ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்

[ஆனந்த விகடன் ‘செய்தியும் சிந்தனையும்’ தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப் பேசியவை]

1. இடியும் கட்டிடங்கள் சாகும் தொழிலாளிகள்..

இரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக இடிபாடுகளில் சிக்கி மக்கள் இறந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போன வாரம் முகலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் செத்துப் போனாங்க. நேற்று பொன்னேரிக்குப் பக்கத்தில ஒரு தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்படப் 11 பேர் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறாங்க.

இரண்டிலுமே செத்துப் போனவங்க எல்லோரும் கட்டிடத் தொழிலாளிகள். நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தவிர ஆந்திரா, ஒடிசா முதலான மாநிலங்களிலிருந்து தொழில் செய்து பிழைப்பதற்காக இங்கு வந்து குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருந்த வெளி மாநிலத் தொழிலாளிகள்.

பெரிய அளவு மழை வெள்ளம் கூட இல்லை. பருவ மழை இப்போதுதான் தொடங்கி இருக்கு. அதற்குள் இந்த விபத்துக்கள். இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இப்படி கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் சாவது அதிகமாகி வருது. இரண்டு வருடத்துக்கு முன்னால் ஶ்ரீ பெரும்புதூருக்குப் பக்கத்தில ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரிக்கான கட்டிடம் ஒன்ணு இப்படிக் கட்டிக்கொண்டிருக்கும்போது இடிஞ்சு விழுந்து 10 வெளி மாநிலத் தொழிலாளிங்க செத்துப் போனாங்க.

போன வருடம் மும்பையில அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து ஒண்னுல 74 பேரும் இன்னொண்ணுல 61 பேரும் செத்துப் போனாங்க.

இந்த விபத்துகள் எதுவும் புயல், வெள்ளம், நில நடுக்கம் மாதிரி இயற்கைச் சீற்றங்களால் நடந்தது இல்ல. முழுக்க முழுக்க இவை மனிதர்கள்தான் இந்த அழிவுக்குக் காரணம்.

விதிகளை மீறி, சட்ட விரோதமா கட்டிடங்களைக் கட்டுவதன் விளைவு இது. இப்படி விதிகளை மீறுவதில் பெரிய அளவு லஞ்சம், ஊழல் பங்கு வகிக்குது. இப்பவெல்லாம் ஒருவர் சொந்தமா ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சா பட்ஜெட்ல ஒரு லட்ச ரூபா லஞ்சத்துக்குன்னு ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கு. இப்படி கோடிக் கணக்கில முதலீடு பண்ணி இன்னும் பல கோடிக் கணக்கில லாபம் சம்பாதிக்கிற பெரிய கட்டிட நிறுவனங்கள் விதிகளை மீறிக் கட்டுறதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் லஞ்சம் கொடுக்கத் தயாரா இருக்காங்க. கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிற பஞ்சாயத்து, நகராட்சி. மாநகராட்சி, பெரு நகர வளர்ச்சிக் குழுமம் – CMDA இதில் எல்லாம் கட்டிட அனுமதி வழங்கும் துறையில போதிய அளவில் அதிகாரிகள், வல்லுனர்கள் இல்லை என்பது ஒரு பக்கம். இருக்கிறவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகளா இருக்கிறது இன்னொரு பக்கம். விதி மீறல் கண்காணிப்புக் குழு என ஒண்ணு பேருக்கு இருக்கு. அதுக்குப் பெரிய அதிகாரமில்ல. ஒழுங்கா அதைக் கூட்டுவதும் கிடையாது.

விதிமீறிக் கட்டப்படும் கட்டிடங்களை இடிச்சால்மட்டும் பத்தாது. கட்டிய பில்டர், அநுமதி அளித்த அதிகாரி எல்லோரும் கடுமையா தண்டிக்கப்படணும். பொறுப்பான சமூக உணர்வாளர்கள், வல்லுனர்கள அடங்கிய விதி மீறல்கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றிற்கு உரிய அதிகாரமும் அளிக்கப்படணும்.

புலம் பெயர்ந்து வரும் தொழிலாளிகளா இருந்தாலும், உள்ளூர்த் தொழிலாளிகளா இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படணும். வெளி மாநிலத் தொழிலாளிகள்தான் அதிகம் சுரண்டப் படுறாங்க. அவங்களுக்குக் கேட்க நாதி இல்லை என்பதற்காகத் தான் நம்ம ஊர் முதலாளிகளும் ஒப்பந்தக்காரர்களும் அவங்களை வேலைக்கு வச்சுக்கிறாங்க. அவங்களுக்கு பணி இடப் பாதுகாப்பு மட்டுல் இல்லாம பாதுகாப்பான தங்குமிடங்களும் செய்து தரப்படணும். இவற்றை அரசாங்கம் உரிய முறையில் கண்காணிக்கணும்.

ஒரு உண்மையை நாம மறக்கக் கூடாது. “லஞ்சம் கொல்லும்”. “ஊழல் மக்களை அழிக்கும்” என்பதுதான் அது.

2. பா.ஜ.க அரசின் பட்ஜெட்

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாக உள்ளது என்பதை மேலோட்டமாக அதைக் கவனிப்பவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆட்சிக்கு வந்து 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட முடியும் என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்கள் தரப்பில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டதால், இப்போது அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி எதுவும் செய்யப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு கடைசியாக அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.1 சதம் என்றால் பா.ஜ.க பட்ஜெட்டிலும் அதுதான்., ரெவின்யூ செலவு அதிகரிப்பாக காங்கிரஸ் அறிவித்தது 1.5 லட்சம் கோடி. பா.ஜ.க வும் அதுதான் சொல்லி இருக்கு. இப்படி நிறையச் சொல்லலாம். வருமான வரி விலக்கு அதிகரிப்பும் பெரிசா இல்ல. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஒதுக்கியுள்ள நிதி வெறும் ஏழாயிரம் கோடிதான்,

இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீடு காங்கிரஸ் பட்ஜெட்ல 29 சதம். பா.ஜக்வோ இன்னும் ஒரு படி மேலே போய் 49 சதம் ஆக்கிட்டாங்க.

ஏற்கனவே அயல் உறவுக் கொள்கை, குறிப்பா ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு எல்லாவற்றிலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையைத்தான் பா.ஜ.க அரசு கடை பிடிக்கிறது என்கிற விமர்சனம் இருக்கு. இப்ப பொருலளாதாரக் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை என்பது தெரிஞ்சு போச்சு.

தங்களோட இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது என்கிற அம்சத்தில் மட்டுந்தான் பா.ஜ.க அரசு காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வேறுபடுது.

இதில ரொம்ப வருந்தத் தக்க விசயம் என்னன்னா, இதுவரைக்கும் இதே கொள்கைகளுக்காக காங்கிரசை விமர்சித்த ஊடகங்கள் எல்லாம் இப்ப எந்த விமர்சனமும் இல்லாம புதிய ஆட்சியைக் கொண்டாடுவதுதான்.

விமர்சனத்துக்குரிய அம்சங்களை யாராவது சுட்டிக் காட்டினால், காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படித்தானே நடந்தது என்பதுதான் அவர்களின் பதிலாக் இருக்கு. ஆக, ஆட்சியில இருக்கும்போதும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்டுவது, ஆட்சியில இல்லாதபோதும் இன்றைய ஆட்சியாளர்களின் தவறுக்காகவும் மறுபடியும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்ட்வது என்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. இந்த வேட்டி விவகாரம்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் 1. இத்தகைய மேல்தட்டு வர்க்கங்களுக்கான கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் உள்ள மேல் தட்டு வர்க்க கிளப்புகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறைதான், 2002ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழக இயக்குநர் மோகன் கோபால் இப்படி வேட்டி செருப்பு அணிந்து வந்த காரணத்திற்காக பெங்களூரு கிளைப்பில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியது. மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் சத்யஜித்ரேயின் மருமகன் அசோக் சட்டர்ஜிக்கும் இதே காரணத்திற்காக அங்கு அநுமதி மறுக்கப்பட்டது.

ஆக இது அடிப்படையில் ஒரு மேல் தட்டு வர்க்க மனோபாவம். காலனீய எச்ச சொச்சம். மேல் தட்டினர் தம்மை அடித்தட்டு மக்களின் அடையாளங்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் ஒரு திமிர் நடவடிக்கை என்றே கொள்ள வேணும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்ற ஆடை விதிகளும் பண்பாட்டுத் தடைகளும் பல மட்டங்களில் சமூகத்தில் செயல்படுவதைக் காணலாம். அரசு நிறுவனங்களிலும் கூட உண்டு. சென்ற ஆண்டில் ஆதார அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கவந்த துப்பட்டா அணியும் வழக்கமில்லாத பெண்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள். படத்தில் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தவிர வேறு விதிகள் ஏதும் இல்லாத போதும் இப்படிச் செய்யப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அவர்களுக்குச் சவுகரியமான உடை ஆகிய சுடிதார் அணிய அனுமதிக்கப்படுவதில்லை.
கிராமங்களில் இன்னும் கூட தாழ்த்தப்ப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகள் செய்ல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. நான்காண்டுகளுக்கு மும் மதுரையை அடுத்த வில்லூரில் இப்படியான ஒரு பிரச்சினையில் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இன்றும் கூட பெரிய ஷாப்பிங் மால்களில் கைலி அணிந்து செல்வதற்கு இடமில்லை. இத்தனைக்கும் கைலி என்பது ஒரு தமிழர் ஆடை. தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களுக்குக் கைலி அணிந்தே சென்றார். ஷர்ஜா, துபை போன்ற முஸ்லிம் நாடுகளில் நம் தமிழ் முஸ்லிம்கள் கைலி அணிந்து பொது இடங்களில் செல்வதற்குத் தடை உள்ளது,

ஆடை என்பது நமது சவுகரியத்திற்காக உள்ளது. பண்பாடு என்பதற்கு ஒரு தொடர்ச்சியும் உண்டு அதேபோல அதில் கலப்பிற்கும் இடம் உண்டு. பேன்ட், சர்ட், சுடிதார் என்பதெல்லாம் இப்போது ஏதேனும் ஒரு நாடு அல்லது இனத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடிய உடைகள் அல்ல. இன்றைய கலகட்டத்திற்குரிய உடைகளாக அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன, வேட்டியாக இருக்கட்டும், சுடிதாராக இருக்கட்டும் இவற்றை கண்ணியமற்ற உடைகள் என்பதாகக் காண்கிற நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

வக்கீல்கள் கருப்புக் கோட், அதற்கு மேல் நீண்ட கருப்பு அங்கி ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துதான் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும் என்பது உட்பட அனைத்து ஆடை விதிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலும் இந்தியாவின் மௌனமும்

நேற்று மாநிலங்கள் அவையில் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் கொலை வெறித் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேரம் ஒதுக்க வேண்டினர். இதை அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இரு தரப்பினருமே நமக்கு வேண்டியவர்கள்தான், எனவே நாம் ஒன்றும் பேச முடியாது எனக் கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் எற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில் 193 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ குறி தவறி நடந்த தாக்குதல்கள் அல்ல. இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே சொல்லிச் செய்கின்றனர். “காஸாவைக் கற்கால நிலைமைக்குக் கொண்டு செல்வோம்” “அனைத்து சக்தியையும் திரட்டி அழிப்போம்” என்றெல்லாம் சூளுரைக்கின்றனர்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என் பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அவர்கள்தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது.றது. ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள் தொடர்கின்றன.

பலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன் வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனது இரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்தப் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமக்குள் எதிர் எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில் ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ள இயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்ட போது “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச் சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும் பேசியதில்லை.

பலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.
இன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை” வகித்துக் கொலைக்குத் துணை போகிறது.

குடிமக்களாகிய நாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.

5. கல்வி நிறுவனகளில் கட்சி சார்ந்தோரை நியமிக்கக் கூடாது

பா.ஜ.க அரசின் கல்வி சார்ந்த இரு நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக எல்லப்பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரலாற்றுத் துறையில் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. இது ஒரு தகுதியற்ற நியமனம் என உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்களான ரொமிலா தப்பார், டி.என்.ஜா போன்றோர் கண்டித்துள்ளனர்.

சென்ற முறை பா.ஜ.க தலைமையில் ஆட்சி நிறுவப்பட்டபோது இதே ICHR அமைப்பின் தலைவராக பி.ஆர்.குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போதும் இதே போல சர்ச்சை எழுந்தது. அதோடு ஏற்கனவே பணியில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றறிஞர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர், இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (ICSSR) பி.எல்.சோந்தி என்கிற அவர்கள் கட்சியின் முன்னாள் எம்.பி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்களும் பணி நீக்கங்களும் கல்வியாளர்களால் அப்போது கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகளில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப் படுபவர்கள் உலக அளவில் கல்விக் குழுமங்களால், ஆராய்ச்சி அறிஞர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் சாதனை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆளுங் கட்சி தனது கருத்தியலைக் கல்விக் கூடங்களில் புகுத்தும் நோக்கத்திற்காகத் தகுதியற்றவர்களை நியமிக்கக் கூடாது. தங்கள் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து இளம் நெஞ்சங்களில் வெறுப்பை விதைக்கக் கூடாது. தற்போது ICHR தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன் ராவ் எழுதிய கட்டுரை ஒன்று நேற்று சர்ச்சைக்குள்ளானது.

இந்தியச் சாதி அமைப்பு வரலாற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது எனவும், அதனால் யாரும் பாதிக்கப்பட்டதோ இல்லை பயனடைந்ததோ கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். இது ஆட்சியில் உள்ளவர்களுக்குப் பிடித்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இது கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கருத்து அல்ல. வரலாற்றில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் சாதிமுறையை எதிர்த்துள்ளனர்.

கல்வி சார்ந்த இன்னொரு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. CBSE அமைப்பு தனது 15,000 பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டுமாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளனர். 1. சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாம். 2. சமஸ்கிருதம் மட்டுமே இந்திய வரலாற்றுடன் பிரிக்க இயலாது இணைந்துள்ளதாம்.

இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதல்ல. சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாய் என்கிற சனாதனக் கருத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பொய் என நிறுவப்பட்டு விட்டது. வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் சமஸ்கிருதமும் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என மொழி இயல் அடிப்படையில் நிறுவினர். இது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவு, சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. திராவிட மொழிகள் தான் இந்திய மண்ணில் தோற்றம் கொண்டவை. சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் தாய் என்பது எத்தனை பெரிய அபத்தம்.

பல்வேறு மொழிகளும், இனங்களும், மக்கட் பிரிவுகளும் உள்ள நாட்டில் இது போன்ற கருத்துக்கள் நாட்டு ஒற்றுமையைக் கெடுக்கும். யாரேனும் ஒரு தரப்பினர் செய்தால் கூட அவர்களின் கருத்து அது என விட்டு விடலாம். ஒரு அரசே இப்படிச் செய்யலாமா?. கல்விக் கொள்கைகள் எதுவாயினும் அவை போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, தேசிய அளவில் விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்பட வேண்டும்.

6. நதி நீர்ப் பிரச்சினைகள் : மத்திய அரசுக்கு உறுதி வேண்டும்

நதி நீர்ப் பிரச்சினையில் ஒரு புறம் தமிழக மக்களுக்கு ஆறுதலும் இன்னொரு புறம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சென்ற 13 அன்று முல்லைப் பெரியார் அணையின் 13 ஷட்டர்களும் திறக்கப்பட்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படும் முயற்சி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தமிழக விவசாயிகளுக்கு மகிழ்சியளிக்கும் செய்தி.

தான் அளித்துள்ள தீர்ப்பின்படி 192 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தான் ஆணையிட முடியாது எனச் சென்ற 15 அன்று காவிரி நடுவர் மன்றம் மறுத்துள்ளது வேதனை அளிக்கும் செய்தி. உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி நடுவர் மன்றம் ஒதுங்கிக் கொண்டதை ஒட்டி தஞ்சையில் இன்று கடைஅடைப்பையும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடும் போராட்டத்தையும் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

நதி நீர்ப் பிரச்சினை, கடலில் மீன் பிடிக்கும் பிரச்சினை ஆகியவற்றில் பாரம்பரிய உரிமை என்பது மிகமுக்கியமான ஒன்று. அந்த வகையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகட்டும், காவிரிப் பிரச்சினை ஆகட்டும் தமிழக விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

பாரம்பரிய உரிமை என்பது தவிர சமீபத்திய இவை தொடர்பான நடுவர் அமைப்புகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழக விவாசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தே வந்துள்ளன. காவிரி நதி நீர்ப்பங்கீட்டைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு 192 டிஎம்.சி நீர் என்பது தவிர, மாதந் தோறும் இதை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப் பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒரு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி ஏழாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இந்த நடுவர் தீர்ப்பை மதிக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணையில் ஒரு நேரத்தில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது, அணை பலவீனமாக உள்ளது என்கிற காரணத்தைச் சொல்லி நீர்த்தேக்கம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசோ 142 அடி வரைக்குமாவது நீர்மட்டத்தை உயர்த்தக் கோரிகை வைத்து நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு அணை முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதி கூறியது, சென்ற மே மாதம் உச்ச நீதி மன்றம் தமிழகக் கோரிக்கையை ஏற்று 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்து ஆணையிட்டது.

இத்தனைக்குப் பின்னும் இன்று கர்நாடக அரசும், கேரள அரசும் இம்முடிவுகளை ஏற்க மறுக்கின்றன. கர்நாடக அரசு தமிழகப் பங்கை அளிக்க மறுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுகிறது. கேரள அரசோ புதிய அணை கட்டியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.

இப்படியான சூழல்களில் இத்தகைய நடுநிலை நிறுவனங்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அது பக்கச் சார்பு எடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அது நடுவர் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி காட்ட வேண்டும். கூட்டாட்சி முறை நிலைத்து நிற்பதற்கு இந்த உறுதி மிக முக்கியம்.

மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக நதி நீர்ப் பங்கை உறுதி செய்ய வேண்டும். புதிய அணை கட்டும் கேரள முயற்சியைத் தடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் முக்கியமாக தேசிய அளவிலான கட்சிகளும் இடதுசாரிகளும் இரு மாநிலங்களிலும் இரு வேறு குரல்களில் பேசுவதை நிறுத்தி ஒற்றைக் குரலில் பேச வேண்டும்; நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

இல்லையேல் இந்தப் பிரச்சினைகளை மூலதனமாக்கி ‘சிவசேனை’ பாணியிலான ஒரு இனவாத வன்முறை அரசியலை முன்னெடுக்க முனைவோருக்கே இச்சூழல் பயன்படும்.

7. உக்ரேன் நெருக்கடியும் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும்

மலேசிய விமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியாகியுள்ளது எல்லோருக்கும் கவலை அளிக்கும் செய்தி.. விலை மதிக்க முடியாத 298 உயிர்கள் பலியானது தவிர உலக அளவில் ஒரு அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்படுமோ என்கிற அச்சத்தையும் இந்த நிகழ்ச்சி எற்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானத்தை வீழ்த்தியது யார் என்பது உறுதியாக இதுவரை கண்டுபிடிக்கப் படாதபோதும், ரசிய ஆதரவு கிரீமியப் போராளிகளே இதற்குக் காரணம் என்கிற கருத்து இன்று பலமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் இப்படிச் சொல்லுகின்றன. ஏற்கனவே கிரீமியப் பிரச்சினையைக் காரணம் காட்டி ரசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்னும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

உக்ரேன் அரசு இன்னும் ஒருபடிமேலே போய் ரசியப் படைகளே நேரடியாக இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறது. ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அதனால் தர இயலவில்லை. இன்னொரு பக்கம் கிரீமியப் போராளிகள் இதை உக்ரேன் அரசுதான் செய்திருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது அதைச் சுட்டு வீழ்த்த வேண்டுமானால்.தீவிரமான ரடார் தொழில் நுட்பமும் அதற்குரிய ஏவுகணைக் கருவிகளும், அவற்றை இயக்கும் பயிற்சியும் தேவை. ரசிய ஆதரவுக் கிரீமியப் போராளிகளுக்கு ரசியா பயிசி அளிப்பது உண்மைதான். ஆனால் ஒரு இரண்டு வாரப் பயிற்சி இதற்கெல்லாம் போதாது. உக்ரேனிய இராணுவத்திலிருந்து பிரிந்து வந்து போராளி அமைப்புகளில் இணைந்தவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

சென்ற சில நாட்களில் உக்ரேன் எல்லை மீது பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன. மற்ற மூன்றும் போர் விமானங்கள். இதில் இரண்டைச் சுட்டு வீழ்த்தியதற்கு போராளிகள் உரிமை கோரியுள்ளனர். ஆனால் இவை தாழப் பறந்தவை. சாதாரணத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகப் பயிற்சி இல்லாதவர்களும் இதைச் செய்ய முடியும். ஆனால் மலேசிய விமானம் உட்பட மற்ற இரு விமானங்களையும் தாங்கள் சுடவில்லை எனப் போராளிகள் சொல்கின்றனர்.

நடுநிலை விசாரணை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள ரசிய அதிபர் புடின், “கிரீமியாவில் அமைதி நிலைநாட்டப் படுவதற்குக் தடையாக இருந்தவர்களே இதற்குப் பொறுப்பு” என்றுள்ளார். அதாவது உக்ரேனிய அரசும் அதற்கு ஆதரவாக உள்ளவர்களுமே காரணம் என்கிறார்.

உக்ரேனின் கிழக்குப் பகுதில் உள்ள கிரீமியாவும் செவஸ்டாபோலும் ரசிய மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள்.. சென்ற பிப்ரவரியில் உக்ரேனில் நடைபெற்ற ஒரு ஆட்சி கவிழ்ப்பை ஒட்டி இப்பகுதிகள் ரசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. ஒரு வாக்கெடுப்பு நடத்தி 90 சதத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தை ஆதரித்து ரசியாவுடன் சேர்வதாக அறிவித்த போதும் நேட்டோ நாடுகளும் ஐ.நாவும் இதை ஏற்கவில்லை. எல்லை ஓரங்களில் ரசிய மற்றும் உக்ரேனியப் படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில்தான் இன்று இந்த மலேசிய விமானம் பயணிகளோடு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது..

எப்படி ஆயினும் பயணிகள் விமானத்தைச் சுட்டுவீழ்த்தி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது. இது வரை வரலாற்றில் குறைந்த பட்சம் ஏழு முறை இப்படி நடந்துள்ளன. இதில் 1988ல் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஈரானிய விமானமும் அடக்கம். இதிலும் 290 பேர்கள் கொல்லப்பட்டனர்.

போரும், ஆயுதப் போராட்டங்களும் மக்களின் உயிர்களை மதிப்பதில்லை. தேச இறையாண்மை என்கிற பெயர்களில் அரசுகளும், நாட்டு விடுதலை என்கிற பெயர்களில் போராளிகளும் இப்படியாக ஆயுதம் தரிக்காத மக்களின் கொலைகளை நியாயப் படுத்துவதை ஏற்க இயலாது. எல்லாவற்றையும் கொள்கைகளைச் சொல்லி நியாயப்படுத்திவிட இயலாது.