Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்

அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இந்துக் கோவில்

(பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு குறித்து இடப்பட்ட ஆதாரபூர்வமான பதிவொன்றைக் கண்டு, அதை மறுக்க இயலாத சிலர் பாகிஸ்தான் வெறுப்பை உமிழ்ந்தனர். இது குறித்து நான் இரு பதிவுகளை இட்டேன். அதைக் கண்ட சில நண்பர்கள் பாக் புதுப்பித்த இந்துக் கோவில்களின் கதையைச் சொல்லுமாறு கேட்டனர். அந்த விவரங்களைக் கீழே தந்துள்ளேன். பின்னணியை விளங்கிக் கொள்ள என் முந்தைய இரு பதிவுகளும் முன்னுரையாகத் தரப்பட்டுள்ளன.)

முன் பதிவு 1: பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையிl அது எவ்வாறு பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்டது என்பதையும், அங்கு சிறுபான்மையினருக்கு seperate electorate கொடுக்கப்பட்டு, பின் அங்குள்ள கிறிதஸ்வச் சிறுபான்மையினர் அது தமக்குத் தேவை இல்லை என அவ் உரிமையைத் திருப்பி அளித்து விட்டதையும் எழுதியுள்ளேன். முடிந்தால் மேலதிக விவரங்களுடன் அதைத் திரும்பிப் பதிவிட முயல்கிறேன். பாகிஸ்தானில் ஒற்றை அதிகார மையம் இல்லை என்பதும், தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படிவாதமும் அந்த நாட்டைச் சீரழித்துக் கொண்டுள்ளன என்பதும் உண்மை. ஒரு காலத்தில் அரசும் இராணுவமுமே இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தபோதும், இப்போது பாக் அரசுக்கே அது பெரும் தலைவலியாக இருப்பதுதான் எதார்த்தம்.சென்ற ஆண்டில் எல்லை ஓரத்தில் இந்திய இராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டு, அவர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, அது இராணுவம் அல்லாதவர்களின் செயலாகவும் இருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் எனச் சொன்னபோது இந்துத்துவ வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்தோனியின் கூற்று மிகவும் நிதானமான ஒன்று. பாக்கில் இன்று குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அரசதிகாரம், தன்னிச்சையாக இயங்கக்கூடிய இராணுவ அதிகாரம், அடிப்படைவாதிகளின் அதிகாரம். இந்த நிலை நீடித்தால் விரைவில் பாக் ஒரு failed state என்கிற நிலையை எட்டலாம் என்பது உண்மை.

முன்பதிவு 2: ஆனால் ஒன்றை நாம் மனங்கொள்ள வேண்டும். இப்படியான சூழல் இந்தியாவில் சில பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், பாக். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் சில வன்முறைகளுக்கும் காரணமாவது போலவே பாக்கில் முஸ்லிம் குடிமக்கள் மீதே உள்நாட்டு வன்முறைகளுக்கும் காரணமாகின்றது, இந்த வகையில் இது பாகிஸ்தான் அரசுக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்தக் காரணங்களுக்காகவே அங்கு எல்லாமே சீரழிந்துள்ளதாகவும்,ஒவ்வொரு பாகிஸ்தானியும் இந்திய வெறுப்புடன் வாழ்வதாகவும் நினைப்பதும், அந்த வகையில் ஒவ்வொரு பாகிஸ்தானியையும் நமக்கு எதிரியாகவும் நினைப்பதை விட அறிவு கெட்டத்தனம் அல்லது வன்ம வெறுப்பு மனோ நிலை வேறெதுவுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டார்லிம்பில், பாக் சென்று வந்து கட்டுரை ஒன்றை அவுட்லுக் இதழில் எழுதி இருந்தார். அதை வாசித்தால் பாக்கின் இன்னொரு பக்கத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். அடிப்படை வசதிகள்,நயத்தக்க நாகரீகங்கள் உள்ள நாடுதான் பாகிஸ்தான் என்பதும், பாக் மக்கள் அப்படி ஒன்றும் இந்து மதத்திற்கோ, இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதும் நிறைய வாசிக்கையில்தான் விளங்கும். பாக் மீதும் அம்மக்கள் மீதும் வெறுப்பைக் கொட்டி எழுதியிருக்கும் இரு பின்னூட்டங்களும் ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றன. அறியாமையும், வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் அது.

ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கியவர் அத்வானி. 2005ம் ஆண்டில், பாகிஸ்தானில் உள்ள சக்வால் மாவட்டத்தில் இடிந்து கிடந்த இந்துக் கோவில் ஒன்றின் புனித தீர்த்தம் ஒன்று சீரமைக்கப்படுவதற்கும், அருகிலுள்ள ஏழு இந்துக் கோவிகளில் விக்ரகங்கள் புதிதாய் நாட்டப்படுவதற்குமான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதன. அதற்கு விருந்தாளியாகவும் தலைமை தாங்கவும் அழைக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா? பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அதே லால் கிருஷ்ண அத்வானிதான். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் இது இந்தியாவில் சாத்தியமா?

சற்று விவரமாக இந்துக் கோவில் அங்கு புனருத்தாரணம் செய்யப்பட்ட கதையைச் சொல்கிறேன்.

2005ல் அத்வானி பாகிஸ்தான் சென்றபோது, பஞ்சாப் மாநிலம் சட்வால் மாவட்டத்தில் உள்ள கடஸ்ராஜ் கோவிலைப் புதுப்பிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வந்தார். அப்போது அவருடன் கூடச் சென்றவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) கட்சித் தலைவர் ஷுஜாத் ஹுசேன். அது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற் குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்னீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் அங்கு உண்டு.

தான் அடிக்கல் நாட்டிய அனுபவம் குறித்து அப்போது அத்வானி கூறியது: “உண்மையில் இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடஸ்ராஜிலுள்ள இந்துக் கோவில்கள். இவற்றைப் புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்ததை இந்திய மக்களுக்கே அளிக்கப்பட்ட ஒரு கவரவத்தின் குறியீடாகவே கருதுகிறேன்.” இதை ஒட்டி பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாநிலத் தொல்லியல் துறை, பொது நலப் பணித்துறை முதலியன இப்பணி நோக்கி முடுக்கிவிடப்பட்டன.

சீரமைப்பு வேலையை விரைவுபடுத்தக் கோரி அத்வானி சென்ற 2008 டிசம்பரில் ஹுசேனைத் தொலை பேசியில் அழைத்துச் சொன்னார். “நீங்கள் சுட்டிக் காட்டிய விஷயத்தை நான் மிக்க கரிசனத்துடன் கவனத்தில் எடுத்துக் கொண்டேன், சக்வாலில் உள்ள இதற்குரிய அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தற்போது வேலைகள் எந்த நிலையில் உள்ளன என விசாரித்தேன். தீவிர அர்ப்பணிப்புடன் அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என பாக் முஸ்லிம் லீக் தலைவர் ஷுஜாத் ஹுசேன் உடன் பதில் எழுதினார் (“Pak Temple Renovation on, Advani Told”, Express News Service, New Delhi, Dec 11, 2008).

கடஸ்ராஜ் கோவில்களும் ஶ்ரீ அமர்குண்ட் எனப்படும் புனித தீர்த்தமும் சுற்றுச் சூழல் கேடுகளால் சீரழிந்த வருவது குறித்து ‘டான்’ உள்ளிட்ட பாகிஸ்தான் நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வந்தன. அருகிலுள்ள தொழிற்சாலைகள் நீரை உறிஞ்சி விடுவதால் அமர் குண்ட் வற்றி வருவதை அவை சுட்டிக்காட்டின. அப்படி ஒரு செய்தியைப் படித்த பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்கள் சென்ற 2012 மேயில் உரிய அதிகாரிகளை அழைத்து, புதுப்பிக்கும் பணியை “அறிவியல் நுட்பங்களுடன்” விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார் (“Preserve Katasraj Temple : Zardari”, The Hindu, May 7, 2012).

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறைச் செயலரும், கடஸ்ராஜ் கோவிற் புனரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சயீத் இக்பால் வஹ்லா, “போர்க்காலத் துரிதத்துடன் பஞ்சாப் அரசு இப்பணியை நிறைவேற்றி வருகிறது” என அறிவித்தார். “இந்த நாட்டின் சம குடி மக்களான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பஞ்சாப் அரசுக்கு உண்டு” எனவும் அவர் கூறினார்.

நவம்பர் 5,2012 அன்று நடைபெற்ற விழாவில்115 இந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஶ்ரீ அமர் குண்ட் வண்னப்பூக்கள் மிதக்கப் பேரழகுடன் காட்சி அளித்தது. “திருக்குளத்தைப் புதுப்பிப்பதற்காக பஞ்சாப் அரசு 60.92 கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. கோவிற் திருப்பணிக்காக மத்திய அரசு மேலும் 2 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. யாத்ரீகர்கள் தங்கிச் செல்ல விடுதி ஒன்றும் கட்டப்படும்” என வஹ்லா கூறினார் (“Pak Hindus Throng at Renovated Holy Pond”, One India, Nov 5, 2012).

ஹிந்து சுதர் சபாவின் பொதுச் செயலர் அசோக் சந்த் பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்தார். வந்திருந்த இந்துக்கள் கடஸ்ராஜில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தொழுது திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *