பா.ஜ.க.வின் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்கள்

[தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை]

பா.ஜ.க வின் இந்த அமோக வெற்றிக்குப் பின் கார்பொரேட்களும் ஊடகங்களும் இருந்தன என்பது ஊரறிந்த உண்மை. நேரடியான நிதி உதவிகள் தவிர அவையே களத்தில் இறங்கிக் கட்சிகளிடம் பேரம் பேசிக் கூட்டணி அமைத்தது, மாநில மொழிப் பத்திரிகைகளை விலைக்கு வாங்கியதுவரை அவை செய்யாதது ஏதுமில்லை. பா.ஜ.கவின் தேர்தல் செலவு மொத்தம் 5000 கோடி என்கின்றனர். மோடி தலைமையில் பா.ஜ.கதான் வெல்லப்போகிறது, அதைத் தவிர வேறு தேர்வே மக்களுக்கு இல்லை என ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் வந்து தட்டி எழுப்பி ஊடகங்கள் நிமிடந்தோறும் காதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளாதார வீழ்ச்சி தொடங்கி தாணே புயல்வரை காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

இப்படி எல்லாம் நடந்தது உண்மைதான் என்றாலும் பா.ஜ.கவின் வெற்றிக்கு இவை மட்டுமே காரணம் என எதிர்க் கட்சிகள் நம்பினால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

முதலில் எதிர்க்கட்சிகள் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மிகவும் ஆர்வமாக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். 66.4 சத வாக்குப் பதிவு வரலாறு காணாதது. பா.ஜ.க என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு கட்சி , பார்ப்பன, சத்திரிய மேட்டுக்குடி மக்களே அதன் பின்புலம் என்பன போன்ற விமர்சனங்களுக்கும் இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் அவர்கள் இன்று வேர் பாய்ச்சி விட்டனர். இமாசலப் பிரதேசம் முதல் கர்நாடகம் வரை அவர்களின் அலை வீசியுள்ளது. மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்கிற தகவலை மூடி மறைக்காமல் அதையே முன்னிறுத்தி இந்த வெற்றியை அவர்கள் ஈட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியோரை இணைத்து பகுஜன் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்த கான்ஷிராமுடைய அணுகல்முறை இன்று தகர்க்கப்பட்டு விட்டது. இதைத் தலை கீழாக மாற்றிய குருவை மிஞ்சிய சிஷ்யை மாயாவதியின் பார்ப்பனர் + சத்திரியர் + பிற்படுத்தப்பட்டோர் + பட்டியல் சாதியினர் என்கிற “வெற்றிக் கூட்டணியை” இன்று உண்மையிலேயே காரிய சாத்தியமாக்கியவர்களாக பா.ஜ.கவினரே உள்ளனர். ஆக புவியியல் ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி பரந்துபட்ட ஒரு கட்சியாக அது விசாலித்து நிற்கும் உண்மையை நாம் முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

இந்த வெற்றிக்குப் பின்னணியாக யார் இருந்துள்ளனர்? 1. முதலில் வாக்களித்த மக்கள். 55 கோடி வாக்காளர்களில் சுமார் 10 கோடிப் பேர் புதியவர்கள். உலகமயம், திறந்த பொருளாதாரம், கார்பொரேட் கலாச்சாரம் ஆகியன வேர்விட்ட பின் பிறந்த குழந்தைகள். வாக்காளர்களின் இன்னொரு பெருந் தொகுதி வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம். இவர்களுக்கு வளர்ச்சி, வளர்ச்சியின் பலன்கள் ஆகிய ஒன்று மட்டுமே இலக்கு. வரலாறு, இலக்கியம், சமூகவியல் என்பதெல்லாம் இன்று கல்வி நிலையங்களிலும் கூடப் புறக்கணிக்கக் கூடிய பாடங்கள் ஆகிவிட்டன. சமத்துவம், ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகிய அரசியல் அறங்களின் இடத்தில் இன்று ‘வல்லவன் வெல்வான்” என்கிற கார்பொரேட் அறம் கொடி கட்டிப் பறக்கிறது இந்தக் கார்பொரேட் அறத்தையே வாழ்க்கை அறமாக உள்வாங்கியுள்ளவர்கள் இந்தத் தலைமுறையினர்

இவர்களிடம் போய், “குஜராத்தில் 2002ல் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 2 லட்சம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாயினர். இதற்கெல்லாம் காரணம்…” எனத் தொடங்கினீர்களானால், “அட, இந்தக் கதையெல்லாம் யாருக்கு சார் வேணும். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது…” என்று பதிலளிப்பார்கள்.

மதிப்பீடுகள் இன்று பெரிய அளவில் மாறிவிட்டன. முந்தைய தலைமுறையினரின் அரசியல் மொழி இன்றைய தலைமுறையினரிடம் எடுபடவில்லை. பகுத்தறிவு, மதச்சார்பின்மை, மார்க்சீயம், சாதி ஒழிப்பு முதலிய அரசியல் மதிப்பீடுகளினிடத்தில் இப்போது மதம் சார்ந்த அறங்கள், நம்பிக்கைகள், சுய முன்னேற்றத்தை நோக்கிய விழைவு முதலியன இடம்பிடித்துக் கொண்டுள்ளன. இதை நாம் முதலில் மனங்கொள்வோம்.

இவர்களுக்கு அதிக அளவில் ஊழலற்ற, சாதித்துக் காட்டுகிற ஆட்சி வேண்டும், செயல்படும் அரசு எந்திரம் வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதியமில்லாத அளவிற்கு இந்நாடு அண்டை நாடுகள் மத்தியில் தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும். “போலீஸ் ஸ்டேஷகளில் உங்களுக்கெல்லாம் என்னுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனை மரியாதை இருந்தது, மீண்டும் லாலு ஆட்சியை நிறுவுங்கள்” என லாலு பிரசாத் யாதவ் முழங்கிய முழக்கத்தை பீஹாரிகள் நிராகரித்து விட்டனர். அவரது மனைவி, மகள் இருவருமே படு தோல்வி அடைந்துள்ளனர். குடும்பப் பெருமை வாரிசு அரசியல், ஊழல் பின்புலம் இவற்றின் மூலம் இனி மோடி, பா.ஜ.க வகை அரசியல்வாதிகளை எதிர் கொள்ள இயலாது.

திரிபுராவில் தம் பிடியைத் தக்கவைத்துக் கொண்ட மார்க்சிஸ்டுகளால் மே.வங்கத்தைத் தக்க வைக்க இயலவில்லை. அவர்களது முப்பதாண்டு கால ஆட்சி அங்குள்ள 25 சத முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற இயலவில்லை என்பதை அந்தக் “குள்ள நீதிபதி” (சச்சார்) அம்பலப் படுத்தினார். அரசாங்கத்தைக் காட்டிலும் அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ரேஷன் கடை, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஆட்சி செலுத்தி வந்த நிலையை இன்றைய தலைமுறை ஏற்கவில்லை. மக்களையும் விடக் கட்சியே சரியானது, உயர்ந்தது என்கிற அவர்களின் நூறாண்டு வரலாற்றுச் சுமையை உதறாதவரை அவர்களுக்கு விடிவில்லை.

2. பா.ஜ.கவின் இந்த வெற்றியைச் சாதகமாக்கிய இரண்டாவது தரப்பு அவர்களுக்குப் பின்புலமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். மாறியுள்ள இந்த உலகச் சூழலையும் கருத்தியல் நிலையையும் அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனுடன் நீதி மன்றத்தால் ஒப்பிடப்பட்ட மோடியையே அவர்கள் சர்வ வல்லமையாளனாக முன்னிறுத்தி வெற்றியையும் ஈட்டினர். தொடர்ச்சியாகவும் இறுக்கமாகவும் அமைதியாகவும் அவர்களின் பணி இந்தியத் தீபகற்பம் முழுவதும் மட்டுமல்ல அந்தமான் தீவுகள் வரைக்கும் பரவி இருந்தது. கடல் கடந்த நாடுகளிலும் அவர்கள் அமைப்புகளை உருவாக்கிப் பல்வேறு மட்டங்களிலும் செயல்பட்டனர். கல்விப் பணி தொடங்கி வெடி குண்டுத் தொழிற்சாலைகளை ஆங்காங்கு அமைப்ப்து வரைக்கும் அவர்கள் தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்பட்டனர். இராணுவம் தொடங்கி சகல துறைகளிலும் அவர்கள் ஊடுருவினர். பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோரை சிறுபான்மை மக்களிடமிருந்து பிரித்து எதிர் எதிராக நிறுத்துவதை இலக்காக்கிச் செயல்பட்டனர். இவற்றை எதிர்கொள்வதை முன்னுரிமையாக்கிச்ச் செயல்பட மதச் சார்பர்ற கட்சிகள் எதுவும் தயாராக இல்லை. மாறாக அவர்களைக் கண்டு அஞ்சவே செய்தனர்.

3. பா.ஜ.க வெற்றியின் பின்னணியாக இருந்த மூன்றாவது தரப்பினர் கார்பொரேட்கள். எப்படி மோடி என்கிற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியரை முன்னிறுத்தினாலும் பா.ஜ.க தம் நலனை விட்டுக் கொடுக்காது என உயர் சாதியினர் முழுமையாக அதற்குப் பின் நின்றனரோ, அதேபோல மன்மோகன் சிங் சோனியா ஆட்சியைக் காட்டிலும் மோடி பா.ஜ.க ஆட்சி இன்னும் வலுவாகத் தாராள மயக் கொள்கையை நிறைவேற்றும் என கார்பொரேட்கள் உறுதியாக நம்பினர். எச்ச சொச்சமாகவேனும் நேரு காலத்திய சோசலிசத் தொங்கல்கள் ஒட்டிக் கொண்டுள்ள காங்கிரசால் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற அம்சங்களிலும், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், விவசாய நிலங்களை அபகரித்தல் முதலான அம்சங்களிலும் உறுதியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனக் கருதினர்.

ஜனநாயக சக்திகளைக் காட்டிலும் கார்பொரேட்கள் வலதுசாரி பாசிச சக்திகளிடமே நெருக்கமாக இருப்பர். சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்திய செவ்வியல் பாசிசத்தின் போது ஹிட்லர் மற்றும் முசோலினியின் கட்சிகளும் பெரு முதலாளிகளும் ஒன்றாக இருந்தனர். இந்தியாவில் பெரு முதலாளிகள் இது நாள் வரை காங்கிரசுடன்தான் இருந்தனர். இன்று கார்பொரேட்களும் இந்துத்துவ சக்திகளும் இணைந்துல்ளனர். ஆக பாசிசம் இன்று முழுமை அடைந்துள்ளது.

இந்த எதார்த்தங்களைக் கணக்கில் எடுக்காதவரை பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிக்க இயலாது.

இன்றும் கூட 31 சத வாக்குகளைத்தான் பா.ஜ.க பெற முடிந்துள்ளது. நமது தேர்தல்முறை அவர்களுக்கு இந்த அமோக வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது. 15 சதச் சிறுபான்மையினர் அவர்களிடமிருந்து முற்றாக விலகி நிற்பது மட்டுமின்றி இந்த வெற்றியைக் கண்டு சற்றே பதற்றத்திலும் உள்ளனர். பா.ஜ.கவினருக்கு வாக்களித்தவர்கள் எல்லோருமே இந்துத்துவவாதிகள் அல்ல என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

குஜராத் 2002 ஐ அவர்கள் திருப்பிச் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் எந்தப் புதிய சக்திகள் இன்று ஆதரித்து நிற்கின்றனரோ அவர்களே வளர்ச்சி எனும் நோக்கத்திற்கு இது பொருத்தமில்லாதது என அவர்களிடமிருந்து விலக நேர்வர். மாறாக இந்துத்துவ சக்திகள் தொலை நோக்குடன் செயல்பட்டு இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறை, இராணுவம், அரசு எந்திரம் ஆகியவற்றைக் காவி மயமாக்குவதை நுணுக்கமாகவும் வேகமாகவும் செய்வர். இவர்களை ஆதரிக்கும் புதிய சக்திகள் இவற்றைக் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

இதைப் புரிந்து கொண்டு மதச் சார்பற்ற சக்திகள் அடுத்து வரும் நாட்களில் செயல்படவேண்டும் இந்த நாட்டின் முதன்மை எதிரி மதவாத சக்திகள்தான் எனப் புரிந்து கொண்டு மதச் சார்பர்ற சக்திகள் ஓரணியில் திரள்வதும், மதச்சார்பு நடவடிக்கைகளையும் ஊடுருவல்களையும் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதும் இன்றைய உடனடித் தேவை. இன்னொரு பக்கம் பழைய மொழி, பழைய அணுகல் முறை, பழைய வடிவம் ஆகியவற்றையும் இவர்கள் உதறத் தயாராக வேண்டும்.

இல்லையேல் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல அவர்களுக்கும் எதிர்காலமில்லை.

இந்தியத் தேர்தலில் பா.ஜ.க.வின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன?

பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்கள் என்கிற எல்லையையும் தாண்டி அஸ்ஸாம் முதலான வட கிழக்கு மாநிலத்திலும் முதன் முதலில் வலுவாகக் கால் பதித்துள்ளனர். இமாசல பிரதேசம் தொடங்கி கர்நாடகம் வரையிலும் பரவலாகப் பா.ஜ.கவின் வெற்றி அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி சகல தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தலித்கள் ஆகியோரைக் குறி வைத்து அவர்கள் இம்முறை வேலை செய்தனர். மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர் என்கிற அடையாளத்தை அழுத்தம் கொடுத்து முன்னிறுத்தினர். அவரும் தான் பிற்படுத்தப்பட்டவன் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார். அப்படிச் சொல்வதால் முற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகள் தமக்கு வராமற் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கும் இல்லை, அவருடைய கட்சிக்கும் இல்லை. ஏனெனில் தங்களின் கட்சி அது எனவும் தங்களின் நலனை அது விட்டுக்கொடுக்காது எனவும் உறுதியான நம்பிக்கை இங்குள்ள உயர் சாதியினருக்கு பா.ஜ.க மீது எப்போதும் உண்டு.

ஆக புவியியல் அடிப்படையிலும் சாதி, மொழி, இன அடிப்படையிலும் பரவலான ஆதரவுடன் பா.ஜ.கவின் வெற்றி இன்று அமைந்துள்ளது.

காங்கிரஸ் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் படு தோல்வி அடைந்துள்ளன. தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் அவர்களின் இருப்பே இல்லாமற் போய்விட்டது. கங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளும் அடித்த புயலில் அடையாளம் தெரியாமல் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த நாடாளுமன்றத்தில் ஒரே ஒருஉறுப்பினர்தான். அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை அது ஏற்கனவே இழந்தாயிற்று, வாக்கு எந்திரத்தில் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை (நோடா) என்கிற பொத்தானை எழுத்தியவர்களின் எண்னிக்கையைக் காட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதைச் சுட்டிக்காட்டிக் கிண்டலடிக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று தன் அகில இந்தியக் கட்சி என்கிற தகுதியை இழக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 9 இடங்களை மட்டுமே அவர்களால் பெற முடிந்துள்ளது. மே.வங்கத்தில் அவர்களுக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான், பா.ஜ.கவிற்கும் இரண்டு உறுப்பினர்கள்தான். முக்கிய மூன்று மாநிலக் கட்சிகள் அதிக வெற்றிகளைக் குவித்துள்ளன. அ.தி.மு.க, திருனாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முதலியன இதில் அடக்கம். ஆந்திரம் உடைந்து உருவான இரு மாநிலங்களிலும் கூட மாநிலக் கட்சிகளே முதன்மை பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயரும்; டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருப்பர் என ஆருடம் சொல்லியவர்களும் ஏமார்ந்து போயுள்ளனர். இதில் மிகவும் ஏமார்ந்து போனவர் ஜெயலலிதாதான். வரலாறு காணாத வெற்றியை அவர் குவித்துள்ள போதும் அந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. டெல்லியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டு, 40 சீட்களுடன் தான் பிரதமர் ஆவது என்கிற கனவை அவர் வெளிப்படையாக முன்வைத்து வந்தவர்தான். தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் “பாரதப் பிரதமர்” என்றே அவரது கட்சிக்காரர்கள அவரை விளம்பரப் படுத்தினர். அவர் அதைக் கண்டித்ததில்லை. இன்று அந்தக் கனவு பொய்த்துப் போய்விட்ட ஏமாற்றம் அவர் முகத்தில் தெரிகிறது.

ஆனாலும் வாக்கு வீதத்தைப் பொறுத்த மட்டில் பா.ஜ.க காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து (31 + 19.3) மொத்தம் 50 சத வாக்குகளைத்தான் பெற்றுள்ளன. இடதுசாரிகள் ஒரு நாலு சதம் எனக் கொண்டால் மீதம் 46 சத வாக்குகளை மாநிலக் கட்சிகள்தான் பெற்றுள்ளன, ஆனால் இந்தியத் தேர்தல் முறையில் (First Past the Post System) வாக்கு வீதமும் வெற்றி வீதமும் ஒன்றாக இருப்பதில்லை. 3.3 சத வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க 37 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் அதே அளவு வாக்கு வீதம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது வெறும் 9 உறுப்பினர்கள்தான். 31 சத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க 278 இடங்களையும் 19.3 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றிருப்பதும் கூட இந்தத் தேர்தல் முறையின் அபத்தந்தான். அதனால்தான் தேர்தல் சீர்திருத்தத்தை வேண்டுவோர் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கிற கோரிக்கையைத் முன்வைக்கின்றனர்.

பா.ஜ.கவின் இந்த வெற்றிக்குப் பின்னால் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இருந்தது ஊரறிந்த இரகசியம். ஒரு கணிப்பின் படி மோடியை முன்நிறுத்தி பா.ஜ.க இம்முறை செய்த செலவு 500 கோடி ரூபாய். ஒபாமா சென்ற தேர்தலில் செலவிட்ட மொத்த தொகையே 600 கோடிதான்.

ஆனாலும் இப்படித்தான் பா.ஜ.கவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என நான் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பித்தான் பா.ஜ.கவையும் மோடியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். காங்கிரஸ் மீது கடுமையான ஒரு வெறுப்பை ஊடகங்கள் வெற்றிகரமாகக் கட்டமைத்திருந்தன. ஊழல், செயலின்மை, உறுதியற்ற தன்மை, பொருளாதாரச் சரிவு எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் ஆட்சியே காரணம் என மக்கள் நம்பும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சில முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது என்பதெல்லாம் மக்களின் கவனத்தில் ஏறவில்லை.

காங்கிரசை வெறுக்க உண்மையில் வேறு பல நியாயமான அடிப்படைகள் இருந்தன. அயலுறவில் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவை மேற்கொண்டது, பொருளாதாரத்தைத் திறந்து விட்டது…இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் இதற்காக வெறுக்கப்படவோ தோற்கடிக்கப்படவோ இல்லை. இந்த அம்சங்களில் காங்கிரசை விடத் தீவிரமான அணுகல்முறைகளை உடைய பா.ஜ.கவைத்தான் இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் மக்கள் உற்சாகமாகப் பங்கு பெற்றனர், 63.8 சத வாக்குப் பதிவு என்பது வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வாக்களித்த 550 மில்லியன் பேர்களில் 100 மில்லியன் பேர் புதிய தலைமுறையினர். உலகமயச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். “வளர்ச்சி” என்கிற முழக்கத்தை அவர்கள் மனப்பூர்வமாகக் கொண்டாடினர். அவர்களுக்குப் பாசிசம் அல்லது கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. குஜராத் 2002 என்பதெல்லாம், அதில் மோடியின் பங்கு என்பதெல்லாம் அவர்களது கவனத்தில் படியாத ஒன்று.

அப்புறம் உலக மயச் சூழலில் ஊதிப் பெருத்துள்ள மத்திய தர வர்க்கம். இதனுடைய ஆதரவும் பா.ஜ.க அரசியலுக்குத்தான், இந்து நாளிதழின் வித்யா சுப்பிரமணியம் இந்தி பேசும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பலரையும் சந்தித்து அவர்களின் மனநிலையை எழுதியிருந்தார், வித்யா சந்தித்தவர்களில் ஒருவர் ராம் அஷ்ரேய். மோடியை அவர் ஆதரிப்பதற்குச் சொல்லும் காரணம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.

“எல்லையில் நமது படை வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தக்க வலிமையான பிரதமர் நமக்கு வேண்டும்…”

அவர் எதைச் சொல்கிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில் எல்லையில் பாக் மற்றும் சீன இராணுவங்களின் அத்துமீறல்கள் குறித்த பிரச்சினையைச் சொல்கிறார்.

இந்தப் பிரச்சினைகளை நான் அதே காலகட்டத்தில் மிக விரிவாக ஆராய்ந்து இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினையில் பொறுமையாகவும், அயலுறவு நெறிமுறைகளின்படியும், அற அடிப்படையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களின் நோக்கிலும் மிகச் சரியாக நடந்து கொண்டது காங்கிரஸ் அரசு. குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ஆன்டனியின் பண்பான அணுகல்முறையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால் அது நமது பலவீனத்தின் அடையாளம்; இந்திய அரசு “உறுதியான” ஒரு நிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் அன்றைய நிலைபாடு. அந்த நிலைப்பாடும் மத்திய தர வர்க்கத்தின் மனநிலையும் ஒத்துப்போவது கவனிக்கத்தக்கது.

ஆக உறுதியான, வளர்ச்சியை முன்நிறுத்தக்கூடிய ஒரு அரசை பா.ஜ.கவும் மோடியும் சாதிப்பர் என்கிற நம்பிக்கையோடு மக்கள் விருப்பபூர்வமாக இந்தத் தேர்வைச் செய்துள்ளனர் என்பதுதான் உண்மை. தேர்தலில் மக்களின் உற்சாகமான பங்கேற்பும் இதை உறுதி செய்கிறது.

இந்தத் தேர்வைச் செய்த எல்லோரும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலையோ, திட்டங்களையோ, தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்படும் இந்த அம்சங்களையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தொடக்கத்தில் ஒரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் போலப் பேசிய மோடியும், பா.ஜ.கவும் போகப் போக வெளிப்படையான இந்துத்துவ அரசியலைப் பேசினர். ராமனின் பெயரால் சூளுறைத்தனர்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களைப் பொறுத்த மட்டில், இந்துத்துவக் கருத்துக்களுக்காக மோடியை ஆதரிக்காதவர்களும் கூட, அவரது பிந்தைய தீவிரமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்காகக் கவலைப்படாதவர்களாகவும் அவர்கள் உள்ளதுதான் பிரச்சினை.

மோடியையும் காங்கிரசையும் இன்று ஆதரித்து வாக்களித்துள்ளவர்கள் 30 சதம்பேர். ஆதரவு சக்திகளையும் சேர்த்துக் கொண்டால் 40 சதம் பேர். ஆனால் இதே அளவும் இதை விட அதிகமாகவும் மோடியையும் பாஜக அரசியலையும் ஏற்காதவர்களும் உளர். குறிப்பாக 180 மில்லியன் முஸ்லிம்களில் 99 சதம் பேர் மோடியை எக்காரணம் கொண்டும் ஏற்காதவர்கள். இந்த மக்கள் தொகை பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். இவர்கள் மனத்தில் இன்றொரு அச்சமும் பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுள்ளதே உண்மை. இத்தகைய அச்சம் ஒரு ஜனநாயக ஆளுகைக்குப் பொருந்தாத ஒன்று.

இதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பா.ஜ.கவை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இது குறித்துக் கவலைப் படுவதாக இல்லை. இப்போதே அவர்கள் தங்களின் ‘அஜெண்டா”வை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

இறுதியாகத் தமிழகச் சூழல் குறித்து ஒரு சொல்.மோடி அலை வீசாத இரு மாநிலங்களில் தமிழகம் ஒன்று. மற்றது கேரளம். இங்கே அந்தக் கூட்டணியின் சார்பாக வென்றவர்கள் இருவரும் மோடி அலை இல்லவிட்டாலும் இங்கு வெல்லக் கூடியவர்களே. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியில் பிளவு பட்ட ஒரு மாநிலம், இங்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சம அளவினர். தற்போது வெற்றி பெர்ற பா.ஜ.க வேட்பாளர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றவர். தருமபுரியில் வென்ற அன்புமணியைப் பொருத்த மட்டில் அப்பட்டமான சாதி அரசியலின் வெற்றி அது.

மோடி மற்றும் பா.ஜ.க ஆட்சியில் தமிழ் ஈழம் மலரும் என்றெல்லாம வாக்களித்த வைகோ இன்று படு தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் 12ல் தம் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினை குறித்து வாய்திறக்காதவை இரண்டே இரண்டு கட்சிகள்தான். அவை பா.ஜ.கவும் ஆம் ஆத்மியும். ஈழப் பிரச்சினைக்காகத்தான் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தேன் எனச் சொல்லிய வைகோவிற்கு இது கடை வரையில் தரும சங்கடந்தான். ஆம் ஆத்மி கட்சி இங்கு படு தோல்வி அடந்துள்ளது. இந்திய அளவிலும் அது 4 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

ஈழப் போராட்டத்தை முழுமையாகத் தொடக்கம் முதல் ஆதரித்து வந்த நெடுமாறன் அவர்கள் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக்கும் பா.ஜ,கவிற்கும் அணுகல் முறைகளில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.

நேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி

நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட அவர்கள் அரசியல் சட்ட அவைக்கான முதல் தேர்தலில் (2008) முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றியடைந்தது நினைவிருக்கும். மாறியுள்ள உலகச் சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் தங்கள் அணுகல்முறையை மாற்றிக் கொண்டதை உலகம் வரவேற்றது. ஊழலும், எதேச்சதிகாரமும் நிரம்பிய பன்னூறாண்டு கால முடியாட்சியை வீழ்த்திய சாதனைக்குரியவர்கள் என்கிற வகையில் மக்கள் நம்பிக்கையோடு அவர்களைத் தேர்வு செய்தனர். இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதோடு பல தொகுதிகளில் வைப்புத் தொகைகளையே இழந்துள்ளனர். முக்கிய தலைவர்கள் பிரசாண்டா. பாபுராம் பட்டாராய் இருவரும் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் தோற்றுள்ளனர். பிரசாண்டாவின் மகள், பட்டாராயின் மனைவி ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

இந்தத் தோல்வியை நாம் ஆய்வு செய்வதற்கு முன் நேபாளத் தேர்தல் முறையை விளங்கிக் கொள்ள வேண்டும். அவையின் மொத்த உறுப்பினர்கள் 601. இவர்களில் 240 பேர்கள் (40%) நேரடியாகத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக வாக்கு பெற்றவர்கள் (First Past The Post) தேர்வு செய்யப்படுவர். 355 உறுப்பினர்கள் (56%) கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அவ்வக் கட்சிகளால் தேர்வு செய்யப்படுவர். (Proportional Representation). மீதமுள்ள 26 பேர்கள் (4%) நியமன உறுப்பினர்கள் (Reserved for Distinguished Persons).

2013 தேர்தல் முடிவுகள்:

கட்சி நேரடி தேர்வு விகிதாசார தேர்வு மொத்தம்

நேபாள காங். (NP) 105 (29.8%) 91 (25.55%) 196

நேபாள கம்யூ. (UML) 91 (27.55%) 84 (26.66%) 175

மாவோயிஸ்ட் (UCPN-M) 26 (17.79%) 54 (15.21%) 80

ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி-N (RPP-N) 0 (2.79%) 24 (6.66%) 24

மாதேசி ஜனாதிகார்-L (MJF-L) 4 (3.13%) 10 (2.91%) 14

ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி (RPP) 3 (2.63) 10 (2.75%) 13

மாதேசி ஜனாதிகார் (MJF) 2 (2.28%) 8 (2.26%) 10

தராய் மாதேஷ்-L (TMLP) 4 (1.9%) 7 (1.91%) 11

பிற 5 – 47 – 52

குறிப்பு : நேபாள கம்யூனிஸ்ட் என்பது தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்ட ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (UML) கட்சி. மாதவ் குமார் நேபால், ஜாலாநாத் கானல் ஆகியோர் இதன் முக்கிய தலைவர்கள். மாஓயிஸ்ட் கட்சி என்பது ‘நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்ட்” எனப்படும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த அமைப்பு. புஷ்ப கமல் தகல் (பிரசாண்டா). பாபு ராம் பட்டாராய் முதலானோர் இதன் முக்கிய தலைவர்கள். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: அ.மார்க்ஸ், ‘நேபாளம்: வரலாறு, மக்கள், மாஓயிஸ்டுகள்’ பயணி வெளியீடு, சென்னை, 2008)

2008 தேர்தலில் 220 (120+100) இடகளை வென்ற மாஓயிஸ்டுகள் இம்முறை வெறும் 80 இடங்களைத்தான் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சென்ற முறை 110 (37+73) இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த நேபாள காங்கிரஸ் இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை 103 (33+70) இடங்களை வென்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சியோ இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை மாதேசி கட்சிகள் இரண்டும் 72 இடங்களைப் பெற்றிருந்தன. இம்முறை அட்டவணையில் இடம்பெற்றுள்ள மூன்று மாதேசிக் கட்சிகளும் சேர்ந்து 35 இடங்களைத்தான் பெற முடிந்துள்ளது.

ஆக இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக மாஓயிஸ்ட் மற்றும் மாதேசிக் கட்சிகளுக்கு எதிராகவும் நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதை யாரும் மறக்க இயலாது. இன்னொரு கவலைக்குரிய அம்சம் சென்ற முறை வெறும் 4 இடங்களை மட்டுமே பெற முடிந்த ராஷ்ட்ரீய பிரஜா தந்திரக் கட்சி (N) இம்முறை 24 இடங்களைப் பெற்றுள்ளது. இது இந்து மத அடையாளத்துடன் கூடிய முடியாட்சியை வேண்டுகிற ஒரு வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனவும் இந்த இரண்டாம் அரசியல் சட்ட அவையில் தாங்கள் பங்கு பெற முடியாது எனவும் மாஓயிஸ்டுகள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ இடங்களுக்கு தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் நியமிக்க இயலாது எனவும் கூறினர். தங்களுக்கு எதிரான இம்மோசடிக்குக் காரணமாக அவர்கள் நேபாள இராணுவம், குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான தற்காலிக அரசு, அந்நிய சக்திகள் குறிப்பாக இந்திய அரசு ஆகியவற்றைக் குறிப்பிட்டனர். இவை மூன்றுமே எப்படியும் மாஓயிஸ்டுகள் ஆட்சியில் அமர்வதைச் சகித்துக் கொல்ளாதவை என்பது ஊரறிந்த இரகசியம். வாக்குப் பெட்டிகள் பல மணி நேரம் கட்சிப் பிரதிநிதிகளின் கண்காணிப்பின்றி இராணுவத்தின் வசம் இருந்த்தையும், நேரடித் தேர்தல் முடிவுகளுக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முடிவுகளுக்கும் வித்தியாசம் உள்ளதையும் சுட்டிக் காட்டினர்.

எனினும் மாஓயிஸ்டுகளின் இக்குற்றச்சாட்டிற்குப் பெரிய ஆதரவில்லை. தேர்தல் முடிந்த அன்று (நவம்பர் 19) தேர்தல் நியாயமாக நடந்தது எனப் பிரசாண்டாவே கூறியுள்ளார் மாஓயிஸ்டுகள் நேரடித் தேர்தலில் குறைவாகவும், கட்சிக்கு அளிக்கப்பட்ட விகிதாசார வாக்குகளினூடாக அதிக இடங்களையும் பெற்றுள்ளதற்கு தனிப்பட்ட முறையில் மாஓயிஸ்டுக் கட்சி வேட்பாளர்களின் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்தாண்டு அனுபவத்தில் மாஓயிஸ்ட் தலைவர்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம், தொகுதி முன்னேற்றத்தில் அவர்களின் கவனமின்மை, மக்களை அணுகுவதில் அவர்கள் காட்டிய முரட்டுத்தனம் ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுத்தி இருந்தமையைப் பலரும் குறிப்பிடுகின்றனர்,

ஜிம்மி கார்டரின் தலைமையில் இயங்கிய பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர் குழுமமும் தேர்தல் முறைகேடுகள் குறித்த மாஓயிஸ்டுகளின் கூற்றை மறுத்துள்ளது. ஆக, தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக் கொள்வதற்குப் பன்னாட்டழுத்தமும் செலுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள மாட்டோம் என்றெல்லாம் மாஓயிஸ்டுகள் சொன்ன போதும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்வதுதான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருந்தது.

தேர்தல் நடக்காது என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் மக்கள் பங்கேற்பு அதிகம் இருக்காது எனவும் கூறப்பட்ட ஆரூடங்களுக்கு எதிராக, ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் தவிர்த்து, தேர்தல் அமைதியாகவே நடந்தது மட்டுமின்றி 78 சதத்திற்கும் மேலாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளனர்.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது கடந்த ஐந்தாண்டு காலம் அரசியல் சட்டத்தை உருவாக்காமல் வெறும் பதவிச் சண்டையில் கழிந்ததாகவே மக்கள் கருதுகின்றனர் என்பதும், அப்படியானதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கிருந்த போதும், தோல்விக்கான முழுப் பொறுப்பையும், முந்திய தேர்தலில் தாங்கள் யாரை நம்பி முதன்மை வாக்களித்தார்களோ அவர்கள் மீதே ஏற்றிப் பார்க்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. அப்படியான ஒரு கருத்தைச் சர்வதேசச் சமூகமும், குறிப்பாக இந்தியாவும், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் மாஓயிஸ்டுகளின் பரம எதிரியான இராணுவமும் பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில், 2008ல், அரசியல் சட்ட அவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற வகையில், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சியில் அமர்ந்தனர். அரசியல் சட்டத்தை உருவாக்குவது தவிர மாஓயிஸ்டுகளுக்கென வேறு சில அவசரமான, முக்கியப் பணிகளும் இருந்தன. தமது புரட்சிகர இராணுவம் வசம் இருந்த ஆயுதங்களை அவர்கள் ஐ.நா.அவைப் பார்வையாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். மாஓயிஸ்டுகளின் இராணுவத்தை நேபாள இராணுவத்துடன் இணைப்பது என்பது ஒப்பந்தத்தில் இருந்தபோதும், நேபாள இராணுவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதோடு முட்டுக்கட்டையும் போட்டு வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மாஓயிஸ்டுகள் விரும்பிய தலைமையைக் கொண்டு வர இயலவில்லை, தேர்ந்தெடுக்க்ப்பட்ட ராம் பரண் யாதவ் மாஓயிஸ்டுகளுக்கு எதிரானவர்.

இந்தியத் தலையீடு:

அடுத்த இரு பெருங்கட்சிகளான நேபாள காங்கிரசும், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் அரசியலில் நீண்ட நாள் அனுபவம் வாய்ந்தவை. கருத்து மாறுபாடுகளை மீறி மாஓயிஸ்டுகளை ஓரங் கட்டுவதில் இவ்விரு கட்சிகளும் ஒன்றுபட்டன. சர்வதேசச் சமூகத்தின் பிரதிநிதியாக விளங்கிய இந்தியாவுக்கு நேபாளத்தைத் தன் முழுக்கடுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. அருகாமை நாடுகள் அனைத்துடனும் பகையுறவையே கொண்டுள்ள இந்தியா போர் நிலை முக்கியத்துவமுள்ள நேபாளத்தை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைப்பதற்கு மாஓயிஸ்டுகள் தடையாக இருப்பதைச் சரியாகவே கணித்தது..

ஏப்ரல் 2010ல் பிரதமர் மன்மோகனின் சிறப்புத் தூதுவராக நேபாளத்திற்கு வந்த இந்திய அயலுறவுச் செயலர் ஷியாம் சரண் வெளிப்படையாக மாஓயிஸ்டுகளை முழுமையாக ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதுதான் நல்லது என எச்சரித்தார், நேபாள மாஓயிஸ்டுகளும் பான்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சூழல்களைக் கணக்கில் கொண்டு இறங்கி வந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹெடாவ்டா நகரில் நடந்த கட்சிப் ப்ளீனம் ஒன்றிற்குப் பின் நடந்த கூட்டத்தில் தங்கள் பாதையில் மூன்று அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பிரசாண்டா அறிவித்தார். அவை :

1)  முழுமையான பல கட்சி ஜனநாயக ஆளுகைக்குத் திரும்புதல். 2) பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல். இந்த வளர்ச்சியில் இந்தியாவை முக்கிய பங்காளியாக ஏற்பது. இந்திய முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்பது. இந்த வளர்ச்சியின் மூலமாக உருவாகும் அரசியல் நிலைத் தன்மை அருகிலுள்ள நாடுகளின் (அதாவது இந்தியாவின்) பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் போக்கும். 3) ‘குறுகிய தேசியத்தை’க் கைவிட்டுவிட்டு இனி முற்போக்கு தேசியத்தை முன்னெடுத்தல்.

நேபாள அரசியலில் இந்தக் ‘குறுகிய தேசியம்’ என்பது இந்திய மேலாதிக்கம் பற்றிய கவலையைக் குறிக்கும். இந்திய மேலாண்மை குறித்த அச்சம் நேபாளிகளுக்கு எப்போதுமே உண்டு. இந்தியா பெரிய அளவில் நேபாளத்தில் முதலீடுகளைச் செய்துள்ளதோடு அதன் அபரிமிதமான கனிம வளங்கள் மீதும் இந்தியாவிற்கு எப்போதுமே ஒரு கண்ணுண்டு. தவிரவும் திபெத்திலிருந்து வரும் அகதிகளை இந்தியா நேபாளத்திற்குத் திருப்பி விடுவதை ஒரு தந்திரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சீனாவின் கோபத்திலிருந்து தான் தப்பி, சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவது நோக்கம். இது தவிர எல்லையோரத்தில் இந்திய ஆக்ரமிப்பு நிகழ்வதாகவும் நேபாளத்திற்கு ஐயங்கள் உண்டு.

மொத்தத்தில் சிக்கிமை வளைத்துப்போட்டது போல நேபாளத்தையும் தன்னுடன் இந்தியா இணைத்துக் கொண்டு விடுமோ என்கிற (sikkimisation) அச்சம் நேபாளத்திற்கு உண்டு. இந்தியாவும் ஏதோ தன்னுடைய மாநிலங்களில் ஒன்றைப் போலவே நேபாள அரசியலில் தலையிட்டு வருகிறது. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் நேபாள அயலுறவு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் நேபாள பிரதமர் உட்பட யாருடைய அலுவலகத்திற்கும் சென்றுவரக் கூடிய நிலை உள்ளது.

இந்தப் பின்னணியில் இந்திய மேலாண்மை குறித்து அதிகம் கவனப்படுத்தி வந்தவர்கள் மாஓயிஸ்டுகள்தான். இந்திய மேலாண்மைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த நேபாள தேசிரய உணர்வைத்தைத்தான் இப்போது குறுகிய தேசியம் என அவர்களே அழைத்துக் கொள்ள வேண்டிய நிலை நேபாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற மார்ச்சில் இந்தியா வந்த நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபால் இந்து இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கட்சி உட்பட நேபாளிக் கட்சிகள் பலவற்றிலும் இந்திய வெறுப்பு எனப்படும் குறுகிய தேசியம் செயல்படுவதாகக் கூறினார்.

மாஓயிஸ்டுகள் வேறு பல அம்சங்களிலும் விட்டுக் கொடுக்கவே செய்தனர். 2006 புரட்சியைக் கொடுங்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தவரும் முடியாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான லோக்மான்சிங் கார்கியை ஒரு உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் அமர்த்த ஒப்புதல் அளித்தது, தலைமை நீதிபதி கில் ராஜ் ரெக்மியை தேர்தலுக்கான தற்காலிக அரசுக்குத் தலைமை ஏற்க முன்மொழிந்தது ஆகியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

அரசியல் சட்டம் எழுதுவதில் என்ன பிரச்சினை?

எனினும் இந்தியா கடைசி வரை மாஓயிஸ்டுகளை நம்பாமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்று படு தோல்வி அடைந்துள்ள மாஓயிஸ்டுகள், மாதேசிக் கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே ‘வெஸ்ட்மினிஸ்டர்’ மாதிரி, அதாவது இந்தியாவில் உள்ளது மாதிரி ஜனநாயகத்திற்குப் பதிலாக அடையாள அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை (identity based federalism) முன் மொழிந்தனர். இதை நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தனர். இந்தியாவின் கருத்தும் அதுவே.

இந்த அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதென்ன? இந்தியாவைப் போலவே பல்வேறுபட்ட சாதிகள், இனங்கள், ஆதி குடிகள் அந்தச் சின்ன நாட்டிலும் உண்டு. ‘பாகுன்’, ‘சேத்ரி’ முதலான சாதிகள் இந்தியாவிலுள்ள பார்ப்பன, சத்திரிய சாதிகளைப்போல ஆதிக்க சாதியினர். காத்மாண்டை மையமாகக் கொண்ட இவர்களின் அதிகாரமே நேபாளத்தில் கோலோச்சி வந்தது. சட்டமன்றங்களிலும் 37 சதம் வரை இவர்களே ஆக்ரமித்திருந்தனர். ஆரம்பம் முதலாகவே தலித்கள், உள் நாட்டு இனத்தினரான ஜனஜாதிகள், இந்திய வம்சாவளியினரான மாதேசிகள், இவர்கள் ஒவ்வொரு பிரிவினரிலும் பெண்கள் முதலான அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் பங்கு வேண்டும் என்பதை மாஓயிஸ்டுகள் வற்புறுத்தி வந்தனர், நீண்ட விவாதங்களுக்குப் பின் 2008 தேர்தலில் இது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய வீதங்களில் வாய்ப்பளிக்க வேண்டும், அதிலும் ஒவ்வொரு பிரிவினரிலும் பாதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தொருமிப்பு ஏற்பட்டது.

இது குறிப்பிடத்தக்க நல்ல விளைவையும் தந்தது. 2008 அரசியல் சட்ட அவையில் பாகுன் மற்றும் சேத்ரி பிரிவினரின் பங்கு 4 சதமாகக் குறைந்தது. ஒரு சதப் பிரதிநிதித்துவம் கூட இதுவரை கிடைக்காதிருந்த தலித்களுக்கு முதன் முதலாக 8.17 சதம் கிடைத்தது.மொத்த உறுப்பினர்களில் 32.22 சதம் பெண்கள்; மாதேசிகள் 34.09 சதம்; ஜனஜாதிகள் 33.39 சதம் இருந்தனர்.

இவ்வாறு அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் உரிய பங்கை அளிப்பதற்கு அரசியல் சட்டத்திலேடே வழி வகுப்பதைத்தான் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதாக மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் முன்வைத்தனர். இதைக் கடுமையாக நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன. இந்தியாவின் கருத்தும் இதுவாகவே இருந்தது.

சட்டசபைக் கலைப்பும் பின் நடந்த அரசியலும்:

இதில் ஒரு ஒப்புதல் ஏற்படாதது அரசியல் சட்ட உருவாக்கத்திற்குத் தடையாக இருந்தது. இரண்டாண்டுகளுக்குள் இந்தப் பணி முடியாததால் அவையின் காலகெடு இரு முறை நீடிக்கப்பட்டது. இறுதி வரை இது சாத்தியமில்லாமல் போகவே 2012 மே 27 அன்று முதலாம் அரசியல் சட்ட அவை அதன் நோக்கம் நிறைவேறாமலேயே கலைக்கப்பட்டது. மார்ச் 13, 2013 அன்று இரண்டாம் அரசியல் சட்ட அவைக்கான தேர்தல் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, பின் அந்தத் தேதி மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் 19, 2013 என்பதாக முன்வைக்கப்பட்டது. தேர்தலை நடத்த, தலைமை நீதிபதி ரெக்மி தலைமையில் இடைக்காலத் தேர்தல் அரசு ஒன்று அமைப்பது எனவும் கருத்து உருவானது. ஒவ்வொரு முறையும் இப்படியான முடிவுகளுக்குத் தக இடைக்கால அரசியல் சட்டமும் திருத்தப்பட்டது.

இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்க மாஓயிஸ்ட் கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட், மாதேசி முன்னணி ஆகிய நான்கு கட்சிகளின் எட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய ’உயர் மட்ட அரசியல் குழு’வும் (HLPC) உருவாக்கப்பட்டது.

2013 செப்டம்பர் 14 அன்று இந்த உயர் மட்ட அரசியல் குழு கூடியபோது அதில், தேர்தலை 2014 மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பது, இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்கும் ரெக்மி தனது தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகுவது முதலான கோரிக்கைகளை மாஓயிஸ்டுகள் முன்வைத்தனர். ஒரு வட்ட மேசை மாநாடு கூட்டிப் பொதுப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது, பெரும்பான்மை அடிப்படைலான ஆளுகை என்பதாக இல்லாமல் கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவைக்கான அரசு (consensus government) முதலியன மாஓயிஸ்டுகளின் பிற கோரிக்கைகளாக இருந்தன. தேர்தலை ஒத்தி வைப்பது, தலைமை நீதிபதிப் பொறுப்பொலிருந்து ரெக்மி விலகுவது முதலான மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகளில் ஒரு கருத்தொருமிப்பு எட்டும் தருவாயில் இந்திய அயலுறவுத் துறைச் செயலர் ஷ்யாம் சரணின் வருகை அறிவிக்கப்பட்டது. அன்று மாலை இந்தியத் தூதரகத்தில் விருந்தொன்றுக்கு அவர் அழைப்பு விட்டிருந்தார். விருந்தின்போது, தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கருத்து என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் செப்டம்பர் 16 அன்று குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா தலைமையில் உயர்மட்டக் குழு கூடியபோது இரண்டு நாட்கள் முந்திய கருத்தொருமிப்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, முன் தீர்மானித்தபடி நவம்பர் 19, 2013 அன்றே தேர்தலை நடத்துவது என்பதும் ஒரே நேரத்தில் ரெக்மி தலைமை நீதிபதியாகவும் இடைக்கால அரசின் தலைவராகவும் நீடிப்பது என்பதும் உறுதியானது.

மாஓயிஸ்டுகள் விட்ட பிழைகள்:

நடந்து முடிந்த தேர்தலின் மிகச் சுருக்கமான பின்னணி இதுவே. இந்தியா பிரதிநித்தித்துவப் படுத்திய சர்வதேச அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் சக்திகள் ஆகியவற்றால் மாஓயிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு முறியடிக்கப்பட்ட வரலாறும் இதுவே. மாஓயிஸ்டுகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பலரும் இப்போது இந்த வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு தோல்விக்கு முழுக்க முழுக்க மாஓயிஸ்டுகளே காரணம் என்பதாக முன்வைக்கின்றனர்.

மாஓயிஸ்டுகளின் பக்கம் தவறுகளே இல்லை என்பதல்ல. ஆனால் இந்தச் சர்வதேச மற்ற்ம் உள்நாட்டுச் சதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பழி அனைத்தையும் மாஓயிஸ்டுகளின் பக்கம் திருப்பிவிடலாகாது என்பதுதான்.

மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இவ்வாறு 2008 தேர்தலைக் காட்டிலும் இப்போது பெரிய அளவில் தோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாக சர்வதேச மற்றும் அவர்களுக்கு ஒத்துழைத்த உள் நாட்டு சக்திகள் கூறுவது, இவ்விரு கட்சிகளின் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதுதான்.. இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது இத்தகைய அணுகல் முறையின் பலனாக இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்ட தலித்கள் பெண்கள் ஜனஜாதிகள் முதலான பல்வேறு பிரிவினருக்கும் சென்ற தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்ததைக் கண்முன் கண்ட மக்கள் இதை ஏற்கவில்லை என்பதாக இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையிலிருந்து மட்டும் சொல்லிவிட இயலாது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த விவரங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் கட்சிகளால் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை வைத்துப் பார்க்கும்போதே முந்தைய தேர்தலைக் காட்டிலும் இபோது பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது விளங்குகிறது. தவிரவும் ஒப்புக்குப் பெண்கள் முதலான பிரிவினருக்கு வாய்ப்பளித்தபோதும் உறுதியாகத் தோல்வியைத் தழுவும் தொகுதிகளிலேயே கட்சிகள் அவர்களை வேட்பாளர்களாக்கியுள்ளன.

அடையாள அடிப்படையிலான ஜனநாயகம் குறித்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் தவறிவிட்டனர் என்கிற கருத்தை இது குறித்து ஆய்வு செய்துள்ளவர்கள் குறிப்பிடுகின்ரனர். தவிரவும் சென்ற அரசியல் சட்ட அவையில் இப்படிப் பல பிரிவினருக்கும் இடமிருந்தபோதும், இந்த ஐந்தாண்டு கால அரசியல் குழப்பங்களின் விளைவாக உண்மையான அரசியல் அதிகாரம் இந்தச் சக்திகளுக்கு மாற்றீடு செய்யப்படவில்லை. மீண்டும் அரசியலதிகாரம் காத்மாண்டுவை மையமாகக் கொண்ட மேட்டிமைச் சக்திகளிடமே குவிந்திருந்தன. விளைவாக அதிகாரப் பரவலின் பலன்களை மக்களால் ருசிக்க இயலாவில்லை.

தவிரவும் இந்த ஐந்தாண்டு இடைவெளியில் மாஓயிஸ்ட் கட்சி மட்டுமின்றி மாதேசிக் கட்சிகளும் பிளவுண்டன. மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில் மோகன் வைத்யா மற்றும் சி.பி கஜுரெல் முதலானோர் தலைமையில் பிரிந்து ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்டுகள்’ (CPN M) என்கிற பெயரில் இயங்கிய அமைப்பு மாஓயிஸ்டுகளைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தியது. ஐ.நா அமைப்பிடம் பதிந்த முன்னாள் மாஓயிஸ்டுகளின் புரட்சிகர இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 32,250. இதில் கிட்டத்தட்ட சரி பாதிப் பேர் இன்று மோகன் வைத்யா அமைப்பில் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிளவே கூட வெளி நாட்டு சக்திகளால் முன்னெடுக்கப்பட்டது என்றொரு கருத்தும் உண்டு. எப்படியோ பொதுவுடைமைக் கட்சிகள் பிளவுறும்போது பிளவுண்ட கூறுகள் தமது வர்க்க எதிர்ப்பை எல்லாம் ஒத்தி வைத்டுவிட்டு பரஸ்பர எதிர்ப்பை முதன்மைப் படுத்துவது வழக்கம். அதுதான் இங்கும் நடந்தது. மோகன் வைத்யா குழுவினர் சில தொகுதிகளில் மாஓயிஸ்டுகளுக்கு எதிராக நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

பிரிந்து சென்ற மோகன் வைத்யா குழுவினர் தேர்தல் புறக்கணிப்பிற்கு அறைகூவல் விடுத்தனர் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என மறைமுகமாக கஜூரெல் எச்சரிக்கையும் விடுத்தார். எனினும் உற்சாகமான 78 சத வாக்களிப்பு என்பது அவர்களது கோரிக்கையையும் அரசியலையும் மக்கள் ஏற்கவில்லை என்பதை நிறுவியது.

எனினும் மாஓயிஸ்டுகள் ஓரம்சத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆயுதப் போராட்டத்தையே நடைமுறையாகக் கொண்டிருந்த அவர்களுக்கு இந்தப் புதிய அரசியலின் விதிகளுக்கும் இலக்கணங்களுக்கும் தக தங்களைத் தகவமைத்துக் கொள்ள இயலவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களிடம் அவர்களின் அணுகல் முறைகள் முரட்டுத் தன்மாக இருந்ததைப் பலரும் குறிப்பிடுகின்றனர். அகன்ற பெரிய கொள்கை மோதல்களுக்கு முதன்மை அளித்த இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்தபோது ஆளுகைக்கு (governance) முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதேபோல வென்ற மாஓயிஸ்ட் வேட்பாளர்கள் தொகுதிப் பிரச்சினைகளிலும் நாட்டம் செலுத்தவில்லை. பெரும் செல்வாக்குப் படைத்த தலைவரும் 2008 தேர்தலில் பெரு வெற்றி பெற்றவருமான பிரசாண்டா ‘காத்மாண்டு -10’ தொகுதியில் இம்முறை இரண்டாவதாகக் கூட வர இயலாமல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படு தோல்வி அடந்ததற்கு இது ஒரு காரணமாக்ச் சொல்லப்படுகிறது. இப்படி ஆளுகையில் உரிய கவனம் செலுத்தாததன் விளைவு முடியாட்சியைத் தூக்கி எறிந்த பின்னும் கூட மேட்டிமைச் சக்திகளின் அதிகார மையத்தைத் தகர்க்க இயலாமைக்கும் இட்டுச் சென்றது.

புரட்சிகர அரசியலை முன்வைப்பவர்கள் இன்றைய ஜனநாயக முறைக்குத் திரும்பும்போது இதற்குரிய விதிகளைப் புறக்கணித்துவிடலாகாது என்பது நேபாளம் கற்றுத் தரும் ஒரு பாடம். இதன் பொருள் தேர்தல் அரசியலின் ஊழல்களுக்கும் போலித் தனங்களுக்கும் தகவமைந்து போவது என்பதல்ல. அப்படி ஆகாமலேயே சாதாரண மக்களின் பிரச்சினைகளிலும் ஆளுகையிலும் கருத்தூன்றிச் செயல்பட்டு ஒரு வித்தியாசத்தை அவர்கள் நிலை நாட்ட வேண்டும்.

பிரசாண்டா, ஹிசிலா யாமி (பாபுராம் பட்டாராயின் மனைவி) ஆகியோரது மேட்டிமைதனமான வாழ்க்கை முறையையும் மக்கள் ரசிக்கவில்லை. இங்கு மக்களின் ஒரு மனப்பாங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் ஒரு கதையுண்டு ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு பெண் தினசரி பிச்சையிடுவாள். பக்கத்து வீட்டுப் பெண் பிச்சையிட மறுத்துவிடுவாள். அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார். ஒரு நாள் எப்போதும் பிச்சையிடும் பெண் இல்லை என்பாள். உடனே அந்தப் பிச்சைக்காரர் அவளைத் திட்டுவார். அந்தப் பெண், “தினசரி பிச்சையிடாத பக்கத்து வீட்டுக்காரியைத் திட்ட மாட்டாய், ஒரு நாள் போடவில்லை என்பதற்காக் என்னைத் திட்டுகிறாயே” என்பாள். அதற்கு அவர், “என்னைக்கும் போடுற மகராசி இன்னைக்கும் போடல. தினசரி போடற கழுதை இன்னைக்கு ஏன் போடலை?” என்று கேட்டதாகக் கதை. இந்தக் கதையின் ஆபத்தான கூறுகள் ஒரு பக்கம் இருந்தபோதும், மக்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள இயலும். பூர்சுவா அரசியலாளரிடம் இந்தப் பண்புகள் இருப்பதைக் கண்டுகொள்ளாத மக்கள் அதே அணுகல்முறை இடதுசாரிகளிடமும் இருப்பதை அவ்வளவாக ஏற்பதில்லை. அவர்களிடம் ஒரு வித்தியாசமான அரசியலை மட்டுமல்ல அணுகல் முறைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. தவிரவும் பிரசாண்டா, யாமி முதலானவர்களிடம் காணப்பட்ட இந்த மேட்டிமைத் தனங்களை முதலாளிய இதழ்களும் பெரிதுபடுத்திக் காட்டின.

2008 தேர்தலில் அதிக எண்ணிக்கைகளைப் பெற்ற கட்சியாக இருந்தபோதும் மாஓயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனினும் அவர்களே தொடர்ச்சியாகப் பதவியில் இருக்க முயன்றதான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்தின. நேபாள காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்துவிட இயலாது என்பதற்காகவே தலைமை நீதிபதி ரெக்மியை இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்க மாஓயிஸ்டுகள் முன்மொழிந்தனர் என்றும் ஒரு கருத்துண்டு.

இந்தப் பதவிச் சண்டை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளின் விளைவாகக் கட்சி அணிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தைதயும் தலைமை அளிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டும் மாஓயிஸ்டுகள் மீது உண்டு. புரட்சிகர இராணுவத்தைச் சேர்ந்த 9 பேர்களைக் கட்சி அமைப்புக்கள் பரிந்துரைத்திருந்தபோதும் அவர்களில் ஒருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. தலைமை கமான்டர் நந்த கிஷோர் புன்னுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. காத்மாண்டு 10 தொகுதியில் பிரசாண்டாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மாஓயிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஒருவர்.

எப்படியோ இன்று மாஓயிஸ்டுகள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதை அவர்கள் பெருந்தன்மையுடன் ஏற்றுச் செயல்படுவதே அவர்களது எதிர்கால அரசியலுக்கு ஏற்றது. தமது தோல்விக்கான முழுமையான சுய பரிசோதனை ஒன்றை அவர்கள் செய்து கொள்ள வேண்டும். நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்டும் இரண்டும் சேர்ந்து செயல்படப்போவது உறுதி. எனினும் அப்படியும் கூட மூன்றில் இரு பெரும்பான்மைக்கு மேலும் 30 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. தவிரவும் நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மாஓயிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு ஒற்றுமை இருந்தபோதும் கருத்து மாறுபாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக நேபாள கம்யூனிச்ட் கட்சி வேறொரு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனச் சொல்வது இத்தகைய வேறுபாடுகளில் ஒன்று.

மாஓயிஸ்டுகள் முன்வைத்த கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவை என்கிற கருத்தை ஏற்கத் தயாராக இருப்பபதாகவும் இன்று அவர்கள் கூறியுள்ளனர். இப்படியான கருத்தொற்றுமை அடிப்படையிலான அரசியல் சட்டமே வலுவுடையதாக இருக்கும். எனினும் மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இன்று படுதோல்வி அடைந்துள்ளதை மனப்பூர்வமாக ஏற்று சில விட்டுக் கொடுத்தல்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

இந்திய அனுபவம் ஒன்றையும் அவர்கள் கணக்கில் கொள்ளலாம். கருத்தொருமிப்பு உடனடியாகச் சாத்தியமில்லாததன் விளைவாக அரசியல் சட்ட அவை தன் பணியை முடிக்க இயலாத நிலை வந்துவிடலாகாது என்பதற்காக அம்பேத்கர் அவர்களின் கூர்த்த அறிவு முன் வைத்த ஒரு வழிமுறைதான் அரசியல் சட்டத்தை “அடிப்படை உரிமைகள்” எனவும் “வழிகாட்டு நெறிமுறைகள்” எனவும் இரண்டாகப் பிரிப்பது. அடிப்படை உரிமைகள் உஅடனடியாக வழங்கப்படுதல் வேண்டும் வழிகாட்டு நெறிமுரைகளில் கண்டுள்ள அம்சங்கள் காலப்போக்கில் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். மாஓயிஸ்டுகள் இந்த வடிவத்தைக் கவனமாகப் ப்ரிசீலிக்க வேண்டும்.

ஆசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியிலும், தனிநபர் வருமானத்திலும், வேலை வாய்ப்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நாடு நேபாளம் என்பதைக் கருத்திற்கொண்டு நேபாள அரசியல் கட்சிகள் ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்தியா தன் அரசியல் தந்திரத்தில் தற்காலிக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இப்படி நேபாளத்தைத் தன் மாநிலங்களில் ஒன்று போல நடத்தி மேலாண்மை செய்வதை அது தொடர்ந்தால் இந்திய வெறுப்பு அங்கு அதிகமாகும். சிக்கிம் உதாரணம் அவர்களை ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டுள்ளதை இந்தியா கவனம் கொள்ள வேண்டும். நேபாளத்தையும் பகைத்துக் கொள்வது இந்தியாவிற்கு நல்லதல்ல.