சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் தொடர்பான ஆணையங்கள்

1. முஸ்லிம்களின் கோரிக்கை வரலாறு

1947க்குப் பிந்திய இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகட்கு நேர்ந்த கதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன், இந்த 60 ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்கள் தம் நிலை குறித்த புரிந்துணர்தல்களை அடைந்த விதம், அவர்களது கோரிக்கைகள் உருப்பெற்ற வரலாறு ஆகியவற்றை சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

இந்தியச் சுதந்திரமும், குடியரசு உருவாக்கமும் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் சில வேதனைக்குரிய அம்சங்களைத் தம் பிறப்பிலேயே கொண்டிருந்தன. பிரிவினைக் கலவரங்கள், வட இந்திய முஸ்லிம்களுக்கு இதன்மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்புகள், இடப் பெயர்வுகள், தேசத்தைப் பிரித்தவர்கள் என்கிற குற்றச்சாட்டு ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்தியச் சுதந்திரம் விடிந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் பெற்றிருந்த பல உரிமைகளை இழந்ததோடுதான் இந்திய அரசிற் சட்டமும் குடியரசுக் கட்சியும் அவர்களுக்குக் கை வந்தன. அவை:

  1. இட ஒதுக்கீடு, தனி வாக்காளர் தொகுதி, அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் ஆகியன அவர்களுக்கு மறுக்கப்பட்டன. மாநிலங்கள் ஒதுக்கீடு வழங்க விரும்பினாலுங்கூட “பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்கிற அடிப்படையிலேயே வழங்க முடியும் என்கிற நிலை அரசியல் சட்டத்திலேயே உருவாக்கப்பட்டது.
  2. உருது மொழிக்கு இரண்டாம் ஆட்சி மொழி என்கிற நிலையுங்கூட வட மாநிலங்களில் வழங்கப்படவில்லை. “ஹிந்துஸ்தானி’ கூடப் புறக்கணிக்கப்பட்டு தேவநாகரி வரி வடிவத்துடன் கூடிய இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
  3. விரும்பிய மதத்தைக் கடைபிடிக்க, பிரச்சாரம் செய்ய, பரப்ப உரிமை அளிக்கப்பட்டபோதும் பின்னாளில் மாநிலங்கள் விரும்பினால் மதமாற்றச் சட்டங்களை இயற்றத் தோதாக அரசியல் சட்டத்தில் இப்பிரிவு ங்25(1)சி நிபந்தனைக்குட்பட்டதாக ஆக்கப்பட்டது. அதாவது, பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படாத வரையே மத மாற்றம் செய்யலாம்.
  4. பொதுச் சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது குறித்து அடிப்படை உரிமைகளில் பதியப்படாவிட்டாலும் வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டது.

இதே நேரத்தில்தான் பாபர் மசூதியில் பால ராமர் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது.

minorities 1

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்கள் தமது உரிமையைக் கோரி வற்புறுதியபோதெல்லாம், நாட்டையே பிரித்து விட்டீர்கள், இனி என்ன உங்களுக்கு இந்த உரிமைகளெல்லாம் என பட்டேலும் மற்றவர்களும் சீறினர். பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற முயற்சியுங்கள் என அறிவுரை கூறினர். தனி வாக்காளர் தொகுதி அளிக்க இயலாது. ஆனால், பட்டியல் சாதியினர்க்கு உள்ளது போல் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அளிக்கப்படும் என முதலில் ஒத்துக்கொண்டு, பின்னர் திருத்தம் ஒன்றை மொழிந்து அதையும் இல்லாமற் செய்தார் பட்டேல்.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து சென்ற காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள்தான் வற்புறுத்தினாரேயொழிய வட மாநில முஸ்லிம்கள் அதை எதிர்த்தனர். எதிர்த்து வாக்களித்தனர். “மெட்ராஸ் குரூப்’பின் கோரிக்கை இது எனக் கேலி செய்தனர். இறுதியில் காயிதே மில்லத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக நான்கு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நாங்கள் ஒரு மாநாடு நடத்தினோம். அஸ்கர் அலி எஞ்ஜினியர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். காலை அமர்வில் நான் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது குறித்துப் பேசினேன். அவையிலிருந்த முஸ்லிம்கள் அதை வரவேற்றனர். அருகிலிருந்த வழக்குரைஞர் ரஜனியிடம் நான் என்ன பேசுகிறேன் என வினவினார் என்ஜினியர். மொழி பெயர்த்துச் சொன்னவுடன் அவர் பதட்டமடைந்தார். நான் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் எழுந்து “”அப்படியெல்லாம் பேசாதீர்கள். இது முஸ்லிம்களின் கோரிக்கை அல்ல” என்றார். முஸ்லிமல்லாத நான் இதற்கு என்ன பதில் சொல்ல இயலும்? “”இல்லை ஐயா, தமிழ்நாட்டில் அந்தக் கோரிக்கை எப்போதும் இருந்து வந்துள்ளது. தற்போதுகூட த.மு.மு.க. என்றொரு அமைப்பு இந்தக் கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டிற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. ஒருவேளை அதன் விளைவாக இருக்கலாம்” என்றேன். எனினும் அஸ்கர் அலி எஞ்ஜினியர் அதை ஏற்கவில்லை. முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்திய முதல் பத்தாண்டுகளில் இரண்டு அம்சங்கள் நமது கவனத்திற்குரியவையாகின்றன. முதலாவதாக, 1960 வரை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தப் பெரிய மதக்கலவரங்களும் இங்கு நடைபெறவில்லை. அடுத்து இந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம் தலைவர்களின் பிரதான பணி தாங்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதை வெளிப்படுத்திக் கொள்வதாகவே இருந்தது. இதை நான் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. அன்றைய சூழலில் அவர்கள் அப்படிச் செய்ய நேர்ந்தது. ஒருவேளை மகாத்மா காந்தி உயிருடனிருந்திருந்தால் முஸ்லிம்களுக்குப் பக்க பலமாக இருந்திருப்பார். இன்னொரு மதச்சார்பற்ற பெருந்தலைவரான நேரு பிரதமராக இருந்த போதிலும் கட்சிக்குள் இந்து வலதுசாரி சக்திகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தும் வலது சாரிச் சிந்தனையுடையவரே. நேரு தடுத்தும் கேளாமல் சோமனாதபுரம் ஆலய குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டவர் அவர். இந்து சட்டத் தொகுதியைப் பாராளுமன்றம் நிறைவேற்றினால் அதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனச் சொல்லி, அம்பேத்கர் பதவி விலகப் பின்னணியாக இருந்தவரும் அவரே.

கஷ்மீர்ப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்வதற்காக 1951 ஆகஸ்ட் 15 அன்று ஐ.நா. அவையின் பிரதிநிதி டாக்டர் ஃப்ராங் கிரஹாம் இந்தியா வந்தபோது அன்றைய அலிகார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் தலைமையில் 14 முஸ்லிம் தலைவர்கள் அவரைச் சந்தித்து முஸ்லிம் சிறுபான்மையினர் திருப்தியாக இருப்பதாகவும் இந்திய அரசின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்ததோடு பாகிஸ்தானின் கருத்துக்களை மறுக்கவும் செய்தனர்.

இந்தப் பின்னணியில்தான் 1961ல் முதலில் ஜபல்பூரிலும் பின்னர் துர்காபூரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இரு பெரும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகியது. இந்நிலையில்தான் முதன் முதலாக புது டெல்லியில் அகில இந்திய முஸ்லிம் மாநாடு நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்தும் சுமார் 600 முஸ்லிம் தலைவர்கள் அதில் பங்கு பெற்றனர். டாக்டர் சையத் மஹ்மூத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோர் இந்த மாநாட்டைக் கூட்டினர். இம்மாநாட்டில் எட்டு அம்சக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அவற்றை இப்படிச் சுருக்கலாம்:

அ) மத, பண்பாட்டு உரிமைகள் (உருது மொழி உட்பட) காக்கப்பட வேண்டும்.

ஆ) அரசுப் பணிகள், தல நிர்வாகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம், கல்வி, உயர்கல்வி ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இ) உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். கலவரங்கள் தடுக்கப்பட வேண்டும். மதவெறிப் பிரச்சாரங்களைத் தடைசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பின் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றாகத் திரண்டு பொதுக் கோரிக்கைகளை வைத்தது இப்போதுதான் என நினைக்கிறேன். தேசப் பிரிவினைக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக உருவாக்கப்பட்ட பொழுது சென்னையில் கூட்டப்பட்ட முதற் கூட்டத்தில் (1948, மார்ச் 10) கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்களே. மேற்கு வங்கம், ஒரிசா, பீஹார் மாநிலங்களிலிருந்து யாரும் வரவில்லை. உ.பி.யிலிருந்து ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். காயிதே மில்லத் அவர்கள் தலைவராகவும், சென்னையைச் சேர்நத் மஹ்பூப் அலி பெய்க் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மும்பையைச் சேர்ந்த ஹாஜி ஹுஸைனலி பி. இப்றாஹீம் சாஹிப் பொருளாளர். ஆக, முஸ்லிம் லீக் கட்சி ஒரு தென்னிந்திய இயக்கமாகவே குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தவர்கள் பெரிதும் பங்கேற்கும் அமைப்பாகவே இருந்தது. “அரசியல் சாராத அம்சங்களை வலியுறுத்தி’ இயங்கப் போவதாகவும் இந்த முதல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மதக் கலவரங்களைத் தடுத்து அகில இந்திய அளவில் திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாண்டுகட்குப் பின் மீண்டும் ரூர்கேலாவிலும், ஜாம்ஷெட்பூரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்பட்டபோது சையத் மஹபூப், மவுலானா தய்யிப், காயிதே மில்லத் ஆகியோர் முன்னின்று 1964, ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் “அகில இந்திய முஸ்லிம்களின் கலந்தாலோசனை மாநாடு’ ஒன்றை லக்னோவில் கூட்டினர். முந்தைய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தவிர, உளவுத்துறை, காவல்துறை, சேமப் படைகள் (கீஞுண்ஞுணூதிஞுஞீ ஊணிணூஞிஞுண்) ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் இப்போது தீர்மானங்கள் இயற்றப்பட்டன. முஸ்லிம் மஜ்லிஸ் முன்னின்று “அகில இந்திய முஸ்லிம் அரசியல் மாநாடு’ ஒன்றை 1970, டிசம்பர் 19ல் கூட்டியது. தலைமை ஏற்ற பத்ருத்தீன் தயாப்ஜி, முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கான பொது அரசியல் மேடை ஒன்றின் தேவையை வலியுறுத்தினார்.

இந்த முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமானவையாகவே முடிந்தன. இந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்படவில்லை. இந்நிலையில்தான் 1972, டிசம்பர் 27, 28 தேதிகளில் மும்பையில் “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட மாநாடு’ கூட்டப்பட்டது. பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற குரல் முஸ்லிம்களுக்கு எதிராக இங்கே எழுப்பப்பட்ட பின்னணியில் கூட்டப்பட்ட இம்மாநாட்டில், “”நாம் எல்லாவற்றையும் இழந்தோம். அரசு, மரியாதை, சொத்துக்கள் ஆகியவற்றோடு நம் உருது மொழியையும் இழந்தோம். அல்லாஹ் நமக்கருளிய ஷரீயத்தையும், தீனையும்கூட இன்று நம்மிடமிருந்து பறிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இனி நாம் என்ன செய்வது, எங்கே போவது?” என்று குழுமியவர்கள் பேசினர். இம்மாநாட்டில் உருவான “அகில இந்திய தனியார் சட்ட வாரியம்’ ஒன்றுதான் தொடர்ந்து அதே பெயரில் (நடுவில் சிறிது காலம் பிளவுண்டிருந்த போதிலும்) முஸ்லிம்களின் நலனை அகில இந்திய அளவில் முன்னெடுத்துச் செல்லும் அமைப்பாக விளங்கி வருகின்றது.

1973, ஆகஸ்ட் 18 அன்று ஷேக் அப்துல்லாஹ்வின் தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர். 1975  77 காலகட்டத்தில் நெருக்கடி நிலையையும்கூட ஆதரித்தனர். ஆனால், நெருக்கடி நிலைக் கொடுமைகளிலிருந்து அவர்கள் தப்ப இயலவில்லை. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி 1978 ஜனவரி 12ல் “சிறுபான்மையோர் ஆணையத்தை’ உருவாக்கியது. காங்கிரஸ் அல்லாத முதல் அரசுதான் இதைச் செய்ய நேரிட்டது. இந்தியச் சிறுபான்மையினரின் நிலையைக் கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்ட போதும் 1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அதன் பங்கிற்கு கோபால்சிங் ஆணையத்தை நியமித்தது. 1983ல் அதன் அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டது. எனினும் அரசு அதை வெளியிடாமல் முடக்கியது.

1980கள் இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சோதனைக் காலமாக அமைந்தது. ஷாபானு பிரச்சினை, பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை ஆகியவற்றின் ஊடே சையத் சஹாப்தீன் 1989, ஜூலை 9 அன்று “முஸ்லிம் இந்தியர்களின் மாநாட்டை’ டெல்லியில் கூட்டினார். அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட அம் மாநாட்டிற்கு வி.பி.சிங் மட்டும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். பத்துத் தலைப்புகளில் 76 கோரிக்கைகள் அம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் ஒட்டுமொத்தமான பிரச்சினைகளையும் தேவைகளையும் வெளிக்கொணரும் இத்தீர்மானங்கள் ஒரு முக்கிய ஆவணமாக இன்றும் விளங்குகிறது. இந்நிலையில்தான் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

முஸ்லிம்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் (ஙடிஞிtடிட்ண்) இந்திய மண்ணில் பாத்தியமுடையவர்களாகவும் உணர்ந்து கோரிக்கைகளை வைக்கும் நிலை இதற்குப் பின் தொடங்கியது. பல்துறைகளில் ஆற்றல்படுத்துதல், அதிகாரத்தில் பங்கேற்பு, கல்வி, அரசுப் பணி, இடஒதுக்கீடு முதலான கோரிக்கைகள் ஒருங்கிணைந்த வகையில் முன்வைக்கும் நிலை 1993க்குப் பின் ஏற்பட்டது.

1994 அக்டோபர் 9ம் தேதி டெல்லியில் முஸ்லிம் “இடஒதுக்கீட்டிற்கான தேசிய மாநாடு’ கூட்டப்பட்டது. தொடர்ந்து 1999 மே 8 அன்று டெல்லியில் “இந்திய முஸ்லிம்களை ஆற்றல்படுத்தும் இயக்கத்திற்கான தேசிய மாநாடு’ கூட்டப்பட்டது. தாராளமயம், புதிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்கிற உணர்வும், கல்வியில் முக்கியத்துவம் குறித்த சிந்தனையும் பெரிய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியதை இந்நிகழ்வுகள் உணர்த்தி நின்றன.

இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் இடஒதுக்கீட்டைப் பிரதானப்படுத்தி “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்’ முதலான அமைப்புகள் உருவாகியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் (2009) தாம்பரத்தில் உருவான “மனிதநேய மக்கள் கட்சி’யின் மாநாட்டிலும் இரண்டாம் வாரத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ மாநாட்டிலும் பேசப்பட்ட பேச்சுக்களை நுனித்து நோக்கும் போது இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையில் இன்னொரு புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது விளங்குகிறது. அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கோருதல் என்பதே இந்தப் பரிமாணம். தேர்தலுக்குத் தேர்தல் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்கூட பாராளுமன்றங்களில் குறைந்து வருவதும் முஸ்லிம் வாக்குகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதும் இம்மாநாடுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கூட்டணிகளைத் திறமையுடன் கையாளுவது, உரிய முறையில் பேரம் பேசுவது ஆகியவற்றினூடாக முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஈடான அதிகாரப் பங்கேற்பைப் பெறுவது இங்கே வலியுறுத்தப்பட்டது. தேர்தல் அரசியல், கூட்டணி, பேரம் ஆகியவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றில் நம்பிக்கை ஏற்படுத்துவதினூடாக இந்துத்துவ எதிர்ப்பு முனை மழுங்காதிருக்கும் வகையில் இது அமைய வேண்டியது அவசியம்.

அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் அணிதிரள நேர்ந்த சூழல்கள், அவர்களின் கோரிக்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில் இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு, ஆகியன குறித்து ஆய்வு செய்யவும் பரிந்துரைகளை அளிக்கவும் உருவாக்கப்பட்ட ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகள், அரசுகள் அவற்றை எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை இனி பார்ப்போம்.

2. பல்வேறு ஆணையங்களும் சச்சார் குழு அறிக்கையும்

கல்வி நிலையங்களிலும் அரசாங்க நிறுவனங்களிலும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்கிற குறை பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியே இருந்து வருகிறது. 1870 களில் லார்ட் மியோ இந்திய “வைஸ்ராயாக’ இருந்தபொழுது முஸ்லிம்கள் மத்தியில் அன்று நிலவிய அமைதியின்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வில்லியம் ஹன்டரைக் கேட்டுக் கொண்டார். “நமது இந்திய முஸ்லிம்கள்’ (Oதணூ ஐணஞீடிச்ண Mதண்ச்டூட்ச்ணண்) என்கிற தலைப்பில் அவர் அளித்த அறிக்கை 1871ல் வெளியிடப்பட்டது. அரசுப் பணிகளில் அன்று முஸ்லிம்கள் எந்த அளவு இடம் பெற்றிருந்தனர் என்பது குறித்த பல முக்கிய தரவுகள் அதில் தொகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்திருந்த அன்றைய வங்க மாகாணம் குறித்த தகவல்கள் அதில் நிறைய அடங்கியிருந்தன. கல்கத்தா நகரமே அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் தலைநகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில் கண்டிருந்த தகவல்களின்படி “உதவிப் பொறியாளர்கள்’ பதவியில் அன்றிருந்த இந்துக்களின் எண்ணிக்கை 14; முஸ்லிம்கள் ஒருவரும் இல்லை. கீழ்நிலைப் பொறியாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் மட்டத்தில் இருந்தவர்களில் இந்துக்கள் 24; முஸ்லிம் 1. ஓவர்சீயர்களில் இந்துக்கள் 63; முஸ்லிம் 2. அக்கவுண்ட்ஸ் துறையில் இந்துக்கள் 50; முஸ்லிம் 0. பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களில் இந்துக்கள் 239; முஸ்லிம்

1. இந்தத் தகவல்கள் போதும் என நினைக்கிறேன். “”கல்கத்தாவிலுள்ள அரசு அலுவலகங்களில் அன்று ஒரு முஸ்லிமால் பியூன் அல்லது வாயிற்காப்போன் போன்ற வேலையாள் பதவி தவிர வேறு எந்தப் பதவியையும் பெறுவது இயலாத காரியம்” என்று அந்த அறிக்கை முடிந்திருந்தது.

சென்னை உள்ளிட்ட பிற மாகாணங்களிலும் நிலைமை அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனினும் இந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு வைஸ்ராய் லார்ட் மியோ இந்தக் குறைகளைக் களைய என்னவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார் எனத் தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஆக, முஸ்லிம்களுக்கு இவ்வகையில் இழைக்கப்பட்ட அநீதிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே தொடங்குகிறது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொரு மாநில அரசும் நியமித்த உயர் அதிகாரிகளில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் என்பது குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்கிற நியதியை நடைமுறைப்படுத்தி வந்தார். எனினும் முஸ்லிம்கள் ஒதுக்கப்படும் நிலை தொடரவே செய்தது.

ஜனதா கட்சியின் தலைமையில், முதல் காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் உருவாக்கப்பட்டபோதுதான் (1978) சிறுபான்மையோர் ஆணையம் (ஜனவரி 12) அமைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா, ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தை ஒதுக்கிவிட்டு இன்னொரு “உயர் அதிகாரக் குழு’வை (ஏடிஞ்ட கணிதீஞுணூஞுஞீ கச்ணஞுடூ) நியமித்தார்.

minorities 2 misra

சிறுபான்மையோர், பிற பிற்படுத்தப்பட்டோர் முதலானவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எந்த அளவுக்குச் சென்றடைகிறது. அவர்களது சமூக நிலை எவ்வாறு உள்ளது என ஆராய்வது இக்குழுவின் நோக்கம். டாக்டர் வி.ஏ. சய்யித் அஹமது தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பின் இந்தியத் தூதுவராக (ஏடிஞ்ட இணிட்ட்டிண்ண்டிணிணஞுணூ) அவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். குழுவிலிருந்த மூத்த உறுப்பினரான டாக்டர் கோபால் சிங் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அயலுறவுத் துறையில் பணிபுரிந்த அதிகாரியும்கூட. “கோபால் சிங் குழு’ என இது பின்னர் அறிவிக்கப்பட்டது. இதன் செயலராக இருந்த குர்ஷித் ஆலம்கான் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் டாக்டர் ரஃபீக் சகரியா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பத்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, 1983 ஜூன் 14 அன்று 118 பக்கமுள்ள தனது “சிறுபானமையோர் அறிக்கை’யை அரசுக்குச் சமர்ப்பித்தது. கல்வி, அரசுப் பணிகள் ஆகியவற்றில் சிறுபான்மையோரின் இடம், கிராம வளர்ச்சி மற்றும் தொழிற்துறை தொடர்பான அரசுத் திட்டங்களின் பலன்களில் அவர்களின் பங்கு, அவர்களது நலன்களை நிதி நிறுவனங்கள் எந்த அளவுக்குத் தமது செயல்பாடுகளில் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன என்பது தொடர்பான பல தரவுகள் அடங்கிய 205 பக்க பின்னிணைப்புகளும் அதில் இருந்தன இந்த எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின்தங்கியிருந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டிய கோபால் சிங் குழு அறிக்கை இந்நிலையை மாற்றுவதற்கான பல்வேறு உடனடி மற்றும் தொலைநோக்கான திட்டங்களையும் பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் வரை, முஸ்லிம் அமைப்புகள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, காங்கிரஸ் அரசு அதைப் பாராளுமன்றத்தில் வைக்கவே இல்லை. பாராளுமன்றத்திலேயே வைக்காதபோது அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டன என்கிற கேள்விக்கே வேலையில்லாமல் போய்விடுகிறது.

மீண்டும் ஒரு காங்கிரஸ் அல்லாத அரசு வி.பி.சிங் தலைமையில் அமைக்கப்பட்டபோதுதான் கோபால் சிங் அறிக்கை வெளியிடப்பட்டது. “”மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் பலன்கள் சிறுபான்மையோர் + பட்டியல் சாதியினர் + இதர பலவீனமான பிரிவினர் ஆகியோருக்குச் சென்றடையவில்லை என்கிற உணர்வு தொடர்கிறது” என்பதை அறிக்கை அழுத்தமாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோபால்சிங் அறிக்கை முஸ்லிம்களின் நிலையை மட்டும் ஆய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்றல்ல. சிறுபான்மை யோருடன் இதர பட்டியல் சாதியினர் மற்றும் பலவீனமான சமூகப் பிரிவினர் எல்லோரது நிலைகளையும் ஆராய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இந்திய அளவில் 83 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. பல அம்சங்களில் போதுமான தகவல்களை அது கொண்டிருக்கவில்லை என்பன இவ்வறிக்கையின் மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்கள்.

எனினும் உறுதியான இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரைகளைச் செய்திருந்த வகையிலும், வேலைத் தேர்வு மற்றும் கண் காணிப்புக் குழுக்களில் உரிய பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும், சிறுபான்மையோருக்கான பிரதமரின் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் குழுக்களில் சிறுபான்மையோருக்கு 20 சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும் முதலான பரிந்துரைகளை வழங்கியிருந்த வகையிலும் இவ்வறிக்கை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. எனினும், ஒன்பதாண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் இப்பரிந்துரைகளை நிறைவேற்றும் சித்தம் அடுத்தடுத்து வந்த எந்த அரசுகளுக்கும் இல்லாமலேயே இருந்தது.

1995ம் ஆண்டின் தேசியச் சிறுபான்மையோர் ஆணையம், காவல்துறை மற்றும் துணை இராணுவப் பணிகளில் சிறுபான்மையோர் எந்த அளவிற்கு பங்கு வகிக்கின்றனர் என்கிற தரவுகளைச் சேகரித்தது. சிறுபான்மையோர் குறிப்பாக முஸ்லிம்களின் பங்களிப்பு பல்வேறு மாநிலங்களிலும் அவர்களின் மக்கள் தொகைக்கு எந்த வகையிலும் பொருத்தமின்றி இருப்பதை ஆணையம் வேதனையோடு சுட்டிக்காட்டியிருந்தது.

திட்டக்குழுவின் சிறுபான்மையோருக்கான துணைக்குழு 1996, மே 6 அன்று மத்திய அரசுப் பணியிலும், வங்கித் துறையிலும் சிறுபான்மையோரின் பங்கை ஆராய்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டது. 12 பேர் அடங்கிய இக்குழுவிற்கு தேசிய சிறுபான்மையோர் ஆணைய உறுப்பினர் எஸ். வரதராஜன் தலைமை தாங்கியிருந்தார். “”அரசு மற்றும் அகில இந்தியப் பணிகளில் சிறுபான்மையோர், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களின் மக்கள் தொகை வீதத்திற்கும் இந்தப் பங்களிப்பிற்கும் எந்தப் பொருத்தமும் இல்லை. இந்த அநீதியைக் களைவதற்கு (அரசு தரப்பில்) எந்த உருப்படியான காரியமும் மேற்கொள்ளப்படவில்லை” என வழக்கம்போல் இந்தக் குழுவும் புலம்பியிருந்தது.

“சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் ஆகியும்கூட பொதுப்பணிகளில் சிறுபான்மையோருக்கு உரிய பங்கு அளிப்பதில் இந்த அளவிற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதால் இந்நிலைமையை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசு அதிக அளவு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்” எனவும் இது கோரியிருந்தது.

1998 / 99 ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையோர் ஆணைய அறிக்கை, “மத்திய அரசின் கீழுள்ள எல்லா பொதுப் பணிகளிலும் சிறுபான்மையோருக்கு 15 சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்குப் 10 சதம், பிற சிறுபான்மை யோருக்கு 5 சதம் என இது பிரித்தளிக்கப்பட வேண்டும். கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற நெறிமுறைகளை எல்லா அரசு, மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் வேலைத் தேர்வு அதிகாரிகளுக்கும் அமைப்புகளுக்கும் அளிப்பது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெளிவான பரிந்துரையை வழங்கியது. எனினும், இந்த அறிக்கைகளுங்கூட போபால் சிங் குழு அறிக்கைக்கு நேர்ந்த கதியைத்தான் சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில்தான் சென்ற மார்ச் 9, 2005ல் புதிதாக அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, “முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பின் தங்கிய நிலைகளை ஆய்வு செய்ய’ பிரதமரின் உயர்மட்டக்குழு ஒன்றை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமையில் நியமித்தது. சச்சாரையும், சேர்த்து ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் மனித வளங்கள் குறித்த ஆய்வுகளில் வல்லுனரான டாக்டர் அபூ சலீம் ஷெரீஃப் உறுப்பினர் செயலராகப் பணியாற்றினார். அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் சகல தரவுகளையும் பெறும் அதிகாரம் இக்குழுவுக்கு வழங்கப்பட்டது.

“பாதுகாப்பு, அடையாளம், சமத்துவம்” ஆகியவற்றைத் தனது அணுகல் முறையாக அறிவித்துக் கொண்ட இக்குழு, 2006 நவம்பர் 17 அன்று பிரதமரிடம் தனது அறிக்கையை அளித்தது. அடுத்த இரு வாரங்களில், நவம்பர் 30 அன்று, அது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது. 12 அத்தியாயங்கள், 427 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கை இணைய தளங்களில் முழுமையாகக் கிடைக்கிறது. கோபால் சிங் குழு அறிக்கையைப் போலன்றி இது முஸ்லிம் சிறுபான்மையோரின் நிலையைப் பற்றி மட்டுமே ஆய்வதற்காக அமைக்கப்பட்ட குழு என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மிக விரிவான தகவல்கள் உரிய முறையில் பகுத்தாய்வு செய்யப்பட்டு நிரல் படத் தொகுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, உண்மையிலேயே முஸ்லிம் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஓர் ஆவணமாக உள்ளது.

மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட, விரிவான கவனிப்பிற்கு உள்ளான ஒரு முக்கிய ஆவணம் என்கிற வகையில் ஏற்கெனவே இது பற்றி மிக விரிவாக எழுதப்பட்டு விட்டது. நானே விரிவான ஒரு நூலும் சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். எனவே சச்சார் குழு குறித்த விரிவான அலசலை இங்கு தவிர்ப்போம். எனினும், இந்த அறிக்கை குறித்த ஒரு சில முக்கிய அவதானிப்புகளை மட்டும் இங்கே பதிவு செய்யலாம்.

  1. பலரும் நம்புவதுபோல் இது வெறும் ஒரு இடஒதுக்கீட்டிற்கான அறிக்கை அல்ல. சொல்லப்போனால் இதன் மீது சிலரால் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, இது உறுதியான இடஒதுக்கீட்டுப் பரிந்துரை எதையும் செய்யவில்லை என்பதுதான். இடஒதுக்கீடு என்பதெல்லாம் அரசியல்வாதிகள் பேசுகிற பம்மாத்துகள். எங்கே இருக்கிறது, இடம் ஒதுக்கீடு செய்ய என்கிற ரீதியில் பேட்டி ஒன்றில் பதிலுரைத்த அபுசலீம் ஷெரிப், எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களைப் பிற சமூகங்களுக்கு இணையாகக் கொண்டு வருதலில் இடஒதுக்கீடு ஓரங்கம் மட்டுமே என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் பன்மைத்தன்மை சகல நிறுவனங்களிலும் பிரதிபலிக்கப்படுவது; இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அறிவியல், தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சியில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை ஏற்படுத்தித் தருவது பரிந்துரைகளைச் செய்வதே சச்சார் அறிக்கையின் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  2. இந்த நோக்கில் சமூகத்தின் பன்மைத்துவத்தை மதிப்பிடும் “பன்மைத்துவ குறியெண்’ (ஈடிதிஞுணூண்டிtதூ ஐணஞீஞுது) ஒன்றை உருவாக்குவது, பன்மைத்துவம் மற்றும் முஸ்லிம்கள் ஒதுக்கப்படுதல் குறித்து அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உணர்வூட்டுவது, உயர் கல்வியில் பன்மைத்துவத்தை நிலைநாட்டும் வண்ணம் மாற்றுச் சேர்க்கை அளவுகோல்களை உருவாக்குவது, சிறுபான்மையோர் குறித்த தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவது, தனியார் துறைகள் உள்ளிட்டு உறுதியாக்க நடவடிக்கைகளை (அஞூஞூடிணூட்ச்tடிதிஞு ச்ஞிtடிணிண) மேற் கொள்வது, பிரிட்டனில் இருப்பதுபோல் “சமவாய்ப்பு ஆணையம்’ (உணுதச்டூ Oணீணீணிணூtதணடிtதூ இணிட்ட்டிண்ண்டிணிண) ஒன்றை உருவாக்குவது, மதரஸா கல்வி முறையை நவீனமயமாக்குவதோடு பொதுக்கல்வியுடன் இணைப்பது, பாட நூல்களின் உள்ளுறையை மதிப்பிடுவதற்கான சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை உருவாக்குவது, முஸ்லிம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார ரீதியில் சுருங்குவதைத் (எடஞுttணிடிண்ச்tடிணிண) தடுக்கும் வகையில் சிவில் சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக் காட்டுவது என்கிற வகையில் பரிந்துரைகளைச் சச்சார் குழு மேற் கொண்டுள்ளது. குறிப்பாக, தலித் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரைப் பற்றி அது பேசுகிறது.
  3. முஸ்லிம்கள் குறித்த பொய்களைப் பரப்பியே அரசியல் நடத்தும் ஃபாசிஸ சக்திகளின் பல கட்டுக்கதைகளைத் தகர்க்கும் வண்ணம் ஏராளமான தரவுகளைச் சச்சார் குழு தொகுத்துள்ளது. அதேபோல் முஸ்லிம் சமூகம் சற்றே தன்னை உள்நோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கான சில புள்ளிகளையும் அது சுட்டுகிறது.
  4. விரிவாகத் தரவுகள் தொகுக்கப்பட்டிருந்தபோதும் பகுப்பாய்வு இன்னும் கூர்மையாகச் செய்யப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களின் இன்றைய முக்கிய கவலையான பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அரசுத் தலையீடு தொடர்பான பரிந்துரைகளை இன்னும் துல்லியமாகச் செய்திருக்கலாம். முஸ்லிம் பெண்கள் குறித்த போதுமான அக்கறை காட்டப்படவில்லை முதலியன இவ்வறிக்கை மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் சில.

மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை இது. இதன் கதி என்னவாகிக் கொண்டுள்ளது என்பதை நாம் நேரிலேயே அவதானித்துக் கொண்டிருக்கிறோம். இதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை அறிக்கை (அகூகீ) ஒன்றையும் அரசு சமர்ப்பித்துள்ளது. ஆனால், என்ன பலன்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்கிற கேள்வியை நாம் எழுப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதை ஒட்டி வெளியிடப்பட்ட “மத மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம், ரங்கனாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை முதலியவற்றை இனி பார்க்கலாம்.

3. ரங்கநாத்மிஸ்ரா ஆணைய அறிக்கை

கோபால் சிங் ஆணையம் தன் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குச் சரியாக ஒரு மாதம் முன்னதாக (1983 மே) அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சிறுபான்மையோரின் வளர்ச்சி தொடர்பாக 15 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றைக் கொண்ட கடிதத்தை மாநில முதல்வர்களுக்கு அனுப்பினார். “சிறுபான்மையோர் நலனுக்காக பிரதமரின் 15 அம்சத் திட்டம்’ என அழைக்கப்படும் இந்தத் திட்ட அம்சங்களுக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்து 1985 ஆகஸ்ட் 25ல் பிரதமர் ராஜீவ் காந்தியும் முதல்வர்களுக்கு எழுதினார்.

முஸ்லிம்களின் ஆதரவோடு ஆட்சியமைத்த மன்மோகன் அரசு, பதவி ஏற்ற கையோடு சச்சார் குழுவை நியமித்ததை அறிவோம். சச்சார் தம் அறிக்கையை அளித்த அதே நேரத்தில் மீண்டும் ஒரு முறை பிரதமர் மன்மோகன் சிங் 15 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.

பழைய 15 அம்சத் திட்டத்தை “”மீளாய்வு செய்து சிறுபான்மையோரின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுடன் நெருக்கமான தொடர்புடைய நடவடிக்கைகளில் கவனம் குவிக்கும் வண்ணம்” அதற்குப் “புதிய வடிவு’ கொடுக்கப்பட்டுள்ளது என்கிற முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்தத் திட்டத்தின் முழு வடிவையும் தமிழாக்கி எனது “சச்சார் குழு அறிக்கை’ நூலில் இணைத்துள்ளேன் (பக். 101108).

வகுப்புக் கலவரங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர் நீக்கும் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்குத் திருத்தப்பட்ட இத்திட்டத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும், அதே நேரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுபான்மையினரை மேம்படுத்துவதுடன் தொடர்புடைய கூடுதலான சில அம்சங்கள் (வேலை, கல்வி வாய்ப்புகள் அளிப்பது, வாழ்க்கைச் சூழலை வளப் படுத்துவது முதலியன) இங்கு புதிதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் அதன் முன்னுரை பகன்றது.

இந்த 15 அம்சத் திட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, எல்லாச் சிறுபான்மையினருக்குமானது என்பது குறிப்பிடத்தக்கது. 2001 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவிலுள் எல்லாச் சிறுபான்மையினரும் மொத்தத்தில் 19.5 சதம் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கள்தொகை 13.4 சதம் என்றால் மொத்தச் சிறுபான்மையினரில் முஸ்லிம்களின் பங்கு 68.7 சதமாகிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் “பட்ஜெட்’ ஒதுக்கீட்டில் 15 சதத்தை இத்திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். எனவே, அந்த வகையில் இவ்வாறு இத்திட்டத்திற்கு செலவிடப்படும் தொகையில் சுமர் 68.7 சதம் முஸ்லிம்களைச் சென்றடைய வேண்டும்.

சச்சார் குழு அறிக்கை கவனத்தில் கொள்ளாத பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் இத்திட்டம் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. வேலை மற்றும் கல்விக்கான தேர்வுக் குழுக்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் உரிய அளவில் இடம்பெற வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை அறிவுறுத்துகிறது. காவல்துறை, இராணுவம், துணை இராணுவம் ஆகியவற்றிலும் உரிய அளவில் சிறுபான்மையோர் இடம்பெற வேண்டியதையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது. வங்கிக் கடன்களில் 15 சதம் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதும் இத்திட்டப் பரிந்துரைகளில் ஒன்று. இவ்வாறு அளிக்கப்படுவதில் பெரும்பான்மை (68.7 சதம்) முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

மன்மோகன் சிங் அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் “மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்’ ஒன்றையும் சென்ற மார்ச் 15, 2005 அன்று நியமித்தது. தேசியச் சிறுபான்மையோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேரா. தாஹித் முஹம்மது, முனைவர் அனில் வில்சன் (டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர்), முனைவர் மொஹின்தர் சிங் (பஞ்சாபி ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர்), ஆஷாதாஸ் (உறுப்பினர், செயலர்) ஆகியோர் அடங்கிய இக்குழு, தனது அறிக்கையை மே 22, 2007 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே குஇ/குகூ அட்டவணைப் பட்டியலில் ஏற்க வேண்டும் என்கிற 1950ம் ஆண்டு குடியரசுத் தலைவரது ஆணையில் மூன்றாம் பத்தியை நீக்க வேண்டும் என்கிற ஜனநாயகக் கோரிக்கையை ஏற்றுத் தன் பரிந்துரையை வழங்கியுள்ளது இவ்வாணையம்.

இவ்வாணையத்தின் முக்கியப் பரிந்துரைகளின் சுருக்கத்தை மட்டும் இனி பார்க்கலாம்:

ஐ) மத மற்றும் மொழிச் சிறுபான்மையோரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை அடையாளம் காணுவதற்கான அளவுகோல்:

16.15: இந்தப் பிரச்சினையில் எங்களது பரிந்துரை என்னவெனில், பின்தங்கிய பிரிவினை அடையாளம் காண்பதில் பெரும்பான்மைச் சமூகத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்திற்கும் எந்த அம்சத்திலும் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. எனவே இந்த நோக்கத்திற்காக, பெரும்பான்மைச் சமூகத்தில் கடைபிடிக்கும் அதே அளவுகோலை, அது எந்த அளவுகோலாக இருந்த போதிலும், அதை எந்தத் தயக்கமும் இல்லாமல் சிறுபான்மைச் சமூகத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.

இதனுடைய இயல்பான துணைப் பரிந்துரையாக, கீழ்க்கண்ட பரிந்துரையை வழங்குகிறோம். இன்றைய நடைமுறைகளின்படி பெரும்பான்மைச் சமூகத்தில் யாரெல்லாம் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்படுகின்றனரோ அவர்களுக்கு இணையாகச் சிறுபான்மைச் சமூகங்களில் இருப்பவர்களும் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்பட வேண்டும்.

16.18: இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், தமது மத அடையாளத்தின் காரணமாகவே, பட்டியல் சாதியினராகக் (குஇ) கருதப்படாமலிருக்கிற சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த சமூக மற்றும் தொழிற் பிரிவுகள் அனைத்தும், அவர்களது மதங்கள் சாதி முறையை அங்கீகரித்தாலும் சரி, அங்கீகரிக்காவிட்டாலும் சரி, இன்றைய நடைமுறைகளில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட வேண்டும்.

16.19: அதேபோல பழங்குடியினரிலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் பழங்குடியினராகக் கருதப்பட வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து பழங்குடிப் பகுதிகளில் வசித்துவரும் சிறுபான்மைச் சமூகத்தினர் அவர்களின் இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

ஐஐ) இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறுபான்மையோருக்கான நலத்திட்டங்கள்:

பொது நல நடவடிக்கைகள்

அ. கல்வித்துறை நடவடிக்கைகள்

16.2.4: பல்வேறுபட்ட, சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரணான நீதித்துறை விளக்கங்களின் ஊடாக சிறுபான்மையோரின் கல்வி உரிமையை வரையறுக்கும் அரசியல் சட்டத்தின் 30ம் பிரிவின் பொருளும் எல்லையும் தெளிவற்றுப் போய்விட்டதால், அரசியல் சட்ட உருவாக்கத்தின்போது கொண்டிருந்த பொருளை (Oணூடிஞ்டிணச்டூ ஞீடிஞிtச்tஞுண்) மறு உறுதி செய்யும் வகையில் சிறுபான்மையினரின் கல்வி சார்ந்த அனைத்து உரிமைகளையும் மீள அளிப்பதற்குரிய வகையில் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சட்டம் ஒன்றை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்.

16.2.5: அரசியல் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா எனக் கவனித்துச் செயற்படுத்தும் வகையில் தேசியச் சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆணையத்தின் உள்ளடக்கம், அதிகாரம், செயற்பாடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்தி அதன் விதிகளைத் (குtச்tதஞுண்) திருத்த வேண்டும்.

16.2.6: தேசிய ஒருமைப்பாட்டு நோக்கிலிந்து நீதிமன்றங்கள் வழங்கிய ஆணைகளின்படி, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தவர்களின் எண்ணிக்கை 50 சதத்தை மிகக் கூடாது என்றுள்ளது. அதாவது எஞ்சியுள்ள 50 சதமும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு அளிக்கப்படுகிறது. எனவே  இதே அணுகுமுறையின் அடிப்படையில், சிறுபான்மையோர் அல்லாத எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் 15 சத இடங்கள் சிறுபான்மையினருக்கென கீழ்க்கண்டவாறு ஒதுக்கப்பட வேண்டுமென நாங்கள் அழுத்தமாக வற்புறுத்துகிறோம்.

(ச்) இவ்வாறு ஒதுக்கப்படும் 15 சத இடங்களில் முஸ்லிம்களுக்கு 10 சத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் (மொத்த சிறுபான்மையோரில் 73 சதத்தினர் முஸ்லிம்கள் என்பதால்), எஞ்சியுள்ள 5 சதம் பிற சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட வேண்டும்.

(ஞ) இந்த 15 சத ஒதுக்கீட்டில் சிறிய மாறுதல்களை (ச்ஞீடீதண்tட்ஞுணt) செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் இல்லையெனில், மிஞ்சுகிற காலியிடங்களை, பிற சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோர் இடம் கிடைக்காதிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒதுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ஒதுக்கப்பட்ட 15 சத இடங்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கக் கூடாது.

(ஞி) பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் கடைபிடிக்கப்படுவதுபோல, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தம் தகுதி அடிப்படையில் மற்றவர்களுடன் போட்டியிட்டு (பொது ஒதுக்கீட்டில்) இடம்பெற்றிருந்தார்கள் ஆயின், இந்த 15 சத ஒதுக்கீட்டில் அவர்களைக் கணக்கிலெடுக்கக் கூடாது.

16.2.7: பட்டியல் சாதியினர் பழங்குடியினருக்குத் தற்போது குறைந்த மதிப்பெண் தகுதி, குறைந்த கட்டணம் ஆகிய சலுகைகள் வழங்கியது சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பின்தங்கியவர்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.

16.2.8: தேசிய அளவில் சிறுபான்மையினருள் அதிகமாக இருப்பவர்களும், நாடளவில் பரந்து இருப்பவர்களுமான முஸ்லிம்களே எல்லா மதத்தினரிலும் கல்வியில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளதால், அவர்களுக்கு சில குறிப்பான பரிந்துரைகளைக் கீழ்க்கண்டவாறு செய்கிறோம்.

(ஐ) “அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்’, “ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சிறப்புப் பொறுப்புகள் சிலவற்றை சட்டப்பூர்வமாக அளித்து முஸ்லிம் மாணவர்களின் கல்வியை எல்லா மட்டங்களிலும் அதிகப்படுத்த சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓரளவு முஸ்லிம்கள் நிறைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு நிறுவனமேனும் இவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும்.

(தி) மவுலானா ஆஸாத் கல்வி நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு வினியோகிக்கப்படும் நிதியில், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை வீதத்திற்கு ஏற்ப பொருத்தமான அளவு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஏற்கெனவே உள்ள முஸ்லிம் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது தவிர, நர்சரி வகுப்புகளிலிருந்து உயர்மட்ட கல்வி வரையிலான நிறுவனங்களையும், தொழிற்கல்வி நிறுவனங்களையும் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் இந்தியா முழுமையிலும் புதிதாக உருவாக்குவதற்கும் உதவி செய்ய வேண்டும்.

(திடி) அங்கன்வாடிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் இதுபோன்ற இதர நிறுவனங்களை அவ்வவ் திட்டங்களின் கீழ் திறக்க வேண்டும். சிறப்பாக முஸ்லிம்கள் செறிவாக உள்ள பகுதிகளில் இவற்றை உருவாக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகிற முஸ்லிம் குடும்பங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

16.2.9: மொழிச் சிறுபான்மையினரைப் பொருத்தமட்டில் கீழ்க்கண்ட பரிந்துரைகளைச் செய்கிறோம்:

(ச்) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள மொழிச் சிறுபான்மையினருக்கு, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நலன்களை முழுமையாக நிறைவேற்றுவதற்குப் பொறுப்பேற்கும் வகையில் “மொழிச் சிறுபான்மையர் ஆணையம்’ தொடர்பான சட்டத்தைத் திருத்த வேண்டும்.

(ஞ) மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமுலாக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் தாய் மொழியையும், குறிப்பாக உருது, பஞ்சாபி மொழிகளைக் கட்டாயமாகப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதற்கேற்றவகையில் நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தர வேண்டும்.

ஆ. பொருளாதார நடவடிக்கைகள்:

16.2.10: சிறுபான்மையோரில் பல குழுக்கள் சில குறிப்பிட்ட குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய தொழில்களை வளர்ப்பதற்கும் நவீனப்படுத்துவதற்கும் திறனுடன் செயல்படும் அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரை செய்கிறோம். சிறுபான்மையினர் மத்தியிலுள்ள கைவினைஞர்கள் மற்றும் தொழிற்பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இத்தகைய தொழில்கள், கைவினைஞர்கள் மற்றும் பணியாளர்களின் வளர்ச்சிக்கான உதவிகளைச் செய்வது உடனடித் தேவையாக உள்ளது.

16.2.11: நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்களும், வேறு சில சிறுபான்மையினரும் விவசாயத்துறையில் அதிகமாக இல்லை என்பதால் அவர்கள் மத்தியில் விவசாய வளர்ச்சி, விவசாய வணிகம், விவசாயப் பொருளாதாரம் முதலியவற்றை வளர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.2.12: எல்லா வகையான சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமான உருவாக்கத் திட்டங்களைச் சிறுபான்மையினர் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் அதன்மூலம் அவர்கள் பயனடைவதற்கும் ஏற்ற திறன் மிக்க வழிமுறைகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.2.13: தேசியச் சிறுபான்மை வளர்ச்சி நிதி மறு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கையின் வெளிச்சத்திலும், தேசிய சிறுபான்மை ஆணையத்தைக் கலந்து கொண்டும், “தேசியச் சிறுபான்மை வளர்ச்சி நிதி நிறுவனத்தின்’ (NMஈஊஇ) விதிகள், நெறிமுறைகள், நடைமுறைகள் ஆகியவற்றை முன்னுரிமை அளித்துச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம். நிதி உதவிகள் மேலும் சிறப்பாகவும், திறமையாகவும், சிறுபான்மையினரை முழுமையாகச் சென்றடையும் நோக்கில் இது செய்யப்பட வேண்டும்.

16.2.14: கிராமப்புற வேலை உருவாக்கத் திட்டம், பிரதமரது “ரோஸ்கார் யோஜனா’ மற்றும் “கிராமின் ரோஸ்கார் யோஜனா’ முதலான அரசுத் திட்டங்கள் அனைத்திலும் 15 சதத்தைச் சிறுபான்மையினருக்காக ஒதுக்க வேண்டுமென நாங்கள் மேலும் பரிந்துரைக்கிறோம். தேசிய அளவிலுள்ள மொத்தச் சிறுபான்மையோரில் முஸ்லிம்கள் 73 வீதம் இருப்பதால் இந்த 15 சதத்தில் 10 சதத்தை முஸ்லிம்கள் பயனடையுமாறும் மீதியுள்ள 5 சதத்தை மற்ற சிறுபான்மையினர் பயனடையுமாறும் ஒதுக்க வேண்டும்.

4. ரங்கநாத்மிஸ்ராவின் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகள்

misra

16.2.15: அரசுப் பணியில் சிறுபான்மையோர் குறிப்பாக, முஸ்லிம்கள் போதிய அளவும், சிலதுறைகளில் முற்றிலும் இடம்பெற்றாதுள்ளதால், அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவின் வரையறைக்குட்பட்ட வகையில் அவர்களை இவ்வகையில் பிற்பட்டவர்களாகக் கருதவேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம். “கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும்’ என்கிற ரீதியில் நிபந்தனைப்படுத்தாமல் பிற்பட்டவர்களாக இவர்கள் கருதப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய மாநில அரசுப் பணிகளின் எல்லா மட்டங்களிலும் கீழ்க்கண்டவாறு 15சத ஒதுக்கீடு அளிக்க வேண்டும்:

(அ) இந்தப் 15சத ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 10சதம் (மொத்தச் சிறுபான்மையினரில் அவர்கள் 73 சதமாக இருப்பதால்), எஞ்சியுள்ள சிறுபான்மையினருக்கு 5 சதம் என இது பிரித்தளிக்கப்பட வேண்டும்.

(ஆ) இந்தப் 15 சதத்திற்குள் சிறிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்ய முஸ்லிம்கள் தகுதியாக இல்லாத பட்சத்தில், இவ்வாறு எஞ்சுகிற பதவிகளைப் பிற சிறுபான்மையினரில் தகுதி உடையோர் இருந்தால் அவர்களுக்கு அளிக்கலாம். இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் 5 தசத்தை அது மிகுந்தால் பரவாயில்லை. ஆனால், எந்த நிலையிலும் இந்த 15சத ஒதுக்கீட்டிலுள்ள பதவிகள் பெரும்பான்மைச் சமூகத்திற்குச் செல்லக் கூடாது.

16.2.16: இந்தப் பரிந்துரையைச் சாத்தியப்படுத்துவதற்கு நீக்க இயலாத தடை ஏதும் இருந்தால், இதற்கு மாற்றாகக் கீழ்க்கண்ட பரிந்துரையைச் செய்கிறோம். மண்டல் குழு அறிக்கையின்படி மொத்தமுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரில் சிறுபான்மை யோரின் அளவு 8.4 சதம். எனவே, பிற்பட்டோருக்காக அளிக்கப்படும் 27 சத ஒதுக்கீட்டில் 8.4 சதம் உள்ஒதுக்கீட்டைச் சிறுபான்மையோருக்கு அளிக்கலாம். இதில் 6 சதத்தை முஸ்லிம்களுக்கும், 2.4 சதத்தை எஞ்சுகிற இதர சிறுபான்மையினருக்கும் அளிக்கலாம். வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையானால், இதில் சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

16.2.17: பழங்குடியினரைப் பொறுத்தமட்டில் (குகூ) அவர்கள் மத ரீதியில் ஒரு நிலையானவர்கள் (அதாவது எந்த மைய நீரோட்ட மதத்தையும் சாராதவர்கள்  அ.மா.) எனினும், அவர்களில் ஏதும் சிறுபான்மையோர் உள்ளார்களா என்பதைக் கவனமாக ஆராய்ந்து அதற்குத் தக இப்போது பழங்குடி யினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டில் சிறு மாற்றங்கள் செய்யத் தொடங்கலாம்.

16.2.18: இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பல்வேறு பிரிவினரில் உள்ள மேல்நிலைப் பிரிவினரை (இணூஞுச்ட்தூ ஃச்தூஞுணூ) ஒதுக்கீட்டிலிருந்து விலக்குவது குறித்து சமீபத்தில் வெளிவந்துள்ள நீதிமன்றத் தடைகள் (குஇ / குகூ பிரிவினரையும் உள்ளடக்கி) அரசு கொள்கையாக ஏற்கப்படுவது குறித்து தீவிரமாகச் சிந்திப்பது அவசியம் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.3.4: 1950ம் ஆண்டில் பட்டியல் சாதியினருக்கான அரசியல் ஆணையில் 3ம் பத்தி பட்டியல் சாதி எல்லையை முதலில் இந்துக்களுக்கு மட்டுமே சுருக்கியிருந்தது. பின்னர் அது சீக்கியர்களையும் பவுத்தர்களையும் உள்ளடக்கியது. இன்னுங்கூட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்தப் பத்தி முழுவதையும் முற்றாக நீக்கி பழங்குடி இனத்தவருக்கு (கு.கூ.) உள்ளது போல பட்டியல் சாதி வரையறையும் எல்லா மதத்தினரையும் உள்ளடக்கியதாக ஆக்கப்பட வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

16.3.5: முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களிலுள்ள எல்லா உட்பிரிவினரும் அவர்களுக்கு இணையான இந்து, சீக்கிய, பவுத்தப் பிரிவினர் குஇ/குகூ பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இப்பிரிவினரும் குஇ/குகூ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இப்பிரிவுகள் தற்போது பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தால் அதிலிருந்து நீக்கி குஇ/குகூ பட்டியலில் சேர்க்க வேண்டும் (எடுத்துக்காட்டு: முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ தலித் ஒருவர் தற்போது Oஆஇ பட்டியலில் இருந்தால் அவர் குஇ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.  அ.மா.).

16.3.6: மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் முதலானவற்றை நமது அரசியல் சட்டம் அடிப்படை உரிமைகளாக ஏற்றிருப்பதால் ஒருவர் குஇ பட்டியலில் ஒருமுறை சேர்க்கப்பட்டால் பின்பு அவர் விருப்பப் பூர்வமாக இன்னொரு மதத்தைத் தேர்வு செய்தால் அது அவரது பட்டியல் சாதிநிலையை மாற்றாது. (எடுத்துக்காட்டு: தலித் ஒருவர் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் அவர் தொடர்ந்து குஇ பட்டியலிலேயே இருந்து பயன்பெறலாம்.  அ.மா.)

16.4.2: இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு இருக்கிற மத்திய, மாநிலச் சட்டங்கள், விதிமுறைகள், நெறிமுறைகள் எதையேனும் திருத்தியமைக்க வேண்டும் என சட்ட அமைச்சகமோ, அல்லது தொடர்புடைய எந்தத் துறையோ கருத்து தெரிவித்தால் தகுந்த வடிவில் அத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம்.

16.4.3: எங்கள் பரிந்துரைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்குக் கீழ்கண்ட சட்ட நடவடிக்கைகள் தேவைப்படும் என நாங்கள் கருதுவதால் அவற்றைச் செய்ய வேண்டுமெனப் பரிந்துரைக்கிறோம்.

(அ) அரசியல் சட்டத்தின் 30ம் பிரிவை நடைமுறைப்படுத்துவதற்குரிய விரிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

(ஆ) 1993ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.

(இ) 1950ம் ஆண்டு பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ஆணையில் திருத்தம்; 1951ம் ஆண்டு பட்டியல் பழங்குடியினருக்கான அரசியல் சட்ட ஆணையில் திருத்தம்; மற்றும் மத்திய, மாநில குஇ/குகூ பட்டியல்களில் திருத்தம் முதலியன செய்யப்பட வேண்டும்.

(ஈ) மத்திய, மாநில அளவுகளில் Oஆஇ தேர்வு மற்றும் அறிவிப்பு குறித்த சட்டங்கள், விதிகள், நடைமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டும்.

(உ) 1983ல் உருவாக்கப்பட்டு 2006ல் திருத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தை சட்டநிலைப்படுத்தி, நீதிமன்றங்களின் மூலம் பரிசீலிக்கப்படுவதற்குரிய வகையில் சட்டமாக்க வேண்டும்.

(ஊ) தேசிய மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுவதைப்போல, தேசியச் சிறுபான்மையோர் ஆணையத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்திற்கும் தலைவர்களை ஒரு தேடுதல் குழுவின் மூலம் தேர்வு செய்யும் வண்ணம் இந்த ஆணையங்களுக்கான சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். அரசியல் சட்டம், கல்வி, பொருளாதாரம் முதலான துறைகளில் துறைபோன அறிஞர்கள் இடம் பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

(எ) 1993ம் ஆண்டு வக்ஃப் சட்டத்திலும் அதனடியாக நிறைவேற்றப்பட்ட விதிகளிலும் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்.

(ஐ) தேசிய சிறுபான்மையோர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனம் மற்றும் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு ஆகியவற்றின் விதிகள், சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்குள்ளாக்க உரிய திருத்தங்கள் செய்தல் வேண்டும்.

16.4.4: சிறுபான்மையோரின் நலன்களுக்காகச் செய்யப்பட்டுள்ள எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கீழ்க்கண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

(அ) சிறுபான்மையோர் தொடர்பான சட்டப் பிரச்சினைகளை அரசியல் சட்ட வெளிச்சத்தில் பரிசீலிக்க ஒரு பாராளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.

(ஆ) சிறுபான்மையோரின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கண்காணிக்க Nஏகீஇ, Nஇஙி, Nஇஆஇ, NஇM, Nஇகுஇ, NஇMஉஐ, NMஊஈஇ, இஃM, மத்திய வக்ஃப் கவுன்சில், மவுலானா ஆசாத் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

(இ) மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவிலும் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி அதில் சிறுபான்மையோர் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மாநில அதிகாரிகள், வல்லுனர்களையும் உள்ளடக்க வேண்டும்.

(ஈ) சிறுபான்மையினருக்கான கடன் வசதிகள் செயல்படுவது குறித்துக் கண்காணிக்க எல்லா தேசிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி அதை ரிசர்வ் வங்கியின் கீழிருந்து செயல்படச் செய்ய வேண்டும்.

(உ) எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அவற்றில் மாநில சிறுபான்மையோர் ஆணையம் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறைகள் இல்லாத பட்சத்தில் அவற்றைப் புதிதாக உருவாக்க வேண்டும்.

(ஊ) சிறுபான்மையோர் தொடர்பான நலத்திட்டங்கள் மாவட்ட அளவில் அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுவதற்கேற்ப இவை தொடர்பான அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் (ஈஞுஞிஞுணtணூச்டூடிண்ச்tடிணிண).

(எ) 1990ல் தேசிய சிறுபான்மையோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி சிறுபான்மையோர் அதிகமாகச் செறிந்துள்ள மாவட்டங்கள் குறித்த பட்டியலை மறுபரிசீலனை செய்து இங்கெல்லாம் உள்ளூர் நிர்வாகங்களைக் கொண்டு கல்வி, பொருளாதாரம் மற்றும் பொதுநலம் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(ஏ) சிறுபான்மையோர் நலனுக்காகச் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், மத்திய  மாநில சிறுபான்மையோர் ஆணையங்கள் எல்லாம் சந்திக்கும் குவி மையங்களாக எல்லா மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வல்லுனர்கள் அடங்கிய சிறுபான்மையோர் நலக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சச்சார் குழு அறிக்கை மிக விரிந்த தளத்தில் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குகிறது என்றால் ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் உடனடியாகச் செய்ய வேண்டியவற்றையும் தடையாக உள்ள சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களையும் நிர்வாக நடவடிக்கைகளையும் தொகுப்பாகவும், சுருக்கமாகவும் (இணிட்ணீணூஞுடஞுணண்டிதிஞு) சொல்லிவிடுகிறது.

எனினும் இந்த அறிக்கையை முறையாக விவாதித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சி எதையும் அரசு செய்யவில்லை. “மதக்கலவரத் தடுப்பு மசோதா’வையும்கூட அறிமுகப்படுத்தியதோடு சரி. சிறுபான்மையினருக்கு இப்படியான ஆணைய நியமனங்களும், அறிக்கை வெளியீடுகளும், மசோதாக்கள் தாக்கல் செய்வதும் மட்டும்போதும் என அரசு நினைக்கிறது. நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில்லை. யாரேனும் முயற்சித்தாலும் அதற்குத் தடை போடப்படுவது வாடிக்கை யாகி விடுகிறது.

பிரதமரின் 15 அம்சத் திட்டப்படி மொத்த வங்கிக் கடன்களில் 15 சதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்குவது தொடர்பாக பலமுறை பிரதமர் அலுவலகத்திலிருந்து நிதியமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பியும் ப. சிதம்பரத்தின் அமைச்சகம் அதைக்கண்டு கொள்ளாததை பாராளுமன்றத்தில் பிருந்தா காரத் அம்பலப்படுத்தியது (2007, ஜனவரி 28 ஆங்கில இதழ்கள் அனைத்திலும் இச் செய்தி வந்துளளது) நினைவிருக்கலாம்.

நாம் விழிப்புடன் இருப்பதொன்றே நமது உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே வழி.

(பிப்ரவரி 2009ல் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி’ தொடக்க விழாக் கருத்தரங்கில் பேசிய உரை. ‘சமநிலைச் சமுதாயம்’ 2009 ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்டு இதழ்களில் வெளிவந்தது.)