மோடி அரசு பாசிச அரசா இல்லையா?

மோடி அரசை ‘டெக்னிசல்’ ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியுள்ளார். சிலநாட்கள் முன் பிரகாஷ் காரத் இதையே கூறியது நினைவிருக்கலாம். வெண்டுமெனில் ‘வலதுசாரி எதேச்சிகார அரசு’ எனக் கூறலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

இன்று யெச்சூரியும் ஃபாசிஸ்ட் அரசு எனச் சொல்லக்கூடாது எனவும் ,ஆனால் பா.ஜ.க என்பது RSS ன் அரசியல் கிளை எனவும், RSS ஃபாசிச திட்டங்களுடன் செயல்படும் அமைப்பு என்றும் கூறியுள்ளார்.

காரட்டும் யெச்சூரியும் சொல்வது வேண்டுமானால் டெக்னிகல் ஆகச் சரியாக இருக்கலாம். அதாவது 1930 களில் ஐரோப்பாவில் உருவான Classical fascism த்தின் அத்தனை கூறுகளும் அப்படியே இன்றும் இங்கு நிலவாமல் இருக்கலாம். ஆனால் இதற்கிடையில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரிய அளவில் உலகம் மாறிவிட்டது. இனி Classical fascism எங்கும் சாத்தியமில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காலம், இடம் ஆகியவற்றைப் பொருத்து fascism ம் தன் வடிவத்தைத் தகவமைத்துக் கொள்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்ஸ் காலத்திய உலக முதலாளியம் லெனின் காலத்தில் ஏகாதிபத்தியம் ஆகவும், இன்று neo imperialism ஆகவும் வெளிப்படவில்லையா?

காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல்

என்ன செய்ய வேண்டும்?

NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை..

காஷ்மீர்  ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீது பாக் ஆதரவு ஃபிதாயீன் களின் எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு நம் அனுதாபங்கள்.

2002 கலூசக் தக்குதலுக்குப் பிந்திய பெரிய தாக்குதல் இது. இதை ஒட்டி வழக்கம்போல இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே முற்றியிருந்த பகை இன்று இன்னும் மோசமாகியுள்ளது. வழக்கம்போல இரு தரப்பிலும் கடும் பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. அணுவல்லமை உடைய இரு நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இந்த ஆபத்தான உரசல் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.

இரண்டுமாதங்களுக்கு மேலாகியும் காஷ்மீரில் அமைதியை உருவாக்க இயலாத சூழலில் இது நிகழ்வது கவலையை இன்னும் அதிகமாக்குகிறது. 2003 – 2008 காலகட்டத்தில் இங்கு தீவிரவாதம் ஓய்ந்திருந்த நிலையில் அரசியல் தீர்வை நோக்கிய முயற்சியில் இந்திய அரசு இறங்காததன் விளைவு இன்று அங்கு மீண்டும் இந்த நிலை உருவாகியுள்ளது. வெறும் இராணுவ நடவடிக்கைகள் மூலமான தீர்வு எனும் அணுகுமுறையைத் தாண்டி இதர அரசியல் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை இந்திய அரசு அணுக இயலாத சூழலில் இன்றைய பாக் ஆதரவு ஃபிடாயீன்களின் தாக்குதலும் நடந்து பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரை கவனத்துக்குரிய ஒன்று. இதை எழுதியுள்ள ஏ.எஸ்.துலத் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவராகவும் பிரதமர் அலுவலகத்தில் காஷ்மீர் விவகார ஆலோசகராகவும் இருந்தவர்.

பேச்சு, பேச்சு…… பேச்சு ஒன்றுதான் இத்தகைய தருணங்களில் ஒரே சரியான அணுகல்முறையாக இருக்க முடியும். இதுபோன்ற முந்தைய தருணங்களில் நான் எழுதிய கட்டுரைகள் சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்றைய ஹின்டு நாளிதழ்க் கட்டுரையில் இந்த ஆசிரியரும் இதைத்தான் சொல்கிறார். பேச்சு வார்த்தைகளுக்கான சாத்தியங்களையே நாம் முன்னெடுக்க வேண்டும் என்கிறார்.

சிலர் பயங்கரவாதிகள் மீது “துல்லியமான தாக்குதல்கள்” (surgical attacks) எனும் கருத்தை முன்வைக்கினர். போர் விரும்பிகளின் இந்தக் கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இக்கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு மியான்மரில் இருந்துகொண்டு செயல்படுஇம் வடகிழக்கு மாநிலத் தீவிரவாதிகள் மீது இந்தியப் படைகள் இப்படியான தாக்குதலை நடத்தின. இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகள் இருந்ததால் அது பிரச்சினை ஆகவில்லை. ஆனால் இப்போது பாக்கில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது அத்தகைய தாக்குதல்களைச் செய்தால், இரண்டு நாடுகளுக்கிடையே பகைச் சூழல் நிலவும் பின்னணியில் அது உகந்ததல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆக, உடனடியாகச் செய்யக் கூடியது இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்[பு ஆலோசகர்களும் (NSA) சந்தித்து உடனடியாகப் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் கருத்து.

படித்துப் பாருங்கள்.

http://www.thehindu.com/opinion/op-ed/uri-is-a-serious-provocation-by-pakistan-two-nsas-must-meet/article9125019.ece

ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும்

(நேற்று நான் ‘நியூஸ் 7″ தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்)

1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும் முயற்சியிலிம் இருந்தனர். இந்நிலையில் காவல்துறை இந்த முரண்களை விளக்கவோ இல்லை அது குறித்து விசாரிக்கவோ தயாராக இல்லை. முரண்களைச் சுட்டிக் காட்டியவர்களே இலக்காக்ககப்பட்டனர். இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த இளைஞர் திலீபன் மீது வழக்குப் போடப்பட்டது. ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என ஊகங்கள் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது.. ஒரு சாதாரண ‘சில்க் ஒயரை’ பல்லால் கடித்து உள்ளே உள்ள கம்பியை வெளியே எடுக்கவே சில நிமிடங்கள் ஆகிறது. தற்கொலை மனநிலையுடன் இருந்த ஒரு இளம் கைதி ஓடிச் சென்று ஒரு வலிமையான ‘லைவ்’ ஒயரைப் பல்லால் கடித்துத் தற்கொலை செய்யும் வரை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பதெல்லாம் நம்பத் தகுந்ததாக இல்லை.

2.2001 முதல் 2011 வரை இங்கு NHRC யின் கவனத்துக்கு வந்த சம்பவங்களில் மட்டும் இந்தியச் சிறைகளில் கிட்டத்தட்ட 13,000 பேர் இறந்துள்ளனர். காவல் மரணங்களிலும், இவை நீதித்துறைக் காவலில் நடக்கும் மரணங்கள். இவற்றிற்கு நீதித்துறை பொறுப்பேற்க வேண்டும். அதேபோல இந்த மரணம் இன்று சிறைக்குள் நடந்தது என்றாலும் இதில் சிறைத்துறை, இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, தன்னுடைய காவலில் இருக்கும் ஒருவருக்கு நேர்ந்த சந்தேகத்துக்குரிய மரணம் பற்றிப் பொறுப்பேற்காத நீதித்துறை எல்லோரும் பொறுப்பாகிறார்கள்.

3.இம்மாதிரிக் கொலைகள் மேலிருந்து திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். ஒன்றைச் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ராஜாராம், கண்ணன் என்கிற இரண்டு பேர் தமிழ் தேசியத் தீவிரவாதிகள் என அப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருந்த சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டைருந்தனர். அவர்களைக் கொல்லப்போவதாக காவல்துறை வெளிப்படையாக மிரட்டியது. இது குறித்து அவர்கள் புகாரும் செய்திருந்தனர். ஒரு நாள் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வழக்கமான வழியில் வராமல் கோட்டூர்புறம் வழியாகக் கொண்டுவந்து ட்ராஃபிக்கை நிறுத்திவிட்டு அவர்களைச் சாலையில் இறக்கிச் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களின் உடல்களை வாங்கிக் கொள்ள மற்றுத்துப் பல மாதங்கள் அவை அழுகிக் கிடந்தன. நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆக இப்படியான கொலைகள் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை எல்லாம் சேர்ந்து நடத்துபவைதான். அப்படியான ஒன்றுதான் ராம்குமாரின் இந்த மரணமும். இது திட்டமிட்ட கொலை என ஐயம் கொள்வதற்கான எல்ல நியாயங்களும் உண்டு.

4.இங்கே வந்துள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்வதுபோல கண்டா கண்டபடி பல ஐயங்கள் முன்வைக்கப்பட்டன என்பதில் எல்லாம் பொருள் இல்லை. ஒரு இந்து முஸ்லிம் பிரச்சினையை உருவாக்குவதற்காக ஒரு சிலர் திட்டமிட்டு தென்காசியைச் சேர்ந்த கூலிப்படை ஒன்றை வைத்து சுவாதியைக் கொலை செய்ததாகவும், இந்தக் கொலையாளிகளுக்கு ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் பாதுகாப்புக் கொடுப்பதால் இதை விசாரித்த தமிழக போலீஸ் அவர்களைக் கைது செய்யாமல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்த ராம்குமாரைப் பலிகடா ஆக்குவதாகவும் ஒரு முக்கிய ஐயம் மட்டுமே இந்த திலீபன் என்பவராலும் ஃப்ரான்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவராலும் முன்வைக்கப்பட்டது. அவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என ஒரு சிலரையும் பாதுகாப்பு கொடுத்தவர் என பா.ஜக வின் இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய தலைவர் கருப்பு முருகானந்தத்தையும் பெயர் குறிப்பிட்டு எழுதினர்.  தான் எந்த விசாரணைக்கும் தயார் என அந்தத் தமிழச்சி என்பவர் எழுதியது இன்னும் வலைத்தளங்களில் இருக்கிறது. இதுதான் முக்கிய குற்றச்சாட்டு. பெயர் குறிப்பிடப்பட்ட குற்றசாட்டு. இது தவறாகவும் இருக்கலாம். சரியானதாகவும் இருக்கலாம். உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறைக்கு அக்கறை இருக்குமானால் அது என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் இந்த திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோரை விசாரித்து அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஒருவேளை குற்றம் சாட்டும் இவர்கள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்றால் இவர்கள் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? அந்தக் கருப்பு முருகானந்தம் என்பவர் இதுவரை பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர். முத்துப்பேட்டையில் நடந்த ஒரு மதக் கலவரம் தொடர்பான எங்களின் ஆய்வறிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் மீது 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தோம். அவர் இப்போது திருவாரூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த ஐயங்களை முன்வைத்த இந்த திலீபனைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். ஆக காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய ஆர்வம் காட்டவில்லை. எப்படியாவது ராம்குமாரை வைத்தே வழக்கு முடிக்கப்பட வேண்டும் என நினைத்துச் செயல்பட்டது உறுதியாகத் தெரிகிறது. இப்போது ராம்குமார் இப்படி மரணம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது, அவர் வெளியில் வந்து உண்மைகளைப் பேசினால் ஆபத்து எனக் கருதி அவர் கொல்லப்பட்டார் என ஐயம் உருவாவது தவிர்க்க இயலாதது.

5.இதுபோன்ற நிகழ்வுகளில் நீதித்துறையையும் குற்றம் சாட்டுகிறீர்கள். இப்படியானவற்றில் உங்களுக்கு நீதியே கிடைக்காதா, காவல்துறையின் தவறுகளை ஒன்றும் செய்ய முடியாதா எனக் கேட்கிறீர்கள். இதுவரை இப்படி மேலிட ஒப்புதலுடன் காவல்துறை செய்த தவறுகள் தண்டிக்கப்பட்டதில்லை. என்ன செய்தாலும் காவல்துறையினர் தண்டிக்கப்படக் கூடாது என்றே அரசு செயல்படுகிறது. அதுவும் இன்றைய ஆட்சி காவல்துறையைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது. சென்ற ஆண்டு கான்சாபுரம் கிட்டப்பா என்பவரைப் பிடித்துச் சென்று திருநெல்வேலி போலிஸ் கொன்றது. நாங்கள் அதை வெளிப்படுத்தி அறிக்கை அளித்தோம். பின்னர் NHRC அதில் தலையிட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக நாங்கள் உண்மை அறியச் சென்றபோது அந்த வழக்கை ஊற்றி மூடி மீண்டும் அவர்களைப் பணியமர்த்தும் வேலை நடந்து கொண்டிருப்பதை அறிந்தோம்.

6.இப்படியான சந்தேகங்களை உங்களால் நிறுவமுடியுமா என நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது. என்னுடைய வீட்டில் ஒரு கொலை நடந்தால் சில சந்தேகங்களை நான் முன்வைப்பேன். அதுதான் என்னால் முடியும். அதை நிறுவும் வாய்ப்புகள், கருவிகள் எல்லாம் என்னிடம் இருக்கும் எஎன்பதில்லை. காவல்துறைதான் என்னையும் விசாரித்து நான் குற்றம்சாட்டுபவர்களையும் விசாரித்து உண்மையை அறிய வேண்டும். அந்தப் பொறுப்பு investigating agency க்குத்தான் உண்டு. அவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும்.

7.இந்தப் புகார்களை முறையாகச் செய்தீர்களா என்கிறீர்கள்? முகநூலில் எழுதினேன் என்பது திலீபனின் பதில். நாங்கள் கொடுத்ததை அவர்கள் ஏற்கவில்லை எனவும், திலீபன் போன்றவர்கள் அதைப் புகாராகச் செய்திருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் வழக்குரைஞர் ராமராஜ் சொல்கிறார். இவற்றை நான் முழுமையாகச் சரி என ஏற்க இயலவில்லை. புகாரை ஏற்க மறுத்தால் பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கலாம்; email ல் அனுப்பி இருக்கலாம். உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்திருக்கலாம். நீதிமன்றத்தையும் அணுகி இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் உடனடிப் பலன் உள்ளதோ இல்லையோ இது போன்ற பதிவுகள் முக்கியம். அது நமக்குப் பின்னால் உதவும்.  அதே போல புகார் கொடுத்திருந்தால் ஆபத்து எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உள்ளோமோ அந்த அளவிற்கே நமக்குப் பாதுகாப்பு.

8.இறுதியாக: i) குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டார் எனச் சொல்லி சுவாதி கொலை வழக்கை முடிக்கக் கூடாது. சுவாதி கொலையில் வேறு சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற நியாயமான ஐயங்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்று அந்த விசாரணை சி.பிஐ இடம் ஒப்புவித்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்.. 2. சிறையில் ராம்குமார் “தற்கொலை” செய்துகொண்டார் என்பது ஐயத்துக்குரிய ஒன்றாக இருப்பதால் பணியில் உள்ள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு அவரது மரணம் விசாரிக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் – தேவைகளும் தடைகளும்

ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை:

சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்களின் பங்கு குறித்த தரவுகள் இதுவரை முறையாகத் தொகுக்கப்படவில்லை. முதன் முதலாக இந்திய முஸ்லிம்கள் குறித்த தரவுகள் ஓரளவு முழுமையாகத் தொகுக்கப்பட்டது சச்சார் குழு அறிக்கையில்தான். முஸ்லிம்கள் குறித்துப் புனையப்பட்டிருந்த பல பொய்கள் அதன் மூலம் தகர்ந்தன. எனினும் சச்சார் அறிக்கை மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று அது முஸ்லிம் பெண்கள் குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பது. பேராசிரியைகள் ஸீனத் சவுகத் அலி, ஃபரிதா லம்பே முதலானோர் இதனை அப்போதே கண்டித்தனர்.சச்சார் குழுவில் இருந்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதை புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் சீமா முஸ்தபா சுட்டிக் காட்டினார். இந்திய முஸ்லிம் பெண்களின் நிலையை முஸ்லிம் ஆண்களுடனும், பிற பெண்களுடனும் ஒப்பீட்டுத் தரவுகளை சேகரிக்க சச்சார் குழு தவறியது.

ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே நாம் சிலவற்றைச் சொல்ல முடியும். முஸ்லிம் பெண்கள் 1) முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் 2) பிற மதப் பெண்களைக் காட்டிலும் கல்வி மற்றும் ஆற்றல் படுத்தப் படுவதில் பின் தங்கி உள்ளனர் எனச் சொல்வதற்கு விரிவான ஆய்வுகள் தேவை இல்லை. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைச் சொல்லலாம். 1990 தொடங்கி அடுத்த 20 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 47 தான். மொத்தம் தேர்வு செய்யப்பட்டவர்களில் வெறும் 2.92 சதந்தான் முஸ்லிம்கள். 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் ஒரு முஸ்லிம் கூடத் தேர்வு செய்யப்படவில்லை. இது மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை. முஸ்லிம் பெண்கள் எனப் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெறும் 9 பேர்கள்தான்.

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்து முஸ்லிம்கள் மிக அதிகமாக உள்ள அசாமில் 2013ல் தான் உம்மே பர்தினா அடில் என்கிற ஒரு முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. தமிழ் நாட்டில் 1974ல் தான் யாஸ்மின் அகமது என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிந்தது. 60 சதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 2012ல் தான் முதன் முதலில் ஷெஹ்ரி டி அஸ்கர் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார், அதே ஆண்டில்தான் அம்மாநிலத்தில் ருவேதா சலம் என்கிற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். குஜராத்தில் 2012ல்தான் சாரா ரிஸ்வி என்பவர் முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்கிற பெயரைப் பெற்றார். தமிழ்நாட்டில் 2014ல் தான் முதல் ஐ.பி.எஸ் ஆனார்.

தமிழ்நாட்டில் இது வரை இரண்டே இரண்டு முஸ்லிம் பெண்களுக்குத்தான் சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. 1991 – 96 ல் அரவாக்குறிச்சி தொகுதியிலிருந்து மரியமுல் ஆசியா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2006 – 11 ல் பதர் சயீத் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். பதர் சயீத் பின்னர் வக்ஃப் வாரியத் தலைவராகவும் ஆக்கப்பட்டார். எந்த முஸ்லிம் பெண்ணும் தமிழகத்தில் அமைச்சராகும் வாய்ப்புப் பெறவில்லை.

நாடாளுமன்றத்திற்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைய 16வது நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். அவர்களில் ஆனந்த் நாக் (காஷ்மீர்) தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற மெஹ்பூபா மஃப்டி மற்றும் பர்தமன் – துர்காபூர் (மே.வ) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தாஸ் சங்கமித்தா ஆகிய இருவர் மட்டும்தான் முஸ்லிம் பெண் எம்.பிக்கள். முஸ்லிம் அல்லாத பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் குறைவுதானே எனக் கேட்கலாம். உண்மைதான். மக்கள் தொகையில் பாதி பெண்கள் எனக் கொண்டாலும் சுமார் 270 பெண் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் ஆனால் 61 பெண்கள்தான் உள்ளனர். ஆனால் இந்த வீதத்தில் பார்த்தாலும் கூட எட்டு முஸ்லிம் பெண்களாவது இன்று தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்ற 15 வது நாடாளுமன்றதிலும் கூட மூன்று முஸ்லிம் பெண்கள் மட்டும் தான் இருந்தனர்.

நீதித் துறையில் நிலைமை இதை விட மோசம். இதுவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிதான் இருந்துள்ளார். அவர்தான் முதல் பெண் உச்சநீதிமன்றப் நீதிபதியுங்கூட. பின்னாளில் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவிதான் அவர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் வீதம் 25.2 சதம். ஆனால் நீதித்துறையில் அவர்களின் பங்கு வெறும் 5 சதம். அசாமில் மக்கள்தொகை 30.9 சதம் நீதித் துறையில் பணியாற்றுவோர் 9.4 சதம். ஜம்மு காஷ்மீரில் மக்கள் வீதம் 66.97 சதம் நீதித் துறையில் அவர்கள் 48.3 சதம். இந்திய அளவில் சராசரியாக நீதித் துறையில் பணியாற்றும் முஸ்லிம்கள் 7.8 சதம்தான். இது முஸ்லிம் ஆண்களையும் சேர்த்த கணக்கு. இதில் முஸ்லிம் பெண்கள் என்று பார்த்தால் ஒரு சதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

யோசித்துப் பார்த்தால் இன்று இந்திய அளவில் பெயர் தெரியக் கூடிய முக்கியமான முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மேலோட்டமான பார்வையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் சில முகங்கள்:

சானியா மிர்ஸா, டென்னிஸ் வீராங்கனை, இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் சங்கத்தின் (ITPA) துணைத் தலைவர். புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் பண்பாட்டுத் தூதுவர் (Brand Ambassador),

நீதியரசர் எம். ஃபாதிமா பீவி, கேரள முஸ்லிம், முதல் உச்ச நீதி மன்ற பெண் நீதிபதி (1989), தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், தமிழக ஆளுநர் (1997 – 2001),

மெஹ்பூபா மஃப்டி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்,

டாக்டர் சீனத் சௌகத் அலி, பேராசிரியை, எழுத்தாளர், நூலாசிரியர், விஸ்டம் ஃபவுன்டேஷன் நிறுவனர்,

டாக்டர் ஃபரிதா லம்பே, கல்வியாளர், மும்பை நிர்மலா நிகேதன் கல்லூரி முதல்வர்,

நஜ்மா ஹெப்துல்லாஹ், பா.ஜ.க உறுப்பினர், மத்திய சிறுபான்மைத் துறை துணை அமைச்சர்,

ஆசீஃபா கான், பா.ஜ.கவின் சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு உறுப்பின்ர்,

உஸ்மா நஹீத், அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய (AIMPLB) உறுப்பினர், இக்ரா பெண்கள் பன்னாட்டுக் கூட்டுறவு (IIWA) என்கிற தொண்டு நிறுவனம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் அளித்து சுய தொழில் வாய்ப்பை ஏர்படுத்தி வருபவர்,

சீமா முஸ்தபா, புகழ் மிக்க பத்திரிக்கையாளர்.,

ஷபனா ஆஸ்மி, சமூக ஆர்வலர், நடிகை,

சமீபத்தில் நூறாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனை நூருன்னிசா இனாயத் கான்,. பிரிட்டனின் ஆகப் பெரிய போர் வீரர் விருதான ஜார்ஜ் க்ராஸ் விருது வழங்கப் பட்டவர். தாய் திப்பு சுல்தான் மரபினர். ரஷ்யாவில் குடி பெயர்ந்து வாழ்ந்த போது நாஜிப் படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் விமானப் படையில் பெண்களுக்கான துணைப் பிரிவில் சேர்ந்து ஒயர்லெஸ் ஆப்ரேஷன் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு Special Operation Executive ஆகச் செயல் பட்டவர். நாஸிகளில் பிடியில் இருந்த ஃப்ரான்சில் பணி செய்து கொண்டிருந்தபோது காட்டிக் கொடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் 30 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

இரண்டு

ஒன்று தெளிவாகிறது. இந்த மூன்று துறைகளிலும் முஸ்லிம்கள் பெரிய அளவில் பின் தங்கியுள்ளனர். இவர்களுள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை மிக மோசம்.

இன்னொரு வகையில் பார்த்தோமானால் மொத்தத்தில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. மொத்தப் பெண்களுக்குள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை படு மோசம்.

தொகுத்துச் சொல்வதானால் முஸ்லிம் பெண்களின் நிலை இப்படி ஆனதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் பெண்களாக இருப்பது. 2, அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது.

முஸ்லிம் பெண்கள் திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எனினும் அவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக மேலெழுவதற்குத் தடையாக உள்ள நெருக்கடிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.அவை: 1. நிதி நெருக்கடிகள் 2. கலாச்சார நெருக்கடிகள் 3. சிறுபான்மையராக இருப்பதால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. நிதி நெருக்கடி: முஸ்லிம் பெண்களைப் பொருத்த மட்டில் நிதி நெருக்கடி அவர்களை இரு வடிவங்களில் பாதிக்கிறது. இந்தியாவிலேயே அதிக வறுமை வயப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர். வட மாநிலங்கள் பலவற்றில் முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே பின்னல் வேலை செய்வது, பீடி சுற்றுவது முதலான கடும் உடல் உழைப்பைக் கோருவதும் அதிகச் சுரண்டல் நிறைந்ததுமான பணிகளில் உள்ளனர். இவர்களுக்கு இளமையில் படிப்பு என்பது சாத்தியமில்லாமல் உள்ளது.

வசதிகள் இருந்தபோதும் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு சுதந்திரமான தொழில் முனைவராக அவர்கள் செயல்பட வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை. ஆண்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவர்களாகவும், செயல்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

2. கலாச்சார நெருக்கடிகள்: முஸ்லிம் பெண்கள் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குரியவர்கள். ஆண்களோடு சேர்ந்து படிப்பது, பணி செய்வது. அரசியலில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு ஷரியாவில் இடமில்லை என்கிற கருத்து முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது முஸ்லிம் பெண்கள் பின் தங்கி இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நோக்கில் அமைந்த ஹதீஸ்கள் அவை மிக்க பலவீனமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு முதன்மை அளிப்பது, திருக்குரானின் புனித வசனங்களை அவற்றுக்குரிய சூழல்களிலிருந்து பிரித்து விளக்கமளிப்பது ஆகியவற்றின் ஊடாக இந்தக் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் ஆழப் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இன்னும் பலம் மிக்க ஹதீஸ்களின் துணையோடும், இறைமறை வசனங்களை உரிய சூழலுடனுன் பொருத்தியும் இன்று பல மார்க்க அறிஞர்கள் மாற்று விளக்கம் அளிப்பதை கவனத்தில் எடுப்பது முஸ்லிம் சமூகம் தடைகளை மீறி மேம்பாடடையத் துணை புரியும்.

2010ல் தேவ்பந்த் தாருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் அளித்த ஃபட்வாவை இப்படி முஸ்லிம் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “பெண்களின் சம்பாத்தியத்தில் குடும்பம் பிழைப்பது ஹராம்” என்பதுதான் அந்த ஃபத்வா. மூன்று மதத் தலைவர்கள் பங்கு பெற்ற ஒரு அமர்வில் விதிக்கப்பட்ட இந்த ஃபத்வா, “பெண்கள் இப்படிப் பணி செய்வதற்கு ஷரியாவில் இடமில்லை. தனியார் துறை ஆனாலும், அரசுத் துறை ஆனாலும் ஹிஜாப் இல்லாமல் பெண்களும் ஆண்களும் உரையாடக் கூடிய நிலைக்கு அனுமதி இல்லை” என உறுதி படக் கூறுகிறது.. ஷியா பிரிவைச் சேர்ந்த மௌலானா கல்பே ஜவ்வாத்தும் இந்த ஃபத்வாவை ஆதரிக்கிறார், பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஷரியாவில் இடமில்லை என்கிறார்.

ஆனால் இதற்கு எதிரான கருத்துக்களும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து வந்தன. “ஆண்களுக்கும் ஷரியா விதிகள் உள்ளன. ஆண்கள் ஷரியா விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் பெண்கள் அவர்களோடு பணி செய்வதில் என்ன பிரச்சினை/” என்கிறார் லக்னோ இட்கா மசூதியின் நய்பி இமாம் ரஷீத். தாருல் இஃப்தா ஃபிடங்கி மெஹலின் மஃப்டி மௌலானா காலித் ரஷீதும் தேவ்பந்த் ஃபத்வாவைக் கண்டித்துள்ளார்.

நீண்ட முஸ்லிம் வரலாற்றில் இந்தக் கருத்திற்கு மாறாகப் பெண்கள் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டு செயல்பட்டதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்ல இயலும். நபிகளின் முதல் மனைவி கதீஜா அம்மையார் ஒரு பணக்கார வணிகராக முழு நிதிச் சுதந்திரத்துடன் வாழ்ந்தார். நபிகளுக்குப் பின் இஸ்லாமிய அரசியலில் மிக்க தைரியமாகவும் அரசியல் நடவடிக்கைகளில் தேர்ந்தும் செயல்பட்டவர் நபிகளாரின் இன்னொரு மனைவி ஆயிஷா அவர்கள். இத்தகைய வாய்ப்பு அன்றைய இஸ்லாமியச் சமூகத்தில் இருந்தது கருதத்தக்கது. கலீபா உமர் தனது ஆட்சியில் சந்தையை மேற்பார்வை இடும் முக்கிய பொறுப்பை ஷாஃபா பின் அப்துல்லா என்கிற பெண்மணியிடம் அளித்திருந்தார். ஃபாதிமிட் கலீபாக்களின் காலத்தில் (6ம் நூ) யேமன் நகரத்தின் ஆளுநராக இருந்தது அர்வா பின்ட் அஹமத் என்கிற பெண். நம் காலத்தில் முஸ்லிம் நாடுகளில். பெனாசிர் பூட்டொ, கலீடா சியா, ஷேக் ஹசீனா ஆகியோர் நாடாண்டிருகின்றனர்.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்ட இறுக்கமான முஸ்லிம் நாடுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில் பணி செய்யத் தடை இல்லை. தாலிபன் ஆட்சியிலும் கூட ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்று மட்டுமே தடுத்திருந்தனர். மலேசியாவில் டோல் கேட்கள் அனித்திலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பணியாற்றுவதைக் காணலாம். தற்போது சவூதி அரேபியாவின் கல்ஃப் ஒன் இன்டஸ்ட்ரியல் வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ள பாக்டர் நாஹிர் தாஹேர் ஒரு பெண்தான். உலக அளவில் நூறு ஆற்றல் மிக்க பெண்கள் என்கிற பட்டியலில் சுமார் 10 முஸ்லிம் பெண்கள் இடம் பெறுகின்றனர் (2007). எகிப்தின் கமர்ஷியல் இன்டஸ்ட்ரியல் வங்கியின் நிர்வாகப் பணியாளர்களில் 70 சதம் பெண்கள். தலைமை இடத்தில் இடரண்டாவதாக உள்ள சகரர் எல் சலாப் ஒரு பெண். ஷேய்கா லுப்னா அல் காசிமி என்கிற பெண்தான் ஐக்கிய அரபு எம்ரேட்களின் நிதி அமைச்சர். இப்படி நிறையச் சொல்லலாம். எகிப்திய நீதி மன்றங்களில் 31 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

3. சிறுபான்மையினராக இருப்பதால் உருவாகும் நெருக்கடிகள்: சச்சார் குழு அறிக்கையில் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஒன்று முஸ்லிம் குடியிருப்புகளின் அருகில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது. வகுப்புக் கலவர வாய்ப்புள்ள பகுதிகளில் முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து பள்ளிகள் தொலைவில் அமையும் போது பிள்ளைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் அவ்வளவு தூரம் செல்வதற்கு அஞ்சிப் படிப்பை நிறுத்திவிடும் போக்கைச் சுட்டிக் காட்டி அந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. பாடத் திட்டங்களில் வரலாற்றுத் திரிபுகள், தினம் சரஸ்வதி துதி பாடச் சொல்லிக் கட்டாயப் படுத்துதல் முதலியன பள்ளிக் கூடங்களை முஸ்லிம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றன. சமூகத்தில் வேகமாகவும் ஆழமாகவும் பரவும் வெறுப்பு அரசியல் ஆசிரியர்களிடம் ஆழமாக வேரூன்றும்போது அவர்கள் முஸ்லிம் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

படித்து முடித்த பின் வேலை தேடும்போதும் முஸ்லிம் அடையாளம் ஒரு பிரச்சினையாகி விடுகிறது, இராணுவம் முதலான துறைகள் முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் போவது ஒரு எழுதப்படாத விதியாகிறது. சச்சார் அறிக்கை இது குறித்து விரிவாகப் பேசுகிறது. ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தி முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்குவது, பெருகி வரும் தனியார் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட சில மேலை நாடுகளில் உள்ளது போல சம வாய்ப்பு ஆணையம் முதலியவற்றை அமைப்பது முதலியன இன்று உடனடித் தேவை ஆகிறது. சமூகத்தில் விரைவாகப் பரவும் வெறுப்பு அரசியலும். காவல்துறையும் ஊடகங்களும் கட்டமைக்கும் பயங்கரவாதப் பிம்பமும் முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்குப் பெருந்தடையாகி விடுகின்றன.

இவை ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பவைதான் என்றாலும் பெண்களுக்கு இதனால் வரும் பாதிப்புகள் கூடுதல். இதற்கான தீர்வை நாம் அரசியல் களத்தில்தான் தேட வேண்டும்

மூன்று

“ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவாற்றலில் குறைந்தவர்கள் (நகிசுல் அக்ல்). அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள் இந்தக் கருத்து வலுவாக இயங்குகிறது. முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இது ஆழமாக வேரூன்றி உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களின் இரண்டாம் பட்சமான நிலையை ஏற்றுக் கொண்டு, தங்கள் உரிமைகளை ஆண்களிடம் கையளித்து விட்டதுதான் முஸ்லிம் பெண்களின் இந்தப் பின் தங்கிய நிலைக்குக் காரணம். பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒரு ஆலிமுடைய கருத்துக்கும் ஒரு ஆலிமாவின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை” என்கிறார் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் உஸ்மா நஹீத்.

“இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படை வாதந்தான் மிகுந்துள்ளது என்கிற கருத்தோடுதான் பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன், நேரடியாகப் பார்க்கும் போதுதான் என்னுடைய கருத்து எத்தனை தவறு என்பது விளங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய முற்போக்கான சிந்தனை மாற்றம் வந்துள்ளது இன்றைய இந்திய முஸ்லிம் ஒரு புதிய முஸ்லிமாக உருப்பெற்றுள்ளதை என்னால் உணர முடிந்தது,. தனது குறுங்குழு மனப்பான்மையை ஒழித்த, முற்போக்குச் சிந்தனைகளால் தன்னை வளப்படுத்திக் கொண்ட, நாலும் தெரிந்த, கல்வியில் நட்டம் கொண்ட, தீவிர மதக் கருத்துக்களிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது” என்கிறார் லண்டன் வாசியும், முக்கிய பத்தி எழுத்தாளரும், நூலாசிரியரும், “இந்திய முஸ்லிம்களின் வசந்தம்” எனும் நூலைச் சமீபத்தில் எழுதியுள்ளவருமான ஹஸன் சரூர்.

சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்து விட்டது என விமர்சிக்கும் சீமா முஸ்தபா, “சாச்சார் அறிக்கையை வாசிக்கும்போது எல்லா இடங்களிலும் காணக் கிடப்பது முஸ்லிம்களின் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, அந்தப் பின் தங்கிய நிலையிலிருந்து விடுபடத் துடிக்கும் துடிப்பும் தான்” என்கிறார்.

இந்த ஆர்வத்தின் ஆரம்பப் புள்ளியாக நான் 1990 களின் தொடக்கத்தைக் காண்கிறேன். பாபர் மசூதி இடிப்பு, உலக மயத்தின் ஊடாக உருவான திறப்புகள் ஆகியவற்றின் ஊடாக சுய பரிசோதனையுடன் கூடிய, நவீன காலத்துக்குரிய முன்னேற்ற ஆர்வம் ஒன்று இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியது. ஓட்டுக்குள் சுருங்கிய ஆமைகளாக இனியும் இருக்க இயலாது என அவர்கள் கிளம்பினர், முதன் முதலாக “முஸ்லிம்களை அதிகாரப் படுத்துதல்” (Muslim Empowerment) என்கிற குரல் எழுந்தது. மாநாடுகள் போடப்பட்டன. அரசியல் சட்ட அவையித் தொடரின் போது ஊத்தி மூடப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அறுபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலுக்கு வந்தது.

முஸ்லிம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவான இந்த எழுச்சி ஒரு குறிப்பிட அளவு பெண்கள் மத்தியிலும் வெளிப்பட்டது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கப்பட வேண்டியவர்கள் என்கிற பழைய நம்பிக்கைகளிலிருந்து இந்தப் புதிய முஸ்லிம்கள் விடுபட்டனர். முன்னைக் காட்டிலும் முஸ்லிம் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம், தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் ஆகிய அடையாளங்களை உறுதிப் படுத்துதல் என்பன அதிகமாகிய அதே நேரத்தில், புதிய சூழலுக்கு உரிய வகையில் முற்போக்கான அணுகல் முறைகளை இத்துடன் இணைப்பது என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அடையாள உறுதியாக்கம் அவர்களை பிற சமூகங்களிலிருந்து அந்நியப் படுத்துவதற்கு மாறாக, ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் பிற சமூகங்களுடன் அவர்களின் உறவு நெருக்கமாவதையும் காண முடிகிறது. இந்தச் சூழல் எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களின் நிலையில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

இந்த மாற்றம் ஏதோ புதிய முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் கொடை அல்ல. முஸ்லிம் பெண்களும் இன்று புதிய முஸ்லிம் பெண்களாக உருப் பெறுகின்றனர். “இந்தக் கல்வி அமைப்பு முஸ்லிம் பெண்களைப் புறக்கணித்தாலும், முஸ்லிம் பெண்கள் கல்வியைப் புறக்கணிக்கவில்லை” என்கிறது சச்சார் குழு அறிக்கை. முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடங்களில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார் முஸ்லிம் கல்வியாளர் ஃபரிதா லம்பே எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் வீதம் சில மாநிலங்களில் பிற மதத்தவரைக் காட்டிலும் அதிகமாகக் கூட உள்ளது” என்கிறார் அவர்.

இன்று முஸ்லிம் பெண்களின் நிலை நீதித் துறை ஆகட்டும், நிர்வாகத் துறை ஆகட்டும் எல்லாவற்றிலும் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால் இப்போது உருவாகியுள்ள இந்தப் புதிய பிரக்ஞை உரிய பலன்களை முஸ்லிம் பெண்கள் மத்தியில் விரைவில் ஏற்படுத்தும். இதற்குத் தடையாக உள்ளவற்றை நாம் மேலே அலசியுள்ளோம். அவற்றைத் தகர்ப்பதில் நாம் கவனம் குவிக்க வேண்டும்.

என்ன வழி?

1. முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். வீட்டுக்குள் இருந்து கடினமான கை வேலைகளின் மூலம் உழைத்துச் சம்பாதிக்கும் நிலைகளிலிருந்து பெண்கள் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அதற்குரிய நிதி அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். செசன்யா, வங்க தேசம் முதலான நாடுகளில் “நுண் நிதியம்” (micro finance) என்பது இவ்வகையில் முஸ்லிம் பெண்களின் நிலை மேம்படுவதில் பெரிய பங்காற்றியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கும் வகையில் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படுதல் மட்டுமின்றி நவீனப் படுத்தப்படவும் வேண்டும்.

2. பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும். ஆண்களே வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்கிற நிலை போய் பெண்கள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்படும் சூழல் குடும்பத்திற்குள் உருவாக்கப்பட வெண்டும். இதற்கு முஸ்லிம் ஆண்கள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்படல் அவசியம்.

3. பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது போன்ற காலத்திற்குப் பொருந்தாத கட்டுப் பெட்டித் தனமான கருத்துக்களுக்கு நாம் விடை கொடுத்தாக வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள், ஆலிம்கள் மத்தியிலும். மார்க்க அறிஞர்களுக்கு இடையிலும் இது போன்ற நுண்மையான பிரச்சினைகளில் இரு எதிர் எதிர்க் கருத்துக்கள் நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களைப் பின்னுக்குத் தள்ளும், வீட்டுக்குள் முடக்கும் பழமைவாதிகளின் கருத்துக்கள் பல மிகவும் பலவீனமான ஹத்தீஸ்களின் அடிப்படையில் எழுகின்றன என மார்க்க அறிஞர்கள் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தீர ஆய்வு செய்தும் நபிகள் மற்றும் கலீபாக்களின் வரலாற்றிலிருந்தும் இன்றைய சூழலுக்குத் தக எடுத்துக்காட்டுகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நபிகளின் காலத்திலோ, இல்லை அதற்குச் சற்றுப் பின்னரோ பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடையாது, அவர்களுக்கு அரசியலில் பங்கில்லை, அவர்கள் புறப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்கிற நிலை இல்லை என்பதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை நாம் மதிக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

4.உலகம் கடந்த இருபதாண்டுகளில் பெரிய அளவில் மாறியுள்ளது. புதிய தொழில்கள், புதிய வாய்ப்புகள், புதிய கல்விகள் எல்லாம் உருவாகியுள்ளன. இவற்றில் நமக்கு உரிய பங்கைப் பெறுவதற்கு இங்கே வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் தடையாகி விடக் கூடாது. முஸ்லிம் தீவிரவாதம் குறித்த ஊடகப் பிரச்சாரங்கள். அதற்குப் பின்னணியாக காவல்துறை அவிழ்க்கும் பொய்க் கதைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வும் அத்தகைய நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர் கொள்வதற்கான அமைப்புகளும் வலுவாக்கப்பட வேண்டும். ரங்கநாத் ஆணையப் பரிதுரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

என்கவுன்டர் கொலைகள்: சட்டம் என்ன சொல்கிறது?

தன்னைக் கொல்ல வருபவர்களை திருப்பிச் சுடாமல் இருக்க முடியுமா? – என என்கவுன்டர் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இது குறித்துச் சட்டம் என்ன சொல்லுகிறது?

//தற்காப்புக்காக – தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக்கிறது. //

இதில் இரு அம்சங்கள் கவனிக்கத் தக்கன.

1) தற்காப்புக்காகக் கொலையும் செய்யலாம். இது காவல் துறையினருக்கு மட்டுமல்ல சாதாரணக் குடிமக்களுக்கும் பொருந்தும். ஆனால் அது கொலக் குற்றமாகவே பதிவு செய்யப்பட்டு, தான் தற்காப்புக்காகத்தான் கொல்ல நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே அவர் வழக்கிலிருந்து விடுபட இயலும். இந்த நடைமுறை காவல்துறையினர் செய்கிற என்கவுன்டர்களிலும் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2) கைது செய்யச் செல்லும் இடத்தில் வரமறுப்பவர்களைக் கொலை செய்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டம் ஒரு நிபந்தனை விதிக்கிறது. கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருந்தால் மட்டுமே அவரைக் கொல்லும் எல்லைக்குச் செல்லலாம். வங்கிக் கொள்ளை என்பது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமல்ல. பொம்மைத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பதே இக் கும்பலின் வழக்கம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ள செய்தி இன்றைய (22, பிப்ரவரி) இந்து நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்கும் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்த ஐவரையும் கொல்வது என்கிற அளவிற்குச் செல்லாமல் கால நீடிப்புச் செய்து அவர்களைக் கைது செய்வதற்கே காவல்துறை முயன்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்து நாளிதழ் செய்தியில் இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கொள்ளையச் செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நேற்றே காவல் துறையினர் இந்து நாளிதழிடம் கூற முடிந்துள்ளது. இது எப்படி? ஏற்கனவே மகாராஷ்டிர மானிலத்தில் இதெ வடிவிலான வங்கிக் கொள்ளைகளை பீகாரைச் சேர்ந்த கும்பல் செய்துள்ளது. அங்கு பிடிபட்ட சுபோத் கந்த் சிங் என்கிற பீகாரி இளஞன் பல தகவல்களைக் கூறியுள்ளான். சென்னையில் கொள்ளையிடும் திட்டமும் அவர்களிடம் இருந்துள்ளது. நமது காவல்துறை இவ்வளவு எளிதாக இந்தக் கொள்ளையில் துப்புத் துலக்க முடிந்ததற்கு இந்தத் தகவல்களே உதவியுள்ளன. இந்த ஐவரையும் உயிருடன் பிடித்திருந்தால் மேலும் பல உண்மைகளை அறிந்திருக்கக் கூடும். இந்தக் கொலைகள் மூலம் அந்த வாய்ப்பும் இன்று இழக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக என்கவுன்டர் கொலைகளில் செய்யப்படுவது யாதெனில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீதே காவல் துறையினரைக் கொல்ல வந்ததாக வழக்கொன்றைப் பதிவு செய்வார்கள். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்துபோனார் எனச் சொல்லி வழக்கை முடிப்பார்கள். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

மனித உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக சென்ற 2007 ஆகஸ்ட் 8 அன்று தமிழக அரசு என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக ஒரு நெறிமுறையை வழங்கியது. அதன்படி என்கவுன்டர் செய்த அதிகாரிகளுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுக்கக் கூடாது. இதற்கெனப் பதவி உயர்வு கொடுக்கக் கூடாது. ஆனாலும் தொடர்ந்தும்கூட அப்படிப் பரிசுகள் கொடுக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது.