவற்றில் இந்த மூன்றாவது அம்சத்தைச் சற்று விளக்க வேண்டும். அதிகாரப் பரவல் இரண்டு வடிவங்களில் இருந்தன. இட ஒதுக்கீட்டை அதிகரித்தது (தமிழகத்தில் மட்டுமே 69 சதம்) மட்டுமின்றி மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள், அருந்ததியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப் பிரித்தளித்தது).

அதிகாரப் பரவலின் இன்னொரு அம்சம்: அதிகாரவர்க்கத்திடம் (bureaucracy) குவிந்துகிடந்த அதிகாரத்தை சற்றே தளர்த்தி மக்கள் பிரதிநிதிகளுக்குக் கைமாற்றியது.. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’. குடிசை வாழ் மக்களுக்கு அவர்கள் வாழ்கிற இடங்களிலேயே நிரந்தர வீடுகளை அமைத்துக் கிட்டத்தட்ட இலவசம் என்கிற அளவிற்கு அதை வினியோகித்தல். இதற்கென அமைக்கப்பட்ட ‘குடிசை மாற்று வாரியம்’ அதிகாரவர்க்கத்திடம் கையளிக்கப்படாமல் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டு அணுகுதற்கு எளிமையாக்கப்பட்டது. முதல் தலைவராக அப்படி அமர்த்தப்பட்டவர் இராம. அரங்கண்ணல்.

இன்னொரு எடுத்துக்காட்டு: மாவட்டங்கள் தோறும் அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்க அவ்வப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சிக்காரர்களுக்குச் சலுகை முதலான புகார்கள் வந்த போதும் சாதாரண மக்கள் அணுகுதற்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும், குறைகளைக் களைந்து கொள்வதற்கும் இந்த மாற்றங்கள் வழிவகுத்தன.

 

  1. சீரழிவுக்குத் திராவிட இயக்கங்களை மட்டுமே பொறுப்பாக்க முடியுமா?

ஒரு நண்பர் Natarajan Seetharaman முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஜனநாயகப்பாடு, உருவான குடிசை மாற்று வாரியம் முதலான அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி நான் எழுதியிருந்தது குறித்து, ‘அதெல்லாம் சரி, இந்த நிறுவனங்கள் எல்லாம் எத்தனை காலம் நீடித்தன?’ என்று.

நியாயமான கேள்வி. அவை எல்லாம் நீடிக்கவில்லைதான். இன்று மிகப் பெரிய அளவில் எதிர்மறையான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனதான். அவற்றை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்தான். ஆய்வு செய்ய வேண்டும்தான்.

அப்படியான ஆய்வில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கெல்லாம் திராவிட இயக்கங்களின் சீரழிவுதான் காரணம் என்று மட்டும் நாம் அணுகிவிட இயலாது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் உருவான கட்சி தி.மு.க. இன்று சுமார் எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் உலகில் எத்தனை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக ஏற்பட்டாலும் சில பொதுப் போக்குகளும் இருக்கத்தானே செய்கின்றான. போருக்குப் பிந்திய சூழலில் liberal பார்வையுடன் கூடிய, ஓரளவு முற்போக்கு எனச் சொல்லக் கூடிய அரசுகள் உலகெங்கிலும் உருவாயின. இன்னொரு பக்கம் பெரிய அளவில் சோஷலிசப் பொருளாதார நாடுகள் உருவாயின. ஆனால் ஒரு இருபது ஆண்டுகளுக்குப் பின் நிலைமை மாறியது. ரீகன், தாட்சர், ஹெல்மட் கோஹ்ல் இப்படியான இறுக்கமான வலதுசாரி Neo Imperialism எனச் சொல்லத்தக்க அரசுகள் உருவாயின. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின், தொண்ணூறுகளில் உலகம் ஒரு துருவ உலகமாகியது. சோஷலிச நாடுகள் சிதைந்து அழிந்தன. அங்கெல்லாம் வலதுசாரி அரசுகள் உருவாயின. வார்சா ஒப்பந்த நாடுகள் எல்லாம் நேட்டோவில் அங்கமாயின.

ஒரு துருவ உலக அமைப்பில் முன்னெடுக்கப்பட்ட உலகமய நடவடிக்கைகளும், முற்றிலும் புதியதோர் உலகைப் படைத்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியும் ஆளுகை (governance) , மக்கள் வாழ்க்கை என எல்லாவற்றிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தின.. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வலுவாயின. பயங்கரவாதம், உலகமயம், இன்டெர்னெட் புரட்சி ஆகியவை ஒரு பக்கம்: புதிய மாற்றங்களின் விளைவாக அதிகரித்த புலப் பெயர்வு (immigration) என்பன இன்னொரு பக்கம். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், ஓய்வூதியம், நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு எல்லாம் இல்லாமலாயின. அரசுகள் சமூகப் பாதுகாப்பு என்பதைக் காட்டிலும் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கின. உலகெங்கிலும் தாராளவாதம், இடதுசாரிச் சிந்தனைகள் முதலியன பலவீனமாகி அந்த இடத்தில் ‘பாப்புலிசம்’ பெருந் தேசிய இனவாதம் முதலியன வலுவாயின. ட்ரம்ப்கள், மோடிகளின் வருகையை ஒட்டி அடுத்தடுத்து நடக்கப் போகும் மேலை நாட்டுத் தேர்தல்களில் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

திராவிட இயக்கம் எனத் தொடங்கி ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் உலகெங்கிலும் எல்லாவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. immigrants க்கு எதிரான முழக்கங்கள், இன வெறுப்பு அரசியல் ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனத் தமிழ்நாட்டிலும் கூட சீமான், மணியரசன் போன்றோர் இன்று அரசியல் செய்வதைக் காண வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளிகளை விரட்ட வேண்டும், அவர்களுக்கு ரேஷன் முதலிய வசதிகளை அளிக்கக் கூடாது என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டின் லீபென் கள் ஆக இவர்கள் துடிப்பதைப் பார்க்கலாம். .

ஆங்காங்கு பலவீனமாகிப் போயுள்ள இடதுசாரிகள்தான் இப்படியான குறுகிய இனவாதம். புலப் பெயர்வுக்கு எதிரான முழக்கங்கள் அகியவற்றை ஓரளவு எதிர்த்து நின்றனர். சமீபத்தில் பிரிட்டனின் முக்கிய இடதுசாரித் தலைவர் ஒருவர் “புலப் பெயர்வு தொடர்பான கொள்கைகளில் நாங்கள் அப்படி ஒன்றும் இறுக்கமாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியதைப் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.
ஆக எல்லா அரசியல் கட்சிகளிலும், உலகெங்கிலும் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. புதிய மாற்ரங்களின் அழுத்தங்களைத் தாங்க இயலாமல் இடதுசாரிகளும் கூட தம் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். இவற்றைச் சொல்லி திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போன வரலாற்றை எல்லாம் நியாயப்படுத்துவதல்ல என் நோக்கம். எல்லா வீழ்ச்சிகளுக்கும் அந்த இயக்கங்களை மட்டுமே குற்றம் சொல்லிவிட இயலாது என்பதுதான்.

நண்பர் நடராஜன் சீதாராமனின் கேள்விக்கு வருவோம். தி.மு.க ஆட்சியின் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக குடிசை மாற்று வாரியம் இருந்தது என நான் எந்தக் காரணங்களுக்காகக் குறிப்பிட்டேனோ அந்தக் காரணங்களை இன்று அது இழந்து நிற்பது உண்மையே. அவரவர் வாழ்ந்த இடங்களிலேயே (in situ) பாதுகாப்பான நிரந்தர வீடுகளைக் கட்டித் தருவது )என்கிற கொள்கையை இன்று குடிசை மாற்று வாரியம் கைவிட்டுவிட்டது. 30 / 40 கி.மீ தொலைவில் கண்ணகி நகர் முதலான பகுதிகளில் புதிய வீட்டுத் தொகுதிகள் கட்டப்பட்டு அவர்கள் நகர மையங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிகின்றன. கிட்டத் தட்ட இலவசம் என்கிற நிலை போய் கட்டுமானச் செலவுகள் அம் மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன. வாரியத் தலைமையில் அரசியல்வாதிகள் நீக்கப்பட்டு அந்த இடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப் படுகின்றனர்.

தந்தை ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ எனக் கூறி குடிசை மாற்று வாரியத்தை அமைத்தார். மகன் ‘சிங்காரச் சென்னை’ பற்றிப் பேசி நகர் மையங்களிலிருந்து குடிசைகள் அகற்றப்படுவதற்கு சாட்சி ஆகிறார் என்றால் அதற்கெல்லாம் “திராவிட இயக்கத்தின் சீரழிவு” என்பதை மட்டுமே காரணமாகச் சொல்லிக் கடந்து விட முடியாது. இடையில் நடந்தவற்றைப் பார்க்க வேண்டும்.

இடையில் இந்தியா நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைக்கு அடி பணிந்தது. குடிசை மாற்று வாரியம் முதலியன IMF, உலக வங்கி முதலான பன்னாட்டு நிதியங்களின் தயவில் செயல்பட வேண்டி வந்தது. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் வெறும் நிதியை மட்டும் வாரி வழங்கவில்லை. அதோடு கடும் நிபந்தனைகளையும் சேர்த்துத்தான் தந்தன. குடிசை மாற்று வாரியத்தைப் பொருத்த மட்டில் அவை சொன்ன முதல் நிபந்தனை குடிசை மாற்று வாரியம் கட்டுகிற புதிய கட்டுமானங்கள் அவர்கள் வாழ்ந்த நகர் மையங்களில் இருக்கக் கூடாது. எவ்வளவு தொலைவானாலும் நகர மையங்களுக்கு வெளியேதான் அமைக்கப்பட வேண்டும். அடுத்த நிபந்தனை அவற்றுக்கான கட்டுமானத் தொகைகளை அவர்களிடமிருந்தே வசூலித்தாக வேண்டும் என்பது. வாரியத் தலைவர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது. அந்த இடங்களில் IAS அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.

இப்போது சொல்லுங்கள் இந்த அம்சத்தில் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு திராவிட இயக்கங்கள் மட்டுமா காரணம்?

 

3.தமிழகம் எதிர்கொண்ட அரசியல் மாற்றங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் இங்கு ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் / சமூக மாற்றங்களாக எவற்றைச் சொல்லலாம்?. உடனடியாக மனதில் தோன்றுகிற சிலவற்றைப் பட்டியலிடுவோம்.

1.1967 ல் காங்கிரஸ் ஆட்சி திமுகவால் வீழ்த்தப்பட்டதோடு தமிழகத்தில் காங்கிரசின் வரலாறு தேய்பிறையாகித் தொடர்ந்து தேய்ந்து எதிர்காலமற்றுச் சுருங்கியது.. ஆளும் கட்சியாவதற்கு முன்னதாக இங்கு பிரதான எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் திமுக வீழ்த்தியிருந்தது. கம்யூ கட்சி எதிர்க் கட்சி நிலையையும் இழந்து அதன் வளர்ச்சியும் தேய்பிறையாகியது. அதிமுக வின் தோற்றத்தோடு காங்கிரஸ் எதிர்க் கட்சி என்கிற நிலையையும் இழந்தது. அதற்குப் பின் இன்றுவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற இரண்டு நிலைகளுமே திராவிட இயக்கங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளப்பட்டன.

2.எண்பதுகளின் இறுதியில் இங்கு புதிய சில மாற்றங்கள் ஏற்பட்டன..

(அ) உலகளாவிய சில மாற்றங்களும் இந்திய அளவிலான சில மாற்றங்களும் இங்கு தாக்கங்கைளை ஏற்படுத்தின. உலகெங்கிலும் கம்யூ கட்சிகள்,இடதுசாரிச் சித்தாந்தங்கள், சோஷலிச அரசுகள் சடசடவெனச் சரிந்து வலதுசாரி சித்தந்தங்கள் வீறுடன் மேலுக்கு வந்தன. தகவல் தொழில் நுட்பப் புரட்சி, உலகமயம், ஒரு துருவ உலகம் ஆகிய மாற்றங்களின் பின்னணியில் மக்கள் நல அரசு (welfare state) என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது., “கம்யூனிச அபாயம்” என்கிற இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக “இஸ்லாமிய பயங்கரவாதம்” முன்வைக்கப்பட்டது. ‘தேசியப் பாதுகாப்பு’ என்பது எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமாக முன்வைக்கப்பட்டது..உலகமயச் செயற்பாடுகளுக்கு இந்தியா மிக வேகமாகத் திறந்துவிடப் பட்டது.

(ஆ) காந்தி கொலைக்குப் பின் சற்றே அடங்கி, ஆனால் அமைப்பு ரீதியாகப் பலமாகிக் கொண்டிருந்த இந்துத்துவ சக்திகள், 1983 ல், மீனாட்சிபுரம் மதமாற்றத்தை ஒட்டி தீவிரமாக வெளிப் போந்தன. அவை தோன்றிய காலத்திலிருந்து (1925) வெகுமக்கள் அணிதிரட்டலில் ஈடுபட்டதில்லை. ஆனால் இப்போது பாபர் மசூதி எனும் பெயரில் பெரிய அளவில் வடமாநிலங்களில் அணிதிரட்டல்களைச் செய்தது. தென் மாநிலங்களிலும் அதன் தாக்கம் இருந்தது. மே.வங்கம், கேரளம், தமிழகம் ஆகியவற்றில் மட்டுமே ஒப்பீடளவில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது . தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இந்துத்துவம் கால் பதிப்பது சாத்தியமே இல்லாத நிலை இருந்தபோதிலும் உலக அளவில் மேலுக்கு வந்துகொண்டிருந்த வலதுசாரி தேசியவாதமும், இந்திய அளவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்துத்துவக் கருத்தியலும் தமிழக மக்கள் மத்தியில் வேர் பாய்ச்சத் தொடங்கின. ஆனால் அவ்வாறு வேர் கொண்ட உணர்வுகளைத் தம் நேரடி அரசியலுக்கும், அமைப்பாக்கத்திற்கும் பயன்படுத்துவதில் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தைப் பொருத்த மட்டில் இன்றளவும் தோற்றுப் போயுள்ளன.

(இ) 90 களில் உலகளவில்உருவாகியிருந்த அடையாள அரசியல் என்பது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலித் அமைப்புகள் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள், பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்புகள் குறிப்பாக பா.ம.க முதலியன குறிப்பிடத் தக்க சக்திகளாக உருவாயின. முஸ்லிம் கட்சிகளும் அழுத்தமாகத் தம் கோரிக்கைகளையும், அடையாளங்களையும் வற்புறுத்தவும் இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளைச் சாதித்துக் கொள்ளவும் முடிந்தது,

(ஈ) ஈழப் போராட்டத்திற்கு உருவான வெகுமக்கள் ஆதரவையும் தமிழ் உணர்வையும் மூலதனமாக்கி இங்கே சில தமிழ்த் தேசிய அமைப்புகள் இன உணர்வை இன வெறி என்கிற அளவிற்கு வளர்த்தெடுத்துப் பயன்படுத்தும் முயற்சிகள் தீவிரமாயின.

இந்த நிலையை திராவிட இயக்கங்கள் எப்படி எதிர்கொண்டன? இவற்றின் மத்தியில் திராவிட இயக்கங்களுக்கு எதிர்காலம் உண்டா?

4.திராவிட இயக்கம் அதன் மூன்று அடிப்படைகளை மறக்கக் கூடாது.

இந்தத் தொடரில் என் நோக்கம் திராவிட இயக்க வரலாறை எழுதுவதோ, திமுக / அதிமுக பிளவை ஆய்வு செய்வதோ அல்ல. இன்றைய சூழலில் திராவிட இயக்கங்களின் நிலை, உடனடி எதிர்காலம், ஆகியவற்றைப் பற்றி பேசுவது மட்டுமே. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கும் இதில் இடமில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன அவற்றுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து எழவில்லை. எழுவதற்கான வாய்ப்பும் உடனடியாக ஏதுமில்லை. தொடர்ந்து இந்திய அளவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும், உலக அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் அவர்கள் மீண்டும் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் ஆக்கிவிட்டன. கம்யூனிஸ்டுகளின் முதுகெலும்பாக உள்ள தொழிலாளர், விவசாய இயக்கங்களும் இன்று வலுவிழந்தும், கைநழுவியும் போய்விட்டன. உலகமயம், அடையாள அரசியல் முதலியன இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்துத்துவப் பாசிசம் இங்கு காலூன்ற முடியவில்லை. திராவிடக் கருத்தியல் அதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தவிரவும் தமிழகத்தில் இந்துத்துவத்தின் முதுகெலும்பாக உள்ள முற்படுத்தப்பட்ட சாதிகள் பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கு வலுவாக இல்லை. இங்கே பார்ப்பனர்கள் வெறும் 2 சதமே. சத்திரியர், வைசியர் வருணங்கள் இங்கு கிடையாது. இங்கு வலுவாக உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள இந்த ‘திராவிட’ என்கிற அடையாளம் அவர்களுக்கு விதித்துள்ள எல்லைகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா ஆகியோராலும் கூட மீற முடியவில்லை. எம்.ஜி.ஆருக்காவது திராவிட இயக்கப் பாரம்பரியம் கொஞ்சம் இருந்தது. எதுவும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்குள்ள நெருக்கத்தின் காரணமாகவே தலைமையைக் கைப்பற்றிய ஜெயாவும் கூட அந்த எல்லையை மீற இயலவில்லை. தன்னை ஒரு “பாப்பாத்தி” என்று அடையாளப்படுத்திக் கொண்ட துடுக்குத் தனத்தை எல்லாம் கூட அவர் பின்னாளில் கைவிட வேண்டியதாயிற்று. சொந்த வாழ்விலும் அவர் பார்ப்பனர்களைக் காட்டிலும் பிற சாதியினரையே அருகாக வைத்திருந்தார். சங்கராச்சாரியிடமும், பார்ப்பனராக இருந்தபோதும் அவர் நெருக்கம் காட்டியதில்லை. முதற் கட்டத்தில் அவர் கொண்டுவர முயற்சித்த மத மாற்றத் தடைச் சட்டத்தையும், ஆடு, கோழி பலிகள் தடைச் சட்டத்தையும் கூட அவர் பின்னால் கைவிட்டார். ஈழப் பிரச்சினையிலும் அவர் பின்னாளில் மிகப் பெரிய மாற்றங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து சட்டமன்றத் தீர்மானங்களை இயற்றி மத்திய அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்தார்.

இவற்றையெல்லாம் நான் ஜெயாவிடம் ஒளிந்திருந்த முற்போக்கான அம்சங்கள் என்றோ அல்லது திருந்தி நல்லவராகி விட்டார் என்பதற்கான அடையாளங்களாகவோ சொல்லவில்லை. மாறாக திராவிட இயக்கம் என்பதற்கான இந்த எல்லைகளை இந்த அடையாளத்திற்குள்ளும், பாரம்பரியத்திற்குள்ளும் நின்று கொண்டு கடந்துவிட இயலாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் என்பதே. எம்.ஜி.ஆரையும் கூட நாம் இந்தக் கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். அவரது ஆட்சியில்தான் இந்திய அளவில் முதல் முறையாக 69 சத இட ஒதுக்கீடுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இவர்களிருவருக்கும் அவர்களின் பிறப்பு அடையாளங்கள் தவிர அவர்கள் சுமந்திருந்த பிற அடையாளங்கள் அனைத்தும் அவர்களின் காலத்தில் அத்தனை பெருமைக்குரியவை அல்லாதவை. நடிகர்களுக்கு இன்றளவு மதிப்புகள் இல்லாத காலத்தில் திரை உலகில் புகுந்தவர்கள் அவர்கள்.

திராவிடக் கருத்தியலின் இறுக்கம் திராவிட இயக்கங்களில் பலவீனப்பட்டுக் கொண்டே வந்தன என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடில்லை. அதையும் கூட அந்தக் கட்சிகளின் சீரழிவுகளாக மட்டுமே சுருக்கிப் பார்த்துவிட இயலாது. உலக அளவில் முற்போக்குக் கருத்தியல்கள் நீர்த்துக் கொண்டும், வலதுசாரிக் கருத்தியல்கள் பலம் பெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இங்கே இந்துத்துவம் அமைப்பு ரீதியாகக் காலூன்ற முடியா விட்டாலும் இந்துத்துவக் கருத்தியல் பரவிக் கொண்டுதான் உள்ளன. நான் மாணவனாக இருந்த காலத்தில் விபூதி போன்ற மத அடையாளங்களைத் தரித்துக் கொண்டு வரும் மாணவர்கள் கேலிக்குரியவர்களாகப் பார்க்கப்படுவர். இன்று அப்படியில்லாத நெற்றிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. எல்லா மத அடையாளங்களும் இன்று தம்மைத் துருத்திக் கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் காலம் இது.

சரி இனி என்ன ஆகும்? திராவிடக் கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

திராவிடக் கட்சிகளை வெளியேற்றி அவற்றின் இடத்தை ஆக்ரமிக்கக் கூடிய அளவிற்கு இன்று எந்த்ச் சக்திகளும் இல்லை. கிட்டத் தட்ட திராவிடக் கட்சிகள் தவிர பிற அத்தனை கட்சிகள், இயக்கங்கள் எல்லாமும் “திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்” என ஓலமிடுவதொன்றே இன்னும் திராவிடக் கட்சிகள் பலமாக உள்ளன என்பதற்குச் சான்றுகளாகவும் அமைகின்றன.

ஜெயா இறந்து அதிமுக பலவீனப் பட்டதை ஒட்டி எப்படியாவது குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த பா.ஜ.க இன்று மேலும்மேலும் பலவீனப்பட்டுக் கொண்டுள்ளது. மெரினாவிலும், நெடுவாசல்களிலும் மக்கள் கூடும்போதெல்லாம் ராதாகிருஷ்ணன்களும், தமிழிசைகளும் அலறித் துடிப்பதும், எச் ராஜாக்கள் மக்களால் துரத்தி அடிக்கப்படுவதும் அவர்களுக்கு இனி இங்கு எதிர்காலம் இல்லை என்பதற்குச் சாட்சிகளாக அமைகின்றன. தமிழ் என்கிற அடையாளத்தின் கீழ் திராவிட இயக்கம் கட்டமைத்த மாநில உணர்வு இன்னும் இங்கு மங்கவில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

திராவிட இயக்கம் கட்டி எழுப்பிய தமிழ் உணர்வைத் தமிழ் வெறியாக மாற்ற முனைவதில் இங்கு தமிழ்த் தேசிய இயக்கங்கள் தோற்றுக் கொண்டுள்ளதையும் பார்க்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயா மட்டுமின்று தந்தை பெரியார், கருணாநிதி உட்பட எல்லோரையும் கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் என்றெல்லாம் அரற்றித் திரிந்தவர்களை தமிழ் மக்கள் நிராகரித்து வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.

தலித் கட்சிகளைப் பொருத்த மட்டில் இன்று இங்குள்ள மூன்று முக்கிய உட்சாதிகளும் பிரிந்து கிடப்பது மட்டுமல்ல, உள் இட ஒதுக்கீடு முதலான பிரச்சினைகளில் எதிர் எதிராகவும் உள்ளன. உட்சாதி ஒற்றுமையை வளர்ப்பதிலும், பிற்படுத்தப்பட்டோரில் முத்தரையர் போன்ற ஆகக் கீழே உள்ளவர்களையும் சிறுபான்மை மக்களையும் இணைத்துக் கொள்வதில் இம்மியும் அக்கறை காட்டுவதில்லை. கன்ஷிராம் போன்றவர்கள் இந்த ஒற்றுமையைக் கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தியதன் விளைவாகத்தான் இன்றளவும் உ.பி யில் பகுஜன் சமாஜ் ஒரு வலுவான சக்தியாக உள்ளது. அந்த வாய்ப்பும் இங்கு இல்லை.

சிறுபான்மை மக்களைப் பொறுத்த வகையில் அவர்களுள் சற்றே கூடுதல் எண்ணிக்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் இங்கே அரசியல் ரீதியாக அணி திரட்டப்படவில்லை. கிறிஸ்தவர் என்கிற அடிப்படையில் அவர்கள் ஒன்றுபடுவதைக் காட்டிலும் சக இந்துக்களைப் போல சாதிகளாக அவர்கள் பிரிந்து நிற்கும் நிலையே அதிகம். முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அவர்கள் அரசியல் ரீதியாகப் பிரக்ஞையோடு அணி திரண்டுள்ள போதிலும் அவர்களின் மக்கள்தொகை வீதம் இங்கு வெறும் ஆறு சதம் மட்டுமே. திராவிடக் கட்சிகளோடு இணைந்தே அவர்கள் இதுவரை தேர்தல் களம் கண்டுள்ளனர். இனியும் அப்படித் தொடர்வதற்கே சாத்தியங்கள் உண்டு.

ஒருவேளை ஜெயாவின் இறப்பை ஒட்டி அடுத்த தேர்தலின்போது அதிமுக பிளவுறுமானால் அந்த இடத்தில் திமுக கூட்டணிதான் வருமே ஒழிய உறுதியாக பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளோ, தமிழக லீபென்களாக முயலும் இனவெறி சக்திகளோ அந்த இடத்தைப் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை

கடைசியாக நம் முன் உள்ள லேள்வி, மெரினா, நெடுவாசல் முதலான புதிய புரட்சிகள் புதிய மாற்றை உருவாக்குமா? இந்த இயக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்தால் அவை ஒன்றும் திராவிட இயக்கங்களைக் குறி வைத்த போராட்டங்கள் அல்ல என்பது விளங்கும். இது குறித்து விரிவாகப் பேச வேண்டும். பின்னொருமுறை பேசுவோம். இப்போதைக்கு ஒன்று மட்டும். இத்தகைய போராட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமான தனித்துவம் அல்ல. 2011 முதல் அரபு நாடுகளிலும், வால்ஸ்ட்ரீட் முதலான மேலை நாடுகளிலும் நடந்த போராட்டங்களின் அதே தன்மையில் தான் இவை அமைந்தன. இந்தப் போராட்டங்க வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை என்பதில் ஐயமில்லை. திருப்பி இயக்கவல்லாத பல மாற்றங்களை அந்தந்த நாடுகளில் அவை ஏற்படுத்தியுள்ளன என்பதிலும் ஐயமில்லை. ஆனால் எந்த நாட்டிலும் இந்த இயக்கங்களே கட்சிகளாக மாறி ஏற்கனவே இருந்த கட்சிகளை இடம் பெயர்க்கவில்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

இந்த அனுபவத்தைக் கணக்கில் கொண்டு திராவிடக் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கற்றுக் கொள்வார்களா?

கற்றுக்கொள்ளாவிட்டால்..?

அப்போதுதான் திராவிடக் கட்சிகளின் ஆளுகை முடிவுறும்.

திராவிடக் கட்சிகள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் மக்கள் காணும் வெறுக்கத் தக்க அம்சங்களை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அதன் அடிப்படையான மூன்று பண்புகளையும் அது எக்காரணம் கொண்டும் நீர்த்துப் போக அவை அனுமதிக்கக் கூடாது. இடதுசாரிகள், தலித்கள், சிறுபான்மையினர்.. இவர்கள்தான் தங்களின் இயற்கைக் கூட்டணி என்பதை மறக்கக் கூடாது.

 

பல்கலைக் கழகம் என்பது…..     

(சென்ற ஆண்டு டெல்லி  JNU பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது எழுதப்பட்டு ‘விகடன் தடம்’  இதழில் வெளிவந்தது)

இந்தியாவிலேயே சிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளன என்று மனித வளத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்த இரண்டு பல்கலைக் கழகங்களையும் மூட வேண்டும் என இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார் இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்குபெற்ற ஷெஹ்லா ரஷீத். இவர் இன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர்.

இது மிகப் பெரிய முரண்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணங்களால் இப்பல்கலைக் கழகங்கள் முதன்மையாக விளங்குகின்றனவோ அதற்கு அடிப்படையாக இருப்பவைதான் இவற்றை மூட வேண்டும் எனச் சொல்கிறவர்களின் கண்ணை உறுத்துபவையாகவும் உள்ளன.

ஏராளமான ஆய்வுகள் வெளி வருவது, இப்பல்கலைக் கழகங்களிலிருந்து படிப்பை முடித்துச் சென்றவர்கள் உலகெங்கிலும் முக்கிய பொறுப்புகளில் விளங்குவது ஆகியவற்றின் அடிப்படையில்தான் இவை முதன்மையான பல்கலைக் கழகங்கள் என மதிப்பிடப்படுகின்றன.

எப்போதும் அரசியலும், மோதல்களும், கருத்து மாறுபாடுகளும் உரத்த குரலில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகங்கள் எப்படி கல்வியிலும் ஆளுமை உருவாக்கங்களிலும் முன்னிலை வகிக்கின்றன?

கருத்து மாறுபாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும், முன்னோர்கள் எத்தனை மேதைகள் ஆயினும் அவர்களின் முடிவுகளைக் கேள்வி கேட்கும் மனநிலையும்தான் அறிவு வளர்ச்சியின் ஆதாரம்; கண்டுபிடிப்புகளின் தாய். மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளைப் பார்த்துவிட்டு அது அப்படித்தான் விழும் என நினைத்துக் கொண்டு போயிருந்தால் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்திருக்க இயலாது. ஏனெனில் அவருக்கு முந்திய “சுதந்திர வீழ்ச்சிக் கொள்கை” (Free Fall Theory) அப்படித்தான் சொல்லி யிருந்தது. ஆனால் நியூட்டன் அதை ஏற்கவில்லை. “எல்லாப் புதிய கோட்பாடுகளும் ஏற்கனவே உள்ள கோட்பாடுகளுடன் பொருந்திவர வேண்டும்” (consistency condition) என்கிற விதியை அவர் மீறினார். புதிய தத்துவம் நமக்குக் கிடைத்தது.

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்பியல் கண்டுபிடிப்புகளான ஈன்ஸ்டினின் சார்பியல் கொள்கை, டீ ப்ராக்லியின் பொருட்களின் இருமைப் பண்புக் கொள்கை, ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கொள்கை என அனைத்தும் இப்படியான ஒரு ‘அராஜகச் சிந்தனை முறை’யின் (anarchist method) விளை பொருட்கள்தான் என்பார் Against the Method எனும் முக்கிய நூலாசிரியர்  பால் ஃபெய்ராபென்ட்.

ஆம், கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரச் சிந்தனைகளும், கருத்து மோதல்களும் மிக மிக அடிப்படையாக உள்ளன. நமக்கு மேலை நாடுகளின் அரசியலில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்குள்ள பலகலைக் கழகங்களின் செயல்பாடுகள் நிச்சயமாக நாம் பின்பற்றத் தக்கவையாக உள்ளன என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்க இயலாது. அவற்றிடமிருந்து நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பண்பு என்னவெனில் அங்கு பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முழுமையான சுதந்திரம்தான். பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மட்டுமல்ல, அவற்றுக்குள் நிலவும் சுதந்திரமும்தான்.

அதனால்தான் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அங்கிருந்துதான் வருகின்றன. நவீன சிந்தனையாளர்களாக அறியப்படும் மிஷேல் பூக்கோ, ரோலான் பார்த்ஸ், ஹேபர்மாஸ் என யாரை எடுத்துக் கொண்டீர்களானாலும் இந்தப் பல்களைக் கழகங்களிலிருந்து வெளிப் போந்தவர்கள்தான். நோபல் பரிசுகளை அள்ளிக் குவிப்பவர்களும் இங்கிருந்து முளைத்தவர்கள்தான்.

எத்தனையோ செல்வ வளம் இருந்தும் சவூதி அரேபியாவிலிருந்தோ இல்லை ஒற்றைச் சிந்தனையை வலியுறுத்தும் ஏனைய நாடுகளிலிருந்தோ இப்படியான சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், கண்டுபிடிப்புகள் உருவாகாதது ஏன்? ஏனெனில் இங்கெல்லாம் பல்கலைக் கழகங்களுக்கும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் சுதந்திரம் இல்லை என்பதுதான்.

பல்கலைக் கழகங்கள் என்பன மடங்களோ, மதரசாக்களோ, ‘செமினரி’களோ அல்ல. அவை ஒற்றைச் சிந்தனைகளைப் பயிற்றுவிக்கும் மையங்கள் அல்ல. அவை பல்வேறு கருத்துக்களும் மோதும் களம். அங்கே மாணவர்கள் சரியாக மட்டுமல்ல தவறாகச் சிந்திக்கவும் உரிமை உடையவர்கள்.

1807 -10 காலகாட்டத்தில் உருவாக்கப்பட்ட பெர்லின் பல்கலைக் கழகம்தான் உலகின் நவீன பல்கலைக் கழகங்கள் அனைத்திற்கும் முன்மாதிரி. இதற்கான முன்வரைவை உருவாக்கும் பணி கல்வி அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பை ஃபிச்டே, ஷ்லெர்மேயர் என்கிற இரண்டு தத்துவவியலாளர்களிடம்தான் அன்றைய பிரஷ்ய அரசு அளித்தது. அவர்கள் தனித் தனியே இரு வரைவுகளைத் தந்தனர். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இன்னொரு தத்துவ ஞானியான வில்லியம் வான் ஹம்போல்டிடம் அளிக்கப்பட்டது. அதிகத் தாராளவாதப் போக்குடன் அமைந்த ஷ்லெர்மேயரின் வரைவை அவர் தேர்வு செய்தார்.

அவை வழங்கிய பட்டங்கள் ‘இளங்கலை அறிவர்’ (Bachelor of Arts). முதுகலை அறிவர் (Master of Arts), தத்துவ முனைவர் (Doctor of Philosophy – Ph.D) என்கிற பெயர்களில்தான் அளிக்கப்பட்டன. இன்றளவும் இயற்பியல் அல்லது வேதியலில் முனைவர் பட்டம் பெறுபவர்களும் கூட ‘தத்துவ முனைவர்’ (Ph.D) என்றுதான் பட்டம் வழங்கப்படுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? பல்கலைக்கழகங்கள் என்பன தொழில் திறன்களை உருவாக்கும் பட்டறைகள் (skill factories) அல்ல. அவை முழுமையான மனிதனை உருவாக்குபவை. அதனால்தான் அறிவியல் படிக்கும் ஒருத்தி தொல்காப்பியத்தையும், ஷேக்ஸ்பியரையும், நவீன இலக்கியங்களையும் படிக்க வேண்டி இருக்கிறது. இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் கூட 1960கள் வரை விஞ்ஞானம் படிப்பவர்களும் கூடபொருளாதாரம் அல்லது அரசியல் என்பதுபோல ஏதேனும் ஒரு கலைப்பாடத்தையும் (humanities) கட்டாயமாகப் படிக்க வேண்டி இருந்தது.

ஆனால் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தையும். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தையும் மூடச் சொல்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவற்றை வெறுமனே திறன் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டு சென்னை ஐஐடி யில் செயல்பட்ட ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்’ தடை செய்யப்பட்டபோது இவர்கள் என்ன சொன்னார்கள்? “இப்படியாகச் சிந்திக்கிற எல்லோரும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட  கலைத்துறைப்  பாடங்களுக்கான ஐந்தாண்டு பட்டப் படிப்பை’ப்  படிப்பவர்கள்தான். அங்கே சமூகவியல், சமூக மானுடவியல் மற்றும் ‘பன்மை ஒழுங்கு அணுகல் முறை’ (inter-disciplinary approaches) சார்ந்த பாடங்கள் பயிற்றுவிக்கப் படுவதுதான் எல்லா ஒழுங்கீனங்களுக்கும் காரணம். ஏனெனில் இது போன்ற பாடங்கள்தான் இங்கே சாதிமுறையின் தோற்றம் பற்றியும் சமஸ்கிருத மொழிக் குடும்பத்திற்கும் திராவிட மொழிக் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், திராவிட மொழிகளின் தனித்துவம் பற்றியும் பாடத் திட்டத்தில் புகுத்தி மாணவர்கள் மத்தியில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்திவிட்டன” என்று கூறியதை மறந்துவிட இயலுமா? (பார்க்க: India Facts எனும் இணையத் தளம்).

ஆம், இவர்களின் நோக்கம் முழுமையான மனிதர்களை உருவாக்குவதல்ல. மாறாக இன்றைய Make in India வுக்குத் தேவையான சுய சிந்தனையற்ற வெறும் ‘ரோபோ’ க்களை உருவாக்குவதுதான்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் கூடாது என்றும் வரிகட்டுவோரின் பணம் இத்தகைய பல்கலைக்கழகங்களில் வீணடிக்கப்படுகிறது என்றும் இன்று இவற்றை ஒழித்துக்கட்ட முனைவோர் கூறுகின்றனர். இந்த உயராய்வுப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களை அரசியல் பேசாதே எனச் சொல்வதமெப்படிச் சரியாக இருக்கும்?.

எல்லா அரசு நலத் திட்டங்களுக்கும் வரி கட்டுவோரின் பணத்திலிருந்துதான்  செலவிடப்படுகிறது. அதற்காக அதிக வரி கட்டுவோர் என்கிற அடிப்படையில் கார்பொரேட்களிடமா கல்விக் கொள்கை உருவாக்கும் பொறுப்பை விட்டுவிட முடியும்? அப்படியும் செய்தவர்கள்தான் இன்று இந்தப் பல்கலைக் கழகங்களை மூடச் சொல்கிறவர்கள். 2000த்தில் வாஜ்பேயி அமைச்சரவை உயர்கல்விச் சீர்திருத்தங்களுக்காக முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இருவர் குழுவிடம் அந்தப் பொறுப்பை அளிக்கவில்லையா?

ஒருபக்கம் இப்படியான பிரச்சாரங்கள் இன்னொரு பக்கம் இந்த மாணவர்களின் மீது தேசத் துரோக வழக்குகள், இன்னொரு பக்கம் வெளியார்கள் மூலம் மாணவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள்… இவற்றை ‘பாசிசம்’ எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள யாரும் இந்தச் சூழலைக் கண்டு கவலை கொள்ளாமல் இருக்க இயலாது.

 

 

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதன் பொருள்

comparative religion

comparative religious studies என்பது ஒரு மிக முக்கியமான கல்வித்துறை. மதம் என்பது ‘நல்லதா, கெட்டதா’ என்பதற்கு அப்பால் அது மனித சமூக வாழ்வில் பிரிக்க இயலாத ஒரு அங்கம் என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு அடிப்படை உண்மை. மதம் தொடர்பான எந்த ஒரு அடிப்படைக் கருத்தாக்கம் மற்றும் நம்பிக்கை குறித்தும் மதங்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் உண்டு. இதை அடிப்படையில் அங்கீகரிப்பதும் ஒப்பீட்டு உணர்வதும் மதங்கள் பற்றிய புரிதலுக்கு அவசியம்.

இந்தப் புரிதலை அடைவதற்கு ஒரு அவசிய நிபந்தனை (necessary condition) உண்டு. அது: “ஒரு மதத்தை இன்னொரு மதத்தால் அளக்க முடியாது” என்பதே. ஒப்பிட்டுப் புரிந்து கொள்வது என்பது மதிப்பிடுவது அல்ல. “அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு” என முகமது நபிகள் சொன்னதன் பொருள் இதுவே. என் நம்பிக்கை மட்டுமே சரியானது. என் மதமே உயர்வானது என்பது நபிகளின் இந்தக் கூற்றுக்கு நூறு சதம் எதிரானது. பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களும் கூடி வாழ வேண்டிய ஒரு புவியியல் மற்றும் காலச் சூழலில் வாழ நேர்ந்த நாம் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

தவிரவும், இந்தப் புரிதலை நாம் வரித்துக் கொண்டோமானால் மதங்களுக்கிடையே உள்ள சில நுணுக்கமான ஏற்பு நிலை வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள இயலும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் (பிப் 10,2017) எனது இளம் முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு ஐயத்தை எழுப்பி இருந்தார். “ஏசு புத்தர் காந்தி” என்றெல்லாம் பொது வெளியில் ஏசுவுக்கும் புத்தருக்கும் கிடைத்த ஏற்பு ஏன் நபிகளுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த ஐயம். அதற்கு அப்போதைக்கு உடனடியாக நான் அளித்த மறுவினை இங்கே. இப்படியான அடிப்படையான வேறுபாடுகள் தவிர்க்க இயலாதவை. அவை அப்படித்தான் இருக்கும். இந்த வேறுபாடுகளை நிறையாகவோ, குறையாகவோ கருத வேண்டியதில்லை. இது அந்தந்த மதங்களின் இயற்பண்பு சார்ந்தது என்பதே நான் சொல்ல முயல்வது.

இனி அந்த விவாதம்:

Ahmed Riswan : ஏசுவையும் புத்தரையும் கடவுளாகவோ மதத்தலைவராகவோ ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட, அவர்களை ஒரு சமூக சீர்திருத்தவாதிகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தர், ஏசு, காந்தி என மூன்று பெயர்களும் சேர்த்தே சொல்லப்படுவதை நாம் பார்த்திருப்போம். இதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொதுச் சமூகத்தில் இப்படி ஓர் அங்கீகாரம் நபிகளாருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தக் குறையைப் போக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

Marx Anthonisamy 1. பொதுச் சமூகத்தில் அங்கீகாரம் இல்லை என்பதாக நாம் அதைப் பார்க்க வேண்டுமா? தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் காந்தியை விடுங்கள். அவர் நம் கண்முன் வாழ்ந்து மறைந்தவர். குற்றம் குறைகளுடன். புத்தரும் தன்னை எந்நாளுமே கடவுள் என்றோ அவதாரம் என்றோ அழைத்துக் கொண்டதில்லை. அவர் தன்னை அதிகபட்சமாகச் சொல்லிக் கொண்டது ‘விழிப்படைந்தவர்’ என்றுதான். மற்றபடி அவரும் சாதாரணமாக வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்தவர்தான். ஏசுவைப் பொருத்த மட்டில் அவர் தன்னை இறைமகன் என அழைத்துக் கொண்டாலும், மக்கள் மத்தியில் அற்புதங்கள் செய்தவரானாலும் ஒரு சாதாரண மனிதனைப்போல, இன்னும் சொல்லப்போனால் சாதாரண மனிதரைவிடவும் சாதரணமானவராக, அதிகாரத்தால் குற்றம் சாட்டப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, உலகின் முன், “என் கடவுளே, என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” எனக் கதறி மாண்டவர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இவர்கள் எல்லோரையும் விடச் சாதாரண மனிதராக வாழ்ந்து மறைந்தவராயினும் அவரைத் தம்மில் ஒருவராகக் கற்பித்துக் கொள்வதற்குத் தடையாக இருப்பது, அவரை தம்மில் ஒருவராக உணர முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தடையாக இருப்பது அவரைக் கற்பித்துக் கொள்ள ஒரு உருவமில்லாதது ஒரு காரணமோ? அதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. அது இஸ்லாத்தின் மிக அடிப்படையான ஒரு நம்பிக்கை. அது மதிப்பீடுகளுக்கும் விமர்சனகளுக்கும் அப்பாற்பட்டது. நான் நீங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமோ என்கிற ஒரு பிரச்சினைப்பாட்டை மட்டுமே முன்வைக்கிறேன். அப்படியே உருவமாய்ப் பார்த்துப் பழக்கப்பட்ட மனங்களை மனதில் கொண்டு சொல்கிறேன்.

எப்போதாவது கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் போகும்போது ஒன்றைக் கவனித்துள்ளேன். திரு உருவங்களை அவர்கள் தொட்டு முத்தமிடுவதை. இந்துக் கோவில்களில் கர்ப்பக் கிரகங்களுக்குச் சென்று அய்தைச் செய்வது சாதாரண மக்களுக்குச் சாத்தியமில்லாதபோதும் அதை அவர்கள் திரு உருவப் படங்களாக வீடுகளிலும் கற்பிதங்களாகவும் கதைகளாகவும் நெஞ்சிலும் சுமக்க ஒரு சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. இதெல்லாம் ஒரு காரணமாக இருக்குமோ?

Marx Anthonisamy 2 : இறை மற்றும் இறையடியாருக்கும் மானிடர்க்கும் உள்ள உறவு பற்றிப் பேச வரும்போது “ஆள் நிலைப்பட்ட உறவு” என்றொரு கருத்தாக்கத்தை முன்வைப்பார் பேரா. சிவத்தம்பி. இறையடியரை மட்டுமல்ல இறையையே தம்மைப் போன்ற ஒரு மனிதராகக் கருதி உறவு கொள்ளல் என்பது இதன் பொருள். இதை விளக்க ஒரு எடுத்துக்காட்டை இப்படிச் சொல்லலாம். ‘பட்டினத்தார்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. பட்டினத்தாருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இராது. அவர்கள் தம் வேதனையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டு. அந்தத் திரைப்படப் பாடலையும் காட்சியையும் யூ டியுபில் காணலாம். (“நிலவே நீ இந்தச் சேதி சொல்லாயோ..”) . ஒரு நாள் அந்தத் தம்பதி உப்பரிகையில் அமர்ந்து நிலவை நோக்கி இறைவனிடமும் உமாதேவியிடமும் தூது சென்று தம் சோகத்தைச் சொல்ல முடியுமா எனக் கேட்பர். அருமையான பாடல். அதில் ஒருவரி. இறைவன் பகைவர் மீதும் பாதகர் மீதும் சினந்திருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்லாமல் பெற்ற குழந்தைகளுடனும் உமா தேவிடனும் மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்வாயா என்பார்கள். ஆக இறைவனையே நம்மைப் போன்ற உணர்வுகள், குற்றம் குறைகள், பாசங்கள், உறவுகள் உள்ளவனாக மானுடத் தன்மையுடன் கற்பிக்கும் ஒரு மானுட பலவீனத்தைச் சில மதங்கள் அனுமதித்து விடுகின்றன. இத்தகைய ஆள்நிலைப்பட்ட உறவு சாதாரண மக்களுக்கு நபிகளிடம் ஏற்பட இயலாமற் போனது எனக் கொள்ளலாமா?

என்னுடைய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ நூலில் நபிகள் நாயகத்தின் இந்த ஆள் நிலைப்பட்ட பண்புகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பேன். இறைவனே சொல்லவில்லையா, நபிகளே ! உம்மை நான் குற்றம் குறைகள் உள்ள மனிதராகப் படைக்க வில்லையா? என. அவர் வெறும் எச்சரிக்கை செய்ய வந்தவர்தான் என்றும் கூறவில்லையா. அவர் உம்மி நபிகள்தானே. பெற்ற மகனின் மண்ணறையை விட்டு அகல இயலாமல் குமுறி அழுது கலங்கி அமர்ந்திருந்தவர்தானே. மாற்றுமதத்தாரின் ஜனாசா ஊர்வலமானாலும் ஒதுங்கி நின்று மரியாதை செய்தவரல்லவா. இந்த ஆள்நிலைப்பட்ட உறவை நாம் முன்னிலைப்படுத்தத் தவறியதும் ஒரு காரணமோ?

 

 

சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும் : பவுத்தம் சொல்வதென்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 2,

தீராநதி, பிப்ரவரி 2017

சென்ற வாரம் கடலூரில் மனித உரிமை அமைப்புகள் சார்பாக ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மத்திய சிறையில் கடந்த எட்டு மாதங்களில் நான்கு கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னும் மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்த விசாரணை வேண்டும். மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சிறைக்குச் சென்று கைதிகளிடம் பேசி உண்மை நிலையைக் கண்டறிய அனுமதி வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைளாக அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்தியச் சிறைகளில் தற்கொலைகள், கொலைகள், உரிய சிகிச்சை இல்லாமல் நிகழும் மரணங்கள் ஏராளம். 2001 – 2010 காலகட்டத்தில் மட்டும் போலீஸ் மற்றும் சிறைக் காவல்களில் 14,231 பேர் செத்துள்ளனர் என்கின்றன தேசிய மனித உரிமை ஆணையம்  (NHRC) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அதாவது தினம் நான்கு சாவுகள். தேசிய குற்ற ஆவண நிறுவனம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள அறிக்கை 2011 ல் மட்டும் 1,332 கைதிகள் இந்தியச் சிறைகளில் செத்துள்ளனர் எனவும் இதில் 93.4 சத மரணங்கள் “இயற்கையானவை” எனவும் கூறுகின்றது. 68 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எட்டு பேர் பிற கைதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மொத்ததில் 12 மரணங்கள் இயற்கை மரணங்கள் இல்லாதவையாம். இயற்கை மரணங்கள் என அரசு சொல்பவையே ஆய்வுக்குரியவை. தமிழகச் சிறைகளில் உரிய வைத்திய வசதி இல்லாமல் பல ஆண்டுகள் இருந்து இறந்த கைதிகளை அறிவேன். தவிரவும் இந்தப் புள்ளி விவரங்கள் பலவும் பிரச்சினைக்குரியவை. ஒரே ஆண்டு குறித்த மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரமும் தேசிய குற்ற ஆவண நிறுவனப் புள்ளிவிவரமும் வேறுபடுவது இதை உறுதியாக்கும். தவிரவும் இந்த மரணங்களில் பலவும் சிறையில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளின் விளைவு என்கிறது ஆசிய மனித உரிமை மையம் (Asian Centre for Human Rights) அதே 2011 ல் வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்த மரணங்களுக்கு இன்னும் பலவிதக் காரணங்கள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் நிர்பயா கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்சிங் (33) சில ஆண்டுகள் முன் தற்கொலை செய்துகொண்ட போது அவரது பெற்றோர்கள் இது கொலை எனக் குற்றம் சாட்டினர். ஓரினப் புணர்ச்சி தொல்லையும் அவருக்கு இருந்ததாகக் கூறினர். பெங்களூரு பரப்பன அக்ரகாரச் சிறையில் பெண் கைதிகள் அங்குள்ள பணக்கார ஆண்கைதிகளுக்கு கட்டாயமாக விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சில ஆண்டுகள் முன் விசாரணைக்கு வந்தது. மும்பை சிறைச்சாலை ஒன்றில் பெண் கைதிகளைக் கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள CCTV க்களை நீக்க வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறைக் காவலர்களால் பாலியல் வக்கிரத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்பது குற்றச்சாட்டு. சட்டிஸ்கரில் மாஓயிஸ்ட் ஆதரவாளர் எனக் கைது செய்யப்பட்ட ஹிட்மே கவாசி எனும் பழங்குடிப் பெண் சிறையில் செய்யப்பட்ட சித்திரவதைக் கொடுமைகளை இன்று சக கைதியாக இருந்த சோனி சோரி வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அவர் பிரசவ நேரத்திலும் கூட விலங்கிடப்பட்டிருந்தாராம்.

இப்படி நிறையச் சொல்லலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழகச் சிறைகள் இந்தப் பிரச்சினையில் ரொம்ப  மோசம். 2000 -2015 க்குள் மட்டும் 1155 பேர் இறந்துள்ளனர். அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழகச் சிறைகளில் செத்துப் போகிறார்.

நிறையச் சொல்லலால். சுருக்கம் கருதி இரண்டு விடயங்களோடு நிறுத்திக் கொள்கிறேன். நமது சிறையின் கொள்ளளவைவிட இரு மடங்கு மக்கள் உள்ளே அடைக்கப்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குற்றம் உறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகள். பல நேரங்களில் இவர்களின் எண்ணிக்கை தண்டனைக் கைதிகளை விடவும் அதிகம். சிறைக் கைதிகளின் ‘இயற்கை மரணங்களில்’ இப்படியாக அதிக அளவில் கைதிகள் அடைக்கப்படுவதால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் கூட ஒரு காரணம்.

அதேபோல சிறைக்குள் கடைபிடிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளும் கொடுமையானவை. சிறை மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு சிறை விதிகளின்படி அளிக்கப்படும் ‘பரோல்’ முதலிய உரிமைகளுக் கூட முழுமையாக அளிக்கப்படுவதில்லை. சுருக்கம் கருதி விவரங்களைத் தவிர்க்கிறேன்.

#   #    #

ஐரோப்பாவை மையமாக வைத்து 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தண்டனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நவீன சிறைச்சாலை உருவாக்கங்கள் குறித்து மிஷேல் ஃபூக்கோ முன்வைத்த ஆய்வுகள் நவீன சிந்தனை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. மத்திய காலத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் ‘நவீன சிறைச்சாலைகள்’ கிடையாது. அப்போதெல்லாம் பெருங் கூட்டமாகத் திரட்டப்பட்ட மக்கள் முன் கடுஞ்சித்திரவதைகளினூடாக குற்றவாளிகள் கொல்லப்படுவது ஒரு சடங்கு நிகழ்வாக அரங்கேற்றப்பட்டது. நிற்க மட்டுமே முடிந்த கூண்டுகளில் அடைத்து வைத்துக் கொல்லப்படுதல், உயிருடன் தோலை உரித்துத் தொங்கவிடப்படுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல் இப்படி எல்லாம் தண்டனைகள் அரங்க நிகழ்ச்சிகள் போலக் காட்சிப்படுத்தப்பட்ட நிலை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றம் அடைந்தது. நவீன சிறைச்சாலைகள் உருவாயின.

இதனூடாக தண்டனை வடிவில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய தண்டனைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுதல் என்பது இன்னும் நுணுக்கமாகத் தொடர்ந்தது. தண்டிக்கப்பட்டவர்களின் உடல் மீதான வன்முறைகள் காட்சிப்படுத்தப்படுவது நின்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தின் நடுவே அதன் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட சிறைச்சாலைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுவது நிற்பதில்லை. சிறைப்பட்டவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதன் மூலம் அவன் புழங்கு வெளியும், அவன் புழங்கு காலமும் மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. சமகால நவீன நிறுவனங்களான தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் மூலம் இன்னும் இறுக்கமாக சமூகம் கண்காணிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுகிறது. சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ, குற்றவாளிகளைத் திருத்துவதோ, குற்றச் சமூகம் ஒன்று உருவாவதைத் தடுப்பதோ அல்ல. மாறாக குற்றச் சமூகம் ஒன்று இருப்பது அரசுக்குத் தேவையாக இருக்கிறது. குற்றச் சமூகம் ஒன்று இருப்பதே அரசின் இந்தக் கண்காணிப்புகளையும், இராணுவம் மற்றும் போலீஸ் மூலம் சமூகம் கட்டுக்குள் வைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது என்பவற்றையெல்லாம் ஃபூக்கோ நிறுவியது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘குற்றவியல்’ மற்றும் ‘கண்காணிக்கப்படும் சமூகம்’ தொடர்பான புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘ஆதார் அட்டை’ நம் உடல் மற்றும் வாழ்வின் பிரிக்க இயலாத ஒரு அங்கம் ஆக்கப்படும் இன்றைய சூழலில் இந்தக் கண்காணிப்பு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமானால் சிறைச்சாலைகள் தொடர்பாக இப்போது எழுகின்ற இரு கேள்விகள் பொருளற்றதாகி விடுவதை உணரலாம். அவை: 1. தண்டனை வழங்குதல் மூலம் குற்றங்கள் குறையும் என்பது ஏன் நிகழவில்லை? 2. தண்டனை வழங்குதல் மூலம் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பதும் ஏன் உண்மையாகவில்லை? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தண்டனை வழங்குதல் மற்றும் சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ இல்லை குற்றவாளிகளைத் திருத்துவதோ அல்ல என்பதுதான். ஒரு வகையில் அரசுகள் மற்றும் அதிகாரத்தின் இருப்பிற்குக் குற்றங்களும் தேவைப்படுகின்றன. குற்றவாளிகளும் தேவைப்படுகின்றனர். எனவேதான் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் குறித்த மனிதாபிமானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்று அரசுகளால் மூர்க்கமாக மறுக்கப்படுகின்றன. அப்படி அரசுகள் மறுப்பதற்கு மக்களின் முழு ஆதரவு இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிர்பயாவின் கொலையில் கைதான ராம்சிங்கிற்குச் சிறையில் கொடுமைகள் நிகழ்ந்தன என நாம் சொல்லத் துணிவோமானால் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும். எத்தனை கொடூரமான கொலையைச் செய்தவன் அவன்? அவனுக்கா மனித உரிமை வேண்டும் என்கிறாய்?

#   #   #

எனினும் மனிதன் என்கிற வகையில் அவனுக்கும் உரிமைகள் வேண்டும் என்கின்றவர்கள் சிறைச்சாலைகளில் உடனடியாகச் செய்ய வேண்டியன எனச் சில சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இவர்களில் சில இரக்கமுள்ள அதிகாரிகளும் உண்டு.

சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் 1885 -1895 காலகட்டத்தில் இங்கிலாந்தின் நிரந்தர உள்துறைச் செயலராக இருந்தவர். தண்டனை அமைப்பு குறித்த அரசு குழு ஒன்றின் முன் சாட்சியமளித்தபோது அவர் சொன்னது:

“ஒரு கைதி திருந்துவதற்குச் சிறைச்சாலைகளில் உள்ள கீழ்க்கண்ட நிலைகள் பொருத்தமாக இல்லை என நான் கருதுகிறேன். அவன் சிறையில் கழிக்கும் காலம் முழுவதும் அவனது சுயமரியாதை நசுக்கி அழிக்கப்படுகிறது; அவனிடம் எஞ்சியுள்ள அற உள்ளுணர்வுகள் வாடிச் சோர்கின்றன; இரக்கத்தை வெளிப்படுத்தவோ, அனுபவிக்கவோ உள்ள எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்படுகின்றன; குற்றவாளிகள் தவிர வேறு யாருடனும் அவன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அறவே மறுக்கப்படுகின்றன…….. ஒரு மனிதனைத் திருத்துவது அல்லது சமூகத்திற்கு அவனை திருப்பிக் கையளிப்பது என்பது நான் இப்போது சொன்ன அனைத்திற்கும் எதிர்த் திசையில் அமைகின்றது என்றே நான் நம்புகிறேன்; ஆனால் உண்மையில், இவை வெறும் கருத்துக்கள்தான். ஒரு சிறைச்சாலையில் இதெல்லாம் சாத்தியமில்லை. திருந்துவதற்குச் சாத்தியமில்லாதவை என நான் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் சிறை வாழ்விலிருந்து பிரிக்க இயலாத எதார்த்தங்களாக உள்ளன…”

லூஷிங்டன் என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக் கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியம் இல்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி. அவரால் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால் நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.

அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பெறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணையை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் “வயிற்றிலே தீ”. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க இயலும்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத்ன் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:

“மிக்க தவமுடையாய் ! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”

“அரசே ! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத் தனமையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு  மிருதசஞ்சீவினியாக உள்ளது.”

“மிக்க தவமுடையாய் ! நான் செய்ய வேண்டியது என்ன?”

‘சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”

அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது.

(தொடரும்)

 

 

 

.

சம்பத் ஆணைய அறிக்கையை முன்வைத்து விசாரணை ஆணையங்கள் பற்றி ஒரு குறிப்பு  

(2011ல் பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டையல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான கமிஷன் 2013ல் அறிக்கை அளித்தது. காவல்துறை அத்துமீறல்களை முழுமையாக நியாயப்படுத்திய அந்த அறிக்கை மக்கள் மீதே குற்றத்தைத் திருப்பியது. அபோது எழுதப்பட்ட கட்டுரை)

For Daily:27/09/11:Ramanathapuram: Justice Sampath,(second from left) who has been appointed by the State government to inquire into the police firing, inspecting the firing place at Five Point Junction at Paramakudi on Tuesday. Photo:L_Balachandar [with report]
For Daily:27/09/11:Ramanathapuram: Justice Sampath,(second from left) who has been appointed by the State government to inquire into the police firing, inspecting the firing place at Five
Point Junction at Paramakudi on Tuesday. Photo:L_Balachandar [with report]

பரமக்குடியில், சில ஆண்டுகளுக்கு முன், பட்டியல் சாதிகளுள் ஒன்றான தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை (செப் 11, 2011) விசாரிப்பதற்காக ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட சம்பத் ஆணையம் நாம் எதிர்பார்த்ததிலிருந்து இம்மியும் மாறாத வகையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. செப் 13, 2011 அன்று நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் 20 மாதங்களுக்குப் பின் சென்ற மே 7, 2013 அன்று தன் அறிக்கையை சமர்ப்பித்தது. சுமார் நான்கு மாதங்கள் கழித்து, சரியாக முத்துராமலிங்கரின் நினைவு நாளுக்கு (அக் 30) முதல் நாள் அதை அரசு சட்டமன்றத்தில் வைத்தது. அ.தி.மு.கவின் ஆதரவுத் தொகுதிகளில் ஒன்றான முக்குலத்தோருக்கு அவர்களின் பூஜைக்குரிய குருவான முத்துராமலிங்கரது நினைவு நாள் பரிசாக சம்பத் ஆணைய அறிக்கை அளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள யாருக்கும் பெரிய புத்திசாலித்தனம் வேண்டியிருக்கவில்லை.

சம்பத் ஆணையம் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பார்க்குமுன் பரமக்குடி கொலைகள் தொடர்பாக அரசு தரப்பில் அதற்கு முன் என்ன சொல்லப்பட்டன எனப் பார்க்கலாம். துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள் (செப் 12) முதலமைசர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அது குறித்து இரண்டு விஷயங்களைச் சொன்னார். 1) மண்டலமாணிக்கம் கிராமத்தில் முத்துராமலிங்கர் குறித்து அவதூறாகச் சுவரில் எழுதியதை ஒட்டி பழனிக்குமார் என்னும் மாணவன் செப் 9ம் தேதியன்று கொல்லப்படுகிறான். அதை ஒட்டிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவே துப்பாக்கிசூடு நடந்தது. 2) தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஒரு பெரும்படையுடன் பழனிகுமாரின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லும்போது கலவரம் ஏதும் வராமல் தடுப்பதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது சுமார் 500 ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கலையச் சொல்லி அறிவுரை பகன்ற போதும் அவர்கள் கலையவில்லை. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசிக் கலைக்க முயன்றபோது அவர்கள் காவலர்களைத் தாக்கினார்கள். கற்களை வீசினார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிந்தார்கள். ‘வஜ்ரா’ போலீஸ் வாகனத்தை எரித்தார்கள். தற்காப்பிற்காக காவலர்கள் சுட வேண்டியதாயிற்று. துரதிர்ஷ்டவசமாக ஆறு பேர் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. டி.ஜி.பி சந்தீப் மிட்டால் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இவை அன்று பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அன்று ஜெயலலிதா சொன்னவை.

டிசம்பர் 22, 2011 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வு ஒன்றில் நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும்  எம்.வேணுகோபால் இருவரும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.அய் விசாரணைக்கு ஆணையிட்டனர். அப்போது அரசு தரப்பில் எதிர் மனுவைத் தாக்கல் செய்த டி.ஐ.ஜி ராஜேஷ் தாஸ் அதில் இது குறித்து ஜெயா அன்று சட்டமன்றத்தில் என்ன கூறினாரோ அதையே திருப்பிச் சொன்னர். கும்பல் வன்முறையை எதிர்கொள்ளவே, உரிய எச்சரிக்கைகளுக்குப் பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.

இப்போதுசம்பத் அறிக்கைக்கு வருவோம். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சில: 1) “ஜான் பாண்டியன் பச்சேரி கிராமத்திற்குத் துக்கம் விசாரிக்கப் போனால் கலவரம் வரலாம் என உளவுத்துறைக்குத் தகவல் வந்ததால் அவரைத் தடுத்து நிறுத்த நேர்ந்ததே கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது, உரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்னரே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது” முதலான ஏற்கனவே ஜெயாவாலும் தாசாலும் சொல்லப்பட்ட கதைகளை மீண்டும் ஒப்பித்திருந்தார் சம்பத். 2) “காவல்துறை தலித்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகச் சொல்லப்படுவது பொய். பழனிக்குமார் கொலையை ஒட்டி ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த தலித்கள்தான் வன்முறைக்குக் காரணம். காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தற்காப்புக்காகத்தான் அவர்கள் சுட நேர்ந்தது காவல்துறை மட்டும் அன்று துப்பாக்கிச்சூடு நடத்தியிராவிட்டால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை (savage mass) அடக்குவதற்கு அன்று துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அவர்களின் வன்முறை அந்தப் பகுதியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் பூராவிலுமே சாதிக் கலவரத் தீயைப் பற்றவைத்திருக்கும்.” 3) “கலவரங்களைக் கட்டுப்படுத்த மற்ற எல்லா முறைகளையும் கையாண்டபின், இறுதியில் நிர்வாக மாஜிஸ்ட்ரேட் ஆன தாசில்தார் உத்தரவிட்டபின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது”. 4) “சுருங்கச் சொல்வதானால் கலவரக்காரர்களின் நடத்தை எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்து மிருகத்தனத்தின் எல்லையையயே தொட்டது. அது எக்காரணங்கொண்டும் மன்னிக்கக்கூடியதாக இல்லை”

ஆக, 2011 செப்டம்பர் 12 அன்று ஜெயா சட்ட மன்றத்தில் என்ன சொன்னாரோ, டிசம்பர் 21 அன்று டி.ஐ.ஜி தாஸ் நீதிமன்றத்தில் என்ன சொன்னாரோ அதையேதான் சம்பத் தன் அறிக்கையில் கொட்டியுள்ளார். நீதிபதியின் பங்கு இங்கே குற்றச்சாட்டின் உண்மை பொய்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டு நீதி வழங்குவதாக இல்லை; மாறாக இங்கு நீதிபதியே அரசு வழக்குரைஞராக மாறிவிடுகிறார்.

சொல்லப்போனால் அரசின் வழக்குரைஞர் என்கிற நிலையையும் தாண்டி விடுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் அவரும் அந்த அப்பாவி மக்களின் மேல் தாக்குதலையும் மேற்கொள்கிறார். முதலமைச்சரும் டி.ஐ.ஜியும் கூடச் சொல்லத் தயங்கிய சொற்களை என்ன அனாயசமாக உதிர்க்கிறார் பாருங்கள். “கட்டுமிராண்டிக் கும்பல்”, “எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்தவர்கள்”, “மிருகத்தனத்தின் எல்லையயே தொட்டவர்கள்” “எக்காரணங்கொண்டும் மன்னிக்கக் கூடாதவர்கள்” – இவை அனைத்தும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் நம் மக்கள் மீது அள்ளித் தெளித்துள்ள சேறு.  நல்ல வேளை நீதிபதி அவர்களின் கையில் துப்பாக்கி இல்லை.

அன்று ஐந்து முக்கில் கூடியிருந்த மக்கள் சுமார் 200 பேர். நின்றிருந்த போலீஸ்காரர்கள் 2000பேர். கூடியிருந்தவர்களால் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. ஜான் பாண்டியனோ அன்று தடையை மீறி பச்சேரிக்குச் செல்ல முயலவில்லை. அவரை விடுதலை செய்திருந்தால் அன்று அத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது ஆனால் நம் நீதியரசர் என்ன சொல்கிறார் பாருங்கள், அன்று அவர்களை அப்படிச் சுட்டுத் தீர்த்திருக்காவிட்டால் சாதித் தீ தென் மாவட்டம் பூராவிலும் பரவியிருக்குமாம். கொல்லப்பட்டவர்கள் யாரும் ஜான் பாண்டியன் அல்லது டாக்டர் கிருஷ்ணசாமி அல்லது பூ.சந்திரபோசு ஆகியோரது அமைப்புகளில் தீவிர உறுப்பினர்கள் இல்லை. திருமண அழைபிதழ் கொடுக்க வந்தவரும். கடைக்கு வந்தவரும் அன்று அங்கு இருக்க நேர்ந்த அப்பாவி மக்களும் அல்லவா கொல்லப்பட்டனர்.

நீதிபதி இன்னும் ஒருபடி மேலே போய் ஜான் பாண்டியனுக்கும் டாக்டர் கிருஷ்ண சாமிக்கும் இடையே இருந்த பகையே எல்லாவற்றிற்கும் காரணம் என்கிறார். என்னத்தைச் சொல்லுவது. மனித உரிமைப் போராளியும் சிறந்த சிந்தனையாளருமான டாக்டர் பாலகோபால் ஒருமுறை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நீதியரசர்கள் இப்படிப் பல சந்தர்ப்பங்களில் கொடிய தீர்ப்புகளை வழங்குவது என்பதன் அடிப்படையாக அந்தக் குற்றங்களின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பு உள்ளது என்பதைக் காட்டிலும் அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் கொண்ட வெறுப்பே அடிப்படையாக உள்ளது.

என்ன இருந்தாலும் இது ஒரு “நடுநிலையான விசாரணை ஆணையம்” என்கிற பெயரைக் காப்பாற்றியாக வேண்டுமல்லவா. போனால் போகிறது என்று காவல்துறையினர் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கலவரக் காட்சிகளின் வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்தபோது (தங்களை) தாக்கியவர்களில் சிலரைக் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்குடன் திருப்பித் தாக்கியதைக் கண்டாராம். இது அவர்களுக்குப் புகழை அளிக்கக் கூடிய செயல் இல்லையாம்.

வேதனை என்ன தெரியுமா? இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வெளியிடும்போது இம்முறை அரசு ஒன்றைச் சொல்லியிருந்தது. மேலே சொன்ன “காவல்துறையின் புகழைக் குறைக்கும்” அந்த இரு வரிகளை அரசு நிராகரிக்கிறது என்பதுதான் அது. கலவரத்தை அடக்குவதில் காவல்துறை மிகச் சிறந்த பாராட்டத்தக்க முறையில் நடந்து கொண்டபோதும், கலவரம் அடங்கியபின் சில காவலர்கள் நடந்து கொண்டது சரியில்லை என சம்பத் ஆணையம் தயங்கித் தயங்கி, நசுக்கி நசுக்கிச் சொல்லியிருந்தபோதும் அதைக்கூட ஜெயலலிதா அரசல் சகித்துக் கொள்ள இயலவில்லை. சாலை மறியல் செய்த தேவேந்திரர்களைக் காட்டுமிராண்டிகள், மிருகத்தனத்தின் எல்லையைத் தொட்டவர்கள் என்றெல்லாம் அறிக்கை இழிவு செய்ததைக் கண்டுகொள்ளாத அரசுக்கு, ஒரு சில போலீஸ்காரர்களின் நடத்தை புகழுக்குரியதாக இல்லை என்கிற சொற்களை மட்டும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த மூன்றாம் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில் தன்னுடைய ஆட்சியில் காவல்துறைக்கு எல்லாச் சுதந்திரங்களும் உண்டு எனவும், “இராணுவ வீரர்கள் எல்லையைக் காக்கிறார்கள், காவல்துறையினரோ உள் நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காக்கிறார்கள்” எனவும் புகழ்ந்ததோடு காவல்துறையினர் சலுகை விலையில் பொருள்களைப் பெற “போலீஸ் கான்டீன்” திறக்கப்படும் என அறிவிப்பும் செய்தவரல்லவா ஜெயலலிதா..

ஆணையத்தின் பரிந்துரைகளில் மதுவிலக்கை அமுல் செய்தல் மற்றும் இலவசங்கள் வழங்குவதை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை, அவை ஆணையத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என அரசு நிராகரித்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அளித்திருந்த அறிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீர்ப்புக்கனி தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் உயிருடனேயே பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டதாக நிலவும் ஐயத்தையும், சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைச்சாமியின் மரணம் தொடர்பான ஐயத்தையும் பதிவு செய்திருந்தோம். சம்பத் ஆணையமும் இந்த இரு மரணங்கள் குறித்து “இன்னும் தீவிரப் புலனாய்வு” மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.  கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது, இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண் காவலர்களைக் களத்தில் இறக்கக்கூடாது முதலியன வேறு சில பரிந்துரைகள். சாதித் தலைவர்களின் சிலைகளை அமைக்கக்கூடாது என ஆணையத்தின் முன் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்பத் ஆணையம் மட்டுமல்ல ஆகஸ்ட் 1995 ல் நடைபெற்ற தென்மாவட்டக் கலவரங்கள் எனப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கலவரங்கள் குறித்த கோமதிநாயகம் ஆணையமும் இப்படித்தான் காவல்துறை அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் புனிதப்படுத்திச் சான்றிதழ் வழங்கியது. மார்ச் 1996 ல் அன்றைய அ.தி.மு.க அரசிடம்  கோமதிநாயகம் தன் அறிக்கையை அளித்தார். எனினும் 1999 நவம்பர் 23 அன்றுதான் அடுத்து வந்த தி.மு.க அரசு அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைத்தது. முற்றிலும் தேவேந்திரர்களே வசிக்கும் கொடியங்குளம் கிராமத்தில் ஆக 31, 1995 அன்று சுமார் 600 காவல்துறையினர் நடத்திய தாக்குதலையும் துப்பாக்கிச்சூட்டையும் கோமதி நாயகம் ஆணையம் “முற்றிலும் நியாயமானது” எனவும், எந்த “அத்துமீறல்களும்” அதில் நிகழவில்லை எனவும் சான்று வழங்கியது.

ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படும் இத்தகைய விசரணை ஆணையங்கள் இப்படி நியமித்தவர்களுக்கு விசுவாசமாக அறிக்கை அளிப்பது என்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. பதவியிலுள்ள நீதிபதிகளானாலும் கூட பல நேரங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்கிறபோது சும்மா சாய்வு நாற்காலிகளில் படுத்துக் கொண்டு ‘இந்து’ பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கை நிறையச் சம்பளம், ஆள், தேள் அதிகாரங்கள் என வரும்போது நன்றி விசுவாசம் அவர்களின் நீதியுணர்வை மழுங்கடித்துவிடுகிறது, மொத்தத்தில் தம் மீதான குற்றச் சாட்டுகளைக் கறை நீக்கம் செய்துகொள்ளும் ஒரு கருவியாக இத்தகைய விசாரணை ஆணையங்கள் ஆட்சியாளர்களுக்குப் பயன்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையம் சுமார் 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 18 கோடி ரூபாய் செலவிற்குப் பின் அன்றைய பிரதமர் நரசிம்மாராவுக்குக் “க்ளீன் சிட்” அளித்தது. இப்படி நிறையச் சொல்லலாம். தப்பித் தவறி ஶ்ரீகிருஷ்ணா போன்ற சில நேர்மையான நீதியரசர்கள் நல்ல நேர்மையான அறிக்கை ஒன்றை அளித்தால் அவற்றின் பரிந்துரைகள் குப்பைக் கூடைக்குப் போவதுதான் வழக்கமாக உள்ளது. மும்பைக் கலவரத்தில் (1992) குற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகளை நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தன் அறிக்கையில் கச்சிதமாக அடையாளம் காட்டியிருந்தபோதும் அவர்கள் எல்லோரும் பதவி உயர்வுகள் பெற்று முழுப் பணிக் காலத்தையும் சுகமாக முடித்துப் பணி ஓய்வு பெற்றனர். ஜெயலலிதா மட்டுமல்ல பெரும்பாலும் எந்த அரசியல்வாதியும் காவல்துறையினரை விட்டுக் கொடுப்பதில்லை.அ.தி.மு.க அரசுகள், குறிப்பாக ஜெயா இதில் படுமோசம் என்பதுதான்.

இந்த அடிப்படையில்தான் நாம் விசாரணை ஆணையங்கள் குறித்த நமது பார்வைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எக்காரணம் கொண்டும் விசாரணை ஆணையங்களே தேவையில்லை எனச் சொல்ல முடியாது. இதுபோன்ற காவல்துறை அத்துமீறல்கள், சாதி, மதக் கலவரங்கள், இயற்கைப் பேரழிவுகள் முதலியவற்றில் விசாரணை ஆணையங்கள் அமைப்பதைத் தவிர்த்துவிட இயலாது. பல்வேறு வித்தியாசங்கள் மிக்க சமூகங்களின் தொகுப்பாக ஒரு நாடு அமையும்போது அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பன்முகப் பரிமாணம் கொண்டவையாக அமைகின்றன. அவற்றை வெறும் சட்ட ஒழுங்கு அளவுகோலை வைத்து மட்டுமே அளந்துவிட இயலாது. காவல்துறை விசாரணைகள், அது உள்ளூர் மட்டத்திலோ இல்லை சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ மட்டங்களிலோ மேற்கொள்ளப்பட்டாலும் கூட அவையும் இவற்றை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கும்.

எனவேதான் வெறும் காவல்துறை விசாரணைக்கு அப்பாற்பட்ட, பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் கணக்கில் கொள்ளத் தக்க விசாரணை ஆணையங்கள் தவிர்க்க இயலாதவை என்கிறோம். தவிரவும் இது போன்ற கலவரங்கள், அத்துமீறல்கள், பேரழிவுகள் முதலானவை குறித்த  முழுமையான உண்மைகளை அறிந்துகொள்ளும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்கிற வகையிலும் இத்தகைய ஆணையங்கள் அவசியமானவை. அதே நேரத்தில் அவை இப்போதுள்ளதைப்போல அல்லாமல் இன்னும் அதிகாரமிக்கதாய், வெளிப்படைத்தன்மை உடையவையாய், அரசியல் தலையீடில்லாமல் சுதந்திரமாய் இயங்கக்கூடியதாய், மக்களுக்குப் பொறுப்பானதாய் அமைதல் வேண்டும்.

இந்த அடிப்படையில் “1955 ம் ஆண்டு விசாரணை ஆணையங்கள் சட்டம்” மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதில் என்னென்ன அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் எனப் பார்க்கலாம்.

காவல்துறை விசாரணை என்பது பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்காமல் அதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையகாவே அணுகுகிறது என்றோம். விசாரணை செய்யும் இடத்தில் நீதிபதிகளை அமர வைத்தாலும் இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அவர்களும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்கும் பயிற்சி பெற்றிருப்பதில்லை, எல்லாவற்ரையும் சட்ட மற்றும் நீதிவழங்கு நெறிமுறைகளுக்குள்ளேயே சுருக்கிப் பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டவர்கள் அவர்கள். பி.என்.பகவதி, கிருஷ்ண அய்யர் அல்லது ஜே.எஸ்.வர்மா போன்ற விசாலமான சிந்தனையையும், அகன்ற பார்வையையும் கொண்ட நீதிபதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எனவே இதுபோன்ற ஆணையங்கள் நீதிபதிகளைக் கொண்டே அமைக்கப்படவேண்டும் என்பது முதலில் மாற்றப்பட வேண்டும். நீதிபதிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பிற துறை வல்லுனர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் முதலியவர்கள் பங்குபெறுவதாக அவை அமைய வேண்டும். “தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சி நடவடிக்கைகள்” (Developmental activities in Extremist Affected Areas) என்பது குறித்து ஆராய 2006ம் ஆண்டு இந்திய அரசின் திட்ட ஆணையத்தால் (Planning Commission) நியமிக்கப்பட்ட ஆணையத்தை இதற்கொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா, டாக்டர் என்.ஜே.குரியன், கே.பி.சக்சேனா, டாக்டர் கே. பாலகோபால், எஸ்.ஆர்.சங்கரன், டாக்டர் சுக் தியோ தோரட், டாக்டர் பேலா பாடியா முதலான துறை சார் நிபுணர்கள், முன்னாள் உயர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், மே.வங்கத்தில் நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்திய அனுபவமிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனப் 16 பேர்கள் இடம்பெற்ற அந்தக் குழுவின் அறிக்கை இணையத்தளங்களில் உள்ளது. (ஒவ்வொரு விசாரணை ஆணையத்திலும் இத்தனை எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை)

அடுத்து, இத்தகைய விசாரணை ஆணையத்தை அமைப்பது, உறுபினர்களைத் தேர்வு செய்வது, ஆணையத்தின் எல்லைகளையும் நோக்கங்களையும் வரையறுப்பது முதலான அதிகாரங்கள் இப்போதுள்ளதுபோல முழுமையாக அரசின் கைகளில் இருக்கக்கூடாது. இந்த அதிகாரம் ஒரு சுதந்திரமான குழுவிடம் இருக்க வேண்டும். அதில் அரசுப் பிரதிநிதிகள் தவிர, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்துறை நிபுணர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் முதலானோர்  இடம்பெற வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் எந்தவிதமான நிர்வாகத் தலையீடும் இல்லாமல் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள், அத்துமீறல்கள் ஆகியவற்றை முழுமையாக, ஆழமாகச் சென்று ஆராயும் அதிகாரமும் வசதிகளும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆணையம் தன் அறிக்கையை அரசிடம் தராமல் முன் குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு, அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்றக் குழு அல்லது நீதிமன்றத்திடம் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அளிக்க வேண்டும். இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படுவதோடு, பரிந்துரைகளின் அடிப்படையில்  மேல் நடவடிக்கைக்கு ஆணையிடவும் இந்த அமைப்பு அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் ஒரு நீதிமன்றத் தீர்ப்பைப் போல சட்டபூர்வமான ஏற்பு (legal status) பெற வேண்டும்.

எனினும் ஆணையத்தின் பரிந்துரைகள் நீதிமன்றப் பரிச்சிலனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் (subjected to judicial review) என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

இது ஒரு பூர்வாங்க முன்வைப்பு. இது விவாதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்படலாம். இப்படியான ஒரு மாற்று நடைமுறை சாத்தியமா என்கிற அய்யம் தேவையில்லை. தகவல் அறியும் உரிமை, லோக் ஆயுதா முதலானவற்றின் ஊடாக மக்கள் அதிகாரம் பெறுகிற வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளபோது ஏன் இதையும் சாத்தியமாக்க இயலாது?