என்ன நடக்குது அமெரிக்காவில்

என்ன நடக்குது அமெரிக்காவில் 

சட்டத்தின் ஆட்சி, புலம் பெயர்ந்தோரின் சொர்க்கம், அளவற்ற சுதந்திரம்” – ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படும் அமெரிக்கா இன்று இந்த மூன்று அம்சங்களையும் இழந்து உலகின் முன் கவலைக்கும் கேலிக்கும் உரிய காட்சிப் பொருளாய் மாறி நிற்கிறது. புதிதாய்ப் பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அபத்த நடவடிக்கைகள் இப்படியெல்லாமா ஒரு குடியரசுத் தலைவர் பேச முடியும், நடந்து கொள்ள முடியும் இலட்சக் கணக்கானோரைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்த முடியும் என்கிற கேள்விகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இப்படித்தான் நடக்கும் என முன்  கூட்டியே சொன்னவர்களும் உண்டு.

தனது வாழ்நாளில் 16 குடியரசுத் தலைவர்களைக் கண்டவரும், இந்தத் தலைவர்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்து வந்தவருமான நோம் சாம்ஸ்கி டொனால்ட் ட்ரம்ப் பற்றி இப்படிக் கூறினார்:

“எந்த அரசியல் அனுபவமும் இல்லாத நபர்; பதவிகளுக்கு ஆசை மட்டுமே பட்டவர்; பதவியில் இருந்த அனுபவமற்றவர். அதிகார வெறியர். முட்டாள். ஹில்லரி கிளின்டனை விட மோசமான ஆள்..”

கோடீசுவரர் என மட்டும் சொல்லி அவரின் பின்புலத்தை விளக்கிவிட முடியாது. ரியல் எஸ்டேட், சொகுசு ஓட்டல்கள்.. எனப் பலதுறைகளில் கொடி கட்டிப் பறக்கும் இம்மியும் அரசியல் அனுபவமும், நயத்தக்க நாகரிகமும் இன்னியும் இன்றி சிறுபான்மை மக்களை, மாற்றுத் திறனாளிகளை, பெண்களைஈழித்தும், பண்பாடற்றும் பேசித் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நபருக்கு எப்படி 63 மில்லியன் அமெரிக்கர்கள் வாக்களித்தனர்?

ஒரு பக்கம் இது ஒரு புதிர். இன்னொரு பக்கம் ஓரளவு எதிர்பார்த்ததுதான். உலகளவில் இதுதான் இன்றைய ‘ட்ரென்ட்’ போலும். இந்திய மக்கள் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுக்கவில்லையா?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்வரை யாரும் இப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் ஹில்லரி கிளின்டன் வெற்றி பெறுவார் என்றே கூறின. ட்ரம்பின் அருவெறுக்கத்தக்க பேச்சுக்கள், வெளிப்படையான பொய்கள், கடும் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் ஆகியனவே அவரைக் கவிழ்க்கப் போதுமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை இறுதியில் பொய்த்தது. அப்படியானால் பெரும்பாலான அமெரிக்கர்கள் இதைத்தான் விரும்புகின்றனரா?

அப்படித்தான் தோன்றுகிறது. குறிப்பாக முஸ்லிம்கள் மீதும், ஒட்டுமொத்தமாகப் புலம் பெயர்ந்தவர்கள் மீதும் கட்டமைக்கப்பட்டுள்ள வெறுப்பிற்கு நாம் ட்ரம்பை மட்டுமே குற்றம் சொல்லிவிட இயலாது. 2001 தொடங்கி இத்தகைய வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்பட்டது. 2008ல் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதாரத் தேக்கம், கடன் நெருக்கடி ஆகியன இந்த வெறுப்பை அதிகப்படுத்தின. இடையில் வந்த ஒபாமா நிர்வாகம் இந்தத் தேக்கங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட இயலவில்லை. அமெரிக்க மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை ட்ரம்பின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களை வாட்டுகிறது. புலம் பெயர்ந்து வருவோரை அவர்கள் அச்சத்துடன் நோக்குகின்றனர். இந்தத் தேர்தலில் ட்ரம்புக்கு பெரும்பான்மை கிடைக்காத மாநிலங்களில்தான் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என ஒரு கணிப்பி சுட்டிக் காட்டுகிறது. ‘இன்டெர்நெட்’ முதலான புதிய தொழில் நுட்பங்கள் பாரம்பரியமான அதிகார மையங்களைப் பலவீனப் படுத்துவதையும் பழைய தலைமுறை அச்சத்துடன் நோக்குகிறது.

உலக அளவிலும் அப்படித்தான் நிலைமை. உலகப் போருக்குப் பின் இங்கு தலை எடுத்த தாராளவாதம் எழுபதுகளுக்குப் பின் மாறியது. டொனால்ட் ரீகன், மார்கரெட் தாட்சர், ஹெல்மெட் கோல் என வெளிப்படையான வலதுசாரிகள் மேலுக்கு வரத் தொடங்கினர். சோவியத் முதலான மாற்றுப் பொருளாதாரங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி வலதுசாரி அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்கிற எண்ணத்திற்கு வித்திட்டது.  தாராளவாதம் இருந்த இடத்தில் ஒரு பக்கம் ‘பாப்புலிசமும்’ இன்னொரு பக்கம் பெரும்பான்மைத் தேசியமும் (mejoritarian nationalism) பிடித்துக் கொண்டன. இதை வலதுசாரிக் கட்சிகளும் வெளிப்படையான தேசியவாதிகளும் பயன்படுத்திக் கொண்டனர். வெளிப்படையாக முஸ்லிம்கள், புலம் பெயர்ந்தோர் ஆகியோர் மீது வெறுப்புகள் கட்டமைக்கப்பட்டன. ட்ரம்ப்பின் வெற்றியை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.

#        #       #

ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ்ப் பணியாற்றத் தேர்வு செய்துள்ள நபர்களைப் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் வால்ஸ்ட்ரீட் பெரு வங்கிகளை எதிர்த்து பாப்புலிச வசனங்களை உதிர்த்ததோடு ஹில்லரி கிளின்டனையும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரையும் “வங்கிகளின் கையாள்” என்றும் பேசித் திரிந்த ட்ரம்ப் இன்று அமெரிக்காவின் பொருளாதாரச் செயலர் பதவிக்குத் தேர்வு செய்திருப்பது பன்னாட்டு நிதி நிறுவனமான ‘கோல்டுமன் சாக்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஸ்டீவன் ம்யுனுச்சின்; கல்விச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் இன்னொரு பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான பெட்சி டெவோஸ். அட்டர்னி ஜெனரலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெஃப் செஷன்ஸ் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கொடும் அம்சங்களை மென்மையாக்க வேண்டும் என்கிற வெகுமக்கள் கருத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்; ‘அமெரிக்க மக்கள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்கிற கருத்துடையவர். இதற்குமுன் இடைக்கால அட்டர்னி ஜெனெரலாக இருந்த சாலி பேட்ஸ், ட்ரம்பின் ஏழு நாடுகள் மீதான முஸ்லிம் தடையைச் செல்லாது என அறிவித்த சில மணி நேரங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் இந்த ஜெஃப்.  சி.ஐ.ஏ இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மைக் பாம்பி என்பவரோ இராணுவம் நினைத்தால் எந்தக் குடிமக்களையும் வாரன்ட் இல்லாமல் கைது செய்து எத்தனை காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்கிற (NDAA) சட்டப் பிரிவை ஆதரிப்பவர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிஷேல் ஃபின் என்பவர் ஒரு கடும் முஸ்லிம் வெறுப்பாளர்; உலகளவில் பயங்கரவாதத்திற்கான யுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படையாகப் பேசி வருபவர் இவர். ட்ரம்பின் மருமகனும் யூதக் கோடீசுவரனும், தண்டிக்கப்பட்ட ஒரு கிரிமினலுமான ஜாரெட் குஷ்னர் என்கிற யூத மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபர்தான் இப்போது அவரது அதிகாரபூர்வ ஆலோசகர். இவரது தந்தையும் வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக்கத் தண்டிக்கப்பட்டவர்தான். கடும் இஸ்ரேல் ஆதரவாளரான நிக்கி ஹேலி தான் இப்போது ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர்.

இந்தப் பட்டியல் போதும் என நினைக்கிறேன். ட்ரம்பின் அமெரிக்கா எங்கே போய்க் கொண்டுள்ளது என்பதை விளக்க.

#      #       #

ட்ரம்ப் பெரும் தொழில் வணிக நிறுவங்களின் மீதான தனது பிடியை குடியரசுத் தலைவர் ஆன பின்னும் விடத் தயாராக இல்லை. அவற்றின் நிர்வாகப்  பொறுப்புகள் அவரது இரு மகன்களிடமும் அளிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியா போன்ற ‘அமெரிக்க நண்பர்கள்’ ட்ரம்பின் சொகுசு ஓட்டல்களில் அறைகளை நிரந்தரமாக ‘ரிசர்வ்’ செய்து வைத்திருப்பது உட்பட அவரது தொழில் நலன்களுக்கு உதவி செய்வதன் ஊடாக நெருக்கம் பேணுகின்றன.

ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்க -இஸ்ரேல் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். மேற்குக் கரையிலும் (West Bank), கிழக்கு ஜெருசலேமிலும் இஸ்ரேல்  சட்டவிரோதமாக ஏற்கனவே உருவாக்கியுள்ள குடியிருப்புகள் தவிர இப்போது கூடுதலாக 5500 வீடுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டித்து ஐ’நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சென்ற டிச 23 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. கடந்த 36 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் இஸ்ரேல் மீது இப்படியான ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்துள்ளது. இதற்கு முன் இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களைத் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்து கொண்டே இருந்த வரலாற்றை முதல் முறையாக மாற்றி அமைத்த சாதனைக்குரியவரானார் ஒபாமா. அதற்காக இஸ்ரேல் அவர் மீது சீறிப் பாய்ந்தது. பதவிப் பொறுப்பை ஏற்பதற்காகக் காத்திருந்த ட்ரம்ப், “ஐ.நா விஷயத்தில் ஜன 20 க்குப் பின் நிலைமை வேறு விதமாக இருக்கும்” என ட்விட்டரில் பதிவு செய்தார்.

பதவி ஏற்றபின் இப்போது அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். அமெரிக்கா இது தொடர்பாக இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்பகுதிகளில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவது அமைதி திரும்புவதற்கு வழி வகுக்காது” என்று கூறியுள்ளதோடு நிறுத்திக் கொண்டுள்ளது.. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு ஏற்பு வழங்கப்படுவதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். தவிரவும் அமெரிக்கா தன் அறிக்கைகளில் எப்போதும் குறிப்பிடுகிற ,”இஸ்ரேலுக்கு அருகாக சுதந்திரமான பலஸ்தீன அரசு அமைக்கப்படும்” என்கிற வாசகத்தை இந்த முறை அது கைவிட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இன்னொரு பக்கம் டெல் அவிவில் இருக்கக் கூடிய தனது தூதரகத்தை கிழக்கு ஜெருசலேமுக்கு இடம் பெயர்ப்பது என்கிற சர்ச்சைக்குரிய அமெரிக்கக் கொள்கையை நிறைவேற்றும் பேச்சு வார்த்தைகளும் தொடங்கி விட்டன. 1967 ல் நடந்த “ஆறு நாள் போரின்” போது கிழக்கு ஜெருசலேமைத் தன்னுடன் இஸ்ரேல் இணைத்துக் கொண்டது. எனினும் இதை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் “ஜெருசலேமை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கக் கூடாது” எனச் சொல்லி அதன் மூலம் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்கிற கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது.. 1995 ல் தனது தூதரகத்தை கிழக்கு ஜெருசலேமுக்கு மாற்றுவது குறித்த சட்டத்தையும் அமெரிக்க காங்கிரஸ் இயற்றியது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் அதை நிறைவேற்றுவதற்கான கால கெடுவை அடுத்த ஓராண்டு காலத்திற்குத் தள்ளி வைத்துக் கொண்டே வந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்ட கால கெடு இன்னும் சில மாதங்களில் முடிய இருக்கும் நிலையில் இந்தப் பேச்சு வார்த்தை துவங்கப்பட்டுள்ளது. அப்படி அமெரிக்கத் தூதரகம் மாற்றப்பட்டால் ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலை நகரம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாக ஆகும். அமெரிக்கா அப்படிச் செய்தால் அது ஒரு போர்க் குற்றமாகக் கருதப்படும் என பலஸ்தீனம் கூறுகிறது.

#     #     #

இந்தப் பின்னணியில்தான் ஜனவரி இறுதியில் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட “முஸ்லிம் தடை” ஆணையை நாம் பார்க்க வேண்டும். இந்த நிர்வாக ஆணை வெளியிடப்படுவதற்கு முன்பே, பிரச்சினை தொடங்கி விட்டது. ட்ரம்ப் பதவிப் பொறுப்பை ஏற்ற கணம் தொடங்கி எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த நாடுகளிலிருந்து சட்டபூர்வமான ஆவணங்களுடன் வருகிற முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் விசாரணை செய்து அவர்கள் ஏறிய விமான நிலையத்திற்கே பலர் திருப்பி அனுப்பப் பட்டனர். சொந்த நாட்டிற்குத் திரும்பினால் ஆபத்து என்கிற நிலையில் வரும் அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்கிற விதிமுறைகளை மீறி அவர்கள் திருப்பி அனுப்பவும் பட்டனர். சிலர் விசாரணைக்குப் பின் சிறையிலடைக்கவும் பட்டனர். படித்துக் கொண்டிருந்த மாண்வர்கள், ‘கிரீன் கார்டு’ வைத்திருந்தோர், சொந்த நாட்டிற்குச் சென்று வந்த இரட்டைக் குடியுரிமை உடையோர், அமெரிக்கக் குடியுரிமை உடையவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகிய குழப்பம் நிறைந்த சூழலில்தான் ஜனவரி இறுதியில் அந்த முஸ்லிம் தடை ஆணை வெளியிடப்பட்டது.

இதன்படி ஈரான், ஈராக், சிரியா, ஏமன், லிபியா, சூடன், ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்கள், அவர்கள் உரிய விசா முதலிய ஆவணங்களை வைத்திருந்தாலும் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரக் கூடாது; அவர்கள் விசா முதலியன இல்லாத அகதிகளாயின் 120 நாட்களுக்குத் தடை. சிரிய நாட்டு அகதிகளாயின் அவர்களுக்கு ஆயுளுக்கும் தடை – இதுதான் அந்த ஆணை.

இதில் மிகவும் வியப்பான ஓரம்சம் என்னவெனில் இந்த மேற்காசிய மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேந்த ஏழு நாடுகளில் ஆறு இதே போன்ற  இன்னொரு பட்டியலிலும் உள்ளதுதான். இந்தப் பட்டியல் அமெரிக்க ஜெனரல்களில் ஒருவரான வெஸ்லி கிளார்க்கிடம் ஒரு பென்டகன் அதிகாரி 2001 ல் தந்ததாகச் சொல்லபடுகிறது.. 9/11 தாக்குதலுக்கு ஏழு வாரங்களுக்குப் பின் இது நடந்தது என்கிறார் சந்திரா முசாஃபர். (Chandra Muzaffar, Global Research, January 31, 2017).
இப்போது ட்ரம்ப் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள ஏழு நாடுகளில் யேமன் மட்டும் அந்தப் பழைய  பட்டியலில் இல்லை. பதிலாக லெபனான் அதில் இடம்பெற்றிருந்தது. 9/11 க்குப் பதிலடியாக  அமெரிக்கா தாக்கப் போகிற நாடுகளின் பட்டியல் இது என அப்போது சொல்லப்பட்டது. முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் முன்னாள் அதிகாரிகள் டொனால்ட் ரும்ஸ்ஃபீல்ட், பால் வொல்வோவிட்ஸ் முதலானோர் தீட்டிய திட்டம் இது என கிளார்க்கும் பிறரும் வெளிப்படயாகக் குற்றம் சாட்டினர். இதற்குச் சொல்லப்பட்ட காரணம் “பாதுகாப்பு”. இதன் மூலம் அமெரிக்க இராணுவ ஆதிக்கம் அப்பகுதியில் உறுதிப்படுதல் என்பது ஒரு பக்கம். அதைக் காட்டிலும் இப்பகுதியில் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்துவதே அவர்களின் உண்மையான நோக்கம் என்கிறார் சந்திரா.

 

ராபெர்ட் காகன் போன்றோர் உருவாக்கிய ‘புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்’ (Project for a New American Century (PNAC)) ஓரங்கம் இது. அமெரிக்காவின் திட்டங்களுக்கு இந்த நாடுகள் உடன்படுவதில்லை என்பதோடு ஈரான் போன்றவை கடுமையாக அமெரிக்காவை எதிர்ப்பவை என்பது குறிப்பிடத் தக்கது. இடைப்பட்ட காலத்தில் இந்த நாடுகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்ட வரலாறை நாம் அறிவோம்.
இப்போது இந்த ஏழு நாடுகளின் மீது தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா சொல்கிற காரணம் அபத்தமானது.  பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்வதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால்  இந்த நாடுகளால் அத்தகைய ஆபத்து உள்ளது என்பதற்கு அவர் எந்தச் சான்றையும் முன்வைக்கவில்லை. இதுவரை அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களில் இந்த நாடுகளைச் சேர்ந்தோர் யாரும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. 3000 பேர்கள் கொல்லப்பட்ட 9/11 தாக்குதலில் விமானங்களைக் கடத்தியதாகச் சொல்லப்படும் 19 பேர்களில் யாரும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கலில் 15 பேர்கள் சவூதி நாட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்தச் சவூதி மன்னரோடுதான் இப்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து போனில் கலந்தாலோசித்துக் கொண்டுள்ளார் ட்ரம்ப். 9/11 தாக்குதலில் யுனைடெட் அராப் எமிரேட்ஸ் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அந்த நாடுகளும் இன்றைய பட்டியலில் விடுபட்டுள்ளன.ட்ரம்ப்பின் தனிப்பட்ட ‘பிசினஸ்’ நலன்கள் தவிர இந்த விடுபடல்களுக்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

 

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவிலும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் உருவாயின. தன்னிச்சையாகத் திரண்ட ஏராளமான மக்கள் விமான நிலையங்களிலும் பொது வெளிகளிலும் ஆர்பாட்டங்களை நிகழ்த்தினர். இதற்கிடையில் அப்போது அட்டர்னி ஜெனெரலாக இருந்த சாலி யேட்ஸ் இந்த ஆணை செல்லாது எனவும் அதை செயல்படுத்த வேண்டிய கடமை தொடர்புடைய துறைகளுக்கு இல்லை எனவும்  அறிவித்தார். அவரைப் பணி நீக்கம் செய்து ட்ரம்ப் வேறொருவரை நியமித்தார். இதற்கிடையில் இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ட்ரம்பின் ஆணைக்குத் தற்காலிகத் தடை விதித்தது.

 

உலக அளவிலும் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டன. பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்கிற பெயரில் இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களைச் சந்தேகத்திற்குரியவர்களாகக் கட்டமைக்க வேண்டியதில்லை என ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மார்கெல் அறிவித்தார். பிரிட்டனுக்கு ட்ரம்ப் செல்ல இருந்த திட்டம் இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது 1.25 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ட்ரம்ப் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என்கிற மனுவில் கையொப்பமிட்டுள்ளதன் பின்னணியில் இது நடந்துள்ளது.

 

இதையெல்லாம் கண்டு கொள்ளாத நாடுகளில் முக்கியமான ஒன்று இந்தியா.

 

பேரழிவு ஆயுத வணிகம்

(‘இளைஞர் முழக்கம்’ இதழ் மார்ச் 2011 மற்றும் ஜூன் 2011 ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரை)

உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என இளம் தோழர்கள் என்னிடம் கேட்டபோது என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ‘உலகம்’ ‘ஆயுதம்’, வணிகம் என்கிற மூன்று சொற்களில் முதல் சொல் மட்டுமே இன்றைய நிலையை விளக்க உதவும் என எனக்குத் தோன்றியது. இன்றைய உலகின் மூலை முடுக்குகள் வரை ஆயுத வணிகம் எட்டியுள்ளது. சிறிய கொலை ஆயுதங்கள் முதல் மிகப்பெரிய ஏவுகணைகள், விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை இன்று ஆயுதச் சந்தைகளில் கிடைக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி ஆயுதம் தாங்கிப் போர் செய்கிற குழுக்கள், இயக்கங்கள் யாரும் ஆயுதங்களை வாங்க இயலும். இணையத் தளங்களில் “ஆர்டர்’’ கொடுத்து ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒருவர் வாங்கிவிட இயலும். இந்த வகையில் ‘உலகம்’ என்கிற சொல் அடுத்த கிரகங்களில் நாம் குடியேறாத வரையில் பொருத்தமானதுதான்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி, எறிகுண்டு என்கிற நிலை எல்லாம் தாண்டி இன்று மிகப்பெரிய பேரழிவுகளை கண நேரத்தில் உருவாக்கி கோடிக்கணக்கான மக்களைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் உருவாகிவிட்டன. இன்றைய குறிக்கோள் இத்தகைய பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகத்தான் உள்ளது. எனவே வெறுமனே ஆயுதம் என்று சொல்லாமல் ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம்.

‘வணிகம்’ என்கிற சொல் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவருக்கொருவர் பொருட்களை விற்று, வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்கிற விவகாரமல்ல இது. பல வணிகர்கள் மத்தியில் பொருட்களைப் பார்த்து யாரிடம் வாங்குவது எனத் தேர்வு செய்கிற சுதந்திரமும் இங்கில்லை. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் இவ்வணிகத்தில் ஒரு சிலரே வியாபாரிகள். மற்ற எல்லோரும் வாங்குபவர்கள்தான். ஆக இது ஒரு ஏகபோக வணிகம். ஏகபோகத்திற்கான அத்தனை கொடூரப் பண்புகளும், விளைவுகளும் இதில் வெளிப்படுகிறது. ஆக இதனை ‘உலகப் பேரழிவு ஆயுத ஏகபோக வணிகம்’ (Global weapons monopoly) எனச் சொல்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

இராணுவச் செலவுகளுக்கே உலகம் இன்று ஆண்டொன்றுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. உலக மொத்த உற்பத்தில் சுமார் மூன்று சதம் இப்படிச் செலவழிக்கப்படுகிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை “பாதுகாப்பு ’’க்கென செலவழிப்பதை அறிவோம். 2006ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நூறு அழிவாயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 315 பில்லியன் டாலர்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் பனிப்போர் முடிவடைந்ததை ஒட்டி கொஞ்ச காலத்திற்கு அழிவாயுத விற்பனை குறைந்திருந்தது. எனினும் விரைவில் சாவு வணிகங்கள் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்கிற சொல்லாடலையும் அதையட்டி உலகம் மாறிப்போன கதையையும் நாம் அறிவோம். எனவே மறுபடியும் 2003 தொடங்கி அழிவாயுத விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் காங்கிரசுக்கான ஆய்வுச் சேவை (Congressional Research Service) அவ்வப்போது அழிவாயுத வணிகம் குறித்து ஆய்வறிக்கைகளை அளித்து வருகிறது. இணையத் தளங்களில் இவற்றைக் காணலாம். 2008ஆம் ஆண்டு அறிக்கையின்படி அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அழிவாயுத விற்பனை ஒப்பந்தங்களின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர். இதில் அமெரிக்காவின் பங்கு 37.8 டிரில்லியன் டாலர். அதாவது மொத்தச் சாவு வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 68.7 சதமாகும்.

சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் (1990) மொத்த அழிவாயுத விற்பனை 32.7 பில்லியன் டாலராகவும், இதில் அமெரிக்காவின் பங்கு 10.7 பில்லியனாகவும் இருந்தது. எவ்வளவு வேகமாக அமெரிக்கா இந்த அழிவாயுத விற்பனையில் வளர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

அழிவாயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிற்கிற நாடுகளாக உள்ளவை ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், சீனா, இஸ்ரேல், நெதர்லான்ட், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, உக்ரேன், கனடா ஆகியன. இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்கிற அழிவாயுத வணிகம் மொத்தத்தில் 32 சதம். சாவு வணிகத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு ஏகபோகம் கொண்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அழிவாயுதங்களை யார் அதிகம் வாங்குகின்றனர்? எந்தெந்த நாடுகள் இத்தகைய அழிவாயுத இறக்குமதிக்கு அதிகம் செலவிடுகின்றன? இந்த விஷயத்தில் பிற எல்லா நாடுகளையும் ‘பீட்’ பண்ணி நம்பர் ஒன்னாக நின்று அமெரிக்க விசுவாசம் காட்டிக் குழைகிற நாடு இந்தியா.

2000 த்தில் மட்டும் 911 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழிவாயுதங்களை அது இறக்குமதி செய்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரித்து 2003இல், 2802 பில்லியன் டாலராகவும், பின்பு சற்றுக் குறைந்து, மீண்டும் 2007இல், 2179 பில்லியன் டாலராகவும், 2009இல், 2116 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிச் செலவை 158 பில்லியன் டாலரிலிருந்து 2000 த்தில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2009ல் இது 1146 பில்லியன் டாலராக இருந்தது. பிற முக்கியமான ஆயுத இறக்குமதி நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிரீஸ், தென்கொரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், சீனா, நார்வே ஆகியன. சீனாவைப் பொருத்தமட்டில் படிப்படியாக தனது அழிவாயுத இறக்குமதிச் செலவை 2015 பில்லியன் டாலரிலிருந்து (2009)ல் 595 பில்லியன் டாலராக 2009 ல் குறைத்துள்ளது. அதுவே ஒரு ஆயுத ஏற்றுமதி நாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

பஞ்சைப் பராரி நாடுகளெல்லாம் இத்தகைய அழிவு ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகைகளைப் பார்க்கும்போது நமக்குப் பகீரென்கிறது. அமெரிக்க இராணுவ மையமான பென்டகனின் தரவுகளின்படி கம்போடியா (3.04 லட்சம் டாலர்), கொலம்பியா (256 மில்லியன் டாலர்), பெரு (16.4 மில்லியன் டாலர்), போலந்து (79.8 மில்லியன் டாலர்) ஆகியன அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கின்றன. பென்டகனின் இன்னொரு அறிக்கையின்படி 2008இல் அமெரிக்காவுடன் அழிவாயுத இறக்குமதி ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளான, சவூதி அரேபியா (6.06 பில்லியன் டாலர்), ஈராக் (2.5 பில்லியன்), மொராக்கோ (2.41 பில்லியன்), எகிப்து (2.31 பில்லியன்), இஸ்ரேல் (1.32 பில்லியன்), ஆஸ்திரேலியா (1.13 பில்லியன்), தென்கொரியா (1.12 பில்லியன்), பிரிட்டன் (1.1 பில்லியன்), இந்தியா (1 பில்லியன்), ஜப்பான் (840 மில்லியன்).

1987ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் கோஸ்டாரிகாவின் குடியரசுத் தலைவருமான ஆஸ்கார் ஏரியஸ் சான்செஸ் கூறினார். “கல்வி, வீட்டு வசதி, மருத்துவம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு அழிவாயுதங்களில் முதலீடு செய்வதென ஒரு நாடு முடிவு செய்யுமானால் ஒரு தலைமுறையினரின் வாய்ப்புகளையும், நல்வாழ்வையும் அது புறந்தள்ளுகிறது என்றே பொருள். இந்தப் புவியில் வாழ்கிற ஒவ்வொரு பத்து மனிதருக்கும் ஒரு கொலை ஆயுதத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் நம்மால் சாத்தியம்தான் என்றாலும் பசியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. மொத்த அழிவாயுத வணிகத்தில் முக்கால் வாசியை பின் தங்கிய நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நமது சர்வதேச நெறிமுறைகள் வழிவகுக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ஏதுமில்லை. இந்த ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பொறுப்புகள் எதையும் சர்வதேச நெறிமுறைகள் ஆயுத விற்பனை நாடுகள் மீது சுமத்துவதுமில்லை.’’

ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா

 

அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இரண்டு வழிகளில் ஆயுத விற்பனை செய்கின்றனர். முதலாவது அயல் இராணுவ விற்பனைகள் அமெரிக்க இராணுவ கேந்திரமான பென்டகன் ஊடாக இரு அரசுகளுக்கிடையே நேரடியாக பேரம்பேசி விற்கப்படுவது இது. மற்றது நேரடி வர்த்தக விற்பனைகள். இதில் ஆயுத கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாடுகளுடன் பேரம்பேசி அரசியல் உரிமம் பெற்று விற்பது. இந்த பேரத்தில் ஏராளமான ஊழல்களுக்கு இடமுண்டு.

இது தவிர அமெரிக்க அரசு தனது இராணுவ ஆயுதக் கிடங்குகளிலிருந்து மிகக் குறைந்த விலையிலும். சமயங்களில் இலவசமாகவும் தனக்கு வேண்டிய நாடுகளுக்கு கொடுப்பதும் உண்டு. தேவைக்கு அதிகமான பாதுகாப்புப் பொருட்களாக ஒதுக்கப்பட்டவை என இதற்கு பெயர். இது தவிர பிறநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சிகள் அளிப்பது பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சி எடுப்பது என்பதெல்லாம் இன்று அதிகமாகியுள்ளதை நாம் அறிவோம். செப்டம்பர் 11, 2011க்கு பிறகு இவை இன்னும் அதிகமாகியுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி,ஏ,ஈ சிஸ்டம்ஸ், போயிங், ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எஃப் ஆகிய ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள். இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். ஏழாவது மட்டுமே பிரான்சுடையது.

“சிறு ஆயுத விற்பனை” பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர், துணை இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரும் கூட அதிகம் பயன்படுத்தும் ஆயுதங்களான கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல்கள்) ஃரைபில்கள், எந்திரத் துப்பாக்கிகள், தாக்குதல் ரைப்பில்கள், எறிகுண்டு வீசிகள் எடுத்துச்செல்லக்கூடிய டாங்கி மற்றும் விமானங்களைச் சுடும் பீரங்கிகள் முதலியவை பெரிய அளவில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. இவற்றை ரொம்பவும் விலை மலிவாகவும், எளிதாகவும் யாரும் வாங்கக்கூடிய நிலை இன்று உள்ளது. அரசுகள் மட்டுமின்றி போராளிக் குழுக்கள், மாஃபியா கும்பல்கள், கடற் கொள்ளையர்கள், கடத்தல்காரர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள் எல்லோரும் இத்தகைய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கார்ப்பரேட்டுகள் இந்த விற்பனையைச் செய்கின்றனர். அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை.

உலகம் என்பது இன்று மிகப்பெரிய போர்களின் களமாக உள்ளது. 36 நாடுகளில் நடைபெறும் 40 ஆயுதப் போராட்டங்களுடன் 21ம் நூற்றாண்டு விடிந்தது 2000யில் வெளியிட்ட கணக்கு) சிவில் யுத்தம் (உள்நாட்டுப் போர்) நடைபெறும் பல நாடுகளில் போரே வாழ்வாக மாறியுள்ளது. கண்முன் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களைப் பார்த்தவர்கள் நாம். உள்நாட்டுப் போர் என்பது உன்னத அரசியல் இலட்சியங்களுக்காக மட்டுமின்றி, நிதி சேகரிப்பதற்காக, போரால் கல்வி இழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக என்றெல்லாம் போருக்குப் பன்முகப் பரிமாணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதலிய பகுதிகளில் குழந்தைகள் முதலில் அறிந்து கொள்ளும் பொருட்களில், தெரிந்துகொள்ளும் மொழிகளில் பல வகைத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் ஆகியன அடங்கும். இத்தகைய சூழலில் திருட்டு ஆயுத வணிகம் பல்கிப் பெருகியுள்ளதை விளக்க வேண்டியதில்லை. உலகில் மிகப் பெரிய அளவில் இன்று கள்ள ஆயுத வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதம் பற்றி இன்று வாய் கிழியும் அமெரிக்கா ஏகப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கிய கதைகளை நாம் அறியலாம். கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் கூட இப்படி வளர்க்கப்பட்டவர்தான். சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒசாமா உள்ளிட்ட முஜாஹிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா. நாடுகளுக்கிடையே சோதனை இல்லாமல் பெரிய அளவில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1985ல் இத்தகைய ஆப்கன் முஜாஹிதீன்களை வெள்ளை மாளிகையில் வைத்துப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீசன், அமெரிக்காவை உருவாக்கிய நமது தந்தையர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று இன்னொரு நாட்டு எல்லைக்குள், அந்நாட்டின் அனுமதியின்றி நுழைந்து ஒசாமாவையும், கூட இருந்தவர்களில் சிலரையும் சுட்டுக் கொன்று ஒசாமாவின் உடலைக் கடலில் தூக்கி வீசி எறிந்திருக்கிறது அமெரிக்கா இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது ஒசாமாவை உயிருடன் பிடித்தப்பின் சுட்டதாகச் செய்தி ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன், நடேசன், புலித்தேவன் முதலியோரை நாங்கள் இப்படிக் கொன்றதை மட்டும் பெரிது படுத்துகிறீர்களே என்கிற ரீதியில் இலங்கையில் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியும் உள்ளார். ஒருவரை ஒருவர் உதாரணம் காட்டித் தத்தம் கொடுமைகளையும் சிவிலியன்களுக்கு (பொதுமக்களுக்கு) எதிரான தாக்குதல்களையும் நியாயப்படுத்தி கொள்வதற்கு இன்னொரு பெயர் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்.

1989முதல் 1998க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆப்பிரிக்க இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகள் அளித்த வகையில் மட்டும் அமெரிக்கா 227 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. பயனடைந்த நாடுகளில் பல உள்நாட்டு மக்களைக் கொன்று குவித்தவை. அவற்றில் சில காங்கோ, அங்கோலா, புருண்டி, ருவாண்டா, சூடான், உகாண்டா மற்றும் ஸிம்பாப்வே.

இவை தவிர இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல், சைனா, தய்வான், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் அமெரிக்கா, ப்ரான்சு, பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி முதலிய நாடுகள் ஆயுதங்களை விற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் உள்நாட்டுப் போராளிகள், சிறுபான்மை மொழி மற்றும் இனத்தினர், மதத்தினர், பழங்குடியினர் ஆகியோரின் மீது ஆயுதத்தாக்குதலை நடத்திய, நடத்துகிற நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது,ஆயுத விற்பனை செழிப்பதற்கு போர்கள் அவசியம். போர்களற்ற அமைதியான உலகை ஆயுத விற்பனையாளர்களால் சகித்துக்கொள்ள இயலாது. பல நாட்டு இராணுவங்களுக்கும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிப்பதில் இந்தப் பின்னணியும் சேர்ந்து கொள்கிறது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அரசு படைகளுக்கும், ருவாண்டா மற்றும் உகாண்டாவில் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் அமெரிக்க அரசு பயிற்சி அளித்தது. சட்டபூர்வமான ஆயுத விற்பனை தவிர சட்டபூர்வமற்ற இந்த ஆயுத உதவி மற்றும் விற்பனை சென்ற இதழில் நான் முன்வைத்த புள்ளி விவரங்களில் அடங்காது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாத நாடுகள் மனித உரிமை மீறல்கள் புரிகிற நாடுகள் ஆகியவற்றிற்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் (1999ம் ஆண்டு அமெரிக்க சர்வதேச ஆயுத விற்பனை நடத்தை விதி ஆகியன வரைமுறைகளை விதித்துள்ளதாம்) இவை அனைத்தும் ஏட்டோடு சரி, துருக்கி, இந்தோனேசியா, சவூதி, இலங்கை உட்பட மனித உரிமை மீறல்கள் புரிந்த பல நாடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி உதவிகளை செய்துவந்துள்ளன.

இன்னொன்றும் நம் கவனத்திற்குரியது மிகப்பெரிய அளவு ஊழல்கள் நடைபெறும் துறையாகவும் ஆயுத விற்பனை உள்ளது. இத்துடன் இணைந்த தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசியம் முதலான சொல்லாடல்கள் ஊழலை ஊற்றி வளர்க்கின்றன. மிகப்பெரிய அளவில் குவட்ரோஷி போன்ற இடைத்தரகர்கள் (போபர்ஸ் ஊழல்) இதில் இலாபம் குவிக்கின்றனர். கார்ப்பரேட்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி யுத்த பீதியை ஏற்படுத்திப் பரப்புவது முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ சிவில் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, எதிரி நாட்டு இராணுவ முன்னேற்பாடுகள் குறித்துப் பொய்யான தகவல்களை பரப்பி போட்டியை ஊக்குவிப்பது, உள்நாட்டு ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து போருக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கிடையே இரகசிய கூட்டுகளை உருவாக்கி ஆயுதங்களின் விலையை அபரிமிதமாக உயர்த்துவது முதலியன ஆயுத விற்பனையை அதிகரிக்க கார்ப்பரேட்டுகள் மேற்கொள்ளும் உத்திகள்.

இது ஏகாதிபத்திய விரிவாக்க அரசியலுடன் தொடர்புடைய விஷயமாக இருப்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் மானியங்களை அரசுகள் வழங்குகின்றன. ஆயுத விற்பனை தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் விதிக்கப்படுகிற நிபந்தனைகள் தேசியப் பாதுகாப்பு என வருகிற போது பொருந்தாது என்கிற பிரிவு சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. போலந்து அரசிற்கு விமானங்கள் வழங்கியதற்கு லாக்கதீடு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் மானியம் வழங்கியது சமீபத்திய எடுத்துக்காட்டு. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களின் முக்கிய பணியே தமது நாட்டிலுள்ள ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக செயல்படுவதுதான். இந்தியாவில் தற்போதைய அமெரிக்க தூதர் இன்று பதவி விலகியுள்ளார். ஒரு முக்கிய ஆயுத பேரம் ஒன்றில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒன்று பயனடையாமல் போனதே இதற்கு காரணம் எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

2011 செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா பிறநாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வது மற்றும் ஆயுத உதவிகளைச் செய்வது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பாதுகாப்பு தகவல் மையம் கூறுகிறது. மிகப்பெரிய பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள இந்நிறுவனம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதாக வாக்களித்துள்ள நாடுகளுக்கு வேறெப்போதையும் விட அதிக அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் முதலான அடிப்படையில் ஆயுத விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா பெரிதும் திருத்தி அமைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2002 பிப்ரவரி 4 தேதி இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உதவி செய்த நாடுகளுக்கு இவை இது தொடர்பாக செய்த செலவுகளை ஈடுகட்ட 390 மில்லியன் டாலர்களையும் வேறுசில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக 120 மில்லியன் டாலர்களையும் பிற சட்ட விதிகளின் தடையை மீறி அளிக்க பாதுகாப்பு துறைக்கு ஒப்புதலையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை அளித்துள்ளது.

திருட்டுத்தனமாக ஆயுதங்களை உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்து அதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் இந்நாடுகள் ஈடுபடுவதற்கு புரூலியா விவகாரம் தற்போதைய நடைமுறைச் சாட்சியாக உள்ளது. மேற்குவங்க இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்கு நரசிம்மராவ் அரசு துணைபோகியுள்ளதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆக்ஸ்டாம் இன்டர்நேஷனல் சிறு ஆயுதவிற்பனை தொடர்பான சர்வதேச வலைப்பின்னல் முதலான அமைப்புகள் ஆயுத விற்பனைக் கட்டுபாடுகளை ஏற்படுத்துவதற்கான பன்னாட்டு ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது அமெரிக்கா. புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவரை இது தொடர்பான பேச்சு வார்த்தைகளிலே கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒபாமா ஆட்சிக்கு வந்த பின் மாறியுள்ள சூழல்களின் விளைவாக வேறு வழியின்றி சென்ற 2009 அக்டோபர் 15 ல் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா கலந்து கொண்டது.

எனினும் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஹில்லாரி கிளின்டன் இது தொடர்பான எந்த முடிவும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடனேயே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிற பிரிவை மேற்குறித்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். அதாவது எந்த ஒரு நாடாவது மறுப்பு தெரித்தால் அந்த முடிவு நடைமுறைக்கு வராது. இது உள்ளிருந்து கெடுக்கும் வேலை என பல நாடுகள் பேசியதன் விளைவாக இறுதியாக ஹில்லாரி இதை வற்புறுத்தவில்லை. 2012க்குள் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இன்று உள்ளது. இதற்கென 2010 ஜூலையில் ஒரு தயாரிப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் இதற்கெதிராக பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றையும் நடத்தினர். ஆயுதங்கள் குற்றசம்பவங்களுக்கு பயன்படுத்துமானால் அந்த நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என நிபந்தனை விதித்தால் அது அமெரிக்காவின் இரண்டாம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு துப்பாக்கியை குற்றச் செயலுக்கு பயன்படுத்தினால் அந்த நாடே அதற்கு பொறுப்பு. இது தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பறிக்கும் எனவும் ஆயுதப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். தொலைகாட்சி தொடர்கள் தடைசெய்யப்படுதல் என்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருக்கும் எனவும்! கூறி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடக்கூடாது என இவர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பல மூன்றாம் உலக நாடுகள் ஏழ்மையிலும், பஞ்சத்திலும், கடனிலும் அமிழ்த்தப்படுவதற்கு ஆயுத விற்பனையே காரணம். ஆயுத விற்பனைச் சந்தையாக இன்று மூன்றாம் உலக நாடுகளே உள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தில் 19 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. பொது நலத்திற்கு வெறும் ஒரு சதம், கல்விக்கு 5 சதத்திற்கும் குறைவே என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தான் இதன் அபத்தம் புரியும். ஆனால் இதை யாரும், எதிர்கட்சிகளும் கூட வலுவாக எதிர்க்கவில்லை. தேச பாதுகாப்பில் அக்கறையில்லை என்கிற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற அச்சமே காரணம்.

தேசபாதுகாப்பு என்பது இராணுவத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகிவிடுவதில்லை. பகைக்கான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே தேசபாதுகாப்பை உறுதி செய்யமுடியும். தேவையற்ற தேசிய வெறி, பேச்சுவார்த்தைகளை நம்பியிராத வல்லரசு வெறி ஆகியவையே போர்களுக்கும், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் காரணமாகின்றன. அரசியல் தீர்வு அண்டை நாடுகளுடன் சமாதானம் ,ஆக்கிரமிப்பு படைகளை திரும்பப்பெறுதல் ஆகிய முழக்கங்கள் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும் போதே அது வெற்றி பெறும். ஆயுத விற்பனையிலும் உலக மேலாதிக்கத்திலும் முன்னிற்கும் அமெரிக்காவை நம்பி பிழைக்கும் அரசுகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதொன்றே நமது இன்றைய உடனடிப்பணியாக இருக்க முடியும்.

 

 

தேவயானி விவகாரம் : இந்திய அமெரிக்க உறவில் விரிசலா?

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடி போலச் செயல்பட்ட இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளிப்பட்ட போது கூட இந்திய அரசு அடக்கியே வாசித்தது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா இதனை “உளவெல்லாம் இல்லை சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான் (computer analysis)” என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்று.

ஆனால் இன்று இந்தியாவெங்கிலுமுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன, டில்லியிலுல்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும் கூட அகற்றப்பட்டுள்ளன.

“உலகளாவிய பங்காளிகள்” (global partners) எனக் கூறிக் கொண்டு அமெரிக்காவுடன் கைகோர்த்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்கப் போர்க்கப்பலான நிமிட்சின் வருகைடீந்திய அரசின் இறையாண்மையையும் கூட விட்டுக் கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையிலிருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது ஆகியவற்றிற்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்த காங்கிரஸ் அரசின் இன்றைய நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பா.ஜ.கவும் முழுமையாக இந்தப் பிரச்சினையில் அரசை ஆதரிக்கிறது.

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கியதாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அபெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்தற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961)’ தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து சில காப்புரிமைகளை (diplomatic immunity) வழங்கியுள்ளது. எனினும் இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள் நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. தவிரவும் இந்தக் காப்புரிமை தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக் கொள்கின்றன. கடுங் குற்றச்சாட்டுகளில் கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக் கொடுப்பதில்லை.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணி புரிந்த வான் கோதம் என்கிற கடற்படை வீரன் குடித்துவிட்டுக் காரோட்டிச் சென்றதோடு சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்ந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு ஜெர்மனிக்கு ஓடவும் செய்தான் வான் கோதம். அமெரிக்கா தூதரகக் காப்புரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தது. அவனை ருமேனியாவுக்கு அனுப்பாமல் தானே இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.

2001 ஜனவரியில் கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் ஆந்த்ரே கினைசேவ் என்கிற ருஷியத் தூதரக அதிகாரி காரோட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் அங்கேயே இறந்து போனார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார். ருஷ்யாவும் காப்புரிமையை ரத்து செய்யாததோடு அந்த அதிகாரியைக் கனடாவுக்கு அனுப்பவும் மறுத்தது. தங்கள் நாட்டுச் சட்டப்படி விசாரித்துத் தண்டனை வழங்கியது.

ஆனால் சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தன. 1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவிற்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே இப்படிக் குடித்து விட்டுக் காரோட்டி மோதியதில் நால்வர் காயமடந்து ஒரு பெண் கொல்லப்பட்டார், ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.

அமெரிக்கா இன்னும் தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட்பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதிய சட்டங்களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்” என்றார். அந்தச் சந்திப்பின் போது அவர் “ரொம்பத் திமிராக” நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது (பிப்ரவரி 2, 2007).

சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். “எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல” அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின (இந்து, மார்ச் 27, 2007).

இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. அய்.நா அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பரம்பரியமான அணி சேராக் கொள்கையிலிருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (elite clubs) இடம் பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டியுள்ளது. ஆனால் இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப் போவதில்லை. அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும். இந்தியாவின் கணடனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் சற்றுமுன் கூறப்பட்டுள்ளது.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா என்கிற இரு தரப்பையும் தாண்டி இன்னொரு மூன்றாவது தரப்பும் உள்ளது அது அந்தப் பெயர் தெரியாத வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல இவளும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால் அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்.

பன்னாட்டுச் சட்டங்கள் இது குறித்து என்ன சொல்கின்றன?

சட்டத்துறை ஆய்வு மாணவர்கள் இருவர் எழுதிய முக்கிய கட்டுரை இது. தேவயானி பிரச்சினையில் நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்கள்: 1) தூதர்களுக்கு உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் 1961ம் ஆண்டு வியன்னா உடன்பாடு தூதர்களுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பை வழங்குகிறது. துணைத் தூதர் தேவயானி தூதராலயப் பணியுல் உள்ளவர் மட்டுமே. அவருக்கு 1961ம் ஆண்டு அளிக்கும் பாதுகாப்பு செல்லுபடியாகாது.

2) தூதரகப் பணியாளர்களுக்கு இத்தகைய பாதுகாப்பை 1963ம் ஆண்டு வியன்னா உடன்பாடு அளிக்கிறது. ஆனால் இது 1961ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் பாதுகாப்பைப்போல முழுமையானது அல்ல. கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலோ அல்லது உரிய நீதிமன்ற ஆணை இருந்தாலோ அவரைக் கைது செய்யலாம். தவிரவும் தூதரகப் பணிகளுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு உண்டு.

3) தேவயானியின்மீதான குற்றச்சாட்டிற்கு அமெரிக்கச் சட்டப்படி 5ஆண்டு வரை தண்டனை உண்டு. அதாவது இது கடுங் குற்றவகையைச் சேர்ந்தது. அதோடு தேவயானி, நியூயார்க்கின் தென் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் டேரா ஃப்ரீமன் அளித்துள்ள ‘வாரன்ட்’டின் படியே கைது செய்யப்பட்டுள்ளார்.

4) ஆக, தேவயானியின் கைதைப் பொருத்தமட்டில் அது பன்னாட்டுச் சட்டத்தின்படி சரியானதே. எனினும் 63ம் ஆண்டு உடன்பாட்டின்படி அவரது பதவிக்குரியவகையில் விசாரணையின்போது அவர் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவர் நடத்தப்படவில்லை என்பது மட்டுமே இதில் சட்ட மீறல்.

5) தூதர்களுக்கான 63ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் முழுப் பாதுகாப்பையும் தேவயானி பெறுவதற்காகவே இன்று அவரை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா அவையின் தூதரக முகவராகப் பணி உயர்வு அளித்துள்ளது. இது பன்னாட்டுச் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவது (abuse of international law) ஆகும். இது குறித்த ஐ.நா அவையின் 1946ம் ஆண்டுச் சட்டத்தின்படி ஐ.நா தூதர்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பாதுகாப்பு ஐ.நா அவைப் பணிகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபரின் சொந்தப் பலன்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது. தேவயானிக்கு அளிக்கப்படும் இந்தப்பதவி உயர்வு அவரை அவர் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிற, ஐ.நா அவையின் பணிக்குத் தொடர்பில்லாத ஒரு குற்றச்சாட்டிலிருந்து தப்புவிப்பதற்காகவே செய்யப்படுகிறது, இது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குற்றம்.

6) அமெரிக்க நடவடிக்கைக்காக இந்தியா எடுத்துள்ள எதிர் நடவடிக்கைகளில், அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தூதுக் குழுக்களைச் சந்திக்க மறுப்பது என்பதெல்லாம் அரசியக் சார்ந்த விஷய. ஆனால் தூதரகங்களுக்கு அளித்துள்ள பாதுகாப்புக்களை நீக்குவது முதலியன பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிரானவை. வேண்டுமானால், அதுவும் ஒரு இறுதி நடவடிக்கையாக, தன் நாட்டுத் தூதரை நீக்கிக் கொள்வது, சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வது முதலான எதிர் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

7) இந்தியா இது தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றத்தை (ICJ) அணுக இயலாது. ஏனெனில் அமெரிக்கா, பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.