தமிழ்த் தேசியத்தின் இன்றைய வெளிப்பாடு

[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது.]

Siva Kumar ஐயா, தமிழ், தமிழ் தேசியம், 100 ஆண்டுகளாக வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் சமீபஆண்டுகளில் தான் இவ்வெறுப்பு அரசியல் துளிர்விடுகிறது, அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?

Marx Anthonisamy 1. ஒரு நூற்றாண்டாக வேரோடியுள்ள தமிழ்த் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உடையது இது. வட மொழி ஆதிக்கம், பார்ப்பன மயமாக்கல் ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தது அது. அது கூறிய வடவர் ஆதிக்கம் என்பது இன வெறுப்பின் அடிப்படையிலானதல்ல. மாறாக வட நாட்டு பண முதலைகள் மற்றும் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தது அது. அது என்னாளும் வடநாட்டிலிருந்து இங்கு வந்து எளிய தொழில்களைச் செய்து பிழைப்பு நடத்திவந்த தொழிலாளிகளையோ இல்லை 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து தம் மூதாதையர் மண்ணில் வேரிழந்த மக்களையோ எதிரியாகக் கட்டமைத்ததில்லை. அது என்றைக்கும் இங்குள்ள அருந்ததிய மக்களை, அவர்கள் தெலுங்கு பேசுகின்றனர் என்பதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கலாகாது எனச் சொன்னதில்லை. பெரியாரை தமிழின விரோதி எனச் சொல்லத் துணிந்ததில்லை. இன வெறுப்பு அரசியலைச் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தில் கொண்டதில்லை. மதிப்பிற்குரிய பெருஞ்சித்திரனார் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (பார்க்க: நான் எழுதிய ‘பெரியாரைத் துணைக் கொண்டவர்’ எனும் கட்டுரை).

2. தமிழ்த் தேசியத்தில் இரு போக்குகள் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த இரண்டாவது போக்கை உருவாக்கி முன்னெடுத்ததில் ம.பொ.சி, பெங்களூரு குணா போன்றோருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பைத் தணித்தனர். மாறாக தமிழகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களை எதிரியாக்கினர். இவர்களுக்கு இன்றளவும் பார்ப்பன ஆதரவு உண்டு, எல்லா மட்டங்களிலும் உண்டு. ஆனாலும் இவர்களுங்கூட எந்நாளும் பாசிச அரசியல் யுத்திகளைக் கையில் எடுத்ததில்லை.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பாக 1940 – 80 காலகட்டம் உலகெங்கிலும் பாசிசம் பின்னடைந்த காலம். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் பாசிசம் புத்துயிர்ப்புக் கொண்ட சூழலில் தற்போது உருவாகியுள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் (இதனைத் தமிழ்த் தேசியத்தின் மூன்றாவது கட்டம் எனலாம்), உலகளாவிய இந்தப் பாசிசச் சூழலின் ‘மாடலி’ல் இங்கு இன்று தம்மைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் நேரடியாக சிவசேனா முதலான பாசிச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மார்க்சீய வெறுப்பு மட்டுமல்ல அது முன்னெடுத்த வரலாற்று ஆய்வுகளில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்கின்றனர். சிவசேனா கட்சிக்கும் மோடிக்கும் பிராச்சாரத்திற்கு அம்மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

பெருஞ்சித்திரனார் அவர்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் மோடியை ஆதரிப்பார் எனக் கற்பனை கூடச் செய்ய இயலாது. ராஜராஜ சோழன் போன்றோரின் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ப் பொற்காலம் என நாக்கூசாமல் இன்று இவர்கள் சொல்வது போல அவர் சொல்லியிருக்க மாட்டார். பார்ப்பனமயமாக்கல் மட்டுமல்ல சமஸ்கிருத மயமாக்கலிலும் பிற்காலச் சோழ மன்னர்களுக்கு முக்கிய பங்குண்டு. கட்டாயமாகப் பெண்கள் கொண்டுவரப்பட்டு இங்கே கோவில்களில் தேவரடியார்கள் ஆக்கப்பட்டதை எல்லாம் தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனச் சொல்கிற அளவிற்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்கிறதே, தஞ்சைப் பிருகதீஸ்வரப் பெருவுடையார் கோவிலின் ‘கும்பாபிஷேக’ ஆயிரமாண்டுக் கொண்டாட்டத்திற்குச் சிறப்பு மலர் வெளியிடுகிறதே இந்தக் கொடுமைகளை எல்லாம் பெருஞ்சித்திரனார் போன்றோர் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு என்றெல்லாம் தமிழின் பெயரால் சாதிகளை அங்கீகரிக்கும் இழி நிலைக்கும் சென்றிருக்க மாட்டார்கள். தோழர் தமிழரசன் போன்றோரையும் நாம் இவ்வரிசையில்தான் வைத்துக் காண இயலும்.

ஒருவேளை இன்று ம.பொ.சி இருந்திருந்தால் அதைச் செய்திருக்கக்கூடும். சங்கராச்சாரிகளைப் போற்றத் தயங்காதவர் அவர். இந்து மாநாடொன்றில் கலந்து கொண்டு தமிழ் அடையாளத்தைக் காட்டிலும் இந்து அடையாளம் இன்னும் விசாலமானது எனப் பேசியவர் அவர். பெங்களூரு குணாவும் அதைச் செய்திருக்கக் கூடும். தமிழர்களின் காணியாட்சி என சோழர் கால நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைக் கொண்டாடியவர்களில் ஒருவர் அவர். மராட்டியராம் அம்பேத்கரை இங்குள்ள தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுகின்றனரே என நொந்தவர் அவர். அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றவர் அவர்.

குறைந்த ஊதியத்தில் உழைத்துப் பிழைக்க வந்து, எந்த விதப் பணியிடப் பாதுகாப்பும் இல்லாமல் இங்குள்ள ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் இந்தப் பிழைக்க வந்த அப்பாவிகளை அடித்துத் துரத்த வேண்டும் எனச் சொல்கிற பாசிச அரசியலுக்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்வதை நீங்கள் இந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.

சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ்த் தேசியத்தை ஒற்றைப் போக்குடையதாகக் கருத வேண்டியதில்லை.அதில் பலபோக்குகள் உண்டு. சாதி, இந்துத்துவம், சமஸ்கிருத மயம் ஆகியவற்றை எதிர்த்த போக்கை முன்னெடுத்துத் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் ஒரு பக்கம். இவற்றை முன்னிலையாக்காமல் இந்துத்துவத்துடன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சமரசம் கொண்டு தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இன்னொரு போக்கினர். இந்த இரண்டாவது போக்கினரும் கூட இங்கு செழித்திருந்த உள்ளடக்கும் பண்பாடு (inclusive political culture), உலகளாவிய பாசிச எதிர்ப்பு ஆகிய பின்னணியில் தங்கள் செயல்பாடுகளில் சிவசேனாவையும் இந்துத்துவ அமைப்புகளையும், மோடி போன்றோரையும் வெளிப்படையாக ஆதரிக்க இயலாது இருந்தமைக்கு அன்றைய இந்தப் புறச் சூழல்களே காரணமாயிருந்தன. இன்று காலம் மாறியுள்ளது. இந்த மாறியுள்ள சூழலைத்தான் “மோடி அலை வீசுகிறது” என்கிறார்கள். இந்த அலை வீச்சில் இவர்களின் சுய உருவம் வெளுத்து அம்பலமாகிறது.

சேவ் தமிழ் இயக்கம், வைகோ, இராமதாஸ், தமிழ்த் தேசியம் ஒரு குறிப்பு

‘save tamil iyakkam’ (சேவ் தமிழ் இயக்கம்), நான் நேசிக்கிற தமிழ் இயக்கங்களில் ஒன்று. இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் பெரும்பாலோர் IT professionals என்று அறிகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைகட்கே இவர்களும் முக்கியத்துவம் கொடுத்து இயங்கினாலும், தமிழ் மக்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உண்டு என்பதை ஏற்று சாதிப் பிரச்சினை, குடிசை வாழ் மக்கள் பிரச்சினை, கூடங்குளப் போராட்ட ஆதரவு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏதோ இதையும் செய்தோம் என்றில்லாமல் உண்மையான அக்கறையுடன் இவற்றையும் முன்னெடுப்பர்.

பல்லாயிரம் ஊதியம் பெறும் கார்பொரேட் ஊழியர்கள் குறித்தும் கார்பொரேட் பணிக் கலாச்சாரம் குறித்தும் சில கருத்துக்களைச் சில நாட்கள்முன் இப்பக்கத்தில் நான் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பார்த்திருக்கலாம். முதலாளியத்தின் அனைத்து ஊழல்களுக்கும் வாரிசாக உள்ள இன்றைய கார்பொரேட்களிடம் கை பொத்தி, மெய்யடக்கிச் சேவகம் புரியும் இவர்கள் என்னாளும் தம் நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள், ஊழல்கள், மூன்றாம் உலக மக்களின்மீது இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றி ஆகியன குறித்து ஒரு கேள்வியையும் கூட எழுப்பத் தயாராக இல்லாதவர்கள். எழுப்பினால் அடுத்த கணம் என்ன நடக்கும் என உணர்ந்த இவர்கள் தம் மனிதாபிமானத்தைக் காட்ட ‘நல்ல காரியங்களுக்கு’ நன்கொடை அளிப்பார்கள் நன்கொடை அளிப்பார்கள். சமூக நலப் பணி செய்வார்கள், உள்ளூர் அரசுடன் பெரிய அளவில் முரண்படாத வகையில் போராட்டங்களும் நடத்துவார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தம் நிறுவனத்தில் நடக்கும் அநீதிகள் குறித்துக் குரல் எழுப்ப மாட்டார்கள். ஒரு சங்கம் அமைக்க முயற்சிக்க மாட்டார்கள். கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. அந்த வகையில் அரசு ஊழியர் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் அவற்றின் எத்தனையோ குறைகளுக்கும் அப்பால், ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதையும், தம் துறை சார்ந்த அரசு கொள்கைகளை விமர்சிக்கத் தயங்காததையும், சக ஊழியர்களுக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்பதையும், பல நேரங்களில் வெற்றி ஈட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சேவ் தமிழ் இயக்கத்தைப் பொருத்தமட்டில் அவர்களிடமும் இந்தக் குறைபாடுகள் உள்ளபோதும், இவற்றையெல்லாம் தாண்டி, உண்மையான சமூக அக்கறையும், ஏதாவது சமூகத்திற்குச் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பும் உள்ளவர்கள். பணியிடத்திலும் அநீதிகளை எதிர்க்கிற, தொழிற் சங்கம் அமைத்துப் போராடுகிற வாய்ப்பும் இவர்களுக்கு இருந்திருக்குக்குமேயானால் இவர்களின் பார்வையும் பணிகளும் இன்னும் கூர்மையடையுமே, ஒரு அறம் சார்ந்த அரசியல் விகசிப்பு ஏற்படுமே என நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்றைய கார்பொரேட் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

சரி, அது இருக்கட்டும். இன்று காலை இவ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தோழி என்னுடன் தொடர்பு கொண்டு உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ள தோழர் தியாகு அவர்கள் குறித்து உரிய ஊடகக் கவனம் இல்லாத நிலை குறித்துப் பேசினார். பேச்சு சமீபத்தில் இவர்களின் ‘சேவ் தமிழ் இயக்கம்’ முன்நின்று நடத்திய ‘பன்னாட்டு மாணவர் மாநாடு’ பற்றித் திரும்பியது. இலங்கையில் நடைபெற உள்ள ‘காமன்வெல்த்’ மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் “பன்னாட்டு” மாநாட்டில் முக்கியக் கதா நாயகனாக நிறுத்தபட்ட நபர் வை.கோ. அவரை மாநாட்டிற்கு அழைக்கப்போன நாளிலிருந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் முகநூல் பக்கங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குஜராத் 2002க்குப் பின்னும் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் இந்த வைகோ. ‘திராவிட’ என்கிற சொல்லைத் தன் கட்சிப் பெயரில் சுமந்திருந்தாலும் எந்நாளும் இந்துத்துவ விசுவாசத்தைக் கைவிடாதவர். ‘சேவ் தமிழ் இயக்கம்’ சென்ற மாதம் நடத்திய அந்த ஈழ ஆதரவு மாநாட்டிலும்கூட வைகோ, “மதவாதம் குறித்த பிரசினைகளை எல்லாம் கூட இன்று சற்று மறப்போம். ஈழப் பிரச்சினையை முன்னெடுப்போம்” என்கிற பொருள்படப் பேசியுள்ளார்.

இன்று என்னுடன் தொடர்பு கொண்ட தோழியிடம் நான் இதுபற்றிச் சொன்னபோது, “அப்படியெல்லாம் அவர் அங்கே பேசினார்னு யாரும் சொல்லலியே” என்றார். மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பார் போலும். அதோடு தமது மாநாட்டில் முக்கிய பேச்சாளர் இவ்வாறு கூற நேந்தது குறித்த விவாதம் அவர்களுக்குள் நடைபெறவில்லை போலும். விவாதிக்கிற அளவுக்கு இதை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

இறுதியில் அந்தத் தோழி, மோடியின் நண்பரும், இன்று இந்துத்துவ சக்திகளுடன் தேர்தல் கூட்டணியை வெட்கமின்றி அறிவித்துள்ளவருமான வைகோவைத் தங்கள் மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைத்தது குறித்து இப்படிச் சொன்னார் : “இல்லை, நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர் என்கிற ஒரே அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே வைகோவை அழைத்தோம்”.

நான் என்ன சொல்வது? சரிதான். இங்குள்ள மக்களின் பிரசினைகள் ஒரு பொருட்டில்லை என்றால் அவர்களின் அளவுகோல் சரிதான். ஆனால் ஈழப் பிரச்சினையில் வைகோ அளவிற்குக் கடந்த காலத்தில் தீவிர ஆதரவு காட்டிய, இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பன்னாட்டு மாநொடொன்றில் பங்குபெற்று தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசிய பா.ம.க தலைவர்களுக்கு ஏன் வைகோவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அம் மாநாட்டில் அளிக்கப் படவில்லை?

நம்மைப் பொருத்த மட்டில் பா.ம.கவை அழைக்காததின் நியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதே தர்க்கம் ஏன் வைகோவுக்குப் பொருந்தவில்லை? பா.ம.கவை அழைக்கக் கூடாது, ஆனால் வைகோவை அழைக்கலாமா?

இங்கே மத அடிப்படையிலான ஃபாசிசம் உங்களுக்குப் பிரச்சினை இல்லையா? நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு அளவில் இந்துத்துவக் கருத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளனவா? அதை உசுப்பி விடுவதுதான் இந்துத்துவ சக்திகளின் பணியாக உள்ளதா?

சரி, இப்படி ஈழப் பிரச்சினையே அடிப்படை அளவுகோல் என்பவர்கள் சாதி பிரச்சினைகளிலாவது முழு நியாயத்துடன் நடந்து கொள்வார்களா?

‘சேவ் தமிழ் இயக்கம்’ தற்போது ‘தமிழ்நாடு மக்கள் கட்சி’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக அறிகிறோம். நல்லதுதான் அமைப்புகள் பிளவுபட்டுக் கொண்டே போகிற நிலையில் இவ்வாறான இணைவுகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. இதுவரை அகில இந்திய மற்றும் பொதுவுடைமை அடையாளங்களின் கீழ் இயங்கிய ஒரு மா.லெ பிரிவு இப்போது இப்படியாக தம்மைத் தமிழ் அடையாளத்திற்குள் சுருக்கிக் கொண்டு தமிழ் நாடு மக்கள் கட்சி என்பதாக இயங்குகிறது.

சமீபத்தில் அவ்வமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள தோழர் தங்கத் தமிழ் வேலன் ஆசிரியர் வேலைகளுக்கான ‘டெட்’ தேர்வில் தமிழக அரசு இட ஒதுக்கீடு கடைபிடிக்காமை குறித்து ஒரு பிரச்சார இயக்கம் நடத்துவது குறித்து எங்களுடன் பேசினார். தங்கத் தமிழ் வேலன் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். துடிப்பான இளைஞர். இந்தப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.

லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நான், பேரா. ப.சிவகுமார், பேரா. மு.திருமாவளவன் ஆகியோர் முன்நின்று இது குறித்து ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளித்தோம். ப்ரெஸ் மீட் ஒன்றும் நடத்தினோம். ஓரளவு இப் பிரச்சினையைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்து அடுத்த ‘டெட்’ தேர்வும் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் டெட் தேர்வை நடத்தும் டி.ஆர்.பி அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் ஒன்றை நடத்துவோம் என நாங்கள் சொன்னதைத் தங்கத் தமிழ் வேலனும் ஏற்றுக் கொண்டார். நாளும் குறிக்கப்பட்டது.

எங்கள் வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு சென்ற மாதம் இந்தப் போராட்ட நாளில் எல்லோரும் காத்திருந்தோம். முதல் நாள் இரவு 11 மணிக்கு பேரா.மு.திருமாவளவனிடமிருந்து எனக்கொரு தகவல் வந்தது. அவரும் அக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றில் உள்ளார். ‘டெட்’ போராட்டம் காரணம் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் அவர் சொன்ன செய்தி.

தினம் என்னுடன் பேசி வந்த தமிழ் வேலன், அதற்குப் பின் இன்று வரை தொடர்பிலில்லை.

டெட் தேர்வில் இட ஒதுக்கீட்டிற்கான இப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான ஒரே காரணம், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு அவர்களிடம் முன்னுரிமை இல்லை என்பதுதான்.

பின் வேறெதற்கு முன்னுரிமை?

வைகோவைக் கதாநாயகனாக்கி ஈழ ஆதரவு மாநாடு நடத்துவதற்குத்தான். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட மாநாட்டு முழக்கங்களுக்கிடையில் கரைந்து போனது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கியுள்ளதுபோல இங்கும் ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை.

தேசம் என்கிற கற்பிதத்தின் வன்முறை : அது இன்று வங்கதேச இந்துக்கள் மீது

“தேசம் ஒரு கற்பிதம். அது இயற்கையான ஒன்றல்ல: அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு” என்கிற கருத்தை நான் முதல் முதலாகத் தமிழுக்குக் கொண்டு வந்தபோது, அப்பா எத்தனை எதிர்ப்புகள்! இன்னும் அந்த எதிர்ப்புகளின் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டுள்ளேன்.. எனினும் அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு கால அனுபவத்தில் என்னுடைய இந்தக் கருத்தில் எள்ளளவும் மாற்றம் செய்துகொள்வதற்கு எனக்கு எந்தத் தேவையும் ஏற்பட்டுவிடவில்லை.

எத்தகைய அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அந்த நோக்கிலிருந்து தேசத்தின் அடிப்படை அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. அது மொழி, இனம், மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதுவும் இயற்கையானதல்ல என்பதுதான். Yes, it is constructed, not natural. அது மாத்திரமல்ல, அந்த அடிப்படையில் தேசம் வரையறுக்கப்படும்போது, அந்த வரையறையால் அனைத்து மக்களாலும் கையடக்கப்படுவதில்லை. It is not a remainder less grasp. ஏதேனும் ஒரு பிரிவினர் அவ் வரையறையின் “மிச்சங்களாக” எஞ்சியே விடுகின்றனர். கட்டமைக்கப்படும் தேசம் அவர்களின் மீதான வன்முறையாகி விடுகிறது.

பாகிஸ்தான் என்றொரு தேசம் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவ்வாறு கட்டமைக்கப்பட்டபோது இப்படியான அடையாளமாக “மதம்” அதன் அடிப்படையாகியது. ஆனாலும் இந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானை “இஸ்லாம்” என்கிற மதத் அடையாளத்தால் இறுக்கிப் பிடித்து நிறுத்திவிட இயலவில்லை. வங்க தேச மக்கள் அதைத் தன் மீதான வன்முறையாகவே உணர்ந்தனர்.

விளைவு, 1973ல் பாகிஸ்தானாகவும் வங்க தேசமாகவும் உடைந்தது.

எனினும் இஸ்லாமை தேசத்தின் அடையாளமாகக் கற்பிதம் செய்த இஸ்லாமியவாதிகளால் இதை ஏற்க இயலவில்லை. முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் எழுந்த விடுதலைப் போரில் ஜமாத் ஏ இஸ்லாமி பாகிஸ்தானின் படையுடன் இணைந்து செயல்பட்டது. வங்க விடுதலையை ஆதரித்த அறிஜீவிகள் கொல்லப்படுவதற்கும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கும் அது துணை போகியது. இவர்கள் மீது போர்க்குற்ற விசாரணைனை இப்போது நடைபெறுகிறது. போர்க் குற்றங்கள் புரிந்த ஜமாத் ஏ இஸ்லாமிகளுக்கு ஆயுள் தண்டனை போதாது என இன்ற வங்க தேச முஸ்லிம் இளைஞர்கள் போராடுகின்றனர் (ஷபாகா இயக்கம்).

முன்னதாக, வங்க மொழியினராக இருந்தபோதிலும் மேற்கு வங்கத்தினரும் கிழக்கு வங்கத்தினரும் மதத்தால் வேறுபட்டதை அடையாளமாகக் கொண்டு வங்க தேசத்தை பிரிட்டிஷ் அரசு கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது (1905). மே. வங்கத்தில் வாழ்ந்த 25 சதம் முஸ்லிம்களும், கிழக்கு வங்கத்தில் இருந்த 8.5 சதம் இந்துக்களும் சிருபான்மை ஆயினர்.

தேசங்கள் என்பன ஒரு மிகச் சமீபத்திய கற்பனை. மூதாதையரின் நாடு என்கிற உணர்வு அதனிலும் பழையது. வாழ்வோடும், வாழ்நிலை உத்தரவாதங்களில் ஒன்றான நிலத்தோடும் இரத்த உறவு கொண்டது அது. ஆனால் ஜமாத் ஏ இஸ்லாமியைப் பொருத்த மட்டில் ஒரு சராசரி கிழக்கு பாகிஸ்தானி அல்லது வங்கதேசத்தவரின் (normative citizen) அடையாளம் என்பது oru “முஸ்லிம் வங்க மொழி ஆண்” அல்லது “வங்க மொழி முஸ்லிம் ஆண்” என்பதுதான். அங்கிருந்த 8.5 சத இந்துக்களும் அவர்களைப் பொருத்தமட்டில் வங்கதேசிகளல்ல இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் எப்படி ஒரு சராசரி இந்திய அடையாளத்தை “இந்து ஆண்” என்கிற வடிவில் வரையறுத்து உணர்கின்றனரோ அப்படி.

இன்று ஷேக் ஹசீனா அரசு தன் பலவீனங்கள், ஊழல்கள் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போர்க் குற்ற விசாரணை என்பதையும் அதற்கான மக்கள் ஆதரவையும் பயன்படுத்திக் கொள்கிறது. பொருளாதார ரீதியிலும், இயக்கக் காட்டுப்பாடு என்கிற அடிப்படையிலும் மிக வலுவான ஜமாத் ஏ இஸ்லாமி இயக்கம் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை (எ.கா ஹெஃபாஜெட் இயக்கம்) முன்னெடுக்கிறது.

இன்னொரு பக்கம் ஜமாத் ஏ இஸ்லாமியின் எதிர்வினை 2001 லும், பின்னர் இன்றைய அரசியல் சூழலிலும் வங்கதேச இந்துச்சிறுபான்மையினர் மீது திரும்பியுள்ளது ஏனெனில் இவர்கள் “சராசரி வங்க தேச அடையாளத்தை”ச் சுமந்தவர்களல்ல. பெரிய அளவில் அவர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டும், பெண்கள் வான்முறைக்குள்ளாகப்பட்டும் உள்ளனர்

ஒன்றைச் சொல்ல வேண்டும் இந்துச் சிறுபான்மையினர் மீதான் இவ்வன்முறைக்குக் காரணமாக வெறும் ஜமாத் ஏ இச்லாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியாகிய கலிடா சியாவின் வங்க தேசியக் கட்சியை மட்டும் சொல்லி நிறுத்தி விட இயலாது. ஓரளவு மதச்சார்பற்ற அடையாளத்திற்குரிய ஹஸீனாவின் அவாமி லீகிற்குள்ளும் கூட இந்துக்களை அந்நாட்டிற்கு உரியவர்களாகப் பார்க்காத நிலை ஏற்படுள்ளது.