ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

 ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை                                                                                                                                                சென்னை,                                                                                                                                                                                              ஜன 25,2017

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.

அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தமிழகமெங்கும் இருந்த இந்த அமர்வுப் போராட்டத்தினர் நிரந்தரச் சட்டம் வேண்டும் எனவும், தமிழகத்தைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள் குறித்துக் கவனத்தை ஈர்த்தும் தம் இடங்களைவிட்டு அகல மறுத்தனர். அலங்காநல்லூர் மக்களும் கூட ஜல்லிக்கட்டு நடத்தவிட மாட்டோம் என்றனர். இந்நிலையில் சென்ற ஜன 23 அன்று சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன. காலைக் கடன்களை முடிப்பதற்காக அருகிலுள்ள நடுக்குப்பம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போராட்டக்காரர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அப்பகுதியில் வசித்த அடித்தள மக்கள் உதவினர். அப்படி வந்தவர்களைத் துரத்தி வந்து காவல்துறையினர் தாக்கியபோது நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளைத் தெரு முதலான பகுதிகளில் இருந்த மீனவர் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை முதலான தமிழகத்தின் பல பகுதிகளில் கூடியிருந்த மக்கள் மீதான காவல்துறை தாக்குதல் கடுமையாக இருந்தது. நிரந்தரச் சட்டம் இயற்ற உள்ளதை ஏற்றுச் சில பகுதிகளில் மக்கள் கலையவும் செய்தனர்.

இதற்கிடையில் ஜன 23 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் மாலை 5 மணிக்குக் கூடிய சிறப்பு அமர்வு மிருகவதைச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கி நிரந்தரச் சட்டத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இயற்றியது. இன்னொரு பக்கம் வன்முறையாக அமர்வுப் பொராளிகள் வெளியேற்றப்படுதலும் தொடர்ந்தது.

ஐஸ்ஹவுஸ் மற்றும் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளில் காவல்துறை நடத்திய தாக்குதல்

சுமார் 12 மணி அளவில் யாரோ சில சமூக விரோதிகள் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். சற்று நேரத்தில் அந்தத் தீ பெரிய அளவில் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் அணைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

பிற்பகலில், சுமார் மூன்று மணிக்குப் பிறகு ஐஸ் ஹவுசுக்கு அருகிலுள்ள மீனவர் மற்றும் தலித் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த காவல்துறையினர் மிகக் கொடூரமாக அம்மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். சிறுவர்கள் உள்ளிட்ட கையில் அகப்பட்ட ஆண்களை அடித்துப் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று ‘ரிமான்ட்’ செய்தனர்.

இந்த அத்துமீறல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தபோது இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கீழ்க்கண்டவாறு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழுவில் பங்கு பெற்றோர்: பேரா.அ.மார்க்ஸ் முனைவர் ப. சிவகுமார், பேரா. மு..திருமாவளவன், வீ.சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்காதரன், பேரா.கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான்.

பார்வையிட்ட பகுதிகள்: 1.நடுக்குப்பம் எனும் மீனவர் குடியிருப்பு மற்றும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள மீன் மார்கெட் 2. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள ரூதர்புரம் எனும் தலித் குடியிருப்பு 3. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள மீனாம்பாள்புரம் எனும் தலித் குடியிருப்பு 4. வி.ஆர்.பிள்ளைத் தெரு மற்றும் கால்வாய்த் தெரு. 5. முனுசாமி நகர் 6. அனுமந்தபுரம் 7. ரோட்டரி நகர்

நாங்கள் கண்டவை :

1.நடுக்குப்பம் : பெண்கள் சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தாக்கிக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கதவுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இராணி மேரிக் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள மீன் மார்கெட் முறிலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மீன்கள், எரால்கள் கொளுத்தி நாசமாக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைகிள்கள், ஒரு ஸ்கார்பியோ உள்ளிட்ட சில கார்கள், ஆட்டோக்கள் தாக்கப்பட்டடு நொறுக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் பல முற்றிலுமாய் எரிக்கவும்பட்டுள்ளன. ஏதோ ஒரு தூளைத் தூவி (பாஸ்பரஸ்?) எரியூட்டியதாக மக்கள் கூறினர். சிங்காரவேலர் பிறந்த இந்த நடுக்குப்பத்தில் இத்தகைய வன்முறைகளைக் கண்டதே இல்லை எனப் பலர் உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். தமது வாழ்வாதரமே அழிக்கப்பட்டு விட்டது எனப் பெண்கள் அழுதனர். போலீசார், குறிப்பாகப் பெண் போலீசார் தம்மை அடித்தும் கற்களை வீசியும் தாக்கியதோடு மிக மோசமான வார்த்தைகளில் இழிவாக ஏசியதாகவும் கூறினர். ஆண் போலீசார் தங்கள் முன் காற்சட்டை ‘ஸிப்’ களை அவிழ்த்து ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினர். மெரினாவிலிருந்து அடிபட்டு ஓடி வந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உதவியதைத் தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம் எனக் குமுறினர்.

2.ரூதர்புரம்: அம்பேத்கர் பாலத்தை ஒட்டி இரண்டு வேன்களும் தெருவை ஒட்டி ஒரு ஆட்டோவும் எரிக்கப்பட்டிருந்தன. தெரு நுழைவில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்கள், 8 பைக்குகள், 2 சைகிள்கள், 1 சோஃபா செட் எரிந்து கிடந்தன. ஏன் உங்கள் பிள்ளைகளை மெரீனா போராட்டத்துக்கு அனுப்பினீர்கள் எனக் கேட்டுப் பெண் போலீஸார் தம்மைத் திட்டியதாகப் பெண்கள் குமுறினர். அங்கிருந்த சுமார் 100 பேர் திரண்டு சென்று ‘சிட்டி மால்’ அருகில் நின்று. “எங்கள் மாண்வர்களை அடிக்காதீர்கள்” என முழக்கம் எழுப்பியதாக ஞானம்மாள் என்பவர் கூறினார். அப்போது ஒரு வாகனத்தில் வந்து இறங்கிய போலீசார் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்கியதாகவும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும் ஒருவர் கூறினார்.

3.மீனாம்பாள்புரம் : லேடி வெலிங்டன் பள்ளியில் +2 படிக்கும் தன் 18 வயது மகன் கிருபாகரனை பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது அடித்து இழுத்துச் சென்றதை அழுது கொண்டே சொன்னார் சிவகாமி (33) க/பெ தினகரன். காவல் நிலையத்திலிருந்த அவனுக்கு இரவில் சோறூட்டச் சென்ற போது அவன் கைகள் வீங்கி இருந்தன என்றார் அவர். அவனை விட்டுவிடுவதாகச் சொன்ன போலீசார் இறுதியில் ரிமான்ட் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் மனைவி கீதா சொன்னது: “எங்க வீட்டுக்காரருக்கு 45 வயசு. தூய்மைப் பணி நிறுவனம் ஒன்றில் தெருக்கூட்டுபவராக வேலை செய்கிறார். வேலை முடிஞ்சு வரும்போது போலீசுங்க அவரை மிருகத் தனமா அடிச்சுப் போட்டு இருக்காங்க.” வேலு மனைவி பொற்கொடி (35): “என் மவனைத் தேடிப் போனேன். ஒரு பெண் போலீஸ் என்னை அடிச்சதுல என் கை முறிஞ்சு போச்சு” எனத் தன் வீங்கிய கையைக் காட்டினார். கணவரை இழந்து வாழும் தமிழரசி (40): “வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ் என் புடவையைக் கிழிச்சாங்க” எனச் சொல்லிக் கிழிந்த தன் புடவையைக் காட்டினார். குப்பன் மனைவி காந்தா (60): “வீட்டுக் கதவை உடைசிச்சுட்டாங்க. மோட்டார் சைகிளையும் நொறுக்கிட்டாங்க. பாத்ரூமுல இருந்தவங்களை எல்லாம் ‘சீக்கிரம் வாங்கடீ.'”ன்னு சொல்லி கத்துனாங்க..”

4.வி.ஆர்.பிள்ளை தெரு: போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களைத் துரத்திவந்தபோது தாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதாகவும், பின் திடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவர்களையே போலீஸ் துரத்தித் தாக்கியதாகவும் பெண்கள் கூறி அழுதனர். பின் சுமார் 100 பேர் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது போலீசார் அவர்களை அசிங்கமாகத் திட்டினர் என்றனர். மீன்வளத்துறையில் பணியாற்றும் பழனி (58), “நாங்க எல்லாரும் மிரட்டப்பட்டோம். பெண்களை ரொம்ப மோசமாப் பேசுனாங்க. ஊரே பயந்து கிடக்கு..” என்றார்.

5.முனுசாமி நகர்: ராஜீவ் என்பவரின் மனைவி தேவி (36): “என் வீட்டுக்கார்ர ஒரு பெயின்டர். வீட்டில இருந்தவரைப் போட்டு அடிச்சுட்டாங்க. கையில் புத்தகப் பையோடு வந்த மாணவர்களையேல்லாம் துரத்தி அடிச்சாங்க. சம்மந்தமில்லாத எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்க தெரு பொம்பளை ஒருத்தரோட 5 பவுன் சங்கிலியையும் அறுத்துட்டுப் போயிட்டாங்க..” அடிபட்டிருந்த அவரது கணவரையும் பார்த்தோம்.

6.அனுமந்தபுரம் – கால்வாய்த் தெரு: ஆட்டோ டிரைவர் கார்திக் (45); “நான் நேத்து வேலைக்கிப் போகல. ஆட்டோ வாசல்ல நின்னுச்சு. உள்ளே நுழைஞ்ச போலீஸ் என்னைக் கடுமையா அடிச்சுட்டாங்க..” அவர் உடலெங்கும் காயம். கட்டுகள் இருந்தன. வெளியில் நின்றிருந்த அவரது ஆடோ தாக்கப்பட்டுக் கண்ணாடி உடைந்திருந்தது. “ரெண்டு பிள்ளைங்கள நான் காப்பாத்தியாவணும். எப்ப எனக்கு இந்தக் காயங்கள் ஆறும், எப்பிடி நான் இந்த ஆட்டோவை சரி பண்ணி ஓட்டப்போறேன்னு ஒண்ணும் தெரியல..” என்று அவர் அழுதார். கட்டுமானப் பணி செய்யும் தங்கவேலு (33) உடலெங்கும் காயங்கள். அவர் காலொன்று உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டில் அடித்ததோடு போலீஸ் வானில் ஏற்றிச் சென்று லேடி வெலிங்டன் பள்ளியில் வைத்து மீண்டும் அடித்ததாக அவர் கூறினார். பின் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் அடித்தனராம். பின் அவர்களில் சுமார் 10 பேர்களைக் கொண்டு சென்று ஒரு இடுகாட்டில் தள்ளிச் சென்றுள்ளனர். அவர்களின் வீட்டார்கள் அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

7.ரோட்டரி நகர்: பெருங் கூட்டமாகத் திரண்டு வந்த பெண்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் அசிங்கமாகத் தூற்றப்பட்டோம் எனச் சொல்லி அழுதனர். அவர்களில் ஒருவரின் கை உடைந்திருந்தது.. பெண் போலீசாரே இப்படிச் செய்ததாக அவர்களும் கூறினர்.

இறுதியாக நாங்கள் மயிலாப்பூர் காவல் நிலையத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் I.P.S அவர்களைச் சந்தித்தோம். தான் மெரினாவில் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும் இங்கு நடந்தவை குறித்து அதிகம் தெரியாது எனவும் காவல்துறை அத்துமீறல்கள் பற்றி நிரூபணங்களுடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி யாரையும் கைது செய்யும் உத்தேசம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார். சில ஆண்டுஅகள் முன் இரட்டைக் கொலை ஒன்று இப்பகுதியில் நடந்ததாகவும் அதைப் புலனாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்து கொள்ள நேர்ந்ததாகவும் அதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைமீது கோபம் கொண்டவர்களாகவே உள்ளதால்தான் காவல் வாகனங்களையெல்லாம் இவர்கள் கொளுத்தினர் எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் கேள்விகளும்

  1. 1984 ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல்துறை அத்து மீறல். காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு ஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துறைக்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகிறது. போராட்டக்காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.
  2. மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து பேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம்.
  3. நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும் போராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும். ஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரியவில்லை.
  4. தமிழகமெங்கும் 23 ந்தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின்போது அமெரிக்க அரசு இப்படி நடந்துகொள்ள வில்லை. பலமாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்பட வில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.
  5. ஜன 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல்களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.

பரிந்துரைகள்

  1. மரீனாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.
  2. மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்கெட் ஒன்றை நடுக்குப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும்.

3 .நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக          இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ 25,000 அளிக்கவேண்டும்.

  1. தலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச் சேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.
  2. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  3. இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும்வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர்களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீவைப்பிலும் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படவேண்டும்.
  4. பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல்துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5,முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை 20, செல்:9444120582

அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்

1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்’ (Indian Institute of Technology). சென்னை உட்பட இந்தியாவெங்கும் 18 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. சுயேச்சையான இந்தப் ‘ப்ரீமியர்’ கல்வி நிறுவனத்தில் படிப்பது பெருமை. இடம் கிடைப்பது அருமை. தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

இந்த சுயேச்சை நிறுவனத்தின் ஆசிரியர் தேர்வில் இந்தியாவெங்கும் அமுலில் உள்ள சாதிவாரி இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஐ.ஐ.டி நிறுவனங்களில் 90 சதத்திற்கும் மேற்பட்டோர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சாதியினரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக உயர் சாதியினரின் தீவுகளாகவே இந்திய ஐ.ஐ.டிக்கள் உள்ளன.

பன்னாட்டுத் தரத்தில் உள்ள இந்நிறுவனங்களில் மாணவர் அமைப்புகள் செயல்பட அனுமதியுண்டு இந்த அமைப்புகளுக்கு நிர்வாகம் ஏற்பு (recognition) வழங்கும் போது அவர்களின் சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துரைகள் ஆகியவற்றிற்கு  கல்வி வளாகத்தின் வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

சென்னை ஐ.ஐடியில் இந்துத்துவக் கருத்தியல் சார்புடன் ‘விவேகாநந்தர் வட்டம்’, ‘ஜெய்ஹிந்த் வட்டம்’, ‘இராமாயண வட்டம்’, ‘வந்தே மாதர வட்டம்’ எனப் பல மாணவர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. சென்ற ஆண்டு முற்போக்கு மற்றும் சமத்துவ சிந்தனைகள் உள்ள மாணவர்கள் “அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்” என்றொரு அமைப்பை உருவாக்கி இயங்கி வந்தனர். இதனை உள்ளேயும், வெளியேயும் உள்ள இந்துத்துவ சக்திகள் பல்வேறு வகைகளில் எதிர்த்து வந்தன.

இந்நிலையில் இவர்கள் மோடிக்கு எதிராகவும் பிற தீவிரமான கருத்துக்களைப் பேசுவதாகவும் ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கல்வித்துறை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது. இதை ஒட்டி சென்ற மாத இறுதியில் ஐ.ஐ.டி நிர்வாகம் அம்பேத்கர், பெரியார் பெயரில் இயங்கி வந்த அந்த அமைப்பிற்கான ஏற்பை ரத்து செய்ததாக அறிவித்தது.

இந்த நடவடிக்கை தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது பா.ஜ.க, அ.தி.முக, சில தமிழ் தேசியக் குழுக்கள் தவிர அனைத்து முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் இன்று இன்று இந்த நடவடிக்கையைக் கண்டித்துக் களத்தில் இறங்கி விட்டன. நாடெங்கிலும் கல்வி வளாகங்களிலும் வெளியிலும் ஏராளமான “அம்பேத்கர் பெரியார் வட்டங்கள்” இன்று உருவாக்கப் படுகின்றன.  ஐ.ஐ.டி நிர்வாகமும் மத்திய அரசும் பம்முகின்றன.

ஒரே ஒரு தரப்புதான் ஐ.ஐ.டி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையைச் சரி என்கிறது. சரி என்பது மட்டுமல்ல, இன்னும் சில பேராசிரியர்களையும் அடையாளம் காட்டி அவர்களைக் களை எடுக்க வேண்டும் என்கிறது. அவர்கள் இதற்குச் சொல்லும் காரணத்தை ஆய்ந்தால் அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் இறுதி நோக்கங்களையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஆர்.எஸ். எஸ்சின் அறிவுத் தொட்டியில் ஒருவர் ராதா ராஜன். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் குவிப்பவர். அவரது பெரு நூல் ஒன்று அத்வானி முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. India Facts என்கிற அவரது வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள Something Awry in IIT Madras: The Full Story என்னும் கட்டுரையிலிருந்து சில செய்திகள்:

1.2006ல் சென்னை ஐ.ஐ.டி யில் ஆங்கிலம், வளர்ச்சிக் கல்விகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ படிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்துதான் அங்கு இத்தகைய பிரச்சினைகள்..

2.இப்படி உருவான மாணவர் ‘ஆக்டிவிசம்’ மற்றும் சீரழிவு அறிவாளித்தனம் (student activism and disruptive intellectualism) கிட்டத்தட்ட சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலானவற்றில் உள்ள வன்முறைகளுக்கு இணையான மாணவ ரவுடித் தனத்திற்கு ஒப்பான தோற்றத்தை எடுத்தது.

3.கலை மற்றும் சமூகவியல் துறை (HSS)  ஆசிரியர்கள் மற்றும், வெளியிலிருந்து பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்களின்  கருத்தியல் சாய்வு, விவாதங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள், நவம்பர் 2004ல் IIT வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட முத்தப் போராட்டம், அப்புறம் இப்போது நடைபெறும் இந்த இந்து மத எதிர்ப்பு மாணவர் அமைப்புப்  (அ.பெ.மா.வ) போராட்டம் எல்லாம் ஒரு காலத்தில் உன்னதமாக விளங்கிய ஐ.ஐ.டி யில் வளர்ந்துள்ள இந்தப் புற்று நோயின் வெளிப்பாடுதான்.

இவை அந்த ஆர்.எஸ்.எஸ் அம்மை முன்வைக்கும் கருத்துக்கள். ஆக 2006ல் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ பட்டப் படிப்பு’ (integrated five year M.A) தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் சார்பு இணையம், “ஏன் இப்படி ஐ.ஐ.டி நிர்வாகம் அ.பெ.மா.வ வைத் தடை செய்ய நேர்ந்தது என்பதை மோடி சர்க்கார் அறிய வேண்டுமானால் ஏன் இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ படிப்பைக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தொடங்கியது என ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறது. மோடி சர்க்கார் எதையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமாம்?

“மோடி சர்கார் இந்த ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ வகுப்பின் பாடத் திட்டம், யாரெல்லாம் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், அவர்களின் கருத்தியல் சாய்வு, இந்த வகுப்பிற்கு என்னவிதமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் ஆகியவற்ரைப் பரிசீலித்தால் இந்த ஐந்தாண்டுப் பாடத் திட்டத்தின் உண்மை நோக்கம் வெளிப்படும்”.

இந்த இடத்தில் கலை மற்றும் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேரா. எஸ்.செல்லா ராஜனை நோக்கி நீள்கிறது கட்டுரையாளரின் விரல்.  இந்தப் பேராசிரியரால் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ பாடத் திட்டத்திற்கான அறிமுக வெளியீட்டில் உள்ள, “இப்பாடத் திட்டம் ஒரு பன்மை ஒழுங்கு அணுகல் முறையுடன் (interdisciplinary perspective) அமையும்” என்கிற சொற்களை உருவி எடுத்து ஒரு மிகப் பெரிய சொற் சிலம்பாட்டத்தை ஆடிக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். அந்த ஆட்டத்தின் ஊடாக அவரது உண்மை உருவம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் சொற்களில் அவற்றைக் காண்போம்:

1.வரலாறு தொடர்பான இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல் முறை மிகவும் ஆபத்தானது.  அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆகிய போலி அறிவியல்களைப் பயன்படுத்தி தேசம், தேசியம் முதலான வரலாற்றுத் தரவுகளை மதிப்பீடு செய்கிற பெயரில் அவற்றை மறுப்பதற்காகப் பயன்படுத்தப் படுவதுவதுதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை. தாங்கள் வென்ற மனிதர்கள் மற்றும் ஆக்ரமித்த  நிலங்களின் வரலாற்றை எழுத  கிறிஸ்தவம் கண்டுபிடித்த அறிவுத் துறைதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை.

2.அமெரிக்காவில் ‘பெரிங் ஸ்ட்ரைட் கோட்பாடு’ இப்படித்தான் உருவானது. உள்நாட்டு அமெரிக்கர்கள் என்போர் உண்மையில் உள்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்கள் ஆதி காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று இந்தக் கோட்பாடு கூறியது. இந்தியாவில் இந்த inter disciplinary அணுகல் முறைதான் சமஸ்கிருதத்திற்கு இருந்த உன்னத இடத்தை அழித்தது. ஆரியப் புலப் பெயர்வுக் கொள்கையை முன்வைத்து பிராமணர்களை இந்தத் தேசத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களாக நிறுத்தியது.

3.இத்தகைய அணுகல் எளிதில் சாதி, வர்க்கம், பெண்ணியம் மற்றும் பழங்குடி உள்ளுறைகளுடன் கூடிய அறிதல்களாக மாற்றி அமைக்கத் தோதாக உள்ளது.

ஆக ஆடிய ஆட்டத்தில் கட்டுரையாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். அவரது ஆத்திரம் எங்கிருந்து முளைக்கிறது என்பது வெளிப்பட்டுவிட்டது. இங்கே அவர் ஒப்பிலக்கணம், ஒப்பிலக்கியம், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி எல்லாம் சொல்லாவிட்டாலும் இத்தகையவற்றின் மீது இங்குள்ள பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆத்திரத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.  சமஸ்கிருதத்தை மொழிகளின் தாய் எனச் சொல்ல விடாமல் செய்து விட்டார்களே, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மட்டுந்தான் வந்தேறிகள் என நம்மை அரசியல் பண்ண விடாமல் செய்து விட்டார்களே என்று அவர் சீறிப் பெருமூச்சு விடுகிறார். பேயாய் அலறுகிறார். மேலும் அவர் சொல்வது:

“17,18,19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மிஷனெரிகள் தமது கட்டுப்பாட்டில்  இந்தியாவில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அப்புறம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றை எல்லாம் இந்த நோக்கத்திற்காகவே கொண்டு வந்தனர்.  சுதந்திரத்திற்குப் பின் மார்க்சிஸ்ட்கள் நேரடியாகவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மறைமுகமாகவும் வரலாற்றுக் கல்வியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துக்களைக் கல்வித்துறையில் புகுத்தினர்”.

ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் கட்டுரை விரிவானது, அது இன்ன்னும் பலவற்றைப்ப் பேசுகிறது. அது கிடக்கட்டும். ஒப்பிலக்கணம், மானுடவியல் முதலியன இந்திய வரலாற்று ஆய்வில் பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளன (பார்க்க: எனது, ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி). சமஸ்கிருதத்தைத் தேவ பாஷையாகவும், தமிழை நீச மொழியாகவும் கட்டமைதிருந்த வரலாற்றை அவை தகர்த்தன. சாதிகளின் உருவாக்கம், அதன் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவின. எப்படி, தலித்கள், பழங்குடியினர், பெண்கள் முதலானோர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதை விளக்கின.

அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. அது மட்டுமல்ல கல்வியைக் கிறிஸ்தவம் இங்கு கொண்டு வந்ததே ஒரு சதி என இன்று சொல்லவும் துணிவதை நாம் நோக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் வேறென்ன சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் இன்னொரு அறிவுஜீவிக் கருத்தியலாளர் கே.ஆர்.மல்கானி “இந்தியர்களுக்குப் படிப்பு தேவையில்லை” எனக் கூறி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியது நினைவில்லையா?

படிப்பே வேண்டாம் என்றால் இவர்கள் சொல்லும் வலிமையான இந்தியாவை எப்படி உருவாக்குவது? வேறொன்றுமில்லை. ஐ.ஐ.டியை வெறுமனே தொழில்நுட்பர்களை, நுண்திறன் பெற்ற ‘டெக்னொக்ராட்’களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இங்கெதற்கு இந்தக் கலைத்துறைப் படிப்பு, பன்மை ஒழுங்கு அறிதல்முறை, ஒப்பிலக்கணம், மானுடவியல் என்கிற “கல்விச் சீரழிவுகள் எல்லாம்?” எனக் கேட்கிறது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் ருஷ்யாவில் லெனின் காலந் தொடங்கி சுமார் 30 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்த லூனாசாஎஸ்கி, “அதீத நுண்திறம் ஒருவரை முடமாக்கும்” (Overspecialisation cripples a man)” என்பார். கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான மனிதனை உருவாக்குவது. அதனால்தான் பட்டப் படிப்புகளுக்கு Bachelor, Master, Doctor of Philosophy என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு major பாடம் தவிர ஒரு minor பாடமும் இருந்தது. விஞ்ஞானம் பயில்பவர் ஒரு கலைப்படத்தையும், கலைப்பாடத்தில் பட்டப்படிப்பு படிப்பவர் சிறிது விஞ்ஞானத்தையும் அறிவது அவசியம் எனக் கருதப்பட்டது. இது கார்பொரேட் காலம். கலைப் பாடங்களையே ஒழிக்க வேண்டும் எனச் சொல்கிற காலம். கார்ப்பொரேட்களும் இந்துத்துவமும் கைகோர்க்கும் இன்னொரு முக்கிய புள்ளி இது.

கலை மற்றும் சமூக அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் சுதிர் செல்லா ராஜன் மிகவும் தகுதிமிக்க படிப்புகளையும் அனுபவங்களையும் கொண்டவர். அவர், அவரது மனைவி சுஜாதா பைரவன், பேரா. மிலிந்த் ப்ராஹ்மி ஆகிய மூவரே இன்றைய ஐ.ஐ.டி “சீரழிவுக்கு” காரணம் என அடையாளம் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்று நிச்சயம். இப்போதைய எதிர்ப்பின் விளைவாக ஐ.ஐ.டி நிர்வாகமும், மோடி அரசும் சற்றே பொறுத்திருந்தாலும் விரைவில் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட M.A படிப்பு ஒழிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். சுட்டிக்காட்டப்பட்ட ஆசிரியர்கள் பழிவாங்கப்படுவர்.