Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்

ஆர்.எஸ்.எஸ் மாறுகிறதா? மோகன் பகவத்தின் விஞ்ஞான் பவன் உரையும் விஜயதசமி உரையும்

             

ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’ என்பது கே.பி ஹெட்கேவரால் ஒரு விஜயதசமி நாளில் (1925) நாசிக்கில் (மகாராஷ்டிரம்) உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை அறிவோம். ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அப்போதைய சர்சங் சலக், அதாவது அவ்வமைப்பின் பெருந்தலைவர் நாசிக்கில் இருந்து ஆற்றும் உரை முக்கியமாக எல்லோராலும் கவனிக்கப்படும். இந்தியா எதிர்கொண்டுள்ள அப்போதைய பிரச்சினைகள் குறித்த அதனுடைய பார்வை மற்றும் அணுகல்முறைகளை விளக்குவதாக அமையும் என்கிற வகையில் அந்த உரை அத்தகைய கவனத்திற்குள்ளாகும்.

காந்தி கொலை உட்பட்ட பல்வேறு வன்முறைகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமான அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பதும் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்று. எனவே அன்றைய பிரச்சினைகள் குறித்த அதனுடைய கருத்துக்கள் அதன் ஆதரவாளர்களால் மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படுபவர்களாலும், அவ்வமைப்பை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவர்களாலும் கூட கவனிக்கப்படும்.

இன்று நாம் சந்தித்துக் கொண்டுள்ள வன்முறைகளுடன் கூடிய மதவாத அரசியல் மற்றும் எதிர்வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய பின்னணியில் இந்த எல்லாத் தரப்பினராலும் இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்சின் பெருந்தலைவர் மோகன் பகவத் ஆற்றிய விஜயதசமி உரை அதிக கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நாசிக்கில் உள்ள ரெஷிம்பாகில் அவர் ஆற்றிய அந்த உரையைச் சற்று விரிவாகப் பார்க்குமுன் இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன் சென்ற செப் 17, 18, 19 (2018) ஆகிய தேதிகளில் டெல்லி விஞ்ஞான் பவனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன் நடத்திய மூன்று நாள் மாநாட்டில் (conclave) மோகன் பகவத் பேசிய பேச்சையும் அது எவ்வாறு இங்கு எதிர்கொள்ளப்பட்டது என்பதையும் பார்ப்பது அவசியம்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கியது ஹெட்கேவராக இருந்தபோதும் அதன் நீண்ட நாள் பெருந்தலைவராக இருந்த கோல்வால்கர் காலத்தில்தான் அதன் கோட்பாடுகளும் அமைப்பு வடிவமும் உறுதிபெற்றன என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர் ஆன்டர்சன் அதற்குப் பின் வந்த தலைவர்களில் ஒருவரான பாலாசாகேப் தியோரசின் காலத்தில்தான் அது ஒரு இறுக்கமான உயர்சாதி ஆணாதிக்க அமைப்பு என்கிற நிலையிலிருந்து ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட (liberal) அமைப்பாக மாறியது என்று குறிப்பிடுவதைச் சென்ற சிலவாரங்களுக்கு முன் நான் இங்கு இட்ட ஒரு முக்கியமான தொடர்பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஆன்டர்சன் இவ்வமைப்பை நெருக்கமாக இருந்து ஆய்வு செய்துள்ளவர் மட்டுமல்ல, அதைச் சற்று அனுதாபத்துடன் அணுகுபவரும் கூட.

‘பவிஷ்யா கா பாரத்’ – என்கிற பெயரில் நடைபெற்ற இந்த மூன்றுநாள் உரை குறித்து ஆர்.எஸ்.எஸ்சைச் சற்றே ஆதரவாக அணுகுபவர்கள் மட்டுமின்றி ஊடகங்கள் பலவும் கூட ஆர்.எஸ்.எஸ் மிகவும் மாறிவிட்டது எனவும், இறுக்கமான அதன் பல கொள்கைகளை அது கைவிட்டுவிட்டது எனவும், கோல்வால்கரின் பார்வையிலிருந்து அது முற்றிலும் விலகி விட்டது எனவும் கொண்டாடினர்.

ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய் 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் அப்போதைய தலைவர் அதன் இரும்புத்திரைய்யை வில்லக்கி அதை ஒரு திறந்த அமைப்பாக மாற்றிய சீர்திருத்த நடவடிக்கையுடன் (glasnost) பகவத்தின் உரையை ஒப்பிட்டார்.

அப்படி என்ன பகவத் விஞ்ஞான் பவன் சந்திப்பில் பேசினார்? சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்.

 

1.நீங்கள் ஆர்.எஸ்.எஸ்சைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஹெட்கேவரிலிருந்து தொடங்க வேண்டும். அவர்              ஓராண்டுகாலம் காங்கிரசில் இருந்தார். சுதந்திரப் போராத்தில் சிறைக்கும் சென்றார். சுதந்திரப் போராட்டத்தில்காங்கிரஸ்      முக்கிய பங்களிப்புகளைச் செய்தது. பல முக்கிய தலைவர்களை அது நாட்டுக்குத் தந்துள்ளது.

  1. நாங்கள் ஏன் காவிக் கொடியை (பக்வத் த்வஜா) வணங்குகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதற்கு குருதட்சிணை செலுத்துகிறார்கள். அதனால் வரும் தொகையை வைத்துத்தான் ஆர்.எஸ்.எஸ் இயங்குகிறது, தேசியக் கொடியை நாங்கள் அவமதிப்பதில்லை. ஒரு முறை நேரு தேசியக் கொடியை ஏற்றும்போது அது சிக்கிக் கொண்டது. அப்போது ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்தான் பாய்ந்து ஓடிக் கொடி மரத்தில் ஏறி அந்த சிக்கை எடுத்துவிட்டார்.

3.ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு ஜனநாயகம் உள்ளது. ஒருமுறை ஒரு இளம் சங்க ஊழியன் என்னப் பார்த்து நீங்கள்                ஏன்நாக்பூர் ஷாகாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கேட்டான். நான் அப்போது தவிர்க்க முடியாத ஒரு பயணத்தில்             இருந்தேன் என அவனிடம் விளக்க வேண்டியதாயிற்று.

  1. நமது அமைப்புக்கு பெண்வெறுப்பு கிடையாது.நமது அன்னையரும், சகோதரிகளும் எங்கிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்சிற்குப் பங்களிப்பு செய்கின்றனர்.
  2. நாங்கள் பா.ஜ.கவையும் அரசையும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ செய்கிறோம் என்பது அப்பட்டமான பொய். நாங்கள் அரசில் யார் இருந்தாலும் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. நாங்கள் சமூக நன் நடத்தைகள் குறித்தே கவலைப்படுகிறோம்.
  3. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். ஏன் எல்லோரும் பா.ஜ.கவிலேயே சேர்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
  4. இந்தியா பலதரப்பட்ட மக்களும் வாழும் நாடு. அதன் பன்மைத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும். பன்மைத்தன்மையை அங்கீகரிக்காத வகையில் எந்த சச்சசரவும் இங்கு வந்துவிடக் கூடாது.

 

பகவத்தின் பேச்சில் உங்களுக்கே கூடப் பல விடயங்கள் வியப்பாக உள்ளனவா? சரி. தொடர்ந்து பகவத்தின் விஜயதசமி உரையைக் காணலாம்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால்…

பகவத்தின் ஆதரவாளர்களால் கொண்டாடப்படும் இந்த விஞ்ஞான் பவன் உரையை வாசிக்கும்போது, “கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும்” என்கிற நம்மூர்ப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் குறித்து பொதுவாக நிலவும் கருத்துக்களை இவர் ‘தவிடு பொடியாக்க’ முன்வைக்கும் ஆதாரங்கள் எத்தனை அபத்தமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் உள்ளன என்பதைக் கவனியுங்கள்.

ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை ஏற்றும் வழக்கம் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்சுக்குக் கிடையாது. அது மட்டுமல்ல. அவர்களுக்கு பச்சை என்பது சிறுபான்மை மக்களைக் குறிக்கும் வண்ணம். வெள்ளை சமாதானத்தைக் குறிப்பது. இரண்டுமே அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. இராட்டையும் கூட மகாத்மா காந்தியையும் அஹிம்சையயும் நினைவு படுத்தும் ஒரு அடையாளம், காந்தி அவர்களின் ஜென்ம வரி. திரிசூலத்தைக் கொண்டாடும் அவர்களுக்கு இராட்டை மீதும் வெறுப்பு. எனவேதான் அவர்கள் இந்திய தேசியக் கொடியைக் கண்டு கொள்வதில்லை. அவர்களது காவிக் கொடியை மட்டுமே அவர்கள் வணங்குவார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் தேசியக் கொடியையும் மதிக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக ஒரு அட்டகாசமான கதையை முன்வைக்கிறார் பகவத். ஒருநாள் நேரு கொடி ஏற்றும்போது கொடி சிக்கிக் கொண்டதாம், அதை ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பி பாய்ந்தோடிச் சென்று சிக்கெடுத்துப் பறக்க விட்டாராம். எனவே அவர்கள் தேசியக் கொடியை மதிப்பதில்லை என்பது பொய்யாம். இதைச் சொல்லிவிட்டு நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார் பகவத்.

“தேசம்”, “வலிமையான தேசம்” என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவர்கள் ஏன் தேசியக் கோடியைக் காட்டிலும் அவர்களின் காவிக் கொடியை வணங்குகிறார்கள் என்பதற்கும் அவர் ஒரு சூப்பர் காரணம் சொல்கிறார். அப்படித் தங்களின் ‘பக்வத் த்வஜத்தை’ வணங்கும்போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அளிக்கும் நன்கொடையை வைத்துத்தான் அவர்கள் அமைப்பு செயல்படுகிறதாம்.

முப்பதுக்கும் மேற்பட்ட வெளிப்படையான துணை அமைப்புக்கள், இன்னும் பல வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாத கிளை அமைப்புகள், ஆயிரக் கணக்கான கல்வி நிறுவனங்கள் எனச் செயல்படும் இவர்களுக்கு எப்படியெல்லாம் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பொய் சொல்லி நிதி திரட்டி அனுப்பப் படுகிறது என்பது அக்கறையுள்ள அமைப்புகளால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளதை நானே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். பூகம்பம் என்றும் புயல் நிவாரணம் என்றும் திரட்டப்பட்ட நிதிகள் பல்வேறு ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொன்னதே இல்லை. கொடி வணக்கத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடையின் மூலமாகத்தான் இவர்களின் அமைப்பு செயல்படுகிறது எனச் சொல்வதெல்லாம் மக்களை எத்தனை மூடர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்று.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஜனநாயகம் உள்ளதாம். பகவத் சூப்பர் நகைச்சுவைப் பேர்வழி என ஒத்துக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வாக்கெடுப்புகளின் மூலம் அவர்களின் சர்சங்சலக்குகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கடைசியாக இருந்த தலைவர் அடுத்தவரை நியமிப்பார். இதுவரை ஒருவரைத் தவிர அத்தனை சர்சங்சலக்குகளும் பார்ப்பனர்கள்தான். ஆண்கள் மட்டுமே இதுவரை தலைவர்களாகி உள்ளனர். எந்த மட்டத்திலும் தேர்தல் கிடையாது. இதன் பெயர் ஜனநாயகமாம். தங்கள் அமைப்பு ஜனநாயகமானதுதான் என்பதற்கும் அவர் ஒரு ஆதாரத்தை முன்வைக்கிறார் பாருங்கள், நாம் வியப்பால் வாயடைத்துப் போகிறோம். ஒரு நாள் ஒரு சின்ன ஆர்.எஸ்.எஸ் ஊழியன் அவரைப் பார்த்து ஏன் நீங்கள் நாசிக்கில் நடந்த சாகாவில் கலந்துகொள்ளவில்லை எனக் கேட்டுவிட்டானாம். அவனை இவர்கள் தண்டிக்கவில்லையாம். “அன்றைக்கு நான் ரயிலில் வந்துகொண்டு இருந்தேனப்பா..” என இவர் பதில் சொன்னாராம். இதைவிட என்ன ஜனநாயகம் வேண்டும் என நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறார் பகவத்.

ஏன் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் தேர்ந்தெடுப்படுவதில்லை என்கிற கேள்விக்குப் பதிலளிக்காமல், எங்கள் அன்னையர்களும் சகோதரிகளும் அவர்கள் எங்கிருந்தபோதிலும் அமைப்பிற்குப் பங்களிக்கிறார்கள் எனச் சொல்லி, எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை மதிக்கும் அமைப்பு என்கிறார்.

பா.ஜ.க வின் அடுத்த தலைவர் யார் என நிர்ணயிப்பதும். பா.ஜ.க ஆட்சிக்கு வர நேர்ந்தால் யார் பிரதமர் என முடிவு செய்வதும் ஆர்.எஸ்.எஸ்தான் என்பது ஊரறிந்த இரகசியம். ஆனால் ஆட்சியையும் கட்சியையும் தாங்கள் ரிமோட் கன்ட்ரோல் பண்ணுவதில்லையாம்.

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலும் சேரலாமாம். ஏன் எல்லோரும் பா.ஜ.கவிலேயே சேர்கிறார்கள் என்பது எத்தனைமுறை தலையைச் சொரிந்து சொரிந்து வழுக்கையாக்கிக் கொண்டாலும் பகவத்துக்குப் புரிவதே இல்லையாம். ஆனால் இப்படிச் சொல்லி அடுத்த ஒரு மாதத்தில் ஆற்றிய விஜயதசமிச் சிறப்புரையில் அதற்கு அவரே பதில் சொல்லி விடுகிறார்.

இது எச்சரிக்கையா? பிரகடனமா?

இனி மோகன் பகவத்தின் விஜயதசமி உரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

1.வலிமையான தேசம், அண்டை நாடுகளை அச்சுறுத்தத் தக்க பலம் வாய்ந்த இராணுவம் என்கிற அடிப்படியிலான தேசியம் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் அடிப்படை அணுகல்முறைகளில் ஒன்று. இந்த உரையிலும், ”எல்லைப் பாதுகாப்பு என்பது மிகவும் கவனத்துக்குரிய பிரச்சினை” என வற்புறுத்தும் பகவத், அந்த அடிப்படையில் மோடி அரசு இராணுவத்தை வலிமையான ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஊடாக அதன் உற்சாகம் குன்றாமல் காத்துள்ளதாக அரசை வெகுவாகப் புகழ்வதோடு, “உலகில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து வருவதன் காரணங்களில் ஒன்றாக” இப்படி இந்திய இராணுவத்திற்கு நவீன ஆயுதங்களைச் சேர்ப்பதைக் குறிப்பிடுகிறார். நவீன தொழில்நுட்பம் கூடிய போர்விமானங்கள் என்கிற பெயரில் ரபேல் விமான ஊழலில் மோடி அரசு சிக்கி விழி பிதுங்கும் பின்னணியில் மோடி அரசை “வலிமையான தேசியம்” எனும் சொல்லாடலின் ஊடாக பகவத் முட்டுக் கொடுக்க முனைவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்தலைமையிலிருந்த UPA அரசின் மீதான ஊழல் புகார்கள் அடிப்படையில் அன்னா ஹசாரேயைக் களத்தில் இறக்கியதே நாங்கள்தான் என்றெல்லாம் சொல்லி தன்னை ஊழலுக்கெதிரான அமைப்பாகக் காட்டிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்சின் உண்மை முகம் வெளிப்படும் தருணங்களில் ஒன்று இது.

 

  1. அடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பு: “கடுமையான முறையில் ஏழ்மை, அநீதி, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பலவீனமான மக்கள் மத்தியில் வெறுப்பையும், கலக உணர்வையும், ஐயத்தையும், வன்முறையையும்” விதைக்கும் சக்திகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உலை வைக்கின்றனர் எனச் சொல்லி மோடி அரசை விமர்சிக்கும் அறிவுஜீவிகளின்பால் பாய்கிறார் பகவத். “நவ இடதுசாரிகள்” எனவும், “நகர்ப்புற நக்சல்கள்” எனவும் மோடி அரசின் மொழியை மிகத் தாராளமாக வழிமொழியும் பகவத், மக்கள் பிரச்சினைகளுக்காக் கருத்தியல் களத்தில் போர் செய்யும் இவர்களைக் குறி வைக்கிறார். தேசத்தைப் பலவீனப் படுத்துகிறவர்களாகவும் அப்பாவி மக்களைத் தம் ‘தேசத் துரோக’ நடவடிக்கைகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்துவதாகவும், அதனூடாகச் சட்ட ஒழுங்கைக் குலைப்பதாகவும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறார். “சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி அறிவுஜீவித் துறைகளில் தேசத் துரோக நடவடிக்கைகளிலும் ஈடுபடுபடும் ‘சிந்தனைத் தலைவர்கள்’ (thought leaders)” என இவர்களைக் குறிப்பிடுவதன் ஊடாக மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து இயங்கியதற்காக சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா முதலான ஐந்து சிந்தனையாளர்களை மோடி அரசு சமீபத்தில் கைது செய்ததைக் கொண்டாடுகிறார் பகவத்.

 

  1. அடுத்து சபரிமலைத் தீர்ப்புக்குள் நுழைகிறார். சபரிமலை ஆலயத்திற்குள் பெண்களை அனுமதித்தது தவறான தீர்ப்பு என்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அந்தத் தீர்ப்பு அரசியல் சட்ட உரிமைகளின் அடிப்படையில் துல்லியமாக வழங்கப்பட்ட ஒன்று. கேரள அரசின் 1965ம் ஆண்டு ‘இந்து வழிபடுதலங்கள் (நுழைவதற்கான அனுமதி்) சட்டம், இந்திய அரசியல் சட்டத்தின் வழிபாட்டுச் சுதந்திரம் தொடர்பான பிரிவு 25 (1) மற்றும் பிரிவு 26 (தமது மத வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான மதப் பிரிவுகளின் உரிமை) ஆகிவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட சரியான தீர்ப்பு அது. ஆனால் பகவத்தின் பார்வையில் இந்தச் சட்ட நெறிமுறைகள் மற்றும் அரசியல்சட்ட உரிமைகள் ஆகியவற்றைக் காட்டிலும் “சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் காலங் காலமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியங்களும், மதத் தலைவர்களின் கருத்துக்களும் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகளும்” மட்டுமே தீர்ப்புக்கான அடிப்படைகளாக இருந்திருக்க வேண்டுமாம். “உண்மையான பெண் பக்தர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பமாட்டார்கள்” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று பிரச்சாரம் செய்துகொண்டுள்ளதை அறிவோம். அதன் மூலம் வழக்குத் தொடர்ந்த பெண்களை உள்நோக்கம் உடையவர்களாகச் சித்திரிப்பது கவனிக்கத் தக்கது. அதையே வேறு சொற்களில் இந்த உரையில் பகவத்தும் இங்கு முன்வைக்கிறார். “பாரம்பரியங்களை மதித்து நடக்கும் பெரும்பான்மையான பெண்களின் கருத்துக்கள் இங்கு கேட்கப்படவில்லை” என்கிறார். முத்தாய்ப்பாக, “(சபரிமலையின் இன்று உருவாகியுள்ள)இன்றைய அமைதியின்மை, குழப்பம், பிரிவினைகள்” எல்லாம் இந்தத் தீர்ப்பின் விளைவுகள்தான் எனச் சொல்லும் பகவத், “இந்துச் சமூகம்தான் இப்படி புனித நம்பிக்கைகளின் மீது வெட்கக்கேடான தாக்குதல்களை தொடர்ந்து அனுபவித்து வருகிறது” என முடிக்கிறார். அவர் முன்வைக்கும் இந்த தர்க்கத்தின் அடிப்படையில் எல்லா மதப் பிரிவுகளின் நீண்ட நாள் மரபுகளும் காக்கப்பட வேண்டும் எனவும், பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் முத்தலாக் சட்டம் பற்றி என்ன சொல்கிறார்கள் எனக் கேட்காமல் முத்தலாக் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடாது எனவும் பகவத் சொல்வாரா?

 

  1. அடுத்து பாபர் மசூதிப் பிரச்சினை : ‘கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என வழக்கமாகச் சொல்லிவரும் நிலையிலிருந்து அகன்று ராமர் கோவிலைக் கட்டியே தீரவேண்டும் என்கிற தீவிரக் கருத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது பகவத்தின் விஜயதசமி உரை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ராமர் கோவிலைக் கட்டும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்கிற தொனியில் பகவத்தின் பேச்சு இங்கு அமைகிறது. 2019 தேர்தல் முடியும்வரை தீர்ப்பு ஏதும் வழங்கக் கூடாது என்கிற சிறுபான்மை மக்களின் கோரிக்கையை பகவத் தீவிரமாக மறுக்கிறார். “எந்தக் காரணமும் இன்றி சமூகத்தின் பொறுமையைச் சோதிப்பது யாருடைய நலத்திற்கும் உகந்ததல்ல” எனச் சீறுகிறார். “சுய மரியாதையின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நாட்டின் ஒருமைத் தன்மைக்கான (oneness in the country) நிபந்தனை என்கிற வகையிலும்” ராமர் கோவில் கட்டப்படுவது அவசியமாகிறது என்கிறார். அதற்குரிய வகையில் சட்டம் ஒன்றை இயற்றுவதை அரசின் கடமையாக்குகிறார்.

 

  1. வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து: தமக்கும் தேர்தல் மற்றும் கட்சி அரசியலுக்கும் தொடர்பில்லை என்கிறவாறு காட்டிக் கொள்ளும் நிலை மிகவும் தந்திரமாக இங்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் வழக்கம்போல தேர்தலில் சுயம்சேவக்குகள் என்ன செய்ய வேண்டும் என்கிற உறுதியான வழிகாட்டல் இந்த உரையிலும் தொடர்கிறது. “யாரும் NOTA ஓட் அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேச நலன் என்கிற அடிப்படையிலேயே அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறுகிய உணர்வுகள், சாதி, மொழி மற்றும் பிராந்திய அடிப்படைகளிலிருந்து யாரும் வாக்களிக்கக் கூடாது. ஒட்டுமொத்தமான தேச நலனுக்குத் தம் வலிமையை அர்ப்பணிக்க வேண்டும்” பா.ஜ.கவின் வெற்றிக்கு முழுமையாக நிற்கவேண்டும் என்பதைத்தான் பகவத் வேறு சொற்களில் உமிழ்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. தேச நலன் எனவும், பிராந்திய, மொழி அடிப்படைகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றெல்லாமும் நசுக்கி நசுக்கிச் சொல்வதன் பொருள் வேறென்ன. தேர்தல் புறக்கணிப்பு, நோட்டா வாக்களிப்பு முதலான எதிர்ப்பு வடிவங்களை தேசத் துரோகமாகவே ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கிறது.

 

  1. இந்து ராஷ்டிரம்: “பாரதம் என்பது இந்து ராஷ்டிரம்” எனும் முழக்கத்தோடு பகவத்தின் உரை முடிகிறது. “தமது மதம், வழமை (tradition), வாழ்க்கை முறை அல்லது ‘இந்து’ எனும் சொல் மீதான தயக்கம் (apprehension) ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தின் எந்தப் பிரிவேனும் தன்னைப் பிரித்து (separate) உணர்ந்தால் (அதை ஏற்க இயலாது). அவர்கள் இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் என்றென்றைக்குமான பண்பாட்டு அடையாளம் (eternal ethos) என்பதை உணர வேண்டும்… இந்தப் பண்பாட்டு அடையாளத்தில் பதிந்திருக்கும் பாரதப் பண்பாடு எனும் வண்ணத்தில் (hue of Bharat’s culture) எல்லோரும் கரைய வேண்டும்”

 

-என்பதாக முடிகிறது பகவத்தின் உரை. இது எச்சரிக்கையா பிரகடனமா?

ஒரு மாதத்திற்கு முன்புதான் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருத்தல், ஒற்றுமை, பன்மைத்தன்மையை அங்கீகரித்தல், வேற்றுமைகளுக்கிடையே ஒத்திசைவு என்றெல்லாம் இதே வாய் பேசியது. இன்று அதன் குரல் உயர்வது, இப்படி உறுமுவது என்பதற்கெல்லாம் பொருளென்ன?

இந்திய மதிப்பீடுகள் / ethos என்பதை நிபந்தனையாக்குவதன் பொருள்

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும்போது ஏன் அவர்கள் பாஜகவில் மட்டுமே சேருகின்றனர் எனத் தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என மோகன் பகவத் தனது விக்ஞான் பவன் உரையின்போது படு அப்பாவித்தனமாகக் கேட்டாரல்லவா அந்த அப்பாவித்தனம் அப்பட்டமான நடிப்பு என்பதை அவரது விஜயதசமி உரை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இந்த இரண்டாவது உரையில் அவர் முன்வைக்கும் பலவற்றுள் ‘நகர்ப்புற மாஓயிஸ்டுகள்’, ‘சபரிமலை தீர்ப்பு’, ‘ராமர் கோவில்’ ஆகிய மூன்று பிரச்சினைகளை எடுத்துக்கொள்வோம். இவை குறித்து பகவத்தின் நிலைபாடு என்ன? மாஓயிஸ்டு ஆதரவாளர்களாகக் கருதப்படும் அறிவுஜீவிகள் மீதான மோடி அரசின் நடவடிக்கையை அவர் முழுமையாக ஆதரிக்கிறார். சபரிமலைத் தீர்ப்பைப் பற்றிப் பேசும்போது இந்துச் சமூகம் தொடர்ந்து அவமானத்துக்கும் தாக்குதலுக்கும் ஆளாக்கப்படுகிறது என்கிறார். இராமர் கோவில் பிரச்சினையைப் பொருத்த மட்டில் ‘ஜன்மபூமியில்’ ஒரு இராமர் கோவிலைக் கட்டுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிறார். ஆக இந்த மூன்று பிரச்சினைகளிலும் இவைதான் ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகள் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.. இந்த மூன்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சி இந்தியாவில் எது? பா.ஜ.க மட்டுந்தான் அப்படிச் சொல்லுகிறது. அப்படி இருக்கையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் பா.ஜ.கவைத் தவிர வேறு எந்தக் கட்சியில் சேர முடியும்? ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் எனச் சொல்வதன் பொருள் என்ன? அவன் காங்கிரசிலோ கம்யூனிஸ்ட் கட்சியிலோ இருந்து கொண்டு பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டச் சட்டம் இயற்றக் கூடாது, சபரிமலை தீர்ப்பின்படி அய்யப்பன் கோவிலில் பெண்கள் சென்று வழிபடலாம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யவும் போராடவும் அவர் அனுமதிப்பாரா?

இப்படியெல்லாம் பேசுவது புத்திசாலித்தனம் இல்லை, படு முட்டாள்தனம் அல்லது பச்சை ஏமாற்று என்பதை யார் அவருக்குச் சொல்லுவது?

விஜயதசமிப் பேச்சில் ‘இந்து’ என்பதையும் ‘இந்தியா’ என்பதையும் ஒன்றாக்குகிறார். விக்ஞான் பவன் பேச்சிலும் இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்தியர்கள்தான் எனக் கூறினார். இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையைத் தான் அங்கீகரிப்பதாகவும் சொன்னார். ஆகா ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டது. கோல்வால்கர் தூக்கி எறியப்பட்டுவிட்டார். தியோரஸ் காலத் தாராளவாதம்தான் இனி ஆர்.எஸ்.எஸ்சின் அணுகல்முறையாக இருக்கும். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கூட இந்துக்கள் என, அதாவது இந்தியர்கள் என ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொண்டு விட்டது என்றெல்லாம் அதன் ஆதரவாளர்கள் கும்மி அடித்தார்கள். விஜயதசமிப் பேச்சை உற்றுக் கவனியுங்கள். இங்கு இந்தியா என்பதையும் இந்து என்பதையும் அவர் இணை வைக்கிறார். ஆனால் அத்தோடு அவர் நிறுத்தவில்லை. அந்த இணை வைப்பை அவர் விளக்க முற்படும்போது அவர்களின் வேடம் வெளிப்பட்டுவிடுகிறது.

அந்த விளக்கம் என்ன? தாம் கடைபிடிக்கும் மதம், ஹிஜாப் அணிவது முதலான மரபுகள் (tradition), மாட்டுக்கறி உண்பது முதலான வாழ்க்கை முறைகள் மற்றும் தம்மை இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளக் காட்டும் தயக்கம் (apprehension) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியச் சமூகத்தின் எந்தப் பிரிவேனும் தன்னைத் தனித்துவத்துடன் உணர்ந்தால் அவர்களை இந்தியர்கள் என ஏற்க முடியாது என்பதுதானே விஜயதசமி உரையில் பகவத் அளிக்கும் அந்த விளக்கம். இங்குள்ள சிறுபான்மையினர் இந்துத்துவம் என்பதுதான் இந்த நாட்டின் என்றென்றைக்குமான பண்பாட்டு அடையாளம் (eternal ethos) என்பதைச் சிறுபான்மை மக்கள் உணர வேண்டும் என்பதுதானே அதற்கு ஆர்.எஸ்.எஸ் விதிக்கும் நிபந்தனை. பாரதப் பண்பாடு எனும் வண்ணத்தில் எல்லோரும் கரைய வேண்டும் என்பதன் பொருள் என்ன? பாரதப் பண்பாடு அல்லது Hindu Ethos என்பதன் பொருள் என்ன? பசுவைத் தெய்வமாக ஏற்பது, அல்லது குறைந்தபட்சம் அதைப் புனிதமாக ஏற்பது, பாபர் மசூதி இருந்த இடத்தை இரமர் ஜன்ம பூமியாக ஏற்பது முதலானவைதானே? ஆர்.எஸ்.எஸ் குறித்து ஐம்பது ஆண்டு காலமாக ஆய்வு செய்துவருபவரும், அவ்வமைப்பை விமர்சனமின்றிப் பார்ப்பவருமான ஆன்டர்சன் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முஸ்லிம்கள் சேர்வதற்கான நிபந்தனை என “வரலாற்று ரீதியான இந்தியப் பண்பாட்டை அவர்கள் ஏற்க வேண்டும்” என்பதைத்தானே குறிப்பிடுகிறார்.

இதில் என்ன glasnost ஐக் கண்டு விட்டீர்கள்? என்ன ப்கவத் கால ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோல்வால்கரின் பாதையிலிருந்து விலகிவிட்டது?

ஒன்றும் இல்லை. மொழி மாறியிருக்கிறது, அல்லது சரியாகச் சொல்வதானால் மோழி இன்னும் சாதுரியமாகி இருக்கிறது அவ்வளவுதான். காலம் மாறி வருகிறது. கோல்வால்கரின் காலத்தைக் காட்டிலும் இப்போது பொதுவில் அவர்களுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். கோல்வால்கர் காலத்திய கெடுபிடியோ ஒதுக்கமோ இப்போது இல்லை. எனவே பழைய மொழியிலேயே இப்போது நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர்கள் முடிவு செய்துவிட்டனர். அது பேசிய காலம் இது சாதிக்கும் காலம். சிலவற்றை அவர்கள் ஒரு உத்தி எனும் அடிப்படையில் தற்காலிககமாக ஒத்தி வைக்கலாம். அவ்வளவுதான். இட ஒதுக்கீடு முதலானவற்றில் அவர்கள் தங்களின் கொள்கைகளை நிறைவேற்ற இன்னும் காலம்வரவில்லை என்பதை பிஹார் தேர்தலில் முயற்சித்துப் பார்த்து அடி வாங்கியபின் உணர்ந்து கொண்டனர். அது போன்றவற்றில் அவர்கள் சற்றே தற்காலிகமாகப் பின் வாங்கலாம். ஆனால் அவையும் தற்காலிகமான பின்வாங்கல்கள்தான்.

ஆனால் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது முதலான பிரச்சினைகளை இப்போது சாத்தியப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே அவற்றிற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

மற்றபடி அவர்கள் தம் அடிப்படைகளை விடமாட்டார்கள். இந்தியாவின் ethos என அவர்கள் சொல்கிறார்களே அதன் மிக முக்கியமான அம்சம் வருணாசிரமம் தானே. அதை விட்டுவிடுவார்களா? பெண்களைத் தீட்டு என ஒதுக்கி வைப்பதும் இந்திய ethos தானே, சபரிமலைக்குப் போகக் கூடாது எனச் சொல்பவர்கள் இதை மட்டும் விட்டுவிடுவார்களா? சமஸ்கிருத்தத்தின் புனித்தையும் வேத பாடங்களைத் திணிப்பதையும் அவர்கள் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கி விடுவார்களா?

அவர்கள் முன்வைக்கும் பன்மைத்தன்மை இந்திய ethos என்கிற வரையறைக்குட்பட்டது என்பதுதான் பகவத் தன் விஜயதசமி உரைமூலம் அழுத்தம் திருத்தமாக முன்வைப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *