Press ESC to close

அ. மார்க்ஸ்அ. மார்க்ஸ் பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்

தேவயானி விவகாரம் : இந்திய அமெரிக்க உறவில் விரிசலா?

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடி போலச் செயல்பட்ட இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளிப்பட்ட போது கூட இந்திய அரசு அடக்கியே வாசித்தது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா இதனை “உளவெல்லாம் இல்லை சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான் (computer analysis)” என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்று.

ஆனால் இன்று இந்தியாவெங்கிலுமுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன, டில்லியிலுல்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும் கூட அகற்றப்பட்டுள்ளன.

“உலகளாவிய பங்காளிகள்” (global partners) எனக் கூறிக் கொண்டு அமெரிக்காவுடன் கைகோர்த்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்கப் போர்க்கப்பலான நிமிட்சின் வருகைடீந்திய அரசின் இறையாண்மையையும் கூட விட்டுக் கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையிலிருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது ஆகியவற்றிற்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்த காங்கிரஸ் அரசின் இன்றைய நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பா.ஜ.கவும் முழுமையாக இந்தப் பிரச்சினையில் அரசை ஆதரிக்கிறது.

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கியதாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அபெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்தற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961)’ தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து சில காப்புரிமைகளை (diplomatic immunity) வழங்கியுள்ளது. எனினும் இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள் நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. தவிரவும் இந்தக் காப்புரிமை தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக் கொள்கின்றன. கடுங் குற்றச்சாட்டுகளில் கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக் கொடுப்பதில்லை.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணி புரிந்த வான் கோதம் என்கிற கடற்படை வீரன் குடித்துவிட்டுக் காரோட்டிச் சென்றதோடு சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்ந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு ஜெர்மனிக்கு ஓடவும் செய்தான் வான் கோதம். அமெரிக்கா தூதரகக் காப்புரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தது. அவனை ருமேனியாவுக்கு அனுப்பாமல் தானே இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.

2001 ஜனவரியில் கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் ஆந்த்ரே கினைசேவ் என்கிற ருஷியத் தூதரக அதிகாரி காரோட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் அங்கேயே இறந்து போனார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார். ருஷ்யாவும் காப்புரிமையை ரத்து செய்யாததோடு அந்த அதிகாரியைக் கனடாவுக்கு அனுப்பவும் மறுத்தது. தங்கள் நாட்டுச் சட்டப்படி விசாரித்துத் தண்டனை வழங்கியது.

ஆனால் சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தன. 1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவிற்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே இப்படிக் குடித்து விட்டுக் காரோட்டி மோதியதில் நால்வர் காயமடந்து ஒரு பெண் கொல்லப்பட்டார், ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.

அமெரிக்கா இன்னும் தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட்பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதிய சட்டங்களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்” என்றார். அந்தச் சந்திப்பின் போது அவர் “ரொம்பத் திமிராக” நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது (பிப்ரவரி 2, 2007).

சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். “எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல” அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின (இந்து, மார்ச் 27, 2007).

இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. அய்.நா அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பரம்பரியமான அணி சேராக் கொள்கையிலிருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (elite clubs) இடம் பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டியுள்ளது. ஆனால் இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப் போவதில்லை. அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும். இந்தியாவின் கணடனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் சற்றுமுன் கூறப்பட்டுள்ளது.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா என்கிற இரு தரப்பையும் தாண்டி இன்னொரு மூன்றாவது தரப்பும் உள்ளது அது அந்தப் பெயர் தெரியாத வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல இவளும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால் அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்.

பன்னாட்டுச் சட்டங்கள் இது குறித்து என்ன சொல்கின்றன?

சட்டத்துறை ஆய்வு மாணவர்கள் இருவர் எழுதிய முக்கிய கட்டுரை இது. தேவயானி பிரச்சினையில் நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்கள்: 1) தூதர்களுக்கு உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் 1961ம் ஆண்டு வியன்னா உடன்பாடு தூதர்களுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பை வழங்குகிறது. துணைத் தூதர் தேவயானி தூதராலயப் பணியுல் உள்ளவர் மட்டுமே. அவருக்கு 1961ம் ஆண்டு அளிக்கும் பாதுகாப்பு செல்லுபடியாகாது.

2) தூதரகப் பணியாளர்களுக்கு இத்தகைய பாதுகாப்பை 1963ம் ஆண்டு வியன்னா உடன்பாடு அளிக்கிறது. ஆனால் இது 1961ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் பாதுகாப்பைப்போல முழுமையானது அல்ல. கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலோ அல்லது உரிய நீதிமன்ற ஆணை இருந்தாலோ அவரைக் கைது செய்யலாம். தவிரவும் தூதரகப் பணிகளுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு உண்டு.

3) தேவயானியின்மீதான குற்றச்சாட்டிற்கு அமெரிக்கச் சட்டப்படி 5ஆண்டு வரை தண்டனை உண்டு. அதாவது இது கடுங் குற்றவகையைச் சேர்ந்தது. அதோடு தேவயானி, நியூயார்க்கின் தென் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் டேரா ஃப்ரீமன் அளித்துள்ள ‘வாரன்ட்’டின் படியே கைது செய்யப்பட்டுள்ளார்.

4) ஆக, தேவயானியின் கைதைப் பொருத்தமட்டில் அது பன்னாட்டுச் சட்டத்தின்படி சரியானதே. எனினும் 63ம் ஆண்டு உடன்பாட்டின்படி அவரது பதவிக்குரியவகையில் விசாரணையின்போது அவர் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவர் நடத்தப்படவில்லை என்பது மட்டுமே இதில் சட்ட மீறல்.

5) தூதர்களுக்கான 63ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் முழுப் பாதுகாப்பையும் தேவயானி பெறுவதற்காகவே இன்று அவரை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா அவையின் தூதரக முகவராகப் பணி உயர்வு அளித்துள்ளது. இது பன்னாட்டுச் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவது (abuse of international law) ஆகும். இது குறித்த ஐ.நா அவையின் 1946ம் ஆண்டுச் சட்டத்தின்படி ஐ.நா தூதர்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பாதுகாப்பு ஐ.நா அவைப் பணிகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபரின் சொந்தப் பலன்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது. தேவயானிக்கு அளிக்கப்படும் இந்தப்பதவி உயர்வு அவரை அவர் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிற, ஐ.நா அவையின் பணிக்குத் தொடர்பில்லாத ஒரு குற்றச்சாட்டிலிருந்து தப்புவிப்பதற்காகவே செய்யப்படுகிறது, இது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குற்றம்.

6) அமெரிக்க நடவடிக்கைக்காக இந்தியா எடுத்துள்ள எதிர் நடவடிக்கைகளில், அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தூதுக் குழுக்களைச் சந்திக்க மறுப்பது என்பதெல்லாம் அரசியக் சார்ந்த விஷய. ஆனால் தூதரகங்களுக்கு அளித்துள்ள பாதுகாப்புக்களை நீக்குவது முதலியன பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிரானவை. வேண்டுமானால், அதுவும் ஒரு இறுதி நடவடிக்கையாக, தன் நாட்டுத் தூதரை நீக்கிக் கொள்வது, சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வது முதலான எதிர் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

7) இந்தியா இது தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றத்தை (ICJ) அணுக இயலாது. ஏனெனில் அமெரிக்கா, பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *